Archive

Posts Tagged ‘எழுத்தாளர்’

ரா.கி. ரங்கராஜன்: முதுமை என்பது லாபமா, நஷ்டமா?

August 20, 2012 Leave a comment

ஜ.ரா. சுந்தரேசன், ரா.கி. ரங்கராஜன், புனிதன்

‘அண்ணாநகர் டைம்ஸ் பத்திரிகையில் நீங்கள் எழுதும் கட்டுரைகளைத் தவறாமல் படித்து வருகிறேன். ரொம்ப நகைச்சுவையாக, சுவாரஸ்யமாக எழுதி வருகிறீர்கள்….’ என்று எனக்கு வரும் ஒரு கடிதம் ஆரம்பிக்குமானால் நான் போச்சுடா சாமி என்று எண்ணிக் கொள்வேன். காரணம், அடுத்து என்ன வரிகள் வரும் என்று புரிந்துவிடும்.

‘ஆனால் நீங்கள் நாலு பேருக்கு உபயோகமானதை எழுதுவது கிடையாது….’, ‘இன்னின்ன பிரசினைகளைப் பற்றி நீங்கள் வாய் திறப்பதில்லை…’, ‘போன வாரம் நீங்கள் எழுதியதில் ஒரு தப்பு’ என்றுதான் கடிதத்தின் அடுத்த பாரா ஆரம்பமாகும்.

இதுபோலத்தான், பாடியிலிருந்து ஒரு பெரியவர் கடிதம் எழுதியிருக்கிறார். ‘நாலு மூலை நிகழ்ச்சிகளைத் தவறாமல் படிக்கும் அன்பர்களில் அடியேனும் ஒருவன். மிக அழகாகவும் ஹாஸ்யமாகவும் எல்லாரும் ரசிக்கும்படியாகவும் எழுதி வருகிறீர்கள்’, என்று தொடங்கி, ‘சில தவறுகளையும் செய்கிறீர்கள். உதாரணமாக, சிதம்பரத்திலிருந்து விருத்தாசலத்துக்கு ரயிலில் போனதாக எழுதியிருப்பது தவறு. அப்படி நேரடி ரயிலே கிடையாது’ என்று சுட்டிக் காட்டியிருக்கிறார். (விருத்தாசலத்திற்கு நான் ரயிலில் போனது உண்மை. வேறு மார்க்கமாக இருக்கலாம் எனக்கு நினைவில்லை.)

தபால், தந்தி இலாகாவில் 35 வருட காலம் பணியாற்றிய பின், 1988ல் ஓய்வு பெற்றதாகக் கூறியுள்ள இந்த அன்பர், நான் மூன்று விஷயங்களைக் குறித்து எழுத வேண்டும் என்று வற்புறுத்தியிருக்கிறார். மூன்றும் ஒரிஜினல்!

முதலாவதாக, வழிப்பறி, வீடு புகுந்து திருட்டு, ஜேபடி முதலிய குற்றங்கள் புரிவோரைச் சிறையில் அடைப்பது வீண் செலவு. பதிலாக, கைவிலங்கு போட்டுத் தெருத் தெருவாக இழுத்துச் செல்ல வேண்டும்.

இரண்டாவதாக, வீட்டுச் சொந்தக்காரர்கள் குடியிருப்போரிடம் வருடா வருடம் வாடகை உயர்த்து கிறார்கள். ஆனால் சொத்து வரியைக் குறைவாகக் கட்டுகிறார்கள். இந்த வரியை தாட்சண்ணிய மில்லாமல் நிர்ணயம் செய்து, குறிப்பிட்ட தேதிக்குள் அதைக் காட்டாவிட்டால் வீட்டை ஜப்தி செய்வோம் என்று பெரிய எழுத்தில் நோட்டீஸ் எழுதி வாசலில் ஒட்ட வேண்டும்.

மூன்றாவதாக, இவர் சொல்லியுள்ள யோசனை :

சுமார் 10, 15 வருடத்துக்கு முன் ரிடையரானவர்களுக்கு, இன்று அவர்கள் பணியில் இருந்தால் என்ன சம்பளம் வருமோ அதை கணக்கிட்டுப் பென்ஷன் தருகிறார்கள். ஐந்து ஆண்டுகளுக்கு முன் 1000, 1500 ரூபாய் ஓய்வூதியம் பெற்று வந்தவர்கள் இன்று 7000 ரூபாய்க்கு மேல் வாங்குகிறார்கள். வைத்தியச் சலுகைகள் வேறே தனி. இவர்கள் வசதிக் குறைவானவர்கள் அல்ல. தற்போது மத்திய அரசிலும், மாநில அரசிலும் நிலவும் நிதி நெருக்கடியை நினைத்து வசதி படைத்தவர்கள் மனமுவந்து தங்களுக்குக் கிடைக்கும் ஓய்வூதியத்தில் ஒரு பகுதியைக் குறைத்துக் கொள்ள முன்வர வேண்டும். அரசாங்கமும் இதற்காக ஒர் அறிக்கை விட வேண்டும்.

எப்படி இந்த யோசனை!

இவர் நேர்மையான மனிதர். தனது முழு முகவரியையும் தந்திருக்கிறார். ஆனால் அதை நான் இங்கே தரத் தயாராயில்லை. காரணம், இவருடைய தியாக சிந்தனை எல்லாப் பென்ஷன்தாரர் களுக்கும் இருக்காது. வாக்கிங் ஸ்டிக்கை எடுத்துக் கொண்டு இவரைத் தாக்கப் புறப்பட்டு விடுவார்கள். இவருடைய பாதுகாப்பை முன்னிட்டே அந்த விலாசத்தைச் சொல்லவில்லை.

இவர் இப்படிச் சொல்ல, ஹிந்துவில் ஆசிரியருக்குக் கடிதங்கள் எழுதியுள்ள ஒரு முதியவரோ, எழுபது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு விபத்து இன்ஷ்யூரன்ஸ் திட்டம் ஏற்றுக் கொள்ளப்படுவ தில்லை என்ற விதியை மாற்ற வேண்டும் என்று கூறியிருக்கிறார். ரொம்பக் காலம் முன்பு இந்த வரம்பு நிர்ணயிக்கப்பட்டதென்றும், இப்போது இந்தியர்களின் சராசரி ஆயுட் காலம் அதிகரித்திருப் பதால் எண்பது வயது வரை விபத்து இன்ஷ்யூரன்ஸ் தரப்பட வேண்டும் என்றும் இவர் கூறியிருக்கிறார்.

நியாயம்தான். ஆனால் ஆரோக்கிய வசதிகள் பெருகப் பெருக, ஆயுட் காலமும் நீடிக்கப் போகிறது. பிரசினைகளும் வளரப் போகின்றன. மூப்பே அடையாமல் என்றும் இளமையாக இருக்க வேண்டுமென்று ஒவ்வொரு மனிதனும் ஆசைப்படுகிறான். அது சரியா?

காலம் சென்ற டாக்டர் டி. ஞானசம்பந்தன் ‘Future Scenarios’ என்ற தன் புத்தகத்தில், இதைப் பற்றி ஒரு தனி அத்தியாயத்தில் அலசியிருக்கிறார். மனிதன் முதுமை அடையாமல் இளமையுடனும் சக்தியுடனும் நீண்ட காலம் வாழ்வதற்கு வகை செய்யும் மாத்திரைகள் எதிர்காலத்தில் கண்டு பிடிக்கப்படலாம் என்றும், அப்படி நேர்ந்தால் ஜனத்தொகை பெருகி, சமுதாயம் பெரும் அபாயங்களைச் சந்திக்க நேரிடும் என்றும் எடுத்துக் காட்டியிருக்கிறார். இதை அடிப்படையாக வைத்து, ஜான் நிதாம் என்பவர் எழுதியுள்ள ஒரு நாவலையும் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

அந்த நாவலில் ஒரு விஞ்ஞானி, மனிதன் முன்னூறு வருடம் உயிர் வாழ்வதற்கு ஒரு மருந்து கண்டுபிடித்து, அதைத் தன மகளுக்கும் மகனுக்கும் மட்டும் அவர்களுக்கே தெரியாமல் ரகசியமாகக் கொடுத்திருக்கிறார். அதன்படி மூன்று வருடத்துக்கு ஒருமுறைதான் ஒரு வயது ஏறும். ஒரு நாள் அவர்களிடம் அந்த உண்மையை உடைக்கிறார்.

மகள் காச்சு மூச்சென்று கத்துகிறாள். ”இது பயங்கரம்! என்னைச் சுற்றி எல்லாரும் ஒவ்வொருவராய்ச் செத்துக் கொண்டிருப்பார்கள்! ஒவ்வொரு சூழ்நிலையும் செத்துக் கொண்டிருக்கும்! நான் அதைப் பார்த்துக் கொண்டு தொடர்ந்து தொடர்ந்து தொடர்ந்து உயிர் வாழ்வதா? சகிக்கவில்லை! வேண்டாம், வேண்டாம்! அந்தத் தனிமை எனக்கு நரகமாக இருக்கும். எல்லாரையும் போல நானும் மூப்பு எய்தி, வயதாகி இறந்து போகவே விரும்புகிறேன்!” என்று அப்பாவிடம் சண்டை போடுகிறாள்.

‘இளமை மருந்து’ சாப்பிட்ட மகனுக்கு வேறு விதமான பிரசினை. அவன் மனைவி படா சண்டை போடுகிறாள். ”உங்களுக்கு இளமை மருந்தைக் கொடுத்த உங்கள் அப்பா எனக்கு ஏன் கொடுக்கவில்லை? இப்போது எனக்கு உலக நியதிப்படி இருபத்தேழு வயது! மருந்து சாப்பிட்டிருந்தால் இருபத்துநாலுதான் ஆகியிருக்கும். சொந்த மருமகளையே ஏமாற்றியிருக்கிறாரே!” என்று மாமனாரைத் திட்டுகிறாள்.

நாவலின் முடிவு என்ன என்பதை டாக்டர் ஞானசம்பந்தன் சொல்லவில்லை. அனேகமாக அந்த விஞ்ஞானி சிண்டைப் பிய்த்துக் கொண்டு பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் இருப்பார். அல்லது தற்கொலை செய்து கொண்டிருப்பார்.


ஜ.ரா. சுந்தரேசன்
புனிதன்
ரா.கி. ரங்கராஜன்

நாலு மூலை

சில சண்டைகள், சில தகவல்கள்

கர்நாடக சங்கீதத்தின் மேம்பாட்டுக்காகப் பாடுபடும் பத்திரிகைகளில் ஒன்று ‘ஸங்கீத ஸரிகமபதநி’.

நல்லி குப்புசாமி செட்டியார் இதன் நலைமைப் புரவலர்.(மாத இதழ் என்று சொல்லிக்கொள்கிறதேயழிய அப்படி யெஎன்றும் இது ரெகுலராக வருவதாய்த் தெரியவில்லை.)

ரொம்ப மேதாவித்தனமான சங்கீத நுணுக்கங்களுக்குள் புகுந்து என்னைப் போன்ற சாமானியனின் மூளையை

சிரமப்படுத்துவதில்லை இந்த இதழ். சங்தீ மேதைகளின் வாழ்க்கை வரவாறுகளை சிறு சிறு துணுக்குகளுடன் சேர்த்துத் தருகிறது. அதே சமயம், கொஞ்சம் வம்பு தும்புகளையும் வெளியிடுகிறது.

உதாரணமாக, ஓர் இதழில் குன்னக்குடி வைத்தியநாதன் மாட்டிக் கொண்டிருக்கிறார். இவர் இசை நாடக மன்றத்தின் தலைவராக இருந்தபோது தனக்கு வேண்டப்பட்ட சிலரின் பெயர்களைக் கலைமாமணி விருதுக்கு

சிபாரிசு செய்தாராம். தகுதியுள்ள பலரின் பெயர்களை நீக்கிவிட்டாராம். இது பற்றி விளக்கம் கேட்டுப் பத்துக் கேள்லிகள் கேட்டார்களாம். பதில் இல்லையாம். தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி மறுபடியும் அந்தக் கேள்விகளை அனுப்பிய பின் குன்னக்குடி பதில் எழுதினாராம். ‘நீங்கள் தகலல் அறியும் உரிமை சட்டத்தின்படி சில தகவல்கள் கோரியிருக்கிறீர்கள். இயல் இசை நாடக மன்றம் அந்த சட்டத்துக்கு உட்படுமா என சட்ட நிபுணர்களிடம் விளக்கம் கேட்டிருக்கிறோம். பதில் வந்ததும் இது பற்றி முடிவெடுக்கிறோம். என்று அவர் எழுதியிருக்கிறார்.

இதன் இன்னோர் இதழில், சென்னை நகரைத் தவிர வேறு ஊர்களில் கர்நாடக சங்கீத இசை நிகழ்ச்சிளைக் கேட்க முடியவில்லை என்று டி.ன். சிவராமகிருஷ்ணன் என்ற ரசிகர் அங்கவாய்த்திருக்கிறார். அங்கலாய்ப்போடு

நின்று விடாமல் காரசாரமாத் திட்டியிருக்கிறார். ‘அரக்கோணம், ஆரணி, காட்பாடி, விழுப்புரம் – ஏன், தமிழ்

நாட்டில் பல நகரங்கள் சங்கீதம் என்றால் என்னவென்றே தெரியாத பாலைவனப் பகுதிகள். இங்கெல்லாம் ஆலயங்களில் சங்கீதக் கச்சேரிகள் நடைபெறுவதில்லை. இவற்றை நடத்தும் சபாக்களும் இல்லை. இங்குள்ளவர்களுக்குக் ‘கர்நாடக சங்கீதம்.’ என்றால் என்னவென்றே தெரியாது,’ என்று எழுதியிருக்கிறார்! அந்த ஊர்க்காரர்கள் பாயப் போகிறார்களே என்று பயப் படவில்லை.

தலையங்கங்கள் சபாக்காரர்களையும் வித்வான்களையும் சகட்டு மேனிக்கு சாடுகின்றன.

இவ்வாறு, ‘ஸங்கீத ஸரிகமபதநி’ விவகாரமான விஷயங்களை அங்கங்கே தாளித்திருந்த போதிலும், சங்கீத

ரசிகர்களுக்குத் ¦திரியாத பல செய்திளைத் தருகிறது. ஆராய்ச்சிக் கட்டுரைகளுக்கும் பஞ்சமில்லை.

பழைய ஓலை சுவடிகளில் திவ்வியப் பிரபந்தத்தின் நாலாயிரம் பாடல்களுக்கும் பண்களும் தாளங்களும்

குறிப்பிட்டிருந்ததாயும், அச்சுப் பதிப்பில் அவை மறைத்து விட்டன என்றும் ஒரு கட்டுரை குற்றம் சாட்டுகிறது.

அன்னமாச்சாரியாரைப் பற்றிய ஒரு கட்டுரையிலிருந்து அவருக்கு நேரடி சிஷ்யர்கள் இல்லை என்றும், மகன்

பெத்த திருமலாச்சார்லுவும் பேரன் சின்ன திருமலாச்சசார்லுவும் அவரது, கீர்த்தனங்களை செப்புத் தகடுகளில்

பதித்து பாடல் இயற்றப்பட்ட நாள், தேதி, நட்சத்திரம், வருடம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, பாடல் முடிந்ததற்கு

அடையாளமாக இருபுறமும் சங்கு சக்கர அடையாள சின்னங்களையும் பொறித்தார்கள் ¦ன்று தெரிகிறது.

‘தஞ்சை நால்வர்’ குறித்த கட்டுரையில் காணப்படும் சுவையான விடீயங்கள்: நால்வாரில் மூன்றாவது சகோதரரான

சிவானந்தம், தஞ்சை மன்னர் சிவாஜியின் நெருங்கிய நண்பராக விளங்கினார். ஹோலிப் பண்டியகையின் போது அந்த மன்னர் சிவானந்தத்தின் வீட்டுக்கு சென்று அவர் மீது வண்ண நீர் தெளித்துக் கொண்டாடினால். ஆண்களும் நாட்டியமாடலாம் என்ற முறையை சிவானந்தம் முதன் முதல் தொடங்கி, திருமறைக்காட்டில் பண்டார வகுப்பைச் சேர்ந்த ஒருவருக்கு நாட்டியம் கற்றுத் தந்து அரசவையில் அரங்கேற்றம் செய்து வைத்தார். ஆண்கள் மட்டுமே ஆடி வந்த கதக்களி நடனத்தில் பரத நாட்டிய உத்தி சேர்த்து, ‘மோகினி ஆட்டம்’ என்ற நடனத்தை மலையாள நாட்டில் நிலைபெற செய்தவர் இவர்.

எம்.எம்.தண்டபாணிதேசிகர்’ பட்டினத்தார்’ திரைப்படத்தில் பட்டினத்தாராக நடித்துப் பாடியதைப் பார்த்து, பக்தி மேலீட்டால் பலர் சன்னியாசியாக மாறினார்கள்.

‘அலையாயுதே கண்ணா’ வை இயற்றிய ஊத்துக்காடு வேங்கட சுப்பயரின் சொந்த ஊர் ஊத்துக்காடு அல்ல.

மன்னார்குடியில் பிறந்தவர். இளம் வயதில் பெற்றோரை இழந்ததால் ஊத்துக் காட்டில் உள்ள மாமன் வீட்டில் வளர்ந்தார். திருமண வீடுகளில் பாடப்படும் ‘கெளரி கல்யாணமே வைபோகமே’ இவர் இயற்றியது.

மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீட்சிதரின் தம்பி பாலுஸ்வாமி தீட்சிதர், சுமார் இருநூறு வருடங்களுக்கு முன் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற ஒரு பாண்டு வாத்திய கோஷ்டியைப் பார்த்தார். அந்தக் குழுவில் இசைக்கப்பபட்ட வயலின் வாத்தியத்தில் மோகம் கொண்டு, மணலி சின்னஸ்வாமி முதலியார் கொடுத்த ஆதரவில், மூன்று வருடகாலம் அந்த வாத்தியத்தைப் பயின்றார். அதன் பிறகே கர்நாடக சங்கீதத்தில் வயலின் புழக்கத்துக்கு வந்தது.

நல்ல நாள், கிழமை, ராகு காலம் முதவியவற்றில் மதுரை மணி ஐயருக்கு மிகந்த நம்பிக்கை உண்டு.

‘நவக்கிரகங்கள்தான் நம்மை வழி நடத்தி செல்கின்றன. ஆகவே கிரகங்களின் சக்தி என்னை என்ன செய்யும் என்ற கருத்துக் கொண்ட கிரஹபலமேமி என்ற பாட்டைப் பாட மாட்டேன்’ என்று சொன்னவர் அவர். நிதிசாலசுகமா என்ற கல்யாணி ராகப் பாடலையும் அவர் பாடமாட்டார். ‘அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு பாட வந்து, கச்சேரி முடிந்ததும் மீதிப் பணத்தைக் கை நீட்டி வாங்கி கொள்கிற நாம் இப்படலை பாடத் தகுதியற்றவர்’ என்ற கூறி

சிரிப்பார்.

அபூர்வமாக ஒரே ஒரு இதழில் காணப்பட்ட ஜோக்:

‘என் அப்பா சங்கீத வித்வான். அம்மாவும் பாடுவாள். அண்ணனுக்கு மிருதங்கம் வாசிக்கத் தெரியும். அண்ணி வீணை வாசிப்பாள்…’

‘சரி, நீ என்ன பண்ணறே?’

‘தனிக் குடித்தனம் வந்துட்டேன். வேறென்ன பண்றது?’


அம்மாவாது! அப்பாவாது!!

”இந்தியர்களாகிய நீங்கள் ரொம்ப சுயநலக்காரர்கள். உங்கள் குடும்ப வாழ்க்கையைப் பார்த்தாலே தெரிகிறது,” என்றாராம் அந்த பிரிட்டிஷ்காரர்.

”எப்படிச் சொல்கிறீர்கள்?” என்று ரோஷமாகக் கேட்டாராம் என் நண்பர்.

”பின்னே என்ன? நீங்கள் குழந்தை பெற்றுக் கொள்வது ஏதோ இன்ஷ்யூரன்ஸ் பாலிஸி எடுத்துக் கொள்கிற மாதிரி இருக்கிறது. பிற்காலத்தில் நமக்கு ஆதரவு வேண்டும், நம்மைக் காப்பாற்ற ஆள் வேண்டும் என்று உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவே குழந்தை பெற்றுப் படிக்க வைத்து வளர்க்கிறீர்கள்,” என்று மேலும் அவர் குற்றம் சாட்டினாராம்.

”உலகம் பூராவும் அப்படித்தானே?”

”இல்லை. அமெரிக்கர்கள், பிரிட்டிஷ்காரர்கள், ஐரோப்பியர்கள் முதலிய நாங்கள் அப்படிச் செய்வதில்லை. பதினைந்து பதினாறு வயதானதும் உன் வாழ்க்கையை நீயே பார்த்து கொள் என்று குழந்தைகளை வெட்டி விடுகிறோம்.”

”வெட்டி விட்டு?”

”எங்கள் வாழ்க்கையின் பிற்காலத்தைத் திட்டமிட்டு சீர் செய்து கொள்கிறோம். பிள்ளைகளை வீட்டைவிட்டு அனுப்பி வைக்கும் போது, பெற்றோருக்கு நாற்பது வயது ஆகியிருக்கும். பாக்கிக் காலம் பூராவையும் தங்களுக்காகவே செலவிட்டுக் கொள்வதால், வயோதிக காலத்தில் மகனுடைய கையையோ, மகளுடைய கையையோ எதிர்பார்த்து நிற்க வேண்டிய தேவையில்லை. இந்தியர்களைப் பாருங்கள். வளர்த்தேன், படிக்க வைத்தேன், ஆளாக்கினேன். இன்றைக்கு என்னை அம்போ என்று விட்டு விட்டுப் போய்விட்டான் என்று புலம்புகிறார்கள்!” என்றாராம் அந்த பிரிட்டிஷ்காரர்.

என்னிடம் இதைச் சொன்ன நண்பர், ”பாசம், பிரியம் என்பதெல்லாம் வெள்ளைக்காரர்களுக்கு கிடையாது. நாங்கள் அப்படி இல்லை என்று அவரிடம் சொல்லி வைத்தேன். ஆனால், சமீபகாலமாக முதியோர்களின் பரிதாப நிலைமையைக் கவனித்தால் வெள்ளைக்கார முறை சரிதானோ என்று தோன்றுகிறது” என்றார்.

இந்த நண்பர் சிறு தொழிற்சாலையன்றை நடத்தி வருகிறார். ஒழிந்த வேளையில் ஒரு தொண்டு நிறுவனத்தில் பணிகளில் பங்கேற்கிறார்.

அவர் விவரித்த பல கண்ணீர்க் கதைகளில் இரண்டை மட்டும் இங்கே சொல்கிறேன்.

1. ·பிளாட்பாரத்தில் வயதான பெண்மணி ஒருத்தி மயக்கம் போட்டுக் கிடப்பதாக ஒரு ·போன் வந்தது. அழைத்து வாருங்கள் என்று சொன்னோம். ஆட்டோவில் அழைத்து வந்தார் அந்த இளைஞர். ‘நடைபாதையில் இந்த அம்மாள் கிடப்பதைத் தற்செயலாகப் பார்த்தேன்’ என்று சொன்னார். அவருடைய பெயர், முகவரியை குறித்துக் கொண்டு அவரை அனுப்பிவிட்டு, அந்த அம்மாளுக்கு வைத்திய உதவிகள் செய்தோம். இரண்டு மூன்று நாட்களில் எழுந்து உட்கார்ந்து பேசும் அளவுக்கு அவர் குணம் அடைந்தார்.

”என்னை இங்கே அழைத்து வந்தவர் எங்கே?” என்று கேட்டார். ”அவர் யாரோ புண்ணியவான். இங்கே உங்களைக் கொண்டு வந்து விட்டு விட்டுப் போனார்” என்றோம்.

”அவன் யாரோ இல்லீங்க. என்னுடைய சொந்தப் பிள்ளை. பெண்டாட்டியுடன் சேர்ந்து என்னை அடித்து உதைத்து வாசலில் தள்ளிவிட்டான்!” என்று கண்ணீர் விட்டார் அந்த அம்மாள்.

பிறகுதான் புரிந்தது. அடித்தது உதைத்ததோடு இல்லை. சாப்பாட்டில் நிறைய மயக்க மருந்தைச் சேர்த்துக் கொடுத்து, பேச முடியாத நிலையை ஏற்படுத்தி எங்களிடம் கொண்டு வந்து தள்ளியிருக்கிறான் என்பது.

அவன் கொடுத்திருந்த பெயர், விலாசம் பொய்யானது. அந்த அம்மாள் சரியான விலாசம் சொல்லியதும், அந்த இளைஞனைப் பிடித்து வந்து, அம்மாவை அழைத்துக் கொண்டு போகும்படி சொன்னோம்.

”என் அம்மா அங்கே வந்தால் என் பெண்டாட்டியை இங்கே கொண்டு வந்து விட வேண்டியிருக்கும். எது தேவலை? நீங்களே சொல்லுங்கள்” என்றான் அவன்! ”உங்கள் குடும்பப் பிரச்சனையை நீங்களே தீர்த்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லி, அம்மா, பிள்ளை இருவரையும் அனுப்பிவிட்டோம்.

2. ஒரு பால்ய விதவை. வசதியுள்ளவர். வாழ்க்கையில் பிடிப்பு வேண்டும் என்பதற்காக, உறவுக்காரர்களின் குழந்தைகளை ஒவ்வொருவராக அழைத்து வந்து வீட்டில் வைத்துக் கொண்டு படிப்பு, வேலை, கல்யாணம் என்று அவர்கள் வாழ்க்கையைச் செம்மைப்படுத்துவதிலேயே தன் வாழ்க்கையைச் செலவழித்திருக்கிறார். கிட்டத்தட்ட இருபத்தைந்து சொந்தக்காரக் குழந்தைகளை அந்த மாதிரி ஆளாக்கியிருப்பார். வயது எண்பத்தைந்துக்கு மேலாயிற்று. கடுமையான நோய் பாதித்தது. எல்லோரும் அவரைப் பற்றிக் கதை கதையாக நல்லதையே சொன்னார்களே தவிர, யாரும் தங்களுடன் வைத்துக் கொள்ளத் தயாராயில்லை. எங்களிடம் கொண்டு வந்து ஒப்படைத்தார்கள். அது சாயங்கால நேரம். ”நான் இனிமேல் இங்கே தான் இருக்க வேண்டு¡மா?” என்று கேட்டார். ”ஆமாம்மா. நாங்கள் நன்றாய்ப் பார்த்துக் கொள்கிறோம்” என்றோம். சரியென்று சொல்லிப் படுத்துக் கொண்டார். காலையில் பார்த்தால் இறந்துப் போயிருந்தார். ராத்திரி பூரா எவ்வளவு மனம் புழுங்கினாரோ! அவ்வளவு பேருக்கு அவ்வளவு உதவிகள் செய்தும் இந்த நிர்க்கதிக்கு ஆளானோமே என்று எத்தனை வேதனைப்பட்டாரோ, பாவம்! ஒரே ராத்திரியில் அவருடைய உயிர் பிரிந்துவிட்டது.

மேற்கண்ட இரு நிகழ்ச்சிகளைக் கூறிய நண்பர் ”எங்கள் தொண்டு நிறுவனத்தில் நாங்கள் யாரிடமும் பணம் வாங்குவதில்லை. உண்மையாகவே அனாதைகளாக இருப்பவர்களை மட்டுமே சேர்த்துக் கொள்கிறோம். ஆனால் பணம் படைத்த வயோதிகர்கள் நிறையக் கட்டணம் செலுத்தி வசதியான முதியோர் இல்லங்களில் சேர்ந்து கொள்கிறார்கள். முதியோர் இல்லங்களும் தற்போது ஒரு பிஸினஸாக ஆகிவிட்டன. சில சமயம், நாலைந்து பென்ஷன்காரர்கள் சேர்ந்து ஒரு வீடு அமர்த்தி, சமையலுக்கும் மற்ற வேலைகளுக்கும் ஆள் போட்டுக் கொண்டு வாழ்க்கையை ஓட்டுகிறார்கள். எப்படியாயினும் பழைய கூட்டுக் குடும்பத் தத்துவம் காற்றிலே பறந்துவிட்டது. இது கமர்ஷியல் யுகம். அவனவனுக்குத் தன்னுடைய குடும்பத்தைக் காப்பாற்றுவதே பெரிய காரியமாக இருக்கும் போது அப்பாவாவது, அம்மாவாவது! அந்த பிரிட்டிஷ்காரர் சொன்னது போல, இளம் வயதிலேயே பாசங்களை அறுத்துக் கொண்டு தன்னுடைய வயோதிக காலத்துக்கு ஏற்பாடு செய்து கொள்வதுததான் மேல் என்று தோன்றுகிறது” என்று வருத்தத்துடன் சொல்லிப் பெருமூச்சு விட்டார்.

”அப்படியெல்லாம் நம்பிக்கை இழக்காதீர்கள். நம்முடைய பண்பாடு, பாவ, புண்ணிய உயர்வு, பெரியவர்களிடம் பக்தி இவையெல்லாம் ஒரு நாளும் மறையாது” என்று தத்துவம் பேசி விடை கொடுத்தேன் நண்பருக்கு.

இருந்தாலும் அன்று ராத்திரி பூரா தூக்கமில்லை.


நாயிடம் அன்பு காட்டுங்கள்

இந்தப் பகுதியில் நான் எழுதும் கட்டுரைக்கு, கட்டுரையிலும் ஒரு பாராவுக்கு, பாராவிலும் ஒரு வாக்கியத்துக்கு, வாக்கியத்திலும் ஒரு வார்த்தைக்கு இப்படியரு பயங்கர பாதிப்பு இருக்கும் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை. ஒரு வகையில் பெருமையாக இருக்கிறது. இன்னொரு வகையில் ஜாக்கிரதையாக எழுத வேண்டுமென்ற பயமும் ஏற்படுகிறது.

விஷயம் யாதெனில்,

K4 போலீஸ் ஸ்டேஷனுக்குப் போகும் சாலையில் சொறி நாய்கள் நாலைந்து தாவி வருகின்றன என்றும், பிடித்துச் செல்வார் யாருமில்லை என்றும், ‘மாற்ற முடியாத விஷயங்கள்’ என்ற பட்டியலில் ஒன்றாகக் குறிப்பிட்டிருந்தேன்.

ஞாயிற்றுக் கிழமை காலைதான் பத்திரிகை வெளிவந்திருக்கும். பகலுக்குள் மூன்று பெண்மணிகள் வெவ்வேறு நேரத்தில், வெவ்§று இடத்திலிருந்து போன் செய்தார்கள். பிலுபிலுவென்று பிடித்துக் கொண்டார்கள் என்று சொல்லமாட்டேன். ஆனால் அப்படி நான் எழுதியது ரொம்பத் தவறு என்று மட்டும் அழுத்தமாகச் சொன்னார்கள். ‘சொறி நாய்’ என்றால் வெளிநாய் என்று அர்த்தம் செய்து கொண்டு கார்ப்பரேஷன்காரர்கள் அவைகளைப் பிடித்துக் கொண்டு போய் ரொம்பக் குரூரமான முறையில் கொன்று விடுகிறார்கள் என்றார் ஒரு சகோதரி. (Stray Dog என்பதைத்தான் நான் சொறி நாய் என்று குறிப்பிட்டுவிட்டேன். தெரு நாய் என்று சொல்லியிருக்கலாமோ என்னவோ)

இரண்டாவது சகோதரியும், நாய்கள் கொலை செய்யப்படும் முறை ரொம்பக் கோரம் என்றார். அவர் விவரித்த முறைகளை இங்கே நான் விவரித்தால், பலவீன இதயமுள்ளவர்களுக்கு பயங்கர சொப்பனம் வரும்.

”இந்த நாய்கள் குறுக்கே தாவி ஓடுவதைப் பார்த்தால் பயமாயிருக்கிறதே” என்றேன்.

”நீங்கள் பயப்படவே வேண்டாம். ஒரு கவளம் சோறு போட்டால் வாலைக் குழைத்துக் கொண்டு உங்கள் பின்னாலேயே வரும்” என்றார்.

”பின்னாலேயே வீட்டுக்கு வந்தால்?” என்றேன்.

”வரட்டுமே? வளர்த்துவிட்டுப் போங்களேன். வீட்டுக்கு ஒரு நாய் வளர்க்கலாம். நான் தெருவில் கிடந்த ஒரு அனாதை நாய்க் குட்டியை வீட்டுக்கு எடுத்து வந்து சோறு ஊட்டி வளர்த்தேன். எவ்வளவு விசுவாசமாயும் பிரியமாயும் பழகுகிறது தெரியுமா? நான் சுவாமி சன்னதியில் விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லும்போது, ஸ்தோத்திரம் முடியும் வரை பக்கத்திலேயே நின்று கொண்டிருக்கிறது,” என்றார். தொடர்ந்து, ”நாய்கள் விஷயத்தில் மட்டுமில்லை, மாடுகளை லாரியில் ஏற்றி அனுப்புகிறார்களே, அது இன்னொரு கொடுமை” என்றார்.

”மாடுகளை வியாபாரம் செய்வது சட்டப்படி தடை செய்யப்படவில்லையே?” என்று கேட்டேன்.

”இல்லை. ஆனால் பண்ணைக்குப் போகிற மாடா, கசாப்புக்குப் போகிற மாடா என்று சொல்லிப் பெர்மிட் வாங்க வேண்டும். ஒரு லாரியில் ஐந்து ஆறு மாடுகள்தான் ஏற்றலாம். ஆனால் நாற்பது மாடுகள் கூட ஏற்றுகிறார்கள். இடம் போதவில்லையென்றால் காலை ஒடித்துப் படுக்கப் போட்டுவிடுகிறார்கள். கேரளாவுக்குப் போன மாடுகளை எம்.எல்.ஏ. தாமரைக்கனி தடுத்து நிறுத்தினார் என்று செய்தி வந்ததே பார்த்தீர்கள் இல்லையா?” என்றார்.

பார்த்தேன். மாடு விஷயம் இருக்கட்டும். நாய் விஷயம் சொல்லுங்கள். இப்போதுதான் தெரு நாய்களுக்குக் கருத்தடை செய்கிறார்களே, அப்புறம் எப்படி குரூரமாகச் கொல்வதாகச் சொல்கிறீர்கள்?” என்று கேட்டேன்.

”ஆமாம். ஒரு நாய்க்குக் கருத்தடை செய்தால் நூறு நாய்கள் பிறப்பதைத் தடுக்க முடியும். ஆனால் குரூரமாய்க் கொலை செய்வதுதான் அதிகம். மேனகாகாந்தி கடுமையாகத் தலையிட்ட பிறகு குரூரம் கொஞ்சம் குறைந்திருக்கிறது” என்றார்.

”சரி, இப்போது நான் என்ன செய்ய வேண்டும் என்கிறீர்கள்?” என்று கேட்டேன்.

”அனாதை நாயிடம் அன்பு காட்டுங்கள் என்று எழுதுங்கள். நாய்களுக்காக வீட்டு வாசலில் ஒரு குவளையில் தண்ணீர் வைக்கும்படி சொல்லுங்கள். நாய்களிடம் பிரியம் காட்டும்படி எடுத்துச் சொல்லுங்கள் போதும்” என்றார் சகோதரி.

பதினைந்து இருபது வருடங்களுக்கு முன் என் நண்பரொருவரின் பதினாலு வயதுத் தம்பி, ஒரு தெரு நாயிடம் பிரியம் காட்டப் போய், அது அவன் கையைப் பிராண்டி, பத்து நாள்கழித்து அவனுக்குக் காய்ச்சல் வந்ததும், ஜெனரல் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போனதும் அவனைக் கூண்டு மாதிரியான இடத்தில் அடைத்து வைத்ததும், அவனுக்கு அருகில் கூட யாரும் போகக் கூடாதென்று டாக்டர்கள் தடுத்ததும், மூன்று நாள் கதறிக் கதறியே அவன் உயிர் விட்டதும், உறவினர்கள் எல்லாருக்கும் கட்டாயமாகத் தடுப்பு ஊசி போடப்பட்டதும் எனக்கு நினைவு வந்தது. ஆனால் அது லட்சத்தில் ஒரு கேஸாக இருக்கலாம் – லட்சத்தில் ஒரு நாய் விஷ்ணு சகஸ்ரநாமம் கேட்பது போல.

”சரி, எழுதுகிறேன். உங்கள் பெயரையும் டெலிபோன் நம்பரையும் சொல்லுங்கள். யாராவது அனாதை நாயைக் கண்டால் உங்களுக்குத் தெரிவிக்கும்படி எழுதுகிறேன்,” என்றேன்.

டெலிபோன் நம்பரையும் பெயரையும் சொன்னார். ”ஆனால் இதைப் பிரசுரிக்க வேண்டாம். நான் ஏற்கனவே ஏராளமான நாய்களைக் காப்பாற்றி வருகிறேன். அத்துடன் விரைவில் பெங்களூருக்குப் போய்விட எண்ணம்,” என்றார்.

”வேறே யாரைத் தொடர்பு கொள்ளச் சொல்லட்டும்?” என்று கேட்டேன்.

”பிராணி நல அமைப்பைத் தொடர்பு கொள்ளலாம். ஒரு வேடிக்கை சொன்னால் நம்ப மாட்டீர்கள். ஆனால் சத்தியமான விஷயம்.”

நான் எழுதி முடித்துவிட்டு, திருத்தம் செய்து கொண்டிருந்த போது, ஒருவர் வந்தார். திடகாத்திரமான மனிதர். நான் முன்புறத்தில் இருந்ததால், ”பாலகிருஷ்ணன் என்று இங்கே யாரும் இருக்கிறார்களா?” என்று கேட்டார்.

”மாடியில் இருக்கிறார்” என்றேன்.

நாலு படி ஏறியவர் திரும்பி வந்தார். ”மாடியில் நாய் இருக்கிறதா?” என்று பயத்துடன் கேட்டார்.

”இல்லை, தைரியமாகப் போங்கள்,” என்றேன்.

நாய் மனிதனின் சிறந்த நண்பன் என்று சொல்கிறார்கள். இருந்தாலும் எப்படிப்பட்ட திடகாத்திர மனிதருக்கும் நாய் என்றால் ஒரு நடுக்கம்தான். யாரால் அதைப் போக்க முடியும்.


ஏதோ உங்களாலானது…

காலை மணி பத்து இருக்கும். அதற்குள்ளேயே வெப்பமும் புழுக்கமும் ஆளை அழுத்திக் கொண்டிருந்தன. முன் பக்கத்து ஸிட் அவுட்டில் உட்கார்ந்து எழுதிக் கொண்டிருந்தேன்.

டங் டங்கென்று ஒரு சத்தம்.

நிமிர்ந்து பார்த்தால், சட்டை வேட்டி மூக்குக் கண்ணாடியுடன் ஒரு ஆள், பலமான நீளமான உருட்டுக் கட்டையால் கேட்டின் இரும்புச் சட்டத்தைத் தட்டிக் கொண்டு நின்றிருந்தான்.

வயதான ஆள்தான். ஆனால் அப்படியன்றும் தள்ளாமையில் கீழே விழுந்து விடுகிற மாதிரி இல்லை. அழுக்கு முகமும் அழுக்கு உடையுமாக இருந்ததால் பிச்சைக்காரன் என்று நன்றாகத் தெரிந்தது.

(பிச்சைக்காரன் என்கிற வார்த்தையைச் சொல்லவே என்னவோ போலிருக்கிறது. கழகத் தமிழ் அகராதியைப் பார்த்தேன். ‘இரவலர்’ என்றுபோட்டிருக்கிறது. ஆனால் அது என்னவோ புலவர், கல்விமான், அறிவாளி என்று ரொம்ப கெளரவம் கொடுக்கிற சொல்லாகத் தோன்றுகிறது.)

இந்த ஆள் முன்பே இரண்டொரு முறை வந்திருக்கிறார். (‘ன்’ என்று சொல்லவும் என்னவோ போலிருக்கிறது) வாயைத் திறந்து, ஐயா, பசிக்கிறது என்றோ, தர்மம் போடுங்க சாமி என்றோ எதுவும் கேட்கமாட்டார். டங் டங் என்று தட்டிவிட்டு நிற்பார். எதாவது சில்லறை போட்டு அனுப்பிவிடுவேன்.

இந்தத் தடவை பேசாமல் இருந்தேன். மறுபடியும் டங் டங் என்று தட்டினர். ‘அப்புறமா வாங்க’ என்றேன். காதுதான் கேட்கவில்லையோ, அல்லது கேட்காத மாதிரிப் பாசாங்கோ, நேரே என்னைப் பார்த்தபடி மறுபடியும் டங் டங் என்று கேட்டில் தட்டினார். கண் நன்றாகத் தெரிகிறது என்று ஊகித்து, கையால் சைகை காட்டி ‘அப்புறமா வாங்க’ என்று மீண்டும் சொன்னேன்.

மேலும் நாலைந்து டங் டங். பிறகு என்னை முறைத்துப் பார்த்தார் – ‘நீயும் ஒரு மனுஷனா!’ என்று சொல்வது போல. பிறகு நகர்ந்து விட்டார்.

அண்டை அயல் வீடுகளிலும் இரும்பு கேட் இருக்கிறது. அங்கே எங்கேயும் கைத்தடியால் டங் டங்கென்று தட்டும் சத்தம் கேட்கவில்லை.

‘வாயைத் திறந்து நான் யாசகம் கேட்கமாட்டேன். ஆனால் நான் வந்து எதிரே நின்றதுமே தர்மம் செய்து புண்ணியம் தேடிக்கொள்ள வேண்டியது உன் கடமை’ என்று இந்த ஆளைப்போல சொல்லாமல் சொல்கிற பலர் இருக்கிறார்கள்.

மயிலாப்பூரில் இரண்டு ஆசாரமான வைதீகர்களைப் பார்த்திருக்கிறேன். நீட்டாக, சோல்ஜர்கள் மாதிரி வந்து நிற்பார்கள். கடகடவென்று ‘வேதம்’ ஓதுவார்கள். அது வேதம்தானா, அப்படியே வேதமாயிருந்தாலும் சரியாகத்தான் சொல்கிறார்களா என்பது கண்டுபிடிக்க முடியாது. (‘தப்பாக வேதம் சொல்பவனைக் காட்டிலும் நன்றாகச் சிரைப்பவன் மேல் குலத்தான் என்று கூவு’ என்று பாரதியார் ரொம்பக் கடுமையாக எழுதியிருக்கிறார்.)

ஐந்து நிமிடம் வேதம் (!) சொல்லி முடித்ததும் இருவரும் பேசாமலே நிற்பார்கள். ‘உன்னைவிட நான் உயர்ந்தவன் என்று தெரிகிறதல்லவா? மரியாதையாக சன்மானம் கொடுத்து அனுப்பு’ என்று மெளனமாய் உணர்த்துகிற தன்மானக்காரர்கள் இவர்கள்.

சாபம் கீபம் இட்டுத் தொலைப்பார்களோ என்ற பயத்தில் நானும் ஏதாவது கொடுத்தனுப்பி விடுவேன்.

ஏழை எளிய உறவினர்கள் பல சமயங்களில் உதவி தேவை என்று வெளிப்படையாகவே கேட்பதுண்டு. என்னால் இயன்றதைச் செய்வேன். வேறு வகையான சிலர் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் என் தமையனாரிடம் ஒரு நாள் ‘ஆயிரம் ஆயிரமாய்ச் சம்பாதிக்கிறே, எனக்கு அஞ்சோ பத்தோ கொடுத்தால் குறைஞ்சா போயிடுவே?’ என்று கேட்டுவிட்டார்.

அவ்வளவுதான். என் அண்ணாவுக்குக் கடும் கோபம் வந்து விட்டது. ‘என்ன இது, அதிகாரப் பிச்சையாக இருக்கிறது? ஒரு பைசா தரமாட்டேன்!’ என்று சொல்லி விரட்டிவிட்டார்.

(”அதிகாரப் பிச்சை!” எத்தனை பொருட்செறிவுள்ள அழகான தமிழ்ச் சொல்! இதைக் கண்டுபிடித்தவர் யாராயிருந்தாலும் வாழ்க!)

இன்றைய தமிழ் நகைச்சுவை எழுத்தாளர்கள் அனைவருக்கும் பிதாமகர் ஒருவர் உண்டு. அவர் பெயர் எஸ்.வி.வி. ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்பு அவர் எழுதிய பல அற்புதமான கட்டுரைகள் சமீபகாலமாகத்தான் புத்தக வடிவில் வெளியாகத் தொடங்கியிருக்கின்றன. அவர் ஒரு கட்டுரை எழுதியிருந்தது ஞாபகம் வந்தது.

வாசலில் பிச்சை கேட்டு ஒரு கிழவி நச்சரித்துக் கொண்டேயிருந்தாளாம். இவர் ஏதோ அவசர வேலையில் மூழ்கியிருந்ததால், போ, போ என்று விரட்டிக் கொண்டிருந்தார். அவள் போகவில்லை. அருகில் கிடந்த ஒரு சின்ன குச்சியை எடுத்து, ‘போன்னா போகமாட்டே?’ என்று ஓங்கியிருக்கிறார். அது நிஜமாகவே அந்தக் கிழவி மேல் பட்டதோ, அல்லது அதுதான் சாக்கு என்று அவன் பிடித்துக் கொண்டாளோ –

குய்யோ முறையோ என்று கூச்சலிட்டுக் கொண்டு தெருவில் விழுந்துவிட்டாள். எஸ்.வி.வி.க்குச் சங்கடமாகி விட்டது. ‘இந்தாம்மா, சத்தம் போடாதே. எழுந்து போய்த் தொலை. காசு கொடுக்கிறேன்’, என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே, தெருவில் கூட்டம் சேர்ந்துவிட்டது.

ஆளாளுக்கு அந்தக் கிழவியைச் சூழ்ந்துகொண்டு, ‘என்னம்மா, அடி பட்டுடுத்தா? யார் அடிச்சாங்க?’ என்று கேட்க, அவள் மேலும் மேலும் கூவ, எஸ்.வி.வி. மேலும் மேலும் விளக்கம் சொல்ல, படா ரகளையாகிவிட்டது.

‘ஏன் சார், பாவம் கிழவி. ஏதோ பிச்சை கேட்டாள். இஷ்டமானா கொடுங்க. இல்லாட்டி, போன்னு சொன்னா போயிடறாள்! அடிச்சு விரட்டலாமா?’ என்று பல பேர் அவரைப் பிடித்துக் கொண்டார்கள்.

(நான் மேலே எழுதியிருப்பது அந்தக் கட்டுரையின் சாரமே தவிர, அதே வாக்கியங்கள் அல்ல. ஞாபகத்தில் இருப்பதைச் சொன்னேன்.)

எஸ்.வி.வி.யைத் திட்டியவர்கள் அதன்பின் தங்கள் பாட்டுக்குக் கலைந்து போயிருப்பார்களே தவிர, அந்தக் கிழவிக்கு ஒரு பைசா கொடுத்திருக்க மாட்டார்கள் என்பது நிச்சயம்.

தர்மம் பண்ணுவதிலே யாருக்கும் சந்தோஷம் கிடையாது. தர்மம் பண்ணாதவனைத் திட்டுவதென்றால் மட்டும் எல்லாருக்கும் சந்தோஷம்.

ஷேக்ஸ்பியரின் ‘கிங் ஜான்’, நாடகத்தில்.

‘நான் பிச்சைக்காரனாக இருக்கும் வரையில், பணம் வைத்திருப்பவன் இழிவானவன் என்று நினைக்கிறேன். நான் பணக்காரனாக ஆனதும் பிச்சை எடுப்பவன் இழிவானவன் என்று நினைக்கிறேன்’, என்று ஒரு வரி வருகிறது.

ஐயாமாருங்களே, அம்மாமாருங்களே, இதாங்க உலகம்.


சதுர்த்தி நினைவுகள்

பார்த்தசாரதி பெருமாள், கற்பகாம்பிகை, மதுரை மீனாட்சி, திருப்பரங்குன்றம் முருகன் முதலான எல்லாரும் தெய்வங்கள் நான் வழிபடும் கடவுளர்கள். ஆனால் பிள்ளையார் அப்படியல்ல. அவர் என் தோழர்.

சின்ன வயசில் பள்ளிக்கூடப் பரீட்சைக்குப் போகும்போது வழியில் காணும் பிள்ளையார்களுக்கெல்லாம் நின்று என் நெற்றியில் குட்டுப் போட்டுவிட்டுச் செல்ல ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை அவர் என்னைக் கைவிட்டது கிடையாது. (இந்தக் குட்டுப் போட்டுக் கொள்ளும் முறையில் விஞ்ஞான உண்மையன்று இருப்பதாக அமெரிக்காவில் இருக்கும் ஒரு நண்பர் சொன்னார். நெற்றிப் பொட்டில் அந்தக் குறிப்பிட்ட பிரதேசத்தில் மூளையைச் சுறுசுறுப்படைய வைக்கும் நரம்புகள் இருக்கின்றனவாம். குட்டுப் போட்டுக் கொண்டால் அவை ‘ஆக்டிவேட்’ ஆகின்றன என்றும், இதுபோன்ற பல வழிபாட்டு முறைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்து வருவதாகவும் அவர் சொன்னார்.

ஆறாம் வகுப்போ, ஏழாம் வகுப்போ படித்த சமயம், என் அப்பா என்னை அடிக்க வந்தததும், நான் தப்பியோடி, அருகிலிருந்து ஒரு பிள்ளையார் கோவிலுக்குள் போய் ஒளிந்துகொண்டதும், துரத்திக் கொண்டு வந்த அப்பா, கோவில் வாசலில் நின்று, ”ஒய் குருக்கள்! அந்தப் பயலை வெளியே விரட்டும்!” என்று சத்தம் போட்டதும் (முன்பே இரண்டொரு முறை சொல்லியிருக்கிறேன்) ஞாபகம் வருகிறது. (ஆசார வைஷ்ணவராகையால்தான் பிள்ளையார் கோவிலுக்குள் நுழையக் கூடாதென்ற கொள்கை வைத்திருந்தார் என்று ரொம்ப நாள் கழித்துத் தான் தெரிந்தது)

கும்பகோணத்தில் என் வீட்டுக்குப் பக்கத்தில் காவேரியில் கும்பேசுவர சுவாமி படித்துறை இருந்தது. அதை ஒட்டி ஒரு பழைய பெரிய மண்டபம், ஊரிலுள்ள பண்டாரம், பரதேசிகளுக்கெல்லாம் அதுதான் வாசஸ்தலம். ஆனால் பிள்ளையார் சதுர்த்தி சமயத்தில் பத்துநாள் போல அங்கே ஒட்டடை அடித்து, பெருக்கித் தண்ணீர் தெளித்துச் சுத்தம் செய்வார்கள். அங்கே சங்கீதக் கச்சேரிகள் நடைபெறும். இரண்டாவது மூன்றாவது நிலையில் உள்ள வித்வான்கள் பாடுவார்கள். மண்டபம் நிறையக் கூட்டம் இருக்கும். தவறாமல் எல்லா நாட்களும் அங்கே போய் உட்கார்ந்துவிடுவேன் சிநேகிதர்களோடு.

ஆனால் என் தந்தை காலமான சமயம் ஒரு சதுர்த்தி உற்சவர் வந்த போது, ‘தீட்டு’ என்பதால் அங்கெல்லாம் போகக் கூடாதென்று விட்டில் தடுத்துவிட்டார்கள். இருந்தாலும், திருட்டுத்தனமாக ஒரு நாள் போய்விட்டேன். அந்த ஒரு கச்சேரி மட்டும் எனக்கு ரொம்ப ஆழமாய் இருக்கிறது. சிவந்த மேனியும், கட்டுக்குடுமி, சந்தனப் பொட்டும், வைரக் கடுக்கனும், சில்க் முழுக்கைச் சட்டையுமாக ஒருவர் அன்று பாடினார். பெயர் நினைவில்லை. நாற்பது வயதிருக்கும். அருமையான சாரீரம். பிரமாதமாகப் பாடத் தொடங்கினார். மேல் ஸ்தாயியில் சஞ்சாரம் செய்யக் கையை உயர்த்தியபோதுதான் அவரும் கவனித்தார். அவையினரும் நீளத்துக்குப் பெரிதாய்க் கிழித்திருந்தது. சலவையிலிருந்து வந்திருந்த சட்டையைச் சரியாய்ப் பார்க்காமல் அப்படியே மாட்டிக் கொண்டு வந்திருந்தார். பாவம். அதன் பிறகு அவருக்கு மூடே போய்விட்டது. கையை உயர்த்தாமல் பாடுவதென்பது எந்த மகா வித்வானாலும் முடியாத காரியம். (பார்க்கப் போனால் மகா வித்வானாக இருக்க இருக்க, கை ரொம்பவுமே மேலே உயரும்) இந்த வித்வானிகளின் நிலை ரொம்பப் பரிதாபமாகிவிட்டது அன்றைக்கு. கொஞ்சம் உற்சாகம் வரும். தன்னை மறந்து பாடுவார். கை உயரும். உடனே கிழிசல் ஞாபகம் வந்து கையைத் தழைத்துக் கொண்டு போய்விடுவார்.

எனக்கு அது ஒரு மறக்க முடியாத வினாயக சதுர்த்தி. அந்த வித்வானுக்கும் அப்படித்தான் இருந்திருக்கும்.

சென்னையில் குடியேறிய பிறகு சில வருடங்கள் பிள்ளையாரை மறந்திருந்தேன். ஆனால் அவர் என்னை மறக்கவில்லை. புரசைவாக்கம் வெள்ளாளத் தெருவில் தன் கோவிலுக்கு எதிரிலேயே நான் குடியிருக்கும்படி பண்ணிவிட்டார். தெருவில் இறங்கினால் அந்தச் சின்னப் பிள்ளையார் கோவிலுக்கு ஒரு கும்பிடு போடாமல் போகமுடியாது. (அந்தக் கோவிலை இப்போது மிக அழகாக கட்டியிருக்கிறார்கள்) அலுவலக நண்பர்கள் எல்லாருமே அந்தப் பகுதியில் வசித்து வந்ததால், குமுதம் காலனியில் ஒன்றாகக் குடித்தனம் போனபோது, அங்கே காம்பவுண்டுக்கு உட்புறமாக ஒரு பிள்ளையார் மூர்த்தி பிரதிஷ்டை செய்துவிட வேண்டும் என்று முனைந்தோம். பிள்ளையார் சிலை எங்கே கிடைக்கும் என்பது தெரியாமல், மகாபலிபுரத்துக்குப் போகிறவர்களிடமெல்லாம் சொல்லி அனுப்பினோம். இதற்குள் ஒருவர், ”பிள்ளையாரை விலைக்கு வாங்கி வைப்பது கிடையாது. எங்கிருந்தாவது திருடிக் கொண்டுவந்துதான் வைக்க வேண்டும். அதுதான் சம்பிராதாயம்” என்று சொன்னார்.

பிள்ளையாரிடம் எல்லாருக்குமே அபார பக்திதான் என்றாலும், திருட்டில் இறங்கும் அளவுக்கு யாருக்கும் துணிச்சல் இருக்கவில்லை. எப்படியோ பாடுபட்டு, ஒரு பிள்ளையார் சிலை வாங்கி, மூன்றடி உயரத்தில் ஒரு மேடையும் ஒரு கீற்றுக் கூரையும் போட்டு, தினம் தினம் ‘முறை’ வைத்துக் கொண்டு பூஜை (!) செய்தோம். அது சரிப்பட்டு வராததால் ஒரு குருக்களை ஏற்பாடு செய்தோம். பிறகு நண்பரொருவர் நன்கொடை வசூல் செய்து, தன் கைப்பணமும் நிறைய போட்டு, அழகான பெரிய மண்டபத்துடன் கோவில் கட்டிவிட்டார். சதுர்த்தி உற்சவம் அமர்க்களமாக நடைபெற்று வருகிறது. (என்று நினைக்கிறேன்)

வீட்டில் எப்போதும் ஒரு பிள்ளையார் படம் இருக்கிறது. மூக்குக் கண்ணாடியைக் காணவில்லையா, ஸ்கூலிலிருந்து குழந்தை வருவதற்கு லேட்டாகிவிட்டதா, கிரிக்கெட்டில் இந்தியா நன்றாகக விளையாடவேண்டுமா, இரண்டு நாளாய் ஜுரமா, கிரைண்டர் மக்கர் செய்கிறதா – எதுவானாலும் ‘பிள்ளையாருக்குக் காசு வை’ என்பதே எங்கள் தாரக மந்திரம். காசு வைத்ததும் நல்லபடி அருள் செய்வார் எங்கள் பிள்ளையார். உண்டியலில் ஒரு ரூபாயும், இரண்டு ரூபாயும், பத்து ரூபாயும் (அந்தந்த நிலைமைக்கு ஏற்றபடி) சேர்ந்து, வருடமுடிவில் நானூறு ஐந்நூறு ரூபாய் வரை சேர்ந்துவிடும். பக்கத்தில் உள்ள பிள்ளையார் கோவில்களுக்கு அந்தத் தொகையைப் பிரித்துக் கொடுப்போம். சினேகிதர்களிடம் கொடுத்து அவர்கள் வீட்டருகே உள்ள கோவில்களுக்கும் கொடுக்கச் சொல்வோம்.

ஒருமுறை காலனி தோட்டக்காரனிடம் முப்பது ரூபாய் போல் சில்லறையாகக் கொடுத்து, ”பக்கத்தில் இருக்கிற பிள்ளையார் கோவில்களில் உண்டிகளில் போட்டுவிட்டு வா” என்று அனுப்பினேன். ரொம்ப நேரம் கழித்துத் திரும்பினான் – தள்ளாடியபடி.

”என்னடா, போட்டாயா?” என்றான்.

”என்னடா, பேச்சு ஒரு மாதிரியா இருக்கு?”

”ஆழ்தான் பாழ்ட்டேங்கிறேன்ல?” என்றான்.

சொல்லிவிட்டு. போழ்ட்டான். அதழ்கு மேலே கேழ்ட்டு என்ன பிரயோழ்ணம்?


கல்கி வளர்த்த சிரிப்பு அலைகள்

ஹாஸ்ய எழுத்தாளர்கள் ஹாஸ்யமாகத்தான் பேச வேண்டும் என்கிற அவசியமில்லை. இந்தப் பயிலரங்கத்தில் சுஜாதா, நகைச்சுவையின் பல்வேறு கூறுகளைத் தீவிரமாக ஆராய்ச்சி செய்து பேசினார். பிற இளைஞர்கள் தங்களது அனுபவங்களைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். நான் பழைய காலத்து ஆசாமி. பெருங்காய டப்பா; ஆனாலும் இப்போதும் கொஞ்சம் வாசனை இருக்கும் என்றே தோன்றுகிறது.

நகைச்சுவை எழுத்தாளர்கள்தான் ஆங்கிலத்தில் எவ்வளவு பேர்! ஜெரோம் கே.ஜெரோம், ஜேம்ஸ் தர்பர், மார்க் ட்வெய்ன், ரிச்சர்ட் கார்டன், சார்லஸ் டிக்கென்ஸ் என்று சொல்லிக்கொண்டே போகலாம். ஒரு தொழிலை வைத்து நாவல்கள் பலவற்றை கார்டன் எழுதினார் என்றால், சிரிக்க வைத்து கூடவே சிந்திக்கவும் வைத்த கட்டுரைகளை ஜெரோம் கே. ஜெரோம், தர்பார் போன்றவர்கள் எழுதினார்கள். அப்புறம் இருக்கவே இருக்கிறார், சம்பவக் குவியல்களில் ஹாஸ்யத்தைப் புகுத்தின பி.ஜி.உட்ஹவுஸ்.

உட்ஹவுஸ் படைத்த பெர்ட்டி ஊஸ்டர் என்கிற சீமானும், அவர் கீழ் பணிபுரியும் ஜீவ்ஸ¤ம் பிரபலமான கதாபாத்திரங்கள். வெள்ளைப் பன்றி வளர்ப்பு இங்கிலாந்தில் ஒரு செழிப்பான தொழில். அதை மையமாக வைத்து எழுதின நாவல் Pigs have wings.

அதில் ஒரு சம்பவம். பெர்ட்டி ஊஸ்டருக்கு ஒரு சமயத்தில் பணம் தேவைப்படுகிறது. கடன் கேட்பதற்காகப் பணக்கார மாமா வீட்டுக்கு வருகிறான். அந்த மாமா பன்றிப் பிரியர். கொழு கொழுவென்ற வெள்ளைப் பன்றிகளை வளர்த்து-அதில் மனசைப் பறி கொடுத்தவர். அங்கு வந்து தங்கியிருக்கும் பெர்ட்டி ஊஸ்டர் சும்மா இருக்க வேண்டியதுதானே? கடன் கேட்பதுதானே நோக்கம்? பொழுது போகாது வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவன், கூழாங்கற்களை ஒவ்வொன்றாக எடுத்துப் பன்றிமீது வீசுகிறான்! தற்செயலாக அப்போது எட்டிப் பார்த்த மாமா இந்தக் காட்சியைக் கண்டு, கடுங்கோபம் கொண்டு கடன் கொடுக்க மறுத்துவிடுகிறார்! ஊஸ்டர் சிக்கலில் மாட்டிக்கொள்வதும், தப்பிக்க ஜீவ்ஸிடம் யோசனை கேட்பதும்… இப்படிப் போகிறது கதை.

ஆள் மாறாட்டம்; ஒரே சாயலை உடைய இரண்டு பேர்; ஒரே பெயரை வைத்து தான் தேடின ஆசாமி இவர்தானென்று தவறாக நினைப்பது-இத்தகையவைகளை வைத்து புனையப்பட்ட நகைச்சுவைக் கதைகள், நாடகங்கள் ஏராளம். எல்லவற்றுக்கும் ஆதாரமான புராதனமான கதை, ”The Importance of Being Earnest”. ஆஸ்கார் ஒயில்ட் எழுதின நாவல். சீரியஸ் எழுத்தாளரான இவர்கூட, முற்ற முழுக்க impersonation ஆள் மாறாட்டம் இவைகளை வைத்து நகைச்சுவை மிளிர எழுதி இருக்கிறார்.

ஜெரோம் கே. ஜெரோம், மார்க் ட்வெய்ன் இவர்கள் இரண்டுபேருமே சற்று உயர்ரக ஹாஸ்யப் படைப்பாளிகள். (முதலாமவர் எழுதின ”படகில் மூன்று பேர்” கதை மிகப் பிரபலமானது.) ஜெரோம் ஒரு தடவை வாசக சாலைக்குப் போனாராம். மெடிகல் என்சைக்ளோபீடியா புஸ்தகத்தைப் புரட்டிப் பார்த்திருக்கிறார். மிக அபாயமான வியாதிகளுக்கான ஆரம்ப அறிகுறிகளைப் பற்றி விவரமாக எழுதப்பட்டிருந்ததைப் படித்ததும், அவரைப் பயம் பற்றிக்கொண்டது. ஏனென்றால், அந்த அறிகுறிகள் எல்லாம் தனக்கு இருந்தாற்போல் தோன்றியது. சுவாரஸ்யமான, புன்னகை பூக்க வைக்கும் கட்டுரை இது.

மார்க் ட்வெயின் படைத்த ‘டாமி சாயர்’ பாத்திரம் – சாயரின் சாகசங்கள் – மிகப் பிரபலமானது. மிக வித்தியாசமான கோணத்தில் சிந்தனை செய்து வேடிக்கையாக ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். எறும்புகள் மகா சுறுசுறுப்பானவை என்றுதானே நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? அப்படி இல்லையாம். எறும்புகள் மிகவும் சோம்பேறிகள். நிறைய சுமைகளைக் காரணமின்றி தூக்கிக்கொண்டு இங்குமங்கும் சென்று திரும்பத் திரும்பத் தள்ளாடும். இதே கோணத்தில் ”ஆராய்ச்சி” செய்து எழுதப்பட்ட மிக வித்தியாசமான நகைச்சுவைக் கட்டுரை அது.

இதற்கு மாறாக, அன்றாடம் நாம் பார்க்கும் சம்பவங்களை நயமாக எழுதினார் ஸ்டீபன் லீகாக். பாங்கில் கணக்கு துவக்குபவரைப் பற்றி இவருடைய கட்டுரை வாய்விட்டுச் சிரிக்க வைக்கும். ஒரு மனிதர் புதுக் கணக்கு ஆரம்பிப்பதற்காக பாங்குக்கு மிதப்பாகச் சென்றிருக்கிறார். ‘கவுண்ட்டரில்’ உள்ள பலரைப் பார்த்து, மானேஜரிடம் பேசி கையிலிருந்த பணத்தைச் செலுத்தி கணக்கு ஆரம்பித்துவிட்டார். வெளியே வந்து பார்த்தால், கையில் துளியும் பணமில்லை! வீட்டுக்குப் போகக்கூட சில்லறை இல்லை! மறுபடியும் பாங்குக்குப் போய், போட்ட தொகையை – சற்று முன்னர் கட்டப்பட்ட பணத்தை – எடுக்க முன்வருகிறார். அவரை வினோதமாகப் பார்த்த கிளார்க் ”எவ்வளவு?” என்று கேட்க, ”பூராவும்!” என்று சொல்லி, முழுப் பணத்தையும் எடுத்துவிடுகிறார். ஒரு சாதாரண மனிதனின் விந்தையான – அதே சமயம் இயல்பான என்று கூடச் சொல்லலாம் – மனோபாவம் கட்டுரையில் நன்கு வெளிப்படுகிறது.

தமிழிலும், மேலே குறிப்பிட்டதுபோல் பல நகைச்சுவை எழுத்தாளர்கள் இருந்திருக்கிறார்கள்; இருக்கிறார்கள் என்பது பெருமைக்குரிய விஷயம். கல்கி கிருஷ்ணமூர்த்தியை முன்னோடியாகச் சொல்ல வேண்டும். அவர் எழுதின இலங்கைப் பயண கட்டுரையை முதலில் வாசித்த போது எனக்கு ஏற்பட்ட பிரமிப்பு! பயணத்தைப் பற்றின பல விவரங்களை அபாரமான நகைச்சுவையுடன் தெளிவான நடையில் எழுதி இருந்தார். அப்போது சித்திரக்காரர் மாலி விகடனில் பணிபுரிந்து வந்தார்; அவர் படம் போட்டிருந்தார். மாலி ஒரு moody type. நடுவில் அவர் படம் வரைவதை நிறுத்தி இருந்தார். என்ன காரணமென்று கேட்டதற்கு, ”கிருஷ்ணமூர்த்தி எழுதணும்; படம் போடணும்” என்றார். அந்தத் தருணத்தில் கல்கி விகடனில் பணி புரியவில்லை.

கேரக்டர்களை – அதாவது தனிப்பட்ட குணநலன்களை – வைத்து ஹாஸ்யமாக நாடோடி எழுதினார். ”இப்படியும் ஒரு பிருகிருதி” முழுக்க முழுக்க குணசித்திர ஹாஸ்யக் கட்டுரைகள். ”என்னைக் கேளுங்கோன்னா!” சற்று வித்தியாசமான கட்டுரைத் தொகுதி. நாடோடி போலவே எஸ்.வி.வியும் ஒரு குடும்பத்தை வைத்து-பெத்தம்மாள், வாசுதேவய்யர் – உல்லாச வேளை என்ற புத்தகம் எழுதி இருக்கிறார். பெந்தம்மாள் பஸ்ஸிலோ டிராமிலோ பயணம் செய்யும்போது, கண்டக்டர் எச்சில் படுத்தி டிக்கெட்டைக் கிழித்துத் தருகிறார். அவள் அப்போது தன்னுடைய ஆசாரமான பின்னணியைக் குறிப்பிட்டு கண்டக்டருடன் சண்டை போட்டதைத் தத்ரூபமாக எழுதியிருக்கிறார். அப்போது பஸ்ஸில் உள்ள பல பயணிகளும், அவளுக்கு ஆதரவு தருகிறார்கள். இந்தக் கட்டுரை வெளியானது 1940களில் என்று நினைக்கிறேன்.


யானையும் முயல் குட்டியும்

போன வாரம் ஒரு திருமண வரவேற்புக்குப் போயிருந்தேன். சாப்பாட்டுக் கூடத்துக்குப் போகும் வழியில் ஒரு நண்பரைப் பார்த்தேன். ‘சாப்பிட வருகிறீர்களா?’ என்று என்னைக் கூப்பிட்டார். ‘இல்லை. இன்னும் கொஞ்ச நேரமாகட்டும்’ என்றேன்.’ எனக்கு ரொம்ப அர்ஜென்ட்டாக ஒரு வேலை இருக்கிறது. சாப்பாட்டை முடித்துக் கொண்டு கிளம்பிவிடுகிறேன்,’ என்றார் அவர். வெற்றிகரமான தொழிலதிபர். நிஜமாகவே அர்ஜெண்ட் வேலை இருந்திருக்கும்.

உள்ளே போகிறவரை கவனித்துக் கொண்டு நின்றேன். ஒரு நாற்காலிதான் பந்தியில் காலியாக இருந்தது. அதை அவர் நெருங்குகையில் ஒரு அம்மையார் – எண்பது வயதிருக்கும் – அங்கே வந்தார். இவர் உடனே, ‘நீங்கள் உட்காருங்கள். எனக்கு அவசரமில்லை,’என்று சொல்லி, நாற்காலியை சரிவரப் போட்டு அந்த மூதாட்டியை உட்கார்த்தி வைத்துவிட்டு வெளியே வந்து விட்டார். அவர் முகத்தில் ஒரு மகிழ்ச்சி பரவியிருந்தது.

இதே போல் இன்னொரு காட்சி மறுநாள் காலை தெருவில் பார்த்தேன். பார்வை இழந்த ஒருவர் வெள்ளைப் பிரம்பைத் தரையில் தட்டியடி வந்தார். அவர் பின்னே மேலும் இரண்டு பார்வை இழந்தவர்கள். ஒருவர் தோளை ஒருவராக தொட்ட வண்ணம் வந்து கொண்டிருந்தவர்கள் ஒரிடத்தில் நின்றார்கள். அங்கே சாலையைக் கடக்க வேண்டும். அப்போது தெருவோடு போய்க் கொண்டிருந்த ஒருவர், கையை உயர்த்தி, போக்குவரத்தை நிறுத்தி, அந்த மூவரையும் தெருவுக்கு மறுபுறம் கொண்டு போய் விட்டுவிட்டு, திரும்பி வந்து தன் வழியே சென்றார். அவர் முகத்திலும் மகிழ்ச்சி தெரிந்தது.

இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் மனசுக்குள் ஏற்படுகிற மகிழ்ச்சி லட்ச ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காது.

ஜைனர்களின் புராணத்தில் படித்த கதையன்று ஞாபகம் வருகிறது. அதை இங்கே சொல்ல வேண்டும்.

மகத நாட்டில் சிரேனிக் என்ற மகாராஜா இருந்தார். தாரிணி என்பது அவருடைய ராணியின் பெயர். அவள் கர்ப்பமாக இருந்த போது, மழையில் நனைய வேண்டுமென்று ஓர் ஆசை ஏற்பட்டது. (பொதுவாகவே கர்ப்பிணிகளுக்கு விசித்திர விசித்திரமான ஆசைகள் ஏற்படுவதுண்டு. ராணி என்றால் கேட்க வேண்டுமா?) சிரேனிக் மகாராஜா அவளுக்காக விசேடப் பாதுகாப்புக்கள் ஏற்படுத்தி, மழையில் சிறிது நேரம் அவளை உலாவ விட்டார். நல்ல காலமாய், உடல் நலம் கெடாமல் ஒரு புத்திரனைப் பெற்றெடுத்தாள் ராணி. மேகத்தின் அருளினால் புத்திரன் பிறந்தாக மகிழ்ச்சியடைந்த மகாராஜா அவனுக்கு மேககுமார் என்று சூட்டினார்.

அரசர்களுக்குரிய எல்லாக் கலைகளையும் தேர்ச்சி பெற்று, யாவர்க்கும் பிரியமுள்ள அரசகுமாரனாக அவன் இருந்த சமயம், ஜைன மத ஸ்தாபகரான மகாவீரர் மகத நாட்டுக்கு விஜயம் செய்தார். அவருடைய நற்போதனைகளைக் கேட்ட மேககுமார், அரச போகங்களைத் துறந்து துறவியாக வேண்டுமென்று ஆசைப் பட்டான். தந்தையும் தாயும் எவ்வளவோ தடுத்துப் பார்த்தும் கேட்கவில்லை. அவன் தனது சீடனாக வரட்டும் என்று கூறி மகாவீரர் அவனைத் தன் பரிவாரத்தில் சேர்த்துக் கொண்டு புறப்பட்டார்.

முதல் நாள் ஏதோ ஒரு பழைய வீட்டில் எல்லாரும் தங்கினார்கள். அன்றிரவு கழிப்பறைக்கு வெளியே, தரையில்தான் மேககுமார் படுக்க வேண்டியிருந்தது. ராத்திரி பூரா அவனுடைய பாயை மிதித்துக் கொண்டும், சில சமயம் அவனையே மிதித்துக் கொண்டும் போவோரும் வருவோருமாக இருந்தார்கள். ஒரு நிமிடம் கூடத் தூங்க முடியாமல் நரக வேதனையில் மூழ்கியவன், மறுநாள் குருவிடம் சென்று, ‘என்னால இப்படிப்பட்ட கஷ்டத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எனக்குத் துறவு வாழ்க்கை வேண்டாம். நான் பழையபடி அரண்மனைக்குப் போய்விடுகிறேன்,’ என்று வேண்டிக் கொண்டான்.

மகாவீரர் புன்னகை செய்தார். ‘குழந்தாய், உன்னுடைய பூர்வ ஜன்மக் கதை உனக்குத் தெரியமா? முந்தின பிறவியில் நீ யார் என்று அறிவாயா?’ என்று கேட்டார்.

‘தெரியாது, சுவாமி,’ என்றான் மேககுமார்

சொல்கிறேன், கேள். முன் ஜன்மத்தில் நீ ஒரு காட்டில் யானையாக இருந்தாய். சாதாரண யானையாக அல்ல. ஏராளமான யானைகளுக்கும் பற்பல விலங்குகளுக்கும் அரசனாக இருந்தாய். அந்தக் காட்டில் அடிக்கடி தீ விபத்து நிதழ்வதுண்டு. தப்பித்து ஒதுங்கிக் கொள்ள இடமில்லாமல் விலங்குகள் நெருப்பில் மடியும். இதைக் கண்ட நீ, காட்டின் நடுவே பல மரங்களை வெட்டி சாய்த்து, தரைமட்டமாக்கி, பரந்த மைதானம் போல ஓர் இடத்தை ஏற்படுத்தினாய். காட்டில் தீ பரவும் போது விலங்குகள் அங்கே ஒடி வந்து தஞ்சம் புகுந்து உயிரைக் காத்துக் கொண்டன.

அப்படி ஒரு முறை தீ பரவிய போது பல விலங்குகள் அங்கே வந்து சேர்ந்தன. அவைகளுக்குக் காவல் போல நீ படுத்திருந்தாய். அப்போது உன் வலது காலில் கொஞ்சம் அரித்தால், சொறிந்து கொள்வதற்காகத் தூக்கிளாய். தும்பிக்கையால் சொறிந்து கொண்டுவிட்டு, காலைக் கீழே இறக்க நினைத்தபோது, சரியாய் அந்த இடத்தில் ஒரு முயல் குட்டி ஒண்டிக் கொண்டிருப்பதைக் கண்டாய். காலை இறக்கினால் அது நசுங்கி இறந்து விடும் என்கிற நிலைமை. நீ அதன் மீது இரக்கம் கொண்டு, காலை இறக்காமல் தூக்கியது தூக்கியபடியே வைத்துக் கொண்டிருந்தாய். ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரமல்ல. இரண்டரை நாள்! காட்டுத் தீ அடங்கி, எல்லா மிருங்கங்களும் திரும்பிச் சென்றன. அந்த முயலும் தான் உயிர் தப்பிய அபாயத்தைப் பற்றி அறியாமலே ஓடி விட்டது.

அதன் பின் நீ காலைக் கீழே இறக்கினாய். ஆனால் இரண்டரை நாட்கள் தூக்கியபடியே வைத்திருந்ததால் காலில் ரத்த ஒட்டம் இல்லாமல் போகவே உன்னால் நிற்க முடியவில்லை. நடக்க முடியவில்லை. தடுமாறிக் கீழே விழுந்தாய். எழுந்திருக்க முடியாமல் கொஞ்ச நாளில் தவித்துப் பிராணனை விட்டாய்.

ஒரு முயல் குட்டியைக் காப்பாற்றுவதற்காக முன் ஜன்மத்தில் நீ செய்த தியாகத்தினால்தான் இந்த ஜன்மத்தில் மானிடப் பிறவியை அடைந்தாய். அதிலும் உன்னதமாக மகத நாட்டின் அரசகுமாரனாகப் பிறந்தாய். அப்படிப்பட்ட நீ இரண்டு மணி நேரம் துன்பத்தைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்கிறாயே? இந்தப் பிறவியில் நீ இரக்க சிந்தனை உள்ளவனாக, ஈ எறும்புக்கும் தீங்கு செய்யாதவனாக, துன்புற்றோருக்கு உதவுகிறவனாக வாழ்ந்தாயானால், இன்னும் எவ்வளவு சிரேஷ்டமான பாக்கியங்கள் அடுத்த பிறவியில் கிடைக்கும் என்படித யோசித்துப் பார்.’

மேககுமார் அவர் காலடியில் விழுந்து, ‘என்னை மன்னியுங்கள், மகா குருவே,’ என்றான். மாற்றாரின் துன்பத்தைத் துடைப்பதில் மகிழ்ச்சி கொள்பவனாக, துறவியாகவே வாழ்க்கையைத் தொடர்ந்தான்.

இன்னோர் குட்டிக் கதை:

பதின்மூன்று வயது சிறுமியருத்தி, தன் கையால் உழைத்துப் பிழைத்து தன் குடும்பம் மொத்தத்தையும் கைதூக்கிக் காப்பாற்றி ஆளாக்கினாள். அவள் நோய் வாய்ப்பட்டு மரணப் படுக்கையில் கிடந்தபோது அவளிடம் ஒரு மதபோதகர் வந்தார். ‘பெண்ணே, உனக்கு சில ஸ்தோத்திரங்களைச் சொல்லித் தரட்டுமா?’ என்று கேட்டார்.

‘மன்னியுங்கள். எதுவும் வேண்டாம்,’ என்றாள் அந்த சிறுமி. ‘கடவுளைப் பார்க்கும் போது ஸ்தோத்திரம் சொன்னாயா என்று அவர் கேட்பாரே? என்ன சொல்வாய்?’ என்றார் அவர்.

‘ஒன்றும் சொல்ல மாட்டேன். என் கைகளைக் காட்டுவேன்,’ என்றாள் அந்த சிறுமி.


சாம்பார் வடை நாலு பாக்கெட்

ஆறேழு வருடங்களுக்கு முன்பு நான் அமெரிக்கா போயிருந்தபோது (‘ஆரம்பிச்சிட்டான்யா!’ என்று நீங்கள் சொல்வது காதில் விழுகிறது) என் மருமகப் பிள்ளையுடன் ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்குப் போயிருந்தேன். அங்கே அவர் ஒரு வீடியோ கேமரா வாங்கினார். வீட்டுக்கு வந்து, தொட்டிலில் அழுது கொண்டிருக்கும் குழந்தை முதல், மாவு கரைத்துக் கொண்டிருக்கும் மனைவி வரை, தெரு, தோட்டம், வாடிப் போன ரோஜாப்பூ உள்படப் படம் பிடித்துத் தள்ளினார். என் மகளும் அவள் பங்குக்கு என்னென்னவோ எடுத்தாள்.

மூன்று மாதம் ஆகிவிட்டது. ஒருநாள், ”என்ன இது, சரியாவே வரலே?” என்ற மாப்பிள்ளையின் முணுமுணுப்புக் கேட்டது. ”நீங்க எப்பவும் இப்படித்தான்! ஒரு பொருளை எப்படி ஹாண்டில் பண்ணணும் என்றே தெரியாது!” என்று என் பெண் அவரைக் குற்றம் சாட்டினாள். ”ஒரு வாரமாய் நீதான் அதை உபயோகித்தாய்! என்ன செய்து தொலைத்தாயோ!” என்று அவர் அவளைக் கோபித்தார்.

”சரி, வாங்கின கடையில் திருப்பிக் கொடுத்து விடலாம்!” என்று மாப்பிள்ளை சொன்னதைக் கேட்டு ஆச்சரியமாயிருந்தது எனக்கு. ”வாங்கி மூன்று மாதமாகிவிட்டது. ஏராளமாய் உபயோகித்தாயிற்று! இனிமேல் எப்படி வாங்கிக் கொள்வான்?” என்றேன்.

”நாளைக்கு என்னுடன் வந்து பாருங்கள்” என்றவர், கடையில் வாங்கிய பில்லைத் தேடி எடுத்துக் கொண்டார்.

மறுநாள் அவருடன் போனேன். சூப்பர் மார்க்கெட்டில் நு¨¡ந்தவர், நேரே ஒரு கவுன்ட்டருக்குப் போனார். அங்கிருந்த பெண்ணிடம், காமிராவைக் கொடுத்து, பில்லைக் காட்டினார். அந்தப் பெண் மறுபேச்சுப் பேசாமல், ஒரு பைசா குறைக்காமல் பில்லில் இருந்த தொகையைத் தந்துவிட்டாள்.

போன வாரம் இந்த நிகழ்ச்சியைப் பற்றி ஒரு சினேகிதரிடம் சொன்னபோது, அவர் சொன்னார். ”என் உறவுக்காரர் ஒருவருக்கும் அமெரிக்காவில் இதேபோல் அனுபவம். இந்தியாவுக்குத் திரும்புகிற தினத்தன்று ஒரு பான்ட் வாங்கினார். இங்கே வந்து பிரித்தபோது ஓரிடத்தில் தையல் சரியில்லை என்று தெரிந்தது. பான்ட்டை அப்படியே மடித்துப் பெட்டியில் வைத்துவிட்டார். எட்டுமாதம் கழித்து மறுபடி அமெரிக்கா போகும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. அதே கடைக்குப் போய், பான்ட்டைக் கொடுத்து, பில்லைக் காட்டிப் பணத்தைத் திரும்ப வாங்கிவிட்டார். எட்டு மாதம் கழித்து!”

அமெரிக்காரனின் பணமென்ன, பவிஷென்ன, நம்ம ஊர் சாதா வியாபாரிகளுடன் ஒப்பிடலாமா? கூடாதுதான். இருந்தாலும் அடிப்படையான நியாயங்களைக் கூட இங்கே சில பேர் கடைப் பிடிப்பதில்லை என்பதைச் சொல்ல வேண்டும்.

மூன்று மாதங்களுக்கு முன்னால் மதுரையில் ஒரு கேசட் கடைக்குப் போயிருந்தேன். பிரபலமான பெரிய கடை. என்னமோ ஒரு ‘கானம்’ என்று பெயர். ஒரு டஜனுக்கு மேல் பலவிதமான கேசட்டுகளைத் தேர்ந்தெடுத்து, முதலாளியின் மேஜை மீது வைத்துக் கொண்டிருந்தேன். எல்லாவற்றுக்கும் பில் போடும்படி சொன்னேன். ஐந்நூறு அறுநூறு ரூபாய்போல ஆயிற்று.

பணத்தைக் கொடுத்துவிட்டு, வீட்டுக்கு வந்து ஒவ்வொன்றாய் எடுத்துப் பார்த்தபோது, நான் தேர்ந்தெடுக்காத கேசட் ஒன்றும் இருந்ததைக் கண்டேன். சூலமங்கலம் சகோதரிகளின் ‘கந்த ஷஷ்டி கவசம்’. அதை வேறு யாரோ எடுத்து மேஜை மீது வைத்திருக்கிறார்கள். நான் எடுத்து வைத்திருந்த கேசட்டுகளுடன் அது கலந்துவிட்டது. அதற்கும் சேர்த்துப் பணம் கொடுத்திருக்கிறேன் என்று தெரிந்தது. அதே சூலமங்கலம் சகோதரிகள் பாடிய கஷ்ட கவசம் ஏற்கனவே சென்னையில் என்னிடம் ஒன்று இருக்கிறது. மதுரையில் என் பிள்ளையிடமும் ஒன்று இருக்கிறது.

”நாளை நான் என் பாங்க்குக்கு அந்த வழியாகத்தான் போக வேண்டும். திருப்பிக் கொடுத்துவிடுகிறேன். அநேகமாய் பணம் தரமாட்டார்கள். வேறு ஏதாவது சுவாமி பாட்டாக வாங்கி வருகிறேன்,” என்றான் என் பிள்ளை.

அடுத்த நாள் ஞாபகமாகக் கேசட்டும் பில்லும் எடுத்துக் கொண்டு போனான். கேசட்டின் செல·பன் காகிதம் கூடப் பிரிக்கவில்லை சாயந்தரம் அவன் திரும்பி வந்ததும், ”என்ன பாட்டு வாங்கி வந்தாய்?” என்று கேட்டேன்.

”எதுவுமில்லை. பணமும் திருப்பித் தரமாட்டார்களாம், வேறு கேசட்டும் கொடுக்க மாட்டார்களாம். விற்றது விற்றதுதான் என்கிறார்கள்,” என்றான்.

அதிர்ச்சியாக இருந்தது எனக்கு.

ஆனால் இன்னோர் அனுபவத்தைச் சொல்கிறேன்.

போன மாதம் எனக்கு ஒரு விபத்து ஏற்பட்டது. (நானும் சின்ன மனிதன். விபத்தும் சின்ன விபத்து. ஆகவே பேப்பரிலோ டிவியிலோ நியூஸ் வரவில்லை)

அண்ணா நகரில் மிகப் பிரபலமான ஓட்டலில் மாடியேறிப் போனேன். ஊரிலிருந்து வந்திருந்த குழந்தைகளுக்காக நாலு பிளேட் சாம்பார் வடை வாங்கிக் கொண்டேன். அழகிய சிறு பிளாஸ்டிக் பெட்டிகளில் வைத்துத் தந்தார்கள். அவர்கள் கொடுத்த காகிதப் பையில் போட்டு எடுத்துக் கொண்டு கீழே வந்தவன், நடைபாதையை அடையும் இடத்தில் ஒரு படியை ‘மிஸ்’ பண்ணிவிட்டேன். கால் நழுவி விழுந்ததில், ஒரு பாக்கெட் வெளியே கொட்டிவிட்டது. மற்றவை, பைக்குள்ளேயே கவிழ்ந்துவிட்டன. நல்ல வேளையாக அருகிலிருந்த ஒருவர் என்னைப் பிடித்துக் கொண்டதால், முழங்காலில் லேசான சிராய்ப்பு மட்டும்தான்.

”மேலே போய் வேறே கேளுங்கள்” என்றார் என்னைப் பிடித்துக் கொண்டவர். அருகிலே இருந்த இன்னொருவர், ”அதெல்லாம் தரமாட்டார்கள். காசு கொடுத்துத்தான் வேற வாங்க வேண்டும்.” என்றார். அவநம்பிக்கையோடு மேலே போய் நடந்ததைச் சொன்னேன்.

”நீங்கள் கைதவறிக் கொட்டியதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்?” என்று கேஷியர் சொல்லவில்லை. சர்வரை கூப்பிட்டு, வேறே தரச் சொன்னார். கொட்டினது, கவிழ்ந்தது எல்லாவற்றையும் தூரப் போட்டுவிட்டு, நாலு பிளேட் சாம்பார் வடை புதிதாய்த் தந்தார்கள்.

சென்னையிலும், வெளியூர்களிலும் இவர்கள் பல கிளைகளை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அதற்கு முருகன் அருள் மட்டும் காரணமல்ல.


கையிலே நாற்பத்துநாலே ரூபாய்

போன ஞாயிற்றுக்கிழமை காலை எட்டு மணிக்கு நான் ஜெயிலுக்குப் போனேன். எப்படி எனில்–

தியாகராயநகர் பர்க்கிட் சாலையில் உள்ள ஹரே கிருஷ்ணா இயக்கத்தின் கோவிலை எல்லோருக்கும் தெரியும். பஜனை, சொற்பொழிவு, தியானம் என்று பல வகைகளில் ஆன்மீகத்தை வளர்த்து வருகிற இந்தக் கோவிலுக்கு நான் சென்றதில்லை. இந்தியாவில் பல இடங்களில் இத்தகைய மையங்களை நிறுவி, சிறப்பாக நடத்தி வருகிறார்கள் இந்த இயக்கத்தினர்.

பூரி ஜகன்னாதர் ஆலயத்தில் ரத யாத்திரை நடப்பதைப் போலவே இவர்களும் நடத்துகிறார்கள். உச்சிக்குடுமியும் ஜிப்பாவும் ஜபமாலைகளும் அணிந்து ரதத்தின் முன்னே அமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும் நம்மவர்களுடன் சேர்ந்து குதித்துப் பாடிக்கொண்டு செல்வது பரவசமான காட்சியாக இருக்கும்.

டெல்லியில் இருக்கும் ஹரே கிருஷ்ணா ஆலயத்தைப் பார்த்திருக்கிறேன். வெகு அழகானது. விஸ்தாரமானது. ராதாகிருஷ்ணரைத் தரிசித்த பின் வழவழவென்ற பளிங்குத் தரையில் நடந்து கொண்டிருந்த போது, வாட்ட சாட்டமான ஒரு மனிதர் அசைவில்லாமல் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து அருகில் சென்று கவனித்தேன். திகைத்துப் போனேன். அது அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் (ISKCON) நிறுவனரான பக்திவேதாந்த ஸ்வாமி பிரபுபாதரின் சிலை. அளவு, தோற்றம், நிறம் யாவற்றிலும் அசல் மனிதர் போலவே அற்புதமாக வடிக்கப்பட்டிருந்தது அந்தச் சிலை. அருகில் ஒரு வெள்ளைக்காரர், தான் மட்டும் தனியாக உட்கார்ந்த மிருதங்கம் அடித்தபடி ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா என்று பாடிக் கொண்டிருந்தார்.

அவ்வளவு தொலை தூரத்தில் இருக்கும் டெல்லி கோவிலுக்குப் போனவன், இதோ கூப்பிடு தூரத்தில் உள்ள தியாகராய நகருக்குப் போனதில்லை. அண்ணா நகர் பாரத் ஸ்டேட் வங்கியில் உயர்ந்த பதவியிலுள்ள நண்பர் எஸ். மோகன்தாஸ் அடிக்கடி கூப்பிட்டுக் கொண்டிருந்தார். இந்தக் கோவிலின் தீவிர அடியார்களில் ஒருவர் அவர்.

சென்ற வாரம் மாம்பலம் டைம்ஸ் இதழில் ஒரு செய்தி படித்தேன். தியாகராய நகர் ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர் சென்னை மத்திய சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்காக பஜனை, சொற்பொழிவு முதலான ஆன்மீக நிகழ்ச்சிகளை நடத்தப் போகிறார்கள் என்பது அது. நண்பர் மோகன்தாஸிடம் சொல்ல, அவர் மகா சந்தோஷத்துடன் அழைத்துச் சென்றார்.

நிகழ்ச்சியை நடத்துவதற்காகச் சுமார் இருபது கிருஷ்ண பக்தர்கள் சிறைவாசலுக்கு வந்திருந்தார்கள். ஒருவர் கலிபோர்னியாவிலிருந்து வந்த அமெரிக்கர். மலேசியாவிலிருந்து வந்திருந்த பக்தர் விரஜேந்திர நந்ததாஸ் மகராஜ். காவியுடை தரித்த சன்யாசி. தி.நகர் இஸ்கான் துணைத் தலைவரான சுமித்ரா கிருஷ்ணதாஸ், சிறைச்சாலை மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர் வசந்தி (நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர் இவர்தான்) முதலிய பலரும் சென்னை வாசிகள்.

சிறைச்சாலையின் தலைமைக் காவல் அதிகாரியான ஜி. ராமச்சந்திரன் போலீஸ் மிடுக்கையும் விட்டுவிடாமல், மனித நேயத்தைக் காட்டும் புன்னகையையும் நழுவ விடாமல் எங்களை வரவேற்று, சுத்தமாயும் நிசப்தமாயும் இருக்கும் பாதைகளின் வழியே ஒரு கொட்டகைக்கு அழைத்துப் போனார்.

முன்பெல்லாம் கைதிகள், குற்றவாளிகள் என்றால் ஐம்பது வயதைத் தாண்டியவர்களாக இருப்பார்கள். இங்கே குழுமியிருந்தவர்கள் பெரும்பாலும் முப்பது வயதுக்குட்பட்ட இளைஞர்களாக இருப்பதைக் காண மனசுக்குக் கஷ்டமாக இருந்தது. இந்தச் சமுதாயச் சீர்கேட்டுக்கு யாரைக் குற்றம் சொல்வது?

நாங்கள் வந்திருக்கும் நோக்கத்தைச் சுருக்கமாக மைக்கில் அறிவித்தார் ராமச்சந்திரன். அவர்களைச் ‘சிறைக் கைதிகள்’ என்று குறிப்பிடாமல் ‘சிறைவாசிகள்’ என்று குறிப்பிட்டது கண்ணியமாக இருந்தது.

‘நாம் ஒவ்வொருவரும் சந்தோஷமாக இருக்கவே விரும்புகிறோம்’ என்று ஆரம்பித்து அருமையாகப் பேசினார் சுமித்ரா கிருஷ்ணதாஸ். பொதுப்படையாக எல்லோருக்குமாகப் பேசுவதுபோல் இல்லாமல், தனித்தனியே ஒவ்வொருவரையும் எதிரே உட்கார்த்தி வைத்துக் கொண்டு சொல்வது போல இருந்தது இவருடைய பேச்சுப் பாணி.

‘சந்தோஷமாக இருக்க வேண்டுமானால் கடவுள் நாமத்தைச் சொல்ல வேண்டும். நான் ஒரு மந்திரம் சொல்லித் தருகிறேன். அதைத் திரும்பிச் சொல்லுங்கள்’ என்று கூறி ‘ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே, ஹரே ராம, ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே’ என்று மூன்று முறை சொன்னார்.

முதல் முறை, முன் பகுதியில் இருந்த சிலர் மட்டுமே திருப்பிச் சொன்னார்கள். ‘வெட்கப்படாமல், கூச்சப் படாமல் சத்தமாகச் சொல்லுங்கள்!’ என்று சுமித்ரா கிருஷ்ணதாஸ் உற்சாகமூட்டினார். ‘நான் இருக்கிறேன் என்று பார்க்கிறீர்களா? நான் வேண்டுமானால் போய் விடட்டுமா?’ என்று சிறை அதிகாரி ராமச்சந்திரன் கேட்டார். ‘வேண்டாம், வேண்டாம். நீங்கள் இருங்கள்’ என்று கைதிகள்-இல்லை, சிறைவாசிகள் – கோரஸாகக் குரல் கொடுத்து, உற்சாகமாய், மிக பலமாய் ‘ஹரே கிருஷ்ணா’ என்று கோஷமிட்டார்கள்.

‘இப்போது உங்களுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருப்பவரின் முகத்தைப் பாருங்கள். வந்த உட்கார்ந்த போது எவ்வளவு அலுப்பு, சலிப்பாக, வருத்தமாக இருந்தார்? இப்போது அவர் முகத்தில் எத்தனை சந்தோஷம் பொங்குகிறது பாருங்கள். கடவுள் நாமத்தைச் சில நிமிடம் சொன்னாலே இத்தனை சந்தோஷம் ஏற்படுகிறதென்றால், நாள் பூராவும் என்ன வேலை செய்துகொண்டிருந்தாலும், அந்த மந்திரத்தை சொல்லிக்கொண்டிருந்தால் எப்படி இருக்கும்?’ என்றார் சுமித்ரா கிருஷ்ணதாஸ். உண்மையிலேயே அவர்களுடைய முகங்களில் ஒரு புதிய பொலிவு ஏற்பட்டிருந்தது.

இதன்பிறகு ஹரே கிருஷ்ணா பஜனை, மேளத்துடன், மெதுவாக ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக வேகமும் நாதமும் ஓங்கி ஒலிக்க, சிறைவாசிகள் பலரும் எழுந்து வந்து சேர்ந்துகொண்டார்கள். அரை மணி நேரத்துக்கு அமர்க்களமான ஆனந்தம். அந்தக் கலிபோர்னியாக்காரர் பாடிப் பாடிப் பம்பரமாய்ச் சுழன்றார் பரவசத்துடன்.

பிற்பாடு இவர் சொன்ன ஒரு விஷயம் சுவாரஸ்யமானது. சிறைவாசிகளிடம், ‘நீங்கள் கொடுத்து வைத்தவர்கள். இறை வழிபாடு செய்யவும், கடவுள் நாமத்தை சொல்லவும், இங்கே சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கிறது. ரஷ்யா, போலந்து முதலான இடங்களில் எங்களைச் சிறைக்குள் அனுமதிப்பதில்லை. அதற்காக, அங்கேயெல்லாம் வேண்டுமென்றே ஏதாவது தப்புத் தண்டா பண்ணி, கைதாகி, ஜெயிலுக்குப் போய்க் கிருஷ்ண பக்தியைப் பரப்புகிறோம்’ என்றார்.

நிகழ்ச்சிகள் முடிந்து வெளியே வந்தபோது, பெரிய ஜெயிலுக்கு வந்துவிட்டோம் என்ற உண்மை உறைத்தது. சின்ன ஜெயிலுக்குள் கிடைத்த சிறிது நேர சந்தோஷத்துக்குக் காரணமானவர் பக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதர். வெறும் நாற்பத்து நாலே ரூபாயுடன் ஒரு சரக்குக் கப்பலில் ஏறி நியூயார்க்கை அடைந்து, கிருஷ்ண பக்தியைப் பரப்பி, அதன்பின் ஜீவித்திருந்த பதினொரு வருட காலத்துக்குள் நூற்றெட்டு மையங்களை அமைத்து, இன்று உலகெங்கும் சுமார் நூறு வழிபாட்டு நிலையங்கள் அமைவதற்கு அருள்புரிந்த அந்த அதிசய மனிதரை மானசீகமாக நமஸ்கரித்தேன்.


கன்னத்தில் போட்டுக் கொள்கிறேன்

‘அண்ணா நகர் டைம்ஸ்’ என்ற ஆங்கிலப் பேட்டைப் பத்திரிகையில் வாரம்தோறும் தமது அனுபவங்களை சுவையான ஒரு ந¨ச்சுவைக் கட்டுரையாக தமிழில் எழுதி வருகிறார் பிரபல எழுத்தாளர் ரா.கி. ரங்கராஜன்.

அந்தக் கட்டுரைகள் சிலவற்றை அப்புசாமி.காம் ஸைட்டில் வெளியிடுவதில் பெருமைப்படுகிறோம்.

(நன்றி: அனுமதி அளித்த ரா.கி.ராவுக்கும், அண்ணா நகர் டைம்ஸ¤க்கும்.)

நாலு மூலை

தேவன் அறக்கட்டளை விழாவுக்காக பாரதீய வித்யா பவனுக்குப்ப போயிருக்கவும் வேண்டாம். கால்தவறிக் கீழே விழுந்திருக்கவும் வேண்டாம்.

அண்ணா நகருக்குக் குடி வந்த பிறகு எனக்கு இது இரண்டாவது விழுகை. (இப்படியரு சொல் தமிழில் இருக்கிறதா என்று பேராசிரியர் டாக்டர் மறைமலைதான் சொல்ல வேண்டும்.)

இந்தத் தடவையும் சதி செய்த வில்லன் ஒரு சிவப்புக் கம்பளம்தான். இரண்டு வரிசைகளுக்கும் நடுவே வாசலிலிருந்து மேடை வரை நீளமாக விரித்திருந்த சிவப்பு விரிப்புத்தான். “ஆகா! நமக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பு!” என்ற அகங்காரத்துடன் முதல் வரிசையை நோக்கி மார்பை நிமிர்த்திக் கொண்டு நடந்ததால், விரிப்பில் இருந்த சிறிய சுருக்கத்தைக் கவனிக்கத் தவறிவிட்டேன். (விழாக்களுக்குச் செல்லும் வயோதிகர்கள் இதைச் சிவப்புப எழுத்தில் எழுதி வைத்துக் கொள்வது நலம்.)

ஒரு இடறு இடறி இரண்டு நாற்காலிகளைத் தாண்டி மூன்றாவது நாற்காலியில் போய் விழுந்தேன். அதில் அமர்ந்திருந்தவர் நல்ல காலமாக ஓர் ஆண்மகன், பெண்ணாக இருந்தால் மேலும் மூன்று நாற்காலிகள் தூரத்துக்கு என்னை எட்டித் தள்ளி விட்டிருப்பார். இந்த நல்லவர், கிழம் நழுவிக் காலில் விழுந்தது என்று அனுதாபப்பட்டவராக என்னை அன்போடு தாங்கிப் பிடித்துக் கொண்டு தன் நாற்காலியிலேயே உட்காரும்படி சொல்லிவிட்டு, வேறொரு இருக்கைக்குப் பெருந்தன்மையுடன் போய்விட்டார்.

“என்ன? என்ன?” என்று பலர் கேட்டார்கள். ” யார் விழுந்தது, ரா.கி. ராங்ராஜனா?” என்று சிலர் கேட்டார்கள். “ரா.கி. ரங்கராஜனா? யார் அவர்?” என்று என் பின்னால் ஒருவர் சொல்வதும் காதில் விழுந்தது. ஆகவே இதை நல்ல பப்ளிஸிட்டி என்றும் சொல்ல முடியாது.

வானதி திருநாவுக்கரசு “என்னப்பா? என்ன ஆச்சு?” என்று கேட்டார். தேவன் அறக்கட்டளையின் செயலாளர் சாருகேசியும் எழுத்தாளர் வாதூலனும் வந்து காப்பி சாப்பிடுகிறீர்களா?” என்று பரிவோடு கேட்டார்கள். சற்றுப் படபடப்பாக இருந்ததால் சரி என்றேன். உடனே சென்றார்கள். உடனே மறைந்தார்கள். விழா முடிந்த பிறகுதான் வந்தார்கள். “அடி ஒன்றும் பலம் இல்லையே?” என்றார்கள். காப்பியைப் பற்றி அவர்களும் சொல்லவில்லை. நானும் கேட்கவில்லை. பாவம், அவர்களுக்குத் தலைக்குமேல் வேலை அப்போது.

ஜ.ரா. சுந்தரரேசன் என் நெருங்கிய நண்பர் என்று ரொம்பப் பேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். கிடையாது. சரியான துரோகி. உள்ளே நுழையும்போதே நான் அவரிடம், “நீங்கள் முன்னால் போங்க. நான் தங்கள் தோளைத் தொட்டாற்போல் வருகிறேன்” என்று சொல்லியிருந்தேன். ஒப்புக் கொள்கிற மாதிரி தலையாட்டியவர், என்னை முன்னால் போகவிட்டு, என் தோளைத் தொட்டாற்போல் பின்னால் வந்தார். நான் விழுந்ததும் எச்சரிக்கை அடைந்து பத்திரமாக வேறொரு வரிசையில் போய் உட்கார்ந்து கொண்டு, “அடி கிடி இல்லையே?” என்று கேட்கிற மாதிரி அங்கிருந்தே கையை வீசிச் சைகையில் கேட்டார். பக்கத்து நாற்காலி காலியாக இல்லை. இருந்திருந்தால் தூக்கி அவர்மீது அடித்திருப்பேன்.

விழா முடிந்த பிறகு என்னிடம் வந்தவர், “விழுந்ததுதான் விழுந்தீர். போட்டோவில் விழுந்திருக்கக் கூடாதோ?” என்று சிலேடை வேறே! இவரா என் சிநேகிதர்!

விழுந்து எழுந்தாவது தேவன் விழாவுக்குப் போயிருக்க வேண்டுமா என்று நீங்கள் கேட்கலாம். தேவனின் எழுத்துக்கு அடிமை நான். அத்துடன், கும்பகோணம் அரசினர் கல்லூரியில் என் தந்தையிடம் சம்ஸ்கிருதம் படித்த மாணவர் அவர். அதனால் என்மீது அவருக்குத் தனிப் ப்ரீதி, மேலும் என் முதல் சிறுகதையை ஆனந்தவிகடனில் பிரசுரித்தவரும் அவரே.

இரண்டு தமிழ்ப் புத்தகங்களை வெளியிடுவது அன்றைய நிரலில் முக்கிய நிகழ்ச்சி. ஒன்று சென்ற வருடம் கல்கியின் சார்பில் நடைபெற்ற நகைச்சுவைப் பயிலரங்கத்தில் பேசிய சிலரின் சொற்பொழிவுத் தொகுப்பு. (என் கட்டுரையும் உண்டு!) ‘கல்கி வளர்த்த சிரிப்பலைகள்’ என்ற இந்தப் புத்தகத்தில், கல்கியின் எழுத்திலிருந்து சில நகைச்சுவை முத்துக்களையும் தொகுத்துச் சேர்த்திருக்கிறார் வாதூலன்.

இரண்டாவது புத்தகம் ‘கல்கியின் கடிதங்கள்’ என்ற தலைப்புக் கொண்டது. டி.கே.சி. ராஜாஜி, கல்கி ஆகியோர் தங்களுக்குள் எழுதிக் கொண்ட கடிதங்களுடன், கல்கி தன் மனைவிக்கும், மகனுக்கும், மகளுக்கும் எழுதிய கடிதங்களும் இதில் இடம் பெற்றிருக்கின்றன. தொகுத்தவர் சுப்ரபாலன்.

ஆறு மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பிக்க வேண்டும். ஆறேகால், ஆறரை, ஆறேமுக்கால் என்று நேரம் ஓடிக்கொண்டிருந்தது. புத்தகங்களை வெளியிட வேண்டிய ஹிந்து என். ராம் ஏழு மணிக்குத்தான் வந்தார். நிகழ்ச்சி நேரத்தைத் தப்பாக எண்ணி விட்டேன் என்று ஏதோ சாக்குச் சொன்னார். அதையாவது மன்னிக்கலாம். தான் இன்னும் இரு புத்தகங்களையும் வாசிக்க முடியவில்லை என்றும், ஆனால் நிச்சயமாய் நன்றாகத்தான் இருக்கும் என்று நம்புவதாகவும் சொன்னார். இது எப்படி இருக்கு!

பழம் பெரும் எழுத்தாளரான பரணீதரன் (‘மெரீனா’) புத்தகங்களைப் பெற்றுக் கொண்டார்.

ஹிந்துவில் தொடர்ச்சியாக வேடிக்கையான கட்டுரைகளை எழுதி வருகின்ற வி. கங்காதரும், ஹிந்து துணை ஆசிரியர் ஸி.வி. கோபாலகிருஷ்ணனும் (ஸிவிஜி) தேவனின் பரம ரசிகர்கள். தேவன் அறக் கட்டளை சார்பாக இருவருக்கும் பதக்கங்கள் அணிவித்துப் பாராட்டினார்கள்.

தேவனின் படைப்புக்களில் ஒவ்வோர் பகுதியாகக் குறிப்பிட்டு என்னென்ன விதத்தில் அது சிறப்பு என்று கங்காதர் பாராட்டியது பிரமிப்பைத் தரும் பேச்சாக இருந்தது. அடுத்து, ஸிவிஜியும் நன்றாகவே பேசினார்.

இந்த விழாவுக்குப் போனதில் எனக்குக் காலில் மட்டுமல்ல, மண்டையிலும் அடி. எப்படி என்கிறீர்களா?
ஒருத்தர் நம்மைப் பார்த்து ‘ரொம்ப யங்காத் தெரியறீங்க’ என்று புகழ்ந்தால், நம்மை வயசானவங்கன்னு அவுங்க நினைக்கிறாங்கன்னு அர்த்தமாம்.

– பொன்மொழி பொன்னப்பா.

அண்ணா நகரில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் ஏன் எல்லாரும் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள் என்று இரண்டு வாரம் முன்பு கிண்டல் செய்தேன் அல்லவா? அதற்கு இங்கே பழிக்குப் பழி.

இந்த விழாவில், பரணீதரன் ஒருவரைத் தவிர மற்ற அத்தனை பேரும், முதல் வாக்கியம் முதல் கடைசி வாக்கியம் வரை ஆங்கிலத்திலேயே பேசினார்கள்! அதுவும் முழுக்க முழுக்கத் தமிழ் எழுத்தாளரான தேவனின் ரசிகர்கள் நிறைந்த தமிழர்களின் கூட்டத்தில்! தமிழிலேயே பிறந்து தமிழிலேயே வளர்ந்த அக்மார்க் தமிழர்கள், ஆங்கிலத்திலேயே சண்டை மாருதம் செய்தார்கள்!

புத்தி, புத்தி இனிமேல் எந்தப் பேச்சாளர்களையும் கேலி செய்ய மாட்டேன். கன்னத்தில் போட்டுக் கொள்கிறேன்.


திருப்பதி லட்டு

ரா.கி.ர
நாற்பத்தைந்து வயதாகியிருந்தபோது ஒரு முறை திருப்பதிக்குப் போனேன் (நாற்பத்தைந்து வயது என்று சும்மா ஒரு மாறுதலுக்காகத்தான் சொல்கிறேன். முப்பது வருடங்களுக்கு முன்பு, நாற்பது வருடங்களுக்கு முன்பு, பற்பல வருடங்களுக்கு முன்பு என்று சொல்லி சொல்லி எனக்கும் போரடித்துவிட்டது. உங்களுக்கும் போரடித்து விட்டிருக்கும்.)

சென்னையிலிருந்து கீழ்த்திருப்பதிக்குப் போக பஸ்ஸோ, ரயிலோ இருந்தது. கீழேயிருந்து மலைக்குப் போகும் பஸ்களுக்குத்தான் நெருக்கடி அப்போதெல்லாம். எப்படியோ ஒரு வழியாக மலையை அடைந்து, ஒரு தேவஸ்தான சத்திரத்தில் படுத்துத் தூங்கிவிட்டு காலை ஏழு மணி சுமாருக்குக் கோவிலை அடைந்தால்–

கூட்டமே கிடையாது. கியூவும் இல்லை. பிரதான வாயில் வழியாக நேரே உள்ளே போய் வெங்கடேசப் பெருமாளைக் கண்குளிர தரிசித்தேன். ரொம்பக் குறைவாகவே பக்தர் கூட்டம் இருந்தது. ஆகவே ஜரகண்டி ஜரகண்டி என்று யாரும் பிடித்துத் தள்ளவில்லை. முடிக் காணிக்கை செலுத்திய ஆந்திர கிராமவாசிகள் ‘ஏழு கொண்டலவாடா, கோவிந்தா!’ என்று விண்ணதிரக் கூவினார்கள். (இப்போதெல்லாம் நாகரிகம் அதிகரித்து விட்டது. ‘கோவிந்தா! கோவிந்தா!’ கோஷமிடுவதற்குக் கூச்சப்படுகிறார்கள்.)

தரிசனம் முடிந்தபின் மறுபடி வெளியே வந்தேன். வாசலில் கூட்டம் இல்லை. எனவே மறுபடியும் ஒருமுறை பிரதான வாசல் வழியாகவே நேரே போய் மறுபடியும் தரிசனம் செய்தேன். இப்படி மூன்று முறை உள்ளே போய் விட்டுத் திரும்பினேன்.

இந்த சம்பவத்துக்கு முன்பும் பின்புமாகப் பல முறைகள் திருப்பதி போயிருக்கிறேன். வருடத்திற்கு மூன்று முறை போய் வருவது சாதாரண விஷயமாக இருந்தது.

தரிசனம் மட்டுமல்ல, திருப்பதி லட்டு வாங்கி வருவதிலும் எந்தக் கஷ்டமும் ஏற்பட்டதில்லை. இரண்டு ரூபாய், மூன்று ரூபாய், ஐந்து ரூபாய் என்று விலை மட்டும் உயர்ந்துகொண்டு போயிற்று. ஆனால் அன்றைய லட்டு பத்துநாள்கூடக் கெடாமலே இருக்கும். திராட்சை, ஏலம், முந்திரி, கிராம்பு எக்கச்சக்கம். அதே தரம் இன்று இருக்கிறது என்று சொல்ல முடியாது.

பக்தர்களின் கூட்டம் ஏற ஏற லட்டுக்கு கிராக்கியும் அதிகமாகிவிட்டது. கோவிலுக்கு எதிரில் இருந்த ஒரு பாங்கில் விற்பனை செய்தார்கள். பிறகு தனித் தனியாகக் கவுண்ட்டர்கள் வைத்தார்கள். நடுவில் ஒருமுறை, தியேட்டரில் பிளாக் டிக்கெட் விற்கிற மாதிரி, ஒருவர், ‘இப்படி வாங்க, நான் வாங்கித் தருகிறேன்’ என்று என்னை ஒரு கடைப்பக்கம் அழைத்துச் சென்று பத்து லட்டுகள் கொடுத்தார். அவ்வளவும் போலி! ஒரே நாளில் நாற்றம் எடுத்துவிட்டது. இப்படி ஒரு போட்டித் தொழிற்சாலை நடைபெறுவதை தேவஸ்தானத்தில் கண்டுபிடித்து, வெகு விரைவில் ஒழித்துவிட்டார்கள்.

சமீபத்தில் திருப்பதிக்குப் போயிருந்த போது, கோவிலுக்கு வெளியே மகா நீளமான க்யூ நின்றிருப்பதைக் கண்டேன். லட்டு வாங்குவதற்காகக் காத்திருந்த க்யூ அங்குலம் அங்குலமாக நகர்ந்துகொண்டிருந்தது. பெருமாள் படம் போட்ட பாலிதீன் பையில் டஜன் கணக்கில் லட்டு வாங்கிக்கொண்டு வெளியே வந்தவர்களின் முகத்தைப் பார்க்க வேண்டுமே! ஆனந்தம்! பரமானந்தம்! கோட்டையைப் பிடித்துவிட்ட மாதிரி ஒரு வெற்றிப் பெருமிதம்! சுவாமி தரிசனத்தை விட லட்டு தரிசனமே பெரிது போலும்!

யோசித்துப் பார்த்தேன்.

இந்த லட்டு சமாச்சாரம் திருப்பதிப் பெருமாளுக்கு எப்படி வந்து ஒட்டிக்கொண்டது என்று தெரியவில்லை. பழனி பஞ்சாமிர்தம் என்றால் புரிகிறது. பழனி முருகனுக்கு (எல்லா முருகனுக்குமே) பஞ்சாமிர்த அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால் வெங்கடாசலபதிக்கு அப்படி எதுவும் பண்ணுவதில்லையே? எங்கிருந்து வந்தது லட்டு?

வைணவப் பெரியவர்கள் யாரிடமாவது கேட்க வேண்டுமென்று நினைத்தபோது திருவஹீந்திரபுரம் உருப்பட்டூர் ஸெளந்தரராஜன் என்ற அன்பர் அறிமுகமானார். (அகப்பட்டுக்கொண்டார் என்றும் சொல்லலாம்) மாவட்ட வருவாய் அதிகாரியாகவும், தாராபுரம் கூட்டுறவு நூற்பு ஆலையில் மானேஜிங் டைரக்டராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர் இவர். ஸ்ரீ வேதாந்த தேசிக ரிஸர்ச் ஸென்டரின் போஷகர்களில் ஒருவரான இவர் ‘ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயம்–சில முக்கிய விஷயங்கள்’ என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார். லேட்டஸ்டாக, ‘ஏன்–என்ன–எதற்கு?’ என்ற புத்தகத்தை இயற்றி, எனக்கு அனுப்பி, என் அபிப்பிராயத்தைச் சொல்ல வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

வைஷ்ணவர்களுக்கு மட்டுமே உரித்தான விஷயங்களைக் குறித்து, வைஷ்ணவர்களுக்கு மட்டுமே புரியக் கூடிய நடையில் கேள்விகளும் பதில்களுமாக இந்தப் புத்தகம் அமைந்திருக்கிறது. வைஷ்ணவர் அல்லாதார்க்கும் பயன்படக்கூடியதாகச் சில பொதுவான கருத்துக்களையும் அதில் கூறியிருக்கிறார். ஓரிடத்தில், ‘ஒருவன் மரிக்கும் போது அவன் செய்த பாவத்தில் ஒரு பகுதி அவனிடம் பகைவர்களாக நடந்து கொண்டவர்களைச் சேருகிறது என்று சாஸ்திரம் சொல்லுகிறது. ஏற்கெனவே செய்துள்ள பாவமூட்டைகளின் கனம் தாங்காமல் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கும் நாம், மேலும் பாவத்தைச் சம்பாதிக்காமல் தவிர்ப்பதற்காக நம்மிடம் பகைமை பாராட்டுவோரிடம் பாசத்துடன் பழகுவது நல்லது’ என்று கூறியிருக்கிறார். இன்னோரிடத்தில், சின்ன வயதிலேயே கோவிலுக்குப் போகும் பழக்கம் ஏற்பட்டால்தான் பெரியவர்களான பிறகு எந்த ஊரில், எந்தக் கண்டத்தில் இருந்தாலும் அங்கே கோவில் இருக்கிறதா என்று விசாரித்து அறிந்துகொண்டு போக வேண்டும் என்று மனம் தூண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார். அரை வயிறு உணவு சாப்பிட்டு, கால்வயிறு நீர் அருந்தி, மீதி கால் வயிற்றைக் காலியாக விட வேண்டும் என்றும், சாப்பிடும் போது பேசக்கூடாது என்றும், சாப்பிடும் சாப்பாட்டை நிந்திக்கக்கூடாது என்றும்–இதுபோல எல்லா மனிதர்களுக்கும் பொதுவான குறிப்புகள் பல தந்திருக்கிறார் ஸெளந்தரராஜன். (போன் எண்: 484 3986).

திருப்பதி லட்டு எப்போது எப்படி ஆரம்பித்தது என்று கேட்பதற்கு இவரே தகுந்த நபர் என்று தோன்றியதால் கேட்டேன்.

‘இன்று நேற்றல்ல, திருப்பதி கோவில் ஸ்தாபிக்கப்பட்ட காலத்திலிருந்து இது இருந்து வருகிறது. திருப்பதி §க்ஷத்திரத்தின் முக்கிய அம்சமே ஸ்ரீனிவாசர்–பத்மாவதி திருமணம்தான். கல்யாணமென்றால் கட்டாயம் லட்டு இருக்க வேண்டும். லட்டு இல்லாமல் கல்யாணம் இல்லை. வெங்கடாசலபதி–பத்மாவதித் தாயார் விவாகத்தின் போது ஆரம்பமான லட்டு, காலம் செல்லச் செல்ல ரொம்ப முக்கியத்துவம் பெற்று வருகிறது’ என்றார் ஸெளந்தரராஜன்.

உண்மைதான். முக்கியத்துவம் என்றால் முக்கியத்துவம், உங்க வீட்டு முக்கியத்துவம் எங்க வீட்டு முக்கியத்துவம் இல்லை. திருப்பதிக்குப் போவதற்கு முன்னால் யாரிடமேனும் சொல்லிக்கொண்டால், ‘வரும்போது லட்டு வாங்கி வா’ என்கிறார்கள். வந்தபிறகு சொன்னால், ‘லட்டு வாங்கி வந்தாயா?’ என்று கேட்கிறார்கள்.

‘நன்றாய்ப் பெருமாளை சேவித்தாயா?’ என்று யாரும் கேட்பது கிடையாது.

(அண்ணாநகர் டைம்ஸில் ரா.கி.ர எழுதியது.)


நாங்கள் மூன்று பேர்

நாங்கள் மூன்று பேர்

பாக்கியம் ராமசாமி

சரித்திரத்தில், கி.மு., – கி.பி., என்ற பாகுபாடு இருப்பதுபோல, இளைஞர் வாழ்க்கையில், க.மு.,- க.பி., என்ற பிரிவுகள் இருப்பது, எல்லாரும் அறிந்ததே. (க.மு., கல்யாணத்துக்கு முன்; க.பி., கல்யாணத்துக்குப் பின்!)

என், 23வது வயதில், பத்திரிகை காரியாலயத்தில், நான் வேலையில் சேர்ந்த போது, பிரம்மச்சாரியாகத் தான் இருந்தேன்.

“வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்…’ போல, வீட்டுக்கு ஒருத்தர் பிரம்மச்சாரியாக இருக்க வேண்டும் என்ற கொள்கையில், அப்போது எனக்கு ஒரு பிடிப்பு இருந்தது.

அதாவது, ஒரு வீட்டில் மூன்று, நாலு சகோதரர்கள், இரண்டு, மூன்று சகோதரிகள் என்று கூட்டுக் குடும்பமாக, அந்தக் காலத்தில் இருப்பர்.

அந்தக் கும்பலில், யாராவது ஒருத்தராவது, திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மச்சாரியாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன்.

ஏனெனில், அந்த ஒருத்தனாவது, சுயநலமில்லாமல், குடும்பத்தின் மொத்த நன்மையைக் கருதி, மற்றவர்களுக்குள் ஏற்படும் சண்டை, சச்சரவு, பிணக்குகளைத் தீர்க்கும், பொது மனிதனாகத் திகழ்வான் என்பது என் அனுமானம்.

ஆகவே, நானும் வாய்க்கு வாய், “எனக்குக் கல்யாணம் வேண்டாம். குடும்ப மொத்தத்தின் சேவைக்காக என்னை அர்ப்பணம் செய்து கொள்கிறேன்…’ என்று சொல்லி, சுதந்திர பிரம்மச்சாரியாக, ஓட்டல் சாப்பாடு, ரூம் வாழ்க்கை என்று இருந்தேன்.

நான் வேலை பார்த்த காரியாலயத்தில், ஆசிரிய இலாகாவில் மூன்று பேர் இருந்தோம். ரா.கி.ர., புனிதன், நான், மூவரும் சேர்ந்து செய்கிற காரியத்தை, ஆசிரியர் எஸ்.ஏ.பி., ஒருத்தரே செய்வார். ஆகவே, ஆசிரிய இலாகாவில் நாலு பேர் இருந்தோம் என்பதே சரி.

நான் ஓட்டலில் சாப்பிடும் பிரம்மச்சாரியாதலால், “ஐயோ பாவம்… நாக்கு செத்திருக்குமே…’ என்று நண்பர்கள், அவ்வப்போது தங்கள் வீட்டு விசேஷங்களின் போதெல்லாம் சாப்பிட அழைப்பர். கிராக்கி செய்யாமல், அழைப்புகளைப் பெருந்தன்மையாக (அல்லது சிறுந்தன்மையாக) ஏற்றுக் கொள்வேன்.

எங்கள் மூவரில், ரா.கி.ர., மூத்தவர். பதவியிலும், வயதிலும் அனுபவத்திலும் சீனியர்.

ரா.கி.ர.,வும் புனிதனும், “நீ… வா… போ…’ போட்டுப் பேசிக்கொள்வர். நானும், புனிதனும், “வாடா… போடா…’ என்று பேசிக் கொள்வோம். (இரண்டு பேரும் சேலம், தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாதலால் இணக்கம் அதிகம்) எங்க மாவட்டத்து வட்டார வழக்கு வார்த்தைகளை பயன்படுத்திப் பேசிக் கொள்வதில், மகா சந்தோஷம்.

“சாமி… மெரமணை பிரமாதம்…’ என்று பேசிக் கொண்டால், ரா.கி.ர., முழிப்பார். “என்னடா மெரமணை…’ என்பார்.

“சாமி ஊர்வலம் போவதைத்தான், எங்க வட்டாரத்தில், “மெரமணை’ என்போம்…’ என்று, அவருக்கு விளக்குவோம்.

தர்பீஸ் பழத்தை, எங்கள் வட்டாரத்தில், “கோச்சாப் பழம்’ என்போம்.

அந்த வார்த்தையைக் கேட்டாலே, ரா.கி.ர., காதைப் பொத்திக் கொண்டு, “சகிக்கலையே…’ என்று ஓடுவார்.

“தர்ப்பீஸ் மட்டும் வாழுதோ…’ என்போம்.

ரா.கி.ர., தஞ்சை மாவட்டக்காரராதலால், சங்கீதம், வெற்றிலை போடுதல் ஆகிய பழக்கம் உண்டு. வெற்றிலையை, அவருடைய பெட்டியிலிருந்து எடுத்து, இரண்டு சீவலுடன், ஒரு கசக்குக் கசக்கி, நான் வாயில் திணித்துக் கொண்டால், “ஐய்யோ… ஐய்யோ… ஏய்யா இப்படிக் கொலை பண்ணுறீர்?’ என்று பதைத்து, …

“இரும்… நான் மடிச்சுத் தர்றேன்…’ என்று ஒரு வெற்றிலையை எடுத்து, அழகாக நீவித் துடைத்து, சுண்ணாம்புத் தடவி, நரம்பு கிள்ளி, இரண்டாகக் கிழித்து, இரண்டு சீவலை வைத்து அழகாகச் சுருட்டி மடித்து, “இப்ப போட்டுக்கோய்யா…’ என்று எனக்குத் தருவார்.

அவரை எரிச்சல் மூட்டுவதற்காகவே, குறும்பாக நான் வெற்றிலையை வெறுமே சுருட்டி வாயில் அடைத்துக்கொண்டு, இரண்டு சீவலையும் போட்டுக் கொள்வேன்.

“இப்படிப் போட்டுக் கொள்வதும் ஒரு ருசிதான்…’ என்று சொல்வேன்.

எனக்குக் கல்யாணமானதும், ரா.கி.ர., என்னை, “வாங்க… போங்க…’ என்று, மரியாதை போட்டுக் கூப்பிடத் துவங்கினார்.

ஒரு தரம், ஆசிரியர் தன்னிடம், “நீங்களெல்லாம் வா… போ… என்றுதான் கூப்பிட்டுக் கொள்வீர்களா… தனியாக இருக்கும்போது, அப்படி அழைத்துக் கொள்ளலாம்… ஆனால், வெளியார் யாராவது ஆபீசுக்கு வந்திருக்கும் போது, அப்படி அழைத்துக் கொள்வது, பார்க்க நன்றாக இருக்காது… ஆபீசுக்கான மரியாதையாகவும் இருக்காது…’ என்பது போல கூறியதாகத் தெரிந்தது.

ஆசிரியர் எல்லாரையும், ஆசிரிய இலாகா உதவியாளர் கண்ணபிரான் உட்பட, “வாங்க… போங்க…’ போட்டுத்தான் அழைப்பார். ஆகவே, ஆசிரியரை அனுசரித்து, ரா.கி.ர., என்னை, மரியாதையாக கூப்பிடத் துவங்கினார்.

ஆரம்பத்தில் எனக்குக் கூச்சமாயிருந்தது. “என்ன சார்… என்னைப் போய், வாங்க, போங்கன்னு கூப்பிட்டுக் கொண்டு?’ என்றேன்.

அப்புறம், “இதுவும் நன்றாகத்தான் இருக்கு… நமக்கு கல்யாணமாகி, ஒரு மெச்சூரிட்டி வந்திருப்பதால் தான், ரா.கி.ர., அப்படிக் கூப்பிடுகிறார்…’ என்று நினைத்து, “ங்க’ அழைப்பில் மகிழ்ச்சியோடு இருந்தேன்.

ஆனால், புனிதனுக்கும், எனக்கும் இடையில் மட்டும், அந்த “ங்க’ போட்டுப் பேசிக்கொள்ளும் வழக்கம் அமலாகவில்லை.

ஒரே மாவட்டத்தை சேர்ந்தவர்களாதலால், “அடா… புடா…’ தான் சுவையாக இருந்தது.

மூவருமே, புரசைவாக்கம், வெள்ளாளத் தெருவாசிகளாக இருந்ததால், ஏதாவது மீட்டிங், ஈட்டிங் (ஓட்டல்) போவதாக இருந்தால், ஒருத்தர் வீட்டுக்குச் சென்று இன்னொருத்தர் குரல் கொடுப்போம்.

ஒருநாள், என் வீட்டு வாசலிலிருந்து, “அவன் இருக்கானா?’ என்று, கேட்டார் புனிதன்.
என் மனைவி, ஏதோ காரியத்தில் இருந்தவள், “இல்லையே… போயிட்டானே…’ என்று, அதே, “ன்’ போட்டு அவசரமாகப் பதிலளித்து விட்டாள்.

இதை பெரிய ஜோக்காக எடுத்துக்கொண்டு, சிரித்து மகிழ்ந்தோம்.

அப்புறம் நான் யோசித்தேன். புனிதனிடம் மெதுவாக ஒருநாள் கூறினேன். “டேய் பி.எஸ்.எஸ்… ரா.கி.ர., “ங்க’ போட்டு மரியாதையாகக் கூப்பிடுகிறார். நீயும், நானும் கூட இனிமேல், “ங்க’ போட்டு மரியாதையாக பேசிக்கொள்ளலாமாடா… அது ரொம்ப டிகினிபைடாக இருக்குமே…’ என்றேன்.

புனிதன் சிரித்துவிட்டு, “நீ வேணுமானால், மரியாதையாகக் கூப்பிட்டுப்போ… ஆனால், நான் உன்னை வாடா, போடான்னுதான் கூப்பிடுவேன்…’ என்று ஒப்பந்தத்துக்கு வர மறுத்து விட்டார்.

அவர், “வாடா… போடா…’ என்றுதான் கடைசி வரை கூப்பிட்டு வந்தார். எனக்கும், அவர் கடைசி வரை, “அவன்’ தான்.

ரா.கி. ரங்கராஜன், ஜ.ரா.சு., புனிதன்


விழுந்து விழுந்து எழுந்த குழந்தை

ஏழெட்டு நாட்கள் முன்பு சாயந்தரம் ஐந்து மணி வாக்கில் ‘வாக்கிங்’ போய்க் கொண்டிருந்தேன். (‘ஜாகிங்’கை விட மெதுவாகப் போனால் ‘வாக்கிங்’. வாக்கிங்கைவிட மெதுவாகப் போனால் என்ன சொல்வதென்று தெரியவில்லை. Inching என்று சொல்லலாமோ?) இன்ன இடத்துக்குப் போவதென்கிற இலக்கு ஏதும் இல்லாமல் நடந்துகொண்டிருந்தபோது, “கால் போன போக்கிலே மனம் போகலாமா, மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?” என்ற வரிகளை நினைத்துக் கொண்டு (இது கண்ணதாசன் தானே?) நிமிர்ந்து பார்த்தபோது டவர் பார்க்கை அடைந்திருப்பதை உணர்ந்தேன்.

இந்தப் பார்க் மோசமாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது என்று சில வாரங்களுக்கு முன் ஹிந்துவில் செய்தி வெளியிட்டிருந்தார்கள். இப்போது எப்படி இருக்கிறது பார்க்கலாம் என்று உள்ளே போக எண்ணினேன். வாசலில் பசும்பச்சை வெள்ளரிப் பிஞ்சுகளை வண்டியில் குன்றாகக் குவித்து வைத்துக் கொண்டு மிளகாய்ப் பொடியும் சேர்த்து விற்றுக் கொண்டிருந்தாள் ஒரு பெண். வெள்ளரிப் பிஞ்சென்றால் எனக்கு உயிர். இருபது பிஞ்சுகளை ஒரே மூச்சில் சாப்பிடுவேன். ஆனால் உயிரான விஷயங்களில் உள்ளத்தைப் பறிகொடுத்தால் உயிருக்கு உத்திரவாதமில்லை என்று டாக்டர் எச்சரித்திருந்ததால், ஐஸ்கிரீம் வண்டியை நோக்கிக் கை நீட்டும் குழந்தையைத் தாயார்க்காரி தரதரவென்று அப்பால் இழுத்துக் கொண்டு போகிற மாதிரி, ஆசையை நெட்டித் தள்ளிவிட்டு நடந்தேன்.

உள்ளே நுழைவதற்கு சுழல் கதவு. அதைக் கண்டால் எப்பவுமே எனக்கு பயம் – நடுவில் சிக்கிக் கொண்டு ‘நாலு பேர்’ சிரிக்கிற மாதிரி செய்து கொண்டு விடுவோம் என்று. (எஸ்கலேட்டர் என்றாலும் அப்படித்தான். அதுவும் அந்த கடைசிப்படி! ஆனால் ஒவ்வொருவர் எத்தனை லாகவமாய் அதைக் கடக்கிறார்கள்!)

சுழல் கதவை வேறு யாராவது தள்ளிக் கொண்டு போனால், அடுத்த வளைவுக்குள் புகுந்துகொண்டு உள்ளே போய் விடலாம் என்றெண்ணி இரண்டு நிமிடங்கள் நின்றேன். யாரும் வரவில்லை. ஆனால் பார்க்கின் உள்ளேயிருந்து வெளியே போக ஒரு சுடிதார் மங்கை வந்தாள். அவள் அந்தப் பக்கம் தள்ளட்டும், நாம் இந்தப் பக்கம் புகுந்துவிடலாம் என்று தோன்றியது. மேலும் ஒரு நிமிடம் நின்றேன். அந்தச் சுடிதாரிணி, பெரியவர் முதலில் உள்ளே வரட்டும் என்று நினைத்தவள் போல அங்கேயே நின்றாள். என்னடா இது வம்பு என்று திகைத்தேன். ஆனால், என்ன ஆச்சரியம்! அந்தப் பெண் சுழல்
கதவின் குழாய்களைத் தொடாமல், அதற்கும் சுவருக்கும் இருந்த இடைவெளி வழியாகவே வெளியே வந்து விட்டாள் – கடவுள் அவளுக்கு அவ்வளவு மெல்லிய தேகத்தைக் கொடுத்திருந்ததால்.

எப்படியோ உள்ளே நுழைந்து விட்டேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். பார்க் சுத்தமாகத்தான் இருந்தது. குப்பை கூளம் கண்ணில் படவில்லை. ஆனால் பாதைகளில் தரை காய்ந்து கெட்டியாகி, லேசான செம்மண் நிறத்துடன் கரடுமுரடாக இருந்தது. பசும் புல்வெளிகள் அதிகமில்லை. செடிகளைக் காட்டிலும் மரங்களே அதிகம். உள்ளத்தில் குதூகலம் ஏற்படுத்துகிற நீரூற்றுகள் இல்லை. அது ஒரு செவ்வாயோ, புதனோ, எனவே அதிகமான நடமாட்டம் இல்லை. ஒரு மரத்தின் கீழே இருந்து வட்ட மேடையின் ஓரமாக உட்கார்ந்து தலைக்கு மேலே காக்கை எதுவும் இல்லை என்று உறுதிப்படுத்திக் கொண்டேன்.

கொஞ்சம் தள்ளி ஒரு தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பெண்களும், பொத்தான் போடாத ஷர்ட்டுடன் ஒரு நரைத் தலையரும் உட்கார்ந்திருந்தார்கள். அது சிறிய புல்தரை. எவர் சில்வர் தூக்கில் கொண்டு வந்திருந்ததை உண்டுவிட்டு, பாட்டிலிலிருந்து நீர் குடித்தார்கள். வயதான பெண்மணி வெற்றிலை பாக்கை மென்றுவிட்டுப் புளிச்சென்று துப்பினாள்.அவர்கள் போன பிறகு அங்கே வந்து உட்காரக்கூடிய நபரை நினைத்துப் பரிதாபம் ஏற்பட்டது.

சில தெரு நாய்கள் மகா பயங்கர வேகத்துடன் ஒன்றையன்று துரத்திக் கொண்டு ஓடின. கடித்தால் என்னாவது என்று குலை நடுங்கி, காலைத் தூக்கி வைத்துக் கொண்டேன்.

எதிரில் வண்ண வண்ணமான உடைகளுடன் டவரில் ஜனங்கள் ஏறுவதும், இறங்குவதும் ஓர் அழகான காட்சியாக இருந்தது.

ஆறு மணிக்குப் பிறகு டவரின் மேலே போக அனுமதி கிடையாது என்று கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் ஆறரை, ஆறே முக்காலுக்குக் கூட ஜனங்கள் அங்கே போய்க்கொண்டுதான் இருந்தார்கள்.

இடுப்பில் ஒயர்ப் பையும், கையில் கோலாட்ட சைஸில் குச்சியுமாகச் சில பெண்கள் ஆங்காங்கே நடமாடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் குறி சொல்கிறவர்கள். ஆசையாயிருந்தது, குறி கேட்கலாமா என்று, ஆனால் அவர்களில் யாரும் என் பக்கம் வரவில்லை. ஓர் இளம் ஜோடியை நோக்கிப் போய்விட்டாள் ஒருத்தி.

‘சுண்டலேய்!’ என்று கூவிய வண்ணம் ஒரு சிறுவன் அலுமினியத் தூக்குடன் சென்றான். கூடவே ஒரு தோழன். “வீட்லே கேட்டாங்கன்னா கை தவறிக் கொட்டிடிச்சுன்னு சொல்லிடுவேன்” என்று சுண்டல் பையன் ஒரு பொய் நாடகத்துக்கு வசன ஒத்திகை பார்த்துக் கொண்டு போனான்.

முப்பது வயதில் ஒரு கணவனும், இருபத்தைந்து வயதில் ஒரு மனைவியும், தங்களுடைய மூன்று வயதுக் குழந்தையுடன் போனார்கள். குழந்தையின் ஒரு கையை இவனும் மறு கையை அவளும் பிடித்து நடத்தினார்கள். ஆனால் அது தரையில் கால் பதிக்காமல் எம்பி எம்பி ஊஞ்சலாடியது.

கொஞ்சம் கொஞ்சமாக ஜனங்கள் நிறைய வர ஆரம்பித்தார்கள். பல வகையான வயது, பல வகையான நிறம், பல வகையான தோற்றம். ஆனால் என்னவோ தெரியவில்லை, பெரும்பாலான முகங்களில் உல்லாசமோ சிரிப்போ தென்படவில்லை. இறுக்கமாக இருந்தன. இன்றைய சமூகத்தின் அழுத்தும் பிரச்னைகள் காரணமாக இருக்கலாம். ஒரு வேளை என் மனத்தினுள் இருந்த இறுக்கத்தை அவர்கள் முகத்தில் கற்பனை செய்து கொண்டேனோ என்னவோ. கவலை நிறைந்த முகங்கள். கவலையைப் பகிர்ந்து கொள்ளும் முகங்கள். கவலையே இல்லாததுபோல் பாசாங்கு செய்யும் முகங்கள்…

எழுந்து கொண்டேன். வந்தபோது இருந்த கொஞ்ச நஞ்ச உற்சாகத்தையும் இழந்துவிட்ட மாதிரி இருந்தது. அப்போது ஒரு காட்சி :

மிகச் சிறிய வழுக்கு மரம். மூன்று வயதுக் குழந்தைகள் மட்டுமே ஏறி விளையாடக் கூடியது. ஏறும் படிகளும் மூன்றேதான். அதில் மேலே ஏறி, பலகையில் வழுக்கி மறுபுறம் இறங்க வேண்டும். ஒரு தந்தை தன் குழந்தையை ஏணியினருகே அழைத்துப் போனார். அது ஏணி வழியே ஏறாமல் முன்புறமாக ஓடிவந்து, சறுக்க வேண்டிய பலகையில் ஏற முயன்றது. முழு உயரம் கூட ஏற முடியவில்லை. வழுக்கி வழுக்கி விழுந்தது. “அப்படியில்லை. இங்கே வா, இப்படி ஏறி அங்கே உட்கார்ந்து வழுக்கணும்” என்று அதன் அப்பா சொல்லிக் கொண்டிருந்தார். அது, மறுபடி வழுக்கும் இடத்துக்கே திரும்பி, இரு புறத்தையும் பிடித்துக் கொண்டு ஏறவே முயன்று கொண்டிருந்தது. எத்தனை தரம் விழுந்தாலும் எழுந்து எதிர் நீச்சல் போட வேண்டும் என்று மனித உள்ளத்துக்குள் இருக்கும் விடா முயற்சியையும் நம்பிக்கையையும் பிரதிபலிப்பதுபோல் இருந்தது அந்தக் காட்சி.

அந்தக் குழந்தை வெற்றி பெற்றதா என்று எனக்குத் தெரியாது. ஆனால் உள்ளம் லேசாகி உதட்டில் புன்னகையுடன் வீட்டுக்கு நடந்தேன்.


ரா.கி.ரங்கராஜன் – 1: யோசனை கேட்க வராதீர்கள்!

மறைந்த மாபெரும் எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜனுக்கு ஓர் அஞ்சலியாக அவர் எழுதிய இந்தக் கட்டுரையை இங்கு வெளியிடுகிறேன்.

அவருடைய ‘ நான் கிருஷ்ண தேவராயன்’ ஒரு முக்கியமான வரலாற்றுப் புதினம். விகடனில் தொடராக வந்தது. வானதி பதிப்பகம் நூலாக வெளியிட்டிருக்கின்றனர். அதைப் பற்றி இந்தக் கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

எழுத்தாளன் என்றால் சகலகலா வல்லவன், எல்லாம் தெரிந்தவன் என்று நினைக்கிறார்கள். கல்யாண ரிசப்ஷனுக்கும் போகும்போது, யாராவது என்னிடம் வந்து பேச்சுக் கொடுப்பார்கள். உடனே ஒரு அம்மையார் குறுக்கிட்டு, ”மாமாகிட்டே பேசாதேடா சீமாச்சு! உன்னை வச்சுக் கதை எழுதிடுவார்” என்று அவரை எச்சரிப்பார்.

உண்மையில் ‘முதல் பந்தி எப்ப போடுவாங்கன்னு தெரியலே! சாப்பிட்டுவிட்டு ரயிலைப் பிடிக்கணும்’ என்ற தன்னுடைய அப்போதைய கவலையைத்தான் அந்த சீமாச்சு என்னிடம் பேசிக்கொண்டிருப்பார். அதை வைத்து, அவரை வைத்து எந்தக் கதையையும் யாராலும் எழுத முடியாது. இருந்தாலும் அப்படியொரு மந்திர சக்தி எனக்கு இருப்பதாகப் பல பேர் கருதுகிறார்கள்.

”தன்னுடைய மூளையை வைத்துப் பிழைக்கிறவன் புத்திசாலி. இன்னொருவனின் மூளையையும் சேர்த்துக் கொண்டு பிழைப்பவன் மகா புத்திசாலி” என்று ஒரு அறிஞர் சொன்னார். நான் அந்த ரகம். விஷயம் தெரிந்தவர்களிடம் கேட்டு வைத்துக்கொண்டு கதை அளப்பேன். அந்தக் கதையோ, நாவலோ புத்தகமாக வரும்போது யார் யார் எனக்கு உதவி செய்தார்கள் என்பதை என் முன்னுரையில் ஒப்புக்கொண்டு நன்றி சொல்வேன். ஆனால் புத்தகத்தை வாங்கிப் படிப்பவர்கள் கம்மி. பத்திரிகையில் வருவதைப் படிப்பவர்கள்தான் அதிகம். அவர்களுக்கு என் குட்டு தெரியாது. ‘அடேங்கம்மா! எவ்வளவு விஷயம் தெரிந்து வைத்திருக்கிறார்!’ என்று தப்பாக பிரமிப்பார்கள்.

நான் ‘கிருஷ்ண தேவராயன்’ என்ற சரித்திரத் தொடர் கதையை ஆனந்தவிகடனில் எழுதி வந்தபோது பல சமயங்களில் பல அறிஞர்களிடம் பல விஷயங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டேன். ஒரு நாட்டியச் சிற்பத்தைப் பற்றி ஒரு ஆஸ்தானச் சிற்பிக்கும், ஆஸ்தான நடன ஆசிரியருக்கும் அபிப்பிராய பேதம் வருவதாக அந்தக் கதையில் ஒரு நிகழ்ச்சி வந்தது. பொதுவான அபிப்பிராய பேதம் என்று சொல்லாமல் ஏதாவது ஒரு குறிப்பிட்ட அம்சம் பற்றியது என்று சொன்னால் சுவையும், அழகும் ஏற்படும் என்று தோன்றியது. ஸ்ரீநிதி ரங்கராஜன், பத்மா சுப்ரமணியம் ஆகியோரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு அந்த விஷயத்தைத் தொடர்கதையில் எழுதினேன். உடனே சிலர் தங்கள் குழந்தையை எந்த நடனப் பள்ளியில் சேர்த்தால் நன்றாய் சொல்லிக் கொடுப்பார்கள் என்று என்னைக் கேட்டார்கள்.

ஒரு இத்தாலிய இளைஞன் விஜயநகரத்துக்கு வந்து சித்த வைத்தியத்தில் தேர்ச்சி பெறுகிறார்ன என்று அந்தத் தொடர் கதையில் வருகிறது. அவனுடைய மூலிகை ஆராய்ச்சி பற்றிப் பல இடங்களில் எழுதினேன். உடனே இந்த மூலிகை நல்லதா, அந்தக் கீரையைச் சாப்பிடலாமா என்று சிலர் கேட்டார்கள். ஆனால் மருத்துவம் சம்பந்தப்பட்ட என் சந்தேகங்களைத் தீர்த்து வைப்பவர் என் உற்ற நண்பர் டாக்டர் ஜே.ஆர். கிருஷ்ணமூர்த்தி என்ற ரகசியம் யாருக்கும் தெரியாது. குன்றத்தூரில் 46 வருட காலமாக சித்த வைத்தியம், இங்கிலீஷ் வைத்தியம் இரண்டு துறைகளிலும் வெற்றிகரமாகப் பிராக்டிஸ் செய்து, மக்களின் அபிமானத்தைப் பெற்ற டாக்டராக விளங்குபவர் இவர். மத்திய அரசின் ஆயுர்வேத சித்த வைத்திய ஆராய்ச்சிக் கவுன்ஸிலில் பிரதான பொறுப்பில் இருப்பவர். மயக்க மருந்து கொடுக்காமல் ஒரு பெரிய ரண சிகிச்சை நடப்பதாக என் ‘படகு வீடு’ கதையில் கிளைமாக்ஸ் கட்டம் வந்தபோது, அது எப்படிச் சாத்தியம் என்பதை விளக்கிச் சொல்லித் தந்தார். அன்று முதல் இன்று வரை நாவல், சிறுகதை, கட்டுரை முதலிய பலவற்றிலும் அவருடைய ஆலோசனையைக் கேட்டறிந்து எழுதியிருக்கிறேன். இருப்பினும் வைத்தியத் துறையில் தேர்ச்சி பெற்றவன் என்று என்னைப் போய் எல்லோரும் நம்புகிறார்கள் !

கிருஷ்ண தேவராயன் கதையில் ஒரு வழிப்பறிக் கூட்டத்தை மடக்குவதற்காகக் கிருஷ்ண தேவராயர் புறப்படுகிறார் என்ற ஒரு சம்பவம் இடம் பெற்றிருக்கிறது. சாதாரணப் பிரஜை போல மாறுவேடம் அணிந்து ஒரு யாத்திரிகர் கோஷ்டியில் அவர் சேர்ந்துகொள்கிறார். அதில் வழிப்பறிக் கூட்டத்தின் தலைவனும் இருக்கிறான். எல்லா யாத்திரிகர்களும் ஒரு சத்திரத்தில் இரவு தங்குகிறார்கள். நள்ளிரவில் அந்த வழிப்பறிக்காரன் ‘விடியப் போகிறது! எல்லோரும் எழுந்திருங்கள்!’ என்று எல்லோரையும் எழுப்புகிறான். அவனது வழிப்பறித் தோழர்கள் யாத்திரிகர்களைத் தாக்கிக் கொள்ளையடிப்பதற்காகச் சிறிது தூரத்தில் காத்திருக்கிறார்கள். கிருஷ்ண தேவராயர் சத்திரத்திற்கு வெளியே வந்து வானத்தில் எந்த நட்சத்திரம் எங்கே இருக்கிறது என்பதைப் பார்க்கிறார். பொழுது விடிவதற்கு இன்னும் வெகு நேரம் இருக்கிறது என்பதை அறிகிறார். வழிப்பறித் தலைவனின் தந்திரத்தை அறிந்து, அவனையும் அவன் கூட்டத்தையும் சாமர்த்தியமாகப் பிடித்துவிடுகிறார்.

எந்தக் குறிப்பிட்ட மாதத்தில் இரவின் எந்த வேளையில் எந்த நட்சத்திரம் ஆகாயத்தில் எந்த இடத்தில் காணப்படும் என் விவரத்தை எனக்குச் சொன்னவர் பழம்பெரும் எழுத்தாளரான மகரம் (கே. ஆர். கல்யாணராமன்). நட்சத்திரங்களின் நடமாட்டங்களைப் பார்ப்பது இவருக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு. அவரைக் கேட்டு அதை எழுதினேன்.

ஆனந்தவிகடனில் மேற்படி அத்தியாயம் வந்த சில நாட்களுக்கெல்லாம் டெல்லியிலிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதை எழுதியவர் டாக்டர் வி. கிருஷ்ணமூர்த்தி என்ற விஞ்ஞானி. கே. கே. பிர்லா அகாடமியின் டைரக்டர். பிலானியில் கணிதப் பேராசிரியர்.

இரவு வேளைககளில் நட்சத்திரங்களின் சஞ்சாரம் பற்றி ஆராய்ச்சி செய்து தான் ஒரு புத்தகம் எழுதி வருவதாகவும், அதற்கு நான் தகவல்கள் தந்து உதவ வேண்டுமென்றும் கேட்டிருந்தார் அந்தக் கடிதத்தில்.

இது எப்படி இருக்கு!

மகரத்தின் விலாசத்தைத் தந்து அவரிடம் தொடர்பு கொள்ளுமாறு பதில் எழுதிப் போட்டேன். மகரமும் அவருக்கு உதவி செய்தார். Night Sky என்ற அவருடைய புத்தகம் வெளியே வந்ததும் எனக்கும் மகரத்துக்கும் ஆளுக்கு ஒரு பிரதி அனுப்பினார். முன்னுரையில் எங்கள் இருவருக்கும் நன்றி தெரிவித்திருந்தார்.

எனவே, இதன் மூலம் சகலமானவர்களுக்கும் நான் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால்: என் எழுத்தைப் படிப்பவர்கள் யாரும் சிற்சில துறைகளில் நான் அத்தாரிட்டி என்று எடுத்துக்கொள்ள வேண்டாம். யோசனை கேட்க வேண்டாம்.
[ நன்றி: http://www.appusami.com ]


நண்பர் கடுகு

சுவையாக எழுதத் தெரிந்த எழுத்தாளர்கள் இன்று நிறையப் பேர்கள் இருக்கிறார்கள். ஆனால் நகைச்சுவையாக எழுதக் கூடியவர்களின் எண்ணிக்கைதான் மிகவும் குறைந்துவிட்டது. நல்ல வேளையாக நாலைந்து பேர்கள் இருக்கிறார்கள். அவர்களில் குறிப்பிடத் தக்கவராக இருப்பவர் ‘கடுகு’ என்ற என் நண்பர் பி.எஸ். ரங்கநாதன். இவருடைய எழுபத்தைந்தாவது பிறந்த நாளையொட்டி எல்லா நண்பர்களுமாக சேர்ந்து விழா நடத்தினார்கள் சென்ற வாரம்.

சுஜாதாவையும் சுப்புடுவையும் போல் டெல்லியிருந்து தமிழ் நாட்டின் மீது படையெடுத்த எழுத்தாளர்களில் ஒருவர் கடுகு. இவரைக் கண்டு பிடித்துக் கொடுத்த பெருமை குமுதம் இதழையே சேரும் என்று நினைக்கிறேன்.

டெல்லியில் வாழும் சாதாரணத் தமிழர்களைப் பற்றி இவர் எழுதிய கட்டுரைகள்தான் இவரைப் பிரபலமாக்கின. ‘அரே டெல்லி வாலா’ என்ற தலைப்பில் சின்னஞ்சிறு துணுக்குகளை முதலில் எழுதத் தொடங்கினார். அமெரிக்க ‘டைம்ஸ்’ பத்திரிகையில் வருவது போன்ற தகவலும் நடையும் கொண்டிருந்ததால் அமரர் எஸ்.ஏ.பி.க்கு பி.எஸ்.ஆரை மிகவும் பிடித்துவிட்டது.

டெல்லி காங்கிரஸ் கமிட்டியின் வாசலில் பட்டாணி விற்பவனையும், புரோகிதம் பார்க்க ஸ்கூட்டரில் செல்லும் சாஸ்திரிகளையும், கொத்துமல்லி விற்கும் கீரைக்காரியையும் பேட்டி கண்டு எழுதுவதற்கு ஊக்கம் கொடுத்தார். ‘கடுகுச் செய்திகள்’ என்று நாலைந்து வரிகளில் துணுக்குகள் எழுதவே ‘கடுகு’ என்ற புனைப் பெயரே நிரந்தரமாகி விட்டது.
குமுதத்தில் எவ்வளவு கட்டுரைகளை எழுதினார் என்று இவருக்கும் கணக்குத் தெரியாது. எனக்கும் தெரியாது. கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே. லக்ஷ்மணைப் பற்றி எழுதினார். லால்பகதூர் சாஸ்திரி காலமானபோது அவருக்குப் பி.ஏ.வாக இருந்த வெங்கடராமன் என்ற தமிழரைப் பேட்டி கண்டு எழுதினார். வேலூர் ஆஸ்பத்திரியில், இடுப்புக்குக் கீழே இயங்காதவராக இருந்த மேரி வர்கீஸ் என்ற பெண் சர்ஜன், சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே ஆபரேஷன் செய்ததைப் பற்றி எழுதினார். ஆண்களால் நிட்டிங் செய்ய முடியுமா என்று போட்டி வைத்த போது, தன்னால் முடியும் என்று சொல்லி, அதை விவரித்துக் கட்டுரை எழுதிப் பரிசையும் பெற்றார். இதெல்லாம் 64ம் வருட வாக்கில்.

அப்போது ரங்கநாதன் தபால் துறையில் பணியாற்றி வந்தார். சர்க்கார் உத்தியோகத்தில் இருப்பவர் பத்திரிகைகளுக்கு எழுதக் கூடாது என்று யாரோ கிளப்பி விட்டார்கள். தான் எழுதுவது இலக்கியப் பணியே தவிர, அரசியல் அல்ல என்று பதிலளித்த ரங்கநாதன், குமுதத்திலிருந்து ஒரு சர்டிபிகேட்டையும் இணைத்தார். அவர் எழுதியவை நல்ல இலக்கியக் கட்டுரைகள் என்று அமரர் எஸ்.ஏ.பி. அப்போது எழுதித் தந்த நற்சான்றை இன்றைக்கும் பிரியத்துடன் பாதுகாத்து வருகிறார் கடுகு.

அஞ்சல் துறையை விட்டு விலகிய பின் ஹிந்துஸ்தான் தாம்ஸன் என்ற பிரபலமான விளம்பர நிறுவனத்தில் சேர்ந்து பல வருடம் பயிற்சி பெற்றதால் ஹாஸ்யச் சுவையிலிருந்து கணினிச் சுவையில் நாட்டம் கொள்ள ஆரம்பித்தார். விரும்பிக் கேட்போருக்கு ‘எழுத்துரு’ செய்து தருகிறேன் என்று சொல்கிறார். (கணினி பற்றி நான் சுத்த சுயம்பிரகாச ஞான சூன்யம். ‘எழுத்துரு’ என்றால் என்ன என்று தயவு செய்து யாரும் கேட்டுவிடாதீர்கள். கீழே விழுந்து விடுவேன்.)

டைரக்டர் ஸ்ரீதர், சித்ராலயா கோபு, கடுகு மூன்று பேரும் பால்ய நண்பர்கள். கொஞ்ச நாட்களுக்கு முன்பு ஸ்ரீதர் இவரைப் பார்ப்பதற்காக பெஸன்ட் நகர் வீட்டுக்கு மனைவியுடன் வந்திருந்தார். காரில் உட்கார்ந்தபடியே பேசினாராம். உடல் நலம் குன்றி, பேசுவதற்கு மிகவும் கஷ்டப்பட்டதாகவும், ஸ்ரீதரின் மனைவி அவர் சொல்வதை விளக்கிச் சொன்னதாகவும் கடுகு வருத்தத்துடன் சொன்னார்.

கணினித் துறையில் தேர்ச்சி பெற்றிருப்பதால் ரங்கநாதனும் அவருடைய மனைவி கமலாவும் சேர்ந்து பல புத்தகங்களை அழகிய முறையில் வெளியிட்டிருக்கிறார்கள். குறிப்பிடத்தக்க ஒன்று, பதம் பிரித்துப் பதிப்பித்துள்ள ‘நாலாயிர திவ்யப் பிரபந்தம்’. சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் தான் வாங்கிய ஒரே புத்தகம் இதுதான் என்றும், இது ஒரு ரத்தினம் என்றும் சுஜாதா எழுதினார். (இரண்டு பாகங்கள்; நந்தினி பதிப்பகம், போன்: 9444187365)

இரண்டு மூன்று தடவைகள் பி.எஸ்.ஆரின் டெல்லி வீட்டுக்கு சென்று தங்கியிருக்கிறேன். சாப்பிட்டிருக்கிறேன். முதல் முறை, தமிழ்நாடு செய்தித் தொடர்புத் தலைமைச் செயலாளராக இருந்த கவிஞர் தங்கவேலு (‘சுரபி’) என்னை டெல்லிக்குப் போய், பத்திரிகையாளர்கள் குழுவில் சேர்ந்து கொள்ளும்படி அனுப்பி வைத்தார். விமானப் பயணமும் புதிது. டெல்லியும் புதிது. அப்போது பி.எஸ்.ஆர்.தான் கை கொடுத்தார்.

அவருடைய மகள் ஆனந்தி -அன்று உயர்நிலைப்பள்ளி மாணவி – அவள் அறை நிறைய அலமாரி அலமாரியாக ஆங்கில நாவல்களை அடுக்கி வைத்திருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டேன். இப்போது அவர் நியூ ஜெர்ஸியில், புகழ் பெற்ற ஒரு மருந்து நிறுவனத்தில், புற்று நோய்க்கான மருந்துகள் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறார்.

நானும் ரங்கநாதனும் நண்பர்களாயிருப்பது போல, என் மனைவியும் ரங்கநாதனுடைய மனைவியும் நெருங்கிய சினேகிதிகள். பீங்கான் கிண்ணம், நூதன் திரி ஸ்டவ், மோடா என்று இவள் எது கேட்டாலும் அவர் டெல்லியிலிருந்து அனுப்பிக் கொண்டேயிருப்பார். என் குடும்பத்தில் பிரச்னையும் வேதனையும் ஏற்பட்ட சமயங்களில் அவர்கள் இருவரும் ஆறுதலும் தேறுதலும் தந்ததை எங்களால் மறக்க முடியாது.

கடைசியாக ஒரு கடுகுச் செய்தி: பி.எஸ்.ஆர். எனக்கு தூரத்து உறவு. என் மருமகளின் தங்கைக்கு இவர் பெரிய மாமனார். (புரிந்து கொண்டால் சரி.)


நான்ஏன் பஃபேயை வெறுக்கிறேன் என்றால்…

‘‘எல்லோரும் டிபன் சாப்பிட்டுவிட்டு புரொக்ராமுக்கு போகலாம்’’ என்று யாரோ குரல் கொடுத்ததும் எல்லோரும் சிற்றுண்டிகள் வைக்கப்பட்டு ஸ்டவ்கள் எரிந்து கொண்டிருந்த சூடான மேஜைகளை நோக்கி நகர்ந்தார்கள். நானும்தான். என் நண்பர் செல்வராமன், பாலாம்பிகா ஹாலில் தன் மகளின் நடன அரங்கேற்றத்ம் இருப்பதாக அழைத்ததால் வந்திருந்தேன். பஃபே விருந்தில் கடைப்பிடிக்க வேண்டிய முதல் விதி: முன்னோர்கள் என்ன செய்கிறார்களோ, அதையே செய்ய வேண்டியது. அதன்படி பார்க்காத மாதிரி பார்த்து வைத்துக் கொண்டு, அடுக்கி வைக்கப்பட்டிருந்த தட்டிலிருந்து ஒன்றை எடுத்துக் கொண்டேன்.

முதல் பாத்திரத்தில் மஞ்சள் நிறத்தில் ரசமலாய் மிதந்து கொண்டிருந்தது. ‘ஈசனோடாயினும் ஆசை அறுமின்’ என்ற பெரியவர்கள் சொல்லியிருந்த போதிலும் எந்தச் சர்க்கரை வியாதிக்காரனுக்கும் இனிப்பு ஆசை மட்டும் விடுவதில்லை. வசதியான கரண்டியால் லாகவமாக எடுத்துத் தட்டில் வைத்துக் கொண்டேன். அடுத்து பொங்கல் (ரவா உப்புமாவாகவும் இருக்கலாம்) அதில் முக்கால் கரண்டி. பிறகு அழகிய, சிவப்பான இளம் வடைகள்- வடை சைஸில் பெரிதாகவே இருந்தது. அடுத்த பாத்திரம் இட்லி. அதன் பிறகு பளபளவென்ற ஜொலிப்புடன் மடித்து வைக்கப்பட்டிருந்த தோசை- அதில் ஒன்றையும் பக்கத்திலேயே தொட்டுக் கொள்ள வைத்திருந்த உருளைக்கிழங்கு மசாலாவில் அரைக் கரண்டியும் போட்டுக் கொண்டேன்.

இனி, பத்திரமாக ஒரு மேஜையை அடைய வேண்டியதுதான் என்று தீர்மானித்த போதுதான் அதிர்ச்சி. உட்கார்ந்து சாப்பிடுவதற்கான மேஜை எதுவும் காணோம். என்னைத் தவிர மற்ற எல்லோரும் அனுபவஸ்தர்கள். பஃபேக்கு பழக்கப்பட்ட புத்திசாலிகள். தட்டை லாகவமாகப் பிடித்துக் கொண்டு ஸ்பூனையோ, விரலையோ உபயோகித்து ருசித்துக் ‌கொண்டிருந்தார். ஜாடியில் கைவிட்ட குரங்கு மாதிரி நான்தான் அத்தனை ஐட்டங்களையும் சின்னத் தட்டில் வைத்துக் கொண்டு முழித்தேனே தவிர, அவர்கள் முதலில் ரஸமலாய் சாப்பிட வேண்டியது; அதன்பின் பொங்கல்; அதன் பின்னர் வடை -இப்படி அவ்வப்போது விழுங்கிக் கொண்டிருந்தார்கள். (கணக்குப் பார்த்தால் நான் எடுத்துக் கொண்டதை விட இரண்டு மடங்கு அதிகமாகக் கூட இருக்கும்.)

‘‘என்ன, செளக்கியமா?’’ என்று முதுகுப் பக்கமாய் யாரோ விசாரித்தார்கள். ‘‘ஓ, நீங்க எப்படி இருக்கீங்க?’’ என்றபடி திரும்பினேன். தட்டின் அபாயமான முனையில் ரிஸ்க்கான விளிம்பில் தத்தளித்துக் கொண்டிருந்த சாம்பார் சற்றே வெளியுலகத்தைப் பார்க்கும் ஆவலில் எட்டிப் பார்த்தது. ஒரு குண்டு அம்மையாரின் காஞ்சிபுரத்தில் ஒர துளி பட்டதோ- அல்லது பட்டதாக அவர் நினைத்துக் கொண்டாரோ- ஒரு முறைப்பு முறைத்தார். ‘‘ஹி…. ஹி…’’ என்றேன். (தர்மசங்கடமான கட்டங்களி்ல கைகொடுக்கும் வடமொழி தமிழ்ச் சொல். கண்டுபிடித்தவர்: எஸ்.ஏ.பி.)

அந்தக் கணத்தில்தான் எப்படிப்பட்ட பயங்கரமான போர்க்களத்தின் நட்டநடுவே நான் இருக்கிறேன் என்று புரிந்தது. கூட்டம் எக்கச்சக்கமாய் உள்ளது. எல்லோருமே தீனிப் பண்டாரங்கள். எல்லாத் தட்டுகளிலும் வழிய வழியச் சாம்பார், சட்டினி. ஆரம்பத்தில் நான் கண்ட நாசூக்குக்காரர்களின் எண்ணிக்கை குறைந்து ஆர்வலர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தது. பேச்சும் வேகம்; அசைவுகளும் வேகம். ‘‘ஆயிரம் சொல்லுங்க… டோனி செய்தது மடத்தனம்தான்’’ என்று அடித்துப் பேசினார் ஒருவர். எனக்கும் அவருக்கும் சில அங்குலமே இடைவெளி. வேறொருத்தர், ‘‘அவளைக் கட்டிக்கிட்டு நான் படற பாடு’’ என்று சொல்லி நெற்றியில் படீரென்று அடித்துக் ‌கொண்டார். ஒரு கறுப்புக் கண்ணாடிப் பெண், ‘‘ஈஸி இன்ஸ்டால்மெண்ட்’’ என்று தன் கையை நீட்டி வளையலை இன்னொரு பெண்ணிடம் காட்டிக் கொண்டிருந்தார்.

நின்று கொண்டே, தட்டில் இருப்பதைத் தின்று கொண்டே, மறு கையையும் ஆட்டியபடி பேச சிலரால் எப்படி முடிகிறது என்ற வியப்புடன் நான் சாப்பிடவும் முடியாமல், கையை நீட்டவும் முடியாமல், தட்டைப் பிடித்துக் கொள்ளவும் முடியாமல் கோமாளி மாதிரி தடுமாறினேன். ஒன்றுமில்லாததற்கெல்லாம் உணர்ச்சிவசப்படுகிறவர்கள் தமிழர்கள் என்ற அவப்பெயர் உண்டு. ஆனால் அத்தனை உணர்ச்சி வசப்படுகிறவர்களும் இங்கே குழுமியிருந்ததுதான் ஆச்சரியம்! எனக்கு இன்விடேஷன் கொடுத்த செல்வராமன் கண்ணில் பட்டிருந்தால் நானும் உணர்ச்சிவசப்பட்டிருப்பேன். படவில்லை. இவ்வளவு அமளிகளுக்கு நடுவே ஒரு சர்வர் நீள அகலமான பெரிய ட்ரேயில் இரண்டு குடம் சாம்பாரை நிரப்பிக் கொண்டு வேகமாக நீந்தி என்னைக் கடந்து சென்றார். எனக்குக் குலை நடுங்கியது.

கொஞ்சம் சாம்பாரோ, இட்லி விள்ளலோ மேலே விழுந்துவிட்டால்தான் என்ன, அதற்கு இப்படி அலட்டிக் கொள்ள வேண்டுமா என நீங்கள் நினைப்பது புரிகிறது. காரணம் என்னவெனில் இந்த மாதிரி விசேஷ வைபவங்களுக்குப் போவதற்காகவே நான் வைத்திருந்த தும்பைப் பூ வெள்ளை கதர் வேட்டியும் கதர் சட்டையும் அன்றைக்கு அணிந்து கொண்டிருந்தேன். துளி கறை பட்டாலும் அக்கிரமப் பளிச்செனத் தெரியும்; ஒரு ட்ரே சாம்பார் கொட்டினால்..?

அங்கிருந்து நகர்ந்து தளத்துக்கு வரும் மாடிப்படியின் கைப்பிடி ரெய்ல்ஸில் சாய்ந்தாற்போல் நான் நின்றிருந்தேன். இறங்கிச் செல்வோரும், ஏறி வருவோரும் என் முதுகைச் செல்லமாய் உரசிக் கொண்டே போனார்கள் அல்லது வந்தார்கள். ‘‘சீச்சீ1 அங்கே போய் வாங்கித் தர்றேன். அங்கிள் வச்சிருக்கிறதை எடுக்கக் கூடாது’’ என்று ஒரு தாயின் குரல் கேட்டது. பார்த்தால் அவள் தோளிலிருந்த இரண்டு வயதுக் குழந்தை என் தட்டை- தட்டில் இருந்த எதையோ எட்டிப் பிடிக்க, தட்டிப் பறிக்க- முயன்று கொண்டிருந்தது. தாய் அதன் கையை மடக்கி மடக்கி அடக்கிக் கொண்டிருந்தாள். முள்ளின் மீது துணி விழுந்தாலும் துணியின் மீது முள் விழுந்தாலும் துணிக்குத்தான் ஆபத்து என்று ஏதோ ஒரு பழைய சினிமாவில் கேட்ட வசனம் ஞாபகத்துக்கு வந்தது. குழந்தைக்கும் தாய்க்கும் நடக்கும் போராட்டத்தில் யார் வெற்றி பெற்றாலும் என் வேட்டி சட்டைக்குத்தான் அபாயம் என்பதை உணர்ந்தபோது என் கை மேலும் அதிகமாக நடுங்கியது. காலில் எதுவோ தட்டுப்பட, கீழே பார்த்தேன். சாப்பிட்ட தட்டுகளைப் போடுவதற்காக நீல நிறத்தில் பெரிய பிளாஸ்டிக் பெட்டி வைக்கப்பட்டிருந்தது. தட்டை அதில் வைத்தேன். கடவுளுக்கு நன்றி சொன்னேன். நடையைக் கட்டினேன்.

வயிற்றெரிச்சலான பின்கதை ஒன்று இதற்கு உண்டு. அடு்த்த வாரத்தில் ஒரு நாள் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் செல்வராமனைப் பார்க்க நேரிட்டது. ‘‘சுஜியின் டான்ஸ் புரோகிராம் எப்படியிருந்தது?’’ என்று கேட்டார். ‘‘ஓ.. அருமையாயிருந்தது. ஆனால் எனக்குத்தான் டயமில்லை. மாமனாரை ரயிலேற்றிவிட வேண்டியிருந்ததால் சும்மா அஞ்சு நிமிஷம் இருந்துவிட்டு புறப்பட்டு விட்டேன்’’ என்றேன். ‘‘நீங்க வந்ததே பெரிய சந்தோஷம்! டிபன் சாப்பிட்டேளோல்லியோ?’’ என்றார். ‘‘சாப்பிட்டேனே…’’ என்றவன் அதோடு நிறுத்திக் கொண்டிருக்கலாம். ‘‘பஃபேயானதால சாப்பிடச் சிரமப்பட்டு விட்டேன்’’ என்று சொல்லி விட்டேன். ‘‘பஃபேயா? டைனிங் டேபிள் போட்டு, வந்தவர்களை உட்கார்த்தி வைத்து சர்வர்கள் பரிமாறும்படியான்னா ஏற்பாடு பண்ணினேன் ஸ்வாமி? போளி, பாதாம்கீர், ஸமோஸா’’ என்றவர் என் முகத்தைப் பார்த்து, ‘‘நீங்க பாலாம்பிகா ஹாலுக்குத்தானே வந்தேள்?’’ என்றார்.

‘‘ஆமாம்’’ என்றேன்.

‘‘எந்த ஃப்ளோர்?’’

‘‘இரண்டாவது ஃப்ளோர்!’’

‘‘அட ராமா! எங்காத்து ஃபங்ஷன் மூணாவது ஃப்ளோர்லன்னா நடந்தது? ரெண்டாவது ஃப்ளோர்ல ஒரு…’’

நான் மடையன்தான். ஆனால் செல்வராமன் சொல்லும் மீதியையும் கேட்டுக் கொண்டு நிற்கும் அளவுக்கு அல்ல.

-‘அம்பலம்’ மின்னிதழில்


டாக்டர் ருத்ரன்

‘காதல் கல்யாணங்கள் பல சமயங்களில் தோல்வியாக முடிகின்றனவே, ஏன்?’ என்று புகழ்பெற்ற மனஇயல் நிபுணரான டாக்டர் ஆர்.கே.ருத்ரனிடம் கேட்டேன்.

‘இரண்டு காரணங்கள்தான். பணம், ஜாதி’ என்றார் சுருக்கமாக. ‘பணம் என்பது புரிகிறது. பட்டண வாழ்கையில் இவனுடைய சம்பளம், அவளுடைய சம்பளம், இவனுடைய நட்புக்கள், அவளுடைய நட்புக்கள் என்று பல பிரச்சனைகள் ஏற்படுவது சகஜம்தான். ஆனால் ஜாதி எங்கே வந்தது? நகர்புற வாழ்க்கையில் ஜாதியையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டுத்தானே காதல் கல்யாணம் செய்து கொள்கிறார்கள்? என்று கேட்டேன்.

‘நீங்கள் நினைப்பது தப்பு. ஆரம்பத்தில் ஜாதி வித்தியாசங்கள் பெரிதாய்த் தெரியாது. மணந்துகொண்டு இல்லறம் தொடங்கிய பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ஜாதி வித்தியாசங்கள் தோன்றும். பரம்பரை பரம்பரையாக மனசுக்குள் ஊறி வந்திருக்கும் யதார்த்தங்கள் முளைக்க ஆரம்பித்து விசுவரூபம் எடுக்கும். பெற்றோர்களும் உறவினர்களும் அந்த சிறிய தீயை ஊதிவிட்டுப் பெரிதாக்குவார்கள். பல பேர்களின் வாழ்க்கையில் இதைப் பார்த்திருக்கிறேன். ஒரே ஜாதியாக இருந்தால் ஓரளவு பிழைப்பார்கள். வேறு வேறு ஜாதியாக இருந்தால் பிரச்னைதான், என்று அழுத்தமாகச் சொன்னார் டாக்டர்.

பதினைந்து வருஷங்களுக்கு மேலாக டாக்டர் ருத்ரனை எனக்குத் தெரியும். பத்திரிக்கைகளில் ஏராளமாக எழுதியவர். டிவியில் பேட்டிகள் கொடுத்தவர். விவாத அரங்குகளில் பங்கேற்றவர். அவருடன் டெலிபோனில் சில முறைகள் பேசியிருக்கிறேன தவிர நேரடியாகப் பார்த்தது கிடையாது. (என்று நினைக்கிறேன்)

சில வருஷங்களுக்கு முன் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து வெளிவந்த ‘அழகிய தமிழ் மகன்’ படத்தில் ஒரு சைக்கியாட்ரிஸ்ட் பாத்திரத்தில் சைக்கியாரிஸ்டாகவே நடித்தார் ருத்ரன். விஜய்க்கு அதில் இரட்டை வேடங்கள். குறிப்பிட்ட சில சொப்பனங்கள் பின்னர் அசலாகவே நடக்கின்றன என்பது விஜய்யின் அனுபவம். அதனால் பயம் ஏற்பட்டு மனநல நிபுணரான டைரக்டர் ருத்ரனிடம் சென்று ஆலோசனை கேட்க, ‘இஎஸ்பி’ எனப்படும் அந்த மனநிலை உண்மையானதுதான் என்றும் கனவின்படி நடப்பது நிச்சயம் என்றும் அவர் விளக்குகிறார்.

தற்கொலைகள் ஏன் நடக்கின்றன என்று ஒரு பத்திரிகையில் பேட்டி கொடுத்திருப்பதைப் படித்ததும் அவரை சந்தித்துப் பேச வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. போனில் தொடர்பு கொண்டு, எப்போது வந்தால் அவருக்கு சௌகரியமாக இருக்கும் என்று கேட்டேன்.

அதிர்ச்சியுடன், ‘நீங்கள் என்னைப் பார்க்க வருவதாவது! நானே உங்களைப் பார்க்க வருகிறேன்,’ என்று கூறிய டாக்டர் ருத்ரன். இரண்டு வாரங்களுக்கு முன்பு என் இல்லத்துக்கு வருகை தந்தார். கூடவே உமா மகேஸ்வரி என்ற சைக்காலஜிஸ்ட் பெண்மணியும் வந்தார்.

மாலை ஐந்தரை மணி சுமாருக்கு வந்த டாக்டர் ருத்ரன் ஒன்பதரை மணி வரைப் பல விஷயங்களைப் பற்றி சரளமாகப் பேசிக் கொண்டிருந்தார். புராண காலத்து மகரிஷிகளைப் போல கம்பீரமான தாடி. இரு கைகளாலும் அடிக்கடி மாற்றி மாற்றி அதை உருவிக்கொண்டு பேசுகிறார். கண்களில் நல்ல தீட்சண்யம். கூர்மையாக நம்மைப் பார்த்தபடி உரையாடுகிறார். மனித உறவுகள் செம்மைப்பட வேண்டுமானால் eye – contact மிக முக்கியம் என்பது அவர் வலியுறுத்தி சொல்லும் விஷயங்களில் ஒன்று. கண்ணுக்கு கண் நேரே பார்த்துப் பேசினால் உள்ளத்தில் உள்ளது உள்ளபடி வெளிப்படும் என்கிறார்.

சிறு வயது முதல் தன்னிடம் தனியான அன்பு செலுத்தி, டாக்டராகப் பட்டம் பெறும்படி வளர்த்தவர் தன் அத்தைதான் என்று நன்றி விசுவாசத்துடன் தெரிவித்த டாக்டர் ருத்ரன், தான் வழிபடும் தெய்வம் காமாட்சி அம்மன் என்கிறார். நெற்றியில் பளிச்சென்று துலங்கும் சிவப்புக் குங்குமம் அதற்கு சான்று கூறுகிறது. காலம் சென்ற டாக்டர் மாத்ருபூதம்தான் தனக்கு குரு என்றார். (மாத்ருபூதம் மிகுந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர் ருத்ரன் சீரியசான மனிதராக இருக்கிறார்).

பேசிக் கொண்டிருந்தபோதுதான் நான் முதலில் குறிப்பிட்ட காதல் கல்யாணப் பிரச்சனை வந்தது. குடும்பத்தில் எதிர்ப்பு இருப்பதே இவர்களில் பெரும்பாலோருக்குப் பிரச்சனை. பையனை வெளியே அனுப்பிவிட்டுப் பெண்ணிடம் தனியே விசாரிப்பேன். ஏன் அவர்களுக்கு உன்னைப் பிடிக்கவில்லை என்று விவரத்தைக் கேட்டு வைத்துக் கொண்டு பிறகு பையனைக் கூப்பிட்டுப் பேசுவேன். சிக்கல் எங்கே இருக்கிறது என்பது எனக்குத் தெளிவாகிவிடும்’ என்றார் டாக்டர்.

ஆனால், வெறும் விரக்தி, தோல்வி மனப்பான்மை, கசப்புணர்ச்சி – இப்படிப் பல காரணங்களுக்காக ஆலோசனை கேட்பவர்களும் உண்டு. வெறுமென பேசி, விவாதித்து, ஆலோசனை கூறி அனுப்புவது பழைய நடைமுறை. இப்போது அப்படி இல்லை. ஒவ்வொரு விதமான மன நோய்க்கும் ஒவ்வொரு விதமான மாத்திரை மருந்துகள் வந்திருக்கின்றன. தக்கபடி ப்ரிஸ்கிருப்ஷன் தருகிறேன் என்கிறார் டாக்டர் ருத்ரன். ஆனால், அவற்றை சரியானபடி உட்கொள்ளாவிட்டால் பலன் இருக்காது என்றவர், தன் நெஞ்சைத் தொட்ட நிகழ்ச்சி ஒரு தாயைப் பற்றியது என்றார். வளர்த்து பெரியவனான மகனுக்கு மனச் சோர்வு ஏற்பட்டிருக்கிறது என்று இவரிடம் அழைத்து வந்தாராம் அந்தத் தாய். இவரும் மருந்துகளைத் தந்தாராம். ஆனால் அவன் சில நாட்களில் இறந்து விட்டான். பின்னர் அந்த அம்மா இவரைப் பார்க்க வந்தார். தகுந்த சிகிச்சை தரவில்லை என்று சண்டை பிடிக்கப் போகிறார் என்று எதிர்பார்த்தவருக்கு ஆச்சர்யமான அனுபவம். என் பிள்ளை நீங்கள் கொடுத்த மருந்துகளை சரியாகவே சாப்பிடவில்லை. அதனால் தான் இறந்துவிட்டான். இப்போது எனக்கு அவனைப் போலவே மனச்சோர்வு ஏற்பட்டிருக்கிறது. மருந்து கொடுங்கள், ஒழுங்காக சாப்பிடுகிறேன்’ என்றாராம் அந்தத் தாய்.

இந்தத் தலைமுறை இளைஞர்கள் எல்லாவற்றிலும் வேகமும் அவசரமும் காட்டுகிறார்கள் என்றும், அது தவறு என்றும் டாக்டர் ருத்ரன் அபிப்பிராயப்படுகிறார். ‘உடனே படிப்பு, உடனே வேலை, உடனே வெளிநாடு, உடனே எக்கச்சக்க சம்பளம் என்று அவசரம் காட்டுவது, வாழ்க்கையைப் பற்றிய விரிவான, ஆழமான பார்வையைத் தடுக்கிறது’ என்கிறார்.

நாலைந்து உறவினர்களுடன், சென்னை கோடம்பாக்கம் டாக்டர் சுப்பராயன் நகரில் ஆலோசனை க்ளினிக் நடத்தி வருகிறார் ருத்ரன். (ஃபோன்: 24811140, 23727738). ஆனால் குறிப்பிட்ட சில கிழமைகளில் மட்டும்தான் அவரை சந்திக்க முடியும்.

Nakkeeran Arulkumar Interview with Naanjil Naadan on the eve of his Sahitya Akademi Award

June 6, 2012 Leave a comment
வ்வொரு முறையும் சாகித்ய அகாடமி விருது பற்றி பேச்சுக்கள் கிளம்பும் போதேல்லாம் நாஞ்சில் நாடன் பெயர் உச்சரிக்கப் பட்டுக்கொண்டே இருக்கும். 1998 இல் வெளியான இவரின் ‘எட்டுத் திக்கும் மதயானை’ நாவலுக்கே சாகித்திய அகாடமி விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்பு அவரின் “சூடிய பூ சூடற்க”என்னும் சிறுகதைத் தொகுப்புக்காக சாகித்திய அகாடமி விருது இவரை சாகித்யம் செய்திருக்கிறது.
விருது அறிவிக்கப்பட்டிருக்கும் இத்தருணத்தில் நக்கீரனுக்கான அவரின் நேர்காணல், ஒரு விருது காணலாய்…
நக்கீரன் : நீங்கள் எழுத வந்தக் காலம் வெகு சனப்பத்திரிகைகள் உச்சத்திலிருந்த காலம். ஆனால், நீங்கள் இப்போது வரை தீவிர இலக்கியத்தின் ஆச்சர்யக் குறியீடாக இருப்பது பற்றி…?
நாஞ்சில் நாடன் : ஆமாம். வெகு சனப் பத்திரிகையா ? தீவிர இலக்கியமா ? என்று எனக்குள் பதற்றம் தொற்றிக்கொண்டிருந்த வேளையில் சுந்தர ராமசாமிதான் என்னிடம்… கார், ஜீப், இருசக்கர வாகனங்கள் என யாரும் பயணிக்கும் நெடுங்சாலைதான் வெகு சனப் பத்திரிகை. ஓர் அடர் காட்டுக்குள் கம்பு ஊன்றிக்கொண்டு, நடக்கும் பாதைப் போடுவதுதான் தீவிர இலக்கியம். இதற்கு வரையறைகள் கிடையாது. தன்னை சுருக்கிக் கொள்ள வேண்டிய தேவையில்லை. காட்டாற்று வெள்ளம் போல எங்கும் பாயும் வல்லமை கொண்டது.
ஆனால், அந்த நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது ஓர் இடத்தில் நிற்க வேண்டும். அடுத்தவனின் எண்ணத்திற்கு நாம் அடைபட வேண்டும். ஆனால் பணம் புகழ் சீக்கிரமாய் கிடைக்கும். எது வசதி? என்று முடிவெடுத்துக்கொள். என்ற போது கம்பு ஊன்றிக்கொண்டு பாதைப்போட முடிவெடுத்தேன்.
அதற்குப் பின் சிறு பத்திரிகைகளில் எழுதிக்கொண்டிருந்த போது, ஒரு கமர்ஷியல் பத்திரிகை சிறுகதை ஒன்று வேண்டுமென்று கேட்டது. சற்று யோசிப்புக்கு பின்னர், ஒரு சிறுகதையை எழுதிக் கொடுத்தேன். அந்தச் சிறுகதை அந்த கமர்ஷியல் பத்திரிகையில் பிரசுரமாகி வந்த போது நான் அதிர்ச்சியடைந்து விட்டேன். என் கதைக்கான பெயர் மாற்றப்பட்டு ‘நீலவேணி டீச்சர்’ என்ற தலைப்பிடப்பட்டிருந்ததுதான் என் அதிர்ச்சிக்கு காரணம்.
ஒவ்வொரு எழுத்தையும் வைரத்தைப் போல்தான் நான் என் கதைகளில் பதிக்கிறேன். அதை பித்தளையாக்கும் முயற்சிகள் கமர்ஷியல் பத்திரிகைகள் செய்யத் துணிந்தவை என்பதை அந்த நீலவேணி டீச்சர்தான் அறுதியிட்டு எனக்கு சொல்லிக்கொடுத்தாள். காடுகளைக் கடப்பதென எடுக்கப்பட்ட முடிவு சரியானதென்பதையும் கூட.
நக்கீரன் : உங்கள் பழைய காலம் தொட்டு நீங்கள் பார்க்கும் சிறு பத்திரிகை எழுத்தாளர்கள் அதே தீவிரத்துடன் எழுதிக் கொண்டிருக்கிறார்களா…?
நாஞ்சில் நாடன் : உண்மையாய் சொல்வதானால் விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள்தான் சம காலத்தோடு எழுதிக் கொண்டிருக்கிறார்கள். வேட்கையோடு கடந்து கொண்டிருந்த அடர் காடுகளில் சிலர் வெகுகாலம் இளைப்பாறிவிட்டார்கள். சிலர் விஷயங்களில் நோய்வாய்ப்பட்டு விட்டார்கள். சிலர் திக்கு தெரியாத காட்டின் இருளில் அகப்பட்டு விட்டார்கள். இன்னும் சிலர் காடுகளை விட்டு விட்டு ஒத்தையடிப் பாதைகளில் கலந்துவிட்டார்கள்.
நக்கீரன் : தொழில் நிமித்தமாக மும்பை வாசியாக நீங்கள் இருந்த காலம்தான் உங்களின் எழுத்து வேட்கை தீவிரப்பட்டது என்று சொல்லப்படுகிறது. உங்களுடைய படைப்புலகம் எங்கிருந்து பிறக்கிறது…?
நாஞ்சில் நாடன் :  1972, என்னுடைய 25வது வயது. வேலைத்தேடி மும்பைக்கு பயணமாகிறேன். மொழி தெரியாது. ஆட்கள் தெரியாது. அந்த உலகம்தான் பின்னாளில் எனக்கு பல கதை மாந்தர்களைக் கொடுத்தது. ஒரு தொழிற்சாலையில் வேலைக்கு சேர்கிறேன். மொழி அறியாததால் என்னோடு வேலை செய்பவர்களுடன் பேச முடியவில்லை.
எழுத்து மீதான காதலோடு மும்பைத் தமிழ்ச் சங்கத்தில் உறுப்பினராகச் சேரப்போனால்… அங்கே பூணூல்காரர்கள் என்னைப் பார்த்ததுமே அப்ளி கேஷன் ஃபார்மைக்கூட தராமல் விரட்டினார்கள். அப்போதுதான் அச்சங்கத்தில் முக்கிய நபராய் இருந்த கலைக்கூத்தன் என்பவரின் அறிமுகம் கிடைக்க… தமிழ்ச் சங்கத்தில் முக்கிய பூணூல்காரர்களோடு சண்டையிட்டு என்னை உறுப்பினராக்கிவிட்டார்.

தினமும் 2 புத்தகங்கள் எடுத்து வருவேன். மாலை வேலை முடிந்ததும் படிக்க ஆரம்பித்தால் கிட்டத்தட்ட 400 பக்கங்களுக்கு மேலாக படித்துவிடுவேன். அந்த வாசிப்புதான் அடிக்கடி நினைவுக்கு வந்து இம்சைப்படுத்தும் அம்மா சாப்பாடு, ஊர் கோவில், ஊர் நண்பர்களை மறக்க வைத்தது.

மொழி ஒரு விஷயமாக இல்லாது போய், சக தொழிலாளிகளோடு நண்பர்களான போது… ஊருக்கு போகவேண்டும் என்றால் 2000 ரூபாய் வேண்டும். ஆனால், வருடம் முழுவதும் சேமித்தால் மட்டுமே அத்தொகையை சேமிக்க முடியும். அதனால் ஒரு நண்பன் ஊர் செல்ல ஆசைப்படும் போது ஆளாளுக்கு 100, 200 ரூபாய் என்று தருவோம். அதை வாங்கிக்கொண்டு ஊருக்குப் போகும் அவனை வழியனுப்பி வைக்க ரயில் நிலையத்தில் நிற்போம். வண்டி கிளம்பும் அந்தத் தருணத்தில்… அவன் ஊருக்குப் போகிறான். நம்மால் முடியலையே… என்ற ஏக்கம் எல்லோருக்கும் கண்ணீராக முட்டிக்கொண்டு நிற்கும். அடுத்தக் கணம் அவனாவது அவன் அம்மா, அப்பாவைப் பார்க்கப்போகிறானே என ஆசுவாசப்படுத்திக்கொண்டு… படியில் நின்றபடி கையசைக்கும் ஊர் போகும் நண்பனுக்கு கண் துடைத்தபடி கையசைப்போம்.
இப்படியான வாழ்வு சம்பவங்கள் மும்பையில் நான் இருந்த பதினேழு வருடங்களில் கிடைத்தது. அச்சம்பவங்களிலிருந்து என் கதை உலகம் பிறந்தது. பிறக்கிறது. பிறந்து கொண்டேயிருக்கிறது.
நக்கீரன் : ஓர் எழுத்தாளரிடம் கேட்க கூடாத கேள்விதான்… வாசகனை அசைத்துப்போடும் உங்கள் படைப்புகளிலேயே உங்களை அசைத்தப் படைப்பு எது…?
நாஞ்சில் நாடன் : நான் முன்னரே சொன்னது போல்… என் தேடல்களில் கிடைக்கும் மனிதர்கள் கதை மாந்தர்களாக வலம் வருவது போல், இங்குள்ள கேவலமான அரசியலும் என் கதைகளில் வலியோடு இருக்கிறது. மகாரஷ்டிராவில் விவசாயிகள் பசி பட்டினியால் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆனால், அவர்கள் வயிற்று வலியால் செத்துப்போனார்கள் என சத்தியம் செய்தது இங்குள்ள அரசியல்.
மனம் வெதும்பிய நான் மகாராஷ்டிராவில் விவசாயிகள் ரயில் பெட்டியில் அமர்ந்து சில ரொட்டித் துண்டுகளையும் உருளைக் கிழங்கையும் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் சமயம் ஒரு விவசாயி என் இருக்கைக்கு வருகிறார். ஒரு பாலித்தீன் பையில் சில துணிகளும், ஒரு வாட்டர் கேனில் பாதிக் குடிக்கப்பட்ட தண்ணீரையும் கொண்டு வந்தவரின் முகத்தில் அப்படியொரு சோகமும், வலியும் விரவிக்கிடந்தன.
மெல்ல… தயக்கத்தோடு என் அருகே வந்து என்னிடம் இருக்கும் ரொட்டித் துண்டுகளை கவனிக்கும் அவர், ஹமீ கானா… என்ற போது, நான் அழுதே விட்டேன். அதற்கு அர்த்தம் ‘யாம் உண்போம்’என்பது. எனக்கு கொடுங்கள் என்றால் பிச்சைக் கேட்பது போல் ஆகிவிடும் என்பதால் அந்த விவசாயி ‘ஹமீ கானா’ என்று கேட்ட அந்தத் தருணம், அவரின் விரக்தியான கண்கள்… மகாராஷ்டிரா விவசாயிகளின் கொடும் பசியை மறைக்கச் செய்யும் அரசியலை கிழித்தெறிந்தன. அந்த நிஜக் கதைதான் இந்தச் “சூடிய பூ சூடற்க” சிறுகதைத் தொகுப்பில் உள்ள ‘யாம் உண்போம்’ கதை.
அதே தொகுப்பில் ‘தன்ராம் சிங்’ என்றொரு கதை. அதில் ஒரு கூர்க்காவாக வரும் தன்ராம் சிங் என்னோடு வாழ்ந்தவன். பணி மாற்றலாகி கோவையில் குடியேறிய போது என் அலுவலக வாசலில் நின்றிருந்தவன். மட்டன் பிரியனான அவனால் மட்டன் வாங்கி உண்ணும் வரும்படியைக்கூட கொடுக்காத இந்தச் சமூகத்தில், அவன் உண்ணுவது குறைந்த விலைக்கு கொடுக்கப்படும் ஆடுகளின் காதுகள் தான்.
எங்கோ ஒரு மாநிலத்திலிருந்து இங்கே வாழ வந்திருக்கும் அவன் வேறு யாருமில்லை. எந்த மும்பையில் கூலி வேலை செய்து கொண்டு அப்பா, அம்மா, சாப்பாடு, ஊர் என ஏக்கம் கொண்டலைந்து கொண்டிருந்தானோ அந்த நாஞ்சில் நாடனாகத்தான் அவனையும் பார்த்தேன்.
அவனுக்கு ஒரு முறை இன்லேண்ட் லெட்டர் வருகிறது. இறப்புச் செய்தியைத் தாங்கி வந்த அந்தக் கடிதத்தைத் தூக்கிக் கொண்டு அவனைப் போலவே இங்கே வந்திருக்கும் அவன் “உறவு கூர்க்காக்களுக்கு” தெரியப்படுத்திவிட்டு பல்லாயிரக்கணக்கான மைல்களைக் கடந்து, அவன் ஊர் சேர்வதற்குள் இன்லேண்ட் லெட்டரில் புதைக்கப்பட்ட அந்த மரணச் செய்தியைப் போல மரணமானவனும் புதைக்கப்பட்டு நாட்கள் கடந்திருந்தன.
அம் மரணத்திற்கு வந்தவர்கள் பாதி வழியிலேயே ஒரு கடற்கரையில் கூடி அந்த இன்லேண்ட் லெட்டர்களை கொழுத்தி விட்டு மீண்டும் கூர்க்காக்களாக திரும்பினார்கள். மொட்டையடித்த தலையோடு தன்ராம் சிங் திரும்பி வந்தான். அதற்குப் பிறகு மூன்று மாதங்களுக்கொருமுறை மொட்டையடித்துக்கொள்ளும் தலையை வைத்திருந்தான் தன்ராம் சிங்.
அந்த தன்ராம் சிங்கை கதையாக்கிய போது… ‘ஆயிரம் வலிகள் சுமந்து ஒரு குச்சியைக் கையிலெடுத்துக்கொண்டு மாதத்திற்கொருமுறை உங்கள் வீட்டைத் தட்டும் கூர்க்காவுக்கு ஐந்து ரூபாய் கொடுக்க கூட நீங்கள் யோசிக்க வேண்டாம்’ என்று முடிந்தது அக்கதை. அவ்விரண்டு கதைகளுமே என்னை அசைத்துப் பார்த்தவைதான்.
நக்கீரன் : சாகித்ய அகாடமியை விமர்சனப்பூர்வமாகவே தாக்கி வந்த தங்களுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்திருப்பதை எப்படி உணர்கிறீர்கள்…?
நாஞ்சில் நாடன் : பலமுறை நான் திட்டி தீர்த்துக்கொண்டிருப்பதால் எனக்கு ஒரு விருது கொடுத்து வாயை அடைக்கலாம் என்று நினைத்ததோ என்னவோ அகாடமி… என சிரித்தவர், தொடர்ந்து…  சாகித்ய அகாடமி விருது தேர்ந்தெடுப்பதற்கான விதிமுறைகள் முட்டாள் தனமானது தான். இதை எப்போதும் கூறுவேன்.
நக்கீரன் : அதே நேரத்தில் உங்களுக்கு இவ்விருது கொடுக்கப்பட்டிருப்பதின் மூலம் அகாடமி விருது தேர்ந்தெடுத்தலில் ஒரு சரியான மாற்றம் நிகழ்ந்திருப்பதை பலரும் ஏற்றுக் கொள்கிறார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்…?
நாஞ்சில் நாடன் : அப்படி ஒரு சரியான மாற்றம் நிகழ்ந்தால் சந்தோஷம். ஆனால் இந்த விருதுக்கான படைப்பாளிகளின் படைப்புகளை தேர்ந்தெடுப்பவர்கள் தீவிர இலக்கிய வாசனையைக்கூட நுகராதவர்களாக இருக்கிறார்கள். இது மாற வேண்டும்.
ராஜேந்திர சோழன், வண்ணநிலவன், வண்ணதாசன், ஞானக்கூத்தன். ந.முத்துசாமி என ஆகச் சிறந்த படைப்பாளிகள் பட்டியலில் இருக்கும் இவர்களுக்கெல்லாம் எப்போதோ சாகித்திய அகாடமி விருது கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். இதற்கு காரணம் மேற்கூரிய தீவிர இலக்கிய வாசனை நுகராதவர்களால் தான்.
இவர்களுக்கே இன்னும் கிடைக்காத போது, ஜே.பி.சாணக்கியா, பாலை நிலவன் வரிசையில் நிற்கும் இன்னும் பல படைப்பாளிகளுக்கு இவ்விருது கனியும் காலம் எப்போது என யோசித்தால் வருத்தமே அடைகிறேன். சாகித்திய அகாடமியின் இந்த விருதை நான் வாங்கும் போது கூட இந்த வருத்தம் எனக்குள்ளிருக்கும். அப்படி வருத்தப்படாமல் நான் வாங்கினால் நானும் ‘விருது விரும்பர்களில்’ ஒருவனாகி விடுவேன் என்கிறார்… உண்மையாய்.
சந்திப்பு : அருள் குமார்

நியு ஜெர்சி தமிழ் இலக்கிய சங்கம்: நாஞ்சில் நாடன் வாசகர் சந்திப்பு

June 4, 2012 1 comment

நன்றிDyno Buoy

இன்றைய மாலை நாஞ்சில் நாடன் அவர்களுடன் இனிதே கழிந்தது. மெல்லிய பேச்சு, ஆனால் அதே சமயத்தில் தன் கருத்துக்களை வலுவாகவும் ஆணித்தரமாக எடுத்து வைக்கிறார்.

அமெரிக்க இந்திய கல்வி முறை, தமிழக அரசியல், ஈழ போராட்டம் என்று ஆரம்பித்த பேச்சு கம்பனைப்பற்றி பேசத்துவங்கியதும் நாஞ்சிலின் கண்களில் ஒரு ஒளி வந்து சேர்ந்து கொண்டது. கம்பனை பற்றி பேசும் போது ஒருவகை பரவச நிலையை அடைவதை பார்க்கமுடியும். கம்பனின் செய்யுளை மேற்கோள்காட்டிப்பேசும் போது அந்த பரவசம் உச்சத்தை அடைக்கிறது. கம்பனின் சொற்பிரவாகங்களைப்பற்றி நிறைய தெரிந்து வைத்திருக்கிறார். சட்டென்று கம்பராமாயணத்தில் இருந்து செய்யுள் எதையாவது சொல்லி அதன் அர்த்தங்களை ஒரு ஆராய்ச்சி மாணவனின் துறுதுறுப்புடன் விவரிக்கிறார்.

இசையை பற்றி அறிந்து வைத்திருக்கிறார். சஞ்சய் சுப்ரமணியனை பற்றி உயர்ந்த அபிப்பிராயங்களை கொண்டிருந்தார். தமிழ் இசை வளர தமிழ் பாடல்கள் ஸ்வரப்படுத்தப்படவேண்டிய கட்டாயத்தை வழியுறுத்தினார். அதை செய்ய இன்று யாரும் நம்மிடையே இல்லை என்று வருத்தம் தெரிவித்தார்.

தமிழ் மொழியில் சுமார் 8-10 லட்சம் சொற்கள் இருக்கலாம் என்றும், அதையெல்லாம் தொகுக்க ஆளில்லை என்று அங்கலாய்த்தார். இப்போதைய லெக்சிக்கான் அகராதிகளில் அதிகபட்சம் 40-50 ஆயிரம் வார்த்தைகளே இருக்கும் என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

விமர்சகர்களின் பார்வை, அவர்களின் நோக்கம் குறித்து பேசினார். அன்றைய விமர்சகர்கள் எதையும் எதிர்பாராமல் படைப்பை வாசித்தே மதிப்புரை வழக்கிய காலகட்டத்தையும் இன்று ரூம் போட்டு சரக்கும் கொடுத்தால்தான் ரெண்டு பக்க மதிப்புரை தேத்த முடியும் என்பதையும் வருத்தத்தோடு தெரிவித்தார்.

இன்னும் பல விசயங்களை பற்றியும் ஆணித்தரமான கருத்துக்களை மென்மையாக வழியுறுத்தினார்.

தமிழின் நல்ல ஆளுமையை சந்தித்த மகிழ்ச்சியில் மனநிறைவோடு வீடு திரும்பினோம்… வயிற்றுக்கும் உணவளித்த மதுசூதனன் தம்பதியினருக்கு நன்றிகள் பல!!

Thendral Interview with Nanjil Nadan by Aravind Saminathan

June 3, 2012 2 comments

‘தலைகீழ் விகிதங்கள்’ என்ற நாவலின் மூலம் தமிழ் இலக்கிய உலகின் கவனம் கவர்ந்த படைப்பாளி நாஞ்சில்நாடன். நாஞ்சில் நாட்டின் தனித்துவமிக்க மொழியில் சமூக அக்கறையுடன் வீரியமிக்க படைப்புகளைத் தந்து கொண்டிருப்பவர். நவீனச் சூழலில் நாம் இழந்து கொண்டிருக்கும் விழுமியங்களை, பண்பாட்டை, கலாசாரத்தை தமது காத்திரமான படைப்புகள் மூலம் தொடர்ந்து வலியுறுத்தி வருபவர்.

‘என்பிலதனை வெயில் காயும்’, ‘மாமிசப் படைப்பு’, ‘மிதவை’, ‘சதுரங்கக் குதிரை’, ‘எட்டுத்திக்கும் மதயானை’ ஆகியன இவரது நாவல்கள். ‘தெய்வங்கள் ஆடுகள் ஓநாய்கள்’, ‘வாக்குப்பொறுக்கிகள்’, ‘உப்பு’, ‘பிராந்து’, ‘பேய்க்கொட்டு’, ‘சூடிய பூ சூடற்க’ ‘கான்சாகிப்’ போன்றவை சிறுகதைத் தொகுதிகள்.

‘சூடிய பூ சூடற்க’ 2010ம் ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது பெற்றது. ‘மண்ணுளிப்பாம்பு’, ‘பச்சை நாயகி’ போன்றவை கவிதைத் தொகுதிகள்.

‘நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை’, ‘நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று’, ‘நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை’, ‘தீதும் நன்றும்’, ‘காவலன் காவான் எனின்’, ‘திகம்பரம்’ போன்றவை கட்டுரைத் தொகுப்புகள்.

இவரது கதைகள் அனைத்தையும் தொகுத்து ‘தமிழினி’ வெளியிட்டுள்ளது. தனது படைப்புகளுக்காக இலக்கியச் சிந்தனை, தமிழ் வளர்ச்சித் துறை, பம்பாய், கல்கத்தா தமிழ் எழுத்தாளர் சங்கம், திருப்பூர் தமிழ்ச் சங்கம், கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் உள்ளிட்ட பல அமைப்புகளிலிருந்து பரிசுகளும் பாராட்டுகளும் பெற்றவர்.

கலைமாமணி, கண்ணதாசன் விருது போன்ற விருதுகள் பெற்றவர். இவரது படைப்புகளை ஆராய்ந்து 15க்கும் மேற்பட்டவர்கள் முனைவர், இளமுனைவர் பட்டம் பெற்றுள்ளனர். தில்லிப் பல்கலைக்கழகம், கேரளப் பல்கலைக்கழகம், மனோன்மணீயம் சுந்தரனார், மதுரை காமராசர், பாரதியார் உள்ளிட்ட பல பல்கலைக் கழகங்களில், கல்லூரிகளில் இவரது படைப்புகள் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. ஆங்கிலம், ஃப்ரெஞ்ச், மலையாளம் உள்ளிட்டவற்றில் இவரது படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அமெரிக்கப் பயணத்திற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக இருந்தவரிடம் உரையாடினோம். அதிலிருந்து….
கே: உங்கள் மனதில் இலக்கிய விதை விழுந்தது எப்போது?


ப: பள்ளியில் நான் படித்துக் கொண்டிருந்த காலத்திலேயே தான். எங்கள் ஊரில் பொதுவுடைமை மற்றும் திராவிட இயக்கத்தினர் அரசியல் கூட்டம் நடத்துவார்கள். அதில் பேச்சாளர்கள் சொல்லும் பாடல் வரிகள் என்னை மிகவும் ஈர்க்கும். நூலகத்திற்குச் சென்று அவற்றைத் தேடி முழுமையாக அறிந்துகொள்வேன். பள்ளியில் நடக்கும் கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக நூல்களைத் தேடிப் படிக்க ஆரம்பித்தேன். இப்படி ஏற்பட்டதுதான் இலக்கிய ஆர்வம்.

கே: உங்கள் முதல் படைப்பு பற்றிச் சொல்லுங்கள்…


ப: நான் எம்.எஸ்ஸி. முடித்து விட்டு 1972ல் வேலைக்காக மும்பை சென்றேன். நான் வேலை பார்த்த தொழிற்சாலையில் மராத்தியரும், உத்திரப் பிரதேசத்தினரும்தான் அதிகம் இருந்தனர். ஒரே ஒரு மலையாளி இருந்தார். தமிழர் யாரும் கிடையாது. ஆனால் எனக்கு நிறைய நேரம் கிடைத்தது. அதனால் மும்பை தமிழ்ச் சங்க நூலகத்துக்குப் போக ஆரம்பித்தேன். எனது கிராமம், உறவுகள் பற்றிய ஏக்கம் எப்போதும் மனதில் இருக்கும். எனது தனிமையை, ஏக்கத்தைப் போக்குவதற்காக எழுத ஆரம்பித்தேன். அப்போது பம்பாய் தமிழ்ச் சங்கத்தின் மாத இதழில் என்னை எழுதக் கேட்டுக் கொண்டார்கள். வாராந்திரக் கூட்ட அறிக்கை தயாரிப்பது போன்ற வேலைகளையும் செய்வேன். அந்தக் காலத்தில் ‘விரதம்’ என்ற தலைப்பில் ஒரு சிறுகதையை எழுதி ‘தீபம்’ இதழுக்கு அனுப்பினேன். 1975 ஆகஸ்டில் அந்தச் சிறுகதை வெளியானதோடு, அந்த ஆண்டின் சிறந்த கதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இலக்கியச் சிந்தனை பரிசும் கிடைத்தது. அது தந்த நம்பிக்கையில் தொடர்ந்து எழுத ஆரம்பித்தேன்.

கே: சங்க இலக்கியங்களிலும், தேவார, திருவாசகங்களிலும், கம்பனிலும் நல்ல புலமையுடையவர் நீங்கள் என்பதை உங்கள் படைப்புகளில் காண முடிகிறது. அந்த ஆர்வம் எப்படி முகிழ்த்தது?


ப: என் அப்பாவழித் தாத்தா அந்தக் காலத்தில் வில்லுப்பாட்டுக் கலைஞர்களுக்குப் பாடல்கள், கதைகளைச் சொல்லித் தந்திருக்கிறார். ராமநாடக கீர்த்தனைப் பாடல்களை பாடுவார். குறிப்பாக பங்குனி, சித்திரை மாதங்களில் வீட்டின் படிப்பறையில் அமர்ந்து கிராம மக்களுக்கு ராமாயண, மகாபாரதக் கதைகளைச் சொல்லுவார். என் தந்தைக்குத் திருக்குறளில் ஆர்வம் உண்டு. சிறுவயதில் நான் வாசித்த நூல்களும், மும்பைத் தமிழ்ச் சங்கத்தில் பயின்ற நூல்களும், அங்கு கேட்ட சொற்பொழிவுகளும்தான் எனது பழந்தமிழ் இலக்கிய ஆர்வத்துக்குக் காரணம். மும்பை தமிழ்ச் சங்கத்தில் கி.வா.ஜ., அ.ச.ஞா., குன்றக்குடி அடிகளார், ப. நமசிவாயம், ராதாகிருஷ்ணன், ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள் எனப் பல சான்றோர்கள் வந்து பேசுவர்.

கே: பொதுவாக உங்களது பேச்சைக் கேட்கிறவர்கள், ஒரு தமிழாய்ந்த பேராசிரியரின் உரையைக் கேட்பது போல் இருந்தது என்று சொல்லியிருக்கிறார்கள். பேராசிரியர் ஆக வேண்டும் என்பது உங்கள் சிறுவயது ஆசையாக இருந்ததுண்டா?


ப: நான் பி.எஸ்ஸி. கணிதம் படித்தேன். எங்கள் மாவடத்தில் மேலே எம்.ஏ. தமிழ் படிக்கும் வாய்ப்பு மட்டுமே இருந்தது. என் பெற்றோர், கணிதம் படித்துவிட்டுத் தமிழ் படிப்பதா என்று ஒப்புக் கொள்ளவில்லை. எம்.எஸ்ஸி கணிதம் படிககத் திருவனந்தபுரத்துக்கு அனுப்பினார்கள். நல்ல பல தமிழ்ப் பேராசிரியர்களிடம் அவர்கள் அனுமதி பெற்று வகுப்பில் கலந்து கொண்டு பாடம் கேட்டிருக்கிறேன். அது எனது இந்த உரையாற்றலுக்குக் காரணமாக இருக்கலாம். நான் அடிப்படையில் ஒரு படைப்பிலக்கியவாதி. ஒரு தொழில்முறைச் சொற்பொழிவாளன் பார்வைக்கும், ஒரு படைப்பிலக்கியவாதியின் பார்வைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். அந்த வேறுபாடுதான் ஒருவேளை எனது பேச்சிற்கு பேராசிரியர் தொனியைத் தருகிறதோ என்னவோ. நான் கற்றதைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதுதான் என் ஆர்வமே தவிர, சொற்பொழிவாளனாக அறியப்படுவதில் எனக்கு விருப்பம் இல்லை. எழுத்துதான் என்னுடைய தலையாய பணி. முதற்பணி.

 

கே: குடும்ப வறுமைச் சூழல் குறித்துச் சொன்னீர்கள். இளமைப்பருவ நாட்களைப் பற்றிச் சொல்லுங்களேன்…


ப: மிகவும் சிரமமான குடும்பச் சூழல். ஒரே ஒரு ஏர்மாடுதான். 3, 4 ஏக்கர் நிலம் குத்தகைக்கு எடுத்தது – நாங்க பாட்டத்துக்கு எடுத்தது என்று சொல்லுவோம் – அதில் பயிர்செய்து, அதில் வரும் வருமானத்தைக் கொண்டு, அப்பா, அம்மா, அப்பாவின் அம்மா, அம்மாவின் அம்மா, நாங்கள் ஏழு குழந்தைகள் எல்லோரும் ஜீவிக்க வேண்டும். நான் முதல் குழந்தை. சாப்பாடே ஒரு போராட்டம்தான். அறுவடை முடிந்து நான்கு மாதம் ஆன பிறகு, அடுத்த அறுவடைக்கு ஒரு மாதம் ஆகும் என்ற நிலையில் பல நாட்கள் பட்டினி கிடந்திருக்கிறோம். மரவள்ளிக் கிழங்கை வேகவைத்துச் சாப்பிட்டிருக்கிறோம். மரவள்ளிக் கிழங்கைப் பறிக்க நான் வடக்குமலைக்கு ஏறிச் சுமந்து வந்திருக்கிறேன். சின்னச் சின்ன கூலி வேலைகளைச் செய்திருக்கிறேன். அதே சமயம் அந்த வேலைகள் என் சுயமரியாதையை பாதிக்க அனுமதித்ததில்லை. துயரப்பட்டிருக்கிறேன்; துன்பப்பட்டிருக்கிறேன். பட்டினி கிடந்திருக்கிறேன். பசி என்றால் என்னவென்று தெரியும். ஆனாலும் என்னுடைய சுயத்தைக் காப்பாற்றிக் கொள்வதில் முனைப்பாகவே இருந்திருக்கிறேன்.

காமராஜர் பள்ளிக் கல்வியை இலவசமாக்கியதால் என்னால் எஸ்.எஸ்.எல்.சி. வரை படிக்க முடிந்தது. நான் பி.யூ.சி. படிக்கும்போது ஆண்டுக் கட்டணம் 192 ரூபாய் கட்டுவதற்காக என் தந்தை கடன் பத்திரம் எழுதிக் கொடுத்துக் கடன் வாங்கி வந்தார். கல்லூரியில் படிக்கும்போது டாக்டர் ராதாகிருஷ்ணன் குடியரசுத் தலைவராக இருந்தார். அவர் நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்காக Loan Scholarship என்ற திட்டத்தைக் கொண்டு வந்தார். அது எனக்குக் கிடைத்தது. அந்தக் கடன் உதவித் தொகையைக் கொண்டுதான் நான் ஆறு ஆண்டுகள் எம்.எஸ்ஸி. வரை படித்தேன். அந்தத் திட்டத்தின்படி, நீங்கள் ஆசிரியர் பணிக்குப் போவதாக இருந்தால் அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டாம். வேறு பணிக்குச் சென்றால் கடனைக் குறிப்பிட்ட காலத்திற்குள் திருப்பிச் செலுத்தியாக வேண்டும். என்னால் ஆசிரியர் பணிக்குச் செல்ல முடியவில்லை. தனியார் பணிதான் கிடைத்தது. மகாராஷ்டிர அரசின் ஆட்சி அதிகாரி மூலம் நான் வாங்கிய கடன் அனைத்தையும் அரசுக்குத் திருப்பிச் செலுத்தினேன். அந்த ரசீதுகளை இன்னமும் பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். இதை எதற்குச் சொல்கிறேன் என்றால், பெற்றோர்கள் பட்டினியும் பசியும் கிடந்து என்னைப் படிக்க வைத்தார்கள். நானும் அந்தப் பொறுப்பை உணர்ந்து விடுமுறை நாட்களில் மண் சுமந்து, செங்கல் சுமந்து, உர மூட்டைகள் சுமந்து படித்தேன். இன்று நல்ல நிலைமையில் இருக்கிறேன். அந்த அனுபவங்களை நினைத்து எனக்கு வருத்தமில்லை. சந்தோஷமாகத்தான் இருக்கிறேன். அவையெல்லாம் சேர்ந்துதான் என்னை ஒரு படைப்பாளியாக்கி இருக்கின்றன.

கே: உங்கள் ‘நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை’ மிக முக்கியமான ஆவணம் என்று சொல்லலாம். அதை எழுதத் தூண்டியது எது?


ப: சுந்தரராமசாமி நாகர்கோவிலில் பாம்பன்விளை என்ற இடத்தில் வருஷத்திற்கு இரண்டு முறை இலக்கிய முகாம் நடத்துவார். நான் அக்கால கட்டத்தில் சிறுகதைகள் மட்டுமே எழுதிக் கொண்டிருந்தேன். சுந்தரராமசாமி என்னிடம் “நீங்கள் வாழும் சமுதாயம் பற்றிய உங்களது 50 ஆண்டுக் கால அவதானிப்புகளையே ஒரு கட்டுரையாக எழுதி வாசிக்கலாமே” என்று சொன்னார். நானும் ஒரு இருபது பக்கத்துக்குக் கட்டுரை எழுதி வாசித்தேன். அதற்கு நல்ல வரவேற்பு. பின்னர் சுந்தரராமசாமியும் அவரது மகன் கண்ணனும் அதையே ஒரு நூலாக எழுதலாமே என்றனர். அதன்படி அந்தக் கட்டுரையை மேலும் விரிவாக்கி, மேலும் பல தரவுகளையும், பகுப்புகளையும் சேர்த்து நூலாக்கினேன். இப்படி உருவானதுதான் ‘நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை’. அந்த நூலில் நான் என்னுடைய நினைவில் இருந்து அந்தச் சமுதாயத்தை சின்ன வயதில் நான் எப்படிப் பார்த்தேன், இப்போது எப்படிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன், என்ன நடந்தது, என்ன நடந்திருக்க வேண்டும் என்பதையெல்லாம் விலகி நின்று ஒரு பொதுமனிதனாகப் பார்த்து எழுதினேன். நம்முடைய மொழியில் அது மாதிரியான புத்தகங்களில் அதுதான் முதல் என்று சொல்லலாம்.

கே: உங்கள் சிறுகதைகளில் நகைச்சுவை, சமூகத்தின் மீதான தார்மீகக் கோபம் என எல்லாவற்றையும் வெளிப்படுத்தி அறச்சீற்றம் காட்டும் ‘கும்பமுனி’ பற்றிக் சொல்லுங்கள்…


ப: சில பிரச்சனைகளை நாம் கதையாக எழுத முடியாது. ஆனால் கதை என்ற வடிவத்தைத் தாண்டி அதைச் சொல்ல வேண்டும். அதற்காக நான் ஒரு கதாபாத்திரத்தைச் சிருஷ்டிக்கிறேன். அவர்தான் கும்பமுனி. நான் இன்னும் பல வருடங்கள் கடந்து, ஒரு கிழவனாகி, சமூக நிலைகளைக் கண்டு கோபம் கட்டுக்கடங்காமல் போகும் நிலைமையில் எப்படிச் செயல்படக்கூடும் என்று கற்பனை செய்கிறேன். அதன் விளைவுதான் ‘கும்பமுனி.’ இந்தப் பாத்திரப் படைப்பில் ஓரளவுக்கு நகுலனின் பாதிப்பு உண்டு. அவர் தோற்றம், குணம், செயல்பாடு, விட்டேத்தியான பேச்சு, புலமை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டவர்தான் கும்பமுனி. ஆனால் நான் பேசும் மொழி அவர் மொழி அல்ல. அந்தக் கதாபாத்திரத்தின் மூலமாகச் சிறுகதையாக என்னால் எழுத முடியாத, வெளிப்படையாக எழுதக்கூடாத பலவற்றை என்னால் பேச முடிகிறது. இதுவரைக்கும் கும்பமுனி கதைகள் என்று 11 கதைகள் எழுதியிருக்கிறேன். இன்னும் நிறைய எழுதலாம்தான். ஆனால் ஓராண்டாக கட்டுரை எழுதுவதிலேயே எனது நேரம் போகிறது. மீதி நேரம் தொல்லிலக்கிய வாசிப்பு, இடைவிடாத பயணம் என்று போய்க் கொண்டிருக்கிறது.

கே: படைப்பை விடுத்து அதை எழுதியவரை விமர்சிக்கும் போக்கு இப்போது அதிகரித்திருக்கிறது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?


ப: நிச்சயமாக இது படைப்பிலக்கிய வளர்ச்சிக்கு ஆரோக்கியமானது கிடையாது. இதற்கெல்லாம் குழு மனப்பான்மைதான் காரணம். ஒரு படைப்பின் மீது வைக்கப்படும் விமர்சனத்தை நேர்மையாக எதிர்கொள்ள முடியாதவர்கள், சகிப்புத்தன்மை அற்றவர்கள்தான், விமர்சித்தவர் மீது ஜாதிய முத்திரை குத்தியும் தனிப்பட்ட விரோதம் கொண்டும் தனிநபர்த் தாக்குதலில் இறங்குகிறார்கள். ஆனால் இது தமிழ் இலக்கியத்திற்குப் புதிதல்ல. க.நா.சு., வெங்கட் சாமிநாதன் மீதுகூட ஜாதி முத்திரை குத்தினார்கள். பொதுவாகத் தனது ஜாதி பற்றி எழுதும்போது எழுதுபவருக்கு ஒரு சிக்கல் இருக்கும். ‘ஜாதி வெறியர்’ என்றோ ‘சுயஜாதிச் சொறிதல்’ என்றோ முத்திரை குத்தப்படலாம். எனக்கும் இது நேர்ந்திருக்கிறது. நான் கடுமையான ஒரு விமர்சனத்தை ஒரு கவிதை மீதோ, சிறுகதை மீதோ அல்லது ஏதேனும் படைப்பு மீதோ வைக்கும்போது ‘ஜாதி முத்திரை’ குத்துகிறார்கள். ஆனால் நான் அவற்றைப் பொருட்படுத்துவதில்லை. என்னளவில் நான் சுத்தமாக இருக்கிறேன். ஜாதியை வசவாகச் சிலர் பயன்படுத்துவதில் எனக்கு வருத்தமில்லை. ஆனால் நான் அவர்களிடம் திருப்பிக் கேட்கிறேன், “நீங்களும் குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்தானே, உங்கள் ஜாதியைப் பற்றி அவ்வாறு சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா?’ என்று. பதில் வராது. நான் அநியாயமாக ஒரு மதத்துக்கோ, இனத்துக்கோ, குழுவுக்கோ ஆதரவாக இருக்கின்றேனா என்பது பற்றித்தான் கவலைப்படுவேனே தவிர, இது போன்ற முத்திரைகளைப் பற்றிக் கவலைப்பட்டு, அதற்கு பதில் சொல்ல ஆரம்பித்தால் முடிவே இருக்காது.

கே: விருதுகள் தகுதியானவர்களுக்கு வழங்கப்படுவதில்லை; சரியான படைப்புகளுக்கு வழங்கப்படுவதில்லை அல்லது மிகக் காலம் தாழ்த்தி வழங்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டுகள் குறித்து உங்கள் கருத்தென்ன?


ப: இந்தக் குற்றச்சாட்டை உண்மை என்றுதான் சொல்ல வேண்டும். தற்செயலாகத்தான் நல்ல படைப்பாளிகளுக்கு விருது கிடைக்கிறது. விருது அளிக்கும் அமைப்பில் இருப்பவர்கள் யாருக்கும் நவீன இலக்கியப் பரிச்சயம் இருப்பதில்லை. அவர்கள் விருதுக்கு மூன்று புத்தகங்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்றால் அதை வாசித்திருப்பார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. நடுவர்களாக நியமிக்கப்படுவர்களுக்கு அந்த ஆண்டில் என்ன புத்தகங்கள் புதிதாக வந்திருக்கின்றன என்பது தெரியாது. சில கல்வித்துறையில் இருக்கிறார்கள். அவர்களுக்கும் நவீன எழுத்துக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. நான் யார்மீதும் குற்றம் சாட்ட விரும்பவில்லை. யார் நன்றாக எழுதக் கூடியவர், யார் எழுதாதவர் என்பதுகூட அவர்களுக்குத் தெரியாது. காரணம், அவர்கள் நவீன எழுத்துக்களை வாசிப்பதில்லை. மேலும் நம் மொழியில் பல விருதுகள் பரிந்துரைகள் மூலம் வாங்கப்படுகின்றன. அரசியல் செல்வாக்கை, ஜாதி செல்வாக்கைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். நடுவர்களின் வீடுகளுக்கு நடையாய் நடந்து விருது வாங்குபவர்களும் உண்டு. சமீபத்தில் ஒரு நடுவர், “எட்டுமுறை வீட்டுக்கு வந்து பார்த்துட்டுப் போனான்யா. சரி என்னதான் பண்றது. போனாப் போவுது கொடுத்துருவோமேன்னு சொல்லிக் கொடுத்திட்டோம்’ என்றார். ஒரு விருதின் முதலிடத்துக்கு நான்கு நல்ல புத்தகங்கள் வருகிறது. நான்கிற்குமே கொடுக்க முடியாது. அதில் ஒன்றுக்குக் கொடுக்கிறார்கள் என்றால் நமக்கு வழக்கில்லை. ஆனால் எந்தவிதத் தகுதியுமில்லாத, மொழியினுடைய மேன்மையையோ, சிறப்பையோ, நவீனத்துவத்தையோ வெளிப்படுத்தாத, புலப்படுத்தாத புத்தகங்களுக்கு விருதுகள் வழங்கப்படும்போதுதான் நாம் அதுபற்றி விமர்சிக்க வேண்டியதாகிறது. நம்மை அது வருத்தப்பட வைக்கிறது.

கே: விஞ்ஞான யுகம், வளர்ச்சி என்று ஒருபக்கம் சொல்கிறோம். இன்னொரு பக்கம் நம் மண்சார்ந்த பலவற்றை இழந்து வருகிறோம். இது குறித்த உங்கள் கருத்தென்ன?


ப: ஒரு படைப்பாளியால் உணர்வை எழுப்ப, கவனத்தை ஈர்க்க, முடியும். அதை வளர்த்து முன்னெடுத்துச் செல்வது ஒரு நல்ல அரசியல் தலைமையால் மட்டுமே முடியும். நமது துர்ப்பாக்கியம், இந்தியாவிலும் சரி, தமிழ் நாட்டிலும் சரி, நம்பிப் பின்னால் செல்லக்கூடிய அரசியல் தலைமை அரிதாகிவிட்டது. நம்பத் தக்கவர்களோ முதுமையடைந்து விட்டார்கள். இளைஞர்களுக்குப் சமூகப் பிரச்சனைகள் மீது பெரிதாக அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை. அவர்களுடைய ஆர்வம் வாழ்க்கை வசதிகளின் மீதுதான் அதிகம் இருக்கிறதே தவிர ஒரு பொதுப் பிரச்சனைக்காகத் தெருவில் இறங்கிப் போராட வேண்டும், ஒரு குரலாவது கொடுக்க வேண்டும் என்பதில் இல்லை. 1964-65ல் ஹிந்தியை எதிர்த்து நடத்திய போராட்டத்திற்குப் பின் தமிழ்நாட்டில் இளைஞர்கள் ஒன்றுகூடிப் போராட்டம் எதுவுமே நிகழவில்லை. போராட்டம் நடக்க வேண்டும் என்பது நமக்கு ஆசை கிடையாது. ஆனால் நாட்டில் பல்வேறு பிரச்சனைகள் இருக்கும்போது அதற்கு எந்த எதிர்வினையும் காட்டாது இளைஞர்கள் இருப்பது எதிர்கால சமூகத்துக்கு நல்லதல்ல. இலங்கையில் லட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டபோது அதை எதிர்த்து ஒரு கருப்புக் கொடி ஊர்வலம் கூட இங்கே நடக்கவில்லை. இதைப் பார்க்கும்போது ஒரு சிக்கலுக்குள் இருக்கிறோமோ என்று தோன்றுகிறது. படைப்பாளிகளும் கலைஞர்களும் எச்சரிக்கை உணர்வைத் தட்டி எழுப்பியபடியே இருக்க வேண்டும். அதுதான் அவனது முக்கியப் பணி.

ஆனால் இதற்காக நம்பிக்கை இழக்க வேண்டிய அவசியமில்லை. இளைஞர்கள் இந்தப் பிரச்சனைகளைப் பற்றிப் புரிந்தவர்களாக இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்குச் சரியான தலைமை இல்லை. இதை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அரசியல் தளம் இங்கே ஆரோக்கியமானதாக இல்லை. சரியான பிரச்சனைக்காக, சரியான காரணங்களுக்காக சரியான நேரத்தில் ஒரு எதிர்ப்பைக் கொண்டு செல்ல எந்த அரசியல் கட்சிக்கும் ஆர்வம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இளைஞர்களுக்கு உணர்வு இருக்கிறது. ஆனால் அதை ஒருமுகப்படுத்துவது யார்?

கே: சமீப காலமாக பல வெளிநாடுகளுக்குப் பயணம் செய்து வருகிறீர்கள். அங்கு தமிழ் இலக்கியம் குறித்து நீஙகள் அவதானிக்கும் விஷயங்கள் என்னென்ன?


ப: நானும் ஜெயமோகனும் வேறு சில நண்பர்களும் இரண்டு வருடங்களுக்கு முன்னால் மலேசியாவுக்குச் சென்றிருந்தோம். அங்கு ஏழு நாட்கள் இருந்தோம். அங்குள்ள எழுத்தாளர்களைச் சந்தித்தோம். சமீபத்தில் குவைத், துபை சென்று வந்தோம். உலகம் பூராவுமே தமிழர்கள் தற்போது நவீன எழுத்துக்களில் மிகவும் ஆர்வமுடையவர்களாய் இருக்கிறார்கள். எங்கு சென்றாலும், இணையம் மற்றும் நூல்களின் வழி நம்மைப் படித்த வாசகர்களைச் சந்திக்க முடிகிறது. அவர்கள் நம்மிடம் வாசிப்பு பற்றிப் பேசுகிறார்கள். படைப்புகளில் சந்தேகம் கேட்கிறார்கள். நாம் சொல்லும் புத்தகத்தைத் தேடிப் படிக்கிறார்கள். தமிழ்நாட்டில் இருக்கும் குழு மனப்பான்மை அவர்களிடம் இல்லை. ஒரு படைப்பாளியாக இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது.

கே: ஒரு எழுத்தாளராக உங்கள் கடமை அல்லது பணி என்று எதைச் சொல்வீர்கள்?


ப: என்னுடைய படைப்புக்கு நேர்மையானவனாக, நியாயம் உள்ளவனாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான். ஒரு பிரச்சனைக்குப் பல தரப்புகள் இருக்கலாம். எல்லாத் தரப்பிலிருந்தும் அந்தப் பிரச்சனைகளைப் பார்க்கலாம். என் தரப்பிலிருந்து நான் நேர்மையாகப் பார்க்க வேண்டும் என விரும்புகிறேன். இரண்டாவது கலை சார்ந்த வெற்றிக்கு நான் பாடுபட வேண்டும் என நினைக்கிறேன். பசி, காதல், காமம் என்பதெல்லாம் உலகம் தோன்றிய காலம் முதல் இருந்து கொண்டே இருக்கிறது. திரும்பத் திரும்ப நாம் இவற்றை எழுதிக் கொண்டேதான் இருக்கிறோம். ஆனாலும் வித்தியாசமான படைப்புகளை எழுதத்தான் செய்கிறோம். ஒரு படைப்பாளி எப்படிப் பார்க்கிறான், எப்படி உணர்கிறான், எப்படி மொழியைக் கையாளுகிறான், எப்படி வெளிப்படுத்துகிறான் என்பதைப் பொறுத்து அது அமைகிறது. என் எழுத்து என் அனுபவங்களுக்கு நேர்மையாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். சமயங்களில் சில படைப்புகளில் கலைத்தன்மை குறைவாக இருந்தாலும் கூட, இருந்து விட்டுப் போகட்டுமே அது பேசுவது உண்மையாக இருக்கும் பட்சத்தில் என்று நினைக்கிறேன். படைப்பு உண்மை அனுபவத்தைப் பற்றிப் பேசும்போது அதில் கலையம்சங்கள் சில குறைந்தாலும் அதை பெரிதுபடுத்த வேண்டியதில்லை. ஜாதி, மதம், இனம், கொள்கை, கோட்பாடு, தத்துவம் இவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமல் என் அனுபவங்களுக்கு நேர்மையாக இருப்பதே என் கடமை.

கே: தற்போதைய எழுத்துலகம் பற்றியும் இளம் படைப்பாளிகள் குறித்துச் சொல்லுங்கள்..


ப: நிறைய இளம் படைப்பாளிகள் எழுத வந்திருக்கிறார்கள். நாற்பது வயசு கொண்ட எழுத்தாளர்கள் என்று பார்த்தால் கீரனூர் ஜாகிர் ராஜா கதைகளும், சிறுகதைகளும் மிகச் சிறப்பாக எழுதி வருகிறார். அதுபோல கண்மணி குணசேகரன், சு. வேணுகோபால், எஸ். செந்தில்குமார், லக்ஷ்மி சரவணகுமார், சந்திரா, கணேசகுமாரன், குமார் அம்பாயிரம், திருச்செந்தாழை என நிறையப் பேர் நல்ல படைப்புகளைத் தந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவர்களின் எண்ணிக்கை குறைவுதான்.

ஒரு முக்கியமான விருதுக் குழுவின் நடுவராக நான் இருந்தேன். அவர்களது ஒரே ஒரு கண்டிஷன் என்னவென்றால் விருதுக்குப் பரிந்துரை செய்யப்படும் ஆசிரியர் 35 வயதுக்குள் இருக்க வேண்டும் என்பதுதான். இப்படி 35 வயதுக்குள் என்று வைத்துப் பார்த்தால் அதிகம் எழுத்தாளர்கள் இல்லை. அதாவது நன்றாக எழுதக்கூடியவர்கள் எல்லாம் 40, 42 வயதுக்கு வந்து விட்டார்கள். நான் என்னை வைத்துப் பேச வேண்டுமென்றால் ‘தலைகீழ் விகிதங்கள்’ என்னுடைய 29, 30 வயதில் எழுதியாகி விட்டது. சுந்தர ராமசாமி புளியமரத்தின் கதையை 30 வயதில் எழுதி விட்டார். ஜெயமோகனின் ரப்பரும் 30 வயதில் வந்துவிட்டது. நான் எழுதவந்த காலத்தில் வந்த வண்ணநிலவன், வண்ணதாசன், பா. செயப்பிரகாசம், விக்கிரமாதித்யன், கலாப்ரியா, பூமணி, ராஜேந்திர சோழன் உள்ளிட்ட எல்லோருமே தங்கள் முதல் படைப்பை 25-30 வயதுக்குள் கொண்டு வந்து விட்டார்கள். இவர்கள் எல்லாம் திறமையான எழுத்தாளர்கள். புத்தங்களும் காத்திரமான புத்தகங்கள். அதை ஒப்பிட்டுப் பார்த்தால் இப்போது எழுதும் எழுத்தாளர்களின் எண்ணிக்கை, வெளியாகும் புத்தகங்களின் தொகை குறைவாகத்தான் இருக்கிறது. ஆனால் அப்படி வருபவர்களின் எழுத்து வீரியமாக, காத்திரமாக இருக்கிறது.

கே: பொதுவாக எழுத்தாளர்களிடையே நிலவும் ஒற்றுமையின்மை மற்றும் குழு மனப்பான்மைக்கு என்ன காரணமாக இருக்க முடியும்?


ப: இது எல்லா மொழிகளிலும் இருக்கிறது. நம் மொழிக்கு ஒன்றும் புதிதல்ல. ஆனால் இது தனிப்பட்ட விரோதமாக ஆகாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். ஒரு படைப்பை ஒருவர் சரியில்லை என்று விமர்சித்து விட்டால் அவரை எதிரியாக நினைக்கும் போக்கு வளர்ந்து வருகிறது. இது படைப்பில்லக்கிய வளர்ச்சிக்கு ஆரோக்கியமானதல்ல. விமர்சனம் செய்தவரும், விமர்சனத்துக்கு உள்ளான படைப்பை எழுதியவரும் சேர்ந்து டீ குடிக்கப் போக வேண்டும். இதுதான் நல்ல மரபு. ஆனால் இது பிற மொழிகளில் இருக்கும் அளவுக்கு நம் மொழியில் இல்லை. எழுத்தாளர்களிடையே பொறாமை தவறானதில்லை, அது ஆரோக்கியமான போட்டிக்கு வழி வகுக்கும் என்றால். ஆனால் விரோதம், புறம் பேசுதல், சொந்த வாழ்க்கை பற்றி அவதூறு பேசுதல், குழுவாக உட்கார்ந்து மதுவருந்தி விட்டு மற்றொரு படைப்பாளியை மிகவும் கேவலமாகப் பேசுதல் இவைதான் கூடாது. முரண்பட்ட கொள்கையுடைய எதிரெதிர் துருவங்களாகப் படைப்பாளிகள் இருந்தாலும், பொது இடத்தில் புன்னகையுடன் கை குலுக்கிவிட்டுச் செல்ல வேண்டும். அதுதான் ஆரோக்கியம். முகத்தைத் திருப்பிக் கொண்டு செல்வது அழகல்ல. பண்புமல்ல. ஆனால் அதை நோக்கித்தான் நாம் போய்க் கொண்டிருக்கிறோமோ என்ற அச்சம் எனக்கிருக்கிறது.

கே: இளம் எழுத்தாளர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?


ப: நான் சொல்ல வருவது இதுதான்: நம் மொழி மிக அற்புதமான மொழி. பல ஆயிரம் ஆண்டுகள் தொன்மையான இலக்கியங்களைக் கொண்ட மொழி. இந்த மொழியில் எழுதிப் பெயர் வாங்குவது அவ்வளவு லேசான காரியமல்ல. நான் சாகித்ய அகாதமி விருது வாங்கச் சென்றிருந்தபோது பிறமொழிப் படைப்பாளிகள் சிலரைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். அவர்கள் மொழியில் எழுதி, புத்தகம் கொண்டு வந்து பரிசு பெறுவது மாதிரி அல்ல நாம் தமிழில் எழுதுவது. தமிழின் மிகத் தீவிரமான சிறந்த முயற்சிகளுக்கு நடுவே நாம் போட்டி போட வேண்டி இருக்கிறது. இதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.

உரையாடல்: அரவிந்த் சுவாமிநாதன்
படங்கள்: சுல்தான்

*****

மும்பையும் நானும்


மும்பைக்கு நான் போயிருக்கவில்லை என்றால் ‘நாஞ்சில்நாடன்’ என்ற படைப்பாளி தோன்றியிருக்க மாட்டான். மும்பை மற்ற இந்திய நகரங்களை விட மிக வித்தியாசமான நகரம். மும்பைக்காரர்கள் வித்தியாசமானவர்கள். ஒரு பிரச்னை என்றால் வேறுபாடுகளை மறந்து எல்லோரும் ஒன்று சேர்வார்கள். உதவுவார்கள். தயை காட்டுவார்கள். அதை பெருமழைக் காலங்களில், விபத்துக் காலங்களில், போக்குவரத்து ஸ்தம்பிக்கும் காலங்களில் உணரமுடியும். மற்ற நகரங்களில் இதைப் பார்க்க முடியாது. நான் 18 வருடங்கள் மும்பையில் இருந்தேன். அங்கேதான் பாதல் சர்க்கார், அமோல் பாலேகர், ஸ்ரீராம் லாகூ ஆகியோரது நவீன நாடகங்களின் அறிமுகம் கிடைத்தது. பலமொழி நாடகங்களைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. எல்லா மொழிகளின் நவீன திரைப்படங்களைக் காணும் வாய்ப்புக் கிடைத்ததும் கர்நாடிக், ஹிந்துஸ்தானி என எனது இசை ஈடுபாட்டை வளர்த்துக் கொள்ள முடிந்தது. மும்பை வீதிகளின் பழைய புத்தகக் கடைகளில் நல்ல புத்தகங்களை மிகக் குறைவான விலைக்கு வாங்க முடியும். என்னுடைய புத்தகச் சேகரிப்பு அப்படி உருவானதுதான். ஆங்கிலத்தில் நிறைய வாசிக்கும் வாய்ப்பு மும்பையில்தான் எனக்குக் கிடைத்தது. அதுபோல மும்பைத் தமிழ்ச் சங்கம் எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது. அதில் புலமையுடைய மக்கள் பலர் இருந்தனர். அவர்கள் என் சந்தேகங்களுக்குப் பொறுமையாக விளக்கம் சொல்வார்கள். மிக நல்ல மனிதர்களாக இருந்தார்கள். இவையெல்லாம் நான் எழுத்தாளனாக என்னை வளர்த்துக் கொள்ள மிக உறுதுணையாக இருந்த விஷயங்கள்.

நாஞ்சில்நாடன்

*****

கட்டுரை இலக்கியம்


நான் கடந்த பத்து வருடங்களாகக் கட்டுரைகள்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன். நாவல் எழுதி 12 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. தொடர்ந்து சிறுகதைகள் எழுதிக் கொண்டிருக்கிறேன். அந்தச் சிறுகதைகளும் கூட சில சமயங்களில் கட்டுரை வடிவில் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. ஆனால் இதிலிருந்து ஒரு படைப்பிலக்கியவாதியால் எளிதில் மீண்டு வந்துவிட முடியும். அது தானாகவே நடக்கவேண்டும் என்று நினைப்பவன் நான். இப்போது எனக்குத் தொல்லிலக்கியங்களில் ஆர்வம் இருக்கிறது. அவற்றைப்பற்றி எழுதுவதிலே முனைப்பாக இருக்கிறேன். அதே சமயம் நான் எழுதும் கட்டுரைகள் சமகாலப் படைப்பிலக்கியவாதிகள் பிறரால் எழுதப்பட முடியாதவை. ஒரு சிறுகதையைப் போலவே ஒரு கட்டுரையும் வாசிக்கப்பட வேண்டும். டெல்லி தமிழ்ச் சங்கத்தில் ஒரு கருத்தரங்கத்தை முடித்தபின் நடந்த கலந்துரையாடலில் டெல்லியைச் சேர்ந்த ஒரு பெரியவர், “நீங்க கட்டுரை எல்லாம் எழுதி அரசாங்கத்தையோ, மக்களையோ திருத்த முடியாது. கதை எழுதுவதுதான் உங்கள் வேலை” என்ற மாதிரி காரசாரமாகச் சொல்லிவிட்டுப் போனார். உடனே மேடை ஏறிய இருபது கல்லூரி மாணவர்கள், ‘நீங்கள் இனி கட்டுரைதான் எழுத வேண்டும். அதுதான் காத்திரமாக இருக்கிறது. சொல்ல வேண்டியதைச் சரியாகச் சொல்கிறது. காலத்தின் தேவையாக இருக்கிறது” என்று சொன்னார்கள். “கதை, நாவல் யார் வேண்டுமானாலும் எழுத முடியும் ஐயா. இது போன்ற கட்டுரைகளை நீங்கள் மட்டுமே எழுத முடியும்” என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். “எப்பதான் சார் உங்க அடுத்த நாவலை எழுதுவீங்க?” என்று உரிமையோடு கேட்பவர்களும் இருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை எனக்கு எது விருப்பமாக இருக்கிறதோ அதையே செய்வேன்.

நாஞ்சில்நாடன்

*****

பதிப்புச் சூழல்-அன்றும் இன்றும்


நான் எழுதத் தொடங்கிய காலத்தில் 1200 படிகள் அச்சிடுவார்கள். அது விற்பதற்கு வருடக்கணக்கில் காத்திருக்க வேண்டும். இன்றைக்கு கணினி அச்சுக் காலத்தில் 250 படிகள்கூட அச்சிடமுடிகிறது. விற்றுத் தீர்ந்ததும் மீண்டும் 250 படிகளை அச்சிட முடிகிறது. சமீபத்தில் ஒரு நண்பர், “வெறும் ஆறே ஆறு படிகள்கூட அச்சிட முடியும். அதை நூலகம் அல்லது வேறு தேர்வுக் குழுவுக்கு அனுப்பி, ஆர்டர் வந்ததும் தேவையான பிரதிகளை அச்சிட்டுக் கொள்ளலாம்” என்றார். மற்றொன்று, எந்த ஒரு பதிப்பாளரும் படைப்பாளிகளுக்கு, எழுத்தாளர்களுக்கு புத்தகங்களுக்கான நியாயமான ராயல்டி தொகையைத் தர வேண்டும் என்ற அறவுணர்வோடு இல்லை. நீ எழுதிக் கொடுப்பதைப் போடுவதே பெரிய விஷயம் என்பது மாதிரி நடந்து கொள்கிறார்கள். ஒரு சிலர் ‘முதல் பதிப்புக்குத்தான் ராயல்டி கொடுத்தாகி விட்டாதே! இரண்டாவது பதிப்புக்கு என்ன திருப்பி எழுதவா செய்கிறார். அதற்கு எதற்கு ராயல்டி கொடுக்க வேண்டும்’ என்ற மனநிலையில் இருக்கிறார்கள். பதிப்பாளர்களின் இந்த மனப்பான்மை மிகவும் வருந்தத்தக்கது.

ஆனால் புத்தக விற்பனை வளர்ச்சி அடைந்திருக்கிறது என்று சொல்வதற்கில்லை. ஒரு பதிப்பாள நண்பர் சொன்னார், ஓர் ஆண்டின் மொத்தப் புத்தக விற்பனையே 35 கோடி ரூபாய்தானாம். எட்டுக் கோடித் தமிழர்கள் வசிக்கும் மாநிலத்தில் இவ்வளவுதான் என்றால் இதில் என்ன வளர்ச்சி இருக்கிறது? ஒரு ஓட்டல் அல்லது மற்றத் தொழிலுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இந்தத் தொகை ஒன்றுமே இல்லை. ஆனாலும் நல்ல புத்தகங்கள் வெளிவருகின்றன. வாசகர்கள் வாசிக்கிறார்கள் என்று சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம். அவ்வளவுதான்.

நாஞ்சில்நாடன்

Nanjil Nadan visiting USA: East Coast Meetups

May 29, 2012 2 comments

எழுத்தாளர் நாஞ்சில்நாடனுடன் சந்தித்து உரையாட ஒரு வாய்ப்பு.

சாகித்திய அகதெமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள் அமெரிக்க பயணம் மேற்கொள்கிறார்.

நாஞ்சில்நாடன் நகைச்சுவையும் சமூகவிமர்சனமும் இழையோடும் படைப்புகளுக்காக புகழ்பெற்றவர். நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளர்களில் ஒருவர். தமிழ் மரபிலக்கியத்தில் உள்ள தேர்ச்சி இவரது படைப்புகளில் வெளிப்படும். கம்பராமாயணத்தில் ஆழமான ஈடுபாடு கொண்டவர். இவரது முதல் நாவல் தலைகீழ்விகிதங்களை இயக்குநர் தங்கர்பச்சான் ’சொல்ல மறந்த கதை’ என்ற பெயரில் திரைப்படமாக்கி இருக்கிறார்.

2010ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது இவரது “சூடிய பூ சூடற்க” என்ற சிறுகதைத் தொகுப்பிற்கு வழங்கப்பட்டது

வட அமெரிக்காவில் நியூ ஜெர்சி, பாஸ்டன் மற்றும் வாஷிங்டன் டிசி மாநிலங்களில் சந்திப்பு நடைபெறும்.

i) ஞாயிறு – ஜூன் 3 மாலை 6:30 மணியளவில் – ஓக் ட்ரீ ரோடு, எடிசன் உணவகம்

ii) வியாழன் – ஜூன் 7 மாலை 7 மணியளவில் – பாஸ்டன்

iii) சனி – ஜூன் 9 மாலை – வாஷிங்டன் நகரம்

மேலும் விவரங்களுக்கு பின்னூட்டமிடவும்/மறுமொழியவும்.

அனைவரும் வருக.

நாஞ்சில் நாடன் சிறுகதை குறித்து ஜெயமோகன்: பாலாவும் இடலாக்குடி ராஜாவும்

அமெரிக்கன் கல்லூரியில் மூன்றாம் வருடம் படிக்கும் போது மெதுவாக ‘மேலே என்ன செய்வது?’ என்ற அச்சம் எழுந்தது. நான் யார், எனக்கு இந்த உலகை எதிர்கொள்ள என்ன தகுதி இருக்கிறது என்ற ஐயங்கள் குடைந்தன.தற்கொலையைப்பற்றிக்கூட சிந்தனை ஓடியது. அப்போது தற்செயலாக ஒரு நூலில் இடலாக்குடி ராஜா என்ற கதையை வாசிக்க நேர்ந்தது. எழுதியவர் நாஞ்சில்நாடன்

….

பிற்பாடு நண்பர் சுகா நாஞ்சில்நாடனை கூட்டிவந்து அறிமுகம்செய்தபோது பாலா அவர் காலடியில் அப்படியே விழுந்து வணங்கினார் ‘என்னை ஆட்கொண்ட குரு’ என.

இடலாக்குடிராசா

Writer Balakumaran’s No smoking in Dinakaran: ”நான் விட்ட பிறகும் அது விடவில்லையே” – பாலகுமாரன்

May 16, 2012 1 comment

Sujatha Turns 70 – Katrathum Petrathum: Anandha Vikadan

February 28, 2008 1 comment

மே மாதம் மூன்றாம் தேதி, எனக்கு எழுபது வயது நிறைகிறது. இதற்கான அடையாளங்கள் என்ன என்று யோசித்துப் பார்க்கிறேன். மெரீனாவில் நடக்கும்போது எதிர்ப்படுபவர்கள் பெரும் பாலும் என்னைவிட சின்ன வயசுக்காரர்களாகத் தெரிகிறார்கள். ஒரு தாத்தா மாட்டினார். நிச்சயம் என்னைவிட மூத்தவர். சிமென்ட் பெஞ்சில், என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார்.

“யு ஆர் எ ரைட்டர்! எனக்கு எத்தனை வயசு சொல்லுங்க, பார்க்கலாம்!” என்று கண் சிமிட்டலுடன் கேட்டார்.

நான் யோசித்து, ‘‘கட்டை விரலால் மூக்கைத் தொடுங்கோ” என்றேன்.

“எதுக்குப்பா?”

“தொடுங்களேன்!”

சற்று வியப்புடன் தொட்டார்.

“மத்த விரல்களை றெக்கை மாதிரி அசை யுங்கோ!” என்றேன். ‘‘இதிலிருந்து கண்டுபிடிச்சுட முடியுமா, என்ன?’” என்று, விரல்களைச் சொன்னபடி அசைத் தார்.

“ரெண்டு கையையும் பரப்பி, ஏரோப்ளேன் மாதிரி வெச்சுண்டு ஒரே ஒரு தடவை லேசா குதிங்கோ. பாத்து… பாத்து…”

“இது என்னப்பா ட்ரிக்கு?” என்று அப்படியே செய்தார்.

“உங்களுக்கு இந்த மே பன்னண்டு வந்தா எண்பத்தோரு வயசு!” என்றேன்.

“அசந்து போய், கை குடு. எப்படிப்பா இத்தனை கரெக்டா சொன்னே?”

“ஒரு ட்ரிக்கும் இல்லை, சார்! நேத்திக்குதான் இதே பெஞ்சில், இதே சமயம் வந்து உட்கார்ந்து, உங்க வயசு, பர்த்டே எல்லாம் சொன் னீங்க. மறந்துட் டீங்க!” என்றேன். தாத்தா மாதிரி அத்தனை மோசம் இல்லை என்றாலும், எனக்கும் சமீபத்திய ஞாபகங்கள் சற்றே பிசகுகின்றன. ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்குச் சென்றால், எதற்காக வந்தோம் என்பது மறந்தே போகிறது. பெயர்கள் ஞாபகம் இருப்பதில்லை. ஆந்தைக்கு இங்கிலீஷில் என்ன என்று சட்டென நினைவு வருவதில்லை. ‘படையப்பா’வில் ரஜினிக்கு முன்னால் கால் போட்டுக் கொண்டு உட்கார்ந்தாரே… அந்த நடிகை யின் பெயர் என்ன என்று ஒரு நாள் அதிகாலை கண் விழித்ததும், ஒரு மணி நேரம் யோசித்தேன், கிட்டவில்லை.

மனைவி எழக் காத்திருந்து அவளிடம் கேட்டேன். ‘ரம்யா கிருஷ்ணன்’ என்றாள். இம்மாதிரி, நியூரான்கள் களைத்துப் போவது தெரிகிறது. ஆனால், நீண்ட நாள் ஞாபகங்கள் பத்திரமாக இருக்கின்றன. அது மூளையில் வேறு பேட்டை போலும்! கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கு முன், சின்ன வயசில் கோயமுத்தூரில் அம்மாஅப்பாவுடன் ஜட்கா வண்டியில் ‘ஜகதலப்ரதாபன்’ சினிமா போனது, ஒண்ணாம் கிளாஸ் டீச்சருக்கு ஆனந்த விகடனும், அமிர்தாஞ்சனும் கொண்டு போய்க் கொடுத்தது, பள்ளி மணியை அகாலமாக அடித்தது, எனக்குத் தம்பி பிறந்தது… இதெல்லாம் தெளிவாக ஞாபகம் உள்ளது. ஸ்ரீரங்கத்துக் கதைகள் அனைத்தும் என் நீண்ட நாள் ஞாபகங்களின் வடிவம்தான்!

டெல்லியில், பெட்ரோல் எழுபத்தைந்து பைசாவும், பால் ஐம்பத்தைந்து பைசாவும் கொடுத்து வாங்கி தாராளமாக வாழ்ந்தது, என் முதல் கதை, முதல் நாவல் பிரசுரமானது, எஸ்.ஏ.பி&யின் கடிதக் குறிப்பு எல்லாம் ஞாபகம் உள்ளது. ரம்யா கிருஷ்ணன் போன்ற மேட்டர்தான் சட்டென்று வழுக்கிவிடுகிறது.

மெரீனாவில், ஷார்ட்ஸ் ஸ்னீக்கரில் ஓடும் இளைஞர்களைப் பார்த்து முன்பு பொறாமைப்படுவேன். இப்போது புன்னகைக்கிறேன். பொதுவாகவே, பொறாமைப்படுவதற்கான விஷயங்களும், அதட்டிச் சொல்வதற்கான விஷயங்களும் குறைந்து வருகின்றன. ஹிந்துவின் ‘ஆபிச்சுவரி’ பார்க்கையில், இறந்தவர் என்னைவிட சின்னவரா, பெரியவரா என்று முதலில் பார்ப்பேன். சின்னவராக இருந்தால், ‘பரவால்லை… நாம தப்பிச்சோம்!’ என்றும், பெரியவ ராக இருந்தால் கழித்துப் பார்த்து, ‘பரவால்லை… இன்னும் கொஞ்ச நாள் இருக்கு’ என்றும் எண்ணுவேன். எதிர்காலம் என்பதை இப்போதெல் லாம் வருஷக் கணக்கில் நினைத்துப் பார்ப்பது இல்லை. மாதக் கணக்கில்… ஏன், உடம்பு சரியில் லாமல் இருக்கும்போது வாரக் கணக்கில், நாள் கணக்கில் அந்தந்த நாளை வாழத் தோன்றுகிறது.

சயின்ஸ் அதிகம் படித்ததால், கடவுளைப் பற்றிய குழப்பங்கள் தீர்க்க முடியாமல் இருக்கின்றன. யேட்ஸ் சொன்னதுபோல், சிலர் கடவுள் இருக்கிறார் என்கிறார்கள். பிறர் கடவுள் இல்லை என்கிறார்கள். உண்மை ஒருக்கால் இரண்டுக்கும் இடையில் எங்கோ இருக்கிறது!.

ஆனால், டி.என்.ஏ. ரகசியத்தையும், உயிரின வேறுபாடுகளையும், அண்டசராசரங்களின் அளவையும் பார்க்கும்போது, நம்மை மீறிய சக்தி புலன் உணர்வுக்கும், நம் அற்ப வார்த்தைகளுக்கும் அகப்படாத ஒரு சக்தி இருப்பதில் எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. நான் நாத்திகன் அல்ல. மிஞ்சிப்போனால், ரஸ்ஸல் படித்தபோது ‘அக்னாஸ்டிக்’காக அதாவது, கடவுள் இருப்பைப் பற்றித் தெரியாதவனாக இருந்திருக்கிறேன். மறுபிறவியில் எனக்கு நம்பிக்கை இல்லை. பிறந்தால் இதே ஞாபகங்கள், இதே முதுகுவலியுடன் தமிழ்நாட்டில் பிறக்க வேண்டும். தமிழில் மீண்டும் கதைகள் எழுத வேண்டும். நடக்கிற காரியமா? முற்றிலும் புதிய பிறப்பு, தேசம், பெயர், உடல் என்றால் அது மறுபிறவி அல்ல… வேறு பிறவி. மேலும், எங்கேயாவது ஸ்விஸ் நாட்டில் பிறந்து வைத்தால், பாஷை தெரியாமல் கஷ்டப்படுவேன்.

இறந்ததும் என்ன ஆகிறது என்பதைப் பற்றி நசிகேதனைப்போல யோசிக்கும் போது, சட்டென்று ஒரு திடுக்கிடல் ஏற்படும். அந்தச் சமயத்தில் மல்லிகை வாசனையையோ, ஒரு குழந்தையின் புன்சிரிப்பையோ எண்ணிப் பார்த்துக் கவனத்தைக் கலைத்துக்கொள்வேன். சொர்க்கம், நரகம் இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. இரண்டும் இங்கே தான் என்று எண்ணுகிறேன். அப்படி ஒருக்கால் இருந்தால், நரகத்துக்குப் போகத்தான் விரும்புகிறேன். அங்கே தான் சுவாரஸ்யமான ஆசாமிகள் இருப்பார்கள். சொர்க்கத்தில், நித்ய அகண்ட பஜனைச் சத்தம் எனக்கு ஒரு நாளைக்கு மேல் தாங்காது.

ஆரம்பத்தில் இளைஞனாக இருந்த போது, ஏரோப்ளேன் ஓட்டவும், கித்தார் வாசித்து உலகை வெல்லவும், நிலவை விலை பேசவும் ஆசைப்பட்டேன். நாளடைவில் இந்த இச்சைகள் படிப்படி யாகத் திருத்தப்பட்டு, எளிமைப்படுத்தப் பட்டு, எழுபது வயதில் காலை எழுந் தவுடன் சுகமாக பாத்ரூம் போனாலே சந்தோஷப்படுகிறேன். வாழ்க்கையே இவ்வகையில் (படிப்படியான சமரசங்களால் ஆனது).

இன்றைய தினத்தில், என் டாப்டென் கவலைகள் அல்லது தேவைகள் என்றால்… முதலிடத்தில் உடல் நலம், மனநலம், மற்றவருக்குத் தொந்தரவு கொடுக்காமல் இருப்பது, தெரிந்தோ தெரியாமலோ யார் மனதையும் புண் படுத்தாமல் இருப்பது, இன்சொல், அனுதாபம், நல்ல காபி, நகைச்சுவை உணர்வு, நான்கு பக்கமாவது படிப்பது, எழுதுவது போன்றவை பட்டியலில் உள்ளன. பணம் அதில் இல்லை. முதலிலேயே அது லிஸ்ட்டை விட்டுப் போய்விட்டது.

தி.ஜானகிராமனின் ‘கொட்டு மேளம்’ கதையில் வரும் டாக்டருக்குப் போல, மனைவி அவ்வப்போது வர வேண்டிய பணத்தையும், ஏமாற்றிய ஜனங்களை யும் எனக்குச் சொல்லிக் காட்டுவாள். அவளும் இப்போது இதில் பயனில்லை என்று நிறுத்திவிட்டாள். பணம் பிரதானமாக இல்லாததால், இன்று எழுபது வயசில் மனச்சாட்சி உறுத்தாமல் வாழ முடிகிறது. ஜெயிலுக்குப் போன தில்லை. ஒரே ஒரு தடவை டில்லியிலும், ஒரு தடவை பெங்களூரிலும் ஒன்வேயில் ஸ்கூட்டர் ஓட்டியதால், மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டுக்குப் போயிருக்கிறேன். வோட்டிங் மெஷினுக் காக சாட்சி சொல்ல, கேரளா ஹைகோர்ட் டில் இருந்து சுப்ரீம் கோர்ட் வரை போயிருக்கிறேன்.

அம்பலம் இணைய இதழில் ஒரு வாசகர் கேள்வி கேட்டிருந்தார்… ‘நாற்பது வருஷ மாக உங்களைத் தொடர்ந்து படித்து வருகிறேனே… என்னைப் பற்றி என்ன நினைக்கிறீர் கள்?’ என்று.

நீண்ட யோசனைக்குப் பிறகு பதில் அளித்தேன்… ‘நாற்பது வருஷம் உங்களைத் தொடர்ந்து படிக்க வைத்திருக்கிறேனே, என்னைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதேதான்!’ என்று. என் எழுத்து, என்னைப் பல தேசங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. பல வகைப்பட்ட மனிதர்களைச் சந்திக்க வைத்திருக்கிறது. பிரைவேட் ஜெட்டி லிருந்து ஃப்ரீமாண்ட் மிஷன் பீக் மலை யுச்சி மாளிகை வரை அனுமதித்திருக்கிறது. பெயர் தெரியாத வாசகர்கள் நள்ளிரவில் கூப்பிட்டுப் பாராட்டியிருக் கிறார்கள். மனைவிமார்கள் அழுதிருக்கிறார்கள். கணவன்கள், மனைவிகள் மேல் சந்தேகப்பட்டுத் தற்கொலை செய்து கொள்ளுமுன், கடைசி ஆறுதலுக்கு என்னை விளித்திருக்கிறார்கள். ‘ரோஜா’ வெளிவந்த சமயத்தில், பெங்களூருக் குத் தனியாக ஓடி வந்த இளம்பெண் அதிகாலை ஜலஹள்ளியில், ‘அரவிந்த சாமியுடன் என்னை மண முடி!’ என்று கதவைத் தட்டி யிருக்கிறாள். ‘ஆ’ கதையைப் படித்துவிட்டு, என் மகளை மணம் செய்துகொள்ள வேண் டும்” என்று திருநெல்வேலில் இருந்து வந்த மனநிலை சரியில்லாத இளைஞரும், ‘பாலம்’ கதையைப் படித்து விட்டு என்னைக் கொல்ல வர தேதி கேட்டிருந்த கோவை வாசியும் என் வாசகர்கள்தான். வாழ்க்கையின் அத்தனை பிரச்னைகளுக்கும், முதுகுவலியில் இருந்து முண்டகோபனிஷத் வரை யோசனை சொல்லியிருக்கிறார்கள்; கேட்டிருக்கிறார்கள். மிகச் சிறந்த நண்பர்களையும், அற்புதக் கணங்களையும் என் எழுத்தால் பெற்றிருக்கிறேன். அதுதான் என்னுடைய நோபெல்!