Home > Authors > Writer S Ramakrishnan at Tamiloviam.com Atcharam: Archives

Writer S Ramakrishnan at Tamiloviam.com Atcharam: Archives


Thankshttp://www.tamiloviam.com/site/?cat=904

மே, ஜூன் 2006: கடந்த ஒரு மாத காலமாக ஆஸ்திரேலியாவிற்கு பயணம்

அ. வரல் ஆற்றின் திட்டுகள்

ஆ. நள் எனும் சொல்


உலகசினிமா

நாள் : 12/30/2004 11:58:58 AM

கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக உலகசினிமா என்ற புத்தகத்தின் தயாரிப்பில் முழ்கியிருந்தேன். அப்பணி தினமும் காலை 9 மணி முதல் இரவு 2 வரை தொடர்ந்து நீண்டு கொண்டிருந்தது ஆகவே இணையத்தில் எழுதுவதற்கான சாத்தியம் குறைவாகிவிட்டது.

தமிழில் முதன் முறையாக விரிவான அளவில் உலகசினிமாவை அறிமுகப்படுத்தும் புத்தகமிது. இப்புத்தகத்திற்காக சினிமாமீது ஆர்வம் கொண்ட நண்பர்கள் சிலரோடு சேர்ந்து கொண்டு நான் கடந்த மூன்றாண்டு காலமாக உலகசினிமா பற்றிய கட்டுரைகள், பேட்டிகள் போன்ற பல்வேறு மொழிபெயர்ப்பு பணிகளிலும், மற்றும் தகவல்கள் சேகரிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருந்தேன். அதனை சென்னையில் நடைபெறும் இந்த ஆண்டு புத்தக சந்தைக்குக் கொண்டுவரும் முனைப்புடன் கடந்த இரண்டு மாதமாக புத்தகத் தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன்.

இப்புத்தகத்தில் சினிமாவின் வரலாறு, உலகின் நூறு சிறந்த திரைப்படங்கள், 50 முக்கிய இயக்குனர்கள் பற்றிய விபரங்கள், 50 முக்கிய திரைக்கலைஞர்களின் பேட்டி மற்றும் உலகசினிமா குறித்த 35 கட்டுரைகள். குழந்தைகளுக்கான திரைப்படங்கள், டாகுமெண்டரி படங்கள், இந்திய சினிமாவின் வரலாறு, இந்திய சினிமாவின் முக்கிய 30 இயக்குனர்கள், திரைப்பட விழாக்கள் ,விருதுகள், சினிமா சந்தித்த பிரச்சனைகள், சினிமா குறித்த சிறந்த புத்தகங்கள், இணைய தளங்கள் மற்றும் உலகமெங்கும் உள்ள திரைப்பட கல்லூரிகள், ஆய்வு நிறுவனங்கள் பற்றிய தகவல் தொகுப்புகள் மற்றும் சினிமாவின் எதிர்காலம் குறித்த கட்டுரைகள் ஆகியவை 700 புகைப்படங்களுடன் இடம் பெற்றுள்ளன.

ராயல் டெம்மி அளவில் 750 பக்கம், கெட்டி அட்டையுடன் புத்தகம் வெளியாகிறது. விலை 500 ரூபாய். வெளியிடுபவர்கள், கனவுப்பட்டறை. 111 பிளாசா சென்டர், ஜி. என். செட்டி ரோடு. சென்னை 6. தொலை பேசி. 55515992.

இதன் வெளியீட்டு விழா சென்னையில் ஜனவரி 6 மாலை 5.30 மணிக்கு பிலிம் சேம்பர் அரங்கில் நடைபெறுகிறது. அதில் புத்தகத்தை இயக்குனர் மகேந்திரன் வெளியிட ஜெயகாந்தன் பெற்றுக் கொள்கிறார். தியோடர் பாஸ்கரன், மதன். வஸந்த் பாலாஜி சக்திவேல் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

லூயி கரோலின் ஆலீஸின் அற்புத உலகம்

என்ற குழந்தைகளுக்கான புத்தகத்தையும் மொழி பெயர்த்துள்ளேன். அது 37 சித்திரங்களுடன் கனவுப்பட்டறையால் சிறப்பாக வெளியிடப்பட்டுள்ளது. விலை 50 ரூபாய்.


நாள் : 11/11/2004 7:31:16 AM

நனையாத எனது மழைநாட்கள்.

கடந்த ஒருவாரகாலமாக சென்னையில் விடாது பெய்யும் மழையின் காரணமாக வீட்டிலே அடைந்திருந்தேன். நான் மழையின் ரசிகனில்லை. என்னால் கோடையின் அதிகபட்ச அக்னிநட்சத்திர வெயிலில் கூட மதியம் பனிரெண்டு மணிக்கு சூடாக டீகுடித்தபடி நடுரோட்டில் நின்று பேசிக்கொண்டிருக்க முடியும். ஆனால் மழையில் பத்து நிமிடங்கள் கூட நிற்கமுடியாது. பயணத்தில் எதிர்படும் மழை அல்லது பின்னிரவில் யாரும் பார்க்காமல் பெய்யும் மழை இந்த இரண்டிலும் கொஞ்சம் ஈடுபாடு உண்டு. மற்றபடி மழை தொடர்ந்து பெய்யும் போது நான் ஒரு குத்துச்செடியைப் போல ஒடுங்கிப்போகத் துவங்கிவிடுகிறேன்.

மழை நாட்களில் எந்த வேலை செய்வதற்கும் பிடிக்காது. கம்ப்யூட்டரை அணைத்து விட்டேன். மின்சாரத் தடை காரணமாக வீடு அடிக்கடி இருள்வதும் ஒளிர்வதுமாக வேறு இருந்தது. மழையால் நேரம் செல்வது மிக மெதுவாகி வீடு குகையைப் போலச் சிறியதாகிவிட்டது.

ஒரு வேளை பிறந்ததிலிருந்து வெயிலின் தீராத பிரகாசத்தை மட்டுமே அனுபவித்து வந்ததால் கூட மழையின் மீது விருப்பமில்லாமல் போயிருக்ககூடும். எங்களது ஊருக்கு அருகாமையில் கொப்புசித்தம்பட்டி என்றொரு கிராமம் இருக்கிறது. அந்த ஊரின் வெயில் மிகவும் பிரசித்தமானது. சித்திரையில் அங்கு வெறும்காலோடு எவரும் நடந்து போகமுடியாது. அதை நினைத்துத் தானோ என்னவோ அக்கிராமவாசிகள் தங்களது நிலபத்திரங்களில் சாட்சியாக வெயிலையும் சேர்த்திருக்கிறார்கள். ஆச்சரியமான விபரமது.

ஊரில் எவராவது கடன் வாங்கினாலோ, நிலவிற்பனை செய்தாலோ பத்திரத்தில் உள்ளபடி தான் நடப்பதாகவும் மீறினால் சித்திரை மாதவெயிலில் பகலில் வெறும்காலோடு ஊரை பத்துமுறை சுற்றிவர சம்மதிப்பதாகவும் எழுதி கையெழுத்துப் போடுவார்கள். பத்திரசாட்சிகளில் ஒன்றாக வெயில் இடம்பெறும் நிலப்பகுதியில் பிறந்தவன் என்பதால் இயல்பாகவே வெயிலுக்குப் பழகியிருக்கிறேன்.

ஆனால் சென்னையின் இந்த மழை நாட்களைக் கடந்து செல்வதற்கு தொடர்ந்து ஒரு வாரகாலமும் புத்தகங்கள் படிப்பதும், விருப்பமான திரைப்படங்களை பார்ப்பதுமாக செலவிட முடிவு செய்தேன். அதன்படி தினமும் பரிட்சைக்குப் படிப்பது போல காலை எட்டுமணிக்குத் துவங்கி மாலை ஆறுமணிவரை புத்தகமும் கையுமாக வீட்டில் ஆங்காங்கே இடம்மாறி வாசித்துக் கொண்டிருந்தேன். இரவு எட்டுமணிக்கு துவங்கி பதினோறுமணிவரை சினிமா பார்ப்பது என என்னை நானே புதுப்பித்துக்கொள்வதற்கு இந்த மழை நாட்கள் உபயோகமாகயிருந்தன.

மழை வெறித்த நேற்று படித்து முடித்திருந்த புத்தகங்கள் மேஜையில் குவிந்து கிடப்பதை பார்த்தேன். வியப்பாகதானிருந்தது. வாசித்த புத்தகங்களில் சில திரும்பப் படித்தவை. சில வாங்கிப் படிக்காமலே வைத்திருந்தவை. குறிப்பாக இந்த வாசிப்பில் எனக்குப் பிடித்த புத்தகங்கள் நான்கு.

1) உம்பர்தோ ஈகோவின் கட்டுரைத்தொகுதியான How to travel with a salmon & other essays.

2) Natsume Soseki என்ற ஜப்பானிய எழுத்தாளரின் நாவல் I am a cat .

3) நோபல் பரிசு பெற்ற தென்னாப்பரிக்க நாவலாசிரியரான J.M. Coetzee யின் நாவல் The Master of Peterburg.

4) தேயிலை எப்படி உலகம் முழுவதும் பரவியது என்பதைப் பற்றி Jason Goodwin எழுதிய பயணக் கட்டுரையான The Gunpowder Gardens.

இதைத்தவிர விடியல் பதிப்பகம் வெளியிட்டுள்ள லியோனார்ட் பெல்டியரின் சூரியனைத் தொடரும் காற்று என்ற சிறைவாழ்க்கை அனுபவங்களை பற்றிய புத்தகம், கங்கைப்பருந்தின் சிறகுகள் என்ற வங்காள நாவல், சங்ககால வரலாற்று ஆய்வுகள், பண்டைத் தமிழர் போர்நெறி, ஆ. இரா. வெங்கடாசலபதியின் முச்சந்தி இலக்கியம், புரிசை கண்ணப்ப தம்பிரான் பற்றிய நினைவுத் தொகுப்பு. லு¡சுன் கதைகள். சிங்கிஸ் ஐத்மேத்தாவின் ஐமீலா, மற்றும் பெரிய எழுத்து அபிமன்னன் சுந்தரிமாலை.

கடந்த வாரத்தில் பார்த்த படங்கள்

1) ஸ்பீல்பெர்க்கின் TERMINAL

2) ஐப்பானிய இயக்குனரான NAGISHA OSHIMA வின் IN THE REALM OF PASSION.

3) பிரேசில் இயக்குனரான KARIM AINOUZ இயக்கிய MADAME SATA.

4) கொரிய இயக்குனரான IM KWON TAEK இயக்கிய கான்ஸ் திரைப்படவிழாவில் சிறந்த திரைப்பட விருது பெற்ற. PAINTED FIRE.

5) சீன இயக்குனரான TIAN MING WU இயக்கி பல உலகப் படவிழாக்களில் கலந்து கொண்ட .THE KING OF MASKS.-

6) மம்முட்டி நடித்த காழ்சா என்ற மலையாளப்படம்

7) ராகேஷ் சர்மாவின் குஜராத் கலவரம் பற்றிய டாகுமெண்டரியான THE FINAL SOLUTION

( புத்தகங்களைப் போலவே என்னிடம் நு¡ற்றுக்கும் மேற்பட்ட சிறந்த திரைப்படங்களின் சேமிப்பு ஒன்றுமுள்ளது. பெரும்பாலும் நண்பர்கள் எனக்காகச் சேகரித்து தந்த டிவிடிக்கள் )

மழை வெறித்த பிறகும் மனதில் நினைவுகளாக சொட்டிக் கொண்டேயிருக்கும் இரண்டு திரைப்படங்களையும் J.M. Coetzee யின் நாவலை பற்றியும் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

திரைப்படவிழாக்களில் ஈரானிய சினிமாக்களுக்கு இருந்த வரவேற்பும் நெகிழ்வும் தற்போது கொரிய திரைப்படங்களை நோக்கி திரும்பியிருக்கிறது. சமீபத்திய கொரியg; படங்களில் பத்திற்கும் மேலாக பார்த்திருக்கிறேன். மென்மையான காதல் கதைகளில் துவங்கி சாகசf; கதைகள் வரை தங்களுக்கென்று தனித்துவத்தை கொண்டுள்ளவையாக கொரியப்படங்கள் வளர்ந்துள்ளன. குறிப்பாக 2002ம் ஆண்டு கான்ஸ் திரைப்படவிழாவில் விருதுபெற்ற PAINTED FIRE. திரைப்படம். சமீபத்தில் நான் பார்த்த மிகச்சிறந்த படங்களில் ஒன்று.

பதினெட்டாம் நு¡ற்றாண்டைச் சேர்ந்த கொரிய ஒவியரான ஒவானின் நிஜ வாழ்வை விவரிக்கும் இத்திரைப்படம் ஒவியர்களின் உலகத்தையும் அதன் தேடுதலையும் துல்லியமாக சித்திரித்துள்ளது.. ஒவான் எனும் சித்திரக்காரனின் வாழ்க்கை தெருவில் பிச்சைக்காரர்களோடு வாழ்வதில் துவங்குகிறது. சாலையோரத்தில் உள்ள பிச்சைக்காரனை ஒவான் கரியால் வரைந்த சித்திரம், நகரின் முக்கிய ஒவியர் ஒருவரால் கவனிக்கபடுகிறது.அவர் ஒவானைத் தனது செலவிலே ஒவியம் கற்றுக்கொள்ள ஒரு மாஸ்டரிடம் அனுப்புகிறார். ஒவியத்தின் நுட்பங்களை கற்றுக்கொள்ள துவங்கும் போது ஒவியத்திற்கு பின்புலமாக உள்ள மெய்த்தேடல் பற்றியும், ஆழ்ந்த தத்துவ ஈடுபாடு பற்றியும் கற்றுக்கொள்கிறான்.

வாலிபவயது அவனை குடியிலும் பெண்களின் மீதான வேட்கையிலும் ஆழந்து போகச் செய்கிறது. கொரியாவின் முக்கிய ஒவியனாக வளரும் ஒவான் தனது சுபாவத்தின் காரணமாகவும் கலையின் மீதுள்ள தனது விடாத தேடுதலின் காரணமாகவும் மற்றவர்களால் கடுமையாக விமர்சிக்கபடுகிறார். ஒவியங்களுக்காக இயற்கையை ஆழ்ந்து கவனிக்க துவங்கிய ஒவான் ஒரு நேரத்தில் அதன் வியப்பில் தன்னைப் பறிகொடுத்துவிட்டு ஒவியனாக இல்லாமல் துறவியை போல தேடித்திரியத் துவங்குகிறான். அவனது புகழ் கொரியா முழுவதும் பரவுகிறது. அவனோ பானை செய்பவர்களுடன் சேர்ந்து கொண்டு மண்பானையில் சித்திரம் வரைந்து தந்தபடி யாரும் அறியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறான். முடிவில் பனிமலையின் தொலைவில் சென்று மறைந்துவிடுகிறான். இப்போதும் அவர் துறவியாக மலைமீது வாழ்வதாக ஒரு ஜதீகம் மட்டும் நிலவி வருகிறது.

தார்கோவெஸ்கியின் ஆந்த்ரே ரூபலாவ் திரைப்படத்தை பார்த்தபோது ஏற்பட்ட அனுபவத்திற்கு இணையானது இத்திரைப்படம். தார்கோவெஸ்கியும் ருஷ்ய ஒவியரான ஆந்த்ரே ரூபலாவின் வாழ்க்கையை, மனவேதனைகளையே படமாக்கியிருப்பார். அத்திரைப்படம் ஒளியால் எழுதப்பட்ட ஒவியங்களின் தொகுப்பு போலவேயிருக்கும்.

கொரியத் திரைப்படத்திலும் காட்சிகள் ஒவியங்களை போலவே படமாக்கபட்டுள்ளன. குறிப்பாக வேனிற்காட்சிகளும், மழைக்காலத்தின் பின்னால் நிலப்பரப்பில் தோன்றும் நிறமாற்றங்களும், ஆகாசத்தில் குருவிக்கூட்டங்கள் நெருநெருவென ஆயிரக்கணக்கில் பறப்பதும் கண்களை அகலவிடாமல் நம்மை பார்த்துக் கொண்டேயிருக்க வைக்கின்றன. இந்த திரைப்படத்தில் இன்னொரு சிறப்பம்சம் அதன் இசை. கொரியாவின் பராம்பரிய காற்றுவாத்தியங்களை பெரிதும் பயன்படுத்தியிருக்கிறார்கள். அந்த இசைக்கருவிகள் கூட நு¡ற்றாண்டு பழமையானவைகளே.

‘**
நீண்ட நாட்களுக்குப் பிறகு மலையாளத்தில் வெளிவந்துள்ள சிறந்தபடம் என்று காழ்சாவைக் கூறலாம். மம்முட்டி ஊர்ஊராகச் சென்று திரைப்படங்களை திரையிட்டு காட்டும் கதாபாத்திரமாக நடித்திருக்கிறார். கேரளாவில் மக்களுக்கான சினிமா இயக்கமாக ஜான் ஆபிரகாமால் துவங்கபட்ட ஒடேசா இயக்கத்தவர்கள் இது போல கிராமம் கிராமமாக சென்று பதேர்பாஞ்சாலியும் பேட்டில் ஷிப் பொடோம்கினும் என உலகின் சிறந்த படங்களை திரையிட்டு வருகிறார்கள்.

மம்முட்டியும் அது போல குட்டநாடு பகுதியின் கிராமம் ஒன்றிற்கு ருஷ்யத் திரைப்படம் ஒன்றை திரையிடுவதற்கு கொண்டு செல்கிறார். காயலில் பயணம் செய்யும் போது படகில் ஒரு சிறுவனை சந்திக்கிறார். அவன் குஜராத் பூகம்பத்தில் உயிர்தப்பி வந்தவன். அந்த சிறுவன் மம்முட்டியை பின்தொடர்ந்தே வருகிறான். ஒரு சந்தர்ப்பத்தில் அவனைத் தன்னோடு தன் வீட்டிற்கு கூட்டிப் போய் தன் குடும்பத்தில் ஒருவனை போல வளர்க்க துவங்குகிறார் மம்முட்டி. குடும்பமும் அவனை ஏற்றுக் கொள்கிறது.

அச்சிறுவனை தனது தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறான் உள்ளுர் அரசியல்வாதி ஒருவன். மம்முட்டி அதை மறுக்கவே சிறுவன் திரும்பவும் குஜராத்திற்கு அனுப்பபட வேண்டும் என்று காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்கபட்டு சிறுவன் குடும்பத்திலிருந்து பிரிக்கப்படுகிறான். முடிவில் சிறுவனை குஜராத்தில் உள்ள கட்ச் பகுதிக்கு மம்முட்டியே கொண்டு செல்கிறார்.

பூகம்பத்தில் இடிந்த வீடுகளும் தெருக்களும் மனதை உலுக்குகின்றன. சிறுவன் உடைந்து மண்ணோடு மண்ணாகியிருக்கும் தனது வீட்டைக் கண்டுபிடிக்கிறான். ஆனால் அவனது குடும்பமே பூகம்பத்தில் இறந்து போயிருக்கிறது. முடிவில் அகதிகள் முகாமில் சிறுவன் சேர்க்கபடுகிறான். அவனை தத்து எடுத்துக் கொள்வதாக மம்முட்டி மண்டியிட்டு கேட்டும் அரசு அதிகாரிகளால் மறுத்து துரத்தப்படுகிறார். கையறுநிலையில் வேதனையோடு சிறுவனை பிரிந்து வருவதோடு படம் முடிவடைகிறது.

சிறுகதையைப் போல மிககச்சிதமாகவும் நேர்த்தியாகவும் படமாக்கபட்டுள்ளது.எவ்விதமான ஆர்ப்பாட்டங்களும் பகட்டான நடிப்பும் வன்முறைகூச்சல்களும் கிடையாது. நடிகர்கள் தாங்கள் ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறோம் என்பது தெரியாமல் நிஜமனிதர்களாக நடமாடுகிறார்கள். சிறுவன் படம் முழுவதும் குஜராத்திமொழியிலே பேசுகிறான். பாஷை புரியாமலும் அவனது உணர்ச்சி நம்மை கலங்கசெய்கிறது.

*** இதுபோலவே J.M. Coetzee யின் நாவல் The Master of Peterburg. ருஷ்ய எழுத்தாளரான தஸ்தாயெவ்ஸ்கியின் வாழ்க்கையில் நடைபெற்ற சிறுசம்பவத்தை பற்றியது. அவரது வளர்ப்பு பையன் ரகசிய அரசியல் இயக்கத்தில் உறுப்பினராக இருப்பதை அறிந்து காவல்துறை அவனைக் கைது செய்து அழைத்துப் போய்விடுகிறது. அவனை மீட்பதற்கும் தன்னைப் போலவே அவனும் சிறைவாழ்விற்குப் பலியாகிவிடக்கூடாது என்ற ஏக்கத்தோடு அவனைப்பற்றிய விபரங்களை தேடியலையவதுமாக ஒரு அப்பாவிற்கும் மகனுக்குமான வெளிப்படுத்தபடாத அன்பை முன்வைக்கிறது. கோட்ஷியின் நாவல். (தமிழில் இந்நாவல் தற்போது சா. தேவதாஸால் மொழிபெயர்க்கபட்டு வருகிறது.).

உம்பர்த்தோ ஈகோவின் கட்டுரைத் தொடரைப் படித்து முடித்தபோது இத்தனை கேலியாகவும் எளிமையாகவும் எழுத முடிகிறதே என்று வியப்பாகயிருந்தது. அத்தோடு ஈகோ தமிழ் இலக்கிய சூழலில் பின்நவீனத்துவ அறிவுஜீவியாக மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டு இங்குள்ள பலரும் மிரண்டு போயிருந்தது நினைவிற்கு வந்தது. சமகால எழுத்தாளர்களில் ஈகோ மிக முக்கியமானவர். விருப்பமும் நேரமுமிருந்தால் அவரது Name of the Rose நாவலை வாசித்துப் பாருங்கள். சினிமா ரசிகராகயிருந்தால் சீன்கானரி நடித்து இந்நாவல் படமாக வெளியாகியுள்ளது. படத்தைப் பாருங்கள் பிறகு புரியும் உம்பர்தோ ஈகோ எப்படிபட்டவர் என்று.

** சற்றே நீண்ட, கலவையான கட்டுரையாகிவிட்டது. கடந்த ஒரு மாதமாகவே பயணம், புத்தகவேலை என்று இழுத்துக் கொண்டு போகிறது வாழ்க்கை. தொடர்ந்து எழுதுவதற்கு விருப்பமிருந்தும் சந்தர்ப்பங்கள் குறைவாகயிருக்கின்றன. அதை ஒழுங்கு செய்து கொண்டிருக்கிறேன். இனி முன்போல தொடரும் என்று நம்புகிறேன்.

**


நாள் : 10/20/2004 12:35:32 PM, எஸ் ராமகிருஷ்ணன்

காணிக்காரர்கள்

கன்யாகுமரி மாவட்டத்தின் கீரிப்பாறை மலையில் உள்ள வெள்ளாம்பி பகுதியில் வசிக்கும் காணிக்காரர்கள் மரங்களின் மீது வீடு கட்டிக்கொண்டு குடியிருந்து வரும் ஆதிவாசிகளாகும். இயற்கை குறித்து ஏரளமான கதைகளும் பாடல்களும் இந்த ஆதிகுடிகளிடம் நிரம்பியிருக்கின்றன. எரிக் மில்லர் என்ற அமெரிக்க பல்கலைகழகத்தின் ஆய்வாளர் இவர்களை பற்றி ஆய்வுசெய்து வருகிறார். அவரது ஏற்பாட்டின் பேரில் நான்கு நாட்கள் காணிக்காரர்கள் சென்னைக்கு வருகை தந்து இங்குள்ள பள்ளிமாணவர்களுக்கு தங்கள் கதைகளை, பாடல்களை விளையாட்டை அறிமுகப்படுத்தினர். அதன் ஒரு பகுதியாக பொதுமக்களின் பார்வைக்கு ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள்.

அண்ணாசாலையில் உள்ள புக்பாயிண்டில் ஞாயிற்றுகிழமை நடந்த இந்த நிகழ்ச்சிக்கு பத்துக்கும் குறைவான குழந்தைகளே வந்திருந்தார்கள். மொத்தப் பார்வையாளர்களும் சேர்ந்தால் இருபத்தைந்து பேர் இருக்க கூடும். காணிக்காரர்கள் மிகுந்த ஆச்சரியத்துடன் ஹைடெக் வசதிகளுடன் உள்ள ஹாலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள் வந்திருந்த காணிகளில் பலரும் சர்வசாதாரணமாக மில்லரின் லேப்டாப்பை இயக்கியதும், அவரது டிஜிட்டில் காமிராவை உபயோகித்து படமெடுத்தது. பார்வையாளர்களுக்கு மிக விநோதமாக இருந்தது. முருகன் என்ற காணிக்கார இளைஞர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

காணிகளின் கலைக்குழு என்று அழைத்துக் கொள்ளும் பத்து குடும்பங்கள் இந்த நிகழ்ச்சிக்காக வந்திருந்தார்கள். அவர்களது கதையும் பாடல்களும் மலையாளம் கலந்தே காணப்படுகின்றன. கதைகளில் பெரும்பாலும் காட்டுவிலங்குகள் பற்றியும் காட்டிலிருக்கும் அரிய மூலிகைகள் பற்றியும் அதிகம் பேசுகிறார்கள். தமிழகத்தின் மற்ற இடங்களில் குழந்தைகள் விளையாடும் சில விளையாட்டுகள் அதன் மாற்றுவடிவங்களில் இங்கே காணமுடிகிறது. குறிப்பாக குலைகுலையாம் முந்திரிக்காய் நரியே நரியே சுற்றிவா. (நரியே என்பது நிறைய என்று பொருள் என்று காணிவிளக்கி சொன்னார்) கொள்ளையடிச்சவன் எங்கயிருக்கான் கூட்டத்திலிருப்பான் கண்டுபிடி என்ற விளையாட்டு பாடல்வழியே காட்டிலிருந்து என்ன பொருட்கள் கொள்ளையடிக்கபடுகின்றன என்ற விபரத்தை காணிகள் பாடுகிறார்கள்.

அது போலவே நண்டு ஊறுது நரியுறுது என விரல்களை பிடித்துவிளையாடும் விளையாட்டில் விரல்கள் ஒவ்வொன்றையும் ஒரு மரமாக கொள்கிறார்கள். ஒரு குரங்கு மரத்தில் தாவி குதிக்கிறது என்று சொல்லி ஒவ்வொரு விரலாக தாவுகிறார்கள். பிறகு மழைவந்துவிட்டது குகைக்குள் ஒடி ஒளிந்து கொள்ளவேண்டும் என்று சொல்லியபடியே தோள்பட்டை அடியில் கக்கத்தினுள் விரலை நுழைந்து கிச்சுகிச்சு காட்டுகிறார்கள். கக்கம் தான் குகை என்று சொல்வது சுவாரஸ்யமான கற்பனையாகயிருக்கிறது.

அது போலவே நான்கு சிறுமிகள் வட்டமாக உட்கார்ந்து கொண்டு தலைவாறுவதற்கு ( ஈருளி) பேன் சீப்பு வேண்டும் என்று கேட்கிறார்கள். அந்த விளையாட்டில் சீப்பை ஒளித்து வைத்துவிட்டு சிறுமிகள் தங்கள் கால்களை ஒன்றுசேர்த்தபடியே சுழன்றுவருவது வேடிக்கையாகயிருந்தது.ஞங்கிலி பிங்கிலி என்ற நகைச்சுவை பாடல் அர்த்தம் ஏதுவுமற்ற வார்த்தைகளால் நிரம்பியிருந்தது.

சென்னை நகர குழந்தைகள் மிகுந்த நாகரீகத்துடன் வாய்விட்டு சிரிப்பதற்கு கூட கூச்சத்துடன் அந்த காட்சிகளை பார்த்துக் கொண்டிருந்தார்கள். காணிகளிடம் உள்ள கற்பனைதிறனை காணும் போது வியப்பாகயிருக்கிறது. அவர்கள் இயற்கையை காட்சிபடிமமாக மாற்றிக் கொள்கிறார்கள். அவர்களது பாடல்கள் அதற்கு சாட்சியாகயிருக்கின்றன. பகல் என்பது ஒரு மீன் இரவு என்பது ஒரு வீரன். பகல் போய்க்கொண்டேயிருக்கிறது. இரவு நம்மை சுற்றிலும் காவல்காக்கிறது என்று அவர்களின் பாடல் ஒன்று துவங்குகிறது. நவீனகவிதையின் விதைகள் இங்குதானிருக்கின்றன.

காணிகள் ஒடுக்கமான முகத்துடனும் குள்ளமான உடல்வாகையும் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் அதிகம் படித்தவர் தற்போது பள்ளியிறுதியாண்டை முடித்த இருவர் மட்டுமே. காட்டுவேலைகள் செய்து வாழ்ந்து வரும் அவர்கள் மரங்களில் பரண்வீடு அமைத்து தங்கிக் கொள்கிறார்கள். தற்போது அவர்களுக்கு என தனியான பள்ளியொன்று கட்டப்பட்டிருக்கிறதாம்.

பரபரப்பும் ஆர்ப்பட்டமும் மிக்க சென்னைநகரை காணிகளில் பலரும் முதல்முறையாக கண்டிருக்கிறார்கள். நகரில் கேட்கும் கூச்சலும் இடைவிடாத பேச்சும் தான் அவர்களால் புரிந்து கொள்ள முடியவேயில்லை. எதற்காக இப்படி கத்துகிறார்கள் என்று கேட்கிறார்கள். சென்னையில் அவர்கள் மிக ஆசையாக காலணிகளை வாங்கியதை காட்டினார்கள். கிரிக்கெட் போட்டியின் பரபரப்பிலும் புதுப்படத்திற்கு டிக்கெட் வாங்க அலை மோதும் கூட்டத்திற்கும் இடையில் காணிகளின் குரல் வெளித்தெரியாமலே போய்விட்டது.

காணிக்காரர்கள் ஒவ்வொரும் தங்கள் பையில் சிறிய கூழாங்கல் ஒன்றை வைத்திருக்கிறார்கள்.ஊர் ஞாபகம் வந்தால் அதை கையில் வைத்து உருட்டிக் கொள்வோம் என்று சிரித்தபடி சொன்னாள் ஒரு காணிக்காரப்பெண்.

மரங்களில் வீடு கட்டிவாழ்வோம் என்று மலைவாசி சொன்னதை கேட்ட சென்னை சிறுமியொருத்தி நீங்கள் எல்லாம் பறவைகளா என்று கேட்டது தான் மாநகரின் நிஜம். காணிகளை பார்க்கும் போது இயல்பாகவே சில சந்தேகம் நம்மைபற்றி வருகிறது. சென்னையில் சூரியனை ஒரு நாளைக்கு ஒருமுறையாவது ஏறிட்டு பார்ப்பவர்கள் எவ்வளவு சதவீதமிருப்பார்கள்? காகம் குருவி தவிர வேறு பறவைகளை குழந்தைகள் கண்டிருக்கிறார்களா? கதைகளையும் பாடல்களையும் நாம் மனதிலிருந்து மெல்ல அப்புறப்படுத்திவிட்டு அந்த இடத்தை தொலைக்காட்சிக்கு தந்துவிட்டோம். குழந்தைகள் தொலைக்காட்சியில் தான் கதைகேட்டுவளர்கிறார்கள். இன்றைக்கும் ஒரு ஆய்வுப்பொருளாக மட்டும் ஆதிவாசிகள் மிஞ்சியிருப்பது தான் நமது துரதிருஷ்டம். யோசித்துப் பார்க்கும் போது புரிகிறது காணிகளிடம் நாம் கற்றுக்கொள்வதற்கு நிறைய இருக்கிறது என்று..


நாள் : 10/8/2004 2:57:25 PM

உலகமயம்

சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக வருமானவரித்துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அகில இந்திய எழுத்தாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டிருந்தேன். தேசிய அளவிலான கருத்தரங்கம் இது. உலகமயமாக்கலும் அதன் சமூக, கலாச்சார விளைவுகளும் பற்றியது இக்கருத்தரங்கம். குறிப்பாக ஒவ்வொரு மொழியிலும் உலகமயமாக்கல் அங்குள்ள இலக்கியங்களில் எப்படி பிரதிபலிக்கபட்டிருக்கின்றது என்பதைக் குறித்து விவாதிப்பதற்காக சென்னையில் நடைபெற்றது.

அஸ்ஸாமி, பஞ்சாபி, ஒரியா, மராத்தி, குஜராத்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, தமிழ் , ஹிந்தி மொழிகளை சேர்ந்த 35 படைப்பாளர்கள் கலந்து கொண்டார்கள். எட்டு அமர்வுகளாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நேற்று மதியம் சிறுகதை அமர்வின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டேன். இன்று காலை நடைபெற்ற சமகால இலக்கியம் பற்றிய அமர்வில் உரையாற்றினேன். கருத்தரங்கில்
* பிரபஞ்சன்,
* ஜெயகாந்தன்,
* சா.கந்தசாமி
* அசோகமித்ரன்
ஆகியோர் கலந்து கொண்டனர்.

உலகமயமாக்கல் பற்றி தமிழில் அதிகம் நு¡ல்கள் வெளியாகவில்லை. குறிப்பாக படைப்பிலக்கியத்தில் அது குறித்த தீவிரமான பார்வைகள் உருவாகவில்லை. நான் உலகமயமாக்கல் கலாச்சாரத்தில் ஏற்படுத்திவரும் மாற்றங்கள் குறித்து எனது பார்வைகளை பகிர்ந்து கொண்டேன். குறிப்பாக தமிழ் மொழி கல்வபிப்புலங்கள் மற்றும் தொடர்பு சாதனத்திலிருந்து மெல்ல விலக்கபட்டு வருவதையும் தமிழின் மரபான இலக்கியங்கள் மற்றும் அறிவுசார் துறைகள் புறக்கணிக்கபடுவதையும் பற்றி எடுத்துரைத்தேன்.

பிரபஞ்சன் ந.பிச்சமூர்த்தி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே தனது கவிதையில் உலகமயமாக்கல் பற்றி மிக விளக்கமாகச் சொன்னார். பூவுலகின் நண்பர்கள் என்ற அமைப்பு தொடர்ந்து தமிழில் உலகமயமாக்கலின் விளைவுகள் பற்றிய நு¡ல்களை வெளியிட்டுவருகிறார்கள். அது போலவே பிரளயன் வீதி நாடகங்கள் நடத்தி வருகிறார். உலகமயமாக்கலின் போது உலகம் ஒரே கிராமமாகிவிடும் என்கிறார்கள். அது நிஜம். ஆனால் கிராமங்கள் உயிரோடு இருக்குமா என்பது சந்தேகத்திற்குரியது தான்.

தெலுங்கிலும் ஹிந்தியிலும் தீவிரமாக இப்பிரச்சனைகள் விவாதிக்கபட்டிருக்கின்றன. அதன் பிரதிநிதிகளாக வந்த எழுத்தாளர்கள் வாசித்த கட்டுரைகளில் அதை உணர்ந்து கொள்ள முடிந்தது.

ஊரான் ஊரான் தோட்டத்திலே

ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்காய்

காசுக்கு ரெண்டு விக்க சொல்லி

காயிதம் போட்டான் வெள்ளைக்காரன்

இந்த நாட்டுப்புறப்பாடல் உலகமயமாக்கல் என்பது காலனியாக்குவதிலிருந்து துவங்குகிறது என்பதையே காட்டுகிறது. ஹிந்தியிலும் ஆங்கிலத்திலுமாக நடைபெற்ற இக்கருத்தரங்கம் புதிய விவாதங்களை உருவாக்கியதோடு பரஸ்பரம் எழுத்தாளர்களுக்குள் ஒரு பகிர்ந்து கொள்ளலை உருவாக்கியது. ஹிந்தியில் சமகால தமிழ்சிறுகதை தொகுப்பு ஒன்றை தொகுக்கும் திட்டம் ஒன்றும் இங்கு முடிவு செய்யபட்டுள்ளது.


கட்டபொம்மன் காடு

சுதந்திரப்போராட்டம் பற்றிய நினைவுகள் வெறும் காகிதக்குறிப்புகளாக மட்டும் எஞ்சியிருக்கும் சமகாலத்தில் ஒரு கிராமம் சரித்திரத்தின் நிழலிலே வாழ்ந்து கொண்டிருக்கிறது. பாஞ்சாலங்குறிச்சி பிடிபட்ட பிறகு அங்கிருந்து தப்பிய கட்டபொம்மன் தலைமறைவாக வாழ்வதற்கு புதுக்கோட்டைப் பகுதிக்கு வந்து சேர்ந்தான். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதிக்கு பக்கத்தில் உள்ள குமாரபட்டி என்ற ஊரின் புறவெளியில் உள்ள அடர்ந்த காட்டில் கட்டபொம்மன் ஒளிந்திருந்தாகவும், அவனை தந்திரமாக காவலர்கள் பிடித்ததாகவும் சரித்திரக்குறிப்புகள் கூறுகின்றன. நு¡ற்றாண்டுகளைக் கடந்து இன்றும் அந்தக் கிராமத்தில் கட்டபொம்மன் ஒளிந்திருந்த காடு அப்படியே பாதுகாக்கபட்டு வருகின்றது. அதை உமைங்குறை என்று மக்கள் அழைக்கிறார்கள்.

அந்த கிராமத்து மக்கள் தங்கள் ஊரில் வந்து ஒளிந்திருந்த கட்டபொம்மனைப் புதுக்கோட்டை அரசரின் ஆணையின்படி பிடித்துக் கொடுத்துவிட்டார்களே என்ற குற்றவுணர்ச்சியில் கட்டபொம்மன் ஒளிந்த காட்டை எந்த சிதைவுமின்றி தெய்வம் போல வழிபடுகிறார்கள். அக்காட்டிலிருந்து சிறு சுள்ளிஒடிப்பது கூட கிடையாது. மரங்கள் தானாக விழுந்து மக்கிக் கிடக்கின்றன. கட்டபொம்மனோடு சேர்ந்து ஒளிந்திருப்பதாகச் சொல்லப்படும் ஊமைத்துரையை அவர்கள் தெய்வமாக வழிபடுகிறார்கள்.

கட்டபொம்மன் ஒளிந்திருந்த காலத்தில் விருந்திற்கு அழைத்து அவன் இலையில் சாப்பாட்டை கையில் எடுத்த போது முதுகின் பின்னிருந்து மடக்கிப் பிடித்துவிட்டார்கள் என்று கர்ணபரம்பரைக் கதையொன்றும் அக்கிராமத்திலிருக்கிறது. காட்டில் து¡ர்ந்து போயிருக்கக் கூடிய சிறிய கண்மாய் ஒன்றும் காணப்படுகிறது. பெரிய வட்டப்பாறையும் அதன் அருகில் வேங்கை மரங்களுமிருக்கின்றன. மயில்கள் நிறைய தென்படுகின்றன, ஆள்உயர கள்ளி மரங்களும் காட்டுப்புளியமரங்களும் கொண்ட அந்தக் காடு இப்போதும் வெயில் நுழைய முடியாதபடி தானிருக்கிறது.

அந்த காட்டுபகுதி அக்காலத்தில் சிவகங்கை ஜமீனுக்கும் புதுக்கோட்டை சமஸ்தானத்திற்கும் எல்லையில் அமைந்திருக்கிறது. யாராவது பிடிக்கவந்தால் ஒரு பக்கமிருந்து இன்னொரு பகுதிக்கு போய்விடலாம் . அதனால் தான் அங்கே கட்டபொம்மன் ஒளிந்திருந்தாக சொல்கிறார்கள்.

காலம் எத்தனையோ விஷயங்களைக் கடந்து சென்றுவிட்டிருக்கிறது. ஆனாலும் கிராமத்து மனிதர்களின் நினைவில் இன்னமும் கட்டபொம்மனும் ஊமைத்துரையும் வாழ்கிறார்கள் என்பதற்குச் அத்தாட்சியாகயிருக்கிறது இக்கிராமம்.

பாலாஜி: 10/10/2004 , 9:13:26 AM
மருதுபாண்டியர்கள் இதே போல் அடர்ந்த காட்டில் மரத்தினால் ஆன குகைக்குள் ஒளிந்திருந்தார்களாம். அந்த மரமும், குகையும் காட்டினுள் சென்று புகைபிடித்த பாக்கியினால், தீ அபகரித்துவிட்டதாக குமரி அனந்தன் பேச கேட்டிருக்கிறேன்.


  1. No comments yet.
  1. June 26, 2012 at 6:30 pm

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: