Archive
அரசு பதில்
‘கல்வி மூலமாகத்தான் சமுதாயத்தில் மாற்றங்கள் நிகழும் என்று ஐயா பெரியார் சொன்னார். அதனால்தான் கல்வி நிறுவனங்கள் பல எங்களால் நிறுவப்பட்டன’
— பொதிகை டி.வி. பேட்டியில் தி.க.தலைவர் வீரமணி
மூன்று வார்த்தைகள்
ஜராசு :: appusami.com
சத்குரு ஜக்கி வாசுதேவ்
அத்தனைக்கும் ஆசைப்படு :: Vikatan.com
கலைத் துறையைச் சேர்ந்த ஒருவர் என்னைச் சந்தித்தார். ‘ஒரு செல்வந்தனுக்குக் கிடைக்கும் மரியாதையும் மதிப்பும், பிரம்மாவுக்கு இணையான ஒரு படைப்பாளிக்குக் கிடைப்பதில்லையே… ஏன்?’ என்று வருத்தத்துடன் கேட்டார்.
உண்மையில் யார் படைப்பாளி?
படைப்பு ஏற்கெனவே கச்சிதமாக நிகழ்ந்து முடிந்துவிட்டது. இருப்பதையெல்லாம் நீங்கள் இப்படியும் அப்படியுமாக மாற்றி அமைத்துக் கொண்டு இருக்கிறீர்களே தவிர, புதிதாக எதைப் படைத்தீர்கள்?
நீங்கள் கண்டுபிடிக்காமல் விட்ட உபயோகங்களை அடுத்து வரும் தலைமுறைகள் கண்டுபிடிக்கும்.
ஏற்கெனவே இருப்பதைத்தான் உங்களுக்கு வசதியாக விதம்விதமாகத் திருத்துகிறீர்கள். மாற்றி அமைக்கிறீர்கள். பயன்படுத்துகிறீர்கள். மற்றபடி, நீங்கள் புதிதாக எதைப் படைத்துவிட்டதாகப் பெருமை கொள்ள முடியும்?
நீங்கள் ஓவியராக இருக்கலாம். எழுத்தாளராக இருக்கலாம். பாடகராக இருக்கலாம். எந்தக் கலைத் துறையிலும் இருக்கலாம்.
நீங்கள் செய்வது முதலில் உங்களுக்கு ஆனந்தம் தர வேண்டும். அப்போதுதான் உங்கள் திறமையை உங்களுக்கு விருப்ப மான விதத்தில் வெளிப்படுத்த முடியும்.
அப்படி வெளிப்படுத்தும் விதத்தில், மற்றவர்கள் மகிழ்ச்சியோடு இருப்பதற்கும் நீங்கள் உபயோகமாக இருக்கிறீர்களா? பாரமாக அழுத்தும் பிரச்னைகளை மறந்துவிட்டு, சில மணி நேரமாவது அவர்கள் அமைதியாக இருக்க நீங்கள் பயன்படுகிறீர்களா? அது போதும். நீங்கள் சிறந்த படைப்பாளி என்று கொண்டாடப்படுவதை விட அது மேன்மையானது!
உங்களைவிட அடுத்தவர் செல்வாக்கோடு இருந்தால், இருந்துவிட்டுப் போகட்டுமே? உங்களைக் குறைத்து மதிப்பிட்டு விட்டுத்தான் போகட்டுமே?
நீங்கள் எந்த மதத்திலிருந்து வந்தாலும், உங்கள் கடவுள் எப்படி இருக்கிறார்? அவர் மீது பூச்சொரிந்து பூஜிப்பதால், உடனே சலுகைகள் காட்டுவதுமில்லை; அவர் மீது காறித் துப்புவதால், உடனே தண்டனை கொடுப்பதும் இல்லை. போற்றலையும், தூற்ற லையும் பொருட்படுத் தாமல்,அவருடைய செயலை நூறு சதவிகித ஈடுபாட்டோடு தொடர்ந்து செய்கிறார். உண்மையான படைப் பாளிக்கு அதுதானே அழகு?
கலைத்துறை என்றில்லை. எந்தத் துறையானாலும், உங்களுக்கு மட்டுமல்லாது, சுற்றியுள்ளவர்களுக் கும் ஆனந்தமான சூழ்நிலையை உருவாக்கித் தாருங்கள். அன்பைக் குழைத்து முழுமையான ஈடுபாட்டுடன் உங்கள் திறமையை வெளிப்படுத்துங்கள்.
புகழும், செல்வாக்கும் தாமாகவே வந்து சேரும்!
ஊக்கமது கைவிடேல்
கிரிக்கெட்டில் முன்பு மனோஜ் பிரபாகர் குண்டு போட்டார். அதே போல் அமெரிக்காவில் பேஸ்பாலுக்கு ஹோஸெ கான்ஸெகோ (Jose Canseco) குண்டு போட்டிருக்கிறார். கபில் தேவில் ஆரம்பித்து பலரும் பணம் வாங்கிக் கொண்டு ஆட்டத்தை மோசமாக்கிக் கொண்டதாக பேட்டி கொடுத்தார் மனோஜ். ஸ்டெராய்ட்கள், உடல் வளர்ச்சிக்கான ஹார்மோன்கள், அம்·பிடமின் போன்றவற்றை எடுத்துக் கொண்டதால்தான் சிறப்பாக சிலர் விளையாடுவதாக கான்ஸெகோ எழுதியிருக்கிறார். பேஸ்பாலில் சிக்ஸர் போன்ற ‘ஹோம் ரன்’ அடித்து நொறுக்குபவர்களில் பலரும் ஊக்க மருந்து உட்கொள்வதாக சொல்கிறார்.
இதன் தொடர்பாக அமெரிக்க காங்கிரசில் நேற்று விசாரணை. டெண்டுல்கர், கங்குலி, ஸ்ரீநாத், ஷெவாக் போன்ற பேஸ்பால் கதாநாயகர்களை அழைத்திருந்தார்கள். கான்ஸெகோவை கங்குலிக்கு ஈடாக சொல்லலாம். சிறப்பான திறமை, அணியை வெற்றிக்குக் கொண்டு செல்லும் பண்பு எல்லாம் இருக்கும். ஆனாலும், இந்திய அணியின் வெற்றிக்குக் காரணமாக கபில், டெண்டுல்கர், ஷெவாக் போன்றவர்களே தலைப்புச் செய்திகளாவார்கள். கங்குலியின் புகழை நீக்குவதற்கு டெண்டுல்கர் உதவுவது போல், கான்ஸெகோவின் புகழை அஸ்தமிப்பதற்கு மார்க் மெக்குவெய்ர் (Mark McGwire). இருவரும் ஒரே அணியைச் சேர்ந்தவர்களாக விளையாடினார்கள்.
மார்க் மெக்குவெய்ர் டைம் பத்திரிகையில் 1998-ஆம் வருடத்தில் ஹீரோ என்று கொண்டாடப்பட்டவர். மூன்று மாமாங்கத்துக்கு மேலாக நிற்கும் ஹோம் ரன் சாதனைகளை முறியடித்தவர். ஸ்போர்ட்ஸ் இல்லுஸ்ட்ரேடட் அட்டைப்படத்தில் ரோமானிய டோகா அணிந்து கௌரவிக்கப்பட்டவர். ‘அண்ணாமலை’ போன்ற புகழ்பெற்ற தொடரில் அமெரிக்காவின் ராதிகாவான ஹெலன் ஹண்ட்டை முத்தம் கொடுத்தவர். போப்பினுடன் அந்தரங்க சந்திப்பு கிடைக்கப்பெற்றவர்.
ஆனால், அவருக்கும் சுனில் காவஸ்கரின் மும்பை லாக்கர் தர்மசங்கடம் போல் ஒன்று நிகழ்ந்தது. கவாஸ்கரின் எழுபது லட்ச ரூபாய் கண்டுபிடிப்பு மூடி மறைக்கப்பட்டது போல் மார்க் மெக்வெய்ரின் ஆண்ட்ரோஸ்டெண்டியோன் (androstenedione) ஊக்க மருந்தும் சலசலத்து அடங்கிவிட்டது.
அப்பொழுது பேஸ்பால் சட்டத்திலோ ஆட்ட விதிகளிலோ ஊக்க மருந்துகளுக்கு எவ்விதமான தடையும் இருக்கவில்லை. ‘சொல்லாதே யாரும் கேட்டால்’ என்பதைத் தவிர. ஆட்டத்தை முன்னேற்றுவது மட்டுமே அப்போது அவர்களுக்கு முக்கியமானதாகப் பட்டது. மூன்றரை மணி நேரத்திற்கு மேல் செல்லும் பேஸ்பாலை விட அதிரடியான அமெரிக்க கால்பந்தும், மைக்கேல் ஜார்டனின் உள்ளங்கைக்குள் இருந்த கூடைப்பந்தும் மக்களை சொக்குப்பிடி போட்டிருந்தது.
செத்தவன் கையில் ஜர்தா கொடுத்தது போன்ற ஆட்டம், விளையாட்டு வீரர்களின் பணப் பேராசை எல்லாம் பேஸ்பாலை அதள பாதளத்தில் தள்ளிவிட்டிருந்த காலம். சச்சின் போல வந்தார் மார்க் மெக்வெய்ர். கூடவே ‘சபாஷ்… சரியான போட்டி’யாக மேற்கிந்தியாவின் லாரா போல் சம்மி ஸோசா (Sammy Sosa). அமெரிக்கவை மீண்டும் பேஸ்பால் பக்கமாக திரும்பி பார்க்க வைத்தார்கள். மக்களின் எதிர்பார்ப்பு அதிகரித்தது.
பேஸ்பாலின் மீது மீண்டும் காதல் பிறந்தது. எந்தக் காதலும் என்றாவது மனமுறிவுக்கு இட்டுச்செல்லும் என்பது போல் தற்போது ஊக்க மருந்து பிரச்சினை வெடித்திருக்கிறது. காதலி ஏமாற்றியிருக்கிறாள். நம்பிக்கை துரோகம் செய்திருப்பதாக கான்ஸெகோ பரபரப்பாக பேச ஆரம்பித்தார். காதலில் மயங்கி கிளைத்திருக்கும் வரை உலகமே ரம்மியமாகவும், காதலரே உத்தமராகவும், காதலியே உன்னதமாகவும் எண்ணி வந்தார்கள். முதல் ஏமாற்றம் கிடைத்தவுடன், பேச்சு முற்றி, தோண்டத் தோண்ட பூதம் என்பது போல் சூதாட்டம், மேட்ச் ·பிக்ஸிங், நிறப் பிரிவுகளின் தலைத்தூக்கல், கன்னாபின்னா வளர்ச்சி, வன்முறை, பணம் படைத்த அணிகளின் கொழிப்பு, என எல்லாவிதமான பாண்டோரா குழப்பங்களும் வெளியே வர ஆரம்பித்திருக்கிறது.
பிரச்சினையை முடிந்த வரைக்கும் மூடி அமுக்கிவிட நினைத்த பேஸ்பால் வாரியம் ‘ஊக்க மருந்து விலக்கு கொள்கை’யை சமீபத்தில் அறிவித்திருந்தது. ஊக்க மருந்துகளை உட்கொண்டிருக்கிறார்களா என்பதற்கு சோதனைகள் இனி செய்யப்படும். இவை மூன்றாண்டுகளுக்கு முன்பே ஆரம்பிக்கப் பட்டதுதான் என்றாலும், இப்பொழுது இன்னும் கொஞ்சம் விரிவாக ஒலிம்பிக்கில் செய்யப்படும் பரிசோதனை போல் முழுமையாக்கப்பட்டுள்ளது. முதல் குற்றத்திற்கு பத்து நாள் ஆட்ட விலக்கோ அல்லது பத்தாயிரல் டாலர் அபராதமோ கட்ட வேண்டும். எந்த ஆட்டக்காரர் எதை உட்கொண்டார் என்பது எல்லாம் வெளியில் அறிவிக்கப்படாது.
அலுவலகத்தில் வலையை பார்த்துக் கொண்டிருக்கிறோம். தட்டியோ அல்லது தடுமாறியோ பலான பக்கம் வந்தடைகிறோம். அரை மணி நேரம் ஆசை தீர மேய்கிறோம். நடுவில் பாஸ் கண்டிபிடித்து விசாரிக்கிறார். அவருக்கு பத்து டாலர் அபராதம் கட்டி விட்டால் போதும். மேட்டர் அங்கேயே முடிந்து விடும் என்றிருந்தால் தப்பு செய்வதற்கு எவ்வளவு வசதியாக இருக்கும்!
ஒரு ஆட்டத்திற்கு மில்லியன் டாலர் கணக்கில் பணம் வாங்கும் புகழ்பெற்ற ஆட்டக்காரர்களுக்கு 10,000 டாலர் எல்லாம் ஒரு பொருட்டாக இருக்குமா?
ஊக்கப் பொருட்களை எடுத்துக் கொண்டு விளையாட்டுக்களில் கலந்து கொள்ளுதல் பல வருடங்களாக நடந்து வருவதுதான். பென் ஜான்ஸனின் ஒலிம்பிக் வீழ்ச்சி இந்த நிகழ்வின் மேல் பெரிய வெளிச்சத்தைக் காட்டியது. தொடர்ந்து பிரதிமா, மல்லேஸ்வரி போன்ற இந்திய வீரர்களுக்கு பயிற்சியாளர்களே கலந்து கொடுத்தது, சமீபத்தில் மாரியான் ஜோன்ஸின் (Marion Jones) அம்பலங்கள் வரை ஒவ்வொரு ஒலிம்பிக்கின் போதும் தொடர்ந்தே வருகிறது.
தங்களின் அபிமான நட்சத்திரங்களின் திரண்ட புஜங்களையும் பராக்கிரமங்களையும் பார்த்து மிகச் சிறிய வயதிலேயே அவற்றை எட்ட நினைக்கும் பள்ளிச் சிறுவர்களும் ஸ்டெராய்ட்களை எடுத்துக் கொள்ள ஆரம்பிக்கிறார்கள். போதைப் பொருட்களை விட மோசமான பின் விளைவுகளை கொடுக்க வல்லது ஸ்டெராய்ட். பல வருடங்கள் அடிமையாக்கி வைத்திருந்தாலும் புகை பிடித்தல், மது, போதை போன்றவை மனிதனை உடனடியாக தீர்த்துக் கட்டாது. ஆனால், ஊக்க மருந்துகள் பல மாணாக்கர்களை தற்கொலைக்குத் தள்ளியிருக்கிறது.
ஊக்க மருந்துகளை உட்கொள்ள ஆரம்பித்தவுடன் விளையாட்டு அணிகளில் இடம் கிடைக்கிறது. சிறிது காலம் கழிந்தவுடன்தான் பரிசோதனைக்கு உட்படுகிறார்கள். எனவே, தடாலடியாக ஸ்டெராய்ட் உபயோகத்தை கைவிடுகிறார்கள். அதனால், பலவித கையாலாகத்தனத்தின் கோபத்துக்கும், மனச்சோர்வினால் ஏற்படும் வெறிக்கும் இடையே குழம்புகிறார்கள்.
அமெரிக்காவில் பதின்மூன்று சதவிகிதப் பள்ளிக்கூடங்கள் மட்டுமே ஊக்க மருதுக்கான சோதனைகளை அவ்வப்போது நடத்துகிறது. பரிசோதனைகளை அடிக்கடி செய்வதும், பள்ளி நிர்வாகங்களுக்கு எளிதான காரியமில்லை. ஒருவருக்கு ஸ்டெராய்ட் சோதனை செய்ய ஐம்பதில் இருந்து நூறு டாலர் வரை செலவாகும். போதைப் பொருட்களை சோதனை செய்ய பத்தில் இருந்து முப்பது டாலர் வரைக்குமே பிடிக்கிறது.
நியுஸ்வீக்கின் கருத்துக்கணிப்பின்படி கடந்த வருடத்தில் மட்டும் எட்டாவதில் இருந்து பன்னிரண்டாம் வகுப்பிற்குள் மூன்று லட்சம் மாணவர்கள் ஸ்டெராய்டை பயன்படுத்தி இருக்கிறார்கள். இவர்களில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் மாணவிகள். இளம் வயதிலேயே ஊக்க மருந்து எடுத்துக் கொள்வதினால் முகப்பருவில் ஆரம்பித்து முடிகொட்டல் வரை பல சிறிய பெரிய நோய்கள் வரும். உடலியல் மாற்றங்களாவது பரவாயில்லை. போதைப் பழக்கத்தையொத்த ஊக்க மருந்தினால் தற்கொலை செய்து கொள்ளும் சிறுவர்களும் அதிகரித்து வருகின்றனர்.
காபி குடிக்கிறோம். கண் துஞ்சாமல் காம்ப்ளான் குடிக்கிறோம். வேலையில் கவனத்தைக் கொண்டு வருவதற்கும் நினைவாற்றலுக்கும் தேயிலையில் ஆரம்பித்து மெமரிவிடா வரை பல்வகைப்பட்ட திரவங்களையும் கொடுக்கிறோம். இந்தியாவில் படிப்பில் வெற்றி பெறுவதற்கு குழந்தைகளை வலுக்கட்டாயம் செய்வது போல், அமெரிக்காவில் விளையாட்டுக்களில் வெற்றி பெற மாணவர்களைத் திணிக்கிறார்கள். பள்ளிக்கூடங்களில் தோள்வலிமை இருக்கும் சக மாணவர்களுக்குக் கிடைக்கும் மதிப்பு, உடல் அமைப்புக்குக் கிடைக்கும் மரியாதை போன்ற தன்னிறக்க சம்பவங்கள் கூட இளவயதினரை ஸ்டெராயிட் பயன்பட்டுக்கு இட்டுச் செல்கிறது.
புதிதாய் கற்கும்போது நிரலி எழுத உதவிப்பக்கங்களைத் தேடுகிறோம். காயகல்பம், மனமகிழ்வுக்கு செயிண்ட் ஜான்ஸ் வோர்ட், டெக்கீலா போன்றவை அதிகாரபூர்வமாகக் கிடைக்கிறது. இன்னும் சில நாள்களில் ஜீன் தெரபி எல்லாருக்கும் எளிய முறையில் எவருக்கும் வெளிக்காட்டாவண்ணம் கிடைக்கலாம். இன்றும் தடுக்கப்பட்ட ஊக்க மருந்துகள் பட்டியலில் இல்லாத பல ஸ்டெராய்ட்கள் பள்ளி மாணவர்களுக்குக் கூட வரப்பிரசாதமாக மிக எளிதாகக் கிடைக்கிறது. திருடராய்ப் பார்த்து திருந்தாவிட்டால் ஊக்க மருந்தை நிறுத்த முடியாது.
ஊக்க மருந்துகளை வளர்ந்த விளையாட்டு வீரர்கள் உபயோகிப்பதில் எந்தவித பிரச்சினையும் இருக்கக் கூடாது. அவர்கள் புதிய சாதனைகளை ஏற்படுத்த விரும்புகிறார்கள். நவீன மருத்துவ முறைகளை கையாண்டு உடல் உபாதைகளை காப்பாற்றிக் கொள்கிறார்கள். நாற்பது வயதில் ஓய்வு பெற்றவுடன் நூறு ஏக்கர் தோட்டத்தில் ரிலாக்ஸ் எடுக்கிறார்கள். பணத்திற்காக உடலை விற்பது போல், புகழுக்காகவும் சாதனைகளுக்காகவும் மேன்மேலும் செல்வத்திற்காகவும் ஊக்க மருந்தினால் கெடுத்துக் கொள்கிறார்கள்.
பத்து நொடிக்குள் நூறு மீட்டரை கடக்க நினைப்பவரும், பளு தூக்குபவரும், சிக்ஸர் அடிக்க விரும்புபவரும், ஐந்து செட் பிரென்ச் ஓபன் ஆடுபவரும், ஊக்க மருந்து உபயோகிப்பதை அதிகாரபூர்வமாக்க வேண்டும். எவர் எப்படி ஏமாற்றுகிறார்கள், எங்கே எதை உட்கொள்கிறார்கள் என்று கள்ளனுக்குக் கவலைப்பட்டு காப்பானுக்கு கோடி கோடியாக செலவு செய்வதை நிறுத்த வேண்டும். மெக்டோவல் விளம்பரத்தில் எம்.பி சத்ருகன் சின்ஹாவும் ஜாக்கி ஷ்ரா·பும் தோன்றுவது போல், ஸ்டெராய்ட் அனுபந்தத்துடன் கூடிய புரதக் கலவை விளம்பரத்தில் சச்சினும் மல்லேஸ்வரியும் வரலாம். கூடவே ‘ஊக்க மருந்து உடலுக்குக் கேடு’ என்று ஓரத்தில் அறிவித்து விடலாம்.
விஜயெந்திரரும் ஜயேந்திரரும் அப்புவை துணைக்கு வைத்துக் கொள்வதை படிக்கிறோம். அரசியல்வாதிகளின் அராஜகத்தை மாற்றி மாற்றி ஒப்புக் கொள்கிறோம். பாதிரியார்கள் குழந்தைகளை வன்புணர்வதை அறிகிறோம். ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களில் நடக்கும் தில்லுமுல்லுகளை பார்க்கிறோம். இவை எல்லாம் அல்லாதவை என்பதை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கிறோம். அதே போல், இன்னுமொரு பாடத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும் தருணம் இது.
– பாஸ்டன் பாலாஜி
சுபாஷ் சந்திர போஸ்
RAAGA – Bose – The Forgotten Hero – Hindi Movie Songs | Audio
இசை மனதைக் கிள்ளுகிறது. ஹிந்திப் படங்களின் இசையில் படத்துக்கும் பிண்ணணிக்கும் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். துர்கா பூஜை, ஹிட்லர் தீம், நேதாஜியின் இறுதி ஆகியவை படா ஜோர்.
விரிவான விமர்சனங்கள்: Joginder Tuteja — IndiaFM | Music India Online
விகடன் கேள்வி
பி.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி.
எது சாமர்த்தியம்? எது புத்திசாலித்தனம்? எது சாணக்கியத்தனம்?
எல்லா அரசியல் தலைவர்களுக்கும் இருப்பது சாமர்த்தியம். சாமர்த்தியமான தலைவரோடு கூட்டுச் சேருவது புத்திசாலித்தனம். பிறகு, அந்தத் தலைவரைக் கவிழ்த்துவிட்டுத் தானே தலைவராவது சாணக்கியத்தனம்!
my cents: Normal question; Tongue twisted answer
டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.
ஜெமினி கணேசன், கிளிண்டன், சார்லஸ் — உண்மையான காதல் மன்னன் யார்?
‘காதல் மன்னன் யார்’ என்று எந்த அர்த்தத்தில் கேட்கிறீர்கள்? நிறைய பேரைக் காதலிப்பவரா? அல்லது, ஒரே ஒருத்தியைத் தீவிரமாகக் காதலித்து, அவளுக்காக எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராக இருப்பவரா?
கிளிண்டன் அபரிமிதமான செக்ஸ் உணர்வு கொண்டவர். அவ்வளவே! ஜெமினி கணேசன் நெகிழ்ச்சியான இதயம் படைத்தவர். சில திருமணங்களும் செய்து கொண்டவர். ஆனால், காதலுக்காக எந்தத் தியாகமும் பண்ணத் தயாராக இருப்பாரா?
சார்லஸ், டயானாவை ராஜ காரியம் கருதித் திருமணம் செய்து கொண்டாலும், 35 வருஷங்களாக ஒரே பெண்ணை, அதுவும் ஐம்பது வயதைக் கடந்தவரை விடாமல் காதலிக்கிறார். நிஜமாகவே அவர் மன்னரும்கூட!
my cents: silly question; senseless answer.
மஸ்தானா… யெஸ்தானா?
மோடியின் விசா நிராகரிப்பை சமாளிக்க பத்து வழிகள்
1. அமெரிக்க ஜெயில்களில் சிறைவாசம் இருக்கும் எவரையாவது மணமுடித்து கே-3 விசாவிற்கு விண்ணப்பிக்கலாம்.
2. ப்ரூனே, ஸ்லேவேனியா போன்ற நாடுகளின் குடியுரிமையைப் பெற்று விசா கைகழுவுதல் திட்டத்தின் மூலம் அமெரிக்காவுக்குள் நுழையலாம்.
3. வலைப்பதிவு ஆரம்பித்து கனடாவின் ப்ளாக்கர் படுத்தப்பட்டது போல் தன்னுடைய சோகங்களையும் பகிரலாம். (உதவி: Nerve Endings Firing Away)
4. வாஷிங்டன் போஸ்ட் முதல் வாஷ் செய்யாத வலைப்பதிவு வரை இடம்பிடிக்கத்தான் விசா கிடைக்காததாக மழுப்பலாம்.
5. விழியம் மூலம் சந்திப்பு நடத்துவதை பிரபலப்படுத்துவதற்கு வாய்ப்பாக சொல்லலாம்.
6. 9/11-ற்கு பிறகு பின் லாடென் உறவினர்களை பறக்க அனுமதித்தது போல், அமெரிக்காவை விட்டு வெளியேறுவதற்கு மட்டும்தான் ஜார்ஜ் புஷ் அவசர அவசரமாக உதவுவார். அமெரிக்காவினுள் நுழைவதற்கு மதச் சுதந்திர சட்டம் கொண்டு தடுப்பதாக புலம்பலாம்.
7. சிறைக்குள்ளிருந்தே குற்றங்கள் அரங்கேறும் நவீன உலகத்தில், தனக்கு விசா மறுக்கப்பட்டதை முரண்நகையாகக் கருதலாம்.
8. ஏப்ரல் ஒன்றாம் தேதி நினைவாஞ்சலிக்கு பத்து நாள் இருக்கும்போதே சொற்பாழிவாற்ற அழைக்கப்பட்டதால் நிராகரிக்கப்பட்டதாக நினைக்கலாம்.
9. சிபிஐ-யை மிரட்ட முடிந்தது போல் தூதரகத்திடம் உதார் செல்லுபடியாக அமெரிக்காவின் கன்ஸலேட் ஜெனரலை மாற்றப் போராடலாம். (உதவி: Jivha – the Tongue)
10. மீசை தாடியில் மண் ஒட்டாமல் சுவதேஷி கோஷத்தை தூசி தட்டலாம்.
Bloggers Meet @ Chennai
26th March 2005
Ferrari n Ferrari : அன்புடையீர்,
வரும் பங்குனி மாதம் பதின்மூன்றாம் தேதி, சனிக்கிழமை மாலை ஆறு மணி முப்பது நிமிடத்தில், இணையத்தளத்தில் இருந்து தபால் செய்பவர்கள் சந்திப்பதாய் பெரியோர்களால் முடிவு செய்யப்பட்டு உள்ளது. சென்னை பெசண்ட் நகர் கடற்கரையில் சந்திப்பது முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஆகவே, தாங்கள் தங்கள் இஷ்டமித்ர பந்துக்களுடன் வந்து ஆற அமர உலாவி, சிற்றுண்டியை உண்டு செல்லுமாறு பணிவன்புடன் கேட்டு கொள்கிறோம்.
மேலும் மெட்ராஸ் மொழி, ஆங்கில வரவேற்புகளையும் விபரங்களையும் காண: Ferrari n Ferrari
காலச்சுவடு – மார்ச் 2005
மதிப்புரை: ஷோபா சக்தியின் ‘ம்’ : ஷோபா சக்தியின் இந்நாவல் வாசகனை வெறுமனே மெüனத்தில் ஆழ்த்திவிடாமல், வரலாற்றின் முன் அவன் தன்னையே ஒரு கேலிச் சித்திரமாக உணரவைக்கிறது. இதன் காரணமாகவே தீவிர வாசிப்புக்கும் நுட்பமான ஆய்வுக்கும் உட்படுத்தப்பட வேண்டிய மிக முக்கியமான நாவல்களில் ஒன்றாக விளங்குகிறது ‘ம்’.
அவுஷ்விட்ஸின் அறுபது ஆண்டுகள் – திவாகர் ரங்கநாதன் : இனவெறியையும் அதிகாரத்தையும் குறித்த ஒரு பயங்கர எச்சரிக்கையாக வரலாற்றில் ஒரு பெரும் பரப்பைப் பிடித்துக்கொண்டிருக்கிறது அவுஷ்விட்ஸ் முகாமில் நடந்த யூத இன அழிப்பு.
சிறுகதை: வெளிப்பாடு – அரவிந்தன் : காத்திருந்து காத்திருந்து, தவமிருந்து, திட்டமிட்டு, உடல் தேடி, உடல் அடைந்து, இருள் கூட்டி, உடலின் சுருதி கூட்டி, இசையின் லயமும் நடனத்தின் அசைவொழுங்கும் கூடிய இயக்கத்தின் மத்தியில் பேரிடியாய் ஊடுருவி இயக்கத்தின் ஆதார மையத்தைப் பொசுக்கி வீழ்த்திவிடும் ஓசைகள்.
விவாதம்: சிங்கப்பூர்: மறுபக்கம் : பல்வேறு புறக்காரணிகள் வாழ்க்கையை இறுக்கிக்கொண்டிருக்கிற சிங்கப்பூர்ச் சூழலில், இலக்கியம் உயிர்ப்புடன் இருக்கிறதா அல்லது மெல்ல மெல்ல இறக்கிறதா என்பதே முக்கியமான கேள்வியாக உள்ளது.
விவாதம்: தலையைத் திருகி : சாமி சிலையைத் தலையைத் திருகியெடுத்துப் புதையல் எடுக்க முயன்று புத்தர் சிலையை உடைத்த வரலாறுதான் நாம் காணும் தலை உடைந்த புத்தர் சிலைகள்.
உ.வே.சா.வை நினைவுகூரல் : உ.வே.சாவிற்கு யோக ஜாதகமில்லை போலும். தமிழ்த் தாத்தாவிற்கு ஒரு நினைவு அஞ்சல் தலை வெளியிட வேண்டும் என்று ஆறு ஏழு ஆண்டுகளாக மத்தியில் ஆண்ட காங்கிரஸ் – பா.ஜ.க. – காங்கிரஸ் என எல்லா அரசுகளுக்கும் எழுதி எழுதி ஓய்ந்துபோயாகிவிட்டது.
விவாதம்: பாசிச அறிக்கை : 13.11.2004 அன்று மதுரையில் தலித் இதழியல் வரலாற்று அரங்கில் வெளியிடப்பட்ட தலித் எழுத்தாளர்களின் கூட்டறிக்கை நவீனத் தீண்டாமைக்கு எதிராக என்னும் தலைப்பில் காலச்சுவடு டிச. 2004 இதழில் வந்திருந்தது. அவ்வறிக்கை இரண்டு தளங்களைத் தனது தாக்குதலுக்கு எடுத்துக்கொண்டுள்ளது…
விவாதம்: பசுமைப் புரட்சியின் உண்மையான முகம் : 1950-60 காலப்பகுதியில் ஓர் ஏக்கரில் இரசாயன உரங்கள் ஏதும் பயன்படுத்தாமல் 1400-1500 கிலோ நெல் மகசூல் எடுத்தவர்கள் இன்னும் சிலர் உயிரோடு இருக்கிறார்கள்.
உரைநடை உ.வே.சா.: உதிராத மலர்கள் – ஆ.இரா. வேங்கடாசலபதி : இரயிலறியாத காலம் முதல் விமானத் தாக்குதல் சாதாரணப் போர் நடவடிக்கையாக மாறிவிட்ட காலம் வரை ஒரு நெடுங்காலத்தை உ.வே.சா. நேராகப் பார்த்தறிந்தார். பத்தொன்பது, இருபது என இரண்டு நூற்றாண்டுகளின் செம்பாகமும் அவருடைய வாழ்வோடு ஒட்டி அமைந்திருந்தது.
தலையங்கம்: தமிழ்க் காதல் : பெரியாரியம் பேசும், மத அடிப்படைவாதத்தை எதிர்க்கும் பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ்த் திரைப்படங்களுக்கு ஆங்கிலத் தலைப்பு வைப்பதை எதிர்த்துப் போராடிவரும் இந்தக் கட்சி, இப்போது காதலர் தினத்தைக் குறிவைத்திருக்கிறது.
புரட்சி உருவாகிறது : பெண்களின் முக்கியமான எழுத்துகள் வெளிவரத் தொடங்கும்போதெல்லாம் ஏதோ ஒரு விதமான புரட்சி ஏற்படத் தொடங்குகிறது. இந்தத் தருணத்தில் தமிழில் இதைத் தெளிவாகப் பார்க்க முடிகிறது.
கேரள சாகித்திய அக்காதெமி விருது :: அங்கீகாரத்தின் தொலைவு – சுகுமாரன் : சாகித்திய அக்காதெமி விருது அறிவிப்பிற்குப் பின்னர் எல்லா மொழிகளிலும் போல மலையாளத்திலும் சர்ச்சையை எழுப்புவது வழக்கம். ஒவ்வொரு வருடமும் அறிக்கைகள் மூலம் சிறிது காலத்துக்கு ஒரு விவாதப்படலம் அலைந்துகொண்டிருக்கும்…
ஊசியைத் தேடுங்கள் : இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரெஞ்சு எழுத்துச் சூழலில் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்திய சிந்தனையாளர்களில் ஒருவர் ஆலேன் (1868-1951). அதிகாரச் சக்திகளை மறுத்து, ஏற்கனவே நிலவிவந்த கோட்பாடுகளுக்கு அடிமையாகாமல் தனித்துச் சிந்திப்பதில் சிறந்து விளங்கினார் இந்தப் பேராசிரியர்.
உ.வே.சா.வும் நாட்டார் வழக்காறுகளும் : சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள் எனப் பல தரப்பட்ட செவ்விலக்கியங்களைப் பதிப்பித்தவர் உ.வே.சா. தாம் பதிப்பிக்கும் நூல்களில் இடம்பெறும் அரிய சொற்களின் பொருளை அறிந்துகொள்ள மிகுந்த முயற்சி எடுத்துக்கொண்டவர்.
உ.வே.சா: ஒரு சனாதனியின் நவீனத்துவம் : சைவத் தமிழ் நூல்களைத் தவிர வேறு தமிழ் நூல்களை உயர்வான நூல்களாகக் கருதாத சைவப் பற்றுக் கொண்ட ஆசிரியர், சைவ மட ஆதீனகர்த்தர் ஆகியோரோடு நெருங்கிப் பழகிய உ.வே.சா.வுக்கு இத்தகைய ஆய்வுச் சிந்தனை இருந்தது என்பதே பிற்காலத்தில் அவர் தமிழ்த் தாத்தா ஆக்கப்பட்டதற்கான காரணம்.
உ.வே.சா.வும் பதிப்பு நெறிகளும் : 1887ஆம் ஆண்டு வெளியான சீவக சிந்தாமணி ஐந்நூறு பிரதிகள் அச்சிடப்பட்டன. அவற்றுள் நூறு பிரதிகள் அச்சகத்தாரின் கவனக் குறைவால் வீணாகிவிட்டன. மீதம் நானூறு பிரதிகள் மட்டும் விநியோகிக்கப்பட்டன. மிகப் பெரும் பதிப்பு நிகழ்வு நானூறு பிரதிகளாகத்தான் தமிழகத்தில் உலவியிருக்கிறது.
அசோகமித்திரன் – 50: வாழ்விலே முதல் முறை : ‘கடவு’ இலக்கிய அமைப்பும் ‘கிழக்கு’ பதிப்பகமும் இணைந்து நடத்திய ‘அசோகமித்திரன் – 50’ என்னும் நிகழ்ச்சி குறித்த பதிவுகள்.
முகுந்த் நாகராஜன்: நிராசையின் வலி : அகி என்னும் முதல் தொகுப்பின் மூலம் கவிதை வாசகர்களின் கவனத்தைக் கவர்ந்த இளம்கவிஞர் முகுந்த் நாகராஜன். வாழ்க்கைத் தளத்தில் தினம்தினமும் காணவும் உணரவும் நேரும் சின்னச்சின்ன சித்திரங்களை இயற்கையான நிறங்களுடன் தீட்டிக் காட்டுகின்றன இக்கவிதைகள்.
தாமோதரம் பிள்ளையும் சாமிநாதையரும் – எம்.ஏ. நுஃமான் : தன் இறுதிக் காலத்தில் சாமிநாதையர் எழுதிய சுயசரிதையில் தாமோதரம் பிள்ளையின் பதிப்பு முயற்சிகள் பற்றிய சில தகவல்களைக் குறிப்பிட்டுள்ளாரே அன்றி, அவரது பதிப்புத் துறை மேன்மை, அதன் முக்கியத்துவம் என்பன பற்றி சாதகமாக எதுவுமே குறிப்பிடவில்லை.
உ.வே. சாமிநாதையர்: பன்முக ஆளுமையின் பேருருவம் : நூலுக்கு நல்ல ஆராய்ச்சி, முன்னுரை, ஆசிரியர் கால ஆராய்ச்சி, நூல் பேசும் பொருள் பற்றிய ஆராய்ச்சி போன்றவை இடம்பெற வேண்டும். பாடல் மேற்கோள் அகராதி, அருஞ்சொற்பொருள் அகராதி என்று பலவும் அமைய வேண்டும். இந்த நுட்பங்களை ஆங்கிலம் கற்காமல் தாமாகவே உணர்ந்து உருவாக்கியவர் உ.வே.சா.
இயற்கையியலாளர் மா. கிருஷ்ணன் கடிதங்கள் : என் துப்பறியும் நவீனத்தை நுட்பமாக மனத்துள் ஆராய்ந்து உருவாக்கிவிட்டேன். 110 பக்கங்கள் (இதுபோன்ற கையெழுத்துப் பக்கங்கள்) எழுதியாய்விட்டது. இன்னும் 20 பக்கங்களுள், 25க்குள் முடிந்துவிடும். அச்சில் சுமார் 75 பக்கங்கள்தானிருக்கும்.
நீரோட்டம் : தமிழ் வாசிப்பு எதிர்காலத்திலும் தொடர வேண்டும் என்றால், இன்றே குழந்தைகளைத் தமிழ் வாசிக்கச் செய்ய வேண்டும். இன்றைய குழந்தைகளும் இளையர்களும் விரும்பி வாசிக்கத்தக்க நூல்களை எழுத வேண்டும், பதிப்பிக்க வேண்டும்.
பின்கட்டிலிருந்த சொற்கள் : இதற்கு முன் தமிழில் பெண்கள் எழுதியிருந்தாலும் அநேகமாக அவை பொதுமன வெளிப்பாடே. பொதுமன வெளிப்பாடாக இருந்ததால்தான் “பர்த்தாவுக்கேற்ற பதிவிரதை உண்டாயின் எத்தாலும் கூடியிருக்கலாம், சற்றேனும் ஏறுமாறாயிருப்பின் கூறாமல் சந்நியாசம் கொள்” என்று பெண்ணே எழுதியது.
கோணங்கள்: புலம்பலுக்கு முடிவு கட்டுவோம் – கண்ணன் : கன்னட நாவலான ‘பர்வா’வை மொழிபெயர்த்தமைக்காக பாவண்ணனுக்கு சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டிருக்கிறது. இப்பரிசு பெறப் பாவண்ணன் தகுதியானவர் என்பதால் சாகித்திய அகாதெமியின் இம்முடிவை திறந்த மனத்துடன் வரவேற்கலாம்.
Recent Comments