Archive
எழுத்தாளர்களுக்கு… சிறுகதை எழுதுவது எப்படி? – டிப்ஸ்
பா. ராகவன்
பழைய பெட்டிகளைக் கொஞ்சம் குடைந்துகொண்டிருந்தேன். எழுத ஆரம்பித்து அதிசுமார் 20 கதைகள் வரை பிரசுரமாகியிருந்த தொண்ணூறுகளின் முற்பகுதியில் எனக்கான சிறுகதை இலக்கணம் என்று ஒரு பத்திருபது பாயிண்டுகள் எழுதிவைத்தேன். இப்போது தற்செயலாக அகப்பட்ட அந்தக் குறிப்புகளை இங்கே போடலாம் என்று தோன்றியது. காப்பிரைட் என்னுடையது அல்ல. யார்யாரோ சொன்னதன் தொகுப்பு அல்லது திரட்டு அல்லது திருட்டு.
1. கையெழுத்துப்பிரதியாக 5 பக்கங்களுக்கு மேல் ஒரு சிறுகதை வளராமல் பார்த்துக்கொள்.(பெரும்பாலான சப் எடிட்டர்களுக்கு இது விஷயத்தில் பொறுமை இருப்பதில்லை)
2. தன்மை ஒருமையில் ஒரு டிரா·ப்ட் எழுதிக்கொண்டு பிறகு அதை தேர்ட் பர்சனுக்கு மாற்றி எழுதுவது நல்லது. நான் என்று தொடங்கி எழுதும்போது தான் கதையில் ஒரு உயிர்ப்பு வருகிறது.
ஆனால் கதைக்கு நான் கூடாது என்பதால் எழுதிவிட்டு அவனாக்கிக் கொள்வது பெட்டர்.
3. ஒரு செண்டன்ஸில் நாலைந்து சொற்களுக்கு மேல் கூடாது.
4. நாலு பேராவுக்கு ஒரு வர்ணனை வை. பெண்ணையோ, பேயையோ உன்னையோ எதையாவது ரெண்டு வரி வருணிப்பதன் மூலம் கொஞ்சம் வாசனை கூடுகிறது.
5. கதாபாத்திரம் ஒரு அலைவரிசையில் இயங்கிக்கொண்டிருக்கும்போது நீ குறுக்கே மூக்கு நுழைக்காதே. கதாபாத்திரத்தின் கருத்துடன் உன்னுடையது ஒத்துப்போகாவிட்டால் ஒன்றும் கொலைபாதகம் இல்லை.
6. கூடியவரை சிறுகதையில் காலம் காட்டாதே. அதாவது மணி, நாள், மாதம், வருஷமெல்லாம் வேண்டாம். உணர்ச்சிகளை முக்கியப்படுத்து. தேவையானபோது மட்டும் சம்பவங்கள்.
7. செகண்ட் பர்சனில் கதை எழுதிப்பழகு. அது தொழில்நுட்பத் தேர்ச்சி தரும்.
8. புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், கி.ரா., இவர்களெல்லாம் சிறுகதையில் மிகவும் சாதித்தவர்கள் என்பார்கள். ஆனால் உனக்கு உதவாது. ஆரம்பத்தில் நீ பின்பற்றவேண்டியவர்கள் ஜானகிராமன், சுஜாதா, ஆதவன், சுப்ரமணியராஜு, சுந்தரராமசாமி ஆகியோர் மட்டுமே.
9. ஒரு போதும் முழுக்கதையை முடிவு செய்துவிட்டு எழுதத் தொடங்காதே. உனக்கு அந்த உரிமை இல்லை. முதல் வரிக்கு மட்டும் முயற்சி செய். கதை தன்னை உற்பத்தி செய்துகொள்ளும்.
10.சிறு சிறு விவரங்கள் சிறுகதைக்கு முக்கியம். ஒரு கதையில் ஆள், உயரம்,வாசனை,நடை, நாற்றம்,லே அவுட், மேனரிசம், கோபம், புன்னகை,அழுகை, துடிப்பு, வேகம்,சூழல், செயல், செயலின்மை, பேச்சு, மௌனம் இதெல்லாம் வரவேண்டும்; தெரியவேண்டும்.
11. வசனங்கள் கூடியவரை குறைவாக இருக்கவேண்டும். வசனம் என்பது நாடகத்தின் கருவி. சிறுகதைக்கு மௌனமே சிறப்பு.
12. ஒரு கதை எழுதுமுன் ஒரு நல்ல கதையைப் படி. உனக்கு உகந்தது, அசோகமித்திரனின் மகா ஒற்றன், ஆதவனின் கருப்பாக, உயரமாக…, லா.ச.ரா.வின் த்வனி. இந்த சமயத்தில் தி.ஜாவையோ சுஜாதாவையோ தொடாதே. வாசனை ஒட்டிக்கொள்ளும்.
(திண்ணை-யில் இருந்து: சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல் – 1 : ஆதவன் | 2 | 3)
13. எழுதி முடித்ததும் கடைசியிலிருந்து வெட்டிக்கொண்டு வா.(வரிவரியாக.)
14. மிரட்டும் சொற்கள் வெண்டாம். எளிமையே ஆபரணம்.
15. ஒவ்வொரு கதை எழுதி முடிக்க முடிந்ததும் கடவுளுக்கு நன்றி சொல்லு.
பி.கு: இவையெல்லாம் என்க்கு நானே சொல்லிக்கொண்டவை. இன்றுவரை, அநேகமாக அனைத்து ரூல்களையும் பின்பற்றுகிறேன்.யாருக்காவது உபயோகப்படுமானால் சந்தோஷம்.
சாண்டில்யன்
எழுதுவது எப்படி என்பதனைப் பற்றி சாண்டில்யன் கட்டுரை:
நல்ல எழுத்துக்கு வேண்டியது – முதலில் உணர்ச்சி வேகம். இரண்டாவது ஆழ்ந்த படிப்பு.
எழுத முற்படுவோர், தாங்கள் எழுதவேண்டியது அவசியந்தானா? அதற்கான வேட்கை, உணர்ச்சி வேகம் இயற்கையாக இருக்கின்றனவா என்பதை யோசித்துக்கொள்ளவேண்டும்.
இரண்டாவதாக, தங்களுக்கு ஆழ்ந்த படிப்பு இருக்கிறதா என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். இல்லையென்று தோன்றும் பட்சத்தில், படிக்கவும் முயலவேண்டும். கற்பனை தானாக ஊறிவிடுமென்பது வீண் பிரமை.
“தொட்டனைத்து ஊறும் மணற்கேணி, மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் கல்வி”, என்று தெய்வத் திருவள்ளுவரே கூறியிருக்கிறார்.
நல்ல கதைக்கோப்பும், கதை வேகமும், சொல்லாட்சியுமுள்ள கதை எத்தனை பெரிதாயிருந்தாலும் மக்கள் அதனைப் படிப்பார்கள். இந்த அம்சங்கள் இல்லாத கதை, எத்தனைச் சிறியதாக இருந்தாலும் மக்களின் மனத்தை ஆட்கொள்ளமுடியாது.
கற்பனைச்செறிவும், இயற்கையையும் வாழ்க்கையையும் ஊன்றிப்பார்க்கும் திறனும் இருந்தால், உவமைகள் உங்கள் பேனாவின் மையில் தானாகப் பிரவாகமாகிவிடும்.
– சாண்டில்யனின் ‘நாவல் எழுதுவது எப்படி?’ (சில பகுதிகள்)
சுந்தர ராமசாமி
Thinnai: “ஒரு படைப்பாளி இளைய தலைமுறைக்குக் கூற விரும்புபவை :: சுந்தர ராமசாமி”
என்னுடைய முதல்பட்சமான அக்கறைகள் வாழ்க்கையைப் பற்றியவை. இந்த அக்கறைகளைச் சார்ந்துதான் இலக்கியப் படைப்புக்கள் உருவாகின்றன. ஆக, ஒரு இலக்கியப் படைப்பாளி என்று எடுத்துக் கொள்ளும் போதும் சரி, வாழ்க்கையைப் படைப்புக் கண்ணோடு பார்க்க விரும்புகிறவன் என்று எடுத்துக் கொள்ளும் போதும் சரி முதல்பட்சமாக நான் ஒரு வாசகனாக இருப்பதையே உணருகிறேன்.
நம்முடன் உரையாட வந்தவர்கள் ஏதோ சாதாரண விஷயங்களைப் பற்றி நம்மிடம் சொல்வதில்லை. அவர்களுடைய வாழ்க்கைக் கண்ணோட்டத்தில் மிகச் சாரமான பகுதியை – மிக மேலான பகுதியை – அதிக அளவிற்குப் பொருட்படுத்தத் தகுந்த பகுதியைப்பற்றியே நம்மிடம் பேசுகிறார்கள்…எல்லா சிறந்த எழுத்தாளரையும் நாம் இருக்குமிடத்திலிருந்தே சந்திக்க முடியும். இந்தப் பெரிய வாய்ப்பை எண்ணி எவன் புளகாங்கிதப்படுகிறானோ அவனைத்தான் நான் சிறந்த வாசகன் என்று கருதுகிறேன்.
துறை சார்ந்த சமாளிப்பு என்பது ஒன்று; இந்தத் துறை சார்ந்த வல்லமை என்பது மற்றொன்று. பெரும்பாலும் எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் – அது வைத்தியமாக இருக்கலாம், அல்லது பொறியியலாக இருக்கலாம் – அல்லது வணிகமாக இருக்கலாம் அல்லது சட்டமாக இருக்கலாம் –
அந்த துறையைச் சேர்ந்தவர்கள் அதிக அளவுக்கு அந்தந்த துறையைச் சார்ந்த உத்திகள், பந்தாக்கள், சொற்றொடர்கள் ஆகியவற்றைக் கற்று, அதில் மிகுந்த தேர்ச்சி பெற்றவர் போன்ற பாவனையைப் பிறரிடம் உருவாக்கி அதன் மூலம் வாழ்க்கையைச் சமாளித்துக் கொண்டிருக்கக்கூடிய கோலத்தைத்தான் அதிக அளவில் பார்க்க முடிகிறது.
முக்கியமாக இன்று நான்கு விஷயங்களை நான் உங்களுடைய கவனத்திற்குக் கொண்டு வர விரும்பினேன். ஒன்று வாசிப்பு சம்பந்தபட்ட விஷயம்; மற்றொன்று உங்களுக்கு உகந்த துறையை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொண்டு அந்தத் துறையில் நீங்கள் போதிய திறமை பெற்று நம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்ளக்கூடிய விஷயம். மூன்றாவது தாழ்வு மனப்பான்மை என்று நான் நம்பக்கூடிய நோயிலிருந்து முற்றாக விடுதலை பெறுவதற்கான வழிகள். நான்காவது இந்திய வாழ்க்கையைச் சார்ந்தோ, தமிழக வாழ்க்கையைச் சார்ந்தோ, தமிழக வாழ்க்கையை எதிர்கொள்ளுவதன் மூலம் நமக்குச் சொந்தமான, சுயமான கண்ணோட்டங்களை நாம் உருவாக்கி கொள்ளக்கூடிய முயற்சி. இந்த நான்கு கருத்துக்களையும் விவாதத்திற்காக உங்கள் முன் வைக்கிறேன்.
மெலட்டூர்.இரா.நடராஜன்
முதலில் ஒன்றை தெளிவு படுத்திவிடுகிறேன். தயவு செய்து நான் சொல்லுவதுதான் இலக்கணம் என்று எண்ணிவிட வேண்டாம். எனது அனுபவத்தில், நான் என்னை செம்மைப்படுத்திக் கொள்ள, முட்டி மோதி அறிந்து கொண்டதை, புரிந்து கொண்டதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். அவ்வளவே. ஒரு சிலருக்காவது பயண்பட்டால் அது என் பாக்கியமே.
எது நல்ல சிறுகதை என்று யாராலும் அறுதியிட்டு சொல்லமுடியாது. அதனால்தான் என்னவோ, முதல் பரிசு பெற்ற சிறுகதை நமக்கு மொக்கையாக தெரியலாம். ஆறுதல் பரிசு பெற்ற கதை முதல் பரிசுக்கு உரியதாக இருக்கலாம். ஆனால் ஒன்று. ஒரு சிறுகதை, நம் உள் வட்ட நண்பர்களை, உறவினர்களை தாண்டி, ஒரு சிலரையேனும் திருப்தி படுத்திவிட்டது என்றால் அது நமக்கு வெற்றியே. அந்த பெருவாரியான ரசிப்புத்தன்மையை நோக்கியே ஒரு எழுத்தாளன் இயங்க வேண்டும்.
1. சிறுகதை என்பது ஒரு சிறு நிகழ்வு. எனவே இதில் நாம் எடுத்துக் கொள்வது ஒரு சிறிய சம்பவமாக இருக்கட்டும். அதை மையமாக வைத்து முன்னே பிளாஷ்பேக் சேர்த்து, பின் பகுதியில் முடிவைச் சொல்லி கதை செய்யலாம். மாதங்கள், வருடங்கள் என்றெல்லாம் உருட்ட தேவையில்லை.
2. கதைக்கு தொடக்க வார்த்தைகள் மிக மிக அவசியம். இவைகள்தான் வாசகர்களை படிக்க தூண்டுபவை. எனவே நேரடியாக கதைக்கு சம்பந்தமான விஷயங்களை கொண்டுவந்துவிடுதல் நல்லது. ஒரு நல்ல தொடக்கம், பாதி முடிவை எட்டும் என்று ஒரு பேச்சு இருக்கிறது. இன்றைய உலகம் அவசர உலகம். கதையை படிப்பதற்கு முன்னால் எவ்வளவு பக்கம் என்று பார்க்கும் மனப்பாண்மை கொண்டது. எனவே குழப்பமில்லாமல், ஜெட் வேகத்தில் சுறு சுறுவென தொடங்கும் கதை நிச்சயம் படிக்கப்படும்.
3. சிறுகதையில் எந்தவித தேவையில்லாத வார்த்தைகள் இருக்கக் கூடாது. இந்த ஒரு வரியை எடுத்துவிடுவதால் கதை விழுந்துவிடும் என்ற அளவுக்கு வார்த்தை சிக்கனம் வேண்டும். கதையை எழுதியவுடன் ஒரு வெளி ஆசாமியாக இருந்து தானே படிக்கும் போது அதிகப்படியானவை பளிச்சென்று தெரிந்துவிடும்.
4. கதை சொல்லும் வார்த்தைகளில் ஒரு ரசிப்புத் தன்மை இருக்க வேண்டும். அந்த வார்த்தைகளை படிக்கும் வாசகனை அது எந்த விதத்திலாவது பாதிக்க வேண்டும். வார்த்தைகளில் உள்ள ஜாலம்தான் உங்களுக்கு ஒரு முத்திரையை அளிக்கிறது. எனவே மேம்போக்காக எழுதாமல், ஒரு சிற்பக் கலைஞன் சிற்பம் செதுக்குவது மாதிரி வார்த்தைகளை கையாளுங்கள்.
5. நடுநடுவே வரும் வசனங்கள் பளிச் பளிச் என்று ஆணித்தரமாக இருக்க வேண்டும். அது கதையின் ஓட்டத்தை தீர்மாணிப்பதாக இருக்க வேண்டும்.வெட்டியாக வரும் வசனங்கள் வாசகனை வெறுப்பேற்றும்.
6. முடிவு நெத்தியடியாக இருக்க வேண்டும். அந்த வரியை படித்ததும், வாசகன் ‘அட’ என்று வியக்க வேண்டும். அவன் திருப்தியுடன் ஒரு புன்னகை செய்தால் அது உங்களுடைய வெற்றி.
7. கதை எழுதுவதற்கு முன்னால் அதை பகுதி பகுதியாக பிரித்து ஒவ்வொன்றிலும் என்ன சொல்லப் போகிறோம், அவைகள் சீராக இருக்கின்றனவா என்று மனசுக்குள் ஒரு காட்சி மாதிரி ஓடவிட்டு பார்த்துவிட்டு எழுத உட்கார்ந்தால் நல்லது.
8. ஒரு கதைக்கான கரு கிடைத்துவிட்டால், அதை மனசுக்குள் கொஞ்ச நாட்கள் உருட்டிக் கொண்டே இருங்கள். அது சம்பந்தமாக விவரங்கள், விவரனைகள், தர்க வாதங்கள், உங்களின் அனுமானங்கள் ஆகியனவற்றை அலசி செம்மை படுத்துங்கள்.
9. இன்றைய பத்திரிக்கை உலகில் சிறுகதைகள் என்பது A4 சைஸ் பேப்பரில் எழுத்துரு 10ல் இரண்டரை பக்கங்களுக்கு மிக கூடாது. புதிய எழுத்தாளர்கள், தங்களின் கையெழுத்து மிக தெளிவாக இருந்தால் மட்டுமே, கையிலால் எழுதி அனுப்பலாம். கொஞ்சம் மோசமான கையெழுத்து கொண்டவர்கள் கம்ப்யூட்டரில் அடித்து அனுப்புவது நல்லது. தற்போதைய சூழலில் பொறுமையாக படிக்க ஆளில்லை.
10. கதைக்கான களம் மிகவும் வித்தியானமானதாக இருந்தால் மிக நல்லது. மண்வாசனை கொண்ட கதைகளுக்கு என்றுமே மரியாதை உண்டு. அதற்காக வாசகர்களை ரொம்ப கஷ்டப்படுத்தக் கூடாது. புதிய கோணத்தில் கதை சொல்லுவது ஜெயிக்கும் குதிரையில் பணம் கட்டுவது மாதிரி.
11. முதலில் உங்கள் கதை ஒரு பத்திரிக்கையால் நிராகரிப்பட்டால் அதை முழுவதுமாக ஏற்றுக் கொள்ளுங்கள். வளரும் எழுத்தாளருக்கு எதிர்மறை விமர்சனங்களை பண்புடன் எற்றுக் கொள்ளும் பக்குவம் வேண்டும். ஏன் இந்தக் கதை அவர்களை திருப்தி படுத்தவில்லை? என்ற கேள்வி போட்டு ஆராயுங்கள். அந்த பத்திரிக்கையில் வரும் கதைகளின் போக்கை கவனியுங்கள். அவர்களின் மன ஓட்டம் புரியும். அதற்கு ஒத்துப்போக முடிந்தால் நல்லது. இன்லையேல்லை அதை விட்டுவிட்டு வேறு பத்திரிக்கையை பாருங்கள்.
12. ஒரு கதை நிராகரிப்பட்டததும், அதை மாற்றி எழுத சோம்பல் படவே கூடாது. எனது பல சிறுகதைகள், மாற்றி எழுதப்பட்டு, வேறு பத்திரிக்கைகளில் வெளியாகி இருக்கின்றன.
13. கதை எழுதுவதற்கு மிக அடித்தளமாக இருப்பது அப்ஸர்வேஷன். நம்மை சுற்றி நடக்கும் பல விஷயங்களை உண்ணிப்பாக கவனியுங்கள். ஒரு குடிகாரனை பற்றி எழுதினீர்களானால், அவன் இயல்பை ரசிப்புத்தன்மையோடு எழுதுங்கள். வண்ணதாசன், சுஜாதா, இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்களின் எழுத்துக்களை படியுங்கள். அவர்கள் எப்படி எழுத்துக்களை நகர்த்துகிறார்கள் என்பது புரியும். கதை படிக்கும் போது எழுத்துக்கள், ஆடி வரும் தேர் மாதிரி மனசை கொள்ளை கொள்ள வேண்டும்.
14. கதையில் ஒரு இடத்தைப் பற்றியோ அல்லது டெக்னிகலான விஷயங்கள் பற்றியோ எழுதப்போகிறீர்கள் என்றால் அதை பற்றி விலாவாரியாக படியுங்கள். அதன் பிறகு
எழுதினால், அதன் உண்மைத்தண்மை வாசகர்களை ஈர்க்கும். வாசகனின் தேடுதல்
வேட்க்கையை நீங்கள்தான் தீர்க்க வேண்டும்.
15. கூடுமானவரை உங்களது அனுபவங்களை, நீங்கள் பார்த்ததை, எழுத்தில் கொண்டுவாருங்கள். அதை அப்படியே நேரடியாக எழுதாமல் உங்கள் கற்பனையை ஓடவிட்டு, ஒட்டு சேருங்கள். ஆண் சம்பந்தப்பட்டதை பெண் ஆக்குங்கள். ஒரிஜினல் சித்தப்பாவை கதையில் மாமாவாக்குங்கள். அவர்கள் கதையை அப்படியே எழுதினால் பல் பிரச்சனைகள் பின்னால் எழலாம். தவிர, உங்களது தனித்தன்மை அடிப்பட்டு போய்விடும்.
16. ஒவ்வொரு பத்திரிக்கைக்கும் ஒரு ஸ்டைல் இருக்கிறது. குமுதத்திலும், குங்குமத்திலும் கொஞ்சம் விலங்கமான/லைட்டான கதைகள் எழுதலாம். கல்கியில் அதை செய்யமுடியாது. ஆனந்தவிகடனில் இதுவரை எழுதப்படாத புதிய களன்களில், புதிய கோணத்தில் எழுதப்பட்ட கதையை வரவேற்ப்பார்கள். ஒவ்வொரு பாராவிலும் வார்த்தை நயம் அவசியம் இருக்க வேண்டும். பெண்கள் பத்திரிக்கையில் குடும்ப பிரச்சனைகளை அலசும் கதைகள் வரவேற்கப்படும்.
17. கதையை எழுதி முடித்தவுடன், உங்கள் நண்பர் குழுவில் எந்தவித சங்கோஜமும் இல்லாமல் நேரடியாக விமர்சனம் செய்யும் ஒருவரிடம் கொடுத்து படிக்கச் சொல்லுங்கள். ஒரு வாசகனாக அவருக்கு வரும் சந்தேகங்களை குறித்துக் கொண்டு அதை நிவர்த்தி செய்யுங்கள்.
18. ஒரு கதைக்கான கரு நேரடியாக கிடைக்காது. ஒரு நிகழ்வின் தாக்கம்தான் ஒரு கதைக்கான கருவாக இருக்கமுடியும். ஒரு முறை, சிக்னலில் ஸ்கூட்டரின் பின் சீட்டில் அம்மாவின் தோளில் தலை தொங்கி தூங்கிக் கொண்டிருந்த குழந்தை ஒன்றை பார்த்தேன். அதை வைத்து சின்னு என்ற சிறுகதையை எழுதினேன். குங்குமத்தில் வந்தது. ராஜேஷ்குமாரன் நிறைய க்ரைம் கதைகளுக்கு தினசரிகளே அதிகம் உதவுவதாக ஒரு முறை சொல்லியிருக்கிறார்.
19. எழுத எழுததான் வார்த்தைகள் வசப்படும். எனவே நிறைய எழுதுங்கள். அதற்காக நிறைய படியுங்கள். வார்த்தைகளை கொட்டித்தள்ளாமல் அம்மா கைமுறுக்கு சுற்றுவது மாதிரி நிதானமாக கையாளுங்கள். ஒரு அரை மணிநேர கச்சேரிக்கு பின்னால் ஒரு நூறு மணிநேர உழைப்பு இருக்கும். எனவே பலமுறை அடித்து திருத்தி மாற்றியமைத்து உங்கள் மனசுக்கு திருப்தியாகும் வரை முயற்சி செய்யுங்கள்.
20.ஒரு கதையின் நீளத்தை அந்த கதைதான் தீர்மானிக்க வேண்டும். ஒரு பக்க கதைக்கான விஷயத்தை வைத்துக் கொண்டு டி.வி.சீரியல் மாதிரி மூன்று பக்கங்களுக்கு இழுக்காதீர்கள். உங்கள் டி.ஆர்.பி. ரேட்டிங் விழுந்துவிடும். உங்களை மிகவும் கவர்ந்த ஒரு சில வார்த்தைகள், பாராக்கள்,நீங்கள் கதையில் சேர்த்திருப்பீர்கள். அது கதையின் போக்குக்கு அதிகப்படியாக இருக்குமானால், யோசிக்காமல் வெட்டித்தள்ளுங்கள்.
என்ன, சரிதானே. புறப்படுங்கள்.
தி.ஜானகிராமன்
எல்லோரும் நாட்டியம் ஆடுவதில்லை. எல்லோரும் சங்கீதம் பாடுவதில்லை. எல்லோரும் வயலினோ, மிருதங்கமோ வாசிப்பதில்லை. சிலருக்குத்தான் இந்தக் காரியங்களைச் செய்ய முடிகிறது. அந்தச் சிலரிலேயே ஓரிரண்டுபேர் செய்யும் பொழுது நமக்கு மெய் மறந்துவிடுகிறது. தெய்வத்தையே கண்டு விட்டாற்போல புல்லரித்துப் போகிறோம். வேறு பலர் செய்யும் பொழுது, நமக்கு இந்த அனுபவம் ஏற்படுவதில்லை. ஒரு சமயம் நாம் பிரமிக்கலாம். மலைக்கலாம். வியக்கலாம். நுட்பமான ரசானுபவம், தன்மறதி போன்ற உணர்வு நிலைகள் வருவதில்லை. கலைஞர் உணர்வு மயமாகி ஆகி ஆடும்போதோ, வாசிக்கும் போதோ, தானாக ஒரு முழுமையும் ஓர் ஒருமையும் அந்தக் கலைப்படைப்பில் நிறைந்து, நம்முள்ளேயும் பரவி நிரம்பும். உணர்வு இல்லாமல் இயந்திர ரீதியில் படைக்கிறவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் சாமர்த்தியத்தையும் அசகாய சூரத்தனத்தையும் காட்டி நம்மைப் பிரமிக்க வைக்க முடியும், ஆனால் மெய்மறக்கச் செய்ய இயலாது. நான் இந்த நோக்கில்தான் எந்தக் கலைப் படைப்பையும் பார்க்கிற வழக்கம். சிறுகதையையும் அப்படித்தான் பார்க்கிறேன்.
எந்தக் கலைப்படைப்புக்கும் முழுமையும் ஒருமையும் அவசியம். அவை பிரிக்க முடியாத அம்சங்கள். சிறுகதையில் அவை உயிர்நாடி. ஓர் அனுபவத்தைக் கலைவடிவில் வெளிப்படுத்த சிறுகதையில் இடமும் காலமும் குறுகியவை. எனவே எடுத்துக்கொண்ட விஷயம் உணர்வோ, சிரிப்போ, புன்சிரிப்போ, நகையாடலோ முறுக்கேறிய, துடிப்பான ஒரு கட்டத்தில்தான் இருக்கமுடியும். சிறிது நேரத்தில் வெடித்துவிடப் போகிற ஒரு தெறிப்பும், ஓர் அவசரத் தன்மையும் நம்மை ஆட்கொள்ள வேண்டும். தெறிக்கப் போகிறது பட்டுக் கயிறாக இருக்கலாம். எஃகு வடமாக இருக்கலாம். ஆனால் அந்தத் தெறிப்பும் நிரம்பி வழிகிற துடிப்பும் இருக்கத்தான் வேண்டும். இந்தத் தெறிப்பு விஷயத்திறகுத் தகுந்தாற்போல் வேறுபடுவது சகஜம். கதையின் பொருள் சோம்பல், காதல், வீரம், தியாகம், நிராசை, ஏமாற்றம், நம்பிக்கை, பக்தி, உல்லாசம், புதிர் அவிழல் அல்லது இவற்றில் சிலவற்றின் கலவைகளாக இருக்கலாம். அதற்குத் தகுந்தபடி அந்தத் தெறிப்பு பஞ்சின் தெறிப்பாகவோ, பட்டின் தெறிப்பாகவோ, எஃகின் தெறிப்பாகவோ, குண்டு மருந்தின் வெடிப்பாகவோ சத்தம் அதிகமாகவோ குறைந்தோ மௌனமாகவோ மாறுபடும். எனக்கு வேறு மாதிரியாக இந்த அனுபவத்தை விளக்கத் தெரியவில்லை. பல சமயங்களில் சிறுகதையைப் பற்றி நினைக்கும் போது, நூறு அல்லது ஐம்பது கஜ ஓட்டப்பந்தயத்திற்கு ஆயத்தம் செய்து கொள்ளுகிற பரபரப்பும், நிலைகொள்ளாமையும் என்னைக் கவ்விக் கொள்கிறதுண்டு. இது ஒரு மைல் ஓட்டப்பந்தயமல்ல. சைக்கிளில் பல ஊர்கள், வெளிகள், பாலங்கள், சோலைகள், சாலைகள் என்று வெகுதூரம் போகிற பந்தயம் இல்லை. நூறு கஜ ஓட்டத்தில் ஒவ்வோர் அடியும் ஒவ்வோர் அசைவும் முடிவை நோக்கித் துள்ளி ஓடுகிற அடி அசைவு. ஆர அமர,வேடிக்கை பார்த்துக் கொண்டு செல்லவோ வேகத்தை மாற்றிக் கொள்ளவோ இடமில்லை. சிறுகதையில் சிக்கனம் மிக மிக அவசியம். வளவளப்புக்கு இடமே கிடையாது. வளவளப்பு என்றால் அதிகச்சுமை. ஓடுவது கஷ்டம்.
இத்தனை தெறிப்பும் துடிப்பும் வேகமும் தேவையான சிறுகதை எழுத எத்தனையோ பேர் வழிகள் சொல்லியிருக்கிறார்கள். வகுப்புக்கூட நடத்துகிறார்கள். தபால் ட்யூஷன்கூட நடத்துவதாகக் கேள்வி. என்ன நடத்தினாலும் உத்திகளைத்தான் சொல்லிக்கொடுக்கலாம். உணர்வில் தோய்வதைச் சொல்லிக் கொடுக்க முடியாது. உணர்வில் லயிப்பதையும் முறுக்கேறுவதையும் சொல்லிக் கொடுக்க முடியாது. ஆனால் உத்திகளைச் சரியாகக் கையாண்டு, இலக்கண ரீதியாகப் பழுதில்லாத ஆயிரம் சிறுகதைகள் இப்பொழுது நம் நாட்டிலும் அயல்நாடுகளிலும் பல பத்திரிகைகளில் வருகின்றன. ஆனால் நாவலோ, நாடகமோ எழுதும் ஆசிரியர்களின் எண்ணிக்கையில் நூற்றில் ஒரு பங்குகூட அசல் சிறுகதை ஆசிரியர்கள் இந்த உலகத்தில் இல்லை. இதுதான் வேடிகக்கை. உத்திகளைத் தெரிந்து கொண்டு மட்டும் சிறுகதைகள் எழுதி, பத்திரிகைகளை நிரப்பலாம். அது ஒன்றும் பெரிய காரியமில்லை. செக்காவின் உத்திக்கு ஓர் அச்சு தயார் செய்துகொண்டு அதில் நம் சரக்கைப் போட்டு வார்த்துவிடலாம். ஆனால் அது செக்காவ் அச்சின் வார்ப்பாகத்தான் இருக்கும். புதிதாக ஒன்றும் வந்துவிடாது. உணர்வும் நம் பார்வையின் தனித்தன்மையும்தான் முக்கியம். அவை கண்யமாகவும் தீவிரமாகவும் இருந்தால் நமக்கு என்று ஓர் உருவம் கிடைக்கும். இதை எப்படிச் சொல்லிக் கொடுக்கப் போகிறார்கள்?
தனித்தன்மையும், உணர்ச்சி நிறைவும், தெறிப்பும் எல்லாம் இல்லாவிட்டால் சிறுகதையின் பிரசித்திபெற்ற இலக்கணமான ஒருமைப்பாடு உயிரில்லாத ஜடமாகத்தான் இருக்கும். இன்று உலகப் பத்திரிகைகளில் வரும் பெரும்பாலான கதைகள் தனித்தன்மை இல்லாத, அல்லது போலி உணர்ச்சிகள் நிறைந்த ஜடங்கள்தான். ஆனால் பொதுவாகப் பத்திரிகைகள்தான் சிறுகதைக் கலையை வளர்ப்பதில் பெரும் பங்குகொண்ட கருவியாக இருந்திருக்கின்றன. செக்காவ், மாப்பஸான், ஹென்ரி ஜேம்ஸ், மாம், மெல்வில், ஸ்டீபன், க்ரேன், ப்ரெட் ஹார்ட்டி முதல் ஜெர்மனி, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளில் எழுதிய எழுதுகிற சிறுகதை எழுத்தாளர்கள் வரை முக்காலே மூனறு வீசம்பேர் பத்திரிகைகளில்தான் எழுதியிருக்கிறார்கள்எழுதுகிறார்கள். எனவே, பொறுப்புள்ள பத்திரிகைகள் நல்ல சிறுகதைகளையும், பொறுப்பில்லாதவை ஜடங்களையும் வளர்க்கின்றன என்று சொல்லிவிட்டு மேலே போவோம்,
சிறுகதையில் வரும் கதையோ நிகழ்ச்சியோ ஒரு க்ஷணத்திலோ,நிமிஷத்திலோ, ஒரு நாளிலோ, பல வருடங்களிலோ நடக்கக்கூடியதாக இருக்கலாம். காலையில் தொடங்கி இரவிலோ, மறுநாள் காலையிலோ அல்லது அந்த மாதிரி ஒரு குறுகிய காலத்திலோ முடிந்துவிட வேண்டும் என்று அவசியமில்லை. சொல்லப்படவேண்டிய பொருளின் ஒருமைதான் முக்கியமானது. எட்டு நாளில் நடந்த சங்கதியை முதல் நாளிலிருந்து வரிசையாகச் சொல்லிக்கொண்டு போகலாம். இரண்டாவது, மூன்றாவது, நாலாவது நாளிலிருந்தோ அல்லது கடைசிக் கணத்திலிருந்தோ ஆரம்பித்து, பின் பார்வையாகப் பார்த்துச் சொல்லிக் கொண்டு போகலாம். நடந்தது, நடக்கப் போவது இரண்டுக்கும் இடையே ஒரு வசதியான காலகட்டத்தில் நின்றுகொண்டு நிகழ்ச்சியைச் சித்திரித்துக்கொண்டு போகலாம். எப்படிச் சொன்னாலும் ஒரு பிரச்னை, ஒரு பொருள், ஓர் உணர்வு, ஒரு கருத்துதான் “ஓங்கியிருக்கிறது’ என்ற நிலைதான் சிறுகதைக்கு உயிர்.
சிறுகதையில் சொல்லக்கூடாத விஷயங்களே இல்லை. கடந்த 100 ஆண்டுகளில் சிறுகதை வளர்ந்துள்ள போக்கைப் பார்த்தாலே இது தெரியும். வெறும் புற நிகழ்ச்சிகளில் தொடங்கி நுட்பமான மனத்தத்துவ ஆராய்ச்சி வரையில் அதன் பொருள் இப்பொழுது விரிந்திருக்கிறது. மேலெழுந்த வாரியான கவனத்திற்குப் புலப்படாத அக உணர்வுகள், நினைவோட்டங்கள், அடிமன நிலைகள் வெறும் கண்பார்வைக்குப் பின்னால் ஒளிந்து கிடக்கும் மன உந்தல் இவை எல்லாம் இன்று சிறுகதைப் பொருளாக வந்துள்ளன. ஆனால் எதைச் சொன்னாலும் ஓங்கி நிற்கும் ஒருமை அவசியம். ஒருமையுள்ள சிறுகதை முடிய வேண்டிய இடத்தில் தானாக முடிந்துவிடும். முடிகிற எல்லையைக் கடந்தால் ஒருமைக்கோப்புக்கும் ஊறுவிளையத்தான் செய்யும். பந்து எல்லையைக் கடந்து ஓடினால் கிரிக்கெட்டில் ஒன்றுக்கு நாலாக ரன் கிடைக்கும். சிறுகதையில் கிடைப்பது பூஜ்யம்தான்.
என்னை ஒரு நண்பர் கேட்டார். சிறுகதை, நாவல் எழுதுகிறவன் பெரிய இலக்கிய கர்த்தர்களின் நூல்களைப் படிக்க வேண்டுமா என்று. அவசியமில்லை என்று நான் சொன்னேன். அது எனக்கும் என்னைப் போன்றவர்களுக்கும் சொல்லவில்லை. இயற்கையாகவே அபாரமாக எழுதும் மேதை படைத்தவர்களை, புது வழிவகுக்கும் ஆற்றல் படைத்தவர்களை மனதில் வைத்துக்கொண்டு சொன்னது. என்னைப் போன்றவர் நிறைய படித்தால்தான் நல்லது. செக்காவ், மாப்பஸான், போ, மாம், தாகூர், கு.ப.ரா. புதுமைப்பித்தன், லா.ச.ரா, ஸீன் ஓகாஸி, ஜாய்ஸ், ஸ்டீஃபன் க்ரேன், ஹென்றி ஜேம்ஸ், போவன், காவபாட்டா போன்ற வெவ்வேறு சிறுகதை ஆசிரியர்களைப் படித்தால், சிறுகதைக்கான பொருள்களை நாடுவதில் எத்தனை சாத்தியக் கூறுகள் உண்டு என்பதும், சிறுகதை உருவத்தில் எத்தனை நூறு வகைகள் சாத்தியம் என்பதும் தெரியும். உருவம் என்று சொல்லும் போது ஆரம்பம், இடை, முடிவு மூன்றும் தெள்ளத் தெளிவாகத்தான் இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்பதும் இந்தக் கதைகளைப் படித்தால் தெரியும். இந்த மூன்றும் தெளிவாகத்தெரிவதும், தெளிவில்லாமல் பூசினாற் போல் இருப்பதும் சொல்லுகிற விஷயத்தைப் பொறுத்தவை. ஒரு மரத்தின் நிழல் கருக்காகக் கத்தரித்தாற் போலும் விழலாம். பூசினாற் போலும் விழலாம். அது விளக்கின் தூரம், ஒளி முதலியவற்றைப் பொறுத்தது. உருவம் சரியாக அமைவது நம்முடைய உணர்வின் தீவிரத் தன்மையைப் பொறுத்தது. என்னுடைய அனுபவத்தில், உணர்ச்சியோ, சிந்தனையோ போதிய தீவிரத்தன்மை பெறும்போது, உருவமும் தானாக ஒருமைப்பாட்டுடன் அமைந்துவிடுகிறது. உணர்ச்சியின் தீராத தன்மை எப்போது, எந்தக் கால அளவில் போதிய அளவுக்குக் கைகூடும் என்று சட்டம் போடுவதில்லை. அது ஒவ்வொர் ஆசிரியரின் திறமையைப் பொறுத்தது. ஒருவருக்கு ஒரு மணியிலோ, ஒரு நிமிஷத்திலோ கைகூடுகிற தீவிரத்தன்மை, ஊறும்தன்மை, எனக்குக் கிட்ட ஒரு வாரமோ, ஒரு வருஷமோ பிடிக்கலாம். எனக்கு ஒரு கதையைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கையில், திடீரென்று வேறு ஒரு கதை தோன்றிச் சில நிமிஷங்களில் அதை எழுதி முடித்ததுண்டு. யோசித்துப் பார்த்தால், அந்தக் கதைக்கான வித்து மனத்தில் விழுந்து எத்தனையோ வருஷங்கள் ஆகியிருக்கும். தோட்டத்து மண்ணில் எப்பொழுதோ உதிர்ந்த விதையொன்று, மண்ணுள் பல காலம் உறங்கி, திடீரென்று ஒரு மழை அல்லது நைப்பிற்குப் பிறகு முளைப்பது மாதிரிதான் அது. உணர்ச்சியைக் குறுகிய காலத்தில் தீவிரமாக அனுபவிக்கப் பழக்கியும் கொள்ளலாம் என்று சொல்கிறார்கள். எழுத்து தொழிலாகி, பத்திரிகைகள் பெருகிவிட்ட இந்த நாளில் இப்படிப் பழக்கிக் கொள்வது அவசியம் என்பதில் தவறில்லை.
எப்படி எழுதுவது என்பதை எனக்குச் சரியாக விவரிக்கத் தெரியவில்லை. மாபஸான் “நெக்லேஸை”யோ, “இரு நண்பர்களை”யோ, செக்காவ் “டார்லிங்”கையோ, “கோரஸ் பாடகி”யையோ, கு.ப.ரா. “நூருன்னிஸா”வையோ, பிச்சமூர்த்தி “பதினெட்டாம் பெருக்கை”யோ, டாகூர் “ஊர் திரும்புதலை”யோ எப்படி எழுதினார்கள் என்று அவர்களைக் கேட்டால்தான் தெரியும். என் சொந்த அநுபவத்தில் தெரிந்ததைத்தான் நான் சொல்லுவேன். ஒரு நாள் நான் ரயிலில் போய்க்கொண்டிருந்தபோது கச்சலும், கறுப்புமாக நாய் பிடுங்கினாற் போன்ற ஒரு பத்து வயதுப் பெண்குழந்தையுடன் யாரோ பணக்கார அம்மாள் எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தாள். பள்ளிக்கூட விடுமுறைக்கு மூத்த அக்காளின் ஊரில் தங்கிவிட்டு ஊர் திரும்புகிறது அந்தப் பெண். நல்ல துணை ஒன்று இந்தப் பணக்கார அம்மாளின் உருவில் கிடைக்கவே, அக்காள் அந்த அம்மாளோடு குழந்தையை அனுப்பியிருக்கிறாள். ஏதோ பேசிக் கொண்டிருக்கும்போது அந்த அம்மாள் “இது படித்து என்ன பண்ணப் போகிறது? நான் கூட, கூடமாட ஒத்தாசையாயிருக்க இதையே சாப்பாடு போட்டு வீட்டில் வைத்துக்கொண்டு விடலாம் என்று பார்க்கிறேன்” என்றாள். என்னமோ, அந்த யோசனையும் அந்த அம்மாள் அதைச்சொன்ன தோரணையும் உள் மனத்தில் பாய்ந்து குத்திக்கொண்டுவிட்டன. அந்தப் பெண்ணையே பார்த்துக் கொண்டு வந்தேன். அந்த ஆறு மணி நேரப்பயணத்தில் ஒன்றும் வேண்டும் என்றுகேட்காமல், ஆசைப்படாமல், கேட்ட கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லிக்கொண்டு வந்தது அது. எனக்கு உணர்ச்சி வசப்படுகிற இயல்பு அதிகம். அந்தப் பெண் தன் பொறுமையினாலும், பொறுப்பினாலும் எதையும் சமாளிக்கும். எதையும் ஆளும் என்று தோன்றிற்று. ஓடி ஆடி, கத்திக் கூச்சலிட்டு, விளையாடிப் பிதற்ற வேண்டிய வயதில் அது உலகத்தின் சுமைகளையும், கவலைகளையும் தாங்கிக் கொண்டிருப்பது போல் எனக்குத் தோன்றிற்று. எனக்குப் பயமாக இருந்தது. வயிற்றைக் கலக்கிற்று. அது ஒரு படம்.
இன்னொரு படம். என் மகன் ஆறு வயதில் ஒரு விடுமுறைக்கு அவன் தாத்தா வீட்டுக்குப் போயிருந்தான். நான் போய்த் திரும்பி அழைத்து வந்தேன். குணத்தில் எனக்குநேர் விரோதம் அவன். கூப்பிடாததற்கு முன் போய் யாரோடும் பேசிச் சிரித்து, நெடுநாள் சிநேகம் போல ஐக்கியமாகிவிடுகிற சுபாவம். பார்ப்பதற்கும் அப்போது கஷ்கு முஷ்கென்று உருட்டி விட்டாற்போல் இருப்பான். கூடப் பிரயாணம் செய்தவர்களோடு பேசிச் சிரித்துக் களைத்துப்போய் அவன் தூங்கத் தொடங்கினான். ஆரஞ்சுப் பழத்திற்காகக் கத்திவிட்டு, வாங்கிக் கொடுத்ததும் சாப்பிடாமல் தூங்கிவிட்டான். அது கையிலிருந்து உருண்டு ஒரு ஓரமாகக் கிடந்தது. அவ்வளவு கத்தினவன் ஏன் உடனே அதைத் தின்னவில்லை? எனக்கு அப்போது முன்பொருதடவை ரயில் பயணம் செய்தபோது பார்த்த அந்தப் பெண்ணின் ஞாபகம் வந்தது. இந்த இரண்டு படங்களும் எனக்கு அடிக்கடி ஞாபகம் வருவதுண்டு. ஆனால் எழுத வேண்டும் என்று தோன்றவில்லை. சுமார் ஒரு வருடம் கழித்து கலைமகள் தீபாவளி மலருக்காக அழைப்பு வந்தபோது,இந்த இரண்டு படங்களும் இணைந்து கலந்து “சிலிர்ப்பு” என்ற கதையாக உருவாயின. அதை வேகமாக எழுதின ஞாபகம் எனக்கு. கம்ப்யூட்டரில் கொடுத்தது போல இந்த இரு நிகழ்ச்சிகளும் அந்த ஒரு வருஷ காலத்திற்குள் ஒரு கதையை உருவாக்கிவிட்டனவோ என்னவோ! உட்கார்ந்து கதையை எழுதி முடிக்கிற வரையில் என்னால் துயரம் தாங்கமுடியவில்லை. ஒரு அபூர்வமான உணர்ச்சிலயம் அது. உடல், உள்ளமெல்லாம் நிரம்பி அன்று நான் கரைந்து கொண்டிருந்த ஞாபகம். 13 வருஷம் கழிந்தும் இன்னும் தெளிவாக நினைவிருக்கிறது. கடைசி வரிகளை எழுதும்போது ஒரு குழந்தையின் நிர்மலமான அன்பில் திளைக்கும் சிலிர்ப்பும் கசிவும் என்னைக் கரைத்துக் கொண்டிருந்தன. எழுதி முடித்ததும் ஒரு அதிசயமான சுமையிறக்கமும் விடுதலையும் நெஞ்சு கொள்ளாத நிறைவும் என்னை வந்து அணைத்துக்கொண்ட நினைவு இன்னும் எனக்கு இருக்கிறது. “சிலிர்ப்பு’ என்றே பெயர்வைத்துக் கதையை அனுப்பினேன். (எழுதி முடித்த பிறகுதான் தலைப்புக் கொடுக்கிற பழக்கம் எனக்கு.)
நான் ஒரு சின்ன ஹோட்டலில் சாப்பிடப் போனபோது ஒரு புதுக் கண்டாமணி கல்லாவிற்கருகில் வைத்திருந்தது. ஹோட்டல் முதலாளி அதைக் கோவிலுக்கு விடப்போவதாகச் சொன்னார். ஏதோ செல்லக் குழந்தையைப் பார்ப்பது போல அதை அவர் பார்த்துக் கொண்டு நின்றார். எதற்காக மணி வாங்கிவிடுகிறார் என்று எனக்குள் கேட்டுக் கொள்ளத் தொடங்கினேன். இன்னொரு நாள் லஸ் மூலை ஹோட்டல் ஒன்றில் சாப்பிடுகையில் ரவாதோசையின் மடிப்பைத் திறந்தபோது பாதி குடித்த பீடி ஒன்று கிடந்தது. ஹோட்டல் முதலாளியிடம் காண்பித்தேன். அவருக்கு வருத்தம், பத்துப் பேருக்கு நடுவில் சொன்னார். அதே லஸ் மூலையில் இன்னொரு ஹோட்டலில் சாம்பாரில் ஒரு சின்ன கருவண்டு கிடைத்தது. நல்ல வேளையாகச் சுண்டை வற்றல் குழம்பு இல்லை. வண்டு அடையாளம் தெரிந்தது. (ஒரு தடவை ரசத்தில் பல்லிகூடக் கிடைத்திருக்கிறது. சாப்பாடு விஷயத்தில் எனக்குத் தனி அதிர்ஷ்டம் உண்டு.) சர்வரிடம் சொன்னதும், பீடி தோசை முதலாளி போலல்லாமல், அவர் பயந்து பரபரவென்று காதோடு காதாக மன்னிப்புக் கேட்டுக்கொண்டு ராஜோபசாரம் செய்து என்னை வழியனுப்பி வைத்தார். பல ஆண்டுகள் கழித்து இவையெல்லாம் சேர்ந்து “கண்டாமணி’ என்ற கதையாக உருவாயின. இந்தக் கதைக்கு மையக்கரு, சந்தேகம் அல்லது பயம். ஒரு உணவு விடுதிக்காரர் சாதம் குழம்புகள் பரிமாறிவிட்டு உள்ளே வந்தபோது, குழம்பிற்குள் கரண்டியை விட்டுக் கிளறித் தூக்கிய போது நீளமாகப் பாம்பு குட்டி போன்ற ஒரு ஜந்து கிடப்பதைப் பார்த்தார். கணவனும் மனைவியும் பதறிப்போய் தெய்வத்திடன் அபவாதம் ஆபத்து ஏதும் வராமல் காப்பாற்றும்படி வேண்டிக்கொள்கிறார்கள். செய்தி பரவாமலிருக்க வேண்டும் என்று அவர்களுக்குக்கவலை. கண்டாமணி வார்த்துக் கட்டுவதாக நேர்ந்து கொள்கிறார்கள். மறுநாள் காலை அநத் ஆள் செத்துப் போய்விட்டதாகத் தெரிகிறது. அது இங்கே சாப்பிட்டதனால்தானா என்று நிச்சயமாகச் சொல்வதற்கில்லை. ஆனால் விடுதிக்காரருக்குத்தன் குழம்புதான் யமன் என்று பயம். சந்தேகமும் பயமும் அவரை ஆட்டுகின்றன. சொன்னபடி கண்டாமணி வார்த்துக் கோயிலில் கட்டிவிடுகிறார். ஆனால் அந்த மணியோசையைக் கேட்கும்போதெல்லாம், தான் செய்து விட்டதாக நினைத்த குற்றம் அவரை அலைக்கழிக்கிறது. கடைசியில் தாங்க முடியாமல் கோயில் நிர்வாகியிடம் சென்று வேறு என்னவோ சாக்குகள் சொல்லி மணியைத் திருப்பிப் பெறப்பார்க்கிறார். சின்னச் சின்னதாக வெள்ளிமணிகள் செய்து வைக்கிறேன் என்று வேண்டுகிறார். கண்டாமணியோ நன்றாக அமைந்துவிட்டது. அதிகாரி அதை எண்ணி, “போய்யா பைத்தியம்” என்கிற மாதிரி சிரித்துவிட்டு மறுத்துவிடுகிறார். விடுதிக்காரருக்கு அழுத்தி வற்புறத்தவும் பயம். பேசாமல் திரும்பிவிடுகிறார். இந்தக் கதையைச் “சிலிர்ப்பு” மாதிரி பரபரவென்று நான் எழுதவில்லை. அந்தச் சந்தேகமும் பயமும் கதாநாயகர்களாக இருப்பதாலோ என்னவோ மெள்ள மெள்ளத்தான் எழுத முடிந்தது. வேறு தொல்லைகள் குறுக்கிட்டதனாலும் மூன்று நான்கு தடவை உட்கார்ந்து எழுதி முடித்ததாக ஞாபகம்.
இந்த மாதிரி பல கதைகளுக்குச் சொல்லிக்கொண்டு போகலாம். அதனால் உங்களுக்கு எந்தப் பிரயோசனமும் இராது. அவரவர்கள் அனுபவிப்பதும் எழுத்தாக வடிப்பதும் அவரவர் முறை.
என் அனுபவத்தை மீண்டும் ஒருமுறை சொல்ல ஆசைப்படுகிறேன். எந்த அனுபவத்தையும் மனசில் நன்றாக ஊறப்போடுவதுதான் நல்லது. பார்த்த அல்லது கேட்ட ஓர் அனுபவம் அல்லது நிகழ்ச்சியைப் பற்றி உணர்ந்து சிந்தித்துச் சிந்தித்து ஆறப்போடத்தான் வேண்டும். இந்த மன நிலையை ஜே. கிருஷ்ணமூர்த்தி அடிக்கடி சொல்லும் “ Choice-less Awareness” என்ற நிலைக்கு ஒப்பிடத் தோன்றுகிறது. ஒரு நிகழ்ச்சியைச் சுற்றி சித்தம் வட்டமிட, வட்டமிட, அதன் உண்மை நம் அகத்தின் முன்னே மலரும். கதை உருவு முழுமையுடன் வடிவதற்கு என் அனுபவத்தில் இதுதான் வழி. அனுபவம் நம்முள்ளில் தோய்ந்து ஒன்றி பக்குவநிலைக்கு வருமுன் அவசரப்பட்டு எழுதினால் உருவம் மூளிப்பட்டு விடுகிறது. பழக்கத்தில் இது தெரியும்.
நான் சிறுகதை ஆசிரியனும் இல்லை. சிறுகதை வாத்தியாரும் இல்லை. (சிறுகதை எழுது என்று யாராவது என்னைக் கேட்டால் எனக்கு வயிற்றில் புளியைக் கரைக்கத் தொடங்கிவிடும்.!) நான் எழுதிய நூற்றுக்கு மேற்பட்ட கதைகளில் ஒன்றோ இரண்டோதான் சிறுகதை என்ற சொல்லுக்குச் சற்று அருகில் நிற்கின்றன. மற்றவைகளைச் சிறுகதை என்றால் சிறுகதை என்ற சொல்லுக்கே இழிவு செய்கிற மாதிரி. இப்படியானல் ஏன் இத்தனை நாழி கதைத்தாய் என்று கேட்காதீர்கள். தோல்வி பெற்றவர்கள்தான் உங்களுக்கு வழி சொல்லமுடியும்.
தொகுத்தவர் – மகரம். (1969)
சுஜாதா
’சிறுகதை எழுதுவது எப்படி?’ என்பது கற்றுக்கொடுப்பதற்காக எழுதப்பட்ட பாட புத்தகம் அல்ல. அது சுஜாதாவின் ஒரு சிறுகதை தொகுப்பு என்பது சுஜாதாவின் ரசிகர்களுக்கு தெரிந்திருக்கும். தொகுப்பில் உள்ள முதல் கதையின் தலைப்பே, புத்தகத்தின் தலைப்பு. முழுக்க முழுக்க நகைச்சுவை படர்ந்திருக்கும் கதை இது. குங்குமத்தில் வெளியானது. எப்போது என்று சரியாக தெரியவில்லை. ஆனால், கண்டிப்பாக 1981க்கு முன்பு.
சுஜாதாவின் கதைகள் எல்லாவற்றிலும் முதல் வரி படிப்போரை உள்ளே இழுத்துவிடும். கதை எழுதுபவர்களுக்கு அவர் சொல்லும் அறிவுரையும் இதுதான். இந்த கதையின் முதல் பாரா…
ஒரு அரிய வாய்ப்பு! நீங்கள் நல்ல சிறுகதைகள் எழுத விரும்புகிறீர்களா? குமுதம், விகடன், குங்குமம், சாவி, இதயம், கல்கி போன்ற முன்னணி இதழ்களில் உங்கள் சிறுகதைகள் பிரசுரமாக வேண்டுமா? சுஜாதாவிடம் கற்றுக் கொள்ளத்தொடர்பு கொள்ளுங்கள்: த.பெட்டி எண்: 2355.
முழுக்க முழுக்க சுவாரஸ்யமாக இந்த கதையை படிக்க விரும்புபவர்கள், இப்படியே கிளம்பி விடவும். நான் வாசித்து ரொம்பவும் ரசித்த கதையை இங்கே பகிர்ந்துக்கொள்ள போகிறேன்.
கதையின் நாயகன் ராஜரத்தினம், மேலே இருக்கும் விளம்பரத்தை தினமணியில் பார்ப்பதில் தொடங்குகிறது கதை. ராஜரத்தினத்துக்கு அவர் எழுதும் கதைகள் பத்திரிக்கையில் வர வேண்டுமென்பது ஆசை. ஆனால், எழுதிய கதைகள் ஒன்றும் பிரசுரமாகவில்லை. ஒருநாள் இந்த விளம்பரத்தைப் பார்த்து அவர் எடுக்கும் முடிவுகள், அதன் விளைவுகள், அதை ராஜரத்தினத்தின் வார்த்தைகளிலே சுஜாதா எழுதியிருக்கிறார்.
சுஜாதா பற்றி அவருடைய கதாபாத்திரமான ராஜரத்தினம் என்ன நினைக்கிறார்?
“சுஜாதாவிடம் கற்றுக்கொள்ள!” சர்தான், சுஜாதா வராறா! அந்த ஆளு சுமாரான எழுத்தாளன்தான்; ஒத்துக்கறேன், அங்க இங்க படிப்பேன். வாத்யார்கிட்டே சரக்கு இருக்கலாம். அவருதான் லாண்டரி கணக்கு எழுதினாக்கூட போடறாங்களாமே!
விளம்பரத்தை பார்த்து சுஜாதா நடத்தும் சிறுகதை பட்டறைக்கு விண்ணப்பம் எழுதிப்போடுகிறார் ராஜரத்தினம். அவர்களும் வர சொல்கிறார்கள். இவரும் அவர்கள் வர சொன்ன ஹோட்டலுக்கு சொல்கிறார். அங்கு ஒருவர் அவரை விசாரித்துவிட்டு மாடியில் இருக்கும் அறைக்கு போக சொல்கிறார்.
மெள்ள மாடிப்படில ஏறிப் போனேன், எதிர்பார்ப்பில என்னோட இருதயம் ஒரு ரெண்டு படி முன்னாலேயே ஏறுது. அந்த ரூம் கதவைத் தட்டினேன். இல்லை, ‘டக் டக் கினேன்…’ எப்படி?
என்ன குசும்பு, பாருங்க? கதை வந்த ஆண்டை நினைத்துக்கொள்ளவும்.
அப்புறம் அந்த அறையின் கதவை ராஜரத்தினம் தட்ட, கதவை திறப்பது ஒரு பெண்.
“மன்னிச்சுக்கங்க, இதானே ஒம்பது?”
“ஆமாம் உள்ளே வாங்க.”
“சுஜாதாவை சந்திக்கலாம்னுட்டு”
“நான்தான் சுஜாதா”ங்கறா அந்தப் பொண்ணு.
அடுத்த ஆறு பக்கத்துக்கு அந்த பொண்ணுக்கூட நடக்குற கசமுசா தான் கதை. முடிவு ஆஹா ஓஹோ’ன்னு சொல்லுற மாதிரி இல்லாம, யூகிக்கும்படி இருந்தாலும், அந்த எள்ளலும் நக்கலும் கலந்த நடை இருக்கே? சூப்பரு…
“ஒரு பெண்ணை வர்ணிக்கிறீங்க. சரி, நல்ல ஆரம்பம். ஆனா நீங்க ஒரு பெண்ணைக் கிட்டத்தில பார்த்திருக்கீங்களா?”
“ம்… இல்லைதான்”
“எடுங்க பேப்பரை. என்னைப் பாருங்க. வர்ணிங்க. எழுதுங்க”
இப்படியே ராஜரத்தினத்துக்கு கதை எழுத பழக்கிவிடுறாங்க.
ராஜரத்தினம், “வேண்டாங்க. கதை கொஞ்சம் வேற மாதிரி போவுது.”
“என்ன வேற மாதிரி?”
“அடுத்த பக்கத்தில அவங்க ரெண்டு பேரும் ஒரு கணத்தில் சபலத்தில் தம்மை இழந்துர்றாங்கன்னு வரது!”
“சரி, அதுக்கென்ன இழந்துட்டாப் போச்சு!”
“என்னங்க இது?”
“இலக்கியங்க! வாங்க!”
—
- சிறுகதை எழுதுவது எப்படி?
- சுஜாதா
- விசா பப்ளிகேஷன்ஸ்
- 112 பக்கங்கள்
- 50 ரூபாய்
கு.அழகிரிசாமி
சிறுகதைகள் குறுகிய காலத்தில் படித்து முடிப்பதற்காகவே தோன்றின; எனினும். அது ஒன்று மட்டுமே அவற்றின் இலக்கணமாகிவிடவில்லை. இலக்கியம் பல பிரிவுகளை உடையது: ஒவ்வொரு பிரிவுக்கும் ஒவ்வொரு வடிவம் உண்டு; தனித்தனியே சில இலக்கணங்கள் உள்ளன. எனவே. குறுகிய காலத்தில் படித்து முடிக்கக்ó கூடியது. என்பது சிறுகதைகளின் வெளி வடிவ அமைப்புக்குரிய இலக்கணமேயன்றி. அதன் உள்ளமைப்புக்குரிய இலக்கணங்கள் வேறு. இந்த இருவகை அமைப்புகளுக்கும் உரிய இலக்கணங்களை ஒன்று சேர்த்து. ஸாமர்ஸட் மாம் என்ற மேலை நாட்டுச் சிறுகதை ஆசிரியர் கூறுகிறார்:
“சிறந்த சிறுகதையில் நல்ல கதையம்சம் இருக்க வேண்டும். அது ஏதாவது ஒரு நிகழ்ச்சியை மட்டுமே விவரிப்பதாக இருக்க வேண்டும். ஒரு மூச்சில் படித்து முடிக்கக்கூடியதாக அதை அமைக்க வேண்டும். அது தனக்கென ஒரு தனிப்பண்பைக் கொண்டிருக்க வேண்டும். படிப்போர் மனத்தில் ஆழப் பதிந்து கிளுகிளுப்பை ஏற்படுத்த வேண்டும். ஆரம்பத்திறீருந்து முடிவு வரையில் தொய்வின்றி ஒரே சீராகச் செல்ல வேண்டும்.”
– ஸாமர்ஸட் மாம்
“சிறுகதை என்பது இலக்கியத்தில் ஒரு பகுதி; இலக்கியத்தின் ஒரு வடிவம். இலக்கியம் என்பது ஒரு கலை. கலையைப் படைப்பது படைப்புத்திறன். படைப்புத்திறனை ஒருவன் இன்னொருவனுக்குக் கற்பிக்க முடியது; ஒருவனிடமிருந்து இன்னொருவன் கற்றுக்கொள்ளவும் முடியாது. அப்படிக் கற்பிக்க முடியாமலும் கற்றுக்கொள்ள முடியாமலும் இருப்பதுதான் படைப்புத்திறன்.
படைப்புத்திறனைக் கற்பிக்க முடியாதா? இது என்ன புதிர்? என்று சிலர் ஆச்சரியப்படலாம். ஆம்! அதைக் கற்பிக்க முடியாதுதான். விருத்தப்பாவை இயற்றுவது எப்படி என்று ஒருவன் மற்றொருவனுக்குக் கற்பிக்கலாம். கற்றுக் கொண்டவன் விருத்தப்பாவை இயற்றிவிடலாம். ஆனால் அந்த விருத்தப்பா ஒரு கலைப்படைப்பாக. ஒரு சிறந்த கவிதையாக அமைவது. இயற்றியவரின் திறமையைப் பொறுத்த விஷயம். உலகில் எல்லா நாடுகளிலும் கோடிக் கணக்கானவர்கள் இலக்கிய இலக்கணங்களைக் கற்றிருக்கிறார்கள். ஆனால் கவிஞர்கள்
கோடிக்கணக்கில் இருக்கவில்லை. கம்பர். ஷேக்ஸ்பியர். காளிதாசர். தாந்தே என்று ஒரு சிலவரைத் தான் மகாகவிகள் என்று சொல்கிறோம். அந்த மகாகவிகள் மற்றவர்களிடம் இலக்கணத்தையும். இலக்கியத்தையும். அதன் நயங்களையும்தான் கற்றுக்கொண்டார்களே ஒழிய படைப்புத் திறனைக் கற்கவில்லை.
கதையின் மையமான அம்சமே. அதன் கருவே. கதையின் உருவத்தையும். நடையையும் நிர்ணயிக்கக்கூடியதாகும். எனவே கதையின் சிறப்புக்கு மூலகாரணமாக இருப்பது அதன் கருதான். கருவில் திரு இல்லையென்றால். கதையிலும் வளம் இராது. எனவே கரு பலமானதாக இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளவேண்டும். அடுத்தபடி அந்தக் கருவுக்கு கொடுக்கப்பட்ட கதை – உருவம் – சரிதானா என்று பார்க்கவேண்டியது அவசியம். அந்த உருவத்தில் கதையின் கரு சிறப்பாக முழு வளர்ச்சி பெற்று. கதைக்குச் சிறப்பைக் கொடுக்கிறதா. அல்லது வேறொரு உருவில் கதையை எழுதியிருந்தால் இன்னும் நன்றாக இருக்குமா என்று கவனிக்கவேண்டும். எழுதப்பட்ட கதைக்குக் கொடுக்கப்பட்ட உருவத்தைவிட. வேறோர் உருவம் நன்றாக இருக்குமென்று தோன்றினால் அந்த உருவத்தில் எழுதவேண்டும். இதற்கு. உருவத்தைப் பற்றிய உணர்வு எழுத்தாளனுக்கு இருக்கவேண்டியது அவசியம். உருவம் என்றால் என்ன? மையக்
கருத்தைக் கச்சிதமாகவும். குன்றாமலும். குறையாமலும் சரியான இடத்தில் தொடங்கிச் சரியான இடத்தில்ó முடிப்பது உருவத்திற்கு மேற்போக்கான ஒரு விளக்கமாகும்.
வேண்டாத விளக்கங்களோ. வர்ணனைகளோ இருக்கக்கூடாது. வேண்டிய விளக்கங்களும். வர்ணனைகளும் இல்லாமல் போய்விடவும் கூடாது. உருவம் அமைவதற்கு இன்றியமையாத விஷயங்கள் இவை. கதையில் சில பகுதிகளைக் குறைத்து விட்டால் உருவம் கெடாது. அல்லது உருவம் அமையும். அல்லது உருவம் இன்னும் கச்சிதமாக அமையும் என்று தோன்றினால் அந்தப் பகுதிகளைக் குறைத்துவிட வேண்டும். சொல்லப்போனால். ஒரு சிறுகதையில் தேவையில்லாமல் ஒரு பகுதி மட்டுமல்ல. ஒரு வார்த்தையோ. ஒரு காற்புள்ளியோ (‘கமா’)
கூட இருக்கக்கூடாது. இருந்தால் அந்த அளவுக்கு அது கதைக்குக் கேடு செய்யும்.
கதையின் கருத்தும். உருவமும். நடையும் சிறப்பாக இருப்பதுடன். தங்குதடையற்ற ஓட்டமும் இருக்கிறதா என்று கவனிக்கவேண்டும். கதையை அந்தரத்தில் நிறுத்தி வைக்கும் எந்த அற்புத வியாக்கியானமும் சரி. வர்ணனையும் சரி கதைக்கு அறவே ஆகாத விஷயம் என்று கொள்ளவேண்டும்.
கடைசியாகச் சில முக்கிய கருத்துகள் பின்வருமாறு:
1. சிறு கதை எழுதுகிறவன் வாழ் நாளெல்லாம் மற்றவர்களுடைய சிறுகதைகளைப் படித்துக்கொண்டே இருக்க வேண்டும்.
2. சிறுகதைகளோடு. காவியம். நாவல். நாடகம் போன்ற இலக்கியங்களையும். உலக அனுபவங்களையும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்.
3. தான் காண்கிற. கேட்கிற. படிக்கிற. அனுபவிக்கிற ஒவ்வொன்றினுடைய உண்மையையும் சாரத்தையும் கண்டறிவதற்கு முயலவேண்டும்.
4. இலக்கியங்களைப் படிப்பதோடு. இலக்கிய விமர்சனங்களையும் படிக்க வேண்டும்.
5. பிறர் செய்யாத ஒரு காரியத்தை அல்லது ஒரு புதுமையைச் சாதிப்பதற்கு மட்டும்தான் சிறுகதை எழுத வேண்டும்.
6. சொந்தப் புத்தியை உபயோகிக்காமல் பிறர் கருத்தை அப்படியே ஏற்கும் கண்மூடித்தனமோ அல்லது அலட்சியமாக உதாசீனம் செய்யும் அகம்பாவமோ கூடவே கூடாது.
7. எழுதும் பயிற்சியை நிரந்தரமாக வைத்துக்கொள்ள வேண்டும். நீண்ட காலம் எழுதாமல் நிறுத்திவைப்பது தவறு. எழுத எழுதத்தான் எழுத்து சிறக்கும். ’சித்திரமும் கைப்பழக்கம்’ என்பது
போல். எழுத்துச் சித்திரமும் கைப்பழக்கத்தால் தான் சிறக்கும்.
8. நடைமுறை வாழ்க்கையை ஆதாரமாக வைத்து எழுதும் கதைகளில் நடக்கமுடியாத சம்பவங்களையும். காண முடியாத பாத்திரங்களையும். கேள்விப்படாத பெயர்களையும் புகுத்தவே கூடாது.
தேவமைந்தன்
இன்றைக்குச் சிறுகதை தமிழுலகில் எத்தனையோ தொலைவு பயணம் செய்து வடிவமிழந்து உருவமிழந்து அன்னியமாகி சிறுத்து பயிற்சிப் பட்டறைகளில் சான்றிதழ் மட்டுமே பெறும் அளவு ‘மவுசு’ குறைந்து தனக்கான அடையாளம் தேடி அலைகிறது. தமிழருக்குக் கரும்பு போலவும்(சீனா) மிளகாய் போலவும்(சிலி) மணிலாப் பயறு போலவும்(மணிலா) மெய்யாகவே அன்னியமான சிறுகதையின் உரைநடை வடிவம் தமிழ் இலக்கிய உலகில் புகுந்து எப்படியெல்லாம் இலக்கணப்படுத்தப்பட்டது என்பதைப் பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கம். எந்த அளவு முன்னோக்கித் தொலைநோக்க முடியுமோ அதே அளவு சரியாகப் பின்னோக்கித் தொலைநோக்கவும் சிங்கத்துக்கு மட்டுமே முடியுமாம். இதற்கு ‘அரிமா நோக்கு’ என்று பெயரிட்டு, தமிழ் உரையாசிரியர்கள் தம் உத்திகளுள் இதைத் தலையாய உத்தியாக ஏழு நூற்றாண்டுகளுக்கு முன்பே கொண்டார்கள். இந்த உத்தியின் ஒரு பாதியை இந்தக் கட்டுரையில் பயன்படுத்துகிறேன். தமிழுக்குப் புதுவரவாக இருந்த சிறுகதைக் குழந்தை, யார் யார் மடிகளிலெல்லாம் தவழ்ந்து ஆளானது, மறக்கப்பட்டுவிட்ட/மறக்கடிக்கப்பட்ட அவர்கள் யார் என்பதைக் கூடுமான அளவு ஒழுங்குடன் வெளிப்படுத்துவதும் இதன் அடுத்த நோக்கம்.
காவியங்களில் சிறுகதைகள் – டாக்டர் மா.இராசமாணிக்கனார் நோக்கு:
நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரத்தில், கவுந்தியடிகள் மாதரிக்குக் கூறிய அடைக்கலச் சிறப்புப் பற்றிய வணிகமாதின் கதை, செய்யுளில் அமைந்த சிறுகதை. மதுராபதி தெய்வம் கண்ணகிக்குக் கூறிய பொற்கைப் பாண்டியன் கதையும் சிறுகதையே ஆகும். இங்ஙனமே மணிமேகலை என்னும் காவியத்தில் கூறப்பட்டுள்ள சுதமதியின் வரலாறு, ஆபுத்திரன் வரலாறு ஆகியவற்றில் சிறுகதை நிகழ்ச்சிகள் அடங்கியுள்ளன. இவற்றை விரித்து உரைநடையில் எழுதினால் அவை இலக்கிய நயமுள்ள சிறுகதைகளாக உருவெடுக்கும். இவ்வாறே கொங்குவேள் பாடிய பெருங்கதையிலும் சீவக சிந்தாமணியிலும் சிறுகதைகள் பல செருகப் பெற்றுள்ளன. ஆயினும் இவை அனைத்தும் செய்யுள் வடிவில் அமைந்துள்ளன.(1)
தொடக்க காலத்தில் சிறுகதைகள் – டாக்டர் மா.இராசமாணிக்கனார் நோக்கு:
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாளிதழ்களும், கிழமை திங்கள் இதழ்களும் பெருகத் தொடங்கிய பொழுது, மேனாட்டுச் சிறுகதைகளைப் பின்பற்றி நம்மவர் தமிழில் சிறுகதைகளை எழுதலாயினர். பண்டித நடேச சாஸ்திரியார் (1859-1906) ‘ஈசாப் கதைகள்,’ ‘தக்காணத்து பூர்வ கதைகள்,’ ‘தக்காணத்து மத்திய காலக் கதைகள்’ என்று மூன்று கதை நூல்களை எழுதினார். இந்த நூற்றாண்டில் பேராசிரியர் செல்வக்கேசவராய முதலியார் எழுதிய ‘அபிநவ கதைகள்’ காலத்தால் முற்பட்டவை என்றும், அறிஞர் வ.வே.சு. ஐயர் அவர்கள் பாலபாரதியில் எழுதிய கதைகள் சிறுகதைகளுக்கு உயிரும் ஒளியும் கொடுத்தன என்றும் புதுமைப்பித்தன் எழுதியுள்ளார்.
கவியரசர் பாரதியாரும், இராமாநுசலு நாயடு என்பவரும் சிறுகதைகள் எழுதினர். 1930க்குப் பின்பு கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள். எஸ்.வி.வி., கொனஷ்டை, ஆகியோர் நகைச்சுவை பொருந்திய சிறுகதைகளை வரைந்து பெயர் பெற்றனர். திருவாளர்கள் ந.பிச்சமூர்த்தி, கு.ப.ரா., பி.எஸ்.ராமையா, சிதம்பரம் சுப்பிரமணியன், புதுமைப்பித்தன் ஆகியோரும் சுவை மிகுந்த சிறுகதைகளை எழுதலாயினர், மௌனி என்பவர் எழுதியுள்ள ‘நட்சத்திரக் குழந்தைகள்,”சிவசைவம்,’ ‘எங்கிருந்தோ வந்தான்’ போன்ற கதைகள் உயர்ந்தவை….வை.மு.கோதைநாயகி அம்மையார் எழுதியுள்ள சிறுகதைகள் – ‘மூன்று வைரங்கள்,’ ‘கதம்ப மாலை,’ ‘பட்சமாலிகா,’ ‘சுடர் விளக்கு,’ ‘பெண் தர்மம்’ என்னும் ஐந்து [தொகுப்பு] நூல்களாக வெளிவந்துள்ளன.
வாழ்க்கை நிகழ்ச்சிகளுள் ஒன்றை மட்டும் எடுத்து, அதற்கு முதல்-இடை-கடை என்னும் மூன்று உறுப்புகளை அமைத்து, விளங்க வரைவது சிறுகதை அல்லது குறுங்கதை எனலாம். சுருங்கக் கூறின், பெருங்கதை வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டும் நிலைக் கண்ணாடி எனலாம்.
புதுமைப்பித்தனுடைய சிறுகதைகளில் பல சிறந்த உண்மைகள் காணப்படுகின்றன. அவற்றுள் இரண்டனைக் கீழே காண்க:
(அ) “பெரிய மீன் சின்ன மீனைத் தின்னலாம்; ஆனால் சின்ன மீன் அதற்கும் சின்ன மீனைத் தின்றால், பெரிய மீன், ‘குற்றம் செய்கின்றாய்’ என்று தண்டிக்க வருகின்றது. இதுதான் சமூகம்.”
(ஆ) “உணர்ச்சி, தேவனையும் மிருகமாக்கி விடுகிறது.”(2)
விடுதலைப் போராட்டப் பின்னணி – கல்கியின் சிறுகதைச் சாதனை – கா.திரவியம் நோக்கு:
கல்கியின் சிறுகதைகள் தேசியத்துக்கு ஆற்றிய சிறப்பான தொண்டு, அக்கதைகள் பெரும்பாலானவற்றில், நாட்டுப்பற்றும் நாட்டுக்கு ஆக்கம் தேடிய நல்ல கருத்துக்களும் கதையில் இழையோடியதாகும். சிறை சென்ற தேசபக்தனைக் கதாநாயகனாகவும், சமூகசேவை ஆற்றும் பெண்ணைக் கதாநாயகியாகவும் கொண்டு பின்னப்பட்டிருந்த இக்கதைகள்,தியாகிகளையும் ஊழியர்களையும் நம் கண்முன் நிறுத்தி, அவர்கள் தொண்டினாலும் துன்பங்களினாலும் ஊழியத்தினாலும் உள்ளக் கிளர்ச்சிகளாலும் படிப்பவர்களை ஆட்கொண்டன. அரசின் அடக்குமுறைக்கும், பொதுவாகப் பலரின் அலட்சியத்துக்கும் ஆளாகியிருந்த இந்த வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் தம் கதைகள் மூலம் சமூகத்தின் ஏற்பையும் பாராட்டுதலையும் பெற்றுத் தந்தது, கல்கியின் சிறந்த சாதனைகளில் ஒன்று.(3)
விடுதலைப் போராட்டப் பின்னணி – அகிலனின் சிறுகதைச் சாதனை – கா.திரவியம் நோக்கு:
விடுதலைப் போராட்டத்தைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட கதைகளில், போராட்ட உணர்ச்சி பொங்கி வழிகிறது அகிலனின் ‘பொங்குமாங்கடல்’ என்ற கதையில். சிதம்பரம் பிள்ளையைச் சிறையிலே தள்ளி செக்கிழுக்க வைத்த ஆங்கிலேய அதிகாரிகளைப் பழிவாங்கத் துடித்துக் கொண்டிருந்த புரட்சிவாதிகளை மையமாகக் கொண்டு நெய்யப்பட்ட நெஞ்சை அள்ளும் கதை இது.(4)
முதன்முதலில் தமிழில் சிறுகதை குறித்து ஆய்வுக் கண்ணோட்டத்துடன் சிந்தித்தெழுதிய டாக்டர் அ. சிதம்பரநாதன் கருத்துகள்:
“தமிழில் சிறுகதையைப் பற்றி ஆய்வுக் கண்ணோட்டத்தோடு சிந்தித்து, தரம் அறிந்து வகைப்படுத்தித் திறனாய்வு செய்த முதல் தமிழ்ப் பேரறிஞர் இவரே” என்று, “தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்”(ஏப்ரல் 1977) என்ற அரிய சிறு அளவிலான புத்தகத்தைப் பதிப்பித்த பேரா.புளோரம்மாள், ம.செ.இரபிசிங் கூறியுள்ளனர்.(5) 22+vi பக்கங்கள்; ரூபா ஒன்று மட்டுமே விலையுள்ளது இந்நூல். இது [இக்கட்டுரை எழுதும்] இப்பொழுது கிடைப்பதில்லை. மூன்றாவது அகில இந்திய எழுத்தாளர் மாநாட்டில் அ.சிதம்பரநாதன் ஆற்றிய பொழிவின் சுருக்கமும், இலக்கிய இதழ்களில் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளும் இதில் இடம் பெற்றுள்ளன. இதிலுள்ள சில முதன்மைக் கருத்துகளை – கூடுமானவரை சிதம்பரநாதனின் நடையிலேயே தருகிறேன். அந்தப் பகுதிகளில் மட்டும் காலம் வேறுபட்டிருக்கும்.
எட்கர் ஆலன் போ, ஹென்றி ஹட்சன், பெயின்(Barry Paine) ஆகியோர் கூறும் சிறுகதை இலக்கணம்:
1. சிறுகதை என்பது உட்கார்ந்து ஒரே மூச்சிலேயே படித்துவிடக் கூடியதாக இருத்தல் வேண்டும்.
2. 2000 அல்லது 3000 சொற்களுக்குமேல் போவதாக இருக்கக்கூடாது.
3. அரை மணி அல்லது ஒரு மணிக்குமேல் படிப்பதற்கு நேரம் எடுத்துக்கொள்ளக் கூடியதல்லாததாக இருக்கவேண்டும்.
அளவு ஒன்றே சிறுகதைக்கு இலக்கணம் அல்லாவிட்டாலும், அளவும் சிறுகதையின் இலக்கணங்களுள் ஒன்றாகும்.
கவிஞர் ரவீந்தரநாத் தாகூர் எழுதிய ‘குமுதினி’ என்னும் கதை 300 பக்கமாயினும் அது சிறுகதைதான் என்று வாதிப்பார் உண்டு. ஆங்கிலத்திலும் மெரிடித் என்பார் எழுதிய ‘குளோவின் கதை'(Tale of Chloe) என்பது சிறுகதைதானா அன்றா என்ற செய்தி பற்றி இன்னும் ஆராய்ச்சி நடந்துகொண்டு இருக்கிறது.
சிறுகதை எழுத்தாளர்கள் சிக்கலான பெரிய செய்திகளைப் பொருளாக எடுத்துக்கொள்ளக் கூடாது.(“They should not saddle themselves with a complicated plot.” Paine P.38) ஆடுகின்ற பெண் ஒருத்தி தான் ஆடுகின்ற அரங்கத்தின் நீள அகலத்திற்கேற்ப தனது ஆட்டங்களைச் சுருக்கிக்கொள்ளுதல் போல, சிறுகதை ஆசிரியர்கள் தம்முடைய கதைப்பொருளைத் தேர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
சிறுகதைகளில் ஒரே நோக்கமும் ஒரே விளைவுந்தான் எதிர்பார்க்கப்படுகின்றன.(“Singleness of aim and singleness of effect are the two great canons by which we have to try the value of a short story – as a piece of art.” Henry Hudson, Introduction To The Study Of Literature, P.445) நோக்கம் நிறைவேறும் வகையில் சிறுகதை அமைந்திருத்தல் போதுமானது. பல எழுத்தாளர்களுக்கு இது கைவரப்பெறாததால்தான் புதினங்களை[நாவல்களை] எழுதத் தலைப்படுகிறார்கள் என்று சொல்வது தவறாகமாட்டாது.
சிறுகதை எழுதுகிறவர்கள், கதை பொய் என்ற உணர்ச்சி வாசகர்கள் இடத்தில் உண்டாகும்படி எழுதுவார்களேயானால், அக்கதையில் நன்மைகள் பல உண்டு என்றாலும் அவை முழுப்பயன் அளித்தல் இல்லை.(“If a story once felt to be false, then all the virtues are of no avail”) மெழுகுவர்த்தி பார்ப்பதற்கு அழகாகவும் தொடுவதற்கு இனியதாகவும் முகருவதற்கு மனமுடையதாகவும் இருந்தாலும் அது எரியவில்லை என்றால், எவ்வாறு தக்க பயன் விளைத்தல் இல்லையோ அவ்வாறே மெய்போன்றது என்ற உணர்ச்சியை எழுப்பாத சிறுகதை முழுப்பயன் தராது என்பது நம்பிக்கை.
சிறுகதை எழுதுகிறவர்கள் நிகழ்ச்சிகளைப் படர்க்கையில் வைத்துத் தெரிவிக்கலாம்; கதைத் தலைவனோ கதைத் தலைவியோ தானே பேசுவதுபோல அமைக்கவும் செய்யலாம்; கடிதங்கள் மூலமோ, நாட்குறிப்புகள் மூலமோ, பிற பாத்திரங்கள் மூலமோ ஒன்றன்பின் ஒன்றாகச் செயல்கள் வெளிப்படுமாறு செய்யலாம். இந்த மூன்று வகைகளில் எதனை வேண்டுமானாலும் சிறுகதை ஆசிரியர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்பது மரபு.
சிறுகதையில் உரையாடல் இருப்பது விரும்பத்தக்கது என்றாலும்.இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. சிலருடைய சிறுகதை உரையாடலே இல்லாமல் நிகழ்தல் கூடும்; சிலருடைய சிறுகதையிற் சிறிதளவு உரையாடல் இருத்தல் கூடும்; சிலருடைய சிறுகதையில் எல்லாம் உரையாடலாகவே அமைந்துவிடுதலும் உண்டு.
சிறுகதையின் தொடக்க வாக்கியங்களைப் படித்த அளவில் கதையின் நோக்கம் இன்னது என்று வாசகருக்குப் புலப்பட்டுவிட வேண்டும்.(“Initial sentences should bring out the aim.”-W.H.Hudson)
சிறுகதையின் முடிவு எவ்வாறிருக்க வேண்டும்? இன்பியல் முடிவினாலோ துன்பியல் முடிவினாலோ கலை அழகு பெற்றுவிடாது; கலையழகிற்கு ஏனைய பல காரணங்கள் உண்டு.(“Happiness and unhappiness have nothing to do with art; the artistic ending is the right and inevitable ending.” – Paine)
அ.சிதம்பரநாதன் ‘தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்'(1977)நூலில் சுட்டியுள்ள சிறுகதை ஆசிரியர்களும் அவர்கள் படைத்த சிறுகதைகளும்:
1921வரை வாழ்ந்த சுப்பிரமணிய பாரதியார்தான் சிறுகதை எழுத்தாளர்களுக்கு விடிவெள்ளியாய் இருந்தவர்.. அவர் இயற்றிய ‘திண்டிம சாஸ்திரி,’ ‘சுவர்ண குமாரி’ போன்றவற்றின் அடிப்படையில் பின்னர்ச் சிறுகதைகள் எழுந்துள்ளன. வேதநாயகம் பிள்ளை, வ.வே.சு.ஐயர், மறைமலையடிகள் போன்றவர்களும் சிறுகதை போன்ற சிலவற்றை முன்னர் எழுதியுள்ளார்கள்…
சரியான சிறுகதை இலக்கியத்தின் தந்தையாகத் தமிழில் மதிக்கத்தக்கவர் ‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி என்று கூறுவது பொருத்தமற்றதாகாது. அவருடைய சிறுகதைகளிற் சில நெடுங்கதைகளாக இருக்கின்றன..அவரோடு சமகாலத்திலே வேறு இரு பெரும் எழுத்தாளர்கள் தோன்றினர். கு.ப.இராசகோபாலனும் புதுமைப்பித்தன் என்ற சொ.விருத்தாசலமும் நம் சந்ததியாராலும் விரும்பிப் படிக்கத்தக்க அளவு சிறப்பும் ஆற்றலும் பெற்றிருந்த சிறுகதை ஆசிரியர்கள். அவர்கள் இருவரும் காலஞ் சென்றுவிட்டனர். புதுமைப்பித்தன், உலகச் சிறுகதைகள் பலவற்றை மொழிபெயர்த்துள்ளார்…அவர் மிக்க சுருக்கமாகவும், திட்பமாகவும் எழுதுதலில் வல்லவர்; வரிதோறும் தொனிப் பொருளோடு வரையும் பெற்றி படைத்தவர். கு.ப.இராசகோபாலன், உயிரோடு திகழ்வாரைப் போலப் பல பாத்திரங்களைத் தமது கதைகளில் கொடுத்துள்ளார். சாதாரணமாக நம்மால் ஒதுக்கிவிடப்படுகிற, நம் கண்ணுக்குத் தெரியாது போய்விடக் கூடிய வாழ்க்கை நிகழ்ச்சிகளை வைத்துக் கொண்டு அவர் கதைகளை எழுப்பியுள்ளார். அவர் சொல்லாட்சி ஒரு தனிமதிப்புடையது. சில சொற்களில் அடங்கிக் கிடக்கும் பொருள் விரித்தால் அகன்று காட்டும். ‘காணாமலே காதல்’ ‘புனர்ஜென்மம்’ ‘கனகாம்பரம்’ முதலிய அவருடைய சிறுகதைத் தொகுதிகளாலன்றியும், ‘இரட்டை மனிதன்’ போன்ற மொழிபெயர்ப்பு நாவல்களாலும் அவர் புகழ் நிலவும் என்பது உறுதி. சமூக நோக்கில் ஜீவா* எழுதிய சிறுகதைகள், ‘வேதாந்த கேசரி’ ‘பிரதிவாதி பயங்கரம்’ முதலியவை. விந்தனின் ‘பொன்னி’ முதலிய சிறுகதைகள் சமூகப் பார்வையில் அமைந்தவை. கணையாழி எழுதிய ‘நொண்டிக் குருவி’ வெளியே ஜீவகாருண்யம் பேசி வீட்டில் அதைப் பின்பற்றாதவரை அம்பலப் படுத்தியது. “யார் குற்றவாளி?” என்ற கருத்தோடு எழுதப்படும் கதைகள் பல. இராசகோபாலாச்சாரியார் எழுதிய ‘பட்டாசு,’ அண்ணாதுரை எழுதிய ‘குற்றவாளி யார்?,’ புதுமைப்பித்தன் எழுதிய ‘பொன்னகரம்,’ ஜீவா எழுதிய ‘கொலு பொம்மை’ ஆகிய கதைகளில் வரும் பாத்திரங்கள் திருடியதாகவோ, விபசாரம் செய்ததாகவோ இருந்தன. அதற்குக் காரணம் அவ்வாறு அவர்களைச் செய்யும்படி பாழான ஏழ்மை நிலையில் விட்டுவிட்ட சமுதாயமே என்பது காட்டப்படுகிறது.
புதுமெருகு பெற்ற பழங்கதைகள்:
கு.ப.ரா. எழுதிய ‘துரோகமா?,’ கருணாநிதி எழுதிய ‘ராயசம் வெங்கண்ணா’ ஆகிய சிறுகதைகள், தஞ்சாவூர் – நாயக்கர்களிடமிருந்து மராத்தியர் கைக்குப் போகும்படி ஏற்பட்ட சரித்திரக் குறிப்பின் அடிப்படையில் எழுதப்பட்டவை. அவ்விரு ஆசிரியர்களும் நிகழ்ச்சியை வெவ்வேறு கோணத்திலிருந்து படம் பிடித்துக் காட்டியுள்ளார்கள். புஷ்பத்துறை சுப்பிரமணியன் அஜாத சத்ருவைப் ‘பாடலி’ என்ற கதையில் திரும்பவும் நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார். ‘கொனஷ்டை’ எழுதிய கதைகளில் மகனுக்கு முதுமையைக் கொடுத்து இளமையைத் தான் பெற்றுக் கொண்ட யயாதி ஒரே நாளில் பட்ட அல்லல்கள், ஆயிரம் ஆண்டுகளில் படுவதோடு சமம் என்ற அரிய கருத்து காட்டப்பட்டிருக்கிறது. ‘அகல்யை’ என்ற புதுமைப்பித்தன் கதை புத்துருவமே பெற்று நிற்கிறது.
கதையாசிரியர்களின் வாழ்க்கைநிலையை வைத்து எழுதப்பட்ட கதைகள்:
சுண்டு எழுதிய ‘சந்நியாசம்’ என்ற சிறுகதை, தன்னால் காதலிக்கப்பட்ட பெண்ணொருத்தியைத் திரைப்பட முதலாளியொருவர் தன் ஆசை நாயகியாக ஆக்கிக்கொண்டுவிட்டபடியால் எவ்வாறு படத்திலாவது சந்நியாசியாகிவிட்டார் என்பதைக் காட்டுகிறது. விந்தன் தனக்கேயுரிய பாணியில், தமிழ்நாட்டில் தம் பெருமை அறியப்படாத கதாசிரியர் ஒருவர் வடநாடு சென்று அங்கிருந்துகொண்டு ‘வக்ரநாத்ஜி’ என்ற புனைபெயரில் கதைகளெழுதித் தமிழ்நாட்டில் புகழும் செல்வமும் பெற்றார் என்பதைச் சித்தரித்தார்.
ஆண்-பெண்களின் மனநிலைகளை நன்றாகக் கவனித்து உணர்ந்து எழுதிய சிறுகதை ஆசிரியர்கள் -அரு.இராமநாதன்(‘காதல்’ இதழ்க் கதைகள்), டி.கே.சீனிவாசன்(‘துன்பக் கதை’) ஆகியோர். பெண்களின் மனநிலையை நுட்பமாக அறிந்துணர்ந்து, தெளிந்த உணர்த்தலோடு எழுதியவர் லக்ஷ்மி(திரிபுரசுந்தரி). அவர் எழுதிய ‘விசித்திரப் பெண்கள்,’ ‘முதல் வகுப்பு டிக்கெட்’ ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
ஏழைத் தொழிலாளர்களின் மனநிலையை நன்கு உணர்ந்து எழுதியவர், தானும் தொழிலாளராய் இருந்து எழுத்தாளரான விந்தன். பெ.தூரன்,மு.வரதராசன், ராஜம் கிருஷ்ணன்(‘பிஞ்சு மனம்’), கி.வா.ஜகந்நாதன்(‘பவள மல்லிகை’)ஆகியோரையும் இவருடன் குறிப்பிடலாம்.
கலைஞர் சிலருடைய முக்கிய விருப்பத்திற்குப் பாத்திரமாக இருப்பவர் கண்முன்னே இல்லாமல் மறைந்து விட்டால், அவருடைய கலைத்திறன் மங்கிவிடுகிறது என்பதை ஜீவாவின் ‘பிடில் நாதப்பிரமம்’, புஷ்பத்துறை சுப்பிரமணியத்தின் ‘ஜீவ சிலை’ என்ற சிறுகதைகள் வெளிப்படுத்தின.
சினிமாப்பட முதலாளிகளும் டைரக்டர்களும் தரும் தொல்லைகளை ஜீவாவின் ‘மிருநாளினி,’ கல்கியின் ‘சுண்டுவின் சந்நியாசம்’ புலப்படுத்தின.
சீர்திருத்த நோக்கில் படைக்கப்பட்ட சிறுகதைகள்:
கல்கியின் ‘விஷ மந்திரம்’ தீண்டாமையைப் பொசுக்கிவிடும் வகையில் அமைந்தது.
காசி நகரப் பண்டாக்களுக்கு இக்கதையை மொழி பெயர்த்துக் காட்டுதல் வேண்டும். ஏ.எஸ்.பி. ஐயர் எழுதிய ‘வான் மலர்’ என்னும் கதை, விதவை மறுமணத்தைப் பற்றியது. இது தொடர்பாக, இதைவிட மிகச் சிறந்தது புதுமைப்பித்தனுடைய ‘வழி’ என்ற சிறுகதை. சுத்தானந்த பாரதியாரின் ‘கலிமாவின் கதை’ முஸ்லிம் பக்கிரி ஒருவனின் மகள் இந்துமதம் சார்ந்தவன் ஒருவனை மணந்துகொண்டதை விவரித்தது. அண்ணாத்துரையின் ‘பேரன் பெங்களூரில்’ என்ற சிறுகதை, பிராமண விதவை ஒருத்தி முதலியார் குலத்து ஆசிரியரை மணந்து, ஒரு சூழ்ச்சியால், தந்தையின் ஆசியைப் பெற விழைவதுபோலக் காட்டுகிறது.
இலக்கிய மணம் வீசும் சிறுகதைகள்:
பொதுமக்கள் மதிப்புக்கு அதிகமாக ஆசைப்படாமல், தம்மை அறிந்து வாசித்து மகிழக்கூடிய மக்களுக்கு ஒத்ததாக மு.வரதராசனின் நடை அமைந்துள்ளது. அவர் எழுதிய ‘விடுதலையா?’ முதலிய கதைகளைக் காணலாம். ‘கட்டாயம் வேண்டும்’ என்ற தலைப்பிலே, வேலையின்மையும் வறுமையும் இரந்தும் பெறாமையும் எவ்வாறு ஓர் இளைஞனைத் தற்கொலைக்குத் தூண்டிவிட்டன என்ற கருத்துள்ளது. ஜீவாவின் ‘முல்லை,’ மகுதூம் என்பவரின் ‘திருமறையின் தீர்ப்பு’ ஆகிய கதைகளில் நல்ல இலக்கிய மணம் வீசக் காண்கிறோம்.
சிறுகதைகளைப் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தலாமா?
கருணாநிதி, அண்ணாத்துரை, ஏ.எஸ்.பி.ஐயர், சுத்தானந்த பாரதியார் போன்றவர்கள் சமூகக் குறைகளைப் போக்குவதன் பொருட்டு சிறுகதைகள் படைத்தார்கள். ஐரோப்பாவில் இந்நிலை நிலவியது குறித்து “தமது கதைகளைப் படிக்கும் வாசகர்களைப் பொறுத்து, விட்டுக் கொடுக்க வேண்டிய விஷயம் இது” என்று பேர்ரி பெயின் கூறினார். அண்ணாத்துரையின் “சிறுகதைகள்” என்ற தொகுப்பில் பிரச்சாரம் இடம் பெற்ற அளவு “கற்பனைச் சித்திரம்” என்ற புத்தகத்தில் இல்லை.
தொகுப்பாக…
தொகுப்பாக இறுதியில் டாக்டர் அ. சிதம்பரநாதன் குறிப்பிடும் எழுத்தாளர்களையும் அவர்களின் சிறுகதைகளையும் சுருக்கமாக இங்கே காணலாம்.
மாயாவியின் ‘பனித்திரை’ போன்ற கதைகள், மாணவர்களுக்கு ஏற்றதாக சி.எம்.இராமச்சந்திரஞ் செட்டியார் எழுதிய ‘சிறுகதைத் திரள்,’ கா.அப்பாத்துரையார் எழுதிய ‘சமூகக் கதைகள்,’ ‘நாட்டுப்புறக் கதைகள்’…பி.என்.அப்புசாமி எழுதிய ‘விஞ்ஞானக் கதைகள்,’ பாலூர் கண்ணப்ப முதலியார் எழுதிய ‘சிறுகதைக் களஞ்சியம்’ முதலியவற்றை டாக்டர் அ. சிதம்பரநாதன் இங்கே குறிப்பிடுகிறார்.
பிறமொழிச் சிறுகதைகளை மொழிபெயர்ப்பதில் வல்லவர்களாக – புதுமைப்பித்தன், கு.ப.ரா., ஆர்.வீழிநாதன், சேனாதிபதி, டி.என்.குமாரசாமி, ஏ.கே.ஜெயராமன் முதலியோரைக் குறிப்பிடுகிறார். 1946இல் எஸ்.குருசாமி ‘இந்தியச் சிறுகதைகள்’ என்ற தலைப்பில் பல்வேறு இந்திய மொழிகளில் எழுதப்பட்ட சிறுகதைகளை மொழிபெயர்த்ததைச் சிறப்பாக நினைவுகூர்கிறார்.
இலங்கை எழுத்தாளர்களில் அரியரத்தினம், வைத்திலிங்கம், சம்பந்தம், இலங்கையர்கோன் ஆகியவர்களைப் பொதுவாகப் பாராட்டுகிறார்.
சிறுவர்க்கான கதைகள் எழுதுவதில் வல்லவர்களாக – அழ.வள்ளியப்பா, அம்புலிமாமா, தமிழ்வாணன், கண்ணன் ஆகியோரைக் குறிப்பிடுகிறார்.
சிறுகதை போன்ற உரைநடைச் சித்திரங்களால் வாசகர்கள் மனங்களில் இடம் பிடித்தவர்களாக – எஸ்.வி.வி., தூரன், சுகி, நாடோடி ஆகியோரைக் குறிப்பிடுகிறார்.
இதழ்களில் வந்த சிறந்த சிறுகதைகளாக டாக்டர் அ.சிதம்பரநாதன் தேர்பவை:-
- கணையாழி எழுதிய ‘நொண்டிக்குருவி’
- ஜெகசிற்பியன் எழுதிய ‘ஜலசமாதி’
- சோமு எழுதிய ‘கடலும் கரையும்’
- ஞானாம்பாள் எழுதிய ‘தம்பியும் தமையனும்’
- கே.ஆர்.கோபாலன் எழுதிய ‘அன்னபூரணி’
- சோமாஸ் எழுதிய ‘அவன் ஆண்மகன்’
- கெளசிகன் எழுதிய ‘அடுத்த வீடு’
- எஸ்.டி.சீனிவாசன் எழுதிய ‘கனிவு’
பிற மொழிகளில் மொழிபெயர்த்தேயாக வேண்டிய சிறுகதைகளாக டாக்டர் அ.சிதம்பரநாதன் தேர்பவை:-
- கு.ப.ராஜகோபாலனின் ‘காணாமலே காதல்’
- புதுமைப்பித்தனின் ‘வழி ‘
- கல்கியின் ‘விஷ மந்திரம்’
- சுத்தானந்த பாரதியாரின் ‘கடிகாரச் சங்கிலி ‘
- அகிலனின் ‘இதயச் சிறையில்’
- விந்தனின் ‘முல்லைக்கொடியாள்’
- லட்சுமியின் ‘வில் வண்டி’
- ஜீவாவின் ‘வேதாந்த கேசரி’
- டி.கே.சீனிவாசனின் ‘துன்பக் கதை’
- புஷ்பத்துறை சுப்பிரமணியத்தின் ‘ஜீவ சிலை’
- கணையாழியின் ‘நொண்டிக் குருவி’
தன் காலத்தில் இதழ்களில் அடிக்கடி சிறுகதை எழுதுவோராக டாக்டர் அ.சிதம்பரநாதன் குறிப்பிடும் பிறர்:-
- கே.என்.சுப்பிரமணியன்
- ஜி.கெளசல்யா,
- இராதாமணாளன்
- தில்லை வில்லாளன்
- புஷ்பா மகாதேவன்
- வேங்கடலட்சுமி
- புரசு பாலகிருஷ்ணன்
- ஜி.எஸ்.பாலகிருஷ்ணன்
‘தமிழில் சிறுகதைகள்’ என்ற இந்தக் கட்டுரை, டாக்டர் அ.சிதம்பரநாதன் மறைந்து பத்தாண்டுகள் கழித்து 1977 ஏப்ரல் பதிப்பில் வெளியானபோதும், எழுதப்பட்டு வாசிக்கப்பட்ட காலம் – மூன்றாவது அகில இந்திய எழுத்தாளர் மாநாடு நிகழ்ந்த காலம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அதனால்தான் த.ஜெயகாந்தன் குறித்த குறிப்பு ஏதும் இக்கட்டுரையில் இல்லை. முடிவுரையில், “சிறுகதை இலக்கியம் எனப்படுவது தமிழில் அண்மையான காலத்தில்தான் எழுந்தது” என்று டாக்டர் அ.சிதம்பரநாதன் குறிப்பிட்டிருப்பதும் இதற்கு மற்றுமோர் ஆதாரம்.
***
1967 ஜூலையில், ‘தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்ற இதே தலைப்பிலானதும் – இதற்கு முற்றிலும் மாறானதோர் உணர்வெழுச்சி ஊட்டியதும் – – யாழ்ப்பாணப் பல்கலைக் கழக இணைத்தமிழ்ப் பேராசிரியராக அப்பொழுது பணியாற்றிய டாக்டர் கார்த்திகேசு சிவத்தம்பி எழுதியதுமான கட்டுரைத் தொகுதியைத் தமிழ்ப் புத்தகாலயம் திரு கண.முத்தையா அவர்கள் பதிப்பித்தார். இலங்கை ‘தினகரன்’ வாரப்பதிப்புக்கு எழுதப்பட்ட கட்டுரைகள் அவை. தினகரன் ஆசிரியர் திரு இ.சிவகுருநாதன், திரு செ.கணேசலிங்கன், திருமதி ரூபவதி ஆகிய மூவரால்தான் இந்நூல் வெளிவந்தது என்று கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள், வல்வெட்டித்துறை நடராஜ கோட்டத்திலிலிருந்து 22-7-1967 அன்று எழுதிய முன்னுரையில் குறிப்பிடுகிறார். கலாநிதி க.கைலாசபதி அவர்கள் பிரதிவாசித்துதவிய பாங்கையும் குறிப்பிடுகிறார். 1980இல் வெளியான என் ‘புல்வெளி’ என்ற கவிதைத் தொகுதியை வாசித்துக் கலாநிதி க.கைலாசபதி எழுதிய விளக்கமான கடிதத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். தஞ்சையில் ஒருமுறை பிரகாஷ் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்குக்குப்பின்(அப்பொழுது சிவத்தம்பி அவர்களுக்கு ஐம்பது வயதுதானிருக்கும் என்று நினைவு) ‘தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்ற கா.சிவத்தம்பியின் கட்டுரைத் தொகுப்பு, சிதம்பரநாதனின் புத்தகத்தை மட்டுமே அறிந்திருந்த ஆய்வு மாணவர்களுக்கும் தமிழ் முதுகலை மாணவர்களுக்கும் புத்துணர்ச்சியையும் எழுச்சியையும் ஊட்டியது என்று குறிப்பிட்டேன். சிரித்துக் கொண்டார். சிவத்தம்பியின் புத்தகத்தின் சிறப்புக்கு அதன் 160 பக்கங்களிலிருந்து ஒரு மிகச் சிறிய பகுதியை மட்டும் இங்கே முன்வைக்கிறேன்:
“ஜெயகாந்தனது இலக்கிய எதிர்காலம் எப்படியிருப்பினும், அவர் சாதித்தவை அவருக்குச் சிறுகதை வரலாற்றில் முக்கிய இடம் அளிக்கின்றன.
இலக்கியத் தரமான சிறுகதைகள், சனரஞ்சகமாக அமையமாட்டா என்ற கருத்துத் தவறானது என்பதனைச் சாதனையால் நிறுவியவர் ஜெயகாந்தன்.
சிறுகதையின் உருவ அமைதியில் ஜெயகாந்தன் கதைகள் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. பொருளமைதியில் முக்கியமான ஒரு மாற்றத்தினை ஏற்படுத்தின. அதுவே அவர் வெற்றிக்குக் காரணமாகவும் அமைந்தது.
கற்பித மனோரம்மிய இலக்கிய நோக்கு ஆட்சி புரிந்தவிடங்களில் யதார்த்த இலக்கிய நோக்கினைப் புகுத்தி அந்நோக்கின் சிறப்பை நன்கு உணர்த்தியமையே அப்பண்பாகும்.”(6)
**
தமிழ்ச் சிறுகதை முன்னோடிகளைக் குறித்து டாக்டர் இரா.தண்டாயுதம் எழுதிய புத்தகம் இவ்வரிசையில் குறிப்பிடத்தக்கது.
தமிழ்ச் சிறுகதை வரலாறு குறித்துச் சிந்தித்தும் ஆராய்ந்தும் எழுதியவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் க.நா.சு., தொ.மு.சி.ரகுநாதன், சிட்டி சிவபாதசுந்தரம் டொமினிக் ஜீவா,டாக்டர்கள் மா.இராமலிங்கம், இரா.மோகன், எம்.வேதசகாய குமார் முதலியவர்கள் ஆவர்.
அடிக்குறிப்புகள்
* ஜீவா என்று டாக்டர் அ. சிதம்பரநாதன் கட்டுரையில் குறிப்பிடப்படுபவர் ‘உயிரோவியம்’ என்ற நாவலால் புகழ் பெற்ற நாரண துரைக்கண்ணன் ஆவார்.
(1) டாக்டர் மா.இராசமாணிக்கனார், இருபதாம் நூற்றாண்டில் தமிழ் உரைநடை வளர்ச்சி, பக்.243-244.
(2) மேலது, ப.252.
(3) கா.திரவியம், தேசியம் வளர்த்த தமிழ், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை,1974, பக்.200-201.
(4) மேலது, ப.203.
(5) டாக்டர் அ. சிதம்பரநாதன் செட்டியார், தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். பதிப்பாசிரியர்: பேராசிரியர் பிளோரம்மாள், ம.செ.இரபிசிங். பிலோமினா பதிப்பகம், 5/25, புதுத்தெரு, சென்னை-600004. 1977. ப.v. இந்தப் புத்தகத்தின் கருத்துகளே தொடர்ந்து வருவதால் அடிக்குறிப்புகளிடவில்லை. மொத்தப் பக்கங்களே 22தான்.
(6)டாக்டர் கார்த்திகேசு சிவத்தம்பி, தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும், தமிழ்ப் புத்தகாலயம், 58, டி.பி.கோயில் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-600005. மூன்றாம் பதிப்பு அக்டோபர், 1980. ப.139
சிறுகதை இலக்கணம்
வாழ்க்கையின் ஒரு சின்னஞ்சிறு காட்சியோ, மின்னல் போன்ற நிகழ்ச்சியோ, மெல்லிய அசைவோ, சூறாவளியின் சுழற்சியோ, நீர்க்குமிழியின் வட்டமோ, ஏதாவது ஒரு அணுவின் சலனமோ சிறுகதையாக இடமுண்டு.
சிறுகதைக்கு இலக்கணமோ, வரைமுறையோ, பண்போ கிடையாது என்று கூறுவோரும் உண்டு. ஆனால் சிறுகதைக்கு, பண்போ தனி இலக்கணமோ இல்லை என்று கூறிவிட முடியாது என்போரும் உண்டு. சிறுகதைக்கென இரண்டு நூற்றாண்டு காலப் புதிய மரபு தோன்றிவிட்டது. 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சிறுகதையின் பொதுவான தன்மைகள் குறித்து ஆய்வுக் கருத்துகள் வெளிவந்துள்ளன. இதன் அடிப்படையில் ஆய்வாளர்கள் சிறுகதைக்கெனச் சில வரைமுறைகளைச் சுட்டிக் காண்பித்துள்ளனர்.
இலக்கணம்
1) சிறுகதை என்றால் அளவில் சிறியதாய் இருக்க வேண்டும்.
2) தனிமனித அல்லது சமுதாய வாழ்க்கையைச் சுவையோடு பிரதிபலிக்க வேண்டும்.
3) சிறுகதையில் ஒரு மனிதர் அல்லது ஓர் உணர்வு, ஒரு நிகழ்ச்சி அல்லது ஒரு சிக்கல் தான் தலைதூக்கியிருக்க வேண்டும்.
4) அளவுக்கு அதிகமான கதைமாந்தர்களுக்கு அங்கு இடமில்லை.
5) விரிவான வருணனைக்கும், சூழ்நிலைக்கும் சிறுகதை இடம்தரல் கூடாது.
6) குறைவான, ஏற்ற சொற்களால் இவை சுட்டிக்காட்டப்பட வேண்டும்.
7) பாத்திரங்களின் உரையாடல்களில் சொற்செட்டு அவசியம்.
8) சிறுகதை அளவிற் சிறியதாய், முழுமை பெற்று இருக்க வேண்டும்.
9) சிறுகதை நம்பக் கூடிய உண்மைத் தன்மையினைக் கொண்டு விளங்குதல் வேண்டும்.
10) நல்ல சிறுகதை ஆல விதையைப் போல் விரிவாகக் கூடிய கதைக்கருவைக் கொண்டிருத்தல் வேண்டும்.
ஒரு நல்ல சிறுகதை என்பது ஒரு சுவைமிக்க மாம்பழத்தை இறுதிவரை விரும்பிச் சுவைப்பது போன்றதாகும். அவ்வாறு இன்றி, மாம்பழத்தை முதல் கடியிலேயே வீசியெறிந்து விட வேண்டும் என்ற எண்ணத்தை ஒரு சிறுகதை ஏற்படுத்தினால், அச்சிறுகதையினால் பயன் ஒன்றும் இல்லை என்பது தெரியவருகிறது.
ஒரு சிறுகதைக்குப் பின்னே உள்ள படைப்பாளரின் கலை ஆற்றல், கற்பனைத் திறன், சொல்லாட்சி, அவர் மறைமுகமாகக் கூறும் செய்தி – இவையனைத்தும் இலக்கண வரம்புகளை விட முக்கியமானவை.
குறிஞ்சிக் கலியில் (51) கபிலர் பாடிய கள்வன் மகன் என்ற செய்யுள் கருத்தை இங்கு எடுத்துக் கொள்வோம். தாகத்திற்கு நீர் பருக வரும் வழிப்போக்கன் போல, தலைவன், தலைவி வீட்டிற்கு வருகிறான். தாகத்தைத் தணிக்க, நீர் ஊற்றும்போது தலைவன் அவள் கையைப் பற்றுகிறான். தலைவி கூச்சலிடுகின்றாள். இதைக் கேட்ட தாய் பதறி ஓடிவருவதைக் கண்டு, தலைவனைக் காட்டிக் கொடுக்காமல் ‘அவனுக்கு விக்கிக் கொண்டு விட்டது’ என்று தலைவி ஒரு பொய்யைக் கூறுகிறாள். கள்வன் மகன் என்று அவனை அன்பு பொங்க ஏசுகிறாள்.
இவ்வளவும் ஒரே நொடிப் பொழுதில் நிகழ்ந்து விடுகிறது. குறிப்பிட்ட ஒரே இடம். மூன்றே பாத்திரங்கள். ஒரே உணர்ச்சி. சின்னஞ் சிறு நிகழ்வுகள் மூலம் விரியும் கதை. எவ்வளவு சொற்செட்டு!, எவ்வளவு உயிராற்றல்! அந்தச் செய்யுள் எந்த நீதியையும் புகட்டவில்லை. ஆனால் இயற்கையான உணர்ச்சிக்கும், பெண்மையின் பண்புக்கும் இடையேயான போராட்டத்தைச் சித்திரித்து வெற்றி கண்டுள்ளது. படைப்பாளரின் இத்திறன் இலக்கணத்தை விட முக்கியமானதாகவே கருத இடமளிக்கிறது.
1.2.1 சிறுகதையின் தொடக்கம்
சிறுகதையின் தொடக்கம் குதிரைப் பந்தயம் போன்று விறுவிறுப்பாய் அமைதல் வேண்டும். சிறந்த சிறுகதைக்குச் சிறப்பான தொடக்கம் இன்றியமையாததாகிறது. அப்பொழுது தான் அதன் தொடர்ச்சி நெகிழ்ச்சியின்றி அமையும். படிப்போரின் கவனத்தை ஒருமுகப்படுத்தவும் உதவும். சிறுகதையின் தொடக்கம் வாசகர்களை ஈர்த்து, படிக்கத் தூண்டுவதாய் இருத்தல் வேண்டும். சிறுகதையில் ஒவ்வொரு வரியும் முக்கியம். அதில் அநாவசியத்திற்கு இடமில்லை என்பதிலிருந்து தொடக்கம் சிறப்பாக அமைய வேண்டியதன் அவசியத்தை உணரலாம்.
சிறுகதையைத் தொடங்கி எழுதுவது என்பது யானை உருவத்தைச் செதுக்குவதற்கு ஒப்பாகும். தேக்கு மரத்துண்டில் யானையைச் செதுக்க விரும்புகின்றவன், முதலில் யானையின் உருவத்தை மனத்தில் பதித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒவ்வொரு செதுக்கலையும் யானையின் உருவத்தை நோக்கிச் செலுத்த வேண்டும். அவ்வாறு இன்றி, சிலையைச் செதுக்குபவன் நடுவில் ஒரு குதிரையை மனத்தில் நினைத்தான் என்றால் சிலையானது யானையின் முகமும், குதிரையின் உடலுமாய் மாறி அமைந்துவிடவும் கூடும். அதாவது யாதிரை அல்லது குனை ஆக உருவாகிவிடக் கூடும். இவ்வளவிலே சிறுகதையின் தொடக்கமும் சிறப்பாக அமையப்பெறவில்லை, எனில் அதன் தொடர்நிகழ்வுகளை ஒருமுகப்படுத்தல் என்பதும் இயலாமல் போய்விடும்.
மேற்கண்ட அளவில் சிறுகதைத் தொடக்கத்தின் முக்கியத்துவம் அறியப்படுகிறது.
1.2.2 சிறுகதையின் முடிவு
சிறுகதையின் தொடக்கத்தைப் போன்றே முடிவும் முக்கியத்துவம் பெறல் வேண்டும். சிறுகதையின் முடிவு இறுதிவரை படிப்போரின் கவனத்தைக் கவரக் கூடியதாய் இருக்க வேண்டும். சிறுகதையில் முடிவு கூறப்படவில்லை எனில் அது மனத்தில் நிலைத்து நிற்காது. கதையின் முடிவு உரைக்கப்படல் அல்லது சிந்திக்கச் செய்தல் ஆகியவற்றின் மூலமே படைப்பாளரின் ஆற்றல் உணரப்படும். ஆகவே சிறந்த சிறுகதைக்குச் சிறப்பான முடிவு அவசியம் என்பது உணரப்படுகிறது.
சிறுகதையின் முடிவு நன்மையானதாகவும் அன்றித் தீமையானதாகவும் அமையலாம். சில வேளைகளில் கதையின் முடிவு முரண்பாடானதாகவும் அமைவது உண்டு. முரண்பாடான முடிவுகள் படிப்பவர்களைச் சிந்திக்க வைப்பதும் உண்டு. சிறந்த முடிவினைக் கொண்ட சிறுகதையே மனத்தில் நிலைக்கும். சிறுகதையின் சிறந்த முடிவு சமூகப்பயன் விளைவிக்கக் கூடியது. சிலவேளைகளில் சிறுகதைகளின் முடிவுகள் தலைப்புகளாய் அமைந்த நிலையில் அவை சிறப்புப் பெறுவதும் உண்டு. இத்தகைய சிறுகதைகளைப் படிக்கத் தொடங்கிய உடனேயே அந்தக் கதையின் போக்கையும், அதன் முடிவையும் அறிந்து கொள்ள இயலும்.
முடிவுகளைத் தலைப்புகளாகக் கொண்ட சிறுகதைகள் சிலவற்றின் பெயர்களை இங்குக் காணலாம். நா.பார்த்தசாரதியின் ஊமைப் பேச்சு, ஜெயகாந்தனின் வேலை கொடுத்தவன், புதுமைப்பித்தனின் திண்ணைப் பேர்வழி, சோமுவின் மங்களம் போன்ற கதைகளை இதற்கு உதாரணங்களாகக் கூறலாம்.
1.2.3 சிறுகதையின் உச்சநிலை
உச்சநிலை என்பது, வாசகர்கள் எதிர்பாராத வகையில் அல்லது உணர்ச்சிக் கொந்தளிப்பின் உச்சியில் கதையை முடித்தலாகும். சிறுகதைகளில் உச்சநிலைக்கு இடமில்லை எனில் அது சாதாரணக் கதையாகவே கருத இடமளிக்கும். படைப்பிலக்கிய நிலைக்குத் தகுதியுடையதாகாது. உச்சநிலையே படைப்பாளரின் தனித்தன்மையை வெளிப்படுத்துவதாயுள்ளது. படைப்பாளரின் மறைமுகக் கருத்துகள் சில வேளைகளில் உச்ச நிலைக்கு இடமளிப்பதும் உண்டு.
சிறுகதைகள், படிப்பவரிடத்தே அடுத்தடுத்து என்ன நிகழுமோ என்ற எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி, அதன்பின் உச்சநிலைக்கு உரியதாகிப் பயன் விளைவிக்கவேண்டும். உச்சநிலையை எதிர்பார்த்துப் படிக்குமளவில்தான் சிறுகதை அமைப்புத் தொய்வின்றி அமையும். சிறுகதையின் உச்சநிலை முடிவினையும், பயனையும் வழங்க வல்லதாய் அமைகிறது. கதை நிகழ்ச்சி, கதைமாந்தர் மூலமாகவே உச்சநிலை உயிர் பெறுகிறது. படைப்பாளர் உச்சநிலையினை அமைத்துக் கொடுப்பதன் மூலமே சிறுகதையின் வெற்றிக்கு வழிவகுக்க முடியும்.
கல்கி அவர்களின் கேதாரியின் தாயார் சிறுகதையில் உச்சநிலை சிறப்பிடம் பெறுகிறது. இச்சிறுகதையின் கதைத்தலைவன், கணவனை இழந்த பெண்களுக்கு மொட்டையடித்து முக்காடு இடும் பிராமணச் சமூக வழக்கத்தை முற்றிலும் வெறுப்பவனாக, அதை மாற்ற முயல்பவனாகக் காட்டப்படுகிறான். மேலும் அவன் அம்மாவுக்கு நேர்ந்த அந்நிலையை எண்ணி எண்ணி வருந்தி உயிரை விடுபவனாகவும் காட்டப்படுகிறான். கதை முழுவதிலும் இத்தகைய அவனது மனநிலையையே விவரிக்கும் படைப்பாளர், அவன் இறந்த பிறகு அவன் மனைவிக்கும் அதே நிலை ஏற்படுவதை உச்சக்கட்டமாக அமைத்து மனத்தில் பாதிப்பினை ஏற்படுத்தி விடுகிறார்.
1.2.4 சிறுகதையின் அமைப்பு
சிறுகதை விறுவிறுப்பாய்த் தொடங்கி, அதன் தொடர்ச்சியில் நெகிழ்ச்சி இல்லாமல் இயங்கி, உச்சநிலைக்குச் சென்று முடிவுவரை படிப்பவரின் கவனத்தை ஒருமுகப்படுத்த வேண்டும். படிப்பவர்களைச் சோர்வடையச் செய்யக் கூடாது. கதை உணர்ச்சியோட்டம் உடையதாய் அமைதல் வேண்டும். கதையமைப்பானது சங்கிலித்தொடர் போன்று கதைமாந்தர்களிடையே பின்னிப் பிணைந்து காணப்பட வேண்டும். கதையின் கருப்பொருள் எளிமையானதாய் இருக்க வேண்டும்.
சிறுகதை மக்களுக்கு நம்பிக்கையூட்டுவதாய் அமைதல் வேண்டும். சமுதாயத் தேவையை நிறைவு செய்யும் பாங்கிலும் அமைதல் வேண்டும். நல்ல சிறுகதைக்கு, தொடக்கமும், முடிவும் இன்றியமையாதவையாகின்றன. சிறுகதையைப் படிக்கும் போது அடுத்து என்ன நிகழும் என்ற உணர்ச்சியும், எதிர்பார்ப்பும் ஏற்படுத்தும் வண்ணம் கதையமைப்பு இருத்தல் வேண்டும். படைப்பாளன் கதையில் இன்ன உணர்ச்சிதான் இடம்பெறவேண்டும் என்பதை முதலில் முடிவு செய்து கொள்ள வேண்டும்.
உணர்ச்சிகள்
1) காதல்
2) வீரம்
3) சோகம்
4) நகை
5) வியப்பு
6) வெறுப்பு
7) அச்சம்
8) சாந்தம்
9) கருணை
இந்த ஒன்பது வகையான உணர்ச்சிகளுள் ஒன்றோ, பலவோ கலந்து சிறுகதைகளை உருவாக்க வேண்டும். சிறந்த சிறுகதைகள் படைப்பாளரின் மொழி, நடை, கற்பனை, வருணனை ஆகியவற்றைக் கொண்டு அமையும்.
சிறுகதைகள் அரை மணியிலிருந்து இரண்டு மணி நேரத்திற்குள் படித்து முடிக்கக் கூடியதாயிருக்க வேண்டும். சிறுகதையின் நீளம் என்பது வரையறுக்கப்படாத ஒன்று. ஒரு பக்கத்தில் முடிந்த சிறுகதைகளும் உண்டு. அறுபது பக்கம் வரை வளர்ந்த சிறுகதைகளும் உண்டு. பொதுவாக, கதையின் கருத்துக்குப் பொருந்துகின்ற நீளம்தான் உண்மையான நீளம். இதைப் படைப்பாளர்தான் தீர்மானிக்க வேண்டும். சிறுகதைகள் எளிய நடையமைப்பில் அமைதல் வேண்டும்.
க. நா. சுப்ரமண்யம்
சிறுகதை என்றால் என்ன?
உருவத்தால் சிறியதாக இருக்கவேண்டும் என்றும், கதையாக இருக்கவேண்டும் என்றும் சட்டென்று பதில் கூறிவிடலாம். ஓரளவு திருப்தி தருகிற பதில் மாதிரித்தான் இருக்கிறது. ஆனால் யோசித்துப் பார்க்கும்போது தோன்றுகிறது – உருவத்தில் சிறியது என்றால் எவ்வளவு சிறியது என்றும், கதை என்றால் என்ன என்றும் கேள்விகள் தோன்றுகின்றன.
இரண்டாவது கேள்விக்குப் பதில் முதலில் சொல்லிப் பார்க்கலாம். அத்தைப் பாட்டி கதையிலிருந்து, கம்பராமாயணத்தின் கருப்பொருள் வரையில், ஏசாப்புக் கதைகளிலிருந்து மஹாபாரதத்து குருக்ஷேத்திரம் வரையில், எல்லாமே கதையை ஆதாரமாகக் கொண்டவைதான்.
நாவல், நாடகம் என்கிற இலக்கியத் துறைக்கும் ஆதாரமான விஷயம் கதைகள்தான்.
சிறுகதைக்கு ஆதாரமான கதை என்ன? எப்படியிருக்க வேண்டும்?
ஓ. ஹென்றியின் கதைகளிலே பல சம்பவங்கள் அடுக்கடுக்காக வந்து கடைசியில் ஒரு திருப்பம் திரும்பி ஒடித்து வக்கிரமாக நிற்கும். மோபஸான் கதைகளிலே அடுக்கடுக்காகப் பல விஷயங்கள் சொல்லப்பட்டு, ஒரு சம்பவத்தைச் செயற்கை முத்தைப்போல உருட்டித் திரட்டித் தரும். சம்பவங்களை நம்புகிற இந்த இரண்டு கதைகளுக்கும் அப்பாற்பட்டதாக செகாவின் சிறுகதைகள் நுண்ணிய விவரங்கள் ஒன்றன் மேல் ஒன்றாக வந்து விழ, முடிவுறாத கோர்வையாக, நடக்காத ஒரு காரியமாக நின்றுவிடும். முடிவுறாத கோர்வையும், நடக்காத காரியமும், செயல்படாத செய்கையும் சிறுகதைதான்; சம்பவக் கோவையும் திருப்பமும் சிறுகதைதான்; உருட்டித் திரட்டி வைத்த மெருகேற்றிய அந்த முத்து உருவமும் சிறுகதைதான்.
மூன்றும் சிறுகதைதான் என்று சொல்கிறபோது, மூன்று சிறுகதைப் பாணிக்கும் பொதுவான ஒரு அம்சம் தெரிகிறது. அதுதான் மூன்று பேருடைய கதைகளிலும் ஓடுகிற ஒற்றைச்சரடு. அது ஒரு பாவமோ, ஒரு கோபமோ, ஒரு ஆத்திரமோ, ஒரு செயலோ, ஒரு குணாதிசயமோ ஒன்றாகப் பரவி ஓடிக் கடைசிவரை நீடித்திருக்கிறது சிறுகதையிலே என்று சொல்லலாம். அந்த ஒரு சரடுதான் மையக் கரு சிறுகதைக்கு.
அப்படியானால் மையக் கருத்து, சரடு ஒன்று காவியத்துக்குக் கிடையாதா, நாடகத்துக்குக் கிடையாதா, நாவலுக்குக் கிடையாதா என்று கேட்கலாம். உண்டு. ஆனால் நாவலாசிரியனும், காவியாசிரியனும் அந்தச் சரடைவிட்டு வெகு தூரம் நகர்ந்து உல்லாஸமாகப் போய்த் திரிந்து வரலாம். சிறுகதாசிரியன் அப்படிச் செய்யமுடியாது. பாவ ஒருமைப்பாடும், ஆழமும் போய்விடும் அந்த மையக் கருத்தைவிட்டு அவன் நகர்ந்துவிட்டால்.
கதையில் ஒன்று – ஒரே ஒன்று – ஒரு கருத்து, ஒரு பாவம் அல்லது ஒரு குணசித்திரம்தான் – மையக்கருத்தாக இருக்கவேண்டும். அதைவிட்டுச் சிறுகதாசிரியன் அதிகம் விலகக்கூடாது என்று சொன்னேன். அத்தோடு சேர்த்துக்கொள்ளவேண்டியது இதையும் – கதை என்பது ஒரு சம்பவமாக இருக்கலாம். ஒரு மனோபாவமாக இருக்கலாம். ஒரு உள்ளப்போராட்டமாக இருக்கலாம். அது ஏதாவது ஒன்றாக இருக்கும் வரையில், சிறுகதை பிறக்கும். இரண்டாகவோ அதிகமாகவோ இருந்தால் சிறுகதை பிறக்காது – வேறு என்ன பிறந்தாலும்.
இலக்கியத்தில் எந்தத் துறையிலானாலும் சரி, ஒரு உருவம் ஒரு குறிப்பிட்ட முடிவை நோக்கி நகருகிறது என்பது வெளிப்படை. அந்த முடிவு சாதாரணமாக நாவலில், காவியத்தில், நாடகத்தில் முதலில் வெளியாகாமல் இருக்கலாம். ஆனால் சிறுகதையில் முதல் வாக்கியத்திலேயே, சில சமயம் முதல் வார்த்தையிலேயே வெளியாகிவிடும். பின்னர் வருகிற ஒவ்வொரு வாக்கியமும் வார்த்தையும் இந்த முடிவு நோக்கி நகரும் காரியத்தைத் தெள்ளத் தெளியச் செய்யவேண்டும். அப்போதுதான் நல்ல சிறுகதை தோன்றுகிறது.
ஆரம்பம், நடுவு, முடிவு முதலியனவும், இடைப்பாகங்களும் சரியாகப் பொருந்தியுள்ள சிறுகதைகளை நல்ல உருவம் பெற்றவையாக நாம் போற்றுகிறோம். ஆனால் சில ஆசிரியர்களின் சிறுகதைகளிலே, முக்கியமாக செகாவ், ஸரோயன் போன்றவர்களின் கதைகளிலே – ஆரம்பம், நடு, முடிவு தெரியாதபடி செய்திருக்கிறார்கள். எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ போகிறவர்கள் மாதிரிச் செய்து சட்டென்று முடித்துவிடுவார்கள்.
செகாவின் கதைகள் முடிந்துவிட்ட பிறகும்கூட முடிவு கண்டுவிட்ட மாதிரித் தோன்றாதபடி, தொடர்ந்து நடக்கிற மாதிரிச் செய்யப்பட்டிருக்கின்றன.
இந்த ஒரு விஷயத்திலேனும் ரவீந்திரநாத் தாகுர் இந்தியச் சிறுகதைக்கு ஒரு இந்திய உருவம் தந்திருக்கிறார் என்று சொல்லவேண்டும். ஆதிமத்யாந்தரகிதமான சர்வேசுவரனை நினைவூட்டும் – அற்புதமாக நினைவூட்டும் பல சிறுகதைகளைத் தாகுர் எழுதியிருக்கிறார்.
இந்த ஆரம்ப – நடு – முடிவற்ற தன்மை ஏதோ அநாயாசமாகப் பிரக்ஞையில்லாமல் வந்துவிடுகிற விஷயம் அல்ல. செகாவிலும் சரி, தாகுரிலும் சரி – கலையை மறைக்கும் அந்தக் கலை எளிமையுடன், முழுப் பிரக்ஞையுடன் வருவதுதான்.
மனிதனுடைய நடத்தையும் லக்ஷியமும் ஏணியின் கால்கள்போல என்றும் ஒன்று சேராத இரட்டைக் காலில்தான் நடக்கிறது என்பதை அறிவுறுத்துகிற புதுமைப்பித்தனின் ‘சாப விமோசனம்’ தமிழுக்குத் தனியாக வந்து வாய்த்த ஒரு சிறுகதை உருவம். ராமனானால் என்ன? அகல்யையானால் என்ன? இருவரும் மனிதர்கள்தானே! இதே அளவில் ‘அன்றிரவு’ம் சிறப்பாக வெற்றி கண்ட கதை புதுமைப்பித்தன் இலக்கியத்திலே. ஆனால் அது பழசை ஒட்டி எழுந்தது. ‘சாப விமோசனம்’ புதுமையை ஒட்டி எழுந்தது.
உருவம் என்று காணமுடியாத உருவத்தை மெளனி, தமிழ்ச் சிறுகதையில் சிறப்பாகவே செய்திருக்கிறார். ந. பிச்சமூர்த்தி அவர்களும், லேசாகப் பல விஷயங்களைச் சொல்லி, முன்னரே நிர்ணயிக்கப்பட்ட ஒரு தீர்மானத்தை எட்டி விந்தை புரிபவர். மற்றப்படி கு. ப. ராஜகோபாலன், சிதம்பர சுப்பிரமணியன் முதலியவர்கள் சாதாரணமாகத் தெரிந்துகொள்ளக்கூடிய உருவங்களையே கையாண்டவர்கள். சி. சு. செல்லப்பா கதைக்கு உருவத்தைவிடச் சூழ்நிலையே முக்கியமென்று எண்ணுவது அவர் சிறுகதைகளிலிருந்து தெரியும்.
சிறுகதையில் மற்றொரு அம்சமான நீளம் என்பதும் உருவத்தில் ஒரு பகுதியாகவே, இவ்வளவுக்கும் பிறகு, தோன்றிவிடும். எடுத்துக்கொண்ட ஒருமையைக் கலைக்காமல், எவ்வளவு தூரம் ஓடிக் கதை தானாக நிற்கிறதோ அதுவே அதன் நீளம். ஒரு பக்கத்திலிருந்து இருநூறு பக்கங்கள் வரையிலும் சிறுகதைகள் இருக்கலாம்; மேலும் இருக்கலாம்தான். ஆழ்ந்து ஒருமைப்பட்ட சூழ்நிலையும் விவரணங்களும், பகைப்புலமும் சிலவிதக் கதைகளுக்குத் தேவைப்படுகின்றன. ஹெமிங்வே பல சம்பவங்களைச் சொல்லி ஒரு நிகழ்ச்சியில், கதையின் ஒருமைப்பாடு கெடாமல் முடிப்பார். இதெல்லாம் ஆசிரியருடைய சாமர்த்தியத்தைப் பொறுத்தது என்று சொல்லவேண்டுமே ஒழிய தனியாகச் சொல்லித் தெரியாது.
எல்லா இலக்கியத் துறைகளுக்கும் போலவே, சிறுகதைக்கும் தனி இலக்கணம் சொல்ல முடியாது. எந்த இலக்கிய சிருஷ்டியுமே இலக்கணத்தை மீறிய ஒரு செய்கை.
ஒவ்வொரு சிறுகதையும் ஒரு தனி உலகம் – அது ஒரு தனி கலை உலகம். அதிலே சாதிகள் என்றோ, கட்டுப்பாடு என்றோ ஒன்றும் கிடையாது. ஒன்று. ஒன்று ஒன்றுதான் முக்கியம் என்று செய்யப்படுவதுதான் சிறுகதை.
(சிறு குறிப்புகள் என்ற கட்டுரையிலிருந்து ஒரு பகுதி.)
காஷ்யபன்
வசன நடையில் உள்ள மிகச் சிறிய கற்பனை “பொறி”தான் சிறுகதை.அது எவ்வளவு சிறியதாக இருக்கலாம்? பத்தாயிரம் வார்த்தைகளுக்கு மிகாமல்,அரைமணி நேரத்தில் படித்து முடிக்கக் கூடியதாக இருக்கலாம் என்கிறார் ஏச்.ஜி. வெல்ஸ்.
அதன் உள்ளடக்கம் , கட்டுமானம் பற்றி எதுவும் இல்லை.ஆனால் இன்று அது பல்வேறு வடிவங்களில், பல்வேறு உள்ளடக்கத்தோடு நமக்குக் கிடைகிறது.ஆங்கில சிறு கதைகளின் தந்தை என்று போற்றப்படும் எட்கர் ஆலன் போ இது பற்றி அதிகம் கூறியிருக்கிறார்.அவரது கருத்தை ஒட்டி சாமர் செட் மாம் கூறும்போது” ஒரு குறிப்பிட்ட ஒரே சம்பவத்தைச்சோல்லும் கற்பனை” என்கிறார்.” அது துடிப்போடு, மின்னலைப் போல மனதோடு இணைய வேண்டும் “என்கிறார். “ஆரம்பத்திலிருந்து முடிவுவரை சீராக கோடுபோட்டது போல் செல்லவேண்டும்” என்றும் குறிபிடுகிறார்.
சிறுகதை பாத்திரத்தைச்சுற்றி வராது.மாறாக கதையின் நோக்கத்தைச்சுற்றிவரும்.இது கவிதையைப் போன்று உணர்ச்சிகரமானதாக இருக்க வேண்டும்.மனதை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும்.. உபதேசம் செய்யக்கூடாது.
இலக்கியப் பண்டிதர்கள் சிறுகதையை இலக்கியத்தின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கத் தயங்கவே செய்கிறார்கள்.நூற்றுக்கணக்கான உலக மொழிகளில் ஆயிரக்கணக்கான எழுத்தாளர்கள்,நல்லதும் பொல்லாததுமாக லட்சக்கணக்கில் எழுதித் தள்ளியுள்ளார்கள். இவற்றை பார்த்து ஆரய்ந்து சொல்லமுடியாத சிரமமும் இதில் அடங்கியுள்ளது.ஆக்ஸ்வர்டு ஆங்கில வரலாற்று நூல் இது பற்றி, இந்த வடிவம் பற்றி குறிப்பிடவே இல்லை.மற்ற மொழிகளிலும் இது தான் நிலை..
மனிதம் பற்றி ஆழமான சித்தரிப்பு இருந்தால் மட்டுமேஅங்கீகாரம் கிடைக்கும் என்று விமரிசகர்கள் கருதுகிறார்கள்.எழுத்தாளன் தன்னைச்சுற்றி என்ன நடக்கிறது என்பதை உணர்ந்து புரிந்து கொண்டால் தான் இத்தகைய ஆக்கபூர்வமான,வாழ்க்கைக்கு நெருக்கமான படைப்புகளை உருவாக்க முடியும உணர்வுகளை துல்லியமாக,சரியாக,.மெச்சத்தகுந்தவகையில்வெளிபடுத்தும் திறமை கொண்டவனே ஆக்கபூர்வமான எழுத்தாளன்.சிதறிய கண்ணாடித்துண்டுகளில் தெரியும் பிம்பங்களாக அவை இருக்கக் கூடாது.
சிறுகதை எழுத்தாளர்கள் பல தரப்பட்டவர்கள். அவர்கள் இலக்கியம் படித்தவர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.அவர்கள் எழுதுகிறார்கள். மனதில் உள்ளதைக் கொட்டித் தீர்க்க எழுது கிறார்கள்.உணர்வுகளின்அழுத்தத்திலிருந்துவிடுபடஎழுதுகிறார்கள்.தேசீயம்,சீர்திருத்தம்,கலாசாரம்,பண்பாடு,தத்துவம்,உளவியல்,நவீனத்துவம்,பின்நவீனத்துவம் என்று அவர்களுக்குத் தெரிந்ததை தெளிவாகவு ம், தெளிவின்றியும் எழுதுகிறார்கள். இவர்களுக்கு போதமூட்டி கற்று கொடுப்பது சிரமமான காரியமல்ல.
மேலை நாட்டு இலக்கியங்களை, குறிப்பாக,பிரஞ்சு,ரஷ்ய, ஆங்கில இலக்கியங்களை முன் மாதிரியாகக் கொண்டு இந்திய மொழிகளில் நவீன சிறுகதைவடிவம் உருவாயிற்று.
- 1854 ம் ஆண்டு மராத்திய மொழியில் தான் முதன் முதலாக நவீன சிறுகதை வெளிவந்ததாக இலக்கிய வரலாற்றாளர்கள் கருதுகிறார்கள்.விஷ்ணு கண் ஸ்யாம் என்ற பெயர் கொண்ட எழுத்தாளர் எழுதிய இந்தஸ் சிறுகதையின் தலைப்பு தெரியவில்லை.
- 1872ம் ஆண்டு வங்க மொழியில் பூர்ண சந்திர சட்டர்ஜி என்பவர் “மதுமதி” என்கிற சிறுகதையை எழுதியுள்ளார்.
- 1891ம் ஆண்டு குஞ்ஞு ராமன் நாயனார் என்ற மலையாள எழுத்தாளர் “பழக்க தோஷங்கள்” என்ற சிறுகதையை எழுதியுள்ளார்.
- 1900ம் ஆண்டு “என் அத்தை” என்ற சிறுகதையை பன்சே மங்கேஷ்ராவ் என்பவர் கன்னட மொழியில் எழுதியுள்ளார்.
(ஆதாரம்: Compaaritive Indian Literature vol 111, Kerala Sahithya Academy)
1854ம் ஆண்டுக்கு முன் நம் நாட்டில் சிறுகதைகள் என்ற வடிவம் இருந்த்ததில்லயா?
இருந்தது என்பதுதான் உண்மை.கதை சொல்வது என்பது மிகவும் பழமையான கலையாகும்.உலகத்திலேயே மிக அதிகமான கதைகளை கைவசம் இந்தியாதான் வைத்திருக்கிறது. பாரதி,தாகூர் போன்றவர்கள் அவற்றை நவீனப்படுத்த முயற்சித்தார்கள்..
எழுதியவர்: காஷ்யபன்
Served as a Sub-Editor with ‘Theekkathir’ a leading Tamil Daily, and also a monthly called ‘Semmalar’ for over thirty five years. Published three short story collections in Tamil, one in Hindi and English each, and a novel and a Drama in Tamil. Spend most of the time reading writing and chatting with like minded friends.
மற்றவர்கள்
Harry Potter and the Sathuragiri Sithargal at Sanjeevi Malai by Dr. CS Murugesan
“சதுரகிரி சித்தர்கள்’ நூலில் டாக்டர் சி.எஸ்.முருகேசன்
சஞ்சீவி மலையைத் தூக்கிக்கொண்டு அனுமன் பறந்து சென்றபோது சதுரகிரி சித்தர்கள் பிரார்த்தனைப்படி ஒரு துண்டு உடைந்து சதுரகிரி அருகே விழுந்தது. அதுவே சஞ்சீவிகிரி என்பது. இந்த சஞ்சீவி மலையில் இருக்கும் அதிசய மூலிகைகள் பற்றி கேட்க கேட்க ஆச்சரியமாக இருக்கும்.
“எமனை வென்றான்’ என்றொரு மூலிகை. அகால மரணமடைந்தவர்கள் நாசியில் இதைக் காட்டினால் உடனே உயிர் பெற்று எழுந்துவிடுவார்களாம்! அதுமட்டுமல்ல. துண்டு துண்டாய் வெட்டுண்டு இறந்தபோது உடல் துண்டுகளை ஒன்று சேர்த்து தசையாட்டி மூலிகைச் சாற்றினை அந்த ஒவ்வொரு துண்டங்களிலும் பிழிய அத்துண்டங்கள் எல்லாம் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளுமாம்! இறந்தவர்கள் உறங்கி எழுந்தவர் போல் எழுந்திருப்பார்களாம்!
கருடக்கொடி என்றொரு மூலிகை. இதனை முறைப்படி பக்குவப்படுத்தி ஒருவர் உட்கொண்டால் அவரது உடல் இரும்பு போல் உறுதியாக மாறுமாம்! அவரை அரிவாளால் வெட்டினால் வெட்டின அரிவாளே இரண்டாக உடையுமே தவிர அவர் உடலில் எந்தக் காயமும் ஏற்படாதாம்!
இவை தவிர சதுரகிரியிலும் சில அபூர்வ மூலிகைகள் இருப்பதாய் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பலுணி என்றொரு மரம். இம்மரத்தைக் குடைந்து அதனுள் பாதரசத்தைச் செலுத்தி குறிப்பிட்ட மாதங்கள் கழித்து அதனை எடுத்துப் பக்குவப்படுத்தி வாயில் அடக்கிக்கொண்டால் ஆகாய மார்க்கமாக நினைத்த இடத்திற்குச் செல்லலாமாம்!
ஓரழிஞ்சி மரம், தேவதாரு மரம் ஆகியவற்றின் பூவை முறைப்படி பக்குவப்படுத்தி திலகமாக இட்டுக்கொண்டால் யார் கண்ணுக்கும் புலப்படாமல் மறைந்து விடலாமாம்!
“கனையெருமை விருட்சம்’ என்ற மரத்தினடியில் யாராவது ஆட்கள் போய் நின்றால் அம்மரம் எருமை கத்துவது போல் கத்துமாம்!
“சுணங்க விருட்சம்’ என்றொரு மூலிகை காலாங்கி நாதர் குகைக்குச் சமீபமாக இருக்கிறதாம். இதன் வேர் கருப்பாகவும், கனி நாய்க்குட்டி போலும் இருக்குமாம்! அந்தக் கனி பழுத்துக் கீழே விழும்போது நாய்க்குட்டி குரைப்பது போல குரைத்துக்கொண்டே கீழே விழுமாம். கீழே விழுந்த கனி பத்தே வினாடிகளில் மறுபடியும் அந்த மரத்திலேயே போய் ஒட்டிக்கொள்ளுமாம்!
இவையெல்லாம் சித்தர்கள் காலத்தில் இருந்தவை. இப்போது பயன்பாட்டில் இருக்கிறதா என்று நமக்குத் தெரியாது!
Urban Legends on Mahatma Gandhi & Aruna Asaf Ali for Thamizhachi Thangapandiyan by Anita Ku Krishnamurthy
‘தேசியக் கொடியின் தந்தை திருப்பூர் குமரன்’ நூலில் அனிதா கு.கிருஷ்ணமூர்த்தி
காந்திக்கு இந்தியாவின் மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தின் மீது ஈடுபாடு இருந்தது. ஏனென்றால் சுமார் இருபது ஆண்டுகாலம் ஆப்பிரிக்காவில் வக்கீல் தொழில் பார்த்த காந்திக்கு குமாஸ்தா வேலை பார்த்தவர் ஒரு தமிழர்.
காந்திக்கு உண்மையான சுதந்திர வளர்ச்சியை உள்ளத்துக்குள் விதையாய் நட்டவர், ஆப்பிரிக்காவில் வாழ்ந்த தமிழச்சி தில்லையாடி வள்ளியம்மை.
காந்தியின் விடுதலை வேட்கையைத் தூண்டி அடிமைத்தளையை உடைத்தெறிய விழுதாய் நின்றவர் டர்பன் நகரத்து ஏழைத் தமிழன் பாலசுந்தரம்.
காந்தியை உலகுக்கு அடையாளம் காட்டியது குஜராத்திய உடை அல்ல. தமிழ்நாட்டின் ஏழைக் கதராடைதான் காந்தியை உலகுக்கு அடையாளம் காட்டியது.
தென் ஆப்பிரிக்காவில் 1100 ஏக்கர் நிலப்பரப்பில் டால்ஸ்டாய் பண்ணை என்ற ஒன்றை காந்தி ஏற்படுத்தியிருந்தார். தானும் தமிழ் கற்று, குழந்தைகளுக்கும் தமிழ் கற்றுத் தருவதை காந்தி கடமையாகக் கொண்டார்.
அவற்றையெல்லாம் விட பிறந்தபோது ராம்சந்த் என்ற குஜராத்தி அவர். ஆனால் தமது 50-ம் வயதில் பாரதியார் என்ற தமிழ்க் கவிஞனால் மகாத்மா என்று மறுபெயர் சூட்டப்பட்ட தமிழர் அவர். இப்படிப்பட்ட காந்தியைத்தான், அவர் வயதில் பாதி கூட இல்லாத குமரன் தமக்கு தாதியாய் ஏற்றுக்கொண்டார். குமரனைவிட காந்தி 35 வயது மூத்தவர்.
காங்கிரஸ் சோசலிஸ்ட்டுகள், தொழிற்சங்க வரலாறு என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்த போது பேச்சு அருணா ஆசப் அலி வரலாற்றில் திரும்பியது.
ஒருமுறை சுதந்திர போராட்ட வீரர்கள் போலீஸ் தடியடியால் கீழே விழுந்து கதறுகின்றனர். ஒருவர் தண்ணீர்…தண்ணீர்… என்று அலறுகிறார். தண்ணீர் கொடுக்க யாரும் முன்வரவில்லை. இதுகண்டு பொறுத்துக்கொள்ள முடியாத அருணா ஆசப் அலி, திடீரென்று அந்தத் தொண்டரின் அருகில் படுத்துக்கொண்டு தன் மேலாடையை அகற்றித் தன் மார்புகளை அந்தத் தொண்டரின் வாய்க்குள் திணித்து…ஒரு தாயைப் போல அத்தொண்டரை குழந்தையாய் பாவித்து சுவைக்கக் கொடுத்திருக்கிறார். தொண்டரின் வறண்ட நாவில் மார்புகள் பட்டதும் கண்களில் வழிகிறது கண்ணீர்.
அப்படிப்பட்ட மகத்தான தியாகியான அருணா ஆசப் அலி திருப்பூர் வந்திருந்தபோது அப்போது அங்கு முகாமிட்டிருந்த ஒரு சர்க்கஸ் கம்பெனியின் யானைகள் அனைத்தும் தம் துதிக்கையால் மாலைகளைத் தூக்கி அவர் கழுத்தில் போட்டன.
Paithiyakkaaran on S Ramakrishnan Short Story collection: Tamil Fiction Reviews
Jeyamohan
http://www.jeyamohan.in/?p=6321
ஒரு வாசகன் இலக்கியப்படைப்பில் தான் வாசித்தவற்றைப் பற்றிச் சொல்ல வந்தாலே கேட்கப்படும் மூன்று கேள்விகள் உண்டு .
1. இதையெல்லாம் அந்த எழுத்தாளன் உத்தேசித்திருப்பானா?
2. இதுக்கெல்லாம் அந்த எழுத்திலே இடமிருக்கா
3. இது எனக்கு ஏன் தோணல்லை?
மூன்றுமே இலக்கியத்தை சரிவர உள்வாங்கத் தடையாகும் வினாக்கள்.
மதியம் திங்கள், ஜனவரி 11, 2010
எஸ்.ராமகிருஷ்ணன்: விருட்ச(ங்களின்)த்தின் விதை(கள்)
வாழ்க்கையின் போக்கில் எந்தவொரு சுழலை எதிர்கொள்ள நேர்ந்தாலும் அதிலிருந்து மீள்வதற்கு கலையின் துணையை நாடுவது மனிதர்களின் இயல்பு. அது நெருங்கிய மனிதர்களின் இறப்பாக இருக்கலாம், பிரிவாக இருக்கலாம், அல்லது காதலை கண்டடைந்த சந்தோஷமாக இருக்கலாம். எப்படியாக இருந்தாலும் அறியப்பட்ட உணர்ச்சியிலிருந்து வெளியேற கலை என்னும் வடிவமே பலவகைகளில் துணையாக இருக்கிறது. இதுகுறித்து பிரியத்துக்குரிய எஸ்.ராமகிருஷ்ணன் என்னிடமும், நண்பர் சுரேஷ் கண்ணனிடமும் புத்தகக் கண்காட்சியில் நீண்ட நேரம் உரையாடினார். இந்த சந்திப்பு குறித்த இடுகையை நண்பர் சுரேஷ் கண்ணன் விரிவாக எழுதுவார் என்பதால் இங்கு அதை தவிர்க்கிறேன். ஆனால், முதல் வாக்கியத்திலிருந்துதான் இந்த இடுகை கிளை பரப்பி விரிகிறது என்பதை குறிப்பிட்டு சொல்ல வேண்டியது கடமை.
‘கலை’ என்ற சொல்லுக்கு பின்னால் கவிதை, சிறுகதைகள், புதினங்கள், ஓவியம், இசை, நாடகம்… என பல்வேறு சொற்கள் அடங்கியிருக்கின்றன. இவையெல்லாமே உடலியல் சார்ந்த கலைச் செயற்பாடுகள். நிலையான புள்ளியில் நின்று சாத்தியப்படுவன அல்ல. பல்வேறு திசைகளில், குறிகளற்று பயணிப்பவை. இந்த புரிதலில் இருந்து எஸ்ராவின் சிறுகதைகளை பார்க்கலாம் என்று தோன்றுகிறது.
காரணம், தமிழ்ச் சிறுகதை உலகு என்னும் பெருங்கடலில் கலந்த – கலக்கும் – மிகப் பெரிய ஆறு, எஸ்ரா. ஜீவநதிகளை போல், வற்றாமல் சிறுகதைகளை தொடர்ந்து எழுதி வருபவர். இவரளவுக்கு தொடர்ச்சியாக சிறுகதைகளை எழுதி வருபவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். யதார்த்த – அ யதார்த்த – மாந்த்ரீக – வட்டச்சூழல் – என அனைத்து வடிவங்களிலும் புனைவு உலகை பரிசோதனை செய்திருக்கிறார். தொடர்ந்த பங்களிப்பின் வழியே எல்லாவிதமான மன அழுத்த; மனப் போக்கு கொண்டவர்களுக்கும் தன் பிரதிகளின் வழியே அளவில் சிறியதான சாவியை எடுத்து தருகிறார். அந்தச் சாவியைக் கொண்டு கதவை திறக்க வேண்டியது மட்டுமே வாசகனின்/வாசகியின் வேலை. அப்படி அவன்/ள் திறக்கும்பட்சத்தில் விரிவது 7 கடல்கள், 7 மலைகள் தாண்டி மறைந்திருக்கும் வாழ்க்கையின் ரகசியம். இன்னொரு விதமாகவும் இதையே சொல்லலாம். எஸ்ராவின் சிறுகதைகளுக்குள் எழுதப்படாத நாவல்கள் மறைந்திருக்கின்றன.
எஸ்ராவின் இரண்டு சிறுகதைகளை உதாரணத்துக்கு எடுத்துக் கொள்வோம். ‘உறவும் பிரிவும் இன்றி’, ‘தெரிந்தவர்கள்’. இந்த இரு சிறுகதைகளும் 80களில் எழுதப்பட்டவை. சென்னை புக்ஸ் சார்பாக வெளியான ‘வெளியில் ஒருவன்’ தொகுப்பில் இடம் பெற்றவை. இதுதான் எஸ்ராவின் முதல் தொகுப்பு. இன்றைய தேதி வரை நூற்றுக்கும் அதிகமான சிறுகதைகளை எஸ்ரா எழுதியிருக்க, ஆரம்பக்கால இந்த இரு புனைவுகளை மட்டுமே இந்த இடுகை ஏன் கணக்கில் எடுக்க வேண்டும்?
தனிப்பட்ட காரணங்கள் எதுவுமில்லை. எழுத ஆரம்பித்த காலத்தில் பிரசவமான படைப்பு எப்படி இன்றும் உயிர்த்துடிப்புடன் இருக்கிறது என்பதை பார்க்கவும், சின்ன ஊற்று எப்படி வற்றாத ஆறாக விரிந்தது என்பதை ஆராயவும்.
இது வாசகனின் பார்வையில் எழுதப்பட்ட இடுகை. விமர்சனம் அல்லது திறனாய்வு என்னும் வார்த்தைகளுக்குள் அடங்காது.
இந்த இரு புனைவுகளுமே ‘பணம்’ அல்லது ‘கடன்’ என்னும் மூன்றெழுத்து தரும் உணர்ச்சியை அடிநாதமாக கொண்டவை.
‘உறவும் பிரிவும் இன்றி’ சிறுகதையில் தயாளன் – கதிரேசன் என இருவர் வருகிறார்கள். இருவரும் உறவுக்காரர்கள். தயாளனின் தங்கச்சியை கதிரேசனின் தம்பிக்கு திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்கள்.
தயாளனின் ஊரில் காலியாக ஒரு கடை இருக்கிறது. அதன் உரிமையாளர் மார்டின். தயாளனும் மார்ட்டினும் ஒரே இடத்தில் வேலைப் பார்ப்பவர்கள். எனவே மார்ட்டினிடம் பேசி அந்தக் கடையை தனக்கு எடுத்து தரும்படி தயாளனிடம் வேண்டுகோள் வைக்கிறார் கதிரேசன். அதற்காக முன் பணமாக ரூபாய் ஆயிரத்தை தயாளனிடம் தரவும் செய்கிறார்.
ஆனால், கடையை இன்னொருவரிடம் தர மார்ட்டினுக்கு விருப்பமில்லை. தானே நடத்தப் போவதாக சொல்கிறான். எனவே கதிரேசனிடம் பணம் தருவதற்காக தயாளன் காத்திருக்கிறான். ஆனால், நடுவில் சில எதிர்பாராத தருணங்களால் அந்தப் பணம் செலவாகிவிடுகிறது. கதிரேசன் வந்து கேட்கும்போது தயாளனிடம் பணமில்லை. பிறகு தருவதாக சொல்கிறான். ஆனால், ஒவ்வொரு முறை கதிரேசன் பணம் கேட்கும்போதும் இதே நிலையே தொடர்கிறது. தயாளனிடம் பணம் இல்லாத நேரமாக கதிரேசன் வருகிறார். ஒரு கட்டத்தில், நடுத்தெருவில் இருவருக்கும் கை கலப்பு ஏற்படுகிறது.
கதை என்று பார்த்தால் இவ்வளவுதான். ஆனால், அதை பிரம்மாண்டமான உணர்வாக மாற்றிவிடுகிறார் எஸ்ரா.
சிறுகதையின் ஆரம்பம், கிழிந்த சட்டையுடன் தயாளன் சைக்கிளை தள்ளிக் கொண்டு போவதிலிருந்து ஆரம்பிக்கிறது. நாலாவது பத்தி, இப்படி வருகிறது:
”கதிரேசன் மச்சானை அடித்திருக்கக் கூடாது என்றுதான் தோன்றியது. அவர்தான் முதலில் அடித்தார். என்றாலும், அவன் அடித்தது போல் அவர் அடிக்கவில்லை. அப்போது அவனுக்கு ஏக கோபமாயிருந்தது. அவர் சட்டையைப் பிடித்து இழுத்ததும் பின்வாங்கத்தான் செய்தான். அவர்தான் கன்னத்தில் அறைந்தார்.”
7வது பத்தியின் ஆரம்பம் இது: ”கதிரேச மச்சான்தான் எவ்வளவு நல்லவர் என்று தோணியதும் மனதுக்குள் ஏதோ செய்தது.”
தயாளன் – கதிரேசன் ஆகிய இருவர் மீதும் தவறோ குற்றமோ இல்லை. சந்தர்ப்பங்கள் அப்படி அமைந்துவிட்டன என்பதை கதைச்சொல்லி முதலிலேயே தெளிவாக உணர்த்தி விடுகிறார்.
கடை வேண்டும் என முன்பணமாக ரூபாய் ஆயிரத்தை கதிரேசன் தரும் இடம் நுட்பமானது. ”மஞ்சள் பைக்கட்டில் இருந்து ரூபாயை எடுத்தார். பாதிக்கு மேல் பழைய தாள்கள். அஞ்சும் பத்துமாக எண்ணி நூல் போட்டுக் கட்டியிருந்தார்…”
தயாளனின் பார்வையில் செல்லும் இந்தக் கதையில் கதிரேசன் ஏற்படுத்தும் தாக்கத்தை விட, அவரது மனைவியும் குழந்தைகளும் தரும் பாதிப்பு அதிகம். இத்தனைக்கும் அவர்கள் புனைவில் அதிகம் வருவதில்லை. சொல்லிக் கொள்ளும்படியான உரையாடல்களும் அவர்களுக்குள் இல்லை. ஆனால், வாசகனா(கியா)ல் அதை எப்படி வேண்டுமானாலும் நிரப்பிக் கொள்ள முடியும்.
கிழிந்த ரூபாய் நோட்டுகள் என்றால் குடும்பம் வறுமை. கதிரேசனின் மனைவி நூல் கட்டி மோதிரத்தை அணிந்திருக்கிறாள். ஏழைகள். பணம் அவசியம். அது கிடைக்காதபோது கதிரேசன் தன் குடும்பத்தை எப்படி எதிர் கொண்டிருப்பார்? அவர் மனைவி வார்த்தைகளால் அவரை எப்படி துளைத்திருப்பாள்? குழந்தைகளின் பசியை எப்படி அவள் போக்கியிருப்பாள்? உறவினரிடம் தன் கணவன் பணம் கொடுத்து ஏமாந்துவிட்டான் என்பதை எப்படி எதிர்கொண்டிருப்பாள்?
தயாளனின் மனைவியும் கதையில் அதிகம் வரவில்லை. ஆனால், அவளது மருத்துவத்துக்காகத்தான் தயாளன் அந்தப் பணத்தையே செலவு செய்திருந்தான். எனில், தயாளனின் மனைவிக்கு இந்த விஷயம் தெரியுமா? கதிரேசனுக்கு பணத்தை திருப்பித் தந்துவிடுங்கள் என ஒருமுறைக் கூட அவள் சொன்னதில்லையா? குடும்பச் செலவை குறைத்து பணத்தை சேமித்து கதிரேசனுக்கு திருப்பித் தர ஏன் முயற்சி செய்யவில்லை?
இப்படி தொடரும் கேள்விகளுக்கு வாசகன் விடை தேடிக் கொண்டே செல்லும்போது எழுதப்படாத ஒரு நாவலை தன்னையும் அறியாமல் எழுத ஆரம்பிக்கிறான். தன் பிரதிகளின் வழியே அளவில் சிறியதான சாவியை எடுத்து எஸ்ரா தருகிறார் என்று குறிப்பிடுவது இதனால்தான். சிறுகதைகளுக்குள் நாவலை மறைத்து வைத்திருக்கும் ரகசியம்.
‘தெரிந்தவர்கள்’ சிறுகதை நண்பர்களுக்கு இடையிலானது.
வெளிநாட்டில் வேலைப் பார்ப்பவன் மணி. சம்பாதிக்கும் பணத்தை கதிருக்கு அனுப்புவான். கதிர் அதை மணியின் வீட்டில் தருவான். கடைசியாக மணி அனுப்பிய ரூபாய் பத்தாயிரத்தை கதிர் அவன் வீட்டில் தரவில்லை. தன் தங்கையின் திருமண செலவுக்கு அதை பயன்படுத்திக் கொண்டான். இப்படி செலவு செய்துவிட்டேன் என்பதையும் மணியிடம் கதிர் சொல்லவில்லை.
இச்சிறுகதை வெளிநாட்டிலிருந்து திரும்பி வரும் மணியின் பார்வையில் விரிகிறது. பிரதி முழுக்க அவன், அவன் என்றே வரும். இறுதியில்தான் மணி என்னும் பெயருடன் அவன் இருப்பான். அதேபோல் வெளிநாடு என எங்கும் குறிப்பிடப்பட்டிருக்காது. முதல் பத்தி, இப்படி ஆரம்பிக்கிறது:
”காலையில்தான் வந்திருந்தான். ஸ்டேஷனை விட்டு வெளியே வரும்போது குளிர் அதிகமாக இருந்தது காலையில். இந்தக் குளிர்க் காற்று கூட இங்கே அதன் இயல்பில் இருப்பதாகப்பட்டது. அவன் இருந்த இடத்தில் கடுங்குளிர், கடுமையான வெப்பம்.”
இறுதியில் இப்படி வருகிறது.
”நான் அனுப்பின ரூவா என்னாச்சு?”
பதில் சொல்லவில்லை.
”வரலையா?”
”வந்துச்சு.”
”என்ன செஞ்சே?”
”திடீர்னு கல்யாணம் பண்ண வேண்டியிருந்ததால செலவு ஆகிப் போச்சு. அப்பாவுக்கு வர வேண்டிய இடத்தில பணம் வரலே…”
”அதை எனக்கு எழுதியிருக்கலாம்ல. இல்ல வீட்ல பணத்தைக் கொடுத்திட்டு கேட்டு வாங்கி இருக்கலாம்ல…”
இப்படியே தொடரும் உரையாடல், இறுதியில் சண்டையில் முடிகிறது.
”உன் பிச்சைக்காசு ஒண்ணும் வேணா. நான் வரேன்” அவன் இறங்கிக் கீழே போனான். புழுதி கலைந்து பறந்தது. மணி எழுந்து நின்று பார்த்தான். கதிர் வேகமாகப் போய்க் கொண்டிருந்தான்.
நுணுக்கமான விஷயங்கள் இந்தக் கதை நெடுக உண்டு. மணியின் மனைவிக்கும், அம்மாவுக்குமான பிரச்னை. வெளிநாட்டிலிருந்து வந்திருக்கும் தம்பியிடம் தனியாக தன் வீட்டுக்கு வரும்படி அக்கா அழைப்பது, ”தனியா உங்கக்கா என்ன பேசினாங்க?” என மனைவி கேட்பது, ”நீங்க ஊர்ல இல்லாதப்ப உங்கக்கா இங்க எட்டிக் கூட பார்த்ததில்ல. உங்கம்மாவும் அவங்க வீட்லயேதான் இருந்தாங்க…”
கதிர் வீட்டு விவரணைகள் அபாரமானவை. மாடியில் தூங்கிக் கொண்டிருந்த கதிர், மணி வந்து எழுப்பியதும் மலங்க மலங்க விழிப்பது, மணி பணம் குறித்து கேட்பதற்குள், ”உனக்கு பிடிச்ச மீன் வாங்கிட்டு வரேன்” என சட்டென கீழே இறங்கிச் செல்வது, சாப்பிட்டு முடித்ததும் திருமணமான தங்கசியுடன் வருவதாக சொல்லி மணியை நாசுக்காக அவன் வீட்டுக்கு அனுப்புவது…
எந்த இடத்திலுமே இந்தக் கதையில் ப்ளாஷ்பேக் உத்தி செயல்படவில்லை. மணி – கதிர் நட்பு எப்போது ஆரம்பித்தது, எப்படி மலர்ந்தது என்பதெல்லாம் பிரதி சொல்லவேயில்லை. ஆனால், வாசிப்பவர்கள் அந்த இடத்தை நிரப்பிக் கொள்ளலாம்.
கதிரின் தங்கைக்கு மணியும் அண்ணன்தான். சந்தோஷமாக அப்படித்தான் அழைக்கிறாள். மணியின் வீட்டில் பணப் பிரச்னையில்லை. கதிரின் வீட்டில் தேவை அப்படி செய்ய வைத்தது. சொல்லிவிட்டு பணத்தை எடுத்திருக்கலாமே என்பது மணியின் வாதம். எடுத்தாலும் நீ தவறாக நினைக்கமாட்டாய் என்று நினைத்தேன் என்பது கதிரின் தரப்பு.
சரி, கதிர் கேட்டிருந்தால் மணி என்ன செய்திருப்பான்? மணி மறுத்திருந்தால் கதிர் என்ன செய்திருப்பான்?
இப்படியாக விரித்துக் கொண்டே செல்லலாம்.
இன்னொரு மாதிரியாக வாசிப்போம். ‘தெரிந்தவர்கள்’ சிறுகதையில் மணியும், கதிரும் உறவினர்களாக இருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும்? ‘உறவும் பிரிவும் இன்றி’ தயாளனும், கதிரேசனும் நண்பர்களாக இருந்திருந்தால் செலவான ஆயிரம் ரூபாய் குறித்த விவரணை எப்படி சென்றிருக்கும்? ‘தெரிந்தவர்கள்’ பிரதியில் ஏன் ப்ளாஷ்பேக் இல்லை? ‘உறவும் பிரிவும் இன்றி’யில் ஏன் ப்ளாஷ் பேக் இருக்கிறது?
இந்த சிறு சிறுகதைகளிலும் ஆண்களே முக்கிய பாத்திரங்களாக இருக்கிறார்கள். இதுவே பெண் பாத்திரங்களாக இருந்தால், இந்தச் சூழலை எப்படி எதிர்கொண்டிருப்பார்கள்? வெளிநாட்டில் வேலைப் பார்க்கும் பெண், தன் சிநேகிதிக்கு பணம் அனுப்பி வீட்டில் தரச் சொல்வதைவிட, தானே வீட்டுக்கு பணம் அனுப்பிவிடுவாள் என எளிமையாக இந்தக் கற்பனையை குறுக்கிவிடாமல் இருக்கும் பிரதிக்குள் ஊடுரிவிப் பார்த்தால் எப்படி இருக்கும்?
இப்படி யோசிக்க யோசிக்க விதை, விருட்சமாக வளர்ந்துக் கொண்டே செல்வதை காணலாம்.
அதனாலேயே எஸ்ராவின் சிறுகதைகள் அல்லது புனைவுகள், அனைத்து முனைகளிலும் திறந்த தன்மையுடையதாக இருக்கிறது என்று சொல்லத் தோன்றுகிறது. ஒவ்வொரு வாசிப்பின் நிகழ்வும் மற்றொரு வாசிப்புக்கான முன்னுரையாக அமைகிறது. இப்படி இவரது ஒவ்வொரு சிறுகதையை குறித்தும் சொல்லிக் கொண்டே போகலாம். அல்லது நாவலாக வாசித்துக் கொண்டே போகலாம்.
நன்றி: ‘எஸ். ராமகிருஷ்ணன் கதைகள்’ – உயிர்மை வெளியீடு.
Tamil Author S Ramakrishnan on why we write Essays in Magazines and Fiction Novels?
எழுதுவது ஏன்
நாள் : 10/16/2004 1:06:51 PM,
இத்தாலிய யூத எழுத்தாளரான பிரைமோ லெவி (primo levi) நாஜிகளின் சித்ரவதைக்கு உள்ளான எழுத்தாளர். ஆஸ்விட்ஸ் முகாமில் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்ட அவர் தனது வேதியல் அறிவின் காரணமாக நாஜிமுகாமில் சாவிலிருந்து தப்பினார். வேதியல் பேராசிரியரான அவர் குறிப்பிடத்தக்க நாவல்களையும் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். அவரது கட்டுரைகளில் மிகவும் பிரசித்திபெற்றது எழுதுவது ஏன் என்ற கேள்விக்கு லெவி தந்த பதில்.
எழுதுவதற்கு ஒன்பது காரணங்கள் இருக்ககூடும் என்று வரையறுக்கும் பிரைமோ லெவி அதைப்பற்றி விரிவாக விளக்குகிறார்
1) எழுதுவதற்கான அவசியத்தையும் உந்துதலையும் உணர்வதால்.
தனக்குள்ளிருந்து தன்னை யாரோ எழுதும்படியாக வற்புறுத்துவது போல ஒருவன் அடையும் நிலையில் தான் இந்த வகை எழுத்து உருவாகிறது. மிதமிஞ்சிய வேதனையை. தனிமையை பகிர்ந்து கொள்வதற்கு யாருமற்ற நிலையில் கதையோ, கவிதையோ எழுதுவது உருவாகிறது. பெரும்பான்மையான எழுத்தாளர்கள் இந்த வகையில் தான் துவங்குகிறார்கள்.
2) தன்னையும் மற்றவர்களையும் மகிழ்விக்க.
மிகச்சிறந்த இலக்கியவாதிகள் இந்த வகையைச் சேர்ந்தவர்களே. அவர்கள் தொழில்முறை எழுத்தாளர்கள் அல்ல. வாழ்வின் ஞானமும், சரளத்தன்மையும், அன்பையும் வெளிப்படுத்தவே அவர்கள் எழுதுகிறார்கள். தங்களது அனுபவங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதற்கு சந்தோஷமாக முன்வருகிறார்கள். வாசிப்பவனும் எழுத்தாளனைப் போலவே அந்த அனுபவத்தை துய்த்து உணருகிறான். உதாரணத்திற்கு லு¡யி கரோல் எழுதிய ஆலிஸின் அற்புத உலகம் அவரை சந்தோஷப்படுத்தியதோடு நு¡ற்றாண்டுகளாக குழந்தைகளை, பெரியவர்களைச் சந்தோஷப்படுத்திவருகிறது. இந்த வகை எழுத்து எதையும் போதிப்பதோ, கட்டாயப்படுத்துவதோ இல்லை.
3) யாருக்காவது எதையாவது கற்றுக் கொடுக்க
விற்பன்னர்களும், அறிஞர்களும் இந்த வகையைச் சேர்ந்தவர்களே. அவர்கள் வாசகனை தங்களை விடவும் அறிவில் குறைந்தவன் என்ற கருத்தில் தான் எழுதுகிறார்கள். அது சமையற்கலையாக இருந்தாலும் அணுவிஞ்ஞானமாக இருந்தாலும் நோக்கம் ஒன்றுதான்.
இந்த வகை எழுத்தில் எழுத்தாளனின் விருப்பம் நிறைவேறுவது அவனது அறிவின் திறன் அளவில் தான் சாத்தியமாகிறது. பலநேரங்களில் அதுவே படிக்கமுடியாமலும் செய்துவிடுகிறது. எளிமையும், ஆழ்ந்த அறிவும், விளக்கி சொல்லும் திறன்மிக்க மொழியும் ஒன்று சேர்ந்து எழுத்து உருவானால் அப்போது வாசகன் கற்றுக்கொள்வதோடு நல்ல கலைப்படைப்பை வாசித்த அனுபவத்தையும் பெறுகிறான்.
4) தன் கருத்துக்களை தெரியப்படுத்த
இந்த வகை எழுத்தாளர்கள் தாங்கள் தனித்துவமானவர்கள், ஞானம்பெற்றவர்கள், அதிக அறிவுதிறன் கொண்டவர்கள் என்று தங்களை நம்பக் கூடியவர்கள். உலகில் தங்களுக்கு மட்டுமே சில அரிய கருத்துகள் மனதில் உதயமாகியுள்ளதாக நம்புகிறவர்கள். தத்துவத்திலும் அரசியலிலும் விருப்பம் கொண்டவர்களே இந்தவகை எழுத்தில் அதிகம். இந்த வகை எழுத்தில் ஒரிஜினாலிடி மிக அரிதாகவேயிருக்கிறது.
5) வேதனையிலிருந்து விடுதலை அடைய
பிரச்சனைகளை நேரிடையாக சந்திக்க முடியாமலும், ஆறுதல் தேடுவதற்கு வழியற்றும், எழுதுவது ஒரு பாவமன்னிப்பு கோருதல் போல என நம்புகிறவர்களே இந்த வகை எழுத்தாளர்கள். ஆனால் எழுத்தாளனின் வேதனைகளை வாசகனின் மீது திணிப்பதும் பலநேரங்களில் தவறானதாகிவிடுகிறது. அது தானும் விடுதலை அடையமுடியாமல் வாசிப்பவனையும் நரகத்தில் தள்ளிவிடும்
6) புகழ்பெற
ஒரு பைத்தியக்காரன் தான் புகழ்பெறுவதற்கென்றே எழுத முயற்சிப்பான். காரணம் எழுதிப் புகழ்பெறுவது எளிதான காரியமில்லை. எல்லா எழுத்தாளர்களுக்கும் மனதில் தனக்குப் பெரிய புகழ் கிடைக்கவேண்டும் என்ற ஆசையிருக்கதான் செய்கிறது . ஆனால் அதற்காக யாராவது எழுதத் துவங்கினால் அந்த எழுத்து நிச்சயமற்ற பலனைத் தான் உருவாக்கும்
7) பணக்காரன் ஆக
சம்பாதிக்க, கடனை அடைக்க, வசதியாக வாழ என பலகாரணங்களுக்காக எழுதுபவர்கள் பலரிருக்கிறார்கள். உபயோகமான எந்த விஷயத்திற்கும் வழங்கபடுவது போல தான் எழுத்திற்கும் சன்மானம் வழங்கப்படுகிறது. ஆனால் பணத்துக்காக மட்டும் எழுதுவது ஆபத்தானது. அது மலிவான பாதைக்கு அழைத்துச் சென்றுவிடும்
8) உலகை செம்மைபடுத்த
இந்தவகை எழுத்தாளர்கள் உலகம் தங்களால் தான் காப்பாற்றப் படப் போகிறது என்று நம்புகிறவர்கள். மேலும் உலகைப் பற்றி தங்களுக்கு முழுமையாகத் தெரியும் என்று நம்புகிறவர்கள்.ஹிட்லர் மெயின்கேம்ப் எழுதியது கூட இந்த வகை ஈடுபாட்டில் உருவானது தான்.
9) பழக்கத்தின் காரணமாக.
இது தன்னைத் தானே காப்பிசெய்து கொள்வது போன்ற எழுத்து ரகம். தன்பெயரைத் தொடர்ந்து அச்சில் பார்ப்பது ஒரு நோக்கமாக இருக்க கூடும். மற்றவகையில் வெறுமனே பழக்கம் காரணமாக மட்டும் ஒருவர் தொடர்ந்து எழுதுவதை விடவும் மெளனமாக எதையும் எழுதாமலிருப்பது அவருக்கும் நல்லது, வாசகர்களுக்கும் நல்லது. .
லெவியை வாசித்த போது தமிழில் இந்த ஒன்பது வகைக்கும் அப்பாலும் நிறைய பிரிவுகள் இருப்பதை உணரமுடிகிறது. எனக்குத் தெரிந்த சில காரணங்கள்
1) அடுத்தவர் எழுதுகிறாரே என்று எழுதுவது.
அநேகமாக எனக்கு தெரிந்த பலரும் சொன்ன முதல்காரணம் இது தான். அதைப் பொறாமை என்று மட்டும் முடிவுசெய்து கொண்டுவிட முடியாது. நு¡ற்றுக்கும் மேற்பட்ட நுட்பமான காரணங்களிருக்கின்றன. சில புத்தகங்களை வாசித்து முடித்தவுடன் எழுதுவது என்றால் இவ்வளவுதானா? இது என்ன மாயவித்தையா என தோன்றுவதும் காரணமாகயிருக்கலாம்
2) பெண்நண்பர்கள் பெறுவதற்கு
இருபது வயதில் அதிகமாக எழுதும் ஆசை வருவதற்கு இதுவே முக்கிய காரணம். ஆனால் இந்த வகை எழுத்தாளர்களை பெண்கள் ஏறிட்டுக் கூடப் பார்ப்பதில்லை என்பது நிதர்சனம்
3)அலுவலக ஊழியர்களிடம் தனித்து காட்ட, பாராட்டு பெற
தனது அலுவலகத்தில் உள்ள மேலதிகரிகள் பாராட்டு பெறுவதற்கும், தான் அறிவுஜீவி என்று தனித்து காட்டுவதற்கும் எழுதும் கூட்டம் நிறைய இருக்கிறது. அவர்கள் யாராவது ஒய்வு பெறும் நாளில் கவிதை எழுதி அதை பரிசாக தந்து அனுப்பிவிடக்கூடியவர்கள்.
4) பதவி உயர்விற்காக எழுதுவது.
பேராசிரியர்கள், ஆய்வுமாணவர்கள் மற்றும் துறைவல்லுனர்கள் தங்களது பதவி உயர்விற்காக எழுதுகிறார்கள். நு¡லகத்தில் பாதி இந்த வகை எழுத்துகள் தான்.கையில் பேனாவும் சிந்தனையுமாக புகைப்படம் எடுத்துக் கொள்வது அவர்களின் தனித்துவம்.
5) சினிமாவிற்குள் நுழைவதற்கு
சினிமாவிற்குள் நுழைவதற்கு விசிட்டிங் கார்டு போல பயன்படுவதற்கு கவிதைத் தொகுப்புகள் வெளியிடுதல் அல்லது சிறுகதைகள் எழுதுதல் அதிகம்.. சென்னையில், கர்சீப் வைத்திருப்பது போல பாக்கெட்டில் கவிதை நோட்டுவைத்திருப்பவர்களை கோடம்பாக்கத்தில் எங்கே வேண்டுமானாலும் பார்க்கலாம்
6) சென்னைக்கு ஒடிவந்தபிறகு வாழ்வதற்கு என்ன செய்ய என்று எழுதுவது.
ஏதோவொரு காரணத்தால் சென்னைக்கு ஒடிவந்த பிறகு பிழைப்பிற்காக பத்திரிக்கைகளிலோ, பதிப்பகங்களுக்கோ எதையாவது எழுதி தருவது. முப்பது நாட்களில் நீச்சல் கற்றுத்தருவது, சைனீஸ் சமையற்கலை, ஆவியுலகம் ஒரு நேரடி அனுபவம் என ஏதாவது ஒரு தலைப்பில் 250 பக்க புத்தகம் எழுதி தருவதற்கு 175 ரூபாய் தருகிறார் தாராளமனதுடைய தமிழ்பதிப்பகத்தார்.
7) ஒய்வு பெற்ற பிறகு ஏதாவது செய்யவேண்டுமென என்று
ஒய்வு பெற்றபிறகு தமிழ் மொழி மீதும், தமிழ் மக்கள் மீதும் அளவுகடந்த ஆர்வம் உருவாகி அவர்களுக்கு சேவை செய்வதற்காக திருக்குறள், சங்கஇலக்கியம் துவங்கி எதையாவது பற்றி எழுதுவது. அதை தானே தனது பேத்தி பேரன் பெயரில் பதிப்பகம் துவங்கி வெளியிட்டு தன்வீட்டிற்கு வரும் உறவினர்களுக்கு தவறாமல் தருவது. சுதந்திர தினத்தன்று காலனியில் சொற்பொழிவு ஆற்றுவது இந்த ரகம்
8) பிரபலமானதை உறுதி செய்து கொள்வதற்கு எழுதுவது
தான் ஏதாவது ஒரு துறையில் பிரபலமாகிவிட்டால் அந்த பிரபலத்தின் காரணமாக மற்றவர்களுக்கு தனது அரிய சிந்தனைகளை, அறிவுதுளிகளை, கற்பனையை பகிர்ந்து கொள்வது. இந்த வியாதி அரசியல்வாதிகளுக்கு அதிகம். அது போலவே பிரபலமான வணிகநிறுவனங்களின் உரிமையாளர்கள் தங்கள் பிரபல்யத்தை புத்தகம் எழுதிதான் வெளிக்காட்டிக் கொள்கிறார்கள். பிரபலமான ஒரு ஸ்வீட் ஸ்டால் உரிமையாளர் எழுதிய திருக்குறள் உரை அங்கு வாங்கும் அல்வா மைசூர்பாகு மிக்சர் எது கால்கிலோ வாங்கினாலும் இலவசமாகத் தரப்படுகிறது. ஆன்மீகத்தில் நீங்கள் பிரபலமாகி விட்டால் புத்தகம் எழுதி அண்ணாநகரில் பிளாட்பிளாட்டாக வாங்கிப் போட்டுவிடலாம் என்று பஞ்சபட்சி ஜோதிடம் சொல்கிறது.
9) வீட்டில் பகலில் சும்மா இருப்பதால்
பெரும்பான்மை குடும்பதலைவிகள் எழுத்தாளராவது இந்த காரணத்தால் தான். கூடை பின்னுவது தோட்டம் போடுவது, அலங்கார பொருட்கள் செய்வது போலவே கவிதை செய்வது கதைகள் செய்வது என்று தங்கள் நேரத்தை பயனுள்ளதாக கழிக்கிறார்கள்.
10) எதற்கு என்றே தெரியாமலிருப்பது
தான் எதற்கு எழுதுகிறோம் என்றே தெரியாமலிருப்பவர்கள் தமிழில் ஏராளம். அது போன்ற ஒரு கேள்விளை சந்திக்கும் போது தான் இப்படியொரு கேள்வி இருப்பதே அவர்களுக்கு தெரியவரும். வாசகர்களை போலவே எழுத்தாளரும் பதிலை தேடிக்கொண்டே தானிருக்கிறார்கள்.
இது போல இன்னமும் பல 100 காரணங்களிருக்க கூடும். விருப்பமிருந்தால் தெரியப்படுத்துங்களேன்.
Kumudham Theeranadhy Interview with Writer Ess Ramakrishnan by Thalavaai Sundharam
வாழ்வது என்பதே ஒரு மாயம் தான்.
சந்திப்பு . தளவாய் சுந்தரம்
தீராநதி பிப்ரவரி 2005 இதழில் எனது நேர்முகம் வெளியாகியிருக்கிறது. அப்பேட்டியின் சில பகுதிகள் அவர்களால் வெளியிடப்படவில்லை. இணைய வாசகர்களுக்காக முழுமையான நேர்முகம் பிரசுரிக்கப்படுகிறது. இலக்கியம் மற்றும் எனது வாழ்க்கை குறிப்புகள் சார்ந்த கேள்விகள் அடங்கிய எனது நேர்முகம் முன்னதாக காலச்சுவடு இதழிலும் ஆறாம் திணை இணைய இதழிலும் குமுதம் இலக்கியமலரிலும் வெளியாகியிருக்கின்றன. ஆகவே அக்கேள்விகள் இந்த சந்திப்பில் இடம் பெறவில்லை.
1) புதுவகை எழுத்துகள் ஒரு போக்காக தமிழில் அறிமுகமான காலகட்டத்தில் அந்த வகை எழுத்துக்களை முன்வைத்தவர்களில் நீங்களும் ஒருவர். அப்போது யதார்த்தவாதம் முடிந்துவிட்டது கதை யம்சம் தேவையில்லை என்பது போன்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டன ஆனால் அப்போதும் புதுமுயற்சிகளை செய்தவர்களில் நீங்கள் மட்டும் கதையம்சம் கொண்ட கதைகளை எழுதி வந்தீர்கள். அது சார்ந்து குறிப்பாக அப்போது நடைபெற்ற விவாதங்களை நீங்கள் எப்படி எதிர்கொண்டீர்கள்.?
யதார்த்தவாதம் என்ற பெயரில் சுயஅனுபவத்தை எழுதுவது மட்டுமே கதை என்று கூக்குரலிட்டுக் கொண்டுஒருசாராரும், மறுபக்கம் லட்சியவாத கோட்பாடுகளுக்கு ஏற்றபடி கதையை தைத்துக் கொடுக்கும் சீர்திருத்த கதாசியர்களுக்கும் இடையில் கதைகள் என்பது ஒரு புனைவு என்று சொன்னவர்களில் நானும் ஒருவன். அது ஒன்றும் எனது கண்டுபிடிப்பல்ல. கதைகள் புனைவு என்பது யாவரும் அறிந்த உண்மை தான். ஆனால் புனைவு என்பதை பொய் என்று புரிந்து வைத்திருப்பதை நான் மறுத்தேன். கற்பனை என்பது உண்மைக்கு எதிரானதல்ல. உண்மையை புரிந்து கொள்வதற்கும் வெளிப்படுத்துவதற்குமான சாத்தியபாடு என்று கூறினேன்.
யதார்த்தம் என்பதும் ஒரு புனைவே. அதை முன் முடிவுசெய்யப்பட்ட புனைவாக சொல்லலாம். கடந்த காலங்களில் யதார்த்தத்தை தட்டையான ஒற்றைப் பரிமாணமுள்ளதாக மட்டுமே புரிந்து கொண்டிருக்கிறார்கள். உண்மையில் யதார்த்தம் பலதளங்களை உடையது. அதீதமும் இயல்பும் ஒன்றாக முயங்கிகிடக்கக் கூடியது. காலத்திற்கு காலம் யதார்த்தத்தை பற்றிய புரிதல் தொடர்ந்து மாறிக் கொண்டேதானிருக்கிறது, யதார்த்தம் என்ற பெயல் நடைபெற்று வந்த சலிப்பூட்டும் ஒற்றைதன்மை கதைமுறைகளை மாற்றியமைக்க வேண்டும் என்று தான் பேசியும் எழுதியும் வந்திருக்கிறேன். நம் கதை மரபு ஒற்றைதன்மை வாய்ந்தது அல்ல. அது பன்முகத்தன்மை வாய்ந்தது,
கர்ப்பிணி ஒருத்தி நடந்துவரும் போது அவள் வயிற்றில் உள்ள குழந்தை தன் இருப்பிடத்தில் இருந்து நகரவேயில்லை ஆனால் குழந்தையும் பலமைல் துôரம் கடந்து தானே செல்கிறது. அது யதார்த்தமா, இல்லையா?
2) புதிய கதை எழுத்து இன்று தேக்கநிலை அடைந்துவிட்டிருக்கிறது. மீண்டும் யதார்த்தவாத கதைகள் வரத்துவங்கியுள்ளதே, அந்த மாற்றத்தை எப்படி பார்க்கிறீர்கள் ?
புதிய கதை எழுத்து என்று எதைச் சொல்கிறீர்கள் என தெயவில்லை. நான் புதிய கதை எழுத்து பாரதி புதுமைபித்தனில் துவங்கி மௌனி, நகுலன், முத்துசாமி, ஜி.நாகராஜன், சம்பத், கோபிகிருஷ்ணன், ஜெயமோகன், கோணங்கி, பிரேம் ரமேஷ், உமா வரதராஜன், முத்துலிங்கம். லட்சுமி மணிவண்ணன், காலபைரவன் என நீண்டு தொடர்ந்து வந்து கொண்டேயிருப்பதாகவே நினைக்கிறேன்.
எது யதார்த்தம் என எதாவது வரையறையிருக்கிறதா என்ன? பயன்பாட்டிற்கு உட்படுகின்றவற்றை மட்டுமே நாம் யதார்த்தமாக ஏற்றுக் கொண்டிருக்கிறோம். நம் புலன்கள் தான் யதார்த்தத்தின் வரையறையாயி”ருந்திருக்கிறது. ஆனால் புலன்கள் முழுமையானவையல்ல. அவை குறைபாடானவை என்பதை ஒவ்வொரு மனிதனும் பல சந்தர்ப்பங்களில் உணர்ந்து தானே இருக்கிறான். நம் கால இடப்பிரக்ஞை கூட புனைவு தானே. அதை நாம் அன்றாடம் புழங்கவில்லையா? புனைவை தான் நமது பெயராக சூடியிருக்கிறோம் .நம் உடல்கள் புனைவால் தானே நிரம்பியிருக்கிறது.
புனைவை புரிந்து கொள்வதற்கும் அதனுôடாக உள்ள புனைவடுக்குகளை கண்டறிவதற்கும், உருவாக்குவதற்குமே புதியகதை எழுத்து முயற்சிக்கிறது. அது தமிழில் தொடர்ந்து எழுதப்பட்டு கொண்டு தான் வருகிறது.
கடந்த கால எழுத்தாளர்கள் யதார்த்தத்தை புரிந்து கொள்ளவேயில்லை தங்கள் எழுத்து உண்மையை கண்ணாடி போல பிரதிபலிக்கின்றது என்று அறிவித்துக் கொண்டார்கள்.. ஆனால் கண்ணாடி உருவத்தை இடவலமாக மாற்றி தான் பிரதிபலிக்கும் என்றசாதாரண நிஜத்தை கூட புரிந்து கொள்ளாமல் இருந்தது தான் வேடிக்கையாக இருக்கிறது
3) இதுவரை யதார்த்தவாதமாக நம்பபட்டு வந்தவைகள் தவறானவைகளா?
சொல்லும் மரபிலிருந்து எழுத்து மரபிற்கு கதைகள் மாற்றம் கொண்ட போது கூட கதை மரபுகள் கைவிடப்படவில்லை. தமிழ்சிறுகதையின் ஆரம்ப கால முயற்சிகளில் வெளிப்படையாக இதை காணமுடிகிறது. குறிப்பாக உதிரி மனிதர்களுக்கும், அபௌதீக தளங்களுக்கும், மறுகதைகளுக்கும், இடமிருந்திருக்கிறது.
பாரதி, புதுமைபித்தன் கதைகளில் கதைசொல்லல் தனித்துவமாக தானே இருந்தன. ஆனால் அதன் அடுத்த தலைமுறை எழுத்தாளர்கள் கதையின் மையமாக குடும்பத்தை சுருக்கியதும் அதன் தினப்பாடுகளை பதிவு செய்வது மட்டுமே கதைகளின் வேலை என்று முடிவு செய்து கொண்டு ரேடியோ நாடகங்களை போல வாய்ஒயாமல் பேசும் கதாபாத்திரங்களை எழுதி நிரப்பியது தவறான வழிகாட்டுதலாக படுகிறது. இதன் தொடர்ச்சி அடுத்த பதினைந்து வருடங்களில் சிறுகதைகள் மத்தியதர வர்க்கத்து மனிதர்களின் புலம்பலுக்கும் நிராசைகளுக்கும் உரிய வடிவமாக சுருங்கிப் போய் விட்டது.
கார்க்கி, செகாவ், தஸ்தாயெவ்ஸ்கி, டால்ஸ்டாய் போன்றவர்களின் ருஷ்யசிறுதைகளும் மாப்பசான். பால்சாக் போன்ற பிரெஞ்ச் இலக்கியவாதிகளும் எட்கர்ஆலன் போ, ஜாக் லண்டன், ஸ்டீபன் கிரேன் போன்ற அமெரிக்க சிறுகதையாசியர்களும் தமிழில் அறிமுகப்படுத்தபட்ட போதும் அந்த எழுத்துகளிடமிருந்து தமிழ் எழுத்தாளர்கள் எதையும் கற்றுக் கொள்ளவில்லை என்பது ஆச்சரியமாக தானிருக்கின்றது.
அதே வேளையில் வளமையான சங்ககவிதைகளும் சமணபௌத்த காப்பியங்களும், நுôறுவகை கதை சொல்லல் முறைகொண்ட நாட்டார் கதைகளும், தொன்மங்களும் நம்பிக்கைகளும். கூட தமிழ் சிறுகதையாசியர்களை பாதிக்கவேயில்லை. பின் எதிலிருந்து தான் இவர்கள் உருவானார்கள்.? எதை தங்களது பார்வையின் அடித்தளமாக கொண்டிருந்தார்கள்.? எதை யதார்த்தம் என்று சொல்கிறார்கள் என புரியவில்லை.
4 ) உங்களது இரண்டாவது நாவலான நெடுங்குருதியை ஒட்டி உங்களது எழுத்துகளில் ஒரு மாற்றம் தெரியத்துவங்குகிறது. இக்காலகட்டத்தில் எழுதப்பட்ட கதைகளில் கூட இந்த மாற்றத்தை உணர முடிகிறது. குறிப்பாக நெடுங்குருதி ஒரு மேஜிக்கை தன்னுள் வைத்திருக்கும் அதே நேரத்தில் அது ஒரு யதார்த்த வாத நாவலாகவும் இருக்கிறது. உங்கள் எழுத்தில் நிகழ்ந்த இந்த மாற்றத்திற்கு காரணம் என்ன?
நெடுங்குருதி நாவலின் துவக்கம் பத்தாண்டுகளுக்கு முன் நான் எழுதிய காட்டின் உருவம் சிறுகதையிலே துவங்குகிறது. நெடுங்குருதி நாவல் வேம்பலை என்ற புனைவான கிராமத்தில் வாழும் வேம்பர்கள் என்ற மனிதர்களையும் அவர்களது மூர்க்கமான வாழ்க்கை போராட்டத்தையும், துக்கத்தையும் வேதனைகளையும் அவர்களது விசித்திர கனவுகளையும் சொல்கிறது.
உப பாண்டவம் போன்று ஒரு இதிகாசத்தின் மீதான மீள்புனைவாக ஒரு நாவலை எழுதிய பிறகு இருபதாண்டுகளுக்கும் மேலாக என்னுள் புதையுண்டிருந்த வேம்பலையை எப்படி பதிவு செய்வது என்று யோசனையாக இருந்தது.
பால்ய நாட்களில் மாட்டுதரகர்களோடு சந்தைக்கு செல்லும் போது அவர்கள் தாங்கள் அறிந்த கதையை வழியெல்லாம் சொல்லிக் கொண்டு வருவார்கள். அதில் எது நிஜம் எது பொய் என்று பிரிக்கமுடியாது. கதாபாத்திரம் போன்று வர்ணிக்கப்பட்ட மனிதனை சந்தையில் நேரிலே நாம் காண சந்தர்ப்பம் அமையும். அதே நேரம் அவர்கள் தங்களது நிலவியலையும் அதனை பீடித்திருக்கும் துர்கனவையும் தொடர்ந்து எல்லாகதைகளிலும் சொல்லிக் கொண்டிருப்பதை உணர முடிந்தது.
அந்த கதை சொல்லல் முறையை தான் நெடுங்குருதியிலும் காணமுடியும். குறிப்பாக இயற்கையையின் கரங்கள் வாழ்வை எப்படி புரட்டிப் போடுகின்றன என்பதையும் அதன் குரூரமும் கருணையும் எப்படி பீறீடுகின்றன என்பதையுமே இந்நாவல் மையமாக கொண்டிருக்கிறது.
என்னைப் பொருத்தமட்டில் அந்த நாவல் ஒரு வெயிலின் கதை . நிலப்பரப்பெங்கும் வெயில் ஒரு மூர்க்கமான மிருகத்தை போல தன்விருப்பப்படி சுற்றியலைகிறது. வெயிலை குடித்துக்கிறங்கிய மனிதர்கள் தீமையின் உருக்களை போல நடமாடுகிறார்கள். வாழ்வை பற்றிய உயர்வெண்ணங்கள் எதுவும் அவர்களிடமில்லை. சாவை குறித்த புலம்புதல்களுமில்லை. அந்த நிலவியலில் வாழ்வது என்பதே ஒரு மாயம் தான்.
தாவரங்களின் உரையாடலில் இருந்து எனது கதைவெளி மாறிக் கொண்டுவரத்துவங்கியது. அதன் தொடர்ச்சியாக வெயிலைக் கொண்டுவாருங்கள் தொகுப்பின் அதிகதைகளையும் உப பாண்டவம் நாவலையும் சொல்லலாம். அதன் பின்னணியில் தான் நெடுங்குருதி வந்திருக்கிறது. ஆகவே எழுத்து முறை இப்போது தான் மாற்றமடைந்துள்ளது என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.
5) தமிழில் யதார்த்தவாத கதைகளே முழுமையாக எழுதி முடிக்கபடவில்லை இந்நிலையில் புதுவகை எழுத்துக்களுக்கு அவசியம் இல்லை மேலை இலக்கியங்களை படித்துவிட்டு அடிக்கபடும் காப்பி என்கிற வகையில் விமர்சனங்கள் தற்போது முன்வைக்கபடுகின்றன அதற்கான உங்களது எதிர்வினை?
ஒரு நேரத்தில் ஒரேயொரு பொருளை மட்டுமே யாவரும் வாங்க வேண்டும் என்று கட்டயாப்படுத்துவதற்கு தமிழ் இலக்கியம் என்ன ரேஷன் கடையா? மேலை இலக்கியங்களை படித்து விட்டு காப்பியடிக்கிறார்கள் என்று சொல்பவர் யார்.? அவர்கள் என்ன வாசித்திருக்கிறார்கள்.? வம்பு பேச்சுகளும் அவதுôறுகளும் தொடாத துறையிருக்கிறதா என்ன.? இல்லை என்றால் யதார்த்தவாத கதைகள் இவ்வளவு நாட்களுக்குள் எழுதி முடிக்கபட்டுவிடும் என்று ஏதாவது ரிடயர்ட்மண்ட் தேதி ஏதாவது இருக்கிறதா என்ன ? தங்களுக்கு புரியாத எதுவாகயிருந்தாலும் அது வெளிநாட்டு இலக்கியத்தின் காப்பி என்று கூச்சப்படாமல் சொல்வதற்கு ஒரு கூட்டமே தயாராகயிருக்கிறது.
6)இன்றுள்ள தமிழ் இலக்கிய போக்குகள் எப்படியிருப்பதாக நினைக்கிறீர்கள்?
பன்முகப்பட்டதாகவும் பல்வேறு சீரிய தளங்களில் செயல்படுவதாகவும் புதிய எழுத்துவகை உருவாகியிருக்கிறது. குறிப்பாக தமிழ்கவிûயி”ல் பெண்கவிஞர்களின் வரவு இதுவரையில்லாத சாத்தியங்களை உருவாக்கியிருக்கிறது. இவர்கள் ஆபாசமாக எழுதுகிறார் என்று கூச்சலிடுவது அர்த்தமற்றது. ஆபாசம் வீட்டு தொலைகாட்சியில், பாடல்களில், பேச்சில், நடவடிக்கைளில் வீடுகளிலும் ஊடகங்களிலும் பெருகிவழிவதை ரசித்துக் கொண்டிருப்பவர்கள் பால்உணர்வுகளை ஒடுக்கபட்ட உடலின் குரலாக பெண் கவிதைகளில் வெளிப்படுத்துவதை எதிர்ப்பது ஒரு திட்டமிட்ட வன்முறை என்பேன்
சிறுகதையி”லும் அடிநிலை மனிதர்கள் பற்றியும் மனத்திரிபுகள், பால் இச்சைகள் குறித்து பேசும் கதைகள் சிறப்பாக எழுதப்பட்டுவருகின்றன. புத்தகவெளியிட்டில் ஒரு உலகத்தரம் தமிழுக்கு சாத்தியமாகியிருக்கிறது. ஆனால் நாவல்கள் மிக குறைவாகவே ஏழுதப்படுகின்றன. அதிலும் குறிப்பிடும்படியாக எதுவுமில்லை.
மாலதி மைத்ரி, தென்றல், குட்டிரேவதி, ராணி திலக், ஸ்ரீநேசன் போன்றவர்களின் கவிதைகள் பிடித்திருக்கின்றன. சிறுககைளி”ல் ஜே. பி. சாணக்யா, ஸ்ரீராம். லட்சுமி மணிவண்ணன். காலபைரவன் போன்றவர்கள் புதிய தளங்களை உருவாக்கி வருகிறார்கள். இவர்களை தவிர்த்து நான் தொ.பரமசிவத்தின் எழுத்துக்களையும். தியோடர் பாஸ்கரனின் கட்டுரைகளையும் ஈடுபாட்டுடன் வாசித்து வருகிறேன். மொழிபெயர்ப்பில் ஜி. குப்புசாமியின் செயல்பாடு மிகவும் கவனிக்கபட வேண்டியது.
7) இப்போது உலக அளவில் யாருடைய எழுத்துகளை முக்கியமானதாக கருதுகிறீர்கள்?
போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான ஜோஸ் சரமாகோ வின் நாவல்கள் மிகவும் சிறப்பானதாகயிருக்கின்றன. குறிப்பாக தி ஸ்டோன் ராப்ட், தி காஸ்பல் அக்கார்டிங் டு ஜீசஸ் கிரைஸ்ட் இரண்டையும் கடந்த பத்தாண்டுகளில் நான் வாசித்த மிகச்சிறந்த நாவல்களெனச் சொல்வேன். இன்னொருவர் ஆர்கன் பாமுக் என்ற துருக்கியை சேர்ந்தவர் இவரது மை நேம் இஸ் ரெட் என்ற நாவல் மார்க்வெஸின் நுôற்றாண்டுகால தனிமைக்கு நிகரானது. 26 மொழிகளில் மொழிபெயர்க்கபட்டிருக்கும் பின்நவீனத்துவ நாவலது.
ஹருகி முராகமியின் சிறுகதைகளும் வில்லா ஸிம்போர்ஸ்காவின் கவிதைகளும் வாசிப்பில் புதிய அனுபவம் தருகின்றன. மார்க்வெஸின் புதிய நாவல் மெமரீஸ் ஆப் மை மெலன்கலிக் வோர்ஸ் ஆங்கிலத்தில் இன்னமும் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகவில்லை. அது மிகச்சிறந்த நாவல் என்று எனது நண்பரும் முக்கிய லத்தீன் அமெரிக்க சிறுகதை எழுத்தாளருமான பெர்னான்டோ úஸôரான்டினோ மெயில் அனுப்பியிருக்கிறார். வாசிக்க காத்துக் கொண்டிருக்கிறேன்.
6) தமிழ் ஆலக்கிய விமர்சனம் என்ன வகையில் உள்ளது என்று கருதுகிறீர்கள்? தமிழ் விமர்சகர்கள் படைப்பாளிக்கு ஊக்கம் தருபவராக இருக்கிறாரா இல்லையா என்பதை ஒரு படைப்பாளி என்னும் முறையில் சொல்ல முடியுமா?
இன்று தமிழில் இலக்கிய விமர்சகர்களேயில்லை. தற்போது விமர்சகர்களாகயிருப்பவர்கள் பலரும் தங்களுக்கு பரிச்சயமான கோட்பாடுகளை பரிசோதித்து பார்ப்பதற்கான சோதனை எலியாக தான் இலக்கியபடைப்புகளை எடுத்துக் கொள்கிறார்கள். இவர்களுக்கு முறையானதொரு இலக்கிய கோட்பாடுகள், தத்துவங்களின் பரிச்சயமும், தமிழ் இலக்கியத்தின் தேர்ச்சியும் இல்லை.
இருபது ஆண்டுகளுக்கு முன்பிருந்த விமர்சன தந்தைகள் எதை எழுதுவது, எதை எழுதக்கூடாது என்று முடிவு செய்யும் கலாச்சார காவலர்களாக தங்களை கருதிக் கொண்டு வெட்டுக்கத்திகளுடன் தணிக்கையாளர்களை போல செயல்பட்டிருக்கிறார்கள். அன்றைய இலக்கிய விமர்சனம் தெருச்சண்டை போல வசைகளும் கொச்சையும் நிரம்பியதாக தான் காணப்படுகிறது.
இன்னொரு பக்கம் இலக்கிய விமர்சனம் என்ற பெயல் துதிபாடுதலும் ஆராதனைகளும் மிக அதிகமாக நடைபெற்றிருக்கிறது. தமிழ்நாட்டின் போர்ஹே, தமிழ் கால்வினோ, தமிழை காப்பாற்ற வந்த பின்நவீனத்துவ டொனால்டு பார்த்தல்மே, தமிழ் காப்கா. என தமிழ் எழுத்தாளர்களுக்கு உலக அங்கீகார பட்டங்கள் தந்தது உள்ளுர் விமர்சகர்களை தவிர வேறு யார்.?
புதுக்கவிதையை பற்றி உப்பு பெறாத இரண்டு விமர்சன கட்டுரை தொகுதிகளை வெளியிட்டுவிட்டு சாகித்ய அகாதமி பதவியையும் சர்வதேச அரங்கங்களில் கட்டுரைவாசிக்கும் சந்தர்ப்பத்தையும் உருவாக்கி கொள்ளும் அபத்தம் வேறு எங்காவது இருக்கிறதா என்ன? ஆங்கிலத்துறைகளில் பணியாற்றிக் கொண்டு அரைகுறையாக கற்றுக் கொண்ட விமர்சனபாடங்களை தமிழ் இலக்கியவாதிகளின் மீது ஏவிவிடும் உளறல் இன்னொரு புறம் பின்நவீனத்துவ விமர்சனமாக பெருகிக் கொண்டிருக்கிறது.
பல்கலை கழகங்கள் குறிப்பிடத்தகுந்த இலக்கிய விமர்சகர்களை உருவாக்கவேயி”ல்லை. மாறாக நல்ல நாவல்களை, கவிதைகளை பரிட்சைக்குரிய பத்துமார்க் கேள்விகளாக உருமாற்றி வகுப்பெடுத்து சராசரி ரசனை அளவை கூட சிதைந்து விட்டிருக்கிறார்கள். விதிவிலக்காக உள்ள தொ.பரமசிவம். அ.கா.பெருமாள், அ.மார்க்ஸ் வீ. அரசு போன்ற பேராசியர்கள் கூட கவிதை, நாவல், சிறுகதை போன்ற இலக்கிய விமர்சனத்தை விடவும் நாட்டார்கலைகள், மொழித்துறை, நாடகம், அரசியல் நிகழ்வுகள் சார்ந்து தான் அதிகம் செயல்பட்டு வருகிறார்கள். மிகவும் கவனத்துக்குரிய விமர்சகர்களாக மதிக்கபட்ட தமிழவன், நாகார்ஜூனன், எம்.டி.முத்துகுமாரசாமி, எஸ்.சண்முகம் போன்றவர்கள் இப்போது எழுதுவதேயில்லை.
அமெரிக்க பல்கலை கழகங்களில் பணியாற்றிக் கொண்டு தமிழ் இலக்கியத்திற்கு ஏ.கே.ராமானுஜமும் ஜார்ஜ் எல். ஹார்ட்டும் செய்த பங்களிப்பின் ஒரு பகுதியாவது இங்குள்ள கல்விதுறை அறிஞர்களால் செய்யப்பட்டிருக்கிறதா?
மிகைல் பக்தின் தஸ்தாயெவ்ஸ்கியின் படைப்புலகினை பற்றி விரிவாக 300 பக்க நுôலை எழுதியிருக்கிறார்.. இதாலோ கால்வினோ செவ்விலக்கியங்களை எப்படி வாசிப்பது என்று தனிப்புத்தகமே எழுதியிருக்கிறார். உம்பர்த்தோ ஈகோவின் கட்டுரைகள் மொழியலையும் மறைக்கபட்ட சரித்திரத்தையும் பேசுகின்றன. இவர்களை போலவே டெரிதாவும் லக்கானும் மிஷைல் பூக்கோவும் எழுதிய விமர்சனங்கள் நம் கையில் வாசிக்க கிடைக்கின்றன. இவர்கள் எவரும் எழுத்தாளர்களை புகழ்ந்து கொண்டாடுவதற்கு விமர்சனத்தை பயன்படுத்தவில்லை. மாறாக படைப்பை புரிந்து கொள்வதற்கான சாத்தியங்களை அதிகமாக்குகிறார்கள். தமிழில் இந்தவகை விமர்சனங்கள் இல்லை. அதனால் தான் இன்றைய இலக்கியவிமர்சகர்களை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை..
9)தற்போது உயிர்மை இதழில் உலக எழுத்தாளர்கள் பற்றி, அவர்களது எழுத்துக்கு அப்பாற்பட்ட ஆர்வங்களை பற்றி எழுதி வருகிறீர்கள். இதை எழுதவேண்டும் என்று என்ற எண்ணம் எப்படி உருவானது?
எனது பதினெட்டு வயதிலிருந்து உலக இலக்கியங்களை வாசித்துவருகிறேன். அத்தோடு சமகாலத்தின் முக்கிய படைப்புகள் எந்த தேசத்தில் எழுதப்பட்ட போதும் அவற்றை தேடிவாசிக்கும் பழக்கம் கொண்டிருக்கிறேன். இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு இலக்கியவாதிகளை தேடிச் சென்று பார்த்து அவர்களோடு எனது வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.
எழுத்தாளர்களின் வேலை கதை எழுதுவது மட்டுமே என்று கற்பிக்கபட்டிருந்த பிம்பம் இந்த வாசித்தலில், சந்திப்பில் கொஞ்சம் கொஞ்சமாக தகர்ந்து போகத் துவங்கியிருந்தது. பஷீரை சந்தித்த போது சீன யாத்ரீகன் மார்க்கோ போலோவை சந்தித்து பேசிக் கொண்டிருந்தது போன்ற அனுபவமேயிருந்தது. மகேஸ்வததாதேவியை சந்தித்த போது பழங்குடியினருக்காக போராடும் போராளியை கண்ட சந்தோஷம் உண்டானது.
எழுத்தாளர்கள் கதைகளை விடவும் புதிராக வாழ்ந்திருக்கிறார்கள். எதை எதையோ தேடியலைந்திருக்கிறார்கள். அரசியல் ஈடுபாட்டின் காரணமாக சிறைபட்டிருக்கிறார்கள். ஒடுக்கபட்ட மக்களின் விடுதலைக்காக போராடியிருக்கிறார்கள். எழுத்தாளனின் செயல்பாடு பன்முகப்பட்டது. எழுத்தாளன் யாவையும் கடந்த ஒரு ஞானி, எழுத்து ஒரு அகதரிசனம் என்பதில் எல்லாம் எனக்கு நம்பிக்கையில்லை.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக என் வாசிப்பில் நான் நெருக்கமாக உணர்ந்த சிறந்த இருபது புத்தகங்கள் குறித்து வாக்கியங்களின் சாலை என்று ஒரு கட்டுரைத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறேன். இதன் தொடர்ச்சியாக தான்உயிர்மை இதழில் தற்போது எழுதி வரும் பத்தியை சொல்லலாம்.
10) இந்தத் தொடரில் தமிழ் எழுத்தாளர்கள் மீது அவர்களுக்கு பல்வேறு துறை சார்ந்த ஆர்வம் இல்லை என்ற விமர்சனத்தை முன்வைக்கிறீர்கள் இப்படியொரு ஆர்வம் எழுத்தாளர்களுக்கு கட்டயாம் இருக்க வேண்டும் என்று கருதுகிறீர்களா?
ஆர்வம் என்று அதை சொல்ல முடியாது. ஒரு கற்றுக் கொள்ளல் என்று சொல்லலாம். கற்றுக் கொள்வதை கட்டாயப்படுத்த முடியுமா என்ன? நாம் எழுதத் துவங்கியதும் கற்றுக் கொள்வதை நிறுத்திவிடுகிறோம்.
11) சமகால நிகழ்வுகள் இலக்கியத்தில் பதிவு செய்யப்படவேண்டியது அவசியமில்லையா?
சமகாலம் என்றால் என்ன? காலண்டர்தாட்கள் காட்டும் தேதியும் வருடமுமா அல்லது ஊடகங்கள் பெருக்கி காட்டும் பிரச்சனைகளை சமகாலம் என்று அர்த்தப்படுத்திக் கொள்கிறீர்களா.. சமகாலம் என்பது ஒரு தோற்றம் மட்டுமே. அதன் வேர்கள் எந்த நுôற்றாண்டில் ஒடிக் கொண்டிருக்கின்றன என்று சுலபத்தில் அறிந்து கொண்டுவிட முடியாது.
சோபாக்ளிசின் ஒடிபஸ் ரெக்சினை வாசிக்கும் போது அது நம் காலத்தை பிரதிபலிப்பதாகவே உள்ளது. ஆனால் நாடகம் எழுதப்பட்டு இரண்டாயிரமாண்டு கடந்துவிட்டிருக்கிறது. உம்பர்த்தோ ஈகோவின் நாவல்கள் பல நுôற்றாண்டுகளுக்கு முந்திய ரகசிய அமைப்பான டெம்பிளார்களையும் மடாலயங்களையும் நினைவுகள் அழிந்து போகும் தீவையுமே பேசுகின்றன. அதற்காக அதை கடந்த காலத்தின் கதை என்று விலக்கிவிட முடியுமா? அந்துவாந்த் சந்த் எக்சுபரின் குட்டி இளவரசன் எந்த சமகாலத்தின் வெளிப்பாடு என்று நினைக்கிறீர்கள்,
காலம் பற்றிய நமது புரிதல் தெளிவற்றது. நான் காலத்தை சதா திசைகளற்று பொங்கிக் கொண்டிருக்கும் ஒரு நீருற்றை போல தான் புரிந்து கொண்டிருக்கிறேன். ஒடிக்கொண்டிருக்கும் ஆற்றின் மீது அருகாமை மரங்களும் வானில் பறக்கும் பறவையின் நிழலும் தண்ணீல் பிரதிபலிக்கின்றன. ஆனால் நம் குடத்தில் அள்ளும் தண்ணீல் பிம்பங்கள் ஒட்டிக் கொண்டு வருவதில்லையே. என்றால் எங்கே பிரதிபலிப்பாகிறது பிம்பம்? தோற்றம் கடந்த நிஜம் இருப்பதை நாம் கவனிக்க வேண்டியதில்லையா?
12) தங்கள் கவனம் தற்போது எதில் குவிந்திருக்கிறது. அல்லது எதை தொடர்ந்து விரும்பி வாசித்து வருகிறீர்கள்?
புத்தரை தொடர்ந்து பத்தாண்டுகளாக பயின்று வருகிறேன். இந்தியசமூகத்தை, மனதை புரிந்து கொள்வதற்கு பௌத்தம் சரியான வழிகாட்டுதலாகயிருக்கிறது. சாஞ்சி, கயா, சாரநாத், நாகார்ஜூன கொண்டா என பௌத்த வாழ்விடங்களை தேடிச் சென்றும் பார்த்து வருகிறேன். இன்று பௌத்ததை கொண்டாடும் பலரும் அதன் சமூககருத்துக்களை மட்டும் ஏற்றுக் கொண்டு மற்றயாவையும் விலக்கிவிடுகிறார்கள். அரசியல் காரணங்களுக்கான மாற்றுபடிமமாக மட்டுமே புத்தர் பயன்படுத்தபட்டு வருகிறார் உண்மையில் பௌத்த வாழ்முறையில் எவருக்கும் ஈடுபாடில்லை. பௌத்த அரசியலை மேற்கொள்பவர்கள் வன்முறையை தங்களது ஆயுதமாக கொள்வதையும் சுயமோகத்தில் உறிப்போயிருப்பதையும் காணும்போது இவர்கள் எந்த புத்தரைப் பற்றி பேசுகிறார்கள் என்று சந்தேகமாகதானிருக்கிறது.
புத்தத்தினை புந்து கொள்ளாமல் போனதும் அதை வாழ்க்கை நெறியாக பின்பற்ற தவறியதும் இந்திய சமூகம் இழைத்த மாபெரும் தவறு. அதே போலவே பெரியாரை இந்து மத எதிர்பாளர் என்று சுருக்கி அவரை ஒரு திராவிட கட்சிதலைவரை போல கட்சி அடையாளத்திற்குள் அடைக்க முயன்றதும் தமிழ் அறிவாளிகளின் தவறான வழிகாட்டுதல் என்றே சொல்வேன்.
பெரியாரைப்பற்றிய இன்றைய விமர்சனங்கள் யாவும் அவதுôறுகளாவே உள்ளது. அவரின் சீரிய விவாதங்களை மூடிமறைப்பதற்கான தந்திரமாகவே தெரிகிறது. பெரியாரை நுட்பமாக வாசித்த எவரும் அவரை துதிபாட மாட்டார்கள். மாறாக தமிழ்சமூகத்தின் மீது அவர் எழுப்பிய கேள்விகளும் அவரது நேரடி செயல்பாடும் எத்தனை வலிமையானது என்று கட்டாயம் புரிந்து கொள்வார்கள். பெரியார் ஒரு சிந்தனை தளத்தை உருவாக்குகிறார். அதே வேளையில் அதன் செயல்பாட்டிற்கான சாத்தியபாடுகளையும் உருவாக்கியிருக்கிறார்.
புத்ததிற்கு ஒருவர் மதம் மாறுவது என்பதையே என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஒருவன் எந்த மதத்தினை சார்ந்து இருந்தாலும் அவன் பௌத்தனாக வாழமுடியும். பௌத்தம் ஒரு மதமல்ல ஒரு வாழ்முறை. ஒரு சிந்தனைவெளி. இன்னும் சொல்லப்போனால் பௌத்த ஈடுபாடு ஒரு மதமறுப்பு செயல்.
அதே நேரம் ஒன்றை ஒத்துக் கொள்ள வேண்டும் பௌத்தமும் முழுமையாக ஸ்தாபனமயமாக்கபட்டுவிட்டது. இரண்டு மகாபிரிவுகள். அதற்குள் நுôறு துணைபிரிவுகள். மாந்திரீகம் தாந்திரீகம், என ரகசிய சடங்குகளையும் பாலியல் கிளர்ச்சி தரும் வழிபாடுகள், பரபரப்பான மனிதர்களின் மனநெருக்கடியை போக்கும் எளிய தியானமுறை என்று எளிய வணிக தந்திரங்களைக் கொண்டதாகவும், என் மறைமுகஅதிகார சக்தியாகவும் கூட தன்னை உருமாற்றிக் கொண்டிருக்கிறது. ஆனால் பௌத்த சிந்தனைகளும் தத்துவமும் அறமும் ஸ்தாபன கட்டுபாடுகளுக்கு வெளியில் தனித்த சிந்தனைகளாக அறிவார்ந்த வழிகாட்டுதலாக உள்ளது. நாம் பின்பற்ற வேண்டியது இது போன்ற பௌத்தநெறியை தான் .
13) ஊர்சுற்றுவதில் உங்களுக்கு உள்ள ஆர்வம் வெறும் பயணியின் ஆசையா இல்லை எதையாவது தேடிச் சென்று கொண்டிருக்கிறீர்களா?
நான் சுற்றுலா பயணி அல்ல. இன்னும் சொல்லப்போனால் புகழ்பெற்ற சுற்றுலா ஸ்தலங்கள் எதையும் நான் பார்த்ததே கிடையாது. தாஜ்மகாலை கூட யமுûயி”ன் கரைகளை ஒட்டிய கிராமங்களில் சுற்றிக்கொண்டிருந்த போது வயல்வெளிகளின் பின்னிருந்து தான் பார்த்திருக்கிறேன். எனது தேடுதலின் காரணம் தெளிவற்றது. அது அவ்வப்போது கிளைக்க கூடியது. பயணத்தில் குறிப்பெடுப்பதோ, புகைப்படம் எடுத்துக் கொள்வதோ எதுவும் கிடையாது. குறிப்பாக எந்த ஊருக்குப் போகப்போகிறேன் என்ற திட்டம் கூட கிடையாது. இமயமலையின் பதினெட்டாயிரம் அடி உயரம் வரை சென்றிருக்கிறேன். கிர்காட்டிற்குள் நடந்து திரிந்திருக்கிறேன். கீழ்வாலை குகைஒவியங்களை கண்டிருக்கிறேன். அஜ்மீரின் தெருக்களில் உறங்கியிருக்கிறேன். புழுதிபடிந்த உடையும் பிளாட்பார கடைகளில் உணவுமாக வாழ்வது பழக்கபட்டிருக்கிறது. இப்போதும் எனது பயணம் இலக்கற்று எந்த நேரமும் புறப்பட தயராகதானிருக்கிறது. ஒரேயொரு வேறுபாடு பத்து ஆண்டுகளுக்கு முன்பிருந்தது போல பயமற்று எந்த நகரிலும் சுற்றித்திரிய முடிவதில்லை. அத்தோடு பலவருடமாக ஊர்சுற்றியதால் சம்பாதித்த உடல்கோளாறுகள் பயண எல்லையை சுருக்கிக் கொண்டுவிட்டிருக்கிறது.
14) தொலைகாட்சி தொடர்களிலும் சினிமாவிலும் பணியாற்றியிருக்கிறீர்கள் உங்கள் அனுபவத்தின் அடிப்படையில் தமிழ் திரைத்துறைக்குள் எழுத்தாளருக்கு உள்ள சாத்தியஙகள் சாத்தியமின்மை பற்றி சொல்ல முடியுமா?
எழுத்தாளின் தேவை காட்சி ஊடகங்களிலும் மிக அதிகமாகயிருக்கிறது. ஆனால் எழுத்தாளன் இடம் எவரோ ஒரு நகலெடுப்பவரால் நிரப்பபட்டு விடுகிறது சினிமாவில் கதை என்பது எழுதப்படுவதில்லை மாறாக உருவாக்கபடுவது. கதையை உருவாக்குவதற்கு என ஒரு கூட்டமே வேலை செய்கிறது. அதற்காக பல ஆயி”ரம் செலவு செய்கிறார்கள். அனால் அந்த செலவில் நுôறு ரூபாய் கூட புத்தகம் வாங்குவதற்கு செலவிடப்பட்டிருக்காது.
எந்த சினிமா நிறுவனத்திலும் நுôலகம் என்ற ஒன்றை நான் பார்த்ததேயில்லை. தந்திபேப்பரும் வார ஆதழ்களும் தவிர்த்து மருந்துக்கு கூட ஒரு நாவலோ சிறுகதை புத்தகமோ கதைவிவாதம் நடக்கும் அறைகளில் கண்டதேயில்லை.
சினிமாவிற்கான நல்ல கதைகள் இல்லை என்பது பொய். நல்ல கதைகளை படமாக்க தயாரிப்பாளர்கள், நடிகர்கள் முன்வரவில்லை என்பது தான் நிஜம். அதனால் தான் தமிழில் மிக அபூர்வமாகவே அழகி, ஆட்டோகிராப். காதல் போன்ற படங்கள் வெளிவருகின்றன.
கடந்த இரண்டு மாதங்களில் பெருமழைக்காலம், காழ்சா, அகலே என்று மூன்று மலையாள படங்களை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. மிக யதார்த்தமான, ரசனைமிக்க படங்கள். திரையரங்களில் அரங்கம் நிரம்பி வழிய தான் ஒடிக்கொண்டிருந்தது. இதில் அகலே என்ற படம் கண்ணாடி சிற்பங்கள் என்ற டென்னிசி வில்லியம்சின் உலகப்புகழ் பெற்ற நாடகத்தை அடிப்படையாக கொண்டு ஷியாம பிரசாத் இயக்கியது. இந்த அளவிற்கு கூட தமிழில் முயற்சிகள் நடைபெறவில்லை என்பது கவலைக்குயதாகவேயி”ருக்கிறது.
15) தற்போது வெளிவந்துள்ள உங்களது உலக சினிமா புத்தகத்தை எழுத வேண்டும் என்ற எண்ணம் எப்போது எருவானது. உலகசினிமாவின் மீது உங்களுக்கு எப்படி ஈடுபாடு வந்தது.?
கல்லுô நாட்களில் இருந்தே மதுரையி”ல் உள்ள திரைப்பட சங்கங்களின் வழியாக உலகதிரைப்படங்களை காணும் பழக்கம் எனக்கு உருவாகியி”ருந்தது. அத்தோடு கேரளாவில் ஜான் அபிரகாமால் துவக்கபட்ட ஒடேசா என்ற திரைப்பட இயக்கத்தின் நண்பர்களின் நட்பு தொடர்ந்து அவர்கள் நடத்திய சினிமாபயிலரங்குகளில் கலந்து கொள்ளவும் திரைப்படவிழாக்களில் பங்கேற்கவும் ஆர்வத்தை உருவாகியது. பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக நான் உலகதிரைப்படங்களை பார்த்து வருகிறேன். டெல்லி கல்கத்தா பெங்களுர் என பல்வேறு திரைப்படவிழாக்களுக்கு சென்று வந்திருக்கிறேன். அந்த்ரே தார்கோவெஸ்கியும், லுôயி புனுவலும், பெலினியும் குரசேவாவும் எனக்கு பிடித்தமான இயக்குனர்கள்.
சென்னை போன்ற பெருநகரங்களில் கூட திரைப்படங்களை திûயி”டுவதை தவிர்த்து அதைப்பற்றிய முறையான அறிமுகமோ, தீவிரமான விமர்சனங்களோ நடைபெறுவதேயில்லை. தியோடர் பாஸ்கரன், வெ. ஸ்ரீராம் போன்ற ஒரு சில தனிநபர்களின் ஈடுபாடு மட்டுமே சினிமவை புரிந்து கொள்வதற்கான எழுத்துப் பிரதிகளை உருவாக்கி தந்திருக்கிறது. சினிமாவை பற்றி எழுதுபவர்கள் தமிழில் மிக குறைவு. இலவசமாக உலகின் சிறந்த படங்கள் திரையிடப்படும் போது கூட அங்கு தமிழ் எழுத்தாளர்களோ, கவிஞர்களோ வந்து பார்ப்பதேயில்லை என்பது தான் உண்மை.
சென்னையில் மட்டும் ஆயிரக்கணக்கில் உதவி இயக்குனர்களும் துணை இயக்குனர்களுமிருக்கிறார்கள். இவர்களில் இருநுôறு பேராவது நல்ல புத்தகங்களை தேடி வாசிப்பவர்கள். ஆனால் இவர்கள் தெரிந்து கொள்வதற்கு கூட தமிழில் உலக சினிமாவை பற்றிய புத்தகங்களில்லை.
தற்போது சென்னையை தவிர்த்த சிறுநகரங்களில் வசிப்பவர்கள் கூட ஹாலிவுட் திரைப்படங்களை தவிர்த்து வேறு திரைப்படங்களை காண்பதற்கான சாத்தியம் டிவிடி வழியாக உருவாகி உள்ளது. ஆனால் எந்த படங்களை பார்ப்பது எப்படி தேர்வு செய்வது எப்படி புரிந்து கொள்வது எனத் தெரியவில்லை. நவீன ஒவியம், இசை போலவே சினிமாவினை ரசிப்பதற்கும் ஆழ்ந்த பயிற்சியும் உழைப்பும் தேவை. ஆகவே இதற்கான மாற்றுமுயற்சிகளில் ஒன்றாக சினிமா மீது ஆர்வம் கொண்டிருந்த இளம் நண்பர்கள் சிலரையும் ஒன்றிணைத்து உலகசினிமாவிற்கான ஒரு புத்தகத்தை உருவாக்கினேன். இந்த புத்தகம் உருவாவதற்கு மூன்று அண்டுகள் கால அவகாசம் தேவைபட்டது.
16) ஒரு சிறுபத்திக்கை எழுத்தாளராக அறியப்பட்டு வந்த நீங்கள் இன்று பிரபலமான தமிழ் எழுத்தாளராக ஆகியுள்ளீர்கள். இந்த மாற்றத்தை எப்படி உணர்கிறீர்கள்?
நான் 1984ல் எழுத துவங்கி இன்றுவரை இருபது ஆண்டுகள் கடந்துவிட்டன. இதுவரை இலக்கியவாசகர்களுக்கு மட்டுமே பரிச்சயமாகயிருந்த எனது எழுத்து இன்று பல்வகை பட்ட வாசகர்களை நோக்கி விரிந்திருக்கிறது. அது என் புத்தகங்களுக்கான வாசகர்களை அதிகப்படுத்தியிருக்கிறதே தவிர எனது ஈடுபாட்டில் எந்த மாற்றத்தையும் உருவாக்கவில்லை.
17) ஆனந்த விகடனில் வெளியான உங்கள் துணையெழுத்து தொடர் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது. ஆனால் அது இதுவரையில்லாத உங்கள் எழுத்தில் ஒரு ரொமான்டிசிசத்தை துணையெழுத்து கொண்டிருப்பதாக ஒரு விமர்சனமிருக்கிறது. இதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
துணையெழுத்து ஒரு கட்டுரைத் தொடர். எனது பயணத்தையும் நான் கண்ட மனிதர்களையும் முன்வைத்து எழுதப்பட்ட ஒரு பத்தி.. அது விகடனில் வெளியானதே தவிர எந்த சிறுபத்திரிக்கையிலும் வெளிவந்திருக்க கூடிய சாத்தியம் கொண்டது தான். நான் கட்டுரைகளை புனைவுமொழியில் எழுதுகின்றவன்.
தமிழில் பொதுவாக கட்டுரைகள் என்றாலே ஒரு சலிப்பூட்டும் நடையில் வழக்கொழிந்து போன வார்த்தைகளையும் புள்ளிவிபரங்களும் கோட்பாடுகளையும் நிரப்பி நம்மை மூச்சுதிணற வைப்பதாகவேயிருந்து வந்திருக்கின்றன. நான் வாசித்தவரை போர்ஹேயின் கட்டுரைகள் மிக தீவிரமானவை ஆனால் அதன் மொழி புனைவு தன்மை மிக்கது. உம்பர்த்தே இகோவை வாசித்த பாருங்கள் பெரிய விஷயங்களை கூட எத்தனை எளிமையாகவும் பரிகாசத்துடனும் புரிந்து கொள்ள வைக்கிறார். இதாலோ கால்வினோ, ஆக்டோவியா பாஸ், மார்க்வெஸ் என பல முக்கிய எழுத்தாளர்கள் எழுதிய கட்டுரைகள் தரும் வாசிப்பு அனுபவம் மிக உயர்ந்த நிலையிலிருக்கிறது.
காருகுறிச்சி அருணாசலம் மறைந்து நாற்பதாண்டுகள் முடிந்துவிட்டது அதுவரை அவருக்கு வாழ்க்கை வரலாறு கூட எழுதப்படவில்லை. அவரை பற்றி எந்த இதழிலும் யாரும் எழுதுவதில்லை என்று துணையெழுத்தில் அவரைப்பற்றி எழுதியதைப் படித்துவிட்டு அவரது மகள் நன்றி தெவித்ததோடு காருகுறிச்சிக்கு நினைவாக பூஜையில் வைக்கபட்டிருந்த சிறிய சந்தன நாதஸ்வரத்தை எனக்கு பரிசாகவும் அளித்தார்கள். இது போலவே பிரமீள் பற்றிய கட்டுரையை வாசித்துவிட்டு அவர் அடக்கம் செய்யப்பட்டுள்ள கரடிக்குடியில் ஒரு நினைவு மண்டபம் எழுப்புவதற்கு அமெரிக்காவிலிருந்து ஒரு மருத்துவர் ஒரு லட்ச ரூபாய் எனக்கு அனுப்பிவைத்திருந்தார்.
நினைவுமண்டபம் அனுப்புவதை விடவும் புத்தகவெளியீடுகள், இலக்கிய கூட்டங்கள் நடத்துவதற்காக சென்னையில் பிரமீள் பெயரால் ஒரு நினைவு அரங்கம் அமைப்பது நல்லது என்று தோன்றுவதாக சொல்லி அப்பணத்தை திருப்பி அனுப்பிவைத்தேன். இரண்டு ஆண்டுகளுக்குள் பிரமீள் பெயரால் அரங்கம் கட்டிதருவதற்கு இப்போது அவர் ஆர்வமாக பணம் சேகரித்துக் கொண்டிருக்கிறார். வாசிப்பை மீறி ஒரு செயல்பாடாக தான் துணையெழுத்தின் எதிர்வினை அமைந்திருந்தது.
17) தமிழில் சிறுபத்திரிக்கைகளின் எண்ணிக்கை குறைந்து இடைநிலை பத்திரிக்கைகள் அதிகரித்துள்ளதே. இன்று ஒரு சிறுபத்திரிக்கையின் தேவை என்ன என்று நினைக்கிறீர்கள்.?
எப்போதுமே சிறுபத்திரிக்கைகள் மாற்றுக்குரலுக்கு உரிய களத்தை உருவாக்குவதற்கு தான் முனைந்திருக்கின்றன. சிறு பத்திரிக்கை என்பதே ஒரு எதிர்திசையில் செல்லும் நீரோட்டம் தான். அதன் நோக்கம் வாசகர்களை விருத்தி செய்வது அல்ல. குறிப்பிட்ட ஒரு நோக்கம் சார்ந்து நண்பர்களால் தங்களது கைப்பணத்தை செலவு செய்தது தான் சிறுபத்திக்கைகள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. இன்று தமிழில் முக்கிய எழுத்தாளர்களாக அறியப்படும் யாவரும் சிறுபத்திக்கையில் எழுதி வந்தவர்களே. சிறுபத்திரிக்கைகளின் தேவை எப்போதுமே இருந்து வரக்கூடியது தான்.
இடைநிலை இதழ்களின் மீது எனக்கு நம்பிக்கையில்லை. இவை எந்த விததத்தில் தன்னை இடைநிலையாக நினைத்துக் கொள்கிறது என்று தெரியவில்லை. பத்தாயிரம் பேர் படிப்பதால் அது இடைநிலை இதழாகிவிடாது. அதுவும் சிறுபத்திரிக்கை தான். இடைநிலை இதழ் என்றால் தமிழ்சினிமா விமர்சனமிருக்கும் நாலு கலர்பக்கமிருக்கும். இத்தோடு ஒன்றிரண்டு மொழிபெயர்ப்பு கதைகள் வெளியிடப்படும் என்பது தானா? தமிழுக்கு தேவை தீவிரமான சிந்தனை தளத்தை உருவாக்க கூடிய இதழ்கள். இதை எத்தனை பேர் வாசகர்களாகயிருக்கிறார்கள் என்பதை வைத்து முடிவுசெய்ய முடியாது. இதே நேரம் சிறுபத்திரிக்கை என்ற பெயல் துதிபாடும் குழுக்களை உருவாக்கி கொள்வதையும் சகித்துக் கொள்ள முடியவில்லை..
18) எழுத்தாளனின் சமூக அக்கறை அரசியல் குறித்து இன்று அதிகம் பேசப்பட்டு வருகிறது. சமீபமாக சங்கராச்சாரியார் கைது செய்யப்ட்ட போது சமூகத்தில் முக்கிய நிகழ்வுகள் நடக்கும் போது எழுத்தாளர்கள் எதிர்வினையாற்ற வேண்டும் என்று சுந்தர ராமசாமி குறிப்பிட்டிருக்கிறார். ஒரு படைப்பாளியாக அதை எப்படி உணர்கிறீர்கள்.?
சங்கராச்சாரியாரின் கைது ஒரு முக்கிய சமூக நிகழ்வா என்ன? தலித் மக்கள் மீது தொடர்ந்து வரும் வன்முறையை கவனிக்க கூட முடியாமல் கண்ணை, காதை பொத்திக் கொண்டவர்கள் சங்கராச்சாரியார் விசயத்தில் மட்டும் சமூகபோராளியாவது வேடிக்கையாக இருக்கிறது. சுனாமியால் இத்தனை ஆயிரம் பேர் தங்கள் குழந்தைகளை இழந்து, வீட்டை இழந்து அகதிகளை போல ஆங்காங்கே தங்க வைக்கபட்டிருக்கிறார்கள். இறப்பு எண்ணிக்கை எவ்வளவு என்று இன்னமும் கண்டு பிடிக்கபடவேயில்லை. எத்தனை எழுத்தாளர்கள் அந்த முகாம்களுக்கு சென்று உதவிப்பணிகள் செய்திருக்கிறார்கள். தாமிரபரணி படுகொலையின் போது எங்கே போனார்கள் நாஞ்சில் நாட்டு எழுத்தாளர்கள். பாபர்மசூதி இடிப்பு, பம்பாய் மதக்கலவரம். குஜராத் கலவரம் என எத்தனையோ விஷயங்கள் நம்மை உலுக்கிய போதும் எதிர்வினையே தமிழில் ஆல்லை.
உண்மையை சொல்வதற்கு எனக்கு தயக்கமில்லை. நான் இது போன்ற சமூக நிகழ்வுகளுக்கு எதிரான கண்டன ஊர்வலங்களிலும் மேடைகளிலும் கலந்து கொண்டதில்லை. ஆனால் மதவாதத்தை ஒருபோதும் நான் ஆதரிப்பவனில்லை. சுனாமி முகாம்களில் எனது பதவியும் பங்களிப்பும் சொல்லிக் கொள்ளுமளவு முக்கியமானதில்லை. ஆனால் அவர்களின் துயரம் என்னை இன்றுவரை துôக்கமற்று செய்திருக்கிறது.
தொடர்ந்து தமிழகமெங்கும் சமணபௌத்த சின்னங்கள் இடிக்கபட்டும், படுகைகள் உள்ள மலைக்குகைகள் கல்குவாரிகளாக வெடிவைத்து தகர்க்கபடுவதும். கிராம மக்கள் தங்கள் வாழ்விடங்களை துறந்து நகரங்களை நோக்கி வந்து கொண்டேயிருப்பதையும், சாதி கிராமங்களில் முன்னை விட ஆழமாக வேர் ஊன்றிவிட்டதையும், ஆரம்ப கல்வியில் கூட மதவாதம் கலக்கபட்டு சரித்திரமும் கலாச்சாரமும் பொய்யால் நிரப்பபடுவதையும் சமூகபிரச்சனைகளாக நாம் கண்டுகொள்வதேயில்லை. அதைப் பற்றி குரல் கொடுப்பவர்களும் அதிகமில்லை.
நான் எனது அரசியல் சமூக நிலைப்பாடாக இந்த இரண்டாவது வகையை சார்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறேன். கல்வியிலும் கலாச்சார தளங்களிலும் ஏற்பட்டுவரும் சீரழிவுகளை தொடர்ந்து பல அரங்கங்களில் கண்டித்தும் எனது பார்வைகளை வலியுறுத்தியும் வருகிறேன். வாழ்விடங்களை விட்டு வெளியேறுபவர்களின் மீது எப்போதுமே அக்கறை கொண்டிருக்கிறேன்.
19)அரவான் என்ற உங்களது நாடகம் சமீபத்தில் அதிகம் பேசப்பட்டது. ஏன் நாடகத்திற்கு அரவானை தேர்வு செய்தீர்கள்.?
வியாச பாரத்தில் அரவான் களப்பலி பெரிதாக விவரிக்கபடவில்லை. ஆனால் தமிழகத்தில் அரவானுக்கு ஒரு முக்கியத்துவமிருக்கிறது. குறிப்பாக நாட்டார் மரபில் அரவான் கிருஷ்ணனால் தான் களப்பலிக்கு தேர்வு செய்யப்படுகிறான். பின்பு கிருஷ்ணனே பெண் வேடமிட்டு வந்து அரவானோடு கலவி கொள்கிறான். கிருஷ்ணன் ஆண் பெண் என இரண்டு உடல் கொண்டவானாகயிருந்ததால் அரவாணிகளும் அவரைப் போலவே நீலம் பூசிக்கொண்டு ஒரு இரவு அரவானை மணந்து மறுநாள் தாலியறுத்துவிட்டு ஒப்பாரி வைக்கிறார்கள். இந்த சடங்கு கூவாகத்தில் ஆண்டு தோறும் நடக்கிறது.
அரவான் ஒரே நேரத்தில் ஒடுக்கப்பட்ட மனிதனையும் விலக்கப்பட்ட பால் உறவிற்கும் அடையாளமாகயிருக்கிறான். அத்தோடு யுத்தத்தில் சாதாரண மனிதர்கள் பலிகொடுக்கபட்டு வருவது காலம்காலமாக நடந்துவருகின்றது என்பதற்கு சாட்சியாகவுமிருக்கிறான். அரவான் ஒரு வனகுடி. இப்படி பலதளங்கள் கொண்ட கதாபாத்திரமாகயிருப்பதால் தான் அரவானை நாடகமாக்கினேன்.
20)இப்போது என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்?
பௌத்த விகாரை ஒன்றை பற்றிய நாவலை எழுதிக் கொண்டிருக்கிறேன். விகடனில் கதாவிலாசம் என்று தமிழின் முக்கிய சிறுகதையாசியர்களை பற்றி ஒரு பத்தியை எழுதிக் கொண்டுவருகிறேன். இணையத்தில் அட்சரம் என்ற பெயல் உள்ள எனது பிளாக்கில் அவ்வப்போது சிறுகட்டுரைகள் .எழுதுகிறேன். இயற்கையை பற்றி உலகமெங்கும் உள்ள பல்வேறு பழங்குடி மக்களால் சொல்லப்பட்டுவரும் நுôறு குழந்தைகள் கதைகளை மொழிபெயர்த்திருக்கிறேன். அது ஏப்ரலில் தனிநுôலாக வெளிவரயிருக்கிறது.
21 ) இரண்டுவருடமாக சென்னைவாசியாகி விட்டீர்கள் எப்படியிருக்கிறது சென்னை வாழ்க்கை ?
எனக்கு எந்த மாற்றமும் தெரியவில்லை. குழந்தைகள் தான் விளையாடுவதற்கு இடமின்றியும். சேர்ந்து கதை பேச நண்பர்கள் இன்றியும், தனித்து விடப்பட்டிருக்கிறார்கள். கரை ஒதுங்கிய படகை போல ஒரு தீராத்தனிமை பீடித்திருக்கிறது. நான் தப்பிக் கொள்வதற்கு புத்தகங்களுக்குள் தலைகவிழ்ந்தபடியோ அல்லது யாவரும் உறங்கிய பின்இரவில் விழித்துக் கொண்டு தெருவை வேடிக்கை பார்த்தபடியோ இருக்கிறேன். மனைவியும் குழந்தைகளும் தங்களது இயல்பை மறந்து மௌனமாகிக் கொண்டு வருகிறார்கள். தொலைகாட்சியில் ஆழ்ந்துபோயிருக்கும் அவர்கள் முகங்களை கவனிக்கும் போது அது நிம்மதியற்றதாகவே தெரிகிறது. அதை நினைக்கும் போது தான் சற்றே பயமாக இருக்கிறது.
மறுமொழி
மூக்கன்
2/3/2005 , 7:23:01 PM அருமையாக இருந்தது திரு.ராமகிருஷ்ணன்.
உங்கள் கதாவிலாசமும் விகடனில் படித்து வருகிறேன்.
நேரம் கிடைக்கும்போது, இங்கேயும் எழுதுங்கள்.
PK Sivakumar
2/3/2005 , 7:41:59 PM Very good interview. Very thought provoking points. Each answers of yours have to be pondered, analysed and discussed more and thus would form an essay by itself. Punaivin Baaniyil Katurai ezuthuvathu ponra muyarchikal Tamilil illai enbathu ponra statements anaivarum yosika vendiya onru.
Ungalai patri pesum pothu Nanbarkalidam sonnathu ninaivuku varukirathu. La.sa.raku apuram kavithaiyaaka vurainadai ezuthubavar s.ra. enna, la.sa.ra.vin kavithai nadai thatuva vaathiyai pola sikalaanathu. ungal kavithai nadai, naataar kalai pola elimaiyanathu enru. Your interview makes me remember it again.
Thanks and regards, PK Sivakumar
மூர்த்தி
2/3/2005 , 9:37:29 PM மதிப்புமிகு எஸ்.ரா அவர்களுக்கு,
அருமையான கேள்விகள். மிகவும் அருமையான பதில்கள். நிறைகுடம் தளும்பாது என்பதற்கேற்ப எவ்வளவு புகழ்வரினும் தன்னடக்கமான பதில்கள். இது இதுதான் உங்களுக்கு மென்மேலும் புகழைச் சேர்க்கும். வாழ்க தங்களின் தமிழ் இலக்கிய பயணம்.
அவர் கேட்க மறந்த கேள்வி ஒன்று:
இணையத்தில் இலக்கியம் என்று ஏதும் படைக்கப்படுகிறதா இல்லையா?
தங்கமணி
2/3/2005 , 10:59:05 PM அருமையான பதிவு. மிக்க நன்றி. உங்களைப்பற்றிய அறிமுகம் மிகவும் நல்லவைகயில் எனக்குக் கிடைக்கவில்லை. வாசிப்பு என்ற வகையில் தாவரங்களின் உரையாடலையும், துணையெழுத்தையும் தவிர நான் உங்களின் எழுத்தெதையும் வாசிக்கவில்லை; அதனால் நான் முன்முடிவுகளை தவிர்க்கும்வண்ணம் இப்போதுதான் உபபாண்டவம் வாங்கினேன். இன்னும் வாசிக்கவில்லை.
இந்த நேர்காணல்/பதிவு பலபக்கங்களை கொண்டதாக இருப்பதையே இதன் உண்மைத்தன்மைக்கு சான்றாக நினைக்கிறேன். யதார்த்தத்தின் பரிமாணங்கள், புனைவின் உண்மைத்தன்மை (Chuang Tzu வின் பட்டாம்பூச்சி கனவு நினைவுக்கு வருகிறது), காலம், விமர்சன உலகம் என்று அழகாக, பின்புற அரசியல் நோக்கங்களின்றி, பார்வைகளின் (தரிசனங்களின்) வழியில் விரிகிறது உங்கள் பதிவு..
//பௌத்த ஈடுபாடு ஒரு மதமறுப்பு செயல்// என்ற வரிகளைப்படிக்கும் போது தி.ஜானகிராமனின் புத்த சாமியார் (அன்பே ஆரமுதே) ‘சாமியாரில் ஏதம்மா புத்தசாமியாரும், வேற சாமியாரும்’ என்பது நினைவில வந்தது. உண்மையில் பெளத்தம் சாட்சிப்படுத்தலின் மூலம் மனதை புறங்காணும் வழிமுறைகளை மிக எளிய முறையிலும், அழகாகவும் செய்துள்ளது. அதை நிறுவனமயமாக்கப் பட்ட மதங்கள் எளிதில் மூடிமறைக்க முயல்வதும், பெளத்தமே நிறுவனமயமாக்கப்பட்டதும் மிக இயல்பானதே.
காலம் பற்றிய புரிதல் மிக அழகானது. காலம் என்பது மனம் கடந்த நிலையில் இல்லாதொழிந்து, இக்கணமே நிலைக்கிறது. இக்கணத்தின் விரிவோ எல்லையும், திசையும் இல்லாதாது. அதனாலேயே மகா இலக்கியங்கள் அல்லது நாட்டார் கலை வந்த வடிவங்கள் எல்லாம் எல்லா காலத்தையும் (காலம் கடந்தும்) பிரதிபலிக்கும் தன்மைகொண்டவையாக இருக்கின்றன. காலம் பற்றிய அற்புதமான காட்சிப்படுத்தலை ஹெர்மன் ஹெஸ்ஸேயின் ‘சித்தார்த்தா’வின் கடைசி பக்கங்களில் கண்டபோது எனக்குள் எழுதவேண்டும் என்ற தவிப்பும், தேவையும் முற்றாக தீர்ந்துபோனதை உணர்ந்தேன்.
எழுத்தாளனின் சமூக அக்கறையைப் பற்றிய பதிலும் முக்கியமானது; இங்கு துரஷ்டிரவசமாக தமிழ் வலைபதிவுகளில் எழுத்து ஒருவித மீடியா தன்மையை கொண்டிருப்பதாலும், எழுதுபவர்கள் எழுத்தாளர்களாய் இருப்பவர்களை விட பத்திரிக்கையாளர்களாய் இருப்பதும் சங்கராச்சாரியாரின் கைது போன்றவை கவனஈர்ப்பைப் பெறுகின்றன.
உங்கள் விரிவான பதிவை வெளியிட்டமைக்கு மீண்டும் நன்றி!
s.velumani
2/4/2005 , 3:06:10 AM very good interview. pl do write regularly in atcharam.
கறுப்பி
2/4/2005 , 12:21:29 PM மிக அருமையான நேர்காணல் எஸ்.ராமகிருஷ்ணன்
புதிய கதை எழுத்து என்று பல இடைக்கால இலக்கியவாதிகள் புலம்பிக்கொண்டிருக்கின்றார்கள். இடைக்காலங்களில் யதார்த்தவாத எழுத்து என்று விட்டு வெறும் சமூகப்பாடம் சொல்லும் கதைகளாகவே வெளிவந்து கொண்டிருந்தன. அன்றைய கால எழுத்தாளர்களான பாரதி, புதுமைப்பித்தனும் ஜீ.நாகராஜனும் இப்போது இலக்கிய விமர்சகர்கள் வைக்கும் புதிய கதை எழுத்தைப் படைக்கவில்லையா. இடைக்காலங்களில் எழுத்தின் தன்மையில் ஒரு வித தேக்கம் கண்டு தற்போது அது மீண்டும் துளிர்க்கத் தொடங்கி விட்டது என்பதே என் கருத்து.
யதார்த்தவாதம் என்ற பெயரில் சுய அனுபவத்தை மட்டும் படைப்பாக்கி எழுத்தாளர்கள் தந்து கொண்டிருந்தமையால் தான் பெண்மொழி வெளியே வரவில்லை. பெண்கள் பெண்களுக்கான குடும்ப பாலியல் பிரச்சனைகளை தமது பிரச்சனைகளை எழுத்தில் கொணரும் பொழுது அவளது வாழ்க்கையோடு அதைச் சம்பந்தப்படுத்தி பெண் எழுத்தாளர்கள் கொச்சைப் படுத்தம்படும் தன்மை இருந்து கொண்டும் வந்தது. ஆனால் தற்போது அதை எதிர்நோக்கும் துணிவு, தன்மை பெண்களிடம் (மிகக்குறைந்த அளவிலேலும்) வந்து விட்டது.
sukumaran
2/9/2005 , 6:35:56 AM Dear Ramakrishnan,
Read your Interview in your blog.It was unpretentious and lively.
With regards
sukumaran
கணேசன்
2/9/2005 , 11:57:30 AM உங்களைப் போல் ஊர் சுற்றி..தெருவில் படுத்து இலக்கில்லாமல் அலைய ஆசை!
நினைத்தபடி வாழ அனைவருக்கும் கொடுப்பினை இல்லை…
வாழ்ந்த படியே (ஆசைகளை) நினைத்துக் கொள்ள வேண்டியதுதான்.
மதம் பற்றிய உங்களின் கருத்து உண்மை.
அன்புடன்,
கணேசன்.
7/23/2005 , 9:36:36 AM p
Karunharamoorthy.Po – பொ.கருணாகரமூர்த்தி, பெர்லின்.
3/21/2006 , 4:25:42 PM பௌத்தம் என்கிற சிந்தனை- வாழ்வியல் முறைமை புறந்தள்ளப்பட்டு அது ஸ்தாபனமயப்பட்டு வெறும் அரசியலாகவும் அதைத்தொடரும் வெறுப்பாகாகவும் வளர்ந்து நிற்பதற்கு இலங்கை மிகச்சிறந்த உதாரணம்.
புத்தர்கள் (என்று சொல்லப்படுபவர்கள்) சூழ்ந்த சமூகத்தில்தான் வாழ்ந்தோம், வாழ்கிறோம். ஆனாலும் பௌத்தம் பற்றி எதுவும் அறியமுடிந்ததில்லை. பௌத்த அரசுகள் புத்தர்சிலைகளை தமிழர் பகுதிகளில் நாட்டிச்செல்வதில் காட்டிய அக்கறையை பௌத்தர்களாக நடந்து காட்டுவதில் செலுத்தவில்லை.
பௌத்த சிந்தனை முறைமையை பற்றி முற்றாக அறிந்துகொள்ள தமிழில் இதுவரை ஏதொரு நூலும் கிடையாது. பத்து வருஷங்களாக ஆழ்ந்து பௌத்தத்தைப் பயிலும் நீங்கள் ஏன் பௌத்தம் பற்றிய ஒரு விரிவான நூலை எழுதக்கூடாது?
Webulagam நேர்காணல் – எஸ். ராமகிருஷ்ணன்
ஆசிரியர் பற்றி :
இவர் விருதுநகரில் வசிப்பவர். தொடர்ந்து எழுதிக்கொண்டு இருப்பவர். சன் டி.வி-யில் செய்திப் பிரிவில் வேலை செய்து வந்த இவர், எழுத்தில் கவனம் செலுத்த இயலாத காரணத்தால், வேலையை ராஜினாமா செய்தார். இதுவரை 3 சிறுகதைத் தொகுப்புகளும், இரண்டு மொழி பெயர்ப்பு நூல்களும், லத்தீன் அமெரிக்க மேதையான ஜார்ஜ் லூயிஸ் போர்ஹெஸ் பற்றிய ஒரு நூலும் `உப பாண்டவம்’ என்ற நாவலும் வெளிவந்திருக்கின்றன. இது தவிர சிறுகதைகள், கட்டுரைகள், மதிப்புரைகள் என இலக்கியத்தில் தனக்கென ஒரு ஸ்டைலையும், சுயமுகமான பார்வைகளையும் வைத்திருப்பவர். இணைய தளங்களிலும் நேரம் கிடைக்கும்போது, எழுதிவருகிறார். சமீபமாக சென்னைக்கு `மின்பிம்பங்கள்’ வேலையாக வந்திருந்தபோது அவரைச் சந்தித்து உரையாடினோம், அதன் பேட்டி வடிவமே இங்கு கொடுக்கப்படுகிறது. `கவிதைக்கும் இதுவரை இருக்கும் சிறுகதை வடிவங்களுக்கும் இடையே நான் ஒரு `கதைசொல்லல்’ முறையை – ஒரு `Fable’ போன்ற வடிவத்தைக் கட்டமைக்க முயற்சி செய்து வருகிறேன்’ என்று முன்பு ஒரு நேர் பேச்சில் குறிப்பிட்டது, இவரை எங்கள் இணையத்திற்காக சந்திக்கத் தூண்டியது எனலாம்.
கேள்வி : உங்கள் கதைகள் ஒரு காலகட்டத்திற்குப் பிறகு – வாழ்வனுபவமாக இல்லாமல் – படிப்பு அனுபவமாகப் போயிருப்பதாக உணர்கிறேன். படிப்பு அனுபவம் / படைப்பு அனுபவம் என்ற வித்தியாசத்தை பலர் வலியுறுத்துகின்றனர் – நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
ஏஸ். ரா : முதலில் படிப்பு / படைப்பு பேதத்தை நான் மறுக்கிறேன். அனுபவம் என்பது உங்களுக்கு மட்டுமே நேர்வது என்பது மட்டுமே அல்ல, உங்களுக்கு நேராத ஒன்றும் வேறு வழியாக உங்களை வந்து சேர்கிறது. குடும்ப உறவுகள், வெளி வட்டாரப் பழக்க வழக்கங்களில் நாம் எல்லாவற்றையுமே நேரடியாக அனுபவிப்பதில்லை. ஆகவே அனுபவம் என்பது உங்களுக்கு நேர்ந்த மற்றும் நேராதவைகளின் திரட்சியேயாகும். அனுபவம் என்பது அதன் திரும்ப திரும்ப நடக்கும் தன்மையிலேயே நம்மிடம் வடிவம் பெற்றுக் கொள்கிறது, பல லட்சம் முறை ஒரே நேரத்தில் நிகழ்வுகள் நடக்கும்போது அது யாருக்கு நடக்கிறதோ அதை வைத்து தன்னை அது வடிவமைத்துக் கொள்கிறது.
சாலையில் ஒரு புறம் சைக்கிள் வருகிறது – மறுபுறம் பைக் ஒன்று வருகிறது. இது ஒரு மூன்றாம் மனிதனுக்கு அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சியாகும். ஆனால் அங்கு ஒரு விபத்து ஏற்படும்போது மூன்றாவது மனிதனுக்கு அதில் ஒரு அதிர்ச்சி அல்லது வேறு ஏதோ ஒரு உணர்வு ஏற்படுகிறது. இங்கு தான் அனுபவம் சாத்தியமாகிறது. ஆனால் பைக் ஓட்டுபவனுக்கோ – சைக்கிளில் வந்தவனுக்கோ அது வேறு மாதிரியான பாடங்கள் கற்றுக் கொடுக்கிறது, உதாரணமாக பைக் ஒட்டுபவர் இனிமேல் இன்டிகேட்டரை ஒழுங்காக உபயோகிப்பான், சைக்கிள்காரன் ஒரு பெல் வாங்கி வைப்பான். நுஒயீநசநைnஉந ளை டநயசniபே. அனுபவம் க்ஷல யீசடினரஉவள – களை உற்பத்தி செய்து கொண்டே இருக்கிறது. ஆகவே `அனுபவம்’ சந்தர்ப்ப செயலாகவோ, அல்லது திட்டமிட்டதாகவோ இருப்பதன் உணர்வு நிலையின் திரட்சி.
இன்னொரு உதாரணம் சொல்லணும்னா – நீங்க வீட்டுக்கு போவதற்கும், செங்கல்பட்டு ரயில்வேலைனில் மாடு மேய்வதற்கும் எந்த தொடர்பும் இல்லை – உங்கள் அனுபவத்தில், ஆனால் அந்த மாடு அடிபட்டு, அதனால் ரயில்நின்று, கேட் திறக்காமல் போனால், நீங்கள் வீட்டுக்குப் போக ஏற்படும் தாமதம், உங்கள் உணர்வு நிலையை பாதிக்கக்கூடியது. அப்போது இந்த நிகழ்ச்சி ஒரு அனுபவமாகிறது. நிகழ்ச்சிகள் அதனதன் ஒழுங்கில் நடந்து கொண்டிருக்கின்றன. அதற்கென்று ஒரு `ஒழுங்கமைவு’ இருக்கிறது. இந்த ஒழுங்கு `Disturb’ ‘ ஆகும்போது உங்க அனுபவமும் மாத்தி அமைக்கப்படுகிறது.
கால் முளைத்த கதைகள் – எஸ். ராமகிஷ்ணன் – உயிர்மை பதிப்பகம்
ஆந்தைக்குத் தூக்கம் என்றால் ரொம்பவும் பிடிக்கும். அது பகல் முழுவதும் தூங்கிக் கொண்டேயிருக்கும். ஒரு நாள் ஒரு ஆந்தை மரத்தில் தூங்கிக் கொண்டிருந்தது. மரங்கொத்தி ஒன்று அந்த மரத்தை கொத்தத் துவங்கியது. தூக்கம் கலைந்து ஆந்தை கோபத்துடன் ஏன் மரத்தைக் கொத்துகிறாய் என்று கேட்டது. மரங்கொத்தி என் பசிக்கு மரத்தைச் சாப்பிடுகிறேன். நீ ஏன் எப்போதும் தூங்கிக்கொண்டே இருக்கிறாய் என்று கேட்டது. பதில் சொல்வதற்குள் ஆந்தை கொட்டாவி விட்டுக் கொண்டே மறுபடியும் தூங்கியது. மறுநாள் அந்த மரத்தில் ஒரு தூக்கனாங்குருவி கூடு கட்டியது. அதன் சப்தம் கேட்டு விழித்த ஆந்தை எதற்காகக் கூடு கட்டுகிறாய் என்று கேட்டது.
குருவியும் குளிர்காலத்தில் பாதுகாப்பாக இருக்க வேண்டாமா என்றது. ஆந்தை என்னை குளிர் எதுவும் செய்யாது நான் கூடு கட்டத் தேவையில்லை என்று சொல்லிவிட்டு தூங்கிவிட்டது. குளிர்காலம் வந்தது. நட்சத்திரங்கள் கூட நடுங்கத் துவங்கின. மரங்களில் இருந்த கூடுகளில் பறவைகள் அடைந்து கொண்டு விட்டன. ஆந்தை குளிரில் நடுங்கியது. கூடு கட்டுவது எப்படி என்றே தெரியாமல் போய்விட்டோமே என்று கலங்கியது. குளிர் நாளுக்கு நாள் அதிகமாகி ஆந்தையை வாட்டி எடுத்து எப்படியாவது ஒரு கூடு கட்டிக்கொள்ள வேண்டும் என்று ஆந்தை முடிவு செய்தது. குளிர்காலம் முடிந்து கோடைக்காலம் வந்தது.
ஆந்தை ஒரேயரு நாள் கூடு கட்டுவதற்கு சுள்ளிகளைப் பொறுக்கி வந்து மரத்தில் அடுக்கியது. அதற்குள் சோம்பேறித்தனம் அதிகமாகிவிட திரும்பவும் தூங்கத் துவங்கிவிட்டது. அன்றிலிருந்து இன்று வரை ஆந்தையால் கூட்டைக் கட்ட முடியவில்லை. இது தென் ஆப்பிரிக்காவின் ஒரு பழங்குடியினத்தவரின் கதை.
இதுபோல நெல் எப்படி உருவானது?
நாய் ஏன் வாலை ஆட்டுகிறது?
பெண்களுக்கு ஏன் தாடி வளர்வதில்லை?
என்கிற ஒரு நைஜீரியா கதை உள்ளிட்ட 80 கதைகளை ஒரு தொகுப்பாக வெளியிட்டுள்ளார் எஸ். ராமகிருஷ்ணன்,
உலகமெங்கும் உள்ள முப்பது பழங்குடியினத்தவர்கள் சொன்ன கதைகளிலிருந்து தேர்வு செய்து இந்த தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. சிறுவர்களுக்காக எழுதப்பட்ட நூலாக சொல்லப்பட்டாலும் அனைவரும் படிக்கும்படி மிகவும் சுவாரசியமாக இருக்கிறது இந்த நூல்.ஆக, குழந்தைகளுடைய மகிழ்ச்சிக்காகத் தன் பங்களிப்பை செய்திருக்கின்ற எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்கும் நாமெல்லாம் நன்றி சொல்லலாமே.
SRaa on Virginia Woolf: How to read the books: புத்தகம் படிப்பது எப்படி?
புதிய புத்தகம் பேசுது – அக்டோபர்10
புத்தகம் படிப்பது என்பது எளிமையானதில்லை. அது ஒரு நுட்பமான கலை. என்ன படிப்பது. எப்படி படிப்பது. ஏன் சில புத்தகங்கள் உடனே புரிந்துவிடுகின்றன. சில புரிவதேயில்லை. ஒரே புத்தகம் எப்படி வெவ்வேறு வாசகர்களால் வேறு விதமாகப் படிக்கப்படுகிறது. சில புத்தகங்கள் ஏன் பல நூறு வருசமாக யாவருக்கும் பிடித்திருக்கிறது. படிப்பதனால் என்ன பயனிருக்கிறது. இப்படி புத்தகங்கள் தொடர்பாக நூறு கேள்விகளுக்கும் மேலாகயிருக்கின்றன.
இந்தக் கேள்விகளை வேறு வேறு வடிவங்களில் உலகின் எல்லா இடங்களிலும் யாரோ யாரிடமோ கேட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள். இதற்கான பதில்களை ஒவ்வொரு எழுத்தாளனும் அவனளவில் தெளிவுபடுத்திக் கொண்டேயிருக்கிறான். ஆனால் கேள்வி அப்படியே இருக்கிறது.
நான் படிக்கத் துவங்கிய வயதில் இதே கேள்விகளுடன் இருந்தேன். இன்று வாசிக்கத் துவங்கும் ஒரு இளம்வாசகன் அதே கேள்விகளுடன் என்னிடம் வருகிறான்.
இந்தக் கேள்விகளுக்கான பதிலாக நான் வாசிக்க சிபாரிசு செய்வது ஒரு கட்டுரையை . அதன் தலைப்பு. How Should One Read a Book?.
1926 வது வருடம் இந்த கட்டுரையை வர்ஜினியா வுல்ப் (Virginia Woolf) எழுதியிருக் கிறார். 83 வருசங்களுக்குப் பிறகும் இக்கட்டுரை தரும் விளக்கம் நெருக்கமாகவே உள்ளது. வர்ஜீனியாவின் கட்டுரை இந்தப் பதில்களை ஒரு அறிவுரையாக எடுத்துக் கொள்ளவேண்டாம் என்ற எச்சரிக்கையோடு துவங்குகிறது. காரணம் புத்தகம் வாசிப்பதற்கு எவரது அறிவுரையும் வழிகாட்டலும் பயனற்றதே. அது நீச்சல் அடிப்பது எப்படி என்று சொற்பொழிவு ஆற்றுவது போன்றது,
எது நல்ல புத்தகம் என்று நமது வாசிப்பு அனுபவத்தை வேண்டுமானால் பரிந்துரை செய்யலாம். மற்றபடி இப்படிப் படி, இப்படிப் படித்தால் மட்டுமே புரியும் என்ற அறிவுரைகள் பெரும்பாலும் பொருந்தக் கூடியதில்லை.
ஆகவே வர்ஜீனியா வுல்ப்பின் கட்டுரை எப்படி ஒரு புத்தகத்தை வாசிப்பது என்பதைப் பற்றிய தன்னிலை விளக்கம் போலவே உள்ளது. மூன்றே பக்கம் உள்ள சிறிய கட்டுரை. ஆனால் பலமுறை வாசித்து விவாதிக்க வேண்டியது. வர்ஜீனியாவின் முதல் பரிந்துரை. எந்தப் புத்தகத்தையும் படிப்பதற்கு முன்பும் அதைப் பற்றிய முன்முடிவுகள் வேண்டாம், திறந்த மனதோடு இருங்கள். எழுத்தாளரை உங்களது எதிரியைப் போல பாவிக்காதீர்கள். எழுத்தின் மீதான உங்கள் தீர்ப்பைச் சொல்வதற்காக படிக்க முயற்சிக்க வேண்டாம். அது உங்களை நீங்களே நீதிபதி ஸ்தானத்தில் உட்கார வைத்துக் கொண்டு புத்தகத்தையும் எழுத்தாளனையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவது போன்றது. அதில் நஷ்டமடையப் போவது நீங்களே.
ஒரு புத்தகம் அதிகம் விற்பனையாவதாலோ.அல்லது பிரபலமாக இருப்பதாலோ நல்லபுத்தகமாக இருக்கப்போவதில்லை. மாறாக அது நல்ல புத்தகமா இல்லையா என்பதைத் தீர்மானிக்கப் போவது நீங்களும் உங்களது திறந்த மனதுமே.அந்த மனது உள்ளுணர்வு சார்ந்தே பெரிதும் செயல்படக்கூடியது. ஆகவே உங்கள் உள்ளுணர்வு ஒன்றைப் படிக்கத் தேர்வு செய்கிறது என்றால் அதை அனுமதியுங்கள். படிப்பதற்கான மனநிலையும், நேரமும், விருப்பமும், பகிர்ந்து கொள்ள நட்புமே புத்தக வாசிப்பில் முக்கியமானவை.
இரண்டாவது பரிந்துரை. எழுத்தையும் எழுத்தாளர்களையும் விமர்சனம் செய்வது எளிமையானது. ஆனால் புரிந்து கொள்வது எளிதானதில்லை. அதற்கு வாசகன் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். எந்த ஒரு படைப்பையும் வாசிப்பதற்கு மூன்று விசயங்கள் முக்கியமானவை. ஒன்று அகப்பார்வை. அதாவது நாம் எதை வாசிக்கிறோமோ அதை நம் மனதால் உணர்ந்து கொள்வது. (Perception) ,
இரண்டாவது கற்பனை. (imagination) படைப்பின் ஊடாக வெளிப்படும் மனிதர்கள், நிலக்காட்சிகள், நிகழ்வுகள், நினைவுகளைக் கற்பனை செய்து புரிந்து கொள்ளும் இயல்பு.இதன் மூலமே கதையோ கவிதையோ நாம் அர்த்தப்படுத்திக் கொள்கிறோம்
மூன்றாவது கற்றல் (Learning) எழுத்தின் வழியாக நாம் கற்றுக் கொள்ள முன்வருவது. இது தகவலாகவோ, அறிவுத்தொகுப்பாகவோ, உண்மையாகவோ. வாழ்வியல் அனுபவமாகவோ எவ்விதமாகவும் இருக்கலாம். அதை நாம் கற்றுக் கொள்கிறோம் என்ற ஈடுபாடும், தீவிர அக்கறையுமே புத்தகத்தை ஆழ்ந்து வாசிக்க உதவும்.
ஒரு புத்தகம் புரியவில்லை என்றால் கொஞ்ச காலம் கழித்து மறுபடி படித்துப்பாருங்கள். அப்படியும் புரியவில்லை என்றால் இன்னும் கொஞ்ச நாள் காத்திருங்கள். அதற்காக புத்தகம் தவறானது என்ற முடிவிற்கு அவசரமாக வரவேண்டாம். காரணம் எளிய வரிகள் கூட இன்றும் புரிந்து கொள்ளப்படாமலே இருக்கின்றன. ஆத்திசூடியில் வரும் ஙப்போல்வளை என்பதற்கு என்ன பொருள் என்று கேளுங்கள். எண்பது சதவீதம் பேர் விழிப்பார்கள். ஆகவே எளிய விசயங்களில் கூட புரியாமை இருக்கவே செய்கிறது. கண்ணால் மரத்தைப் பார்த்துவிட முடியும். அதன் வேர்களைக் கண்ணால் பார்த்துத் தெரிந்து கொண்டுவிட முடியாது. அப்படித்தான் புத்தகங் களும். புத்தகங்களுடனான நமது உறவு எப்போதுமே உணர்வு பூர்வமானது. ஆகவே புத்தக வாசிப்பில் உணரச்சிவெளிப்பாட்டிற்கு முக்கிய இடமிருக்கிறது. ஒரு புத்தகம் எப்படி உணர்ச்சி களை வெளிப்படுத்துகிறது. எந்த கணங்களில் அது வாசகனை ஒன்றிணைக்கிறது. எந்த நிலைகளில் வாசகனை மீறிச்செல்கிறது என்று வாசகன் எப்போதுமே உன்னிப்பாக அவதானிக்கிறான்
அத்தோடு வாசிப்பின் வழியாக ஒரு இன்பம் துய்த்தலை வாசகன் நிகழ்த்துகிறான். இது புத்தகம் வாசிப்பதற்கான முக்கியக் காரணிகளில் ஒன்று. ஜனரஞ்சகமான நாவல்களின் வெற்றிக்கு முக்கியக் காரணம் அது தரும் உடனடி வாசிப்பு இன்பமே. அதே போல செவ்வியல் படைப்புகள் பலமுறை திரும்பத் திரும்ப வாசிக்கப்படுவதற்கும் அதன் தனித்துவமான வாசிப்பு இன்பமே முக்கியக் காரணமாகயிருக்கிறது.
வாசிப்பின் வெற்றியை முடிவு செய்வதில் வாசிப்பு இன்பத்திற்கு எப்போதுமே பெரிய பங்கிருக்கிறது. ஆகவே சுவாரஸ்யமாக இருப்பது இலக்கியத்தரமில்லாதது என்று முடிவு செய்துவிட முடியாது. அதே நேரம் வெறும் சுவாரஸ்யம் ஒரு போதும் இலக்கியமாகிவிடாது.
புரிந்து கொள்ள முடியவில்லை என்பதே புத்தக வாசிப்பின் பெரிய சவால். ஒரு புத்தகம் புரிந்து கொள்ளப்படாமல் போவதற்கு புத்தகம் மட்டுமே காரணமாக இருந்துவிடாது. வாசிப்பவனுக்கும் சமபங்கிருக்கிறது. அர்த்தம் புரியாமல் போவது வேறு. எதற்காக எழுதப்பட்டிருக்கிறது என்று புரிந்து கொள்ளாமல் போவது வேறு.
ஒன்று அதன் மொழி மற்றும் வாக்கிய அமைப்புகள் காரணமாக அது புரியாமல் போயிருக்கக் கூடும். எந்தப் பொருள் பற்றிப் பேசுகிறதோ அது நமக்கு பரிச்சயமற்றிருக்கக்கூடும். அல்லது அது ஆழ்ந்து புரிந்து கொள்ள வேண்டிய பயற்சி தேவைபட்டதாக இருக்கக்கூடும். அல்லது அந்தக் கதையோ. கவிதையோ எதைப்பற்றிப் பேசுகிறதோ அது நேரிடையாக இல்லாமல் மறைமுகமாக. அரூபமான தளங்களில் வெளிப்படுத்தப்பட்டிருக்கக் கூடும். ஒரு படைப்பைப் புரிந்துகொள்ள அது குறித்து ஆதாரமான அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். இசையைப் போல படைப்பை நாம் கற்பனை செய்து கொள்வதன் வழியே ஆழமான தளங்களை நோக்கி வாசிப்பை நகர்த்திக் கொண்டுபோக முடியும்.
சில புத்தகங்களை வாசிப்பதற்கு வயதும் அனுபவமும் போதாமல் இருக்கக் கூடும். அந்தப் புத்தகம் இன்னொரு வயதில் இன்னொரு மனநிலையில் புரிவதோடு நெருக்கமாகவும் மாறிவிடும். சமூக கலாச்சார, சரித்திர, விஞ்ஞான அறிவும், சங்கேதங்கள், குறியீடுகள், கவித்துவ எழுச்சிகளைப் புரிந்து கொள்ளும் நுட்பமும் வாசகனுக்கு அவசியமானவை. அவை ஒரு நாளில் உருவாகிவிடு வதில்லை. தொடர்ந்த வாசிப்பும், புரிதலுமே அதை சாத்தியமாக்கு கின்றன.
வர்ஜீனியாவும் அதையே சொல்கிறார். புத்தகங்களை நாம் எப்போதுமே இன்னொரு புத்தகத்தோடு ஒப்பிடுகிறோம். இந்த ஒப்பீட்டினை விமர்சனம் என்று நினைக்கிறோம் . ஒப்பிடுவது தவறில்லை. ஆனால் எதை எதோடு ஒப்பிடுகிறோம். அப்படி ஒப்பிட என்ன காரணம் என்று யோசிப்பதேயில்லை. ஒவ்வொரு புத்தகமும் ஒரு மனப்போக்கின் வெளிப்பாடு. அதன் தனித்தன்மையை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். பிறகு அதை ஒப்பீடு செய்து பார்க்கலாம். மோசமான புத்தகங்களைக் கழித்துக்கட்ட ஒப்பீடு அவசியம் தான். ஆனாலும் அப்போதும் கூட அந்த புத்தகத்தைப் பற்றிய தீர்ப்பு போன்று முடிவுகளை வெளிப்படுத்துவதை விட அதை எப்படிப் புரிந்து கொண்டேன், அதில் என்ன அம்சங்கள் மிகையாகவோ, வலிந்து உருவாக்கப்பட்டதாகவோ, செயற்கையாகவோ, பொருத்தமில்லாமலோ இருக்கிறது. அது எழுத்தாளனின் நோக்கமா. அல்லது வாசகன் அப்படிப் புரிந்து கொள்ள சுதந்திரமிருக்கிறதா என்று விவாதத்திற்கான புள்ளியாகவே வளர்த்து எடுக்க வேண்டும்.
நாவலை வாசிப்பது என்பது ஒரு பெரிய அடுக்குமாடிக் கட்டடம் ஒன்றை தூரத்தில் இருந்து பார்த்து அது ஒரு கட்டடம் என்று சொல்லிக் கடந்து போவதைப் போல எளிதானதில்லை. கண்ணில் பார்ப்பதைப் போல இலக்கியத்தில் யாவும் உடனே புரிந்துவிடாது. வார்த்தைகளைக் கொண்டு உருவாக்கிய உலகமது. ஆகவே அதைப் புரிந்து கொள்ள நீங்கள் எழுத்தாளரின் சகஜீவி போல உடன் வேலைசெய்யும் ஒருவரைப் போல இணக்கமான மனநிலையோடு அணுகுங்கள்.
ஒரு நண்பனைப் போல அவனோடு சேர்ந்து பயிலுங்கள். சேர்ந்து உரையாடுங்கள். எழுத்து ஒரு திறந்த உரையாடல். எல்லா எழுத்தாளர்களும் இயல்பில் வாசகர்களே. ஆகவே அவர்களும் நம்மைப் போலவே ஏதோ சில புத்தகங்களின் தீவிர வாசகர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.
எழுத்தாளர் பிரபலமானவர். புகழ் அடைந்தவர் என்பதற்காக எந்தப் புத்தகத்தையும் நல்லது என்று முடிவு செய்யாதீர்கள். நல்ல எழுத்தாளர்கள் மோசமான புத்தகங்களை எழுதியிருக்கிறார்கள். மோசமான எழுத்தாளர்கள் சமயங்களில் நல்ல புத்தகங்களை எழுதிவிடுகிறார்கள். ஆகவே புத்தகம் அதற்கான விதியைக் கொண்டிருக்கிறது. ஆகவே எழுத்தாளனின் பெயர் புகழால் மட்டுமே வாசகனின் விருப்பத்திற்கு உரியதாக புத்தகங்கள் அமைந்துவிடுவதில்லை.
ஷேக்ஸ்பியர், டிக்கன்ஸ்,விக்டர் க்யூகோ, பால்சாக், மாபசான், டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி உள்ளிட்ட உலகில் உள்ள பெரும்பான்மை வெற்றி பெற்ற எழுத்தாளர்கள் தங்கள் புத்தகங்களில் சில மிகக் குறைவான வாசகர்களையே பெற்றிருக்கிறது என்று அறிந்தேயிருந்தார்கள். லட்சம் பேர் படிப்பதால் எந்த ஒரு புத்தகமும் உயர்ந்த இலக்கியம் ஆகிவிடாது. நூறு பேர் மட்டுமே படிப்பதால் அது தரம்குறைந்தது என்று எண்ணிவிட முடியாது. புத்தகங்களை வாசிப்பவர்களின் எண்ணிக்கை நிலையானதில்லை. அது மாறிக் கொண்டேயிருக்கக் கூடியது.
ஒவ்வொரு புத்தகத்தையும் வாசகன் தனது ஒரு குறிப்பிட்ட மனநிலையில் இருந்தே படிக்கிறான். அதுவே புத்தகத்தைத் தேர்வு செய்கிறது. அதனால் தான் ஒரே நேரத்தில் வாசகனால் பல்வேறுவிதமான எழுத்தாளர்களின் புத்தகங்களைப் படிக்கவும் ரசிக்கவும் முடிகிறது. ஒரு புத்தகம் முழுவதும் பிடிக்காமல் போவது என்பது வேறு . புத்தகத்தின் சில பகுதிகள் பிடித்திருக்கிறது என்பது வேறு. பலநேரங்களில் முழுமையாக ஒரு புத்தகம் நமக்கு பிடித்திருக்காது. ஆனால் அதில் உள்ள சில நல்ல வரிகள் பத்திகளுக்காக அதை வாசித்துக் கொண்டேயிருப்போம்.
கதை கவிதை நாவல் சிறுகதை, கட்டுரை வாழ்க்கை வரலாறு, விமர்சனம் என இலக்கியத்தினை எத்தனையோ விதமாக வகைப்படுத்தி வைத்திருக்கிறோம். வாசகன் ஒவ்வொன்றையும் வாசிக்க ஒருவிதமான பயிற்சியும் நுட்பமும் வைத்திருக்கிறான். அதற்கென அவன் எந்த விசேசப் பயிற்சியும் எடுத்துக் கொண்டதில்லை
கவிதையில் அரூபமாக உள்ள ஒன்றை எளிதாகப் புரிந்து கொள்ளும் வாசகன் நாவலில் அரூபமான, மாயமான சம்பவங்களை ஒத்துக் கொள்ள மறுக்கிறான். தர்க்கம் செய்கிறான். அதுதான் வாசகனின் இயல்பு. ஆனால் வாழ்க்கை வரலாற்றை வாசிக்கையில் அது நாவல் போல உணர்வதும், நாவலை வாசிக்கையில் அது உண்மையான மனிதர்களின் வாழ்வு போல நம்பப்படுவதுமே இலக்கிய வாசிப்பின் நுட்பம்.
இன்று வாசகன் ஒரு ரசிகன் என்பதைத் தாண்டி எழுத்தாளனுக்கு இணையாக வைத்து பேசப்படுகிறான். தான் எப்படி ஒன்றைப் புரிந்து கொண்டேன் என்பதை முன்வைப்பதே வாசிப்பின் முதன்மைச் செயல்பாடாக உள்ளது.
புத்தகத்தைப் பற்றிய ஆசிரியரின் முடிவுகள் இன்று வாசகனைக் கட்டுப்படுத்துவதில்லை. சமூகம் , உளவியல், மொழியியல், தத்துவக்கோட்பாடுகள், தர்க்கம் மற்றும் விமர்சனப் பார்வைகளின் வழியே ஒரு படைப்பை ஆழ்ந்து அணுகி அதன் சமூக கலாச்சார அரசியல் தளங்களை, புரிதல்களைக் கண்டு அடைவதும் விமர்சிப்பதும் வாசகனின் முன்உள்ள சவாலாக உள்ளன.
ஆகவே வாசகன் ஒரு புத்தகத்தின் வழியே எழுத்தாளனின் மன அமைப்பை , அவனது பலம் பலவீனங்களை ஆராய்கிறான். அதற்கான உளவியல் காரணங்களைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறான். மொழியை எழுத்தாளன் பயன்படுத்தும் முறையும் அதன் அர்த்த தளங்களையும் கவனமாகப் பரிசீலனை செய்கிறான். விஞ்ஞானப் பரிசோதனைக் கூடங்களில் மேற்கொள்ளப்படும் ஆய்வு போலத் துல்லியமான தர்க்க ரீதியான ஆய்வுப்பொருளாக புத்தகங்களை வாசிக்கும் தீவிர வாசிப்பு நிலை இன்று சாத்தியமாகியிருக்கிறது.
அதற்காக ரசனை சார்ந்த வாசிப்பு கைவிடப் படவில்லை. பெருவாரியான வாசகர்கள் இன்றும் தங்களது புத்தக வாசித்தலுக்கான அடிப்படையாக ரசனையைக் கொண்டிருக்கிறார்கள். அந்த ரசனையின் தரமும், நுட்பமும் முன்பை விட இன்று வளர்ந்திருக்கிறது. எழுத்தாளரை ஒரு ரட்சகனைப் போல காண்பதைத் தாண்டி, எழுத்தாளன் மனசாட்சியைப் போல செயல்படுகிறான் என்றே வாசகர்கள் உணர்கிறார்கள்.
புத்தகத்தைப் புரிந்து கொள்ள வாசிப்பின் வழியாக நாம் பெற்ற அனுபவத்தை எழுதிப்பார்ப்பதே சிறந்தது என்கிறார் வர்ஜீனியா. காரணம் அப்போதுதான் சொற்கள் எவ்வளவு வலிமையானவை. எந்தச் சொல்லை எப்படிப் பயன்படுத்துகிறோம், அதில் எவ்வளவு சிரமம் சவால் உள்ளது என்ற எழுத்தின் நுட்பம் பிடிபடும் என்கிறார். ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத பொருட்கள் நிகழ்வுகள் எப்படி வாக்கியங்களின் வழியே ஒன்றிணைக்கப்படுகின்றன என்று நுணுகி வியந்து புரிந்து கொள்ள முயற்சிப்பவனே புத்தகத்தினைக் கொண்டாடுகிறான்
வாசகன் என்பதே ஒரு கற்பனை தான். ஒரு வாசகன் என்பவன் எப்படியிருப்பான் என்று இதுவரை தீர்மானமாக ஒரு சித்திரத்தை முடிவு செய்யவே முடியாது. ஆகவே உலகின் வியப்பூட்டும் கற்பனைக் கதாபாத்திரம் தான் வாசகன். அந்த முகமூடியை யாரும் அணிந்து கொண்டுவிட முடியும். அது யாவருக்கும் பொருந்தக்கூடியது என்கிறார் ஜோர்ஜ் லூயி போர்ஹே,
ஏய் வாசகா உனக்குத் தான் எத்தனை எழுத்தாளர்கள் என்று நகுலனின் ஒரு கவிதை வரிசொல்கிறது. அது தான் உண்மை.
வர்ஜீனியாவுல்பின் கட்டுரையைப் போல நானும் இதே கேள்விக்கான சில பதில்களை வைத்திருக்கிறேன். என்வரையில் ஒவ்வொரு புத்தகமும் மானுட வாழ்வின் ஏதோ சில புதிர்களை அவிழ்க்க முயற்சிக்கிறது. மனித இருப்பு குறித்த சில கவலைகள், ஆதங்கங்கள், வருத்தங்கள், சந்தோஷங்களை ஆவணப்படுத்துகிறது.
இயற்கை, பிறப்பு, இறப்பு, பசி, காமம், மூப்பு , நோய்மை, அதிகாரம், வெற்றி தோல்வி, விதிவசம் என்று எல்லா நூற்றாண்டிலும் மனிதன் சந்தித்த ஆதாரமான கேள்விகளுக்கான விடை தேட முயற்சிக்கிறது. மனித வாழ்வின் மீது நிஜமான அக்கறை கொள்கிறது. அதை மேம்படுத்தவும், சகமனிதனைப் புரிந்து கொள்ளவும் உதவி செய்கிறது.
அன்றாட வாழ்க்கை சார்ந்து உருவாகும் வலிகள், தோல்வியுணர்வு, வெறுப்பு, ஏமாற்றம், வெறுமை, இயலாமை, நிர்கதி யாவும் கடந்து மனிதனை வாழ்வின் மீது பற்றுக் கொள்ள வைக்கிறது. மானுட நினைவுகள் காற்றில் கரைந்து போய்விடாமல் காப்பாற்றி வைக்கிறது. ஆகவே புத்தகங்கள் வாழ்வின் சின்னஞ் சிறிய ஆவணங்கள். அதன்வழியே மனிதர்கள் கடந்தகாலத்தை அறிந்து கொள்ள முடியும். நிகழ்காலத்தை சந்திக்கத் துணை கொள்ளலாம். எதிர்காலத்தை திட்டமிட முடியும். நல்ல புத்தகங்கள் இதன் சாயல்களைக் கட்டாயம் கொண்டிருக்கின்றன.
34 comments:
//தனிப்பட்ட காரணங்கள் எதுவுமில்லை. எழுத ஆரம்பித்த காலத்தில் பிரசவமான படைப்பு எப்படி இன்றும் உயிர்த்துடிப்புடன் இருக்கிறது என்பதை பார்க்கவும், சின்ன ஊற்று எப்படி வற்றாத ஆறாக விரிந்தது என்பதை ஆராயவும்.
//
//இப்படி யோசிக்க யோசிக்க விதை, விருட்சமாக வளர்ந்துக் கொண்டே செல்வதை காணலாம். //
எஸ்.ரா. Yes.Rocks.
எஸ்.ராவைப் பற்றி அறியாமலேயே ‘காட்டின் உருவம்’ என்கிற சிறுகதைத் தொகுதியை பல ஆண்டுகளுக்கு முன் வாங்கி வாசித்த நினைவு வருகிறது. நீங்கள் குறிப்பிட்ட மாதிரி எஸ்.ரா. சிறுகதையின் வடிவத்தில் பல்வேறு சோதனைகளை முயன்று பார்த்துக் கொண்டே வந்திருப்பதை தொடர்ந்து வாசித்தால் அவதானித்துக் கொள்ள முடியும்.
ஆனால் ஒரு குறிப்பிட்ட எழுத்தாளரின் பெரும்பான்மையான சிறுகதைகளை ஒரே நேரத்தில் படிப்பது ஒரு சலிப்பான வாசிப்பனுபவத்தைத்தான் தரும் என்பதை என் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். சுவாரசியமாக எழுதும் சுஜாதாவிற்கும் இதே நிலைதான். மற்றவருக்கு இது மாறுபடலாம்.
எழுதப்பட்டதை விட எழுதப்படாத விஷயங்களை உள்நுழைத்து வாசகனின் கற்பனைக்காக விட்டு வைப்பது ஒரு எழுத்தாளனின் முக்கிய அம்சம். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இரு சிறுகதைகளும் அந்த நோக்கில் வெற்றி பெற்றிருக்கின்றன என்பது உங்கள் விவரிப்பில் தெரிகிறது. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
இதை ஒவ்வொரு எழுத்தாளரையும் அடிப்படையாக வைத்து ஒரு தொடராகவே எழுதலாம் என்கிற வேண்டுகோளை முன்வைக்கிறேன். அடுத்த பதிவு ஆதவனாக இருக்கலாம் என்கிற நேயர் விருப்பத்தையும். 🙂
//நண்பர் சுரேஷ் கண்ணன் விரிவாக எழுதுவார்//
அதைப் பற்றியும் நீங்களே எழுதிவிடலாம். உங்கள் அளவிற்கு நேர்த்தியாக என்னால் எழுத முடியுமா என்று தெரியவில்லை.
2009 ‘தினகரன் தீபாவளி மலரில்’ வெளியான இவரது ‘புர்ரா…’ சிறுகதை விரிக்கும் உலகு, வேலைக்கு செல்லும் கணவன் – மனைவியின் உலகை, அவர்களது குழந்தையின் அவஸ்தையை வெகு நுட்பமாக ஆராய்வது.
இடுகையில் குறிப்பிட்டுள்ள ‘பணம்’ அல்லது ‘கடன்’ என்னும் கருத்தைக் கொண்டு புதுமைப்பித்தனில் ஆரம்பித்து பலரும் சிறுகதைகள் எழுதியிருக்கிறார்கள். அவைகள் இதுபோல் நாவலாக – புதினமாக விரிகிறதா என்பதை வாசித்தவர்களின் கவனத்துக்கே விட்டுவிடுகிறேன்.
எத்தனை சிறுகதைகள் அல்லது புனைவுகள் இதுபோல் தன்னுள் நாவலை மறைத்து வைத்திருக்கின்றன என்றுப் பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும்.
தோழமையுடன்
பைத்தியக்காரன்
உதிரிப்பூக்கள் திரைப்படத்தில் விஜயனும் சரத்பாபுவும் சண்டையிட்டுக் கொள்கிற காட்சி நினைவுக்கு வருகிறது. இந்த அளவிற்கு நுட்பமான காட்சிகள் தமிழ் சினிமாவில் சொற்பமே. உங்கள் பதிவின் சாரத்தைப் போன்று, பார்வையாளன்தான் அவர்களுக்குள் நிகழ்நத மோதலை யூகிக்க வேண்டும்.
படைப்பு பாதி என்றால் நீங்கள் தங்கள் பரந்த கற்பனையின் மூலம் மீதியை நிரப்பி கொள்கிரீர்கள். இது போன்ற வாசகன் கிடைக்க எழுத்தாளர்கள் குடுத்து வைத்திருக்க வேண்டும். ஆனால் ஒன்று என்னை போன்ற சாதாரண வாசகன் தங்கள் அளவு கற்பனை குதிரையை ஓட்ட முடியாது. :))
நிற்க. நானும் எஸ். ரா வை ரசிப்பவனே. பகிர்வுக்கு நன்றி
அன்பின் சுரேஷ், விரிவான பின்னூட்டத்துக்கு நன்றி. ஆதவன்? நல்ல யோசனை. செய்யலாம். எஸ்ராவுடன் உரையாடியதை குறித்து நீங்கள் எழுதுவதே சரி. வாசிக்க காத்திருக்கிறேன்.
அன்பின் இராஜ ப்ரியன், வருகைக்கும், பின்னூட்டத்துக்கும் நன்றி.
அன்பின் மோகன் குமார், தன்னடக்கம் காரணமாக உங்களை நீங்கள் சாதாரண வாசகர் என்று சொல்லிக் கொண்டாலும், அப்படியில்லை என்று நன்றாகவே தெரியும். வாசகரில் சாதாரணமானவர் / அசாதாரணமானவர் என யாராவது இருக்கிறார்களா என்ன?
தோழமையுடன்
பைத்தியக்காரன்
பிளீஸ் ஹெல் மீ…
கதை எங்கிருந்து ஆரம்பிக்குது எந்த ஊரு என்பதையும் வாசகரே கற்பனை செஞ்சுக்கனும் ரைட்டு,
அவர்களுக்குள் நட்பு எப்படி உருவாச்சு என்பதையும் வாசகரே கற்பனை செஞ்சுக்கனும் ரைட்டு…
முடிவையும் வாசகரே இப்படி அல்லது அப்படின்னு விதவிதமா கற்பனை செஞ்சுக்கனும்… ரைட்டு.
இப்படி வாசகரை கற்பனை செஞ்சுக்க விடுவதுதான் புனைவு என்பது வரை புரியுது…
நடுவில் தம்மாதுண்டு கதை சொல்வதுக்கு பதில் தலைப்பை மட்டும் கொடுத்துவிட்டால் வாசகரே கதையையும் கற்பனை செஞ்சுக்கவிட்டா அது பெரும் புனைவா?
பிளீஸ் ஆன்சர் மை கொஸ்டினு? (15 பைசா அக்னாலெஜ்மெண்ட் கார்ட்டும் வெச்சு கேள்வி கேட்டு இருக்கேன்)
//அந்தச் சாவியைக் கொண்டு கதவை திறக்க வேண்டியது மட்டுமே வாசகனின்/வாசகியின் வேலை. அப்படி அவன்/ள் திறக்கும்பட்சத்தில் விரிவது 7 கடல்கள், 7 மலைகள் தாண்டி மறைந்திருக்கும் வாழ்க்கையின் ரகசியம்.//
அன்பின் குசும்பன், நீங்கள் அனுப்பிய 15 பைசா அக்னாலெஜ்மெண்ட் கார்ட்டு இன்னும் வந்து சேரவில்லை. சேர்ந்ததும் பதில் அனுப்புகிறேன் 🙂
அன்பின் தாமோதர் சந்துரு, வருகைக்கும், நண்பர் அமரபாரதிக்கு பதில் சொன்னததற்கும் நன்றி.
அன்பின் மகேந்திரன்.பெ, பிரியத்துகுரிய குசும்பனுக்கு பதில் சொல்லிவிட்டேன்…
தோழமையுடன்
பைத்தியக்காரன்
அவரே தனது சிறந்த சிறுகதைகளில் ‘தாவரங்களின் உரையாடல்’ மற்றும் ‘புலிக்கட்டம்’ என்ற இரு சிறுகதைகளைக் குறிப்பிட்டு இருந்ததாக ஞாபகம். இரண்டுமே இன்னும் படிக்க வாய்க்கவில்லை.
அனுஜன்யா
முதல் வாசிப்பில், இது எஸ்ராவின் கதாவிலாசத்தின் தொடர்ச்சியோ, என்று தான் எனக்கு தோன்றியது
சிவராமன் நான் எஸ்ராவின் புத்தகங்கள் வாசிப்பேன் .
நல்ல விமர்சனம் எழுதியிருக்கீங்க
இதே போல எஸ் ராவின் ஒரு சிறுகதை உண்டு (தலைப்பு மறந்து விட்டேன், இருக்கன்குடி கோவிலில் மொட்டை அடிக்கும் ஒரு பெண் பற்றிய கதை,
////அந்தச் சாவியைக் கொண்டு கதவை திறக்க வேண்டியது மட்டுமே வாசகனின்/வாசகியின் வேலை. அப்படி அவன்/ள் திறக்கும்பட்சத்தில் விரிவது 7 கடல்கள், 7 மலைகள் தாண்டி மறைந்திருக்கும் வாழ்க்கையின் ரகசியம்.////
என்னமோ போங்க. எனக்கு ஒன்னும் புரியல. எதுக்கு இவ்வளவு சிரமப்படனும். எழுதியிருக்கறத படிச்சுட்டு நேரடியான அர்த்தம் புரிஞ்சா போதாதா?
அவரது எத்தனை எழுத்துக்களைப் படித்தாலும், ’உறவும், பிரிவும் இன்றி’ என் ஞாபக அடுக்குகளில் எப்போதும் மேலே மிதந்து கொண்டே இருக்கிறது. அடேயப்பா!
பகிர்ந்தமைக்கு நன்றி தோழர்!
வாசகபர்வம்
உபபாண்டவம் வாசிக்க கிடைத்தது
இம்முறை தொகுப்பு வாங்கி வர வேண்டும் இந்தியாவிலிருந்து வரும்போது….
வாசகனுக்கான வெளியை உருவாக்கும் சொற்கள் வாய்த்திருக்கிறது அவரின் கதைகளுக்கு
வாசக பார்வை.. உள்ளங்கையில் ஊற்றி ருசி பார்க்கும் கரம்
அன்பின் சங்கர், ஸ்டார்ஜன், அன்புடன் அருணா, குப்பன் யாஹு, வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி.
அன்பின் மாதவராஜ், முதலில் வாழ்த்துகள். பதிவர்களின் படைப்புகளை நூலாக நீங்களும் பவாவும் அருமையாக கொண்டு வந்திருக்கிறீர்கள். பக்கத்துக்கு பக்கம் உங்கள் உழைப்பு தெரிகிறது என்பதைவிட, பதிவர்கள் மீது நீங்கள் கொண்டுள்ள அன்பு நிரம்பி வழிகிறது என்று சொல்வது மிகப் பொருத்தமாக இருக்கும். தனி இடுகையாக, விரிவாக இதுகுறித்து எழுதப் போகிறேன். எஸ்ரா சிறுகதைகள் குறித்து நீங்கள் பகிர்ந்திருக்கும் விதம், அருமை.
அன்பின் நேசமித்ரன், வருகைக்கும், நெகிழ்ச்சியான பின்னூட்டத்துக்கும் நன்றி.
தோழமையுடன்
பைத்தியக்காரன்
http://www.kaveriganesh.blogspot.com
நல்ல பகிர்வுக்கு நன்றி
சிறுமி வாங்கிய கடன் விவரங்களை, குடும்பம் காலி செய்துவிட்டுப்போன அறை சுவற்றில் நாம் படித்திருக்கிறோம்.
எங்கோ வடகிழக்கு மூலை மாநிலத்தில் உள்ள ஏரியின் கண்கள், நம்மை உற்று நோக்குவதை நாம் உணர்ந்திருக்கிறோம்.
நிகழ் களத்தில் நம்மையும் அழுந்திக் காலூன்ற வைப்பதுதுதான் எஸ்ராவின் தனிச்சிறப்பு.
அன்பின் rama, நேர்மையான உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி. எஸ்ரா எழுத்துக்கள் ஒரு வாசகனாக எனக்கு சலிப்பை தரவில்லை என்பதை இங்கு பதிவு செய்வது என் கடமை.
தோழமையுடன்
பைத்தியக்காரன்
படிச்சி முடிச்சிட்டேன், முதன் வேலையா அவருக்கு சுட்டி குடுத்துட்டேன் – சரி அவரும் படிக்கட்டும் அவரை நான் ஏன் பிங்கனும்.
விமர்சிக்கும் அளவுக்கு தெளிவில்லை
உங்கள் பார்வை இரசிக்கும்படியாக …
எஸ்.ரா. எடுத்து எழுதுகிற சூழ்நிலைச் சிக்கல் அவருடைய ஓரொரு கதையையும் வாசிக்கையில் என்னை வியப்பில் ஆழ்த்தும். உலகின் சிறந்த எழுத்தாளர்கள் தம் படைப்புகளில் வருவதற்கு நிகரான வாழ்க்கைச் சிக்கல்களைக் கண்டு புனைகிறார்.
ஆனால் மொழிநடையில் அவருக்கு சற்று கவனக் குறைவு உண்டோ என்று நான் எண்ணுவதுண்டு. (‘எறும்பு ஊர்வது மாதிரி கையெழுத்து’ என்கிற சொல்லாடலை, எடுத்துக் காட்டாக, இரண்டு மூன்று கதைகளில் வாசித்துவிட்டேன்). அல்லது அவருக்கு வந்து முட்டும் கருத்துகளின் பெருக்கத்தை அணைகட்டித் தருகிற அளவுக்கு மொழிவல்லமையை வளர்த்துக் கொள்வதில் அக்கறையற்று இருக்கிறாரோ? ‘Effect’க்காக எழுதப்படுவது நல்ல எழுத்தன்று என்று நானும், ஹிட்ச்காக் படங்களைப் பார்ப்பது வரை, கொள்கை கொண்டிருந்தேன். எஸ்.ரா. தனது தளத்தில் ‘Story of sign’என்றொரு குறும்படத்தைப் பரிந்து இட்டிருக்கிறார். அதற்கு நன்றி, ஆனால் அவருக்கே அதைப் பரிந்துரைக்கக் கூச்சமாக இருக்காதா? அவர் craftsman-ஓ இல்லையோ ஐயமில்லாமல் ஒரு கலைஞன்.
அது யார் rama? சென்ற பதிவின் பின்னூட்டத்திலும் அவர் கவனம் கவனிக்கப்படும்படியாக இருந்தது.
– ராஜசுந்தரராஜன்
உறவும் பிரிவும் இன்றி ஏற்கனவே வாசித்திருக்கிறேன். உங்கள் பதிவு கண்ட பிறகு, மீண்டும் வாசித்து, பின் ̀தெரிந்தவர்களையும்’ வாசித்தேன். 80களின் பல கதை சொல்லல்கள் நம் மனதுக்கு மிகவும் நெருக்கமானவை. வண்ண நிலவன், வண்ணதாசனை படித்து நெகிழ்ந்திருக்கிறோம். அந்தவகையில் எனக்கு வண்ண நிலவனின் கதை வாசிப்பனுபவம் போல இந்த இரண்டு கதைகளும் இருந்தன. (வண்ணதாசனின் தளம் வேறு.) ஆனால் நீங்கள் முன்வைக்கும் தன்மைகள் கதைக்கு இருக்கின்றனவா என்று எனக்கு மிகவும் சந்தேகமாக உள்ளது.
இரண்டு கதைகளும் தட்டையான மொழியில், ஒற்றை பரிமாணத்தில்தான் உள்ளன. அதை குறையாக நான் சொல்லவில்லை. ஆனால் நீங்கள் சொல்வது போல இரு சிறுகதைகளும் ஒரு நாவலை உள்ளடக்கியதாக எனக்கு தோன்றவில்லை. சிறுகதைகளை முன்வைத்து நீங்கள் உங்கள் வாசிப்பை விரிப்பது உங்கள் அக உலகம் சம்பந்தப்பட்டது. அதை நீங்கள் எழுதுவது சுவாரசியமாக இருக்கலாம். ஆனால் அது உங்கள் வாசிப்பு மட்டுமே. இது பல கதைகளுக்கு (வண்ண நிலவனின் கதைகளுக்கும்) சாத்தியமாகலாம். ஆனல் எஸ்ரா அப்படி பல நுட்பங்களை உள்ளடக்கி, மௌனத்தை கிளை கதைகளாக மாற்றியதாக, இந்த கதைகளில் எனக்கு தோன்றவில்லை.
̀கடன்’ என்ற கருப்பொருளை புதுமைப்பித்தன் தொடங்கி பலர் கையாண்ட விதம் பற்றிய உங்கள் பார்வையை எழுதினால் சுவாரசியமாக இருக்கும்.
அன்பின் மகாகவி, தங்கள் வருகையும் அவதானிப்பும் அருமை. //உலகின் சிறந்த எழுத்தாளர்கள் தம் படைப்புகளில் வருவதற்கு நிகரான வாழ்க்கைச் சிக்கல்களைக் கண்டு புனைகிறார்.// என்பது உண்மை. மொழிநடை குறித்த உங்கள் விமர்சனத்தை, நிச்சயம் எஸ்ரா கவனத்தில் கொள்வார்.
அன்பின் ரோசா, சட்டென நூலை பிடித்துவிட்டீர்கள். ஆரம்பக்கால எஸ்ரா சிறுகதைகளில் வண்ணநிலவனின் பாதிப்பு உண்டு. பிறகு உலக இலக்கியங்களை வாசிக்க ஆரம்பித்து அந்த பாதிப்பிலிருந்து விலகினார்.
எஸ்ரா சிறுகதைகள் எழுதப்படாத நாவலை சொல்வதாக எனக்கு தோன்றியது. அந்த வாசக அனுபவத்தையே இடுகையாக்கினேன்.
//̀கடன்’ என்ற கருப்பொருளை புதுமைப்பித்தன் தொடங்கி பலர் கையாண்ட விதம் பற்றிய உங்கள் பார்வையை எழுதினால் சுவாரசியமாக இருக்கும்.// முயற்சிக்கிறேன் ரோசா.
தோழமையுடன்
பைத்தியக்காரன்