Archive

Archive for July 16, 2012

What does ‘walk the talk’ mean during Indian Freedom Movement with Movie stars?

July 16, 2012 Leave a comment

“நாடகமும் சினிமாவும்’ நூலில் ஏ.எல்.எஸ்.வீரய்யா.

ஈரோட்டில் ஆகஸ்டு மாதத்தில் ஒரு நாடகம் நடந்து கொண்டிருந்தது.

“தேசியப் பாடல்களைத் தவிர சுதந்திரம் பெறும்வரை வேறு எந்தப் பாடலையும் பாடமாட்டேன்’ எனச் சபதம் பூண்டு, செயலிலும் அதைக்காட்டி வந்த நடிகை எம்.ஆர்.கமலவேணி. சபதப்படி, விடுதலைப் போராட்டப் பாடல்களைப் பாடத் தொடங்கினார். தயாராக நின்ற போலீஸôர், “”பாடாதே, பாடினால் கைது செய்வோம்” என்று கத்தினார்கள்.

“”பாடுவேன், கைது செய்” என்று மேடையிலிருந்து கர்ஜித்த கமலவேணி, கம்பீரமான தொனியில் “”போலீஸ் புலிக் கூட்டம், நம்மீது போட்டு வருது கண்ணோட்டம்” என்று பாடினார்.

கைது செய்தார்கள். கைக்குழந்தையோடு ஆறு மாதம் சிறையிலிருந்தார்.

மதுரையில் நடிகை கே.பி.ஜானகி ஆகஸ்ட் போராட்டத்தில் கைதானார்.

“”கலெக்டர் கடவுள் அல்ல. கான்ஸ்டபிள் எமனுமல்ல, எதற்கும் அஞ்சோம்” என்று பாடியவாறு எம். எஸ். சிதம்பரநாதன் போராட்டத்தில் புகுந்தார்.

Lyricist Pattukkottai Kaliyanasundharam sings ‘Aram’ to his Movie Producer

July 16, 2012 Leave a comment

-“நாடகமும் சினிமாவும்’ நூலில், ஏ.எல்.எஸ்.வீரய்யா.

நாட்டுப்புறப் பாடல்கள் பாடுவதில் வல்லவரான அருணாசலம் பிள்ளையின் மகன் கல்யாணசுந்தரம், சின்ன வயதிலேயே கம்யூனிஸ்ட் இயக்கப் பணியில் ஈடுபட்டு புதிய வெளிச்சம் பெற்ற கவிஞராக உயர்ந்தார்.

நாடகக் கம்பெனியில் கல்யாணசுந்தரத்தின் நண்பன் நம்பிமாறன். இவரின் சிபாரிசில் “படித்த பெண்’ என்ற படத்திற்கு முதன் முதலாக பாடல் ஒன்றை எழுதிக் கொடுத்தார். பாடல் பதிவாகியது. படப்பிடிப்பும் முடிந்தது. ஆனால் படம் வெளிவரத் தாமதம் ஏற்பட்டது. பேசிய பணம் ரூ.150. “அந்தப் பணத்தையாவது கொடுங்கள்’ என்று கேட்டுப் பார்த்தார்.

ஒரு நாள், அந்தக் கம்பெனி முதலாளியைத் தேடி அவரது வீட்டுக்குப் போனார். வீட்டுக்குள் விட உதவியாளர் மறுத்தார். மூன்றே வரிகளில் ஒரு கவிதை எழுதி, “”உன் முதலாளியிடம் கொடு” என்று சொல்லிவிட்டு, வந்து விட்டார் கல்யாணசுந்தரம்.

“”தாயால் வளர்ந்தேன்; தமிழால் அறிவு பெற்றேன்.
நாயே, நேற்றுன்னை நடுத்தெருவில் சந்தித்தேன்;
நீ யார் என்னை நில் என்று சொல்வதற்கு?”

என்பதுதான் அந்தக் கவிதை! படித்துப் பார்த்தார். படத்தயாரிப்பாளர் கல்யாணராமய்யர். அவர் பழமையில் பக்தி கொண்ட பக்தர். “கவிஞன் அறம் பாடி விட்டானே’ என்று அரண்டு போய் ரூபாயை கொடுத்தனுப்பிவிட்டார்!

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல்கள் இடம் பெற்று வெளிவந்த முதல் திரைப்படம் “மகேஸ்வரி.’ அந்தப் படத்தில் ஐந்து பாடல்கள் எழுதியிருந்தார்.

Silambu Selvar Ma Po Si on VO Chidambaram Pillai – Guru & Sishyan

July 16, 2012 Leave a comment

“வ.உ.சி. பற்றி ம.பொ.சி.’ நூல், தொகுப்பு: திருமதி ம.பொ.சி. மாதவி பாஸ்கரன்.

வ.உ.சி. தமிழ்ப்புலவர். பரம்பரைப் புலவர் அவர் தந்தை, பாட்டனெல்லாம் புலவர்கள். தன் சுயசரிதத்தைக் கவிதைத் தமிழில் எழுதியவர். திருக்குறள் முப்பால் முழுவதற்கும் உரையெழுதிக் கொடுத்தவர். சிதம்பரம் பிள்ளை தமது வீட்டிலேயே திருக்குறள் வகுப்பு நடத்தினார்.

ராஜாஜி தாம் வ.உ.சி.யிடம் திருக்குறள் பாடம் கேட்டதாக ஒருமுறை பொதுக்கூட்டத்தில் சொல்லியிருக்கிறார். வ.உ.சி. மிகவும் கடுமையான ஆசிரியராக இருந்தார். முதல்நாள் சொல்லிக் கொடுத்ததை மனனம் செய்து மறுநாள் ஒப்புவித்தாலொழிய மேலே பாடம் சொல்ல மாட்டார்.

அவரிடம் ராஜாஜி திருக்குறள் பாடம் கேட்டார். முதல்நாள் சொல்லித் தந்ததை மறுநாள் ஒப்புவிக்கச் சொன்னார் வ.உ.சி. “”இன்னும் மனனம் செய்யவில்லை. நாளை சொல்லுகிறேன். மேலே பாடம் சொல்லுங்கள்!”என்றாராம் ராஜாஜி.

அதற்கு வ.உ.சி. நேற்று சொல்லித் தந்ததை ஒப்புவிக்காவிட்டால் மேலே பாடம் சொல்ல முடியாது என்றாராம். உடனே ராஜாஜி,””எனக்குச் சொல்லிக்கொடுக்கும் பொறுமை உங்களுக்கும் இல்லை. உங்களிடம் பாடம் கேட்கும் பொறுமை எனக்கும் இல்லை. பாடத்தை இத்தோடு முடித்துக்கொள்ளலாம் என்றாராம்!”

Lal Bahadur Sastri: Why Kalainjar Karunanidhi did not become a Gandhian?

July 16, 2012 Leave a comment

“ஆயிரம் நீதிக்கதைகள்’ என்ற நூலில் நாடோடி

1936-ம் ஆண்டு அலகாபாத் நகரசபை, நகருக்குப் பக்கத்தில் நிறைய நிலம் வாங்கி அதை வீடு கட்டும் மனைகளாக விற்கத் தீர்மானித்து. அதைக் கவனித்துக் கொள்ளும் கோஷ்டியின் அங்கத்தினர்களில் ஒருவராக லால்பகதூர் சாஸ்திரி இருந்தார்.

ஒரு சமயம் லால்பகதூர் சாஸ்திரி வெளியூர் சென்றிருந்தபோது அவரது நண்பர் ஒருவர் நகரசபைத் தலைவரின் அனுமதி பெற்று தம் பெயரில் ஒரு மனையும் லால்பகதூர் சாஸ்திரி பெயரில் ஒரு மனையும் வாங்கி அதற்கான பணத்தையும் கட்டினார்.

ஊரிலிருந்து திரும்பி வந்த லால்பகதூர் இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு மிக்க வருத்தம் அடைந்தார். தன் நண்பரை அழைத்து “”நகர அபிவிருத்தி கோஷ்டியின் அங்கத்தினராக இருந்து கொண்டு நாமே வீட்டுமனைகளை வாங்குவது மிகவும் தவறு. ஆகவே அந்த இரண்டு மனைகளையும் திருப்பிக் கொடுத்துவிடுங்கள்” என்று கண்டிப்பாய்ச் சொன்னார்.

தமக்கென்று சாஸ்திரிக்கு வீட்டு மனை இல்லாதபோது அவர் வாங்கியதில் தவறே இல்லை என்று இதர நகர அபிவிருத்தி கமிட்டி அங்கத்தினர்கள் எவ்வளவோ சொல்லியும் லால்பகதூர் அதைக் காதில் போட்டுக்கொள்ளவேயில்லை!

“”பிறருக்கு மனைகள் விற்கும் நாமே நமக்கென்று மனைகளை ஒதுக்கி வைத்துக்கொள்வது தர்மமாகாது. அதோடு சொத்து சேர்க்கமாட்டேன் என்று மகாத்மா காந்திக்கு நான் வாக்குக் கொடுத்திருக்கிறேன். ஆகவே எனக்கென்று எந்த நாளும் சொத்து சேர்த்துக்கொள்ள மாட்டேன்!” என்று உறுதிபடக் கூறினார் லால் பகதூர் சாஸ்திரி!

உண்மை.

பின்பு அவர் பாரதத்தின் பிரதமராகச் செயயல்பட்டபோதும் எந்த ஒரு சொத்தும் சேர்க்காமல் ஒரு ஏழையாகவேதான் மறைந்தார்.

How Tipu Sultan supported the French and where did Chidambaram Nataraja go to safe haven?

July 16, 2012 Leave a comment

“வரலாற்றில் தேவதாசிகள்’ என்ற புத்தகத்தில் சி.எஸ்.முருகேசன்.

தமிழகம் ஆங்கிலேயர்களாலும் பிரஞ்சுக்காரர்களாலும் பங்கு போடப்பட்டுக் கொண்டிருந்த நேரம். ஒவ்வொரு சுதேசி மன்னர்களும் இவ்விருவர் அணியிலும் பிரிந்து நின்ற அவலம்.

திப்பு சுல்தான் பிரஞ்சுக்காரர்களுக்காக சிதம்பரம் நகரை முற்றுகையிட்டான். அந்நியர் படையெடுப்பு எப்பொழுதுமே ஆலயங்களைக் குறிவைத்தே நடத்தப்படுவதால் சிதம்பரம் நடராஜர் ஆலயத்திலிருந்த ஆடல் வல்லானின் ஐம்பொன் சிலை பாதுகாப்பு பெரிய விஷயமாகப்பட்டது.

கோயிலில் பணிபுரிந்த “வைப்பி’ என்னும் தேவதாசி தான் அப்பொறுப்பை ஏற்றுக்கொள்வதாய் ஆறுதல் கூறி கோயிலாரின் அனுமதி பெற்று, நடராஜர் விக்கிரகத்தை தன் இருப்பிடத்திற்கு எடுத்துச் சென்றாள். தன் குடியிருப்பை ஒட்டிய புளியந்தோப்பிலுள்ள ஒரு புளியமரப்பொந்தில் நடராஜரை மறைத்து வைத்து பொந்தை முட்செடிகளால் மூடி வைத்தாள். பின்னர் அதன் வாயிலில் பசிய தழைகளைச் சார்த்தி, இலை மீது மஞ்சள் விழுது பூசி மறைத்தாள்.

தினசரி இம்மரத்தை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டாள். அவள் வழிபாட்டை எவரும் சந்தேகிக்கவில்லை. சில மாதங்களில் வைப்பி இறந்து போனாள்.

படையெடுப்பு முடிந்து திப்பு சுல்தான் சிதம்பரத்தை விட்டுத் திரும்பிச் சென்றதும் கோயில் நிர்வாகிகள் வைப்பியைத் தேடினர். அவள் இறந்துபோனதை அறிந்து திகைத்தனர். ஆனால் அவள் தினம் ஒரு புளியமரத்திற்குப் பூசை செய்த விவரத்தை அங்கிருந்தோர் கூற கோயிலார் அந்த மரத்தை ஆராய்ந்தனர்.

நடராஜர் சிலை இருக்குமிடம் தெரிந்தது. வைப்பியின் தியாகத்தையும் கடமையுணர்ச்சியையும் புகழ்ந்து கோயிலார் நடராஜரை மீண்டும் கோயிலுக்குக் கொண்டு வந்து பூஜை செய்தனர்.

அன்றிலிருந்து வைப்பி வாழ்ந்த இடம் “வைப்பி சாவடி’ என்றும் அந்தப் புளியமரம் “அம்பலப்புளி’ என்றும் அழைக்கப்பட்டன. இந்தத் தகவலை டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் குறிப்பிடுகின்றார்.

La Sa Ra on Manjari Thi Ja Ra

July 16, 2012 Leave a comment

“நான்’ என்ற புத்தகத்தில் லா.ச.ராமாமிர்தம்

ஒரு சமயம் “சவரம் செய்துகொள்வது எப்படி?’ என்ற தலைப்பில் ஓர் ஆங்கிலக் கட்டுரையை மொழி பெயர்த்துத் தரும்படி பணித்தார்; செய்து தந்தேன். ஆனால் கட்டுரை வெளி வந்ததும் என்னுடையதாய் அது இல்லை. இல்லாமலும் இல்லை. இத்தனைக்கும் அங்கே ஒரு வார்த்தை கூட்டி, இங்கே ஒன்று எடுத்து, பாராக்களை மாற்றி அடுக்கிட அவ்வளவுதான் கட்டுரை கம்மென்று மணம் வீசிற்று.

என் தலைப்புக்குச் சிரித்து முதுகைத் தட்டிக் கொடுத்தார். “”உன்னுடைய பாஷைதாண்டா கொஞ்சம் பஞமஇஏ-மட, மஞ்சரிக்கு ஏற்றபடி”

அவர் சிரிக்கையில் பத்து வயது முகத்தினின்று உதிரும்; அந்தச் சிரிப்பில் எப்பவுமே ஒரு கள்ளத்தனம் இருக்கும். முத்துப் பல் வரிசை. தன் தோற்றத்தில் சற்றுக் கவனம் செலுத்தியிருந்தார் எனில் அவர் பார்வையானவர் என்றே சொல்வேன். குட்டையாய் வெட்டிய முடி. ஒழுங்காய் வாரிவிட்டு உடனேயே மெனக்கெட்டுக் கையை உள்ளே விட்டுக் கலைத்துக் கொண்டாற்போல் சிலிர்த்த மயிர். சிறு கூடு. கதராடை. எளிமையான தோற்றம்.

தி.ஜ.ர. என் குரு. நானாக வரித்துக் கொண்டேன். அந்த நாளில் என்னை தி.ஜ.ர.வின் சிஷ்யன் என்றே குறிப்பிடுவார்கள்.

Pongalo Pongal: Tamil Sangam Lit and Japanese Poems in Nihonshoki, Kojiki & Manyoshu

July 16, 2012 2 comments

“பண்பாட்டுப் பயணங்கள்’ நூலில் ஆசியவியல் நிறுவன இயக்குநர் ஜி.ஜான் சாமுவேல்

தென்னிந்தியப் பண்பாடு பற்றிய ஆய்வு ஜப்பானில் தற்போது மிகப் பெரிய அளவிற்குக் கால் கொள்ளத் துவங்கியுள்ளது. 1973-ஆம் ஆண்டு ஜப்பானிய அறிஞர்களான சுசுமு சிதா, அதிரா பியுஜிவாரா, மினருகோ என்ற மூவரும் இணைந்து ஜப்பானிய மொழி திராவிட மொழிகளோடு நெருங்கிய தொடர்பு கொண்டது என்ற தங்களது ஆராய்ச்சி முடிவினை உலகிற்கு அறிவித்தனர்.

தமிழ் நாட்டிற்கும் ஜப்பானுக்கும் இடையே மொழி, பண்பாடு, இலக்கியம் ஆகிய நிலைகளில் காணப்படுவதை ஒப்புமைக் கூறுகளை ஆராயும் சீரிய ஆய்வுப் பணிகள் துவங்கியுள்ளன.

மிகப் பழைய ஜப்பானியக் கவிதைத் தொகுதிகளான மன்போசு, கொளிக்கி ஆகியன சங்கத்தொகை நூல்களில் உள்ள அகப்பாடல்களோடும் புறப்பாடல்களோடும் மிக நெருங்கிய இலக்கிய உறவுகளைப் பெற்றுள்ளன.

ஜப்பானிய அறுவடைத் திருவிழாவிற்கும் தமிழகப் பொங்கல் திருநாளுக்குமிடையே மிகுந்த உறவுகள் உள்ளன. “ரோவிசுட்சு’ என்ற ஜப்பானிய அறுவடைத் திருநாளுக்கும் பொங்கலுக்கும் ஏறத்தாழ 17 ஒப்புமைகளை டாக்டர் சுசுமோ ஓனோ சுட்டிக் காட்டினார்.

இவ்விரு விழாக்களும் 3 நாட்கள் தொடர்ந்து நடக்கின்றன. ஜனவரி 14-ஆம் தேதி துவங்கி 3 நாட்கள் நடந்து நிறைவு பெறுகின்றன. ஜப்பானியர்கள் அறுவடைத் திருநாளில் “ஹோங்காரா’ என்று ஒலி எழுப்புவது தமிழர் “பொங்கலோ பொங்கல்’ என்று ஒலி எழுப்புவதை நினைவுபடுத்துகிறது! தமிழில் உள்ள “ப’ ஒலி ஜப்பானில் “ஹ’ ஒலியாக மாறுவதையும், தமிழின் லகர ஒலி ஜப்பானில் ரகர ஒலியாக மாறுவதையும் விளக்கி, பொங்கல் என்பது ஹோங்காரா என்று ஜப்பானிய மொழியில் மாறியதாக டாக்டர் சுசுமோ ஓனோ விளக்கிச் சொல்கிறார்!

Science and Spirituality: A Vedanta Perception by V. Krishnamurthy

July 16, 2012 Leave a comment

“கண்ணன் சொற்படி வாழ்வதெப்படி?’ நூலிலிருந்து பேராசிரியர் (பிலானி) கிருஷ்ணமூர்த்தி.

“கடவுளை அறிவதெப்படி?’ என்றொரு ஆங்கிலப் புத்தகம் (வெளியீடு 1953). அது பதஞ்சலியோக சூத்திரத்தை விளக்கும் நூல். நூலாசிரியர்கள் இருவர். சுவாமி பிரபவானந்தா, மற்றும் கிறிஸ்டபர் இஷர்வுட்.

மனதானது ஒரு பொருளில் இடைவிடாமல் 12 செகண்டுகளுக்கு இருந்து கொண்டிருந்தால் அது ஒருமுகப்படுத்துதல் ஆகும்.

இவ்விதம் ஒருமுகப்பட்ட மனது அதே பொருளில் அதைப்போல 12 மடங்கு கால அளவு நீடித்தால் அது தியானம் ஆகும்.

அந்த தியானத்தில் அதைப்போல 12 மடங்கு கால அளவு நீடித்தால், அதாவது 12x12x12 செகண்டுகள் (28 நிமிஷம் 48 செகண்டுகள்) அது சாதாரண சமாதியாகும்.

இந்த சாதாரண சமாதி அதைப்போல் 12 மடங்கு கால அளவு (அதாவது 5 மணி 45 நிமிடம், 36 செகண்ட்) நீடித்தால் அது நிர்விகல்ப சமாதியில் கொண்டுவிடும்.

வெறும் கால அளவைகளினால் மட்டும் தியானம், சமாதி, நிர்விகல்ப சமாதி முதலியவை கிட்டிவிடும் என்று நாம் நினைத்துவிடக்கூடாது.

ஒரு பொருள், ஒரு முகம், ஒரு முனை என்பதுதான் முக்கியம். தீரபொருளில் ஒருமுகப்பட்ட மனது சிறிதேனும் சிதறாமல் அவ்வொறே முனையில் லயித்திருப்பதுதான் தியானத்தின் உச்சி நிலையாகிய சமாதி நிலைக்குக் கொண்டு போய் விடும். தொடக்கத்திலிருந்து எவ்வளவு நிமிஷங்கள் ஆயின என்று கடிகாரம் பார்க்கத் துடிக்கும் மனது அக்கணமே தியானத்தைத் தவறவிட்டு விட்டதாகவே கொள்ள வேண்டும்.

Journalist Ra Ki Rangarajan on writer Ku Alagirisamy: Tanjore vs Tirunelveli

July 16, 2012 Leave a comment

‘அவன்’ (சுயசரிதை) புத்தகத்தில் ரா.கி.ரங்கராஜன் எழுதியது

அழகிரிசாமி புகையிலைப் பிரியர். இவனும் தான்.

அவருக்குச் சங்கீதம் பிடிக்கும். இவனுக்கும்தான்.

அவர் நகைச்சுவை உணர்வு மிக்கவர். இவனுக்கும் ஓரளவு உண்டு.

ஏதோ ஒரு விபத்தில் அழகிரிசாமிக்கு இடது கை சரியில்லாமல் போய்விட்டது. அதை அவர் பொருட்படுத்தியது கிடையாது. ஒரு மேல் துண்டை எப்போதும் இடது தோளின் மீது போட்டுக்கொண்டிருப்பார். எப்போதும் கதர் முழுக்கைச் சட்டைதான். வாழ்க்கையில் பல துன்பங்கள். ஆனால் எதையும் காட்டிக் கொள்ளாத உற்சாக ஊற்று.

“”நீர் தஞ்சாவூர் ஜில்லாக்காரர். நான் நெல்லை ஜில்லாக்காரன். நம்ப இரண்டு ஜில்லாக்கார்களுக்கும் ஒற்றுமை இருப்பதால்தான் நமக்குச் சிநேகிதம் அதிகம் இருக்கிறது” என்று சொல்வார்.

தஞ்சாவூர் ஜில்லாகாரர்களுக்குப் போலி அந்தஸ்தும் ஊதாரித்தனமும் இருப்பதாக அவர் கேலி செய்யும்போதெல்லாம் இவன் திருநெல்வேலிக்காரர்களுக்குத் தற்பெருமையும் கஞ்சத்தனமும் இருப்பதாகத் திருப்பிக் குற்றம் சாட்டுவான்.

“”உங்கள் தாமிரபரணி ஆறு கூடச் சரியான கஞ்ச நதி. உங்கள் ஜில்லாவுக்கு வெளியே உற்பத்தியாகி உங்கள் ஜில்லாவுக்குள்ளேயே முடிந்துவிடுகிறது. அடுத்த ஜில்லாவுக்கு ஒரு பொருட்டுக்கூடப் போவதில்லை!” என்று ஒரு தடவை அவன் சொல்ல, அழகிரிசாமி விழுந்து விழுந்து சிரித்தார்.

Harry Potter and the Sathuragiri Sithargal at Sanjeevi Malai by Dr. CS Murugesan

July 16, 2012 3 comments

“சதுரகிரி சித்தர்கள்’ நூலில் டாக்டர் சி.எஸ்.முருகேசன்

சஞ்சீவி மலையைத் தூக்கிக்கொண்டு அனுமன் பறந்து சென்றபோது சதுரகிரி சித்தர்கள் பிரார்த்தனைப்படி ஒரு துண்டு உடைந்து சதுரகிரி அருகே விழுந்தது. அதுவே சஞ்சீவிகிரி என்பது. இந்த சஞ்சீவி மலையில் இருக்கும் அதிசய மூலிகைகள் பற்றி கேட்க கேட்க ஆச்சரியமாக இருக்கும்.

“எமனை வென்றான்’ என்றொரு மூலிகை. அகால மரணமடைந்தவர்கள் நாசியில் இதைக் காட்டினால் உடனே உயிர் பெற்று எழுந்துவிடுவார்களாம்! அதுமட்டுமல்ல. துண்டு துண்டாய் வெட்டுண்டு இறந்தபோது உடல் துண்டுகளை ஒன்று சேர்த்து தசையாட்டி மூலிகைச் சாற்றினை அந்த ஒவ்வொரு துண்டங்களிலும் பிழிய அத்துண்டங்கள் எல்லாம் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளுமாம்! இறந்தவர்கள் உறங்கி எழுந்தவர் போல் எழுந்திருப்பார்களாம்!

கருடக்கொடி என்றொரு மூலிகை. இதனை முறைப்படி பக்குவப்படுத்தி ஒருவர் உட்கொண்டால் அவரது உடல் இரும்பு போல் உறுதியாக மாறுமாம்! அவரை அரிவாளால் வெட்டினால் வெட்டின அரிவாளே இரண்டாக உடையுமே தவிர அவர் உடலில் எந்தக் காயமும் ஏற்படாதாம்!

இவை தவிர சதுரகிரியிலும் சில அபூர்வ மூலிகைகள் இருப்பதாய் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பலுணி என்றொரு மரம். இம்மரத்தைக் குடைந்து அதனுள் பாதரசத்தைச் செலுத்தி குறிப்பிட்ட மாதங்கள் கழித்து அதனை எடுத்துப் பக்குவப்படுத்தி வாயில் அடக்கிக்கொண்டால் ஆகாய மார்க்கமாக நினைத்த இடத்திற்குச் செல்லலாமாம்!

ஓரழிஞ்சி மரம், தேவதாரு மரம் ஆகியவற்றின் பூவை முறைப்படி பக்குவப்படுத்தி திலகமாக இட்டுக்கொண்டால் யார் கண்ணுக்கும் புலப்படாமல் மறைந்து விடலாமாம்!

“கனையெருமை விருட்சம்’ என்ற மரத்தினடியில் யாராவது ஆட்கள் போய் நின்றால் அம்மரம் எருமை கத்துவது போல் கத்துமாம்!

“சுணங்க விருட்சம்’ என்றொரு மூலிகை காலாங்கி நாதர் குகைக்குச் சமீபமாக இருக்கிறதாம். இதன் வேர் கருப்பாகவும், கனி நாய்க்குட்டி போலும் இருக்குமாம்! அந்தக் கனி பழுத்துக் கீழே விழும்போது நாய்க்குட்டி குரைப்பது போல குரைத்துக்கொண்டே கீழே விழுமாம். கீழே விழுந்த கனி பத்தே வினாடிகளில் மறுபடியும் அந்த மரத்திலேயே போய் ஒட்டிக்கொள்ளுமாம்!

இவையெல்லாம் சித்தர்கள் காலத்தில் இருந்தவை. இப்போது பயன்பாட்டில் இருக்கிறதா என்று நமக்குத் தெரியாது!