Archive
நியு ஜெர்சி தமிழ் இலக்கிய சங்கம்: நாஞ்சில் நாடன் வாசகர் சந்திப்பு
நன்றி: Dyno Buoy
இன்றைய மாலை நாஞ்சில் நாடன் அவர்களுடன் இனிதே கழிந்தது. மெல்லிய பேச்சு, ஆனால் அதே சமயத்தில் தன் கருத்துக்களை வலுவாகவும் ஆணித்தரமாக எடுத்து வைக்கிறார்.
அமெரிக்க இந்திய கல்வி முறை, தமிழக அரசியல், ஈழ போராட்டம் என்று ஆரம்பித்த பேச்சு கம்பனைப்பற்றி பேசத்துவங்கியதும் நாஞ்சிலின் கண்களில் ஒரு ஒளி வந்து சேர்ந்து கொண்டது. கம்பனை பற்றி பேசும் போது ஒருவகை பரவச நிலையை அடைவதை பார்க்கமுடியும். கம்பனின் செய்யுளை மேற்கோள்காட்டிப்பேசும் போது அந்த பரவசம் உச்சத்தை அடைக்கிறது. கம்பனின் சொற்பிரவாகங்களைப்பற்றி நிறைய தெரிந்து வைத்திருக்கிறார். சட்டென்று கம்பராமாயணத்தில் இருந்து செய்யுள் எதையாவது சொல்லி அதன் அர்த்தங்களை ஒரு ஆராய்ச்சி மாணவனின் துறுதுறுப்புடன் விவரிக்கிறார்.
இசையை பற்றி அறிந்து வைத்திருக்கிறார். சஞ்சய் சுப்ரமணியனை பற்றி உயர்ந்த அபிப்பிராயங்களை கொண்டிருந்தார். தமிழ் இசை வளர தமிழ் பாடல்கள் ஸ்வரப்படுத்தப்படவேண்டிய கட்டாயத்தை வழியுறுத்தினார். அதை செய்ய இன்று யாரும் நம்மிடையே இல்லை என்று வருத்தம் தெரிவித்தார்.
தமிழ் மொழியில் சுமார் 8-10 லட்சம் சொற்கள் இருக்கலாம் என்றும், அதையெல்லாம் தொகுக்க ஆளில்லை என்று அங்கலாய்த்தார். இப்போதைய லெக்சிக்கான் அகராதிகளில் அதிகபட்சம் 40-50 ஆயிரம் வார்த்தைகளே இருக்கும் என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
விமர்சகர்களின் பார்வை, அவர்களின் நோக்கம் குறித்து பேசினார். அன்றைய விமர்சகர்கள் எதையும் எதிர்பாராமல் படைப்பை வாசித்தே மதிப்புரை வழக்கிய காலகட்டத்தையும் இன்று ரூம் போட்டு சரக்கும் கொடுத்தால்தான் ரெண்டு பக்க மதிப்புரை தேத்த முடியும் என்பதையும் வருத்தத்தோடு தெரிவித்தார்.
இன்னும் பல விசயங்களை பற்றியும் ஆணித்தரமான கருத்துக்களை மென்மையாக வழியுறுத்தினார்.
தமிழின் நல்ல ஆளுமையை சந்தித்த மகிழ்ச்சியில் மனநிறைவோடு வீடு திரும்பினோம்… வயிற்றுக்கும் உணவளித்த மதுசூதனன் தம்பதியினருக்கு நன்றிகள் பல!!
Recent Comments