Archive
Rangabashyam group on Bharathi Dasan songs :: லாஸ் ஏஞ்சலஸ் சுவாமிநாதன்
ரங்கபாஷ்யம் குழுவில் பாரதிதாசன் பாடல் பற்றி யார் எழுதுவது
என்ற குழப்பத்தில் யாரும் எழுதாதிருந்தபோது, “அய்யா, இது
விழா முடியும் நாள். சட்டு புட்டுனு எழுதிக்குடுங்க” என்று
சிலரைக்கேட்டு வாங்கியதை இங்கு வெளியிடுகிறேன்.
=====================================
ரங்கபாஷ்யம் பஞ்சாபகேசன்:
கனக. சுப்புரத்தினம்ங்கிற பேரை பாரதி *தாசன்*னு மாத்திண்டார்.
தாசன்னா யாரு. பகவானுகிட்ட சரணாகதி அடஞ்சு சேவகம்
பண்றவன். சரணாகதியப் பத்தி நா வெவரிக்க தேவையில்லை.
நிகமாந்த தேசிகன் சொல்லிட்டு போயிட்டார்.
உகக்குமவை உகந்து,
உதவா அனைத்தும் ஒழித்து
மிகத்துணிவு பெற உணர்ந்து
காவலென வரித்து
புகலில்லாத தவமறியேன் என்று
பகவான் காலைப்பிடித்துக்கொள்ளுதல்..
ஒரே ஒரு பாட்டு மட்டும் பாக்கலாம்… ராகமாலிகையில பிச்சு ஒதற வேண்டிய பாட்டு..
சம்சார சோக மயமே யலாது சுக
சஞ்சார மேது இகமே பொலாது இதில்
சந்தேகமேதுன் சுகமே நிலையாகும்
இந்த மேல் பாராவிலேயே he tells it all..
நீயே கதியாக கதியாக
சுகபோக முண்டாக
நினைத்தனன் பரனருள் பாலா
அநந்தநாள் சுரர்மகிழ் வேலா
நீதாதேவ குஞ்சரி வள்ளி சமேதா
நிராதரன் மீதே நின் பாதார விந்தம்
அருளப் போகாதா வாதா நாதா
சீராருநன் மயிலம் நன்மயிலம்
வளமியலும் நலம்பயிலும்
திருவடி நிழலென அமையும்
தருவின மழகொடு குளிரும்
சிங்கார கோகிலம் கீதமோக மிருதங்கம்
சிற்றலை போய்மோதப் பட்சி ஜாலம் சிறைகொட்ட
ரீங்கார வண்டு சுரநீட மயிலாட ரங்கமாம்
சுப்புரட்ந தாசன் தாசன் விஸ்வாசன் கவிபாசன்
சுகமெது வெனிலுன தருளெனவே
சொலும் இதிற் பிறிதொரு பொருள் கனவே
சூரசம்மாரா குமாரா மயூரா சுகுண
தீரா உதாரா புவனாதாரா துயர்
திரவாரா திராய் கெம்பீரா
என்னடா ஒரு வைஷ்ணவன் முருகன் பாட்டை புகழறான்னு
நெனக்காதேள். எனக்கு சிவ-வைஷ்ணவ பேதம் இல்ல.
அரியும் சிவனும் ஒண்ணுதான்.
தவிர மாமாவைப் பாடினா என்ன, மருமகனைப்பாடினா என்ன?
same family தானே..
அவர் பாட்டுல உள்ள சத்தை எடுத்திண்டு, சக்கையை உதறுமாறு
கேட்டுக்கொண்டு விடை பெறுகிறேன்.
எம்பெருமான் அருள் எல்லோருக்கும் உண்டு.
அடியேன்
பாஷ்யம்
============================
ரங்கண்ணா ராமன்:
இதான் பெரியவர மொதல்ல எழுதவிடக்கூடாதுங்கரது..
எவ்வளவு பாட்டு எழுதிருக்கார் பாரதிதாசன்..கிளுகிளுப்பா ஒரு பாட்டைப் போடாம..
கையில் ஒரு பிட்சர் பீர்ரொட சர்தார்ஜி கிளப்பில் இருக்கிறதா கற்பனை பண்ணிங்க,
ரம்பா மாதிரி ஒரு பெண்ணு ஆடறா..
“பட்டாணி வண்ணப் புதுச்சேலை-அடி
கட்டாணி முத்தே உன் கையாலே – எனைத்
தொட்டாலும் இனிக்கும் பூஞ்சோலை-
உடல் பட்டாலும் மணக்கும் அன்பாலே!
…
ஆவணி வந்தது செந்தேனே -ஒரு
தாவணியும் வாங்கி வந்தேனே- எனைப்
போவேன்று சொன்னாய் நொந்தேனே- செத்துப்
போகவும் மனம் துணிந்தேனே !
பூவோடி விழிக்கொண்டையிலே?- ஒரு
நோவோடி உன் தொண்டையிலே- நீ
வா வா என்ரன் அண்டையிலே – என்று
கூவா யோகருங் குயிலே !”
ஒரு விசிலடிச்சு ஒன்ஸ் மோர் கேக்க தோணலே ?
=============================
மணி சுவாமிநாதன்
பாரதிதாசன் வாரம்னு வெச்சு ஒனக்கு பிடிச்ச பாரதிதாசன்
பாட்டை போடு என்பது ஒரு வகை உளவியல் சோதனை.
டாக்டர் லோகநாதன் சொல்லுவாரே Hermaneutic Testingங்கோ
என்னவோ..ஒரு மரம் வரைடாங்கறது. அவன் வரையறத வச்சு
அவனுடைய மன பாதிப்புகளை, உள் மன எண்ணங்களை வெளிய
வரவழைக்கிறது.
எனக்கு புடிச்ச பாவேந்தர் வரிகள் :
“இதந்தரும் சமநோக்கம்
இல்லா நிலத்தில் நல்ல
சுதந்திரம் உண்டாகுமோ?
சோதர பாவம் நம்மில்
தோன்றாவிடில் தேசத்தில் (இணையத்தில்)
தீதினி நீங்காதடி- சகியே
தீதினி நீங்காதடி !”
=============================
S. அண்ணாமலை
எனக்கு புடிச்ச பாட்டு:
மேசை விளக்கேற்றி நாற்காலி
மீதில் அமர்ந்தே நான்
ஆசைத்தமிழ் படித்தேன் என்னருமை
அம்மா அருகில் வந்தார்
மீசைத்தமிழ் மன்னர்- தம் பகையை
வென்ற வரலாற்றை
ஓசையுடன் படித்தேன் அன்னை மகிழ்
வுற்றதை என்ன சொல்வேன் ?
செந்தமிழ் நாட்டினிலே – வாழ்கின்ற
சேயிழையார் எவரும்
வந்த விருந்தோம்பும்- வழக்கத்தை
வாய்விட்டு சொல்லுகையில்
அந்தத்தமிழ் அன்னையின் – முகத்தினில்
அன்பு பெருகியதை
எந்த வகை உரைப்பேன் ! – கேட்ட பின்பும்
இன்னும் சொல் என்றுரைத்தார் !
கிட்ட நெருங்கி எனைப்- பிள்ளாய் என்று
கெஞ்சி நறுந்தேனைச்
சொட்டுவது போலே- வாய் திறந்து
சொல்லொரு பாடல் என்றார்
கட்டுக் கரும்பான- இசைத்தமிழ்
காதினிற் கேட்டவுடன்
எட்டுவகைச் செல்வமும் – தாம் பெற்றார்
என்னைச் சுமந்து பெற்றார் !
(இன்னிக்கு நடக்குமாய்யா இது.
Sorry , Mommy, I can’t read Tamil னு சொல்லிட்டு
போயிடாதா பிள்ளை)
======================================
தகர டப்பா
தகரம்ன்னா ஒங்களுக்கு எளக்காரம்.
எவர் சிலவர் பாட்டை நான் எழுதரதுதானே மெறை.
ஏனமெல்லாம் எவர் சில்வர்
இருந்துவிட்டால் அவர் செல்வர்
ஏழைபெண்களும் வேண்டும் என்று சொல்வர்
இல்லை என்றால் தொல்லை பண்ணிக் கொல்வர்…
ஏழைங்க கூட மதிக்கரதில்லன்னு சரியா சொன்னாரு..
சே, ஒரு பாட்டுல கூட தகரத்துக்கு மதிப்பில்லாம போயிருச்சு.
=====================
வெட்டி
கொடுவாளை எடுத்து வெட்டற சமாசாரம் எனக்கு புடிச்சது.
எல்லோரும் அதச்சொல்லி சொல்லி நாற அடிச்சிட்டாங்க. எனக்கு புடுச்ச
வெட்டர பாட்டு இங்க..
தங்கக் கதிர்தான் தன்
தலை சாய்ந்ததே
சிங்கத் தமிழர்- தம்
செல்வம் உயர்ந்ததே
பொங்கும் சுடர்ப்பொன் னரிவாள்
செங்கை பிடிப்போம்
போத்துக்கூட்டி அரிந்த செந்நெல்
போட்டுக் கட்டுவொம்..
வெட்டும் இடமெல்லாம் – நாம்
வேண்டிய பொன் கிட்டும்
எட்டுத்திசை பாடும்- நம்
இன்பத்திருநாட்டை !
===========================
சாந்தி தியாகராஜன்:
பெண் விடுதலயப்பத்தி பாரதிதாசன் சொன்னத
எழுதணும்னு ஆசை. ஆனா அவரு கோவிச்சுப்பாரு.
அதோட இல்ல. அவரு இப்ப கொஞ்சம் சரியில்ல.
இந்தப் பாழாப்பொன்ன சர்தார்ஜி கிளப்புல எவளயோ
பாத்து ஜொல்ளு விடரதா தகவல் வந்திச்சு. அதுனால
இந்த ப்பாட்டை போடறேன்.
“புதுக்கோயில் மதில் மேலே முத்து மாமா – இரண்டு
புறா வந்து பாடுவதேன் முத்து மாமா
…
முதல் மனைவி நானிருந்தும் முத்து மாமா- அந்த
மூளியை நீ எண்ணலாமா முத்து மாமா
ஒதிய மரத்தின் கீழே முத்துமாமா- கோழி
ஒன்றை ஒன்று பர்ப்பதென்ன முத்து மாமா?
எது செய்ய நினைத்தனவோ முத்து மாமா- நாமும்
அது செய்ய அட்டி என்ன முத்து மாமா….”
அவருக்கு புரிஞ்சா…ம்.ம்.. I may get lucky ….
================================
குப்பன்:
என்னைக் கடைசியா வந்து கேக்கறீங்க. ஒரு பாட்டு சமாசாரத்துல
கூட கடைசியா. சரி ஆகட்டும்.
“வெறிமது உண்போர் நீசர்
என்றால் பிறர்க்கிருட்டில்
நிறைமுக்கா டெதுக்கடி? சகியே
நிறை முக்காடெதுக்கடி ?”
தெரியாத்தனமா இந்த பாவேந்தர் பாட்டை எழுதினதுக்கு
சர்தார்ஜி கிளப்புல தான் ரகசியமா பீர் குடிச்சிட்டு
நடனம் பாக்கப்போனத எழுதினதா நெனச்சு ரங்கண்ணா
கீச்சி போட்டாரு. “நம்ம எல்லாருமே மொகமூடிதான்.
முக்காட எடுத்தா எல்லாருக்கும் வேல போயிடும், தெரிஞ்சிக்க”ன்னு
பெரியவரும் திட்டினாரு.
சரி, இந்தப்பாட்டை போடுங்க..
“சித்திரச்சோலைகளே, -உமை நன்கு
திருத்த இப்பாரினிலே- முன்னர்
எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ
உங்கள் வேரினிலே
நித்தம் திருத்திய நேர்மையினால் மிகு
நெல்விளை நன்னிலமே, – உனக்
கெத்தனை மாந்தர்கள் நெற்றி வியர்வை
இறைத்தன்ர் காண்கிலமே.
தாமரை பூத்த தடாகங்களே, உமை
தந்த அந்தக்காலத்திலே – எங்கள்
தூய்மை சகோதரர் தூர்ந்து மறைந்ததைச்
சொல்லவோ ஞாலத்திலே
மாமிகு பாதைகளே, உமை இப்பெரு
வையமெல்லாம் வகுத்தார்- அவர்
ஆமை எனப்புலன் ஐந்தும் ஒடுங்கிட
அந்தியெல்லாம் உழைத்தார்
ஆர்த்திடும் யந்திரக்கூட்டங்களே- உங்கள்
ஆதி அந்தம் சொல்லவோ? நீங்கள்
ஊர்த்தொழிலாளர் உழைத்த உழைப்பில்
உதித்தது மெய் அல்லவோ?
…
எலிகள் புசிக்க எலாம் கொடுத்தே சிங்க
ஏறுகள் ஏங்கிடுமோ?- இனிப்
புலிகள் நரிக்கு புசிப்பளித்தே பெரும்
புதரினில் தூங்கிடுமோ?
கிலியை விடுத்து கிளர்ந்தெழுவார் இனிக்
கெஞ்சும் உத்தேசமில்லை – சொந்த
வலிவுடையார் இன்ப வாழ்வுடையார் இந்த
வார்த்தைக்கு மோசமில்லை.”
================================================
சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்
Recent Comments