Archive

Archive for May, 2004

ஆனையடியினில் அரும்பாவைகள் (சிறுகதை)

May 27, 2004 10 comments

நந்தினி காரை கிளப்பின போது காலை ஐந்து மணி இருக்கும். நான் பல சமயங்களில் தூங்க ஆரம்பிக்கும் நேரம் அது. அன்று, நான்கு மணிக்கு அலாரம் அடிப்பதற்கு அரை மணி முன்பே எழுந்து, அவளையும் எழுப்பிவிட்டேன். அவ்வளவு ஆவலும் எங்களது கல்லூரிக்கு ஒரு புனித யாத்திரை செய்யத்தான்.

அமெரிக்காவில் இருந்து நான் வருவதற்கு பல மாதங்கள் முன்பே ஒரு மெல்லிய இழையில் ஆரம்பித்த திட்டம். பல ஈமெயில்களுக்குப் பிறகு செயல் வடிவம் பெற்று, இப்பொழுது ஆறு மணி தூரத்தில் இருக்கிறது.

நந்தினியின் கணவரும் எங்களுக்கு நல்ல ஊக்கமாக இருந்தார். எங்களுடன் வாருங்களேன் என்ற அழைப்பையும் மறுத்து விட்டார். அவரும், என் குடும்பமும் வந்திருந்தால் இது ஒரு வழக்கமான சுற்றுலாவாக இருந்திருக்கும். இப்போது இந்த பயணத்தின் நோக்கமே வேறாகிப் போனது.

கடந்த இளமையை மீண்டும் சுவாசிக்கப் போகிறோம். இருந்த இடங்களில் மீண்டும் தொலைந்து போகப் போகிறோம். இனிமையான, வருத்தமான, வழக்கமான நினைவுகளில் உலா வரப் போகிறோம். வெறுமனே அசை போடாமல் இளமைக்குத் திரும்பப் போகிறோம்.

நந்தினி கல்லூரி காலத்தில் எங்களுக்குப் பிடித்த “சின்ன சின்ன ஆசை”யைப் போட்டு விட்டிருந்தாள். எதிர்காலம் என்னவென்று தெரியாத கல்லூரி காலம் போன்ற டில்லியின் முன்பனி, சாலையையும் சூரியனையும் காணாமல் செய்திருந்தது.

“நந்து… மஹேனும் பத்மாவும் ஒரே இடத்தில் வேலைக்கு சேர்ந்தார்களே? கல்யாணம் ஆயிடுத்தா?”

“ரெண்டு பேரும் சேர்ந்து கம்பெனி ஆரம்பிச்சுட்டா. உனக்கு ஏதாவது சாஃப்ட்வேர் ஆள் தேவைன்னா சொல்லுபா. அவங்ககிட்ட கேக்கலாம்”.

ரமேஷின் பி.எச்டி. எங்கு உள்ளது, கீர்த்தி தேர்தலில் நிற்கிறானா, அடுல் கிரிக்கெட் அணியில் இருக்கின்றானா என்று எங்கள் நண்பர்கள் எங்கே இருக்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்று பேசுவதே காலை உணவாகிப் பசியாற வைத்தது.

நந்தினியின் கணவன் போட்ட ஸ்டார்பக்ஸ்ஸை மிஞ்சும் காபி குடித்துக் கொண்டே ரெஹ்மானிடமிருந்து “உன்னை நான் அறிவேன்… எனையன்றி யார் அறிவார்” ராஜாவுக்கு மாற்றி விட்டேன்.

கல்லூரியில் செய்வதற்கு நந்தினி பத்து அம்ச திட்டம் வைத்து இருந்தாள். அதில் நாகர்ஜியின் பெட்டிக்கடையில் ‘ரப்ரி’ சாப்பிடுவது எனக்கு மிகவும் பிடித்தது. வாழைப்பழத்தைத் துண்டு துண்டாக நறுக்கி ஒட்டகத்துப் பாலில் போட்டுத் தருவார். பரிட்சை பேப்பர் தந்த சோகத்தையும், கவுன்சிலில் சுட்ட பணம் கண்டுபிடிக்கப்பட்ட துக்கத்தையும் தூக்கி எறிய சரியான மருந்து அது. கூடவே சமோஸாவும் கிடைத்தால் சொர்க்கம் வசப்படும். எனக்கு இப்போது செரிக்குமா என்று ஒரு பயம் எட்டி பார்த்தது.

“ஆட்டமா.. தேரோட்டமா” என்று ராஜா அதிரடி செய்து கொண்டிருந்தார். பஜார் தெருவில் ‘பான்ங்’ அடிக்க வேண்டும். கிடைக்காவிட்டால் பியராவது குடிக்க வேண்டும். மீரா பவன் என்னும் பெண்கள் விடுதிக்குள் சென்று ஜென்ம சாபல்யம் அடைய வேண்டும். எங்களுடைய பத்து அம்சத் திட்டத்தில் நிறையவே பொருத்தம்.

“புது ரூட்டுலதான்” என்ற ராஜாவின் அரசாட்சியில் மெய்மறந்து, செய்து பார்க்க வேண்டிய எல்லாவற்றையும் அலசி முடிப்பதற்குள் காவிக்கொடித் தாங்கிய பலகை எங்களை கல்லூரி வளாகத்திற்கு வரவேற்றது.

நாங்கள் மட்டும் மாறவில்லை. எங்களுடைய கல்லூரியும் உரு மாறி இருந்தது. பத்து அம்ச திட்டத்தில் பல நிறைவேற்ற முடியாது. ராஜஸ்தானில் மதுவிலக்குக் கிடையாது. அதற்குள் இருக்கும் எங்கள் கல்லூரி ஊரில் பியரும் கிடைக்காது; ‘பான்ங்’கும் கிடைக்கவில்லை. வகுப்புகளில் எங்கள் நினைவுகளை ஆரம்பித்தோம்.

“ஹேய் நந்து… இங்கேதான் முதல் முதலாக உன்னை ஃப்ரெண்ட் பிடிச்சேன்”?

“ஆமாண்டா… பக்கத்தில் உட்கார்ந்து நல்லா உரசுவே”.

“போடீ… மூணு பேர் பெஞ்சியில், அஞ்சு பேர் உட்கார்ந்தா அப்படித்தான்”.

இருவருக்கும் நல்ல பசி. முதல் ஆர்வம் தீர்ந்து விட்டதால் வயிறு நினைவூட்ட ஆரம்பித்தது. நேராக கடைத்தெருவுக்கு வந்தோம். பல தெரிந்த உணவு விடுதிகள் மறைந்து STD/ISD/PCO க்களும், Xerox கடைகளும் நிறைந்து இருந்தது.

தப்பித்த உணவு விடுதிக்குள் புகுந்து, மெனுவில் ஆறு வித்தியாசங்கள் பார்க்க ஆரம்பித்தேன்.

“இங்கேதான் என்னுடைய வாழ்நாள்லேயே முதன்முதலாக பிறந்த தின கேக் வெட்ட வெச்சேடா. ரொம்ப தாங்க்ஸ்பா”!

“நான் என்ன செஞ்சேன் நந்து? எல்லாம் தீபாவோட ப்ளான். ‘பம்ஸ்’ கொடுத்தது மட்டும் என்னோட திட்டம்.”

“உன்னை பலி போடணும்டா… எவ்வளவு வலி தெரியுமா? அடுத்த நாள் பரிட்சைக்கு உட்காரவும் முடியாம… ஆம்பிளைகளுக்கு ஏன்தான் அடி உதையிலேயே புத்தி போகுதோ”?

நல்ல சாப்பாடு முடித்துவிட்டு, ஒவ்வொரு மெஸ்ஸாக நுழைந்து கிளம்பினோம். பெரிதாக ஆச்சரியப்படுத்தாத அதே திங்கட்கிழமை மெனு. கூப்பிட்ட குரலுக்கு சப்பாத்தியும் சப்ஜியும் கொணர்ந்த அதே சிப்பந்திகள். அதே நாவில் வைக்க முடியாத சுவை. இருந்தாலும் இப்போது எங்களுக்கு சுவைத்தது.

அடுத்து ஆசிரியர்களைத் தேடிப் பயணம். அப்படியே மாலைக்கு ஓடிப் போனது நேரம். சரஸ்வதி கோவிலின் ஐந்தரை மணி தீபாராதனை தவற விடக் கூடாது. செமஸ்டர் ஆரம்பத்திலும், இறுதியிலும் கூட்டம் அதிகம். நாங்கள் சென்ற போது பலர் கண்ணை மூடிக்கொண்டும், சிலர் கண்ணை மூடாமல் புது வரவுகளையும் வேண்டிக்கொண்டார்கள். குளிர்ந்தாலும் புல்வெளியில் அமர்ந்தோம். ஆங்கிலம் தெரியாதவர்களும் நயாகராவை ரசிப்பது போல புரியாத மொழியில் பாடப்பட்ட பஜன்களில் ஆழ்ந்து போனாள்.

“நந்து… மூன்றாவது வருஷக் கடைசியில் இங்கே உட்கார்ந்து விக்கி விக்கி அழுதது ஞாபகம் இருக்கா”?

“அது எப்படிடா மறக்க முடியும். அன்னிக்குத்தான் நீ வெளுத்து வாங்கினியே. ஊர் ஆயிரம் சொல்லும். ஆனால், நம்ம மனசுக்கு சரின்னு பட்டா எது வேணும்னா செய்யலாம். கழுதை மேல் போனவன் கதையா உலகத்துக்குப் பலவிதமான எண்ணங்கள், கருத்துக்கள். எல்லாவற்றையும் காதுல வாங்கிட்டு, முடிவை மட்டும் நாமதான் சிந்திச்சு எடுக்கணும்னு ஒரு பெரிய அட்வைஸ் இல்ல கொடுத்தே”?

“ஆமாம்பா.. என்னென்னவோ உளறிண்டு இருந்தேன் அன்று. நம்ம நட்பைக் காதலா கொச்சைப்படுத்திட்டாங்க. இன்னும் சில பேரு அவளோட எவ்வளவு தூரம் முன்னேறியிருக்கேன்னு கேட்டதுதான் என்னோட கோபத்தைக் கிளறிவிட்டது”.

“அது தேவலையே. கலைவிழாவில உன்னோட ரூம்மேட் ஜனா, தண்ணியப் போட்டுட்டு வந்து, அவன் உன்னை உயிருக்குயிரா நேசிக்கிறான்; சொல்ல தில் இல்லை; அதான் நான் உடைக்கிறேன்ன போது நானே நம்பிட்டேன்”!

“அப்போ உன்கிட்ட உண்மைய விளக்குறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு”.

நன்கு இருட்டியிருந்தது. எங்களின் விருந்தினர் மாளிகைக்குத் திரும்ப ஆரம்பித்தோம். அங்கேயே சாப்பிட்டு, சீக்கிரமாய் தூங்கி, காலையில் டில்லி திரும்பலாம் என்பதுதான் திட்டம். ரொம்ப நாளாய் பார்க்காத சந்திரன். முக்கால்தான் இருந்தார். இருந்தாலும் பௌர்ணமி போல் தோன்றியது எனக்கு. மெள்ளக் கையைக் கோர்த்து கொண்டு “பெஹ்லா நஷா…” பாடிக்கொண்டே வந்து சேர்ந்தோம்.

“டேய்… நான் குளிச்சுட்டு வந்துடறேன். கார்த்தாலே டைம் இருக்காது” என்று நந்து புகுந்து விட்டாள். ஆண்கள் சோம்பிக்காமல் டிவி சேனல் மாற்றுவது போல பெண்கள் அனைவருமே குளியலறையில் நேரம் செலவழிக்கிறார்கள்.

கல்லூரியின் பழைய செய்தித்தாள்களை அழகாக அடுக்கி இருந்தார்கள். பல வழக்கமான நிகழ்வுகள். புரட்டியதில் பெண்களின் கூடைப்பந்தாட்டம்தான் விளையாட்டு விழாவில் அதிகம் பேர் நுழைவு சீட்டு வாங்கிய நிகழ்ச்சி என்றிருந்தார்கள். ஒரு பெண், ஆண்கள் விடுதியில் மாட்டிக் கொண்டு நீக்கப்பட்டது செய்தியாக மிரட்டியது. கலைவிழாவில் கல்லூரிக்கு விடுமுறை அளிக்காதது பற்றி முறையிட்டிருந்தார்கள். எவ்வளவு நாட்கள் ஆனாலும் இந்த செய்திகள் மாறுமா என்பது சந்தேகமே.

நந்தினி நைட்டியில் தூங்கி இருந்தாள். எனக்கும் காலையில் விழித்தது, கண்ணை சொக்கியது. விளக்கை அணைத்து, மனைவி இல்லாத ஒருத்தியுடன், ஒரே கட்டிலில் முதல் முறையாக படுக்கை. கண்ணை மூடிக் கையைப் போட்டேன். அவளின் போர்வைக்குள் நுழைந்தபோது விளக்கைப் போட்டாள் நந்தினி.

“கிளம்பலாமா? இப்பவே கிளம்பினா நாளைக்கு என் அச்வினை வகுப்புக்கு வழியனுப்பலாம்”.

தூக்கம் கலைந்து எழுந்த நான் “டைம் என்னாச்சு?” என்று கேட்டு பதில் வராமல் இரண்டு அடித்து பத்து மணித்துளிகள் என்று அறிந்தபோது சூரிதாருக்கு மாறி இருந்தாள்.

“தோழா…தோழா… தோள் கொடு தோழா”வை கத்தவிட்டு உள்ளூர் தேனீரோடு வண்டியைக் கிளப்பினாள்.

“நந்து ‘ரோஜாக்கூட்டம்’ பார்த்தியா? தமிழ் சங்கத்தில் போட்டார்களா”?

“இல்லேப்பா… நான் ‘ஃபைவ் ஸ்டார்’தான் லயிச்சு பார்த்த கடைசிப் படம்”.

அதன் பிறகு நான் தூங்கி போனேன். அவள் விழித்திருந்து என்னை மீண்டும் டெல்லியில் ‘கந்தர் சஷ்டி கவச’த்துடன் நுழைத்தாள்.

-பாலாஜி
பாஸ்டன் – (ஃபெப். – 2 – 2003)

Categories: Uncategorized

தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும்

May 27, 2004 1 comment
  • விடுமுறை: அமெரிக்காவில் போரில் வீழ்ந்த வீரர்களை நினைவு கூறும் தினம். அதை முன்னிட்டு புத்தாண்டுக்குப் பிறகு முதல் விடுமுறை. இந்தியாவாக இருந்தால் பொங்கல், சுதந்திர தினம், அம்பேத்கார் நாள், குரு கோபிந்த் பிறந்த நாள், மே தினம் என்று சன் டிவியும் இன்ன பிற நிகழ்ச்சிகளும் களிக்கலாம். ‘ஊரோடு ஒத்து வாழ்’ என்பதால், இங்கு ஊர் சுற்ற கிளம்புகிறோம். சூது என்னைக் கவ்வியதா… நான் சூதை கவ்வவிட்டேனா என்பதை லாஸ் வேகாசில் இருந்து திரும்பிய பிறகு சொல்கிறேன்.
  • வலைப்பதிவில்லையேல் வாழ்க்கையில்லை: திருமண நாளைக் கொண்டாட சென்ற விடுமுறையில் கூட பலரும் ஆர்வமாக வலைப்பதிவதை இன்றைய நியு யார்க் டைம்ஸ் அலசுகிறது. சில வித்தியாசமான பதிவுகளை அறிமுகம் செய்தும், குணாதிசங்களை நினைவுகூர்ந்தும் வழக்கமானவற்றை எழுதியிருக்கிறார்கள். வலைப்பதிவாளர் ஒருவர் சொல்வது போல் கிட்டத்தட்ட போதை பழக்கம்தானா இதுவும்?
  • அவசியமில்லாத தகவல்: Trisha’s official tamil site என்று தேடினால் தலை பத்தில் என்னுடைய இங்கிலிஷ் பதிவு வருகிறது.
  • கண்டுக்கினாங்க: இன்னொருவர் ஏதோ நல்லா இருக்குப்பா என்று சொல்லும்போது வரும் சந்தோஷமே தனி. அப்படி இவர் சொன்னதும் மகிழ்ச்சி பிறந்தது.
  • ஏக் நஜர்: 7-G ரெயின்போ காலனி பாடல்கள் பிடித்திருந்தது. அது குறித்து கச்சிதமான விமர்சனம் + அறிமுகம் பார்த்தேன். ட்ரெயிலர் பார்க்க சினிசவுத் போகலாம்.
  • விகடன் கிசுகிசு: மிஸ்டர் மியாவ்: தெலுங்கிலும் தமிழிலுமாகத் தயாரான அந்தப் ‘புது’ப் படம் முதலில் தெலுங்கில் ரிலீஸானது. அங்கே எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்காததால் கொஞ்சம் கலங்கிப் போனாராம் பிரகாசமான டைரக்டர்.. ஆனால், தமிழில் படம் தப்புப் பண்ணாது என்ற பேச்சு இருப்பதால் தெம்பாக இருக்கிறார். (சிம்ரன் நடிச்ச கடைசிப் படம் என்பதால் மக்கள் அனைவரும் கனிவோடு விமர்சிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்)
  • சியாமளன் மேட்டர்: 1978 முதல் மே மாதம் ஆசியர்களின் மாதமாக அமெரிக்காவில் கொண்டாடப்பட்டு வருகிறது. Black History Month-க்காக சிறப்புத் திரைப்படங்கள், பேட்டிகள், குறும்படங்கள், துணுக்கு செய்திகள் என்று கலக்கும் தொலைகாட்சிகள் ‘Crouching Tiger…’ஐக் கூட உலகத் தொலைகாட்சிகளில் முதன்முறையாக்கவில்லை.
  • நிரபராதிகள் மேல் அபாண்டம்: குற்றமற்ற வினிதாவின் மேல் போலிப் புகார் தொடுத்ததாக தீர்ப்பு வந்திருக்கிறது. காவல்துறையை கண்டித்த முக்கியமான விஷயத்தை குறித்து யாருமே வலைப்பதியவில்லை.
  • மலரோடு மலர் இங்கு…: ‘பம்பாய்’ படம் போல் தோன்றினாலும் ஒன்பது வருட காத்திருப்புக்குப் பிறகு உஜாலாவும் ஆசாத்தும் மணமுடித்திருக்கிறார்கள். அமெரிக்காவில் ஒருபால் திருமணத்திற்கு எதிராக கொடி பிடிக்கிறார்கள். இந்தியாவிலோ இன்னும் இரு பால் திருமணமே ததிங்கிணத்தோம் போடுகிறது. அமெரிக்காவில் ஒளிபரப்பப்படும் பிபிசியில், இந்த நிகழ்ச்சி எப்போது வரும்?
  • ஒளியிலே தெரிவது?: தமிழ்நாடு மின்சார வாரியம் இணையத்தளம் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. ஆனால், சென்னை-மைலாப்பூரில் இருபத்தி நான்கு மணி நேரமாக மின்சாரம் இல்லாததை அறிவிக்காமலும் எப்பொழுது வரும் என்பதை தெரிவிக்காமலும் உள்ளது. பாவம்… இற்றைப்படுத்துவதற்கு அவர்களுக்கும் மின்சாரம் இல்லையோ… என்னவோ?
Categories: Uncategorized

ரசிக்கும் எழுத்துக்கள்

May 26, 2004 Leave a comment
  • பூக்கடை காவல் நிலையம் துவங்கி, துறைமுகம் வரையிலான முதலாளி மீனாட்சி சுந்தரத்தின் சமஸ்தானத்தில் வீசும் காற்று, அடிக்கும் வெயிலில் நேரும் மாறுதல்கள் கூட அவர் கவனத்திலிருந்து பிசகாது.
  • கஸ்டம்ஸ்காரனை சமாளிச்சிடலாம்; கட்டினவ பிராண்டி எடுத்துருவா. பேரின்பம் வேணும்னா பெண்ணாசையை விடுன்னு சொல்வாங்க இல்ல? நா சொல்றேன், சிற்றின்பம் வேணும்னாலும் பெண்ணாசை கூடாது.
  • கடவுளை வணங்கலாமே தவிர, புரிஞ்சிக்க முயற்சி பண்ணக் கூடாதுடா!
  • கசாப்புக் கடை பக்கம் ஐயமாரு வூடு கட்னாலும் காலு எது, ஈரல் எதுன்னு கவுச்சு திங்கறவனுக்குத்தானேடா தெரியும்!
  • சுவாரசியமாடா முக்கியம்? சில்லறைதான் முக்கியம்! சில்லறைதான் சுவாரசியம் தர்ற விஷயம். சில்லறை கிடைக்கிற எல்லா தொழிலும் சுவாரசியமானதுதான்.
  • யார் நிஜ முதலாளிகள் என்று யாருக்குமே தெரியாது.
  • பசி, தாகம், புரட்சி. இது மூணும் இல்லாத மனுஷனே கிடையாது.
  • எப்பவுமே கீழ்மட்டத் தொடர்புகளை விட்றாம வெச்சிருக்கணும்; அதே சமயம், மேல்மட்டக் காரியங்களையும் கவனமா முடிக்கணும்!
  • பணக்காரர்களின் காசையெல்லாம் ஹார்ட் அட்டாக் வடிவத்தில் கறந்து விடுவது என்று கலி புருஷன் முடிவு செய்து விட்டானோ?
  • செய்வதெல்லாம் குற்றம்தான். எனினும், அதைக்கூட ஒரு கலை உணர்வுடன் ரசிக்கிற லாகவம். தன்னை மாதிரி எத்தனை குற்ற நாட்டுகளை நட்டு, நீரூற்றி வளர்த்து வாழ வைக்கிறார்.
  • ஃபுல் டைம் பொறுக்கியானாலும் பாசம் மறந்துடுமாடா?
  • பெற்றவர்கள் எதிர்பார்ப்பது காசை மட்டும் அல்ல என்பது அவன் அறியாததல்ல. ஆனாலும், அதைத் தவிர தன்னால் வேறெதுவும் செய்து விட முடியாது என்று அவனுக்கு உறுதியாகத் தோன்றியது.
  • எவனோ ஒருத்தன் நமக்கு வேலை தரான். நமக்குத் தெரிஞ்ச வேலை. நம்ம திறமைக்கேத்த கூலி அதுல கிடைக்கப் போகுது. அவ்ளோதானே? அது அமைச்சரா இருந்தா என்ன? எம்.எல்.ஏ.,வா இருந்தா என்னா? அட, பாகிஸ்தான்காரனாவே இருந்தாத்தான் என்ன?
  • தொழில் சற்று வளர்ந்தால் இன்னும் ஆள் எடுத்துக் கொள்ளலாம். பர்மா பஜாரில் மிகவும் மலிவாகக் கிடைக்கிற விஷயம் அது ஒன்றுதான்.
  • குரு ப்ரம்மா, குரு விஷ்ணு… அப்புறம் என்ன? என்னமோ இழவு… சினிமாவில் பார்த்தது, மறந்து விட்டது.
  • இந்த விஷயம் உண்மையாயிருக்கும் பட்சத்தில் ஓர் ஆறுதலும் நிம்மதியும் கிடைக்கக்கூடும். கோப வெறிக்கு ஒரு குறுக்கு வடிகால், குரூரத்தின் இயற்கை வெளிப்பாடு.
  • சே! ஒரு நிமிஷத்துக்கும் அடுத்த நிமிஷத்துக்கும் எத்தனை பெரிய நிம்மதி வித்தியாசம்!

தூணிலும் இருப்பான் – பா. ராகவன்
சபரி / ரு. 55

Categories: Uncategorized

குமுதம்.காம்

May 26, 2004 Leave a comment

சோமரத்னே திசயனாயக்கே – உரையாடல்: “வசந்தகுமார்: ‘லிட்டில் ஏஞ்சலை’ நான் இப்படி உள்வாங்கிக் கொள்கிறேன். பெரைரா, ஆட்சியாளர்களையும், தமிழ்ச் சிறுமி தமிழர்களையும், பெரைராவின் மகனான பிரச்னைக்குரிய சிறுவன் இலங்கை தேசத்தையும் பிரதிபலிக்கிறார்கள். சிறுமியின் முயற்சியால்தான் சிறுவன் சுமுகமான நிலைக்கு வருகிறான். இனபேதம் மறைந்து அமைதி திரும்புகிறது. ஆனால், சிறுமி அங்கிருந்து சென்றதும் சிறுவன் பழையபடி கலவர மனநிலைக்குத் திரும்பி விடுகிறான். இந்தப் படத்தின் பிரதான பின்னணி 1983 இனப்படுகொலை; பதின்மூன்று சிங்கள ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதும், அதைத் தொடர்ந்து தமிழர்கள் பழிவாங்கப்பட்டதும்தான். இலங்கை வரலாற்றின் அழிக்க முடியாத கறை இது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் மறந்து போன அதனை மறுபடியும் நினைவுபடுத்துவது இலங்கையில் நடைபெற்று வரும் அமைதிப் பேச்சு வார்த்தைக்கு இடையூறு ஏற்படுத்துவதாகாதா?
“இதை இப்போது சுட்டிக்காட்டுவதன் மூலம், மக்களிடம் இது மறுபடியும் நிகழக்கூடாது என்கிற எண்ணமும் அதன்பால் வெறுப்புணர்வும் ஏற்பட வழி செய்யமுடியும். நாம் இப்போது சில நேரங்களில் ஹிட்லரைப் பற்றிப் பேசுகிறோம். அவர் செய்தது சரி என்று சொல்லவா? அல்ல; அதை ஞாபகப்படுத்துவதன் மூலம் அதன் தீயப் பக்கத்தைக் காட்டவே.”


Truth, Love & a little Malice: குஷ்வந்த் சிங் – கி அ சச்சிதானந்தம்:
இந்திரா காந்திக்கும் அவருடைய இரண்டாம் மருமகளான மேனகா காந்திக்கும் இடையிலான மோதலை, மாமியார் மருமகள் சண்டையைப் பற்றி விரிவாக எழுதியுள்ளார். மேனகா காந்தியை தன் நேர்முக உதவியாளராக இந்திராகாந்தி நியமித்தார். இதை சோனியா காந்தி கடுமையாக எதிர்த்தார். தன் நாடான இத்தாலிக்கே தன் குடும்பத்துடன் திரும்பிப் போய்விடுவதாக மிரட்டினார். இந்திரா காந்தியால் ஒன்றும் செய்யமுடியவில்லை. இந்திராகாந்தி, மேனகாவை வீட்டை விட்டுத் துரத்தி விட்டார். பத்திரிகைகள் மாமியார் மருமகள் சண்டையைப் பெரிது படுத்தின.


விக்ரமாதித்யன்: “வாழ்வினுடைய சாரமே இல்லாத வெறும் மொழியை வைத்துக்கொண்டு உற்பத்தி செய்யப்படும் கவிதைகளைத்தான் நான் ‘டொமஸ்டிக்’ கவிதைகள் என்கிறேன். அவற்றில் அக்கவிஞனுடைய வாழ்வுகூட இல்லை. மொழியால் செய்யப்படும் கட்டடங்கள்தான் எல்லாம். வாழ்வும் மொழியும் இசையும் போதுதான் நல்ல கவிதை பிறக்க முடியும். அது இங்கு நடக்கவில்லை.

ராமர் பிறப்பதற்கு முன்பே ராமாயணம் எழுதப்பட்டுவிட்டது. இவ்வளவு பெரிய முனிவர் எழுதி விட்டாரே என்று அவனும் அதுபடி வாழ்ந்து விட்டான் என்று ஒரு ஐதீகம் இருக்கிறது. இதுபோல் நான் குடிகாரன் என்பதும் முன்பே தீர்மானிக்கப்பட்டுவிட்டது.”

Categories: Uncategorized

‘அச்சாணி’

May 26, 2004 2 comments

மூடப்படும் தேவாலயங்கள் | பாஸ்டன் க்ளோப் தலையங்கம்

Data analysis by Bill DedmanTamil Christian Songs:
மாதா உன் கோவிலில்
மணிதீபம் ஏற்றினேன்
தாயென்று உன்னைத்தான்
பிள்ளைக்குக் காட்டினேன் மாதா….

மேய்ப்பன் இல்லாத மந்தை வழி மாறுமே
மேரி உன் ஜோதி கண்டால் விதி மாறுமே
மெழுகு போல் உருகினோம்
கண்ணீரை மாற்ற வா

காவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே
தரைகண்டிடாத ஓடம் தண்ணீரிலே
அருள்தரும் திருச்சபை
மணியோசை கேட்குமோ

பிள்ளை பெறாத பெண்மை தாயானது
அன்னை இல்லாத மகனை தாலாட்டுது
கர்த்தரின் கட்டளை
நானென்ன சொல்வது

Categories: Uncategorized

மெடிமிக்ஸ் – தினகரன்: தமிழ் சினிமா விருதுகள்

May 25, 2004 2 comments
விருது பெற்றவர் திரைப்படம் வழங்கியவர்கள்
சிறந்த நடிகர் விக்ரம் பிதாமகன் சரத்குமார்
சிறந்த நடிகை ஸ்னேஹா பார்த்திபன் கனவு ராதிகா & மெடிமிக்ஸ் நிர்வாகி
தலைமுறை சிறப்பு விருது – நடிகர் ஜெமினி கணேசன்   கே பாலச்சந்தர் & விஜயகுமார்
தலைமுறை சிறப்பு விருது – நடிகை சரோஜா தேவி   ஏவிஎம் சரவணன் & சிந்தாமணி முருகேசன்
சிறந்த இயக்குநர் பாலா பிதாமகன் மெடிமிக்ஸ் நிர்வாகி
சிறந்த அறிமுக இயக்குநர் செல்வராகவன் காதல் கொண்டேன் தனுஷ் & நதியா
சிறந்த அறிமுக நடிகர் ரவி ஜெயம்  
சிறந்த அறிமுக நடிகை சதா ஜெயம்  
சிறந்த குணச்சித்திர நடிகர் ரகுவரன் திருமலை ஸ்ரீகாந்த் & தேனப்பன்
சிறந்த குணச்சித்திர நடிகை சங்கீதா பிதாமகன் ஜி தியாகராஜன் & ஷ்யாம்
சிறந்த நகைச்சுவை நடிகர் கருணாஸ் திருடா திருடி குஷ்பூ
சிறந்த வில்லன் ஜீவன் காக்க காக்க நெப்போலியன் & சித்ரா லஷ்மணன்
சிறந்த ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் பிதாமகன் பிசி ஸ்ரீராம் & விந்தியா
சிறந்த இசை தினா திருடா திருடி ரீமா சென்
சிறந்த பாடகர் ஹரீஷ் ராகவேந்திரா ‘தேவதையைக் கண்டேன்’ சிபிராஜ் & அருண்குமார்
சிறந்த பாடகி மாலதி ‘மன்மத ராசா’ இப்ராஹிம் ராவுத்தர் & தாரிகா
சிறந்த பாடலாசிரியர் வைரமுத்து இயற்கை சேரன்
சிறந்த கலை கே பிரபாகரன் அன்பே சிவம் ஜெய் ஆகாஷ் & உமா
சிறந்த நடனம் சிவசங்கர் ‘மன்மத ராசா’ விக்னேஷ் & ஸ்ருதிகா
சிறந்த கதை பாக்யராஜ் சொக்கத்தங்கம்  
சிறந்த வசனம் ஹரி சாமி  
சிறந்த குழந்தை நட்சத்திரம் பேபி கல்யாணி ஜெயம்  
சிறந்த சண்டை ஸ்டன் சிவா பிதாமகன் ஸ்ரீமான் & கணிகா
விமர்சகரின் சிறந்த படம் அன்பே சிவம் லட்சுமி மூவி மேக்கர்ஸ் கஸ்தூரி ராஜா & ரமேஷ் கன்னா

 

ஆதாரம் + நன்றி:
1. Y! India Movies
2. தினகரன் தமிழ் சினிமா விருதுகள்
3. தினகரன் – 2004 (1)
4. தினகரன் – 2004 (2)
5. விருது பெற்றிருக்கவேண்டிய பாடல்??

Categories: Uncategorized

விரல் நுனியில் குறள்

May 25, 2004 3 comments

திருக்குறள்: என்னிடம் இருக்கும் பதிப்பு http://www.suvadi.com என்னும் முகவரியை சுட்டுகிறது. தற்போது அது இயக்கத்தில் இல்லை. ‘விரல் நுனியில் குறள்’ மிகவும் உபயோகமான நிரலி. தமிழில் திருக்குறள்; கூடவே சுருக்கமான அர்த்தம். ஆங்கிலம் வசதிப்படுமானால் ஆங்கிலம்; தமிழில் அர்த்தம் வேண்டுமானால் தமிழ். அதிகாரம் வாரியாக டக் டகென்று மேயும் வசதி.

Installation Instructions: Kural works under Windows 95, 98 and NT©. Unzip the kural.zip file and extract the Kural.exe file to any directory on your PC. That’s all. To uninstall, simple delete the Kural.exe file.

எழுதியவர்: இளங்கோ சம்பந்தம்
கிடைக்கும் சுட்டி: திருக்குறள்

Categories: Uncategorized

வாதம் vs. விவாதம்

May 25, 2004 2 comments

நான் பார்த்த இணையத்தில் இந்த நாள் மட்டும், எந்த ஒரு விவாதமும் முழுமையாக முடியவடியவில்லை. மணிக்கணக்காய் விவாதம் செய்தாலும் முடிவில் ‘என் கருத்து எனக்கு, உன் கருத்து உனக்கு’; உன் மூக்கு, என் மூக்கு என்று முடிந்து விடுகிறது. இந்த விவாதத்தில் நமக்கு மிஞ்சுவது சிறிது மன உளைச்சல்தான். இப்படி பைசா பிரயோஜனம் இல்லாத ஒரு விஷயத்துக்கே நம்மால் ஒத்து போக முடியவில்லையென்றால் எப்படி இதையே பிழைப்பாக நடத்தும் அரசியல்வாதிகளும், சினிமா நட்சத்திரங்களும் ஒத்துப் போவார்கள். ஆனால் நாம் விடாமல் பக்கம் பக்கமாக அரசியல்வாதிகள் முதல் அனைவரையும் இப்படி செய்ய வேண்டும், அவரோடு பேசி சமாதானம் ஆக வேண்டும் என்று எழுதுகிறோம். நாம் இப்படி செய்வது…

1. ஊருக்குதான் உபதேசம்.
2. நான் செய்வது சரி ஆனால் அவர்கள் அப்படி செய்யக்கூடாது (சமூகத்தின் பார்வைபடுவதால்).
3. அட போய்யா பெருசா வந்துட்டான்.
4. நான் செய்வது சும்மா பொழுது போகாமல்; ஆனால் அவர்களுக்கு இது பிழைப்பு, ஆகவே அவர்கள் ஒத்துப் போக வேண்டும்.


Categories: Uncategorized

கவர்ந்த உபயோகங்கள்

May 24, 2004 Leave a comment
  • பயிற்சிநிலை பொறுக்கி
  • பரிபூரண பொறுக்கி
  • மீனாட்சி என்றால் தாமிர தேகம்
  • கோவிலுக்கு சென்று நன்றி அறிவிப்பு கூட்டங்கள்
  • சாகசம் கலந்த வருமானம்
  • மானசீக குரு; மரியாதைக்குரிய நண்பன்
  • ஓயாத ஞாபக படையெடுப்புகள்
  • பிசாசெனக் கவிந்து நின்ற தனிமை
  • கலை நேர்த்தியுடன் செய்கிற அயோக்கிய கவிஞன்
  • முகத்தில் அறையும் விஷச் சொற்கள்
  • ஆத்மசுத்தியுடன் கெட்ட காரியங்கள்
  • பால்பாயிண்ட் பேனா சைஸில் எழுதப்பட்ட திருக்குறள்

தூணிலும் இருப்பான் – பா. ராகவன்
சபரி / ரு. 55

Categories: Uncategorized

தமிழோவியம் – விமர்சனம்

May 24, 2004 Leave a comment

1. பேரழகன்: ‘படத்தை தாராளமாகப் பார்க்கலாம்’ என்று சொன்னதால் பார்க்காவிட்டாலும், மற்றுமொரு இரட்டை வேட மலையாள ரீமேக் படம். விவேக் காமெடி ஊனமுற்றவர்களைப் புண்படுத்தாத மாதிரிதான் இருந்தது. என்னுடைய கல்லூரி காலத்து நண்பர்கள் சேரும்போது ஜாலியாக கலாய்த்துக் கொண்டு, ஒருத்தர் காலை இன்னொருவர் வாரிவிட்டுக் கொண்டு அரட்டை அடிப்போம். அது போலத்தான், (விவேக்) குழந்தை-சின்னா (சூர்யா) நட்பும் காட்டப்பட்டிருந்தது. (தேவையில்லாத டிஸ்க்ளெய்மர்: இப்பொழுதுள்ள இணைய நட்பை குறித்து இதனால் எதுவும் குறிப்பிட்டு சொல்லப்படவில்லை 🙂

‘பேரழகன்’ நிஜத்தை பிரதிபலிப்பதாகவும் இல்லை. மலையாள மறுபதிப்பாக இருப்பதால், தேவையில்லாத செண்டிமெண்ட் சோகக் காட்சிகளும் அதிகம். மிகவும் ரசித்த வசனகவிதையையும் காட்சியாக்கத்தில் எவ்வளவு இயலுமோ, அவ்வளவு சொதப்பியிருந்தார்கள். ‘அம்புலி மாமா’ பாடல் ஆண்களுக்குப் பிடிக்கலாம்; அவர்களின் typical கற்பனைகளின் வடிகாலாக பாடல் படமாக்கப்பட்டுள்ளது. ஏவிஎம் மார்க்கெட்டிங்குக்காக மட்டுமே படம் ஓடுகிறது.

2. பருந்துப் பார்வை: சென்ற ஆண்டு ‘இணையக்குழுக்களின் ஆண்டு’ என்றால், இந்த ஆண்டை வலைப்பூக்களின் ஆண்டாக நிச்சயம் சொல்லலாம். ஏன் சார்… மதுரபாரதி சாருக்கு மட்டும் அவருடைய பெயரின் மேல் சுட்டினால் வலைப்பதிவுக்கு செல்லுமாறு வசதி செய்து தரவில்லை 🙂

3. பதில்கள்: PingBack குறித்து கேள்விப்பட்டவுடன், ஒரு கேள்வியாக்கி அனுப்பி வைத்திருந்தேன். பதிலளித்த வலைப்பையனுக்கு நன்றி. தமிழ் வலைப்பூக்களில் இது எவ்வளவு தூரம் முக்கியம், அதன் தேவை என்ன, எப்படி செயல்படுத்த முடியும் என்பதை நீங்கதான் சொல்ல வேண்டும்!

4. கதை: ‘சுய சாசனம்‘ என்று ஒரு கதை ஆரம்பித்து இருக்கிறேன். படிச்சுட்டு உங்கள் பொன்னான பின்னூட்டங்களைத் தர வேண்டுகிறேன். கடவுள் மட்டும்தான் பதில் எழுதுவதில்லை என்பது பொன்மொழி. வாசகர்களாகிய நீங்களாவது அவ்வப்போது கருத்துக்களை சொல்ல வேண்டும்! (அட்வான்ஸ் நன்றிகள் 🙂

5. சமையல்: தலைப்பை மாற்றலாம்; நான் ரொம்பவும் சுவைக்கும் பகுதி. இவற்றையெல்லாம் யூனிகோடில் போட்டால், பின்னொரு நாளில் தேடுவதற்கு வசதியாக இருக்குமே. இந்த வாரமும் பயனுள்ள வட இந்திய உணவு முறையை எளிமையாக அறிமுகம் செய்ததற்கு நன்றி.

6. தராசு: ‘பின்குறிப்பு’ நல்லாத்தான் இருக்கு. ஆனால், சம்பந்தா சம்பந்தமில்லாமல் ‘பிகு’ போடறாங்க. தராசு எழுதிய பிரதமர் விஷயத்துக்கும், ஜெயலலிதா வாபஸ் வாங்கியதற்கும் எப்படி எங்கே லிங்க் இருக்கிறது என்பது அடியேனுக்கு எட்டவில்லை! தனியாக இன்னொரு சுட்டி கொடுத்தோ, அல்லது இரண்டு தராசு ஆகவோ எழுதியிருக்க வேண்டும்.

7. ரமா சங்கரன்: தமிழோவியத்தில் தவறவிடக்கூடாத பகுதி.

8. முத்தொள்ளாயிரம்: கொஞ்சம் அரைத்த மாவையே அரைப்பது போன்ற பாடல்களைக் கூட சுவைபட வழங்குவது ஒரு கலை. நன்றாக செய்து வருகிறார் சொக்கன். ஒவ்வொரு வாரமும் தலைப்பிலேயே, பாடலுக்கு ஒரு மினி அறிமுகம் செய்யலாம். காட்டாக இந்த வாரத்துக்கு: சேர அரசுக்கு மக்கள் அதிருப்தி! என்று தினமலர் போல் போட்டால், என் போன்ற டீ கடை பெஞ்ச் ஆசாமிகள் கூட முதலில் படிப்பார்கள் 😉

9. மேட்ச் ஃபிக்ஸிங்: அபிஜித் கலே லஞ்ச வழக்கின் முடிவு இந்த வாரம் வெளியாகுமாமே? போன வாரம் கிரிக்கெட் உலகில் நடந்தவற்றை பத்ரி எழுதுவது போல் எனக்கு மிகவும் பிடித்த அமெரிக்க என்.பி.ஏ செய்திகளை இதே போல் யாராவது (தமிழில்) தொகுத்துத் தர வேண்டும்.

10. முத்துராமன்: ஊக்குவித்தல் என்று நான் ஒரு வார்த்தையில் சொல்வதற்குப் பின் இவ்வளவு அர்த்தங்களா!? ஹ்ம்ம்… எதற்கு நீங்கள் ஊக்குவிக்க வேண்டும் என்பதை சுருக்கமாக அலசியுள்ளார்.

11. வானவில்: சிறிய வயதில் இந்தக் கதையை கேட்டிருந்தால் எடக்கு முடக்கான கேள்விகள் எதுவும் கேட்டிருக்க மாட்டேனாக இருந்திருக்கும். இப்பொழுது நிறையத் தோன்றுகிறது! ஏன் சன்னியாசம் பெற்றுக் கொள்ள வேண்டும்? (எனக்கு இன்னும் மனம் பக்குவம் அடையவில்லை போல!) எதற்காக வாழ்க்கையை அனுபவிக்கக் கூடாது? (அப்புறம் கொழுப்பு, கொலஸ்ட்ரால், ட்ரைக்ளிசரைட் என்று அவதிப்படக் கூடாது அல்லவா?) — சிறுவர்கள் படிப்பதற்கான சிறப்பான பகுதி.

12. காந்தீய விழுமியங்கள்: வாரம்தோறும் தமிழோவியத்தில் தவறவிடக்கூடாத இன்னொரு பகுதி. (இந்தியாவில் குற்றங்களுக்கு தரப்படும் தண்டணைகள் அதிகம் என்றே காந்திஜி நினைக்கிறார்.)

13. தன்னிலை விளக்கம்: தராசு Ext. அல்லது தராசு Express!

காணாமல் போனவை: சினிமாப் பாடல்களை சுவைபட வழங்கிய சந்திரவதனா, அமர்க்களமாக ஆரம்பித்த ஹரி கிருஷ்ணனின் ‘வேர்கள்’, அவ்வப்போது வரும் ‘வெங்கட்’, சில வாரம் முன்புதான் தொடங்கிய ‘கார்த்திக் ராமாஸ்’…

Categories: Uncategorized