Archive

Archive for July, 2004

அங்கும் இங்கும் பாதையுண்டு!?

July 29, 2004 5 comments

நேற்றைய என்.பி.ஆரின் பங்குச்சந்தை குறித்த நிகழ்ச்சியில் இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து திரும்புவதை அலசும் தொகுப்பு இடம் பெற்றது. நிகழ்ச்சியில் இருந்து:

* பதினேழு வருடம் கழித்துத் திரும்பிய Gartner-இன் பார்த்தா ஐயங்காருடன் ஒரு மினி பேட்டி.

* அமெரிக்காவில் கிடைக்கும் அந்தரங்கச் சுதந்திரத்தை இழந்தாலும், வயதான அப்பா-அம்மாவின் அருகாமை.

* இந்தியாவில் தொழில் தொடங்குவோருக்கான முதலீடு அதிகரித்துள்ளது.

* அமெரிக்காவை விட 30-60% கம்மியாக கிடைத்தாலும் ராஜபோக வாழ்வு.

* தாத்தா பாட்டியின் பரிவு பேத்திகளுக்குக் கிடைத்தாலும், தினமும் சந்திக்க விரும்பும் பெற்றோர்.

* சட்டையைப் பிடித்து சங்கோஜமில்லாமல் கேள்வி கேட்கும் திறந்த மேலாண்மைக் கொள்கைகளை பயிற்சி கொடுப்பதில் உள்ள சங்கடங்கள். (இன்னுமா?!)

* எதற்காக தினமும் வேலைக்கு வருகிறார்கள்? எப்படி ஆசை காட்டி தக்கவைத்துக் கொள்வது? அடுத்தவன் அஞ்சு பைசா ஜாஸ்தி கொடுத்தால் தாவி விடுவார்களா?

நிகழ்ச்சியை கேட்டவுடன் சபலபுத்தி ஆட்கொண்டது. பெங்களூர் திரும்பி, சென்னையின் கூப்பிடு தூரத்தில் சொந்தங்களை வைத்துக் கொண்டு, லிடோ வில் புது தமிழ்ப்படமும், ரெக்ஸில் ஆங்கிலப் படமும் பார்த்துக் கொண்டு ஜாலியாக இருக்கத் திரும்பலாமா என்று நப்பாசை. இக்கரைக்கு அக்கரை பச்சை… என்ன சொல்றீங்க 😉

– பாஸ்டன் பாலாஜி
—————————

நிகழ்ச்சியை கேட்க | தொடர்புள்ள சுட்டி

Categories: Uncategorized

Voltaire in Exile by Ian Davidson

July 29, 2004 1 comment

வால்டேரை குறித்து ஏழாம் வகுப்பு சரித்திரப் புத்தகத்தில் படித்தது உண்டு. அதன் பிறகு ‘சின்ன ராசாவே சித்தெறும்பு என்னக் கடிச்சுதா’ என்ற சத்யராஜின் ‘வால்டேர் வெற்றிவேல்’, அவருக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம் என்று குழம்ப வைத்தார். அமெரிக்காவில் ஒளிபரப்பாகும் A&E-இல் ஒருவரின் வரலாற்றை ஒரு மணி நேரத்தில் அடக்கும் வரை பொறுமையில்லாமல், வால்டேரை குறித்துத் தேடியபோது ஐயான் டேவிட்ஸன் கிடைத்தார்.

சிந்தனையாளர் வால்டேரின் (வால்டேர் எத்தனை வால்டேரடா) சிறை வாழக்கையையும், அவரின் படைப்புகளையும் அலசும் புதிய புத்தகத்தின் டைம்ஸ் மதிப்புரையில் இருந்து:

* மனித உரிமையை ஏளனம் செய்தவர் 180 டிகிரி அபவுட் டர்ன் அடித்து மனித உரிமைக்காகப் போராடிய கதையை சொல்லும் புத்தகம்.

* சகிப்புத்தன்மையற்ற, மூடநம்பிக்கைகள் நிரம்பிய கிறித்துவர்; பணக்கார மெய்யியலாளர் — நிதித்துறையில் நிகழ்த்திய சாகசங்களை ராபின்ஸன் அடுக்குகிறார்.

* Absolutism(???)-இன் எதிரி, neo-classical(???)-இன் ஆதரவாளராக எவ்வாறு விளங்கினார் என்பதை விவரிக்கிறது.

* முப்பதாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் இறந்த லிஸ்பன் பூகம்பம், அதனால் உதித்த கண்மூடித்தனமான கடவுள் நம்பிக்கை குறித்த கிண்டல், போரில் தோற்றதற்காக சுட்டு தண்டிக்கப்பட்ட உற்ற நண்பனின் பிரிவு, ஆகியவற்றை உள்ளடக்கி எழுதப்பட்ட Candide-இன் விமர்சனம்.

* பாரிஸில் சட்டம் படித்த சரிதையில் ஆரம்பித்து, பண்ணைத் தொழிலாளிகள் வரி கொடுத்து அல்லல்படுவது என்று வால்டேரின் அஞ்ஞாதவாசம் அல்லாத வாழ்க்கையையும் புத்தகம் தொட்டுச் செல்கிறது.

* ப்ரொடெஸ்டண்ட்களுக்கு எதிரான காலகட்டம் அது. ரோமன்-கத்தோலிக்க சேவைக்கு செல்லாவிட்டால் ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட காலத்தில் Protestant கத்தோலிக்கர்களுக்காக வால்டேர் தீவிரமாகப் போராடியுள்ளார். ழான் கலஸ் (Jean Calas) தன்னுடைய மகனை பிரிவு மாறியதற்காக கொலை செய்ததாக குற்றம் சாட்டப்படுகிறார். சாட்சி எதுவும் இல்லாமல், விசாரணை கண்துடைப்பு முடிந்தபிறகு, கையையும், கால்களையும் சிதைக்க உத்தரவிடப்படுகிறது. தவறான தீர்ப்புக்கு மன்னிப்பும், நஷ்டஈடும் வால்டேர் வாங்கித் தந்திருக்கிறார்.

* பாண்டிச்சேரியை ஆங்கிலேயரிடம் இழந்துவிட்ட ஃப்ரெஞ்சு படைத் தலைவரின் மேல் தேசத்துரோகமும், அரசு சொத்துக்களைக் களவாடியதாகவும் பழிபோடப் படுகிறது. இவரை காப்பாற்ற முடியாவிட்டாலும், அந்த தீர்ப்பின் அநியாயங்களை மக்களிடம் விதைத்திருக்கிறார்.

* வால்டேர் சில சமயம் கோழையாகவும், பல சமயம் சீர்திருத்தவாதியாகவும் மாறி மாறி காட்சியளித்தது; பதவிக்கு அடிபணிந்து போய் பதவியில் இருப்பவர்களின் செயல்பாடுகளை எதிர்த்தது; கடவுள் நம்பிக்கையில்லாமல், ஆன்மிகப் பற்று வைத்திருந்தது; சிந்தனையாளராகவும், வர்த்தகப்புலியாகவும் ஒருங்கே ஒன்றையொன்று குழப்பாமல் செயல்பட்டது; பெரும்பணக்காரர்களின் செலவை கண்டித்தாலும், அவர்களைத் துறந்து விட இயலாதது; என்று வால்டேருக்குள் இருக்கும் சாதாரண மனிதனைக் கண்டெடுக்கிறார் ராபின்ஸன்.

இந்தியாவில் இருந்து எழுத்தாளர்கள் நாடு கடத்தப் படுவதில்லை. சல்மான் ருஷ்டி போன்ற சிலர் மீண்டும் தாய்நாட்டைத் தொடுவதற்கு தடைகள் இருந்திருக்கலாம். புகழேந்தி போன்ற சிலர், மன்னன் மகளுடன் சீதனமாக ஒட்டக்கூத்தருக்கு விலை போயிருக்கலாம். அப்பர் போன்ற சிலர் கஷ்டப்பட்டிருக்கலாம். ஆனால், நாட்டை விட்டு துரத்தப்பட்டவர்கள் உண்டா?

புத்தகம் இன்னும் வாங்கவில்லை. வால்டேர் குறித்த வேறு முக்கிய புத்தகங்கள் இருந்தால் சொல்லுங்கள்.
-பாஸ்டன் பாலாஜி
————————–
Hardcover: 368 pages
Publisher: Atlantic Books; (July 8, 2004)
$47.96

“People seem to think that our century is merely ridiculous,” he
sighed, “in fact, it is horrible.”

Categories: Uncategorized

Googlisms

July 29, 2004 Leave a comment
  1. tamil is our spirit that spirit is prabakaran
  2. jeyalalitha is crazy
  3. karunanidhi is a tireless hardworking person
  4. dmk is the perfect mp3 player for people who want to hit the road without feeling weighed down
  5. swamy is what one could call a political freelancer:
  6. tamil nadu is almost twice as much as in hindi speaking uttar pradesh
  7. bedroom is god’s business
  8. november 14 is world diabetes day
  9. google is still spidering and caching my old server
  10. Googlism for: balaji:
    • balaji is an experienced php programmer
    • balaji is also favorable for the idea of marrying her
    • balaji is a wonderful human being and eventually falls in love with him
    • balaji is an artist and sculptor of another kind
    • balaji is itself a muruga idol? topic started by karikalan
    • balaji is so consumed with its sovereignty on tv since the last couple of years that it has overlooked the simplicity in the tone and tenor of its soaps that
    • balaji is supplying content to kannada and telugu channels
    • balaji is finally roused
    • balaji is having some other thoughts
    • balaji is concerned is addressed
    • balaji is ganesha
    • balaji is a `value buy’ which implies a 25% return over the next 12­18 months
    • balaji is seeking a commitment for $250000 for the first year
    • balaji is concentrating on is the venky’s brand of frozen chicken products
    • balaji is expected to focus on high
Categories: Uncategorized

உதிர்ந்த முத்துக்கள்

July 28, 2004 5 comments

1. “இரண்டு கோடி, மூன்று கோடி சம்பளம் வாங்கிவிட்டு அதிலிருந்து நூறு பேருக்கு இஸ்திரி பெட்டி, நான்கு பேருக்கு சைக்கிள் ரிக்ஷா வாங்கிக் கொடுப்பது சமூகப்பணி அல்ல.”
தொல். திருமாவளவன் (ஜூ.வி.)

2. “என்னைப் பிரித்துப் பார்க்காதீர்கள். நானும் ஒரு கம்யூனிஸ்ட்தான்”.
தமிழக கம்யூ. தலைவர்களை நோக்கி கலைஞர் (தினகரன்)

3. “நடிகர்கள் அரசியலுக்கு வந்தால்தான் அரசியலைச் சுத்தப்படுத்த முடியும். எம்ஜி.ஆர், என்.டி.ஆர் போன்ற நடிகர்கள் ஆண்டபோதுதான் நாடு சுத்தமாக இருந்தது”.
விஜயகாந்த் (ரிப்போர்ட்டர்)

4. “நான் ஒட்டகத்தினுடைய முதுகை நிமிர்த்தலாம் என்று போனேன். ஒட்டகத்தினுடைய முதுகு நிமிரவில்லை. அவர் ஒரு கொக்கினுடைய கழுத்தைச் சரி செய்யலாம் என்று போனார். அதுவும் சரி செய்யப்படவில்லை.”
பெரியார் திடல் விழாவில் தன்னையும், கி.வீரமணியையும் பற்றி கலைஞர் (முரசொலி).

5. “பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் தாழ்த்தப்பட்டோ ர் வீட்டுக்குச் சென்று கஞ்சி குடித்தால் வேறுபாடுகள் எல்லாம் சரியாகிவிடும்”
ராமதாஸ் (தினமணி)

6. “சிலர் என்னை உற்சாகமான பேர்வழி என்பது எனக்குப் பிடிக்கவில்லை. எனக்கும் சோர்வு, எரிச்சல் எல்லாம் வரும்”.
ப்ரீத்தி ஜிந்த்தா

7. “ஒரு டாக்டருக்கு ஸ்டெதஸ்கோப் எவ்வளவு அவசியமோ, அதே மாதிரி அரசியல்வாதிக்கு பதவியும் அவசியம்”.
‘புதிய தமிழகம்’ கிருஷ்ணசாமி (தமிழன் எக்ஸ்பிரஸ்)

8. “எனக்குத் துணை பிரதமர் பதவி கொடுத்தாலும் கூட மீண்டும் பாஜக கூட்டணிக்கு செல்லமாட்டேன்”.
ராம்தாஸ் (தினத்தந்தி)

9. “நான் அதிகம் சினிமா பார்க்கிறதில்லை”
மணி ரத்னம் (குமுதம்)

10. “திராவிடக் கட்சிகளால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எந்தப் பயனும் ஏற்படாது. தலித் அமைப்புகளின் பிரதிநிதிகள் அமைச்சரானால் மட்டுமே தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும்”
தொல். திருமாவளவன் (மாலைமலர்)

நன்றி: இந்தியா டுடே – தமிழ்

Categories: Uncategorized

தென்றல் – ஜூலை 2004

July 28, 2004 Leave a comment

இந்தியாவில் இருந்து வரும் பல இதழ்களை மிஞ்சும் தயாரிப்புடன் செறிவான பொருளடக்கத்தையும் தாங்கிய இதழ் தென்றல். ஏற்கனவே வ.ராமசாமி குறித்த பரியின் குறிப்பை பார்த்தேன். மேலும் பெரியண்ணன் சந்திரசேகரன் எழுதும் பூம்புகார் பக்கம், மதுரபாரதியார் தொகுத்த கேடிஸ்ரீயின் புஷ்வனம் தம்பதியரின் பேட்டி, வாஞ்சிநாதனின் புதிர் பக்கங்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர் குமரப்பாவை குறித்த மதுசூதனின் பதிவு, அரசரத்தினம் ராஜாஜியை சந்தித்தது, quotable quotes ஆகியவை மிகவும் பயன் தரும் இதழாக்குகிறது.

எதைப் படித்தாலும், அதில் opportunities for improvement காணும் reviewer புத்தியினால் தோன்றிய சில:

* குறுக்கெழுத்துப் புதிருக்கான விடை, இந்த இதழிலேயே கொடுத்தது எனக்கு தெரியாதவற்றை சீக்கிரம் சரிபார்க்க உதவினாலும், அடுத்த மாதம் வரை காத்திருக்க வைக்கலாமே?

* அவுட்சோர்ஸிங் குறித்த தமிழ் வார்த்தை எனக்குத் தெரியாவிட்டால் பரவாயில்லை. ஆனால், ஆசிரியர் அசோகன் கூடவா, அப்படியே ஆங்கிலத்தைக் கையாளவேண்டும்? (பத்ரியோ, வெங்கட்டோ ஒரு நல்ல பதத்தைக் கையாள்வார்களே? என்ன அது?)

* எனக்கு மிகவும் பிடித்த ‘மாயா பஜார்’ பகுதியில், முட்டைகோஸ் சாதம் செய்ய சொல்லிக் கொடுத்திருந்தார்கள். முட்டைகோஸை எப்போது போடுவது என்று மட்டும் செய்முறையில் எழுதவேயில்லை. முட்டைகோஸே இல்லாமல் ‘முட்டைகோஸ் சாதம்’!

* மாத இதழில் சினிமா செய்திகள் வரும்போது ஆறிவிடலாம். ‘நிழல்’ போல சினிமா ஆய்வு கட்டுரைகளை இடலாமே? சமகால சினிமா அல்லது ஹாலிவுட் படங்களின் அலசல் என்று கொடுத்தால் மேலும் சுவைக்குமே!

* A-44, B(C) 02, என்று பக்க எண் கொடுப்பது பதிப்பாளர்களுக்கு வசதியாக இருக்கலாம். வாசகன் எனக்கு?

* ஜூலை மாத ராசி பலன் எழுதியவர் யார்? 😛 😉

* நிகழ்வுகள் என்பதை மொத்தமாக ஒரே இடத்தில் சேர்த்துப் போடாமல் ஆங்காங்கே, கதை கட்டுரைகளுக்கு இடையே வெளியிட்டிருந்தால் வாசகரின் ஆர்வத்தைப் படிக்கத் தூண்டுவதாக இருக்கும்.

* ஏன் கர்னாடிக்.காம் கூட இணைந்து வழங்கும் ஜுலை மாத நிகழ்வுகள், ஆங்கிலத்தில் வழங்கப் பட்டிருக்கிறது? Events ஒவ்வொன்றும் தமிழ் மாற்றுவது முடியாத பட்சத்தில், important dates, தமிழ் மன்ற அமைப்பு நிகழ்த்தும் கலைவிழாக்களையாவது முழுக்கத் தமிழில் தந்திருக்கலாமே?

தென்றல் இதழில் இருந்து:

1. அந்தக் காலத்து ‘கண்ணதாசன்’, ‘தீபம்’ போன்றும், தற்போது வெளிவருகிற ‘மூவேந்தர் முரசு’, ‘சிங்கைச் சுடர்’, ‘கண்ணியம்’ போன்ற இதழ்கள் போன்றும் ‘தென்றல்’ இதழ் மனதை நிறைவு செய்தது.
– பாவலர் கருமலைப் பழம்நீ (வாசகர் பக்கம்)

2. தை மாதம், 1964ம் ஆண்டு. ….. இலங்கைத் தமிழர் பிரச்சினையப் பற்றி கேட்டார். அப்போது எஸ்.ஜே.வி. செல்வநாயகம் தலைமையில் தமிழர்கள் சிங்கள அதிகாரத்துக்கு எதிராக சாத்வீகப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தார்கள். ராஜாஜி சொன்னார். “இலங்கைத் தமிழர்கள் தொடர்ந்து போராடி தமது உரிமைகளைப் பெறவேண்டும். போராட்டத்தைத் தளர்த்தினார்களோ அவர்கள் இனரீதியாக அழிந்துவிடுவார்கள்.”
– அ. இ. அரசரத்தினம் (நைஜீரியாவில் மதுபானம் மலிவு)

3. ‘அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமாட்டான்’ மற்றும் ‘ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வள்ரும்’ குறித்த புஷ்வனத்தாரின் எளிய, insightful விளக்கங்கள்.

4. மணி மு. மணிவண்ணனின் புழைக்கடப் பக்க சிதறல்கள்:
வெங்கட் சாமிநாதன் “தங்கள் எதிர்கால முன்னேற்றத்துக்கு ஒரு சதத்துக்கும் பிரயோசனப்படாத தமிழ் அறிவில் மாணவர்கள் காட்டும் உற்சாகம் தனக்கு வியப்பைத் தருகிறது” என்றார்.

(இது குறித்த அவ்ரின் பதிவுகள் முக்கியமானவை. மைக்கேல் மூர் படம், செம்மொழி அறிவிப்பு என்று கடைசிப் பக்கத்தில் புரட்ட ஆரம்பிக்கும் என் போன்றோருக்கு சரியான தீனிப் பக்கம்).

அமெரிக்காவில் இதழ் பெற சந்தாதாரர் ஆகலாம். உங்களின் கதை, கட்டுரைகளை அனுப்பலாம்.

நன்றி தென்றல்.
-பாஸ்டன் பாலாஜி

Categories: Uncategorized

இணையப் பொறுக்கன்

July 28, 2004 4 comments

1. FriendTest.com – challenge your friends with your own custom quiz!: தேர்தல் நடத்தலாம். தேர்வு வைக்கலாம். கருத்துக் கணிப்பு கொடுக்கலாம். ஸ்பார்க்லிட் கொடுப்பது போல் ஒரு கேள்வியோடு நிறுத்திக் கொள்ளாமல், மேலும் ஒன்பது வினாக்கள் தொடுக்கலாம்.

2. LHS Bat Quiz: வௌவால்களை குறித்து உங்களுக்கு எவ்வளவு தெரியும்? (சப்-டெக்ஸ்ட் எல்லாம் இல்லாமல்தான் கேள்வி கேட்கிறார்கள் 🙂 [என்னுடைய ஸ்கோர்: Batter than Average! You got six answers right, which shows you know more than the average person about bats.]

3. Snowboard Alley: ரொம்ப வேலை செய்துவிட்டீர்களா? ஐந்து நிமிடத்துக்காவது சம்மரில் பனிச்சறுக்கு விளையாட வாங்க!

4. Our favorite Weird Toon!: இளவரசியார் போட்ட படமும் இருக்கிறது.

5. TechTales::Tech Room: சோகக்கதை சொல்கிறார்கள்; கடிக்கிறார்கள்.

6. The Room: ருத்ரன் சொல்வதைப் போல் உளவியல் ரீதியாக கணிக்கிறார்கள். அதற்கும், இதற்கும் என்ன சம்பந்தம் என்று தெரியாவிட்டாலும், சுவாரசியமான அலசல்கள். குப்பைத்தொட்டி குறித்த குறியீடு, வெகு அற்புதம். அவசியம் ஒரு தடவை ரூமுக்குப் போய்ப் பாருங்க.

7. GPS Drawing Information: இணையத்தில் ஊர் சுற்றியும், உங்களுக்கு நேரம் நிறைய இருந்தால் அல்லது புதுக்காதலியுடன் ஊர் சுற்ற விரும்பினால், செய்து பார்க்க வேண்டிய பயனுள்ள பொழுதுபோக்கு.

8. Virtual Presents: வாழ்த்து அட்டை கொடுப்பதெல்லாம் பழைய டெக்னிக். இப்பொழுது உங்களுக்கு என்ன வேணுமோ, அதை அனுப்பி வைப்பதுதான் ஃபாஷன். கார் வேணுமா? இட்லி-வடை வேணுமா?

9. Defiance: Why it happens and what to do about it: பத்ரி இப்பொழுது எழுதியிருக்கும் மேட்டருடன் சம்பந்தமுடையது. நான் அடிக்கடி படித்து அசைபோடும் அட்வைஸ்.

10. இணையத்தில் கண்டது: Through clever and constant application of propaganda, people can be made to see paradise as hell, and also the other way around, to consider the most wretched sort of life as paradise. – Adolf Hitler (Mein Kampf)

Categories: Uncategorized

கமல் கண்ட கனவு

July 28, 2004 7 comments

சத்தியமாய் கதை எழுதும் முயற்சிதான்.
-பாஸ்டன் பாலாஜி


எனக்கு வரும் கனவுகள் பல உடனடியாக மறந்துபோகும். எனவே, பகிர்ந்து கொள்ளுதல் என்னும் பேச்சுக்கே இடமில்லை. நான் சொல்லப்போகும் கனவு இப்படி மறந்து போகாத பகலில் நிகழ்ந்த ஒன்று.

கனவை குறித்து விவரிப்பதற்கு முன், இடஞ்சுட்டி விடுதல் உங்களுக்குப் பொறுத்தமாக இருக்கலாம். முந்தைய நாள் இரவு ஒன்றரை மணி வரை ஸ்னேஹாவுடன் டூயட். பதிவானதற்கு அடுத்த நாள், நான் கண்ட கனவு இது. இதைப் போன்ற நிகழ்வுகளை என்னுடைய திரைப்படங்களில் திணிக்க இயலாது. பஸ்ஸில் தூங்கிக் கொள்ளலாம் என்னும் நம்பிக்கையில், காலை ஐந்து மணிக்கே எழுந்துவிட்ட அவுட்டோ ர் ஷூட்டிங் இருகின்ற சினிமா நாள்.

என்னுடைய கனவுகளில் ஸ்னேஹாவோ, சிம்ரனோ வருவது கிடையாது. கனவுக்கண்ணன்கள் என்றும் யாரும் வந்து போவதில்லை. பல சமயம் கனவே வராது. நான் கனவு காணும் சக்தியை இழந்துவிட்டேனோ என்று கூட அச்சமாய் இருக்கும். நான் காணும் கனவுகள் எனக்கு எப்போதும் பலித்ததே கிடையாது. விழித்திருந்தால், நான் கனவுகள் காண்பதில்லை. திட்டம் போடுவதிலும், அதை நிறைவேற்றுவதற்கு உரியோரைத் தேர்ந்தெடுப்பதிலுமே என் நேரம் சென்று விடுகிறது.

துர்சொப்பனங்கள் அவ்வப்போது எட்டி பார்ப்பதுண்டு. என்னுடைய படத்திற்கான க்யூவில் நான் நிற்பதாகவும், தடியடி வாங்குவதாகவும்; ஆஸ்கார் விருதினைப் பெறச் செல்லும்போது படிக்கட்டில் வேட்டி தடுக்கி விழுவதாகவும்; பல்லாயிரக்கணக்கான முதலைகளுக்கு நடுவே, நானும் வாய் திறந்து, கண்மூடி, மிருகக்காட்சி சாலையில் வசிப்பதாகவும்; விமானத்தில் தனியே பறக்கும்போது, விமானி இல்லாததைக் கண்டு பயந்துபோய், கதவைத் திறந்து, மேகத்தில் தொத்திக் கொள்வதாகவும்; வீட்டு சாவி இல்லாத இரவில், ஆள் அரவமற்ற தெருவில், ஆடை கிழிந்து, அலங்கோலமாக ஓடும்போது, திடீர் சூரியன் உதிப்பதாகவும் என்று நிறைய.

ஆனால், அவற்றை சொல்லி, உங்களின் சுபதினைத்தை நாசமாக்க நான் விரும்பவில்லை. கெட்ட சொப்பனம் கண்டால், எழுந்து, தண்ணீர் குடித்து விட்டு, அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடுவேன். நல்லது கண்டால் தூங்கக் கூடாது, கெட்டது கண்டால் தூங்கிப் போக வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. முழித்திருந்தால் வேலை செய்யவேண்டும். அவ்வளவே.

என் கனவை குறித்து சொல்லிவிடுகிறேன். இந்தக் கனவு சூரியன் இருக்கும் பகல்வேளையில்தான் ஆரம்பிக்கிறது. நானும் என்னுடைய நண்பரும், கம்பிகள் போட்ட தியேட்டர் வாசலில் நிற்கிறோம். என் தோற்றத்தைப் பிறர் காணக்கூடாது என்பதற்காக, ‘சத்யா’வின் தாடியும், ‘ஆளவந்தானின்’ மொட்டையும் கொண்டு காணப்படுகிறேன். கூட இருக்கும் நண்பர், பார்ப்பதற்கு ‘பாய்ஸ்’ சித்தார்த் மாதிரி இருந்தார். எங்களுக்குப் படத்திற்கான டிக்கெட் கிடைத்துவிட்டது. நாங்கள் இருவரும் பார்க்கப் போகும் படத்தை குறித்தோ, கடந்து செல்லும் இளைஞர்களை குறித்தோ, கம்பிக்கு வெளியே இருக்கும் கூட்டத்தை குறித்தோ பேசிக் கொண்டிருக்கலாம்.

யாருக்கும் என்னை அடையாளம் தெரியாத அந்த அதிகாலை ஏழு மணி காட்சியில், ஒருவன் மட்டும் என்னைப் பார்த்து விடுகிறான். ‘நீங்க கமல்தானே?’ என்னும் அவனின் மகிழ்ச்சியான கண்டுபிடிப்பு எனக்கு சந்தேஷம் தருகிறது. முகத்தில், தோற்றத்தில் இவ்வளவு மாற்றம் செய்தாலும், என்னை அடையாளம் கொண்டு விசாரிக்கும் அவனுக்கு ‘ஆம்’ என்கிறேன்.

எனக்கு வழக்கமான பயம் வருகிறது. என்னுடைய நடிப்பு, திரை ஆளுமை, இயக்குநர் பாணிகள், சினிமா என்று பாராட்டிப் பேசும் மற்றொரு ரசிகன் வந்துவிட்டானே என்ற பயம். இரண்டு நிமிடம் பேசி, கை குலுக்கி, போட்டோ பிடித்துக் கொண்டு, முகத்தைக் கிள்ளி, சினிமா டிக்கெட்டின் பின் கையெழுத்து வாங்கி, நாலு தடவை நன்றி சொல்லி, தானும் பிரபலத்தை சந்தித்த கதையை நண்பர்களிடம் பிரஸ்தாபிக்கப் போகும் இன்னொரு ஜீவனோ என்னும் பயம்.

ஆனால், நான் ஏற்கனவே சொன்னேனே, இது நல்ல கனவு. இவன் என்னுடைய ‘தீராநதி’ படைப்பை விசாரிக்கிறான். ஞானக்கூத்தன் கவிதையை அலசுகிறான். தொழில்நுட்பத்தை விட்டுவிட்டு இலக்கியம் பேசுகிறான். என்னுடைய கவிதைப் புத்தகம் எப்போது வெளிவருகிறது என்று ஆர்வமாய் கேட்கிறான். இது போன்ற ஆழ் அலசல்கள் வலையுலகில் கிடைப்பதை விவரிக்கிறான். இண்டர்நெட்டில் தமிழ் எவ்வாறு கையாளப்படுகிறது என்பது முதல் எங்கு கோலோச்சுகிறது என்பது வரை அலசுகிறான். என்னை சந்திக்க வருபவர்களிடம் இருந்து, மாறுபட்டு, என்னைப் பேசவிட்டு வேடிக்கை பார்க்காமல், சிறந்த படம், சிறந்த ஹீரோயின் என்று லிஸ்ட் கேட்காமல், நிருபரைப் போல் அந்தரங்கக் குடைசல்கள் இல்லாமல், வெற்றுப் புளகாங்கிதங்களில் சிரிப்பை நிரப்பாமல், என்னுடைய நல்ல ரசிகன் ஒருவனைப் பார்த்த சந்தோஷத்தில் மிதந்து கொண்டுதான் இருந்தேன்.

கடைசியாக, தான் சார்ந்திருக்கும் இணைய இலக்கிய குழுவில் என்னை உறுப்பினராகும்படி வலியுறுத்தி என்னுடைய மின்னஞ்சல் முகவரியைத் திருடும்வரை அந்தக் கனவு நல்ல கனவுதான்.

Categories: Uncategorized

DNC – Day 1 Outtakes

July 26, 2004 3 comments

Send Me

CNN.com – Clinton calls on voters to choose Kerry – Jul 26, 2004: “Clinton said when the United States went to war, when it needed to recover from the effects of war, when America needed to learn technology, Kerry always said, ‘send me.'”

இதே போல் கெர்ரி எப்பொழுது எல்லாம் ‘என்னை அனுப்பு’ என்று கூக்கூரலிட்டார் என்று க்ளிண்டன் முழுவதுமாக சொல்லவில்லை. அவற்றில் சில:

* சூப்பர் பௌலில் நடந்த ஜானட் ஜாக்ஸனின் புகழ்பெற்ற ஆடை கிழிப்பு போல், அடுத்த வருடம் ப்ரிட்னி ஸ்பியர்ஸுடன் ஆடிப்பாட ஆள் தேர்ந்தெடுக்கும்போது கெர்ரி சொன்னார்: ‘என்னை அனுப்பு’.

* ஜார்ஜ் மைக்கேல் திருமணம் செய்து கொள்ள ஆள் தேடியபோது கெர்ரி தூது விட்டார்: ‘என்னை அனுப்பு’.

* ஆன்னா நிக்கோல் ஸ்மித் தன்னுடைய செல்வத்துக்கு உரிய கணவனுக்கான சுயம்வரத்திற்கு கெர்ரி விண்ணப்பித்து சொன்னது: ‘என்னை அனுப்பு’.

* டென்னிஸ் மில்லர் தன்னுடைய சிரிப்பு வராத ஜோக்குகளுக்குப் பல்லை காட்ட ஆள் தேடியபோது, ஆபத்பாந்தவன் கெர்ரி: ‘என்னை அனுப்பு’.

* தமிழகப் பட்டிமன்றங்களில் எந்தப் பக்கம் நடுவர் முடிவு என்று பார்ப்போர் அறியாவண்ணம் தீர்ப்பு சொல்ல ‘யுவர் ஹானரை’த் தேடியபோது கெர்ரி ஆஜராகிறார்: ‘என்னை அனுப்பு’.

* டாட்டா, அம்பானிகளுக்குப் ‘மேலும் பணம் சம்பாதிப்பது எப்படி’ என்று வகுப்பறையில் பாடம் நடத்த ஆசிரியர் அம்புடாதபோது, கெர்ரி விண்ணப்பிக்கிறார்: ‘என்னை அனுப்பு’.

* ட்ராக்டர் ஸ்டார்ட் செய்யக் கூடத் தெரியாமல் வாரம் தவறாமல் தன் வயல்வெளிக்கு செல்லும் புஷ்ஷிற்கு, ஆடு மாடு வளர்ப்பு முதல் அறுவடை அறுப்பு வரை கற்றுக் கொடுக்க வாத்தியார் வேலைக்குக் கெர்ரி மனுப் போடுகிறார்: ‘என்னை அனுப்பு’.

ரெண்டு வரி நோட்: ஹில்லாரி க்ளிண்டனின் ஆரவாரமான அறிமுகத்துக்கு நன்றி சொல்லும் விதமாக, பில் க்ளிண்டன் காதோடு ரகசியமாக ‘தாங்க் யூ’ சொல்லிச் சென்றார். நாளைய ஜே லீனோ முதல் ஜான் ஸ்டுவர்ட் இந்தக் காட்சியை(யும்) வைத்துக் கொண்டு படாத பாடு படுத்தப் போகிறார்கள். அவர்களுடைய டிபிகல் பன்ச்கள் இவ்வாறு இருக்கலாம்:

–> மோனிகாவின் காதலர், முன்னாள் ஜனாதிபதி, என் கணவர் — என்று அறிமுகப்படுத்தாதற்கு நன்றி கண்ணே!

–> நான்கு வருடம் கழித்து, அமெரிக்காவின் ‘ஃபர்ஸ்ட் ஜெண்ட்ல்மேன்’ என்று விளிக்கப் படப் போகும் க்ளிண்டன் — என்று கெர்ரியை மிரள வைக்காததற்கு நன்றி கண்ணே!

–> சின்னப் பையன் எட்வர்ட்ஸ் எனக்குக் கீழேயும் துணை ஜனாதிபதிக்குப் போட்டியிடுவார் என்று நம்புகிறேன் — என்று சொல்லாததற்கு நன்றி கண்ணே!

–> என்னை விட அதிகப் புத்தகங்கள் விற்றுப் பென்ஷன் வாங்கும் டைரிப் பதிவாளர் — என்று ‘என் வாழ்க்கை’யைக் குறிப்பிடாததற்கு நன்றி கண்ணே!

-பாஸ்டன் பாலாஜி

Categories: Uncategorized

ரோஹ்தக் ராணி

July 26, 2004 Leave a comment

பிலானியில் இருந்து டில்லிக்கு செல்லும் வழியில் உள்ள முக்கியமான ஊர் ரோஹ்டக். முன்னாள் துணை பிரதம மந்திரி தேவிலாலின் தொகுதி என்ற மட்டிலுமே நாம் அறிந்த ஊர், ‘மர்டர்’ படத்திற்குப் பின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக உருவெடுக்கிறது. தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் வந்து சேர்ந்த அதிகாலையில், புது டில்லியின் ஐ.எஸ்.பி.டி. காடுகளில் இருந்து கிளம்பிய வண்டியின் முதல் நிறுத்தம் ரோஹ்டக்கில் இருக்கும். காலை சிற்றுண்டி சாப்பிடும்போது பார்த்தேனா… அல்லது ஒட்டக வண்டியில் வயலோரமாக பார்த்தேனா… ‘ஏலே மச்சி மச்சி’ என்று அன்பே சிவம் மாதவன் போல் ‘பாங்’ அடித்த பஸ் மேல் பயணங்களில் பார்த்தேனா… அல்லது ராஜஸ்தான் ரோட்வேஸ் வண்டியின் டயர் பங்க்ச்சராகி, நான்கு மணி நேர வெயிலில் காய்ந்து காத்திருந்த வேளையில், பறந்துபோன ஏஸி காருக்குள் பார்த்தேனா என்று சரியாக நினைவில் இல்லை.

இன்று ‘மர்டர்’இல் நடித்து இந்தியப் புகழ். அடுத்து ஜாக்கி சான் படம் மூலம் உலகப் புகழ். நான் மட்டும் பாரதிராஜா மாதிரி பஸ் ஸ்டாண்டில் பார்த்து ஹீரோயின் அறிமுகம் செய்யும் டைரக்டராய் இருந்த்திருந்தால்… அன்றே… ஹ்ம்ம்ம்…

அரிய வாய்ப்பை தவறவிட்டுவிட்டார்கள்.
(அடுத்து சுராவா, பிவானி, சூரு, ஜுன் ஜுனூ போன்ற நகரங்களில் இருந்து ஹீரோயின் குதித்தால் சுராவா சுந்தரி, பிவானி ஃபிகர், சுரூ சுந்தரி, என்று தலைப்பு வைத்து போஸ்ட் போடலாம்… வெயிட்டீஸ்)

Categories: Uncategorized

எ(ன்)ண்ணச் சிதறல் — ஆனந்த் சங்கரன்

July 26, 2004 1 comment

சூரியன் தனித்திருந்தால் எங்கும் ஒளி
சந்திரன் தனித்திருந்தாலும் ஒளி
இரண்டும் சேர்ந்திருந்தால் அன்று
அமாவாசை


கண்ணொளி தந்தேன் குருடனுக்கு
அவனுக்கு இதுவரை வராத துன்பம் வந்தது
மெட்ராஸ் ஐ


கண்ணால் காண்பதும் பொய்
காதால் கேட்பதும் பொய்
தீர விசாரிப்பதே மெய்
அதான் நாட்டில் இத்தனை விசாரனை கமிஷன்களோ ?

Categories: Uncategorized