Archive

Posts Tagged ‘EssRaa’

Paithiyakkaaran on S Ramakrishnan Short Story collection: Tamil Fiction Reviews

July 6, 2012 1 comment

Jeyamohan

http://www.jeyamohan.in/?p=6321

ஒரு வாசகன் இலக்கியப்படைப்பில் தான் வாசித்தவற்றைப் பற்றிச் சொல்ல வந்தாலே கேட்கப்படும் மூன்று கேள்விகள் உண்டு .

1. இதையெல்லாம் அந்த எழுத்தாளன் உத்தேசித்திருப்பானா?

2. இதுக்கெல்லாம் அந்த எழுத்திலே இடமிருக்கா

3. இது எனக்கு ஏன் தோணல்லை?

மூன்றுமே இலக்கியத்தை சரிவர உள்வாங்கத் தடையாகும் வினாக்கள்.

மதியம் திங்கள், ஜனவரி 11, 2010

எஸ்.ராமகிருஷ்ணன்: விருட்ச(ங்களின்)த்தின் விதை(கள்)

வாழ்க்கையின் போக்கில் எந்தவொரு சுழலை எதிர்கொள்ள நேர்ந்தாலும் அதிலிருந்து மீள்வதற்கு கலையின் துணையை நாடுவது மனிதர்களின் இயல்பு. அது நெருங்கிய மனிதர்களின் இறப்பாக இருக்கலாம், பிரிவாக இருக்கலாம், அல்லது காதலை கண்டடைந்த சந்தோஷமாக இருக்கலாம். எப்படியாக இருந்தாலும் அறியப்பட்ட உணர்ச்சியிலிருந்து வெளியேற கலை என்னும் வடிவமே பலவகைகளில் துணையாக இருக்கிறது. இதுகுறித்து பிரியத்துக்குரிய எஸ்.ராமகிருஷ்ணன் என்னிடமும், நண்பர் சுரேஷ் கண்ணனிடமும் புத்தகக் கண்காட்சியில் நீண்ட நேரம் உரையாடினார். இந்த சந்திப்பு குறித்த இடுகையை நண்பர் சுரேஷ் கண்ணன் விரிவாக எழுதுவார் என்பதால் இங்கு அதை தவிர்க்கிறேன். ஆனால், முதல் வாக்கியத்திலிருந்துதான் இந்த இடுகை கிளை பரப்பி விரிகிறது என்பதை குறிப்பிட்டு சொல்ல வேண்டியது கடமை.

‘கலை’ என்ற சொல்லுக்கு பின்னால் கவிதை, சிறுகதைகள், புதினங்கள், ஓவியம், இசை, நாடகம்… என பல்வேறு சொற்கள் அடங்கியிருக்கின்றன. இவையெல்லாமே உடலியல் சார்ந்த கலைச் செயற்பாடுகள். நிலையான புள்ளியில் நின்று சாத்தியப்படுவன அல்ல. பல்வேறு திசைகளில், குறிகளற்று பயணிப்பவை. இந்த புரிதலில் இருந்து எஸ்ராவின் சிறுகதைகளை பார்க்கலாம் என்று தோன்றுகிறது.

காரணம், தமிழ்ச் சிறுகதை உலகு என்னும் பெருங்கடலில் கலந்த – கலக்கும் – மிகப் பெரிய ஆறு, எஸ்ரா. ஜீவநதிகளை போல், வற்றாமல் சிறுகதைகளை தொடர்ந்து எழுதி வருபவர். இவரளவுக்கு தொடர்ச்சியாக சிறுகதைகளை எழுதி வருபவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். யதார்த்த – அ யதார்த்த – மாந்த்ரீக – வட்டச்சூழல் – என அனைத்து வடிவங்களிலும் புனைவு உலகை பரிசோதனை செய்திருக்கிறார். தொடர்ந்த பங்களிப்பின் வழியே எல்லாவிதமான மன அழுத்த; மனப் போக்கு கொண்டவர்களுக்கும் தன் பிரதிகளின் வழியே அளவில் சிறியதான சாவியை எடுத்து தருகிறார். அந்தச் சாவியைக் கொண்டு கதவை திறக்க வேண்டியது மட்டுமே வாசகனின்/வாசகியின் வேலை. அப்படி அவன்/ள் திறக்கும்பட்சத்தில் விரிவது 7 கடல்கள், 7 மலைகள் தாண்டி மறைந்திருக்கும் வாழ்க்கையின் ரகசியம். இன்னொரு விதமாகவும் இதையே சொல்லலாம். எஸ்ராவின் சிறுகதைகளுக்குள் எழுதப்படாத நாவல்கள் மறைந்திருக்கின்றன.

எஸ்ராவின் இரண்டு சிறுகதைகளை உதாரணத்துக்கு எடுத்துக் கொள்வோம். ‘உறவும் பிரிவும் இன்றி’, ‘தெரிந்தவர்கள்’. இந்த இரு சிறுகதைகளும் 80களில் எழுதப்பட்டவை. சென்னை புக்ஸ் சார்பாக வெளியான ‘வெளியில் ஒருவன்’ தொகுப்பில் இடம் பெற்றவை. இதுதான் எஸ்ராவின் முதல் தொகுப்பு. இன்றைய தேதி வரை நூற்றுக்கும் அதிகமான சிறுகதைகளை எஸ்ரா எழுதியிருக்க, ஆரம்பக்கால இந்த இரு புனைவுகளை மட்டுமே இந்த இடுகை ஏன் கணக்கில் எடுக்க வேண்டும்?

தனிப்பட்ட காரணங்கள் எதுவுமில்லை. எழுத ஆரம்பித்த காலத்தில் பிரசவமான படைப்பு எப்படி இன்றும் உயிர்த்துடிப்புடன் இருக்கிறது என்பதை பார்க்கவும், சின்ன ஊற்று எப்படி வற்றாத ஆறாக விரிந்தது என்பதை ஆராயவும்.

இது வாசகனின் பார்வையில் எழுதப்பட்ட இடுகை. விமர்சனம் அல்லது திறனாய்வு என்னும் வார்த்தைகளுக்குள் அடங்காது.

இந்த இரு புனைவுகளுமே ‘பணம்’ அல்லது ‘கடன்’ என்னும் மூன்றெழுத்து தரும் உணர்ச்சியை அடிநாதமாக கொண்டவை.

‘உறவும் பிரிவும் இன்றி’ சிறுகதையில் தயாளன் – கதிரேசன் என இருவர் வருகிறார்கள். இருவரும் உறவுக்காரர்கள். தயாளனின் தங்கச்சியை கதிரேசனின் தம்பிக்கு திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்கள்.

தயாளனின் ஊரில் காலியாக ஒரு கடை இருக்கிறது. அதன் உரிமையாளர் மார்டின். தயாளனும் மார்ட்டினும் ஒரே இடத்தில் வேலைப் பார்ப்பவர்கள். எனவே மார்ட்டினிடம் பேசி அந்தக் கடையை தனக்கு எடுத்து தரும்படி தயாளனிடம் வேண்டுகோள் வைக்கிறார் கதிரேசன். அதற்காக முன் பணமாக ரூபாய் ஆயிரத்தை தயாளனிடம் தரவும் செய்கிறார்.

ஆனால், கடையை இன்னொருவரிடம் தர மார்ட்டினுக்கு விருப்பமில்லை. தானே நடத்தப் போவதாக சொல்கிறான். எனவே கதிரேசனிடம் பணம் தருவதற்காக தயாளன் காத்திருக்கிறான். ஆனால், நடுவில் சில எதிர்பாராத தருணங்களால் அந்தப் பணம் செலவாகிவிடுகிறது. கதிரேசன் வந்து கேட்கும்போது தயாளனிடம் பணமில்லை. பிறகு தருவதாக சொல்கிறான். ஆனால், ஒவ்வொரு முறை கதிரேசன் பணம் கேட்கும்போதும் இதே நிலையே தொடர்கிறது. தயாளனிடம் பணம் இல்லாத நேரமாக கதிரேசன் வருகிறார். ஒரு கட்டத்தில், நடுத்தெருவில் இருவருக்கும் கை கலப்பு ஏற்படுகிறது.

கதை என்று பார்த்தால் இவ்வளவுதான். ஆனால், அதை பிரம்மாண்டமான உணர்வாக மாற்றிவிடுகிறார் எஸ்ரா.

சிறுகதையின் ஆரம்பம், கிழிந்த சட்டையுடன் தயாளன் சைக்கிளை தள்ளிக் கொண்டு போவதிலிருந்து ஆரம்பிக்கிறது. நாலாவது பத்தி, இப்படி வருகிறது:

”கதிரேசன் மச்சானை அடித்திருக்கக் கூடாது என்றுதான் தோன்றியது. அவர்தான் முதலில் அடித்தார். என்றாலும், அவன் அடித்தது போல் அவர் அடிக்கவில்லை. அப்போது அவனுக்கு ஏக கோபமாயிருந்தது. அவர் சட்டையைப் பிடித்து இழுத்ததும் பின்வாங்கத்தான் செய்தான். அவர்தான் கன்னத்தில் அறைந்தார்.”

7வது பத்தியின் ஆரம்பம் இது: ”கதிரேச மச்சான்தான் எவ்வளவு நல்லவர் என்று தோணியதும் மனதுக்குள் ஏதோ செய்தது.”

தயாளன் – கதிரேசன் ஆகிய இருவர் மீதும் தவறோ குற்றமோ இல்லை. சந்தர்ப்பங்கள் அப்படி அமைந்துவிட்டன என்பதை கதைச்சொல்லி முதலிலேயே தெளிவாக உணர்த்தி விடுகிறார்.

கடை வேண்டும் என முன்பணமாக ரூபாய் ஆயிரத்தை கதிரேசன் தரும் இடம் நுட்பமானது. ”மஞ்சள் பைக்கட்டில் இருந்து ரூபாயை எடுத்தார். பாதிக்கு மேல் பழைய தாள்கள். அஞ்சும் பத்துமாக எண்ணி நூல் போட்டுக் கட்டியிருந்தார்…”

தயாளனின் பார்வையில் செல்லும் இந்தக் கதையில் கதிரேசன் ஏற்படுத்தும் தாக்கத்தை விட, அவரது மனைவியும் குழந்தைகளும் தரும் பாதிப்பு அதிகம். இத்தனைக்கும் அவர்கள் புனைவில் அதிகம் வருவதில்லை. சொல்லிக் கொள்ளும்படியான உரையாடல்களும் அவர்களுக்குள் இல்லை. ஆனால், வாசகனா(கியா)ல் அதை எப்படி வேண்டுமானாலும் நிரப்பிக் கொள்ள முடியும்.

கிழிந்த ரூபாய் நோட்டுகள் என்றால் குடும்பம் வறுமை. கதிரேசனின் மனைவி நூல் கட்டி மோதிரத்தை அணிந்திருக்கிறாள். ஏழைகள். பணம் அவசியம். அது கிடைக்காதபோது கதிரேசன் தன் குடும்பத்தை எப்படி எதிர் கொண்டிருப்பார்? அவர் மனைவி வார்த்தைகளால் அவரை எப்படி துளைத்திருப்பாள்? குழந்தைகளின் பசியை எப்படி அவள் போக்கியிருப்பாள்? உறவினரிடம் தன் கணவன் பணம் கொடுத்து ஏமாந்துவிட்டான் என்பதை எப்படி எதிர்கொண்டிருப்பாள்?

தயாளனின் மனைவியும் கதையில் அதிகம் வரவில்லை. ஆனால், அவளது மருத்துவத்துக்காகத்தான் தயாளன் அந்தப் பணத்தையே செலவு செய்திருந்தான். எனில், தயாளனின் மனைவிக்கு இந்த விஷயம் தெரியுமா? கதிரேசனுக்கு பணத்தை திருப்பித் தந்துவிடுங்கள் என ஒருமுறைக் கூட அவள் சொன்னதில்லையா? குடும்பச் செலவை குறைத்து பணத்தை சேமித்து கதிரேசனுக்கு திருப்பித் தர ஏன் முயற்சி செய்யவில்லை?

இப்படி தொடரும் கேள்விகளுக்கு வாசகன் விடை தேடிக் கொண்டே செல்லும்போது எழுதப்படாத ஒரு நாவலை தன்னையும் அறியாமல் எழுத ஆரம்பிக்கிறான். தன் பிரதிகளின் வழியே அளவில் சிறியதான சாவியை எடுத்து எஸ்ரா தருகிறார் என்று குறிப்பிடுவது இதனால்தான். சிறுகதைகளுக்குள் நாவலை மறைத்து வைத்திருக்கும் ரகசியம்.

‘தெரிந்தவர்கள்’ சிறுகதை நண்பர்களுக்கு இடையிலானது.

வெளிநாட்டில் வேலைப் பார்ப்பவன் மணி. சம்பாதிக்கும் பணத்தை கதிருக்கு அனுப்புவான். கதிர் அதை மணியின் வீட்டில் தருவான். கடைசியாக மணி அனுப்பிய ரூபாய் பத்தாயிரத்தை கதிர் அவன் வீட்டில் தரவில்லை. தன் தங்கையின் திருமண செலவுக்கு அதை பயன்படுத்திக் கொண்டான். இப்படி செலவு செய்துவிட்டேன் என்பதையும் மணியிடம் கதிர் சொல்லவில்லை.

இச்சிறுகதை வெளிநாட்டிலிருந்து திரும்பி வரும் மணியின் பார்வையில் விரிகிறது. பிரதி முழுக்க அவன், அவன் என்றே வரும். இறுதியில்தான் மணி என்னும் பெயருடன் அவன் இருப்பான். அதேபோல் வெளிநாடு என எங்கும் குறிப்பிடப்பட்டிருக்காது. முதல் பத்தி, இப்படி ஆரம்பிக்கிறது:

”காலையில்தான் வந்திருந்தான். ஸ்டேஷனை விட்டு வெளியே வரும்போது குளிர் அதிகமாக இருந்தது காலையில். இந்தக் குளிர்க் காற்று கூட இங்கே அதன் இயல்பில் இருப்பதாகப்பட்டது. அவன் இருந்த இடத்தில் கடுங்குளிர், கடுமையான வெப்பம்.”

இறுதியில் இப்படி வருகிறது.

”நான் அனுப்பின ரூவா என்னாச்சு?”

பதில் சொல்லவில்லை.

”வரலையா?”

”வந்துச்சு.”

”என்ன செஞ்சே?”

”திடீர்னு கல்யாணம் பண்ண வேண்டியிருந்ததால செலவு ஆகிப் போச்சு. அப்பாவுக்கு வர வேண்டிய இடத்தில பணம் வரலே…”

”அதை எனக்கு எழுதியிருக்கலாம்ல. இல்ல வீட்ல பணத்தைக் கொடுத்திட்டு கேட்டு வாங்கி இருக்கலாம்ல…”

இப்படியே தொடரும் உரையாடல், இறுதியில் சண்டையில் முடிகிறது.

”உன் பிச்சைக்காசு ஒண்ணும் வேணா. நான் வரேன்” அவன் இறங்கிக் கீழே போனான். புழுதி கலைந்து பறந்தது. மணி எழுந்து நின்று பார்த்தான். கதிர் வேகமாகப் போய்க் கொண்டிருந்தான்.

நுணுக்கமான விஷயங்கள் இந்தக் கதை நெடுக உண்டு. மணியின் மனைவிக்கும், அம்மாவுக்குமான பிரச்னை. வெளிநாட்டிலிருந்து வந்திருக்கும் தம்பியிடம் தனியாக தன் வீட்டுக்கு வரும்படி அக்கா அழைப்பது, ”தனியா உங்கக்கா என்ன பேசினாங்க?” என மனைவி கேட்பது, ”நீங்க ஊர்ல இல்லாதப்ப உங்கக்கா இங்க எட்டிக் கூட பார்த்ததில்ல. உங்கம்மாவும் அவங்க வீட்லயேதான் இருந்தாங்க…”

கதிர் வீட்டு விவரணைகள் அபாரமானவை. மாடியில் தூங்கிக் கொண்டிருந்த கதிர், மணி வந்து எழுப்பியதும் மலங்க மலங்க விழிப்பது, மணி பணம் குறித்து கேட்பதற்குள், ”உனக்கு பிடிச்ச மீன் வாங்கிட்டு வரேன்” என சட்டென கீழே இறங்கிச் செல்வது, சாப்பிட்டு முடித்ததும் திருமணமான தங்கசியுடன் வருவதாக சொல்லி மணியை நாசுக்காக அவன் வீட்டுக்கு அனுப்புவது…

எந்த இடத்திலுமே இந்தக் கதையில் ப்ளாஷ்பேக் உத்தி செயல்படவில்லை. மணி – கதிர் நட்பு எப்போது ஆரம்பித்தது, எப்படி மலர்ந்தது என்பதெல்லாம் பிரதி சொல்லவேயில்லை. ஆனால், வாசிப்பவர்கள் அந்த இடத்தை நிரப்பிக் கொள்ளலாம்.

கதிரின் தங்கைக்கு மணியும் அண்ணன்தான். சந்தோஷமாக அப்படித்தான் அழைக்கிறாள். மணியின் வீட்டில் பணப் பிரச்னையில்லை. கதிரின் வீட்டில் தேவை அப்படி செய்ய வைத்தது. சொல்லிவிட்டு பணத்தை எடுத்திருக்கலாமே என்பது மணியின் வாதம். எடுத்தாலும் நீ தவறாக நினைக்கமாட்டாய் என்று நினைத்தேன் என்பது கதிரின் தரப்பு.

சரி, கதிர் கேட்டிருந்தால் மணி என்ன செய்திருப்பான்? மணி மறுத்திருந்தால் கதிர் என்ன செய்திருப்பான்?

இப்படியாக விரித்துக் கொண்டே செல்லலாம்.

இன்னொரு மாதிரியாக வாசிப்போம். ‘தெரிந்தவர்கள்’ சிறுகதையில் மணியும், கதிரும் உறவினர்களாக இருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும்? ‘உறவும் பிரிவும் இன்றி’ தயாளனும், கதிரேசனும் நண்பர்களாக இருந்திருந்தால் செலவான ஆயிரம் ரூபாய் குறித்த விவரணை எப்படி சென்றிருக்கும்? ‘தெரிந்தவர்கள்’ பிரதியில் ஏன் ப்ளாஷ்பேக் இல்லை? ‘உறவும் பிரிவும் இன்றி’யில் ஏன் ப்ளாஷ் பேக் இருக்கிறது?

இந்த சிறு சிறுகதைகளிலும் ஆண்களே முக்கிய பாத்திரங்களாக இருக்கிறார்கள். இதுவே பெண் பாத்திரங்களாக இருந்தால், இந்தச் சூழலை எப்படி எதிர்கொண்டிருப்பார்கள்? வெளிநாட்டில் வேலைப் பார்க்கும் பெண், தன் சிநேகிதிக்கு பணம் அனுப்பி வீட்டில் தரச் சொல்வதைவிட, தானே வீட்டுக்கு பணம் அனுப்பிவிடுவாள் என எளிமையாக இந்தக் கற்பனையை குறுக்கிவிடாமல் இருக்கும் பிரதிக்குள் ஊடுரிவிப் பார்த்தால் எப்படி இருக்கும்?

இப்படி யோசிக்க யோசிக்க விதை, விருட்சமாக வளர்ந்துக் கொண்டே செல்வதை காணலாம்.

அதனாலேயே எஸ்ராவின் சிறுகதைகள் அல்லது புனைவுகள், அனைத்து முனைகளிலும் திறந்த தன்மையுடையதாக இருக்கிறது என்று சொல்லத் தோன்றுகிறது. ஒவ்வொரு வாசிப்பின் நிகழ்வும் மற்றொரு வாசிப்புக்கான முன்னுரையாக அமைகிறது. இப்படி இவரது ஒவ்வொரு சிறுகதையை குறித்தும் சொல்லிக் கொண்டே போகலாம். அல்லது நாவலாக வாசித்துக் கொண்டே போகலாம்.

நன்றி: ‘எஸ். ராமகிருஷ்ணன் கதைகள்’ – உயிர்மை வெளியீடு.

Posted by பைத்தியக்காரன் at

34 comments:

நர்சிம் said…
மிக நல்ல பதிவுண்ணா.. நன்றி..

//தனிப்பட்ட காரணங்கள் எதுவுமில்லை. எழுத ஆரம்பித்த காலத்தில் பிரசவமான படைப்பு எப்படி இன்றும் உயிர்த்துடிப்புடன் இருக்கிறது என்பதை பார்க்கவும், சின்ன ஊற்று எப்படி வற்றாத ஆறாக விரிந்தது என்பதை ஆராயவும்.
//

//இப்படி யோசிக்க யோசிக்க விதை, விருட்சமாக வளர்ந்துக் கொண்டே செல்வதை காணலாம். //

எஸ்.ரா. Yes.Rocks.

சுரேஷ் கண்ணன் said…
சிவராமன், நல்ல,நுட்பமான பதிவு மற்றும் வாசிப்பு. வெகுஜனப் பத்திரிகைகள் சிறுகதை என்னும் வடிவத்தை ஆணுறை அளவிற்கு ஆக்கி சீரழித்தக் கொண்டிருக்கும், இவ்வடிவத்தை ரசிப்பதற்கு பிற்காலத்தில் யாராவது இருப்பார்களா என்று நினைக்கும் போது இம்மாதிரியான துளிர்ப்புகள் நம்பிக்கையளிக்கின்றன.

எஸ்.ராவைப் பற்றி அறியாமலேயே ‘காட்டின் உருவம்’ என்கிற சிறுகதைத் தொகுதியை பல ஆண்டுகளுக்கு முன் வாங்கி வாசித்த நினைவு வருகிறது. நீங்கள் குறிப்பிட்ட மாதிரி எஸ்.ரா. சிறுகதையின் வடிவத்தில் பல்வேறு சோதனைகளை முயன்று பார்த்துக் கொண்டே வந்திருப்பதை தொடர்ந்து வாசித்தால் அவதானித்துக் கொள்ள முடியும்.

ஆனால் ஒரு குறிப்பிட்ட எழுத்தாளரின் பெரும்பான்மையான சிறுகதைகளை ஒரே நேரத்தில் படிப்பது ஒரு சலிப்பான வாசிப்பனுபவத்தைத்தான் தரும் என்பதை என் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். சுவாரசியமாக எழுதும் சுஜாதாவிற்கும் இதே நிலைதான். மற்றவருக்கு இது மாறுபடலாம்.

எழுதப்பட்டதை விட எழுதப்படாத விஷயங்களை உள்நுழைத்து வாசகனின் கற்பனைக்காக விட்டு வைப்பது ஒரு எழுத்தாளனின் முக்கிய அம்சம். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இரு சிறுகதைகளும் அந்த நோக்கில் வெற்றி பெற்றிருக்கின்றன என்பது உங்கள் விவரிப்பில் தெரிகிறது. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

இதை ஒவ்வொரு எழுத்தாளரையும் அடிப்படையாக வைத்து ஒரு தொடராகவே எழுதலாம் என்கிற வேண்டுகோளை முன்வைக்கிறேன். அடுத்த பதிவு ஆதவனாக இருக்கலாம் என்கிற நேயர் விருப்பத்தையும். 🙂

//நண்பர் சுரேஷ் கண்ணன் விரிவாக எழுதுவார்//

அதைப் பற்றியும் நீங்களே எழுதிவிடலாம். உங்கள் அளவிற்கு நேர்த்தியாக என்னால் எழுத முடியுமா என்று தெரியவில்லை.

பைத்தியக்காரன் said…
‘எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள்’ அவரது மொத்தமான சிறுகதை தொகுதி. தடிமனான புத்தகம். இதற்கு பிறகு ’18ம் நூற்றாண்டில் பெய்த மழை’ சிறுகதை தொகுப்பு வந்திருக்கிறது. இந்த தொகுப்புக்கு பிறகும் பல சிறுகதைகளை எழுதியிருக்கிறார். தொகுப்பாக அவை இந்தாண்டு வெளியாகலாம்.

2009 ‘தினகரன் தீபாவளி மலரில்’ வெளியான இவரது ‘புர்ரா…’ சிறுகதை விரிக்கும் உலகு, வேலைக்கு செல்லும் கணவன் – மனைவியின் உலகை, அவர்களது குழந்தையின் அவஸ்தையை வெகு நுட்பமாக ஆராய்வது.

இடுகையில் குறிப்பிட்டுள்ள ‘பணம்’ அல்லது ‘கடன்’ என்னும் கருத்தைக் கொண்டு புதுமைப்பித்தனில் ஆரம்பித்து பலரும் சிறுகதைகள் எழுதியிருக்கிறார்கள். அவைகள் இதுபோல் நாவலாக – புதினமாக விரிகிறதா என்பதை வாசித்தவர்களின் கவனத்துக்கே விட்டுவிடுகிறேன்.

எத்தனை சிறுகதைகள் அல்லது புனைவுகள் இதுபோல் தன்னுள் நாவலை மறைத்து வைத்திருக்கின்றன என்றுப் பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும்.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

சுரேஷ் கண்ணன் said…
//கிழிந்த சட்டையுடன் தயாளன் சைக்கிளை தள்ளிக் கொண்டு போவதிலிருந்து ஆரம்பிக்கிறது.//

உதிரிப்பூக்கள் திரைப்படத்தில் விஜயனும் சரத்பாபுவும் சண்டையிட்டுக் கொள்கிற காட்சி நினைவுக்கு வருகிறது. இந்த அளவிற்கு நுட்பமான காட்சிகள் தமிழ் சினிமாவில் சொற்பமே. உங்கள் பதிவின் சாரத்தைப் போன்று, பார்வையாளன்தான் அவர்களுக்குள் நிகழ்நத மோதலை யூகிக்க வேண்டும்.

இராஜ ப்ரியன் said…
நல்ல பகிர்வு ………

மோகன் குமார் said…
நண்பர் சிவா,

படைப்பு பாதி என்றால் நீங்கள் தங்கள் பரந்த கற்பனையின் மூலம் மீதியை நிரப்பி கொள்கிரீர்கள். இது போன்ற வாசகன் கிடைக்க எழுத்தாளர்கள் குடுத்து வைத்திருக்க வேண்டும். ஆனால் ஒன்று என்னை போன்ற சாதாரண வாசகன் தங்கள் அளவு கற்பனை குதிரையை ஓட்ட முடியாது. :))

நிற்க. நானும் எஸ். ரா வை ரசிப்பவனே. பகிர்வுக்கு நன்றி

பைத்தியக்காரன் said…
அன்பின் நர்சிம், யெஸ்,ரா. Rocks.

அன்பின் சுரேஷ், விரிவான பின்னூட்டத்துக்கு நன்றி. ஆதவன்? நல்ல யோசனை. செய்யலாம். எஸ்ராவுடன் உரையாடியதை குறித்து நீங்கள் எழுதுவதே சரி. வாசிக்க காத்திருக்கிறேன்.

அன்பின் இராஜ ப்ரியன், வருகைக்கும், பின்னூட்டத்துக்கும் நன்றி.

அன்பின் மோகன் குமார், தன்னடக்கம் காரணமாக உங்களை நீங்கள் சாதாரண வாசகர் என்று சொல்லிக் கொண்டாலும், அப்படியில்லை என்று நன்றாகவே தெரியும். வாசகரில் சாதாரணமானவர் / அசாதாரணமானவர் என யாராவது இருக்கிறார்களா என்ன?

தோழமையுடன்
பைத்தியக்காரன்

அமர பாரதி said…
நல்ல பதிவு. ஆனால் இப்படியெல்லாம் யோசித்தால் மண்டை குழம்பி விடாதா? இவ்வளவு சிந்தித்தால் சிக்கல்தான். நேரடியான உரையாடல்களை அப்படியே சொன்ன அர்த்தத்தில் புரிந்து கொண்டு படித்தால் போதாதா?

குசும்பன் said…
அண்ணே ஒரு ஸ்மால் டவுட்!

பிளீஸ் ஹெல் மீ…

கதை எங்கிருந்து ஆரம்பிக்குது எந்த ஊரு என்பதையும் வாசகரே கற்பனை செஞ்சுக்கனும் ரைட்டு,

அவர்களுக்குள் நட்பு எப்படி உருவாச்சு என்பதையும் வாசகரே கற்பனை செஞ்சுக்கனும் ரைட்டு…

முடிவையும் வாசகரே இப்படி அல்லது அப்படின்னு விதவிதமா கற்பனை செஞ்சுக்கனும்… ரைட்டு.
இப்படி வாசகரை கற்பனை செஞ்சுக்க விடுவதுதான் புனைவு என்பது வரை புரியுது…

நடுவில் தம்மாதுண்டு கதை சொல்வதுக்கு பதில் தலைப்பை மட்டும் கொடுத்துவிட்டால் வாசகரே கதையையும் கற்பனை செஞ்சுக்கவிட்டா அது பெரும் புனைவா?

பிளீஸ் ஆன்சர் மை கொஸ்டினு? (15 பைசா அக்னாலெஜ்மெண்ட் கார்ட்டும் வெச்சு கேள்வி கேட்டு இருக்கேன்)

தாமோதர் சந்துரு said…
//நல்ல பதிவு. ஆனால் இப்படியெல்லாம் யோசித்தால் மண்டை குழம்பி விடாதா? இவ்வளவு சிந்தித்தால் சிக்கல்தான். நேரடியான உரையாடல்களை அப்படியே சொன்ன அர்த்தத்தில் புரிந்து கொண்டு படித்தால் போதாதா?// அய்யா அமரபாரதி அவர்களே பூட்டு உங்க கிட்டதான் இருக்கு
//அந்தச் சாவியைக் கொண்டு கதவை திறக்க வேண்டியது மட்டுமே வாசகனின்/வாசகியின் வேலை. அப்படி அவன்/ள் திறக்கும்பட்சத்தில் விரிவது 7 கடல்கள், 7 மலைகள் தாண்டி மறைந்திருக்கும் வாழ்க்கையின் ரகசியம்.//

மகேந்திரன்.பெ said…
yes answer his (kusumban) kostinu ..

பைத்தியக்காரன் said…
அன்பின் அமரபாரதி, மண்டை குழம்புவதற்காக எந்தப் பிரதியும் எழுதப்படுவதில்லை. பிரதி விரிக்கும் நூலை பிடித்து இழுத்துக் கொண்டே செல்கையில் ஒவ்வொருவருக்குள் இருக்கும் சிடுக்கு, வன்மம், அன்பு, நெகிழ்ச்சி ஆகிய பல ஊற்றுகளை கண்டடையலாம். ஒருவேளை வாழ்க்கைப் புதிருக்கு அதில் விடையும் கிடைக்கலாம்.

அன்பின் குசும்பன், நீங்கள் அனுப்பிய 15 பைசா அக்னாலெஜ்மெண்ட் கார்ட்டு இன்னும் வந்து சேரவில்லை. சேர்ந்ததும் பதில் அனுப்புகிறேன் 🙂

அன்பின் தாமோதர் சந்துரு, வருகைக்கும், நண்பர் அமரபாரதிக்கு பதில் சொன்னததற்கும் நன்றி.

அன்பின் மகேந்திரன்.பெ, பிரியத்துகுரிய குசும்பனுக்கு பதில் சொல்லிவிட்டேன்…

தோழமையுடன்
பைத்தியக்காரன்

அனுஜன்யா said…
அந்த இரண்டு கதைகளையும் படித்து இருக்கிறேன். எஸ்ராவின் எழுத்து மிகப் பிடிக்கும் என்பதால், அந்த கதைகளை மறக்க வில்லை. கூடுதலாக ‘எல்லா நாட்களையும் போல’, மற்றும் ‘இந்த நகரிலும் பறவைகள் இருக்கின்றன’ என்னும் இரு சிறுகதைகளும், ‘இல்மொழி’ என்னும் குறுங்கதையும் நினைவில் தங்கிவிட்டவை. நல்ல பகிர்வு சிவா.

அவரே தனது சிறந்த சிறுகதைகளில் ‘தாவரங்களின் உரையாடல்’ மற்றும் ‘புலிக்கட்டம்’ என்ற இரு சிறுகதைகளைக் குறிப்பிட்டு இருந்ததாக ஞாபகம். இரண்டுமே இன்னும் படிக்க வாய்க்கவில்லை.

அனுஜன்யா

சங்கர் said…
அண்ணா, இதுவரை எஸ்ராவின் சிறுகதைகளை அதிகம் படித்ததில்லை, அவரின் விகடன் கட்டுரை தொடர்களின் ரசிகனாகத்தான் இதுவரை இருந்து வருகிறேன், உங்கள் விவரிப்பை படிக்கும் போது, புத்தக காட்சியில் வாங்கத் தவறிவிட்டேனோ என்று எண்ணத் தோன்றுகிறது, நன்றி,

முதல் வாசிப்பில், இது எஸ்ராவின் கதாவிலாசத்தின் தொடர்ச்சியோ, என்று தான் எனக்கு தோன்றியது

Starjan ( ஸ்டார்ஜன் ) said…
நல்ல பகிர்வு ………

சிவராமன் நான் எஸ்ராவின் புத்தகங்கள் வாசிப்பேன் .

நல்ல விமர்சனம் எழுதியிருக்கீங்க

அன்புடன் அருணா said…
நல்ல பகிர்வு நன்றி!

குப்பன்.யாஹூ said…
மிக அருமையான பதிவு.

இதே போல எஸ் ராவின் ஒரு சிறுகதை உண்டு (தலைப்பு மறந்து விட்டேன், இருக்கன்குடி கோவிலில் மொட்டை அடிக்கும் ஒரு பெண் பற்றிய கதை,

ஜனவரி 11, 2010 10:06 PM
அமர பாரதி said…
சந்துரு அண்ணா,

////அந்தச் சாவியைக் கொண்டு கதவை திறக்க வேண்டியது மட்டுமே வாசகனின்/வாசகியின் வேலை. அப்படி அவன்/ள் திறக்கும்பட்சத்தில் விரிவது 7 கடல்கள், 7 மலைகள் தாண்டி மறைந்திருக்கும் வாழ்க்கையின் ரகசியம்.////

என்னமோ போங்க. எனக்கு ஒன்னும் புரியல. எதுக்கு இவ்வளவு சிரமப்படனும். எழுதியிருக்கறத படிச்சுட்டு நேரடியான அர்த்தம் புரிஞ்சா போதாதா?

ஜனவரி 11, 2010 10:18 PM
மாதவராஜ் said…
எஸ்.ராமகிருஷ்ணனின் முதல் சிறுகதைத் தொகுப்பை வாசித்து, அதன் நுட்பமான மனிதவெளிக்குள்ளிருந்து மீளமுடியாமல் இருந்திருக்கிறேன். வாழ்வை இத்தனை இரத்தமும், நரம்புகளுமாய் இவரால் சொல்ல முடிந்திருக்கிறதே என பிரமித்திருக்கிறேன். பின்பு கோணங்கியின் பரிச்சயம் ஏற்பட்டு வாசிப்பிலும், மொழியின் அடர்த்தியிலும் தன்னை பரிசோதித்துப் பார்த்து, கபாடபுரம், தாவரங்களின் உரையாடல் என பலவாறு கதைசொல்லிப் பார்த்து, மீண்டும் ஒரு குளவி போல தன் கூடு கண்டிருக்கிறார் எஸ்.ராமகிருஷணன்.

அவரது எத்தனை எழுத்துக்களைப் படித்தாலும், ’உறவும், பிரிவும் இன்றி’ என் ஞாபக அடுக்குகளில் எப்போதும் மேலே மிதந்து கொண்டே இருக்கிறது. அடேயப்பா!

பகிர்ந்தமைக்கு நன்றி தோழர்!

ஜனவரி 11, 2010 11:39 PM
நேசமித்ரன் said…
மிக நுட்பமான பார்வை

வாசகபர்வம்
உபபாண்டவம் வாசிக்க கிடைத்தது

இம்முறை தொகுப்பு வாங்கி வர வேண்டும் இந்தியாவிலிருந்து வரும்போது….

வாசகனுக்கான வெளியை உருவாக்கும் சொற்கள் வாய்த்திருக்கிறது அவரின் கதைகளுக்கு

வாசக பார்வை.. உள்ளங்கையில் ஊற்றி ருசி பார்க்கும் கரம்

ஜனவரி 12, 2010 12:21
பைத்தியக்காரன் said…
அன்பின் அனு, வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி. அடுத்த முறை சென்னை வருகையில் சொல்லுங்கள். எஸ்ரா கதைகள் தொகுப்பை அன்பளிப்பாக தருகிறேன்.

அன்பின் சங்கர், ஸ்டார்ஜன், அன்புடன் அருணா, குப்பன் யாஹு, வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி.

அன்பின் மாதவராஜ், முதலில் வாழ்த்துகள். பதிவர்களின் படைப்புகளை நூலாக நீங்களும் பவாவும் அருமையாக கொண்டு வந்திருக்கிறீர்கள். பக்கத்துக்கு பக்கம் உங்கள் உழைப்பு தெரிகிறது என்பதைவிட, பதிவர்கள் மீது நீங்கள் கொண்டுள்ள அன்பு நிரம்பி வழிகிறது என்று சொல்வது மிகப் பொருத்தமாக இருக்கும். தனி இடுகையாக, விரிவாக இதுகுறித்து எழுதப் போகிறேன். எஸ்ரா சிறுகதைகள் குறித்து நீங்கள் பகிர்ந்திருக்கும் விதம், அருமை.

அன்பின் நேசமித்ரன், வருகைக்கும், நெகிழ்ச்சியான பின்னூட்டத்துக்கும் நன்றி.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

ஜனவரி 12, 2010 9:44
KaveriGanesh said…
பதிவர் சந்திப்பும், புத்தகக் கண்காட்சியும் PART 2

http://www.kaveriganesh.blogspot.com

ஜனவரி 12, 2010 9:56
நிலாரசிகன் said…
அற்புதமான இடுகை அண்ணா. 2008ல் எஸ்.ரா எழுதிய இந்த நகரிலும் பறவைகள் இருக்கின்றன,விசித்திரி கதைகள் தரும் அனுபவம் அலாதியானது. தொடர்ந்து எழுதுங்கள் 🙂

ஜனவரி 12, 2010 10:15
rama said…
இந்த பின்னூட்டம் “சார், ஆமா சார்”, “எஸ்ராமகிருஷ்ணன் ராக்ஸ்”, “எனக்கும் பிடிக்கும் சார்”, “எங்களுக்கும் உங்களுக்கும் ஒரே மாதிரி டேஸ்ட்…ஹி ஹி ஹி” என்பது போன்ற சடங்கான வார்த்தைகளாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் அவரை சில ஆண்டுகளுக்கு முன்தான் படிக்க ஆரம்பித்தேன். முதலில் படிக்கும் பொது அவர் செய்யும் சொற்களின் கோர்வை என்னை வசப்படுத்தியது. பின்னர் அவர் தரும் புதிய இத்தியாதிகள் உபயோகமாய் இருந்தன. பின்னர் அவரை படிக்கும் போது ஒரு சலிப்பு உருவாகிறது. ஏதோ ஒரு சலிப்பு என்று சொல்லி தப்பித்து கொள்ள மாட்டேன். காரணமான சலிப்புதான். அவர் திரும்ப திரும்ப உபயோகிக்கும் சொற்கள், எடுத்து காட்டாக, “வெயில்”, “சொற்களற்ற அமைதி”, “ஒரு விதமான”, “தனித்து”, “காரணம் என்ற”, “அவன் போய் கொண்டே இருந்தான்”, “சொற்கள் இல்லாத வெளி”, “அப்படி தானே முடியும்”, “நாமும் அப்படிதானே”, “நிழல்கள் அவ்வழியே” இது போன்ற கவித்துவமான வரிகள் பல அவரது கட்டுரையில் வந்து கொண்டே இருக்கிறது. ஒரு வேளை சுஜாதா ஸ்டைல் போல் எஸ்ராமகிருஷ்ணன் ஸ்டைலோ என்னவோ. ஆனாலும் அவரது எழுத்துகளை தவறாமல் வசிக்கிறேன். இன்னுமொரு உண்மையை சொல்ல வேண்டும் என்றால் சலிப்புடன் தான் வசிக்கிறேன் அவர் தரும் புதிய செய்திகளுக்காக.

ஜனவரி 12, 2010 10:36
செ.சரவணக்குமார் said…
எஸ்.ராவின் கதைகளை நீங்கள் அணுகியிருந்த விதம் மிகப் பிடித்திருக்கிறது. ‘சௌந்தரவல்லியின் மீசை’ என்றொரு சிறுகதை விகடனில் வந்ததாக நினைவு. ஒரு சிறுகதைக்கான அத்தனை அழகியலையும் கொண்டிருக்கும். எஸ்.ராவின் மொத்த சிறுகதைகள் அடங்கிய தொகுப்பை இன்னும் வாசிக்கவில்லை. உங்கள் பகிர்வு வாசிக்கும் ஆவலைத் தூண்டுகிறது.
நல்ல பகிர்வுக்கு நன்றி

ஜனவரி 12, 2010 10:39
நந்தவேரன் said…
நிகழ் களத்தில் அழுந்திக் காலூன்றுவதுதான் எஸ்ராவின் தனிச்சிறப்பு.

சிறுமி வாங்கிய கடன் விவரங்களை, குடும்பம் காலி செய்துவிட்டுப்போன அறை சுவற்றில் நாம் படித்திருக்கிறோம்.

எங்கோ வடகிழக்கு மூலை மாநிலத்தில் உள்ள ஏரியின் கண்கள், நம்மை உற்று நோக்குவதை நாம் உணர்ந்திருக்கிறோம்.

நிகழ் களத்தில் நம்மையும் அழுந்திக் காலூன்ற வைப்பதுதுதான் எஸ்ராவின் தனிச்சிறப்பு.

ஜனவரி 12, 2010 10:52
அமிர்தவர்ஷினி அம்மா said…
நுட்பமான வாசிப்பின் ஆழத்தை எஸ்.ராவின் சிறுகதைகள் வாயிலாக அறியத்தந்தமைக்கு மிகவும் நன்றி.

ஜனவரி 12, 2010 11:47
பைத்தியக்காரன் said…
அன்பின் காவேரி கணேஷ், நிலாரசிகன், செ.சரவணக்குமார், நந்தவேரன், அமித்து அம்மா… வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி.

அன்பின் rama, நேர்மையான உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி. எஸ்ரா எழுத்துக்கள் ஒரு வாசகனாக எனக்கு சலிப்பை தரவில்லை என்பதை இங்கு பதிவு செய்வது என் கடமை.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

ஜனவரி 12, 2010 12:11 PM
நட்புடன் ஜமால் said…
இதை படிக்க துவங்கியதிலிருந்து ஒரு நண்பர் பிங்கிகிட்டே இருக்கார்.

படிச்சி முடிச்சிட்டேன், முதன் வேலையா அவருக்கு சுட்டி குடுத்துட்டேன் – சரி அவரும் படிக்கட்டும் அவரை நான் ஏன் பிங்கனும்.

ஜனவரி 12, 2010 12:12 PM
நட்புடன் ஜமால் said…
வெகு சமீபத்தில் எஸ்.ராவின் வாசகரானேன்.

விமர்சிக்கும் அளவுக்கு தெளிவில்லை

உங்கள் பார்வை இரசிக்கும்படியாக …

ஜனவரி 12, 2010 12:21 PM
rajasundararajan said…
நீங்கள் எடுத்துக் காட்டியிருக்கும் இரண்டு கதைகளையும் வாசித்து இருக்கிறேன். உங்கள் வாசிப்பு உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய ஒன்று. இப்படியே எழுதிக் காட்டுங்கள், எங்களுக்குப் புரியாத செய்திகளும் செய்நேர்த்திகளும் புரியட்டும்.

எஸ்.ரா. எடுத்து எழுதுகிற சூழ்நிலைச் சிக்கல் அவருடைய ஓரொரு கதையையும் வாசிக்கையில் என்னை வியப்பில் ஆழ்த்தும். உலகின் சிறந்த எழுத்தாளர்கள் தம் படைப்புகளில் வருவதற்கு நிகரான வாழ்க்கைச் சிக்கல்களைக் கண்டு புனைகிறார்.

ஆனால் மொழிநடையில் அவருக்கு சற்று கவனக் குறைவு உண்டோ என்று நான் எண்ணுவதுண்டு. (‘எறும்பு ஊர்வது மாதிரி கையெழுத்து’ என்கிற சொல்லாடலை, எடுத்துக் காட்டாக, இரண்டு மூன்று கதைகளில் வாசித்துவிட்டேன்). அல்லது அவருக்கு வந்து முட்டும் கருத்துகளின் பெருக்கத்தை அணைகட்டித் தருகிற அளவுக்கு மொழிவல்லமையை வளர்த்துக் கொள்வதில் அக்கறையற்று இருக்கிறாரோ? ‘Effect’க்காக எழுதப்படுவது நல்ல எழுத்தன்று என்று நானும், ஹிட்ச்காக் படங்களைப் பார்ப்பது வரை, கொள்கை கொண்டிருந்தேன். எஸ்.ரா. தனது தளத்தில் ‘Story of sign’என்றொரு குறும்படத்தைப் பரிந்து இட்டிருக்கிறார். அதற்கு நன்றி, ஆனால் அவருக்கே அதைப் பரிந்துரைக்கக் கூச்சமாக இருக்காதா? அவர் craftsman-ஓ இல்லையோ ஐயமில்லாமல் ஒரு கலைஞன்.

அது யார் rama? சென்ற பதிவின் பின்னூட்டத்திலும் அவர் கவனம் கவனிக்கப்படும்படியாக இருந்தது.

– ராஜசுந்தரராஜன்

ஜனவரி 12, 2010 8:28 PM
ROSAVASANTH said…
அன்புள்ள பைத்தியக்காரன்,

உறவும் பிரிவும் இன்றி ஏற்கனவே வாசித்திருக்கிறேன். உங்கள் பதிவு கண்ட பிறகு, மீண்டும் வாசித்து, பின் ̀தெரிந்தவர்களையும்’ வாசித்தேன். 80களின் பல கதை சொல்லல்கள் நம் மனதுக்கு மிகவும் நெருக்கமானவை. வண்ண நிலவன், வண்ணதாசனை படித்து நெகிழ்ந்திருக்கிறோம். அந்தவகையில் எனக்கு வண்ண நிலவனின் கதை வாசிப்பனுபவம் போல இந்த இரண்டு கதைகளும் இருந்தன. (வண்ணதாசனின் தளம் வேறு.) ஆனால் நீங்கள் முன்வைக்கும் தன்மைகள் கதைக்கு இருக்கின்றனவா என்று எனக்கு மிகவும் சந்தேகமாக உள்ளது.

இரண்டு கதைகளும் தட்டையான மொழியில், ஒற்றை பரிமாணத்தில்தான் உள்ளன. அதை குறையாக நான் சொல்லவில்லை. ஆனால் நீங்கள் சொல்வது போல இரு சிறுகதைகளும் ஒரு நாவலை உள்ளடக்கியதாக எனக்கு தோன்றவில்லை. சிறுகதைகளை முன்வைத்து நீங்கள் உங்கள் வாசிப்பை விரிப்பது உங்கள் அக உலகம் சம்பந்தப்பட்டது. அதை நீங்கள் எழுதுவது சுவாரசியமாக இருக்கலாம். ஆனால் அது உங்கள் வாசிப்பு மட்டுமே. இது பல கதைகளுக்கு (வண்ண நிலவனின் கதைகளுக்கும்) சாத்தியமாகலாம். ஆனல் எஸ்ரா அப்படி பல நுட்பங்களை உள்ளடக்கி, மௌனத்தை கிளை கதைகளாக மாற்றியதாக, இந்த கதைகளில் எனக்கு தோன்றவில்லை.

̀கடன்’ என்ற கருப்பொருளை புதுமைப்பித்தன் தொடங்கி பலர் கையாண்ட விதம் பற்றிய உங்கள் பார்வையை எழுதினால் சுவாரசியமாக இருக்கும்.

ஜனவரி 12, 2010 11:58 PM
பைத்தியக்காரன் said…
அன்பின் நட்புடன் ஜமால், வருகைக்கும், பின்னூட்டத்துக்கும் நன்றி.

அன்பின் மகாகவி, தங்கள் வருகையும் அவதானிப்பும் அருமை. //உலகின் சிறந்த எழுத்தாளர்கள் தம் படைப்புகளில் வருவதற்கு நிகரான வாழ்க்கைச் சிக்கல்களைக் கண்டு புனைகிறார்.// என்பது உண்மை. மொழிநடை குறித்த உங்கள் விமர்சனத்தை, நிச்சயம் எஸ்ரா கவனத்தில் கொள்வார்.

அன்பின் ரோசா, சட்டென நூலை பிடித்துவிட்டீர்கள். ஆரம்பக்கால எஸ்ரா சிறுகதைகளில் வண்ணநிலவனின் பாதிப்பு உண்டு. பிறகு உலக இலக்கியங்களை வாசிக்க ஆரம்பித்து அந்த பாதிப்பிலிருந்து விலகினார்.

எஸ்ரா சிறுகதைகள் எழுதப்படாத நாவலை சொல்வதாக எனக்கு தோன்றியது. அந்த வாசக அனுபவத்தையே இடுகையாக்கினேன்.

//̀கடன்’ என்ற கருப்பொருளை புதுமைப்பித்தன் தொடங்கி பலர் கையாண்ட விதம் பற்றிய உங்கள் பார்வையை எழுதினால் சுவாரசியமாக இருக்கும்.// முயற்சிக்கிறேன் ரோசா.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

ஜனவரி 13, 2010 10:44
rajasundararajan said…
என்னங்க நடக்குது நாட்ல? இதுக்கு முந்தின பதிவிலேயே வந்திட்டேனுங்க. ஆனா உங்க selected amnesia பிடிச்சிருக்குங்க. மகாகவியெல்லாம் வேண்டாமுங்க உங்க வாசகனா இருகிறதுக்கு அனுமதி கொடுங்க, போதும்.

ஜனவரி 13, 2010 2:59 PM

Tamil Author S Ramakrishnan on why we write Essays in Magazines and Fiction Novels?

June 15, 2012 1 comment

எழுதுவது ஏன்

நாள் : 10/16/2004 1:06:51 PM,

இத்தாலிய யூத எழுத்தாளரான பிரைமோ லெவி (primo levi) நாஜிகளின் சித்ரவதைக்கு உள்ளான எழுத்தாளர். ஆஸ்விட்ஸ் முகாமில் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்ட அவர் தனது வேதியல் அறிவின் காரணமாக நாஜிமுகாமில் சாவிலிருந்து தப்பினார். வேதியல் பேராசிரியரான அவர் குறிப்பிடத்தக்க நாவல்களையும் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். அவரது கட்டுரைகளில் மிகவும் பிரசித்திபெற்றது எழுதுவது ஏன் என்ற கேள்விக்கு லெவி தந்த பதில்.

எழுதுவதற்கு ஒன்பது காரணங்கள் இருக்ககூடும் என்று வரையறுக்கும் பிரைமோ லெவி அதைப்பற்றி விரிவாக விளக்குகிறார்

1) எழுதுவதற்கான அவசியத்தையும் உந்துதலையும் உணர்வதால்.

தனக்குள்ளிருந்து தன்னை யாரோ எழுதும்படியாக வற்புறுத்துவது போல ஒருவன் அடையும் நிலையில் தான் இந்த வகை எழுத்து உருவாகிறது. மிதமிஞ்சிய வேதனையை. தனிமையை பகிர்ந்து கொள்வதற்கு யாருமற்ற நிலையில் கதையோ, கவிதையோ எழுதுவது உருவாகிறது. பெரும்பான்மையான எழுத்தாளர்கள் இந்த வகையில் தான் துவங்குகிறார்கள்.

2) தன்னையும் மற்றவர்களையும் மகிழ்விக்க.

மிகச்சிறந்த இலக்கியவாதிகள் இந்த வகையைச் சேர்ந்தவர்களே. அவர்கள் தொழில்முறை எழுத்தாளர்கள் அல்ல. வாழ்வின் ஞானமும், சரளத்தன்மையும், அன்பையும் வெளிப்படுத்தவே அவர்கள் எழுதுகிறார்கள். தங்களது அனுபவங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதற்கு சந்தோஷமாக முன்வருகிறார்கள். வாசிப்பவனும் எழுத்தாளனைப் போலவே அந்த அனுபவத்தை துய்த்து உணருகிறான். உதாரணத்திற்கு லு¡யி கரோல் எழுதிய ஆலிஸின் அற்புத உலகம் அவரை சந்தோஷப்படுத்தியதோடு நு¡ற்றாண்டுகளாக குழந்தைகளை, பெரியவர்களைச் சந்தோஷப்படுத்திவருகிறது. இந்த வகை எழுத்து எதையும் போதிப்பதோ, கட்டாயப்படுத்துவதோ இல்லை.

3) யாருக்காவது எதையாவது கற்றுக் கொடுக்க

விற்பன்னர்களும், அறிஞர்களும் இந்த வகையைச் சேர்ந்தவர்களே. அவர்கள் வாசகனை தங்களை விடவும் அறிவில் குறைந்தவன் என்ற கருத்தில் தான் எழுதுகிறார்கள். அது சமையற்கலையாக இருந்தாலும் அணுவிஞ்ஞானமாக இருந்தாலும் நோக்கம் ஒன்றுதான்.

இந்த வகை எழுத்தில் எழுத்தாளனின் விருப்பம் நிறைவேறுவது அவனது அறிவின் திறன் அளவில் தான் சாத்தியமாகிறது. பலநேரங்களில் அதுவே படிக்கமுடியாமலும் செய்துவிடுகிறது. எளிமையும், ஆழ்ந்த அறிவும், விளக்கி சொல்லும் திறன்மிக்க மொழியும் ஒன்று சேர்ந்து எழுத்து உருவானால் அப்போது வாசகன் கற்றுக்கொள்வதோடு நல்ல கலைப்படைப்பை வாசித்த அனுபவத்தையும் பெறுகிறான்.

4) தன் கருத்துக்களை தெரியப்படுத்த

இந்த வகை எழுத்தாளர்கள் தாங்கள் தனித்துவமானவர்கள், ஞானம்பெற்றவர்கள், அதிக அறிவுதிறன் கொண்டவர்கள் என்று தங்களை நம்பக் கூடியவர்கள். உலகில் தங்களுக்கு மட்டுமே சில அரிய கருத்துகள் மனதில் உதயமாகியுள்ளதாக நம்புகிறவர்கள். தத்துவத்திலும் அரசியலிலும் விருப்பம் கொண்டவர்களே இந்தவகை எழுத்தில் அதிகம். இந்த வகை எழுத்தில் ஒரிஜினாலிடி மிக அரிதாகவேயிருக்கிறது.

5) வேதனையிலிருந்து விடுதலை அடைய

பிரச்சனைகளை நேரிடையாக சந்திக்க முடியாமலும், ஆறுதல் தேடுவதற்கு வழியற்றும், எழுதுவது ஒரு பாவமன்னிப்பு கோருதல் போல என நம்புகிறவர்களே இந்த வகை எழுத்தாளர்கள். ஆனால் எழுத்தாளனின் வேதனைகளை வாசகனின் மீது திணிப்பதும் பலநேரங்களில் தவறானதாகிவிடுகிறது. அது தானும் விடுதலை அடையமுடியாமல் வாசிப்பவனையும் நரகத்தில் தள்ளிவிடும்

6) புகழ்பெற

ஒரு பைத்தியக்காரன் தான் புகழ்பெறுவதற்கென்றே எழுத முயற்சிப்பான். காரணம் எழுதிப் புகழ்பெறுவது எளிதான காரியமில்லை. எல்லா எழுத்தாளர்களுக்கும் மனதில் தனக்குப் பெரிய புகழ் கிடைக்கவேண்டும் என்ற ஆசையிருக்கதான் செய்கிறது . ஆனால் அதற்காக யாராவது எழுதத் துவங்கினால் அந்த எழுத்து நிச்சயமற்ற பலனைத் தான் உருவாக்கும்

7) பணக்காரன் ஆக

சம்பாதிக்க, கடனை அடைக்க, வசதியாக வாழ என பலகாரணங்களுக்காக எழுதுபவர்கள் பலரிருக்கிறார்கள். உபயோகமான எந்த விஷயத்திற்கும் வழங்கபடுவது போல தான் எழுத்திற்கும் சன்மானம் வழங்கப்படுகிறது. ஆனால் பணத்துக்காக மட்டும் எழுதுவது ஆபத்தானது. அது மலிவான பாதைக்கு அழைத்துச் சென்றுவிடும்

8) உலகை செம்மைபடுத்த

இந்தவகை எழுத்தாளர்கள் உலகம் தங்களால் தான் காப்பாற்றப் படப் போகிறது என்று நம்புகிறவர்கள். மேலும் உலகைப் பற்றி தங்களுக்கு முழுமையாகத் தெரியும் என்று நம்புகிறவர்கள்.ஹிட்லர் மெயின்கேம்ப் எழுதியது கூட இந்த வகை ஈடுபாட்டில் உருவானது தான்.

9) பழக்கத்தின் காரணமாக.

இது தன்னைத் தானே காப்பிசெய்து கொள்வது போன்ற எழுத்து ரகம். தன்பெயரைத் தொடர்ந்து அச்சில் பார்ப்பது ஒரு நோக்கமாக இருக்க கூடும். மற்றவகையில் வெறுமனே பழக்கம் காரணமாக மட்டும் ஒருவர் தொடர்ந்து எழுதுவதை விடவும் மெளனமாக எதையும் எழுதாமலிருப்பது அவருக்கும் நல்லது, வாசகர்களுக்கும் நல்லது. .

லெவியை வாசித்த போது தமிழில் இந்த ஒன்பது வகைக்கும் அப்பாலும் நிறைய பிரிவுகள் இருப்பதை உணரமுடிகிறது. எனக்குத் தெரிந்த சில காரணங்கள்

1) அடுத்தவர் எழுதுகிறாரே என்று எழுதுவது.

அநேகமாக எனக்கு தெரிந்த பலரும் சொன்ன முதல்காரணம் இது தான். அதைப் பொறாமை என்று மட்டும் முடிவுசெய்து கொண்டுவிட முடியாது. நு¡ற்றுக்கும் மேற்பட்ட நுட்பமான காரணங்களிருக்கின்றன. சில புத்தகங்களை வாசித்து முடித்தவுடன் எழுதுவது என்றால் இவ்வளவுதானா? இது என்ன மாயவித்தையா என தோன்றுவதும் காரணமாகயிருக்கலாம்

2) பெண்நண்பர்கள் பெறுவதற்கு

இருபது வயதில் அதிகமாக எழுதும் ஆசை வருவதற்கு இதுவே முக்கிய காரணம். ஆனால் இந்த வகை எழுத்தாளர்களை பெண்கள் ஏறிட்டுக் கூடப் பார்ப்பதில்லை என்பது நிதர்சனம்

3)அலுவலக ஊழியர்களிடம் தனித்து காட்ட, பாராட்டு பெற

தனது அலுவலகத்தில் உள்ள மேலதிகரிகள் பாராட்டு பெறுவதற்கும், தான் அறிவுஜீவி என்று தனித்து காட்டுவதற்கும் எழுதும் கூட்டம் நிறைய இருக்கிறது. அவர்கள் யாராவது ஒய்வு பெறும் நாளில் கவிதை எழுதி அதை பரிசாக தந்து அனுப்பிவிடக்கூடியவர்கள்.

4) பதவி உயர்விற்காக எழுதுவது.

பேராசிரியர்கள், ஆய்வுமாணவர்கள் மற்றும் துறைவல்லுனர்கள் தங்களது பதவி உயர்விற்காக எழுதுகிறார்கள். நு¡லகத்தில் பாதி இந்த வகை எழுத்துகள் தான்.கையில் பேனாவும் சிந்தனையுமாக புகைப்படம் எடுத்துக் கொள்வது அவர்களின் தனித்துவம்.

5) சினிமாவிற்குள் நுழைவதற்கு

சினிமாவிற்குள் நுழைவதற்கு விசிட்டிங் கார்டு போல பயன்படுவதற்கு கவிதைத் தொகுப்புகள் வெளியிடுதல் அல்லது சிறுகதைகள் எழுதுதல் அதிகம்.. சென்னையில், கர்சீப் வைத்திருப்பது போல பாக்கெட்டில் கவிதை நோட்டுவைத்திருப்பவர்களை கோடம்பாக்கத்தில் எங்கே வேண்டுமானாலும் பார்க்கலாம்

6) சென்னைக்கு ஒடிவந்தபிறகு வாழ்வதற்கு என்ன செய்ய என்று எழுதுவது.

ஏதோவொரு காரணத்தால் சென்னைக்கு ஒடிவந்த பிறகு பிழைப்பிற்காக பத்திரிக்கைகளிலோ, பதிப்பகங்களுக்கோ எதையாவது எழுதி தருவது. முப்பது நாட்களில் நீச்சல் கற்றுத்தருவது, சைனீஸ் சமையற்கலை, ஆவியுலகம் ஒரு நேரடி அனுபவம் என ஏதாவது ஒரு தலைப்பில் 250 பக்க புத்தகம் எழுதி தருவதற்கு 175 ரூபாய் தருகிறார் தாராளமனதுடைய தமிழ்பதிப்பகத்தார்.

7) ஒய்வு பெற்ற பிறகு ஏதாவது செய்யவேண்டுமென என்று

ஒய்வு பெற்றபிறகு தமிழ் மொழி மீதும், தமிழ் மக்கள் மீதும் அளவுகடந்த ஆர்வம் உருவாகி அவர்களுக்கு சேவை செய்வதற்காக திருக்குறள், சங்கஇலக்கியம் துவங்கி எதையாவது பற்றி எழுதுவது. அதை தானே தனது பேத்தி பேரன் பெயரில் பதிப்பகம் துவங்கி வெளியிட்டு தன்வீட்டிற்கு வரும் உறவினர்களுக்கு தவறாமல் தருவது. சுதந்திர தினத்தன்று காலனியில் சொற்பொழிவு ஆற்றுவது இந்த ரகம்

8) பிரபலமானதை உறுதி செய்து கொள்வதற்கு எழுதுவது

தான் ஏதாவது ஒரு துறையில் பிரபலமாகிவிட்டால் அந்த பிரபலத்தின் காரணமாக மற்றவர்களுக்கு தனது அரிய சிந்தனைகளை, அறிவுதுளிகளை, கற்பனையை பகிர்ந்து கொள்வது. இந்த வியாதி அரசியல்வாதிகளுக்கு அதிகம். அது போலவே பிரபலமான வணிகநிறுவனங்களின் உரிமையாளர்கள் தங்கள் பிரபல்யத்தை புத்தகம் எழுதிதான் வெளிக்காட்டிக் கொள்கிறார்கள். பிரபலமான ஒரு ஸ்வீட் ஸ்டால் உரிமையாளர் எழுதிய திருக்குறள் உரை அங்கு வாங்கும் அல்வா மைசூர்பாகு மிக்சர் எது கால்கிலோ வாங்கினாலும் இலவசமாகத் தரப்படுகிறது. ஆன்மீகத்தில் நீங்கள் பிரபலமாகி விட்டால் புத்தகம் எழுதி அண்ணாநகரில் பிளாட்பிளாட்டாக வாங்கிப் போட்டுவிடலாம் என்று பஞ்சபட்சி ஜோதிடம் சொல்கிறது.

9) வீட்டில் பகலில் சும்மா இருப்பதால்

பெரும்பான்மை குடும்பதலைவிகள் எழுத்தாளராவது இந்த காரணத்தால் தான். கூடை பின்னுவது தோட்டம் போடுவது, அலங்கார பொருட்கள் செய்வது போலவே கவிதை செய்வது கதைகள் செய்வது என்று தங்கள் நேரத்தை பயனுள்ளதாக கழிக்கிறார்கள்.

10) எதற்கு என்றே தெரியாமலிருப்பது

தான் எதற்கு எழுதுகிறோம் என்றே தெரியாமலிருப்பவர்கள் தமிழில் ஏராளம். அது போன்ற ஒரு கேள்விளை சந்திக்கும் போது தான் இப்படியொரு கேள்வி இருப்பதே அவர்களுக்கு தெரியவரும். வாசகர்களை போலவே எழுத்தாளரும் பதிலை தேடிக்கொண்டே தானிருக்கிறார்கள்.

இது போல இன்னமும் பல 100 காரணங்களிருக்க கூடும். விருப்பமிருந்தால் தெரியப்படுத்துங்களேன்.

Kumudham Theeranadhy Interview with Writer Ess Ramakrishnan by Thalavaai Sundharam

June 15, 2012 1 comment

வாழ்வது என்பதே ஒரு மாயம் தான்.

சந்திப்பு . தளவாய் சுந்தரம்

தீராநதி பிப்ரவரி 2005 இதழில் எனது நேர்முகம் வெளியாகியிருக்கிறது. அப்பேட்டியின் சில பகுதிகள் அவர்களால் வெளியிடப்படவில்லை. இணைய வாசகர்களுக்காக முழுமையான நேர்முகம் பிரசுரிக்கப்படுகிறது. இலக்கியம் மற்றும் எனது வாழ்க்கை குறிப்புகள் சார்ந்த கேள்விகள் அடங்கிய எனது நேர்முகம் முன்னதாக காலச்சுவடு இதழிலும் ஆறாம் திணை இணைய இதழிலும் குமுதம் இலக்கியமலரிலும் வெளியாகியிருக்கின்றன. ஆகவே அக்கேள்விகள் இந்த சந்திப்பில் இடம் பெறவில்லை.

1) புதுவகை எழுத்துகள் ஒரு போக்காக தமிழில் அறிமுகமான காலகட்டத்தில் அந்த வகை எழுத்துக்களை முன்வைத்தவர்களில் நீங்களும் ஒருவர். அப்போது யதார்த்தவாதம் முடிந்துவிட்டது கதை யம்சம் தேவையில்லை என்பது போன்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டன ஆனால் அப்போதும் புதுமுயற்சிகளை செய்தவர்களில் நீங்கள் மட்டும் கதையம்சம் கொண்ட கதைகளை எழுதி வந்தீர்கள். அது சார்ந்து குறிப்பாக அப்போது நடைபெற்ற விவாதங்களை நீங்கள் எப்படி எதிர்கொண்டீர்கள்.?

யதார்த்தவாதம் என்ற பெயரில் சுயஅனுபவத்தை எழுதுவது மட்டுமே கதை என்று கூக்குரலிட்டுக் கொண்டுஒருசாராரும், மறுபக்கம் லட்சியவாத கோட்பாடுகளுக்கு ஏற்றபடி கதையை தைத்துக் கொடுக்கும் சீர்திருத்த கதாசியர்களுக்கும் இடையில் கதைகள் என்பது ஒரு புனைவு என்று சொன்னவர்களில் நானும் ஒருவன். அது ஒன்றும் எனது கண்டுபிடிப்பல்ல. கதைகள் புனைவு என்பது யாவரும் அறிந்த உண்மை தான். ஆனால் புனைவு என்பதை பொய் என்று புரிந்து வைத்திருப்பதை நான் மறுத்தேன். கற்பனை என்பது உண்மைக்கு எதிரானதல்ல. உண்மையை புரிந்து கொள்வதற்கும் வெளிப்படுத்துவதற்குமான சாத்தியபாடு என்று கூறினேன்.

யதார்த்தம் என்பதும் ஒரு புனைவே. அதை முன் முடிவுசெய்யப்பட்ட புனைவாக சொல்லலாம். கடந்த காலங்களில் யதார்த்தத்தை தட்டையான ஒற்றைப் பரிமாணமுள்ளதாக மட்டுமே புரிந்து கொண்டிருக்கிறார்கள். உண்மையில் யதார்த்தம் பலதளங்களை உடையது. அதீதமும் இயல்பும் ஒன்றாக முயங்கிகிடக்கக் கூடியது. காலத்திற்கு காலம் யதார்த்தத்தை பற்றிய புரிதல் தொடர்ந்து மாறிக் கொண்டேதானிருக்கிறது, யதார்த்தம் என்ற பெயல் நடைபெற்று வந்த சலிப்பூட்டும் ஒற்றைதன்மை கதைமுறைகளை மாற்றியமைக்க வேண்டும் என்று தான் பேசியும் எழுதியும் வந்திருக்கிறேன். நம் கதை மரபு ஒற்றைதன்மை வாய்ந்தது அல்ல. அது பன்முகத்தன்மை வாய்ந்தது,

கர்ப்பிணி ஒருத்தி நடந்துவரும் போது அவள் வயிற்றில் உள்ள குழந்தை தன் இருப்பிடத்தில் இருந்து நகரவேயில்லை ஆனால் குழந்தையும் பலமைல் துôரம் கடந்து தானே செல்கிறது. அது யதார்த்தமா, இல்லையா?

2) புதிய கதை எழுத்து இன்று தேக்கநிலை அடைந்துவிட்டிருக்கிறது. மீண்டும் யதார்த்தவாத கதைகள் வரத்துவங்கியுள்ளதே, அந்த மாற்றத்தை எப்படி பார்க்கிறீர்கள் ?

புதிய கதை எழுத்து என்று எதைச் சொல்கிறீர்கள் என தெயவில்லை. நான் புதிய கதை எழுத்து பாரதி புதுமைபித்தனில் துவங்கி மௌனி, நகுலன், முத்துசாமி, ஜி.நாகராஜன், சம்பத், கோபிகிருஷ்ணன், ஜெயமோகன், கோணங்கி, பிரேம் ரமேஷ், உமா வரதராஜன், முத்துலிங்கம். லட்சுமி மணிவண்ணன், காலபைரவன் என நீண்டு தொடர்ந்து வந்து கொண்டேயிருப்பதாகவே நினைக்கிறேன்.

எது யதார்த்தம் என எதாவது வரையறையிருக்கிறதா என்ன? பயன்பாட்டிற்கு உட்படுகின்றவற்றை மட்டுமே நாம் யதார்த்தமாக ஏற்றுக் கொண்டிருக்கிறோம். நம் புலன்கள் தான் யதார்த்தத்தின் வரையறையாயி”ருந்திருக்கிறது. ஆனால் புலன்கள் முழுமையானவையல்ல. அவை குறைபாடானவை என்பதை ஒவ்வொரு மனிதனும் பல சந்தர்ப்பங்களில் உணர்ந்து தானே இருக்கிறான். நம் கால இடப்பிரக்ஞை கூட புனைவு தானே. அதை நாம் அன்றாடம் புழங்கவில்லையா? புனைவை தான் நமது பெயராக சூடியிருக்கிறோம் .நம் உடல்கள் புனைவால் தானே நிரம்பியிருக்கிறது.

புனைவை புரிந்து கொள்வதற்கும் அதனுôடாக உள்ள புனைவடுக்குகளை கண்டறிவதற்கும், உருவாக்குவதற்குமே புதியகதை எழுத்து முயற்சிக்கிறது. அது தமிழில் தொடர்ந்து எழுதப்பட்டு கொண்டு தான் வருகிறது.

கடந்த கால எழுத்தாளர்கள் யதார்த்தத்தை புரிந்து கொள்ளவேயில்லை தங்கள் எழுத்து உண்மையை கண்ணாடி போல பிரதிபலிக்கின்றது என்று அறிவித்துக் கொண்டார்கள்.. ஆனால் கண்ணாடி உருவத்தை இடவலமாக மாற்றி தான் பிரதிபலிக்கும் என்றசாதாரண நிஜத்தை கூட புரிந்து கொள்ளாமல் இருந்தது தான் வேடிக்கையாக இருக்கிறது

3) இதுவரை யதார்த்தவாதமாக நம்பபட்டு வந்தவைகள் தவறானவைகளா?

சொல்லும் மரபிலிருந்து எழுத்து மரபிற்கு கதைகள் மாற்றம் கொண்ட போது கூட கதை மரபுகள் கைவிடப்படவில்லை. தமிழ்சிறுகதையின் ஆரம்ப கால முயற்சிகளில் வெளிப்படையாக இதை காணமுடிகிறது. குறிப்பாக உதிரி மனிதர்களுக்கும், அபௌதீக தளங்களுக்கும், மறுகதைகளுக்கும், இடமிருந்திருக்கிறது.

பாரதி, புதுமைபித்தன் கதைகளில் கதைசொல்லல் தனித்துவமாக தானே இருந்தன. ஆனால் அதன் அடுத்த தலைமுறை எழுத்தாளர்கள் கதையின் மையமாக குடும்பத்தை சுருக்கியதும் அதன் தினப்பாடுகளை பதிவு செய்வது மட்டுமே கதைகளின் வேலை என்று முடிவு செய்து கொண்டு ரேடியோ நாடகங்களை போல வாய்ஒயாமல் பேசும் கதாபாத்திரங்களை எழுதி நிரப்பியது தவறான வழிகாட்டுதலாக படுகிறது. இதன் தொடர்ச்சி அடுத்த பதினைந்து வருடங்களில் சிறுகதைகள் மத்தியதர வர்க்கத்து மனிதர்களின் புலம்பலுக்கும் நிராசைகளுக்கும் உரிய வடிவமாக சுருங்கிப் போய் விட்டது.

கார்க்கி, செகாவ், தஸ்தாயெவ்ஸ்கி, டால்ஸ்டாய் போன்றவர்களின் ருஷ்யசிறுதைகளும் மாப்பசான். பால்சாக் போன்ற பிரெஞ்ச் இலக்கியவாதிகளும் எட்கர்ஆலன் போ, ஜாக் லண்டன், ஸ்டீபன் கிரேன் போன்ற அமெரிக்க சிறுகதையாசியர்களும் தமிழில் அறிமுகப்படுத்தபட்ட போதும் அந்த எழுத்துகளிடமிருந்து தமிழ் எழுத்தாளர்கள் எதையும் கற்றுக் கொள்ளவில்லை என்பது ஆச்சரியமாக தானிருக்கின்றது.

அதே வேளையில் வளமையான சங்ககவிதைகளும் சமணபௌத்த காப்பியங்களும், நுôறுவகை கதை சொல்லல் முறைகொண்ட நாட்டார் கதைகளும், தொன்மங்களும் நம்பிக்கைகளும். கூட தமிழ் சிறுகதையாசியர்களை பாதிக்கவேயில்லை. பின் எதிலிருந்து தான் இவர்கள் உருவானார்கள்.? எதை தங்களது பார்வையின் அடித்தளமாக கொண்டிருந்தார்கள்.? எதை யதார்த்தம் என்று சொல்கிறார்கள் என புரியவில்லை.

4 ) உங்களது இரண்டாவது நாவலான நெடுங்குருதியை ஒட்டி உங்களது எழுத்துகளில் ஒரு மாற்றம் தெரியத்துவங்குகிறது. இக்காலகட்டத்தில் எழுதப்பட்ட கதைகளில் கூட இந்த மாற்றத்தை உணர முடிகிறது. குறிப்பாக நெடுங்குருதி ஒரு மேஜிக்கை தன்னுள் வைத்திருக்கும் அதே நேரத்தில் அது ஒரு யதார்த்த வாத நாவலாகவும் இருக்கிறது. உங்கள் எழுத்தில் நிகழ்ந்த இந்த மாற்றத்திற்கு காரணம் என்ன?

நெடுங்குருதி நாவலின் துவக்கம் பத்தாண்டுகளுக்கு முன் நான் எழுதிய காட்டின் உருவம் சிறுகதையிலே துவங்குகிறது. நெடுங்குருதி நாவல் வேம்பலை என்ற புனைவான கிராமத்தில் வாழும் வேம்பர்கள் என்ற மனிதர்களையும் அவர்களது மூர்க்கமான வாழ்க்கை போராட்டத்தையும், துக்கத்தையும் வேதனைகளையும் அவர்களது விசித்திர கனவுகளையும் சொல்கிறது.

உப பாண்டவம் போன்று ஒரு இதிகாசத்தின் மீதான மீள்புனைவாக ஒரு நாவலை எழுதிய பிறகு இருபதாண்டுகளுக்கும் மேலாக என்னுள் புதையுண்டிருந்த வேம்பலையை எப்படி பதிவு செய்வது என்று யோசனையாக இருந்தது.

பால்ய நாட்களில் மாட்டுதரகர்களோடு சந்தைக்கு செல்லும் போது அவர்கள் தாங்கள் அறிந்த கதையை வழியெல்லாம் சொல்லிக் கொண்டு வருவார்கள். அதில் எது நிஜம் எது பொய் என்று பிரிக்கமுடியாது. கதாபாத்திரம் போன்று வர்ணிக்கப்பட்ட மனிதனை சந்தையில் நேரிலே நாம் காண சந்தர்ப்பம் அமையும். அதே நேரம் அவர்கள் தங்களது நிலவியலையும் அதனை பீடித்திருக்கும் துர்கனவையும் தொடர்ந்து எல்லாகதைகளிலும் சொல்லிக் கொண்டிருப்பதை உணர முடிந்தது.

அந்த கதை சொல்லல் முறையை தான் நெடுங்குருதியிலும் காணமுடியும். குறிப்பாக இயற்கையையின் கரங்கள் வாழ்வை எப்படி புரட்டிப் போடுகின்றன என்பதையும் அதன் குரூரமும் கருணையும் எப்படி பீறீடுகின்றன என்பதையுமே இந்நாவல் மையமாக கொண்டிருக்கிறது.

என்னைப் பொருத்தமட்டில் அந்த நாவல் ஒரு வெயிலின் கதை . நிலப்பரப்பெங்கும் வெயில் ஒரு மூர்க்கமான மிருகத்தை போல தன்விருப்பப்படி சுற்றியலைகிறது. வெயிலை குடித்துக்கிறங்கிய மனிதர்கள் தீமையின் உருக்களை போல நடமாடுகிறார்கள். வாழ்வை பற்றிய உயர்வெண்ணங்கள் எதுவும் அவர்களிடமில்லை. சாவை குறித்த புலம்புதல்களுமில்லை. அந்த நிலவியலில் வாழ்வது என்பதே ஒரு மாயம் தான்.

தாவரங்களின் உரையாடலில் இருந்து எனது கதைவெளி மாறிக் கொண்டுவரத்துவங்கியது. அதன் தொடர்ச்சியாக வெயிலைக் கொண்டுவாருங்கள் தொகுப்பின் அதிகதைகளையும் உப பாண்டவம் நாவலையும் சொல்லலாம். அதன் பின்னணியில் தான் நெடுங்குருதி வந்திருக்கிறது. ஆகவே எழுத்து முறை இப்போது தான் மாற்றமடைந்துள்ளது என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.

5) தமிழில் யதார்த்தவாத கதைகளே முழுமையாக எழுதி முடிக்கபடவில்லை இந்நிலையில் புதுவகை எழுத்துக்களுக்கு அவசியம் இல்லை மேலை இலக்கியங்களை படித்துவிட்டு அடிக்கபடும் காப்பி என்கிற வகையில் விமர்சனங்கள் தற்போது முன்வைக்கபடுகின்றன அதற்கான உங்களது எதிர்வினை?

ஒரு நேரத்தில் ஒரேயொரு பொருளை மட்டுமே யாவரும் வாங்க வேண்டும் என்று கட்டயாப்படுத்துவதற்கு தமிழ் இலக்கியம் என்ன ரேஷன் கடையா? மேலை இலக்கியங்களை படித்து விட்டு காப்பியடிக்கிறார்கள் என்று சொல்பவர் யார்.? அவர்கள் என்ன வாசித்திருக்கிறார்கள்.? வம்பு பேச்சுகளும் அவதுôறுகளும் தொடாத துறையிருக்கிறதா என்ன.? இல்லை என்றால் யதார்த்தவாத கதைகள் இவ்வளவு நாட்களுக்குள் எழுதி முடிக்கபட்டுவிடும் என்று ஏதாவது ரிடயர்ட்மண்ட் தேதி ஏதாவது இருக்கிறதா என்ன ? தங்களுக்கு புரியாத எதுவாகயிருந்தாலும் அது வெளிநாட்டு இலக்கியத்தின் காப்பி என்று கூச்சப்படாமல் சொல்வதற்கு ஒரு கூட்டமே தயாராகயிருக்கிறது.

6)இன்றுள்ள தமிழ் இலக்கிய போக்குகள் எப்படியிருப்பதாக நினைக்கிறீர்கள்?

பன்முகப்பட்டதாகவும் பல்வேறு சீரிய தளங்களில் செயல்படுவதாகவும் புதிய எழுத்துவகை உருவாகியிருக்கிறது. குறிப்பாக தமிழ்கவிûயி”ல் பெண்கவிஞர்களின் வரவு இதுவரையில்லாத சாத்தியங்களை உருவாக்கியிருக்கிறது. இவர்கள் ஆபாசமாக எழுதுகிறார் என்று கூச்சலிடுவது அர்த்தமற்றது. ஆபாசம் வீட்டு தொலைகாட்சியில், பாடல்களில், பேச்சில், நடவடிக்கைளில் வீடுகளிலும் ஊடகங்களிலும் பெருகிவழிவதை ரசித்துக் கொண்டிருப்பவர்கள் பால்உணர்வுகளை ஒடுக்கபட்ட உடலின் குரலாக பெண் கவிதைகளில் வெளிப்படுத்துவதை எதிர்ப்பது ஒரு திட்டமிட்ட வன்முறை என்பேன்

சிறுகதையி”லும் அடிநிலை மனிதர்கள் பற்றியும் மனத்திரிபுகள், பால் இச்சைகள் குறித்து பேசும் கதைகள் சிறப்பாக எழுதப்பட்டுவருகின்றன. புத்தகவெளியிட்டில் ஒரு உலகத்தரம் தமிழுக்கு சாத்தியமாகியிருக்கிறது. ஆனால் நாவல்கள் மிக குறைவாகவே ஏழுதப்படுகின்றன. அதிலும் குறிப்பிடும்படியாக எதுவுமில்லை.
மாலதி மைத்ரி, தென்றல், குட்டிரேவதி, ராணி திலக், ஸ்ரீநேசன் போன்றவர்களின் கவிதைகள் பிடித்திருக்கின்றன. சிறுககைளி”ல் ஜே. பி. சாணக்யா, ஸ்ரீராம். லட்சுமி மணிவண்ணன். காலபைரவன் போன்றவர்கள் புதிய தளங்களை உருவாக்கி வருகிறார்கள். இவர்களை தவிர்த்து நான் தொ.பரமசிவத்தின் எழுத்துக்களையும். தியோடர் பாஸ்கரனின் கட்டுரைகளையும் ஈடுபாட்டுடன் வாசித்து வருகிறேன். மொழிபெயர்ப்பில் ஜி. குப்புசாமியின் செயல்பாடு மிகவும் கவனிக்கபட வேண்டியது.

7) இப்போது உலக அளவில் யாருடைய எழுத்துகளை முக்கியமானதாக கருதுகிறீர்கள்?

போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான ஜோஸ் சரமாகோ வின் நாவல்கள் மிகவும் சிறப்பானதாகயிருக்கின்றன. குறிப்பாக தி ஸ்டோன் ராப்ட், தி காஸ்பல் அக்கார்டிங் டு ஜீசஸ் கிரைஸ்ட் இரண்டையும் கடந்த பத்தாண்டுகளில் நான் வாசித்த மிகச்சிறந்த நாவல்களெனச் சொல்வேன். இன்னொருவர் ஆர்கன் பாமுக் என்ற துருக்கியை சேர்ந்தவர் இவரது மை நேம் இஸ் ரெட் என்ற நாவல் மார்க்வெஸின் நுôற்றாண்டுகால தனிமைக்கு நிகரானது. 26 மொழிகளில் மொழிபெயர்க்கபட்டிருக்கும் பின்நவீனத்துவ நாவலது.

ஹருகி முராகமியின் சிறுகதைகளும் வில்லா ஸிம்போர்ஸ்காவின் கவிதைகளும் வாசிப்பில் புதிய அனுபவம் தருகின்றன. மார்க்வெஸின் புதிய நாவல் மெமரீஸ் ஆப் மை மெலன்கலிக் வோர்ஸ் ஆங்கிலத்தில் இன்னமும் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகவில்லை. அது மிகச்சிறந்த நாவல் என்று எனது நண்பரும் முக்கிய லத்தீன் அமெரிக்க சிறுகதை எழுத்தாளருமான பெர்னான்டோ úஸôரான்டினோ மெயில் அனுப்பியிருக்கிறார். வாசிக்க காத்துக் கொண்டிருக்கிறேன்.

6) தமிழ் ஆலக்கிய விமர்சனம் என்ன வகையில் உள்ளது என்று கருதுகிறீர்கள்? தமிழ் விமர்சகர்கள் படைப்பாளிக்கு ஊக்கம் தருபவராக இருக்கிறாரா இல்லையா என்பதை ஒரு படைப்பாளி என்னும் முறையில் சொல்ல முடியுமா?

இன்று தமிழில் இலக்கிய விமர்சகர்களேயில்லை. தற்போது விமர்சகர்களாகயிருப்பவர்கள் பலரும் தங்களுக்கு பரிச்சயமான கோட்பாடுகளை பரிசோதித்து பார்ப்பதற்கான சோதனை எலியாக தான் இலக்கியபடைப்புகளை எடுத்துக் கொள்கிறார்கள். இவர்களுக்கு முறையானதொரு இலக்கிய கோட்பாடுகள், தத்துவங்களின் பரிச்சயமும், தமிழ் இலக்கியத்தின் தேர்ச்சியும் இல்லை.

இருபது ஆண்டுகளுக்கு முன்பிருந்த விமர்சன தந்தைகள் எதை எழுதுவது, எதை எழுதக்கூடாது என்று முடிவு செய்யும் கலாச்சார காவலர்களாக தங்களை கருதிக் கொண்டு வெட்டுக்கத்திகளுடன் தணிக்கையாளர்களை போல செயல்பட்டிருக்கிறார்கள். அன்றைய இலக்கிய விமர்சனம் தெருச்சண்டை போல வசைகளும் கொச்சையும் நிரம்பியதாக தான் காணப்படுகிறது.

இன்னொரு பக்கம் இலக்கிய விமர்சனம் என்ற பெயல் துதிபாடுதலும் ஆராதனைகளும் மிக அதிகமாக நடைபெற்றிருக்கிறது. தமிழ்நாட்டின் போர்ஹே, தமிழ் கால்வினோ, தமிழை காப்பாற்ற வந்த பின்நவீனத்துவ டொனால்டு பார்த்தல்மே, தமிழ் காப்கா. என தமிழ் எழுத்தாளர்களுக்கு உலக அங்கீகார பட்டங்கள் தந்தது உள்ளுர் விமர்சகர்களை தவிர வேறு யார்.?

புதுக்கவிதையை பற்றி உப்பு பெறாத இரண்டு விமர்சன கட்டுரை தொகுதிகளை வெளியிட்டுவிட்டு சாகித்ய அகாதமி பதவியையும் சர்வதேச அரங்கங்களில் கட்டுரைவாசிக்கும் சந்தர்ப்பத்தையும் உருவாக்கி கொள்ளும் அபத்தம் வேறு எங்காவது இருக்கிறதா என்ன? ஆங்கிலத்துறைகளில் பணியாற்றிக் கொண்டு அரைகுறையாக கற்றுக் கொண்ட விமர்சனபாடங்களை தமிழ் இலக்கியவாதிகளின் மீது ஏவிவிடும் உளறல் இன்னொரு புறம் பின்நவீனத்துவ விமர்சனமாக பெருகிக் கொண்டிருக்கிறது.

பல்கலை கழகங்கள் குறிப்பிடத்தகுந்த இலக்கிய விமர்சகர்களை உருவாக்கவேயி”ல்லை. மாறாக நல்ல நாவல்களை, கவிதைகளை பரிட்சைக்குரிய பத்துமார்க் கேள்விகளாக உருமாற்றி வகுப்பெடுத்து சராசரி ரசனை அளவை கூட சிதைந்து விட்டிருக்கிறார்கள். விதிவிலக்காக உள்ள தொ.பரமசிவம். அ.கா.பெருமாள், அ.மார்க்ஸ் வீ. அரசு போன்ற பேராசியர்கள் கூட கவிதை, நாவல், சிறுகதை போன்ற இலக்கிய விமர்சனத்தை விடவும் நாட்டார்கலைகள், மொழித்துறை, நாடகம், அரசியல் நிகழ்வுகள் சார்ந்து தான் அதிகம் செயல்பட்டு வருகிறார்கள். மிகவும் கவனத்துக்குரிய விமர்சகர்களாக மதிக்கபட்ட தமிழவன், நாகார்ஜூனன், எம்.டி.முத்துகுமாரசாமி, எஸ்.சண்முகம் போன்றவர்கள் இப்போது எழுதுவதேயில்லை.

அமெரிக்க பல்கலை கழகங்களில் பணியாற்றிக் கொண்டு தமிழ் இலக்கியத்திற்கு ஏ.கே.ராமானுஜமும் ஜார்ஜ் எல். ஹார்ட்டும் செய்த பங்களிப்பின் ஒரு பகுதியாவது இங்குள்ள கல்விதுறை அறிஞர்களால் செய்யப்பட்டிருக்கிறதா?

மிகைல் பக்தின் தஸ்தாயெவ்ஸ்கியின் படைப்புலகினை பற்றி விரிவாக 300 பக்க நுôலை எழுதியிருக்கிறார்.. இதாலோ கால்வினோ செவ்விலக்கியங்களை எப்படி வாசிப்பது என்று தனிப்புத்தகமே எழுதியிருக்கிறார். உம்பர்த்தோ ஈகோவின் கட்டுரைகள் மொழியலையும் மறைக்கபட்ட சரித்திரத்தையும் பேசுகின்றன. இவர்களை போலவே டெரிதாவும் லக்கானும் மிஷைல் பூக்கோவும் எழுதிய விமர்சனங்கள் நம் கையில் வாசிக்க கிடைக்கின்றன. இவர்கள் எவரும் எழுத்தாளர்களை புகழ்ந்து கொண்டாடுவதற்கு விமர்சனத்தை பயன்படுத்தவில்லை. மாறாக படைப்பை புரிந்து கொள்வதற்கான சாத்தியங்களை அதிகமாக்குகிறார்கள். தமிழில் இந்தவகை விமர்சனங்கள் இல்லை. அதனால் தான் இன்றைய இலக்கியவிமர்சகர்களை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை..

9)தற்போது உயிர்மை இதழில் உலக எழுத்தாளர்கள் பற்றி, அவர்களது எழுத்துக்கு அப்பாற்பட்ட ஆர்வங்களை பற்றி எழுதி வருகிறீர்கள். இதை எழுதவேண்டும் என்று என்ற எண்ணம் எப்படி உருவானது?

எனது பதினெட்டு வயதிலிருந்து உலக இலக்கியங்களை வாசித்துவருகிறேன். அத்தோடு சமகாலத்தின் முக்கிய படைப்புகள் எந்த தேசத்தில் எழுதப்பட்ட போதும் அவற்றை தேடிவாசிக்கும் பழக்கம் கொண்டிருக்கிறேன். இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு இலக்கியவாதிகளை தேடிச் சென்று பார்த்து அவர்களோடு எனது வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

எழுத்தாளர்களின் வேலை கதை எழுதுவது மட்டுமே என்று கற்பிக்கபட்டிருந்த பிம்பம் இந்த வாசித்தலில், சந்திப்பில் கொஞ்சம் கொஞ்சமாக தகர்ந்து போகத் துவங்கியிருந்தது. பஷீரை சந்தித்த போது சீன யாத்ரீகன் மார்க்கோ போலோவை சந்தித்து பேசிக் கொண்டிருந்தது போன்ற அனுபவமேயிருந்தது. மகேஸ்வததாதேவியை சந்தித்த போது பழங்குடியினருக்காக போராடும் போராளியை கண்ட சந்தோஷம் உண்டானது.

எழுத்தாளர்கள் கதைகளை விடவும் புதிராக வாழ்ந்திருக்கிறார்கள். எதை எதையோ தேடியலைந்திருக்கிறார்கள். அரசியல் ஈடுபாட்டின் காரணமாக சிறைபட்டிருக்கிறார்கள். ஒடுக்கபட்ட மக்களின் விடுதலைக்காக போராடியிருக்கிறார்கள். எழுத்தாளனின் செயல்பாடு பன்முகப்பட்டது. எழுத்தாளன் யாவையும் கடந்த ஒரு ஞானி, எழுத்து ஒரு அகதரிசனம் என்பதில் எல்லாம் எனக்கு நம்பிக்கையில்லை.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக என் வாசிப்பில் நான் நெருக்கமாக உணர்ந்த சிறந்த இருபது புத்தகங்கள் குறித்து வாக்கியங்களின் சாலை என்று ஒரு கட்டுரைத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறேன். இதன் தொடர்ச்சியாக தான்உயிர்மை இதழில் தற்போது எழுதி வரும் பத்தியை சொல்லலாம்.

10) இந்தத் தொடரில் தமிழ் எழுத்தாளர்கள் மீது அவர்களுக்கு பல்வேறு துறை சார்ந்த ஆர்வம் இல்லை என்ற விமர்சனத்தை முன்வைக்கிறீர்கள் இப்படியொரு ஆர்வம் எழுத்தாளர்களுக்கு கட்டயாம் இருக்க வேண்டும் என்று கருதுகிறீர்களா?

ஆர்வம் என்று அதை சொல்ல முடியாது. ஒரு கற்றுக் கொள்ளல் என்று சொல்லலாம். கற்றுக் கொள்வதை கட்டாயப்படுத்த முடியுமா என்ன? நாம் எழுதத் துவங்கியதும் கற்றுக் கொள்வதை நிறுத்திவிடுகிறோம்.

11) சமகால நிகழ்வுகள் இலக்கியத்தில் பதிவு செய்யப்படவேண்டியது அவசியமில்லையா?

சமகாலம் என்றால் என்ன? காலண்டர்தாட்கள் காட்டும் தேதியும் வருடமுமா அல்லது ஊடகங்கள் பெருக்கி காட்டும் பிரச்சனைகளை சமகாலம் என்று அர்த்தப்படுத்திக் கொள்கிறீர்களா.. சமகாலம் என்பது ஒரு தோற்றம் மட்டுமே. அதன் வேர்கள் எந்த நுôற்றாண்டில் ஒடிக் கொண்டிருக்கின்றன என்று சுலபத்தில் அறிந்து கொண்டுவிட முடியாது.

சோபாக்ளிசின் ஒடிபஸ் ரெக்சினை வாசிக்கும் போது அது நம் காலத்தை பிரதிபலிப்பதாகவே உள்ளது. ஆனால் நாடகம் எழுதப்பட்டு இரண்டாயிரமாண்டு கடந்துவிட்டிருக்கிறது. உம்பர்த்தோ ஈகோவின் நாவல்கள் பல நுôற்றாண்டுகளுக்கு முந்திய ரகசிய அமைப்பான டெம்பிளார்களையும் மடாலயங்களையும் நினைவுகள் அழிந்து போகும் தீவையுமே பேசுகின்றன. அதற்காக அதை கடந்த காலத்தின் கதை என்று விலக்கிவிட முடியுமா? அந்துவாந்த் சந்த் எக்சுபரின் குட்டி இளவரசன் எந்த சமகாலத்தின் வெளிப்பாடு என்று நினைக்கிறீர்கள்,

காலம் பற்றிய நமது புரிதல் தெளிவற்றது. நான் காலத்தை சதா திசைகளற்று பொங்கிக் கொண்டிருக்கும் ஒரு நீருற்றை போல தான் புரிந்து கொண்டிருக்கிறேன். ஒடிக்கொண்டிருக்கும் ஆற்றின் மீது அருகாமை மரங்களும் வானில் பறக்கும் பறவையின் நிழலும் தண்ணீல் பிரதிபலிக்கின்றன. ஆனால் நம் குடத்தில் அள்ளும் தண்ணீல் பிம்பங்கள் ஒட்டிக் கொண்டு வருவதில்லையே. என்றால் எங்கே பிரதிபலிப்பாகிறது பிம்பம்? தோற்றம் கடந்த நிஜம் இருப்பதை நாம் கவனிக்க வேண்டியதில்லையா?

12) தங்கள் கவனம் தற்போது எதில் குவிந்திருக்கிறது. அல்லது எதை தொடர்ந்து விரும்பி வாசித்து வருகிறீர்கள்?

புத்தரை தொடர்ந்து பத்தாண்டுகளாக பயின்று வருகிறேன். இந்தியசமூகத்தை, மனதை புரிந்து கொள்வதற்கு பௌத்தம் சரியான வழிகாட்டுதலாகயிருக்கிறது. சாஞ்சி, கயா, சாரநாத், நாகார்ஜூன கொண்டா என பௌத்த வாழ்விடங்களை தேடிச் சென்றும் பார்த்து வருகிறேன். இன்று பௌத்ததை கொண்டாடும் பலரும் அதன் சமூககருத்துக்களை மட்டும் ஏற்றுக் கொண்டு மற்றயாவையும் விலக்கிவிடுகிறார்கள். அரசியல் காரணங்களுக்கான மாற்றுபடிமமாக மட்டுமே புத்தர் பயன்படுத்தபட்டு வருகிறார் உண்மையில் பௌத்த வாழ்முறையில் எவருக்கும் ஈடுபாடில்லை. பௌத்த அரசியலை மேற்கொள்பவர்கள் வன்முறையை தங்களது ஆயுதமாக கொள்வதையும் சுயமோகத்தில் உறிப்போயிருப்பதையும் காணும்போது இவர்கள் எந்த புத்தரைப் பற்றி பேசுகிறார்கள் என்று சந்தேகமாகதானிருக்கிறது.

புத்தத்தினை புந்து கொள்ளாமல் போனதும் அதை வாழ்க்கை நெறியாக பின்பற்ற தவறியதும் இந்திய சமூகம் இழைத்த மாபெரும் தவறு. அதே போலவே பெரியாரை இந்து மத எதிர்பாளர் என்று சுருக்கி அவரை ஒரு திராவிட கட்சிதலைவரை போல கட்சி அடையாளத்திற்குள் அடைக்க முயன்றதும் தமிழ் அறிவாளிகளின் தவறான வழிகாட்டுதல் என்றே சொல்வேன்.

பெரியாரைப்பற்றிய இன்றைய விமர்சனங்கள் யாவும் அவதுôறுகளாவே உள்ளது. அவரின் சீரிய விவாதங்களை மூடிமறைப்பதற்கான தந்திரமாகவே தெரிகிறது. பெரியாரை நுட்பமாக வாசித்த எவரும் அவரை துதிபாட மாட்டார்கள். மாறாக தமிழ்சமூகத்தின் மீது அவர் எழுப்பிய கேள்விகளும் அவரது நேரடி செயல்பாடும் எத்தனை வலிமையானது என்று கட்டாயம் புரிந்து கொள்வார்கள். பெரியார் ஒரு சிந்தனை தளத்தை உருவாக்குகிறார். அதே வேளையில் அதன் செயல்பாட்டிற்கான சாத்தியபாடுகளையும் உருவாக்கியிருக்கிறார்.

புத்ததிற்கு ஒருவர் மதம் மாறுவது என்பதையே என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஒருவன் எந்த மதத்தினை சார்ந்து இருந்தாலும் அவன் பௌத்தனாக வாழமுடியும். பௌத்தம் ஒரு மதமல்ல ஒரு வாழ்முறை. ஒரு சிந்தனைவெளி. இன்னும் சொல்லப்போனால் பௌத்த ஈடுபாடு ஒரு மதமறுப்பு செயல்.

அதே நேரம் ஒன்றை ஒத்துக் கொள்ள வேண்டும் பௌத்தமும் முழுமையாக ஸ்தாபனமயமாக்கபட்டுவிட்டது. இரண்டு மகாபிரிவுகள். அதற்குள் நுôறு துணைபிரிவுகள். மாந்திரீகம் தாந்திரீகம், என ரகசிய சடங்குகளையும் பாலியல் கிளர்ச்சி தரும் வழிபாடுகள், பரபரப்பான மனிதர்களின் மனநெருக்கடியை போக்கும் எளிய தியானமுறை என்று எளிய வணிக தந்திரங்களைக் கொண்டதாகவும், என் மறைமுகஅதிகார சக்தியாகவும் கூட தன்னை உருமாற்றிக் கொண்டிருக்கிறது. ஆனால் பௌத்த சிந்தனைகளும் தத்துவமும் அறமும் ஸ்தாபன கட்டுபாடுகளுக்கு வெளியில் தனித்த சிந்தனைகளாக அறிவார்ந்த வழிகாட்டுதலாக உள்ளது. நாம் பின்பற்ற வேண்டியது இது போன்ற பௌத்தநெறியை தான் .

13) ஊர்சுற்றுவதில் உங்களுக்கு உள்ள ஆர்வம் வெறும் பயணியின் ஆசையா இல்லை எதையாவது தேடிச் சென்று கொண்டிருக்கிறீர்களா?

நான் சுற்றுலா பயணி அல்ல. இன்னும் சொல்லப்போனால் புகழ்பெற்ற சுற்றுலா ஸ்தலங்கள் எதையும் நான் பார்த்ததே கிடையாது. தாஜ்மகாலை கூட யமுûயி”ன் கரைகளை ஒட்டிய கிராமங்களில் சுற்றிக்கொண்டிருந்த போது வயல்வெளிகளின் பின்னிருந்து தான் பார்த்திருக்கிறேன். எனது தேடுதலின் காரணம் தெளிவற்றது. அது அவ்வப்போது கிளைக்க கூடியது. பயணத்தில் குறிப்பெடுப்பதோ, புகைப்படம் எடுத்துக் கொள்வதோ எதுவும் கிடையாது. குறிப்பாக எந்த ஊருக்குப் போகப்போகிறேன் என்ற திட்டம் கூட கிடையாது. இமயமலையின் பதினெட்டாயிரம் அடி உயரம் வரை சென்றிருக்கிறேன். கிர்காட்டிற்குள் நடந்து திரிந்திருக்கிறேன். கீழ்வாலை குகைஒவியங்களை கண்டிருக்கிறேன். அஜ்மீரின் தெருக்களில் உறங்கியிருக்கிறேன். புழுதிபடிந்த உடையும் பிளாட்பார கடைகளில் உணவுமாக வாழ்வது பழக்கபட்டிருக்கிறது. இப்போதும் எனது பயணம் இலக்கற்று எந்த நேரமும் புறப்பட தயராகதானிருக்கிறது. ஒரேயொரு வேறுபாடு பத்து ஆண்டுகளுக்கு முன்பிருந்தது போல பயமற்று எந்த நகரிலும் சுற்றித்திரிய முடிவதில்லை. அத்தோடு பலவருடமாக ஊர்சுற்றியதால் சம்பாதித்த உடல்கோளாறுகள் பயண எல்லையை சுருக்கிக் கொண்டுவிட்டிருக்கிறது.

14) தொலைகாட்சி தொடர்களிலும் சினிமாவிலும் பணியாற்றியிருக்கிறீர்கள் உங்கள் அனுபவத்தின் அடிப்படையில் தமிழ் திரைத்துறைக்குள் எழுத்தாளருக்கு உள்ள சாத்தியஙகள் சாத்தியமின்மை பற்றி சொல்ல முடியுமா?

எழுத்தாளின் தேவை காட்சி ஊடகங்களிலும் மிக அதிகமாகயிருக்கிறது. ஆனால் எழுத்தாளன் இடம் எவரோ ஒரு நகலெடுப்பவரால் நிரப்பபட்டு விடுகிறது சினிமாவில் கதை என்பது எழுதப்படுவதில்லை மாறாக உருவாக்கபடுவது. கதையை உருவாக்குவதற்கு என ஒரு கூட்டமே வேலை செய்கிறது. அதற்காக பல ஆயி”ரம் செலவு செய்கிறார்கள். அனால் அந்த செலவில் நுôறு ரூபாய் கூட புத்தகம் வாங்குவதற்கு செலவிடப்பட்டிருக்காது.

எந்த சினிமா நிறுவனத்திலும் நுôலகம் என்ற ஒன்றை நான் பார்த்ததேயில்லை. தந்திபேப்பரும் வார ஆதழ்களும் தவிர்த்து மருந்துக்கு கூட ஒரு நாவலோ சிறுகதை புத்தகமோ கதைவிவாதம் நடக்கும் அறைகளில் கண்டதேயில்லை.

சினிமாவிற்கான நல்ல கதைகள் இல்லை என்பது பொய். நல்ல கதைகளை படமாக்க தயாரிப்பாளர்கள், நடிகர்கள் முன்வரவில்லை என்பது தான் நிஜம். அதனால் தான் தமிழில் மிக அபூர்வமாகவே அழகி, ஆட்டோகிராப். காதல் போன்ற படங்கள் வெளிவருகின்றன.

கடந்த இரண்டு மாதங்களில் பெருமழைக்காலம், காழ்சா, அகலே என்று மூன்று மலையாள படங்களை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. மிக யதார்த்தமான, ரசனைமிக்க படங்கள். திரையரங்களில் அரங்கம் நிரம்பி வழிய தான் ஒடிக்கொண்டிருந்தது. இதில் அகலே என்ற படம் கண்ணாடி சிற்பங்கள் என்ற டென்னிசி வில்லியம்சின் உலகப்புகழ் பெற்ற நாடகத்தை அடிப்படையாக கொண்டு ஷியாம பிரசாத் இயக்கியது. இந்த அளவிற்கு கூட தமிழில் முயற்சிகள் நடைபெறவில்லை என்பது கவலைக்குயதாகவேயி”ருக்கிறது.

15) தற்போது வெளிவந்துள்ள உங்களது உலக சினிமா புத்தகத்தை எழுத வேண்டும் என்ற எண்ணம் எப்போது எருவானது. உலகசினிமாவின் மீது உங்களுக்கு எப்படி ஈடுபாடு வந்தது.?

கல்லுô நாட்களில் இருந்தே மதுரையி”ல் உள்ள திரைப்பட சங்கங்களின் வழியாக உலகதிரைப்படங்களை காணும் பழக்கம் எனக்கு உருவாகியி”ருந்தது. அத்தோடு கேரளாவில் ஜான் அபிரகாமால் துவக்கபட்ட ஒடேசா என்ற திரைப்பட இயக்கத்தின் நண்பர்களின் நட்பு தொடர்ந்து அவர்கள் நடத்திய சினிமாபயிலரங்குகளில் கலந்து கொள்ளவும் திரைப்படவிழாக்களில் பங்கேற்கவும் ஆர்வத்தை உருவாகியது. பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக நான் உலகதிரைப்படங்களை பார்த்து வருகிறேன். டெல்லி கல்கத்தா பெங்களுர் என பல்வேறு திரைப்படவிழாக்களுக்கு சென்று வந்திருக்கிறேன். அந்த்ரே தார்கோவெஸ்கியும், லுôயி புனுவலும், பெலினியும் குரசேவாவும் எனக்கு பிடித்தமான இயக்குனர்கள்.

சென்னை போன்ற பெருநகரங்களில் கூட திரைப்படங்களை திûயி”டுவதை தவிர்த்து அதைப்பற்றிய முறையான அறிமுகமோ, தீவிரமான விமர்சனங்களோ நடைபெறுவதேயில்லை. தியோடர் பாஸ்கரன், வெ. ஸ்ரீராம் போன்ற ஒரு சில தனிநபர்களின் ஈடுபாடு மட்டுமே சினிமவை புரிந்து கொள்வதற்கான எழுத்துப் பிரதிகளை உருவாக்கி தந்திருக்கிறது. சினிமாவை பற்றி எழுதுபவர்கள் தமிழில் மிக குறைவு. இலவசமாக உலகின் சிறந்த படங்கள் திரையிடப்படும் போது கூட அங்கு தமிழ் எழுத்தாளர்களோ, கவிஞர்களோ வந்து பார்ப்பதேயில்லை என்பது தான் உண்மை.

சென்னையில் மட்டும் ஆயிரக்கணக்கில் உதவி இயக்குனர்களும் துணை இயக்குனர்களுமிருக்கிறார்கள். இவர்களில் இருநுôறு பேராவது நல்ல புத்தகங்களை தேடி வாசிப்பவர்கள். ஆனால் இவர்கள் தெரிந்து கொள்வதற்கு கூட தமிழில் உலக சினிமாவை பற்றிய புத்தகங்களில்லை.

தற்போது சென்னையை தவிர்த்த சிறுநகரங்களில் வசிப்பவர்கள் கூட ஹாலிவுட் திரைப்படங்களை தவிர்த்து வேறு திரைப்படங்களை காண்பதற்கான சாத்தியம் டிவிடி வழியாக உருவாகி உள்ளது. ஆனால் எந்த படங்களை பார்ப்பது எப்படி தேர்வு செய்வது எப்படி புரிந்து கொள்வது எனத் தெரியவில்லை. நவீன ஒவியம், இசை போலவே சினிமாவினை ரசிப்பதற்கும் ஆழ்ந்த பயிற்சியும் உழைப்பும் தேவை. ஆகவே இதற்கான மாற்றுமுயற்சிகளில் ஒன்றாக சினிமா மீது ஆர்வம் கொண்டிருந்த இளம் நண்பர்கள் சிலரையும் ஒன்றிணைத்து உலகசினிமாவிற்கான ஒரு புத்தகத்தை உருவாக்கினேன். இந்த புத்தகம் உருவாவதற்கு மூன்று அண்டுகள் கால அவகாசம் தேவைபட்டது.

16) ஒரு சிறுபத்திக்கை எழுத்தாளராக அறியப்பட்டு வந்த நீங்கள் இன்று பிரபலமான தமிழ் எழுத்தாளராக ஆகியுள்ளீர்கள். இந்த மாற்றத்தை எப்படி உணர்கிறீர்கள்?

நான் 1984ல் எழுத துவங்கி இன்றுவரை இருபது ஆண்டுகள் கடந்துவிட்டன. இதுவரை இலக்கியவாசகர்களுக்கு மட்டுமே பரிச்சயமாகயிருந்த எனது எழுத்து இன்று பல்வகை பட்ட வாசகர்களை நோக்கி விரிந்திருக்கிறது. அது என் புத்தகங்களுக்கான வாசகர்களை அதிகப்படுத்தியிருக்கிறதே தவிர எனது ஈடுபாட்டில் எந்த மாற்றத்தையும் உருவாக்கவில்லை.

17) ஆனந்த விகடனில் வெளியான உங்கள் துணையெழுத்து தொடர் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது. ஆனால் அது இதுவரையில்லாத உங்கள் எழுத்தில் ஒரு ரொமான்டிசிசத்தை துணையெழுத்து கொண்டிருப்பதாக ஒரு விமர்சனமிருக்கிறது. இதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

துணையெழுத்து ஒரு கட்டுரைத் தொடர். எனது பயணத்தையும் நான் கண்ட மனிதர்களையும் முன்வைத்து எழுதப்பட்ட ஒரு பத்தி.. அது விகடனில் வெளியானதே தவிர எந்த சிறுபத்திரிக்கையிலும் வெளிவந்திருக்க கூடிய சாத்தியம் கொண்டது தான். நான் கட்டுரைகளை புனைவுமொழியில் எழுதுகின்றவன்.

தமிழில் பொதுவாக கட்டுரைகள் என்றாலே ஒரு சலிப்பூட்டும் நடையில் வழக்கொழிந்து போன வார்த்தைகளையும் புள்ளிவிபரங்களும் கோட்பாடுகளையும் நிரப்பி நம்மை மூச்சுதிணற வைப்பதாகவேயிருந்து வந்திருக்கின்றன. நான் வாசித்தவரை போர்ஹேயின் கட்டுரைகள் மிக தீவிரமானவை ஆனால் அதன் மொழி புனைவு தன்மை மிக்கது. உம்பர்த்தே இகோவை வாசித்த பாருங்கள் பெரிய விஷயங்களை கூட எத்தனை எளிமையாகவும் பரிகாசத்துடனும் புரிந்து கொள்ள வைக்கிறார். இதாலோ கால்வினோ, ஆக்டோவியா பாஸ், மார்க்வெஸ் என பல முக்கிய எழுத்தாளர்கள் எழுதிய கட்டுரைகள் தரும் வாசிப்பு அனுபவம் மிக உயர்ந்த நிலையிலிருக்கிறது.

காருகுறிச்சி அருணாசலம் மறைந்து நாற்பதாண்டுகள் முடிந்துவிட்டது அதுவரை அவருக்கு வாழ்க்கை வரலாறு கூட எழுதப்படவில்லை. அவரை பற்றி எந்த இதழிலும் யாரும் எழுதுவதில்லை என்று துணையெழுத்தில் அவரைப்பற்றி எழுதியதைப் படித்துவிட்டு அவரது மகள் நன்றி தெவித்ததோடு காருகுறிச்சிக்கு நினைவாக பூஜையில் வைக்கபட்டிருந்த சிறிய சந்தன நாதஸ்வரத்தை எனக்கு பரிசாகவும் அளித்தார்கள். இது போலவே பிரமீள் பற்றிய கட்டுரையை வாசித்துவிட்டு அவர் அடக்கம் செய்யப்பட்டுள்ள கரடிக்குடியில் ஒரு நினைவு மண்டபம் எழுப்புவதற்கு அமெரிக்காவிலிருந்து ஒரு மருத்துவர் ஒரு லட்ச ரூபாய் எனக்கு அனுப்பிவைத்திருந்தார்.

நினைவுமண்டபம் அனுப்புவதை விடவும் புத்தகவெளியீடுகள், இலக்கிய கூட்டங்கள் நடத்துவதற்காக சென்னையில் பிரமீள் பெயரால் ஒரு நினைவு அரங்கம் அமைப்பது நல்லது என்று தோன்றுவதாக சொல்லி அப்பணத்தை திருப்பி அனுப்பிவைத்தேன். இரண்டு ஆண்டுகளுக்குள் பிரமீள் பெயரால் அரங்கம் கட்டிதருவதற்கு இப்போது அவர் ஆர்வமாக பணம் சேகரித்துக் கொண்டிருக்கிறார். வாசிப்பை மீறி ஒரு செயல்பாடாக தான் துணையெழுத்தின் எதிர்வினை அமைந்திருந்தது.

17) தமிழில் சிறுபத்திரிக்கைகளின் எண்ணிக்கை குறைந்து இடைநிலை பத்திரிக்கைகள் அதிகரித்துள்ளதே. இன்று ஒரு சிறுபத்திரிக்கையின் தேவை என்ன என்று நினைக்கிறீர்கள்.?

எப்போதுமே சிறுபத்திரிக்கைகள் மாற்றுக்குரலுக்கு உரிய களத்தை உருவாக்குவதற்கு தான் முனைந்திருக்கின்றன. சிறு பத்திரிக்கை என்பதே ஒரு எதிர்திசையில் செல்லும் நீரோட்டம் தான். அதன் நோக்கம் வாசகர்களை விருத்தி செய்வது அல்ல. குறிப்பிட்ட ஒரு நோக்கம் சார்ந்து நண்பர்களால் தங்களது கைப்பணத்தை செலவு செய்தது தான் சிறுபத்திக்கைகள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. இன்று தமிழில் முக்கிய எழுத்தாளர்களாக அறியப்படும் யாவரும் சிறுபத்திக்கையில் எழுதி வந்தவர்களே. சிறுபத்திரிக்கைகளின் தேவை எப்போதுமே இருந்து வரக்கூடியது தான்.

இடைநிலை இதழ்களின் மீது எனக்கு நம்பிக்கையில்லை. இவை எந்த விததத்தில் தன்னை இடைநிலையாக நினைத்துக் கொள்கிறது என்று தெரியவில்லை. பத்தாயிரம் பேர் படிப்பதால் அது இடைநிலை இதழாகிவிடாது. அதுவும் சிறுபத்திரிக்கை தான். இடைநிலை இதழ் என்றால் தமிழ்சினிமா விமர்சனமிருக்கும் நாலு கலர்பக்கமிருக்கும். இத்தோடு ஒன்றிரண்டு மொழிபெயர்ப்பு கதைகள் வெளியிடப்படும் என்பது தானா? தமிழுக்கு தேவை தீவிரமான சிந்தனை தளத்தை உருவாக்க கூடிய இதழ்கள். இதை எத்தனை பேர் வாசகர்களாகயிருக்கிறார்கள் என்பதை வைத்து முடிவுசெய்ய முடியாது. இதே நேரம் சிறுபத்திரிக்கை என்ற பெயல் துதிபாடும் குழுக்களை உருவாக்கி கொள்வதையும் சகித்துக் கொள்ள முடியவில்லை..

18) எழுத்தாளனின் சமூக அக்கறை அரசியல் குறித்து இன்று அதிகம் பேசப்பட்டு வருகிறது. சமீபமாக சங்கராச்சாரியார் கைது செய்யப்ட்ட போது சமூகத்தில் முக்கிய நிகழ்வுகள் நடக்கும் போது எழுத்தாளர்கள் எதிர்வினையாற்ற வேண்டும் என்று சுந்தர ராமசாமி குறிப்பிட்டிருக்கிறார். ஒரு படைப்பாளியாக அதை எப்படி உணர்கிறீர்கள்.?

சங்கராச்சாரியாரின் கைது ஒரு முக்கிய சமூக நிகழ்வா என்ன? தலித் மக்கள் மீது தொடர்ந்து வரும் வன்முறையை கவனிக்க கூட முடியாமல் கண்ணை, காதை பொத்திக் கொண்டவர்கள் சங்கராச்சாரியார் விசயத்தில் மட்டும் சமூகபோராளியாவது வேடிக்கையாக இருக்கிறது. சுனாமியால் இத்தனை ஆயிரம் பேர் தங்கள் குழந்தைகளை இழந்து, வீட்டை இழந்து அகதிகளை போல ஆங்காங்கே தங்க வைக்கபட்டிருக்கிறார்கள். இறப்பு எண்ணிக்கை எவ்வளவு என்று இன்னமும் கண்டு பிடிக்கபடவேயில்லை. எத்தனை எழுத்தாளர்கள் அந்த முகாம்களுக்கு சென்று உதவிப்பணிகள் செய்திருக்கிறார்கள். தாமிரபரணி படுகொலையின் போது எங்கே போனார்கள் நாஞ்சில் நாட்டு எழுத்தாளர்கள். பாபர்மசூதி இடிப்பு, பம்பாய் மதக்கலவரம். குஜராத் கலவரம் என எத்தனையோ விஷயங்கள் நம்மை உலுக்கிய போதும் எதிர்வினையே தமிழில் ஆல்லை.

உண்மையை சொல்வதற்கு எனக்கு தயக்கமில்லை. நான் இது போன்ற சமூக நிகழ்வுகளுக்கு எதிரான கண்டன ஊர்வலங்களிலும் மேடைகளிலும் கலந்து கொண்டதில்லை. ஆனால் மதவாதத்தை ஒருபோதும் நான் ஆதரிப்பவனில்லை. சுனாமி முகாம்களில் எனது பதவியும் பங்களிப்பும் சொல்லிக் கொள்ளுமளவு முக்கியமானதில்லை. ஆனால் அவர்களின் துயரம் என்னை இன்றுவரை துôக்கமற்று செய்திருக்கிறது.

தொடர்ந்து தமிழகமெங்கும் சமணபௌத்த சின்னங்கள் இடிக்கபட்டும், படுகைகள் உள்ள மலைக்குகைகள் கல்குவாரிகளாக வெடிவைத்து தகர்க்கபடுவதும். கிராம மக்கள் தங்கள் வாழ்விடங்களை துறந்து நகரங்களை நோக்கி வந்து கொண்டேயிருப்பதையும், சாதி கிராமங்களில் முன்னை விட ஆழமாக வேர் ஊன்றிவிட்டதையும், ஆரம்ப கல்வியில் கூட மதவாதம் கலக்கபட்டு சரித்திரமும் கலாச்சாரமும் பொய்யால் நிரப்பபடுவதையும் சமூகபிரச்சனைகளாக நாம் கண்டுகொள்வதேயில்லை. அதைப் பற்றி குரல் கொடுப்பவர்களும் அதிகமில்லை.

நான் எனது அரசியல் சமூக நிலைப்பாடாக இந்த இரண்டாவது வகையை சார்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறேன். கல்வியிலும் கலாச்சார தளங்களிலும் ஏற்பட்டுவரும் சீரழிவுகளை தொடர்ந்து பல அரங்கங்களில் கண்டித்தும் எனது பார்வைகளை வலியுறுத்தியும் வருகிறேன். வாழ்விடங்களை விட்டு வெளியேறுபவர்களின் மீது எப்போதுமே அக்கறை கொண்டிருக்கிறேன்.

19)அரவான் என்ற உங்களது நாடகம் சமீபத்தில் அதிகம் பேசப்பட்டது. ஏன் நாடகத்திற்கு அரவானை தேர்வு செய்தீர்கள்.?

வியாச பாரத்தில் அரவான் களப்பலி பெரிதாக விவரிக்கபடவில்லை. ஆனால் தமிழகத்தில் அரவானுக்கு ஒரு முக்கியத்துவமிருக்கிறது. குறிப்பாக நாட்டார் மரபில் அரவான் கிருஷ்ணனால் தான் களப்பலிக்கு தேர்வு செய்யப்படுகிறான். பின்பு கிருஷ்ணனே பெண் வேடமிட்டு வந்து அரவானோடு கலவி கொள்கிறான். கிருஷ்ணன் ஆண் பெண் என இரண்டு உடல் கொண்டவானாகயிருந்ததால் அரவாணிகளும் அவரைப் போலவே நீலம் பூசிக்கொண்டு ஒரு இரவு அரவானை மணந்து மறுநாள் தாலியறுத்துவிட்டு ஒப்பாரி வைக்கிறார்கள். இந்த சடங்கு கூவாகத்தில் ஆண்டு தோறும் நடக்கிறது.

அரவான் ஒரே நேரத்தில் ஒடுக்கப்பட்ட மனிதனையும் விலக்கப்பட்ட பால் உறவிற்கும் அடையாளமாகயிருக்கிறான். அத்தோடு யுத்தத்தில் சாதாரண மனிதர்கள் பலிகொடுக்கபட்டு வருவது காலம்காலமாக நடந்துவருகின்றது என்பதற்கு சாட்சியாகவுமிருக்கிறான். அரவான் ஒரு வனகுடி. இப்படி பலதளங்கள் கொண்ட கதாபாத்திரமாகயிருப்பதால் தான் அரவானை நாடகமாக்கினேன்.

20)இப்போது என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்?

பௌத்த விகாரை ஒன்றை பற்றிய நாவலை எழுதிக் கொண்டிருக்கிறேன். விகடனில் கதாவிலாசம் என்று தமிழின் முக்கிய சிறுகதையாசியர்களை பற்றி ஒரு பத்தியை எழுதிக் கொண்டுவருகிறேன். இணையத்தில் அட்சரம் என்ற பெயல் உள்ள எனது பிளாக்கில் அவ்வப்போது சிறுகட்டுரைகள் .எழுதுகிறேன். இயற்கையை பற்றி உலகமெங்கும் உள்ள பல்வேறு பழங்குடி மக்களால் சொல்லப்பட்டுவரும் நுôறு குழந்தைகள் கதைகளை மொழிபெயர்த்திருக்கிறேன். அது ஏப்ரலில் தனிநுôலாக வெளிவரயிருக்கிறது.

21 ) இரண்டுவருடமாக சென்னைவாசியாகி விட்டீர்கள் எப்படியிருக்கிறது சென்னை வாழ்க்கை ?

எனக்கு எந்த மாற்றமும் தெரியவில்லை. குழந்தைகள் தான் விளையாடுவதற்கு இடமின்றியும். சேர்ந்து கதை பேச நண்பர்கள் இன்றியும், தனித்து விடப்பட்டிருக்கிறார்கள். கரை ஒதுங்கிய படகை போல ஒரு தீராத்தனிமை பீடித்திருக்கிறது. நான் தப்பிக் கொள்வதற்கு புத்தகங்களுக்குள் தலைகவிழ்ந்தபடியோ அல்லது யாவரும் உறங்கிய பின்இரவில் விழித்துக் கொண்டு தெருவை வேடிக்கை பார்த்தபடியோ இருக்கிறேன். மனைவியும் குழந்தைகளும் தங்களது இயல்பை மறந்து மௌனமாகிக் கொண்டு வருகிறார்கள். தொலைகாட்சியில் ஆழ்ந்துபோயிருக்கும் அவர்கள் முகங்களை கவனிக்கும் போது அது நிம்மதியற்றதாகவே தெரிகிறது. அதை நினைக்கும் போது தான் சற்றே பயமாக இருக்கிறது.

மறுமொழி

மூக்கன்

2/3/2005 , 7:23:01 PM அருமையாக இருந்தது திரு.ராமகிருஷ்ணன்.

உங்கள் கதாவிலாசமும் விகடனில் படித்து வருகிறேன்.
நேரம் கிடைக்கும்போது, இங்கேயும் எழுதுங்கள்.

PK Sivakumar

2/3/2005 , 7:41:59 PM Very good interview. Very thought provoking points. Each answers of yours have to be pondered, analysed and discussed more and thus would form an essay by itself. Punaivin Baaniyil Katurai ezuthuvathu ponra muyarchikal Tamilil illai enbathu ponra statements anaivarum yosika vendiya onru.

Ungalai patri pesum pothu Nanbarkalidam sonnathu ninaivuku varukirathu. La.sa.raku apuram kavithaiyaaka vurainadai ezuthubavar s.ra. enna, la.sa.ra.vin kavithai nadai thatuva vaathiyai pola sikalaanathu. ungal kavithai nadai, naataar kalai pola elimaiyanathu enru. Your interview makes me remember it again.

Thanks and regards, PK Sivakumar

மூர்த்தி

2/3/2005 , 9:37:29 PM மதிப்புமிகு எஸ்.ரா அவர்களுக்கு,

அருமையான கேள்விகள். மிகவும் அருமையான பதில்கள். நிறைகுடம் தளும்பாது என்பதற்கேற்ப எவ்வளவு புகழ்வரினும் தன்னடக்கமான பதில்கள். இது இதுதான் உங்களுக்கு மென்மேலும் புகழைச் சேர்க்கும். வாழ்க தங்களின் தமிழ் இலக்கிய பயணம்.

அவர் கேட்க மறந்த கேள்வி ஒன்று:

இணையத்தில் இலக்கியம் என்று ஏதும் படைக்கப்படுகிறதா இல்லையா?

தங்கமணி

2/3/2005 , 10:59:05 PM அருமையான பதிவு. மிக்க நன்றி. உங்களைப்பற்றிய அறிமுகம் மிகவும் நல்லவைகயில் எனக்குக் கிடைக்கவில்லை. வாசிப்பு என்ற வகையில் தாவரங்களின் உரையாடலையும், துணையெழுத்தையும் தவிர நான் உங்களின் எழுத்தெதையும் வாசிக்கவில்லை; அதனால் நான் முன்முடிவுகளை தவிர்க்கும்வண்ணம் இப்போதுதான் உபபாண்டவம் வாங்கினேன். இன்னும் வாசிக்கவில்லை.

இந்த நேர்காணல்/பதிவு பலபக்கங்களை கொண்டதாக இருப்பதையே இதன் உண்மைத்தன்மைக்கு சான்றாக நினைக்கிறேன். யதார்த்தத்தின் பரிமாணங்கள், புனைவின் உண்மைத்தன்மை (Chuang Tzu வின் பட்டாம்பூச்சி கனவு நினைவுக்கு வருகிறது), காலம், விமர்சன உலகம் என்று அழகாக, பின்புற அரசியல் நோக்கங்களின்றி, பார்வைகளின் (தரிசனங்களின்) வழியில் விரிகிறது உங்கள் பதிவு..

//பௌத்த ஈடுபாடு ஒரு மதமறுப்பு செயல்// என்ற வரிகளைப்படிக்கும் போது தி.ஜானகிராமனின் புத்த சாமியார் (அன்பே ஆரமுதே) ‘சாமியாரில் ஏதம்மா புத்தசாமியாரும், வேற சாமியாரும்’ என்பது நினைவில வந்தது. உண்மையில் பெளத்தம் சாட்சிப்படுத்தலின் மூலம் மனதை புறங்காணும் வழிமுறைகளை மிக எளிய முறையிலும், அழகாகவும் செய்துள்ளது. அதை நிறுவனமயமாக்கப் பட்ட மதங்கள் எளிதில் மூடிமறைக்க முயல்வதும், பெளத்தமே நிறுவனமயமாக்கப்பட்டதும் மிக இயல்பானதே.

காலம் பற்றிய புரிதல் மிக அழகானது. காலம் என்பது மனம் கடந்த நிலையில் இல்லாதொழிந்து, இக்கணமே நிலைக்கிறது. இக்கணத்தின் விரிவோ எல்லையும், திசையும் இல்லாதாது. அதனாலேயே மகா இலக்கியங்கள் அல்லது நாட்டார் கலை வந்த வடிவங்கள் எல்லாம் எல்லா காலத்தையும் (காலம் கடந்தும்) பிரதிபலிக்கும் தன்மைகொண்டவையாக இருக்கின்றன. காலம் பற்றிய அற்புதமான காட்சிப்படுத்தலை ஹெர்மன் ஹெஸ்ஸேயின் ‘சித்தார்த்தா’வின் கடைசி பக்கங்களில் கண்டபோது எனக்குள் எழுதவேண்டும் என்ற தவிப்பும், தேவையும் முற்றாக தீர்ந்துபோனதை உணர்ந்தேன்.

எழுத்தாளனின் சமூக அக்கறையைப் பற்றிய பதிலும் முக்கியமானது; இங்கு துரஷ்டிரவசமாக தமிழ் வலைபதிவுகளில் எழுத்து ஒருவித மீடியா தன்மையை கொண்டிருப்பதாலும், எழுதுபவர்கள் எழுத்தாளர்களாய் இருப்பவர்களை விட பத்திரிக்கையாளர்களாய் இருப்பதும் சங்கராச்சாரியாரின் கைது போன்றவை கவனஈர்ப்பைப் பெறுகின்றன.
உங்கள் விரிவான பதிவை வெளியிட்டமைக்கு மீண்டும் நன்றி!

s.velumani

2/4/2005 , 3:06:10 AM very good interview. pl do write regularly in atcharam.

கறுப்பி

2/4/2005 , 12:21:29 PM மிக அருமையான நேர்காணல் எஸ்.ராமகிருஷ்ணன்
புதிய கதை எழுத்து என்று பல இடைக்கால இலக்கியவாதிகள் புலம்பிக்கொண்டிருக்கின்றார்கள். இடைக்காலங்களில் யதார்த்தவாத எழுத்து என்று விட்டு வெறும் சமூகப்பாடம் சொல்லும் கதைகளாகவே வெளிவந்து கொண்டிருந்தன. அன்றைய கால எழுத்தாளர்களான பாரதி, புதுமைப்பித்தனும் ஜீ.நாகராஜனும் இப்போது இலக்கிய விமர்சகர்கள் வைக்கும் புதிய கதை எழுத்தைப் படைக்கவில்லையா. இடைக்காலங்களில் எழுத்தின் தன்மையில் ஒரு வித தேக்கம் கண்டு தற்போது அது மீண்டும் துளிர்க்கத் தொடங்கி விட்டது என்பதே என் கருத்து.
யதார்த்தவாதம் என்ற பெயரில் சுய அனுபவத்தை மட்டும் படைப்பாக்கி எழுத்தாளர்கள் தந்து கொண்டிருந்தமையால் தான் பெண்மொழி வெளியே வரவில்லை. பெண்கள் பெண்களுக்கான குடும்ப பாலியல் பிரச்சனைகளை தமது பிரச்சனைகளை எழுத்தில் கொணரும் பொழுது அவளது வாழ்க்கையோடு அதைச் சம்பந்தப்படுத்தி பெண் எழுத்தாளர்கள் கொச்சைப் படுத்தம்படும் தன்மை இருந்து கொண்டும் வந்தது. ஆனால் தற்போது அதை எதிர்நோக்கும் துணிவு, தன்மை பெண்களிடம் (மிகக்குறைந்த அளவிலேலும்) வந்து விட்டது.

sukumaran

2/9/2005 , 6:35:56 AM Dear Ramakrishnan,
Read your Interview in your blog.It was unpretentious and lively.

With regards
sukumaran

கணேசன்

2/9/2005 , 11:57:30 AM உங்களைப் போல் ஊர் சுற்றி..தெருவில் படுத்து இலக்கில்லாமல் அலைய ஆசை!
நினைத்தபடி வாழ அனைவருக்கும் கொடுப்பினை இல்லை…
வாழ்ந்த படியே (ஆசைகளை) நினைத்துக் கொள்ள வேண்டியதுதான்.

மதம் பற்றிய உங்களின் கருத்து உண்மை.

அன்புடன்,
கணேசன்.

7/23/2005 , 9:36:36 AM p

Karunharamoorthy.Po – பொ.கருணாகரமூர்த்தி, பெர்லின்.

3/21/2006 , 4:25:42 PM பௌத்தம் என்கிற சிந்தனை- வாழ்வியல் முறைமை புறந்தள்ளப்பட்டு அது ஸ்தாபனமயப்பட்டு வெறும் அரசியலாகவும் அதைத்தொடரும் வெறுப்பாகாகவும் வளர்ந்து நிற்பதற்கு இலங்கை மிகச்சிறந்த உதாரணம்.
புத்தர்கள் (என்று சொல்லப்படுபவர்கள்) சூழ்ந்த சமூகத்தில்தான் வாழ்ந்தோம், வாழ்கிறோம். ஆனாலும் பௌத்தம் பற்றி எதுவும் அறியமுடிந்ததில்லை. பௌத்த அரசுகள் புத்தர்சிலைகளை தமிழர் பகுதிகளில் நாட்டிச்செல்வதில் காட்டிய அக்கறையை பௌத்தர்களாக நடந்து காட்டுவதில் செலுத்தவில்லை.
பௌத்த சிந்தனை முறைமையை பற்றி முற்றாக அறிந்துகொள்ள தமிழில் இதுவரை ஏதொரு நூலும் கிடையாது. பத்து வருஷங்களாக ஆழ்ந்து பௌத்தத்தைப் பயிலும் நீங்கள் ஏன் பௌத்தம் பற்றிய ஒரு விரிவான நூலை எழுதக்கூடாது?

Writer S Ramakrishnan at Tamiloviam.com Atcharam: Archives

June 15, 2012 1 comment

Thankshttp://www.tamiloviam.com/site/?cat=904

மே, ஜூன் 2006: கடந்த ஒரு மாத காலமாக ஆஸ்திரேலியாவிற்கு பயணம்

அ. வரல் ஆற்றின் திட்டுகள்

ஆ. நள் எனும் சொல்


உலகசினிமா

நாள் : 12/30/2004 11:58:58 AM

கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக உலகசினிமா என்ற புத்தகத்தின் தயாரிப்பில் முழ்கியிருந்தேன். அப்பணி தினமும் காலை 9 மணி முதல் இரவு 2 வரை தொடர்ந்து நீண்டு கொண்டிருந்தது ஆகவே இணையத்தில் எழுதுவதற்கான சாத்தியம் குறைவாகிவிட்டது.

தமிழில் முதன் முறையாக விரிவான அளவில் உலகசினிமாவை அறிமுகப்படுத்தும் புத்தகமிது. இப்புத்தகத்திற்காக சினிமாமீது ஆர்வம் கொண்ட நண்பர்கள் சிலரோடு சேர்ந்து கொண்டு நான் கடந்த மூன்றாண்டு காலமாக உலகசினிமா பற்றிய கட்டுரைகள், பேட்டிகள் போன்ற பல்வேறு மொழிபெயர்ப்பு பணிகளிலும், மற்றும் தகவல்கள் சேகரிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருந்தேன். அதனை சென்னையில் நடைபெறும் இந்த ஆண்டு புத்தக சந்தைக்குக் கொண்டுவரும் முனைப்புடன் கடந்த இரண்டு மாதமாக புத்தகத் தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன்.

இப்புத்தகத்தில் சினிமாவின் வரலாறு, உலகின் நூறு சிறந்த திரைப்படங்கள், 50 முக்கிய இயக்குனர்கள் பற்றிய விபரங்கள், 50 முக்கிய திரைக்கலைஞர்களின் பேட்டி மற்றும் உலகசினிமா குறித்த 35 கட்டுரைகள். குழந்தைகளுக்கான திரைப்படங்கள், டாகுமெண்டரி படங்கள், இந்திய சினிமாவின் வரலாறு, இந்திய சினிமாவின் முக்கிய 30 இயக்குனர்கள், திரைப்பட விழாக்கள் ,விருதுகள், சினிமா சந்தித்த பிரச்சனைகள், சினிமா குறித்த சிறந்த புத்தகங்கள், இணைய தளங்கள் மற்றும் உலகமெங்கும் உள்ள திரைப்பட கல்லூரிகள், ஆய்வு நிறுவனங்கள் பற்றிய தகவல் தொகுப்புகள் மற்றும் சினிமாவின் எதிர்காலம் குறித்த கட்டுரைகள் ஆகியவை 700 புகைப்படங்களுடன் இடம் பெற்றுள்ளன.

ராயல் டெம்மி அளவில் 750 பக்கம், கெட்டி அட்டையுடன் புத்தகம் வெளியாகிறது. விலை 500 ரூபாய். வெளியிடுபவர்கள், கனவுப்பட்டறை. 111 பிளாசா சென்டர், ஜி. என். செட்டி ரோடு. சென்னை 6. தொலை பேசி. 55515992.

இதன் வெளியீட்டு விழா சென்னையில் ஜனவரி 6 மாலை 5.30 மணிக்கு பிலிம் சேம்பர் அரங்கில் நடைபெறுகிறது. அதில் புத்தகத்தை இயக்குனர் மகேந்திரன் வெளியிட ஜெயகாந்தன் பெற்றுக் கொள்கிறார். தியோடர் பாஸ்கரன், மதன். வஸந்த் பாலாஜி சக்திவேல் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

லூயி கரோலின் ஆலீஸின் அற்புத உலகம்

என்ற குழந்தைகளுக்கான புத்தகத்தையும் மொழி பெயர்த்துள்ளேன். அது 37 சித்திரங்களுடன் கனவுப்பட்டறையால் சிறப்பாக வெளியிடப்பட்டுள்ளது. விலை 50 ரூபாய்.


நாள் : 11/11/2004 7:31:16 AM

நனையாத எனது மழைநாட்கள்.

கடந்த ஒருவாரகாலமாக சென்னையில் விடாது பெய்யும் மழையின் காரணமாக வீட்டிலே அடைந்திருந்தேன். நான் மழையின் ரசிகனில்லை. என்னால் கோடையின் அதிகபட்ச அக்னிநட்சத்திர வெயிலில் கூட மதியம் பனிரெண்டு மணிக்கு சூடாக டீகுடித்தபடி நடுரோட்டில் நின்று பேசிக்கொண்டிருக்க முடியும். ஆனால் மழையில் பத்து நிமிடங்கள் கூட நிற்கமுடியாது. பயணத்தில் எதிர்படும் மழை அல்லது பின்னிரவில் யாரும் பார்க்காமல் பெய்யும் மழை இந்த இரண்டிலும் கொஞ்சம் ஈடுபாடு உண்டு. மற்றபடி மழை தொடர்ந்து பெய்யும் போது நான் ஒரு குத்துச்செடியைப் போல ஒடுங்கிப்போகத் துவங்கிவிடுகிறேன்.

மழை நாட்களில் எந்த வேலை செய்வதற்கும் பிடிக்காது. கம்ப்யூட்டரை அணைத்து விட்டேன். மின்சாரத் தடை காரணமாக வீடு அடிக்கடி இருள்வதும் ஒளிர்வதுமாக வேறு இருந்தது. மழையால் நேரம் செல்வது மிக மெதுவாகி வீடு குகையைப் போலச் சிறியதாகிவிட்டது.

ஒரு வேளை பிறந்ததிலிருந்து வெயிலின் தீராத பிரகாசத்தை மட்டுமே அனுபவித்து வந்ததால் கூட மழையின் மீது விருப்பமில்லாமல் போயிருக்ககூடும். எங்களது ஊருக்கு அருகாமையில் கொப்புசித்தம்பட்டி என்றொரு கிராமம் இருக்கிறது. அந்த ஊரின் வெயில் மிகவும் பிரசித்தமானது. சித்திரையில் அங்கு வெறும்காலோடு எவரும் நடந்து போகமுடியாது. அதை நினைத்துத் தானோ என்னவோ அக்கிராமவாசிகள் தங்களது நிலபத்திரங்களில் சாட்சியாக வெயிலையும் சேர்த்திருக்கிறார்கள். ஆச்சரியமான விபரமது.

ஊரில் எவராவது கடன் வாங்கினாலோ, நிலவிற்பனை செய்தாலோ பத்திரத்தில் உள்ளபடி தான் நடப்பதாகவும் மீறினால் சித்திரை மாதவெயிலில் பகலில் வெறும்காலோடு ஊரை பத்துமுறை சுற்றிவர சம்மதிப்பதாகவும் எழுதி கையெழுத்துப் போடுவார்கள். பத்திரசாட்சிகளில் ஒன்றாக வெயில் இடம்பெறும் நிலப்பகுதியில் பிறந்தவன் என்பதால் இயல்பாகவே வெயிலுக்குப் பழகியிருக்கிறேன்.

ஆனால் சென்னையின் இந்த மழை நாட்களைக் கடந்து செல்வதற்கு தொடர்ந்து ஒரு வாரகாலமும் புத்தகங்கள் படிப்பதும், விருப்பமான திரைப்படங்களை பார்ப்பதுமாக செலவிட முடிவு செய்தேன். அதன்படி தினமும் பரிட்சைக்குப் படிப்பது போல காலை எட்டுமணிக்குத் துவங்கி மாலை ஆறுமணிவரை புத்தகமும் கையுமாக வீட்டில் ஆங்காங்கே இடம்மாறி வாசித்துக் கொண்டிருந்தேன். இரவு எட்டுமணிக்கு துவங்கி பதினோறுமணிவரை சினிமா பார்ப்பது என என்னை நானே புதுப்பித்துக்கொள்வதற்கு இந்த மழை நாட்கள் உபயோகமாகயிருந்தன.

மழை வெறித்த நேற்று படித்து முடித்திருந்த புத்தகங்கள் மேஜையில் குவிந்து கிடப்பதை பார்த்தேன். வியப்பாகதானிருந்தது. வாசித்த புத்தகங்களில் சில திரும்பப் படித்தவை. சில வாங்கிப் படிக்காமலே வைத்திருந்தவை. குறிப்பாக இந்த வாசிப்பில் எனக்குப் பிடித்த புத்தகங்கள் நான்கு.

1) உம்பர்தோ ஈகோவின் கட்டுரைத்தொகுதியான How to travel with a salmon & other essays.

2) Natsume Soseki என்ற ஜப்பானிய எழுத்தாளரின் நாவல் I am a cat .

3) நோபல் பரிசு பெற்ற தென்னாப்பரிக்க நாவலாசிரியரான J.M. Coetzee யின் நாவல் The Master of Peterburg.

4) தேயிலை எப்படி உலகம் முழுவதும் பரவியது என்பதைப் பற்றி Jason Goodwin எழுதிய பயணக் கட்டுரையான The Gunpowder Gardens.

இதைத்தவிர விடியல் பதிப்பகம் வெளியிட்டுள்ள லியோனார்ட் பெல்டியரின் சூரியனைத் தொடரும் காற்று என்ற சிறைவாழ்க்கை அனுபவங்களை பற்றிய புத்தகம், கங்கைப்பருந்தின் சிறகுகள் என்ற வங்காள நாவல், சங்ககால வரலாற்று ஆய்வுகள், பண்டைத் தமிழர் போர்நெறி, ஆ. இரா. வெங்கடாசலபதியின் முச்சந்தி இலக்கியம், புரிசை கண்ணப்ப தம்பிரான் பற்றிய நினைவுத் தொகுப்பு. லு¡சுன் கதைகள். சிங்கிஸ் ஐத்மேத்தாவின் ஐமீலா, மற்றும் பெரிய எழுத்து அபிமன்னன் சுந்தரிமாலை.

கடந்த வாரத்தில் பார்த்த படங்கள்

1) ஸ்பீல்பெர்க்கின் TERMINAL

2) ஐப்பானிய இயக்குனரான NAGISHA OSHIMA வின் IN THE REALM OF PASSION.

3) பிரேசில் இயக்குனரான KARIM AINOUZ இயக்கிய MADAME SATA.

4) கொரிய இயக்குனரான IM KWON TAEK இயக்கிய கான்ஸ் திரைப்படவிழாவில் சிறந்த திரைப்பட விருது பெற்ற. PAINTED FIRE.

5) சீன இயக்குனரான TIAN MING WU இயக்கி பல உலகப் படவிழாக்களில் கலந்து கொண்ட .THE KING OF MASKS.-

6) மம்முட்டி நடித்த காழ்சா என்ற மலையாளப்படம்

7) ராகேஷ் சர்மாவின் குஜராத் கலவரம் பற்றிய டாகுமெண்டரியான THE FINAL SOLUTION

( புத்தகங்களைப் போலவே என்னிடம் நு¡ற்றுக்கும் மேற்பட்ட சிறந்த திரைப்படங்களின் சேமிப்பு ஒன்றுமுள்ளது. பெரும்பாலும் நண்பர்கள் எனக்காகச் சேகரித்து தந்த டிவிடிக்கள் )

மழை வெறித்த பிறகும் மனதில் நினைவுகளாக சொட்டிக் கொண்டேயிருக்கும் இரண்டு திரைப்படங்களையும் J.M. Coetzee யின் நாவலை பற்றியும் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

திரைப்படவிழாக்களில் ஈரானிய சினிமாக்களுக்கு இருந்த வரவேற்பும் நெகிழ்வும் தற்போது கொரிய திரைப்படங்களை நோக்கி திரும்பியிருக்கிறது. சமீபத்திய கொரியg; படங்களில் பத்திற்கும் மேலாக பார்த்திருக்கிறேன். மென்மையான காதல் கதைகளில் துவங்கி சாகசf; கதைகள் வரை தங்களுக்கென்று தனித்துவத்தை கொண்டுள்ளவையாக கொரியப்படங்கள் வளர்ந்துள்ளன. குறிப்பாக 2002ம் ஆண்டு கான்ஸ் திரைப்படவிழாவில் விருதுபெற்ற PAINTED FIRE. திரைப்படம். சமீபத்தில் நான் பார்த்த மிகச்சிறந்த படங்களில் ஒன்று.

பதினெட்டாம் நு¡ற்றாண்டைச் சேர்ந்த கொரிய ஒவியரான ஒவானின் நிஜ வாழ்வை விவரிக்கும் இத்திரைப்படம் ஒவியர்களின் உலகத்தையும் அதன் தேடுதலையும் துல்லியமாக சித்திரித்துள்ளது.. ஒவான் எனும் சித்திரக்காரனின் வாழ்க்கை தெருவில் பிச்சைக்காரர்களோடு வாழ்வதில் துவங்குகிறது. சாலையோரத்தில் உள்ள பிச்சைக்காரனை ஒவான் கரியால் வரைந்த சித்திரம், நகரின் முக்கிய ஒவியர் ஒருவரால் கவனிக்கபடுகிறது.அவர் ஒவானைத் தனது செலவிலே ஒவியம் கற்றுக்கொள்ள ஒரு மாஸ்டரிடம் அனுப்புகிறார். ஒவியத்தின் நுட்பங்களை கற்றுக்கொள்ள துவங்கும் போது ஒவியத்திற்கு பின்புலமாக உள்ள மெய்த்தேடல் பற்றியும், ஆழ்ந்த தத்துவ ஈடுபாடு பற்றியும் கற்றுக்கொள்கிறான்.

வாலிபவயது அவனை குடியிலும் பெண்களின் மீதான வேட்கையிலும் ஆழந்து போகச் செய்கிறது. கொரியாவின் முக்கிய ஒவியனாக வளரும் ஒவான் தனது சுபாவத்தின் காரணமாகவும் கலையின் மீதுள்ள தனது விடாத தேடுதலின் காரணமாகவும் மற்றவர்களால் கடுமையாக விமர்சிக்கபடுகிறார். ஒவியங்களுக்காக இயற்கையை ஆழ்ந்து கவனிக்க துவங்கிய ஒவான் ஒரு நேரத்தில் அதன் வியப்பில் தன்னைப் பறிகொடுத்துவிட்டு ஒவியனாக இல்லாமல் துறவியை போல தேடித்திரியத் துவங்குகிறான். அவனது புகழ் கொரியா முழுவதும் பரவுகிறது. அவனோ பானை செய்பவர்களுடன் சேர்ந்து கொண்டு மண்பானையில் சித்திரம் வரைந்து தந்தபடி யாரும் அறியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறான். முடிவில் பனிமலையின் தொலைவில் சென்று மறைந்துவிடுகிறான். இப்போதும் அவர் துறவியாக மலைமீது வாழ்வதாக ஒரு ஜதீகம் மட்டும் நிலவி வருகிறது.

தார்கோவெஸ்கியின் ஆந்த்ரே ரூபலாவ் திரைப்படத்தை பார்த்தபோது ஏற்பட்ட அனுபவத்திற்கு இணையானது இத்திரைப்படம். தார்கோவெஸ்கியும் ருஷ்ய ஒவியரான ஆந்த்ரே ரூபலாவின் வாழ்க்கையை, மனவேதனைகளையே படமாக்கியிருப்பார். அத்திரைப்படம் ஒளியால் எழுதப்பட்ட ஒவியங்களின் தொகுப்பு போலவேயிருக்கும்.

கொரியத் திரைப்படத்திலும் காட்சிகள் ஒவியங்களை போலவே படமாக்கபட்டுள்ளன. குறிப்பாக வேனிற்காட்சிகளும், மழைக்காலத்தின் பின்னால் நிலப்பரப்பில் தோன்றும் நிறமாற்றங்களும், ஆகாசத்தில் குருவிக்கூட்டங்கள் நெருநெருவென ஆயிரக்கணக்கில் பறப்பதும் கண்களை அகலவிடாமல் நம்மை பார்த்துக் கொண்டேயிருக்க வைக்கின்றன. இந்த திரைப்படத்தில் இன்னொரு சிறப்பம்சம் அதன் இசை. கொரியாவின் பராம்பரிய காற்றுவாத்தியங்களை பெரிதும் பயன்படுத்தியிருக்கிறார்கள். அந்த இசைக்கருவிகள் கூட நு¡ற்றாண்டு பழமையானவைகளே.

‘**
நீண்ட நாட்களுக்குப் பிறகு மலையாளத்தில் வெளிவந்துள்ள சிறந்தபடம் என்று காழ்சாவைக் கூறலாம். மம்முட்டி ஊர்ஊராகச் சென்று திரைப்படங்களை திரையிட்டு காட்டும் கதாபாத்திரமாக நடித்திருக்கிறார். கேரளாவில் மக்களுக்கான சினிமா இயக்கமாக ஜான் ஆபிரகாமால் துவங்கபட்ட ஒடேசா இயக்கத்தவர்கள் இது போல கிராமம் கிராமமாக சென்று பதேர்பாஞ்சாலியும் பேட்டில் ஷிப் பொடோம்கினும் என உலகின் சிறந்த படங்களை திரையிட்டு வருகிறார்கள்.

மம்முட்டியும் அது போல குட்டநாடு பகுதியின் கிராமம் ஒன்றிற்கு ருஷ்யத் திரைப்படம் ஒன்றை திரையிடுவதற்கு கொண்டு செல்கிறார். காயலில் பயணம் செய்யும் போது படகில் ஒரு சிறுவனை சந்திக்கிறார். அவன் குஜராத் பூகம்பத்தில் உயிர்தப்பி வந்தவன். அந்த சிறுவன் மம்முட்டியை பின்தொடர்ந்தே வருகிறான். ஒரு சந்தர்ப்பத்தில் அவனைத் தன்னோடு தன் வீட்டிற்கு கூட்டிப் போய் தன் குடும்பத்தில் ஒருவனை போல வளர்க்க துவங்குகிறார் மம்முட்டி. குடும்பமும் அவனை ஏற்றுக் கொள்கிறது.

அச்சிறுவனை தனது தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறான் உள்ளுர் அரசியல்வாதி ஒருவன். மம்முட்டி அதை மறுக்கவே சிறுவன் திரும்பவும் குஜராத்திற்கு அனுப்பபட வேண்டும் என்று காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்கபட்டு சிறுவன் குடும்பத்திலிருந்து பிரிக்கப்படுகிறான். முடிவில் சிறுவனை குஜராத்தில் உள்ள கட்ச் பகுதிக்கு மம்முட்டியே கொண்டு செல்கிறார்.

பூகம்பத்தில் இடிந்த வீடுகளும் தெருக்களும் மனதை உலுக்குகின்றன. சிறுவன் உடைந்து மண்ணோடு மண்ணாகியிருக்கும் தனது வீட்டைக் கண்டுபிடிக்கிறான். ஆனால் அவனது குடும்பமே பூகம்பத்தில் இறந்து போயிருக்கிறது. முடிவில் அகதிகள் முகாமில் சிறுவன் சேர்க்கபடுகிறான். அவனை தத்து எடுத்துக் கொள்வதாக மம்முட்டி மண்டியிட்டு கேட்டும் அரசு அதிகாரிகளால் மறுத்து துரத்தப்படுகிறார். கையறுநிலையில் வேதனையோடு சிறுவனை பிரிந்து வருவதோடு படம் முடிவடைகிறது.

சிறுகதையைப் போல மிககச்சிதமாகவும் நேர்த்தியாகவும் படமாக்கபட்டுள்ளது.எவ்விதமான ஆர்ப்பாட்டங்களும் பகட்டான நடிப்பும் வன்முறைகூச்சல்களும் கிடையாது. நடிகர்கள் தாங்கள் ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறோம் என்பது தெரியாமல் நிஜமனிதர்களாக நடமாடுகிறார்கள். சிறுவன் படம் முழுவதும் குஜராத்திமொழியிலே பேசுகிறான். பாஷை புரியாமலும் அவனது உணர்ச்சி நம்மை கலங்கசெய்கிறது.

*** இதுபோலவே J.M. Coetzee யின் நாவல் The Master of Peterburg. ருஷ்ய எழுத்தாளரான தஸ்தாயெவ்ஸ்கியின் வாழ்க்கையில் நடைபெற்ற சிறுசம்பவத்தை பற்றியது. அவரது வளர்ப்பு பையன் ரகசிய அரசியல் இயக்கத்தில் உறுப்பினராக இருப்பதை அறிந்து காவல்துறை அவனைக் கைது செய்து அழைத்துப் போய்விடுகிறது. அவனை மீட்பதற்கும் தன்னைப் போலவே அவனும் சிறைவாழ்விற்குப் பலியாகிவிடக்கூடாது என்ற ஏக்கத்தோடு அவனைப்பற்றிய விபரங்களை தேடியலையவதுமாக ஒரு அப்பாவிற்கும் மகனுக்குமான வெளிப்படுத்தபடாத அன்பை முன்வைக்கிறது. கோட்ஷியின் நாவல். (தமிழில் இந்நாவல் தற்போது சா. தேவதாஸால் மொழிபெயர்க்கபட்டு வருகிறது.).

உம்பர்த்தோ ஈகோவின் கட்டுரைத் தொடரைப் படித்து முடித்தபோது இத்தனை கேலியாகவும் எளிமையாகவும் எழுத முடிகிறதே என்று வியப்பாகயிருந்தது. அத்தோடு ஈகோ தமிழ் இலக்கிய சூழலில் பின்நவீனத்துவ அறிவுஜீவியாக மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டு இங்குள்ள பலரும் மிரண்டு போயிருந்தது நினைவிற்கு வந்தது. சமகால எழுத்தாளர்களில் ஈகோ மிக முக்கியமானவர். விருப்பமும் நேரமுமிருந்தால் அவரது Name of the Rose நாவலை வாசித்துப் பாருங்கள். சினிமா ரசிகராகயிருந்தால் சீன்கானரி நடித்து இந்நாவல் படமாக வெளியாகியுள்ளது. படத்தைப் பாருங்கள் பிறகு புரியும் உம்பர்தோ ஈகோ எப்படிபட்டவர் என்று.

** சற்றே நீண்ட, கலவையான கட்டுரையாகிவிட்டது. கடந்த ஒரு மாதமாகவே பயணம், புத்தகவேலை என்று இழுத்துக் கொண்டு போகிறது வாழ்க்கை. தொடர்ந்து எழுதுவதற்கு விருப்பமிருந்தும் சந்தர்ப்பங்கள் குறைவாகயிருக்கின்றன. அதை ஒழுங்கு செய்து கொண்டிருக்கிறேன். இனி முன்போல தொடரும் என்று நம்புகிறேன்.

**


நாள் : 10/20/2004 12:35:32 PM, எஸ் ராமகிருஷ்ணன்

காணிக்காரர்கள்

கன்யாகுமரி மாவட்டத்தின் கீரிப்பாறை மலையில் உள்ள வெள்ளாம்பி பகுதியில் வசிக்கும் காணிக்காரர்கள் மரங்களின் மீது வீடு கட்டிக்கொண்டு குடியிருந்து வரும் ஆதிவாசிகளாகும். இயற்கை குறித்து ஏரளமான கதைகளும் பாடல்களும் இந்த ஆதிகுடிகளிடம் நிரம்பியிருக்கின்றன. எரிக் மில்லர் என்ற அமெரிக்க பல்கலைகழகத்தின் ஆய்வாளர் இவர்களை பற்றி ஆய்வுசெய்து வருகிறார். அவரது ஏற்பாட்டின் பேரில் நான்கு நாட்கள் காணிக்காரர்கள் சென்னைக்கு வருகை தந்து இங்குள்ள பள்ளிமாணவர்களுக்கு தங்கள் கதைகளை, பாடல்களை விளையாட்டை அறிமுகப்படுத்தினர். அதன் ஒரு பகுதியாக பொதுமக்களின் பார்வைக்கு ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள்.

அண்ணாசாலையில் உள்ள புக்பாயிண்டில் ஞாயிற்றுகிழமை நடந்த இந்த நிகழ்ச்சிக்கு பத்துக்கும் குறைவான குழந்தைகளே வந்திருந்தார்கள். மொத்தப் பார்வையாளர்களும் சேர்ந்தால் இருபத்தைந்து பேர் இருக்க கூடும். காணிக்காரர்கள் மிகுந்த ஆச்சரியத்துடன் ஹைடெக் வசதிகளுடன் உள்ள ஹாலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள் வந்திருந்த காணிகளில் பலரும் சர்வசாதாரணமாக மில்லரின் லேப்டாப்பை இயக்கியதும், அவரது டிஜிட்டில் காமிராவை உபயோகித்து படமெடுத்தது. பார்வையாளர்களுக்கு மிக விநோதமாக இருந்தது. முருகன் என்ற காணிக்கார இளைஞர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

காணிகளின் கலைக்குழு என்று அழைத்துக் கொள்ளும் பத்து குடும்பங்கள் இந்த நிகழ்ச்சிக்காக வந்திருந்தார்கள். அவர்களது கதையும் பாடல்களும் மலையாளம் கலந்தே காணப்படுகின்றன. கதைகளில் பெரும்பாலும் காட்டுவிலங்குகள் பற்றியும் காட்டிலிருக்கும் அரிய மூலிகைகள் பற்றியும் அதிகம் பேசுகிறார்கள். தமிழகத்தின் மற்ற இடங்களில் குழந்தைகள் விளையாடும் சில விளையாட்டுகள் அதன் மாற்றுவடிவங்களில் இங்கே காணமுடிகிறது. குறிப்பாக குலைகுலையாம் முந்திரிக்காய் நரியே நரியே சுற்றிவா. (நரியே என்பது நிறைய என்று பொருள் என்று காணிவிளக்கி சொன்னார்) கொள்ளையடிச்சவன் எங்கயிருக்கான் கூட்டத்திலிருப்பான் கண்டுபிடி என்ற விளையாட்டு பாடல்வழியே காட்டிலிருந்து என்ன பொருட்கள் கொள்ளையடிக்கபடுகின்றன என்ற விபரத்தை காணிகள் பாடுகிறார்கள்.

அது போலவே நண்டு ஊறுது நரியுறுது என விரல்களை பிடித்துவிளையாடும் விளையாட்டில் விரல்கள் ஒவ்வொன்றையும் ஒரு மரமாக கொள்கிறார்கள். ஒரு குரங்கு மரத்தில் தாவி குதிக்கிறது என்று சொல்லி ஒவ்வொரு விரலாக தாவுகிறார்கள். பிறகு மழைவந்துவிட்டது குகைக்குள் ஒடி ஒளிந்து கொள்ளவேண்டும் என்று சொல்லியபடியே தோள்பட்டை அடியில் கக்கத்தினுள் விரலை நுழைந்து கிச்சுகிச்சு காட்டுகிறார்கள். கக்கம் தான் குகை என்று சொல்வது சுவாரஸ்யமான கற்பனையாகயிருக்கிறது.

அது போலவே நான்கு சிறுமிகள் வட்டமாக உட்கார்ந்து கொண்டு தலைவாறுவதற்கு ( ஈருளி) பேன் சீப்பு வேண்டும் என்று கேட்கிறார்கள். அந்த விளையாட்டில் சீப்பை ஒளித்து வைத்துவிட்டு சிறுமிகள் தங்கள் கால்களை ஒன்றுசேர்த்தபடியே சுழன்றுவருவது வேடிக்கையாகயிருந்தது.ஞங்கிலி பிங்கிலி என்ற நகைச்சுவை பாடல் அர்த்தம் ஏதுவுமற்ற வார்த்தைகளால் நிரம்பியிருந்தது.

சென்னை நகர குழந்தைகள் மிகுந்த நாகரீகத்துடன் வாய்விட்டு சிரிப்பதற்கு கூட கூச்சத்துடன் அந்த காட்சிகளை பார்த்துக் கொண்டிருந்தார்கள். காணிகளிடம் உள்ள கற்பனைதிறனை காணும் போது வியப்பாகயிருக்கிறது. அவர்கள் இயற்கையை காட்சிபடிமமாக மாற்றிக் கொள்கிறார்கள். அவர்களது பாடல்கள் அதற்கு சாட்சியாகயிருக்கின்றன. பகல் என்பது ஒரு மீன் இரவு என்பது ஒரு வீரன். பகல் போய்க்கொண்டேயிருக்கிறது. இரவு நம்மை சுற்றிலும் காவல்காக்கிறது என்று அவர்களின் பாடல் ஒன்று துவங்குகிறது. நவீனகவிதையின் விதைகள் இங்குதானிருக்கின்றன.

காணிகள் ஒடுக்கமான முகத்துடனும் குள்ளமான உடல்வாகையும் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் அதிகம் படித்தவர் தற்போது பள்ளியிறுதியாண்டை முடித்த இருவர் மட்டுமே. காட்டுவேலைகள் செய்து வாழ்ந்து வரும் அவர்கள் மரங்களில் பரண்வீடு அமைத்து தங்கிக் கொள்கிறார்கள். தற்போது அவர்களுக்கு என தனியான பள்ளியொன்று கட்டப்பட்டிருக்கிறதாம்.

பரபரப்பும் ஆர்ப்பட்டமும் மிக்க சென்னைநகரை காணிகளில் பலரும் முதல்முறையாக கண்டிருக்கிறார்கள். நகரில் கேட்கும் கூச்சலும் இடைவிடாத பேச்சும் தான் அவர்களால் புரிந்து கொள்ள முடியவேயில்லை. எதற்காக இப்படி கத்துகிறார்கள் என்று கேட்கிறார்கள். சென்னையில் அவர்கள் மிக ஆசையாக காலணிகளை வாங்கியதை காட்டினார்கள். கிரிக்கெட் போட்டியின் பரபரப்பிலும் புதுப்படத்திற்கு டிக்கெட் வாங்க அலை மோதும் கூட்டத்திற்கும் இடையில் காணிகளின் குரல் வெளித்தெரியாமலே போய்விட்டது.

காணிக்காரர்கள் ஒவ்வொரும் தங்கள் பையில் சிறிய கூழாங்கல் ஒன்றை வைத்திருக்கிறார்கள்.ஊர் ஞாபகம் வந்தால் அதை கையில் வைத்து உருட்டிக் கொள்வோம் என்று சிரித்தபடி சொன்னாள் ஒரு காணிக்காரப்பெண்.

மரங்களில் வீடு கட்டிவாழ்வோம் என்று மலைவாசி சொன்னதை கேட்ட சென்னை சிறுமியொருத்தி நீங்கள் எல்லாம் பறவைகளா என்று கேட்டது தான் மாநகரின் நிஜம். காணிகளை பார்க்கும் போது இயல்பாகவே சில சந்தேகம் நம்மைபற்றி வருகிறது. சென்னையில் சூரியனை ஒரு நாளைக்கு ஒருமுறையாவது ஏறிட்டு பார்ப்பவர்கள் எவ்வளவு சதவீதமிருப்பார்கள்? காகம் குருவி தவிர வேறு பறவைகளை குழந்தைகள் கண்டிருக்கிறார்களா? கதைகளையும் பாடல்களையும் நாம் மனதிலிருந்து மெல்ல அப்புறப்படுத்திவிட்டு அந்த இடத்தை தொலைக்காட்சிக்கு தந்துவிட்டோம். குழந்தைகள் தொலைக்காட்சியில் தான் கதைகேட்டுவளர்கிறார்கள். இன்றைக்கும் ஒரு ஆய்வுப்பொருளாக மட்டும் ஆதிவாசிகள் மிஞ்சியிருப்பது தான் நமது துரதிருஷ்டம். யோசித்துப் பார்க்கும் போது புரிகிறது காணிகளிடம் நாம் கற்றுக்கொள்வதற்கு நிறைய இருக்கிறது என்று..


நாள் : 10/8/2004 2:57:25 PM

உலகமயம்

சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக வருமானவரித்துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அகில இந்திய எழுத்தாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டிருந்தேன். தேசிய அளவிலான கருத்தரங்கம் இது. உலகமயமாக்கலும் அதன் சமூக, கலாச்சார விளைவுகளும் பற்றியது இக்கருத்தரங்கம். குறிப்பாக ஒவ்வொரு மொழியிலும் உலகமயமாக்கல் அங்குள்ள இலக்கியங்களில் எப்படி பிரதிபலிக்கபட்டிருக்கின்றது என்பதைக் குறித்து விவாதிப்பதற்காக சென்னையில் நடைபெற்றது.

அஸ்ஸாமி, பஞ்சாபி, ஒரியா, மராத்தி, குஜராத்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, தமிழ் , ஹிந்தி மொழிகளை சேர்ந்த 35 படைப்பாளர்கள் கலந்து கொண்டார்கள். எட்டு அமர்வுகளாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நேற்று மதியம் சிறுகதை அமர்வின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டேன். இன்று காலை நடைபெற்ற சமகால இலக்கியம் பற்றிய அமர்வில் உரையாற்றினேன். கருத்தரங்கில்
* பிரபஞ்சன்,
* ஜெயகாந்தன்,
* சா.கந்தசாமி
* அசோகமித்ரன்
ஆகியோர் கலந்து கொண்டனர்.

உலகமயமாக்கல் பற்றி தமிழில் அதிகம் நு¡ல்கள் வெளியாகவில்லை. குறிப்பாக படைப்பிலக்கியத்தில் அது குறித்த தீவிரமான பார்வைகள் உருவாகவில்லை. நான் உலகமயமாக்கல் கலாச்சாரத்தில் ஏற்படுத்திவரும் மாற்றங்கள் குறித்து எனது பார்வைகளை பகிர்ந்து கொண்டேன். குறிப்பாக தமிழ் மொழி கல்வபிப்புலங்கள் மற்றும் தொடர்பு சாதனத்திலிருந்து மெல்ல விலக்கபட்டு வருவதையும் தமிழின் மரபான இலக்கியங்கள் மற்றும் அறிவுசார் துறைகள் புறக்கணிக்கபடுவதையும் பற்றி எடுத்துரைத்தேன்.

பிரபஞ்சன் ந.பிச்சமூர்த்தி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே தனது கவிதையில் உலகமயமாக்கல் பற்றி மிக விளக்கமாகச் சொன்னார். பூவுலகின் நண்பர்கள் என்ற அமைப்பு தொடர்ந்து தமிழில் உலகமயமாக்கலின் விளைவுகள் பற்றிய நு¡ல்களை வெளியிட்டுவருகிறார்கள். அது போலவே பிரளயன் வீதி நாடகங்கள் நடத்தி வருகிறார். உலகமயமாக்கலின் போது உலகம் ஒரே கிராமமாகிவிடும் என்கிறார்கள். அது நிஜம். ஆனால் கிராமங்கள் உயிரோடு இருக்குமா என்பது சந்தேகத்திற்குரியது தான்.

தெலுங்கிலும் ஹிந்தியிலும் தீவிரமாக இப்பிரச்சனைகள் விவாதிக்கபட்டிருக்கின்றன. அதன் பிரதிநிதிகளாக வந்த எழுத்தாளர்கள் வாசித்த கட்டுரைகளில் அதை உணர்ந்து கொள்ள முடிந்தது.

ஊரான் ஊரான் தோட்டத்திலே

ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்காய்

காசுக்கு ரெண்டு விக்க சொல்லி

காயிதம் போட்டான் வெள்ளைக்காரன்

இந்த நாட்டுப்புறப்பாடல் உலகமயமாக்கல் என்பது காலனியாக்குவதிலிருந்து துவங்குகிறது என்பதையே காட்டுகிறது. ஹிந்தியிலும் ஆங்கிலத்திலுமாக நடைபெற்ற இக்கருத்தரங்கம் புதிய விவாதங்களை உருவாக்கியதோடு பரஸ்பரம் எழுத்தாளர்களுக்குள் ஒரு பகிர்ந்து கொள்ளலை உருவாக்கியது. ஹிந்தியில் சமகால தமிழ்சிறுகதை தொகுப்பு ஒன்றை தொகுக்கும் திட்டம் ஒன்றும் இங்கு முடிவு செய்யபட்டுள்ளது.


கட்டபொம்மன் காடு

சுதந்திரப்போராட்டம் பற்றிய நினைவுகள் வெறும் காகிதக்குறிப்புகளாக மட்டும் எஞ்சியிருக்கும் சமகாலத்தில் ஒரு கிராமம் சரித்திரத்தின் நிழலிலே வாழ்ந்து கொண்டிருக்கிறது. பாஞ்சாலங்குறிச்சி பிடிபட்ட பிறகு அங்கிருந்து தப்பிய கட்டபொம்மன் தலைமறைவாக வாழ்வதற்கு புதுக்கோட்டைப் பகுதிக்கு வந்து சேர்ந்தான். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதிக்கு பக்கத்தில் உள்ள குமாரபட்டி என்ற ஊரின் புறவெளியில் உள்ள அடர்ந்த காட்டில் கட்டபொம்மன் ஒளிந்திருந்தாகவும், அவனை தந்திரமாக காவலர்கள் பிடித்ததாகவும் சரித்திரக்குறிப்புகள் கூறுகின்றன. நு¡ற்றாண்டுகளைக் கடந்து இன்றும் அந்தக் கிராமத்தில் கட்டபொம்மன் ஒளிந்திருந்த காடு அப்படியே பாதுகாக்கபட்டு வருகின்றது. அதை உமைங்குறை என்று மக்கள் அழைக்கிறார்கள்.

அந்த கிராமத்து மக்கள் தங்கள் ஊரில் வந்து ஒளிந்திருந்த கட்டபொம்மனைப் புதுக்கோட்டை அரசரின் ஆணையின்படி பிடித்துக் கொடுத்துவிட்டார்களே என்ற குற்றவுணர்ச்சியில் கட்டபொம்மன் ஒளிந்த காட்டை எந்த சிதைவுமின்றி தெய்வம் போல வழிபடுகிறார்கள். அக்காட்டிலிருந்து சிறு சுள்ளிஒடிப்பது கூட கிடையாது. மரங்கள் தானாக விழுந்து மக்கிக் கிடக்கின்றன. கட்டபொம்மனோடு சேர்ந்து ஒளிந்திருப்பதாகச் சொல்லப்படும் ஊமைத்துரையை அவர்கள் தெய்வமாக வழிபடுகிறார்கள்.

கட்டபொம்மன் ஒளிந்திருந்த காலத்தில் விருந்திற்கு அழைத்து அவன் இலையில் சாப்பாட்டை கையில் எடுத்த போது முதுகின் பின்னிருந்து மடக்கிப் பிடித்துவிட்டார்கள் என்று கர்ணபரம்பரைக் கதையொன்றும் அக்கிராமத்திலிருக்கிறது. காட்டில் து¡ர்ந்து போயிருக்கக் கூடிய சிறிய கண்மாய் ஒன்றும் காணப்படுகிறது. பெரிய வட்டப்பாறையும் அதன் அருகில் வேங்கை மரங்களுமிருக்கின்றன. மயில்கள் நிறைய தென்படுகின்றன, ஆள்உயர கள்ளி மரங்களும் காட்டுப்புளியமரங்களும் கொண்ட அந்தக் காடு இப்போதும் வெயில் நுழைய முடியாதபடி தானிருக்கிறது.

அந்த காட்டுபகுதி அக்காலத்தில் சிவகங்கை ஜமீனுக்கும் புதுக்கோட்டை சமஸ்தானத்திற்கும் எல்லையில் அமைந்திருக்கிறது. யாராவது பிடிக்கவந்தால் ஒரு பக்கமிருந்து இன்னொரு பகுதிக்கு போய்விடலாம் . அதனால் தான் அங்கே கட்டபொம்மன் ஒளிந்திருந்தாக சொல்கிறார்கள்.

காலம் எத்தனையோ விஷயங்களைக் கடந்து சென்றுவிட்டிருக்கிறது. ஆனாலும் கிராமத்து மனிதர்களின் நினைவில் இன்னமும் கட்டபொம்மனும் ஊமைத்துரையும் வாழ்கிறார்கள் என்பதற்குச் அத்தாட்சியாகயிருக்கிறது இக்கிராமம்.

பாலாஜி: 10/10/2004 , 9:13:26 AM
மருதுபாண்டியர்கள் இதே போல் அடர்ந்த காட்டில் மரத்தினால் ஆன குகைக்குள் ஒளிந்திருந்தார்களாம். அந்த மரமும், குகையும் காட்டினுள் சென்று புகைபிடித்த பாக்கியினால், தீ அபகரித்துவிட்டதாக குமரி அனந்தன் பேச கேட்டிருக்கிறேன்.


Webulagam நேர்காணல் – எஸ். ராமகிருஷ்ணன்

May 16, 2012 1 comment

 

ஆசிரியர் பற்றி :

இவர் விருதுநகரில் வசிப்பவர். தொடர்ந்து எழுதிக்கொண்டு இருப்பவர். சன் டி.வி-யில் செய்திப் பிரிவில் வேலை செய்து வந்த இவர், எழுத்தில் கவனம் செலுத்த இயலாத காரணத்தால், வேலையை ராஜினாமா செய்தார். இதுவரை 3 சிறுகதைத் தொகுப்புகளும், இரண்டு மொழி பெயர்ப்பு நூல்களும், லத்தீன் அமெரிக்க மேதையான ஜார்ஜ் லூயிஸ் போர்ஹெஸ் பற்றிய ஒரு நூலும் `உப பாண்டவம்’ என்ற நாவலும் வெளிவந்திருக்கின்றன. இது தவிர சிறுகதைகள், கட்டுரைகள், மதிப்புரைகள் என இலக்கியத்தில் தனக்கென ஒரு ஸ்டைலையும், சுயமுகமான பார்வைகளையும் வைத்திருப்பவர். இணைய தளங்களிலும் நேரம் கிடைக்கும்போது, எழுதிவருகிறார். சமீபமாக சென்னைக்கு `மின்பிம்பங்கள்’ வேலையாக வந்திருந்தபோது அவரைச் சந்தித்து உரையாடினோம், அதன் பேட்டி வடிவமே இங்கு கொடுக்கப்படுகிறது. `கவிதைக்கும் இதுவரை இருக்கும் சிறுகதை வடிவங்களுக்கும் இடையே நான் ஒரு `கதைசொல்லல்’ முறையை – ஒரு `Fable’ போன்ற வடிவத்தைக் கட்டமைக்க முயற்சி செய்து வருகிறேன்’ என்று முன்பு ஒரு நேர் பேச்சில் குறிப்பிட்டது, இவரை எங்கள் இணையத்திற்காக சந்திக்கத் தூண்டியது எனலாம்.

 

கேள்வி : உங்கள் கதைகள் ஒரு காலகட்டத்திற்குப் பிறகு – வாழ்வனுபவமாக இல்லாமல் – படிப்பு அனுபவமாகப் போயிருப்பதாக உணர்கிறேன். படிப்பு அனுபவம் / படைப்பு அனுபவம் என்ற வித்தியாசத்தை பலர் வலியுறுத்துகின்றனர் – நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

ஏஸ். ரா : முதலில் படிப்பு / படைப்பு பேதத்தை நான் மறுக்கிறேன். அனுபவம் என்பது உங்களுக்கு மட்டுமே நேர்வது என்பது மட்டுமே அல்ல, உங்களுக்கு நேராத ஒன்றும் வேறு வழியாக உங்களை வந்து சேர்கிறது. குடும்ப உறவுகள், வெளி வட்டாரப் பழக்க வழக்கங்களில் நாம் எல்லாவற்றையுமே நேரடியாக அனுபவிப்பதில்லை. ஆகவே அனுபவம் என்பது உங்களுக்கு நேர்ந்த மற்றும் நேராதவைகளின் திரட்சியேயாகும். அனுபவம் என்பது அதன் திரும்ப திரும்ப நடக்கும் தன்மையிலேயே நம்மிடம் வடிவம் பெற்றுக் கொள்கிறது, பல லட்சம் முறை ஒரே நேரத்தில் நிகழ்வுகள் நடக்கும்போது அது யாருக்கு நடக்கிறதோ அதை வைத்து தன்னை அது வடிவமைத்துக் கொள்கிறது.

சாலையில் ஒரு புறம் சைக்கிள் வருகிறது – மறுபுறம் பைக் ஒன்று வருகிறது. இது ஒரு மூன்றாம் மனிதனுக்கு அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சியாகும். ஆனால் அங்கு ஒரு விபத்து ஏற்படும்போது மூன்றாவது மனிதனுக்கு அதில் ஒரு அதிர்ச்சி அல்லது வேறு ஏதோ ஒரு உணர்வு ஏற்படுகிறது. இங்கு தான் அனுபவம் சாத்தியமாகிறது. ஆனால் பைக் ஓட்டுபவனுக்கோ – சைக்கிளில் வந்தவனுக்கோ அது வேறு மாதிரியான பாடங்கள் கற்றுக் கொடுக்கிறது, உதாரணமாக பைக் ஒட்டுபவர் இனிமேல் இன்டிகேட்டரை ஒழுங்காக உபயோகிப்பான், சைக்கிள்காரன் ஒரு பெல் வாங்கி வைப்பான். நுஒயீநசநைnஉந ளை டநயசniபே. அனுபவம் க்ஷல யீசடினரஉவள – களை உற்பத்தி செய்து கொண்டே இருக்கிறது. ஆகவே `அனுபவம்’ சந்தர்ப்ப செயலாகவோ, அல்லது திட்டமிட்டதாகவோ இருப்பதன் உணர்வு நிலையின் திரட்சி.

இன்னொரு உதாரணம் சொல்லணும்னா – நீங்க வீட்டுக்கு போவதற்கும், செங்கல்பட்டு ரயில்வேலைனில் மாடு மேய்வதற்கும் எந்த தொடர்பும் இல்லை – உங்கள் அனுபவத்தில், ஆனால் அந்த மாடு அடிபட்டு, அதனால் ரயில்நின்று, கேட் திறக்காமல் போனால், நீங்கள் வீட்டுக்குப் போக ஏற்படும் தாமதம், உங்கள் உணர்வு நிலையை பாதிக்கக்கூடியது. அப்போது இந்த நிகழ்ச்சி ஒரு அனுபவமாகிறது. நிகழ்ச்சிகள் அதனதன் ஒழுங்கில் நடந்து கொண்டிருக்கின்றன. அதற்கென்று ஒரு `ஒழுங்கமைவு’ இருக்கிறது. இந்த ஒழுங்கு `Disturb’ ‘ ஆகும்போது உங்க அனுபவமும் மாத்தி அமைக்கப்படுகிறது.

கால் முளைத்த கதைகள் – எஸ். ராமகிஷ்ணன் – உயிர்மை பதிப்பகம்

May 15, 2012 2 comments

ஆந்தைக்குத் தூக்கம் என்றால் ரொம்பவும் பிடிக்கும். அது பகல் முழுவதும் தூங்கிக் கொண்டேயிருக்கும். ஒரு நாள் ஒரு ஆந்தை மரத்தில் தூங்கிக் கொண்டிருந்தது. மரங்கொத்தி ஒன்று அந்த மரத்தை கொத்தத் துவங்கியது. தூக்கம் கலைந்து ஆந்தை கோபத்துடன் ஏன் மரத்தைக் கொத்துகிறாய் என்று கேட்டது. மரங்கொத்தி என் பசிக்கு மரத்தைச் சாப்பிடுகிறேன். நீ ஏன் எப்போதும் தூங்கிக்கொண்டே இருக்கிறாய் என்று கேட்டது. பதில் சொல்வதற்குள் ஆந்தை கொட்டாவி விட்டுக் கொண்டே மறுபடியும் தூங்கியது. மறுநாள் அந்த மரத்தில் ஒரு தூக்கனாங்குருவி கூடு கட்டியது. அதன் சப்தம் கேட்டு விழித்த ஆந்தை எதற்காகக் கூடு கட்டுகிறாய் என்று கேட்டது.

குருவியும் குளிர்காலத்தில் பாதுகாப்பாக இருக்க வேண்டாமா என்றது. ஆந்தை என்னை குளிர் எதுவும் செய்யாது நான் கூடு கட்டத் தேவையில்லை என்று சொல்லிவிட்டு தூங்கிவிட்டது. குளிர்காலம் வந்தது. நட்சத்திரங்கள் கூட நடுங்கத் துவங்கின. மரங்களில் இருந்த கூடுகளில் பறவைகள் அடைந்து கொண்டு விட்டன. ஆந்தை குளிரில் நடுங்கியது. கூடு கட்டுவது எப்படி என்றே தெரியாமல் போய்விட்டோமே என்று கலங்கியது. குளிர் நாளுக்கு நாள் அதிகமாகி ஆந்தையை வாட்டி எடுத்து எப்படியாவது ஒரு கூடு கட்டிக்கொள்ள வேண்டும் என்று ஆந்தை முடிவு செய்தது. குளிர்காலம் முடிந்து கோடைக்காலம் வந்தது.

ஆந்தை ஒரேயரு நாள் கூடு கட்டுவதற்கு சுள்ளிகளைப் பொறுக்கி வந்து மரத்தில் அடுக்கியது. அதற்குள் சோம்பேறித்தனம் அதிகமாகிவிட திரும்பவும் தூங்கத் துவங்கிவிட்டது. அன்றிலிருந்து இன்று வரை ஆந்தையால் கூட்டைக் கட்ட முடியவில்லை. இது தென் ஆப்பிரிக்காவின் ஒரு பழங்குடியினத்தவரின் கதை.

இதுபோல நெல் எப்படி உருவானது?

நாய் ஏன் வாலை ஆட்டுகிறது?

பெண்களுக்கு ஏன் தாடி வளர்வதில்லை?

என்கிற ஒரு நைஜீரியா கதை உள்ளிட்ட 80 கதைகளை ஒரு தொகுப்பாக வெளியிட்டுள்ளார் எஸ். ராமகிருஷ்ணன்,

உலகமெங்கும் உள்ள முப்பது பழங்குடியினத்தவர்கள் சொன்ன கதைகளிலிருந்து தேர்வு செய்து இந்த தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. சிறுவர்களுக்காக எழுதப்பட்ட நூலாக சொல்லப்பட்டாலும் அனைவரும் படிக்கும்படி மிகவும் சுவாரசியமாக இருக்கிறது இந்த நூல்.ஆக, குழந்தைகளுடைய மகிழ்ச்சிக்காகத் தன் பங்களிப்பை செய்திருக்கின்ற எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்கும் நாமெல்லாம் நன்றி சொல்லலாமே.

SRaa on Virginia Woolf: How to read the books: புத்தகம் படிப்பது எப்படி?

May 15, 2012 Leave a comment

புதிய புத்தகம் பேசுது – அக்டோபர்10

புத்தகம் படிப்பது என்பது எளிமையானதில்லை. அது ஒரு நுட்பமான கலை. என்ன படிப்பது. எப்படி படிப்பது. ஏன் சில புத்தகங்கள் உடனே புரிந்துவிடுகின்றன. சில புரிவதேயில்லை. ஒரே புத்தகம் எப்படி வெவ்வேறு வாசகர்களால் வேறு விதமாகப் படிக்கப்படுகிறது. சில புத்தகங்கள் ஏன் பல நூறு வருசமாக யாவருக்கும் பிடித்திருக்கிறது. படிப்பதனால் என்ன பயனிருக்கிறது. இப்படி புத்தகங்கள் தொடர்பாக நூறு கேள்விகளுக்கும் மேலாகயிருக்கின்றன.

இந்தக் கேள்விகளை வேறு வேறு வடிவங்களில் உலகின் எல்லா இடங்களிலும் யாரோ யாரிடமோ கேட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள். இதற்கான பதில்களை ஒவ்வொரு எழுத்தாளனும் அவனளவில் தெளிவுபடுத்திக் கொண்டேயிருக்கிறான். ஆனால் கேள்வி அப்படியே இருக்கிறது.

நான் படிக்கத் துவங்கிய வயதில் இதே கேள்விகளுடன் இருந்தேன். இன்று வாசிக்கத் துவங்கும் ஒரு இளம்வாசகன் அதே கேள்விகளுடன் என்னிடம் வருகிறான்.

இந்தக் கேள்விகளுக்கான பதிலாக நான் வாசிக்க சிபாரிசு செய்வது ஒரு கட்டுரையை . அதன் தலைப்பு. How Should One Read a Book?.

1926 வது வருடம் இந்த கட்டுரையை வர்ஜினியா வுல்ப் (Virginia Woolf) எழுதியிருக் கிறார். 83 வருசங்களுக்குப் பிறகும் இக்கட்டுரை தரும் விளக்கம் நெருக்கமாகவே உள்ளது. வர்ஜீனியாவின் கட்டுரை இந்தப் பதில்களை ஒரு அறிவுரையாக எடுத்துக் கொள்ளவேண்டாம் என்ற எச்சரிக்கையோடு துவங்குகிறது. காரணம் புத்தகம் வாசிப்பதற்கு எவரது அறிவுரையும் வழிகாட்டலும் பயனற்றதே. அது நீச்சல் அடிப்பது எப்படி என்று சொற்பொழிவு ஆற்றுவது போன்றது,

எது நல்ல புத்தகம் என்று நமது வாசிப்பு அனுபவத்தை வேண்டுமானால் பரிந்துரை செய்யலாம். மற்றபடி இப்படிப் படி, இப்படிப் படித்தால் மட்டுமே புரியும் என்ற அறிவுரைகள் பெரும்பாலும் பொருந்தக் கூடியதில்லை.

ஆகவே வர்ஜீனியா வுல்ப்பின் கட்டுரை எப்படி ஒரு புத்தகத்தை வாசிப்பது என்பதைப் பற்றிய தன்னிலை விளக்கம் போலவே உள்ளது. மூன்றே பக்கம் உள்ள சிறிய கட்டுரை. ஆனால் பலமுறை வாசித்து விவாதிக்க வேண்டியது. வர்ஜீனியாவின் முதல் பரிந்துரை. எந்தப் புத்தகத்தையும் படிப்பதற்கு முன்பும் அதைப் பற்றிய முன்முடிவுகள் வேண்டாம், திறந்த மனதோடு இருங்கள். எழுத்தாளரை உங்களது எதிரியைப் போல பாவிக்காதீர்கள். எழுத்தின் மீதான உங்கள் தீர்ப்பைச் சொல்வதற்காக படிக்க முயற்சிக்க வேண்டாம். அது உங்களை நீங்களே நீதிபதி ஸ்தானத்தில் உட்கார வைத்துக் கொண்டு புத்தகத்தையும் எழுத்தாளனையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவது போன்றது. அதில் நஷ்டமடையப் போவது நீங்களே.

ஒரு புத்தகம் அதிகம் விற்பனையாவதாலோ.அல்லது பிரபலமாக இருப்பதாலோ நல்லபுத்தகமாக இருக்கப்போவதில்லை. மாறாக அது நல்ல புத்தகமா இல்லையா என்பதைத் தீர்மானிக்கப் போவது நீங்களும் உங்களது திறந்த மனதுமே.அந்த மனது உள்ளுணர்வு சார்ந்தே பெரிதும் செயல்படக்கூடியது. ஆகவே உங்கள் உள்ளுணர்வு ஒன்றைப் படிக்கத் தேர்வு செய்கிறது என்றால் அதை அனுமதியுங்கள். படிப்பதற்கான மனநிலையும், நேரமும், விருப்பமும், பகிர்ந்து கொள்ள நட்புமே புத்தக வாசிப்பில் முக்கியமானவை.

இரண்டாவது பரிந்துரை. எழுத்தையும் எழுத்தாளர்களையும் விமர்சனம் செய்வது எளிமையானது. ஆனால் புரிந்து கொள்வது எளிதானதில்லை. அதற்கு வாசகன் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். எந்த ஒரு படைப்பையும் வாசிப்பதற்கு மூன்று விசயங்கள் முக்கியமானவை. ஒன்று அகப்பார்வை. அதாவது நாம் எதை வாசிக்கிறோமோ அதை நம் மனதால் உணர்ந்து கொள்வது. (Perception) ,

இரண்டாவது கற்பனை. (imagination) படைப்பின் ஊடாக வெளிப்படும் மனிதர்கள், நிலக்காட்சிகள், நிகழ்வுகள், நினைவுகளைக் கற்பனை செய்து புரிந்து கொள்ளும் இயல்பு.இதன் மூலமே கதையோ கவிதையோ நாம் அர்த்தப்படுத்திக் கொள்கிறோம்

மூன்றாவது கற்றல் (Learning) எழுத்தின் வழியாக நாம் கற்றுக் கொள்ள முன்வருவது. இது தகவலாகவோ, அறிவுத்தொகுப்பாகவோ, உண்மையாகவோ. வாழ்வியல் அனுபவமாகவோ எவ்விதமாகவும் இருக்கலாம். அதை நாம் கற்றுக் கொள்கிறோம் என்ற ஈடுபாடும், தீவிர அக்கறையுமே புத்தகத்தை ஆழ்ந்து வாசிக்க உதவும்.

ஒரு புத்தகம் புரியவில்லை என்றால் கொஞ்ச காலம் கழித்து மறுபடி படித்துப்பாருங்கள். அப்படியும் புரியவில்லை என்றால் இன்னும் கொஞ்ச நாள் காத்திருங்கள். அதற்காக புத்தகம் தவறானது என்ற முடிவிற்கு அவசரமாக வரவேண்டாம். காரணம் எளிய வரிகள் கூட இன்றும் புரிந்து கொள்ளப்படாமலே இருக்கின்றன. ஆத்திசூடியில் வரும் ஙப்போல்வளை என்பதற்கு என்ன பொருள் என்று கேளுங்கள். எண்பது சதவீதம் பேர் விழிப்பார்கள். ஆகவே எளிய விசயங்களில் கூட புரியாமை இருக்கவே செய்கிறது. கண்ணால் மரத்தைப் பார்த்துவிட முடியும். அதன் வேர்களைக் கண்ணால் பார்த்துத் தெரிந்து கொண்டுவிட முடியாது. அப்படித்தான் புத்தகங் களும். புத்தகங்களுடனான நமது உறவு எப்போதுமே உணர்வு பூர்வமானது. ஆகவே புத்தக வாசிப்பில் உணரச்சிவெளிப்பாட்டிற்கு முக்கிய இடமிருக்கிறது. ஒரு புத்தகம் எப்படி உணர்ச்சி களை வெளிப்படுத்துகிறது. எந்த கணங்களில் அது வாசகனை ஒன்றிணைக்கிறது. எந்த நிலைகளில் வாசகனை மீறிச்செல்கிறது என்று வாசகன் எப்போதுமே உன்னிப்பாக அவதானிக்கிறான்

அத்தோடு வாசிப்பின் வழியாக ஒரு இன்பம் துய்த்தலை வாசகன் நிகழ்த்துகிறான். இது புத்தகம் வாசிப்பதற்கான முக்கியக் காரணிகளில் ஒன்று. ஜனரஞ்சகமான நாவல்களின் வெற்றிக்கு முக்கியக் காரணம் அது தரும் உடனடி வாசிப்பு இன்பமே. அதே போல செவ்வியல் படைப்புகள் பலமுறை திரும்பத் திரும்ப வாசிக்கப்படுவதற்கும் அதன் தனித்துவமான வாசிப்பு இன்பமே முக்கியக் காரணமாகயிருக்கிறது.

வாசிப்பின் வெற்றியை முடிவு செய்வதில் வாசிப்பு இன்பத்திற்கு எப்போதுமே பெரிய பங்கிருக்கிறது. ஆகவே சுவாரஸ்யமாக இருப்பது இலக்கியத்தரமில்லாதது என்று முடிவு செய்துவிட முடியாது. அதே நேரம் வெறும் சுவாரஸ்யம் ஒரு போதும் இலக்கியமாகிவிடாது.

புரிந்து கொள்ள முடியவில்லை என்பதே புத்தக வாசிப்பின் பெரிய சவால். ஒரு புத்தகம் புரிந்து கொள்ளப்படாமல் போவதற்கு புத்தகம் மட்டுமே காரணமாக இருந்துவிடாது. வாசிப்பவனுக்கும் சமபங்கிருக்கிறது. அர்த்தம் புரியாமல் போவது வேறு. எதற்காக எழுதப்பட்டிருக்கிறது என்று புரிந்து கொள்ளாமல் போவது வேறு.

ஒன்று அதன் மொழி மற்றும் வாக்கிய அமைப்புகள் காரணமாக அது புரியாமல் போயிருக்கக் கூடும். எந்தப் பொருள் பற்றிப் பேசுகிறதோ அது நமக்கு பரிச்சயமற்றிருக்கக்கூடும். அல்லது அது ஆழ்ந்து புரிந்து கொள்ள வேண்டிய பயற்சி தேவைபட்டதாக இருக்கக்கூடும். அல்லது அந்தக் கதையோ. கவிதையோ எதைப்பற்றிப் பேசுகிறதோ அது நேரிடையாக இல்லாமல் மறைமுகமாக. அரூபமான தளங்களில் வெளிப்படுத்தப்பட்டிருக்கக் கூடும். ஒரு படைப்பைப் புரிந்துகொள்ள அது குறித்து ஆதாரமான அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். இசையைப் போல படைப்பை நாம் கற்பனை செய்து கொள்வதன் வழியே ஆழமான தளங்களை நோக்கி வாசிப்பை நகர்த்திக் கொண்டுபோக முடியும்.

சில புத்தகங்களை வாசிப்பதற்கு வயதும் அனுபவமும் போதாமல் இருக்கக் கூடும். அந்தப் புத்தகம் இன்னொரு வயதில் இன்னொரு மனநிலையில் புரிவதோடு நெருக்கமாகவும் மாறிவிடும். சமூக கலாச்சார, சரித்திர, விஞ்ஞான அறிவும், சங்கேதங்கள், குறியீடுகள், கவித்துவ எழுச்சிகளைப் புரிந்து கொள்ளும் நுட்பமும் வாசகனுக்கு அவசியமானவை. அவை ஒரு நாளில் உருவாகிவிடு வதில்லை. தொடர்ந்த வாசிப்பும், புரிதலுமே அதை சாத்தியமாக்கு கின்றன.

வர்ஜீனியாவும் அதையே சொல்கிறார். புத்தகங்களை நாம் எப்போதுமே இன்னொரு புத்தகத்தோடு ஒப்பிடுகிறோம். இந்த ஒப்பீட்டினை விமர்சனம் என்று நினைக்கிறோம் . ஒப்பிடுவது தவறில்லை. ஆனால் எதை எதோடு ஒப்பிடுகிறோம். அப்படி ஒப்பிட என்ன காரணம் என்று யோசிப்பதேயில்லை. ஒவ்வொரு புத்தகமும் ஒரு மனப்போக்கின் வெளிப்பாடு. அதன் தனித்தன்மையை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். பிறகு அதை ஒப்பீடு செய்து பார்க்கலாம். மோசமான புத்தகங்களைக் கழித்துக்கட்ட ஒப்பீடு அவசியம் தான். ஆனாலும் அப்போதும் கூட அந்த புத்தகத்தைப் பற்றிய தீர்ப்பு போன்று முடிவுகளை வெளிப்படுத்துவதை விட அதை எப்படிப் புரிந்து கொண்டேன், அதில் என்ன அம்சங்கள் மிகையாகவோ, வலிந்து உருவாக்கப்பட்டதாகவோ, செயற்கையாகவோ, பொருத்தமில்லாமலோ இருக்கிறது. அது எழுத்தாளனின் நோக்கமா. அல்லது வாசகன் அப்படிப் புரிந்து கொள்ள சுதந்திரமிருக்கிறதா என்று விவாதத்திற்கான புள்ளியாகவே வளர்த்து எடுக்க வேண்டும்.

நாவலை வாசிப்பது என்பது ஒரு பெரிய அடுக்குமாடிக் கட்டடம் ஒன்றை தூரத்தில் இருந்து பார்த்து அது ஒரு கட்டடம் என்று சொல்லிக் கடந்து போவதைப் போல எளிதானதில்லை. கண்ணில் பார்ப்பதைப் போல இலக்கியத்தில் யாவும் உடனே புரிந்துவிடாது. வார்த்தைகளைக் கொண்டு உருவாக்கிய உலகமது. ஆகவே அதைப் புரிந்து கொள்ள நீங்கள் எழுத்தாளரின் சகஜீவி போல உடன் வேலைசெய்யும் ஒருவரைப் போல இணக்கமான மனநிலையோடு அணுகுங்கள்.

ஒரு நண்பனைப் போல அவனோடு சேர்ந்து பயிலுங்கள். சேர்ந்து உரையாடுங்கள். எழுத்து ஒரு திறந்த உரையாடல். எல்லா எழுத்தாளர்களும் இயல்பில் வாசகர்களே. ஆகவே அவர்களும் நம்மைப் போலவே ஏதோ சில புத்தகங்களின் தீவிர வாசகர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.

எழுத்தாளர் பிரபலமானவர். புகழ் அடைந்தவர் என்பதற்காக எந்தப் புத்தகத்தையும் நல்லது என்று முடிவு செய்யாதீர்கள். நல்ல எழுத்தாளர்கள் மோசமான புத்தகங்களை எழுதியிருக்கிறார்கள். மோசமான எழுத்தாளர்கள் சமயங்களில் நல்ல புத்தகங்களை எழுதிவிடுகிறார்கள். ஆகவே புத்தகம் அதற்கான விதியைக் கொண்டிருக்கிறது. ஆகவே எழுத்தாளனின் பெயர் புகழால் மட்டுமே வாசகனின் விருப்பத்திற்கு உரியதாக புத்தகங்கள் அமைந்துவிடுவதில்லை.

ஷேக்ஸ்பியர், டிக்கன்ஸ்,விக்டர் க்யூகோ, பால்சாக், மாபசான், டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி உள்ளிட்ட உலகில் உள்ள பெரும்பான்மை வெற்றி பெற்ற எழுத்தாளர்கள் தங்கள் புத்தகங்களில் சில மிகக் குறைவான வாசகர்களையே பெற்றிருக்கிறது என்று அறிந்தேயிருந்தார்கள். லட்சம் பேர் படிப்பதால் எந்த ஒரு புத்தகமும் உயர்ந்த இலக்கியம் ஆகிவிடாது. நூறு பேர் மட்டுமே படிப்பதால் அது தரம்குறைந்தது என்று எண்ணிவிட முடியாது. புத்தகங்களை வாசிப்பவர்களின் எண்ணிக்கை நிலையானதில்லை. அது மாறிக் கொண்டேயிருக்கக் கூடியது.

ஒவ்வொரு புத்தகத்தையும் வாசகன் தனது ஒரு குறிப்பிட்ட மனநிலையில் இருந்தே படிக்கிறான். அதுவே புத்தகத்தைத் தேர்வு செய்கிறது. அதனால் தான் ஒரே நேரத்தில் வாசகனால் பல்வேறுவிதமான எழுத்தாளர்களின் புத்தகங்களைப் படிக்கவும் ரசிக்கவும் முடிகிறது. ஒரு புத்தகம் முழுவதும் பிடிக்காமல் போவது என்பது வேறு . புத்தகத்தின் சில பகுதிகள் பிடித்திருக்கிறது என்பது வேறு. பலநேரங்களில் முழுமையாக ஒரு புத்தகம் நமக்கு பிடித்திருக்காது. ஆனால் அதில் உள்ள சில நல்ல வரிகள் பத்திகளுக்காக அதை வாசித்துக் கொண்டேயிருப்போம்.

கதை கவிதை நாவல் சிறுகதை, கட்டுரை வாழ்க்கை வரலாறு, விமர்சனம் என இலக்கியத்தினை எத்தனையோ விதமாக வகைப்படுத்தி வைத்திருக்கிறோம். வாசகன் ஒவ்வொன்றையும் வாசிக்க ஒருவிதமான பயிற்சியும் நுட்பமும் வைத்திருக்கிறான். அதற்கென அவன் எந்த விசேசப் பயிற்சியும் எடுத்துக் கொண்டதில்லை

கவிதையில் அரூபமாக உள்ள ஒன்றை எளிதாகப் புரிந்து கொள்ளும் வாசகன் நாவலில் அரூபமான, மாயமான சம்பவங்களை ஒத்துக் கொள்ள மறுக்கிறான். தர்க்கம் செய்கிறான். அதுதான் வாசகனின் இயல்பு. ஆனால் வாழ்க்கை வரலாற்றை வாசிக்கையில் அது நாவல் போல உணர்வதும், நாவலை வாசிக்கையில் அது உண்மையான மனிதர்களின் வாழ்வு போல நம்பப்படுவதுமே இலக்கிய வாசிப்பின் நுட்பம்.

இன்று வாசகன் ஒரு ரசிகன் என்பதைத் தாண்டி எழுத்தாளனுக்கு இணையாக வைத்து பேசப்படுகிறான். தான் எப்படி ஒன்றைப் புரிந்து கொண்டேன் என்பதை முன்வைப்பதே வாசிப்பின் முதன்மைச் செயல்பாடாக உள்ளது.

புத்தகத்தைப் பற்றிய ஆசிரியரின் முடிவுகள் இன்று வாசகனைக் கட்டுப்படுத்துவதில்லை. சமூகம் , உளவியல், மொழியியல், தத்துவக்கோட்பாடுகள், தர்க்கம் மற்றும் விமர்சனப் பார்வைகளின் வழியே ஒரு படைப்பை ஆழ்ந்து அணுகி அதன் சமூக கலாச்சார அரசியல் தளங்களை, புரிதல்களைக் கண்டு அடைவதும் விமர்சிப்பதும் வாசகனின் முன்உள்ள சவாலாக உள்ளன.

ஆகவே வாசகன் ஒரு புத்தகத்தின் வழியே எழுத்தாளனின் மன அமைப்பை , அவனது பலம் பலவீனங்களை ஆராய்கிறான். அதற்கான உளவியல் காரணங்களைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறான். மொழியை எழுத்தாளன் பயன்படுத்தும் முறையும் அதன் அர்த்த தளங்களையும் கவனமாகப் பரிசீலனை செய்கிறான். விஞ்ஞானப் பரிசோதனைக் கூடங்களில் மேற்கொள்ளப்படும் ஆய்வு போலத் துல்லியமான தர்க்க ரீதியான ஆய்வுப்பொருளாக புத்தகங்களை வாசிக்கும் தீவிர வாசிப்பு நிலை இன்று சாத்தியமாகியிருக்கிறது.

அதற்காக ரசனை சார்ந்த வாசிப்பு கைவிடப் படவில்லை. பெருவாரியான வாசகர்கள் இன்றும் தங்களது புத்தக வாசித்தலுக்கான அடிப்படையாக ரசனையைக் கொண்டிருக்கிறார்கள். அந்த ரசனையின் தரமும், நுட்பமும் முன்பை விட இன்று வளர்ந்திருக்கிறது. எழுத்தாளரை ஒரு ரட்சகனைப் போல காண்பதைத் தாண்டி, எழுத்தாளன் மனசாட்சியைப் போல செயல்படுகிறான் என்றே வாசகர்கள் உணர்கிறார்கள்.

புத்தகத்தைப் புரிந்து கொள்ள வாசிப்பின் வழியாக நாம் பெற்ற அனுபவத்தை எழுதிப்பார்ப்பதே சிறந்தது என்கிறார் வர்ஜீனியா. காரணம் அப்போதுதான் சொற்கள் எவ்வளவு வலிமையானவை. எந்தச் சொல்லை எப்படிப் பயன்படுத்துகிறோம், அதில் எவ்வளவு சிரமம் சவால் உள்ளது என்ற எழுத்தின் நுட்பம் பிடிபடும் என்கிறார். ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத பொருட்கள் நிகழ்வுகள் எப்படி வாக்கியங்களின் வழியே ஒன்றிணைக்கப்படுகின்றன என்று நுணுகி வியந்து புரிந்து கொள்ள முயற்சிப்பவனே புத்தகத்தினைக் கொண்டாடுகிறான்

வாசகன் என்பதே ஒரு கற்பனை தான். ஒரு வாசகன் என்பவன் எப்படியிருப்பான் என்று இதுவரை தீர்மானமாக ஒரு சித்திரத்தை முடிவு செய்யவே முடியாது. ஆகவே உலகின் வியப்பூட்டும் கற்பனைக் கதாபாத்திரம் தான் வாசகன். அந்த முகமூடியை யாரும் அணிந்து கொண்டுவிட முடியும். அது யாவருக்கும் பொருந்தக்கூடியது என்கிறார் ஜோர்ஜ் லூயி போர்ஹே,

ஏய் வாசகா உனக்குத் தான் எத்தனை எழுத்தாளர்கள் என்று நகுலனின் ஒரு கவிதை வரிசொல்கிறது. அது தான் உண்மை.

வர்ஜீனியாவுல்பின் கட்டுரையைப் போல நானும் இதே கேள்விக்கான சில பதில்களை வைத்திருக்கிறேன். என்வரையில் ஒவ்வொரு புத்தகமும் மானுட வாழ்வின் ஏதோ சில புதிர்களை அவிழ்க்க முயற்சிக்கிறது. மனித இருப்பு குறித்த சில கவலைகள், ஆதங்கங்கள், வருத்தங்கள், சந்தோஷங்களை ஆவணப்படுத்துகிறது.

இயற்கை, பிறப்பு, இறப்பு, பசி, காமம், மூப்பு , நோய்மை, அதிகாரம், வெற்றி தோல்வி, விதிவசம் என்று எல்லா நூற்றாண்டிலும் மனிதன் சந்தித்த ஆதாரமான கேள்விகளுக்கான விடை தேட முயற்சிக்கிறது. மனித வாழ்வின் மீது நிஜமான அக்கறை கொள்கிறது. அதை மேம்படுத்தவும், சகமனிதனைப் புரிந்து கொள்ளவும் உதவி செய்கிறது.

அன்றாட வாழ்க்கை சார்ந்து உருவாகும் வலிகள், தோல்வியுணர்வு, வெறுப்பு, ஏமாற்றம், வெறுமை, இயலாமை, நிர்கதி யாவும் கடந்து மனிதனை வாழ்வின் மீது பற்றுக் கொள்ள வைக்கிறது. மானுட நினைவுகள் காற்றில் கரைந்து போய்விடாமல் காப்பாற்றி வைக்கிறது. ஆகவே புத்தகங்கள் வாழ்வின் சின்னஞ் சிறிய ஆவணங்கள். அதன்வழியே மனிதர்கள் கடந்தகாலத்தை அறிந்து கொள்ள முடியும். நிகழ்காலத்தை சந்திக்கத் துணை கொள்ளலாம். எதிர்காலத்தை திட்டமிட முடியும். நல்ல புத்தகங்கள் இதன் சாயல்களைக் கட்டாயம் கொண்டிருக்கின்றன.

எஸ்.ராமகிருஷ்ணன்: ‘கோடுகள் இல்லாத வரை படம்’ தொடர்

May 15, 2012 1 comment
  • வாஸ்கோட காமா,
  • மார்க்கோ போலோ,
  • இபின் பதூதா,- ibn battuta
  • அல்பெரூனி – Alberuni

– உள்ளிட்ட பயணிகளின் திரைகடலோடிய அநுபவங்களைப் பற்றிய சுவையான தொடர் இது.

Òஆதியில் கோவா பழங்குடியினரின் வாழ்விடமாக இருந்தது. அவர்களைக் கொன்று அந்த நிலப்பகுதியைக் கிறிஸ்துவ ராஜ்யமாக்கியதில் முதற்காரணகர்த்தா வாஸ்கோடகாமா. காமாவின் கடற்பயணம் எத்தனை சாகசங்களும், விசித்திரங்களும் நிறைந்ததோ அத்தனை அளவு வன்முறையும், வெறிச் செயலும், கட்டுப்பாடற்ற அராஜகமும் கொண்டது. வாஸ்கோட காமா போன்ற கடலோடிகள் தான் நாடு பிடிக்கும் ஆசைகளுக்கு அடிகோலிட்டவர்கள். அவர்களைக் கடல்வழி கண்டு பிடித்தவர்கள் என்று கொண்டாட முடியாது. மாறாக, ராஜ விசுவாசம் என்ற பெயரில் பல தேசங்களைக் கொள்ளையடித்து உயிர்க்கொலை செய்தவர்கள் என்றுதான் கொள்ள வேண்டும். . .’

வெறும் நிகழ்ச்சித் தொகுப்பாக இல்லாமல் இத்தகைய சமூக – அரசியல் சார்ந்த விமரிசனப் பார்வையுடன் எழுதியிருக்கிறார் எஸ்ரா.

S Ramakrishnan on State of Feminism in Tamils: பெண்களைக் குறித்து எஸ்ரா

May 15, 2012 Leave a comment

பெண்ணை உடைமைப் பொருளாக மாற்றிய நிலப்பிரபுத்துவப் பண்பாடுதான் அரசியலிலும் ஆளுமை செலுத்துகிறது. நிலத்தை உடைமையாக்கி, உரிமைகொள்கிற ஆக்கிரமப்பு மன நிலைதான் பெண்ணை ஆக்கிரமிப்பதிலும் செயல்படுகிறது. பெணைத் தனது உடைமையாக ஆண் கருதுகிற மன நிலையாக, அவளது நிலையைத் தீர்மானிப்பது தனது அதிகாரம் என்ற மனநிலையாகச் செயல்படுகிறது.

பெண்ணை வெற்றி கொள்வதே ஒரு முக்கியச் செயல்பாடாகிறது. ஒரு ஆண், தன் வாழ்நாள் முழுக்க எந்த அளவுக்குப் பெண்ணைக் கட்டுப்படுத்தி வைக்கிறானோ அந்த அளவுக்கு அவன் வெற்றி பெற்றவனாகப் பார்க்கப்படுகிறான். காதலி, மனைவி, தாய், மகள், சகோதரி என அனைத்து உறவுகளிலும் இந்த ஆளுமையும் ஆக்கிரமிப்பும் இருக்கின்றன.

அண்மையில் பழநி பேருந்து நிலையத்தில் பார்த்த காட்சி நினைவுக்கு வருகிறது. நள்ளிரவு நேரம். தங்களுடைய பேருந்துக்காகக் காத்திருந்த ஒரு குடும்பத்தில், இரண்டு இளம் பெண்கள் ஒருவர் மேல் ஒருவர் சாய்ந்து தூங்க முயல்கிறார்கள். அவர்களைத் தூங்கவிடாமல் தடுக்கிறான் தந்தை. பெண் பிள்ளைகள் பொது இடத்தில் தூங்கக் கூடாது என்று சொல்கிறான். அவனுடைய வயதான மனைவி தரையிலேயே படுத்துத் தூங்கிக்கொண்டிருந்ததை அவன் தடுக்கவில்லை. அவனுடைய மகன் தூங்கிக்கொண்டிருந்தான்,  அவனையும் தடுக்கவில்லை. ஆனால் வயதுக்கு வந்த மகள்கள் தூங்க அனுமதிக்கவில்லை. அவன் அசந்த நேரத்தில்தான் அவர்களும் சற்று கண்ணயர்ந்தார்கள். அவனுக்கு அவர்கள் மீது அக்கறையில்லை என்று சொல்ல முடியாது. அதே வேளையில், பெண்ணைக் கட்டுப்படுத்துவதன் மூலம் பாதுகாப்பாக வைக்கிற சமூக மனநிலையோடும் அவன் இருந்தான்.

பெண்கள் மீற முயல்கிறபோதெல்லாம் அவர்கள் சொல்ல முனைவது ஒன்றுதான். ‘நான் உன் உடைமைப்பொருள் அல்ல. நாம் இணைந்து வாழ்கிறோம். உனக்குள்ள உரிமைகள் எனக்கும் இருக்கிறது,’ என்பதுதான் மீறுகிற பெண் சொல்கிற செய்தி. ஆணோ, தன் உடைமைப் பொருளாகக் கருதுவதால், பெண்ணின் இடுப்பில் ஒரு கயிறைக்கட்டி, அந்தக் கயிறு எவ்வளவு நீளமோ அந்த நீளத்திற்கு மட்டும் சுதந்திரமாகச் செல்ல அனுமதிக்கிறான். குடும்பத்தின் நிலையைப் பொறுத்து, அந்தக் கயிறு அமெரிக்கா வரையில் கூட நீளும்!

அந்தக் கயிறை அறுக்கிற செயலில், அறுப்பது பற்றிப் பேசுவதில் பெண்கள் இப்போதுதான் இறங்கியிருக்கிறார்கள். பெண் தனியாகக் கூட வாழ முடியும் என்று காட்ட முயல்கிறார்கள். சமுதாயத்தின் சீரழிவுக் கட்டத்தில் இது நிகழ்வதால், பெண் இப்படி உரிமை பேசுவதே கூட ஒரு சீரழிவாகப் பார்க்கப்படுகிறது. கல்வியின் மூலம் சுதந்திரம் கிடைக்கும் என்று பெண் எதிர்பார்த்தாள். நேரெதிராக, இரட்டைச் சுமைதான் பெண்ணின் மீது ஏற்றப்பட்டது. நீ வேலைக்கும் போ, வீட்டு வேலையையும் பார், பண்பாட்டுப் பெருமையையும் காப்பாற்று என்று மேலும் நுட்பமான கயிறுதான் கட்டப்பட்டிருக்கிறது.

பண்பாட்டுப் பெருமை பேசுகிறபோது அதை பக்தியாக்குகிற, புராதனமாக்குகிற முயற்சிதான் நடக்கிறது. அது புனிதமானது, அதிலே கைவைக்கவே கூடாது என்று சொல்கிறார்கள். ஆனால், இப்படிப் பண்பாட்டுப் பெருமை பேசுகிறவர்களில் பெரும்பாலானவர்கள் அதைக் கடைப்பிடிக்காதவர்கள்தான். பெண்கள் பாரம்பரிய ஆடைகளை அணிய வேண்டும் என்பார்கள், அவர்கள் வீட்டுப் பெண்கள் தங்களுக்கு வசதியாக பேன்ட், சட்டை, சுடிதார் என்று தேர்ந்தெடுக்கிறபோது, அதை இவர்கள் தடுப்பதில்லை. சொந்த வாழ்க்கையில் மீறல்களை அனுமதித்துக்கொண்டே, பொது வாழ்க்கையில் பெருமை பேசுகிற இரட்டை நிலையைத்தான் பலரிடம் காண முடிகிறது. மேற்கத்திய நாடுகளில் ஒரு பண்பாட்டை வலியுறுத்துகிறார்கள் என்றால் அதை ஓரளவுக்குக் கைக்கொள்கிறார்கள். இந்தியச் சமூகத்தில்தான் இந்த இரட்டை நிலை.

நாம் விவாதிக்கிற பல கூறுகள் விக்டோரியன் மொராலிட்டி (விக்டோரியா அறம் – ஆங்கிலேய அறநெறி) சார்ந்தவை. அதன் தாக்கத்தில், இங்கே ஏற்கெனவே இருந்த சில முற்போக்கான கூறுகளை இழந்திருக்கிறோம். உதாரணமாக, நியூடிட்டி (நிர்வாணம்) தொடர்பாக இங்கே நிலவியிருந்த கோட்பாடே வேறு. ஆனால், இன்று விக்டோரியன் மொராலிட்டி அடிப்படையிலேயே பெண்ணின் உடல் சார்ந்த ஆபாசம், வக்கிரம் உள்ளிட்ட பார்வைகள் ஊட்டப்பட்டிருக்கின்றன. விதவைத் திருமணம் இங்கே இல்லாமலிருந்தது போன்ற சில பலவீனங்களைப் பயன்படுத்திக்கொண்டு வந்த ஆங்கிலேயர்கள், அவர்களுடைய பலவீனங்களை இங்கே திணித்துவிட்டார்கள்.

பெண்ணுக்குச் சுதந்திரமும் அதிகாரமும் இருப்பது போன்ற மனநிலையை ஏற்படுத்துவதில் மதம் ஒரு முக்கியப்பங்காற்றி வந்திருக்கிது. கதைகளாக, சடங்குகளாக பெண் தெய்வங்களாக பெண்ணின் உடல் சார்ந்த போதனைகளாக, பெண்ணுக்கு ஒரு பண்பாட்டு வெளி வழங்கப்பட்டிருக்கிறது என்ற மனநிலை கட்டப்பட்டிருக்கிறது. எல்லா மதங்களும் இதைச் செய்திருக்கின்றன. இந்து மதத்தில் உள்ள நிலைமைகள் நமக்குத் தெரியும். கிறிஸ்துவத்தில் பெண் புனிதத்துறவியாகிவிட முடிவதில்லை. இஸ்லாமியத்தில் பெண்ணுக்கு முகத்திரையோடு மேலங்கி போடப்பட்டுவிட்டது. பௌத்தத்தில் பெண் துறவிகளுக்குக் கட்டுப்பாடுகள் உள்ளன. சமணத்தில், கடுமையாகத் துறவறம் மேற்கொள்கிற பெண் அடுத்தபிறவியில் ஆணாகப் பிறக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஆன்மீக விடுதலைக்காகத்தான் மதம் என்கிறார்கள். அப்படியானால் அதில் பெண் வெளியே நிறுத்தப்பட்டது எப்படி? ஆகவே பெண் விடுதலை, மதத்திற்கு எதிரான போராட்டத்தோடும் இணைகிறது.

Thanks:

பண்பாடு- புரிதலை நோக்கி…ஒரு கலந்துரையாடல்

செகாவின் மீது பனிபெய்கிறது: எஸ்.ஏ.பி.

May 15, 2012 1 comment

உலக இலக்கியவாதிகளை அறிமுகப்படுத்தும் நூல்: புதிய புத்தகம் பேசுது  டிசம்பர்10  

 

இலக்கியங்கள் வாசிப்பதும், அவற்றைப் பற்றிப் பேசுவதும், எழுதுவதும் ஒரு அற்புதக்கலை. அதுவும் கூட மிகச்சிறந்த படைப்பாளிகளுக்கே அது சாத்தியமும் ஆகும். தமிழில் ஒரு காலத்தில் க.நா.சு. உலக இலக்கியங் களைப்பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தார். அவரது எழுத்துக்கள் கூட அவர்குறிப்பிடும் நாவல்கள், நோபல் பரிசு பெற்ற நாவல்களைப்படிக்கத் தூண்டுவதாக அமைந்ததில்லை. நாவலின் கதையம்சங்களை மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.

க.நா.சு. வுக்கு அடுத்து ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்பு எஸ்.ராமகிருஷ்ணன் அந்தக்களத்தில் இறங்கி வெற்றி நடைபோட்டு வருகிறார். உலக இலக்கிய ஆளுமைகள் பற்றி அவர் எழுதிய செகாவின் மீது பனிபெய்கிறது என்ற தொகுப்பு அண்மையில் உயிர்மை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. நூலில் குறிப்பிடப்பட்டுள்ள படைப்புகளை எப்படியும் நாம் படித்தே தீரவேண்டும் என்ற உந்துதலை எஸ்ராவின் இந்த நூல் நமக்கு வன்மையாக உணர்த்துகிறது. அதைவிட அந்தப் படைப்பாளியின் வாழ்வுபற்றியும் அவரது வாழ்வின் முக்கிய சம்பவங்களையும் அவை அவரது படைப்பில் நிலைத்திருப்பதையும் ஒரு சேரத்தருவதுதான் இந்த நூலின் புதுமையாகும்.

ஒரு படைப்பை அறிமுகம் செய்கிறபோது அந்தப்படைப்பாளியின் வாழ்வுபற்றிய முக்கிய அம்சங்களை எடுத்துக்கூறுவதில்தான் இந்நூலின் மேன்மையான வெற்றி அடங்கியுள்ளது.

லியோ டால்ஸ்டாய்,
தாஸ்தவெஸ்கி,
மாக்சிம் கார்க்கி,
வான்கா,
கோகல்,
பாசுஅலியேவா,
புஷ்கின்,
வர்ஜினியா உல்ப்,
பெசோ,
எர்னெஸ்ட் ஹெமிங்வே,
ராபர்ட்ருவார்க்,
மாப்பசான்,
ஹொமுசாய்,
ஜார்ஜ் ஆர்வெல்,
அன்டன் செகாவ்

போன்ற மாபெரும் இலக்கியகர்த்தாக்களையும் அவர்களது படைப்புலகையும் படித்து முடிக்கிறபோது நம்மை உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்துகிறது. இந்த நூல் அறிமுகம் படைப்பாளிகளின் துயரமான வாழ்க்கை நமது நெஞ்சை உலுக்குகிறது.

மகாத்மா காந்தியால் ‘மகான்’ என்று அழைக்கப்பட்ட டால்ஸ்டாயின் இறுதிநாள் பற்றிய விவரணையிலிருந்து நூல் துவங்குகிறது. போரும் அமைதியும், அன்னாகரீனினா, புத்துயிர்ப்பு போன்ற பிரம்மாண்ட இலக்கியங்களைப் படைத்த டால்ஸ்டாயின் இறுதிநாள் அஸ்தபோவ் என்ற ரயில்நிலைய ஓய்வறையில் முடிகிறது. மரணநேரத்தில் கூட தனக்காக பதிமூன்று பிள்ளைகளைப் பெற்று பல குழந்தைகளைப் பறி கொடுத்த மனைவியைக்கூடப் பார்க்காத சோகம் நம்மை வாட்டுகிறது. ஆனால் டால்ஸ்டாய் தனது மகள்களின் மீது பாசமழை பொழிவது வியப்பளிக்கிறது.

எழுத்தாளரின் வாழ்வு பற்றியும், அவரது படைப்புச் சூழல் மற்றும் கதா பாத்திரங்கள் குறித்தும் வாசகருக்கு நேர்காணல் போலக் காட்டுவதும், விளக்கிச் சொல்வதும் எஸ்ராவின் தனிச்சிறப்பான உத்தியாகும், இது புத்தகத்தை நாம் கீழே வைத்துவிடாமல் தடுக்கிறது. டால்ஸ்டாய் தனது கடைசிநாளில் தனது நூல்களின் பதிப்புரிமையை நாட்டுக்கே சொந்தமாக்கிட வேண்டும்; தனது நிலங்கள் அனைத்தையும் அவற்றை உழுது கொண்டிருக்கும் விவசாயிகளுக்கே பிரித்து தந்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். தனது பெயரால் ஒரு பண்ணை அமைத்து அங்கே இளைஞர்களை டால்ஸ்டாய் வாசிகளாக மாற்றிக் கொண்டிருந்தார். அவர் தனது குடும்பத்தைவிட ரஷ்ய சமூகமே முதன்மையானது என்று கருதினார். வியப்பூட்டும் இந்தச் செய்திகள் டால்ஸ்டாய் மீது நமக்கு மிகப்பெரிய மரியாதையை ஏற்படுத்துகின்றன.

கடைசிவரை தனது நோட்டில் குறிப்பு எழுதியவாறு டால்ஸ்டாய் பேசிக்கொண்டிருக்கிறார். அவர் எழுத முடியாமல் போனதும் தன் மகளை எழுதச் சொல்கிறார். அவரைத் தனது வீட்டுக்கு வந்து தங்கும்படி கடிதம் எழுதிய ஒரு விவசாயிக்கு தனது இயலாமை குறித்து எழுதி நன்றி தெரிவிக்கிறார். இதுவே அவரது கடைசிக் கடிதமாகும்.

9.11.1910ல் டால்ஸ்டாய் இறந்த தினத்தில் ரஷ்யா முழுவதும் துக்கம் அனுஷ்டிக்கப்பட்டது. நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. மாணவர்கள் தங்கள் வகுப்புகளை விட்டுவெளியேறி அஞ்சலிக் கூட்டங்கள் நடத்தினர். அவரது இறுதிச்சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். டால்ஸ்டாய் என்ற இலக்கியவாதி தனி மனிதன் இல்லை. அவர் ரஷ்யாவின் ஆன்மா என்று கொண்டாடப்பட்டார். டால்ஸ்டாயைப் பற்றி முழுமையாக விவரங்களை எஸ்.ரா. தெரிவித்துள்ளார். எழுத்தைவிட வாழ்க்கை அதிகப் புனைவும், திருப்பங் களும், புதிர்கள் அடங்கியதாகவும் இருக்கிறது. இதை அந்த மகானின் வாழ்க்கை நமக்கு சுற்றிக் காட்டுகிறது.

அண்டன் செகாவ் பிறந்து 150வது ஆண்டு இது. சிறுகதை உலகின் மிகப்பெரும் மேதையான செகாவின் வாழ்வும் படைப்புகளும் நெஞ்சை உலுக்குவதாக உள்ளது. சிறுவயதில் சாலையில் கைவிடப்பட்ட குதிரை ஒன்று பனியில் நனைந்தபடி நிற்பதை பார்த்து தானும் பனியில் நிற்கிறார். நீண்ட இரவில் பனி கொட்டி அவரை நடுகங்கச் செய்கிறது. செகாவ் ஒரு நோயாளி. ஆனாலும் அவர் தன்னை வாட்டும் குளிரில் நிற்கிறார். குதிரை இவரைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. மனித வேதனைகளில் முக்கியமானது கைவிடப்படுதலும் நிராகரிப்புமே முக்கியமானது என்பதைத் தனது கதைகளில் உணர்த்துகிறார். செகாவின் மீது பனிபெய்கிறது என்ற கட்டுரை அவரோடும் அந்தக் குதிரையோடும் கொட்டும் பனியில் நம்மையும் நிற்கவைத்துவிடுகிறது.

இரண்டு ஆசான்கள் என்ற கட்டுரையில் அண்டன் செகாவ், மாபசான் ஆகிய இரண்டு இலக்கியச் சிகரங்களை எஸ்ரா ஒப்பியல் ஆய்வுசெய்கிறார். இந்த இருவரையும் ஆழ்ந்து கற்றுத் தேர்ந்தவர்கள் எந்தக் கதையையும் சுலபமாக எழுதிவிடமுடியும் என்று எழுத்தாளர்களுக்கு எடுத்துக்கூறுகிறார். இருவருமே நாற்பது வயதுகளில் இறந்து போனவர்கள். இருவருமே தங்கள் நூற்றுக்கணக்கான சிறுகதைகளைப் பதிமூன்று தொகுதிகளாக வெளியிட்டிருக்கிறரர்கள். இருவருமே வாழ்வின் பெரும் பகுதியைப் பயணங்களிலும் எழுதுவதிலும் கழித்திருக்கிறார்கள். சொந்த வாழ்விலும் இருவரும் இளமையில் துயரமான அவல வாழ்வில் உழன்றிருக்கிறார்கள்.

செகாவ், மாபசான் ஆகிய இருவரின் கதைகள் பெண்களின் அகவுலகைப் பெரிதும் விவரிப்பவை. மனித அவலங் களைப் பிரதிபலிப்பவை. மனித அவலங்களைப் பிரதிபலிப்பவை. ஒதுக்கப்பட்ட மனிதர்கள் மீது இருவரும் அக்கறையுடன் எழுதியவர்கள். செகாவ், 40 வயதிலும் மாபசான் நாற்பத்திரண்டு வயதிலும் மரணமடைந்தனர். அதிலும் மாபசான் மோசமான முறையில் காலமானார். என்ற செய்தி இதுவரை அறியாத செய்தியாகும். ஆனால் இந்த இருவரும் சூறாவளியைப்போல் எழுதிக் குவித்தார்கள்.

ரஷ்ய இலக்கிய மகுடங்களில் ஒன்றாய் திகழ்ந்தவர் தாஸ்தவெஸ்கி. அவரது இளமைப்பருவம் ஆறாத மனத்துயரங்களோடு கடந்தது. அவரது தந்தை மிகயில் அந்திரேவிச் பெரும் குடிகாரர். தன் மனைவியைச் சந்தேகித்துச் சித்ரவதை செய்தே சீக்கிரம் சாகடித்த குடிகாரர். குடிபோதையில் தனது வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகளைத் தரக்குறைவாகத் திட்டியதால் அவர்கள் பச்சைச் சாராயத்தை வற்புறுத்தி வாயில் ஊற்றினர். பின்பு அவரது வாயையும் மூக்கையும் இறுக மூடியதால் மூச்சுமுட்டி இறந்தார். இந்தக் கொலைக்கு அந்த விவசாயிகள் இருவரின் மகள்களை இவர் சீரழித்ததாய் கூறப்பட்டது. தந்தையின் கொலைச் செய்தியைக் கேட்டதும் தாஸ்தவெஸ்கி உடல்நடுநடுங்கக் கீழே விழுந்தார். கையைக் காலை உதைத்தார். டாக்டர் வந்து பார்த்துவிட்டு இது காக்காய் வலிப்பு என்றார். அவருக்கு அதிர்ச்சியில் முதல் தடவை காக்காய் வலிப்பு ஏற்பட்டது அப்போதுதான். அது அவரது வாழ்வின் கடைசிவரை தொடர்ந்தது.

தாஸ்தவெஸ்கியின் முதல் படைப்பு “பாவப்பட்ட மக்கள்” பெரும் பாராட்டைப் பெற்றது. அது ரஷ்ய இலக்கியத்தின் முதல் சமூக நாவல் என்று கொண்டாடப் பட்டது. கோகலை மிஞ்சிய படைப்பாளி என்று புகழ்ந்தனர். இது தாஸ்தவெஸ்கிக்கு எழுதுவதில் பெரும் உற்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுத்தது. அவரது படைப்புகள் தனிரகமானவை. அவர் நாலரை ஆண்டுகள் ஜார் ஆட்சியாளர்களால் சைபீரியச்சிறையில் கொடுமையை அனுபவித்தனர். அவரது வாழ்வின் எல்லா அம்சங்களையும் தனது படைப்புகளின் கதாபாத்திரங்களில் உலவவிட்டவர். இந்நூலில் எஸ்ரா அவரது வெண்ணிற இரவுகள் நாவலைப்பற்றி திறம்பட்ட ஆய்வினை முன்வைத்துள்ளார்.

மாக்சிம் கார்க்கி தன் வாழ்க்கைப் பாதையில் சந்தித்த மனிதர்களைப் புனைவுடன் தனது கதைகளில் நடமாட விடுகிறார். அவரது வகை வகையான கதைகளிலிருந்து வகைவகையான கதைகள் பிறந்துள்ளன. கார்க்கியின் சிறுகதைகளில் சிரஞ்சீவித்தன்மை கொண்டதாக இன்றும் திகழ்வது இசர்கில் கிழவியின் கதைதான். இன்றைய மாந்திரீக எதார்த்தப் படைப்புகளுக்கெல்லாம் முன்னோடிப்படைப்பு அது. கார்க்கியின் கதைகளில் அடைபடாத தான்தோன்றித் தனமான நாயகர்கள் டாங்கோ, லாரா, லோய்கோ சோபார் கதையில் அவர்களைப் படிக்கும் போது வாசிப்பது போல இருக்காது. நம்ம ஊரில் பார்ப்பது போல இருக்கும்.இசர்கில் கிழவியின் இளம் பருவத்துக் காதல் அனுபவங்கள் கார்க்கியின் இளம் பருவத்தின் சாட்சி போலவே இருக்கிறது என்கிறார் எஸ்ரா.

தஜிகிஸ்தான் பெண் எழுத்தாளர் பாசுஅலியேவா எழுதிய மண்கட்டியைக் காற்றடித்துப் போகாது என்ற சிறந்த நாவலை நூலில் அறிமுகம் செய்துள்ளார் ஆசிரியர்.

இந்த நாவலை தோழர் பூ.சோமசுந்தரம் மூலத்தின் சுவை குன்றாமல் கவிதை நடையில் தமிழாக்கம் செய்துள்ளார். சுவாரியப் பழமொழிகளும், மலைகளும் பனித்துளிகளும், கிழவர் உமர்தாதாவும் நம்மை அந்த மண்ணுக்கே இட்டுச் செல்லும்.

புஷ்கினின் சூதாட்ட ராணி கதையும் ஜப்பானிய எழுத்தாளர் ஹரூகி முரகாசையின் பிறந்தநாள் கதையும் அருமையாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

வான்கோவின் தம்பி என்ற கட்டுரையை ஓவியர்களும், வீடில்லாத புத்தகங்களை எழுத்தாளர்களும் அவசியம் படிக்க வேண்டும்.

வர்ஜினியா உல்ப் ஒரு பென்சில் வாங்குவதற்கு கடைவீதிகளையும் காட்சிகளையும் பார்த்து எழுதியிருப்பது அற்புதமான ரசனை அனுபவத்தைத் தருகிறது.

கடலும் கிழவனும் நாவலை எழுதி நோபல் பரிசு பெற்றவர் எர்னஸ்ட் ஹெமிங்வே அவரது நெருங்கிய சகாவான அமெரிக்க எழுத்தாளர் ராபர்ட் ருவாக் எழுதிய கிழவனும் சிறுவனும் என்ற நாவல் பற்றிய கட்டுரை மிகச்சிறந்த அனுபவங்களைத் தருகிறது.

ஹெமிங்வே எழுத்தாளராகப் பரிணமிப்பதற்கு முன் அவர் கற்ற பாடங்களை வாசித்தால் அனைவருக்கும் பயன்படும். அதேபோல் இடதுசாரிக் கண்ணோட்டமுடைய பெர்கரின் ஓவியங்கள் பற்றிய கலை விமர்சனம் பற்றிய கட்டுரையும் பயனுள்ளதாகும். படைப்புலகம் பற்றிப் பரந்து விரிந்த ஞானம் உள்ள ஒருவரால்தான் இதுபோன்ற ஒரு நூலை எழுத முடியும். இதைப்படிக்காமல் அதை உணர முடியாது.

எஸ்.ராவின் இந்த அருமையான நூலை உயிர்மை பதிப்பகம் சிறந்த முறையில் வெளியிட்டுள்ளது.