Archive

Posts Tagged ‘Pandiya’

Pon Chinnathambi Murugesan: Marco Polo Travel Journal in Tamil Nadu

July 16, 2012 Leave a comment

“மார்க்கோ போலோ பயணக்குறிப்புகள்’ – தமிழ் மொழிபெயர்ப்பு நூலில் பொன் சின்னத்தம்பி முருகேசன்

ஜெய்லான் தீவை (சிலோன்) விட்டு வெளியேறி மேற்காக 60 மைல் தூரம் கலங்களைச் செலுத்தினால் மாபர் (இந்தியா) எனப்படும் பெரிய பிரதேசத்தை அடையலாம். அது ஒரு தீவு அல்ல. இந்தியா எனப்படுகிற பெரிய கண்டத்தின் ஒரு பகுதி. அதன் பெயருக்கேற்றாற்போல உலகிலேயே மிகவும் புனிதமான வளம் கொழிக்கும் நாடு.

அப்பகுதி நான்கு அரசர்களால் ஆளப்பட்டது. அவர்களின் தலையாய மன்னர் சுந்தரபாண்டி என்று அழைக்கப்படுபவர். அவருடைய ஆளுகைக்குள் மாபர் நாட்டிற்கும் ஜெய்லான் தீவிற்கும் இடைப்பட்ட வளைகுடாப் பகுதியில் முத்துக் குளிக்கும் தொழில் நடைபெறுகிறது. அப்பகுதியில் நீர்மட்டம் 60 அடியிலிருந்து 72 அடி மட்டுமே இருக்கும். சில இடங்களில் 12 அடி மட்டுமே இருக்கும்.

முத்துக்குளிக்கும் தொழிலை நடத்துகிற உரிமை மன்னருக்குரியது. கிடைப்பதில் பத்தில் ஒரு பங்கு முத்துக்களை அவருக்குக் கொடுத்துவிட வேண்டும். 20-ல் ஒரு பங்கு மாந்திரீகர்களைச் சேர்ந்தது. (வளைகுடாப் பகுதியில் ஒரு வகையான பெரிய மீன்கள் திரிகின்றன. அவை முத்துக் குளிப்பவர்களுக்கு சேதத்தை விளைவிக்கின்றன. வியாபாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிராமண வகுப்பைச் சேர்ந்த சில மாந்திரீகர்களை தம்முடன் அழைத்துச் செல்வர். கண்கட்டி வித்தைகளில் தேர்ந்தவர்கள் என்பதால் அவ்வகை மீன்களை மயக்கி அவற்றின் அட்டகாசத்தை தடுத்துவிடுவார்கள். பகலில் மட்டுமே முத்துக்குளிக்கும் பணி நடைபெறுவதால் இரவு நேரங்களில் மந்திர சக்தியை நீக்கிவிடுவார்கள். ஏனென்றால் நேர்மையற்ற ஆட்கள் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு இரவு நேரங்களில் மூழ்கி முத்துக்குளிப்பதை தடுத்துவிடலாம் அல்லவா? மாந்திரீகர்கள் எல்லாவிதமான விலங்கினங்களையும் பறவையையும் மயக்குவிக்கும் மாய சக்தி படைத்தவர்கள்.)

ஏப்ரல் மாதத்தில் ஆரம்பிக்கப்படும் முத்துக்குளிக்கும் பணி மே மாதம் 2-ம் வாரம் வரை நடைபெறும். இந்தக் காலத்திற்குள் சிப்பிகள் அனைத்தும் எடுக்கப்பட்டு தீர்ந்து போய்விடுகின்றன. இந்த வளைகுடாப் பகுதியில் கிடைக்கக்கூடிய முத்துக்களில் பெரும்பாலானவை உருண்டையாகவும், ஒளிமிக்கவையாகவும் உள்ளன. சிப்பிகள் பெருவாரியாகக் கிடைக்கக்கூடிய இடங்களைப் “பெத்தலா’ என்று அழைப்பார்கள்.