Archive

Archive for May 13, 2012

Tamil Writer S Ramakrishnan Interview in Thendral by Arvind Swaminathan: Literary Icons Series

May 13, 2012 1 comment

தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான படைப்பாளி எஸ். ராமகிருஷ்ணன். வெகுஜன வாசகர்களிடம் இலக்கியத்தைக் கொண்டு சேர்த்ததில் முக்கியமானவர். வாசகனை அப்படியே ஈர்த்துக் கொள்ளும் தனித்துவமான மொழிக்குச் சொந்தக்காரர். இலக்கியச் சிந்தனை விருது, இயல் விருது, விஸ்டம் விருது, கண்ணதாசன் விருது, நல்லி-திசையெட்டும் விருது, இலக்கியச் சுடர் விருது, தாகூர் விருது எனப் பல விருதுகள் பெற்றவர். உலக சினிமா, உலக எழுத்தாளர்கள் என உலக இலக்கியங்கள் பலவற்றைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்தவர். இன்றும் தனது பல சொற்பொழிவுகள், கருத்தரங்குகள் வழியாக அப்பணியைத் தீவிரமாகச் செய்து கொண்டிருப்பவர். சமீபத்தில், ரஷ்ய கலாச்சார மையத்தில் உலக இலக்கியம் பற்றி இவர் ஆற்றியுள்ள சொற்பொழிவு தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு திருப்புமுனை. இவருடைய நூல்கள் கல்லூரிகளிலும் பல்கலைக்கழங்களிலும் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. இவருடைய படைப்புகளைப் பற்றி ஆராய்ந்து பலர் எம்ஃபில், பிஎச்டி பட்டம் பெற்றுள்ளனர். இலக்கியம், பத்திரிக்கை, சினிமா, குறும்படம், நாடகம், ஆய்வு, பயிலரங்குகள், இணையம் என்று மிகத் தீவிரமாக இயங்கிக் கொண்டிருப்பவரை தென்றலுக்காகச் சந்தித்தோம். அந்தச் சந்திப்பிலிருந்து…

கே: உங்களது எழுத்துக்கான விதை விழுந்தது எப்போது, எப்படி?

ப: என்னுடைய ஊர் இன்றைய விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மல்லாங்கிணறு. பூர்வீகமாக விவசாயக் குடும்பம். இருந்தாலும் இரண்டு தலைமுறைகளுக்கு முன்பாகவே கல்வியைப் பிரதானமாக எடுத்துக் கொண்ட குடும்பம். அப்பா, அம்மா இரண்டு வழியிலும் எல்லோருமே படித்தவர்கள். அப்பா கால்நடை மருத்துவர். சித்தப்பா எஞ்சினியர். அந்தச் சின்ன கிராமத்தில் எல்லா நாளிதழ்களும், பத்திரிகைகளும் எங்கள் வீட்டுக்கு வரும். வீட்டில் ஒரு நூலகமும் இருந்தது. எனக்கு இரண்டு விதமான பாதிப்புகள் இருந்தன. ஒன்று, அம்மா வழி தாத்தா மூலம் வந்தது. அவர் சைவ சித்தாந்தத்தில் மிகப்பெரிய அறிஞர். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கல்வி அதிகாரியாகப் பணியாற்றியவர். தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் நல்ல புலமை உடையவர். அவர் எல்லாத் தமிழ் இலக்கியங்களையும் கற்று வைத்திருந்தார். அப்பா வழித் தாத்தா பெரியார்வழிச் சிந்தனை உடையவர். தாத்தா வீட்டுக்கே ‘பெரியார் இல்லம்’ என்றுதான் பெயர். திராவிட இயக்கத்தின் ஆரம்பகால பாதிப்பு எங்கள் குடும்பத்தில் இருந்தது. சீர்திருத்தத் திருமணங்கள், அரசியல் விவாதங்கள், பகுத்தறிவு சிந்தனைகள் வீட்டிற்குள் அறிமுகமாயின . ஆகவே என்னுடைய சிறுவயது வாழ்க்கை இந்த இரண்டு

எதிர்துருவங்களுக்குள் இருந்தது. ஆனாலும் அவர்கள் எல்லோருமே படிப்பதை, விவாதிப்பதை, பேசுவதை, எழுதுவதை நேசிப்பவர்களாக இருந்தார்கள். என்னுடைய அண்ணன், மாமா சித்தப்பா என எல்லோரும் இலக்கியம், எழுத்தாளர்கள் பற்றிப் பேசிக் கொண்டிருப்பார்கள். எழுத்துக்கான ஒரு களம் என் வீட்டில் இருந்தது.

எனது சித்தப்பாவுக்கு ரஷ்ய மொழி தெரியும் என்பதால் நிறைய ரஷ்ய நூல்கள், சஞ்சிகைகளை அவர் வாங்குவார். வீட்டிலும், நூலகத்திலும், நண்பர்கள் சொல்லும் நூல்களைப் படித்தும் எனது எழுத்தார்வத்தை வளர்த்துக் கொண்டேன். கல்லூரிப் பருவத்திலேயே நான் எழுத்தாளர் ஆவதென்று முடிவு செய்துவிட்டேன். ஆங்கில இலக்கியம் படித்தேன். காலிகட் யூனிவர்சிடியில் நாட்டுப்புற இலக்கியத்தில் பிஎச்.டி. செய்தேன். ஆனால் கல்வி அடிப்படைத் தகுதியாக இருந்தால் போதும். அதை வைத்து வாழ வேண்டிய அவசியமில்லை என்ற முடிவுக்கு வந்தேன். ஒரு சாதாரண மனிதன் வாழ்க்கையை எப்படி எதிர்கொள்கிறானோ அப்படி எதிர்கொள்ள நினைத்தேன். அதற்காக என்னைத் தயார்ப்படுத்திக் கொண்டேன். ஐந்தாண்டுகள் இந்தியாவின் எல்லா முக்கியமான நூலகங்களுக்கும் சென்று படித்தேன். இந்தியாவைப் பற்றி முழுமையாக அறிய வேண்டும் என்ற எண்ணத்தில் நிறையப் பயணம் செய்தேன். படித்த புத்தகங்களை விட, நான் கற்றுக்கொண்ட எல்லாவற்றையும் விட, நேரடி வாழ்க்கை மிகப் பெரியது; அது கற்றுத்தரும் பாடம் மிகப்பெரிது என்பதை என் பயணங்களில் தெரிந்து கொண்டேன். ஒரு தேசாந்திரியாக என்னைக் கருதிப் பயணம் செய்துகொண்டே இருந்தேன். அந்தப் பயண அனுபவங்களும், படித்த விஷயங்களும், எனக்கு வழிகாட்டியவர்களும், நான் படித்து வியந்த உலகத்தின் மிகச் சிறந்த எழுத்தாளர்களும்தான் நான் எழுதுவதற்குக் காரணம். இப்போதும் அதே மனநிலையில் கற்றுக்கொள்வது, பயணம் செய்வது, தேடிப்போவது என்ற ஆர்வங்களுடன்தான் இருக்கிறேன். எழுத்து, பயணம் இரண்டும் மாறி மாறி நடந்துகொண்டு இருக்கிறது.

கே: உங்களது முதல் கதை குறித்து…


ப: என்னுடைய முதல் கதை ‘கபாடபுரம்’. கபாடபுரம் என்னும் அழிந்து போன நகரைப் பற்றிப் படித்தபோது எனக்குள் ஒரு கற்பனை தோன்றியது. அதைக் கதையாக எழுதினேன். அந்தப் பிரதி பின்னால் தொலைந்து போய் விட்டது. அச்சில் வெளியான என்னுடைய முதல் கதை ‘பழைய தண்டவாளம்’. கணையாழியில் வெளியானது. அந்தக் கதைக்கே எனக்கு ‘இலக்கியச் சிந்தனை’ பரிசு கிடைத்தது. என்னுடைய முதல் புத்தகத்துக்குச் சிறந்த புத்தகம் விருது கிடைத்தது. ஆக, நான் எழுதத் தொடங்கும் போதே அடையாளம் காணப்பட்ட ஒரு எழுத்தாளன்தான். அதற்கு முக்கியமான காரணம், நான் எழுதத் தொடங்குவதற்கு முன்னால் பத்தாண்டுக் காலம் அதற்காகத் தயார் ஆனேன். ஆங்கில இலக்கியம், உலக இலக்கியம் என நிறையப் படித்தேன். விடுமுறை நாட்களில் நிறைய நேரம் படித்துக் கொண்டேயிருப்பேன். காலை, மாலை நண்பர்களுடன் விளையாடும் நேரம் தவிர்த்து வேப்ப மரத்து அடியில் அல்லது கிணற்றுப் படிக்கட்டுகளில் அமர்ந்து படித்துக் கொண்டிருப்பது எனது இயல்பு. புத்தகங்களுடன் பயணம் செய்வது எனக்கு மிக விருப்பமானது. எனது குடும்பச் சூழலும் எனது படிப்பிற்குத் தடை சொல்லாத ஒன்றாக இருந்ததால் இது சாத்தியமானது.

கே: எழுத்தாளர் கோணங்கியுடன் சேர்ந்து நிறைய இலக்கியப் பயணங்கள் செய்திருக்கிறீர்கள் அல்லவா?


ப: ஆம். கோணங்கி எனக்கு முன்பாக என் அண்ணனின் நண்பர். பயண விருப்பமே எங்கள் இருவரையும் ஒன்று சேர்த்தது, பயண ஆர்வம் உடையவர்கள் என்பதால் இணந்தே ஊர் சுற்றுவோம் ஆனால் ஒருவரையொருவர் சுமையாக நினைப்பதேயில்லை, அவரவர் விருப்பத்தின்படி பயணம் செய்வோம். ஒருவரையொருவர் கட்டுப்படுத்திக் கொள்ள மாட்டோம். ஒரே ஊரில் ஒரே இடத்தைப் பார்க்கும் போது எனக்கு ஒரு பார்வையும் அவருக்கு ஒரு பார்வையும் இருக்கும். அப்படிப் பயணத்திற்கான ஒரு நண்பர் கிடைப்பது அபூர்வம். கோணங்கியும் நானும் இரண்டு பறவைகள் போல. ஒரே வானத்தில் பறந்து கொண்டிருந்தாலும் எங்களின் இயல்புகள் வேறு. ஒரே மரத்தில் அந்தப் பறவைகள் அமரலாம். ஆனால் எந்தப் பறவை எப்போது பறக்கும் என்பது அதனதன் சுதந்திரம் சார்ந்தது. இப்போதும் நாங்கள் சந்திக்கிறோம். பயணம் செய்கிறோம். ஆனால் அவரவர்க்கான வழியில் செய்கிறோம். ஆனால் அந்தப் பயணங்களைப் பற்றி நான் அதிகம் எழுதியதில்லை. காரணம், அவை எழுதுவதற்கான விஷயமில்லை. வாழ்வதற்கான விஷயம்.

கே: வாசகனைக் கட்டிப்போடும் தனித்துவமான மொழி உங்களுடையது. இந்த மொழி ஆளுமை, எளிமை எப்படி வசப்பட்டது?
ப: மொழியில் எளிமை அவ்வளவு எளிதில் கைவந்து விடாது. நீங்கள் எழுதும் விஷயம் பற்றி எவ்வளவிற்குத் தெளிவாக இருக்கிறீர்களோ அந்த அளவுக்கு மொழியும் தெளிவாக, எளிமையாக இருக்கும். இதற்கு நல்ல மொழிப்பயிற்சி வேண்டும். அது ஒரு குதிரையை பழக்குவது போல. குதிரையை நீங்கள் தொடர்ந்து பழக்கிவிட்டால், அதற்கு நீங்கள் உத்தரவு போட வேண்டியதில்லை. உங்களுடைய தொடுதலே போதும். அது போலத்தான் மொழியும். நிறையப் படிக்க வேண்டும். தமிழில் சமகால இலக்கியங்களைப் போலவே செவ்வியல் இலக்கியங்களும் மிக முக்கியமானவை. நான் சங்க இலக்கியத்தில் இருந்து தனிப்பாடல்கள் வரை அவ்வளவையும் படித்திருக்கிறேன். என்னுடைய மொழிக்கு முக்கியத் தூண்டுதலாக இருந்தது நான் படித்த ரஷ்ய இலக்கியம். அதற்குப் பிறகு நான் உலக இலக்கியங்களைத் தேடிப் படித்தேன். லத்தீன் அமெரிக்க, பிரெஞ்சு, ஐரோப்பிய இலக்கியங்கள், ஆசிய இலக்கியம் என்று நிறையப் படித்தேன். இப்போதும் சமகால உலக இலக்கியங்களைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். மொழியைப் பொறுத்தவரை சொல்பவரின் குரல் மிக முக்கியமான ஒன்று. அது நம்பகத்தன்மை உள்ளதாக, பொறுப்புணர்ச்சி மிக்கதாக, தன்னை முன்னிறுத்திக் கொள்ளாததாக இருக்க வேண்டும். இப்படி எனக்கென்று சில வழிகளை நான் உருவாக்கிக் கொண்டேன். வண்ணநிலவன் ஆகட்டும், புதுமைப்பித்தன், தி. ஜானகிராமன், ஜி. நாகராஜன், கு. அழகிரிசாமி, அசோகமித்திரன் ஆகட்டும்; நான் வியக்கும் இவர்கள் அனைவருமே தமக்கே உரிய தனித்துவமான ஒரு மொழியை வைத்திருக்கிறார்கள். ஜானகிராமன், புதுமைப்பித்தன் மாதிரி சில சொற்பமான எழுத்தாளர்களுக்கு மட்டுமே தனித்துவமான மொழி வசப்பட்டிருக்கிறது. அது ஆளுமையோடு சம்பந்தப்பட்டது. அவர்கள் இதற்காகவே வாழ்ந்திருக்கிறார்கள். நான் இப்போதும் கூட ஒரு கதையோ, கட்டுரையோ எழுதி முடித்து விட்டு எனக்குப் பிடித்த எழுத்தாளர்களைப் படித்துப் பார்க்கிறேன். அவர்கள் போன தூரம் அதிகம் என்றுதான் படுகிறது.

கே: வணிக எழுத்து, தீவிர எழுத்து, என்பதாக ஒரு படைப்பை அடையாளப்படுத்துவது குறித்து உங்கள் கருத்து என்ன?


ப: நான் இந்தப் பிரிவினையை ஏற்றுக் கொள்வதில்லை. பத்திரிகையின் தரத்தை முடிவு செய்வது அதில் வெளியாகும் படைப்புகள்தாம். சிறு பத்திரிகைகளுக்கு ஒரு படைப்புச் சுதந்திரம் இருக்கிறது. எந்தத் துறை சார்ந்ததாக இருந்தாலும், எத்தனை பக்கம் உடையதாக இருந்தாலும் ஒரு படைப்பை அவற்றில் வெளியிட இயலும். ஒரு சிற்றிதழில் ‘ஏன் புத்த மதம் இந்தியாவில் அழிந்தது’ என்பதைப் படிக்க முடியும். ஆனால் வணிக இதழில் சாத்தியமல்ல. மொழி, பண்பாடு, கலை, கலாசாரம், சமூகம் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளைப் படிக்க வேண்டுமென்றால் அது சிற்றிதழ்களில் மட்டுமே சாத்தியம். வெகுஜன இதழ்கள் நாட்டு நடப்பையும், சமகாலத்தையும், கேளிக்கையையுமே அதிகம் முன்னிறுத்துகின்றன. அது வெகுஜன வாசகனுக்கானது என்றாலும் அதில் எழுத வேண்டுமா, வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டியது எழுத்தாளன். அது அவனுடைய சுதந்திரம். என்னைப் பொறுத்தவரை நான் ஒரு நோக்கத்துக்காக அதைத் தேர்வு செய்தேன். அதை நான் அடைந்து விட்டேன் என்றும் சொல்லலாம்.

சிற்றிதழ்களில் மோசமான படைப்பும் வெகுஜன இதழ்களில் நல்ல படைப்பும் வரத்தான் செய்கின்றது. வெகுஜன இதழ்களை விலக்க வேண்டியதில்லை. நான் அதிகம் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டது அதில்தான். எனது 16 வயதுவரை எந்தச் சிற்றிதழைப் படித்தேன்? விகடனும், குமுதமும், துக்ளக்கும், அம்புலிமாமாவும் படித்துத்தான் வளர்ந்தேன். பிறகு நான் என் பாதையைத் தேர்வு செய்து கொண்டபின் எனக்கு டால்ஸ்டாயும், செக்காவும், சத்யஜித் ரேயும் அறிமுகமானார்கள். அந்த வயதில் வெகுஜன இதழில் படித்த ஜெயகாந்தனும், சுஜாதாவும் இன்னமும் நினைவில் இருக்கிறார்கள். எழுத்து என்பது வெகுஜன வாசக வட்டத்தை அடைய வேண்டும் என நான் எண்ணுகிறேன். தமிழ்நாட்டின் மக்கள் தொகை ஏழு கோடி. ஒரு எழுத்தாளனின் புகழ்பெற்ற புத்தகம் 2000 பிரதி விற்றால் அதிகம். ஏழு கோடிப் பேரைக் கணக்கிட்டுப் பார்த்தால் ஒரு லட்சம் பிரதிகளாவது விற்க வேண்டும். விற்கிறதா? தமிழ்நாட்டிலேயே அதிகம் விற்றது என்று பார்த்தால் பொன்னியின் செல்வனைச் சொல்லலாம். தமிழ்நாட்டில் பெஸ்ட் செல்லர்ஸே ஆயிரம், இரண்டாயிரம் தான். நாம் சின்ன வட்டத்துக்குள் இயங்கிக் கொண்டிருக்கிறோம். இதில் ஏன் இத்தனை பாகுபாடு என்பதுதான் என் கேள்வி.

எனக்கு வெகுஜன இதழ், சிற்றிதழ் என்ற பேதம் இல்லை. இப்போதும் நான் எந்தச் சிற்றிதழ் படைப்பு கேட்டாலும் கொடுப்பேன். ஆனால் என் எழுத்தை வெளியிடப் போவது யார் என்பதைப் பார்ப்பேன். அதில் ஒரு கட்டுப்பாடு இருக்கிறது. கேட்பவர்கள் மதம் சார்ந்தவர்களாகவோ, அடிப்படை விஷயங்களில் சார்புநிலை எடுக்கிறவர்களாகவோ இருந்தால், அவர்கள் கோட்பாட்டில் எனக்கு உடன்பாடு இல்லையென்றால் அந்தப் பத்திரிகையில் நான் எழுதமாட்டேன்.

கே: சிற்றிதழ்களால் சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என்ற கருத்து பரவலாக இருக்கிறதே!


ப: இல்லை. நிச்சயமாக ஏற்படுத்தியிருக்கிறது. என்னுடைய தலைமுறையைச் சேர்ந்த எல்லோரும் இலக்கியத்தை நோக்கி வந்ததற்குக் காரணமே சிற்றிதழ்கள்தாம். நான் உலக இலக்கியங்களை ஆங்கிலத்தின் மூலம் படித்துக் கொள்வேன். ஆங்கிலம் அறியாதவர்கள் என்ன செய்வர்? இன்றைக்குத் தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களில் பலர் உலக இலக்கியங்கள் பற்றி அறிந்திருக்கிறார்கள் என்றால், காரணம் சிற்றிதழ்கள்தாம். மற்றுமொரு முக்கியமான விஷயம், தமிழ்நாட்டில் மிகவும் பேசப்பட்ட கதைகள் எதுவுமே வணிக இதழ்களில் வெளியானவை அல்ல. சிற்றிதழ்க்காரர்கள் ஒருமுனைப்புடன், கைக்காசைச் செலவு செய்து, எந்தப் பொருளாதாரப் பின்புலமும் இல்லாமல் முழுக்க முழுக்கத் தன்னார்வத்தினால் நடத்துகிறார்கள். வெகுஜன இதழ்களில் எழுத வாய்ப்புக் கிடைக்காதவர்களுக்கு சிற்றிதழ்கள் களமாக இருக்கின்றன. நானே ஒரு சிற்றிதழ் நடத்தியிருக்கிறேன். எனக்கு அதன் சுமை, கஷ்டம் என்னவென்று தெரியும். இன்றைக்குச் சிற்றிதழ்களின் வடிவம் மாறியிருக்கிறது. சிற்றிதழ்களின் பணிகளை ஓரளவுக்கு இன்று இணையம் செய்ய ஆரம்பித்து விட்டது என்றாலும் சிற்றிதழ்களுக்கான தேவை இருந்து கொண்டுதான் இருக்கிறது. தமிழில் மட்டுமல்ல; உலக மொழிகள் பலவற்றிலும் சிற்றிதழ்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. விற்பனை எண்ணிக்கை வேண்டுமானால் குறைவாக இருக்கலாமே தவிர, அவற்றுக்கான தேவை, முக்கியத்துவம் எப்போதும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. வெகுஜன இலக்கியம், சிற்றிலக்கியம் இரண்டும் ஒன்றுக்கு ஒன்று போட்டி இல்லை. இரண்டுமே வேறுபட்ட நீரோட்டம் கொண்டவை.

கே: குழந்தை இலக்கிய வளர்ச்சிக்கு நீங்கள் குறிப்பிடத்தக்க அளவில் பங்காற்றி வருகிறீர்கள். முன்பிருந்த அளவுக்கு தற்போது சிறுவர் இதழ்கள் இல்லை, சிறுவர்களின் வாசிப்பார்வமும் வெகுவாகக் குறைந்திருக்கிறது. இதற்கு என்ன காரணம்? தீர்வு என்ன?


ப: முதல் காரணம் நமது கல்வி முறை. இரண்டாவது காரணம் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள். நான் சிறுவனாக இருக்கும்போது நீதிபோதனை (Moral Studies) வகுப்பு இருந்தது. பள்ளியில் நூலகம் இருந்தது. அங்கே கதைகளைப் கேட்க, படிக்க வாய்ப்பு இருந்தது. எனது ஆசிரியர்கள் பல நூல்களை அறிமுகப்படுத்தினார்கள். நான் அரசுப் பள்ளியில்தான் படித்தேன். ஆனால் தற்போது பிரமாண்டமான கல்விக் கூடங்கள் வந்து விட்டன. ஆனால் எங்கும் நீதிபோதனை வகுப்பு இருப்பதாகத் தெரியவில்லை. பெரும்பாலான பள்ளிகளில் நூலகமே இல்லை. அப்படியே இருந்தாலும் அவை பராமரிக்கப்படாமல் மாணவர்களுக்குப் பயனற்றதாய் இருக்கிறது. ஆசிரியர்கள் பாடத்தை நடத்தினால் போதும் என்று நினைக்கிறார்கள். கல்வி தற்போது முழுக்க வணிகமாக மாறிவிட்டது. பெற்றோர்கள், தம் குழந்தைகள் நல்ல மதிப்பெண் பெற்றால் போதும்; அதற்குப் பாடப் புத்தகங்களை மட்டும் படித்தால் போதும் என்று நினைக்கிறார்களே தவிர குழந்தையின் அறிவு, சிந்தனை மேம்பட வேண்டும் என்று நினைப்பதில்லை.

மேலும், காட்சி ஊடகங்கள் செல்வாக்குப் பெற்ற தற்காலத்தில் சிறார்கள் படிப்பதைவிடப் பார்ப்பதையே அதிகம் விரும்புகிறார்கள். இன்றைய குழந்தைகளின் பொது அறிவும் புரிதலும் அதிகம். படித்த பெற்றோர்கள் இருக்கிறார்கள். கணினி இருக்கிறது. இணையம் இருக்கிறது. அன்றைக்கு அமெரிக்காவை நாங்கள் உலக உருண்டையில்தான் (Globe) பார்த்தோம். ஆனால் இன்றைக்கு இணையத்தின் மூலம் அமெரிக்காவை முழுமையாகப் பார்க்க முடியும். விஞ்ஞானம் வளர்ந்துள்ளது. ஆனால் அந்த அளவுக்குக் குழந்தை இலக்கியங்கள் வளரவில்லை. ஆசிரியர்கள் நல்ல விஷயங்களை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். பெற்றோர்கள் குழந்தையின் அறிவு வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். ஆனால் இன்று கேளிக்கைக்குச் செலவழிக்கத் தயாராக இருக்கும் பெற்றோர்கள், குழந்தையின் அறிவு வளர்ச்சிக்குச் செலவு செய்யத் தயாராக இல்லை. ஆதரிப்பவர் இல்லாததால் சிறுவர் பத்திரிகைகள் குறைந்துவிட்டன. குழந்தைகளுக்கான எழுத்தாளர்களும் அதிகம் இல்லை. குழந்தை இலக்கியம் எப்படி வளரும்?

கே: ஆனால் ஹாரி பாட்டர் அதிகம் விற்கிறதே!


ப: உண்மை. என் வீட்டுக் குழந்தைகள்கூட ஹாரி பாட்டரை விரும்பி வாசிக்கிறார்கள். ரசிக்கிறார்கள். ஏனென்றால் அந்த மாதிரி தமிழில் எழுதுங்கள், படிக்கிறோம் என்று சொல்கிறார்கள். நான் சிறுவயதில் காமிக்ஸ் படித்து வளர்ந்தவன். ஆனால் அந்த காமிக்ஸ் என் குழந்தைகளுக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் விரும்புவது ‘மாங்கா’ மாதிரி, இன்றைக்குக் கிடைக்கும் நவீன கிராபிக்ஸ் நாவல்கள் மாதிரி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். அது மாதிரி ஏன் தமிழில் இல்லை என்று கேட்கின்றனர். இருக்கின்ற புத்தகங்கள் பிள்ளைகளுக்குப் பிடிக்கவில்லை. பிள்ளைகளுக்குப் பிடித்தமான புத்தகங்கள் அதிகம் வெளிவருவதில்லை. இதுதான் இன்றைய நிலை. நான் இதற்காகவே கதைப் பயிலரங்குகள் நடத்தி வருகிறேன். ஆசிரியர்களையும், மாணவர்களையும் தொடர்ந்து சந்தித்து வருகிறேன். பல ஆசிரியர்கள் டி.வி.யில் யாரோ சொன்ன கதைகளைச் சொல்கிறார்களே தவிர தாமாகக் கதை சொல்வதில்லை. கேட்பதுமில்லை. ஆக, கதை கேட்காத, கதை சொல்லாத ஒரு சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த நிலை மாற வேண்டும் என்பதற்காக நான் குழந்தைகளுக்காக பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறேன். இன்றைய சிறுவர்களின் மனநிலையை அறிந்து, அவர்களுக்கேற்ற மாதிரி எழுத வேண்டும் என்பதற்காக நான்காம் வகுப்பு படிக்கும் என் மகன் ஆகாஷுடன் இணைந்து ஏழு நூல்களை எழுதியிருக்கிறேன்.

இது தவிர பல பள்ளிகளுக்குச் சென்று அதன் ஆசிரியர்களுக்கு வகுப்பறையில் பாடத்தைத் தவிர என்னவெல்லாம் கற்றுக் கொடுக்கலாம், அதை எப்படிக் கற்றுக் கொடுக்கலாம் என்று தனியாக ஒரு பணிப்பட்டறை நடத்தி வருகிறேன். மாணவர்ளுக்குக் கதைப் பயிலரங்குகளை நடத்தி வருகிறேன். இந்த ஆண்டு மட்டுமே சுமார் ஆயிரம் ஆசிரியர்களைச் சந்தித்திருக்கிறேன். இந்தச் சந்திப்புகளில் எனக்குத் தெரிவது என்னவென்றால் படிக்க வைக்கப்பட வேண்டியது மாணவர்கள் அல்ல; ஆசிரியர்கள்தான் என்பது. ஆசிரியர்கள் படிப்பதில்லை; கேட்கவும் மாட்டார்கள். ஆக, குழந்தை இலக்கியம் வளர வேண்டும் என்றால் மாற்றம் முதலில் வர வேண்டியது ஆசிரியர்களிடமும், பெற்றோர்களிடமும் தான். இதுதவிர அரசு, பள்ளி நூலகங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். கம்ப்யூட்டர் எல்லாம் சொல்லிக் கொடுக்கிறார்கள். அதோடு மாணவர்கள் கதைகள் படிக்க, இணையத்தில் கிடைக்கும் மின்-நூல்களை (E.Book) வாசிக்கச் சொல்லித் தரலாமே! இன்றைக்கு குழந்தைகள் விளையாட எத்தனையோ நவீனமான பூங்காங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றில் ஒன்றிலாவது ஒரு வாசகசாலை இருக்கிறதா? கல்வி சார்ந்த, அறிவு சார்ந்த செயல்பாடுகள் எதற்காவது இடமுண்டா? எதுவும் இல்லை. உடல் வளர்ந்தால் போதும் மனம் வளர வேண்டாம் என்று நினைத்தால் அந்தக் குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கைதான் பாதிப்படையும். வளர வளர வாழ்க்கையில் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் போது சலிப்பும், வெறுப்பும், அச்சமுமே அவனைச் சூழும். ஆனால் புத்தகங்களும் இலக்கியங்களும் இவற்றையெல்லாம் எதிர்கொள்ளக் கற்றுத் தருகின்றன.

கே: இலக்கியவாதியான உங்களால் திரையுலகில் சுதந்திரமாகச் செயல்பட முடிகிறதா?


ப: எந்தத் துறையிலுமே நாம் முழுதும் சுதந்திரமாகச் செயல்பட முடியாது. சினிமாவும் அப்படித்தான். அது ஒரு கூட்டு முயற்சி. பலரது பங்களிப்புச் சேர்ந்துதான் ஒரு சினிமா உருவாகிறது. நான் எழுதியது நூறு சதவீதம் அப்படியே வெளிவராது. தயாரிப்புச் செலவுக்கேற்ப, நடிகர்களின் மனோநிலைக்கேற்ப, பல பொருளாதார பின்னணிக் காரணிகளுக்கேற்ப அது மாறும். சினிமாவுக்குத் தேவை ஒரு எழுத்தாளர்தான். இலக்கியவாதியாக இருப்பதன் அனுகூலம் என்னவென்றால் பல நுட்பங்களை நாம் அதில் செய்து பார்க்க முடிகிறது. ஒவ்வொரு படத்திலும் என்னுடைய இந்த முயற்சி மேம்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஆனால் நான் நினைத்ததை நூறு சதவீதம் அடைந்து விட்டேனா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்வேன். அதை நோக்கித்தான் நான் சென்று கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு படமும் ஒரு அனுபவம். சினிமா, அதன் உருவாக்கம், பின்னணி என்று நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். இவ்வாறு கற்றுக் கொண்டதை வைத்து, சினிமாத் துறை சார்ந்து பின்னால் ஏதாவது செய்யும் எண்ணம் இருக்கிறது.

(ஆன்மீகம், நாத்திகம், கடவுள், இந்தியா, இன்றைய பதிப்புச்சூழல்கள், விருதுகள், இளம் படைப்பாளிகள், எழுத்தாளர்களுக்கிடையே எழும் சர்ச்சைகள், மொழிபெயர்ப்புகளின் அவசியம் இவை பற்றி அடுத்த இதழில்….)

சந்திப்பு, படங்கள்: அரவிந்த் சுவாமிநாதன்

*****

எனது பயணங்கள்


பயணம் என்பது வெறும் ஊர் சுற்றுவதல்ல. அது ஒரு தேடுதல். அந்தத் தேடுதலைப் பலரும் ஓர் எல்லைக்குள் வைத்திருக்கிறார்கள். விடுமுறை நாட்களில் மட்டுமே வெளியில் சென்று மகிழ்ச்சியாக இருப்பது என்று. என் தந்தை என்னைவிட அதிகம் பயணம் செய்தவர். வீடுதான் உலகம் என நாம் நம்புகிறோம். வீட்டுக்குள் இருந்து கொண்டு உலகத்தைப் பார்க்கும்போது அது அச்சுறுத்துவதாக இருக்கும். ஆனால் நடந்து, பயணம் செய்து பார்த்தால் உலகம் இதமான ஒன்றாக இருக்கும். பயணங்களில் என்னுடைய தேடுதல், கதை எழுதுவதற்காக அல்ல. எல்லா மனித வெளிப்பாடுகளுக்குப் பின்பும் மனித மனம் எப்படி இயங்குகிறது, எப்படி அது கற்பனை செய்து கொள்கிறது, எப்படி உருவகப்படுத்திக் கொள்கிறது, தன்னை வெளிப்படுத்திக் கொள்வதற்காக ஒரு மனிதன் எந்தெந்தத் துறையில் என்னவெல்லாம் செய்கிறான், அதற்குள் இலக்கியத்திற்கு என்ன இடம் இருக்கிறது – இதுதான் எனது தேடல். நான் வெறும் சிறுகதை, நாவல்கள் எழுதும் எழுத்தாளன் அல்ல. எனக்கு நிறைய கிளை வழிகள் உள்ளன. இவற்றின் வழியே எனது அடிப்படைத் தேடல் ஒன்றுதான். நம்முடைய வாழ்க்கையை, காலத்தை, முன்னோடிகளை எப்படிப் புரிந்து கொள்கிறோம், எப்படிப் பதிவு செய்கிறோம், எப்படி அடுத்து எடுத்துச் செல்லப் போகிறோம் என்பதுதான். நான் ஒரு தனிநபராக என்னை ஒருபோதும் உணருவதேயில்லை. நான் ஒரு வரலாற்றின், கலாசாரத்தின், இலக்கியப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக இருக்கிறேன். மானிட குலம் என்பதன் தொடர்ச்சியாகவும் இருக்கிறேன். இப்படி எனக்கு நானேதான் ஒரு வரலாற்றுச் சின்னமாக இருக்கிறேன். ஒவ்வொரு மனிதனுமே அப்படித்தான். மூதாதையரின் வரலாறு அவனுள் இருக்கிறது. இதை ஒருவன் பிரித்துப் பார்த்து அறிந்து கொள்ள முடியாது என்பதால் மொத்தமாக இவற்றுக்கான பொறுப்புணர்வை ஒரு எழுத்தாளன் எடுத்துக் கொள்ளத்தான் வேண்டும். கடந்த காலத்துக்கும் சரி, எதிர்காலத்துக்கும் சரி, நிகழ்காலத்துக்கும் சரி. பிரச்சனைகளைச் சந்திப்பதற்கான பொறுப்புணர்வை ஒரு எழுத்தாளன் எடுத்துக்கொள்ள வேண்டும். இதைத்தான் எனது எழுத்துக்களில் முதன்மைப்படுத்தி வருகிறேன்.

எஸ். ராமகிருஷ்ணன்

*****

நானும் ரஷ்ய இலக்கியமும்


நான் எளிய மொழியில் என் கருத்தைச் சொல்கிறேன். என்னுடைய முன்மாதிரிகளாக டால்ஸ்டாயையும், தஸ்தாவெஸ்கியையும், செகாவையும் எடுத்துக் கொண்டேன். அவர்கள் எப்படி எழுதுகிறார்கள் என்று பார்ப்பேன். உலகத்துக்கே ரஷ்ய இலக்கியத்தின் மீது ஒரு தனி ஈடுபாடு உண்டு. அவர்கள்தான் முதன் முதலில் காட்சி இலக்கியங்களை எழுதியவர்கள். மனதின் நுட்பங்களை எழுதியவர்கள். ஒவ்வொரு நிமிடமும் மனம் எப்படிச் செயல்படுகிறது என்று கிட்டத்தட்ட உளவியல் பார்வையில் பார்ப்பதுபோல் மனிதனை அணுகக்கூடிய அந்த எழுத்து முறை ரஷ்யாவில்தான் வந்தது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய மற்றொன்று என்னவென்றால் ரஷ்ய இலக்கியத்தில் சொல்லப்பட்டவர்கள் எல்லாமே சாமான்ய மக்கள். குதிரை வண்டி ஓட்டுபவன், எளிய மனிதர்கள், மருத்துவமனையில் இருப்பவர்கள், நோயாளிகள் என்று சாதாரண மனிதர்களைத்தான் அது கொண்டாடுகிறதே தவிர ஜார் மன்னனையோ, வணிக முதலாளிகளையோ அது பேசுவதில்லை. ரஷ்ய இலக்கியத்திலிருந்து நான் இதை எடுத்துக் கொண்டேன். மனித மனம் எப்படியெல்லாம் இயங்குகிறது, தடுமாற்றம் கொள்கிறது, என்னென்ன அக, புற மாறுதல்களைச் சந்திக்கிறது என்பதை எழுதலாம். அவை மனிதனின் ஆதாரப் பிரச்சனைகளைத் தொடர்ந்து பேசுகின்றன. பசி, துயரம், மரணம், வெற்றி, தோல்விகள், மனிதனுக்குக் கடவுள் தேவையா, விஞ்ஞானத்தை எப்படி ஏற்றுக் கொள்ளலாம் என்றெல்லாம் மிக விரிவாக அவை பேசுகின்றன. இப்படி ஆதாரமான மனிதத் துறைகளை இலக்கியமே பேசுகிறது. என் எழுத்தில் ரஷ்ய இலக்கியத்தின் தாக்கம் இருக்கும். அதை ரஷ்யப் பாணி எழுத்து என்றே சொல்லலாம். எனக்கு புதுமைப்பித்தன் அறிமுகமாகும் முன்பே செகாவும், டால்ஸ்டாயும் அறிமுகமாகி விட்டார்கள்.

எஸ். ராமகிருஷ்ணன்

கே: இலக்கியத்தின், எழுத்தாளரின் பணி எதுவென்று நினைக்கிறீர்கள்?
ப: எழுத்தாளன் புதியவற்றைப் படைப்பது ஒருபுறம் என்றாலும், நிறைய நினைவுபடுத்துவதும், கவனமூட்டுவதும், தவறவிடும்போது சுட்டிக்காட்டுவதும் அவனது முக்கியமான பணிகள் என்று கருதுகிறேன். என்னதான் அறம், நீதி போன்றவற்றைச் சொல்லும் பல நூல்கள் நமக்கு இருந்தாலும், அந்த அறக்கோட்பாடுகளை தனிநபர்கள் பின்பற்றவேயில்லை. இன்றைய சகல பிரச்சனைகளுக்கும் காரணம், நமது சுயநலமே. அது தான் இயற்கையை விட்டு நம்மை பிரித்து வைத்து இயற்கையை அழித்து விற்பனை பொருளாக்கி வைத்திருக்கிறது. ஜன்னல் இல்லாத வீடுகளில், வெளிச்சம் வராத இல்லங்களில், இயற்கையின் குரலைக் கேட்க முடியாத சூழலில் வாழ்கிறோம். இயற்கையின் ஒரு பகுதியான நாம், அதைத் துண்டித்துக் கொண்டு வாழ முற்படும்போது மன நெருக்கடிகள் உண்டாகின்றன. அதைப்பற்றிய குற்றவுணர்ச்சி கூட நமக்கில்லை. இதையே என் படைப்புகளில் சுட்டிக் காட்டுகிறேன்.

என்னுடைய சிறுவயதில் நாங்கள் தண்ணீரை விலை கொடுத்து வாங்கியதில்லை. இந்தியா முழுவதும் சுற்றியிருக்கிறேன். ஒரு போதும் தண்ணீரை சுமந்து கொண்டு போனதே இல்லை. எல்லா இடங்களிலும் நல்ல தண்ணீர் கிடைத்தது. விலை கொடுத்து தண்ணீரை வாங்குவது பாவம் என்று கருதப்பட்டது ஆனால் இன்று? பாக்கெட்டில் பாட்டிலில் மட்டும் தான் குடிநீர் கிடைக்கிறது, இப்படி எளிமையாக கிடைத்த இயற்கையின செல்வங்களை விலைக்கு வாங்க வேண்டிய நிலை உருவாகியிருக்கிறது, இதற்கு நாம் காரணமில்லை என்று நினைக்கிறோம். இலக்கியத்தின் பணி இதைச் சுட்டிக் காட்டுவதாக உள்ளது. மனிதனுடைய அன்றாடப் பிரச்சனைகளை, பொருளாதாரச் சிக்கல்களை மட்டும் பேசுவது இலக்கியமல்ல. அதையும் தாண்டி அவன் பின்பற்ற வேண்டிய அறத்தை, மறந்து போன விழுமியங்களை, கவனிக்க மறந்த சுற்றுச் சூழலை, சுட்டிக் காட்டுவதும் இலக்கியத்தின் பணிதான்.

கே: இன்றைய பதிப்புச் சூழல் எப்படி இருக்கிறது?


ப: சமீபமாக புத்தகம் வாங்குபவர்கள் அதிகரித்திருக்கிறார்கள். ஆனால் படிப்பவர்கள் குறைவாக இருக்கிறார்கள். புத்தகமும் ஒரு வணிகச் சந்தைப் பொருளாகி விட்டது, அதனால் எது நல்ல புத்தகம் என்று தேர்வு செய்வது சிரமமானதாக இருக்கிறது. புத்தகச் சந்தை விரிவடைவதால் நிறைய முதலீட்டாளர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். ஆண்டுக்கு 300 புதிய தமிழ் புத்தகங்களாவது வருகின்றன. அவற்றில் எண்பது சதவீதம் குப்பை. இன்று ஐநூறு ரூபாய் பணம் கொடுத்து புத்தகம் வாங்கத் தயாராக இருக்கிறார்கள். ஆனால் ஐநூறு பக்கப் புத்தகம் படிக்கத் தயாராக இல்லை, பதிப்புத் துறையில் இன்றும முறையான எடிட்டர்கள் கிடையாது. மொழிபெயர்ப்பு நூல்களை பதிப்பிக்கும் போது உரிமை வாங்குவதில்லை. மூல எழுத்தாளர் பற்றிய குறிப்புகள் கூட கிடையாது, ராயல்டி என்று பார்த்தால் தமிழ்நாட்டில் ஒன்றிரண்டு எழுத்தாளர்களைத் தவிர பெரும்பாலோருக்கு அது கிடைப்பதே இல்லை. ராயல்டி தொகையை வைத்து வாழ்க்கை நடத்த முடியாது. ஒரு சிறுகதைத் தொகுப்பிற்கு தரப்படும் ராயல்டியை வைத்து ஒரு பேண்ட் சர்ட் கூட வாங்க முடியாது. ஏழு கோடி தமிழ் மக்கள் உள்ள தமிழ்நாட்டில் அதிகம் விற்பனையாகும் புத்தகத்தின் எண்ணிக்கை ஐந்தாயிரம்தான். அதுதான் இலக்கிய சாதனை. இதுதான் தமிழ்நாட்டின் இன்றைய பதிப்பு சூழல்.

கே: எழுத்தாளர்களிடையே காணப்படும் சர்ச்சைகள், சச்சரவுகளுக்கு என்ன காரணம்?


ப: விஞ்ஞானத்தில், அரசியலில், சமூகத் தளத்தில் இல்லாத சர்ச்சைகளா? எல்லாத் துறைகளிலுமே சர்ச்சைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அது பதவி, அதிகாரம் மற்றும் பொறாமையால் உருவாகக் கூடியது. இலக்கிய சர்ச்சைகளின் நோக்கம் பெரும்பாலும் மாறுபட்ட அபிப்ராயங்கள், ரசனை வேறுபாடுகளால் உருவாகிறது. ஒருவருக்கு சார்த்த்ரை பிடிக்கிறது; மற்றவருக்கு திருக்குறளைப் பிடிக்கிறது, அந்த ரசனை மாறுபாடு இரண்டு கருத்துருவங்களை உருவாக்கிவிடுகிறது.

இன்னொரு தளம் எழுத்தாளர்கள் மற்றவர்களின் படைப்புகளை விமர்சிப்பதன் வழியே உருவாகும் சண்டை. இதுவும் அபிப்ராய பேதம்தான், மற்றபடி எழுத்தாளர்களும் சராசரி மனிதர்களே. அவர்களின் உணர்ச்சிவேகமும் கோபமும் சண்டைகளை உருவாக்கவே செய்யும். ஆனால் அது முற்றி ஒருபோதும் பகையாவதில்லை. எதிர்துருவங்களாக உள்ள எழுத்தாளர்கள் கூட எளிதாகச் சந்தித்துப் பேசிக் கொள்ளும் சூழல் இருக்கவே செய்கிறது.

பொதுவாக எழுத்தாளர்கள் எல்லோருக்குமே ஒரு ‘ஈகோ’ இருக்கும். அது மற்றவர்களிடம் காணப்படுவதை விட மேம்பட்ட ஈகோவாக இருக்கும். அதனால் எழுத்தாளர்கள் எதிலுமே உணர்ச்சி வசப்பட்டுச் சட்டென்று கருத்துச் சொல்லிவிடுவார்கள். ஆனால் எழுத்தாளர்கள் யாரும் வன்முறையைக் கைக்கொள்வதில்லை. வஞ்சம் தீர்ப்பதில்லை. கோபத்தில் படபடவென எழுதிவிடுகிறார்கள். அதோடு முடிந்து போய்விடுகிறது. ஆனால். பிற துறைகளில் அப்படி இல்லை. அந்தப் பகைமை ஒருவனை ஒன்றுமே இல்லாமல்கூட ஆக்கிவிடுகிறது. எழுத்துத் துறையில் அப்படி ஒருபோதும் நடப்பதில்லை.

கே: விருதுகள் தகுதியானவர்களுக்கு வழங்கப்படுவதில்லை என்று ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. உங்கள் கருத்து என்ன?


ப: விருதும் சர்சையும் உடன்பிறந்தவை. காரணம் எந்த ஒரு சிறந்த எழுத்தாளர் பரிசு பெறும்போதும் யாரோ ஒருவர் தனக்கு கிடைக்கவில்லை என்று ஆதங்கப்படவே செய்வார். அத்தோடு விருது பெற்றவர் மட்டும்தான் நல்ல எழுத்தாளரா என்ற கோபம் உருவாகவே செய்யும். டால்ஸ்டாய்க்கு நோபல் பரிசு கிடைக்கவில்லை. அதற்காக அவர் என்ன சாதாரண எழுத்தாளரா?

வாசகன் எழுத்தாளனுக்கு எப்போதும் மானசீகமான விருதுகளைத் தந்து கொண்டேதானிருக்கிறான். அது ஒரு கைகுலுக்கலாகவோ, ஒரு தேநீரை வாங்கி தருவதாகவோ, ஒரு பேனா பரிசளிப்பதாகவோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், அந்தப் பரிசு உயர்வானது.

ஒருமுறை பழனி கோவிலுக்குச் சென்றிருந்தேன். அடிவாரத்தில் இட்லிக் கடை வைத்திருக்கும் ஒரு அம்மா என்னைப் பார்த்து, “நீங்கள் எழுத்தாளர் ராமகிருஷ்ணன் தானே!” என்றார். “ஆமாம்” என்றேன். “என் பையன் உங்க புத்தகத்தைப் படிப்பான். இருங்க. நான் போய் அவனை வரச் சொல்றேன்” என்று கூறிவிட்டுப் போனார். அந்தப் பையன் வந்தான். அவன் கல்லூரியில் முதலாமாண்டு படிப்பவன். நான் அவனுடன் பேசிவிட்டு என் அறைக்கு வந்து விட்டேன். சிறிது நேரம் கழித்து அந்த அம்மா ஒரு தட்டில் ஐந்து இட்லி, சட்னி கொண்டு வந்து கொடுத்து, “எங்களால இதுதான் தம்பி உங்களுக்குக் கொடுக்க முடிஞ்சது. சாப்பிடுங்க” என்று சொல்லிக் கொடுத்தார். அவர் ஏன் அதைக் கொடுக்கிறார்? அவரை எனக்கு முன்பின் தெரியாது. அவர் என்னைப் படித்தவரில்லை என்றாலும் அவர் எனக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்புகிறார். அந்த அன்பினால் அதைக் கொடுக்கிறார். இது எனக்கு கிடைத்த மிகப் பெரிய பரிசு. இது போன்ற பரிசும் பாராட்டும் ஒரு எழுத்தாளனுக்குக் கிடைக்கும் போதுதான் அவன் நம்பிக்கையும் உத்வேகமும் அடைகிறான். மற்றபடி மிகப் பெரிய விருதுகளை ஒருவித கூச்சத்தோடும், சமயத்தில் அது உருவாக்கக்கூடிய பிரச்சனைகளோடும்தான் எதிர்கொள்கிறான்.

கே: ஆன்மீகம், நாத்திகம் இரண்டும் கலந்த சூழலில் இளமையில் வாழ்ந்துள்ளீர்கள். உங்களுக்குள் அவை ஏற்படுத்திய தாக்கங்கள் என்ன?
ப: இரண்டிலும் எனக்கு தேவையானதை நான் எடுத்துக் கொண்டேன். மனித வாழ்க்கையின் துயரங்கள், சிக்கல்கள் இவற்றிலிருந்து விடுபட மனிதனுக்கு உதவி செய்ய ஏதோ ஒன்று தேவையாக இருக்கிறது. அது பகுத்தறிவா மதமா என்று இரண்டு வழிகள் முன்னிருக்கின்றன. நான் இந்த இரண்டிலும் கலந்த இலக்கியம் என்ற மூன்றாவது வழியை நம்புகின்றவன். அது பகுத்தறிவையும் பேசுகிறது. புராணீகத்தையும் ஏற்றுக் கொள்கிறது. இதையேதான் இலக்கியமும் செய்கிறது; அறிவுத் துறைகளும் செய்கின்றன. மனித வாழ்க்கைக்கு நம்பிக்கை ஊட்டுவதுதான் எழுத்தின் மிகப்பெரிய வேலை. அந்த நம்பிக்கை எந்த வடிவத்தில் வந்தாலும் அதை எழுத்து முன்மொழியத்தான் செய்யும்.

எனக்கு சடங்கு, சம்பிரதாயங்களின் மீது விருப்பம் இல்லை. அதேசமயம் வறட்டுப் பகுத்தறிவு வாதத்தையும் நான் ஏற்றுக் கொள்வதில்லை. இரண்டையும் ஆராய்ந்து பார்த்துப் புரிந்து கொள்வதையே விரும்புகிறேன்.

கே: புலம்பெயர்ந்து தமிழர்கள் வாழும் நாடுகளில் தமிழ் இலக்கிய வளர்ச்சி குறித்து…
ப: இன்றைக்குத் தமிழ் இலக்கியம் தமிழ்நாட்டில் மட்டும் எழுதப்படுவது மட்டுமல்லாமல், உலகம் முழுதுவும் எழுதப்படுகிறது. அப்படித்தான் ஆங்கில இலக்கியம் இருக்கிறது. அவர்கள் இருக்கும் இடத்தை வைத்து பிரிட்டிஷ் இலக்கியம், ஐரிஷ் இலக்கியம், அமெரிக்க இலக்கியம் என்று கூறப்படுவது போல்தான் தமிழ் இலக்கியமும். அது சிங்கப்பூரில், மலேசியாவில், கனடாவில், இலங்கையில் இருக்கிறது, அமெரிக்காவிலும் இருக்கிறது. தமிழர் வாழும் எல்லா இடங்களிலும் இலக்கியம் எழுதப்படுகிறது. மலேசியாவை எடுத்துக் கொண்டால் அவர்கள் தமிழர்களைப் பற்றி மட்டும் எழுதுவதில்லை. சீனர்களைப் பற்றி, மலாய் மக்களைப் பற்றி, தங்கள் வாழ்விடம், சூழல் பற்றி, பௌத்த மதம் பற்றி… இப்படி நிறைய எழுதுகிறார்கள். சிங்கப்பூரில் வாழ்பவர்கள் தமது புலம் பெயர்ந்த வாழ்க்கையைப் பற்றி எழுதுகிறார்கள். இலங்கையைச் சேர்ந்தவர்கள் வேறு வேறு நாடுகளில் தாம் வாழும் சூழல்களை எழுதுகிறார்கள். அதே சமயம் தன்னுடைய வேர்களைப் பற்றியும் எழுதுகிறார்கள். அமெரிக்காவில் உள்ளவர்கள் அங்குள்ள பன்னாட்டுக் கலாசாரத்தைப் பற்றி எழுதுகிறார்கள். தமிழ் அடையாளம் வேர்கள் குறித்து ஆழ்ந்து சிந்திக்கிறார்கள், இன்றைக்கு இலக்கியத்தின் திசை மாறி இருக்கிறது. அது பன்னாட்டுக் கலாசாரத்தின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி இருக்கிறது. அதற்கு தமிழ் மக்கள் பலநாடுகளிலும் புலம்பெயர்ந்து சென்று வாழ்வதே காரணம்

ஆனால் அயல்நாடுகளில் வாழ்ந்து கொண்டு தமிழில் எழுதுவது ஒரு பெரிய சவால். அதை எதிர்கொண்டு தங்களை நிலைநிறுத்திக் கொள்கிறார்கள் என்பதுதான் அதன் முக்கியமான பலம்

தமிழ்நாட்டில் கொண்டாடப்படுவதை விடவும் அயல்நாடுகளில் தமிழ் இலக்கியம் கொண்டாடப்படுகிறது, எனது யாமம் நாவல் வெளியான உடன் கனடாவில் இருந்து ‘இயல் விருது’ கொடுக்கப்பட்டது. பின்னர்தான் அதற்குத் ‘தாகூர் விருது’ கிடைத்தது. ஆக அவர்கள் எங்கோ தொலைவில் இருந்தாலும் தமிழ் இலக்கியத்தை உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். உரிய கௌரவத்தை அளிக்கிறார்கள். ஆனால் அங்கிருப்பவர்களின் படைப்புக்கு தமிழ்நாட்டில் உரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறதா என்று கேட்டால் ‘இல்லை’ என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் தமிழ் மக்கள் தமிழ்நாட்டுக்கு வெளியே எது நடந்தாலும் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் நான் இவர்களை, இவர்களது படைப்புகளை சுட்டிக்காட்டிக் கொண்டே இருக்கிறேன். அது என் கடமையும்கூட.

தமிழ் இலக்கியம் உலகு தழுவிய இலக்கியமாக மாற வேண்டும், அதற்கு உடனடித் தேவை ஆங்கில மொழிபெயர்ப்புகள், மற்றும் கல்விப்புலங்களில் தமிழ் இலக்கியம் பாடமாக அறிமுகமாவது. இரண்டையும் அயல்தேசங்களில் வசிப்பவர்கள் முன்கை எடுத்துச் செய்தால் தமிழ் இலக்கியம் உலகின் முக்கிய இலக்கியமாக கொண்டாடப்படும்.

கே: உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்கள், படைப்பாளிகள் குறித்து…
ப: தமிழக அளவில் பார்த்தால் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்கள் புதுமைப்பித்தனும் வண்ணநிலவனும்தான். இவர்களை நான் அடிக்கடி திரும்பப் படிக்கிறேன். கவிஞர்களில் பிரமீளையும் நகுலனையும் தேவதச்சனையும் விரும்பி படிக்கிறேன். சமகால எழுத்தாளர்களில் சந்திரா, மனோஜ், சங்கர ராம சுப்ரமணியன், லட்சுமி சரவணக்குமார், பவா. செல்லத்துரை இவர்களை விரும்பி வாசிக்கிறேன்.

உலக அளவில் எப்போதும் என்னுடைய ஆசான்களாகக் கருதுவது டால்ஸ்டாயும் தஸ்தாவெஸ்கியும்தான். இலங்கையில் கவிஞர் சேரனும், உமா வரதராஜனும், கவிஞர் அனாரும், திசேராவும், ரஷ்மியும் முக்கியமானவர்கள். மலேசியாவில் ரெ. கார்த்திகேசுவும் பாலமுருகனும், சிங்கப்பூரில் லதா, ஜெயந்தி சங்கர் இருவரையும் வாசிக்கிறேன். ஆஸ்திரேலியாவில் வாழும் நடேசன், பெர்லினில் வாழும் கருணாகரமூர்த்தி இவர்களும் விருப்பமானவர்களே. என்னுடைய ஆல்டைம் ஃபேவரைட் கனடாவில் வாழும் அ.முத்துலிங்கம் அவர்கள்தான்.

கே: எழுத்தையே வாழ்க்கையாகக் கொண்டவர் நீங்கள். இதன் சாதக, பாதகங்கள் என்ன?
ப: எழுத்தையே நம்பி வாழ்வது மிகச் சிரமமான ஒன்று. அதற்காக நிறையப் படிக்க வேண்டும். பயணம் செய்ய வேண்டும். உரிய கௌவரம் மரியாதை எதுவும் கிடைக்காது, மாதவருமானம் என்ற ஒன்று ஒரு போதும் கிடைக்காது, கூடுதலாக எழுதியதற்காக நாலு பேர் சண்டை போடுவார்கள். வசை பொழிவார்கள், அத்தனையும் சந்திக்க வேண்டும். நான் இந்த இடர்ப்பாடுகளை ஏற்றுக்கொண்டுதான் வாழ்கிறேன். முழுநேர எழுத்தாளனாக வாழமுடியும் என்று நிருபித்துக் காட்டியிருக்கிறேன். வருவாய் பிரச்சனை எப்போதுமே இருக்கிறது. அந்த நெருக்கடியில் இருந்து மீள வருடத்திற்கு ஒரு திரைப்படத்தில் வேலை செய்கிறேன். இதனால் ஆறுமாதம் நிம்மதியாக வாழமுடிகிறது. மற்றபடி புத்தகங்களில் கிடைக்கும் வருவாய் புத்தகம் வாங்கவும் பயணம் செய்யவும் போதாமல் தானிருக்கிறது

முழுநேர எழுத்தாளனாக வாழ்வது என்பது ஒரு அளவில்லாத சுதந்திரம். என் விருப்பத்துக்கேற்ப என்னால் வாழ முடிகிறது. என்னுடைய நேரம் என் கையில் இருக்கிறது. என் மனைவி, பிள்ளைகள், அண்ணன், குடும்பம், நண்பர்கள் என்று எல்லோரும் சேர்ந்து இந்தச் சுதந்திரத்தைத் தந்திருக்கின்றனர்.

இதன் பாதகம் என்னவென்றால் எதிர்காலத்தைப் பற்றி பயம், நிச்சயமின்மை இருந்து கொண்டே இருக்கும். ஆனால் அது எனக்குப் பிடித்திருக்கிறது. ஏனென்றால் உலகத்தில் மனிதனைத் தவிர எல்லா உயிர்களுமே இதே பதற்றம், போராட்டத்துடன் தானே வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

கே: புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
ப: புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு, குறிப்பாக அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்களுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள் ஒன்று உண்டு. அவர்களில் ஒவ்வொருவரும் ஒரு புத்தகத்தையாவது தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழியாக்கம் செய்ய வேண்டும். நூறு பேர் முயன்றால்கூட வருஷம் நூறு புத்தகம் ஆங்கிலத்தில் வந்துவிடும். தனிநபர்கள் செய்ய சிரமமானதாக இருந்தால் தமிழ் அமைப்புகள் ஆண்டுதோறும் பத்துப் புத்தகங்களையாவது ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியிடலாம், தமிழ் இலக்கியம் குறித்து ஆங்கில இதழ்களுக்கு எழுதலாம். பல்கலைக்கழகங்களில் உரையாற்றலாம். எனக்கு இருக்கும் மிகப்பெரிய ஆதங்கம், தமிழின் நல்ல புத்தகங்கள் ஆங்கிலம் மற்றும் பிறமொழிகளுக்குப் போய்ச் சேரவில்லையே என்பதுதான். இதை மாற்ற உடனே ஏதாவது செய்தாக வேண்டும்.

ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்வதை ஒரு கூட்டுச் சேவையாக கருதி அதற்கென தனி இணையதளத்தை உருவாக்கலாம். பிரபலமான பதிப்பகங்களுக்கு தமிழ்ப் புத்தகங்களை வெளியிடும்படி ஆலோசனைகள், பரிந்துரைகள் செய்யலாம். ஒஹென்றி விருதுச் சிறுகதைகள் போல ஆண்டுதோறும் சிறந்த இருபது சிறுகதைகளை ஆங்கிலத்தில் ஒரு தொகை நூலாக வெளியிடலாம். யூ டியூப்பில் தமிழ் இலக்கியம் குறித்த உரைகளை பதிவேற்றம் செய்யலாம். இதைத் தமிழ் நாட்டிலும் அயல்நாட்டிலும் கூட்டாகச் செய்யும்போது மட்டும்தான் தமிழ் இலக்கியம் மேம்பாடு அடையும்.

தங்கு தடையில்லாத, தனித்துவமான சிந்தனை ஓட்டம், மேதாவிலாசம் இவற்றைக் காண்கிறோம் எஸ்.ரா.வின் பதில்களில். “தென்றலை எனக்கு நன்கு தெரியும். நியூஜெர்ஸி வாசகர் முருகானந்தம் என்னைச் சந்திக்க வரும்போதெல்லாம் தென்றல் பிரதிகளைக் கொண்டு வந்து தருவார். மதுசூதனன் என்னைப் பற்றி எழுதிய கட்டுரையையும் வாசித்திருக்கிறேன். தென்றல் அமெரிக்காவில் தீவிரமான தமிழ்ப் பணி செய்து கொண்டிருக்கிறது என்பது எனக்கு நன்கு தெரியும்” என்கிறார் மாறாத புன்சிரிப்புடன். முக்கிய சந்திப்புக்காக வெளியே செல்லும் அவசரப் பணி இருந்த போதிலும் தென்றலுக்காக நீண்ட நேரம் ஒதுக்கி பதில் தந்தமைக்கு நன்றி கூறி, கேட்ட கேள்விகளைவிட கேளாதவை அதிகம் என்ற உணர்வோடு, விடை பெறுகிறோம்.

*****

கடவுள்


எந்த சக்தி மனிதனுக்கு உதவி செய்கிறதோ, எது மனிதனின் துயரத்தைப் பங்கு போட்டுக் கொள்கிறதோ, எது மனிதனை மேம்படுத்துகிறதோ, அது எல்லாமே எழுத்துக்கும் எழுத்தாளனுக்கு உகந்ததாகத்தானே இருக்க முடியும்? அதே நேரத்தில் மதத்தின் பெயரால் நடந்த துவேஷங்கள், மனித அவலங்கள், வெறுப்பு, தீண்டாமை போன்ற விஷயங்களை என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. இப்போது என் முன்னால் இருக்கும் கேள்வி, கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்பதல்ல. கடவுள் தேவைப்படுகிறாரா, இல்லையா என்பதுதான். எனக்கு கடவுள் தேவையானவராக இருக்கிறார். ஆனால் நம்பும்படியானவராக இல்லை.

நான் எல்லாக் கோயில்களுக்கும் போயிருக்கிறேன். கோவில் என்பது ஒரு கூட்டுவெளி. அங்கே இசையும் சிற்பமும் தியானமும் ஒவியங்களும் ஒன்றுகலந்திருக்கின்றன. ஆகவே அந்த வெளி தனித்துவமானது. தேடித்தேடி கோவில்களுக்குப் போய் சிற்பங்களைக் கண்டிருக்கிறேன். வழிபாடுகளை நான் கேலி செய்வதில்லை. அது ஒரு நம்பிக்கை. அதை நம்புகிற மனிதன் ஏற்றுக் கொள்கிறான். நம்ப மறுக்கின்றவன் விலகிப் போகிறான். அவ்வளவே! மக்கள் எங்கெல்லாம் கூடுகிறார்களோ அந்த இடங்களை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அவ்வாறு கூடும் பொதுவெளி இன்று குறைந்து கொண்டே வருகிறது. அதனால் தான் டிவியை நமது அகவெளியாக மாற்றிக் கொண்டுவிட்டோம்

எனது இந்தியா


இந்த தேசத்தில் பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வில் ஒரு முறையாவது இந்தியாவைச் சுற்றிப் பார்க்க வேண்டும். இந்தியா என்பது நாம் வரைபடத்தில் பார்க்கும் இந்தியா அல்ல. அது ஒரு மிகப் பெரிய நிலப்பகுதி. அதை நாம் கற்பனை செய்யவே முடியாது. அவ்வளவு மாறுபட்ட கலாசாரங்கள், நம்பிக்கைகள், நிலக்காட்சிகள் இருக்கின்றன. இந்தியப் பயணத்தில் ஒவ்வொரு எட்டுமணி நேரத்திற்குப் பின்னரும் மாறுபட்ட நிலப்பகுதியை, கலாசாரத்தை, பழக்க வழக்கங்களை, உடையை, உணவை, மொழியை நாம் சந்திக்கிறோம். வேறெங்குமே இத்தனை வகைகளைப் பார்க்க முடியாது. தமிழகத்துக்குள்ளேயே சென்னையில், செங்கல்பட்டில், காஞ்சிபுரத்தில், ஆரணியில் என்று ஒவ்வோர் இடத்திலும் ஒவ்வொரு விதமாக மொழி பேசப்படுகிறது. உணவு முறையில், பழக்க வழக்கத்தில் மாற்றம் உள்ளது. இவ்வளவும் ஒன்று சேர்ந்தது தான் இந்தியா.

இந்தியாவில் பிறந்த ஒவ்வொருவரும் இந்திய நதிகளைப் பார்க்க வேண்டும். அப்போதுதான் இந்தியா எவ்வளவு வளமையானது, எவ்வளவு பாரம்பரியமிக்கது என்பது புரியும். மொத்த இந்தியாவுமே நதிகளால் ஒன்றிணைக்கப்பட்ட நாடு. நதியை ஒட்டியே நகரங்கள் இருக்கின்றன. நதியை ஒட்டியே கலைகள், கலாசார மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இந்தியாவைத் தேடும் ஒரு பயணி நதியோடு கூடச் செல்பவனாகவே இருப்பான். நதி வழி நடந்தால்தான் இதைத் தெரிந்து கொள்ள முடியும். நான் தமிழ்நாட்டில் ஓடக் கூடிய ஏழு நதிகளையும் அதன் தொடக்கம் முதல் இறுதிவரை பயணம் செய்து பார்த்திருக்கிறேன். அதன் பழைய பாதை, புதிய பாதை, என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்று பார்த்திருக்கிறேன். இந்தப் பயணத்திற்குப் பின்னால் தமிழ்நாட்டைப் பற்றி நான் கொண்டிருந்த மனச்சித்திரமே மாறிவிட்டது. தமிழ்நாடு எப்போதுமே வறுமையான நாடு என்ற எண்ணமே மாறிவிட்டது.

அதுபோல இந்தியா ஒரு பின்தங்கிய நாடு என்ற எண்ணமும் மாறிவிட்டது. இது அளப்பரிய செல்வம் கொண்ட நாடு. அவை முழுமையாக அடையாளம் காணப்படவில்லை அல்லது ஓரிடத்தில் மட்டுமே குவிந்திருக்கிறது என்பதுதான் நமது பிரச்சனை. இதைப் பயணம்தான் உணர்த்துகிறது. நான் வரலாற்றை பாடப் புத்தகங்களில் படித்ததை விட அதிகம் பயணம் செய்துதான் தெரிந்து கொண்டேன். கோட்டை, கொத்தளங்கள், கல்வெட்டுக்கள் மட்டும் வரலாறில்லை. நாம் பார்க்கும் மனிதனின் மொழி, உடை, அணிகலன் என்று பலவற்றில் இருக்கிறது. இந்தியாவில் இவற்றிற்கு ஒரு நீண்ட பாரம்பரியமும் இருக்கிறது. இந்தியா இந்தப் பாரம்பரியத்தைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது.

இந்தியாவின் பிரச்சனைகள்


இந்தியா எல்லாவித பொருளாதார நெருக்கடிகளையும் தாண்டி, அது தன் மரபால் பலம் பெற்றதாக இருக்கிறது. ஆனால் சமகாலப் பிரச்சனைகள் வளர்ந்து கொண்டே இருக்கின்றன. நாம் இந்தப் பிரச்சனைகளுக்கு மட்டுமே முதன்மை அளிப்பதால் நமது மரபு என்ன, நமது பாரம்பரிய பெருமைகள் என்ன, நம் பிரச்சனைகளை அந்த மரபான வழிகளின் மூலம் எதிர்கொள்வது எப்படி என்பது பற்றியெல்லாம் அறியாமல் இருக்கிறோம். சமீபத்தில் ஒரு பத்திரிகையில் படித்தேன், உலகத்தில் உள்ள இளைஞர்களின் எண்ணிக்கையில் அதிக அளவு இந்தியால்தான் இருக்கிறார்கள் என்று. ஆனால், நாம் அந்த இளைஞர்களின் ஆற்றலை உழைப்பாக மாற்றவில்லை. இங்குள்ள கலை, மரபுகளைப் பேண முயலவில்லை. கலாசாரம், பண்பாடு, வரலாறு, நாகரிகம் என அனைத்திலும் நமக்கு வலிமையான பாரம்பரியப் பின்புலம் உள்ளது. சுயநலத்திற்காக நாம் அவற்றை அழித்துக் கொண்டிருக்கிறோம். இந்தியனாக இருப்பது தனித்துவமிக்கது. அதை எப்போதும் பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன்

ஆனால் வரலாற்றின் கொந்தளிப்பான சூழலில் நாம் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது மட்டும் உண்மை. இதற்குத் தீர்வு என்று பார்த்தால், அறிவுத்துறை சார்ந்த இந்தியர்கள் உலகத்தின் பல பகுதிகளுக்கும் சென்று தங்கள் ஆற்றலை, திறமையை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். வெளிநாடுகளில் இந்தியர்கள் செய்த அறிவுத்துறை மாற்றத்தை இந்தியாவிலும் செய்ய முன்வர வேண்டும். அப்படிச செய்தால் நம்முடைய இயற்கை வளங்களைக் கொண்டே நாம் நம்முடைய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முடியும். ஒரு நல்ல மாற்றம் வரும்.