Archive

Posts Tagged ‘Exercise’

கால்களால் சிந்திக்கிறேன் – எஸ்.ராமகிருஷ்ணன்

May 15, 2012 1 comment

மாற்று மருத்துவம் – ஏப்ரல்10

கனடாவில் வாழும் கவிஞர் மெலிஞ்சி முத்தனுடன் ஒரு நாள் பேசிக் கொண்டிருந்த போது அவர் தினமும் பத்து மைல் தூரமாவது நடந்து போவதாகவும் அப்படி நடக்கும் போதெல்லாம் எதையோ யோசித்தபடியே நடப்பது தனது இயல்பு என்றார். என்ன யோசிப்பீர்கள் என்று கேட்டதும் அவர் சிரித்தபடியே உண்மையில் நான் கால்களால் சிந்தித்தபடியே நடக்கிறேன் என்றார். எனக்கு அவர் சொன்ன கால்களால் சிந்திக்கிறேன் என்ற பிரயோகம் பிடித்திருந்தது.

புகழ்பெற்ற இயற்கையியலாளர் தோரூ நடத்தல் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார்.

உடல் ஒரு அதிசயம். அது கால்களின் மீது கட்டப்பட்டுள்ள கோட்டை என்கிறார் தோரூ.

நடக்கும் வழியை கண்டு கொள்வதும் அன்றாடம் நடப்பதன் வழியே காற்றையும் மரங்களையும் பறவைகளின் ஒலியையும் வீழ்த்து கிடக்கும் இலைகளையும் உதிர்ந்து கிடக்கும் பறவையின் சிறகுகளையும் கண்டு கொள்ளலாம். நடத்தல் ஒரு கண்டுபிடிப்பு. எதை எப்போது கண்டுபிடிப்போம் என்று தெரியாது என்கிறார் தோரூ.

ஒட்டகம் மட்டுமே நடக்கும்போது வாயசைத்துக் கொண்டேயிருக்கும். அதுபோல நமது மனது எதையோ அசைபோட்டபடியே தானிருக்கிறது என்கிறார் தோரூ. ஒரு முறை வோர்ட்ஸ்வொர்த் வீட்டிற்கு சென்ற ஒரு வாசகர், கவிஞர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று அவரது பணிப் பெண்ணிடம் கேட்டார். அந்த பெண் கவிஞர் வீட்டு நூலகத்தினுள் உட்கார்ந்திருக்கிறார். ஆனால் ஜன்னலுக்கு வெளியில் உள்ள உலகை படித்துக் கொண்டிருக்கிறார் என்றாராம். நடைப்பயிற்சி அப்படியான ஒரு அனுபவத்தையே தரக்கூடியது. கண்களால் உலகை வாசிப்பதன் பெயரே நடைபயிற்சி.

நடத்தலுக்கு ஏன் எப்போதுமே இயற்கை யான சூழல் தேவைப்படுகிறது. மரங்கள் அடர்ந்த பாதையில் அல்லது தனிமை நிரம்பிய சாலை களில் மட்டுமே ஏன் நடந்து போகவேண்டும். நடப்பதற்கு பிரதான சாலையோ அல்லது வணிக மையங்களையோ ஏன் தேர்வு செய்யக்கூடாது என்ற கேள்விக்கு தோரூ சொல்லும் பதில் அற்புதமானது.

நாம் நடக்கும் போது நாம் தனியாகவும் நம் மனது தனியாகவும் இயங்க கூடாது. வணிகமையம் ஒன்றினுள் நடந்து சென்றால் அது உங்கள் ஆசைகள், செய்ய வேண்டிய வேலைகள், அடுத்த திட்டங்கள் என்று தூண்டிவிட்டு உங்கள் நடையை விட வேகமாக உங்கள் மனது அலைந்து கொண்டிருக்கும். அதே வேளையில் தனிமையான இயற்கையான சாலையில் நடக்கும்போது மனதில் தூய்மையான காற்றும் இயற்கையான காட்சிகளும் மட்டுமே நிரம்பும். அப்போது தான் கால்களும் மனதும் ஒன்றாக நடக்கும். அது தான் நடத்தலின் ஆனந்தம்.

நடை பயிற்சி நம்மை பயத்திலிருந்து வெளியேற்றுகிறது. உலகம் மீது நாம் காரணமின்றி கொண்டுள்ள அச்சத்தை அது விலக்கிவிடுகிறது. அதே நேரம் எல்லா விலங்குகளும் தன் இரைதேடி குடிநீர் தேடி அலைந்து கொண்டுதானிருக்கின்றன.  தானும் அப்படியான இயற்கையின் ஒரு பகுதியே என்று மனிதனை உணர வைக்கிறது.

புதிய பாதைகள் விட பழைய பாதைகளே நடப்பதற்கு பிடித்தமானதாக இருக்கின்றது. புதிய பாதைகள் பரபரப்பான இயக்கத்துடன் ஓடுகின்றன. பழைய பாதைகளோ கைவிடப்பட்ட மனிதனை போல கண்டுகொள்ளப்படாமல் ஒதுங்கியிருக்கின்றன. அப்பாதைக்கு யாரோ நடப்பது மட்டுமே ஒரே ஆறுதல் தரக்கூடிய செயல்பாடு.

ஜே.கிருஷ்ணமூர்த்தி தினசரி பலமைல் நடக்க கூடியவர். அவருடன் ஒரு நாள் துணையாக நடந்த பத்திரிக்கையாளர் அதை பற்றி எழுதிய குறிப்பு முக்கியமானது கிருஷ்ணமூர்த்தி சாலையில் நடக்கும் போது காற்றில் மிதந்து செல்வது போல லகுவாக நடக்கிறார். வழியில் யாராவது நிறுத்தி பேசினால் அவர் நின்று பேசுவதில்லை. கடந்து சென்றபடியே இருக்கிறார். தற்செயலாக ஏதாவது ஒரு மரத்தையோ, நாயையோ கண்டதும் அவரது முகம் மலர்ச்சி கொள்கிறது. அதை பார்த்தபடியே நின்று கொண்டிருக்கிறார்.

சில வேளைகளில் அதை பார்த்து மிக நட்புணர்வோடு புன்னகை புரிவார். சாலை களோடு அவர் மௌனமாக எதையோ பேசிக்கொண்டு வருவது போலவே அவரது பார்வையிருக்கும். நீண்ட தூரம் நடந்து திரும்பிய போதும் அவரிடம் களைப்போ, அசதியோ காணப்படாது. மாறாக மிகுந்த புத்துணர்வும் சந்தோஷமும் முகத்தில் பீறிடும் என்கிறார்.

நடத்தலின் போது எதை உணர்ந்து கொண்டீர்கள் என்றதற்கு தோரூ சொன்ன பதில் ஆரம்ப நாட்களில் மட்டுமே நான் நடந்து கொண்டிருந்தேன். அதன்பிறகு இயற்கையின் விசை என்னை நடக்க வைக்கிறது. அது என்னை ஈர்க்கிறது என்பதை உணர்ந்து கொண்டேன். உண்மையில் எனது கழுத்தில் ஒரு கயிற்றை கட்டி அழைத்து கொண்டு போவது போல இயற்கை என்னை வசீகரமாக முன் அழைத்து போது போல உணர்கிறேன்.

அது தான் முற்றான உண்மையும் கூட

http://thoreau.eserver.org/walking.html