Archive

Posts Tagged ‘Hindus’

கர்நாடகா: சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தின் ஆச்சார்யா ஜகத்குரு. பேட்டி: ஆச்சார்ய தரிசனம்

August 8, 2012 Leave a comment

தர்ம சிந்தனை தூண்டப்பட வேண்டும்!

கர்நாடக மாநிலம் சிக்மகளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள புண்ணிய பூமி – சிருங்கேரி. மகான் ஸ்ரீ ஆதிசங்கரர் ஸ்தாபிதம் செய்த புனிதமான ஸ்ரீசாரதா பீடம் இங்கேதான் அமைந்துள்ளது. ஸ்ரீ சரஸ்வதி தேவியே இங்கு சாரதாதேவியாக அருள்பாலிக்கின்றாள். ஸ்ரீ ஆதி சங்கரருக்கு சிவபெருமான் தந்தருளிய ஸ்படிக லிங்கத்துக்கு சிருங்கேரி பீடாதிபதிகள் இன்றளவும் பூஜை செய்து வருகின்றனர்.

சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தின் 36ஆவது ஆச்சார்யாளாகத் தற்போது வீற்றிருப்பவர் ஸ்ரீபாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள் ஆவார். ‘கல்கி’ இதழின் பிரத்யேகப் பேட்டிக்காக ஸ்ரீபாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளை சென்னையில் சந்தித்தோம். நறுக்குத்தெறித்தாற் போல் தமிழ் பேசுகிறார் ஜகத்குரு.

தங்களுக்கு முந்தைய ஆச்சார்யாளான ஸ்ரீஅபிநவ வித்யா தீர்த்தரிடம் தாங்கள் பார்த்து வியந்த நிகழ்வு ஏதேனும் சொல்லுங்களேன்…?

ஒன்றா, இரண்டா… அவரிடம் நான் பார்த்து வியந்த நிகழ்வுகளை இங்கே சொல்ல ஆரம்பித்தால், அது ஒரு மாபெரும் தொகுப்பாக ஆகிவிடும். 23 வருடங்கள் அவருடன் இருந்திருக்கிறேன்; பயணித்திருக்கிறேன். பல விஷயங்களை எனக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார். அவரிடம் நான் என்னென்ன அம்சங்களைக் கண்டு வியந்தேனோ, தெரிந்து கொண்டேனோ – அவற்றை எல்லாம் தொகுத்து ‘அஷ்டோத்தர சதநாம ஸ்தோத்திரம்’ என்று எழுதி இருக்கிறேன். அதாவது 108 நாமாக்களில் என் குருநாதரின் சரிதத்தை எளிமையாகக் குறிப்பிட்டிருக்கிறேன். இந்த நாமாக்களை எவர் ஒருவர் சொல்லிப் பிரார்த்திக்கும்போதும் என் குருநாதரை பிரத்யட்சமாகத் தரிசிக்கலாம்.”

தர்ம சிந்தனை இன்று பெருகி இருக்கிறதா?

தர்மம் செய்ய வேண்டும் என்பது ஓர் உணர்வு. எந்த ஓர் உணர்வும் தூண்டப்பட வேண்டும். தூண்டப்பட்டால்தான் அதற்குப் பலன் இருக்கும். எல்லோருக்கும் பக்தி உணர்வு இருக்கிறது. இந்தப் பக்தி உணர்வானது தூண்டப்பட்டால்தான் பலன். பக்தி உணர்வு தூண்டப்படுவதன் வெளிப்பாடே – சத் சங்கம். வழிபாடு. பஜனை. நாம கோஷம்.

அதுபோல் தர்மம் செய்ய வேண்டும் என்கிற எண்ணமும் ஒவ்வொருவருக்குள்ளும் தூண்டப்பட வேண்டும். உரிய சந்தர்ப்பம் வரும்போது இத்தகைய தர்ம உணர்வு ஒவ்வொருவருக்குள்ளும் தூண்டப்படும். தர்மம் செய்ய வேண்டும் என்கிற உணர்வு எல்லோருக்கும் இருக்கிறது. அதற்குரிய சந்தர்ப்பம் வர வேண்டும்.

இன்றைக்கு எனது உபன்யாசம் இங்கே இருக்கிறது என்றால், இதைக் கேட்பதற்கு எல்லோரும் வர வேண்டும். ஆச்சார்யாள் உபன்யாசத்தைக் கேட்க எல்லோரும் வர வேண்டும் என்றால், வருவதற்கு உரிய சந்தர்ப்பம் வாக்க வேண்டும் அல்லவா? சந்தர்ப்பம் அமைந்தால்தானே வர முடியும்?

சந்தர்ப்பம் அமைந்தபின் சிரத்தை வரும். உபன்யாசம் கேட்பதற்கே சந்தர்ப்பம் வரவில்லை என்றால், ஜனங்களுக்கு சிரத்தை எப்படி வரும்? எந்த ஒரு நல்ல காரியத்தையும் கேட்பதற்கு – செய்வதற்கு மக்களுக்கு சந்தர்ப்பத்தைத் தர வேண்டும்.”

நேர்மையாக வாழும்போது அதிக கஷ்டங்கள் வருகின்றனவே? இதுவே பல நேரங்களில் சோர்வைத் தருகின்றதே…?

நேர்மையாக வாழ்ந்து வருபவருக்குத் தான் கஷ்டங்கள் வரும். சோதனைகள் வரும். நியாயம் தோற்பது போல் தெரியும். ‘தோற்றுப் போய் விடுவோமோ’ என்கிற பயம் வரும். ஆனால், கடைசியில் நேர்மை தான் ஜெயிக்கும்.

பொதுவாக, ஆன்மிகத்தில் இருந்தாலே எல்லா கஷ்டங்களையும் பட வேண்டி இருக்கும். கஷ்டப்படுகிறவர்தான் கடைசியில் ஜெயிப்பார். ஸ்ரீராமரின் வாழ்க்கையையும், ஸ்ரீதர்மரின் வாழ்க்கையையும் பார்த்தாலே இது புரியும்.

மூன்று லோகங்களையும் ஆண்டவன் ராவணன். புஷ்பக விமானம் என்ன… படாடோபமான அரண்மனை என்ன… சோகுசாக இருந்தான். ஆனால், ராமபிரானுக்கு என்ன வசதி இருந்தது? அவர் பட்ட கஷ்டம் கொஞ்சமா நஞ்சமா? கடைசியில், ராவணனின் கொட்டம் அடங்கி, சத்தியம் ஜெயித்து, ராமபிரான் சக்கரவர்த்தி ஆனாரே!

எல்லாவற்றையும் கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார். கடவுளின் கண்களை நம்மால் மூட முடியாது. இது நினைவில் இருக்க வேண்டும்.”

பிரார்த்தனை செய்தால், அது பலித்து விடுமா? ஒருவரின் பிரார்த்தனை பலிக்க என்ன செய்ய வேண்டும்?

பிரார்த்தனை மட்டும் போதாது. பக்தியும் நம்பிக்கையும் வேண்டும். பக்தியும் நம்பிக்கையும் இல்லாமல் செய்யப்படுகின்ற பிரார்த்தனை பலன் தராது

இன்றைக்கு எல்லோரிடமும் நம்பிக்கை இருக்கிறது. ‘நிச்சயம் நல்லது நடக்கும்… நடக்க வேண்டும்’ என்று நம்பித்தான் பக்தி உணர்வு மேலோங்க கோயிலுக்கும் பீடங்களுக்கும் வருகிறார்கள். தங்கள் பிரார்த்தனைகளை அங்கே வைத்து அவை நிறைவேறப் பெறுகிறார்கள்.”

மதங்களுக்கும் அரசியலுக்கும் தொடர்பு இருக்கிறதா?

அரசியலுக்கு மதம் தேவை இல்லை. ஆனால், தர்மம் அவசியம் தேவை.

தர்மம் என்றால் என்ன? உண்மை. இந்த உண்மையைத்தான் நாம் தர்மம் என்கிறோம். ‘நான் அரசியலுக்கு வந்து விட்டேன். இனிமேல் உண்மை பேசவே மாட்டேன்’ என்று யாராவது சொல்ல முடியுமா? தர்மத்தை மீற முடியுமா?

மதத்தையும் தர்மத்தையும் சேர்த்துக் குழப்பிக் கொள்ளக் கூடாது. மதம் என்பது ஒவ்வொருவரும் தொன்றுதொட்டுப் பின்பற்றி வரும் வழி. ஆனால், தர்மம் என்பது இந்த மதத்துக்கு மட்டும் தான் என்றில்லை. எல்லா மதத்துக்கும் உண்டு. ‘அப்பா- அம்மாவை வைத்துக் கடைசிவரை காப்பாற்ற வேண்டும்’ என்பது இந்து மதத்துக்கு மட்டுமில்லை… உலகில் இருக்கிற எல்லா மதங்களுமே இதைப் போதிக்கின்றன. ‘திருடக் கூடாது… பொய் சொல்லக் கூடாது’ என்பதை இந்து மதம்தான் என்றில்லை… அனைத்து மதங்களுமே போதிக்கின்றன. நாம் கொண்டுள்ள தர்மத்தை எந்த நாளும் கைவிடக் கூடாது.”

புன்னகைத்து விடைகொடுக்கிறார் ஜகத்குரு. அவரை சாஷ்டாங்கமாக நமஸ்கரிக்கிறோம். ஒரு சமஸ்தானத்தை – சன்னிதானத்தைத் தரிசித்த ஆனந்தமும் சிலிர்ப்பும் மேலோங்க… வெளியே வந்தால் – பெரும் ஜனத்திரள் இந்த மஹா ஸ்வாமிகளின் தரிசனத்துக்காகக் காத்திருக்கிறது.

சென்னையில் சாதுர்மாஸ்யம்

சிருங்கேரியின் 35-வது ஆச்சார்யாளாக இருந்த ஸ்ரீஅபிநவ வித்யா தீர்த்தரால் அடையாளம் காணப்பட்டு, சிறு வயதிலேயே சந்நியாசம் பெற்றவர் ஸ்ரீபாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள்.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் நாகுலேரு நதிக்கரையில் அமைந்துள்ள அலகுமல்லிபடு கிராமத்தில் 1951-ல் அவதரித்தவர் ஸ்ரீபாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள். பெற்றோர் இவருக்கு வைத்த திருநாமம் – சீதாராம ஆஞ்சநேயலு. பள்ளியில் படித்த காலத்திலிருந்தே சம்ஸ்க்ருத மொழியிலும் கவிதை புனைவதிலும் கரை கண்ட சீதாராம ஆஞ்சநேயலு, சிறந்த சிவ பக்தர்.

அப்போது சீதாராம ஆஞ்சநேயலுக்கு வயது ஒன்பது. சிருங்கேரி பீடத்தில் 35-வது ஆச்சார்யாளான ஸ்ரீஅபிநவ வித்யா தீர்த்த ஸ்வாமிகள் ஒரு முறை சீதாராம ஆஞ்சநேயலு படித்து வரும் பள்ளிக்கு விஜயம் செய்தார். சீதாராம ஆஞ்சநேயலுவின் அளவு கடந்த ஞானம், குருதேவரை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது. சிறிது நேரம் உரையாடிவிட்டு, சிறுவனுக்குப் பொன்னாடை வழங்கி அருள் பாலித்தார்.

அடுத்தடுத்து வந்த ஸ்ரீஅபிநவ வித்யா தீர்த்தரின் யாத்திரைகளில் கலந்து கொள்ளத் தொடங்கினார் சீதாராம ஆஞ்சநேயலு. இப்படித்தான் குருவுக்கும் சீடனுக்கும் அன்னியோன்னியமும் ஏற்பட்டது.

தன் 23-வது வயதில் (1974-ல்) ‘ஸ்ரீபாரதீ தீர்த்தர்’ எனும் தீக்ஷா நாமத்துடன் – புகழ் பெற்ற சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தின் 36-வது ஆச்சார்யாளாகப் பொறுப்பேற்றுக் கொண்டார் சீதாராம ஆஞ்சநேயலு. 1989-ல் ஸ்ரீஅபிநவ வித்யா தீர்த்த ஸ்வாமிகளின் முக்திக்குப் பின் பாரத தேசத்தின் ஒப்பற்ற குருவாக இவர் அமைந்து உலா வருவது நாம் பெற்ற பேறு. 1960-ஆம் ஆண்டு சிருங்கேரி பீடாதிபதி ஸ்ரீஅபிநவ வித்யா தீர்த்த ஸ்வாமிகள் சென்னை தி.நகரில் சாதுர்மாஸ்ய விரதத்தை (சந்நியாசிகள் அனுஷ்டிக்கும் விரதம்) மேற்கொண்டார். அவருக்கு அடுத்த சிருங்கேரி பீடாதிபதியான ஸ்ரீபாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள் தற்போது சென்னை மயிலாப்பூரில் ‘சுதர்மா’ இல்லத்தில் சாதுர்மாஸ்ய விரதத்தை அனுஷ்டித்து வருகிறார்.

நன்றி – கல்கி, சீதாரவி, அமிர்தம் சூர்யா, கதிர்பாரதி, புலவர் தருமி

S Ramakrishnan on State of Feminism in Tamils: பெண்களைக் குறித்து எஸ்ரா

May 15, 2012 Leave a comment

பெண்ணை உடைமைப் பொருளாக மாற்றிய நிலப்பிரபுத்துவப் பண்பாடுதான் அரசியலிலும் ஆளுமை செலுத்துகிறது. நிலத்தை உடைமையாக்கி, உரிமைகொள்கிற ஆக்கிரமப்பு மன நிலைதான் பெண்ணை ஆக்கிரமிப்பதிலும் செயல்படுகிறது. பெணைத் தனது உடைமையாக ஆண் கருதுகிற மன நிலையாக, அவளது நிலையைத் தீர்மானிப்பது தனது அதிகாரம் என்ற மனநிலையாகச் செயல்படுகிறது.

பெண்ணை வெற்றி கொள்வதே ஒரு முக்கியச் செயல்பாடாகிறது. ஒரு ஆண், தன் வாழ்நாள் முழுக்க எந்த அளவுக்குப் பெண்ணைக் கட்டுப்படுத்தி வைக்கிறானோ அந்த அளவுக்கு அவன் வெற்றி பெற்றவனாகப் பார்க்கப்படுகிறான். காதலி, மனைவி, தாய், மகள், சகோதரி என அனைத்து உறவுகளிலும் இந்த ஆளுமையும் ஆக்கிரமிப்பும் இருக்கின்றன.

அண்மையில் பழநி பேருந்து நிலையத்தில் பார்த்த காட்சி நினைவுக்கு வருகிறது. நள்ளிரவு நேரம். தங்களுடைய பேருந்துக்காகக் காத்திருந்த ஒரு குடும்பத்தில், இரண்டு இளம் பெண்கள் ஒருவர் மேல் ஒருவர் சாய்ந்து தூங்க முயல்கிறார்கள். அவர்களைத் தூங்கவிடாமல் தடுக்கிறான் தந்தை. பெண் பிள்ளைகள் பொது இடத்தில் தூங்கக் கூடாது என்று சொல்கிறான். அவனுடைய வயதான மனைவி தரையிலேயே படுத்துத் தூங்கிக்கொண்டிருந்ததை அவன் தடுக்கவில்லை. அவனுடைய மகன் தூங்கிக்கொண்டிருந்தான்,  அவனையும் தடுக்கவில்லை. ஆனால் வயதுக்கு வந்த மகள்கள் தூங்க அனுமதிக்கவில்லை. அவன் அசந்த நேரத்தில்தான் அவர்களும் சற்று கண்ணயர்ந்தார்கள். அவனுக்கு அவர்கள் மீது அக்கறையில்லை என்று சொல்ல முடியாது. அதே வேளையில், பெண்ணைக் கட்டுப்படுத்துவதன் மூலம் பாதுகாப்பாக வைக்கிற சமூக மனநிலையோடும் அவன் இருந்தான்.

பெண்கள் மீற முயல்கிறபோதெல்லாம் அவர்கள் சொல்ல முனைவது ஒன்றுதான். ‘நான் உன் உடைமைப்பொருள் அல்ல. நாம் இணைந்து வாழ்கிறோம். உனக்குள்ள உரிமைகள் எனக்கும் இருக்கிறது,’ என்பதுதான் மீறுகிற பெண் சொல்கிற செய்தி. ஆணோ, தன் உடைமைப் பொருளாகக் கருதுவதால், பெண்ணின் இடுப்பில் ஒரு கயிறைக்கட்டி, அந்தக் கயிறு எவ்வளவு நீளமோ அந்த நீளத்திற்கு மட்டும் சுதந்திரமாகச் செல்ல அனுமதிக்கிறான். குடும்பத்தின் நிலையைப் பொறுத்து, அந்தக் கயிறு அமெரிக்கா வரையில் கூட நீளும்!

அந்தக் கயிறை அறுக்கிற செயலில், அறுப்பது பற்றிப் பேசுவதில் பெண்கள் இப்போதுதான் இறங்கியிருக்கிறார்கள். பெண் தனியாகக் கூட வாழ முடியும் என்று காட்ட முயல்கிறார்கள். சமுதாயத்தின் சீரழிவுக் கட்டத்தில் இது நிகழ்வதால், பெண் இப்படி உரிமை பேசுவதே கூட ஒரு சீரழிவாகப் பார்க்கப்படுகிறது. கல்வியின் மூலம் சுதந்திரம் கிடைக்கும் என்று பெண் எதிர்பார்த்தாள். நேரெதிராக, இரட்டைச் சுமைதான் பெண்ணின் மீது ஏற்றப்பட்டது. நீ வேலைக்கும் போ, வீட்டு வேலையையும் பார், பண்பாட்டுப் பெருமையையும் காப்பாற்று என்று மேலும் நுட்பமான கயிறுதான் கட்டப்பட்டிருக்கிறது.

பண்பாட்டுப் பெருமை பேசுகிறபோது அதை பக்தியாக்குகிற, புராதனமாக்குகிற முயற்சிதான் நடக்கிறது. அது புனிதமானது, அதிலே கைவைக்கவே கூடாது என்று சொல்கிறார்கள். ஆனால், இப்படிப் பண்பாட்டுப் பெருமை பேசுகிறவர்களில் பெரும்பாலானவர்கள் அதைக் கடைப்பிடிக்காதவர்கள்தான். பெண்கள் பாரம்பரிய ஆடைகளை அணிய வேண்டும் என்பார்கள், அவர்கள் வீட்டுப் பெண்கள் தங்களுக்கு வசதியாக பேன்ட், சட்டை, சுடிதார் என்று தேர்ந்தெடுக்கிறபோது, அதை இவர்கள் தடுப்பதில்லை. சொந்த வாழ்க்கையில் மீறல்களை அனுமதித்துக்கொண்டே, பொது வாழ்க்கையில் பெருமை பேசுகிற இரட்டை நிலையைத்தான் பலரிடம் காண முடிகிறது. மேற்கத்திய நாடுகளில் ஒரு பண்பாட்டை வலியுறுத்துகிறார்கள் என்றால் அதை ஓரளவுக்குக் கைக்கொள்கிறார்கள். இந்தியச் சமூகத்தில்தான் இந்த இரட்டை நிலை.

நாம் விவாதிக்கிற பல கூறுகள் விக்டோரியன் மொராலிட்டி (விக்டோரியா அறம் – ஆங்கிலேய அறநெறி) சார்ந்தவை. அதன் தாக்கத்தில், இங்கே ஏற்கெனவே இருந்த சில முற்போக்கான கூறுகளை இழந்திருக்கிறோம். உதாரணமாக, நியூடிட்டி (நிர்வாணம்) தொடர்பாக இங்கே நிலவியிருந்த கோட்பாடே வேறு. ஆனால், இன்று விக்டோரியன் மொராலிட்டி அடிப்படையிலேயே பெண்ணின் உடல் சார்ந்த ஆபாசம், வக்கிரம் உள்ளிட்ட பார்வைகள் ஊட்டப்பட்டிருக்கின்றன. விதவைத் திருமணம் இங்கே இல்லாமலிருந்தது போன்ற சில பலவீனங்களைப் பயன்படுத்திக்கொண்டு வந்த ஆங்கிலேயர்கள், அவர்களுடைய பலவீனங்களை இங்கே திணித்துவிட்டார்கள்.

பெண்ணுக்குச் சுதந்திரமும் அதிகாரமும் இருப்பது போன்ற மனநிலையை ஏற்படுத்துவதில் மதம் ஒரு முக்கியப்பங்காற்றி வந்திருக்கிது. கதைகளாக, சடங்குகளாக பெண் தெய்வங்களாக பெண்ணின் உடல் சார்ந்த போதனைகளாக, பெண்ணுக்கு ஒரு பண்பாட்டு வெளி வழங்கப்பட்டிருக்கிறது என்ற மனநிலை கட்டப்பட்டிருக்கிறது. எல்லா மதங்களும் இதைச் செய்திருக்கின்றன. இந்து மதத்தில் உள்ள நிலைமைகள் நமக்குத் தெரியும். கிறிஸ்துவத்தில் பெண் புனிதத்துறவியாகிவிட முடிவதில்லை. இஸ்லாமியத்தில் பெண்ணுக்கு முகத்திரையோடு மேலங்கி போடப்பட்டுவிட்டது. பௌத்தத்தில் பெண் துறவிகளுக்குக் கட்டுப்பாடுகள் உள்ளன. சமணத்தில், கடுமையாகத் துறவறம் மேற்கொள்கிற பெண் அடுத்தபிறவியில் ஆணாகப் பிறக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஆன்மீக விடுதலைக்காகத்தான் மதம் என்கிறார்கள். அப்படியானால் அதில் பெண் வெளியே நிறுத்தப்பட்டது எப்படி? ஆகவே பெண் விடுதலை, மதத்திற்கு எதிரான போராட்டத்தோடும் இணைகிறது.

Thanks:

பண்பாடு- புரிதலை நோக்கி…ஒரு கலந்துரையாடல்