Archive
Nanjil Nadan – Kaalachuvadu: காலச்சுவடு சஞ்சிகையில் நாஞ்சில் நாடன்
பதிவுகள்: அற்றைத் திங்கள்
மார்ச் 15, சேலம் தமிழ்ச் சங்கம்படைப்பு என்பது கதை சொல்வதல்ல
அ. கார்த்திகேயன்
சேலம் தமிழ்ச் சங்கத்தில் காலச்சுவடு, கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸ், சேலம் தமிழ்ச் சங்க அறக்கட்டளை இணைந்து நடத்திய ‘அற்றைத் திங்கள்’ நிகழ்ச்சியில் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் கலந்துகொண்டார். சிறந்த சிறுகதையாளராய், தேர்ந்த நாவலாசிரியராய் நுட்பமான வாசகர்களால் கொண்டாடப்படும் அவரை, சேலம் தமிழ்ச் சங்கச் செயலாளர் க.வை. பழனிச்சாமி அறிமுகப்படுத்தினார்.
அடிப்படையில் தான் ஒரு விவசாயக் குடும்பத்தைச் சார்ந்தவன், ஐம்பது ஆண்டு கால விவசாய வாழ்க்கையில் எவ்வித மாற்றத்தையும் காணாத கசப்பான வாழ்வு அனுபவம் தனக்கு உண்டு எனத் தொடங்கிய நாஞ்சில் நாடன், தன் பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பைப் பற்றி விரிவாகக் கூறினார்.
தனக்குக் கிடைத்த நல்ல தமிழாசிரியர்களின் மூலமாக ஆழமான தமிழறிவைப் பெற்றதாகக் குறிப்பிட்ட அவர், கணிதத்தை முதன்மைப் பாடமாகப் படித்ததாகவும் பிற்பாடு தமிழ்மீது கொண்ட ஈடுபாட்டால் ஏராளமான பழந்தமிழ் நூல்களைக் கற்க முடிந்தது என்றும் குறிப்பிட்டார்.
தனது இளமைக் காலத்தில் எல்லோரையும் போலவே திராவிட இயக்கமும் திராவிட இலக்கியமும் தன்னைப் பாதித்ததாகவும் அப்போது புகழ்பெற்று விளங்கிய திராவிட இயக்கப் பேச்சாளர்களின் பேச்சைக் கேட்டு மதி மயங்கியதாகவும் திமுகவிற்காக வாக்குச் சேகரிக்கச் சென்ற அரசியல் தீவிரம் தனக்கு இருந்ததாகவும், நாளடைவில் அந்த ‘மயக்கம்’ அகன்றதையும் சுவாரசியமாகக் குறிப்பிட்ட நாஞ்சில் நாடன், பிழைப்பைத் தேடி மும்பை சென்று அங்கு தான் அடைந்த அவமானங்கள், காயங்கள், ஏமாற்றங்கள், ஆற்றாமைகளைச் சொற்கோலங்களாக தன் பேச்சில் வெளிப்படுத்த, ‘மிதவை’ நாவலின் காட்சியலைகள் பார்வையாளர்களின் மனத்திரையில் தெரிய ஆரம்பித்தன.
திராவிட மாயையினின்று தான் விடுபடப் பழந்தமிழ் வாசிப்புதான் மிகவும் உதவியாக இருந்தது என்றும் நிறைய வாசிக்கும்போதுதான் படைப்பாளிக்கு ஏராளமான சொற்கள் கிடைக்குமென்றும் காத்திரமான படைப்புக்கு அச்சொற்களே வழி வகுக்கும் என்றும் தெரிவித்த அவர், தான் சங்க இலக்கியம் தொடங்கி இன்றைய நாவல்வரை தொடர்ந்து படித்துக்கொண்டிருப்பதாகப் பெருமைபடக் கூறினார். படிப்பதன் மூலம் படைப்பில் நல்ல சொல்லாட்சிகளைக் கொண்டு வர முடியுமெனத் திடமாக நம்புவதாகவும் தனது எழுத்தில் நாஞ்சில் நாட்டுச் சொற்களைக் கூடுமானவரைக் கொண்டுவரத் தான் முயல்வதாகவும் குறிப்பிட்டார்.
வாழ்க்கை பற்றிய புரிதல் வாழும் போதுதான் கிடைக்கும். தமது 25 வருட எழுத்து வாழ்க்கையில் அந்தப் புரிதலைப் பல்வேறு கோணங்களில் தான் பதிவுசெய்திருப்பதாகக் கூறிய நாஞ்சில் நாடன், இன்றைய அரசியல் நிலை குறித்து தனது படைப்புகள் கவலை மற்றும் கோபம் கொள்வதைச் சுட்டிக்காட்டினார். படைப்புகளில் அவை குறித்துக் கவன ஈர்ப்பு பெற வைப்பதையும், பண்பாட்டுக் கூறுகள் குறித்துத் தனக்கு ஏற்படும் அதிர்வுகளைப் படைப்பாக்கங்களில் பதிவு செய்வதையும் தனது கடமையென்றும் கூறினார்.
படைப்பு என்பது கதை சொல்வது மட்டும் அல்ல, பண்பாட்டுக் கூறுகளை, தகவல்களை அடுத்தத் தலை முறைக்கு எடுத்துச் செல்வது எனக் கூறியவர் பார்வையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு விரிவான பதிலளித்தார்.
தங்களது நாவல் (தலைகீழ் விகிதங்கள்) திரைப்படமாய் (சொல்ல மறந்த கதை) வெளிவந்தபோது எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியது என்ற கேள்விக்கு, ‘ஒரு மாற்றமும் ஏற்படவில்லை. பொதுவாக எல்லோரும் நினைத்துக்கொண்டிருப்பதைப் போலத் திரைப்படப் புகழ், பரபரப்பு எதுவும் தன்மீது விழவில்லை’ எனப் பதிலளித்தவர், இழந்த, நமது அடையாளங்களை மீட்க முடியுமா என்னும் கேள்விக்கு நமது அடையாளம் என்ன என்பதை முதலில் அறிய வேண்டுமென்றும் தன்னுடைய அடையாளம் எது என்பதைத் தேடிக்கொண்டிருப்பதாகவும் விடையளித்தார்.
பாடப் புத்தகங்களை மீறி நமது குழந்தைகள் ஏராளமானவற்றை அறிந்து கொள்வதுடன் நவீன வாழ்வு தரும் அதிர்ச்சிகரமான அலைகளிலிருந்து மீள வாழ்வைப் புதிய கோணத்தில், புதிய வார்ப்பில் எதிர்கொள்ள வேண்டுமெனவும் பார்வையாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.
o
பதிவு: கருத்தரங்கு – நாஞ்சில் நாடன் படைப்புகள்
வலி தரும் எழுத்து
அ.கா. பெருமாள்
நாகர்கோவில் திருச்சிலுவைக் கல்லூரியும் நெய்தல் இலக்கிய அமைப்பும் இணைந்து நடத்திய நாஞ்சில் நாடன் படைப்புகள் கருத்தரங்கு 24.01.2007 புதன்கிழமை திருச்சிலுவைக் கல்லூரியிலுள்ள செசில் அரங்கில் நடைபெற்றது.
கருத்தரங்கின் முதல் அமர்வில் கல்லூரித் தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் வி. ஹெர்மனா ஜில்ட் ஆராச்சி தன் தலைமை உரையில், “தென்மாவட்டப் படைப்பாளிகளில் முக்கியமானவரான நாஞ்சில் நாடனைப் பற்றிய இந்தக் கருத்தரங்கை நாஞ்சில் நாடனின் பாராட்டு நிகழ்ச்சியாகவும் கருதலாம்” என்று குறிப்பிட்டார். கல்லூரித் துணை முதல்வர் முனைவர் அருட்சகோ. சோபி முன்னிலை வகித்தார். கல்லூரிச் செயலர் முனைவர் அருட்சகோ. ஜெரார்டின் ஜெயம் வாழ்த்துரை வழங்கினார்.
இரண்டாம் அமர்வின் தொடக்கத்தில் நெய்தல் கிருஷ்ணன் கருத்தரங்கின் நோக்கத்தை விளக்கினார். “நாஞ்சில் நாடன் படைப்புகள் பற்றிய கருத்தரங்கம் நடத்த வேண்டும் என்று நெய்தல் அமைப்பு முடிவுசெய்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டாலும் மனதில் நெருடலை ஏற்படுத்தாத இடத்தில் நடப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. கல்விப் புலத்திற்கும் நவீன இலக்கியத்திற்குமான இடைவெளியைக் குறைப்பதும் மாணவர்களிடம் புத்தக வாசிப்பின் ஆர்வத்தைத் தூண்டுவதும்தான் இந்தக் கருத்தரங்கின் முக்கிய நோக்கம்” என்றார்.
நாஞ்சில் நாடனின் நாவல்கள் பற்றி எம். வேதசகாயகுமார் பேசினார். “நாஞ்சில் நாடன் கவிதை, சிறுகதை போன்ற வடிவங்களின் மூலம் படைப்புலகுடனான தொடர்பைத் தக்க வைத்துக்கொண்டிருப்பவர். இவரது நாவல்களின் மறு வாசிப்பு புதிய உணர்வைக் கொடுக்கிறது. நாஞ்சில் நாடனின் அனுபவ வாழ்வின் பரப்பு சுருங்கியது. ஆனால் பொய்ச் சாயம் கலவாதது. படைப்பிற்கென அனுபவ வாழ்வை வலிந்து பெறும் அவலம் இவருக்கு என்றுமே இருந்ததில்லை. நிகழ்வுகளை ஒரு மையத்தில் குவித்து உணர்வுகளை எழுப்பி வாழ்க்கைச் சிக்கல்களைத் தனக்குச் சாதகமான தளத்தில் இனங்கண்டு வாழ்வைப் படைப்பிற்கென்று எளிமைப்படுத்த நாஞ்சில் நாடன் முனையவில்லை. நாஞ்சில் நாடன் அவரது படைப்புகளிலிருந்து அந்நியப்பட்டு நிற்கிறார்” என்றார்.
தொடர்ந்து, ‘நாஞ்சில் நாடனின் கட்டுரைகள்’ என்ற தலைப்பில் பேசிய சின்னசாமி, “நாஞ்சில் நாடனின் சிறுகதை, நாவல்களைவிடக் கட்டுரைகளை முக்கியமாகக் கருதலாம். இவர் கட்டுரைகளுக்காக எடுத்துக்கொண்ட விஷயங்கள் யதார்த்த வாழ்க்கையிலிருந்து எடுக்கப்பட்டவை. சாதாரண வாழ்க்கையுடன் உறவுடையவை. இவரிடம் மனிதாபிமானமும் ஆர்வமும் அதிகம். இவரது நூலின் தலைப்பு ‘நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை’ என்பது. கம்பராமாயணப் பாடலில் வரும் வரி இது. எல்லாம் விதியின் மேல் காரணம் காட்டிப் பேசுவது இப்பாடல். இந்தத் தொனி நாஞ்சில் நாடனின் கட்டுரைகளில் சற்று இடம்பெயர்ந்து வருகிறது. மனிதனின் பிழை எதுவும் இல்லை; எல்லாம் சமூகத்தின் பிழை என்ற கருத்து பொதுவாக இழையோடுகிறது. கட்டுரைகளில் வரும் எள்ளல் தொனி படிக்கும் வேகத்தைக் கூட்டுகிறது. இவரது படைப்புகளைப் போலவே கட்டுரைகளும் என்பதற்கு வட்டார வழக்குச் சொற்களை இவர் லாகவமாகக் கையாளும் திறன்தான் அடையாளம். கட்டுரைகளை இவர் தொடர்ந்து எழுத வேண்டும்” என்று தன் எண்ணங்களை வெளிப்படுத்தினார்.
நாஞ்சில் நாடனின் ‘நாஞ்சில்நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை’ நூல் பற்றி அ.கா. பெருமாள் பேசும்போது, “தமிழகத்தில் சாதி பற்றிய நூற்கள் நிறையவே வந்துள்ளன. அவற்றில் பெரும்பாலானவை தங்கள் சாதியின் புகழ்பாட எழுதப்பட்டவை. வெளிநாட்டு ஆய்வாளர்கள் சாதி பற்றி எழுத ஆரம்பித்தபோது திரட்டப்பட்ட தகவல்கள்கூட இன்றைய நிலையில் பரிசீலனை செய்ய வேண்டிய அளவில்தான் உள்ளன. நாஞ்சில் நாடனின் நூல் இந்த இடத்தில் வேறுபடுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் வாழும் மக்கள்வழி வேளாளர், மருமக்கள்வழி வேளாளர், சைவ வேளாளர், துளுவ வேளாளர், செட்டி வேளாளர் என்னும் ஐந்து வேளாளர் உட்பிரிவுகளில் மக்கள்வழி, மருமக்கள்வழி வேளாளரை மட்டுமே இவர் பதிவுசெய்திருக்கிறார். நாஞ்சில் நாட்டு வேளாளர் பற்றி 1909இல் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை, 1921இல் தாணம்மாள், 1986இல் பேரா. எல். சி. தாணு ஆகியோர் எழுதிய கட்டுரைகளை இன்று திரும்பிப் பார்க்கின்றபோது நாஞ்சில் நாடன் அவர்களுடன் ஒத்துப் போவது தெரிகிறது. அவரது படைப்பைப் போலவே இந்த நூலும் யதார்த்தமான பதிவு” என்றார்.
உணவு இடைவேளைக்குப் பின் தொடங்கிய மூன்றாவது அமர்வில் ஜெயமோகன் பேசினார். “உலகம் முழுக்க வானத்தைப் பார்ப்பது, மண்ணைப் பார்ப்பது என்ற பார்வை இருக்கிறது. மண்ணுக்கு அப்பால் வானத்தைப் பார்த்து உலகத்துத் துக்கத்தை வெளிப்படுத்திய பழைய பாடல்களை இன்று படித்தாலும் உணர முடியும். ஒட்டுமொத்த பார்வை வானத்தைப் பார்க்கும்போது புரியும். ஆனால் மண்ணைப் பார்ப்பது வித்தியாசமானது. இது யதார்த்தமானது. இந்த மண்ணிலேயே சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையிலிருந்து தேடிக் கண்டடைவதற்கான முயற்சிதான் யதார்த்தவாதம்.
“தமிழ் யதார்த்தவாதத்தின் முதல் படைப்பு மாதவையாவிலிருந்து தொடங்குகிறது. மண்ணின் பிரச்சினையை விண்ணில் எதிர்நோக்காத பார்வையை இவர் தடம் பதித்த பின்னர் வந்த படைப்பாளிகளில் புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், அசோகமித்திரன், நீல. பத்மநாபன், சுந்தர ராமசாமி, ஆ. மாதவன் என்ற வரிசையில் வருபவர்கள் முக்கியமானவர்கள். இவர்களில் நாஞ்சில் நாடனுக்குத் தனி இடம் உண்டு. இந்த வரிசையில் வருபவர்களில் நான்கு பேர் கன்னியாகுமரி மாவட்டத்துக்காரர்கள். நாஞ்சில் நாடன் அன்றாட வாழ்க்கையில் காணப்படும் சின்னச் சின்ன விஷயங்களைப் பார்த்தவர், எவரையும் புண்படுத்தாதவர். இவரிடம் இழையோடும் சிரிப்பும் மண்ணின் மணமும் இவரை இனம் காட்டுகின்றன” என்றார்.
இறுதியாக நாஞ்சில் நாடன் உரை நிகழ்த்தினார். “நான் எழுத ஆரம்பித்தபோது என்னைத் தட்டிக்கேட்டு உணர்த்தியவர் சுந்தர ராமசாமி. ‘நாஞ்சில், நம்மிடம் நிறைய எதிர்பார்க்க அதிகம் பேர் இல்லை என்பதை நினைத்துக் கொள்ளுங்கள்’ என்றார். இதே தொனியை இப்போது எனக்கு ஜெயமோகன் உணர்த்துகிறார்.
“நான் இருக்கிறேன்; அதனால் வாழ்கிறேன்; இதை உணர்த்துவது என் எழுத்துதான். எனக்கு எழுதவும் சொல்லவும் இன்னும் எவ்வளவோ இருக்கிறது. எல்லாவற்றையும் பதிவு செய்ய வேண்டும் என்பதை இப்போது உணருகிறேன். இதைத் திமிர் என்றுகூடச் சொல்லலாம். இது எனக்கு முன்பு இருந்ததில்லை. இதை நல்ல அர்த்தத்திலேயே சொல்கிறேன். எழுத்து, வலியை ஏற்படுத்த வேண்டும். படிப்பவர்கள் வலியை உணர்ந்தால் உணர்வு இருக்கிறது என்று அர்த்தம்” என்றார்.
டாக்டர் வ. ஜெயசீலி வரவேற்றுப் பேசினார். பேரா. ஜாக்குலின் நன்றி கூறினார். செல்வி மெர்லின்மேரி ஒருங்கிணைப்பாளராக இருந்தார். முதல் அமர்விலும் மூன்றாம் அமர்விலும் கவிஞர் ராஜ்குமார் பாடிய பாட்டு மாணவ மாணவிகளை உற்சாகப்படுத்தியது இக்கருத்தரங்கின் சிறப்பு. இன்னொரு சிறப்பு பேரா. அ. பெர்னார்டு, சந்திரா இருவரும் முறையே நாஞ்சில் நாடனையும் ஜெயமோகனையும் அறிமுகப்படுத்தியது. சொற்புனைவு இல்லாமல் அறிமுகப்படுத்த முடியும் என்பதைச் சந்திரா இக்கருத்தரங்கில் நிரூபித்தார். நவீன இலக்கிய அரங்குகளில் பேராசிரியர்களும் மாணவர்களும் பின்பற்ற வேண்டிய முன்மாதிரியாக இவரது அறிமுக உரைகளைக் கொள்ளலாம்.
தமிழர் பண்பாடு
குமரி மண்ணின் மரபு :: நாஞ்சில்நாடும் விளவங்கோடும்
குமாரசெல்வா
உன் பேச்சு உன்னை வெளிப்படுத்துகிறது”
(மத்தேயு 26 : 73)
விளவங்கோடு வட்டார மக்களிடையே நாட்டுப் புறக் கதை ஒன்று வழக்கில் உள்ளது. விளவங்கோட்டுக்காரன் ஒருவன் மதுரைக்குப் போனான். அங்குள்ள மக்களின் பேச்சைக் கேட்டுத் தானும் இனிமேல் செந்தமிழில் பேசுவதாகச் சபதம் கொண்டான். எதிரே பழக்கடை தென்பட்டது. அங்கே சென்று உரையாடினான்.
“வணிகரே! பழங்கள் உள்ளனவா?”
“இங்க இருப்பது பழங்களாகத் தெரியலையா?”
“பொறுத்தருள்க! பழம் ஒன்று என்ன விலையோ?”
“ஒரு ரூபாய்.”
“ஐம்பது காசுக்குத் தரக் கூடாதா?”
“தருகிறேன்.”
“அப்படியானால் இரண்டு பழங்கள் பூயும்.”
“பூயுமா? அப்படீண்ணா என்னாங்க?”
“வேல மயிரு காட்டாத ரெண்டு பழம் இனிஞ்சி எடுவிலே இஞ்ச.”
தனது வட்டாரச் சுபாவத்தை ஒருவனால் ஒருபோதும் திரைபோட்டு மறைக்க முடியாது. மனத்தில் ஆழப்பதிந்த அது எந்த வகையிலாவது பேச்சில் வெளிப்பட்டே தீரும். அதனால்தான் விளவங்கோட்டுக்காரனால் இன்னொரு வட்டாரம் சார்ந்த மொழியில் தொடர்ந்து உரையாட முடியவில்லை.
தாய்த் தமிழகத்திலுள்ள மக்கள் பலரும் என்னிடம் அதிகமாகக் கேட்கும் கேள்வி, “நீங்கள் தமிளும் மளையாளமும் களந்து பேசுகிறீர்களே?” என்பதாகும். அப்போதெல்லாம், நாங்கள் மலையாளிகள் அல்ல என்றும் தமிழன் இழந்த நிலப்பரப்பில் முதன்முதலாக அறுநூறு சதுர கி.மீ. பரப்பளவை மலையாளிகளிடமிருந்து மீட்டெடுத்தவர்கள் நாங்கள்தானென்றும் அதற்கான வீரஞ்செறிந்த போராட்டத்தில் சுடப்பட்டு இறந்தும் வீட்டுக்கொருவர் ஊனம்பட்ட கதைகள் குறித்தும் நாங்கள் பேசும் தமிழ் சங்க இலக்கியத்தில் எங்கெல்லாம் இருக்கிறது என்றும் பட்டியலிட்டு மிகப் பெரிய சொற்பொழிவையே நிகழ்த்த நேரிடும்.
இதற்கு ஒரு படி மேலே போய் இலக்கியவாதிகள் என்னிடம், “ஒங்க நாஞ்சில் தமிழ் அருமை” என்று கூறுவதுண்டு. நாஞ்சில் நாட்டுக்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று நான் அவர்களுக்கு விளக்குவது இருக்கட்டும், முதலில் ஒட்டுமொத்தக் குமரிமாவட்டத்தையும் ‘நாஞ்சில்நாடா’க மாற்றியவர்கள் யாரென்று தெரிந்துகொள்வது அவசியம் அல்லவா.
குமரி மண்ணின் மேற்குக் கரையோரமாக இருக்கும் எங்கள் விளவங்கோடு வட்டாரத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகளில் சிலர் தங்கள் பெயருக்கு முன்னால் ‘நாஞ்சில்’ என்னும் அடைமொழியை ஏன், எதற்கென்று தெரியாமலேயே போட்டுக்கொள்கிறார்கள். மலையாளம் தாய்மொழியாகக் கொண்ட நாஞ்சில் மனோகரனைப் பார்த்துச் சூடுபோட்டுக் கொள்ளும் முயற்சி இது. தென்னைமரமேறும் சாதியைச் சேர்ந்த மனோகரனுக்குத் திராவிட அரசியலில் தன்னை வெள்ளாளராக அடையாளம் காட்டிக்கொள்ள வேண்டிய அவசியம் இருந்தது. அடுத்தது இலக்கியவாதிகள். “ஹெப்சிபாவின் கதை மாந்தர்கள் தென்மாவட்டமான நாஞ்சில் பகுதியின் கிறிஸ்தவச் சமயத்திலிருந்து விளைந்தவர்கள்”- சிற்பி. பாலசுப்ரமணியன்.
“கன்னியாகுமரி மாவட்டமும் திருவனந்தபுரத்தின் தமிழ்ப் பகுதியும் இங்கு நாஞ்சில்நாடாகக் கருதப்படுகிறது. வயலும், வயல் சார்ந்த பகுதியாக உள்ள இதனை உழவுக்கருவியால் நாஞ்சில் என்று வழங்குகின்றனர்.” (சு. சண்முகசுந்தரம், தமிழில் வட்டார நாவல்கள், ப:13)
“அகஸ்தீசுவரம், தோவாளை ஆகிய இரு தாலுகாக்கள் மட்டுமே நாஞ்சில்நாடு என்று திட்டவட்டமாகக் கூறப்பட்டபோதிலும் அகஸ்தீசுவரம், தோவாளை, விளவங்கோடு, கல்குளம் ஆகிய நான்கு தாலுகாக்களுமே பொதுவாக நாஞ்சில்நாடு எனக் கருதப்படுகிறது என்பதைக் குமரிமாவட்டம் நீங்கலாக இதர மாவட்டங்களிலுள்ள வாசகர்களுக்கு விளக்குவது அவசியம் என்று கருதுகிறேன்” (என். ராமகிருஷ்ணன், ஜி.எஸ். மணி – குமரிக்கடலின் புயற்பறவை)
மேற்கூறியவற்றிலிருந்து இதற்குப் பொறுப்பானவர்கள் அரசியல்வாதிகளும் இலக்கியவாதிகளும் என்று நாம் அறிந்துகொள்ளலாம். இந்தத் தாராளவாதப் போக்கில் ஒலிப்பது வெள்ளாளக் கருத்தியல் புனைவாகும்.
1684 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட இன்றைய குமரிமாவட்டம் கிழக்கு மற்றும் வடக்குப் பகுதியில் திருநெல்வேலி மாவட்டத்தையும் மேற்கு மற்றும் வடமேற்குப் பகுதியில் கேரள மாநிலத்தையும் தென்கிழக்குப் பகுதியில் மன்னார் வளைகுடாவையும் தெற்கு மற்றும் தென்மேற்குப் பகுதியில் இந்தியப் பெருங்கடலையும் அரபிக்கடலையும் எல்லைகளாகக் கொண்டு விளங்குகிறது. இதில் மூன்று முக்கிய இயற்கைப் பிரிவுகள் அடங்கியுள்ளன. வடகிழக்குப் பகுதி மேற்குத் தொடர்ச்சி மலையால் சூழப்பட்டதாகும். விளவங்கோடு, கல்குளம் தாலுகாக்கள் அதிகமாக இதன் பாதிப்பில் உள்ளன. ‘காணிகள்’ என்று சொல்லப்படும் ஆதிவாசிகள், ரப்பர் தொழிலில் ஈடுபடும் தோட்டத் தொழிலாளர்கள், பனையேறிகள், கேரளம் முழுக்கச் சென்று கட்டடம் கட்டும் உழைப்பாளர்கள், வாழை, மரிச்சினி கிழங்கு, காய்கறி உற்பத்தி செய்யும் விவசாயிகள் பலரும் இவ்விரு தாலுகாக்களையும் சேர்ந்தவர்கள். தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு ஆகிய மூன்று புறங்களும் நீரோடி முதல் ஆரோக்கியபுரம்வரை 68 கி.மீ. தூரம் நீண்ட கடற்கரை. இப்பகுதிகளில் மீனவர்களும் இசுலாமியர்களும் பிறசாதி மக்களும் வசிக்கிறார்கள். மலையின் ஆதிக்கத்தில் உள்ள சமவெளிப் பிரதேசமான தோவாளைப் பகுதியின் சில பாகங்களே நாஞ்சில்நாடாகும். அகஸ்தீசுவரம் தாலுகாவில் காற்றாடிமலை, மருத்துவா மலை, கல்மலை இருப்பதுபோலத் தோவாளை தாலுகாவிலும் தாடகை, மகேந்திரகிரி மலைகள் உள்ளன. மகேந்திரகிரி மலையின் வடக்குப் பகுதியிலிருந்து உற்பத்தியாகும் பறளியாறு, கல்குளம் மற்றும் விளவங்கோடு தாலுகாக்களின் வழியாக ஓடித் திருவெட்டாற்றில் கலந்து தேங்காய்ப்பட்டணம் கடலோடு சேர்கிறது. நாஞ்சில்நாட்டின் வேளாண்மைக்காகப் பறளியாற்றின் குறுக்கே பாண்டிய மன்னனால் கட்டப்பட்ட ‘பாண்டியன் அணை’ கல்குளம் தாலுகாவில் உள்ளது. தாய்த் தமிழகத்தோடு பண்பாட்டுத் தொடர்பை ஓரளவு வைத்திருப்பது தோவாளை தாலுகா என்பதால்தான் நாஞ்சில்நாட்டை மொத்தத்திற்கும் சேர்த்துக்கொண்டிருக்கலாம். ஆரல்வாய் மொழிக் கணவாய் தமிழ்நாட்டிலிருந்து துண்டிக்கும் வகையில் அமைந்து, நெல்லையைத் தாய்த் தமிழகத்தின் எல்லையாகவும் குமரியைத் தொல்லையாகவும் ஆக்கிவிட்டது.
தமிழகத்தோடுள்ள தொடர்பு நிலவியல் எல்லை என்பதையும் தாண்டி வரலாற்றிலிருந்தே அதற்கான ஆதாரங்களை நாம் கண்டுகொள்ள முடியும். நாஞ்சில் நாட்டைப் பாண்டியர்களும் அதன் பின் சோழ மன்னர்களும் ஆண்டபோது, விளவங்கோடு பகுதிக் குறுநில மன்னர்களான ஆய் மற்றும் வேணாட்டரசர்களின் கீழ் இருந்துவந்தது. பாண்டிய மன்னர்கள் ஆய்க்குறுநில மன்னர்கள்மீது தொடர்ந்து படையெடுப்புகளை நடத்தினார்கள். மேற்குத் தொடர்ச்சி மலைக்குக் கிழக்கே ஆய் மன்னர்களின் ஆதிக்கம் முற்றிலும் சிதைக்கப்பட்டதால் மேற்குப் பகுதியில் அவர்கள் நிலைபெற்றனர். இந்தப் பேரரசு – சிற்றரசு மோதல்தான் இன்றளவும் நீடித்துக்கொண்டிருக்கிறது. அகஸ்தீசுவரம், தோவாளை ஆகிய இரு தாலுகாக்களைக்கூட ‘நாஞ்சில் நாடு’ என்று திட்டவட்டமாகச் சொல்ல முடியாது. கல்வெட்டுக் குறிப்புகள் அகஸ்தீசுவரம் தாலுகாவிலுள்ள பல பகுதிகள், அதாவது கன்னியாகுமரி, சாமித்தோப்பு, சுசீந்திரம், வடசேரி இவையெல்லாம் ‘புறத்தாய நாடு’ என்பதன் கீழ் அடங்கியிருந்ததாகக் கூறுகிறது. இது தவிரக் கல்குளம் தாலுகாவில் ‘வள்ளுவ நாடு’ என்றொரு நாடு இருந்த தகவலையும் அறிகிறோம். உழக்கிலே கிழக்கு மேற்கு என்றாற்போல முஞ்சிறைச் செப்புப்பட்டயங்களைப் பார்க்கும்போது, முடாலநாடு, தெங்க நாடு, ஓமாயநாடு, குறும்பனைநாடு என்று பலநாடுகள் இருந்திருக்கும்போது பண்பாட்டுக்குள்ளே மாற்றங்களும் வித்தியாசங்களும் உருவாகாமலா இருக்கும்?
வட்டாரம்சார்ந்தும் சாதிசார்ந்தும் மொழிசார்ந்தும் பண்பாடுசார்ந்தும் எத்தனையோ பிரிவுகள் இந்த இரண்டாயிரத்துக்கும் குறைவான சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்ட, மொத்தத் தமிழ்நாட்டில் 1.29 சதவீதம் நிலமுடைய, இந்தப் பகுதியில் காணப்படுகின்றன. சேரநாட்டு அரசதிகாரத்தின் கீழாகவும் பாண்டிய மன்னர்களின் ஆட்சியிலும் சோழர்களின் அதிகாரத்திலும் மலையாள ஆட்சியின் இன அழிப்பு நடவடிக்கையின் கீழும், பல்வேறு அரசியல் போராட்டங்களின் களமாகவும் இப்பகுதி திகழ்ந்துள்ளது. இயேசுவின் சீடரான தோமா, பிரான்சிஸ் சேவியர், வாஸ்கோடகாமா, இஸ்லாமியரான முகிலன், அய்யா வைகுண்டர், நாராயண குரு, டிலனாய், றிங்கல் தௌபே, புத்தசமயம், சமணசமயம், விவேகானந்தர் தவம், பீர்முகமது அப்பா ஞானி இன்னும் எத்தனையோ சிந்தனைகள் முட்டி மோதிநிற்கும் களம் இது. எழுத்தாளர்களிடம் இந்த வேறுபாடுகள் மிகப் பெரியதாக விளங்குகின்றன.
ஒரே சாதிசார்ந்த, ஒரே மதம்சார்ந்த இரண்டு எழுத்தாளர்கள் ஹெப்சிபா ஜேசுதாசனும் ஐசக் அருமைராசனும். ஆனால் எழுத்தில் வேறுபடுகிறார்கள். ஒரே வட்டாரத்தைச் சேர்ந்த ஐசக் அருமைராசனுக்கும் சுந்தர ராமசாமிக்கும் இடையே பெருத்த வேறுபாடுகள். இருவருமே புன்னைக் காடு பற்றி எழுதி இருந்தாலும் இரண்டுமே வேறுபட்டவை. நீல. பத்மநாபனின் தலைமுறைகள் சாதிசார்ந்தும் தோப்பில் மீரானின் சாய்வு நாற்காலி சமயம்சார்ந்தும் வெளிப்படுகின்றன. மீனவர் சமுதாயத்திலிருந்தும் ஆதிவாசிகள் சமூகத்திலிருந்தும் காத்திரமான படைப்புகள் இன்னும் வெளிப்படவில்லை. தமிழவன், லஷ்மி மணிவண்ணன் ஆகிய இருவரின் எழுத்துக்களும் ஏனைய குமரிமாவட்ட எழுத்தாளர்களிடமிருந்து வேறுபட்டுத் தனித்து நிற்பவை. புனைகதை எழுத்துக்களைவிடக் கவிதைகளில் இந்த வேறுபாடுகள் துல்லியமாகத் தெரிகின்றன. இவை எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக ‘நாஞ்சில் இலக்கியமாக’ எப்படிப் பொதுவாக்க முடியும்?
இந்த உண்மையை உணர்ந்த நாஞ்சில் நாடன் கூறுகிறார், “பொதுவாக ஆராய்ச்சியாளர்கள் சுந்தர ராமசாமியின் ஒரு புளிய மரத்தின் கதையையும் நீல. பத்மநாபனின் தலைமுறைகளையும் ஹெப்சிபா ஜேசுதானின் புத்தம் வீட்டையும் தோப்பில் முகம்மது மீரானின் நாவல்களையும் ஜெயமோகனின் ரப்பரையும் ஐசக் அருமைராசனின் கீறல்களையும் எனது நாவல்களையும் நாஞ்சில் வட்டார வழக்கு நாவல்கள் என்கிறார்கள். இது எவ்வளவு நகைப்புக்குரிய பகுப்பு. இவர்கள் எழுதுவது எல்லாம் ஒரு மொழியா? ஒரு வட்டாரமா? எவ்வளவு வேறுபாடுகள் கொண்ட மொழி, வாழ்க்கை, பண்பாடுகள்” (‘எனது நாவல்களும் வட்டார வழக்கும்’ கட்டுரையிலிருந்து.)
ஒரு வட்டாரம் அதற்குள்ளேயே சுழலும்போது மதம் அல்லது சாதியின் மேட்டிமைப் பண்பால் இறுகிவிடக்கூடிய அபாயம் உண்டு. பிறசமூகங்களுடன் கலப்பை ஏற்படுத்தும்போது அந்த வட்டாரம் படைப்பிற்குள் விரிவடைந்து இன்னொரு பரிமாணம் பெறுகிறது. நாஞ்சில் நாடனின் என்பிலதனை வெயில் காயும் நாவல் இதற்கு உதாரணம். அரங்கநாதனின் பரளியாற்று மாந்தர்கள் நாவலில் வரும் நல்ல பெருமாள் உதாரணம். ஒரு வட்டாரம் எனப் பகுத்த எல்லைக்கு உள்ளேயும் நமக்குத் தெரியாத வாழ்க்கை இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது என்பதற்கு வாஸவேச்வரம் கிருத்திகாவும் பா. விசாலமும் அழகிய நாயகி அம்மையாரும் சாட்சிகள்.
பிறசமூகங்களிடையே கலப்பு ஏற்படுத்தி எழுதுபவர் விளவங்கோடு வட்டார எழுத்தாளர் தோப்பில் மீரான். இவரளவுக்கு இஸ்லாமிய – மீனவ மக்களின் பேச்சைக் கலந்து எழுதிய எழுத்தாளர்கள் குமரி மாவட்டத்தில் வேறு எவரும் இல்லை. கரையோரம் வாழும் நாடார், ஆசாரி, புலையர், வண்ணார், காணி போன்ற சிறுகுழுக்களின் அடையாளங்களையும் பதிவுசெய்தவர் இவர். சாதிக்கலவரத்தில் தப்பியோடிய இஸ்லாமியக் குழந்தைக்குப் புலையர் சாதி தேவி பால்கொடுப்பது, இரவில் ஓலைச்சூட்டுப் பந்தம் கொடுக்க இஸ்லாமியரிடையே குடியமர்த்தப்பட்ட இந்து அப்பா, ஆங்கிலப் பள்ளியை சரஸ்வதி கோயில் என்று கூறிக் கொளுத்த மறுக்கும் தாழ்த்தப்பட்ட கறுப்பன், முன்சிறை சின்னான் ஆசான் போன்றவர் மாணிகளின் மருத்துவப் பணிகளை விதந்தோதுவது போன்ற சித்தரிப்புகள் மீரானைப் பெருந்தன்மை மிக்க படைப்பாளியாக்குகின்றன. இளைய தலைமுறைப் படைப்பாளிகள் பார்த்துப் படிக்க வேண்டிய மிகப் பெரிய முன்னுதாரணத்தை மிகப் பிந்தி இலக்கிய உலகில் வெளிப்பட்ட இந்த மூத்த எழுத்தாளர் தருகிறார்.
விளவங்கோடு வட்டாரத்தில் ஜோசப்பிலிப், அசோகஜெயன், ஜெயடேவி, ஜே. ஆர். வி. எட்வர்ட், அதங்கோடு கலா போன்ற எழுத்தாளர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களின் எழுத்துக்களில் கேரள எல்லைப் பகுதியில் அரிசி கடத்துபவர்கள், முந்திரி ஆலைத் தொழிலாளர்கள், வயோதிகக் காலத்திலும் பனையேறிப் பிழைப்பவர்கள், கேரளா சென்று பிழைக்கும் கட்டடத் தொழிலாளர்கள், ரப்பர் பால் வெட்டும் தொழிலாளர்கள் போன்றவர்களின் அவலங்கள் வெளிப்படுகின்றன. குமரிமாவட்டத்தின் இதரப் பகுதி எழுத்தாளர்களிடமிருந்து தனித்தும் வித்தியாசப்பட்டும் எழுதும் இவர்கள் ஒவ்வொரு தொகுப்புடன் அடங்கிப்போனதால் தாய்த் தமிழகம் இவர்களை அறியும் வாய்ப்பு இல்லாமற்போய்விட்டது.
விளவங்கோடு வட்டாரத்தில் தற்போது குறும்பனை பெர்லின், புத்தன்துறை தாமஸ் போன்ற எழுத்தாளர்கள் மீனவர்களிடையே தோன்றி எழுதுகிறார்கள். இவர்களின் எழுத்துக்களைச் சற்றுப் பொறுத்திருந்து மதிப்பிடலாம். அதுவரைக்கும் ஒட்டுமொத்த ஆதரவை வழங்கி நிலைநிறுத்துவோம். ஆதிவாசிச் சமூகம் இவர்களைப் போல் தனக்குள்ளிருந்து ஒரு எழுத்தாளனை நாளை தரலாம். சுரேஷ்சாமியார் காணி என்ற பழங்குடி பாரதி போன்ற காணி மக்களின் முன்னேற்றத் தொண்டர்கள் இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டால் நல்லது. இந்த வித்தியாசங்கள் அனைத்தையும் உள்ளடக்கி ‘குமரி மண்ணின் எழுத்து மரபு’ எனக் கூறலாமே தவிர, ‘நாஞ்சில்’ என்பதன் கீழாகவோ அதற்கெதிராகத் தக்கலையில் சிலர் ‘வேணாடு’ என்று நிலைநிறுத்துவதுபோலவோ செயல்பட்டால் அவை எல்லாம் சாதியை நிலைநிறுத்தும் மரபுகளாக மாறிவிடும்.
விழிபிதுங்கி நிற்பவன் வாசகன். சகலத்தையும் வாசித்து முடிக்கும் முன்னரே காலண்டரில் தேதிகள் பறக்கும் வேகத்தில் அடுத்த மாதத்தின் முதற்கிழமை தலைநீட்டிவிடுகிறது. பேச்சினிடையே நாஞ்சில் நாடன் ஒருமுறை, “வாங்குற புஸ்தகத்தையெல்லாம் படிக்கணும்னு ஆசைப்படறது ஒரு வகையில சாகாவாரம் கேட்கற மாதிரி” என்றது நினைவுக்குவருகிறது.
‘ஆனந்த விகட’னில் தான் எழுதிய ஒரு கட்டுரைக்கு விளக்கமளிக்க பெருமாளைத் தொடர்புகொண்டதாகவும் அவர் அளித்த தமிழக வரலாற்று ஆவணங்களைக் கொண்டு, தான் தெரிவித்த கருத்தில் உறுதியாக நிற்க முடிந்தது எனவும் நாவலாசிரியர் நாஞ்சில் நாடன் நினைவுகூர்ந்ததோடு மண்டிகர் வாழ்க் கையை அற்புதமாக அவர் பதிவு செய்துள்ள விதத்தையும் பாராட்டினார்.
ராஜமார்த்தாண்டன் கவிதைகள் எழுதியிருக்கிறார், இதழ் நடத்தியிருக்கிறார், பெரிய இதழில் பணியாற்றியிருக்கிறார். ஆனால், கவிதை விமரிசகராகவே அவரது இடம் உறுதிப்பட்டிருப்பதாகக் கூறிய நாஞ்சில் நாடன் “நான் சுமார் நாற்பது வருடங்களாகச் சுக்குப்பால் குடித்து வருகிறேன் குடிக்கும் ஒவ்வொரு முறையும் நாக்கு பொத்ததுண்டு. ஆனால் ராஜமார்த்தாண்டனோடு பலமுறை இலக்கிய விவாதத்தில் ஈடுபட்டபோது வார்த்தைகளில் சூடேறி நட்புறவு பொத்ததில்லை என்று கூறினார்.
பாரதியார் புதுவையில் இருந்தபோது அவருக்குக் குறிப்பறிந்து உதவி செய்ய ஒரு செட்டியார் நண்பர் எப்போதும் உடனிருப்பார் என்று வ.ரா. தமது நூலில் குறிப்பிட்டுள்ளார். இதுபோலவே சு.ரா.விற்கு நண்பராக எம்.எஸ். இருந்தார் என வரலாற்றாய்வாளர் அ.கா. பெருமாள் கூறினார். சு.ரா. வீட்டில் நிகழும் இலக்கிய விவாதங்களில் எம்.எஸ். இருப்பார். ஆண்டுகள் குறித்தோ ஆசிரியர் பெயர் குறித்தோ சந்தேகம் வரும்போது எம்.எஸ். பக்கம் சு.ரா. திரும்புவார். அதற்குரிய பதிலை மட்டும் ஒரு சில சொற்களில் அவர் கூறுவார். அளவாகவே பேசுவார். உணவிலும் கட்டுப்பாடு உண்டு. தமது அடையாளம் சு.ரா.வின் நண்பர் என்றிருக்க வேண்டும் எனக் கருதுவார். காகங்கள் முதல் கூட்டத்தின் முடிவில் யாரும் எதிர்பாராத நேரத்தில் நாஞ்சில் நாடன் நாவல் குறித்த தமது விமரிசனக் கட்டுரையைப் படித்தார். நாஞ்சில் நாடன் அவரைக் குறிப்பிடும்போது ‘நோய்களை அண்டவிடாதவர்’ என்பார். ‘காலச்சுவடு’ முதல் இதழின் உள்கட்டமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை ‘ஒரு மாதிரி இதழ்’ தயாரித்து அளித்தார். செயல் திறன் மிக்கவர் என்று அ.கா. பெருமாள் தமது பாராட்டுரையை நிறைவுசெய்தார்.
நாஞ்சில் நாடன் | நடுநிலைச் செம்மல் விருது |
சென்னை சங்கமம்
தமிழ் இயல் கருத்தரங்கம்
சொற்பந்தல்களைத் தாண்டி ஓர் அரங்கம்
பழ. அதியமான்
‘நாவலின் எதிர்காலம்’ நாஞ்சில் நாடனின் கையில் இருந்தது. தமிழ் நாவலின் வரலாற்றில் தமிழ் பேசும் மற்ற நாடுகளுக்கும் பங்கு உண்டு என்பதை நிரூபிக்கத் தமிழ் நாவல் வரலாற்றை மறுபடியும் பேசும்படியாயிற்று. ஒரு நாவல் எழுதிப் புகழ் பெற்றவர்கள் உள்பட சக நாவலாசிரியர்களை வஞ்சனையில்லாமல் புகழ்ந்தார். நாட்டில் நடைபெறும் சமூகச் செயல்பாடுகளைப் பற்றிக் கவலைப்படாமல் ஓர் எழுத்தாளனால் கண்ணை மூடிக்கொண்டு எப்படி எழுத முடியும் என்று கேட்டார். நொய்டாவில் நடந்த உடல் உறுப்புத் திருட்டு, பாலியல் வன்முறையாகத் திரிக்கப்படுவதாகப் பத்திரிகைகள்மீது குற்றம்சாட்டினார். இன்று நொய்டாவில் நடந்தது நாளை ஏன் சென்னை, திருப்பூரில் நடக்காது என்று கோபமும் வருத்தமும்கூடிய தாங்கொணாத் துயரத்தோடு வினவினார். வலி நிரம்பிய வாழ்க்கையின் வேதனையைப் பற்றிப் பேசாமல் நம் கதைகள் தொடர்ந்து காப்பி ஆற்றிக்கொண்டிருக்க இயலாது என்று முடித்தார் தீர்க்கமாக. பிரபஞ்சனின் தொனியிலிருந்து மாறுபடாததாகவே நாஞ்சில் நாடனின் குரல் அன்று ஒலித்தது.
வட்டாரப் படைப்புகளும் ஒற்றைநோக்கும்
பெருமாள்முருகன்
சாதிகளாகப் பிரிந்து கிடக்கும் தமிழ்ச் சமூகத்தில் எழுத்தாளனுக்குப் பலவிதத் தடைகள் உள்ளன. சுதந்திரமாகப் படைப்பை உருவாக்க வாய்ப்பில்லை. திராவிட இயக்க எழுத்துக்கள்போல ஒரு ஊரில் ஒரு பண்ணையார், அவனிடம் ஒரு அடிமை என்பதாகச் சாதிப் பெயர்களை அடையாளப்படுத்தாமல் எழுதினால் பிரச்சினையில்லை சாதிப்பெயர்களைக் குறிப்பிட்டு எழுதும்போது மனம் தன்னை அறியாமலே சில எச்சரிக்கைகளுக்கு ஆளாகிவிடுகிறது. ஆகவே நிலவுடைமைகொண்ட, பிற்படுத்தப்பட்ட சாதிகளைப் பற்றி எழுதப்பட்டவையான வட்டார இலக்கியங்கள் தமக்கெனச் சில எல்லைகளை வகுத்துக்கொண்டன என்று சொல்லலாம்.
சாதிக்கு மேன்மைதரும் வகையாக எழுதுவது அல்லது கீழ்மைதரும் விசயங்களைத் தவிர்த்துவிடுவது என்னும் வரையறை இவற்றிற்குள் செயல்பட்டுள்ளது. ஒரு சாதியின் ஒரு குடும்பத்துப் பிரச்சினைகளை எழுதிவிட்டால் போதும். ஒரு சாதிக்குள்ளேயே நிகழும் பங்காளித் தகராறு, குடும்பப் பிரச்சினைகள் ஆகியவற்றை எழுதுவது என்பதான வரையறைகள் காணப்படுகின்றன. ஆர். சண்முகசுந்தரம், ஹெப்சிபா ஜேசுதாசன், நாஞ்சில் நாடன் உள்ளிட்ட பலரது நாவல்களை அவ்வாறு காணலாம்.
சு.ரா. பக்கங்கள்
காலத்தின் கனல் – 4
4.1.97 சனிக்கிழமை
நேர் நிரை – சிறுகதை. நாஞ்சில் நாடன். ‘ஓம் சக்தி’ தீபாவளி மலர் 96.
கூழைக் கொம்புப் பசு. காளையங்கன்றுகள். கடைசி ஈத்து. (பிரசவம். மிருகங்கள் சம்பந்தப்பட்டு). கிடாரியா கிடேரியா? ஆனை அறுகம் புல். பால்ராஜ் ஈர்நேர் சம்சாரி. தொழுப்பிறப்பு. பின் ஈன்ற இரண்டையும் காயடித்து மூக்குப் பூறி லாடம் அடிக்க வேண்டும். காலால் பசு ஒற்ற ஆரம்பித்தது.
நல்ல தமிழ். பின்னணியையும் வாழ்க்கை முறையையும் கண் முன்னே நிறுத்த உதவும் மொழி.
பால்ராஜ் தன் சகோதரி பேரின்பத்திற்குத் தன் வீட்டுப் பசுங்கன்றைத் தர விரும்பி அவள் வீட்டுக்குச் செல்கிறான். கதையின் முக்கால் பங்கு இந்த விஷயத்தை நுட்பத்துடன் சொல்கிறது. அடுத்தது கங்காதரனைப் பற்றியது. சுகவாசி, மண்ணோடு சம்பந்தமில்லாமல், உழைப்பில் ஈடுபடாமல் இருக்கிறான். கங்காதரன் ஓட்டலில் உணவருந்தும்போது பால்ராஜ் வந்து அவன் மேஜைமீது உட்கார்ந்து கொள்கிறான். கங்காதரன் இடம் மாறுகிறான். கங்காதரனிடம் உழைப்பும் இல்லை; காலமாற்றத்தை ஏற்றுக்கொள்ளவும் முடிவதில்லை. பால்ராஜின் வாழ்க்கை, பேரின்பத்தின் வாழ்க்கை விரும்பும்படி இருக்கிறது.
ஜே.ஆர்.வி. எட்வர்ட்
குமாரசெல்வாவின் கட்டுரை (காலச்சுவடு, மார்ச் 2011) தொடர்பான எனது கருத்துகள்:
ஒட்டுமொத்த குமரிமாவட்டத்தையும் நாஞ்சில்நாடாகக் கருதும் மயக்கம் பெரும்பான்மையான குமரி மக்களிடமும் இருக்கிறது. ‘நாஞ்சில் நாடு’ என்பது ஒட்டுமொத்த குமரி மண்ணையும் குறிப்பதல்ல என்பது அநேகருக்குத் தெரியாது. நாகர்கோவில் – கோவை ரயிலுக்கு ‘நாஞ்சில் எக்ஸ்பிரஸ்’ என்று பெயர் சூட்ட வேண்டுமென எழுந்த கோரிக்கை இந்த அறியாமையின் விளைவே.
குமரி மக்களின் மனங்களில் குடிகொண்டுள்ள கிழக்கு x மேற்கு என்ற எதிர்வு, நாஞ்சில் நாடு x விளவங்கோடு எதிர்வின் நீட்சியாகவே தெரிகிறது. இது இப்போது மறைந்துவருகிறது என்றாலும் அதன் சுவடுகள் பலரது மனங்களிலும் இன்னும் அழியாமல் உள்ளன.
‘விளவங்கோட்டான்’ என்னும் பதத்தைப் ‘பண்பாடற்றவன்’ என்னும் பொருளில் பிரயோகிப்பவர்கள் இன்றும் இருக்கிறார்கள். அப்படிப் பிரயோகிப்பவர்களில் பெரும்பாலோரும் கற்றவர்கள் என்பது ஒரு கூடுதல் தகவல். பிடிவாதம், மனஉறுதி, பின்வாங்காமை இவை விளவங் கோட்டுச் சுபாவங்களாம். குமரி மாவட்ட விடுதலைப் போரில் விளவங்கோட்டுப் பிற்பட்ட வகுப்பினர்கள் காட்டிய தீவிரமும் உறுதியும் அவர்களுக்கு இந்த நற்பெயரைப் பெற்றுத் தந்திருக்கலாம். ஆனால் அது கிண்டல் கேலியாக எதிர்மறைப் பொருளில் மாறிய கதையின் பின்னணி தெரியவில்லை. ‘விளவங்கோட்டான்’ என்பது ஒட்டுமொத்த விளவங்கோட்டு மக்களையும் குறிப்பதில்லை. விளவங்கோட்டு உயர்சாதியினர் இதற்குள் அடங்கமாட்டார்கள்.
நாஞ்சில்நாட்டு மக்கள் நெல்லையுடன் நெருக்கமான தொடர்பு வைத்திருப்பார்கள். விளவங்கோட்டு மக்களோ திருவனந்தபுரம் மாவட்டத்துடன் தொடர்பும் ஈடுபாடும் கொண்டிருந்தவர்கள். கேரளத்திலிருந்து பிரிந்து தமிழகத்துடன் இணையப் போராடினாலும் கேரளத்து மக்களுடன் தொடர்ந்து பரிமாற்றமும் மணஉறவும் செய்துவருபவர்கள் விளவங்கோட்டு மக்கள்.
குமாரசெல்வா கட்டுரை ஒரு ஆழமான ஆய்வுக்கான தொடக்கப்புள்ளி மட்டுமே. நுட்பமாய் ஆய்ந்து பட்டியலிட எண்ணற்ற விஷயங்கள் இருக்கின்றன.
எதிர்வினை
தமிழர் பண்பாடு என்னும் கற்பிதம்
மதிகண்ணன்
குமரி மரபு, நாஞ்சில் மரபாக மாறிப்போனதாகக் கூறவரும் கட்டுரையில் ‘உன் பேச்சு உன்னை வெளிப்படுத்துகிறது’ (மத்தேயு 26:73) என்னும் விவிலியத்தின் வரிகளை முன்னொட்டாகக்கொண்டு தொடங்குகிறார் குமார செல்வா. 15 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையில் லயோலோ கல்லூரியின் தொடர்பு மற்றும் பண்பாட்டியல் துறையால் சு. சமுத்திரத்தின் தலைமையில் ஒருங்கிணைக்கப்பட்டிருந்த பின் நவீனத்துவக் கருத்தரங்கில் மலையாளம் கலந்த தன் பேச்சுமொழியில் அற்புதமாகப் படைப்பாளராகத் தான் பரிணாமப்பட்ட வரலாற்றைச் சொல்லிக்கொண்டிருந்தார் குமார செல்வா. அந்தக் கருத்தரங்கில் அனைவரையும் கவனிக்கவைத்த மிகச் சிறந்த பேச்சுகளில் குமார செல்வாவினுடையதும் ஒன்று. அந்த உரையினூடே தான் பள்ளிக் கல்வி முடிக்கும்வரை பாடத்திட்டத்திற்கு வெளியே தனக்குப் படிக்கக் கிடைத்த ஒரே நூல் பைபிள் மட்டுமே எனக் குறிப்பிட்டார் அவர். இளமைக் காலந்தொட்டு தொடர்ந்த பாதிப்பின் வழிப்பட்டதாகவே இந்தக் கட்டுரையின் முன்னொட்டை என்னால் பார்க்க முடிகிறது. அது அவரது நம்பிக்கை / உள்ளுணர்வு / ஊறிப்போன அகம் சார்ந்த விஷயமன்றி வேறல்ல. பழையதொரு (புனித / பாவ) நூலின் வரிகள் அதற்கு எதிர்மறைப் பொருள் தரும் படைப்பிற்கோ கட்டுரைக்கோ முன்னொட்டாக இருக்குமாயின் அதுவும்கூட எழுத்தாளரின் அகம் சார்ந்த விஷயம்தான். இதுவும் பண்பாட்டின் அங்கம்தான் எனில் பண்பாடென்பது மொழி சார்ந்ததா? மதம் சார்ந்ததா?
வெவ்வேறு வட்டார வழக்கில் எழுதக்கூடிய பலரையும் நாஞ்சில் இலக்கியவாதிகள் என்பது தவறு. சிறு பகுதியிலேயே இத்தனை மொழி, வாழ்க்கை, பண்பாடுகள் எனில் ஒட்டு மொத்தத் தமிழகத்திற்கும் ஒரே மொழி, ஒரே வாழ்க்கை, ஒரே பண்பாடு என்பது சாத்தியமா?
a
Recent Comments