Archive

Posts Tagged ‘Interviews’

கர்நாடகா: சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தின் ஆச்சார்யா ஜகத்குரு. பேட்டி: ஆச்சார்ய தரிசனம்

August 8, 2012 Leave a comment

தர்ம சிந்தனை தூண்டப்பட வேண்டும்!

கர்நாடக மாநிலம் சிக்மகளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள புண்ணிய பூமி – சிருங்கேரி. மகான் ஸ்ரீ ஆதிசங்கரர் ஸ்தாபிதம் செய்த புனிதமான ஸ்ரீசாரதா பீடம் இங்கேதான் அமைந்துள்ளது. ஸ்ரீ சரஸ்வதி தேவியே இங்கு சாரதாதேவியாக அருள்பாலிக்கின்றாள். ஸ்ரீ ஆதி சங்கரருக்கு சிவபெருமான் தந்தருளிய ஸ்படிக லிங்கத்துக்கு சிருங்கேரி பீடாதிபதிகள் இன்றளவும் பூஜை செய்து வருகின்றனர்.

சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தின் 36ஆவது ஆச்சார்யாளாகத் தற்போது வீற்றிருப்பவர் ஸ்ரீபாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள் ஆவார். ‘கல்கி’ இதழின் பிரத்யேகப் பேட்டிக்காக ஸ்ரீபாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளை சென்னையில் சந்தித்தோம். நறுக்குத்தெறித்தாற் போல் தமிழ் பேசுகிறார் ஜகத்குரு.

தங்களுக்கு முந்தைய ஆச்சார்யாளான ஸ்ரீஅபிநவ வித்யா தீர்த்தரிடம் தாங்கள் பார்த்து வியந்த நிகழ்வு ஏதேனும் சொல்லுங்களேன்…?

ஒன்றா, இரண்டா… அவரிடம் நான் பார்த்து வியந்த நிகழ்வுகளை இங்கே சொல்ல ஆரம்பித்தால், அது ஒரு மாபெரும் தொகுப்பாக ஆகிவிடும். 23 வருடங்கள் அவருடன் இருந்திருக்கிறேன்; பயணித்திருக்கிறேன். பல விஷயங்களை எனக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார். அவரிடம் நான் என்னென்ன அம்சங்களைக் கண்டு வியந்தேனோ, தெரிந்து கொண்டேனோ – அவற்றை எல்லாம் தொகுத்து ‘அஷ்டோத்தர சதநாம ஸ்தோத்திரம்’ என்று எழுதி இருக்கிறேன். அதாவது 108 நாமாக்களில் என் குருநாதரின் சரிதத்தை எளிமையாகக் குறிப்பிட்டிருக்கிறேன். இந்த நாமாக்களை எவர் ஒருவர் சொல்லிப் பிரார்த்திக்கும்போதும் என் குருநாதரை பிரத்யட்சமாகத் தரிசிக்கலாம்.”

தர்ம சிந்தனை இன்று பெருகி இருக்கிறதா?

தர்மம் செய்ய வேண்டும் என்பது ஓர் உணர்வு. எந்த ஓர் உணர்வும் தூண்டப்பட வேண்டும். தூண்டப்பட்டால்தான் அதற்குப் பலன் இருக்கும். எல்லோருக்கும் பக்தி உணர்வு இருக்கிறது. இந்தப் பக்தி உணர்வானது தூண்டப்பட்டால்தான் பலன். பக்தி உணர்வு தூண்டப்படுவதன் வெளிப்பாடே – சத் சங்கம். வழிபாடு. பஜனை. நாம கோஷம்.

அதுபோல் தர்மம் செய்ய வேண்டும் என்கிற எண்ணமும் ஒவ்வொருவருக்குள்ளும் தூண்டப்பட வேண்டும். உரிய சந்தர்ப்பம் வரும்போது இத்தகைய தர்ம உணர்வு ஒவ்வொருவருக்குள்ளும் தூண்டப்படும். தர்மம் செய்ய வேண்டும் என்கிற உணர்வு எல்லோருக்கும் இருக்கிறது. அதற்குரிய சந்தர்ப்பம் வர வேண்டும்.

இன்றைக்கு எனது உபன்யாசம் இங்கே இருக்கிறது என்றால், இதைக் கேட்பதற்கு எல்லோரும் வர வேண்டும். ஆச்சார்யாள் உபன்யாசத்தைக் கேட்க எல்லோரும் வர வேண்டும் என்றால், வருவதற்கு உரிய சந்தர்ப்பம் வாக்க வேண்டும் அல்லவா? சந்தர்ப்பம் அமைந்தால்தானே வர முடியும்?

சந்தர்ப்பம் அமைந்தபின் சிரத்தை வரும். உபன்யாசம் கேட்பதற்கே சந்தர்ப்பம் வரவில்லை என்றால், ஜனங்களுக்கு சிரத்தை எப்படி வரும்? எந்த ஒரு நல்ல காரியத்தையும் கேட்பதற்கு – செய்வதற்கு மக்களுக்கு சந்தர்ப்பத்தைத் தர வேண்டும்.”

நேர்மையாக வாழும்போது அதிக கஷ்டங்கள் வருகின்றனவே? இதுவே பல நேரங்களில் சோர்வைத் தருகின்றதே…?

நேர்மையாக வாழ்ந்து வருபவருக்குத் தான் கஷ்டங்கள் வரும். சோதனைகள் வரும். நியாயம் தோற்பது போல் தெரியும். ‘தோற்றுப் போய் விடுவோமோ’ என்கிற பயம் வரும். ஆனால், கடைசியில் நேர்மை தான் ஜெயிக்கும்.

பொதுவாக, ஆன்மிகத்தில் இருந்தாலே எல்லா கஷ்டங்களையும் பட வேண்டி இருக்கும். கஷ்டப்படுகிறவர்தான் கடைசியில் ஜெயிப்பார். ஸ்ரீராமரின் வாழ்க்கையையும், ஸ்ரீதர்மரின் வாழ்க்கையையும் பார்த்தாலே இது புரியும்.

மூன்று லோகங்களையும் ஆண்டவன் ராவணன். புஷ்பக விமானம் என்ன… படாடோபமான அரண்மனை என்ன… சோகுசாக இருந்தான். ஆனால், ராமபிரானுக்கு என்ன வசதி இருந்தது? அவர் பட்ட கஷ்டம் கொஞ்சமா நஞ்சமா? கடைசியில், ராவணனின் கொட்டம் அடங்கி, சத்தியம் ஜெயித்து, ராமபிரான் சக்கரவர்த்தி ஆனாரே!

எல்லாவற்றையும் கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார். கடவுளின் கண்களை நம்மால் மூட முடியாது. இது நினைவில் இருக்க வேண்டும்.”

பிரார்த்தனை செய்தால், அது பலித்து விடுமா? ஒருவரின் பிரார்த்தனை பலிக்க என்ன செய்ய வேண்டும்?

பிரார்த்தனை மட்டும் போதாது. பக்தியும் நம்பிக்கையும் வேண்டும். பக்தியும் நம்பிக்கையும் இல்லாமல் செய்யப்படுகின்ற பிரார்த்தனை பலன் தராது

இன்றைக்கு எல்லோரிடமும் நம்பிக்கை இருக்கிறது. ‘நிச்சயம் நல்லது நடக்கும்… நடக்க வேண்டும்’ என்று நம்பித்தான் பக்தி உணர்வு மேலோங்க கோயிலுக்கும் பீடங்களுக்கும் வருகிறார்கள். தங்கள் பிரார்த்தனைகளை அங்கே வைத்து அவை நிறைவேறப் பெறுகிறார்கள்.”

மதங்களுக்கும் அரசியலுக்கும் தொடர்பு இருக்கிறதா?

அரசியலுக்கு மதம் தேவை இல்லை. ஆனால், தர்மம் அவசியம் தேவை.

தர்மம் என்றால் என்ன? உண்மை. இந்த உண்மையைத்தான் நாம் தர்மம் என்கிறோம். ‘நான் அரசியலுக்கு வந்து விட்டேன். இனிமேல் உண்மை பேசவே மாட்டேன்’ என்று யாராவது சொல்ல முடியுமா? தர்மத்தை மீற முடியுமா?

மதத்தையும் தர்மத்தையும் சேர்த்துக் குழப்பிக் கொள்ளக் கூடாது. மதம் என்பது ஒவ்வொருவரும் தொன்றுதொட்டுப் பின்பற்றி வரும் வழி. ஆனால், தர்மம் என்பது இந்த மதத்துக்கு மட்டும் தான் என்றில்லை. எல்லா மதத்துக்கும் உண்டு. ‘அப்பா- அம்மாவை வைத்துக் கடைசிவரை காப்பாற்ற வேண்டும்’ என்பது இந்து மதத்துக்கு மட்டுமில்லை… உலகில் இருக்கிற எல்லா மதங்களுமே இதைப் போதிக்கின்றன. ‘திருடக் கூடாது… பொய் சொல்லக் கூடாது’ என்பதை இந்து மதம்தான் என்றில்லை… அனைத்து மதங்களுமே போதிக்கின்றன. நாம் கொண்டுள்ள தர்மத்தை எந்த நாளும் கைவிடக் கூடாது.”

புன்னகைத்து விடைகொடுக்கிறார் ஜகத்குரு. அவரை சாஷ்டாங்கமாக நமஸ்கரிக்கிறோம். ஒரு சமஸ்தானத்தை – சன்னிதானத்தைத் தரிசித்த ஆனந்தமும் சிலிர்ப்பும் மேலோங்க… வெளியே வந்தால் – பெரும் ஜனத்திரள் இந்த மஹா ஸ்வாமிகளின் தரிசனத்துக்காகக் காத்திருக்கிறது.

சென்னையில் சாதுர்மாஸ்யம்

சிருங்கேரியின் 35-வது ஆச்சார்யாளாக இருந்த ஸ்ரீஅபிநவ வித்யா தீர்த்தரால் அடையாளம் காணப்பட்டு, சிறு வயதிலேயே சந்நியாசம் பெற்றவர் ஸ்ரீபாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள்.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் நாகுலேரு நதிக்கரையில் அமைந்துள்ள அலகுமல்லிபடு கிராமத்தில் 1951-ல் அவதரித்தவர் ஸ்ரீபாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள். பெற்றோர் இவருக்கு வைத்த திருநாமம் – சீதாராம ஆஞ்சநேயலு. பள்ளியில் படித்த காலத்திலிருந்தே சம்ஸ்க்ருத மொழியிலும் கவிதை புனைவதிலும் கரை கண்ட சீதாராம ஆஞ்சநேயலு, சிறந்த சிவ பக்தர்.

அப்போது சீதாராம ஆஞ்சநேயலுக்கு வயது ஒன்பது. சிருங்கேரி பீடத்தில் 35-வது ஆச்சார்யாளான ஸ்ரீஅபிநவ வித்யா தீர்த்த ஸ்வாமிகள் ஒரு முறை சீதாராம ஆஞ்சநேயலு படித்து வரும் பள்ளிக்கு விஜயம் செய்தார். சீதாராம ஆஞ்சநேயலுவின் அளவு கடந்த ஞானம், குருதேவரை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது. சிறிது நேரம் உரையாடிவிட்டு, சிறுவனுக்குப் பொன்னாடை வழங்கி அருள் பாலித்தார்.

அடுத்தடுத்து வந்த ஸ்ரீஅபிநவ வித்யா தீர்த்தரின் யாத்திரைகளில் கலந்து கொள்ளத் தொடங்கினார் சீதாராம ஆஞ்சநேயலு. இப்படித்தான் குருவுக்கும் சீடனுக்கும் அன்னியோன்னியமும் ஏற்பட்டது.

தன் 23-வது வயதில் (1974-ல்) ‘ஸ்ரீபாரதீ தீர்த்தர்’ எனும் தீக்ஷா நாமத்துடன் – புகழ் பெற்ற சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தின் 36-வது ஆச்சார்யாளாகப் பொறுப்பேற்றுக் கொண்டார் சீதாராம ஆஞ்சநேயலு. 1989-ல் ஸ்ரீஅபிநவ வித்யா தீர்த்த ஸ்வாமிகளின் முக்திக்குப் பின் பாரத தேசத்தின் ஒப்பற்ற குருவாக இவர் அமைந்து உலா வருவது நாம் பெற்ற பேறு. 1960-ஆம் ஆண்டு சிருங்கேரி பீடாதிபதி ஸ்ரீஅபிநவ வித்யா தீர்த்த ஸ்வாமிகள் சென்னை தி.நகரில் சாதுர்மாஸ்ய விரதத்தை (சந்நியாசிகள் அனுஷ்டிக்கும் விரதம்) மேற்கொண்டார். அவருக்கு அடுத்த சிருங்கேரி பீடாதிபதியான ஸ்ரீபாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள் தற்போது சென்னை மயிலாப்பூரில் ‘சுதர்மா’ இல்லத்தில் சாதுர்மாஸ்ய விரதத்தை அனுஷ்டித்து வருகிறார்.

நன்றி – கல்கி, சீதாரவி, அமிர்தம் சூர்யா, கதிர்பாரதி, புலவர் தருமி

Writer S Ramakrishnan at Tamiloviam.com Atcharam: Archives

June 15, 2012 1 comment

Thankshttp://www.tamiloviam.com/site/?cat=904

மே, ஜூன் 2006: கடந்த ஒரு மாத காலமாக ஆஸ்திரேலியாவிற்கு பயணம்

அ. வரல் ஆற்றின் திட்டுகள்

ஆ. நள் எனும் சொல்


உலகசினிமா

நாள் : 12/30/2004 11:58:58 AM

கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக உலகசினிமா என்ற புத்தகத்தின் தயாரிப்பில் முழ்கியிருந்தேன். அப்பணி தினமும் காலை 9 மணி முதல் இரவு 2 வரை தொடர்ந்து நீண்டு கொண்டிருந்தது ஆகவே இணையத்தில் எழுதுவதற்கான சாத்தியம் குறைவாகிவிட்டது.

தமிழில் முதன் முறையாக விரிவான அளவில் உலகசினிமாவை அறிமுகப்படுத்தும் புத்தகமிது. இப்புத்தகத்திற்காக சினிமாமீது ஆர்வம் கொண்ட நண்பர்கள் சிலரோடு சேர்ந்து கொண்டு நான் கடந்த மூன்றாண்டு காலமாக உலகசினிமா பற்றிய கட்டுரைகள், பேட்டிகள் போன்ற பல்வேறு மொழிபெயர்ப்பு பணிகளிலும், மற்றும் தகவல்கள் சேகரிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருந்தேன். அதனை சென்னையில் நடைபெறும் இந்த ஆண்டு புத்தக சந்தைக்குக் கொண்டுவரும் முனைப்புடன் கடந்த இரண்டு மாதமாக புத்தகத் தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன்.

இப்புத்தகத்தில் சினிமாவின் வரலாறு, உலகின் நூறு சிறந்த திரைப்படங்கள், 50 முக்கிய இயக்குனர்கள் பற்றிய விபரங்கள், 50 முக்கிய திரைக்கலைஞர்களின் பேட்டி மற்றும் உலகசினிமா குறித்த 35 கட்டுரைகள். குழந்தைகளுக்கான திரைப்படங்கள், டாகுமெண்டரி படங்கள், இந்திய சினிமாவின் வரலாறு, இந்திய சினிமாவின் முக்கிய 30 இயக்குனர்கள், திரைப்பட விழாக்கள் ,விருதுகள், சினிமா சந்தித்த பிரச்சனைகள், சினிமா குறித்த சிறந்த புத்தகங்கள், இணைய தளங்கள் மற்றும் உலகமெங்கும் உள்ள திரைப்பட கல்லூரிகள், ஆய்வு நிறுவனங்கள் பற்றிய தகவல் தொகுப்புகள் மற்றும் சினிமாவின் எதிர்காலம் குறித்த கட்டுரைகள் ஆகியவை 700 புகைப்படங்களுடன் இடம் பெற்றுள்ளன.

ராயல் டெம்மி அளவில் 750 பக்கம், கெட்டி அட்டையுடன் புத்தகம் வெளியாகிறது. விலை 500 ரூபாய். வெளியிடுபவர்கள், கனவுப்பட்டறை. 111 பிளாசா சென்டர், ஜி. என். செட்டி ரோடு. சென்னை 6. தொலை பேசி. 55515992.

இதன் வெளியீட்டு விழா சென்னையில் ஜனவரி 6 மாலை 5.30 மணிக்கு பிலிம் சேம்பர் அரங்கில் நடைபெறுகிறது. அதில் புத்தகத்தை இயக்குனர் மகேந்திரன் வெளியிட ஜெயகாந்தன் பெற்றுக் கொள்கிறார். தியோடர் பாஸ்கரன், மதன். வஸந்த் பாலாஜி சக்திவேல் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

லூயி கரோலின் ஆலீஸின் அற்புத உலகம்

என்ற குழந்தைகளுக்கான புத்தகத்தையும் மொழி பெயர்த்துள்ளேன். அது 37 சித்திரங்களுடன் கனவுப்பட்டறையால் சிறப்பாக வெளியிடப்பட்டுள்ளது. விலை 50 ரூபாய்.


நாள் : 11/11/2004 7:31:16 AM

நனையாத எனது மழைநாட்கள்.

கடந்த ஒருவாரகாலமாக சென்னையில் விடாது பெய்யும் மழையின் காரணமாக வீட்டிலே அடைந்திருந்தேன். நான் மழையின் ரசிகனில்லை. என்னால் கோடையின் அதிகபட்ச அக்னிநட்சத்திர வெயிலில் கூட மதியம் பனிரெண்டு மணிக்கு சூடாக டீகுடித்தபடி நடுரோட்டில் நின்று பேசிக்கொண்டிருக்க முடியும். ஆனால் மழையில் பத்து நிமிடங்கள் கூட நிற்கமுடியாது. பயணத்தில் எதிர்படும் மழை அல்லது பின்னிரவில் யாரும் பார்க்காமல் பெய்யும் மழை இந்த இரண்டிலும் கொஞ்சம் ஈடுபாடு உண்டு. மற்றபடி மழை தொடர்ந்து பெய்யும் போது நான் ஒரு குத்துச்செடியைப் போல ஒடுங்கிப்போகத் துவங்கிவிடுகிறேன்.

மழை நாட்களில் எந்த வேலை செய்வதற்கும் பிடிக்காது. கம்ப்யூட்டரை அணைத்து விட்டேன். மின்சாரத் தடை காரணமாக வீடு அடிக்கடி இருள்வதும் ஒளிர்வதுமாக வேறு இருந்தது. மழையால் நேரம் செல்வது மிக மெதுவாகி வீடு குகையைப் போலச் சிறியதாகிவிட்டது.

ஒரு வேளை பிறந்ததிலிருந்து வெயிலின் தீராத பிரகாசத்தை மட்டுமே அனுபவித்து வந்ததால் கூட மழையின் மீது விருப்பமில்லாமல் போயிருக்ககூடும். எங்களது ஊருக்கு அருகாமையில் கொப்புசித்தம்பட்டி என்றொரு கிராமம் இருக்கிறது. அந்த ஊரின் வெயில் மிகவும் பிரசித்தமானது. சித்திரையில் அங்கு வெறும்காலோடு எவரும் நடந்து போகமுடியாது. அதை நினைத்துத் தானோ என்னவோ அக்கிராமவாசிகள் தங்களது நிலபத்திரங்களில் சாட்சியாக வெயிலையும் சேர்த்திருக்கிறார்கள். ஆச்சரியமான விபரமது.

ஊரில் எவராவது கடன் வாங்கினாலோ, நிலவிற்பனை செய்தாலோ பத்திரத்தில் உள்ளபடி தான் நடப்பதாகவும் மீறினால் சித்திரை மாதவெயிலில் பகலில் வெறும்காலோடு ஊரை பத்துமுறை சுற்றிவர சம்மதிப்பதாகவும் எழுதி கையெழுத்துப் போடுவார்கள். பத்திரசாட்சிகளில் ஒன்றாக வெயில் இடம்பெறும் நிலப்பகுதியில் பிறந்தவன் என்பதால் இயல்பாகவே வெயிலுக்குப் பழகியிருக்கிறேன்.

ஆனால் சென்னையின் இந்த மழை நாட்களைக் கடந்து செல்வதற்கு தொடர்ந்து ஒரு வாரகாலமும் புத்தகங்கள் படிப்பதும், விருப்பமான திரைப்படங்களை பார்ப்பதுமாக செலவிட முடிவு செய்தேன். அதன்படி தினமும் பரிட்சைக்குப் படிப்பது போல காலை எட்டுமணிக்குத் துவங்கி மாலை ஆறுமணிவரை புத்தகமும் கையுமாக வீட்டில் ஆங்காங்கே இடம்மாறி வாசித்துக் கொண்டிருந்தேன். இரவு எட்டுமணிக்கு துவங்கி பதினோறுமணிவரை சினிமா பார்ப்பது என என்னை நானே புதுப்பித்துக்கொள்வதற்கு இந்த மழை நாட்கள் உபயோகமாகயிருந்தன.

மழை வெறித்த நேற்று படித்து முடித்திருந்த புத்தகங்கள் மேஜையில் குவிந்து கிடப்பதை பார்த்தேன். வியப்பாகதானிருந்தது. வாசித்த புத்தகங்களில் சில திரும்பப் படித்தவை. சில வாங்கிப் படிக்காமலே வைத்திருந்தவை. குறிப்பாக இந்த வாசிப்பில் எனக்குப் பிடித்த புத்தகங்கள் நான்கு.

1) உம்பர்தோ ஈகோவின் கட்டுரைத்தொகுதியான How to travel with a salmon & other essays.

2) Natsume Soseki என்ற ஜப்பானிய எழுத்தாளரின் நாவல் I am a cat .

3) நோபல் பரிசு பெற்ற தென்னாப்பரிக்க நாவலாசிரியரான J.M. Coetzee யின் நாவல் The Master of Peterburg.

4) தேயிலை எப்படி உலகம் முழுவதும் பரவியது என்பதைப் பற்றி Jason Goodwin எழுதிய பயணக் கட்டுரையான The Gunpowder Gardens.

இதைத்தவிர விடியல் பதிப்பகம் வெளியிட்டுள்ள லியோனார்ட் பெல்டியரின் சூரியனைத் தொடரும் காற்று என்ற சிறைவாழ்க்கை அனுபவங்களை பற்றிய புத்தகம், கங்கைப்பருந்தின் சிறகுகள் என்ற வங்காள நாவல், சங்ககால வரலாற்று ஆய்வுகள், பண்டைத் தமிழர் போர்நெறி, ஆ. இரா. வெங்கடாசலபதியின் முச்சந்தி இலக்கியம், புரிசை கண்ணப்ப தம்பிரான் பற்றிய நினைவுத் தொகுப்பு. லு¡சுன் கதைகள். சிங்கிஸ் ஐத்மேத்தாவின் ஐமீலா, மற்றும் பெரிய எழுத்து அபிமன்னன் சுந்தரிமாலை.

கடந்த வாரத்தில் பார்த்த படங்கள்

1) ஸ்பீல்பெர்க்கின் TERMINAL

2) ஐப்பானிய இயக்குனரான NAGISHA OSHIMA வின் IN THE REALM OF PASSION.

3) பிரேசில் இயக்குனரான KARIM AINOUZ இயக்கிய MADAME SATA.

4) கொரிய இயக்குனரான IM KWON TAEK இயக்கிய கான்ஸ் திரைப்படவிழாவில் சிறந்த திரைப்பட விருது பெற்ற. PAINTED FIRE.

5) சீன இயக்குனரான TIAN MING WU இயக்கி பல உலகப் படவிழாக்களில் கலந்து கொண்ட .THE KING OF MASKS.-

6) மம்முட்டி நடித்த காழ்சா என்ற மலையாளப்படம்

7) ராகேஷ் சர்மாவின் குஜராத் கலவரம் பற்றிய டாகுமெண்டரியான THE FINAL SOLUTION

( புத்தகங்களைப் போலவே என்னிடம் நு¡ற்றுக்கும் மேற்பட்ட சிறந்த திரைப்படங்களின் சேமிப்பு ஒன்றுமுள்ளது. பெரும்பாலும் நண்பர்கள் எனக்காகச் சேகரித்து தந்த டிவிடிக்கள் )

மழை வெறித்த பிறகும் மனதில் நினைவுகளாக சொட்டிக் கொண்டேயிருக்கும் இரண்டு திரைப்படங்களையும் J.M. Coetzee யின் நாவலை பற்றியும் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

திரைப்படவிழாக்களில் ஈரானிய சினிமாக்களுக்கு இருந்த வரவேற்பும் நெகிழ்வும் தற்போது கொரிய திரைப்படங்களை நோக்கி திரும்பியிருக்கிறது. சமீபத்திய கொரியg; படங்களில் பத்திற்கும் மேலாக பார்த்திருக்கிறேன். மென்மையான காதல் கதைகளில் துவங்கி சாகசf; கதைகள் வரை தங்களுக்கென்று தனித்துவத்தை கொண்டுள்ளவையாக கொரியப்படங்கள் வளர்ந்துள்ளன. குறிப்பாக 2002ம் ஆண்டு கான்ஸ் திரைப்படவிழாவில் விருதுபெற்ற PAINTED FIRE. திரைப்படம். சமீபத்தில் நான் பார்த்த மிகச்சிறந்த படங்களில் ஒன்று.

பதினெட்டாம் நு¡ற்றாண்டைச் சேர்ந்த கொரிய ஒவியரான ஒவானின் நிஜ வாழ்வை விவரிக்கும் இத்திரைப்படம் ஒவியர்களின் உலகத்தையும் அதன் தேடுதலையும் துல்லியமாக சித்திரித்துள்ளது.. ஒவான் எனும் சித்திரக்காரனின் வாழ்க்கை தெருவில் பிச்சைக்காரர்களோடு வாழ்வதில் துவங்குகிறது. சாலையோரத்தில் உள்ள பிச்சைக்காரனை ஒவான் கரியால் வரைந்த சித்திரம், நகரின் முக்கிய ஒவியர் ஒருவரால் கவனிக்கபடுகிறது.அவர் ஒவானைத் தனது செலவிலே ஒவியம் கற்றுக்கொள்ள ஒரு மாஸ்டரிடம் அனுப்புகிறார். ஒவியத்தின் நுட்பங்களை கற்றுக்கொள்ள துவங்கும் போது ஒவியத்திற்கு பின்புலமாக உள்ள மெய்த்தேடல் பற்றியும், ஆழ்ந்த தத்துவ ஈடுபாடு பற்றியும் கற்றுக்கொள்கிறான்.

வாலிபவயது அவனை குடியிலும் பெண்களின் மீதான வேட்கையிலும் ஆழந்து போகச் செய்கிறது. கொரியாவின் முக்கிய ஒவியனாக வளரும் ஒவான் தனது சுபாவத்தின் காரணமாகவும் கலையின் மீதுள்ள தனது விடாத தேடுதலின் காரணமாகவும் மற்றவர்களால் கடுமையாக விமர்சிக்கபடுகிறார். ஒவியங்களுக்காக இயற்கையை ஆழ்ந்து கவனிக்க துவங்கிய ஒவான் ஒரு நேரத்தில் அதன் வியப்பில் தன்னைப் பறிகொடுத்துவிட்டு ஒவியனாக இல்லாமல் துறவியை போல தேடித்திரியத் துவங்குகிறான். அவனது புகழ் கொரியா முழுவதும் பரவுகிறது. அவனோ பானை செய்பவர்களுடன் சேர்ந்து கொண்டு மண்பானையில் சித்திரம் வரைந்து தந்தபடி யாரும் அறியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறான். முடிவில் பனிமலையின் தொலைவில் சென்று மறைந்துவிடுகிறான். இப்போதும் அவர் துறவியாக மலைமீது வாழ்வதாக ஒரு ஜதீகம் மட்டும் நிலவி வருகிறது.

தார்கோவெஸ்கியின் ஆந்த்ரே ரூபலாவ் திரைப்படத்தை பார்த்தபோது ஏற்பட்ட அனுபவத்திற்கு இணையானது இத்திரைப்படம். தார்கோவெஸ்கியும் ருஷ்ய ஒவியரான ஆந்த்ரே ரூபலாவின் வாழ்க்கையை, மனவேதனைகளையே படமாக்கியிருப்பார். அத்திரைப்படம் ஒளியால் எழுதப்பட்ட ஒவியங்களின் தொகுப்பு போலவேயிருக்கும்.

கொரியத் திரைப்படத்திலும் காட்சிகள் ஒவியங்களை போலவே படமாக்கபட்டுள்ளன. குறிப்பாக வேனிற்காட்சிகளும், மழைக்காலத்தின் பின்னால் நிலப்பரப்பில் தோன்றும் நிறமாற்றங்களும், ஆகாசத்தில் குருவிக்கூட்டங்கள் நெருநெருவென ஆயிரக்கணக்கில் பறப்பதும் கண்களை அகலவிடாமல் நம்மை பார்த்துக் கொண்டேயிருக்க வைக்கின்றன. இந்த திரைப்படத்தில் இன்னொரு சிறப்பம்சம் அதன் இசை. கொரியாவின் பராம்பரிய காற்றுவாத்தியங்களை பெரிதும் பயன்படுத்தியிருக்கிறார்கள். அந்த இசைக்கருவிகள் கூட நு¡ற்றாண்டு பழமையானவைகளே.

‘**
நீண்ட நாட்களுக்குப் பிறகு மலையாளத்தில் வெளிவந்துள்ள சிறந்தபடம் என்று காழ்சாவைக் கூறலாம். மம்முட்டி ஊர்ஊராகச் சென்று திரைப்படங்களை திரையிட்டு காட்டும் கதாபாத்திரமாக நடித்திருக்கிறார். கேரளாவில் மக்களுக்கான சினிமா இயக்கமாக ஜான் ஆபிரகாமால் துவங்கபட்ட ஒடேசா இயக்கத்தவர்கள் இது போல கிராமம் கிராமமாக சென்று பதேர்பாஞ்சாலியும் பேட்டில் ஷிப் பொடோம்கினும் என உலகின் சிறந்த படங்களை திரையிட்டு வருகிறார்கள்.

மம்முட்டியும் அது போல குட்டநாடு பகுதியின் கிராமம் ஒன்றிற்கு ருஷ்யத் திரைப்படம் ஒன்றை திரையிடுவதற்கு கொண்டு செல்கிறார். காயலில் பயணம் செய்யும் போது படகில் ஒரு சிறுவனை சந்திக்கிறார். அவன் குஜராத் பூகம்பத்தில் உயிர்தப்பி வந்தவன். அந்த சிறுவன் மம்முட்டியை பின்தொடர்ந்தே வருகிறான். ஒரு சந்தர்ப்பத்தில் அவனைத் தன்னோடு தன் வீட்டிற்கு கூட்டிப் போய் தன் குடும்பத்தில் ஒருவனை போல வளர்க்க துவங்குகிறார் மம்முட்டி. குடும்பமும் அவனை ஏற்றுக் கொள்கிறது.

அச்சிறுவனை தனது தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறான் உள்ளுர் அரசியல்வாதி ஒருவன். மம்முட்டி அதை மறுக்கவே சிறுவன் திரும்பவும் குஜராத்திற்கு அனுப்பபட வேண்டும் என்று காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்கபட்டு சிறுவன் குடும்பத்திலிருந்து பிரிக்கப்படுகிறான். முடிவில் சிறுவனை குஜராத்தில் உள்ள கட்ச் பகுதிக்கு மம்முட்டியே கொண்டு செல்கிறார்.

பூகம்பத்தில் இடிந்த வீடுகளும் தெருக்களும் மனதை உலுக்குகின்றன. சிறுவன் உடைந்து மண்ணோடு மண்ணாகியிருக்கும் தனது வீட்டைக் கண்டுபிடிக்கிறான். ஆனால் அவனது குடும்பமே பூகம்பத்தில் இறந்து போயிருக்கிறது. முடிவில் அகதிகள் முகாமில் சிறுவன் சேர்க்கபடுகிறான். அவனை தத்து எடுத்துக் கொள்வதாக மம்முட்டி மண்டியிட்டு கேட்டும் அரசு அதிகாரிகளால் மறுத்து துரத்தப்படுகிறார். கையறுநிலையில் வேதனையோடு சிறுவனை பிரிந்து வருவதோடு படம் முடிவடைகிறது.

சிறுகதையைப் போல மிககச்சிதமாகவும் நேர்த்தியாகவும் படமாக்கபட்டுள்ளது.எவ்விதமான ஆர்ப்பாட்டங்களும் பகட்டான நடிப்பும் வன்முறைகூச்சல்களும் கிடையாது. நடிகர்கள் தாங்கள் ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறோம் என்பது தெரியாமல் நிஜமனிதர்களாக நடமாடுகிறார்கள். சிறுவன் படம் முழுவதும் குஜராத்திமொழியிலே பேசுகிறான். பாஷை புரியாமலும் அவனது உணர்ச்சி நம்மை கலங்கசெய்கிறது.

*** இதுபோலவே J.M. Coetzee யின் நாவல் The Master of Peterburg. ருஷ்ய எழுத்தாளரான தஸ்தாயெவ்ஸ்கியின் வாழ்க்கையில் நடைபெற்ற சிறுசம்பவத்தை பற்றியது. அவரது வளர்ப்பு பையன் ரகசிய அரசியல் இயக்கத்தில் உறுப்பினராக இருப்பதை அறிந்து காவல்துறை அவனைக் கைது செய்து அழைத்துப் போய்விடுகிறது. அவனை மீட்பதற்கும் தன்னைப் போலவே அவனும் சிறைவாழ்விற்குப் பலியாகிவிடக்கூடாது என்ற ஏக்கத்தோடு அவனைப்பற்றிய விபரங்களை தேடியலையவதுமாக ஒரு அப்பாவிற்கும் மகனுக்குமான வெளிப்படுத்தபடாத அன்பை முன்வைக்கிறது. கோட்ஷியின் நாவல். (தமிழில் இந்நாவல் தற்போது சா. தேவதாஸால் மொழிபெயர்க்கபட்டு வருகிறது.).

உம்பர்த்தோ ஈகோவின் கட்டுரைத் தொடரைப் படித்து முடித்தபோது இத்தனை கேலியாகவும் எளிமையாகவும் எழுத முடிகிறதே என்று வியப்பாகயிருந்தது. அத்தோடு ஈகோ தமிழ் இலக்கிய சூழலில் பின்நவீனத்துவ அறிவுஜீவியாக மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டு இங்குள்ள பலரும் மிரண்டு போயிருந்தது நினைவிற்கு வந்தது. சமகால எழுத்தாளர்களில் ஈகோ மிக முக்கியமானவர். விருப்பமும் நேரமுமிருந்தால் அவரது Name of the Rose நாவலை வாசித்துப் பாருங்கள். சினிமா ரசிகராகயிருந்தால் சீன்கானரி நடித்து இந்நாவல் படமாக வெளியாகியுள்ளது. படத்தைப் பாருங்கள் பிறகு புரியும் உம்பர்தோ ஈகோ எப்படிபட்டவர் என்று.

** சற்றே நீண்ட, கலவையான கட்டுரையாகிவிட்டது. கடந்த ஒரு மாதமாகவே பயணம், புத்தகவேலை என்று இழுத்துக் கொண்டு போகிறது வாழ்க்கை. தொடர்ந்து எழுதுவதற்கு விருப்பமிருந்தும் சந்தர்ப்பங்கள் குறைவாகயிருக்கின்றன. அதை ஒழுங்கு செய்து கொண்டிருக்கிறேன். இனி முன்போல தொடரும் என்று நம்புகிறேன்.

**


நாள் : 10/20/2004 12:35:32 PM, எஸ் ராமகிருஷ்ணன்

காணிக்காரர்கள்

கன்யாகுமரி மாவட்டத்தின் கீரிப்பாறை மலையில் உள்ள வெள்ளாம்பி பகுதியில் வசிக்கும் காணிக்காரர்கள் மரங்களின் மீது வீடு கட்டிக்கொண்டு குடியிருந்து வரும் ஆதிவாசிகளாகும். இயற்கை குறித்து ஏரளமான கதைகளும் பாடல்களும் இந்த ஆதிகுடிகளிடம் நிரம்பியிருக்கின்றன. எரிக் மில்லர் என்ற அமெரிக்க பல்கலைகழகத்தின் ஆய்வாளர் இவர்களை பற்றி ஆய்வுசெய்து வருகிறார். அவரது ஏற்பாட்டின் பேரில் நான்கு நாட்கள் காணிக்காரர்கள் சென்னைக்கு வருகை தந்து இங்குள்ள பள்ளிமாணவர்களுக்கு தங்கள் கதைகளை, பாடல்களை விளையாட்டை அறிமுகப்படுத்தினர். அதன் ஒரு பகுதியாக பொதுமக்களின் பார்வைக்கு ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள்.

அண்ணாசாலையில் உள்ள புக்பாயிண்டில் ஞாயிற்றுகிழமை நடந்த இந்த நிகழ்ச்சிக்கு பத்துக்கும் குறைவான குழந்தைகளே வந்திருந்தார்கள். மொத்தப் பார்வையாளர்களும் சேர்ந்தால் இருபத்தைந்து பேர் இருக்க கூடும். காணிக்காரர்கள் மிகுந்த ஆச்சரியத்துடன் ஹைடெக் வசதிகளுடன் உள்ள ஹாலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள் வந்திருந்த காணிகளில் பலரும் சர்வசாதாரணமாக மில்லரின் லேப்டாப்பை இயக்கியதும், அவரது டிஜிட்டில் காமிராவை உபயோகித்து படமெடுத்தது. பார்வையாளர்களுக்கு மிக விநோதமாக இருந்தது. முருகன் என்ற காணிக்கார இளைஞர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

காணிகளின் கலைக்குழு என்று அழைத்துக் கொள்ளும் பத்து குடும்பங்கள் இந்த நிகழ்ச்சிக்காக வந்திருந்தார்கள். அவர்களது கதையும் பாடல்களும் மலையாளம் கலந்தே காணப்படுகின்றன. கதைகளில் பெரும்பாலும் காட்டுவிலங்குகள் பற்றியும் காட்டிலிருக்கும் அரிய மூலிகைகள் பற்றியும் அதிகம் பேசுகிறார்கள். தமிழகத்தின் மற்ற இடங்களில் குழந்தைகள் விளையாடும் சில விளையாட்டுகள் அதன் மாற்றுவடிவங்களில் இங்கே காணமுடிகிறது. குறிப்பாக குலைகுலையாம் முந்திரிக்காய் நரியே நரியே சுற்றிவா. (நரியே என்பது நிறைய என்று பொருள் என்று காணிவிளக்கி சொன்னார்) கொள்ளையடிச்சவன் எங்கயிருக்கான் கூட்டத்திலிருப்பான் கண்டுபிடி என்ற விளையாட்டு பாடல்வழியே காட்டிலிருந்து என்ன பொருட்கள் கொள்ளையடிக்கபடுகின்றன என்ற விபரத்தை காணிகள் பாடுகிறார்கள்.

அது போலவே நண்டு ஊறுது நரியுறுது என விரல்களை பிடித்துவிளையாடும் விளையாட்டில் விரல்கள் ஒவ்வொன்றையும் ஒரு மரமாக கொள்கிறார்கள். ஒரு குரங்கு மரத்தில் தாவி குதிக்கிறது என்று சொல்லி ஒவ்வொரு விரலாக தாவுகிறார்கள். பிறகு மழைவந்துவிட்டது குகைக்குள் ஒடி ஒளிந்து கொள்ளவேண்டும் என்று சொல்லியபடியே தோள்பட்டை அடியில் கக்கத்தினுள் விரலை நுழைந்து கிச்சுகிச்சு காட்டுகிறார்கள். கக்கம் தான் குகை என்று சொல்வது சுவாரஸ்யமான கற்பனையாகயிருக்கிறது.

அது போலவே நான்கு சிறுமிகள் வட்டமாக உட்கார்ந்து கொண்டு தலைவாறுவதற்கு ( ஈருளி) பேன் சீப்பு வேண்டும் என்று கேட்கிறார்கள். அந்த விளையாட்டில் சீப்பை ஒளித்து வைத்துவிட்டு சிறுமிகள் தங்கள் கால்களை ஒன்றுசேர்த்தபடியே சுழன்றுவருவது வேடிக்கையாகயிருந்தது.ஞங்கிலி பிங்கிலி என்ற நகைச்சுவை பாடல் அர்த்தம் ஏதுவுமற்ற வார்த்தைகளால் நிரம்பியிருந்தது.

சென்னை நகர குழந்தைகள் மிகுந்த நாகரீகத்துடன் வாய்விட்டு சிரிப்பதற்கு கூட கூச்சத்துடன் அந்த காட்சிகளை பார்த்துக் கொண்டிருந்தார்கள். காணிகளிடம் உள்ள கற்பனைதிறனை காணும் போது வியப்பாகயிருக்கிறது. அவர்கள் இயற்கையை காட்சிபடிமமாக மாற்றிக் கொள்கிறார்கள். அவர்களது பாடல்கள் அதற்கு சாட்சியாகயிருக்கின்றன. பகல் என்பது ஒரு மீன் இரவு என்பது ஒரு வீரன். பகல் போய்க்கொண்டேயிருக்கிறது. இரவு நம்மை சுற்றிலும் காவல்காக்கிறது என்று அவர்களின் பாடல் ஒன்று துவங்குகிறது. நவீனகவிதையின் விதைகள் இங்குதானிருக்கின்றன.

காணிகள் ஒடுக்கமான முகத்துடனும் குள்ளமான உடல்வாகையும் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் அதிகம் படித்தவர் தற்போது பள்ளியிறுதியாண்டை முடித்த இருவர் மட்டுமே. காட்டுவேலைகள் செய்து வாழ்ந்து வரும் அவர்கள் மரங்களில் பரண்வீடு அமைத்து தங்கிக் கொள்கிறார்கள். தற்போது அவர்களுக்கு என தனியான பள்ளியொன்று கட்டப்பட்டிருக்கிறதாம்.

பரபரப்பும் ஆர்ப்பட்டமும் மிக்க சென்னைநகரை காணிகளில் பலரும் முதல்முறையாக கண்டிருக்கிறார்கள். நகரில் கேட்கும் கூச்சலும் இடைவிடாத பேச்சும் தான் அவர்களால் புரிந்து கொள்ள முடியவேயில்லை. எதற்காக இப்படி கத்துகிறார்கள் என்று கேட்கிறார்கள். சென்னையில் அவர்கள் மிக ஆசையாக காலணிகளை வாங்கியதை காட்டினார்கள். கிரிக்கெட் போட்டியின் பரபரப்பிலும் புதுப்படத்திற்கு டிக்கெட் வாங்க அலை மோதும் கூட்டத்திற்கும் இடையில் காணிகளின் குரல் வெளித்தெரியாமலே போய்விட்டது.

காணிக்காரர்கள் ஒவ்வொரும் தங்கள் பையில் சிறிய கூழாங்கல் ஒன்றை வைத்திருக்கிறார்கள்.ஊர் ஞாபகம் வந்தால் அதை கையில் வைத்து உருட்டிக் கொள்வோம் என்று சிரித்தபடி சொன்னாள் ஒரு காணிக்காரப்பெண்.

மரங்களில் வீடு கட்டிவாழ்வோம் என்று மலைவாசி சொன்னதை கேட்ட சென்னை சிறுமியொருத்தி நீங்கள் எல்லாம் பறவைகளா என்று கேட்டது தான் மாநகரின் நிஜம். காணிகளை பார்க்கும் போது இயல்பாகவே சில சந்தேகம் நம்மைபற்றி வருகிறது. சென்னையில் சூரியனை ஒரு நாளைக்கு ஒருமுறையாவது ஏறிட்டு பார்ப்பவர்கள் எவ்வளவு சதவீதமிருப்பார்கள்? காகம் குருவி தவிர வேறு பறவைகளை குழந்தைகள் கண்டிருக்கிறார்களா? கதைகளையும் பாடல்களையும் நாம் மனதிலிருந்து மெல்ல அப்புறப்படுத்திவிட்டு அந்த இடத்தை தொலைக்காட்சிக்கு தந்துவிட்டோம். குழந்தைகள் தொலைக்காட்சியில் தான் கதைகேட்டுவளர்கிறார்கள். இன்றைக்கும் ஒரு ஆய்வுப்பொருளாக மட்டும் ஆதிவாசிகள் மிஞ்சியிருப்பது தான் நமது துரதிருஷ்டம். யோசித்துப் பார்க்கும் போது புரிகிறது காணிகளிடம் நாம் கற்றுக்கொள்வதற்கு நிறைய இருக்கிறது என்று..


நாள் : 10/8/2004 2:57:25 PM

உலகமயம்

சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக வருமானவரித்துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அகில இந்திய எழுத்தாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டிருந்தேன். தேசிய அளவிலான கருத்தரங்கம் இது. உலகமயமாக்கலும் அதன் சமூக, கலாச்சார விளைவுகளும் பற்றியது இக்கருத்தரங்கம். குறிப்பாக ஒவ்வொரு மொழியிலும் உலகமயமாக்கல் அங்குள்ள இலக்கியங்களில் எப்படி பிரதிபலிக்கபட்டிருக்கின்றது என்பதைக் குறித்து விவாதிப்பதற்காக சென்னையில் நடைபெற்றது.

அஸ்ஸாமி, பஞ்சாபி, ஒரியா, மராத்தி, குஜராத்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, தமிழ் , ஹிந்தி மொழிகளை சேர்ந்த 35 படைப்பாளர்கள் கலந்து கொண்டார்கள். எட்டு அமர்வுகளாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நேற்று மதியம் சிறுகதை அமர்வின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டேன். இன்று காலை நடைபெற்ற சமகால இலக்கியம் பற்றிய அமர்வில் உரையாற்றினேன். கருத்தரங்கில்
* பிரபஞ்சன்,
* ஜெயகாந்தன்,
* சா.கந்தசாமி
* அசோகமித்ரன்
ஆகியோர் கலந்து கொண்டனர்.

உலகமயமாக்கல் பற்றி தமிழில் அதிகம் நு¡ல்கள் வெளியாகவில்லை. குறிப்பாக படைப்பிலக்கியத்தில் அது குறித்த தீவிரமான பார்வைகள் உருவாகவில்லை. நான் உலகமயமாக்கல் கலாச்சாரத்தில் ஏற்படுத்திவரும் மாற்றங்கள் குறித்து எனது பார்வைகளை பகிர்ந்து கொண்டேன். குறிப்பாக தமிழ் மொழி கல்வபிப்புலங்கள் மற்றும் தொடர்பு சாதனத்திலிருந்து மெல்ல விலக்கபட்டு வருவதையும் தமிழின் மரபான இலக்கியங்கள் மற்றும் அறிவுசார் துறைகள் புறக்கணிக்கபடுவதையும் பற்றி எடுத்துரைத்தேன்.

பிரபஞ்சன் ந.பிச்சமூர்த்தி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே தனது கவிதையில் உலகமயமாக்கல் பற்றி மிக விளக்கமாகச் சொன்னார். பூவுலகின் நண்பர்கள் என்ற அமைப்பு தொடர்ந்து தமிழில் உலகமயமாக்கலின் விளைவுகள் பற்றிய நு¡ல்களை வெளியிட்டுவருகிறார்கள். அது போலவே பிரளயன் வீதி நாடகங்கள் நடத்தி வருகிறார். உலகமயமாக்கலின் போது உலகம் ஒரே கிராமமாகிவிடும் என்கிறார்கள். அது நிஜம். ஆனால் கிராமங்கள் உயிரோடு இருக்குமா என்பது சந்தேகத்திற்குரியது தான்.

தெலுங்கிலும் ஹிந்தியிலும் தீவிரமாக இப்பிரச்சனைகள் விவாதிக்கபட்டிருக்கின்றன. அதன் பிரதிநிதிகளாக வந்த எழுத்தாளர்கள் வாசித்த கட்டுரைகளில் அதை உணர்ந்து கொள்ள முடிந்தது.

ஊரான் ஊரான் தோட்டத்திலே

ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்காய்

காசுக்கு ரெண்டு விக்க சொல்லி

காயிதம் போட்டான் வெள்ளைக்காரன்

இந்த நாட்டுப்புறப்பாடல் உலகமயமாக்கல் என்பது காலனியாக்குவதிலிருந்து துவங்குகிறது என்பதையே காட்டுகிறது. ஹிந்தியிலும் ஆங்கிலத்திலுமாக நடைபெற்ற இக்கருத்தரங்கம் புதிய விவாதங்களை உருவாக்கியதோடு பரஸ்பரம் எழுத்தாளர்களுக்குள் ஒரு பகிர்ந்து கொள்ளலை உருவாக்கியது. ஹிந்தியில் சமகால தமிழ்சிறுகதை தொகுப்பு ஒன்றை தொகுக்கும் திட்டம் ஒன்றும் இங்கு முடிவு செய்யபட்டுள்ளது.


கட்டபொம்மன் காடு

சுதந்திரப்போராட்டம் பற்றிய நினைவுகள் வெறும் காகிதக்குறிப்புகளாக மட்டும் எஞ்சியிருக்கும் சமகாலத்தில் ஒரு கிராமம் சரித்திரத்தின் நிழலிலே வாழ்ந்து கொண்டிருக்கிறது. பாஞ்சாலங்குறிச்சி பிடிபட்ட பிறகு அங்கிருந்து தப்பிய கட்டபொம்மன் தலைமறைவாக வாழ்வதற்கு புதுக்கோட்டைப் பகுதிக்கு வந்து சேர்ந்தான். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதிக்கு பக்கத்தில் உள்ள குமாரபட்டி என்ற ஊரின் புறவெளியில் உள்ள அடர்ந்த காட்டில் கட்டபொம்மன் ஒளிந்திருந்தாகவும், அவனை தந்திரமாக காவலர்கள் பிடித்ததாகவும் சரித்திரக்குறிப்புகள் கூறுகின்றன. நு¡ற்றாண்டுகளைக் கடந்து இன்றும் அந்தக் கிராமத்தில் கட்டபொம்மன் ஒளிந்திருந்த காடு அப்படியே பாதுகாக்கபட்டு வருகின்றது. அதை உமைங்குறை என்று மக்கள் அழைக்கிறார்கள்.

அந்த கிராமத்து மக்கள் தங்கள் ஊரில் வந்து ஒளிந்திருந்த கட்டபொம்மனைப் புதுக்கோட்டை அரசரின் ஆணையின்படி பிடித்துக் கொடுத்துவிட்டார்களே என்ற குற்றவுணர்ச்சியில் கட்டபொம்மன் ஒளிந்த காட்டை எந்த சிதைவுமின்றி தெய்வம் போல வழிபடுகிறார்கள். அக்காட்டிலிருந்து சிறு சுள்ளிஒடிப்பது கூட கிடையாது. மரங்கள் தானாக விழுந்து மக்கிக் கிடக்கின்றன. கட்டபொம்மனோடு சேர்ந்து ஒளிந்திருப்பதாகச் சொல்லப்படும் ஊமைத்துரையை அவர்கள் தெய்வமாக வழிபடுகிறார்கள்.

கட்டபொம்மன் ஒளிந்திருந்த காலத்தில் விருந்திற்கு அழைத்து அவன் இலையில் சாப்பாட்டை கையில் எடுத்த போது முதுகின் பின்னிருந்து மடக்கிப் பிடித்துவிட்டார்கள் என்று கர்ணபரம்பரைக் கதையொன்றும் அக்கிராமத்திலிருக்கிறது. காட்டில் து¡ர்ந்து போயிருக்கக் கூடிய சிறிய கண்மாய் ஒன்றும் காணப்படுகிறது. பெரிய வட்டப்பாறையும் அதன் அருகில் வேங்கை மரங்களுமிருக்கின்றன. மயில்கள் நிறைய தென்படுகின்றன, ஆள்உயர கள்ளி மரங்களும் காட்டுப்புளியமரங்களும் கொண்ட அந்தக் காடு இப்போதும் வெயில் நுழைய முடியாதபடி தானிருக்கிறது.

அந்த காட்டுபகுதி அக்காலத்தில் சிவகங்கை ஜமீனுக்கும் புதுக்கோட்டை சமஸ்தானத்திற்கும் எல்லையில் அமைந்திருக்கிறது. யாராவது பிடிக்கவந்தால் ஒரு பக்கமிருந்து இன்னொரு பகுதிக்கு போய்விடலாம் . அதனால் தான் அங்கே கட்டபொம்மன் ஒளிந்திருந்தாக சொல்கிறார்கள்.

காலம் எத்தனையோ விஷயங்களைக் கடந்து சென்றுவிட்டிருக்கிறது. ஆனாலும் கிராமத்து மனிதர்களின் நினைவில் இன்னமும் கட்டபொம்மனும் ஊமைத்துரையும் வாழ்கிறார்கள் என்பதற்குச் அத்தாட்சியாகயிருக்கிறது இக்கிராமம்.

பாலாஜி: 10/10/2004 , 9:13:26 AM
மருதுபாண்டியர்கள் இதே போல் அடர்ந்த காட்டில் மரத்தினால் ஆன குகைக்குள் ஒளிந்திருந்தார்களாம். அந்த மரமும், குகையும் காட்டினுள் சென்று புகைபிடித்த பாக்கியினால், தீ அபகரித்துவிட்டதாக குமரி அனந்தன் பேச கேட்டிருக்கிறேன்.


Webulagam நேர்காணல் – எஸ். ராமகிருஷ்ணன்

May 16, 2012 1 comment

 

ஆசிரியர் பற்றி :

இவர் விருதுநகரில் வசிப்பவர். தொடர்ந்து எழுதிக்கொண்டு இருப்பவர். சன் டி.வி-யில் செய்திப் பிரிவில் வேலை செய்து வந்த இவர், எழுத்தில் கவனம் செலுத்த இயலாத காரணத்தால், வேலையை ராஜினாமா செய்தார். இதுவரை 3 சிறுகதைத் தொகுப்புகளும், இரண்டு மொழி பெயர்ப்பு நூல்களும், லத்தீன் அமெரிக்க மேதையான ஜார்ஜ் லூயிஸ் போர்ஹெஸ் பற்றிய ஒரு நூலும் `உப பாண்டவம்’ என்ற நாவலும் வெளிவந்திருக்கின்றன. இது தவிர சிறுகதைகள், கட்டுரைகள், மதிப்புரைகள் என இலக்கியத்தில் தனக்கென ஒரு ஸ்டைலையும், சுயமுகமான பார்வைகளையும் வைத்திருப்பவர். இணைய தளங்களிலும் நேரம் கிடைக்கும்போது, எழுதிவருகிறார். சமீபமாக சென்னைக்கு `மின்பிம்பங்கள்’ வேலையாக வந்திருந்தபோது அவரைச் சந்தித்து உரையாடினோம், அதன் பேட்டி வடிவமே இங்கு கொடுக்கப்படுகிறது. `கவிதைக்கும் இதுவரை இருக்கும் சிறுகதை வடிவங்களுக்கும் இடையே நான் ஒரு `கதைசொல்லல்’ முறையை – ஒரு `Fable’ போன்ற வடிவத்தைக் கட்டமைக்க முயற்சி செய்து வருகிறேன்’ என்று முன்பு ஒரு நேர் பேச்சில் குறிப்பிட்டது, இவரை எங்கள் இணையத்திற்காக சந்திக்கத் தூண்டியது எனலாம்.

 

கேள்வி : உங்கள் கதைகள் ஒரு காலகட்டத்திற்குப் பிறகு – வாழ்வனுபவமாக இல்லாமல் – படிப்பு அனுபவமாகப் போயிருப்பதாக உணர்கிறேன். படிப்பு அனுபவம் / படைப்பு அனுபவம் என்ற வித்தியாசத்தை பலர் வலியுறுத்துகின்றனர் – நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

ஏஸ். ரா : முதலில் படிப்பு / படைப்பு பேதத்தை நான் மறுக்கிறேன். அனுபவம் என்பது உங்களுக்கு மட்டுமே நேர்வது என்பது மட்டுமே அல்ல, உங்களுக்கு நேராத ஒன்றும் வேறு வழியாக உங்களை வந்து சேர்கிறது. குடும்ப உறவுகள், வெளி வட்டாரப் பழக்க வழக்கங்களில் நாம் எல்லாவற்றையுமே நேரடியாக அனுபவிப்பதில்லை. ஆகவே அனுபவம் என்பது உங்களுக்கு நேர்ந்த மற்றும் நேராதவைகளின் திரட்சியேயாகும். அனுபவம் என்பது அதன் திரும்ப திரும்ப நடக்கும் தன்மையிலேயே நம்மிடம் வடிவம் பெற்றுக் கொள்கிறது, பல லட்சம் முறை ஒரே நேரத்தில் நிகழ்வுகள் நடக்கும்போது அது யாருக்கு நடக்கிறதோ அதை வைத்து தன்னை அது வடிவமைத்துக் கொள்கிறது.

சாலையில் ஒரு புறம் சைக்கிள் வருகிறது – மறுபுறம் பைக் ஒன்று வருகிறது. இது ஒரு மூன்றாம் மனிதனுக்கு அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சியாகும். ஆனால் அங்கு ஒரு விபத்து ஏற்படும்போது மூன்றாவது மனிதனுக்கு அதில் ஒரு அதிர்ச்சி அல்லது வேறு ஏதோ ஒரு உணர்வு ஏற்படுகிறது. இங்கு தான் அனுபவம் சாத்தியமாகிறது. ஆனால் பைக் ஓட்டுபவனுக்கோ – சைக்கிளில் வந்தவனுக்கோ அது வேறு மாதிரியான பாடங்கள் கற்றுக் கொடுக்கிறது, உதாரணமாக பைக் ஒட்டுபவர் இனிமேல் இன்டிகேட்டரை ஒழுங்காக உபயோகிப்பான், சைக்கிள்காரன் ஒரு பெல் வாங்கி வைப்பான். நுஒயீநசநைnஉந ளை டநயசniபே. அனுபவம் க்ஷல யீசடினரஉவள – களை உற்பத்தி செய்து கொண்டே இருக்கிறது. ஆகவே `அனுபவம்’ சந்தர்ப்ப செயலாகவோ, அல்லது திட்டமிட்டதாகவோ இருப்பதன் உணர்வு நிலையின் திரட்சி.

இன்னொரு உதாரணம் சொல்லணும்னா – நீங்க வீட்டுக்கு போவதற்கும், செங்கல்பட்டு ரயில்வேலைனில் மாடு மேய்வதற்கும் எந்த தொடர்பும் இல்லை – உங்கள் அனுபவத்தில், ஆனால் அந்த மாடு அடிபட்டு, அதனால் ரயில்நின்று, கேட் திறக்காமல் போனால், நீங்கள் வீட்டுக்குப் போக ஏற்படும் தாமதம், உங்கள் உணர்வு நிலையை பாதிக்கக்கூடியது. அப்போது இந்த நிகழ்ச்சி ஒரு அனுபவமாகிறது. நிகழ்ச்சிகள் அதனதன் ஒழுங்கில் நடந்து கொண்டிருக்கின்றன. அதற்கென்று ஒரு `ஒழுங்கமைவு’ இருக்கிறது. இந்த ஒழுங்கு `Disturb’ ‘ ஆகும்போது உங்க அனுபவமும் மாத்தி அமைக்கப்படுகிறது.

Tamil Writer S Ramakrishnan Interview in Thendral by Arvind Swaminathan: Literary Icons Series

May 13, 2012 1 comment

தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான படைப்பாளி எஸ். ராமகிருஷ்ணன். வெகுஜன வாசகர்களிடம் இலக்கியத்தைக் கொண்டு சேர்த்ததில் முக்கியமானவர். வாசகனை அப்படியே ஈர்த்துக் கொள்ளும் தனித்துவமான மொழிக்குச் சொந்தக்காரர். இலக்கியச் சிந்தனை விருது, இயல் விருது, விஸ்டம் விருது, கண்ணதாசன் விருது, நல்லி-திசையெட்டும் விருது, இலக்கியச் சுடர் விருது, தாகூர் விருது எனப் பல விருதுகள் பெற்றவர். உலக சினிமா, உலக எழுத்தாளர்கள் என உலக இலக்கியங்கள் பலவற்றைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்தவர். இன்றும் தனது பல சொற்பொழிவுகள், கருத்தரங்குகள் வழியாக அப்பணியைத் தீவிரமாகச் செய்து கொண்டிருப்பவர். சமீபத்தில், ரஷ்ய கலாச்சார மையத்தில் உலக இலக்கியம் பற்றி இவர் ஆற்றியுள்ள சொற்பொழிவு தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு திருப்புமுனை. இவருடைய நூல்கள் கல்லூரிகளிலும் பல்கலைக்கழங்களிலும் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. இவருடைய படைப்புகளைப் பற்றி ஆராய்ந்து பலர் எம்ஃபில், பிஎச்டி பட்டம் பெற்றுள்ளனர். இலக்கியம், பத்திரிக்கை, சினிமா, குறும்படம், நாடகம், ஆய்வு, பயிலரங்குகள், இணையம் என்று மிகத் தீவிரமாக இயங்கிக் கொண்டிருப்பவரை தென்றலுக்காகச் சந்தித்தோம். அந்தச் சந்திப்பிலிருந்து…

கே: உங்களது எழுத்துக்கான விதை விழுந்தது எப்போது, எப்படி?

ப: என்னுடைய ஊர் இன்றைய விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மல்லாங்கிணறு. பூர்வீகமாக விவசாயக் குடும்பம். இருந்தாலும் இரண்டு தலைமுறைகளுக்கு முன்பாகவே கல்வியைப் பிரதானமாக எடுத்துக் கொண்ட குடும்பம். அப்பா, அம்மா இரண்டு வழியிலும் எல்லோருமே படித்தவர்கள். அப்பா கால்நடை மருத்துவர். சித்தப்பா எஞ்சினியர். அந்தச் சின்ன கிராமத்தில் எல்லா நாளிதழ்களும், பத்திரிகைகளும் எங்கள் வீட்டுக்கு வரும். வீட்டில் ஒரு நூலகமும் இருந்தது. எனக்கு இரண்டு விதமான பாதிப்புகள் இருந்தன. ஒன்று, அம்மா வழி தாத்தா மூலம் வந்தது. அவர் சைவ சித்தாந்தத்தில் மிகப்பெரிய அறிஞர். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கல்வி அதிகாரியாகப் பணியாற்றியவர். தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் நல்ல புலமை உடையவர். அவர் எல்லாத் தமிழ் இலக்கியங்களையும் கற்று வைத்திருந்தார். அப்பா வழித் தாத்தா பெரியார்வழிச் சிந்தனை உடையவர். தாத்தா வீட்டுக்கே ‘பெரியார் இல்லம்’ என்றுதான் பெயர். திராவிட இயக்கத்தின் ஆரம்பகால பாதிப்பு எங்கள் குடும்பத்தில் இருந்தது. சீர்திருத்தத் திருமணங்கள், அரசியல் விவாதங்கள், பகுத்தறிவு சிந்தனைகள் வீட்டிற்குள் அறிமுகமாயின . ஆகவே என்னுடைய சிறுவயது வாழ்க்கை இந்த இரண்டு

எதிர்துருவங்களுக்குள் இருந்தது. ஆனாலும் அவர்கள் எல்லோருமே படிப்பதை, விவாதிப்பதை, பேசுவதை, எழுதுவதை நேசிப்பவர்களாக இருந்தார்கள். என்னுடைய அண்ணன், மாமா சித்தப்பா என எல்லோரும் இலக்கியம், எழுத்தாளர்கள் பற்றிப் பேசிக் கொண்டிருப்பார்கள். எழுத்துக்கான ஒரு களம் என் வீட்டில் இருந்தது.

எனது சித்தப்பாவுக்கு ரஷ்ய மொழி தெரியும் என்பதால் நிறைய ரஷ்ய நூல்கள், சஞ்சிகைகளை அவர் வாங்குவார். வீட்டிலும், நூலகத்திலும், நண்பர்கள் சொல்லும் நூல்களைப் படித்தும் எனது எழுத்தார்வத்தை வளர்த்துக் கொண்டேன். கல்லூரிப் பருவத்திலேயே நான் எழுத்தாளர் ஆவதென்று முடிவு செய்துவிட்டேன். ஆங்கில இலக்கியம் படித்தேன். காலிகட் யூனிவர்சிடியில் நாட்டுப்புற இலக்கியத்தில் பிஎச்.டி. செய்தேன். ஆனால் கல்வி அடிப்படைத் தகுதியாக இருந்தால் போதும். அதை வைத்து வாழ வேண்டிய அவசியமில்லை என்ற முடிவுக்கு வந்தேன். ஒரு சாதாரண மனிதன் வாழ்க்கையை எப்படி எதிர்கொள்கிறானோ அப்படி எதிர்கொள்ள நினைத்தேன். அதற்காக என்னைத் தயார்ப்படுத்திக் கொண்டேன். ஐந்தாண்டுகள் இந்தியாவின் எல்லா முக்கியமான நூலகங்களுக்கும் சென்று படித்தேன். இந்தியாவைப் பற்றி முழுமையாக அறிய வேண்டும் என்ற எண்ணத்தில் நிறையப் பயணம் செய்தேன். படித்த புத்தகங்களை விட, நான் கற்றுக்கொண்ட எல்லாவற்றையும் விட, நேரடி வாழ்க்கை மிகப் பெரியது; அது கற்றுத்தரும் பாடம் மிகப்பெரிது என்பதை என் பயணங்களில் தெரிந்து கொண்டேன். ஒரு தேசாந்திரியாக என்னைக் கருதிப் பயணம் செய்துகொண்டே இருந்தேன். அந்தப் பயண அனுபவங்களும், படித்த விஷயங்களும், எனக்கு வழிகாட்டியவர்களும், நான் படித்து வியந்த உலகத்தின் மிகச் சிறந்த எழுத்தாளர்களும்தான் நான் எழுதுவதற்குக் காரணம். இப்போதும் அதே மனநிலையில் கற்றுக்கொள்வது, பயணம் செய்வது, தேடிப்போவது என்ற ஆர்வங்களுடன்தான் இருக்கிறேன். எழுத்து, பயணம் இரண்டும் மாறி மாறி நடந்துகொண்டு இருக்கிறது.

கே: உங்களது முதல் கதை குறித்து…


ப: என்னுடைய முதல் கதை ‘கபாடபுரம்’. கபாடபுரம் என்னும் அழிந்து போன நகரைப் பற்றிப் படித்தபோது எனக்குள் ஒரு கற்பனை தோன்றியது. அதைக் கதையாக எழுதினேன். அந்தப் பிரதி பின்னால் தொலைந்து போய் விட்டது. அச்சில் வெளியான என்னுடைய முதல் கதை ‘பழைய தண்டவாளம்’. கணையாழியில் வெளியானது. அந்தக் கதைக்கே எனக்கு ‘இலக்கியச் சிந்தனை’ பரிசு கிடைத்தது. என்னுடைய முதல் புத்தகத்துக்குச் சிறந்த புத்தகம் விருது கிடைத்தது. ஆக, நான் எழுதத் தொடங்கும் போதே அடையாளம் காணப்பட்ட ஒரு எழுத்தாளன்தான். அதற்கு முக்கியமான காரணம், நான் எழுதத் தொடங்குவதற்கு முன்னால் பத்தாண்டுக் காலம் அதற்காகத் தயார் ஆனேன். ஆங்கில இலக்கியம், உலக இலக்கியம் என நிறையப் படித்தேன். விடுமுறை நாட்களில் நிறைய நேரம் படித்துக் கொண்டேயிருப்பேன். காலை, மாலை நண்பர்களுடன் விளையாடும் நேரம் தவிர்த்து வேப்ப மரத்து அடியில் அல்லது கிணற்றுப் படிக்கட்டுகளில் அமர்ந்து படித்துக் கொண்டிருப்பது எனது இயல்பு. புத்தகங்களுடன் பயணம் செய்வது எனக்கு மிக விருப்பமானது. எனது குடும்பச் சூழலும் எனது படிப்பிற்குத் தடை சொல்லாத ஒன்றாக இருந்ததால் இது சாத்தியமானது.

கே: எழுத்தாளர் கோணங்கியுடன் சேர்ந்து நிறைய இலக்கியப் பயணங்கள் செய்திருக்கிறீர்கள் அல்லவா?


ப: ஆம். கோணங்கி எனக்கு முன்பாக என் அண்ணனின் நண்பர். பயண விருப்பமே எங்கள் இருவரையும் ஒன்று சேர்த்தது, பயண ஆர்வம் உடையவர்கள் என்பதால் இணந்தே ஊர் சுற்றுவோம் ஆனால் ஒருவரையொருவர் சுமையாக நினைப்பதேயில்லை, அவரவர் விருப்பத்தின்படி பயணம் செய்வோம். ஒருவரையொருவர் கட்டுப்படுத்திக் கொள்ள மாட்டோம். ஒரே ஊரில் ஒரே இடத்தைப் பார்க்கும் போது எனக்கு ஒரு பார்வையும் அவருக்கு ஒரு பார்வையும் இருக்கும். அப்படிப் பயணத்திற்கான ஒரு நண்பர் கிடைப்பது அபூர்வம். கோணங்கியும் நானும் இரண்டு பறவைகள் போல. ஒரே வானத்தில் பறந்து கொண்டிருந்தாலும் எங்களின் இயல்புகள் வேறு. ஒரே மரத்தில் அந்தப் பறவைகள் அமரலாம். ஆனால் எந்தப் பறவை எப்போது பறக்கும் என்பது அதனதன் சுதந்திரம் சார்ந்தது. இப்போதும் நாங்கள் சந்திக்கிறோம். பயணம் செய்கிறோம். ஆனால் அவரவர்க்கான வழியில் செய்கிறோம். ஆனால் அந்தப் பயணங்களைப் பற்றி நான் அதிகம் எழுதியதில்லை. காரணம், அவை எழுதுவதற்கான விஷயமில்லை. வாழ்வதற்கான விஷயம்.

கே: வாசகனைக் கட்டிப்போடும் தனித்துவமான மொழி உங்களுடையது. இந்த மொழி ஆளுமை, எளிமை எப்படி வசப்பட்டது?
ப: மொழியில் எளிமை அவ்வளவு எளிதில் கைவந்து விடாது. நீங்கள் எழுதும் விஷயம் பற்றி எவ்வளவிற்குத் தெளிவாக இருக்கிறீர்களோ அந்த அளவுக்கு மொழியும் தெளிவாக, எளிமையாக இருக்கும். இதற்கு நல்ல மொழிப்பயிற்சி வேண்டும். அது ஒரு குதிரையை பழக்குவது போல. குதிரையை நீங்கள் தொடர்ந்து பழக்கிவிட்டால், அதற்கு நீங்கள் உத்தரவு போட வேண்டியதில்லை. உங்களுடைய தொடுதலே போதும். அது போலத்தான் மொழியும். நிறையப் படிக்க வேண்டும். தமிழில் சமகால இலக்கியங்களைப் போலவே செவ்வியல் இலக்கியங்களும் மிக முக்கியமானவை. நான் சங்க இலக்கியத்தில் இருந்து தனிப்பாடல்கள் வரை அவ்வளவையும் படித்திருக்கிறேன். என்னுடைய மொழிக்கு முக்கியத் தூண்டுதலாக இருந்தது நான் படித்த ரஷ்ய இலக்கியம். அதற்குப் பிறகு நான் உலக இலக்கியங்களைத் தேடிப் படித்தேன். லத்தீன் அமெரிக்க, பிரெஞ்சு, ஐரோப்பிய இலக்கியங்கள், ஆசிய இலக்கியம் என்று நிறையப் படித்தேன். இப்போதும் சமகால உலக இலக்கியங்களைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். மொழியைப் பொறுத்தவரை சொல்பவரின் குரல் மிக முக்கியமான ஒன்று. அது நம்பகத்தன்மை உள்ளதாக, பொறுப்புணர்ச்சி மிக்கதாக, தன்னை முன்னிறுத்திக் கொள்ளாததாக இருக்க வேண்டும். இப்படி எனக்கென்று சில வழிகளை நான் உருவாக்கிக் கொண்டேன். வண்ணநிலவன் ஆகட்டும், புதுமைப்பித்தன், தி. ஜானகிராமன், ஜி. நாகராஜன், கு. அழகிரிசாமி, அசோகமித்திரன் ஆகட்டும்; நான் வியக்கும் இவர்கள் அனைவருமே தமக்கே உரிய தனித்துவமான ஒரு மொழியை வைத்திருக்கிறார்கள். ஜானகிராமன், புதுமைப்பித்தன் மாதிரி சில சொற்பமான எழுத்தாளர்களுக்கு மட்டுமே தனித்துவமான மொழி வசப்பட்டிருக்கிறது. அது ஆளுமையோடு சம்பந்தப்பட்டது. அவர்கள் இதற்காகவே வாழ்ந்திருக்கிறார்கள். நான் இப்போதும் கூட ஒரு கதையோ, கட்டுரையோ எழுதி முடித்து விட்டு எனக்குப் பிடித்த எழுத்தாளர்களைப் படித்துப் பார்க்கிறேன். அவர்கள் போன தூரம் அதிகம் என்றுதான் படுகிறது.

கே: வணிக எழுத்து, தீவிர எழுத்து, என்பதாக ஒரு படைப்பை அடையாளப்படுத்துவது குறித்து உங்கள் கருத்து என்ன?


ப: நான் இந்தப் பிரிவினையை ஏற்றுக் கொள்வதில்லை. பத்திரிகையின் தரத்தை முடிவு செய்வது அதில் வெளியாகும் படைப்புகள்தாம். சிறு பத்திரிகைகளுக்கு ஒரு படைப்புச் சுதந்திரம் இருக்கிறது. எந்தத் துறை சார்ந்ததாக இருந்தாலும், எத்தனை பக்கம் உடையதாக இருந்தாலும் ஒரு படைப்பை அவற்றில் வெளியிட இயலும். ஒரு சிற்றிதழில் ‘ஏன் புத்த மதம் இந்தியாவில் அழிந்தது’ என்பதைப் படிக்க முடியும். ஆனால் வணிக இதழில் சாத்தியமல்ல. மொழி, பண்பாடு, கலை, கலாசாரம், சமூகம் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளைப் படிக்க வேண்டுமென்றால் அது சிற்றிதழ்களில் மட்டுமே சாத்தியம். வெகுஜன இதழ்கள் நாட்டு நடப்பையும், சமகாலத்தையும், கேளிக்கையையுமே அதிகம் முன்னிறுத்துகின்றன. அது வெகுஜன வாசகனுக்கானது என்றாலும் அதில் எழுத வேண்டுமா, வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டியது எழுத்தாளன். அது அவனுடைய சுதந்திரம். என்னைப் பொறுத்தவரை நான் ஒரு நோக்கத்துக்காக அதைத் தேர்வு செய்தேன். அதை நான் அடைந்து விட்டேன் என்றும் சொல்லலாம்.

சிற்றிதழ்களில் மோசமான படைப்பும் வெகுஜன இதழ்களில் நல்ல படைப்பும் வரத்தான் செய்கின்றது. வெகுஜன இதழ்களை விலக்க வேண்டியதில்லை. நான் அதிகம் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டது அதில்தான். எனது 16 வயதுவரை எந்தச் சிற்றிதழைப் படித்தேன்? விகடனும், குமுதமும், துக்ளக்கும், அம்புலிமாமாவும் படித்துத்தான் வளர்ந்தேன். பிறகு நான் என் பாதையைத் தேர்வு செய்து கொண்டபின் எனக்கு டால்ஸ்டாயும், செக்காவும், சத்யஜித் ரேயும் அறிமுகமானார்கள். அந்த வயதில் வெகுஜன இதழில் படித்த ஜெயகாந்தனும், சுஜாதாவும் இன்னமும் நினைவில் இருக்கிறார்கள். எழுத்து என்பது வெகுஜன வாசக வட்டத்தை அடைய வேண்டும் என நான் எண்ணுகிறேன். தமிழ்நாட்டின் மக்கள் தொகை ஏழு கோடி. ஒரு எழுத்தாளனின் புகழ்பெற்ற புத்தகம் 2000 பிரதி விற்றால் அதிகம். ஏழு கோடிப் பேரைக் கணக்கிட்டுப் பார்த்தால் ஒரு லட்சம் பிரதிகளாவது விற்க வேண்டும். விற்கிறதா? தமிழ்நாட்டிலேயே அதிகம் விற்றது என்று பார்த்தால் பொன்னியின் செல்வனைச் சொல்லலாம். தமிழ்நாட்டில் பெஸ்ட் செல்லர்ஸே ஆயிரம், இரண்டாயிரம் தான். நாம் சின்ன வட்டத்துக்குள் இயங்கிக் கொண்டிருக்கிறோம். இதில் ஏன் இத்தனை பாகுபாடு என்பதுதான் என் கேள்வி.

எனக்கு வெகுஜன இதழ், சிற்றிதழ் என்ற பேதம் இல்லை. இப்போதும் நான் எந்தச் சிற்றிதழ் படைப்பு கேட்டாலும் கொடுப்பேன். ஆனால் என் எழுத்தை வெளியிடப் போவது யார் என்பதைப் பார்ப்பேன். அதில் ஒரு கட்டுப்பாடு இருக்கிறது. கேட்பவர்கள் மதம் சார்ந்தவர்களாகவோ, அடிப்படை விஷயங்களில் சார்புநிலை எடுக்கிறவர்களாகவோ இருந்தால், அவர்கள் கோட்பாட்டில் எனக்கு உடன்பாடு இல்லையென்றால் அந்தப் பத்திரிகையில் நான் எழுதமாட்டேன்.

கே: சிற்றிதழ்களால் சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என்ற கருத்து பரவலாக இருக்கிறதே!


ப: இல்லை. நிச்சயமாக ஏற்படுத்தியிருக்கிறது. என்னுடைய தலைமுறையைச் சேர்ந்த எல்லோரும் இலக்கியத்தை நோக்கி வந்ததற்குக் காரணமே சிற்றிதழ்கள்தாம். நான் உலக இலக்கியங்களை ஆங்கிலத்தின் மூலம் படித்துக் கொள்வேன். ஆங்கிலம் அறியாதவர்கள் என்ன செய்வர்? இன்றைக்குத் தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களில் பலர் உலக இலக்கியங்கள் பற்றி அறிந்திருக்கிறார்கள் என்றால், காரணம் சிற்றிதழ்கள்தாம். மற்றுமொரு முக்கியமான விஷயம், தமிழ்நாட்டில் மிகவும் பேசப்பட்ட கதைகள் எதுவுமே வணிக இதழ்களில் வெளியானவை அல்ல. சிற்றிதழ்க்காரர்கள் ஒருமுனைப்புடன், கைக்காசைச் செலவு செய்து, எந்தப் பொருளாதாரப் பின்புலமும் இல்லாமல் முழுக்க முழுக்கத் தன்னார்வத்தினால் நடத்துகிறார்கள். வெகுஜன இதழ்களில் எழுத வாய்ப்புக் கிடைக்காதவர்களுக்கு சிற்றிதழ்கள் களமாக இருக்கின்றன. நானே ஒரு சிற்றிதழ் நடத்தியிருக்கிறேன். எனக்கு அதன் சுமை, கஷ்டம் என்னவென்று தெரியும். இன்றைக்குச் சிற்றிதழ்களின் வடிவம் மாறியிருக்கிறது. சிற்றிதழ்களின் பணிகளை ஓரளவுக்கு இன்று இணையம் செய்ய ஆரம்பித்து விட்டது என்றாலும் சிற்றிதழ்களுக்கான தேவை இருந்து கொண்டுதான் இருக்கிறது. தமிழில் மட்டுமல்ல; உலக மொழிகள் பலவற்றிலும் சிற்றிதழ்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. விற்பனை எண்ணிக்கை வேண்டுமானால் குறைவாக இருக்கலாமே தவிர, அவற்றுக்கான தேவை, முக்கியத்துவம் எப்போதும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. வெகுஜன இலக்கியம், சிற்றிலக்கியம் இரண்டும் ஒன்றுக்கு ஒன்று போட்டி இல்லை. இரண்டுமே வேறுபட்ட நீரோட்டம் கொண்டவை.

கே: குழந்தை இலக்கிய வளர்ச்சிக்கு நீங்கள் குறிப்பிடத்தக்க அளவில் பங்காற்றி வருகிறீர்கள். முன்பிருந்த அளவுக்கு தற்போது சிறுவர் இதழ்கள் இல்லை, சிறுவர்களின் வாசிப்பார்வமும் வெகுவாகக் குறைந்திருக்கிறது. இதற்கு என்ன காரணம்? தீர்வு என்ன?


ப: முதல் காரணம் நமது கல்வி முறை. இரண்டாவது காரணம் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள். நான் சிறுவனாக இருக்கும்போது நீதிபோதனை (Moral Studies) வகுப்பு இருந்தது. பள்ளியில் நூலகம் இருந்தது. அங்கே கதைகளைப் கேட்க, படிக்க வாய்ப்பு இருந்தது. எனது ஆசிரியர்கள் பல நூல்களை அறிமுகப்படுத்தினார்கள். நான் அரசுப் பள்ளியில்தான் படித்தேன். ஆனால் தற்போது பிரமாண்டமான கல்விக் கூடங்கள் வந்து விட்டன. ஆனால் எங்கும் நீதிபோதனை வகுப்பு இருப்பதாகத் தெரியவில்லை. பெரும்பாலான பள்ளிகளில் நூலகமே இல்லை. அப்படியே இருந்தாலும் அவை பராமரிக்கப்படாமல் மாணவர்களுக்குப் பயனற்றதாய் இருக்கிறது. ஆசிரியர்கள் பாடத்தை நடத்தினால் போதும் என்று நினைக்கிறார்கள். கல்வி தற்போது முழுக்க வணிகமாக மாறிவிட்டது. பெற்றோர்கள், தம் குழந்தைகள் நல்ல மதிப்பெண் பெற்றால் போதும்; அதற்குப் பாடப் புத்தகங்களை மட்டும் படித்தால் போதும் என்று நினைக்கிறார்களே தவிர குழந்தையின் அறிவு, சிந்தனை மேம்பட வேண்டும் என்று நினைப்பதில்லை.

மேலும், காட்சி ஊடகங்கள் செல்வாக்குப் பெற்ற தற்காலத்தில் சிறார்கள் படிப்பதைவிடப் பார்ப்பதையே அதிகம் விரும்புகிறார்கள். இன்றைய குழந்தைகளின் பொது அறிவும் புரிதலும் அதிகம். படித்த பெற்றோர்கள் இருக்கிறார்கள். கணினி இருக்கிறது. இணையம் இருக்கிறது. அன்றைக்கு அமெரிக்காவை நாங்கள் உலக உருண்டையில்தான் (Globe) பார்த்தோம். ஆனால் இன்றைக்கு இணையத்தின் மூலம் அமெரிக்காவை முழுமையாகப் பார்க்க முடியும். விஞ்ஞானம் வளர்ந்துள்ளது. ஆனால் அந்த அளவுக்குக் குழந்தை இலக்கியங்கள் வளரவில்லை. ஆசிரியர்கள் நல்ல விஷயங்களை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். பெற்றோர்கள் குழந்தையின் அறிவு வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். ஆனால் இன்று கேளிக்கைக்குச் செலவழிக்கத் தயாராக இருக்கும் பெற்றோர்கள், குழந்தையின் அறிவு வளர்ச்சிக்குச் செலவு செய்யத் தயாராக இல்லை. ஆதரிப்பவர் இல்லாததால் சிறுவர் பத்திரிகைகள் குறைந்துவிட்டன. குழந்தைகளுக்கான எழுத்தாளர்களும் அதிகம் இல்லை. குழந்தை இலக்கியம் எப்படி வளரும்?

கே: ஆனால் ஹாரி பாட்டர் அதிகம் விற்கிறதே!


ப: உண்மை. என் வீட்டுக் குழந்தைகள்கூட ஹாரி பாட்டரை விரும்பி வாசிக்கிறார்கள். ரசிக்கிறார்கள். ஏனென்றால் அந்த மாதிரி தமிழில் எழுதுங்கள், படிக்கிறோம் என்று சொல்கிறார்கள். நான் சிறுவயதில் காமிக்ஸ் படித்து வளர்ந்தவன். ஆனால் அந்த காமிக்ஸ் என் குழந்தைகளுக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் விரும்புவது ‘மாங்கா’ மாதிரி, இன்றைக்குக் கிடைக்கும் நவீன கிராபிக்ஸ் நாவல்கள் மாதிரி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். அது மாதிரி ஏன் தமிழில் இல்லை என்று கேட்கின்றனர். இருக்கின்ற புத்தகங்கள் பிள்ளைகளுக்குப் பிடிக்கவில்லை. பிள்ளைகளுக்குப் பிடித்தமான புத்தகங்கள் அதிகம் வெளிவருவதில்லை. இதுதான் இன்றைய நிலை. நான் இதற்காகவே கதைப் பயிலரங்குகள் நடத்தி வருகிறேன். ஆசிரியர்களையும், மாணவர்களையும் தொடர்ந்து சந்தித்து வருகிறேன். பல ஆசிரியர்கள் டி.வி.யில் யாரோ சொன்ன கதைகளைச் சொல்கிறார்களே தவிர தாமாகக் கதை சொல்வதில்லை. கேட்பதுமில்லை. ஆக, கதை கேட்காத, கதை சொல்லாத ஒரு சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த நிலை மாற வேண்டும் என்பதற்காக நான் குழந்தைகளுக்காக பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறேன். இன்றைய சிறுவர்களின் மனநிலையை அறிந்து, அவர்களுக்கேற்ற மாதிரி எழுத வேண்டும் என்பதற்காக நான்காம் வகுப்பு படிக்கும் என் மகன் ஆகாஷுடன் இணைந்து ஏழு நூல்களை எழுதியிருக்கிறேன்.

இது தவிர பல பள்ளிகளுக்குச் சென்று அதன் ஆசிரியர்களுக்கு வகுப்பறையில் பாடத்தைத் தவிர என்னவெல்லாம் கற்றுக் கொடுக்கலாம், அதை எப்படிக் கற்றுக் கொடுக்கலாம் என்று தனியாக ஒரு பணிப்பட்டறை நடத்தி வருகிறேன். மாணவர்ளுக்குக் கதைப் பயிலரங்குகளை நடத்தி வருகிறேன். இந்த ஆண்டு மட்டுமே சுமார் ஆயிரம் ஆசிரியர்களைச் சந்தித்திருக்கிறேன். இந்தச் சந்திப்புகளில் எனக்குத் தெரிவது என்னவென்றால் படிக்க வைக்கப்பட வேண்டியது மாணவர்கள் அல்ல; ஆசிரியர்கள்தான் என்பது. ஆசிரியர்கள் படிப்பதில்லை; கேட்கவும் மாட்டார்கள். ஆக, குழந்தை இலக்கியம் வளர வேண்டும் என்றால் மாற்றம் முதலில் வர வேண்டியது ஆசிரியர்களிடமும், பெற்றோர்களிடமும் தான். இதுதவிர அரசு, பள்ளி நூலகங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். கம்ப்யூட்டர் எல்லாம் சொல்லிக் கொடுக்கிறார்கள். அதோடு மாணவர்கள் கதைகள் படிக்க, இணையத்தில் கிடைக்கும் மின்-நூல்களை (E.Book) வாசிக்கச் சொல்லித் தரலாமே! இன்றைக்கு குழந்தைகள் விளையாட எத்தனையோ நவீனமான பூங்காங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றில் ஒன்றிலாவது ஒரு வாசகசாலை இருக்கிறதா? கல்வி சார்ந்த, அறிவு சார்ந்த செயல்பாடுகள் எதற்காவது இடமுண்டா? எதுவும் இல்லை. உடல் வளர்ந்தால் போதும் மனம் வளர வேண்டாம் என்று நினைத்தால் அந்தக் குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கைதான் பாதிப்படையும். வளர வளர வாழ்க்கையில் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் போது சலிப்பும், வெறுப்பும், அச்சமுமே அவனைச் சூழும். ஆனால் புத்தகங்களும் இலக்கியங்களும் இவற்றையெல்லாம் எதிர்கொள்ளக் கற்றுத் தருகின்றன.

கே: இலக்கியவாதியான உங்களால் திரையுலகில் சுதந்திரமாகச் செயல்பட முடிகிறதா?


ப: எந்தத் துறையிலுமே நாம் முழுதும் சுதந்திரமாகச் செயல்பட முடியாது. சினிமாவும் அப்படித்தான். அது ஒரு கூட்டு முயற்சி. பலரது பங்களிப்புச் சேர்ந்துதான் ஒரு சினிமா உருவாகிறது. நான் எழுதியது நூறு சதவீதம் அப்படியே வெளிவராது. தயாரிப்புச் செலவுக்கேற்ப, நடிகர்களின் மனோநிலைக்கேற்ப, பல பொருளாதார பின்னணிக் காரணிகளுக்கேற்ப அது மாறும். சினிமாவுக்குத் தேவை ஒரு எழுத்தாளர்தான். இலக்கியவாதியாக இருப்பதன் அனுகூலம் என்னவென்றால் பல நுட்பங்களை நாம் அதில் செய்து பார்க்க முடிகிறது. ஒவ்வொரு படத்திலும் என்னுடைய இந்த முயற்சி மேம்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஆனால் நான் நினைத்ததை நூறு சதவீதம் அடைந்து விட்டேனா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்வேன். அதை நோக்கித்தான் நான் சென்று கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு படமும் ஒரு அனுபவம். சினிமா, அதன் உருவாக்கம், பின்னணி என்று நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். இவ்வாறு கற்றுக் கொண்டதை வைத்து, சினிமாத் துறை சார்ந்து பின்னால் ஏதாவது செய்யும் எண்ணம் இருக்கிறது.

(ஆன்மீகம், நாத்திகம், கடவுள், இந்தியா, இன்றைய பதிப்புச்சூழல்கள், விருதுகள், இளம் படைப்பாளிகள், எழுத்தாளர்களுக்கிடையே எழும் சர்ச்சைகள், மொழிபெயர்ப்புகளின் அவசியம் இவை பற்றி அடுத்த இதழில்….)

சந்திப்பு, படங்கள்: அரவிந்த் சுவாமிநாதன்

*****

எனது பயணங்கள்


பயணம் என்பது வெறும் ஊர் சுற்றுவதல்ல. அது ஒரு தேடுதல். அந்தத் தேடுதலைப் பலரும் ஓர் எல்லைக்குள் வைத்திருக்கிறார்கள். விடுமுறை நாட்களில் மட்டுமே வெளியில் சென்று மகிழ்ச்சியாக இருப்பது என்று. என் தந்தை என்னைவிட அதிகம் பயணம் செய்தவர். வீடுதான் உலகம் என நாம் நம்புகிறோம். வீட்டுக்குள் இருந்து கொண்டு உலகத்தைப் பார்க்கும்போது அது அச்சுறுத்துவதாக இருக்கும். ஆனால் நடந்து, பயணம் செய்து பார்த்தால் உலகம் இதமான ஒன்றாக இருக்கும். பயணங்களில் என்னுடைய தேடுதல், கதை எழுதுவதற்காக அல்ல. எல்லா மனித வெளிப்பாடுகளுக்குப் பின்பும் மனித மனம் எப்படி இயங்குகிறது, எப்படி அது கற்பனை செய்து கொள்கிறது, எப்படி உருவகப்படுத்திக் கொள்கிறது, தன்னை வெளிப்படுத்திக் கொள்வதற்காக ஒரு மனிதன் எந்தெந்தத் துறையில் என்னவெல்லாம் செய்கிறான், அதற்குள் இலக்கியத்திற்கு என்ன இடம் இருக்கிறது – இதுதான் எனது தேடல். நான் வெறும் சிறுகதை, நாவல்கள் எழுதும் எழுத்தாளன் அல்ல. எனக்கு நிறைய கிளை வழிகள் உள்ளன. இவற்றின் வழியே எனது அடிப்படைத் தேடல் ஒன்றுதான். நம்முடைய வாழ்க்கையை, காலத்தை, முன்னோடிகளை எப்படிப் புரிந்து கொள்கிறோம், எப்படிப் பதிவு செய்கிறோம், எப்படி அடுத்து எடுத்துச் செல்லப் போகிறோம் என்பதுதான். நான் ஒரு தனிநபராக என்னை ஒருபோதும் உணருவதேயில்லை. நான் ஒரு வரலாற்றின், கலாசாரத்தின், இலக்கியப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக இருக்கிறேன். மானிட குலம் என்பதன் தொடர்ச்சியாகவும் இருக்கிறேன். இப்படி எனக்கு நானேதான் ஒரு வரலாற்றுச் சின்னமாக இருக்கிறேன். ஒவ்வொரு மனிதனுமே அப்படித்தான். மூதாதையரின் வரலாறு அவனுள் இருக்கிறது. இதை ஒருவன் பிரித்துப் பார்த்து அறிந்து கொள்ள முடியாது என்பதால் மொத்தமாக இவற்றுக்கான பொறுப்புணர்வை ஒரு எழுத்தாளன் எடுத்துக் கொள்ளத்தான் வேண்டும். கடந்த காலத்துக்கும் சரி, எதிர்காலத்துக்கும் சரி, நிகழ்காலத்துக்கும் சரி. பிரச்சனைகளைச் சந்திப்பதற்கான பொறுப்புணர்வை ஒரு எழுத்தாளன் எடுத்துக்கொள்ள வேண்டும். இதைத்தான் எனது எழுத்துக்களில் முதன்மைப்படுத்தி வருகிறேன்.

எஸ். ராமகிருஷ்ணன்

*****

நானும் ரஷ்ய இலக்கியமும்


நான் எளிய மொழியில் என் கருத்தைச் சொல்கிறேன். என்னுடைய முன்மாதிரிகளாக டால்ஸ்டாயையும், தஸ்தாவெஸ்கியையும், செகாவையும் எடுத்துக் கொண்டேன். அவர்கள் எப்படி எழுதுகிறார்கள் என்று பார்ப்பேன். உலகத்துக்கே ரஷ்ய இலக்கியத்தின் மீது ஒரு தனி ஈடுபாடு உண்டு. அவர்கள்தான் முதன் முதலில் காட்சி இலக்கியங்களை எழுதியவர்கள். மனதின் நுட்பங்களை எழுதியவர்கள். ஒவ்வொரு நிமிடமும் மனம் எப்படிச் செயல்படுகிறது என்று கிட்டத்தட்ட உளவியல் பார்வையில் பார்ப்பதுபோல் மனிதனை அணுகக்கூடிய அந்த எழுத்து முறை ரஷ்யாவில்தான் வந்தது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய மற்றொன்று என்னவென்றால் ரஷ்ய இலக்கியத்தில் சொல்லப்பட்டவர்கள் எல்லாமே சாமான்ய மக்கள். குதிரை வண்டி ஓட்டுபவன், எளிய மனிதர்கள், மருத்துவமனையில் இருப்பவர்கள், நோயாளிகள் என்று சாதாரண மனிதர்களைத்தான் அது கொண்டாடுகிறதே தவிர ஜார் மன்னனையோ, வணிக முதலாளிகளையோ அது பேசுவதில்லை. ரஷ்ய இலக்கியத்திலிருந்து நான் இதை எடுத்துக் கொண்டேன். மனித மனம் எப்படியெல்லாம் இயங்குகிறது, தடுமாற்றம் கொள்கிறது, என்னென்ன அக, புற மாறுதல்களைச் சந்திக்கிறது என்பதை எழுதலாம். அவை மனிதனின் ஆதாரப் பிரச்சனைகளைத் தொடர்ந்து பேசுகின்றன. பசி, துயரம், மரணம், வெற்றி, தோல்விகள், மனிதனுக்குக் கடவுள் தேவையா, விஞ்ஞானத்தை எப்படி ஏற்றுக் கொள்ளலாம் என்றெல்லாம் மிக விரிவாக அவை பேசுகின்றன. இப்படி ஆதாரமான மனிதத் துறைகளை இலக்கியமே பேசுகிறது. என் எழுத்தில் ரஷ்ய இலக்கியத்தின் தாக்கம் இருக்கும். அதை ரஷ்யப் பாணி எழுத்து என்றே சொல்லலாம். எனக்கு புதுமைப்பித்தன் அறிமுகமாகும் முன்பே செகாவும், டால்ஸ்டாயும் அறிமுகமாகி விட்டார்கள்.

எஸ். ராமகிருஷ்ணன்

கே: இலக்கியத்தின், எழுத்தாளரின் பணி எதுவென்று நினைக்கிறீர்கள்?
ப: எழுத்தாளன் புதியவற்றைப் படைப்பது ஒருபுறம் என்றாலும், நிறைய நினைவுபடுத்துவதும், கவனமூட்டுவதும், தவறவிடும்போது சுட்டிக்காட்டுவதும் அவனது முக்கியமான பணிகள் என்று கருதுகிறேன். என்னதான் அறம், நீதி போன்றவற்றைச் சொல்லும் பல நூல்கள் நமக்கு இருந்தாலும், அந்த அறக்கோட்பாடுகளை தனிநபர்கள் பின்பற்றவேயில்லை. இன்றைய சகல பிரச்சனைகளுக்கும் காரணம், நமது சுயநலமே. அது தான் இயற்கையை விட்டு நம்மை பிரித்து வைத்து இயற்கையை அழித்து விற்பனை பொருளாக்கி வைத்திருக்கிறது. ஜன்னல் இல்லாத வீடுகளில், வெளிச்சம் வராத இல்லங்களில், இயற்கையின் குரலைக் கேட்க முடியாத சூழலில் வாழ்கிறோம். இயற்கையின் ஒரு பகுதியான நாம், அதைத் துண்டித்துக் கொண்டு வாழ முற்படும்போது மன நெருக்கடிகள் உண்டாகின்றன. அதைப்பற்றிய குற்றவுணர்ச்சி கூட நமக்கில்லை. இதையே என் படைப்புகளில் சுட்டிக் காட்டுகிறேன்.

என்னுடைய சிறுவயதில் நாங்கள் தண்ணீரை விலை கொடுத்து வாங்கியதில்லை. இந்தியா முழுவதும் சுற்றியிருக்கிறேன். ஒரு போதும் தண்ணீரை சுமந்து கொண்டு போனதே இல்லை. எல்லா இடங்களிலும் நல்ல தண்ணீர் கிடைத்தது. விலை கொடுத்து தண்ணீரை வாங்குவது பாவம் என்று கருதப்பட்டது ஆனால் இன்று? பாக்கெட்டில் பாட்டிலில் மட்டும் தான் குடிநீர் கிடைக்கிறது, இப்படி எளிமையாக கிடைத்த இயற்கையின செல்வங்களை விலைக்கு வாங்க வேண்டிய நிலை உருவாகியிருக்கிறது, இதற்கு நாம் காரணமில்லை என்று நினைக்கிறோம். இலக்கியத்தின் பணி இதைச் சுட்டிக் காட்டுவதாக உள்ளது. மனிதனுடைய அன்றாடப் பிரச்சனைகளை, பொருளாதாரச் சிக்கல்களை மட்டும் பேசுவது இலக்கியமல்ல. அதையும் தாண்டி அவன் பின்பற்ற வேண்டிய அறத்தை, மறந்து போன விழுமியங்களை, கவனிக்க மறந்த சுற்றுச் சூழலை, சுட்டிக் காட்டுவதும் இலக்கியத்தின் பணிதான்.

கே: இன்றைய பதிப்புச் சூழல் எப்படி இருக்கிறது?


ப: சமீபமாக புத்தகம் வாங்குபவர்கள் அதிகரித்திருக்கிறார்கள். ஆனால் படிப்பவர்கள் குறைவாக இருக்கிறார்கள். புத்தகமும் ஒரு வணிகச் சந்தைப் பொருளாகி விட்டது, அதனால் எது நல்ல புத்தகம் என்று தேர்வு செய்வது சிரமமானதாக இருக்கிறது. புத்தகச் சந்தை விரிவடைவதால் நிறைய முதலீட்டாளர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். ஆண்டுக்கு 300 புதிய தமிழ் புத்தகங்களாவது வருகின்றன. அவற்றில் எண்பது சதவீதம் குப்பை. இன்று ஐநூறு ரூபாய் பணம் கொடுத்து புத்தகம் வாங்கத் தயாராக இருக்கிறார்கள். ஆனால் ஐநூறு பக்கப் புத்தகம் படிக்கத் தயாராக இல்லை, பதிப்புத் துறையில் இன்றும முறையான எடிட்டர்கள் கிடையாது. மொழிபெயர்ப்பு நூல்களை பதிப்பிக்கும் போது உரிமை வாங்குவதில்லை. மூல எழுத்தாளர் பற்றிய குறிப்புகள் கூட கிடையாது, ராயல்டி என்று பார்த்தால் தமிழ்நாட்டில் ஒன்றிரண்டு எழுத்தாளர்களைத் தவிர பெரும்பாலோருக்கு அது கிடைப்பதே இல்லை. ராயல்டி தொகையை வைத்து வாழ்க்கை நடத்த முடியாது. ஒரு சிறுகதைத் தொகுப்பிற்கு தரப்படும் ராயல்டியை வைத்து ஒரு பேண்ட் சர்ட் கூட வாங்க முடியாது. ஏழு கோடி தமிழ் மக்கள் உள்ள தமிழ்நாட்டில் அதிகம் விற்பனையாகும் புத்தகத்தின் எண்ணிக்கை ஐந்தாயிரம்தான். அதுதான் இலக்கிய சாதனை. இதுதான் தமிழ்நாட்டின் இன்றைய பதிப்பு சூழல்.

கே: எழுத்தாளர்களிடையே காணப்படும் சர்ச்சைகள், சச்சரவுகளுக்கு என்ன காரணம்?


ப: விஞ்ஞானத்தில், அரசியலில், சமூகத் தளத்தில் இல்லாத சர்ச்சைகளா? எல்லாத் துறைகளிலுமே சர்ச்சைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அது பதவி, அதிகாரம் மற்றும் பொறாமையால் உருவாகக் கூடியது. இலக்கிய சர்ச்சைகளின் நோக்கம் பெரும்பாலும் மாறுபட்ட அபிப்ராயங்கள், ரசனை வேறுபாடுகளால் உருவாகிறது. ஒருவருக்கு சார்த்த்ரை பிடிக்கிறது; மற்றவருக்கு திருக்குறளைப் பிடிக்கிறது, அந்த ரசனை மாறுபாடு இரண்டு கருத்துருவங்களை உருவாக்கிவிடுகிறது.

இன்னொரு தளம் எழுத்தாளர்கள் மற்றவர்களின் படைப்புகளை விமர்சிப்பதன் வழியே உருவாகும் சண்டை. இதுவும் அபிப்ராய பேதம்தான், மற்றபடி எழுத்தாளர்களும் சராசரி மனிதர்களே. அவர்களின் உணர்ச்சிவேகமும் கோபமும் சண்டைகளை உருவாக்கவே செய்யும். ஆனால் அது முற்றி ஒருபோதும் பகையாவதில்லை. எதிர்துருவங்களாக உள்ள எழுத்தாளர்கள் கூட எளிதாகச் சந்தித்துப் பேசிக் கொள்ளும் சூழல் இருக்கவே செய்கிறது.

பொதுவாக எழுத்தாளர்கள் எல்லோருக்குமே ஒரு ‘ஈகோ’ இருக்கும். அது மற்றவர்களிடம் காணப்படுவதை விட மேம்பட்ட ஈகோவாக இருக்கும். அதனால் எழுத்தாளர்கள் எதிலுமே உணர்ச்சி வசப்பட்டுச் சட்டென்று கருத்துச் சொல்லிவிடுவார்கள். ஆனால் எழுத்தாளர்கள் யாரும் வன்முறையைக் கைக்கொள்வதில்லை. வஞ்சம் தீர்ப்பதில்லை. கோபத்தில் படபடவென எழுதிவிடுகிறார்கள். அதோடு முடிந்து போய்விடுகிறது. ஆனால். பிற துறைகளில் அப்படி இல்லை. அந்தப் பகைமை ஒருவனை ஒன்றுமே இல்லாமல்கூட ஆக்கிவிடுகிறது. எழுத்துத் துறையில் அப்படி ஒருபோதும் நடப்பதில்லை.

கே: விருதுகள் தகுதியானவர்களுக்கு வழங்கப்படுவதில்லை என்று ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. உங்கள் கருத்து என்ன?


ப: விருதும் சர்சையும் உடன்பிறந்தவை. காரணம் எந்த ஒரு சிறந்த எழுத்தாளர் பரிசு பெறும்போதும் யாரோ ஒருவர் தனக்கு கிடைக்கவில்லை என்று ஆதங்கப்படவே செய்வார். அத்தோடு விருது பெற்றவர் மட்டும்தான் நல்ல எழுத்தாளரா என்ற கோபம் உருவாகவே செய்யும். டால்ஸ்டாய்க்கு நோபல் பரிசு கிடைக்கவில்லை. அதற்காக அவர் என்ன சாதாரண எழுத்தாளரா?

வாசகன் எழுத்தாளனுக்கு எப்போதும் மானசீகமான விருதுகளைத் தந்து கொண்டேதானிருக்கிறான். அது ஒரு கைகுலுக்கலாகவோ, ஒரு தேநீரை வாங்கி தருவதாகவோ, ஒரு பேனா பரிசளிப்பதாகவோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், அந்தப் பரிசு உயர்வானது.

ஒருமுறை பழனி கோவிலுக்குச் சென்றிருந்தேன். அடிவாரத்தில் இட்லிக் கடை வைத்திருக்கும் ஒரு அம்மா என்னைப் பார்த்து, “நீங்கள் எழுத்தாளர் ராமகிருஷ்ணன் தானே!” என்றார். “ஆமாம்” என்றேன். “என் பையன் உங்க புத்தகத்தைப் படிப்பான். இருங்க. நான் போய் அவனை வரச் சொல்றேன்” என்று கூறிவிட்டுப் போனார். அந்தப் பையன் வந்தான். அவன் கல்லூரியில் முதலாமாண்டு படிப்பவன். நான் அவனுடன் பேசிவிட்டு என் அறைக்கு வந்து விட்டேன். சிறிது நேரம் கழித்து அந்த அம்மா ஒரு தட்டில் ஐந்து இட்லி, சட்னி கொண்டு வந்து கொடுத்து, “எங்களால இதுதான் தம்பி உங்களுக்குக் கொடுக்க முடிஞ்சது. சாப்பிடுங்க” என்று சொல்லிக் கொடுத்தார். அவர் ஏன் அதைக் கொடுக்கிறார்? அவரை எனக்கு முன்பின் தெரியாது. அவர் என்னைப் படித்தவரில்லை என்றாலும் அவர் எனக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்புகிறார். அந்த அன்பினால் அதைக் கொடுக்கிறார். இது எனக்கு கிடைத்த மிகப் பெரிய பரிசு. இது போன்ற பரிசும் பாராட்டும் ஒரு எழுத்தாளனுக்குக் கிடைக்கும் போதுதான் அவன் நம்பிக்கையும் உத்வேகமும் அடைகிறான். மற்றபடி மிகப் பெரிய விருதுகளை ஒருவித கூச்சத்தோடும், சமயத்தில் அது உருவாக்கக்கூடிய பிரச்சனைகளோடும்தான் எதிர்கொள்கிறான்.

கே: ஆன்மீகம், நாத்திகம் இரண்டும் கலந்த சூழலில் இளமையில் வாழ்ந்துள்ளீர்கள். உங்களுக்குள் அவை ஏற்படுத்திய தாக்கங்கள் என்ன?
ப: இரண்டிலும் எனக்கு தேவையானதை நான் எடுத்துக் கொண்டேன். மனித வாழ்க்கையின் துயரங்கள், சிக்கல்கள் இவற்றிலிருந்து விடுபட மனிதனுக்கு உதவி செய்ய ஏதோ ஒன்று தேவையாக இருக்கிறது. அது பகுத்தறிவா மதமா என்று இரண்டு வழிகள் முன்னிருக்கின்றன. நான் இந்த இரண்டிலும் கலந்த இலக்கியம் என்ற மூன்றாவது வழியை நம்புகின்றவன். அது பகுத்தறிவையும் பேசுகிறது. புராணீகத்தையும் ஏற்றுக் கொள்கிறது. இதையேதான் இலக்கியமும் செய்கிறது; அறிவுத் துறைகளும் செய்கின்றன. மனித வாழ்க்கைக்கு நம்பிக்கை ஊட்டுவதுதான் எழுத்தின் மிகப்பெரிய வேலை. அந்த நம்பிக்கை எந்த வடிவத்தில் வந்தாலும் அதை எழுத்து முன்மொழியத்தான் செய்யும்.

எனக்கு சடங்கு, சம்பிரதாயங்களின் மீது விருப்பம் இல்லை. அதேசமயம் வறட்டுப் பகுத்தறிவு வாதத்தையும் நான் ஏற்றுக் கொள்வதில்லை. இரண்டையும் ஆராய்ந்து பார்த்துப் புரிந்து கொள்வதையே விரும்புகிறேன்.

கே: புலம்பெயர்ந்து தமிழர்கள் வாழும் நாடுகளில் தமிழ் இலக்கிய வளர்ச்சி குறித்து…
ப: இன்றைக்குத் தமிழ் இலக்கியம் தமிழ்நாட்டில் மட்டும் எழுதப்படுவது மட்டுமல்லாமல், உலகம் முழுதுவும் எழுதப்படுகிறது. அப்படித்தான் ஆங்கில இலக்கியம் இருக்கிறது. அவர்கள் இருக்கும் இடத்தை வைத்து பிரிட்டிஷ் இலக்கியம், ஐரிஷ் இலக்கியம், அமெரிக்க இலக்கியம் என்று கூறப்படுவது போல்தான் தமிழ் இலக்கியமும். அது சிங்கப்பூரில், மலேசியாவில், கனடாவில், இலங்கையில் இருக்கிறது, அமெரிக்காவிலும் இருக்கிறது. தமிழர் வாழும் எல்லா இடங்களிலும் இலக்கியம் எழுதப்படுகிறது. மலேசியாவை எடுத்துக் கொண்டால் அவர்கள் தமிழர்களைப் பற்றி மட்டும் எழுதுவதில்லை. சீனர்களைப் பற்றி, மலாய் மக்களைப் பற்றி, தங்கள் வாழ்விடம், சூழல் பற்றி, பௌத்த மதம் பற்றி… இப்படி நிறைய எழுதுகிறார்கள். சிங்கப்பூரில் வாழ்பவர்கள் தமது புலம் பெயர்ந்த வாழ்க்கையைப் பற்றி எழுதுகிறார்கள். இலங்கையைச் சேர்ந்தவர்கள் வேறு வேறு நாடுகளில் தாம் வாழும் சூழல்களை எழுதுகிறார்கள். அதே சமயம் தன்னுடைய வேர்களைப் பற்றியும் எழுதுகிறார்கள். அமெரிக்காவில் உள்ளவர்கள் அங்குள்ள பன்னாட்டுக் கலாசாரத்தைப் பற்றி எழுதுகிறார்கள். தமிழ் அடையாளம் வேர்கள் குறித்து ஆழ்ந்து சிந்திக்கிறார்கள், இன்றைக்கு இலக்கியத்தின் திசை மாறி இருக்கிறது. அது பன்னாட்டுக் கலாசாரத்தின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி இருக்கிறது. அதற்கு தமிழ் மக்கள் பலநாடுகளிலும் புலம்பெயர்ந்து சென்று வாழ்வதே காரணம்

ஆனால் அயல்நாடுகளில் வாழ்ந்து கொண்டு தமிழில் எழுதுவது ஒரு பெரிய சவால். அதை எதிர்கொண்டு தங்களை நிலைநிறுத்திக் கொள்கிறார்கள் என்பதுதான் அதன் முக்கியமான பலம்

தமிழ்நாட்டில் கொண்டாடப்படுவதை விடவும் அயல்நாடுகளில் தமிழ் இலக்கியம் கொண்டாடப்படுகிறது, எனது யாமம் நாவல் வெளியான உடன் கனடாவில் இருந்து ‘இயல் விருது’ கொடுக்கப்பட்டது. பின்னர்தான் அதற்குத் ‘தாகூர் விருது’ கிடைத்தது. ஆக அவர்கள் எங்கோ தொலைவில் இருந்தாலும் தமிழ் இலக்கியத்தை உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். உரிய கௌரவத்தை அளிக்கிறார்கள். ஆனால் அங்கிருப்பவர்களின் படைப்புக்கு தமிழ்நாட்டில் உரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறதா என்று கேட்டால் ‘இல்லை’ என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் தமிழ் மக்கள் தமிழ்நாட்டுக்கு வெளியே எது நடந்தாலும் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் நான் இவர்களை, இவர்களது படைப்புகளை சுட்டிக்காட்டிக் கொண்டே இருக்கிறேன். அது என் கடமையும்கூட.

தமிழ் இலக்கியம் உலகு தழுவிய இலக்கியமாக மாற வேண்டும், அதற்கு உடனடித் தேவை ஆங்கில மொழிபெயர்ப்புகள், மற்றும் கல்விப்புலங்களில் தமிழ் இலக்கியம் பாடமாக அறிமுகமாவது. இரண்டையும் அயல்தேசங்களில் வசிப்பவர்கள் முன்கை எடுத்துச் செய்தால் தமிழ் இலக்கியம் உலகின் முக்கிய இலக்கியமாக கொண்டாடப்படும்.

கே: உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்கள், படைப்பாளிகள் குறித்து…
ப: தமிழக அளவில் பார்த்தால் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்கள் புதுமைப்பித்தனும் வண்ணநிலவனும்தான். இவர்களை நான் அடிக்கடி திரும்பப் படிக்கிறேன். கவிஞர்களில் பிரமீளையும் நகுலனையும் தேவதச்சனையும் விரும்பி படிக்கிறேன். சமகால எழுத்தாளர்களில் சந்திரா, மனோஜ், சங்கர ராம சுப்ரமணியன், லட்சுமி சரவணக்குமார், பவா. செல்லத்துரை இவர்களை விரும்பி வாசிக்கிறேன்.

உலக அளவில் எப்போதும் என்னுடைய ஆசான்களாகக் கருதுவது டால்ஸ்டாயும் தஸ்தாவெஸ்கியும்தான். இலங்கையில் கவிஞர் சேரனும், உமா வரதராஜனும், கவிஞர் அனாரும், திசேராவும், ரஷ்மியும் முக்கியமானவர்கள். மலேசியாவில் ரெ. கார்த்திகேசுவும் பாலமுருகனும், சிங்கப்பூரில் லதா, ஜெயந்தி சங்கர் இருவரையும் வாசிக்கிறேன். ஆஸ்திரேலியாவில் வாழும் நடேசன், பெர்லினில் வாழும் கருணாகரமூர்த்தி இவர்களும் விருப்பமானவர்களே. என்னுடைய ஆல்டைம் ஃபேவரைட் கனடாவில் வாழும் அ.முத்துலிங்கம் அவர்கள்தான்.

கே: எழுத்தையே வாழ்க்கையாகக் கொண்டவர் நீங்கள். இதன் சாதக, பாதகங்கள் என்ன?
ப: எழுத்தையே நம்பி வாழ்வது மிகச் சிரமமான ஒன்று. அதற்காக நிறையப் படிக்க வேண்டும். பயணம் செய்ய வேண்டும். உரிய கௌவரம் மரியாதை எதுவும் கிடைக்காது, மாதவருமானம் என்ற ஒன்று ஒரு போதும் கிடைக்காது, கூடுதலாக எழுதியதற்காக நாலு பேர் சண்டை போடுவார்கள். வசை பொழிவார்கள், அத்தனையும் சந்திக்க வேண்டும். நான் இந்த இடர்ப்பாடுகளை ஏற்றுக்கொண்டுதான் வாழ்கிறேன். முழுநேர எழுத்தாளனாக வாழமுடியும் என்று நிருபித்துக் காட்டியிருக்கிறேன். வருவாய் பிரச்சனை எப்போதுமே இருக்கிறது. அந்த நெருக்கடியில் இருந்து மீள வருடத்திற்கு ஒரு திரைப்படத்தில் வேலை செய்கிறேன். இதனால் ஆறுமாதம் நிம்மதியாக வாழமுடிகிறது. மற்றபடி புத்தகங்களில் கிடைக்கும் வருவாய் புத்தகம் வாங்கவும் பயணம் செய்யவும் போதாமல் தானிருக்கிறது

முழுநேர எழுத்தாளனாக வாழ்வது என்பது ஒரு அளவில்லாத சுதந்திரம். என் விருப்பத்துக்கேற்ப என்னால் வாழ முடிகிறது. என்னுடைய நேரம் என் கையில் இருக்கிறது. என் மனைவி, பிள்ளைகள், அண்ணன், குடும்பம், நண்பர்கள் என்று எல்லோரும் சேர்ந்து இந்தச் சுதந்திரத்தைத் தந்திருக்கின்றனர்.

இதன் பாதகம் என்னவென்றால் எதிர்காலத்தைப் பற்றி பயம், நிச்சயமின்மை இருந்து கொண்டே இருக்கும். ஆனால் அது எனக்குப் பிடித்திருக்கிறது. ஏனென்றால் உலகத்தில் மனிதனைத் தவிர எல்லா உயிர்களுமே இதே பதற்றம், போராட்டத்துடன் தானே வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

கே: புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
ப: புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு, குறிப்பாக அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்களுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள் ஒன்று உண்டு. அவர்களில் ஒவ்வொருவரும் ஒரு புத்தகத்தையாவது தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழியாக்கம் செய்ய வேண்டும். நூறு பேர் முயன்றால்கூட வருஷம் நூறு புத்தகம் ஆங்கிலத்தில் வந்துவிடும். தனிநபர்கள் செய்ய சிரமமானதாக இருந்தால் தமிழ் அமைப்புகள் ஆண்டுதோறும் பத்துப் புத்தகங்களையாவது ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியிடலாம், தமிழ் இலக்கியம் குறித்து ஆங்கில இதழ்களுக்கு எழுதலாம். பல்கலைக்கழகங்களில் உரையாற்றலாம். எனக்கு இருக்கும் மிகப்பெரிய ஆதங்கம், தமிழின் நல்ல புத்தகங்கள் ஆங்கிலம் மற்றும் பிறமொழிகளுக்குப் போய்ச் சேரவில்லையே என்பதுதான். இதை மாற்ற உடனே ஏதாவது செய்தாக வேண்டும்.

ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்வதை ஒரு கூட்டுச் சேவையாக கருதி அதற்கென தனி இணையதளத்தை உருவாக்கலாம். பிரபலமான பதிப்பகங்களுக்கு தமிழ்ப் புத்தகங்களை வெளியிடும்படி ஆலோசனைகள், பரிந்துரைகள் செய்யலாம். ஒஹென்றி விருதுச் சிறுகதைகள் போல ஆண்டுதோறும் சிறந்த இருபது சிறுகதைகளை ஆங்கிலத்தில் ஒரு தொகை நூலாக வெளியிடலாம். யூ டியூப்பில் தமிழ் இலக்கியம் குறித்த உரைகளை பதிவேற்றம் செய்யலாம். இதைத் தமிழ் நாட்டிலும் அயல்நாட்டிலும் கூட்டாகச் செய்யும்போது மட்டும்தான் தமிழ் இலக்கியம் மேம்பாடு அடையும்.

தங்கு தடையில்லாத, தனித்துவமான சிந்தனை ஓட்டம், மேதாவிலாசம் இவற்றைக் காண்கிறோம் எஸ்.ரா.வின் பதில்களில். “தென்றலை எனக்கு நன்கு தெரியும். நியூஜெர்ஸி வாசகர் முருகானந்தம் என்னைச் சந்திக்க வரும்போதெல்லாம் தென்றல் பிரதிகளைக் கொண்டு வந்து தருவார். மதுசூதனன் என்னைப் பற்றி எழுதிய கட்டுரையையும் வாசித்திருக்கிறேன். தென்றல் அமெரிக்காவில் தீவிரமான தமிழ்ப் பணி செய்து கொண்டிருக்கிறது என்பது எனக்கு நன்கு தெரியும்” என்கிறார் மாறாத புன்சிரிப்புடன். முக்கிய சந்திப்புக்காக வெளியே செல்லும் அவசரப் பணி இருந்த போதிலும் தென்றலுக்காக நீண்ட நேரம் ஒதுக்கி பதில் தந்தமைக்கு நன்றி கூறி, கேட்ட கேள்விகளைவிட கேளாதவை அதிகம் என்ற உணர்வோடு, விடை பெறுகிறோம்.

*****

கடவுள்


எந்த சக்தி மனிதனுக்கு உதவி செய்கிறதோ, எது மனிதனின் துயரத்தைப் பங்கு போட்டுக் கொள்கிறதோ, எது மனிதனை மேம்படுத்துகிறதோ, அது எல்லாமே எழுத்துக்கும் எழுத்தாளனுக்கு உகந்ததாகத்தானே இருக்க முடியும்? அதே நேரத்தில் மதத்தின் பெயரால் நடந்த துவேஷங்கள், மனித அவலங்கள், வெறுப்பு, தீண்டாமை போன்ற விஷயங்களை என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. இப்போது என் முன்னால் இருக்கும் கேள்வி, கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்பதல்ல. கடவுள் தேவைப்படுகிறாரா, இல்லையா என்பதுதான். எனக்கு கடவுள் தேவையானவராக இருக்கிறார். ஆனால் நம்பும்படியானவராக இல்லை.

நான் எல்லாக் கோயில்களுக்கும் போயிருக்கிறேன். கோவில் என்பது ஒரு கூட்டுவெளி. அங்கே இசையும் சிற்பமும் தியானமும் ஒவியங்களும் ஒன்றுகலந்திருக்கின்றன. ஆகவே அந்த வெளி தனித்துவமானது. தேடித்தேடி கோவில்களுக்குப் போய் சிற்பங்களைக் கண்டிருக்கிறேன். வழிபாடுகளை நான் கேலி செய்வதில்லை. அது ஒரு நம்பிக்கை. அதை நம்புகிற மனிதன் ஏற்றுக் கொள்கிறான். நம்ப மறுக்கின்றவன் விலகிப் போகிறான். அவ்வளவே! மக்கள் எங்கெல்லாம் கூடுகிறார்களோ அந்த இடங்களை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அவ்வாறு கூடும் பொதுவெளி இன்று குறைந்து கொண்டே வருகிறது. அதனால் தான் டிவியை நமது அகவெளியாக மாற்றிக் கொண்டுவிட்டோம்

எனது இந்தியா


இந்த தேசத்தில் பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வில் ஒரு முறையாவது இந்தியாவைச் சுற்றிப் பார்க்க வேண்டும். இந்தியா என்பது நாம் வரைபடத்தில் பார்க்கும் இந்தியா அல்ல. அது ஒரு மிகப் பெரிய நிலப்பகுதி. அதை நாம் கற்பனை செய்யவே முடியாது. அவ்வளவு மாறுபட்ட கலாசாரங்கள், நம்பிக்கைகள், நிலக்காட்சிகள் இருக்கின்றன. இந்தியப் பயணத்தில் ஒவ்வொரு எட்டுமணி நேரத்திற்குப் பின்னரும் மாறுபட்ட நிலப்பகுதியை, கலாசாரத்தை, பழக்க வழக்கங்களை, உடையை, உணவை, மொழியை நாம் சந்திக்கிறோம். வேறெங்குமே இத்தனை வகைகளைப் பார்க்க முடியாது. தமிழகத்துக்குள்ளேயே சென்னையில், செங்கல்பட்டில், காஞ்சிபுரத்தில், ஆரணியில் என்று ஒவ்வோர் இடத்திலும் ஒவ்வொரு விதமாக மொழி பேசப்படுகிறது. உணவு முறையில், பழக்க வழக்கத்தில் மாற்றம் உள்ளது. இவ்வளவும் ஒன்று சேர்ந்தது தான் இந்தியா.

இந்தியாவில் பிறந்த ஒவ்வொருவரும் இந்திய நதிகளைப் பார்க்க வேண்டும். அப்போதுதான் இந்தியா எவ்வளவு வளமையானது, எவ்வளவு பாரம்பரியமிக்கது என்பது புரியும். மொத்த இந்தியாவுமே நதிகளால் ஒன்றிணைக்கப்பட்ட நாடு. நதியை ஒட்டியே நகரங்கள் இருக்கின்றன. நதியை ஒட்டியே கலைகள், கலாசார மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இந்தியாவைத் தேடும் ஒரு பயணி நதியோடு கூடச் செல்பவனாகவே இருப்பான். நதி வழி நடந்தால்தான் இதைத் தெரிந்து கொள்ள முடியும். நான் தமிழ்நாட்டில் ஓடக் கூடிய ஏழு நதிகளையும் அதன் தொடக்கம் முதல் இறுதிவரை பயணம் செய்து பார்த்திருக்கிறேன். அதன் பழைய பாதை, புதிய பாதை, என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்று பார்த்திருக்கிறேன். இந்தப் பயணத்திற்குப் பின்னால் தமிழ்நாட்டைப் பற்றி நான் கொண்டிருந்த மனச்சித்திரமே மாறிவிட்டது. தமிழ்நாடு எப்போதுமே வறுமையான நாடு என்ற எண்ணமே மாறிவிட்டது.

அதுபோல இந்தியா ஒரு பின்தங்கிய நாடு என்ற எண்ணமும் மாறிவிட்டது. இது அளப்பரிய செல்வம் கொண்ட நாடு. அவை முழுமையாக அடையாளம் காணப்படவில்லை அல்லது ஓரிடத்தில் மட்டுமே குவிந்திருக்கிறது என்பதுதான் நமது பிரச்சனை. இதைப் பயணம்தான் உணர்த்துகிறது. நான் வரலாற்றை பாடப் புத்தகங்களில் படித்ததை விட அதிகம் பயணம் செய்துதான் தெரிந்து கொண்டேன். கோட்டை, கொத்தளங்கள், கல்வெட்டுக்கள் மட்டும் வரலாறில்லை. நாம் பார்க்கும் மனிதனின் மொழி, உடை, அணிகலன் என்று பலவற்றில் இருக்கிறது. இந்தியாவில் இவற்றிற்கு ஒரு நீண்ட பாரம்பரியமும் இருக்கிறது. இந்தியா இந்தப் பாரம்பரியத்தைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது.

இந்தியாவின் பிரச்சனைகள்


இந்தியா எல்லாவித பொருளாதார நெருக்கடிகளையும் தாண்டி, அது தன் மரபால் பலம் பெற்றதாக இருக்கிறது. ஆனால் சமகாலப் பிரச்சனைகள் வளர்ந்து கொண்டே இருக்கின்றன. நாம் இந்தப் பிரச்சனைகளுக்கு மட்டுமே முதன்மை அளிப்பதால் நமது மரபு என்ன, நமது பாரம்பரிய பெருமைகள் என்ன, நம் பிரச்சனைகளை அந்த மரபான வழிகளின் மூலம் எதிர்கொள்வது எப்படி என்பது பற்றியெல்லாம் அறியாமல் இருக்கிறோம். சமீபத்தில் ஒரு பத்திரிகையில் படித்தேன், உலகத்தில் உள்ள இளைஞர்களின் எண்ணிக்கையில் அதிக அளவு இந்தியால்தான் இருக்கிறார்கள் என்று. ஆனால், நாம் அந்த இளைஞர்களின் ஆற்றலை உழைப்பாக மாற்றவில்லை. இங்குள்ள கலை, மரபுகளைப் பேண முயலவில்லை. கலாசாரம், பண்பாடு, வரலாறு, நாகரிகம் என அனைத்திலும் நமக்கு வலிமையான பாரம்பரியப் பின்புலம் உள்ளது. சுயநலத்திற்காக நாம் அவற்றை அழித்துக் கொண்டிருக்கிறோம். இந்தியனாக இருப்பது தனித்துவமிக்கது. அதை எப்போதும் பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன்

ஆனால் வரலாற்றின் கொந்தளிப்பான சூழலில் நாம் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது மட்டும் உண்மை. இதற்குத் தீர்வு என்று பார்த்தால், அறிவுத்துறை சார்ந்த இந்தியர்கள் உலகத்தின் பல பகுதிகளுக்கும் சென்று தங்கள் ஆற்றலை, திறமையை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். வெளிநாடுகளில் இந்தியர்கள் செய்த அறிவுத்துறை மாற்றத்தை இந்தியாவிலும் செய்ய முன்வர வேண்டும். அப்படிச செய்தால் நம்முடைய இயற்கை வளங்களைக் கொண்டே நாம் நம்முடைய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முடியும். ஒரு நல்ல மாற்றம் வரும்.

Sahitya Akademi Award winner Nanjil Nadan takes AKILA KANNADASAN on a fascinating literary journey

April 24, 2012 1 comment

The writerly life

Photo: K. Ananthan
 

I must have passed the statue several times. I remember glancing at it absent-mindedly during short waits at the Singanallur signal. But I went back to it and spent a full 10, minutes before it, after reading Nanjil Nadan’s Soodiya Poo Soodarka. Clad in dhoti and kurta with a thudu thrown over his shoulders, yesteryear trade union leader N.G. Ramasamy stood tall, amid the din of traffic. The Gandhian had refused to identify his assailants, even on his deathbed. I learnt of this in Soodiya Poo Soodarka, an outstanding anthology of short stories, that won Nanjil Nadan this year’s Sahitya Akademi Award.

“I would have been ecstatic had I received the award 20 years ago,” smiles Nanjil Nadan. “It would have encouraged me . Now that I’ve received it, I’m happy, but not elated.”

Raising social issues

Nanjil Nadan has six novels, 112 short-stories and two poetry collections to his credit. In the recent years, the writer has shown a special interest in essays that reveal his social-consciousness and thirst to do his bit for the society. Born as G. Subramaniam in the small town of Veeranarayana Mangalam, Kanyakumari district, Nanjil Nadan has been a prominent figure in Tamil literature for the past 35 years. After completing an M. Sc in Mathematics, he left for Mumbai in 1972 to work in a private company.

Mumbai presented a cultural shock to the lad from the south. Yearning for the familiar, he spent evenings at a Tamil Sangam, reading for hours on end.

“I read and read – at the bus stand, at the railway station, where ever possible. I remember reading two books a day. Lonely in an alien world, my eyes used to well up at the thought of home. Every time I was nostalgic, I headed to Victoria Terminus (now Chatrapati Shivaji Terminus) to watch passengers on Chennai-bound trains – it was the closest I could get to home.” It was during this period that Nanjil Nadan penned his first short-story, Viradham, which was published in writer N. Parthasarathy’s magazine, Deepam.

The first thrill

“I was thrilled to see my name in print for the first time. I bought several copies to flaunt to my friends and colleagues,” reminisces the writer. Around the same time, Nanjil Nadan started work on his first novel, Thalaikeezh Vigithangal. Published in 1977, the novel was an instant best-seller. Years later, it was adapted in to a movie ‘Solla marandha kadhai.’Later came novels such as Enbiladanai veyilkayum, Mamisapadaippu, Midhavai, Sadhuranga Kuthirai and Ettuthikkum madhayaanai. Every written work of Nanjil Nadan bears a fascinating title. A few of them even have references from Sangam literature. In fact, an M. Phil student has done a research on the titles of the writer’s works.

M. Velayutham, founder of Vijaya Pathipagam says, “Nanjil’s titles are one-of-a-kind. So are the characters in his stories. The intrepid Kumbamuni for example, is unparalleled.”

Velayutham was instrumental in bringing about the publication of Sadhuranga Kuthirai in 1993, Nanjil Nadan’s first novel since his move to Coimbatore in 1989.

Nanjil uses essays as a medium to raise his voice against the injustices faced by the voiceless.

Creating a stir

His essay Idhu pengal pakkam, about the unsanitary conditions of toilets in all-girls schools of Tamil Nadu created quite a stir when it was published in Anandha Vikatan in 2009. The writer’s books are also part of the curriculum in schools and colleges.

“Nanjil’s description of food will have your stomach grumbling,” smiles the writer’s close friend Venil Krishnamoorthy of Nandhini Pathippagam. Be it a potato sabji garnished with green chillies and onions or a simple kanji served in a coconut shell, the writer can make food as appealing as possible. “It’s my way of making things interesting for the reader,” says Nanjil.

Another love

“Eating is an experience I absolutely enjoy.” In fact, he is currently working on a book about the cuisine of Nanjil Nadu. The author has also forayed into the online world – he periodically contributes essays to solvanam.com. As a sales executive, Nanjil Nadan has travelled widely across the length and breadth of the country. The many interesting people he met during these travels have found their way in to his stories. As we wind up the interview, he tells me about one of them. It was a hungry farmer he met during a train journey in North India. “I was having lunch when this shrivelled old man walked into the compartment. Noticing the last few bits of roti in my plate, he said imploringly, ‘ Hami kaanaar! Hami kaanaar!’ I was taken aback. He did not ask to be fed; he just said, ‘Let us eat.’” Read about this encounter in Yaam Unbaem, another story in Soodiya Poo Soodarka.

Thenkachi Ko Swaminathan: Interview: Iniya Uthayam

September 21, 2009 2 comments
இருப்பதை வைத்துக் கொண்டு இல்லாததைப் பயன்படுத்துங்கள்!
தென்கச்சியார் நேர்காணல்

தென்கச்சியார் என்று வாசகர் களாலும், வானொலி நேயர்களாலும் வாஞ்சையுடன் அழைக்கப்படும் தென்கச்சி கோ. சுவாமிநாதன், தமிழ்நாடு அரசுப் பணியில் விவசாய அலுவலராக வாழ்க்கை யைத் தொடங்கி, பின்னர் 24 ஆண்டுகள் சென்னை வானொலியின் உதவி நிலைய இயக்குனராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தென்கச்சியார் தற்போது வசிப்பது சென்னை மடிப்பாக்கத்தில்.

விவசாய நிகழ்ச்சிகளை மக்கள் பேசும் பேச்சு வழக்கு மொழி யில், கொச்சை நீக்கி இவர் வழங்கி யதால், விவசாய நிகழ்ச்சிகள் மாபெரும் வெற்றி அடைந்த தோடு, கி. ராஜநாராயணனால் “இதுவே மக்கள் தமிழ்’ என்று பாராட்டப் பெற்று, இன்று அரசு வானொலி, தனியார் பண்பலை வானொலி என அனைத்து வானொலி நிலையங்களுக்கும் இலக்கணமாகவும் அமைந்து விட்டது. விவசாய நிகழ்ச்சிகளுக்கு அப்பால், சமூக வாழ்வில் ஒழுக்கம், மனிதநேயம் போன்றவற்றைத் தனது வாழ்க்கை முறையாகக் கடைப் பிடித்துவரும் தென்கச்சியார், இத்தகைய நற்பண்புகளை வானொலி மூலம் மனித மனங்களில் நடவு செய்ய விரும்பியவர். இதனால் அறிவுரையாக வலியுறுத்தித் திணிக்காமல், எளிய குட்டிக்கதைகள் மூலம், சக மனிதனின் தோள்மீது கைபோட்டுப் பேசும் உரையாடல் தன்மையைத் துணையாக வைத்துக் கொண்டு இவர் தொடங்கிய வானொலி நிகழ்ச்சிதான் “இன்று ஒரு தகவல்’.

உலக வானொலி வரலாற்றில் மாபெரும் சாதனையாக மட்டுமின்றி, முன்னுதாரணமாகவும் அமைந்த இந்த நிகழ்ச்சியை பதினான்கு ஆண்டுகள் தொடர்ந்து வழங்கியவர். பிறகு தொலைக்காட்சிகளின் காலை நிகழ்ச்சிகளிலும் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது இந்த நிகழ்ச்சி.

இவர் 17 வயதில் எழுதிய முதல் கவிதை, பாவேந்தர் பாரதிதாசனின் “குயில்’ இதழில் (14. 07. 1959) வெளிவந்தது. அப்போது தொடங்கிய எழுத்துப் பயணம் இன்றும் தொடர்கிறது இவரிடம். தமிழ் குட்டிக்கதை இலக்கியத்தின் தந்தையாக உயர்ந்து நிற்கும் இவரை “இனிய உதயம்’ இதழுக்காகச் சந்தித்தோம்…

உங்கள் பெயரோடு ஒட்டிக் கொண்டிருக் கும் “தென்கச்சி’யின் தாத்பரியம் என்ன? உங்கள் சொந்த ஊர், பால்யம், நீங்கள் சென்னைக்கு வந்த காலம், அன்றைய சென்னையின் வாழ்க்கை பற்றிச் சொல்லுங்கள்?

“”தென்கச்சி என்பது இன் றைய அரியலூர் மாவட்டத்தில் கொள்ளிடக்கரை ஓரத்தில் இருக் கிற சிற்றூர். தென்காஞ்சிபுரம் என்பது பழைய பெயர். அது தான் காலப்போக்கில் தென்கச்சி ஆயிற்று. காஞ்சி என்பது கச்சி என்று ஆகும். “கச்சி ஏகம்பனே’ என்பது காஞ்சிபுரம் ஏகாம்ப ரேஸ்வரரைக் குறிக்கும்.

எங்கள் முன்னோர்கள் காஞ்சிபுரத்திலிருந்து இங்கே வந்தவர்கள். காஞ்சியில் பல்லவ மன்னர்களின் படைவீரர்களாக இருந்தவர்கள் கொள்ளிடக்கரை யில் குடியேறி தென்காஞ்சிபுரம் என்று பெயர் சூட்டியிருக்கிறார் கள். அதுதான் இன்றைய தென்கச்சி.

எங்கள் முன்னோர்கள் பயன்படுத்திய கத்தி, கேடயங்கள் இப்போதும் எங்களிடம் உண்டு. ஆயுத பூஜை சமயத்தில் அதை யெல்லாம் எடுத்து வைத்து வழிபாடு செய்வது வழக்கம். குழந்தைப் பருவத்திலிருந்தே ஒவ்வோர் ஆண்டும் அந்த ஆயுதங்களைத் தொட்டு வணங்கச் சொல்வார்கள். அப்படியே செய்திருக்கி றேன்.

இப்போதெல்லாம் அந்தக் கத்திகளை எடுத்துக் கொண்டு யாரும் சண்டைக்குப் போவதில்லை. கொள்ளிடத்தில் மீன் வெட்டுவதற்குப் போவ துண்டு. வலை இல்லாமல் மீன் பிடிக்கிற கலையில் நாங்கள் வல்லவர்கள்.

இரவு பத்துமணிக்கு மேல் புறப்படுவார்கள். ஒருவர் கையில் கத்தி இருக்கும். ஒரு சிறுவன் தலையில் பெட்ரோமாக்ஸ் விளக்கு இருக்கும். ஆற்றில் இறங்கி நடக்க வேண்டும். விளக்கு வெளிச்சத்தில் எதிரே வருகிற மீன்கள் கண்கள் பூத்துப் போய் அப்படியே நின்றுவிடும். வாள் வைத்திருப்பவர் அதை வெட்டுவார். கூடை வைத்திருப் பவர் அதன்மேல் கவிழ்ப்பார். மேல்புறம் இருக்கிற வளையம் வழியாக கையை உள்ளேவிட்டு மீன் துண்டுகளை வெளியே எடுப்பார். தன் தோளில் இருக்கிற சாக்குப் பையில் போட்டுக் கொள்வார். அவ்வளவுதான்.

இதில் வாள் வைத்திருப்பவர் மிகவும் புத்திசாலியாக இருப் பார். குறிபார்த்து வெட்ட வேண்டியவர் அவர். கூடை வைத்திருப்பவர் அவ்வளவு புத்திசாலியாக இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. துண்டு மீனை எடுத்துத் தோளில் கிடக் கிற சாக்கில் போடத் தெரிந்தால் போதும். பெட்ரோமாக்ஸ் விளக்கைத் தலையில் சுமக்கிறவர் சுத்த மக்காக இருக்க வேண்டும். அவர் சுயமாகச் சிந்திக்கக்கூடாது. மற்றவர்கள் பின்னாடியே போகவேண்டும். அவ்வளவுதான். இதில் எனக்கு பெட்ரோமாக்ஸ் விளக்கு சுமக்கிற வேலைதான் கொடுப்பார்கள். அதில் புரமோ ஷன் கிடைப்பதற்குள் நான் பள்ளிக்கூடம் போக ஆரம்பித்து விட்டேன். இவையெல்லாம் பழைய ஞாபகங்கள்.

எங்கள் ஊர்ப்பக்கம் சுவாமி நாதன் என்கிற பெயர் அதிகம். அதனால் பள்ளியில் படிக்கிறபோதே ஆசிரியர் ஊர் பெயரை யும் சேர்த்து அழைப்பது வழக்கம். நீ கும்பகோணம் சுவாமிநாதன், நீ ஆடுதுறை சுவாமிநாதன், நீ தென்கச்சி சுவாமிநாதன் என்ப தாகக் குறிப்பிடுவார். என்னோடு தென்கச்சி ஒட்டிக் கொண்ட கதை இதுதான்.

ஆரம்பப்பள்ளி தென்கச்சியில். அப்புறம் ஆடுதுறை குமரகுருபர சுவாமிகள் உயர்நிலைப் பள்ளியில் 6, 7, 8-ஆம் வகுப்புகள். பிறகு கும்பகோணம் பாணாதுறை உயர்நிலைப்பள்ளி யில் 9, 10, 11-ஆம் வகுப்புகள். அதன் பிறகு கும்பகோணம் அரசினர் கல்லூரியில் புகுமுக வகுப்பு. அப்புறம் கோவை விவசாயக் கல்லூரியில் பி.எஸ்.சி. (விவசாயம்) பட்டப் படிப்பு.

1965-ல் படித்து முடித்து விட்டு வெளியே வந்தேன். பரீட்சை ரிசல்ட் வருவதற்குள் வேலைக்கான உத்தரவு வந்து விட்டது. பாளையங்கோட்டை பஞ்சாயத்து யூனியனில் விவசாய அதிகாரியாக வேலைக்குச் சேர்ந்தேன். அதற்குப் பிறகுதான் ரிசல்ட் வந்தது. இரண்டு பாடங் களில் நான் பெயில்! வேலைக்கு லீவு போட்டுவிட்டு கோவைக்கு வந்து மறுபடியும் அந்த இரண்டு பாடங்களையும் எழுதி “பாஸ்’ ஆனேன்.

பாளையங்கோட்டையில் ஒருவருடம் வேலை. அங்கிருந்து கடையம் பஞ்சாயத்து யூனிய னுக்கு மாற்றல் ஆனேன். அங்கே ஒரு வருடம். பாரதியாரின் மனைவி செல்லம்மாள் பிறந்த ஊர் அது. அதே தெருவில் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தேன். அப்பு றம் அங்கிருந்து தஞ்சை மாவட்டம் பேராவூரணி பஞ்சா யத்து யூனியனுக்கு வந்தேன். அங்கே ஒரு வருடம். அப்புறம் வேலையை ராஜினாமா செய்துவிட்டு தென்கச் சிக்கு வந்துவிட்டேன். அங்கே பத்து வருடம் சொந்த விவசாயம் பண்ணினேன். டிராக்டர் எல்லாம் நன்றாக ஓட்டுவேன். ஊராட்சி மன்றத் தேர்தல் வந்தது. அதில் நின்றேன். வெற்றி கிடைத்தது. ஊராட்சி மன்றத் தலைவர் ஆனேன். ஏழு வருடங் கள் அப்படியே நீடித்தேன். அதன்பிறகுதான் வானொலிக்கு வந்தேன்.”

வானொலியோடு உங்களுக்கு எப்படி தொடர்பு ஏற்பட்டது?

“”ஊரில் விவசாயம் செய்து கொண்டிருந்தபோது ஒருநாள் தற்செயலாக செய்தித் தாளில் ஒரு விளம்பரம் பார்த்தேன். திருநெல்வேலி விவசாய ஒலிபரப் புக்கு ஓர் ஆள் தேவை. விவசாயம் படித்தவராக இருக்க வேண்டும். விவசாயத்தில் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். வயது 35-க்குள் இருக்க வேண்டும். இப்படியாக இருந்தது அந்த விளம்பரம். அப்போது எனக்கு 34 ணீ வயது. வெள்ளைத்தாளில் விவரங்களோடு விண்ணப்பிக்கச் சொல்லியிருந்தார்கள். விண்ணப் பித்தேன். அதிகச் சிரமம் இன்றி அந்த வேலை எனக்குக் கிடைத்தது. அதற்கு என்ன காரணம் என்றால் போட்டிக்கு அதிகமாக யாரும் வரவில்லை. விவசாயம் படித்தவர்கள் வேலையில்லாமல் அப்போது யாரும் இல்லை. அது எனக்கு வசதியாகப் போனது.

1977-லிருந்து 1984 முடிய திருநெல்வேலி வானொலி நிலையத்தின் பண்ணை இல்ல ஒலிபரப்புப் பிரிவில் உதவி ஆசிரியர் பணி. அப்புறம் ஒரு பதவி உயர்வு. ஆசிரியர் என்று ஆகி சென்னை வானொலிக்கு வந்து சேர்ந்தேன்.

சென்னை வானொலியில் 2-1-1985 அன்று சேர்ந்தேன். அப்புறம் ஒரு பதவி உயர்வு- உதவி நிலைய இயக்குனர். 2002, ஜூன்- 30 அன்று பணி நிறைவு.”

“இன்று ஒரு தகவல்’ நிகழ்ச்சியை எப்போது தொடங்கினீர்கள்? அந்த நிகழ்ச்சி இவ்வளவு பெரிய வெற்றி பெறும் என்று ஆரம்பத் திலேயே எதிர்பார்த்தீர்களா?

“”சென்னை வானொலியில் “இன்று ஒரு தகவல்’ என்கிற நிகழ்ச்சி 1988-ஆம் வருடம், ஜூலை மாதம், முதல் தேதி தொடங்கியது. அப்போது இயக் குனராக இருந்த கோ. செல்வம் அவர்கள் ஒருநாள் என்னைக் கூப்பிட்டு, “நாளைமுதல் இன்று ஒரு தகவல் என்கிற நிகழ்ச்சியை ஆரம்பிக்கிறோம். அதில் மக்களுக்குப் பயன்படக்கூடிய செய்திகளை நீங்கள் சொல்ல வேண்டும்’ என்றார்.

“சார்… நான் ஒருவனே இதைத் தொடர்ந்து வழங்குவது கொஞ்சம் சிரமமாக இருக்கும் என்று தோன்றுகிறது’ என்றேன். “நீங்க ஒரு மாசம் இதை வழங்கி னால் போதும். அடுத்த மாசம் வேறொருவரிடம் இதை ஒப்ப டைக்கலாம்!’ என்றார். “அப்படியானால் சரி!’ என்று ஆரம்பித்தேன். அதற்கப்புறம் வேறு யாரும் அந்தப் பொறுப்பை ஏற்க முன்வரவில்லை. இயக்குனருக்கும் அதை வேறு யாருக்கும் மாற்ற விருப்பமில்லை. பணி நிறைவு பெறும் வரையில் 14 ஆண்டுகள் நாள்தோறும் தொடர்ந்து அதை நானே வழங்கும்படி ஆயிற்று. பல தரப் பினரும் விரும்பிக் கேட்டார்கள். அது நான் எதிர்பாராத ஒன்று தான்.”

ஒரு நடமாடும் பேரகராதி யைப் போல நீங்கள் தரும் விஷயங்கள், குட்டிக் கதைகள் உங்களிடம் கொட்டிக் கிடக்கும் ரகசியம் என்ன? உங்கள் வாசிப்புத் தளம், கடைசியாகப் படித்த புத்தகம் பற்றி…

“”இதில் ரகசியம் எதுவும் இல்லை. ஏனென்றால் எதுவும் என் சொந்த சிந்தனை இல்லை. மற்றவர்களின் சிந்தனைகளைப் படித்துப் புரிந்து கொண்டு, அதைக் கொஞ்சம் எளிமைப் படுத்தி, வேடிக்கை சேர்த்து சொல்கிறேன்; அவ்வளவுதான்.

நீங்கள் சொல்வதுபோல குட்டிக்கதைகள் என்னிடம் எதுவும் கொட்டிக் கிடக்க வில்லை. உலகம் முழுவதும் கொட்டிக் கிடக்கின்றன. அதை எடுத்து ஊடகங்கள் வழியே மறுபடியும் உலகத்துக்கு வழங்கு கிறேன்; அவ்வளவுதான். என்னுடைய வாசிப்புத் தளம் பற்றிக் கேட்கிறீர்கள். எனக்குப் பிடித்தவை துப்பறியும் கதைகள் தாம்! சின்ன வயதிலிருந்து இன்றுவரை அவற்றைத்தான் விரும்பிப் படிக்கிறேன்.

மற்றபடி ஊடகத்தேவை- மக்கள் சேவை இவற்றிற்காக ஆன்மிகம், இலக்கியம், விஞ்ஞா னம், தத்துவம் இப்படி எல்லாவற் றையும் தேவைக்கு ஏற்ப படிப்ப துண்டு. கடைசியாக படித்த புத்தகம் “ஆகாய ஆசை கள்.’ ஆசிரியர் ஜேம்ஸ் ஹாட்லிசேஸ். ‘வர்ன்’ஸ்ங் ஞ்ர்ற் ண்ற் ஸ்ரீர்ம்ண்ய்ஞ்’ என்ற ஆங்கில நாவலின் தமிழாக்கம்.”

ஒரு சின்னஞ்சிறு குட்டிக்கதையை ஒரு சிறுகதைபோல விரித்துச் சொன்னா லும், உங்களது ரசிகர்கள் பொறுமை யாக ரசிக்கிறார்கள். இந்த வெற்றிக்குக் காரணம் உங்களுக்குள் இருக்கும் கதை சொல்லியா? உங்களது வசீகரமான கனிவான குரலா?

“”பொதுவாக கதை கேட்கிற ஆர்வம் எல்லாருக்குமே உண்டு. ஆகவே எதைச் சொன்னாலும் அதை ஒரு கதை மாதிரி சொன் னால் ஆர்வத்துடன் கேட்க ஆரம்பிக்கிறார்கள். சிறிய கதை யைப் பெரிய கதை மாதிரி சொன்னாலும் பொறுமையாகக் கேட்பதற்குக் காரணம், கடைசி யில் ஒரு நகைச்சுவை வரும் என் கிற எதிர்பார்ப்பாக இருக்கலாம். மற்றபடி குரலில் வசீகரம்- கனிவு என்பதெல்லாம் கேட்கிறவர் களின் மனதைப் பொறுத்தது. அழகாய் இருக்கிற பொருளை நீங்கள் விரும்புவதில்லை. நீங்கள் விரும்புகிற பொருள் அழகாய் இருக்கிறது. அவ்வளவுதான் விஷயம்.

கேட்கிறவர்கள் அல்லது வாசிக்கிறவர்களை ஒன்றை எதிர்பார்க்கச் செய்துவிட்டு, அதற்கு நேர்மாறாக ஒன்றைச் சொல்கிறபோது சுவாரசியம் வந்துவிடுகிறது. உதாரணத் துக்கு ஒன்றைச் சொல்ல லாம். “விபத்து’ என்ற தலைப்பைக் கொடுத்து பத்து வரிகளில் ஒரு கட்டுரை எழுதச் சொன் னார் வகுப்பு ஆசிரியர்.

ஒரு மாணவன் எழுதிய கட்டுரை இது:

“ஒரு முப்பது மாடிக் கட்டிடத் தின் மேல் மாடியில் வெளிப்புறமாக நின்றுகொண்டு ஒருவன் வெள்ளையடித்துக் கொண்டிருந் தான். துரதிருஷ்டவசமாக அவன் கால் நழுவிக் கீழே விழுந் தான். அதிர்ஷ்டவசமாக அப் போது தெருவில் ஒரு வைக்கோல் லாரி வந்து கொண்டிருந்தது. துரதிருஷ்டவசமாக அந்த வைக்கோலின் நடுவில் ஒரு கடப்பாறை செருகப்பட் டிருந்தது. அதிர்ஷ்டவசமாக அவன் அந்தக் கடப்பாறையில் விழவில்லை. துரதிருஷ்டவசமாக அவன் அந்த வைக்கோலிலும் விழாமல், தெருவில் விழுந்து செத்துப் போனான்.’

இதுதான் சுவாரசியம் என்பது.”

குழந்தைகளுக்கு வாய்வழி கதை சொல்லும் மரபை நாம் தொலைத்து விட்டதால் இன்றைய தலைமுறை எதை யேனும் இழந்துவிட்டதாக நினைக்கிறீர்களா?

“”அப்படி நினைக்கத் தேவையில்லை. ஊடகங்கள் இல்லாத காலத்தில் வாயின் தேவை அதிகமாக இருந்தது. இப்போது தாத்தா, பாட்டி களுக்குப் பதிலாக ஊடகங்கள் கதை சொல்லுகின்றன. அவற்றை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். காலம் தோறும் சிலவற்றை இழப்போம். சிலவற்றைப் பெறுவோம். இது உலக மரபு. இதில் வருந்துவதற்கு ஏதும் இல்லை.”

வானொலி ஊடகம் நம்மைப் போன்ற ஒரு வளரும் சமுதாயத்தில் எவ்வாறு கடமையாற்ற வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

“”உதாரணத்துக்கு ஓர் உண்மை நிகழ்ச்சியைச் சொல்கிறேன்; கேளுங்கள்.

நான் திருநெல்வேலி வானொலி நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த நேரம். ஒரு நாள் மாலை வேளையில் ஒரு தொலைபேசி அழைப்பு.

“ஹலோ… ரேடியோ ஸ்டேஷனா?’

“ஆமாங்க.’

“நான் டீன் பேசறேன். ஹைகிரவுண்ட் ஆஸ்பத்தி ரியிலிருந்து… ஒரு முக்கிய மான விஷயம்.’

“சொல்லுங்க டாக்டர்.’

“கொஞ்ச நேரத்துக்கு முன் னாடி ஒரு ஆக்சிடெண்ட் நடந்துபோச்சி!’

“எங்கே டாக்டர்?’

“பாளையங்கோட்டை ரயில்வே கிராசிங் தாண்டி… கொஞ்ச தூரத்துலே…’

“பெரிய விபத்தா டாக்டர்?’

“ஆமாம்… வடநாட்டு சுற்றுலா பஸ் ஒன்றும் ஒரு லாரியும் மோதிக்கிட்டதுலே, டிரைவர் உள்பட கொஞ்ச பேர் அந்த இடத்துலேயே இறந்துட்டாங்க. அடிபட்டு உயிருக்குப் போராடிக் கிட்டிருக்கிறவங்களையெல்லாம் இங்கே கொண்டு வந்து சேர்த் திருக்காங்க. இந்த நேரத்துலே உங்களாலே ஒரு உதவி!’

“சொல்லுங்க டாக்டர்… எங்களாலே முடிஞ்சது எதுவா இருந்தாலும் செய்யிறோம்.’

“வேறே ஒண்ணுமில்லே. இப்ப இங்கே எங்ககிட்டே வந்து சேர்ந்திருக்கறவங்களுக்கெல் லாம் உடனடியா ரத்தம் செலுத் தியாகணும். அப்படி செஞ்சா அவங்களையெல்லாம் காப்பாத்திப்புடலாம்.’

“சரி.’

“ஆனா போதுமான ரத்தம் இப்ப பிளட் பாங்க்ல இல்லே. பொதுமக்கள் யாராவது வந்து ரத்தம் கொடுத்தா இவங்கள்லாம் பிழைச் சுக்குவாங்க. இப்ப நான் உங்ககிட்டே கேட்டுக்கறது என் னன்னா, உடனடியா இது சம்பந்தமா நீங்க ரேடியோவுல ஒரு அறிவிப்பு கொடுக்க முடியுமா?’

“இப்பவே நாங்க அதுக்கு ஏற்பாடு செய்யறோம். நீங்க மற்ற வேலைகளைக் கவனிங்க.’

வானொலி நண்பர்கள் உடனே செயலில் இறங்கினார் கள். அந்த சமயத்தில் திரைப்பட இசை ஒலிபரப்பாகிக் கொண் டிருந்தது. அவசரம் அவசரமாக அறிவிப்பு ஒன்று எழுதப்பட்டது நாலு வரிகளில்.

“நேயர்களே! ஒரு முக்கிய அறிவிப்பு. சற்று முன் நேர்ந்த ஒரு விபத்தினால் பாதிக்கப் பட்டவர்களைக் காப்பாற்ற ரத்தம் தேவைப்படுகிறது. ரத்த தானம் செய்ய விரும்புகிறவர்கள் உடனடியாக பாளையங் கோட்டை மருத்துவமனைக்கு விரைந்து செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.’

அறிவிப்பாளர் தூத்துக்குடி ராஜசேகரன், ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாடலை நிறுத்தி இடையே அந்த அறிவிப்பை வாசிக்கிறார். ஒரு முறைக்கு இருமுறையாக இந்த அறிவிப்பு வாசிக்கப்படுகிறது. மறுபடியும் படப்பாடல் கள் தொடர்கின்றன. ஒரு இருபது நிமிடங்கள் கடந்திருக்கும். இன்னும் இரண்டு பாடல்களை ஒலிபரப்ப நேரம் இருந்தது. அந்த சமயத்தில் மறுபடியும் தொலைபேசி அழைப்பு.

“ஹலோ!’

“”சார்… மறுபடியும் ஹை கிரவுண்ட் ஆஸ்பத்திரியில் இருந்துதான் பேசறோம். நீங்க உடனே இன்னொரு அறிவிப்பு செய்யணும்.’

“என்ன சொல்லணும்… சொல்லுங்க டாக்டர்.’

“தயவு செய்து மேற்கொண்டு யாரும் ஹைகிரவுண்ட் ஆஸ்பத் திரிக்கு ரத்ததானம் செய்ய வர வேண்டாம்னு சொல்லணும்.’

“என்ன ஆச்சு டாக்டர்?’

“ஏகப்பட்ட பேர் ரேடியோ அறிவிப்பைக் கேட்டுட்டு ரத்தம் கொடுக்க இங்கே வந்துட்டாங்க… கூட்டத்தை எங்களாலே சமாளிக்க முடியலே. அவ்வளவு பேர்கிட்டே ரத்தம் கலெக்ட் பண்ணவும் இப்ப இங்கே வசதி இல்லே. ப்ளீஸ்…!’ மறுபடியும் வானொலி அறிவிக்கிறது.

“இனி யாரும் அங்கே செல்லத் தேவையில்லை என்பதை நன்றி யோடு தெரிவித்துக் கொள்கி றோம்.’

மறுநாள் மருத்துவமனைக் குப் போகிறோம். படுக்கையில் இருந்தவர்கள் பாசத்தோடு எங்க ளைப் பார்க்கிறார்கள். பாஷை ஒரு தடையாக இல்லை.

ஊடகங்கள் சமுதாயத்திற்கு எப்படிக் கடமையாற்ற வேண்டும் என்று கேட்டீர்கள். இந்த உண்மை நிகழ்ச்சி அதற்கு ஓர் எடுத்துக்காட்டு.”

ஹாரிபாட்டர், ஐரோப்பிய ஆங்கில காமிக்ஸ் கதைகள் என்று நம் கலாச்சாரத்தோடு ஒட்டாத கதைகளை இன்றைய வளரும் தலைமுறை வாசிக்கத் தலைப்பட்டிருக்கிறது. ஹாரி பாட்டர் போல தமிழ்க் கதை வழி மரபுகள், நாட்டார் வழக் காறுகளைக் கதைக்கூறுகளா கவும் நம்முடைய மரபார்ந்த வரலாற்றிலிருந்து பாத்திரங் களையும் அமைத்து கதை யெழுதும் ஆற்றல் நம்மில் ஒருவருக்குக்கூட இல்லையா? அல்லது முடியாதா?

“”எது நல்லது, எது கெட்டது என்பதைக் காலம்தான் முடிவு செய் கிறது. எனவே மனிதர்கள் அதைப் பற்றிக் கவலைப் பட்டு ஆகப்போவது ஒன்று மில்லை. ஊடகங்கள் போகிற வேகத்தைப் பார்த்தால் உலகக் கலாச்சாரம் என்ற ஒன்றே விரைவில் உருவாகிவிடும் என்று தோன்றுகிறது. “உலகத்தோடு ஒட்ட ஒழுகல்’ என்ற வள்ளுவரின் வார்த்தைகளைச் சரியாகப் புரிந்துகொண்டால் போதும். காலம் என்பது மாறிக்கொண்டே இருக்கிறது. இந்த மாற்றம் பிடிக் காதவர்கள் “காலம் கெட்டுப் போச்சு’ என்று சொல்லிக் கவலைப்படுகிறார்கள். அவ்வளவுதான்.”

இன்றைய யுவன்- யுவதி களுக்கு முதலில் நட்பு பிறகு காதல் என்ற கண்ணோட் டமும், வாழ்க்கை முறையும் வந்துவிட்டது. இன்றைய இளைஞர்கள் காதலின் உண்மையான ஜீவனைப் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லையே? குடும்ப நல நீதிமன்றத்திலும் கூட்டம் அலைமோதுகிறது. கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த தமிழன் காலப்போக்கில் குடும்ப அமைப்பை இழந்து விடுவான் என்று நம்புகிறீர்களா?

“”முந்தைய கேள்விக் கான பதிலை மறுபடி யும் ஒருமுறை படித் துக் கொள்ளுங்கள்.

“இனவிருத்திக்காக இயற்கை செய்கிற தூண்டுதல் உணர்வின் தொடக்கம்தான் காதல் என்பது.’

காதலைவிட்டு விலகி நின்று பார்த்தால் தான் இந்த உண்மை புரியும். காதலில் தோற்றுப்போனவர்களைத்தான் தெய்வீகக் காதலர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். குடும்ப அமைப்பைப் பற்றிக் கவலைப் படத் தேவையில்லை.

நேற்றைய மனிதர்கள் எப்படி விரும்பினார்களோ அப்படி வாழ்ந்தார்கள். இன்றைய மனிதர்கள் எப்படி விரும்புகிறார் களோ அப்படி வாழ்கிறார்கள். நாளைய மனிதர்கள் எப்படி விரும்புவார்களோ அப்படி வாழ்வார்கள். உங்கள் ஆட்டத்தை நீங்கள் சரியாக ஆடி முடியுங்கள்; அது போதும். அடுத்த காட்சி யைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். அதை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.”

உங்கள் பயண அனுபவங் களிலிருந்து “இனிய உதயம்’ வாசகர்களோடு பகிர்ந்து கொள்ள நினைப்பது?

“”பணிநிறைவுக்குப் பிறகுதான் பாஸ்போர்ட்டே வாங்கினேன். சிங்கப்பூர், லண்டன், குவைத், தாய்லாந்து, இலங்கை இவை யெல்லாம் நண்பர்களுடன் போய் நான் பார்த்துவிட்டு வந்த நாடுகள். அந்த மானுக்கும் ஒரு முறை போய்விட்டு வந்தேன். சும்மா போய் பார்த்துவிட்டு வந்தேன். ஒரு சில கூட்டங் களில் பேசினேன். அவ்வளவு தான். சுவையான செய்திகள் என்று ஏதும் இல்லை.

என்னுடைய நீண்ட கால நண்பர் ச.ஆ. கேசவன் (இனாம் மணியாச்சி) அமெரிக்கா போய் விட்டு வந்தபிறகு சொன்ன வார்த்தைகள் சுவையானவை. “எப்படி இருக்கிறது அமெரிக்கா?’ என்ற கேள்விக்கு அவர் சொன்ன பதில்:

“அமெரிக்கா பணக்காரர் களின் நரகம். இந்தியா ஏழைகளின் சொர்க்கம்.’ ”

தானத்தில் சிறந்ததாக உங்கள் பார்வையில் உயர்ந்து நிற்பது?

“”ஆந்திராவில் புயல்… அத னால் பாதிக்கப்பட்டவர்கள் அநேகம் பேர். அதற்காகப் புயல் நிவாரண நிதி தமிழ்நாட்டில் திரட்டப்படுகிறது.

கல்லூரி மாணவர்கள் கையில் உண்டியலுடன் நிதி திரட்டி னார்கள்.

சிவகாசி பக்கத்தில் ஒரு பேருந்து நிலையம். மாணவர்கள் உண்டியலை நீட்டுகிறார்கள். மக்கள் காசு போடுகிறார்கள். அங்கே பிச்சையெடுத்துக் கொண்டிருந்த ஒருத்தர், “என்ன விஷயம்?’ என்று விசாரித்தார்.

“ஆந்திராவில் வீடிழந்தவர் களுக்கு வீடு கட்டிக் கொடுக்கவும், பசியால் வாடுகிறவர்களுக்கு சாப்பாடு போடவும், ஆடை இல்லாதவர்களுக்கு ஆடை கொடுக்கவும் இந்தப் பணம் உதவும்’ என்று சொன்னார்கள். அந்தப் பிச்சைக்காரர் யோசித் தார். “கொஞ்சம் இருங்க’ என்று சொல்லிவிட்டு தமது பழைய துணியைப் பிரித்தார். தம்மிடம் அதுவரை சேர்ந்திருந்த அவ்வ ளவு காசையும் மாணவர்களிடம் கொட்டிவிட்டுத் திரும்பிக்கூட பார்க்காமல் அவர் பாட்டுக்கு நடந்து போனார்.

இது சில ஆண்டுகளுக்கு முன்னால் பத்திரிகைகளில் வந்த ஓர் உண்மைச் செய்தி.”

இரண்டாயிரமாண்டு தமிழர் இலக்கியத்தில் உங்கள் இதயம் நிறைந்த படைப்பு?

“”இதற்குப் பதில் சொல்கிற அளவுக்கு நான் நல்ல படைப்புகள் அனைத் தையும் படித்ததில்லை. இரண்டாயிரமாண்டு படைப்பு என்பதைவிட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இதயங்களில் நிறைந்து நின்று கொண்டிருக்கிற ஒரு படைப்பு திருக்குறள்.”

“காமத்தைக் கைவிட காமத் தில் மூழ்கு’ என்ற ஓஷோ- “அறிந்த தினின்றும் விடுதலை பெறு’ என்ற அறிஞர் கிருஷ்ண மூர்த்தி- இவர்கள் இருவரில் உங்கள் சாய்ஸ்?

“”காமத்தில் மூழ்கினால் அதை அறிந்துகொள்ளலாம். அறிந்து கொண்டபின் அது தேவை இல்லை; விட்டுவிடலாம். விடுதலை பெறலாம். இருவர் கருத்திலும் முரண்பாடு தெரியவில்லையே?

விடுதலை பெற்ற குரு ஒருவரி டம் சீடன் கேட்கிறான்: உங்களு டைய தெளிவான அமைதி நிலை யின் ரகசியம் என்ன?

குரு சொல்கிறார்: தவிர்க்க முடியாததோடு மனசார ஒத்துப் போதல்தான்!”

வாழ்வின் தலைசிறந்த தத்து வம் என்று நீங்கள் நினைப்பது?

“” ”இருப்பதை வைத்துக் கொண்டு இல்லாததைப் பயன் படுத்து!’ சீன ஞானி லாலோட்சு சொல்லியிருக்கிற இந்த தத்துவம் என்னை யோசிக்க வைத்தது.

களிமண்ணால் பானை செய்கிறோம். பால் பொங்குவது வெற்றிடத்தில். பானை உடைந்தால் சோறு பொங்க முடியாது. ஆகவே பானை தேவை. “இருக்கிற பானையை வைத்துக் கொண்டு இல்லாத வெற்றிடத்தைப் பயன் படுத்து’ என்கிறார் அந்த ஞானி.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். கதவு, ஜன்னல் வைத்து வீடு கட்டினாலும் நாம் வாழ்வது உள்ளே இருக்கிற வெற்றிடத்தில்தான்! இன்னும் சொல்லப்போனால் கடவுள் என்பதே ஆற்றல் மிகுந்த ஒரு வெற்றுத் தன்மைதான்!”

நம்மிடமிருந்து சென்ற சிலம்பம், களரி போன்றவை கராத்தே, குங்ஃபூ என்று நமக்கே திரும்பி வருகிறது. யோகக்கலையும் தியானமும் பணக்காரர்களுக்கு மட்டுமே வசமாகும் விலை உயர்ந்த விஷயங்கள் ஆகிவிட்டன. தமிழன் தனது அடையாளங் களை, மொழி உட்பட இழந்து வருவது பற்றி?

“”இதுபற்றிக் கவலை கொள்ளத் தேவையில்லை. காலம் மாறிக்கொண்டிருக்கிறது. இன்றைக்கு உலகம் பூராவும் தமிழர்கள் பரவியிருக்கிறார்கள். அவர்கள் கையில் “தமிழ்’ பத்திர மாக இருக்கிறது.”

ஈ.வே.ரா. பெரியார் உலகம் முழுவதும் சென்ற டைந்திருக்க வேண்டிய தமிழர்களின் புரட்சிப் பெட்டகம். அவரது கருத்துகளை இத்தனை காலமாக முடக்கிவிட் டோம். இப்போது அவரது படைப்புகளை நாட்டுடைமை ஆக்க வேண்டும் என்கிற விவாதம் சூடுபிடித்துள்ளது பற்றி…

“”பெரியார் நாட்டுடைமை ஆகி விட்டார். பெரியாரின் கொள்கை கள் நாட்டுடைமை ஆகிவிட்டன. பெரியாரின் படைப்புகள் நாட்டுடைமை ஆகவேண்டும். அதில் தவறில்லை. அவருடைய கருத்துகள் உருமாறி விடக்கூடாது என்று அவர்கள் கவலைப்படுகி றார்கள். இரு தரப்புமே பெரியா ரின்மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பவர்கள்தாம். இதில் கருத்து சொல்லும் அளவுக்கு எனக்குத் தகுதியில்லை.”

சிரிக்கச் சிரிக்க கதை சொல் கிறீர்கள்? ஒரு குட்டிக்கதை மூலம் வாசகர்களைக் கண் கலங்கச் செய்ய முடியுமா?

“”நல்ல இதயமுள்ள வாசகர் களைக் கண்கலங்கச் செய்ய இன்றைக்குக் குட்டிக்கதை கூடத் தேவையில்லை. ஒரு வார்த்தை போதும்.

“ஈழத்தமிழர்கள்!”

நேர்காணல்: ஆர்.சி. ஜெயந்தன்

அணியம் :: வறீதையா கான்ஸ்தந்தின்

July 13, 2009 Leave a comment

வெளியீடு :: தமிழினி 2008.
விலை ரூ.80

ஒரு சமூகம் குறித்தான சிந்தனை, அச்சமூகத்திலிருந்துதான் எழவேண்டும். அச்சமூகம் சிந்திக்கத் துவங்குகிறது என்பதற்கான அறிகுறி இது.

சமூகச் சிந்தனை ஒருங்கிணைக்கப்படும் பொழுது செயல்தளம் தானாக உருக்கொள்ளும். எந்த ஒரு மாற்றத்தினையும் வெளியிலிருந்து புகுத்திவிட முடியாது.

கடலோர சமூகம் காலம் காலமாக பிற சமூகங்களோடு குறைந்தபட்ச உறவுடன் ஒதுங்கி வாழ்ந்த சமூகம். இம்மக்கள் காலத்தின் மாற்றத்தினை அறிந்துகொள்ள முன்வருவதில்லை. அதே சமயம் காலத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் பிற சமுகங்கள் இவர்களோடு உரையாடவும் முன்வருவதில்லை. இதன் காரணமாக புரிதல் என்பது இல்லாததாகிறது. ஆழிப்பேரலை சொல்லவொண்ணாத் துன்பத்தை இம்மக்களிடம் தோற்றுவித்தபோது, ஒட்டுமொத்த சமூகத்தின் அனுதாபமும் ஒரு போரலையாக இவர்கள் மீது பாய்ந்தது. ஆழிப்பேரலை தோற்றுவித்த துன்பத்தைவிட இந்த அனுதாபப் பேரலை தோற்றுவித்த துன்பம் அதிகமானது. ஜெயபதி அடிகளாரின் நோக்கம் இம்மக்களைக் குறித்த புரிதலைத் தோற்றுவிப்பத்துதான். தொடர் கருத்தரங்குகளிலிருந்து குறிப்பிட்ட எல்லைவரை அவர் நோக்கம் நிறைவேறவும் செய்தது. என்றாலும், எல்லா சிக்கல்களுக்கும் முன்கூட்டியே முடிவு செய்யப்பட்ட தீர்வுகளைப் புட்டிகளில் அடைத்து கையோடு எடுத்துவரும் விற்பன்னர்களின் இடையூறும் இருக்கவே செய்தது.

ஆழிப்பேரலை ஒர் இயற்கைப் பேரிடர். மனித சமூகம் இதுபோன்ற பேரிடர்களைத் தொடர்ந்து சந்தித்து வருகிறது. மானுடம் தோற்பதில்லை. ஏதோ ஒருவகையில் அது வென்றுவிடுகிறது. ஒருபோதும் நிலை தடுமாறுவதில்லை. ஆனால் கடலோர சமூகம் நடுக்கம் கொண்டது. இந்த நடுக்கம் ஆழிப்பேரலையினால் தோற்றுவிக்கப்பட்டதில்லை. ஒரு வகையில் இந்நடுக்கம் வெகுகாலம் இச்சமுகத்தில் உறைந்திருந்த ஒன்று. ஆழிப்பேரலை வெளி உலகிற்கு அதனை இனங்காட்டியது. அக்கறையுள்ள மக்கள் இது குறித்து சிந்திக்கவும் துவங்கினர். ஆனால் புரிதலின்மை பெரும் இடையூறாக அமைந்தது. இம்மக்களைக் குறித்து அறிவுரீதியான புரிதலைக் கொண்ட இம்மக்களில் ஒருவருக்கான தேவை எழுந்தது. இங்கு வறீதையா என்ற குரல் மட்டுமே இத்தேவையை நிறைவு செய்யும் சக்தியைக் கொண்டிருப்பதாகக் கருதுகிறேன்.

அணியம்’ வறீதையாவின் எட்டாவது நூல். அறிவியல்தான் அவர் இயங்குதளம். அடிப்படையில் அவர் ஒரு விஞ்ஞானி. கட்டுப்பாடுடன் கடல்சார்ந்த வாழ்வு குறித்து ஆய்வுகளை நிகழ்த்தியவர். மொழி சார்ந்த அவர் இயக்கம் காலத்தின் கட்டாயத்தால் எழுந்தது. ஆனால் ‘எழுத்து சமுக எழுச்சியின் அடையாளம்; எதிர்காலம் குறித்த தரிசனத்தின் வெளிப்பாடு’ என்னும் நிலைப்பாட்டிற்கு அவரால் வரமுடிந்துள்ளது. ஒரு விஞ்ஞானி இந்நிலைப்பாட்டிற்கு வருவது என்பது அபூர்வமானது. விஞ்ஞானி என்ற ஒளிவட்டம் அவன் தலையை சூழும்போது அவன் தன் சமுகத்திலிருந்து வெகுதூரம் அகன்றுவிட்டிருப்பான். நுண்கலைகளில் ஆர்வம் கொண்ட விஞ்ஞானிகள் பலரைக் காண முடியும். ஆனால் எழுத்துத் துறையில் தடம்பதிக்க ஆர்வம் கொள்பவர்கள் வெகுசிலரே. வறீதையாவின் இந்நூல் முழுமையும் கடல் சார்ந்த வாழ்வு தொடர்பானது. தன்னைச் சூழ்ந்த வாழ்வு குறித்து, அதன் தற்கால நிலை குறித்து, பதைபதைப்புடன் சிந்தித்த நேர்மையான ஒரு மனதின் வெளிப்பாடு.

ஒவ்வொரு கட்டுரையும் வாசகனைச் சிந்திக்கத் தூண்டுகிறது. இந்தியத் துணைக்கண்டத்தின் குடிமக்களுள் ஒரு பிரிவினரை இன்னொரு நாட்டின் கடற்படை தொடர்ந்து வேட்டையாடுகிறது. அவன் தொழில் கருவிகளைப் பிடுங்கிக் கொள்கிறது. அவன் படகுகளை மூழ்கடிக்கிறது. இக்கொடுமையைத் தொடர்ந்து எதிர்கொண்ட ஒரு தலைமுறை இன்று எழுந்துள்ளது. ஆனால், இந்திய அரசிடமிருந்து மட்டுமில்ல, இந்திய மக்களிடமிருந்தும் எவ்விதமான எதிர்வினையும் இல்லை. மிருகங்களைக்கூட இன்று சுட்டுக்கொல்ல முடியாது. ஆனால் இந்த மனிதர்களை மட்டும் வேட்டையாடலாம். இந்தியாவின் ஒரு மாவட்டம் அளவேயான ஒரு நாட்டின் கடற்படை தொடர்ந்து இந்த வேட்டையை நிகழ்த்துகிறது. எல்லை தாண்டி மீன் பிடிப்பதைக் காரணமாகச் சுட்டுகிறது. இந்தியக் கடற்படையும், இந்திய அரசும் இக்காரணத்தைத்தான் சுட்டுகின்றன. இந்தியக் கடல் எல்லைக்குள் இவைகள் நிகழ்ந்ததாக மீனவர்கள் சுட்டினாலும், எவ்விதப் பரிசீலனையுமின்றி எல்லைக்கப்பால் நிகழ்ந்ததாகத் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது.

கடல் முழுமையிலும் மீன்கள் நிறைந்திருப்பதில்லை. மீன்கள் விளையும் வயல்கள் கடலில் ஆங்காங்கே உண்டு. அந்த வயல்களில் சென்றுதான் அறுவடையை நிகழ்த்தியாக வேண்டும். கச்சத்தீவு தமிழ் மீனவர்களின் பாரம்பரிய உரிமை கொண்ட மீன்வயல், அதை தமிழர்களின் பாரம்பரிய எதிரிகளுக்கு தாரை வார்த்த இந்திய அரசு, கச்சைத்தீவின் மீதான தமிழ் மீனவர்களின் பாரம்பரிய உரிமை கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்ட பின்பும் உண்டு என்றுதான் கூறியது. (சிங்களர்களின் அரச வரலாற்றைக் கூறும் மகாவம்சம் சிங்களர்களுக்கும் தமிழர்களுக்குமிடையிலான பகையை மட்டுமே கூறுகின்றது.) அவசர நிலைக் காலத்தின்போது அதிகாரிகளின் அளவில் தமிழ் மீனவர்களின் தொழில் செய்யும் உரிமை சிங்களர்களுக்கு விட்டுக்கொடுக்கப்பட்டது என்ற செய்தியும் உண்டு.

சிங்களக் கடற்படை இந்திய கடற்படையால் பயிற்றுவிக்கப்படுவது, ஒரு வகையில் இருதரப்பாரும் வகுப்புத் தோழர்கள். நண்பர்கள். ஆனால், தமிழ் மீனவர்கள் இந்த நண்பர்கள் வட்டத்திற்குள் வருவதில்லை. நடுக்கடலில் மீனவர்களை எதிர்கொள்ளும் இந்திய கடற்படையின் விசாரணை மொழி கன்னத்தில் அறைவதுதான் என்கிறார்கள் மீனவர்கள். மொழி தெரியாமை இதன் காரணமாகலாம். தமிழ் மொழி தெரிந்த கடற்படை வீரர் ஒருவரைக் குழுவில் இணைப்பதின் மூலம் தகவல் தொடர்பில் நிகழும் குளறுபடிகளைத் தவிர்த்துவிட முடியும். எல்லாவற்றிற்கும் உள்நோக்கங்கள் கற்பிக்க வேண்டியதில்லை. குளறுபடிகளைத் தவிர்ப்பதற்கான அக்கரை அரசியல் தலைமையிடம் இல்லை. மக்களாட்சியில் சாதாரண குடிமகன் அரசியல் தலைமையிடம்தான் முறையிட முடியும். ஒவ்வொரு மீனவன் கொல்லப்படும்போது சடங்குகளை மட்டும் நிகழ்த்திவிட்டு ஒதுங்கிவிடும் அரசியல் தலைமை. எதிர்கட்சிகள் கூட இதில் அக்கரை கொள்வதில்லை என்பதே பெரும் சோகம்.

‘தொடரும் துயரம்’ கட்டுரையில் தகுந்த சான்றுகளோடு இச்சிக்கலை முன்வைத்து தன் சிந்தனையை விரித்துள்ளார் வறீதையா. ‘அலையையும் காற்றையும் அன்றாட எதிர்கொள்ளும் தொழில் முறையினால் துணிச்சலும் முரட்டுத்தனமும் அவனுக்குள் இயல்பாகவே ஊறிக் கிடக்கிறது. மரணத்தின் தாலாட்டு அவன் காதுகளில் எப்போதும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அடுத்த நாள் உணவிற்கு உத்தரவாதம் இல்லாத நிச்சயமற்ற வாழ்க்கை முறைக்கு பழகிப்போனவன் அவன். அதனால், எவ்வித ஒடுக்குதலுக்கும் அச்சுறுத்தலுக்கும் அடங்கிப்போகும் தன்மை அவனிடம் இராது.’ கடல் சார்ந்த மக்களைக் குறித்த இப்புரிதலை அச்சமுகத்தில் வாழும் ஒருவரால்தான் பெற முடியும் மனிதன் என்ற உயிரினத்தின் தனித்தன்மை – ஒருபோதும் அது ஒடுக்குதல்களை ஏற்பதில்லை என்பதுவே. விடுதலை அதன் உயிர்மூச்சு. சுதந்திரத்திற்கான அதன் போரட்டத்தை அது துவக்கும் போது உலகின் எந்த சக்தியும் அதை அடக்கியதாக வரலாறு இல்லை. தமிழ் மீனவன் தொடர்ந்து தன் உயிரை அந்நிய நாட்டின் துப்பாக்கி குண்டிற்கு இரையாக தரப்போவதில்லை. வன்முறையை அது தன் ஆயுதமாகக் கொள்ளும் போது கடல்சார்ந்த சமுகம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய சமுகமும் அலறும். வறீதையா தொலை தூரப்பார்வையில் எதார்த்தத்தை உணர்கிறார். அறிவார்ந்த மொழியில் தன் உணர்வுகளை பகிர்ந்து கொள்கிறார்.

கடலோர சமுகத்தின் வாழ்வியல் சிக்கலை பிற சமுகங்கள் ஏறெடுத்துப்பார்க்க தயங்குகின்றன. தங்களுக்கு தொடர்பில்லாதவை என்ற உணர்வு இருக்கத்தான் செய்கிறது. நடுக்கடலில் அந்நிய நாட்டின் கடற்படை துப்பாக்கி குண்டுகளுக்கு ஒரு மீனவன் பலியாகும்போது, மேலோட்டமான அனுதாபத்தைக் கூட தமிழ் சமுகம் திறந்த மனதோடு முன் வைப்பதில்லை. ஆழிப்பேரலை நிகழ்த்திய அழிவின் போது கடலலையில் சிக்கி மாண்ட மீனவர்களின் பிணங்கள் ‘புள்டோசரால்’ ஒட்டுமொத்தமாக குவித்து தள்ளப்பட்டு மூடப்பட்டன. தமிழ் சமுகம் இறந்தவர்களுக்கு செய்யும் இறுதிக்கடனை பல இடங்களில் அப்போது மறந்திருந்தது. இறந்த மனிதனின் பிணத்தை புதைக்க மனித கரங்கள் இல்லாதிருந்தது. அப்போது இரண்டாயிரம் வருடப் பாரம்பரியம் கொண்ட தமிழ் நாகரிகமும் ‘புள்டோசரால்’ புதைக்கப்பட்டது. கடல் சார்ந்த சமுகத்தை தமிழ் சமுகத்தின் ஒரு பாகமாக நாம் உணர்ந்திருந்தால் இதுபோன்ற நிகழ்வுகள் ஒருபோதும் நிகழ்ந்திருக்க முடியாது. இதைவிட பெரும் சோகம் இதற்கு எதிராக அச்சமுகத்திடம் மொழி இல்லை. அவ்வப்போது அது வெளிப்படுத்தும் வன்முறை முகம் அதன் இயலாமையின் வெளிப்பாடு. இந்த இயலாமை, அதன் பலவீனம் இவற்றைத் தொடர்ந்து அதிகார வர்க்கம் பயன்படுத்திக்கொள்கிறது.

கடற்கறை யாருக்கு சொந்தமானது? நிச்சயமாக அது கடலோர மக்களுக்கு மட்டுமே சொந்தமானது. கடலை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகிற சமூகம் அது. மாற்றுத் தொழில்களில் அதற்கு பழக்கமும் இல்லை, நாட்டமும் இல்லை. அவர்கள் வாழ்விற்குப் பாதுகாப்பளிப்பது சமுகத்தின் கடமை. வாழ்க்கை அதற்கான ஒழுங்குகளைக் கொண்டுள்ளது. இவ்வொழுங்குகள் அனைத்தும் மனிதன் காலம் காலமாகப் பெற்ற அனுபவங்களிலிருந்து முகிழ்ந்தவை. இவ்வொழுங்குகளைச் சிதைக்கும்போது வாழ்வும் சிதைந்துவிடுகிறது.

விடுதலைக்குபின் உணவு பற்றாக்குறையை இந்தியா எதிர்கொண்டது. விவசாயத்தையே முதன்மைத் தொழிலாகக் கொண்ட நாடு தன் உணவுத் தேவைக்கு வேற்று நாடுகளைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை. உணவு உற்பத்தியைப் பெருக்குவது என்ற அரசியல் நிலைபாடு எடுக்கப்பட்டது. அரசியல் தலைமையால் கொள்கை முடிவுகளை மட்டுமே எடுக்க முடிவும். அதைச் செயல்படுத்த வேண்டியது அதிகார வர்க்கத்தின் கடமை. பசுமைப்புரட்சி என்ற திட்டம் உருக்கொண்டது. அதற்கு வடிவம் கொடுத்த அதிகாரி பன்முகம் கொண்ட விவசாயத்தின் தனித்தன்மையைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. கூடவே உணவுப்பழக்கம் இந்திய சமுகம் முழுமையிலும் ஒருபோல் அமையவில்லை என்ற உண்மையையும் எதிர்கொள்ளவில்லை. பார்ப்பண உணவுப்பழக்கம் மட்டுமே அவனுக்குத் தெரிந்த ஒன்று. பார்ப்பண வாழ்வு உடல் உழைப்பை அறியாதது. காலம் காலமாகப் பிறரை சுரண்டிச் செழித்த ஒன்று. தென்னாட்டில் அரிசி உணவை மட்டுமே அது அறிந்திருந்தது. உணவில் ருசி அதற்கு முதன்மையானது. தமிழ்நாட்டில் குறிப்பாகத் தென்மாவட்டங்களில் அரிசி ஒருபோதும் முதன்மையான உணவாக அமைந்ததில்லை. கடும் உடல் உழைப்பிற்குத் தேவையான உணவுப்பழக்கத்தை அது கொண்டிருந்தது. அரிசி அதில் இடம் பெறவே இல்லை. விழாக்காலத் தேவைகளுக்கு மட்டுமே அது பயன்படுத்தப்பட்டது. அன்று பார்ப்பனச்சமுகம் உழைப்பதில்லை. தனக்குத் தேவையான தானியங்களை அச்சமுகம் உற்பத்தி செய்து கொண்டது. விடுதலையைத் தொடர்ந்த காலக்கட்டங்களைக் களமாகக் கொண்ட தமிழ் நாவல்களிலிருந்து இவ்வுண்மைகளை உணர்ந்து கொள்ள இயலும். இதையெல்லாம் புறக்கணித்த ஓர் அதிகாரியால் பசுமைப்புரட்சி என்ற நச்சு விதை தூவப்பட்டது.

காலம்காலமாக இம்மண்ணின் தன்மைக்கேற்ப, பருவ நிலையின் இயல்பிற்கேற்ப வளர்தெடுக்கப்பட்ட விவசாயமுறை நசுக்கப்பட்டது. குறைந்த அளவு நிலத்திலிருந்து கூடுதல் உணவு உற்பத்தி என்ற நோக்கம் முன்வைக்கப்பட்டு மண் நஞ்சாக்கப்பட்டது. மண் தாய் என்றால் (அப்படித்தான் நாகரிகம் கூறுகிறது) அவள் மடியை அறுத்து, உதிரத்தைப் பாலாகக் குடித்த பெருமை இவ்வதிகாரிக்கு உண்டு. உற்பத்தி பெருகினாலும் பயிரிட்ட விவசாயி கூடுதல் ஆதாயத்தைப் பெறமுடியாது என்ற உண்மையையும் அவன் அறிந்திருந்தான். விவசாயி தியாகியாக்கப்பட்டான். இப்போதும் தன்னை மாய்த்துக்கொண்டு அந்த அதிகாரி ஏற்றிவைத்த யாகத்தீயை அணையாமல் பாதுகாத்துக் கொண்டிருக்கிறான்.

நியாவிலைக்கடையில் அரிசி வழங்கப்பட்ட போது தானிய உற்பத்தியை மறந்து முன் வரிசையில் நிற்கத் துவங்கினான். ஒரு நேரம் கோதுமை உணவு என அவன் பார்த்தறியாத தானியமும் அவன் மேல் கொட்டப்பட்டது. அரிசியும் கோதுமையும் நன்செய் நிலத்தில் விளைவன. நன்செய் விவசாயம் மட்டுமே இவ்வதிகாரியால் விவசாயமாகக் கருதப்பட்டது. இந்தியா உணவுத் தேவையை நிறைவு செய்தது. ஆனால், தன் குடிமக்களை நோயாளியாக்கியது. மக்களின் விழிப்புணர்வற்ற நிலை ஒட்டுமொத்த அழிவிற்கு வேகமாக இட்டுச்சென்றது. எஸ்.என்.நாகராஜன் போன்றோர் உரத்தக்குரலில் இதற்கு எதிராகக் கூவிக்கொண்டிருந்தனர். ஆனால் அதிகாரவர்க்கம் தன் செவியை மூடிக்கொண்டது. பாரம்பரியமான நம் கால்நடைகளை நாம் இழந்ததிலும் பசுமைப்புரட்சிக்கு பங்குண்டு. மனிதன், வேளாண்மை, கால்நடை என்ற தொடர்புச் சங்கிலி எம்.எஸ்.சாமிநாதனால் அறுக்கப்பட்டது.

இப்போது கடலோர வாழ்விற்கு வருவோம். இந்தியா விவசாயத்தைப் பின்தள்ளிவிட்டு தொழிற்துறையில் முன்னே செல்ல அரசியல் கொள்கை வகுக்கப்பட்டுவிட்டது. தொழில் வளர மூலப்பொருட்கள் வேண்டும். இந்திய துணைக் கண்டத்திலுள்ள கனிமங்கள் அனைத்தையும் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தாக வேண்டும். அதிகார வர்க்கம்தான் இதற்குத் திட்டங்கள் வகுத்து நிறைவேற்ற வேண்டும். கடற்கரையிலுள்ள, கடலிலுள்ள கனிமங்களையும் விட்டு வைக்க முடியாது. வெள்ளைத்தோல் கொண்டவர்களுக்கு உடலின்பம் அளிக்கும் சுற்றுலாத்துறையும் ஒரு தொழில்தான். அதற்கும் கடற்கரை வேண்டும். தாயின் மடியை அறுத்து உதிரத்தைப் பாலாகக் குடித்தவர்களின் பெயர்கள்தான் இங்கும் ஒலிக்கின்றன.

கடற்கரை மேலாண்மை மண்டல வரைவு அறிவிக்கை சாமிநாதன் தலைமையில் தயாரிக்கப்பட்டது. மேலாண்மை என்ற சொல் கவனத்தில் கொள்ள வேண்டியது. இதன் வேறொரு பொருள் ‘உன்னைவிட நான் மேலானவன், கீழடங்கு அல்லது சத்துமடி’ என்பதுதான். இந்த அறிவிக்கை எந்த அளவிற்குக் கடலோர மக்களின் வாழ்வைப் பொருட்படுத்தியுள்ளது என்ற கேள்வியை ‘கடற்கரை வெளியேற்று மண்டலம்’ கட்டுரையில் வறீதையா எழுப்பியுள்ளார். எஸ்.என். நாகராஜனைப்போல் வறீதையாவும் அடிப்படையில் ஒரு விஞ்ஞானி, என்றாலும் மானுடப்பண்பை இழந்துவிடாத விஞ்ஞானி. விரிவாகவே இதுப்பற்றி பேசுகிறார். விவசாயிகளின் மரணத்தில் விவசாய உற்பத்திப் பெருக்கம்! இதற்கு இணையானதுதான் கடலோர மக்களின் வாழ்வை புறக்கணித்துவிட்டு கனிமங்களை சுரண்டுவது. ஒன்றின் விளைவை நாம் அனுபவித்துவிட்டோம். மற்றொன்றின் விளைவு நிகழாதிருக்க நம்முடைய பங்கு என்ன? நாம் ஒவ்வொருவரும் நமக்குள்ளாகக் கேட்க வேண்டிய கேள்வி இது. வறீதையாவைப்போல் பலகுரல்கள் அன்று ஒலிக்கத்துவங்கியிருந்தால் விவசாயிகளின் இன்றைய தற்கொலைகள் நிகழ்ந்திருக்காது. பல வறீதையாக்கள் கடலோர சமுகத்திலிருந்து மேலெழும்ப வேண்டும்.

தென்மாவட்டக் கடலோரங்கள் இன்று கனிமங்களுக்காகச் சுரண்டப்படுகின்றன. இச்சுரண்டலை விரிவாகவே விமர்சிக்கிறார் வறீதையா. காடுகள் அழிக்கப்பட்டதன் விளைவுதான் இன்றைய வறட்சி. இக்காடுகளை அழித்தது காடுகளையே சார்ந்து வாழ்ந்த பழங்குடி மக்களல்ல; அவர்களால் காடுகளை அழிக்கவும் முடியாது. காடு அவர்களுக்குத் தாயின் முலையைப்போல். தேவையான அளவு பாலை அது தன் குழந்தைகளுக்குக் கொடுத்தது. தோட்டத் தொழில் ஊக்குவிக்கப்பட்டபின்தான் காடுகள் அழிந்தன. தேயிலைக்கு ஏற்றுமதி வாய்ப்பு இருந்தது. அதைப் பயன்படுத்திக்கொள்ள திட்டம் வகுக்கப்பட்டபோது காடுகளுக்கு எவ்வகையிலும் தொடர்பில்லாத சமவெளி மனிதர்கள் காட்டை சூறையாடினர். இப்போது தேயிலைக்குச் சந்தை வாய்ப்பு இல்லை. தேயிலைத் தோட்டங்கள் கைவிடப்படுகின்றன. வறட்சி மட்டுமே நமக்கு மிஞ்சுகிறது.

கடல் கடலோர சமுகத்தின் தாய். குழந்தைக்குத் தாயிடமிருந்து பாலைக் குடிக்கத் தெரியும். முலையை அறுத்து பாலைக்குடிக்கும் பேதமை அதற்கு இருக்காது. காட்டைவிட கடற்கரையின் இயற்கை நுட்பமானது. காலம் காலமாகக் குவிக்கப்பட்ட மணல்மேடுகளே கடலை தடுத்து நிற்கும் அரண். இம்மணல் மேடுகளில் நிறைந்திருக்கும் கனிமங்கள் தொழில் பெருக்கத்திற்குத் தேவையானவை எனில் காடுகளை அழித்தது போல் கடற்கரையை அழித்து எதிர்காலம் நாம் பெறப்போவது என்ன?

நம் அதிகாரவர்க்கம் உண்மைகளை மட்டும் ஒருபோதும் கூறாது. சில்லறைச் சுரண்டல்காரர்களை ஓரங்கட்டிவிட்டு பெரியசுரண்டல்காரனான டாடா நிறுவனம் கால்பதிக்கப்போகிறது. நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை. ஆனால் இதை உரிமையாகக் கொள்ளக்கூடாது என்கிறது உச்சநீதிமன்றம். மத்திய அரசின் நிறுவனங்கள்கூட நிலம் கொடுத்த அனைவருக்கும் வேலைவாய்ப்புகளைத் தரவில்லை. விவசாயத்திற்கு மேல்மண் மட்டுமே பயன்படக்கூடியது. மேல்மண் நீக்கப்படும்போது நிலம் விவசாயத்திற்குப் பயன்படுத்தாத பாலையாகும். மீண்டும் மண்ணை வளப்படுத்த வேண்டுமென்றால் டாடா வெட்டி எடுத்த கனிமங்களைவிட செலவு கூடுதலாகும். டாடா தொழிற்சாலைகள் உள்ள இடங்களிலெல்லாம் மயிலிறகால் பெண்களின் இடுப்பை வருடிக்கொண்டிருக்கிறார்கள் என்ற ‘உண்மையை’ டாடாவும் கூறுகிறார். அரசியல்வாதிகளும் கூறிக்கொண்டிருக்கின்றனர். விஞ்ஞானியின் மொழியில் வறீதையா இச்சிக்கலை மேலான ஒரு தளத்தில் எதிர்கொள்ளுகிறார். ‘சர்வாதிகாரத்தின் கொம்பு முளைக்கும்’ ஒவ்வொரு முறையும் ஜனநாயகம் அதைத் தறித்துவிடும். வறீதையாவின் குரல் இளம் தலைமுறையின் குரல். நம்பிக்கையை அது இழந்துவிடவில்லை. இழக்கப்போவதும் இல்லை என்பதை நூல் முழுமையிலிருந்தும் உணரமுடிகிறது.

கடலோர வாழ்வின் மற்றொரு சிக்கலான வறீதையா இனங்காண்பது – கத்தோலிக்க சமயம். ஜெயபதி அடிகளார் ஒருங்கிணைந்த கருத்தரங்குகளில் மிக விரிவாகப் பேசப்பட்ட விஷயங்களுள் ஒன்று இது. சீர்திருத்த கிறிஸ்தவம் நாடார் இனக்குழு மக்களின் கல்வி உயர்வுக்கும் பொருளாதார உயர்வுக்கும் காரணமாக அமையும்போது, கத்தோலிக்க சமயம் கடலோர மக்களின் கல்வியின் மீது கவனம் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. கரத்தரங்குகளில் கலந்துகொண்ட கடலோர மக்கள் தங்கள் கோபங்களை அழுத்தமாக வெளியிட்டனர். ஆனால் கோபத்திற்கு பின்னால் இருந்தாக வேண்டிய சிந்தனை அவர்களிடம் முற்றிலுமாக இல்லை என்றே இப்போது கூறத் தோன்றுகிறது. சிந்தனையின் அடிப்படையில் பிறக்கும் கோபம் மட்டுமே வாழ்வை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும். வறீதையா சமயத்தை எதிர்கொள்ளும் கோணம் தனித்துவமானது. “நான் சார்ந்திருக்கும் கத்தோலிக்க கிறிஸ்தவம் வாழ்க்கையை விமர்சனப் பார்வையுடன் அணுகவும், அறிவைக் கேள்விக்கு உட்படுத்தவும் என்னை பயிற்றுவித்தது” என வெளிப்படையாகவே சமயத்துடனான தன் உறவை நினைவுகூர்கின்றார். சமயத்தை வாழ்வின் எதிரிடையான ஒன்றாக, உதறித்தள்ள வேண்டிய ஒன்றாக ஒருபோதும் அவர் கருதவில்லை. ஆனால் கடலோர மக்களின் இன்றைய வாழ்வில் சமயத்தின் நிலை குறித்த ஆழமான கவலை அவரிடமிருந்து எழுகிறது. அவர் கையாளும் ‘இறந்த நாய்க்குட்டியைச் சுமந்து திரியும் குரங்கின்’ படிமம் சக்தி வாய்ந்தது. வறீதையா இப்படிமம் ஒன்றின் மூலமாகவே தாம் சொல்ல வேண்டியதை சொல்லிவிடுகிறார்.

குமரிமண்ணில் குறிப்பாகக் கடலோர மக்களிடம் கத்தோலிக்க கிறிஸ்தவம் வந்து சேர்ந்தது ஓர் அரசியல் விபத்தின் காரணமாகத்தான். முத்துக்குளிக்கரையைச் சார்ந்த மீனவர்கள் இஸ்லாமியர்களின் நெருக்குதலிலிருந்து தங்களை காத்துக்கொள்ள கொச்சியிலிருந்து போர்த்துக்கீசியர்களின் துணையை நாடினர். கடலோர மக்களுக்கு சேவியர் ஆற்றிய பணி மகத்தானது. ஒரு தந்தையைப்போல் இம்மக்களைப் பாதுகாத்தார். ஒரு நெருக்கடியான அரசியல் சூழலில் சேவியர் இப்பகுதியை ஆண்ட மன்னனுக்கு உதவிய காரணத்தால், குமரிக்கடற்கரை மீனவர்களையும் தன் சமயத்தில் இணைத்துக்கொள்ளும் அனுமதியையும் பெற்றுக்கொண்டார். ஓரிரு நாட்களில் பணி முடிந்துவிட்டது. அக்காலத்தில் ‘முழுமையான விசுவாசமே’ சபையின் இலக்காகக் கருதப்பட்டது. என் பள்ளிப் பருவ நாட்களில் ‘விசுவாசம் கெட்ட தொம்மை’ என்பது வசைச் சொல்லாகவே வழங்கப்பட்டது. சமயப்பணியாளர்கள் இம்மக்களின் விசுவாசத்தின் மீது முழுமையான நம்பிக்கை கொண்டதில்லை. எப்போதும் சந்தேகக் கண்ணுடனேயே இவர்களை எதிர்கொண்டனர். வெளி உலகுடனான தொடர்பு தங்கள் மூலமாகவே நிகழவேண்டும் எனக் கட்டாயப்படுத்தினர். கடலோர மீனவன் வெளி உலகுடனான தொடர்பை என்றோ இழந்துவிட்டிருக்கிறான். அவனுக்கென்று பிரதிநிதித்துவ அரசியல்கூட இன்றில்லை. காலத்தின் மாற்றத்தைக் கத்தோலிக்க சமயம் உணர மறந்துவிட்டபோது மீனவன் காலத்தையும் இழக்கும்படியாயிற்று. இன்று கடலோர வாழ்வின் வேதனைகள் அனைத்தும் இதன் வெளிப்பாடுதான்.

சீர்திருத்த கிறிஸ்தவம் இங்குவந்த சூழல் வேறு. கிறிஸ்தவ அறிவைப் பெற்று கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளுதல் என்பதே அன்று இலக்காக அமைந்தது. கிறிஸ்துவை அறிந்துகொள்ளுவதற்கு வேதநூலைக் கற்றாக வேண்டும். இதற்கு மொழி அறிவு கட்டாயமானது. புதிய காலச் சூழலில் ஒரு கிறிஸ்தவனுக்கு மறுஉலக வாழ்வு மட்டுமல்ல, இவ்வுலக வாழ்வும் உண்டு. கிறிஸ்தவனாக அவனை வாழச்செய்வதும் சமயத்தின் பணியே. கோவில்கள் கட்டப்படும்போது அதன் ஒரு பகுதியாகக் கல்வி நிலையங்களும் கட்டப்பட்டன. சமுக விடுதலைக்கான போராட்டத்தில் சமயப் பணியாளர்கள் முன்னின்று போராடினர். வளர்ச்சியின் ஒரு காலக்கட்டத்தில் உலகியல் வாழ்வை அவர்கள் பொறுப்பிற்கே விட்டுவிட்டு ஆன்மீக வாழ்வை மட்டுமே சமயப்பணியாளர்கள் தங்கள் கடமையாகக் கொண்டனர். இது வரலாற்றடிப்படையில் நிகழ்ந்த ஒன்று. கத்தோலிக்கக் கிறிஸ்தவமும், சீர்த்திருத்தக் கிறிஸ்தவமும் ஒரே காலகட்டத்தில் இம்மண்ணில் கால் ஊன்றவில்லை. முழுமையான விசுவாசமும், அறிவின் அடிப்படையில் அமைந்த விசுவாசமும் வேறானவை. வெவ்வேறு திசைகளில் இயங்குவன.

என் பள்ளிப்பருவ நாட்கள் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவப் பள்ளியில் கழிந்தன. வயது முதிர்ந்த ஆசிரியர் ஒருவர் அன்போடு என்னை அணைத்துக்கொண்டு செல்வார்: “வேதநூலை நீ படிக்கக் கூடாது. தவறாகப் புரிந்து கொள்வாய். குருவானவர் படித்து சொல்லக் கேட்க வேண்டும்” கடலோர வாழ்வின் பெரும் துன்பங்களுக்கு முதன்மையான காரணம் குருவானவர் சொல்லச் சொல்ல கேட்பதுதான். வானுயர்ந்த கோபுரங்களைக் கொண்ட கோவில்கள் உண்டு – ஒவ்வொரு சிறு கிராமத்திலும். ஆனால் பள்ளிக்கூடங்கள் தேவையானவை; குழந்தைகள் படித்தாக வேண்டும் என குருவானவர் சொல்லி மக்கள் கேட்கவேயில்லை. கடலோர மக்களின் வறுமை சொர்க்கத்திற்கான வாயில்.

கத்தோலிக்க சமயம் பல நூற்றாண்டுகள் இறுகிப்போன அமைப்பினை கொண்டது. மாறுதல்கள் மிக மிக மெதுவாகத்தான் அதில் தோன்றக்கூடும். ஆனால் மாறுதல்களை எந்த அளவிற்கு வேகமாக சமுகம் ஏற்கின்றதோ அந்த அளவிற்கு அச்சமுகம் முன்னேறும். ஓர் இந்து இயக்கத்தைச் சார்ந்த நண்பர் ஒருவர் சொன்ன இக்கதையை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். குமரிக் கடற்கரையில், ஓர் இந்து இயக்கத்தை இந்தியா முழுமையிலும் கட்டி எழுப்பிய அதன் தலைவர் கடலுக்கு நடுவே இருந்த ஒரு பாறைக்குச் செல்ல ஆசைகொண்டு ஒரு மீனவனை உதவிக்கு அழைத்தார். மீனவன் அவ்வூர்ப்பாதிரியாரின் அனுமதியைக் கேட்டான். பாதிரியார் விசாரித்துவிட்டு ‘கூடாது’ என்றார். அந்த இயக்கத் தலைவர் கடல் நீரைவாரி இறைத்து சபதம் பூண்டார். குமரிமண்ணில் நிகழ்ந்த பெரும் சமயக்கலவரத்தின் ஆணிவேர் இது. ஆழிப்பேரலையின் கொடுமைக்கு நிகரான அழிவை அது கடலோரத்தில் அன்று நிகழ்த்தியது.

கத்தோலிக்க சமயம் காலத்தின் மாறுதலை அப்பணியாளருக்கு உணர்த்தவில்லை. சிலுவைப்போர்க் காலகட்டத்திலிருந்து அப்பணியாளர் அப்போது வெளியேறி இருக்கவில்லை.

இதில் வறீதையாவின் பார்வை ஆரோக்கியமானது. அவர் பணி சமயத்தை விமர்சிப்பதல்ல. ஆனால் ‘பணியாளர்’, ‘விசுவாசி’ என்னு இரட்டைநிலை ஒழிந்தாக வேண்டும். உலகியல் வாழ்வில் ‘விசுவாசி’ என்றொருவன் இல்லை. சமுக மனிதன் மட்டுமே இருக்கிறான். வாழ்வின் நிலைநிற்பிற்காக அவன் போராடியாக வேண்டும். தலைமை தாங்க அவர் தலைவர்களை தோற்றுவித்தாக வேண்டும். ஆன்மீக வாழ்வைச் செம்மைப்படுத்தும் பொறுப்பை பணியாளர் மட்டுமே வகிக்க முடியும்.

கடலின் இயற்கை மிக நுட்பமானது. மனிதக் குறுக்கீடுகளை அது ஒருபோதும் ஏற்பதில்லை. என் கல்லூரி நாட்களில் கன்னியாகுமரி ஒரு சிறு கிராமம்தான் குமரி பகவதி அம்மன் கோவிலும், மலையளவு உயர்ந்த மணல் தேரியும்தான் அன்றைய கன்னியாகுமாரியின் அடையாளங்கள். கடலின் நடுவிலிருந்து ஒரு பாறையின் மீது மனிதன் காலூன்ற மேற்கொண்ட முயற்சியின் துவக்கமே இன்றைய சீரழிவின் தொடக்கம். கட்டுமானப் பொருட்கள் கொண்டுசெல்ல சில மீட்டர் அளவிலான படகணையும் துறை கட்டப்பட்டபோது, காலம் காலமாக இருந்துவந்த மணல்தேரி காணாமலானது. குழந்தைகளின் காலடிகளை முத்தமிட கரையை மெதுவாக மோதிக்கொண்டிருந்த கடலலைகள் சீற்றம் கொண்டு கரையைத் தாக்கின. கடற்கரையில் கற்பாறைகள் அடுக்கப்பட்டு, குழந்தைகளின் கால்களுக்கும் கடலைக்குமான உறவு நிரந்திரமாகத் தடுக்கப்பட்டது. கடல் நீரோட்டம் தடைபட்டதே இதன் காரணம். கடல் நீரோட்டம் கடலின் உயிர்மூச்சு. கடல்சார்ந்து வாழும் மீன்கள் மனிதர்கள் என அனைத்து உயிரினங்களுக்கும் உயிர்மூச்சு கடல் நீரோட்டம்தான். கடலோர சமுகம் காலம் காலமாக கடலோடு இணைந்து வாழ்ந்த சமுகம். வாழ்வனுபவங்களிலிருந்து கடல்சார்ந்த அறிவை சேகரித்து அது சேமித்து வைத்துள்ளது. கடற்கரையில் புதிய திட்டங்களுக்கு இடமேயில்லை என்பதல்ல. திட்டங்களை முடிவு செய்யும்போது கடலோர சமுகத்தின் கடல்சார்ந்த அறிவும் கணக்கிலெடுக்கப்பட வேண்டும் என்பதுதான்.

கடற்பாசி குறித்த வறீதையாவின் பார்வையை இங்குக் குறிப்பிட வேண்டும். கடற்பாசி வளர்க்கும் தொழில் அரசின் மானிய உதவியுடன் புதிதாக அறிமுகப்படுத்தப்படுகிறது. மீனவர்கள் வளர்க்கும் பாசியை அந்நிய நாட்டு நிறுவனமான பெப்ஸிகோ வாங்கிக் கொள்ளும். இதுபோலவே கொக்கோ பயிரிட விவசாயிகள் தூண்டப்பட்டனர். மலையோர கிராமங்கள் கொக்கோ தோட்டங்களாக மாற்றவும் பட்டன. ஆனால் வாங்கிக்கொள்வதாக வாக்குறுதி தந்த அந்நிய நிறுவனங்கள் கைவிரித்தபோது, கொக்கோ விவசாயிகள் அரசாலும் கைவிடப்பட்டனர். காலணி ஆட்சியின்போது நீல அவுரியைப் பயிரிடத்தூண்டி, பின் வெள்ளைத்தோல் மனிதர்கள் வாங்க மறுத்தபோதுதான் இந்திய விடுதலைப்போரே வேர் கொண்டது. கடந்தகால வாழ்வனுபவங்களே மனிதனை வழி நடத்துகின்றன.

மீன்துறை அமைச்சரரான லூர்தம்மாள் சைமனால் நன்னீர் மீன்வளத்தைப் பெருக்கும் பொருட்டு திலேப்பியா மீன் தமிழ்நாட்டு நீர்நிலைகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. வாயில் வைத்து தன் குஞ்சுகளை பாதுகாக்கும் திலேப்பியா, பிற மீன்களின் குஞ்சுகளை முற்றிலுமாக அழித்துவிடும். அதன் இயற்கை சூழலில் பிற மீன்கள் அதனோடு இணைந்து வாழும் சக்தியைப்பெற்றிருந்தன. புதிய சூழலில் திலோப்பியா பிற மீன்களை வாழ அனுமதிக்கவில்லை. இன்று நன்னீர் மீன்வளர்ப்பில் திலேப்பியா ஒரு களை. கடற்பாசி இனமான ‘கப்பாஃபைகஸ்’ நம் நாட்டு பாசியினம் அல்ல. புதிய சூழலில் இது நிகழ்த்தப்போகும் தாக்கத்தை இன்று கணிக்க இயலாது. திலேப்பியாவை இங்கு அறிமுகம் செய்ய முடிவெடுத்த அதிகாரவர்க்கம் இதனால் எவ்விதப் பாதிப்பினையும் எதிர்கொள்ளவில்லை. பாதிப்பு மக்களுக்கு மட்டும்தான். ‘கப்பாஃபைகஸ்’ நாளை பாதிக்கப்போவது மக்களைத்தான். மக்களின் பாரம்பரிய அறிவு வரப்போகும் ஆபத்தை முன்னுணர்கிறது. வறீதையா என்ற விஞ்ஞானியின் அறிவு, அவர் பிறந்து வளர்ந்த சமுகத்தின் பாரம்பரிய அறிவைக் கணக்கிலெடுத்துக் கொண்டு எச்சரிக்கை செய்கிறது.

கடலோர மக்களின் வாழ்வே ஒரு கட்டுமரம்தான். மனித அறிவில் தோற்றங்கொண்ட மிக எளிமையான, சக்தி வாய்ந்த தொழிற்கருவி. அதன் அமைப்பு எளிதானது. ஆனால் காற்றின் சக்தியை தன் சக்தியாக வரிந்துகொள்கிறது. அதன் திசையைத் தீர்மானிக்க கருவிகள் உண்டு. கருவிகளை இயக்க கடலோர இளைஞர்கள் முன்வந்தாக வேண்டும்.

இது வறீதையா என்ற விஞ்ஞானியின் கனவு.


நீரை நோக்கி மட்டுமே உரையாடிக் கொண்டிருந்த மீனவர் சமுகம் இன்று நிலத்தை நோக்கிப் பொது வெளியில் உரையாடத் தொடங்கியிருக்கிறது.

பலிசோறாக வீசியடிக்கப்படும் மீனவர் வாழ்வு மாலதி மைத்ரி

‘கடலுக்கு முகத்தையும் நிலத்துக்கு முதுகையும் காட்டிப் பழகிய’ மீனவப் பெருங்குடி மக்களின் வசதிக்காக ஒருவேளை சட்டசபையும் பாராளுமன்றமும் கடலில் அமைக்கப்பட்டிருந்தால், மீனவர்கள் நம் ஆட்சியாளர்களை எளிதாக அணுகியிருப்பார்களோ; மீனவர்களின் வாழ்வியல் துயரமும் இன்னல்களும் குறைய வாய்ப்பிருந்திருக்குமோவென கசந்த நகைப்புக்கிடையே எண்ணத் தோன்றுகிறது. உல்லாச விருந்தில் கலந்துகொள்ள அடிக்கடி கடலுக்கு போய்வரும் அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் கடற்கரையில் மீனவர்கள் வாழ்வது சங்கடத்தை உருவாக்குகிறது. இவர்கள் கொள்ளையடித்ததை ஆடம்பரமாகச் செலவழிக்க ‘பீச் ரெசார்ட்களும்’ உண்டுகொழுத்த உடலைக் குறைக்க மீனவர் நடமாட்டமற்ற கடற்கரையும் தேவைப்படுகிறது. ‘கடற்கரை ஒழுங்குமுறை மண்டலத்தை’ மக்கள் விரோதி எம்.எஸ் சாமிநாதன் ‘ கடற்கரை மேலாண்மை மண்டலமாக’ மாற்றி அறிவிக்கை தயார் செய்து அளிக்கிறார். சுனாமியில் பேரழிவைச் சந்தித்த மீனவர்களின் வாழ்வாதாரத்தை ஒட்டுமொத்தமாகப் பறிக்க ‘கடற்கரை மேலாண்மை மண்டல அறிவிப்பாணையை” வெளியிடுகிறது மத்திய அரசு. அரசியல் சக்தியாக மாற்றம் பெறாத மீனவச் சமுகத்தைக் கடற்கரையிலிருந்து வாரி வழித்துப் பலிசோறாக நிலத்தை நோக்கி வீசிடத் துடிக்கின்றனர் முதலாளிகளும், அரசு யந்திரக் கைக்கூலிகளும்; மீனவச் சமுகத்திடையே அரசியல் விழிப்புணர்வு குறைவாக இருப்பதால், மீனவரை எளிதாக ஏமாற்றிவிடலாமென அரசு எண்ணுவதில் வியப்பில்லை. இவர்கள் அரசியல் மாற்றத்தை உருவாக்கக்கூடிய மக்களில்லை என்கிற வருத்தத்துடன்தான், மீனவச் சமுகத்தை பலி கேட்கும் அரசின் கொள்கை முடிவுகளுக்கு எதிரான தனது நிலைப்பாடுகளையும் எதிர்ப்பையும் மீனவ மக்களின் வாழ்வுரிமை நியாயங்களையும் இந்நூலில் வலியுறுத்த விரும்புகிறார் வறீதையா.

நிலத்தை மீனவர்கள் சொத்தாக என்றுமே கணக்கு வைத்துக்கொள்வதில்லை. சொத்து, வாழ்வு அனைத்தையும் கடலோடு மட்டுமே கணக்கு வைத்துக்கொள்ளும் மக்கள், சுதந்திர இந்தியாவில் ஓட்டு வங்கிகளாக மட்டுமே மீந்திருக்கும் மீனவர்களின் பிரச்சனைகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு பேசவும் தீர்வுகாணவும் அதிகார மட்டத்திலிருந்து ஆட்சி மட்டம்வரை ஒருவருமில்லை என்பதுதான் யதார்த்தம். சொத்துரிமைப் பத்திரம் வைத்துக்கொள்ளத் தெரியாத பழங்குடி மக்களை ‘காட்டின் ஆக்கிரமிப்பாளர்கள், காட்டையும் வன விலங்குகளையும் அழிக்கும் சமுக விரோதிகள்’ எனப் பழிசுமத்தியவர்கள் நமது அதிகாரிகள். பழங்குடி மக்கள் காட்டில் பிழைக்கவும் வாழவும் உரிமை கிடையாது என்று அரசாணை பிறப்பித்து, பழங்குடிகளிடமிருந்து காட்டைப் பிடுங்கிக் கொண்டு விரட்டி விட்டது அரசாங்கம். பிரிட்டிஷ் காலத்திலேயே இந்த வெளியேற்றம் தொடங்கியது என்றாலும், காட்டின் விளிம்புக்குத் தள்ளப்பட்ட இவர்களை இன்றைய மக்களாட்சி நடைபாதைக்குக் கொண்டுவந்து நிறுத்தியுள்ளது. மரங்களை, வனவிலங்குகளைக் கொள்ளையிட ஏகபோகக் குத்தகையை முதலாளிகளுக்கு எப்படி அரசு அளித்ததோ, அதேபோல் இன்று கடல் வளமும், கடற்கரையும் தொல்குடி மீனவருக்கு பாத்தியதை இல்லையென விரட்ட முனைகிறது அரசு. தமிழகக் கடற்கரையைக் கொள்ளையிடப் பெட்டிகளுடன் வரிசையில் நிற்கின்றனர் பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகள், முதலாளிகளுக்குப் பட்டாவாக்கிக் கல்லா கட்டிக்கொண்டிருக்கின்றனர் நம் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும்.

‘ஆறிலும் சாவு நூறிலும் சாவு’. இந்த வாக்கைக் கடற்கரையில் மூலை முடுக்கெல்லாம் கேட்க முடியும். தினமும் மரணத்தைத் தூக்குச் சட்டிபோல் உடன் அழைத்துச் சென்று கரை திரும்பும் மீனவச் சமுகம், மரணத்தைத் தன் நிழலாகவே நினைக்கிறது. மரணத்தை வெல்லவே தினமும் கடலுக்குப் போகிறது. மீன்பிடி தடை செய்யப்பட புயல் நேரத்தில்கூட, பந்தயம் வைத்து கட்டுமரத்தில் கடலுக்குப் போய் மீன் பிடித்து மரணத்தை வென்று திரும்பிய வீராதி வீரர்களும் உண்டு. அல்லது வறீதையா குறிப்பிடுவதுபோல் தன் மக்கள் பசியாற்ற சீற்றமான கடலில் துணிந்து மீன்பிடிக்கப் போவதும் நடைமுறைதான். பாடுபடத் தெரியாத ஆணை மதிக்கவே மாட்டார்கள் கடின உழைப்பாளிகளான மீனவப் பெண்கள். சென்ற தலைமுறைவரை இதுதான் மீனவக் கலாச்சாரம். அதுபோல் நிராதரவாக மீனவக் கிராமத்துக்கு வந்து சேரும் அனாதைகள் மற்றும் மனநிலை பிறழ்ந்தவர்களை அந்தக் கிராமமே அரவணைத்து அவர்களுக்கு ஒரு புதிய வாழ்வை உருவாக்கித் தரும். கடலைப் போலவே ஈரம் நிறைந்த மனதுடைய மக்கள். மீனவச் சமுகத்தில் சம்பளத்துக்கு உத்தியோகம் பார்க்கும் ஒரு புதிய தலைமுறை உருவான பிறகு கலாச்சாரம் மாறிவிட்டது. சமுகத்திடையே ஏற்றத்தாழ்வும் அதிகரித்துவிட்டது என்பதை அணியத்தின் மூலம் பேசுகிறார் ஆசிரியர்.

மரணத்துடன் கைகோர்த்து நடைபயிலும் மீனவரை தற்போதைய அரசியல் படுகொலைகள் நிலைகுலையச் செய்கின்றன. வங்கக்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவன், சிங்கள் ராணுவத்தினரால் குண்டடிப்பட்டு இறப்பதும் படகை, மீனை, வலைகளைப் பிடுங்கிக்கொண்டு தமிழக மீனவனை நடுக்கடலில் தள்ளிவிட்டுஸ் செல்லும் நிலையும் தொடர்ந்து கொண்டிருப்பது மீனவர்களிடையே ஒரு கொந்தளிப்பை உருவாக்கியிருக்கிறது. ‘கடல்போல் ஆர்ப்பரித்து எழுந்தாலும், சிறிது நேரத்தில் காயல் போல் வடிந்துவிடும் குணமுடையவர்கள் மீனவர்கள்’ என்கிறார் வறீதையா. ஆனால், சுனாமிக்குப் பிறகு மீனவர்களிடையே அரசியல் விழிப்புணர்வு சற்று அதிகரித்திருப்பதாகவே எனக்குப்படுகிறது. இனியும் மீனவர்கள் பொறுமையைக் கையாள்வார்கள் என எதிர்பார்க்க முடியாது என்றே தோன்றுகிறது. அம்பேத்கர் நூற்றாண்டு விழாவிற்குப் பின் எப்படி தமிழகத்தில் தலித் அரசியல் எழுச்சி ஏற்பட்டதோ அதேபோல் டிசம்பர் 2004 சுனாமிக்குப் பிறகு மீனவச் சமுகத்திடையே ஒரு அரசியல் எழுச்சி உருவாவதைக் காணமுடிகிறது. சுனாமியை ஒட்டி மீனவ மக்கள் தங்களையும் தாங்கள் இதுநாள்வரை அரசியலால் வழி நடத்தப்பட்ட விதத்தையும் மீள் ஆய்வு செய்துகொண்டிருக்கின்றனர். இது மீனவச் சமுகத் தலைமைத்துவப் பண்மைச் சிறிது சிறிதாக வளர்க்க உதவும். மீனவன் தொடர்ந்து அரசியல் கட்சிகளின் வலதுகை, இடதுகையென எடுபிடிகளாக வாழ்ந்து மீனவக் கிராமத்தை ஆட்டிப்படைத்த ‘கூலிக்கு மாரடிக்கும் அரசியல் கலாச்சாரம்’ மாறி வருவதைக் காண முடிகிறது. இவர்கள் தற்சமயம் இனநலன் சார்ந்த பிரச்சனைகளுக்குக் குரல் கொடுப்பது அதிகரித்து வருகிறது. அதே போல் மறைமாவட்டங்களில் மீனவக் கிராமங்களில் பாதிரியாரின் செயல்பாடுகள் குறித்து விமர்சனங்களும் கேள்விகளும் எழுதுவதை வறீதையா குறிப்பிடுகிறார். பாதிரியார் மார்க் ஸ்டீபன் பங்குப் பணியாளரின் பணி குறித்து எழுப்பும் கேள்விகள் மிக முக்கியமானவை.

தற்போது கடலில் புயல் காலங்களில் மட்டுமல்ல, சாதாரண நேரங்களில்கூட மீன்பிடிப்பு குறைந்துவிட்டது. ரசாயனக் கழிவுகளால் ஏற்படும் நீர்நிலைச் சூழலியல் கேட்டினால் பல்லுயிர் பெருக வழியற்று மீன்படுவது வெகுவாக குறைந்துவிட்டது. கடற்கரையில் உருவாக்கப்படும் மகா திட்டங்கள் மீனவர் வாயில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டிருக்கின்றன.

  • சென்னை மீனவர் வாழ்வாதாரத்தைக் கபளீகரம் செய்த சென்னை துறைமுக விரிவாக்கம்,
  • எண்ணூர் அனல்மின் நிலையம் மற்றும் அப்பகுதியில் உள்ள பிற தொழிற்சாலைகள்
  • திருவள்ளூர் மாவட்ட மீனவர்களைக் கூலிகளாகவும், உதிரிகளாகவும், அடியாட்களாகவும் மாற்றிவிட்டன.
  • காஞ்சீபுர மாவட்டத்தில் கல்பாக்கம்;
  • கடலூரில் சிப்காட்;
  • தஞ்சை,
  • நாகை மாவட்டங்களில் இறால் பண்ணை,
  • தூத்துக்குடி,
  • திருநெல்வேலி மாவட்டங்களில் ஸ்டெர்லைட்,
  • கூடங்குளம்.
  • இராமநாதபுரம் மாவட்டத்தில் சேதுக் கால்வாய்த் திட்டம் மற்றும்
  • சிங்கள் இராணுவம் நடத்தும் படுகொலைகள்.
  • கடற்கரையின் அனைத்து மாவட்ட மீனவர்களும் அரசின் தவறான திட்டங்களால் ஒட்டுமொத்தமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடற்கரைச் சூழலில் நாசத்தால் கடலுயிரிகள் மட்டுமின்றி நிலத்தடி நீரும் பாதிக்கப்படுகிறது. இப்பாதிப்பு விவசாய நிலங்களையும் விவசாயிகளையும் பாதிக்கிறது. விவசாயம் பாதிக்கப்படுவதால் வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள மக்கள் நேரடியாகப் பட்டினிச்சாவை நோக்கித் தள்ளப்படுவர்.

இந்த உயிரியல் சுழற்சி காடு அழிவதிலிருந்து ஆரம்பித்து நீர்நிலை பாதிப்பு, விவசாய பாதிப்பென ஒரு வட்டத்துள் சுற்றுவதை வறீதையா சுற்றுச்சூழல் ஆய்வாளர் என்ற பார்வையிலிருந்து வாசர்களுடன் பகிர்ந்துகொள்கிறார்.

இயற்கை சுனாமியிலிருந்து கடல்சார் சமுகம் எழுந்தாலும், இன்று சுழன்றடிக்கும் அரசியல் சுனாமியிலிருந்து மீனவர்கள் தப்பிப்பிழைப்பது பெரும் சவாலாக இருக்கிறது. ஆசிரியர் கூறுவதுபோல் அதிக கல்வியறிவு அடைந்த மாவட்டமான கன்னியாகுமரியிலேயே மீனவர்களின் கல்வியறிவு 50 சதவிதத்தைக்கூட எட்டவில்லை. மற்ற மாவட்ட மீனவர்களின் கல்வியறிவு மற்றும் பிற தொழிலறிவு குறித்து சொல்லத் தேவையில்லை.

அரசின் மகா திட்டங்களாலும் பாதிக்கப்படப்போகும் மீனவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க வந்த திட்டமான ‘கப்பாஃபைகஸ்’ நச்சுப்பாசி வளர்ப்பின் பின்னணி குறித்து அதிர்ச்சியூட்டுவது ஒரு கட்டுரை என்றால், ஒவ்வொரு ஆண்டும் வளிமண்டல வெப்பம் சில டிகிரி அதிகரிப்பதால் பனிப்பாறைகள் உருகிக் கடல் மட்டம் உயர்ந்து உலகம் அழிவை நோக்கி ராக்கட் வேகத்தில் போய்க் கொண்டிருக்கும் உண்மையைச் சொல்லி நம்மை பயமுறுத்துகிறது ‘முகம் மாறும் நிலம், மரம் ஏறும் மனிதன்’ கட்டுரை. அந்தமானின் ‘ஜாரவாஸ்’ பழங்குடிகள் போல் நாமும் எளிய முறையில் இயற்கையுடன் இயைந்து வாழப்பழகினால் என்ன என்ற கேள்வி எழுகிறது. உயிரின வளத்தைப் பூமிப்பந்திலிருந்து முற்றிலுமாக அழிக்காமல் நிற்காது போலிருக்கிறது அதிநவீன அறிவியல் வளர்ச்சி.

மானுடவியல் அறிஞராக, சமுகவியல் ஆய்வாளராக, சுற்றுச்சூழல் ஆர்வலராக, இயக்கவாதியாக மற்றும் ஒரு வாசராக நின்று தனது சமுகம் சார்ந்த கள ஆய்வை அணியத்தின் மூலம் நமக்குத் தந்திருக்கிறார் வறீதையா. இந்த ஒன்பது கட்டுரைகளின் வழியே ஐந்து தளங்களில் நின்று மீனவச் சமுக வாழ்வைப் பல பரிணாமங்களில் வாசர்களுக்குக் கொடுக்க முனைந்த அவரது கடின உழைப்பு அளவிடமுடியாதது. சில விசயங்களை நேரடியாகப் பேசாமல் இடம், பெயர் போன்றவைகளைத் தவிர்த்துள்ளதை வெளிப்படையாக முன்வைத்திருக்கலாம். குறிப்பாக மீனவர்களின் எதிர்ப்பை மீறி எதிர்கால மீனவச்சமுக நலனைக் கருதி உயர்நிலைப்பள்ளி கட்ட முன்வந்த பாதிரியாரின் பெயர் மற்றும் ஊரைச் சொல்லியிருக்கலாம். அதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்தில் கனிம மணல் கொள்ளையில் ஈடுபட்ட முதலாளியின் பெயர் தற்போது தினப்பத்திரிக்கை படிக்கும் வாசகர் அனைவருக்கும் தெரிந்ததுதான் என்பதால், கனிம மணல் கொள்ளையில் ஈடுபட்ட தனியார் கம்பெனி முதலாளிப் பெயரையும் குறிப்பிட்டிருக்கலாம்.

ஒரு வாசகர் இக்கட்டுரைகளைத் தன் துறைசார்ந்த அல்லது அரசியல் சார்ந்த கருத்தாக்கத்துடன் வாசிக்கும்போது மீனவ சமுகத்துடன் ஒரு உரையாடலைத் தொடர சாத்தியம் உள்ளது. ஒரு சமுகம் மொழியால் மட்டுமே இனிவரும் காலங்களில் உயிர்த்திருக்க முடியும். கதையாடல்கள் மூலமும் தன்னை ஆவணப்படுத்திக்கொள்வதன் மூலமும்தான் அச்சமுகம் எதிர்காலத்தை நோக்கி நகர முடியும். நீரை நோக்கி மட்டுமே உரையாடிக்கொண்டிருந்த மீனவச் சமுகம் இன்று நிலத்தை நோக்கிப் பொது வெளியில் உரையாடத் தொடங்கியிருக்கிறது. இதுவரைக்கும் வாசிக்கப்படாமலும் விவாதிக்கப்படாமலிருந்த மீனவத் துயரம் இன்று நம் மேசைக்கு வந்துள்ளது.


விடியலை நோக்கி – தடம் பதித்த பொது நிலையினர் சந்திப்பு

அறிவியலில் முனைவர் பட்டம் பெற்று, தூத்தூர் யூதா கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றும் கான்ஸ்டன்டைன் வறீதையா பல புத்தகங்களின் ஆசிரியர், நல்ல சிந்தனையளர், சிறந்த பொதுநிலையினர் ஒருவருக்கு எடுத்துக்காட்டு எனலாம். மனிதர்களையும் உலகத்தையும் நேசித்து, பெற்ற அனைத்தையும் நன்றியோடு நினைவில் கொண்டு, கிறிஸ்தவ சமுகத்தின் மீது பாசம் குறையாமல் நல்லதையே மனதில் தேக்கி, விமர்சனம் செய்யவும் அச்சப்படாமல் இருக்கும் ஒரு முதிர்ச்சியான பொது நிலையினர், ‘அமுது’ அவரை பேட்டி கண்டார்.

அமுது: உங்களை உருவாக்கிய சக்திகளைப்பற்றி ஒரு சில வார்த்தைகள் சொல்லலாமா?

வறீதையா: மூன்றைப்பற்றிச் சொல்ல வேண்டும். நான் தொன்போஸ்கோ இளைஞர் இல்லத்தில் பயின்றவர். செர்வாசியூஸ் அடிகளார் நல்ல தலைவர்களை அழைத்துச் சிறந்த பயிற்சி அளித்தார்கள். அங்கு இருக்கும் போது ஐக்கப் அமைப்பில் சேர்ந்திருந்தேன். அருளப்பா போன்றவர்களின் உரைகளைக் கேட்க முடிந்தது. சமூகப்பார்வை கிடைத்தது. கல்லூரியில் தேசிய நாட்டு நலப்பணித்திட்ட அலுவலராகப் பலப்பல முகாம்கள் நடத்தியுள்ளோம். இவற்றில் சமூகத்தின்பால் ஈடுபாட்டை வளர்க்க முடிந்திருக்கிறது

அமுது: உங்கள் வாழ்வில் திருப்பம் ஏற்பட்ட கட்டங்களைப்பற்றிச் சொல்லுங்களேன்?

வறீதையா: 1997இல் முனைவர் பட்டம் பெற்ற காலம் முக்கியமானது. கடலோர பகுதிகளிலிருந்து படித்து முன்னேறிவிட்டவர்கள் வெளியேறிக் கொண்டிருந்தது எனது மனதைப் பாதித்தது. கடலோர வளர்ச்சிக்காக இன்னொரு தலைமுறை ஆவன செய்யும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில் முனைவர் என்ற அங்கீகாரம் ஒரு அழைப்பாக வந்தது. டிசம்பர் 26, 2004, முக்கியமான திருப்பம். நான் பல காரியங்களைப்பற்றி வைத்திருந்த எண்ணம் தலைகீழாகப் புரட்டிப் போடப்பட்டது. எல்லாமே சுனாமிக்குமுன் அதற்குப்பின் என்று சொல்கிற வகையிலே மாற்றமடைந்தன.

அமுது: உங்கள் எழுத்துப்பணியில் வளர்ச்சி. . . .

வறீதையா: முனைவர் அங்கீகாரத்திற்குப் பின் என்னில் வந்து கொண்டிருந்தச் சிந்தனைகளைப் பதிவுசெய்ய விரும்பினேன். அவை என்னுடையவை மட்டுமல்ல, பலரின் கருத்துக்களை நான் பிரதிபலித்துக் கொண்டிருந்தேன் இவற்றைப் பதிவு செய்ய வேண்டுமென்று தோன்றியது.

கணியம் பத்திரிகையில் எழுதத் தொடங்கிய போது வெகுஜனத்தைத் தொடும் வகையில் எழுத முடியுமா என்ற சந்தேகம் இருந்தது. தட்டுத்தடுமாறிப் பேனாவைக் கையில் எடுத்தேன். ஆனால் பேனா என்னை விடமாட்டேன் என்று விட்டது. நான் 25-க்கு அதிகமான ஆய்வுக் கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். அதில் கிடைக்காத திருப்தி வெகுஜன எழுத்துக்களில் கிடைத்தது.

எனது எழுத்துக்களில் தீர்க்கமும் தெளிவும் இருப்பதாகச் சொன்னார்கள். எழுத்தால் வெகுஜனங்களைத் தொடமுடியும் என்ற உணர்வு எழுத்து எனது அழைப்பின் ஒரு பகுதியாக விளங்கத் துணை செய்தது. விளைவு,

  • ‘நெய்தல் சுவடுகள்’,
  • டிசம்பர் வடுக்கள்,
  • ஆழிப்பேரிடருக்குப்பின் (கலை இலக்கியப் பெருமன்றம் New Century Book House இணைந்து பரிசளித்தது).
  • பேரலைக்கு அப்பால்,
  • அணியம் (தமிழினி வெளியீடு).
  • The Catastrophy and After (நியூசெஞ்சரி புத்தகப் பண்ணை) போன்ற புத்தகங்கள்.

அமுது: நமது மறைமாவட்டத்தில் குறிப்பாக கடலோரத்தில் பொதுநிலையினரின் நிலை எப்படி இருக்கிறது?

இதற்கு வறீதையா அளித்தப் பதிலை மூன்று பகுதிகளாக குறிப்பிடலாம்.

கத்தோலிக்கப் பாதிரியார்களைப் பற்றி. . . . .

உங்கள் கேள்விக்குள்ளே நுழைவதற்கு முன்பு கேள்வியின் பின்புலமாக அமைந்திருக்கும் கத்தோலிக்கத் திருச்சபை இன்று சந்தித்துக் கொண்டிருக்கும் சிக்கல்களைப் பற்றிப் பேசியாக வேண்டும்.

அறிவாக்கத்தின் வாயில்கள் இன்று அகலத் திறந்து கிடக்கின்றன. பாதிரியார்தான் அனைத்து ஞானத்தின் ஊற்று. அவர்களை விட்டால் நமக்கு எதிர்காலமே இல்லை என்ற பார்வை தகர்ந்து வருகிறது. பாதிரியார்களிடம் இருப்பதாக நம்பப்பட்ட மந்திரக்கோல் வெறும் மாயை என்ற புரிதல் எழுந்துள்ளது.

ஆனால் பாதிரியார்களின் மொழியும் வழியும் பெரிதாய் மாறிவிடவில்லை. இன்றும் அவர்கள் கட்டளை மொழியை (Prescriptive language) விதியெழுதும் ஆகம மொழியை (Dogmatic language) பிரயோகித்து வருகிறார்கள். பொது மக்களின் பார்வையிலும் பாதிரிமார் பார்வையிலும் குருத்துவம் என்பது வெறும் பிழைப்புவழி என்று அடையாளம் காணப்படுகிறது. ஐம்பது வருடங்களுக்கு முன்புவரை கத்தோலிக்கக் கிராமங்களிலிருந்து செல்வச் செழுமையும் செல்வாக்கும் மிகுந்த குடும்பங்களிலிருந்துதான் குருமாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இன்று செழுமையான வர்க்கமும் நடுத்தர வர்க்கமும் இறைசேவைக்கு பிள்ளைகளை அனுப்புவதில் முனைப்பு காட்டவில்லை. அடிமட்டக் குடும்பங்களிலிருந்துதான் குருக்கள் உருவாகிறார்கள். வார்ப்பும் வளர்ப்பும் சிறுபருவப் பின்னணியும் இந்த குருக்களின் சிந்தனைப் போக்கையும் செயல்பாடுகளையும் கட்டுப்படுத்துகின்றன. குருக்கள் தனித்தீவுகள் அல்ல. சராசரித்தனம் நிறைந்த மக்களோடு வாழ்பவர்கள்தாம். தொழில் நுட்பமும் காலமாற்றமும் கற்புநெறி, துறவு, பாலுறவு குறித்த குருக்களின் பார்வையில் அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. மேலாதிக்கம் முற்றாண்மை மீது திருச்சபை அளவற்ற நம்பிக்கை கொண்டிருக்கிறது. பெண்குருத்துவம் முதலிய சவால்களைத் திறந்த விவாதத்திற்கு உட்படுத்தும் துணிச்சலும் மனஉறுதியும் திருச்சபைக்கு இல்லாதிருக்கிறது.

கத்தோலிக்கத் திருச்சபையைக் குறித்து. . . . . . .

திருச்சபையின் இருத்தலையும் வரலாற்றுச் சாதனைகளையும் இருட்டடிப்பு செய்ய முடியாது. ஆனால் மதிப்பீடு செய்வது தவிர்க்க முடியாததது. திருச்சபையின் அடிப்படைக் கோளாறுகளாக நான்கு விசயங்களைப் பார்க்கிறேன்.

ஒன்று – இன்றைய திருச்சபை ஏழைகளுடன் இல்லை என்பது ஏழைகள் குறித்த பைபிளின் பார்வையும் திருச்சபையின் அணுகுமுறையும் நேர்கோட்டில் இல்லை.

இரண்டு – திருச்சபையின் அதிகாரச் சேகரம். அது கைக்கொண்டிருக்கும் முற்றாண்மை சமத்துவச் சித்தாந்தத்துக்கும் கிறிஸ்துவின் போதனைக்கும் எவ்வகையிலும் பொருந்தவில்லை. சான்றாக திரித்துவ மறைஉண்மை ஒரு முக்கோண உறவு வெளிப்பாடு. அதுபோன்றே கடவுள் – திருச்சபைத் தலைமை – விசுவாசிகள் என்பதும் முக்கோண சமதள உறவாகவே இருக்க வேண்டும். ஆனால் திருச்சபை அதிகாரம் செங்குத்துக்கோட்டுறவாகவே மேலிருந்து திணிக்கும் ஒரு வழிப்பாதையாக இயங்குகிறது. இதைவிட ஆபத்தானது என்னவென்றால், இப்படி அதிகார சேகரமாய் இயங்குவதுதான் கடவுளின் திருவுள்ளத்தை நிறைவேற்றும் ஒரே உபாயம் என்று திருச்சபை நம்புவது.

மூன்று – குருமைய நிலைப்பாடு (Cclerico-Centrism):

‘கிறித்து அரசர்’ என்ற சொல்லாக்கம் பாதிரியார்கள் தரப்பில் தவறாக அணுகப்படுகிறது என்று நான் கருதுகிறேன். அன்பும் அமைதியும் நிலவும் சமூகத்துக்குக் கிறித்து தலைமை ஏற்கிறார் என்பதே ‘கிறித்து அரசர்’ என்ற பதத்தின் சரியான விளக்கமாக இருக்க முடியும், ‘என் அரசு இவ்வுலகைச் சார்ந்ததன்று’ என்ற கிறித்துவின் வாக்கு இதற்குச் சான்று. கிறித்துவை உலகின் அரசராகவும் தன்னை அந்த அரசின் ‘திவானாகவும்’ பாவித்துக் கொள்ளும் பாதிரியார் அதிகாரங்களைத் திரட்டித் தன்னை மையப்படுத்த முனைகிறார்; தன்னை கேள்விக்கு அப்பாற்பட்ட, புனிதத்துள் புனிதமான அதிகார அடுக்கின் கூறாகப் பார்க்கிறார். ‘உலகின் உப்பு’ என்ற அழைப்பு இங்கே சிதறிப் போகிறது. தன்னைக் கரைத்துக் கொள்வதன் மூலமே உப்பு உணவுக்கு ருசியூட்ட முடியும். உப்பின் நோக்கமும் அதுவே. அதிக பலன் கொடுப்பதற்காக புதையுறும் விதையாக மாறிவிடும் துணிவோ அதிகாரத்தைத் துறக்கும் தீர்க்கமோ இன்று பாதிரியார்களுக்கு இல்லை.

நான்கு – திருச்சபைக்குள் நிலவும் உட்பிரிவுகள்:

3. பொதுநிலையினரைப்பற்றி . . . . . .

‘பொதுநிலையினர்’ என்ற பதத்தையே நான் ஆட்சேபிக்கிறேன். விசுவாசிகள் (the faithful) திருச்சபையின் கடைநிலையினரல்ல; திருச்சபை அமைப்பின் இடுபொருளோ உற்பத்தியோ அல்ல, அதன் நோக்கும் இலக்கும் அவர்களே. புரோகிதச் சமூகத்தின் ஞானத்தை எதிர்நோக்கி, அவர்களின் தயவுக்காய்ப் பணிந்து நிற்க வேண்டியவர்களல்ல. திருச்சபையில் இறைமக்களின் இடம் என்னவென்பது இன்று வரை நடைமுறையில் அங்கீகரிக்கபபடவில்லை. இதுதான் முக்கிய செய்தி. இறைமக்களின் அழைத்தல் (vocation) என்பது இறைவாக்குரைஞனாய் வாழ்வது. நீதிக்காகத் துணிந்து குரல் கொடுப்பது. உலகியல் தளங்களில் முழுமையாகப் புகுவது. ‘உலகின் முகத்தைப் புதுப்பிக்கும் முழுப்பொறுப்பு பொது நிலையினரைச் சார்ந்தது’ என்று 43 ஆண்டுகளுக்கு முன்னரே இரண்டாம் வத்திக்கான் சங்கம் அறிக்கையிட்டது. கத்தோலிக்கர்கள் அரசியல் களத்தில் தடம் பதியாமல் போனது மிகப்பெரிய குறைபாடு. திருச்சபையின் கட்டளைக்காகக் காத்திருக்கும் போக்குதான் இதற்குக் காரணம்.

கத்தோலிக்க விசுவாசி எனப்படுபவரின் இரு கூறுகள் – உரிமை குடிமகன் (civilian), கிறித்தவ விசுவாசி (laity). இதில், ‘சிவிலியன்’ பெருங்கூறு, லெயிற்றி என்பது ஆன்மீக வாழ்வு சார்ந்த சிறுகூறு. திருச்சபை அதிகாரக்கட்டமைப்பு விசுவாசியின் முதற்பெருங்கூறான ‘சிவிலியன்’ பரிமாணத்தைக் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. பங்கு நிர்வாகம் என்ற பெயரில் கிராம நிர்வாகம் திருச்சபையால் கையாளப்படுகிறது. தமிழகத்தின் 17 கத்தோலிக்க மறைமாவட்டங்களில் பொதுநிலையினர் பணிகுழுக்களில் ‘விசுவாசி’ செயலர் பொறுப்பு வகிக்கும் வாய்ப்பு ‘வழங்கப்பட்டிருப்பது’ ஆறில் மட்டும். இதில் கோட்டார் மறைமாவட்டம் முன்னோடி என்று சொல்லப்படுகிறது.

4. கோட்டாறில் பொதுநிலையினர்:

விசுவாசிகள் (பொதுநிலையினர்) கடலோரத்திலும் உள்நாட்டிலும் இருவேறு விதங்களில் கையாளப்படுகின்றனர். கடற்கரையில் திருச்சபை அதிகாரிதான் மக்களின் வாழ்வியல் கூறுகளைக் கட்டுப்படுத்துகிறார். அறிவுபெற்ற, நடுத்தரவர்க்கம் சார்ந்த மக்கள் இதை முற்றாக வெறுக்கிறார்கள். பாமர மக்கள் வேறு உபாயங்கள் கண்ணில்படாத சூழலில் பாதிரியாரே கதி என்று கட்டுண்டு கிடக்கிறார்கள். இதுபற்றி பல்வேறு அறிவு ஜீவிகள் மற்றும் பாதிரியார்களின் கருத்துக்களை எனது நூல்களில் பதிவு செய்திருக்கிறேன். கல்வியறிவும் வெளி உலகத் தொடர்பும் கிடைத்து விட்டால் மக்கள் தங்கள் வாழ்க்கையைத் தாங்களே தீர்மானிக்கும் தெளிவு பெற்று விடுகிறார்கள். கல்வி கொடுப்பது மிக முக்கியமானது. அதே வேளையில், கல்வியும் மாற்றுத் தொழிலும் கைவந்தவர்கள் கடற்கரைச் சமூகத்தைத் திரும்பிப் பார்க்காமலே சென்று விடுகிறார்கள். இவர்களின் அறிவும் மனிதவளமும் சிறிதளவு இந்தக் கிராமங்களுக்குக் கிடைத்தால் நிலைமையை இலகுவாக மாற்ற முடியும். இதற்கு இணையாக மக்கள் விழிப்பூட்டப்பட்டு அணிதிரள வேண்டும். வெளிநாட்டு நிதி பெற்று இயங்கும் தொண்டு நிறுவனங்களுக்கு இது சாத்தியமல்ல. அறிவு பெற்ற இளைய தலைமுறை கங்கணம் கட்டிக்கொண்டு முன்வர வேண்டும்.

பாதிரியார்களின் வழிகட்டுதலும் கண்காணிப்பும் இல்லாமலும் பொதுநிலையினரால் வாழ்வியல் களங்களில் சாதிக்க முடியும். கருத்துப் புரட்சியை ஏற்படுத்த முடியும். கடந்த சில ஆண்டுகளாக நாகர்கோவிலில் பொதுநிலையினர் நடத்திவரும் சமூக அரசியல் ஆய்வரங்கு இதற்கு ஒரு சான்று. நெய்தல் படைப்பாளிகள் சந்திப்பு மற்றொன்று. இது தமிழ்நாடு – பாண்டிச்சேரி நெய்தல் படைப்பளிகள் இயக்கம் உருவாகுவதற்குப் பொறியாய் அமைந்தது.

Jeyamohan Links: Issues, Controversy, Opinions, Interviews, Fiction

July 3, 2009 1 comment

மரத்தடி.காம்(maraththadi.com): “எழுத்தாளரைக் கேளுங்கள் > ஜெயமோகன்”

ஜெயமோகன் – தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia

jeyamohan.in » அறிமுகம்

Thinnai: “கலைஞர்-ஜெயமோகன் – ஞாநி”

Thinnai: “மு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள் – இரண்டாம் பகுதி :: ஜெயமோகன்”

Thinnai: “குமுதம் அரசுவின் பேனா மையில் கலந்திருப்பது என்ன ? – நெருப்புநிலவன்”

7-3-2005 தேதியிட்ட குமுதம் இதழின் அரசு கேள்வி-பதில்களில் ஒரு கேள்வி. திருமுல்லைவாயிலில் இருந்து வரதன் கேட்டிருக்கிறார்.

ஜெயமோகன் எழுத்தில் உங்களுக்குப் பிடித்தது, பிடிக்காதது ?

அரசு பதில் சொல்கிறார்: ‘உள்ளார்ந்த அனுபவமும், ஆழத்தைத் தொடும் மன முதிர்ச்சியும் பிடிக்கிறது. பிடிக்காதது ? அந்தப் பேனா மையில் கலந்திருக்கும் காவி நிறம். ‘

Thinnai: “பத்துகேள்விகளும் சில பதில்களும் – எம் வி குமார்”

Thinnai: “குற்றாலம் பதிவுகள் இலக்கிய அரங்கு – அனுபவப் பதிவுகள். -1 :: ஜெயமோகன்.”

Thinnai: “ஜெயமோகனின் ‘கன்னியாகுமாி ‘ – -வ.ந.கிாிதரன் -”

Thinnai: “சொல்லாடலும், பிலிம் காட்டுவதும் – K.ரவி ஸ்ரீநிவாஸ்”

Thinnai: “கலை இலக்கியம் எதற்காக? – ஜெயமோகன்”

Thinnai: “முதுநிலை ஆய்வுப்பேராசிரியர் கட்டுரையும், சில கேள்விகளும் – K.ரவி ஸ்ரீநிவாஸ்”