Archive
Nanjil Nadan in Uyirmmai Magazine: உயிர்மை Notes & Writings from and on நாஞ்சில் நாடன்
சேத்தன் பகத்தும், நாஞ்சில் நாடனும்
மணி
புறநகர் பேருந்தின் – இலக்கியப்பதிவு:
சேத்தன் பகத்தின் எழுத்துக்கள் மெட்ரோதன்மையின் இளமைப்பக்கத்தைக் காட்டுகிற நேரத்தில் நாஞ்சில் நாடனின் ‘மொகித்தே’ கதை ஒரு மும்பை தமிழ் சாமான்யனின் அக, புற உலக வாழ்க்கையின் குறுக்குத்தோற்றத்தைக் காட்டுகிறது.
புறநகர்ப் பேருந்தில் பயணம் செய்யும் பயணியின், அதன் பேருந்து நடத்துனருக்குமான கதை. தளவாய் – மும்பாய் பெஸ்ட் – பயணி. தன் குடியிருப்பில் புதிதாய் வசிக்கவரும் மொகித்தே – பேருந்து நடத்துனர்.புதிதாய்க் குடிபுகுந்த வீட்டின் பூசைக்கு மொகித்தே அழைக்கிறான்.தளவாயும், அவன் மனைவியும் சென்று வருகிறார்கள். உறவு துளிர்க்கிறது.
இங்கிருந்து இட்லி போகிறது. அங்கிருந்து காய்கறி பரிவர்த்தனை.மொகித்தே – அவன் போகும் பேருந்துக்கும் நடத்துனராகிறார். ஆனால் அவனிடம் மட்டும் பயணச்சீட்டு வாங்கப்படுவதேயில்லை. தளவாய்க்குக் குற்றவுணர்ச்சி. கவனமாய் உணர்கிறான். இடையில் ஏறும் பரிசோதகர் பற்றிக் கவலை வேறு. நேராய் போய் மொகித்தேயிடம் கேட்கிறார். அவன் திரும்பிக் கேட்கும் கேள்விதான் – கதையின் நாதம்..
” எனக்கு சொந்தக்காரன் ஒருத்தனை எப்ப வேணும்னாலும் எத்தனை மட்டம் வேணும்னாலும் கூட்டிட்டுப் போலாம். கட்டணம் இல்லாமல். ஒரு பய கேக்கமுடியாது.”
” காய் அண்ணாதும்.. ? எனக்கு சொந்தக்காரன் இல்லையா .. நீ.. “
ஒன்றும் பேசமுடியவில்லை தளவாய்க்கு. நமக்கும்தான்.
கதை மெல்லிய நட்புறவையும், சகோரத்துவத்தையும் பற்றியது. மும்பை வாழ்வுக்கும், எழுத்துக்குமிடையேயான இடைவெளியைக் குறைக்கவல்லவை. புலம்பெயர்ந்தவர்களின் கலாச்சாரக் கலப்பின் நல்ல பக்கத்தைக் காட்டக்கூடியவை. இந்த மாதிரி மெல்லிய கதைகள்தான் உண்மை விளிம்புகள் எனப்படுகின்றன.
ஒரு வரியில் உறவுகள் இறுகி, பல்கி உயர்ந்து வானத்தையும் கிழித்து விடுகிறது. எல்லா நல்ல உறவுகள் எல்லாமே இப்படித்தான்.ஆர்ப்பாட்டமில்லாது அமைதியான நீரோடைபோல் தெளிவாய், ஈரமாய் ஓடிக்கொண்டேயிருக்கும். அது சாதி, மொழி தாண்டி உறவின் உணர்வுகள்.மும்பை போன்ற நகரில் புலம்பெயர்ந்து, நம் அக்கம் பக்கங்களில் அத்தகைய உறவுகளின் வாசம் கண்டோர் அதிபாக்கியசாலிகள். அவர்களின் அன்பு உலகங்கள் எல்லையற்றது.
கண்ணுக்குத் தெரியாத நட்பு நூலிழைகளுக்குள் அது இணைந்து விடுகிறது.‘யாதும் ஊரே.. யாவரும் கேளீர் ‘ என்று மேடை போட்டுப் பிளிறும் போலித் தன்மையற்றது அந்த உறவுகள். குறிப்பாய் இத்தகைய உறவுகளில் ‘சாதி‘வெகுவேகமாய்க் காணாமல் போய்விடுகிறது.
‘மொகித்தெ’ எந்த அரசியலும், தலைவர்களும் தரமுடியாத நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் – நம்மைப்போல் புலம்பெயர்ந்தவர்களுக்குக் கொடுத்து, நம் வாழ்க்கையின் இருப்பை அர்த்தமாக்குவான்.
மும்பை வாழ்வின் – அப்பட்டமான, நிர்வாண உண்மைகளைப் பதிவு செய்யும் பாசாங்கற்ற வரிகள் கீழேயுள்ளவை.
‘சமயங்களில் வேலை நேரத்துக்கு இணையாக பிரயாண நேரம் அமைந்துவிடும்.”
”வாடகைக்குக் குடியிருப்போரெனில் பதினோரு மாதத்தில் ஒரு முறை சனிப்பெயர்ச்சி“
“இட்லி சாம்பார் என்பது பாற்கடலைக் கடைந்தபோது திரண்டு வந்ததன் சாறு“
காலை அகட்டிவைக்கிற கண்டக்டர், சில்லறையில்லாததால் மராத்திய வசவு, போகும் வழியில் பேப்பேர் படிப்பு, உலகச் சந்தை அரட்டையடிப்பு, ( 40 %வாழ்க்கையைப் பயணத்தில் மும்பைக்காரர்கள் தொலைக்கிறார்கள் –என்கிறது ஒரு கணக்கு.) பயணச்சீட்டு துளையிடும் கருவியின் டிக்..டிக்..ஒலி.. பெஸ்ட் ( BEST) பேருந்தில் பயணம் செய்யும் வரம் பெற்றால் நீங்கள் கண்டிப்பாய் மொகித்தேவைத் தேடவேண்டும்…
எந்த அரசியலும், தலைவர்களும் தரமுடியாத நம்பிக்கையையும்,மகிழ்ச்சியையும் – நம்மைப்போல் புலம்பெயர்ந்தவர்களுக்குக் கொடுத்து, நம் வாழ்க்கையின் இருப்பை அர்த்தமாக்குவான்.
நாஞ்சில் நாடனின் மும்பை பற்றிய சிறுகதைகள், நாவல்கள் பெரும்பாலும் ஊரை நோக்கி எழும் ஏங்கல் பார்வை மற்றும் பழைய ஞாபகக்கிளறல்கள் மட்டும்தான் என்றாலும் ’மொகித்தே’ புறநகர் பேருந்து தமிழ் இலக்கியத்தில் படைக்கப்பட்ட காலம் தாண்டி நிற்கிற – மெட்ரோ சாமான்யன்.
*
கிராமங்கள் கூட மெட்ரோ புறநகரின் பிரதியாக மாறக்கூடிய வேகவளர்ச்சி.எதிர்கால இலக்கியத்தில் கிராம இலக்கியங்கள் புத்தகத்தில் மட்டுமான ஒரு பழைய நினைவாகத்தானிருக்கும் போல. இடம் சார்ந்த இலக்கியத்தின் எதிர்காலம் மெட்ரோ மற்றும் மெட்ரோ புறநகரில்தான் ஒட்டிக் கொண்டிருப்பதாக நினைக்கத் தோன்றுகிறது.
அறிவின் பரிமாணங்கள்: நாஞ்சில் நாடனின் வாய் கசந்தது: அ.ராமசாமி
சொல்லில் சுழன்ற இசை
உயிர்மையில் ‘இசைபட வாழ்தல்’ என்ற தலைப்பில் ஷாஜி எழுதிவரும் பத்தியின் முதல் தொகுதி சமீபத்தில் வெளிவந்தது. இதற்கான ஒரு அறிமுகக் கூட்டம் கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி சனிக்கிழமை மாலை சென்னை சிதம்பரம் செட்டியார் பள்ளி வளாகத்தில் அமைந்த சிவகாமி பெத்தாட்சி அரங்கில் நடைபெற்றது. இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், ரமேஷ் விநாயகம், பாடகர்கள் P.B. ஸ்ரீனிவாஸ், கார்த்திக், எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன், பிரபஞ்சன், எஸ்.ராமகிருஷ்ணன், மனுஷ்யபுத்திரன் ஆகியோர் நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினர்.
நிகழ்ச்சியை மெஹ்தி ஹஸன் ரசிகர் குழு, Saint Gobain Glass நிறுவனம் ஆகியோரின் ஒத்துழைப்புடன் உயிர்மை பதிப்பகம் ஏற்பாடு செய்திருந்தது.
நாஞ்சில் நாடன்
இசை இறை அனுபவம் என்று சொல்கிறார்கள். அதை விவரிக்க முடியாது. வேற்று மொழியில் பாடுகிறார்கள் என்று விமர்சிக்கிறார்கள். வாத்தியங்கள் ஊமை மொழியில் தானே பேசுகிறது. தங்கமே தமிழ் பாட்டு பாடு என எளிதாக சொல்லி விட்டு போகிறார்கள். ஆனால் பாடிக்கொண்டிருந்த தமிழ் பாடல்களை என்ன செய்தோம். நாட்டுப்புற ஆய்வாளர் அ.கா.பெருமாள் சொல்வார், குமரி மாவட்டத்தில் அறுபத்து மூன்று வகையான நிகழ்த்துக்கலைகள் இருந்தது என்று. ஆனால் அதில் இப்போது பதினோரு கலைகள் மாத்திரமே எஞ்சியிருக்கின்றன. அடுத்த தலைமுறையில் அதுவும் கூட இல்லாமல் போய்விடலாம் அந்த கலைகளில் பயன்படுத்திய வாத்தியங்களை இனி மியூஸியத்தில் கூட பார்க்க முடியாது. ஷாஜியின் இசை குறித்த இந்நூல் தமிழுக்கு அபூர்வ வரவு.
பாரதி மணி
என் தில்லி வாழ்க்கையை இப்போது அசைபோடும்போது, சில அனுபவங்களில் நான்தான் ஹீரோ என்பதுபோல் எனக்கே தோன்றினால், அதைப்பற்றி எழுதுவதைத் தவிர்த்துவிடுவேன். கட்டுரைகள் என்னைப்பற்றிய சுயதம்பட்டமாக அமைவதில் எனக்கு உடன்பாடில்லை.
என் ஒரே புத்தகமான ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ வெளி வருவதற்கு முன்பு, அதை அச்சுப்பிழைதிருத்துவதற்காக மனுஷ்ய புத்திரன் எனக்கு அனுப்பி யிருந்தார். அப்போது சென்னை வந்திருந்த நண்பர் நாஞ்சில் நாடன் என் வீட்டில் தங்கியிருந்தார்.
என் எல்லாக் கட்டுரைகளையும் மறுபடியும் ஒரே மூச்சில் படித்துமுடித்த அவரிடம், ‘நாஞ்சில், இதில் எங்காவது ஒரு இடத்திலாவது என்னை முன்னிலைப்படுத்தி எழுதியதாக இருக்கிறதா?’ என்று கேட்டேன். அதற்கு ‘இவை உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள். அவற்றில் எப்படி உங்களைத் தவிர்த்து எழுதமுடியும்? தன் புகழ் பாடவே புத்தகம் எழுதும் சிலர் உண்டு. இதில் எந்த இடத்திலும் அதுமாதிரி இல்லை. உங்கள் பரந்துபட்ட தில்லி அனுபவங்களை நேர்மையுடன் வாசகர்களுடன் பகிர்ந்துகொண்டதாகவே நான் நினைக்கிறேன். அதில் நீங்கள் வந்து போவதைத் தவிர்க்கவே முடியாது. அப்படி, இப்படினு ஒங்களப்பத்தி எழுதறதும் ஒரு சுவாரஸ்யமாத்தான் இருக்கு!’ என்று பதிலளித்தார்.
அவர் கொடுத்த தைரியத்தில்தான் இந்தக் கட்டுரையும் உங்கள் கையில் இருக்கிறது!
ஆஸ்பத்திரி – சுதேசமித்திரன்
நாவல் வடிவம் சர்வ சுதந்திரங்களையும் வழங்கும் ஒன்று. அந்தச் சுதந்திரத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு எழுதப்பெற்ற நாவல் ஆஸ்பத்திரி. சுதேசமித்திரனின் சிறப்பு என அவரது மொழியையும், கழிவிரக்கமற்ற சுயஎள்ளலையும், அங்கதத்தையும், வெளிப்படைத்தன்மையையும் கருதுவதுண்டு. இத்தனை வெளிப்படையான எழுத்து தமிழில் அபூர்வமானது. வாசகனைக் கூசச்செய்யும் உண்மை கொண்டு அறைவது. நேரடித்தன்மையும் நியாயமும் கொண்டது. மொழியைக் கையாளும் திறனும் தீவிரமும் கொண்டது எனவே தனித்தன்மையானது. (நாஞ்சில் நாடன் முன்னுரையிலிருந்து)
Recent Comments