Archive
Writer SV Ramakrishnan: எஸ்.வி. ராமகிருஷ்ணன்
எஸ்.வி.ராமகிருஷ்ணன் 1936இல் கோவை மாவட்டம் தாராபுரத்தில் பிறந்தார். சரித்திரமும் சட்டமும் பயின்ற ராம கிருஷ்ணன் சுங்கம் கலால்ஆணையாளராக இந்தியாவின் பல பகுதிகளிலும் பணிபுரிந்து, முதன்மை ஆணையராக ஓய்வு பெற்றார். தற்போது ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். தமிழின் முன்னணிஇதழ்களில் கடந்த கால இந்தியாவைச் சித்தரிக்கும் விதமாக இவர் எழுதிய கட்டுரைகளை ‘அது அந்த காலம்’ என்ற தலைப்பில் உயிர்மை பதிப்பகம் 2004இல் வெளியிட்டது.
இரண்டு தலைமுறை மூத்தவரான இந்திரா பார்த்தசாரதி யூனிகோடில் அடித்து மின்னஞ்சல் அனுப்புவார்( 70 வயதுக்கு மேல் கணினி கற்றுக்கொண்டு கணினியில் எழுதும் மற்ற இரண்டு தமிழ் எழுத்தாளர்கள் எஸ்.வி.ராமகிருஷ்ணன், பாரதிமணி).
Book Name | : அது அந்தக் காலம் |
PublishedYear | : Dec.2004 |
Description | |
ராமகிருஷ்ணனின் கட்டுரைகள் 1940கள் காலத்தை ஜீவனுடன் சித்தரிக்கின்றன. அந்தக் காலத்தில் வாழ்ந்த எனக்கும் என்னை ஒத்த வயதுக்காரர்களுக்கும் இக்கட்டுரைகள் நினைவூட்டல் மூலம் ஓர் இலக்கிய அனுபவத்தைத் தந்தால், இளைஞர்களுக்கு இவை வியப்பு கலந்த இலக்கிய அனுபவம் தரும். இந்த நூலைச் சமீப காலத்தில் வெளிவருபவைகளில் மிக முக்கியமானதாகக் கருதுகிறேன். இதிலுள்ள வரலாறு நகமும் ரத்தமும் சதையுமுடைய மனிதர்களை உள்ளடக்கியது. இதிலுள்ள மனிதர்களுக்குப் பிரதிபலிப்பாக இன்றும் இருக்கிறார்கள். (அசோகமித்திரன்) |
Name : வைஸ்ராயின் கடைசி நிமிடங்கள்
Description
இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்திய வாழ்க்கையின் அழுத்தமான காட்சிகளையும் யதார்த்தத்தையும் வெகுநேர்த்தியாகச் சித்தரிப்பவை எஸ்.வி.ராமகிருஷ்ணனின் எழுத்துகள். கடந்தகாலத்தின் மெல்லிய ஏக்கம் ததும்பும் நினைவுகளையும் கடந்து சென்ற ஒரு பண்பாட்டு வாழ்க்கையின் பதிவுகளையும் இக்கட்டுரைகள் ஒரு தலைமுறையின் கனவுச் சித்திரங்களாக நம் நெஞ்சில் எழச் செய்கின்றன. ‘அது அந்தக் காலம்’ தொகுப்பின் மூலம் பெரும் கவனம் பெற்ற எஸ்.வி.ராமகிருஷ்ணனின் இரண்டாவது கட்டுரைத் தொகுப்பு இது.
ஒரு திருடனின் சுயசரிதை |
![]() |
![]() |
|||
|
நான் ஒரு திருடன். அதாவது அறுபத்துநான்கு கலைகளில் ஒன்றான திருட்டு என்ற கலையை முறையாகப் பயின்று பரம்பரைத் தொழிலாகக் கொண்டிருந்தவன். இன்று நாய்க்குடைகள் மாதிரி முளைத்து சினிமாவில் பார்த்த உத்திகளைக் கையாண்டு பிழைக்கிறார்களே அது போன்று ‘வந்தேறி’ அல்ல, ரயிலில் மயக்க மருந்து பிஸ் கட்டு கொடுத்துப் பிரயாணிகளின் பொருளை அபகரிக்கும் கீழ்த்தரத் திருடனுமல்ல என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
நான் என் தொழிலை இன்ன தேதியில் தொடங்கினேன் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. முதலில் நான் தொழில் செய்தது பெரியவர்களோடு கூடப் போய் ‘அசிஸ்டெண்ட்’ போலத்தான். கொஞ்ச கொஞ்சமாகத் தேர்ந்த பிறகு தான் என்னைத் தனியாகப் போக அனுமதித்தார்கள். நான் தேர்ச்சியடைந்துவிட்டேனென்று என் தகப்பனாரும் பாராட்டினார். இரண்டுமுறை அப்படிப் போய் வெற்றிகரமாகக் கைவரிசையைக் காட்டினவுடன் எனக்கு அசாத்திய தன்னம்பிக்கையும் தைரியமும் வந்துவிட்டன.
இதெல்லாம் நடந்து ஒரு ஐம்பத்தைந்து வருடங்களாவது ஆகியிருக்கும். இப்போது எனக்கு வயசாகிவிட்டது. இரவு கண் முழித்தும் ஓடியும் ஒளிந்தும் பணிபுரியும் வயசு தாண்டிவிட்டது. என்னுடைய ஒரே மகன் வேறு லைனுக்குப் போய்விட்டான். பெண்களையும் கட்டிக் கொடுத்து விட்டேன். இன்று நான் ஒரு ‘மாஜி’ திருடன்தான். தொழிலில் இருந்து ரிடையர் ஆகிப் பல வருடங்கள் ஆகிவிட்டன.
ஆனால் சொல்லப் போனால் இவ்வளவு சீக்கிரம் நான் தொழிலை விட்டிருக்க மாட்டேன். இப்போதும் என் உடம்பில் தெம்பு இருக்கிறது. சுருங்கச் சொன்னால் நானாகத் தொழிலை விடவில்லை, உலகம் மாறி வரும் வேகத்தை ஜீரணித்துக் கொள்ள முடியாமல் நான் விலக வேண்டி வந்தது என்பது தான் கொடுமை. என் நீண்ட நாள் ஆற்றாமையை இங்கேயா வது சொல்லிக் கொள்ளுகிறேன்.
நான் தொழில் தொடங்கும் நாட்களில் வீடுகள் காரையால் கட்டப்பட்டிருக்கும். அதாவது செங்கல்களுக்கு நடுவில் காரைச் சாந்து (சுண்ணாம்பும் மணலும் சேர்ந்த கலவை) பூசிக் கட்டியிருப்பார்கள். சிலசமயம் மண் சாந்து பூசுவதும் உண்டு. அந்த மாதிரி கட்டின சுவர்களில் கன்னம் வைக்க முடியும். அதற்காக எல்லோராலும் அது முடியும் என்று நினைத் துக்கொள்ள வேண்டாம். கன்னம் வைப்பது ஒரு அரிய கலை. கற்றுக் கொண்டு அப்பியாசம் செய்யவேண்டும். எனக்கு இதில் பழுத்த அனுபவம் இருந்தது. ஜாக்கிரதையாகவும் லாகவத்துடனும் செய்ய வேண்டிய வேலை. ஒரு ஆள் புகுந்து போக வேண்டிய அளவில் சுவரில் ஒரு ஓட்டை போட வேண்டும், அதே சமயம் சத்தமில்லாமலும் செய்யவேண்டுமென்றால் சும்மாவா? ஆனால் நான் தொழில் தொடங்கி சில ஆண்டுகள் கழித்து சில விபரீ தங்கள் நிகழலாயின. காரை எங்கோ காணாமல் போய் சிமெண்ட் வந்து விட்டது. அதற்கு முன்னே தரைக்குத்தான் சிமெண்ட் போட்டுக் கொண்டிருந்தார்கள். அது சுவற்றுக்கும் பரவவே கன்னம் வைப்பது கஷ்டமாகிப் போனது. சுவற்றுக்குப் பதிலாக ஜன்னல் வழியாகப் புகுவதே சிலாக்கியம் என்றாயிற்று. ஜன்னல் கம்பிகளை வளைத்தோ அறுத்தோவிட்டு உள்ளே போக வேண்டும்.
வெகு சீக்கிரமே தனி வீடுகள் என்பதே குறைந்து எல்லாம் பயங்கரமான அடுக்கு மாடிக் கட்டடங்களாயின. அத்தனையும் கெட்டி கான் கிரீட் கட்டடங்கள். அதிலும் மூன்றாவது மாடியிலும் ஐந்தாவது மாடியிலும் ஏறிக் கன்னம் வைக்கவா முடியும்? முதலில் இந்த மாறுதல்களெல்லாம் பெரிய நகரங்களில் தான் வந்தது. சின்ன ஊர்களில் அவை வருவதற்கு நாள் பிடித்தது. அப்போது நாங்கள் அடிக்கடி சிற்றூர்களுக்கு விஜயம் செய்யலானோம். எங்களில் சிலர் பட்டணத்தை விட்டு வெளியூருக்குக் குடிபெயர்ந்ததும் உண்டு. ஆனால் காலம் போகப்போக அவையும் பெரிய ஊர்களின் அடிச்சுவட்டைப் பின் பற்றிக் கழுதையாகிவிட்டன.
இதே சமயம் நடந்த இன்னொரு நவீனகால அநியாயத்தையும் சொல்ல வேண்டும். வெகு நாளைக்கு முன்னால் எல்லோரும் தங்கள் வீட்டில் தான் பணத்தைப் பதுக்கி வைத்துக் கொண்டிருந்தார்கள். சாதாரணமாக ‘Safe’ என்ற பலமான இரும்புப் பெட்டகங்களில் (சிலசமயம் பெட்டிகளில்) இருக்கும். சில யுக்திக்காரர்கள் சமையற்கட்டில் ஏதோ பழைய அலுமினியப் பாத்திரத்துக்குள்ளேயோ அல்லது அழுக் குத்துணிக் கூடைக்குள்ளேயோ, அசா தாரணமான இடங்களில் பணத்தை வைப்பார்கள். குறிப்பாக, தனியாக இருந்த சில கிழவிகள் இப்படிச் செய்வதைக் கண்டிருக்கிறேன்.
அங்கேயெல்லாம் பணம் இருக்கும் என்று யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள் என்பது அந்தப் புத்திசாலிகளின் அனுமானம். ஆனால் அந்த ரகசிய இடங்களைக் கண்டுபிடிப்பது எங்களுக்கு அவ்வளவு ஒன்றும் கஷ்டமாயிருக்கவில்லை. இதெல்லாம் அனுபவத்தில் உதிக்கும் ஞானம், வீட்டுக்காரர்களின் குருட்டு யோசனைகளைக் கடந்து போகக் கூடியது. அதே போல் எந்தவிதமான இரும்புப் பெட்டி, பெட்டகங்களையும் மறு சாவி போட்டுத் திறப்பதற்கான பயிற்சியும் ஆற்றலும் எங்களுக்கு இருந்தது. குறிப்பாக நான் அதில் ஒரு நிபுணன் என்று பிரசித்தி பெற்றிருந்தேன்.
ஆனால் பின்னால் நடந்தது என்னவென்றால், கையில் நாலு காசு சேர்ந்துவிட்டால் ஒவ்வொருத்தனும் வங்கிக் கணக்கு வைத்துக் கொண்டு கொடுக்கல் வாங்கல் எல்லாவற்றையும் ‘செக்’ மூலமாகப் பண்ண ஆரம்பித்தான். பணக்கார வீடுகளில் பணமாக வைத்துக்கொள்வதே குறைந்து போயிற்று. ஆனாலும் தங்கம், வைர நகைகளை பெட்டகத்துள் வைப்பது தொடர்ந்தது. என் துரதிர்ஷ்டம் சில ஆண்டுகளில் இவையும் வீட்டை விட்டு வெளியேறி வங்கி ‘லாக்கர்’களில் குடியேறத் தொடங்கின. வருமான வரிக்காரர்களுக்குப் பயந்துகூட இப்படிச் செய்தார்கள். பக்கம் பக்கமாக வெவ் வேறு வங்கிகளின் லாக்கர்களில் ஒளித்து வைத்தால் இன்கம்டாக்ஸ்காரர்களின் கண்ணில் மண்ணைத் தூவலாம் என்பது அவர்களின் கருத்து. இதெல்லாம் என் வயிற்றில் மண்ணை அள்ளிப்போட்ட தென்னவோ நிச்சயம்.
நாளடைவில் என் திறமை, அனுபவம் எல்லாமே வீணாகப்போவது போலத் தோன்றிற்று. ஆயிரம் பாடு பட்டு ஒரு வீட்டுக்குள் ஏறி இரண்டாயிரம் பாடுபட்டு இரும்புப் பெட்டியைத் திறந்தபின் அத்தனையும் வியர்த்தம் என்று தெரிந்தால் என் மனம் என்ன பாடுபட்டிருக்கும் என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளலாம். கடைசியில், காலம் கெட்டுப் போச்சு, இத்தொழிலுக்கு இனிமேல் நான் லாயக்கில்லை, கூட்டம் கூட்டமாக வட நாட்டில் எங்கெங்கிருந்தோ வந்து புதுப்புது உத்திகளைக் கையாளுகிறார்களே அந்தப் பையன்களுடன் என்னால் போட்டி போட முடியாது என்று தீர்மானித்து நான் கௌரவமாக விலகிவிட்டேன்.
இதுதான் என் உத்தியோக சுயசரிதை.
தேர்தல் – 1946 :: “மஞ்சள் பெட்டிக்கே உங்கள் ஓட்டு”
1946இல் நடைபெற்ற பொதுத்தேர்தல்தான் நான் கண்ட முதல் தேர்தல். ஃபர்ஸ்ட் பாரம் என்றழைக்கப்பட்ட ஆறாவது வகுப்பில் நான் படித்துக் கொண்டிருக்கும் போது நடந்தது. இரண்டாவது உலகயுத்தத்தில் நம்மைக் கேட்காமலேயே பிரிட்டிஷ் இந்திய சர்க்கார் ஜெர்மனி மீது யுத்தப் பிரகடனம் செய்ததிலிருந்து (1939) தோன்றி யுத்தகாலம் முழுதும் நீடித்த காங்கிரஸ் – பிரிட்டிஷ் பிணக்கம் சமீபத்தில்தான் ஒருவழியாக முடிவு பெற்று இணக்கமாக மாறிக்கொண்டிருந்தது. காரணம் அதற்குச் சில மாதங்கள் முன்பு இங்கிலாந்தில் (அதாவது பிரிட்டனில் – அப்போதெல்லாம் மூத்த தலைமுறையினர், என் அப்பா அம்மா உட்பட, இங்கிலாந்து என்றுதான் சொன்னார்கள். ஏன், பிரிட்டிஷ் பிரதமராயிருத்த சர்ச்சிலும் கடைசிநாள் வரை அப்படித்தான் சொன்னதாகவும் ஸ்காட்லந்துக்காரர்களின் எரிச்சலைப் பற்றிக் கவலைப்படவில்லை என்றும் கூடத் தெரிகிறது.) ஆட்சி மாறியதே. சில மாதங்களுக்கு முன் இந்தியாவின் அனுதாபிகள் (உ.ம். கிரிப்ஸ், பெதிக்-லாரன்ஸ்) நிறைந்த தொழிற்கட்சி சர்ச்சிலின் கன்சர்வேடிவ் கட்சியைத் தேர்தலில் முறியடித்து அமோகவெற்றி பெற்றிருந்தது (1945). அந்த முடிவைத் தெரிந்து கொள்வதற்காக அன்று பி.பி.ஸி செய்திகள் வரும்போது என் தந்தை கடமுட என்று சத்தம் பண்ணிக்கொண்டிருந்த ரேடியோவிலேயே காதைப் பதித்துக் கொண்டிருந்தது ஞாபகம் இருக்கிறது. நியூஸ் கேட்டுவிட்டு மிகுந்த சந்தோஷத்துடன் கூடத்துக்கு (ஹால்) வந்து நற்செய்தியைச் சொன்னவுடன் அம்மா உடனே பாயசம் பண்ணி எல்லோருக்கும் கொடுத்ததும் ஒரு ‘இனிய’ நினைவு. புதிய லண்டன் அரசு தாமதமின்றி இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுப்பதைத் தங்கள் கொள்கைப்பிரகடனமாகச் செய்துவிட்டது . உடனடியாக சிறையிலிருந்த காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட அதைத் தொடர்ந்துதான் இப்போது, 1937இல் இருந்து ஒன்பதாண்டுகளுக்குப்பின், மறுபடியும் பொதுத்தேர்தல் வந்திருக்கிறது.
தாராபுரத்தில் உற்சாகவெள்ளம் கரைபுரண்டோடியது. நாடு முழுவதிலும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். ஊரெங்கும் சுவர்களின் மீது “மங்களமான மஞ்சள் பெட்டிக்கே உங்கள் ஓட்டு” என்று கொட்டை கொட்டையாக எழுதினார்கள். (கூடாதென்று சொல்ல அப்போது எலெக்ஷன் கமிஷனர் எல்லாம் கிடையாது). ‘வாக்கு’ என்ற பதம் அப்போதும் இன்னும் சில வருடங்கள் வரையிலும்கூட உபயோகித்து நான் கேட்டதாக நினைவில்லை. ஆங்கிலச் சொல்லான ‘வோட்’ ஆனது (‘ரயில்’ மாதிரியாக) ஓட்டு என்றொரு தமிழ் வார்த்தையாகப் பரிணமித்து நிலைபெற்றிருந்தது. அதேபோல, தேர்தலில் நிற்பவர் ‘அபேட்சகர்’ என்று அழைக்கப்பட்டார். அவர் ‘வேட்பாளர்’ ஆனது இன்னும் பல காலத்திற்குப் பிறகுதான். வடமொழியிலிருந்து வந்த ‘அபேட்சகரின்’ நேரடி சுத்தத்தமிழ் மொழிபெயர்ப்பு.
சினிமா நோட்டீஸ் மாதிரி பிரசாரத் துண்டுக்காகிதங்கள் (அதற்கும் நோட்டீஸ் என்றுதான் சொன்னார்கள்) அச்சடித்து வினியோகிக்கப்பட்டன. இளைஞர்கள், குறிப்பாக மாணவர்கள், வீடு வீடாகப் படியேறி மக்களை நேரில் சந்தித்து நோட்டீசுகளைக் கொடுத்தும் விண்ணப்பித்தும் ‘காந்திக்கட்சிக்கு’ வாக்கு சேகரித்தார்கள். தொண்டர்கள் தெருத்தெருவாக மெகாபோனில் முழங்கிக் கொண்டும் போனார்கள். இன்று காணாமற்போன மெகாபோனைப்பற்றிச் சில வார்த்தைகள் சொல்ல வேண்டுமென்றால் அது சௌகரியமானதொரு சாதனம். மலிவும் கூட. மின்சாரம், பேட்டரி எதுவும் கேட்காது. நாம் போடும் சத்தத்தை இன்னும் கொஞ்சம் பெரிதாகக் கூட்டும், அவ்வளவுதான். ஒலிபெருக்கி போலக் காதைத் துளைக்காது. அடிக்கடி காங்கிரஸ் பொதுக் கூட்டங்கள் நடந்தன. மட்டப்பாறை வெங்கட்ராமய்யர் (‘மட்டப்பாறைச் சிங்கம்’), ம.பொ.சிவஞான கிராமணி யார், அல்லாப்பிச்சை என்று வெளியூரில் இருந்தும் தலைவர்கள் வந்து பேசினார்கள். அவர்களில் ஒருவர் எங்கள் வீட்டுக்கு வருகை தந்து என் தந்தையிடம் கொஞ்சநேரம் பேசி விட்டுப் போனார். அவர்தான் காமராஜ நாடார் (அப்போது அப்படித்தான் அவர் பெயர். பின்னாளில் ‘நாடார்’ என்ற பகுதி , காரல் மார்க்ஸின் பாஷையில் சொல்லப்போனால், ‘உதிர்ந்துபோயிற்று’ ) என்று அப்புறம் அப்பா சொன்னார். “அட, அப்பவே தெரிஞ்சிருந்தால் எட்டிப் பார்த்திருப்பேனே என்று குறைபட்டுக்கொண்டார் அம்மா.
அதென்ன மஞ்சள் பெட்டி என்ற கேள்வி இதைப் படிக்கும் பலர் மனதிலும் எழக்கூடும். அது ஒரு தனிக்கதை. சைமன் கமிஷன் வந்துவிட்டுப் போனதற்குப் பின் 1931இல் வைஸ்ராய் ஒரு கமிஷனை நியமித்தார். அதன் வேலை இந்தியாவுடன் ஒப்பிடக் கூடிய பல நாடுகளில் என்ன செய்கிறார்கள் என்று பார்த்து நமக்கு தேர்தல் முறைகளைச் சிபாரிசு செய்தல். வெள்ளைக்காரர்கள் எப்போதும் ரொம்ப systematic. (அதை நாம் அவர்களிடம் கற்றுக்கொள்ளத் தவறிவிட்டோம் எனத் தோன்றுகிறது. உதாரணமாக, அண்மையில் Right to Information Act வந்தது. இயற்றுவதற்கு முன்னர், சில முன்னேறிய நாடுகளிலும், மற்றும் பிலிப்பைன்ஸ் தாய்லாந்து, மொரீஷஸ் போன்ற சில கிழக்கத்திய நாடுகளிலும் இதை எப்படிச் செய்திருக்கிறார்கள், சட்டம் மட்டுமில்லாது நடைமுறையில் எப்படி இருக்கிறது என்று ஆராய்ந்திருக்க வேண்டும். அதைச் செய்யாமல் ‘காப்பியடித்து’ இயற்றப்போக, இன்று அந்தச் சட்டம் பாட்டுக்கு ஒரு பக்கம் இருக்கிறது, சொல்லும்படியாக சாமானிய மக்களுக்குப் பிரயோஜனம் எதுவும் இல்லை). முன்னேறிய மேனாடுகள் போலன்றி இங்கே ஒவ்வொரு கட்சிக்கும் (சுயேச்சை அபேட்சகருக்கும்) தனித்தனிக் கலரில் பெட்டிகள் வைப்பதென்ற கமிஷனின் பரிந்துரை ஏற்கப்பட்டது. காங்கிரஸ் தேர்தலில் பங் கெடுத்துக்கொள்ளச் சம்மதித்த 1937இலிருந்து அதற்கு மஞ்சள் பெட்டி என்றாயிற்று. 1946இல் ஜின்னாவின் முஸ்லிம்லீகுக்கு பச்சைப்பெட்டி. மற்றவர்களுக்கு என்ன என்னவென்று எனக்குத் தெரியவில்லை. சுயேச்சைகளும் கோதாவில் உண்டு.
ஒரு முக்கியமான சமாச்சாரத்தை இங்கே சொல்லவேண்டும். அன்று வயதுவந்தவர் எல்லோருக்கும் ஓட்டுரிமை கிடையாது. இத்தனை படிப்பு அல்லது இத்தனை சொத்து என்று வைத்திருந்தார்கள். அந்தத் தகுதி இருந்தால்தான் ஓட்டுப்போடலாம். அதனால் ஜனத்தொகையில் ஓட்டுரிமை பெற்றவர்களின் சதவீதம் இன்றைவிட மிகக்குறைவாக இருந்தது. இங்கே எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. பின்னால் 1952இல் இருபத்தோரு வயதானவர் எல்லோருக்கும் வாக்குரிமை வந்தபோது எளியவர்கள் பலருக்கு அது தெரியவில்லை. அப்போது எங்கள் வீட்டில் ஒரு சமையற்கார மாமி இருந்தார். விதவை, வயதான மாது. “ஓட்டுச்சாவடி நம்ம வீட்டில் இருந்து நாலு எட்டில் இருக்கிறதே, நீங்கள் ஒட்டுப்போடப் போகவில்லையா, மாமி?” என்று கேட்டேன். “எனக்கெல்லாம் ஓட்டு கிடையாதப்பா, அதுக்கு சொத்து எதாவது இருக்கணும்” என்று பதில் சொன்னார். இல்லை, இப்போது சட்டம் மாறியிருக்கிறது என்று நான் சொன்னபோதும் மாமிக்கு நம்பிக்கை வரவில்லை. நான் வெறும் பதினைந்து வயதுப் பையனாயிருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். என் தாயாரும் வந்து வற்புறுத்திச் சொன்ன பிறகுதான் போனார்.
1946இல் இருந்து, பின்னால் மறைந்து போன ஒரு பாரிய விஷயம் முஸ்லிம்களுக்கென்று இருந்த ‘தனித்தொகுதி’. தனித்தொகுதி என்றால் இன்று ஷெட்யூல்வகுப்பினருக்கு ஒதுக்கியிருப்பது போல அல்ல. முஸ்லிம் மக்கள் முஸ்லிம் வேட்பாளர்களுக்குத்தான் ஓட்டளிக்க முடியும். ஒரு முஸ்லிம் லீகர், ஒரு தேசீய முஸ்லிம், ஒரு முஸ்லிம் சுயேச்சை என்று நின்றால், அந்த மூன்று பேரில் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை தான் இஸ்லாமிய ஓட்டர்களுக்கு உண்டு. அவர்களுக்கும் முஸ்லிமல்லாத அபேட்சகர்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. மட்டுமல்ல, ஹிந்து, கிறிஸ்தவ ஓட்டர்கள் முஸ்லிம் வேட்பாளர்கள் யாருக்கும் ஓட்டுப் போடவும் முடியாது. 37 வருடங்களுக்கு முன் இந்தியர்களைப் பிரித்தாளுவதற்கு ஆங்கிலேயர் கொண்டு வந்த இத்திட்டம் கடைசியில் இந்தியாவையே பிரித்துவிட்டது. மேலே விவரிக்கப்பட்டது 1946 தேர்தலின் அடிப்படையில்தான். ஆனால், பிரித்தல் முழுமை பெற்றபோது (1947) ஆளுவதற்குத்தான், அந்த விஷமத்தை ஆரம்பித்து வைத்த வெள்ளையர் இருக்கவில்லை!
*
சகுனம்

அந்த நாளிலே ரொம்பவே சகுனம் பார்த்தார்கள். எல்லாரும் இல்லாவிடினும் பலபேர். சகுனம் என்றால் உடனே எனக்கு நினைவுக்கு வருவது என் கல்லூரித் தோழன் பரமாத்மாதான்1. 1950களின் மத்திய பகுதியில் நானும் அவனும் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் படித்தோம். இருவரும் ஒரே ஹாஸ்டலில் (சேலையூர் ஹால்) தங்கியிருந்தோம். என் ரூம் நம்பர் 57 என்றால் அவனுடைய அறை 59. கல்லூரியில் என் பாடம் சரித்திரம், அவனுடைய பாடம் பௌதீகம் என்று வெவ்வேறு திசைகளில் இருந்தும் எங்களிருவரின் பல ருசிகள் (சினிமா, சங்கீதம், இலக்கியம்) ஒரே திக்கில் அமைந்ததால் நாங்கள் சீக்கிரத்திலேயே நெருக்கமாகிவிட்டோம். இந்நிலையில் அவனுடைய தந்தை ஹைவேஸ் இன்ஜினீயர் விஸ்வநாதையருக்கு எங்கள் ஊர் தாராபுரத்தில் அசிஸ்டண்ட் இன்ஜினீயராக மாற்றல் ஆயிற்று. அந்தக் காலத்தில் ஏ.இ. என்றால் தாலூக்கா பூராவிலும் நெடுஞ்சாலைத் துறைக்குத் தலைவர். இன்றுபோல் ஊருக்கு மூன்று ஏ.இ.க்கள் அப்போது இருக்கவில்லை. காலாண்டு, அரையாண்டு கல்லூரி விடுமுறை என்றால் நானும் பரமாத்மாவும் ஒன்றாகவே தாராபுரம் சென்று சென்னை திரும்புவோம். தாம்பரத்தில் இருந்து போவது எங்கள் இஷ்டப்படி. ஆனால் லீவு முடிந்து திரும்பும்போது அவனுடைய அப்பா பிடித்துக்கொள்வார். அவர் கொஞ்சம் பழைய மோஸ்தர் மனுஷர். நம்பிக்கைகள், வாழ்க்கை முறை எல்லாவற்றிலும் அவர் மிகவும் ‘கர்நாடகம்’ என்று சொன்னார்கள். அதாவது காலங்காலமாய் இருந்து வரும் மரபைத் தீவிரமாய் அனுசரிப்பவர். இப்போது இந்த வார்த்தை வழக்கில் இருக்கிறதா என்று நிச்சயமாகத் தெரியவில்லை.
தாராபுரத்தில் (அது வெறும் தாலூக்கா தலைநகராயிருந்த அன்றும் சரி, கோட்டத் தலைநகராயிருக்கும் இன்றும் சரி) ரயில் கிடையாது. சென்னை செல்வதற்கு திருப்பூர் அல்லது ஈரோடு வரை பஸ்ஸில் பயணித்து புகைவண்டியைப்2 பிடிக்கவேண்டும். எங்கள் இருவர் வீடுகளும் பார்க் ரோடு எனப்பட்ட மெயின்ரோட்டில் அமைந்திருந்ததால் ஒரு சௌகரியம். வெளியூர் போகும் பேருந்துகள் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய்க் கையெழுத்துப் போட்டுவிட்டுத்தான் போக வேண்டும் என்று அப்போது ஒரு நியதி இருந்தது. அப்போது மத்திய பஸ் நிலையம் (Central Bus Stand) என்று ஒன்று வந்திராத காலம். பஸ் ஒவ்வொன்றும் அந்தந்தக் கம்பெனியின் ஸ்டாண்டில் இருந்துதான் கிளம்பும். அது திருப்பூர் பஸ்ஸாயிருந்தால் அதன் ஜி.எம்.எஸ். பஸ் ஸ்டாண்டிலிருந்து எங்கள் ரோடு வழியாகத்தான் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போகவேண்டும். போகும் போது எங்கள் வீட்டு வாசலில் பெட்டியுடன்4 நின்று கைகாட்டினால் பஸ்ஸை நிறுத்தி எங்களை ஏற்றிக்கொண்டு போவார்கள். ஈரோடு போய் பஸ், ரயிலைப் பிடிப்பதாயிருந்தால் நாங்கள் எஸ்.எம்.எஸ். பஸ் ஸ்டாண்டுக்குத்தான் போகவேண்டும். அந்த பஸ் எங்கள் ரோடு வழியாகப் போவதில்லை.

இப்போதெல்லாம் தமிழ்நாட்டில் வெளியூர் போகும் பஸ்களும் கூட டவுன் பஸ் மாதிரி பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை வந்துகொண்டே இருக்கின்றன. அதற்காக என்று குறிப்பிட்ட நேரத்தில் நாம் போகவேண்டியதில்லை என்று தெரிகிறது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னாலெல்லாம் ஒரு மணி பஸ், பிறகு நான்கு மணி பஸ், அடுத்தது ஆறரை மணிக்கு என்று நீண்ட இடைவெளியில்தான் பேருந்துகள் ஓடின. ஆனால் குறித்த நேரத்தில் கிளம்பி விடும். அதன் குறித்த நேரம் 4 மணி என்றால் அதற்கு அரைமணி முன்னதாக நாங்கள் வீட்டில் இருந்து கிளம்பினால் போதும். ஆனால் நல்ல நேரத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்ட பரமாத்மாவின் தந்தை திடீரென்று ஒரு குண்டைத் தூக்கிப்போடுவார். அன்று பார்த்து, பகல் 3 மணியில் இருந்து நேரம் நன்றாக இராது. ராகுகாலம், யமகண்டம் என்று ஏதாவது இருந்து தொலைக்கும். அதனால் 2-30 மணிக்கே கிளம்பி விடுங்கள் என்று சொல்லுவார். சின்னப்பையன்களாகிய நாங்கள் அஜாக்கிரதையாய் இருக்கக்கூடும் என்று எண்ணி அந்த நாள் சாப்பிட்டபின் ஆபீஸுக்குத் திரும்பாமல் நாங்கள் கிளம்பும்வரை வீட்டிலேயே இருக்கவும் செய்வார். நாலுமணி வண்டிக்கு ஊருக்கு முன் போய் ‘வேகு வேகு’ என்று ஸ்டாண்டில் காத்திருப்பது என்றால் எங்கள் இருவருக்குமே ரொம்ப அழுகை. விஸ்வநாதையரோ தங்கமான குணம் உள்ளவர். எங்களைக் கஷ்டப்படுத்தவும் அவருக்கு இஷ்டம் இல்லை. அதே சமயம் யோகம், நேரம் எல்லாவற்றையும் அவருக்குப் பார்த்தாக வேண்டும். கடைசியில் ஒரு வழி கண்டுபிடித்தார். அதுதான் ‘பரஸ்தானம் போவது’.
பரஸ்தானம் என்றால் ‘வேறு இடம்’. பகல் இரண்டு மணிக்கே பஸ் ஸ்டாண்டுக்குப் போவது தொந்தரவாயிருந்தால், அதே நேரத்தில் பெட்டி படுக்கையை எடுத்துக்கொண்டு பரஸ்தானமாகிய எங்கள் வீட்டில் கொண்டு வைத்து விட்டால் ராகுகாலப் பிரச்சினை தீர்ந்துபோகும். சாமான்களைப் பரஸ்தானத்ததுக்கு எடுத்துக் கொண்டுபோவது நல்ல நேரத்தில் இருந்தால் போதும், பின்னால் எப்போது அந்த ஸ்தானத்திலிருந்து (அதாவது எங்கள் வீட்டிலிருந்து) பஸ் ஸ்டாண்டுக்குப் போகிறான் என்பது பொருட்டல்ல. கொழுத்த ராகுகாலத்தில் போனாலும் ஒன்றும் இல்லை. ஆனால் கிளம்பினவன் எக்காரணத்தைக் கொண்டும் திரும்பித் தனது வீட்டுக்கு வரக்கூடாது. அவனுடைய சாமான்களும் திரும்பிவரக்கூடாது. திரும்பினால் பரஸ்தானம் பலனில்லாமல் போகும். எங்கள் வீட்டில் இருந்து நேராக பஸ் ஸ்டாண்டுக்குப் போய்விட்டால் சரி. எங்கள் வீட்டில் நேரம், காலம் பார்க்கும் வழக்கம் இல்லை என்பதால், இந்த உபாயத்தினால் எல்லோருக்கும் திருப்திதான். யாருக்கும் ஆட்சேபணை இல்லை.

திருப்பூர் பஸ்ஸில்தான் போகிறோம், வாசலிலேயே ஏறிக்கொள்ளலாம் என்கிற போது கூட எங்கள் வீட்டிலிருந்து ஐந்தே வீடுகள் தள்ளி அமைந்திருந்த அவனுடைய இல்லத்துக்கு நான் போவதற்குப் பதில்தான் எங்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்து கொள்வதையே விரும்பினான் பரமாத்மா. அதற்கு ஒரு காரணம் இருந்தது. அவன் பெட்டியை எடுத்துக்கொண்டு வீதிக்கு வருவதற்கு சகுனம் பார்ப்பார் அவனது அப்பா. “நீ உள்ளேயே இரு. நான் பச்சைக் கொடி காட்டினபிறகு வந்தால் போதும்” என்று உத்தரவு இட்டுவிட்டு வாசலில் வந்து நிற்பார்.
ஒரு சுமங்கலி தண்ணீர்க்குடத்துடன் சாலையில் நடந்துபோவதைப் பார்த்தவுடன் “நல்ல சகுனம். உடனே வா” என்று மகனை அவசரமாக அழைப்பார். அப்போது பார்த்து “அம்மாவிடம் சொல்லிக்கொண்டு வருகிறேன்” என்று சில நிமிடங்கள் தாமதம் பண்ணி விடுவான் என் நண்பன். அவன் வருவதற்குள் சுமங்கலி போய் ஒரு கழுதை (மூதேவியின் வாகனமான அது நல்ல சகுனமாயிருக்க வழியில்லை) எதிரே வரும். “டூ லேட். மறுபடியும் உள்ளே போ” என்று கோபமாக இரைவார் தந்தை. அந்தக் கழுதை அதற்குள் கத்த ஆரம்பித்தால் (நல்ல சகுனம்) அவனைப் போக அனு மதிப்பார். ஆனால் அதற்குள் பஸ் போய்விடமுடியும். இது மாதிரி ஓரிரண்டு முறை அவர் வாயில் விழுந்தபின், ஒரு மணி நேரம் முன்னதாகவே எப்பொழுது நல்ல சகுனம் அமைகிறதோ அப்போதே கிளம்பி எங்கள் வீட்டுக்கு வந்துவிடுவதன் மூலம் பிரச்சினையைத் தீர்த்து வைத்தான் பரமாத்மா.
*
1. இந்த அதிசயமான பெயர் அவனது வீடு, உற்றார் உறவினர் அளவில்தான் புழங்கியது. கல்லூரியில் அவன் ‘பத்மநாபன்’ என்றுதான் அறியப்பட்டான். அதுதான் அவனுடைய ‘உத்தியோகபூர்வமான’ (Official) பெயர். நமது தாத்தாக்களின் பெயர்கள் சிலசமயம் நிகழ்காலப் ஃபாஷனுடன் (fashion) ஒத்துப்போவதில்லை என்பதுதான் பிரச்னை.
2. அந்நாளில் ரயில் என்றால் நிஜமாகவே ‘புகைவண்டி’யாகத்தான் இருந்தது. இரவு முழுதும் பிரயாணம் செய்து சென்னை போய்க் காலையில் இறங்கும்போது சட்டை முழுதும் கரி படிந்திருக்கும். முன்னால் இருக்கும் கம்பார்ட்மெண்டில் ஏறியிருந்தால் கரிப்பூச்சு இன்னும் கூடுதலாயிருக்கும். டீசல், எலெக்ட்ரிக் இன்ஜின் வராத நிலக்கரி காலம்.
3. சொல்லப்போனால் அன்று எங்கள் ஊரில் பேருந்துகள் என்றாலே வெளியூர் செல்பவைதான். உள்ளூர்ப் பேருந்துகள், அதாவது டவுன் பஸ்கள் எதுவும் கோய முத்தூரைவிடச் சின்ன நகரங்களில் ஓடவில்லை. பொடிநடையில் முடித்துவிடக் கூடிய ஒரு மைல், இரண்டு மைல் தூரங்களைக் கடப்பதற்கு இரண்டணா பஸ்சார்ஜ் அழுவதற்கு தாராபுரத்துக்காரர்கள் எவரும் தயாராயிருக்கவில்லை. “கையும் காலும் நன்றாகத்தானே இருக்கிறது” என்பார்கள்.
4. அந்நாளில் ஹோல்டால் எனப்படும் படுக்கையும் இருப்பதுண்டு. படுக்கைக்கு லக்கேஜ் கட்டணம் கிடையாது என்று வெள்ளைக்காரன் காலத்தில் இருந்து ரயில்வேக்காரர்கள் மனமுவந்து ஒரு ‘இலவசம்’ கொடுத்திருந்தார்கள். கல்லூரி மாணவர்கள் வெயிட் அதிகமாயிருக்கும் பாடப் புத்தகங்களை அதற்குள் பதுக்குவதும் உண்டு. சலுகையின் துஷ்பிரயோகம் தான் என்றாலும், “சின்னப் பசங்கதானே” என்று ஸ்டேஷன் அதிகாரிகளும் இதைக் கண்டுகொள்வதில்லை. அவர்களும் மாணவப் பருவத்தில் அதே வேலையைச் செய்திருக்கக்கூடும் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்..


விளையாட்டுச் சாமான் அல்லது விபரீதக் கொலை
எஸ்.வி.ராமகிருஷ்ணன்
அறுபதாண்டுகள் முன்னால் (அதாவது ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பதுகளில்) தமிழில் ஜனரஞ்சக நாவல்கள் என்று பார்த்தால் முன்னணியில் நின்றவை ஆரணி குப்புசாமி முதலியார் மற்றும் வடுவூர் துரைசாமி அய்யங்காரின் எழுத்துக்கள். இத்தனைக்கும் அந்த இரண்டு எழுத்தாளர்களும் அப்போதே -வடுவூரார் 1940லும் ஆரணியார் அதற்கும் பதினைந்து ஆண்டுகள் முன்னேயும் – காலமாய் விட்டிருந்தார்கள். ஆனால் அவர்களின் நாவல்கள் ஒவ்வொரு நூல்நிலையத்திலும் (நூலகம் என்ற சொல் அப்போது புழக்கத்தில் இல்லை. லைப்ரரிக்கு தமிழ் வார்த்தை நூல்நிலையம்; ரீடிங்ரூமுக்கு வாசகசாலை) நிறையவே காணப்பட்டது மட்டுமல்ல, அவை எப்போதும் சுற்றிலேயும் இருந்தன என்பதும் நினைவிருக்கிறது. அவை இரண்டிலேயுமே இலக்கிய நயம், முக்கியத்துவம், எதுவும் கிடையாது. ஆனால் படிக்க சுவாரசியமாயிருக்கும். பொழுதுபோக்கு இலக்கியம் எனலாம்.
இவர்களில் ஆரணி குப்புசாமி முதலியாரின் நவீனங்கள் (நாவலுக்கு அன்றைய தமிழ்ப்பெயர்) முழுக்க முழுக்க ஆங்கில நாவல்களின் தமிழாக்கம். வேண்டுமென்றேதான் நான் மொழிபெயர்ப்பு என்று சொல்லவில்லை. ஆங்கிலக்கதைகளை அப்படியே எடுத்துக்கொண்டு அதில் வரும் பாத்திரங்கள் மற்றும் ஊர் பெயர்களை முழுவதும் அவர் தமிழ்ப்படுத்தி விடுவார். லண்டன் லட்சு மணபுரி ஆகிவிடும். பாரிஸுக்கு பருதிபுரம்.
மேடலின் என்ற கதாநாயகி பத்மாசனி என்றும், எட்வர்ட் ஸ்மித் என்ற கதாபாத்திரம் ராஜசேகரன் என்றும் புனர் நாமகரணம் செய்யப்படுவார்கள். அவர் கதையை மாற்றுவதில்லையாதலால் அதன் சூழல் என்னமோ மேனாட்டுப்பாணியில் தான் இருக்கும். அந்த நாகரிகம் முதலியாருக்கு ஏற்புடையதல்ல. அதை அவர் ஆங்காங்கே தெளிவுபடுத்தி விடுவார். எப்படியென்றால் ஒவ்வொரு அத்தியாயத்திலும் நடுநடுவே ஒரு சின்ன உபன்னியாசம் செய்திருப்பார். அதன் ரீதி பின்வருமாறு இருக்கும்: “பார்த்தீர்களா வாசகர்களே, மேலே விவரித்த கேடுகள் அனைத்தும் மேனாட்டு நாகரிகத்தில் ஸ்திரீ புருஷர்கள் நெருங்கிப் பழகுவதால் விளையும் அனர்த்தம் அன்றோ? இதை உணராது நம் நாட்டினர் சிலர் ஐரோப்பியர் போலவே நமது தேசத்திலும் ஆடவரும் பெண்டிரும் சேர்ந்து போஜனம் செய்ய வேண்டும் நடனம் ஆடவேண்டும் என்று சொல்லுகிறார்களே, என்ன மதியீனம்!” என்று தன் கருத்துகளைச் சொல்லிவிட்டு “இது நிற்க. நமது பத்மாவதி என்ன ஆனாள் என்று கவனிப்போம்” என்று மீண்டும் கதைக்கு வருவார்.
ஆரணி குப்புசாமி முதலியாரின் நாவல்கள் ரெயினால்ட்ஸ் என்ற 19ஆம் நூற்றாண்டு ஆங்கில நாவலாசிரியரின் கதைகளைத் தழுவி எழுதப்பட்டவை என்று பரவலாகச் சொன்னார்கள். ஆனால் இது பொத் தாம்பொதுவாகச் சொல்லப்பட்ட ஒரு கருத்து தான் என்று கூறவேண்டும். நிச்சயமாக அவரின் எல்லா நவீனங்களும் ரெயினால்ட்ஸிடமிருந்து எடுக்கப்படவில்லை. அவரது மூலங்கள் அனைத்தும் மேனாட்டு நாவல்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம்.. உதாரணமாக பிரசித்தி பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் அலெக்ஸாந்தர் தூமாவின் (Alexander Dumas) மாண்டி க்ரிஸ்டோ பிரபு என்ற நாவலைத் தமிழில் செய்த முதலியாரது தமிழாக்கம் (இது அவரது புத்தகங்களிலேயே தடிமனானது கூட) ‘தீன தயாளன் அல்லது துஷ்ட நிக்கிரக சிஷ்ட பரிபாலனம்’ என்ற தலைப்பில் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்தத் தமிழ் நாவலிலும் தூமாவின் Count of Monte Cristo ஆனவர் மாண்டி கிரிஸ்டோ பிரபுவாகவே வருவார். ஆனால் அவரது பழைய காதலி மெர்சிடெஸ்ஸின் பெயர் மீனாள் என்று மாற்றப்பட்டிருக்கும். முதலியாரின் ‘ஆனந்த சிங்கின் அற்புதச்செயல்கள்’ என்ற புத்தகத்தில் (இது முதலில் ஆனந்த போதினி பத்திரிகையில் தொடராக வந்தது) வரும் சில செயல்களாவது ஆர்தர் கோனன்டாயிலின் ஷெர்லக் ஹோம்ஸ் கதைகளில் இருந்து வந்தவை என்று தெரிகிறது.
முதலியார் தனது நாவல்களின் பெயர்களைத் தன் வாசகர்களின் கவனத்தைக் கவரும் வகையிலும் அவர்களைப் படிக்கத் தூண்டுமாறும் வைத்திருப்பார். அந்தக்காலத்து வழக்கப்படி அவற்றில் பலவற்றிற்கும் இரட்டைத் தலைப்புகளும் இருக்கும். உதாரணமாக ‘விளையாட்டுச் சாமான் அல்லது விபரீதக்கொலை’. கதையே 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய புதிய யுத்தியான ‘தபால் குண்டு’டன் தொடங்கும். ஒரு பிரபுவின் பிறந்தநாளை ஒட்டி அவரது மாளிகையில் நடை பெறும் ஆடம்பரமான விழாவின் போது அவருக்கு வரும் ஒரு பிறந்தநாள் பரிசுப் பார்சலை அவர் நண்பர் குழாம் புடைசூழ ஆரவாரத்துடன் திறப்பார். அந்தோ! அவர்கள் எவரும் எதிர்பார்த்திரா வண்ணம் பார்சலுக்குள் பதுக்கப்பட்டிருந்த வெடிகுண்டு பலத்த சத்தத்துடன் வெடித்துச்சிதறி அவரைக் கொன்று விடும்1. இந்த திடுக்கிடும் சம்பவத்துடன் முதல் அத்தியாயத்தை முதலியார் முடித்து விட, ஆனந்தபோதினிக்காரர்கள் இரக்கமில்லாமல் ‘தொடரும்’ என்று போட்டு விடுவார்கள். திக் திக் என்று இதயம் அடித்துக்கொள்ள வாசகர்கள் அடுத்த இதழுக்காக ஆவலோடு காத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் என் தலைமுறையினருக்கு இந்தக் கஷ்டம் இருக்கவில்லை. ஆனந்தபோதினி பத்திரிகை வெகுநாள் முன்பே நின்று போயிருந்தாலும், அவர்களின் பிரசுராலயம் ஆரணியாரின் முழு நாவல்களையும் அச்சிட்டு வைத்திருந்தது.. நான் மேலே சொன்னதுபோல் அந்நாவல்களும் நூல்நிலையங்களில் தாராளமாகவே கிடைத்தன. மின்சார மாயவன், தபால் கொள்ளைக்காரர்கள், இரத்தினபுரி ரகசியம், மதனகல்யாணி என்று அவருடைய நாவல்களை லிஸ்ட் எடுத்தால் அவைடஜன் கணக்கில் நீளும்..
முதலியாரின் நாவல்களில் பிரபுக்களும் சீமாட்டிகளும் நிறையவே உலா வருவார்கள். பருதிபுரத்தின் பிரதான சாலையில் ஒரு உயரமான கட்டடம் இருக்கும். அதன் சாளரங்களில் திரைச்சீலைகள் (curtains) தொங்கவிடப்பட்டிருக்கும். சூரியன் அஸ்தமித்தபிறகு நாணயமாக உடைதரித்த ஒரு மாது உயர்தரமான வெள்ளைக்குதிரைகள் பூட்டிய வண்டியில் வந்திறங்கி அதன் நுழைவாயிலில் மணியடிப்பாள். தீபம் ஏந்திய ஒரு பணிப்பெண் உள்ளேயிருந்து வந்து கதவைத்திறப்பாள். இவளைக் கண்டதும் வந்தனமளித்து (வணக்கம் செலுத்தி) உள்ளே அழைத்துச் செல்வாள். சிலசமயங்களில் ஆடம்பரமாக உடையணிந்த ஒரு கனவான் கிலமாகக் காணப்படும் ஒரு புராதன வீட்டில் நுழைவார். இத்தியாதி. மொத்தத்தில் முதலியாரது நடையும் பிரயோகங்களும் ஒரு தனித்துவம் கொண்டிருந்தன.
பின்குறிப்பு :
1. இந்தத் தந்திரோபாயம் ‘அராஜகவாதிகள்’ (Anarchists) என்றழைக்கப்பட்ட, இன்றைய நமது நக்ஸலைட்டுகள் போன்ற, ஐரோப்பிய பயங்கரவாத இயக்கத்தாரால் அப்போது கையாளப்பட்டது என்று நினைக்கிறேன். சமூகநீதி கோரி இவர்கள் அரசர்களையும் அரசியல் பிரமுகர்களையும் கொல்ல முற்பட்டனர். பின்னாட்களில் I.R.A. எனும் ஐரிஷ் பயங்கரவாதிகளும் இந்த உத்தியைப் பெரிய அளவில் பயன்படுத்தினர். 1980களில் நான் சிலகாலம் இங்கிலாந்தில் இருந்தபோது இது பிரித்தானிய அரசுக்கு ஒரு தலைவலியாக இருந்தது. அஞ்சல் துறையினர், பார்சல்களை எச்சரிக்கையுடன் எப்படித் திறப்பது என்பது குறித்து விளம்பரங்கள் வெளியிட்டார்கள்.
*
தெலுங்கானா பிரச்சினை நடந்தவையும் நடக்கக் கூடியவையும் |
![]() |
![]() |
|||
|
|||||
சில எரிமலைகள் பல ஆண்டுகள் மௌனமாக இருந்துவிட்டு திடீரெனக் குமுறத் தொடங்கும். எப்போது வேண்டுமானால் லாவாவைக்கக்கலாம், சிலசமயம் வெடிக்கவும் செய்யலாம் எனக் கேட்டு இருக்கிறோம். இன்று தெலுங்கானா பிரச்சினை அப்படித்தான் இருக்கிறது. நாற்பதாண்டு முன் முதன்முறை அவ்வூருக்குப் போனபோது கேட்டது: ஹைதராபாத் வீதியில் யாரோ பேசிக்கொண்டு நடக்கிறார்கள். “தூகானம் குல்லா உந்தா?” என்று கணவன் மனைவியைக் கேட்டது என் கவனத்தைக் கவர்ந்தது. தமிழில் சொல்வதானால் “கடை திறந்திருக்கிறதா” என்று கேட்கிறார். அவருடைய கேள்வியில் இருக்கும் மூன்று சொற்களில் தூகானம் (அதாவது கடை) என்பது தூகான் என்ற ஹிந்தி வார்த்தையின் மருவிய ரூபம், குல்லா (திறந்து) என்பது அசல் ஹிந்தியேதான். உந்தா (உள்ளதா, இருக்கிறதா) என்பது மட்டுமே தெலுங்கு. அவர் தெலுங்கு பேசுவதாகத்தான் எண்ணியிருக்கிறார். ஆனால் இதைத் தெலுங்கு என்று அசல் ஆந்திரர்கள் அதாவது கூட்டு சென்னை ராஜ்யத்திலிருந்து* 1953ல் பிரிந்து ஆந்திரம் என்று ஒரு தனிமாநிலம் – சுதந்திர இந்தியாவின் முதல் பாஷாவாரி மாகாணம்-(அமைத்தவர்கள்) ஒப்புக்கொள்ளமாட்டார்கள். பல நாடகங்களிலும் திரைப்படங்களிலும் சுவையைக் கூட்டும் தமிழின் ‘மெட்ராஸ் பாஷைÕயைப் பற்றி சோழநாட்டுத் தமிழர்கள் நினைப்பது போலத்தான் அவர்களுடைய பேச்சுத் தெலுங்கு. இதைவிட சுத்தத் தெலுங்கு, குறிப்பாக கடற்கரை ஜில்லாக்களின் தெலுங்கு சுந்தரத் தெலுங்கு. அதைப் பற்றி அவர்களுக்குப் பெருமையும் உண்டு. விஜயவாடாவில் இதே கேள்வி “அங்காடி தீசி உந்தா” என்றிருந்திருக்கும். இந்த உதாரணம் தினசரி வாழ்க்கையில் காணப்படும் ஆந்திரா-தெலுங்கானா வித்தியாசத்தின் ஒரு பிரத்தியட்ச வெளிப்பாடு. சொல்லப் போனால் வெளிப்பாட்டின் பல அம்சங்களில் ஒன்று. இதுபோல் பற்பல. 2009 நவம்பர் இறுதியில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டி.ஆர்.எஸ்.) தலைவர் சந்திரசேகர ராவ் தெலுங்கானா வேண்டி ‘சாகும்வரை உண்ணாவிரதம்’ இருக்கப்போகிறேன் என்று ஆரம்பித்தபோது யாரும் அதை அத்தனை சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. அவர், கட்சி அரசியல் நடத்தும் ஒரு “இந்தக் காலத்து அரசியல்வாதி”தான். ஆந்திர மாநிலம் வேண்டி உயிரையே விட்ட அந்தக் காலத்து பொட்டி ஸ்ரீராமுலுவைப் போல் (1953) தியாகியெல்லாம் கிடையாது என்று எல்லோருக்கும் தெரியும். அந்த உண்ணாவிரதத்தின் விளைவு. இத்தனை தீவிரமாயிருக்கும் என்று நிச்சயமாக, சொல்லப் போனால் சந்திரசேகர ராவ் உள்பட, எவருமே எதிர்பார்க்கவில்லை. 2009 பொதுத் தேர்தலில் தனித் தெலுங்கானா மாநிலம் என்ற கோரிக்கையைப் பிரதானமாக முன்வைத்து பெரிய எதிர்பார்ப்புகளுடன் தேர்தல் களத்தில் இறங்கிய டி.ஆர்.எஸ். எதிர்பாராத தோல்வியினால் துவண்டு போயிருந்தது. தெலுங்கானா பிரிய வேண்டுமென்று சொன்ன ஒரே அகில இந்தியக் கட்சியான பி.ஜே.பி.யின் நிலை அதைவிட மோசம். தேர்தலில் தெலுங்கானா பிராந்தியத்தில் கூட முதல்வர் ராஜசேகரரெட்டியின் காங்கிரஸ் நன்றாகவே செய்திருந்தது வருக்கும் வியப்பைத் தந்தது.. அண்மைக் காலத்தில் அப்பகுதியில் கிளைத்து வந்த தெலுங்கானா உணர்வு இப் போது களைத்துத் தூங்கிக்கொண்டிருந்தது போலத் தென்பட்டது. வெற்றிபெற்று மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்த ராஜ சேகரரெட்டி “நான் இருக்கும்வரை தெலுங்கானா பிரிவது என்ற பேச்சுக்கே இடமில்லை” என்றே தோள் தட்டி அறிவித்தபோது அதை எவரும் தட்டிக்கேட்கவில்லை. இந் நிலையில் முதல்வர் ரெட்டியின் திடீர் மரணத்துக்குப்பின் ஆளுங்கட்சியினரிடையே தோன்றிய உட்கட்சிப் பூசலும் குழப்பமும் (முக்கியமாக, பழைய முதல்வரின் மகன் ஜகன்மோகன் ரெட்டி முதல்வர் பதவி வேண்டிக் கொடி பிடித்தது) கண்ட சந்திரசேகர ராவுக்கு சிறிது நம்பிக்கை மீண்டது. அரசியலில் கொஞ்சம் சலசலப்பை ஏற்படுத்தி, பலவீனமடைந்திருந்த தன் கட்சிக்குப் புத்துயிரூட்டுவதற்கு இதுதான் தருணம் இன்று கருதியே சந்திரசேகர ராவ் உண்ணாவிரதம் அறிவித்தார். உயிருக்கு ஆபத்து தேடிக்கொள்ள அவர் தயாராயில்லை. அதனால், இன்று எல்லா அரசியல்வாதிகளும் செய்வதுபோலவே தொடங்கி சில நாட்களிலேயே எதிர்க்கட்சித் தலைவர்களிலிருந்து ஆளுங்கட்சியினர் வரை பலரும் உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு விடுத்த கோரிக்கையை ஏற்று, கௌரவமாக விரதத்தை முடித்துக் கொண்டார். அப்போதுதான் ஒரு திடீர்த்திருப்பம் நிகழ்ந்தது. தெலுங்கானாவில் பரவலாக, முக்கியமாக மாணவர்களிடையே நீறுபூத்த நெருப்பு போல இருந்துவந்த தனித் தெலுங்கானா உணர்வு இந்த உண்ணா விரதத்தை சாக்காகக் கொண்டு திடீரென்று கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்திருந்தது. ஹைதராபாத்தின் மூத்த பத்திரிகையாளர் ஒருவர் அப்போது என்னிடம் தனிப்பட்ட முறையில் நாங்கள் பேசிக்கொண்டிருக்கையில் தனது கணிப்பைத் தெரிவித்தார் (அப்போது அவர் இதைப் பேப்பரில் எழுதியதாகத் தெரியவில்லை) அதில் இரண்டு விஷயங்கள் இருந்தன. ஒன்று: இந்தத் தடவை, முன்னால் (1969ல்) ஆனது போல் தீ அடங்காது, தொடரும். இரண்டு: ஆனால் சந்திரசேகரராவ் இதனால் அதிகப் பயன் அடையமாட்டார். ஏனெனில் இயக்கத்தையே மாணவ சமுதாயம் தன் கையில் எடுத்துக் கொண்டுவிட்டதால் என்ன ஆகும் என்று சொல்லமுடியாது ஆனால் ராவுடைய தலைமையை அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது நிச்சயம் என்பது அவரது ஹேஷ்யம். அவரது கணிப்பு ரொம்பவே சரி என்று ஒரு வார காலத்திலேயே புலனாயிற்று. சந்திரசேகரராவ் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளுகிறார் என்று கேட்டதும் மாணவர்கள் பொங்கியெழுந்தார்கள். அவரைச் சூழ்ந்துகொண்டு முற்றுகையிட்டார்கள். இந்த நிலையில் அவர் விரதத்தை நிறுத்தினால் உத்வேகம் பெற்று வந்த இயக்கம் மறுபடி மந்தகதிக்குத் திரும்பும் என அவர்கள் பயந்தனர். கடைசியில் ராவ் வேறுவழியின்றி உண்ணா நோன்பைத் தொடரலானார். இந் நிலையில் அரசு அவரைக் கைது செய்தது. அவரது உடல்நிலை சீர் குலையவே அவரை நிம்ஸ் (NIMS) என்ற அரசினர் ஆஸ்பத்திரியில் வைத்தது. சிலநாளிலேயே அவர்நிலை கவலைக்கிடமாக, எல்லா அரசியல் தலைவர்களும் உண்ணா விரதத்தைக் கைவிடுமாறு அவருக்கு வேண்டுகோள் விடுக்கலாயினர். ஆனால் இம்முறையும் அப்படிச் செய்வது அரசியல் தற்கொலையாக முடியும் என்பதை நன்குணர்ந்தராவ், அதைவிட தான் ஒரு தெலுங்கானாவின் பொட்டி ஸ்ரீராமுலுவாக சரித்திரத்தில் இடம்பெறுவது சிலாக்கியம் எனக் கருதி விரதத்தைத் தொடர்ந்தார். ஆனால் மத்திய அரசு இன்னொரு 1952 டிசம்பரை** எதிர்கொள்ளத் தயாராயில்லாத நிலையில் டிசம்பர் 9ம் தேதி நள்ளிரவில் உள்துறை மந்திரி சிதம்பரம் டி.வி.யில் தோன்றி தனித் தெலுங்கானா அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று அறிவித்தார். உடனே ராவ் உண்ணாவிரதத்தை முடித்தார். ஹைதராபாதில் வெற்றிக் களியாட்டங்கள் நிகழலாயின. டெல்லி முற்றிலும் எதிர்பாராத வகையில் இது ஆந்திரப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பிரதானமாக அப் பிராந்தியத்திலே நிலைகொண்ட பிரஜாராஜ்யமும்(நடிகர் சிரஞ்சீவியின் கட்சி) தெலுங்கு தேசமும் உடனேயே ஐக்கிய ஆந்திரம் என்ற நிலைப்பாட்டை எடுத்தனர். பொது ஜன உணர்ச்சியின் தீவிரத்தைக் கண்டு மருண்டுபோன ஆந்திரப் பிராந்திய காங்கிரஸ் எம்.பி.க்களும் எம்எல்ஏக்களும் அதையே இன்னும் கூட ஆவேசமாக முழங்கலாயினர். இல்லாவிடில் அவர்கள் தங்கள் தொகுதி மக்கள் முகத்தில் விழிக்க முடியாதென்ற நிலை. சிலநாள் முன்புதான் தனித் தெலுங்கானா கொடுக்கிறோம் என்ற மத்திய அரசு இப்போது தர்மசங்கடத்தில் சிக்கியது. ஆந்திரப் பிரதேசம் காங்கிரஸுக்கு முக்கியமான மாநிலமென்றால், அதன் இரு பகுதிகளில் ஜனத்தொகை, தொகுதிகள் எண்ணிக்கை, பணச்செழிப்பு அனைத்திலும் முன்னின்ற ஆந்திரம்தான் தெலுங்கானாவைவிட அதற்கு முக்கியமாயிருந்தது. தவிர, அங்கேதான் தற்போதைய நிலையில் வெற்றி வாய்ப்பும் அதிகம். தனித் தெலுங்கானாவை ஆதரித்துவந்த டி.ஆர்.எஸ். பி.ஜே.பி. இரண்டின் செல்வாக்கும் தெலுங்கானாவில் மட்டுமே. ஆந்திரத்தில் பலம்படைத்த ஒரே எதிரியான சந்திரபாபுவை சிரஞ்சீவியுடன் கூட்டு வைத்துக்கொண்டு எளிதில் சமாளித்துவிடலாம் என்று காங்கிரஸ் தலைமை கணக்குப் போட்டது. (அந்தக் கணக்கு இன்றும் நீடிக்கிறது.). அதே சமயம், சிதம்பரத்தின் டிவி. அறிவிப்பைத் தொடர்ந்து, தெலுங்கானாவிலும் தனி மாநிலம் என்ற உணர்வு தினம் அதிகரித்துக் கொண்டே போயிற்று. ஐக்கிய ஆந்திரமே நல்லதென்று எண்ணும் தெலுங்கானா பிரமுகர்கள் கூட அதைத் தைரியமாய்ச் சொல்லும் நிலையில் இல்லை. சொன்னால் அவர்கள் வீடு தாக்கப்படலாம், கார் கொளுத்தப்படும் என்ற நிலை. இத்தகைய நெருக்கடிகளில் காலங்காலமாய்க் கைகொடுத்த உபாயத்தை இப்போது மத்திய அரசு கடைப்பிடித்தது. ஜஸ்டிஸ் ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் ஒரு கமிஷனை நியமித்து தெலுங்கானா அமைப்பது குறித்து அனைத்துத் தரப்புகளின் அபிப்பிராயத்தைக் கேட்டறிந்து, ஆராய்ந்து ஒரு வருடத்தில் ரிப் போர்ட் கொடுக்குமாறு பணித்தது. இது ஏமாற்று வேலையென்றும் சிதம்பரத்தின் வாக்கு காப்பாற்றப்படவில்லையென்றும் தெலுங்கானாவில் பலத்த கூக்குரல்கள் எழுந்தன. கல்லூரி மாணவர்கள் பெரிய அளவில் கிளர்ந்தெழ, உஸ்மானியா பல்கலைக்கழகம் ஒரு போர்க்களமாய்த் தோற்றமளித்தது. டி.ஆர்.எஸ்., பி.ஜே.பி.யின் தெலுங்கானா எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து துணைத்தேர்தலெனும் பலப் பரீட்சையை அரசின் மீது திணித்தார்கள். சில மாதங்கள் கழித்தே நடந்த அத்தேர்தலில் அவர்கள் அனைவருமே ஜெயித்தும் காட்டினார்கள். அவர்கள் விரும்பியவாறே இப்பகுதியில் தனி மாநிலக் கோரிக்கைக்கு பொதுஜன ஆதரவு இருக்கிறது என்பதை நிரூபித்து விட்டார்கள். இத்தேர்தலில் மிகப்பெரிய இழப்பு, தெலுங்கு தேசத்துக்குத்தான். காங்கிரஸ் அபேட்சகர்கள் வெறுமனே தோற்றார்கள், அவ்வளவுதான்; சந்திரபாபு கட்சியினர் டெபாசிட்டை இழந்தார்கள். இத்தனைக்கும் 2009 தேர்தலில் தெலுங்குதேசம் தெலுங்கானவில் 39 இடங்கள் பெற்றிருந்தது. (டி.ஆர்.எஸ்.ஸைப் போல் மூன்று மடங்கு.) தெலுங்கானாவில் அக்கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியாகியிருக்கிறது என்று பலர் எண்ணுகிறார்கள். ஆனால் குழப்பமான இந்த அரசியலில் எதையும் சொல்வதற்கில்லை. சரியோ தப்போ, இப்போது தெலுங்கான முழுதும் கிராமங்களிலும் சரி, நகரங்களிலும் சரி… தனி மாநிலம் வேண்டும் என்ற விருப்பம் பரவலாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆந்திரர்களுக்கும் மற்ற வெளியார்களுக்கும் எதிரான வெறியாகவும் உருவெடுத்துக்கொண்டிருப்பது கவலை தரும் விஷயம். 1969ல் தனித் தெலுங்கானா வேண்டி ஒரு பலமான போராட்டம் நடந்தது. அரசியல் சதுரங்கத்தில் வல்லவரான இந்திரா காந்தி முதலில் விஷயத்தை ஆறவைத்துப் பின் அதன் தலைவர் சென்னா ரெட்டியையே ஆந்திரப் பிரதேச முதல்வராக்கி, அவருடைய பிரஜா சமிதி கட்சியையும் காங்கிரஸில் இணைக்க வைத்தார். இந்தமுறை கிளர்ச்சி பலமாதங்கள் கடந்தும் ஆறுவதாகக் காணோம். தற்போதைக்கு எரியவில்லையே தவிர, புகைந்து கொண்டேயிருக்கிறது. டெல்லியில் இந்திராவைப்போலவோ ஹைதராபாத்தில் ராஜசேகர ரெட்டியைப் போலவோ சாலக்காக கையாளுவோர் (பீமீயீt லீணீஸீபீறீவீஸீரீ) எவரும் இல்லை. இரண்டு கேள்விகள் – கிரேக்கப் புராணத்தில் வரும் டெமோ கிளின் கத்தி (ஞிணீனீஷீநீறீமீs’ sஷ்ஷீக்ஷீபீ) போல் தலைக்குமேல் தொங்கிக் கொண்டிருக்கும்போது வெளிநாட்டிலிருந்தும் சரி உள்நாட்டிலிருந்தும் சரி, முன்போலப் பெரிய முதலீடுகள் வருவதில்லை. போனவருடம் வரை அசுரவேகத்தில் வளர்ந்து வந்த ஹைதராபாத் அம்முதலீடுகளை பெங்களூருக்கும் சென்னைக்கும் இழந்துவிட்டு ஸ்தம்பித்து நிற்கிறது. முதலீட்டாளரைத் தயங்க வைக்கும் அவ்விரண்டு வினாக்கள்: ஒன்று: இன்றைய ஆந்திரப் பிரதேசம் ஆந்திரம், தெலுங்கானா என்று பிரிக்கப்படுமா.? இரண்டாவது கேள்வி (அவர்களுக்கு இன்னும் முக்கியமானது): பிரிக்கப்பட்டால் ஹைதராபாத்தின் அந்தஸ்து என்ன? தெலுங்கானாவைப் பிரிப்பதில் மத்திய அரசுக்குப் பல கஷ்டங்கள் இருக்கின்றன. 1. இதைக் கொடுத்தால் விதர்ப்பா, கூர்க்காலாந்து என்று பக்கம் பக்க மாக பிரிவினைக் கிளர்ச்சிகள் வீறு கொண்டு எழும்பும். அது பெரிய தலைவலி. 2. பிரிவினை நதிநீர் பங்கீடு முதல் பல விஷயங்களிலும் சச்சரவுக்கு வழிவகுக்கும். 3. ஆந்திரர்கள் தெலுங்கானா பிரிய சம்மதிக்கலாம், ஆனால் பெரிதும் அவர்களால் (அவர்களுடைய முதல், அவர்களின் தொழில்திறன்) வளர்ந்த ஹைதராபாத் பெரு நகரை இழக்கச் சம்மதிக்கமாட்டார்கள். ஹைதராபாத்திலேயே பிறந்து வளர்ந்த இரண்டாவது தலை முறை பல லட்சம் ஆந்திரர்கள் பெருநகரில் இருக்கின்றனர். தொழிலதிபர்களில் முக்கால்வாசியும் அவர்களே. நகரம் தெலுங்கானவுக்குப் போனால் அவர்களுக்கு நியாயம் கிடைக்காதென்று அஞ்ச இடமிருக்கிறது. இதற்கெல்லாம் ஒரு தீர்வு, நகரை யூனியன் பிரதேசமாக்கி இரண்டு மாநிலங்களுக்கும் தலைநகரமாக்குவது. அப்படியிருந்தால்தான் முதலீட்டாளர்களும் தொழில் வளர்ச்சியும் திரும்புவதற்கும் ஏதுவாகும். 3. இதிலும் சில சிரமங்கள் இருக்கின்றன. அ. சண்டீகரைப் போலன்றி இத்தலைநகர் இரு ராஜ்யங்களுக்கு மத்தியில் அமையாமல், தெலுங்கானாவுக்கு நட்டநடுவே ஆந்திரத்திலிருந்து நூறுமைல் தூரத்திலிருக்கும். ஆ. தெலுங்கானர்கள் இதை எதிர்ப்பார்கள். மொத்தத்தில் பார்க்கும்போது ஸ்ரீகிருஷ்ணா ரிப்போர்ட் எப்படியிருந்தாலும் டெல்லி அரசு தெலுங்கானாவைத் தள்ளிப் போட்டுக் கொண்டே போகக்கூடும். அதற்கு இருக்கும் ஒரு அனுகூலம், நாடாளுமன்றம், ஆந்திர சட்டசபை இரண்டிற்குமே இன்னும் மூன்றரை ஆண்டுகளுக்குமேல் ஆயுள் இருப்பது. அதற்குள் எவ்வளவோ நடக்கலாம், அப் புறம் பார்க்கலாம் என்ற யோசனை இருக்கிறாற்போல் தெரிகிறது. அடிக்குறிப்பு
|
எஸ். ராமகிருஷ்ணன் : ஏற்புரை
போர்ஹேஸ் கூறுவார். “உலகத்திலேயே மிகச் சிறந்த கற்பனா கதாபாத்திரங்கள் வாசகர்கள்தான்’’ என்று. வாசகன் என்கிற முகமூடிதான் மிக எளிமையானது. அதை எப்போது வேண்டுமானாலும் மாட்டிக்கொள்ளலாம். மார்க்வெஸ், தஸ்தாயெவ்ஸ்கி ஆகியோர் முன் இன்றும் நான் வாசகன்தான். ஒரு ஷேக்ஸ்பியரைப் படிக்கிறீர்கள் என்றால் உங்களுக்குள்ளும் ஒரு ஷேக்ஸ்பியர் இருக்கிறார் என்றுதானே அர்த்தம்.
என்னுடைய கட்டுரைகள் புனைவுகள் சார்ந்து எழுதப்படுகின்றன. புனைவுகள் ஒரு எழுத்தாளனுக்கு பல சாத்தியங்களை, பரிசோதனை முயற்சிகளை வழங்குகிறது.
ஒரு மனிதன் எல்லாவற்றையும் சீக்கிரம் மறந்து விடுகிறான். நினைவுகள்தான் தொடர்ந்து ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கிறது. எழுத்தாளர்கள் தொடர்ந்து அதைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள். எழுத்தாளன் உலகத்துக்கு எதிராக எதிர்வினை தொடுக்கிறான். அந்த எதிர்வினையை உண்மையாகச் செய்கிறான். அதில் பாசாங்கு இல்லை. போலித்தனம் இல்லை. எப்போதுமே எழுத்தாளன் தன் அகக்குரலுக்கு பயப்படுகிறான். இன்று தமிழில் எழுதப்படும் அனைத்து படைப்பாளிகளின் எழுத்துகளிலும் முன்னோடிகள் இருக்கிறார்கள். அவர்களின் மரபு தொடர்கிறது. இன்று வெளியிடப்பட்ட நான்கு நூல்களிலுள்ள கட்டுரை மற்றும் கதைகள் நான் இந்த உலகத்தின் மீது காட்டும் எதிர்வினை அல்லது அக்கறை என்று சொல்லலாம்.
எஸ்.வி.ராமகிருஷ்ணன் கட்டுரைகள் – 0 1
கும்பகோணம் சென்ற போது ஒரு ஹோட்டலில் திரு எஸ்.வி.ராமகிருஷ்ணனை எதேச்சையாக சந்தித்து கொஞ்சம் நேரம் பேசிக்கொண்டிருந்தேன். “நீங்கள் சமீபத்தில் எழுதிய கட்டுரைகளை எனக்கு அனுப்பினால் சந்தோஷப்படுவேன்” என்றேன். மறக்காமல் அவைகளை எனக்கு மூன்று கட்டுரைகளை மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்தார். என் வலைப்பதிவில் அவைகளை பதிவு செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன். முதலில் ‘மொட்டைக் கடுதாசி’
மொட்டைக் கடுதாசி – எஸ்.வி.ராமகிருஷ்ணன்
சுமார் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் கவர்னர் ஜெனரல் டல்ஹெளஸி பிரபு மலிவுத்தபால் முறையை அறிமுகப்படுத்தியதிலிருந்து தொடங்கி இந்தியா முழுவதும் செழித்து வளர்ந்ததொரு பயிர் மொட்டைக் கடுதாசி. சுமார் நான்கு தலைமுறைகளுக்கு (120 வருடங்கள்) ஆயிரக்கணக்கான திருமணங்களை வெற்றிகரமாக நிறுத்தியும் பல்லாயிரக்கணக்கானவர்களின் (குறிப்பாகப் பெண்களின்) வாழ்க்கையை நாசமாக்கியும் அட்டகாசமாகக் கொடிகட்டி பறந்தது இந்தப் பழம்பெரும் institution. பின்னர் பிரதாபம் மங்கத் தொடங்கிய மொட்டைக் கடிதம் இன்று மட்கி மட்கி மடியும் தருவாய்க்கே வந்திருப்பதாகத் தெரிகிறது. ஏனாம்? ஆராய்ந்து பார்த்தால் கிடைக்கும் பதில் இன்னும் வினோதமாக இருக்கிறது. காலம் என்ற பரிமாணமே காலங்காலமாக இருந்தாற்போல் இல்லையாம். காலமே அவசரக் கோலம் கொண்டு சுருங்கிவிட்டதாம். அதாவது எவருக்கும் நேரம் இல்லையாம். பொழுதைப் போக்க வழியில்லாமல் வம்பு பேசி மகிழ்த நாட்கள் போய் இப்போது யாருக்குமே அவகாசம் இல்லாமற் போய்விட்டதாம். மொட்டைக் கடுதாசிகள் தயாரிப்பதற்கு வேண்டிய ஓய்வோ அவகாசமோ இல்லாமற் போய்விட்டதாம். உலகமே அமெரிக்காவாகி இந்தியா முழுவதும் பம்பாய் ஆகிவிட்டதாம். இந்த நிலையில் மறைந்து வரும் மொட்டைக் கடுதாசியைப் பேணி வளர்ப்பதில் எவருக்கும் அக்கறை இல்லையென்றால் அதில் அதிசயமும் ஏமி லேது தான்.
நூறாண்டு முன் வந்த (அந்தக்காலத்தில் நவீனம் என்று அழைக்கப்பட்ட) தமிழ் நாவல்கள் பலவற்றிலும் – உதாரணம் : பத்மாவதி சரித்திரம் (1898 -1900)** – ஒரு சோப்ளாங்கி வில்லன் ஒரு மொட்டைக்கடிதம் மூலம் கதை வளர வித்திடுவான். ஐம்பது அறுபது ஆண்டுகள் முன்னால் தமிழ் சினிமாக்களில் கதாநாயகிகளுக்கு கல்யாணம் நிச்சயமானவுடன் மனோகர், நம்பியார் (அல்லது கள்ள பார்ட் நடராஜனாகக் கூட இருக்கலாம்) போன்ற வில்லன்கள் ‘டாண்’ என்று காரியத்தில் இறங்குவார்கள். அவர்கள் காட்டும் முதல் கைவரிசை அநேகமாக மொட்டைக் கடிதம் எழுதுவதாகத்தானிருக்கும் சில சமயங்களில் அதற்கு நேரம் இல்லாமற் போனால் நேராக முகூர்த்ததில் ஆஜராகி தாலிகட்டும் தருணத்தில் ‘நிறுத்து’ என்று கூச்சலிட்டுக்கொண்டு போய் வாய்வழியாக அபவாதம் ஏதேனும் சொல்லுவதும் உண்டு. ஆனால் மொட்டைக் கடுதாசி மாதிரி வராது, செலவும் குறைவு. விஷம் மாதிரி வேலை செய்யும். வைத்தவர்கள் பெயர் வெளியே தெரியாமலேயே இருக்கவும் முடியும்.
ஆமாம் அரையணா (3 பைசா) கூடப் போதும். மிஞ்சிப் போனால் ஒன்றரையணா (9 பைசா) கவர். இருப்பதையும் இல்லாததையும் எழுதி அடியில் ‘உண்மை விளம்பி’ ‘உன் நலம் நாடுபவன்’ என்று ஏதாவது எழுதினால் வேலை முடிந்து போகும். கும்பகோணத்திலிருந்து ஒரு மாப்பிள்ளை வீட்டார் கோயம்புத்தூர் வந்து பெண்ணைப் பார்த்திருப்பார்கள். சம்பிரதாயமாக சொஜ்ஜி பஜ்ஜி தின்று சம்மதமும் சொல்லியிருப்பார்கள். பெண்ணுக்காகக் கொட்டாவி விட்டுக்கொண்டிருக்கும் உள்ளூர்க்கார சோதா ஒருவன் – அவன் பெண்ணுக்கு முறைப் பையனாகவும் இருக்கக்கூடும் – பெண்ணின் நடத்தை சரியில்லை என்றும் அவளுடைய காதலன் ஒருவன் சேலத்தில் இருப்பதாகவும் அவனுக்குக் கொடுக்க இஷ்டப்படாத பெற்றோர்கள் அவசரமாக விவரம் அறியாத தூரதேசப் பார்ட்டியைத் தேடி திருமணம் நிச்சயத்திருப்பதாகவும் ஒரு போடு போடுவான். “தீர விசாரித்தால் உண்மை விளங்கும்” என்று வேறு சேர்த்திருப்பான். சம்பந்திமார்கள் குழம்பிப் போவார்கள். சரி நமக்கெதற்கு வம்பு? இவளை விட்டால் வேறு பெண் இல்லையா என்று பையனின் அம்மா அபிப்பிராயப் படுவாள். கடைசியில் அவ்வாறே தீர்மானிக்கப்பட்டு “எங்கள் குலதெய்வத்துக்கு முன் பூக்கட்டி பார்த்தோம் சரியாக வரவில்லை. மன்னிக்கவும்” என்று ஒரு புருடா விடப்படும். பெண்வீட்டார் நிலை குலைந்து போவார்கள். இரண்டு மூன்று முறை இப்படி நிச்சயமாகி நின்று போனால் அதற்கப்புறம் அந்தப் பெண்ணுக்கு கல்யாணம் ஆவதே கஷ்டம்தான். ஏனென்றால் ஊராரே ‘கசமுச’ வென்று பேசத்தொடங்கி விடுவார்கள். உலை வாயை மூடினாலும் ஊர் வாயை முடமுடியுமா?இந்த நிலையில், இதுவரை எட்டாத பழத்துக்கு ஏங்கிக் கொட்டாவி விட்டுக் கொண்டிருந்த முறைப்பையனின் மடியிலேயே பழம் விழுவதற்கு நிறையவே வாய்ப்பு உண்டு.
சுவாரசியமான ஒரு இன்ஸ்ட்டியூஷன் நம்மிடையில் இருந்து மறைந்து கொண்டிருக்கிறது என்பது தெரிகிறது. அது உண்மையில் இழப்புதானா என்பது வேறு விஷயம். முன்னாளில் கதாசிரியர்களுக்கும் சினிமாக்காரர்களுக்கும் ரெடியாக எப்போதும் கைவசம் இருந்த ஒரு ப்ளாட் கை நழுவிப்போனது என்னவோ உண்மை !
** மாதவையாவின் இந்த நாவல் முதல் பாகம் 1898 லும் இரண்டாம் பாகம் இரண்டு ஆண்டுகள் கழித்தும் வெளி வந்தது.
பட்டக்காரர் சப்ளை – எஸ்.வி.ராமகிருஷ்ணன்
மொட்டைக் கடுதாசியை தொடர்ந்து மேலும் ஒரு கட்டுரை –
பட்டக்காரர் சப்ளை – எஸ்.வி.ராமகிருஷ்ணன்
தாராபுரம் போர்டு ஹைஸ்கூலில் வருடத்திற்கு ஒரு முறை எங்கள் (மாணவர்களின்) பார்வையில் மிக முக்கியத்துவம் வாய்ந்த நாள் ஒன்று வரும். அதுதான் ‘பட்டக்காரர் சப்ளை’.
பட்டக்காரர் என்றால் என்னவென்று கொங்கு நாட்டிற்கு வெளியே பிறந்து வளர்ந்தவருக்குத் தெரியாமல் இருக்கக்கூடும். பட்டக்காரர் என்பவர் கொங்கு மண்ணின் பிரதான மைந்தர்களான கவுண்டர்களின் சமூகத்தலைவர் எனலாம். நிலப்பிரபுத்துவ காலத்திலிருந்து வந்த ஒரு பட்டம், பதவி. பழைய கோட்டைப் பட்டக்காரர் நல்ல சேனாதிபதி சர்க்கரை மன்றாடியார் காமராஜர் மந்திரிசபையில் அங்கம் வகித்தது பலருக்கும் நினைவிருக்கலாம். தாராபுரத்தில் இருந்தவர் சங்கரண்டாம்பாளையம் பட்டக்காரர். அவருக்குத் தாராபுரம் அனுமந்தராயர் அக்கிரஹாரத்தில் மாளிகை போன்றதொரு வீடு உண்டு. பட்டக்காரர் அவ்வப்போது அங்கே வந்து போவாரே ஒழிய அவர் வசித்தது சங்கரண்டாம்பாளையத்தில்தான். வங்காளம் போல் நிலப்பிரபுக்களும் ஜமீந்தார்களும் தங்கள் சிற்றூரில் வதியாது நகரங்களிலேயே உல்லாசமாக் காலங்கழிக்கும் வழக்கம் அந்தக் காலத்தில் தமிழ்நாட்டில் வந்திருக்கவில்லை#. கவுண்டர் சமூகத்தைச்சேர்ந்த பிள்ளைகள் சிலர் பட்டக்காரர் வீட்டிலேயே தங்கி ஹைஸ்கூலில் படித்தார்கள்.
பட்டக்காரரின் ஒரே மகன் தாராபுரம் ஹைஸ்கூலில் படித்துவந்தவன், சில ஆண்டுகளுக்கு முன் (1930களில்) தவறிவிட்டான். இது நடந்து ஆண்டுகள் பல ஆகிவிட்டாலும், பட்டக்காரர் அந்தப் பையனின் ஞாபகர்த்தமாக அவனுடைய பிறந்த நாளில் பள்ளி மாணவ, மாணவியர்க்குத் தின்பண்டங்கள் அனுப்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அன்று காலையில் பியூன் வெங்கட்டப்பன் எல்லா வகுப்புகளுக்கும் ஒரு சர்குலர் கொண்டு வருவான். பிற்பகல் இரண்டாவது பீரியடில் பட்டக்காரர் சப்ளை இருக்கும் என்றும் அதற்குப் பிறகு பள்ளிக்கூடம் இருக்காது என்றும் அதில் கண்டிருக்கும். மதியம் உணவு இடைவேளைக்குப் பிறகு முதல் பீரியடு(2.15 லிருந்து 3 மணி) சுமாராக நடக்கும். அப்போதே பையன்களின் மனதெல்லாம் எதிர்பார்ப்பில் லயித்து இருக்கும்.
இரண்டாவது பீரியடு தொடங்கினவுடனே சாரதா விலாஸ் ஹோட்டல் ஆட்கள் கூடை கூடையாக இனிப்புகளைச் சுமந்துகொண்டு ஒவ்வொரு கிளாஸாக வருவார்கள். அடுத்த வகுப்பிற்கு அவர்கள் வந்தது தெரிந்தவுடனே எங்கள் கிளாஸிலும் கசமுசவென்று சத்தம் தொடங்கிவிடும். இந்த ஒருநாள், வாத்தியார்களும் அதற்க்கெல்லாம் ஒன்றும் சொல்ல மாட்டார்கள். அடுத்தது கூடைகள் எங்கள் வகுப்புக்கும் வந்து விடும். ஆசிரியருக்கு முன்பக்கத்தில் கூடைகளை வைத்துக்கொண்டு ஹோட்டல்காரர்கள் ஒவ்வொரு பையனுக்கும் ஒரு லட்டு, ஒரு ஜாங்கிரி, ஒரு மைசூர்பாகு, தவிர பக்கோடா, காராபூந்தி இத்தனையும் விநியோகிப்பார்கள். அவற்றை வாங்கிக்கொண்டு குழந்தைகள் தலை கால் புரியாத சந்தோஷத்துடன் வீட்டுக்கு ஓடுவார்கள். வாத்தியார்களுக்கும் உண்டென்பதால் அவர்களுக்கும் சந்தோஷமே. பட்டக்காரர் இருந்தவரை வருடா வருடம் இதை சிரத்தையுடன் செவ்வனே செய்து நூற்றுக்கணக்கான பிஞ்சு உள்ளங்களில் உவகையை வரவழைத்து வந்தார். துரதிர்ஷ்டவசமாக (1952 ல் என்று நினைக்கிறேன்) ,பட்டக்காரர் ஒரு முறை பழனி மலைக்குப் போய் பிராகாரத்தை வலம் வந்து கொண்டிருக்கையில் அவருடைய எதிரிகள் யாரோ திடீரென்று அவரை மறித்துக் கத்தியால் வெட்டி விட்டார்கள். அவர் ஸ்தலத்திலேயே மரணமடைந்தார். அத்துடன் ‘பட்டக்காரர் சப்ளை’யும் நின்று போனது.
# வங்காளத்தில் இதனாலேயே கல்கத்தா பூதாகரமாக வளர, மீதி வங்காளம் முழுவதிலும் கோவை, மதுரை போன்ற பட்டணங்கள் வளரவில்லை.
கல்யாண ஊர்வலம்
கல்யாண ஊர்வலம் – எஸ்.வி.ராமகிருஷ்ணன்
ஐம்பது அறுபது வருடங்களுக்கு முன் கல்யாண ஊர்வலம் என்று ஒரு கண்கொள்ளாக் காட்சி அடிக் கடி காணக் கிடைத்தது, ஆடி மாதம், மார்கழி மாதம் போன்ற சில காலங்களைத் தவிர. கல்யா ணத்துக்கு முன் தினம் ‘மாப் பிள்ளை அழைப்பை’ (ஜான வாசம் என்றும் சொல்வதுண்டு) ஒட்டி மாப்பிள்ளையைத் திறந்த காரில்1 உட்கார வைத்து ஊர்வலமாக (வழக்குச் சொல்லில் இது சில சம யம் ‘ஊர்கோல’மாகவும் திரிந்தது) அழைத்துச் செல்வார்கள்.
நன்றாக இருட்டின பின்னர் தான் ஊர்வலம் நடைபெறும். பெண்கள் கலர்கலரான பட்டுப் புடவைகள் சரசரக்க, அவற்றின் ஜரிகையானது கியாஸ் விளக்கின் ஒளியில் பளபளக்க, மல்லிகைப் பூவின் நறுமணத்தைப் பரப்பிக் கொண்டு காருக்குப் பின் நடப்பார் கள். கார் இரண்டாவது கியரில் ஆமை வேகத்தில் நகர்ந்துகொண் டிருக்கும். முன்னாலும் பின்னாலும் கியாஸ் விளக்குகளைச் சுமக்க முடி யாமல் சுமந்துகொண்டு கூலிக்காரர் கள் நடப்பார்கள். அது ஒரு பெரிய சைஸ் பெட்ரோமாக்ஸ் விளக்கே. மிகவும் பிரகாசமான ஒளியையும் மண்ணெண்ணை மணத்தையும் ஒருங்கே பரப்பிக்கொண்டிருக்கும். ஆனால் அந்த மண்ணெண்ணை வாசம் மல்லிகை மணத்தோடு இழைந்து சுகந்தமான ஒரு நறு மணமாகவே தோன்றும். அந்த வாசனை இல்லாமல் கல்யாண ஊர்வலங்கள் பரிமளிக்க முடியாது.
அந்தக் காலத்தில் கார் என்பது அபூர்வமான வஸ்து. பல குழந்தை கள் காரிலே ஏறியிருந்திருக்கக்கூட மாட்டார்கள். அதனால் ஊர்வலத்துக்குக் கார் வந்து நின்ற உடனேயே, கல்யாணத்துக்கு வந்த குழந்தைகள், முக்கியமாக மாப்பிள்ளை வீட்டைச் சேர்ந்தவர்கள் காணாதது கண்ட மாதிரி ஓடி வந்து அதை ஆக்கிரமித் துக்கொள்வார்கள். அப்புறம் மாப் பிள்ளை வரும்பொழுது அவருக்கு பின் ஸீட்டில் எப்படியோ இடம் பண்ணிக் கொடுப்பார்கள். ஊர் வலம் தொடங்கும்போது அவருக்கு இரண்டு பக்கமும் உறவின வாண்டு கள் பெருமை தலைகொள்ளாமல் நெருக்கியடித்துக்கொண்டு உட்கார்ந்திருக்கும். முன் ஸீட்டில் டிரைவரின் நிலை நெருக்கடி நிலை தான். பரம்பரை பாத்தியதை என் பது போல இது விஷயத்தில் குழந்தைகளுக்கு ஒரு உரிமை இருந்தது. தீபாவளிக்குப் பட்டாஸ் மாதிரி இந்தக் குழந்தைப் பட்டா ளம் இல்லாது மாப்பிள்ளை ஊர் வலம் கிடையாது; சோபிக்கவும் சோபிக்காது.
சாதாரணமாக மாப்பிள்ளை வெளியூர்க்காரராக இருப்பார் என் பதால் அவர் எப்படி இருக்கிறார் என்ற ஆவல் ஊர்க்காரர்கள் எல் லோருக்கும் உண்டு. ஆகவே ஊர் வலம் போகும் வீதிகளில் எல்லோர் வீட்டு வாசற்படிகளும் நிறைந்து காணப்படும்.
முதல் நாள் ஊர்வலத்தில் மாப்பிள்ளை மட்டும்தான் என்றால் அடுத்த நாள் திருமணம் ஆன பிறகு ராத்திரி ஊர்வலம் இன்னும் வெகு ஜோராக இருக்கும். இதில் பெண் மாப்பிள்ளை இருவரும் ஜோடியாக அமர்ந்திருப்பார்கள். அநேகமாக அதே காராகத்தான் இருக்கும். புஷ்ப அலங்காரங்கள் கொஞ்சம் அதிகமாக இருக்கக்கூடும். ஊர் வலத்துடன் போகும் கூட்டம், வேடிக்கை பார்த்து நிற்கும் கும்பல் இரண்டுமே இன்று கூடுதலாக இருக்கும். “நல்ல ஜோடிப் பொருத் தம்” என்று மகிழ்பவர்களையும் மனதார வாழ்த்துபவர்களையும் தவிர பார்த்து வயிறு எரிபவர்களும் ஊர்க்காரர் கூட்டத்தில் இருப்பர். கல்யாண விருந்தினாலோ அலைச்ச லினாலோ அடுத்த நாள் மணமக்க ளில் யாருக்காவது உடல்நிலை சற்று பாதிக்கப்பட்டால் “பொல்லாதவர் களின் கண்கள்தாம் காரணம்” என்று சொல்லப்படுவது வழக்கமா யிருந்தது.
நாற்பதுகளுக்கும் முந்தின காலத்தில் ஊர்வலத்திற்காக சாரட்டு வண்டிகளும் நிறைய இருந் திருக்க வேண்டும். சில ஊர்களில் இன்னும் கொஞ்சம் பாக்கி இருந் தன. 1950ல் திண்டுக்கல்லில் ஒரு திருமணத்திற்குப் போயிருந்தேன். பெண்ணின் தந்தையால் “விசாரித் துக் கொண்டு வா” என்று அனுப் பப்பட்டவர் திரும்பி வந்து, “கார் 30 ரூபாய், சாரட்டு (அலங்காரக் குதிரை வண்டி) 12 ரூபாயாம்” என்று ரிப்போர்ட் கொடுத்தார். காதைத் தீட்டிக்கொண்டு ஒட்டுக் கேட்டுக்கொண்டிருந்த நான் ‘அழகான சாரட்டை விட்டுவிட்டுக் கூடப் பணமும் கொடுத்து ஓட் டைக் கார் யாராவது வைப்பார் களா’ என்று எண்ணினேன். எங்கள் ஊரில் சாரட்டு கிடையாது. நான் சாரட்டு ஊர்வலத்தைப் பார்த்த தில்லை. ஆகையால் என் சொந்த நலனும் இதில் கலந்திருந்தது என்னவோ உண்மை. பெண்ணைப் பெற்ற தகப்பனார் பிசினஸ் கொஞ்சம் நொடித்துப் போய் பண முடையில் இருந்தார் என்றும் நான் கேள்விப்பட்டிருந்ததனால் பதி னெட்டு ரூபாயை மிச்சம் பண்ணி ராஜாராணி காலம் போல் சாரட்டை ஏற்படுத்துவார் என்று நம்பிக்கையோடு காத்திருந்தேன். இரண்டு நிமிஷம் யோசனை செய்த வர் “சரி, காரே இருக்கட்டும்” என்று சொல்லிவிட்டார். எனக்குத் தலை யில் இடி விழுந்தாற் போலிருந்தது. என்ன செய்வது? அன்று நான் இழந்த சாரட்டு ஊர்வலம் காணும் பாக்கியம் அப்புறம் என்றுமே வாய்க் கவில்லை. மத்திய அறுபதுகளில் நடந்த என் கல்யாணத்துக்கு சாரட்டு வர ‘சான்ஸ்’ உண்டா என்று ஜாடைமாடையாக, ஆனால் ரொம்ப நம்பிக்கையில்லாமல்தான் விசாரித்துப் பார்த்தேன். சாரட்டு என்பது சரித்திரம் ஆகிவிட்டது என்று தெரிய வந்தது.
ஊர்வலத்தைப் பற்றிய கதையை ‘மாப்பிள்ளை டிரஸ்’ பற்றி இரண் டொரு வார்த்தைகள் சொல்லாமல் முடிக்க முடியாது. மாப்பிள்ளை அழைப்பு என்றால் கோட்டு, ஸ¨ட்டு, டை (எல்லாம் மாப்பிள் ளைக்கு மாமனாரின் உபயம்) இன்றி யமையாத அயிட்டங்கள். அவற்றை அணிந்துதான் மாப்பிள்ளை முறுக்குடன் பவனி வருவார். சில மாப்பிள்ளைகளுக்கு ஸ¨ட்டும் ‘டை’யும் அணிவது முதல் தடவை யாகவே இருக்கும்.2 பலருக்கும் தெரிந்தவர் யாராவது டை கட்டி விடுவார்கள். அந்தக் காலத்தில் டெரிலீன் டெரிவுல் போன்ற துணி கள் கிடையாது. கசங்காமல் இருக்க வேண்டும் என்றால் உல்லனே உத்த மம். ஸ¨ட் என்பது ‘ஆயுள் பரியந் தம்’ (ஆயுள் முழுவதும்) வைத்துக் கொள்ள வேண்டியதாகவும் கருதப் பட்டது. அதனால் பெரும்பாலும் ‘மாப்பிள்ளை டிரஸ்’ கம்பளி ஆடையால்தான் தைக்கப்பட்டது. தமிழ்நாட்டின் சீதோஷ்ணத்துக்கு அவ்வளவு ஏற்புடையதில்லைதான். அதுவும் கல்யாணம் சித்திரை மாதத்தில் இருந்தால், மாப்பிள்ளை யானவர் குழந்தைகளின் கும்பலின் நடுவே வியர்க்க வியர்க்க உட்கார்ந் திருப்பது காண்போர் மனத்தைக் கரைக்கக்கூடியதொரு காட்சி.
_________________________________________________________________________________
(1. அதாவது டூரர் டாப் என்ற, கேன்வாஸ் துணியால் ஆன கூரையைக் கொண்ட வண்டி. பழைய மாடல்களில் சகஜமாகக் காணப்பட்ட இது பிற்காலத்தில் ஏனோ அருகிப்போயிற்று. நாற்பதுகளில் இருந்தே வெளிவருவது அபூர்வமாயிற்று. வெயிலையும் வெப்பத்தையும் இன்றைய கார்களை விட அது நன்றாகவே சமாளித்தது என்று தோன்றுகிறது.
2. இதற்கும் முந்தின காலத்தில் கோட்டு அணிவது பரவலாக இருந்திருக்கிறது. ஆனால் ஸ¨ட் அபூர்வம். நாற்பதுகளில் இருந்து கோட்டும் மிகக் குறைந்துவிட்டது.)
அது அந்தக் காலம்
சமீபத்தில் சென்னை புத்தகக் கண்காட்சியில் சில புத்தகங்களைத் தேடி வாங்கினேன். அப்படி வாங்கிய புத்தகங்களில் “அது அந்தக் காலம்” என்ற புத்தமும் ஒன்று.
நான்கு மாதம் என்று நினைக்கிறேன். உயிர்மையில் எஸ்.வி.ராமகிருஷ்ணன் அவர்கள் “ரயில் பிரயாணத்தின் கதை” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார். மிகவும் நல்ல கட்டுரை. அடுத்த மாதம் அசோகமித்திரன் “இரயில் பயணங்களில்” என்று அதைத் தெடர்ந்து எழுதினார். இது ஒரு போனஸாக அமைந்தது.
நண்பர் மனுஷ்ய புத்திரனிடம் எஸ்.வி.ராமகிருஷ்ணனின் மற்ற கட்டுரைகள் கிடைக்குமா என்று விசாரித்ததில், இவரின் கட்டுரை தொகுப்பு ஜனவரியில் வரவிருப்பதாகச் சொன்னார்.
எஸ்.வி.ராமகிருஷ்ணன் பற்றி …
எஸ்.வி.ராமகிருஷ்ணன் 1936இல் கோவை மாவட்டம் தாராபுரத்தில் பிறந்தவர். சரித்திரமும் சட்டமும் பயின்ற ராமகிருஷ்ணன் சுங்க ஆனையாளராக இந்தியாவின் பல பகுதிகளிலும் பணிபுரிந்து, முதன்மை ஆனணயாராக ஓய்வுபெற்றார். தற்போது ஹைதராபாத்தில் வசித்துவருகிறார். தமிழின் முன்னணி இதழ்களில் கடந்தகால இந்தியாவைச் சித்தரிக்கும் கட்டுரைகளை எழுதியுள்ள இவரது முதல் கட்டுரைத் தொகுப்பு “அது அந்த காலம்”
இவர் எழுதிய கட்டுரைகள் – ஓம்சக்தி, துக்ளக், தினமணி, கணையாழி, உயிர்மை, போன்ற தொப்புள் சமாச்சாரம் இல்லாத பத்திரிக்கைகளில் வந்தவை.
புத்தகத்தில் 1940கள் காலத்தை அழகாகச் சித்தரிக்கிறது. இன்னும் சொல்லப் போனால், அந்தக் காலத்தில் நான் இல்லையே என்று ஏங்க வைக்கிறது. பல வரலாற்றுச் செய்திகள், மிகைப்படுத்தப்படாமல் மெலிதான நகைச்சுவையுடன் சொல்லியுள்ளார். இந்தப் புத்தகத்தை படித்த போது ஒரு வயதானவர் தன் அனுபவத்தை எனக்குச் சொல்லதாகவே எனக்குத் தோன்றியது.
[ … அப்போது மிக சிலரே கார் வைத்துக்கொண்டிருந்தனர். அவற்றுக்கு ரேஷன் முறையில் கொஞ்சம் பெட்ரோல் கொடுத்த அரசாங்கம், பேருந்துகளுக்கு அடியோடு மறுத்துவிட்டது. விளைவு, எல்லா பஸ்களும் அடுப்புக் கரியில் ஓடின. பஸ்களுக்கு பின் ஒரு ‘டிராம்’ இணைக்கப்பட்டிருக்கும். அதில் கரியை கொட்டி, வண்டி கிளம்புவதற்கு ஒரு மணி நேரம் முன்னால் குமுட்டி அடுப்பு போல பற்ற வைப்பார்கள்….]
சில விஷயம் நாம் கேள்விப்படாதது
[… கஸ்தூரிபாவின் உடல் தகனம் செய்யப்பட்டு சில மணி நேரம் கழித்து சிதையில் கஸ்தூரிபாவின் இரண்டு கண்ணாடி வளையல்கள் மட்டும் முழுதாகவும் நிறம் மாறாமலும் இருப்பதைக் கண்டு ஓடோடி வந்து காந்திஜியிடம் சொன்னார். அதை நம்ப மறுத்த மகாத்மாவிடம் நேரில் வந்து பார்க்குமாறு மன்றாடினார். காந்திஜி போய்ப் பார்க்கையில் அவ்வாறே கிடக்கக் கண்டார். கஸ்தூரிபா ஒரு சிறந்த பதிவிரதையாதலால் இப்படி நடத்திருக்கிறது என்று கருதிய காந்திஜி அவற்றை எடுத்துப் பத்திரமாகப் போற்றி வைத்துக்கொண்டார்…]
காலம் எப்படி மாறியுள்ளது என்று இதைப் படித்தால் புரியும்
[ … பல நகரங்களும் சிற்றூர்களும் நதிக்கரையிலேயே அமைந்திருந்தன அதில் சென்னையும் அடக்கம். சென்ற நூற்றாண்டில், தான் தினந்தோறும் கூவம் ஆற்றில் குளித்துவிட்டுக் கோயிலுக்குப் போனதாகப் பச்சையப்ப முதலியார் எழுதிவைத்திருக்கிறார். ஆனால் இக்கட்டுரையை நாம் படித்துக்கொண்டிருக்கும் காலத்திலேயே கூவம் முழுச் சாக்கடையாகவே மாறிவிட்டிருக்கிறது. நல்ல வேளையாக இந்தக் கதி காவேரி, தாமிரவருணி, அமராவதி போன்ற நதிகளுக்கு வந்த்திருக்கவில்லை…]
தண்ணீர் பற்றி அவர் எழுதியுள்ளது சிந்தனையைத் தூண்டுவதாக உள்ளது
[… வீட்டுக் கிணற்றில் இருந்து எடுத்த தண்ணீரைத் தையரியமாக அப்படியே குடிக்கலாம். ஆற்று நீராக இருந்தால் காய்ச்சிக் குடிப்பது நல்லது என்று சொன்னார்கள். கோடைகாலத்தில் ஆற்றில் நீர் மட்டம் குறைந்த போதும் ஊரில், டைப்பாய்டு வியாதிகள் பரவிய சமயங்களில் சுகாதார இலாகாவினர் இதை வலியுறுத்தினார்கள்……மாடும் மனிதனும் குளிப்பதும், துணி துவைப்பதும் அன்றைய அசுத்தங்கள்….அறுகள் இந்தச் சின்ன அழுக்குகளை ஜீரணம் செய்துகொள்ள முடிந்தது…இன்றைய நதிகள், வரலாற்றில் காணாத இன்றைய ராட்சஸ ஆலைகளின் கழிவுகளால் வந்த அஜீர்ணத்தால் துடித்துக்கொண்டிருக்கின்றன…. சுவையான குடிநீருக்குத் தட்டுப்பாடு உள்ள இடங்கள் சிலவற்றில் இன்னொரு தண்ணீர் சப்பளை இருந்தது. அது எஸ்.ஐ.ஆர். என்று அழைக்கப்பட்ட தென்னிந்திய ரயில்வே கம்பெனியாரின் உபயம். …சிறு சிறு ஸ்டேஷன்களில் குப்பம்வாழ் ஏழைமக்கள் சட்டிபானைகளோடு தண்ணீருக்கு வந்து நிற்பார்கள். என்ஜின் டிரைவர்கள் கரிசனத்தோடு இவர்களுக்கு என்ஜின் பாய்லரில் கொதித்த வெண்ணீரைத் தாராளமாக வழங்குவார்கள்….]
சில தகவல்கள் ஓ அப்படியா என்று வியக்க வைக்கிறது.
[…நெல் குத்தினால் வரும் அரிசி மனிதனுக்கு உணவென்றால், தவிடு மாட்டுக்கு முக்கியமான உணவு. முன்றாவதாக வரும் உமிக்கும் உபயோகம் உண்டு. உமியைக் குவித்து அதில் ஒரு தணலை வைத்துவிட்டால் அது கொஞ்சம் கொஞ்சமாக நாள் முழுவதும் கனன்று உமி முழுவதும் உமிக்கரியாகிவிடும். அதுதான் குடும்பத்தினர் எல்லோருக்கும் வருடாந்திர உபயோகத்துக்கான பல் பொடி. அதை அப்படியேயோ அல்லது சிறுது உப்பு லவங்கம், சேர்த்தோ உபயோகிப்பார்கள். கரிக்கு(Carbon) ஈறுகளை உறுத்தாமலும் எனாமலைச் சிதைக்காமலும் அழுக்குகள் அனைத்தையும் இழுத்துக் கொள்ள கூடிய சக்தி உள்ளதால் பிரஷ் தேவையில்லை. விஞ்ஞான ரீதியாக நிருபிக்கப்பட்ட இந்த உண்மை பன்னாட்டுப் பற்பசைக் கம்பெனிகளின் விளம்பரப் பிரச்சார வெள்ள்த்திற்கு முன்பு இன்று பின்வாங்கி விட்டது….]
பிராமனர் விட்டு ‘பத்து’ பற்றி இப்படி குறிப்பிடுகிறார்.
[… “பத்து” என்ற ஒரு ஆசாரம் சில வகுப்பினரிடையே, குறிப்பாகப் பிராமணர் வீடுகளில் அனுசரிக்கப்பட்டது. சுருங்கச் சொன்னால் ஒரு நாளில் கொட்டு போய்விடக் கூடிய பதார்த்தங்கள் அவ்வளவும் பத்து. உதாரணமாக, முறுக்கு பத்து இல்லை. ஆனால் சாதம், சாம்பார், இட்லி முதலியன பத்து. அவற்றையோ, அவை வைக்கப்படிருக்கும் பாத்திரங்களையோ தொட்டால் கையை அலம்பிக்கொள்ள வேண்டும். இதனால் எல்லாம் அனவாசியமாகப் பெண்களுக்கு வேளை கூடிற்று…இன்று உடற்பயிற்சி இல்லாமல் உடம்பு வலி வருவது போல், அதற்கு நேர்மாறான காரணங்களால் உடம்பு வலி வந்து அவஸ்தைப் பட்டனர் அன்றைய இல்லத்தரசிகள்…]
நாற்பதுகளில் சினிமா, குடும்ப டாக்டர், அடுப்பங்கரை, கலாச்சாரம், போட்டோ, பேனா, கல்யாணங்கள் என்று பல விஷயங்கள் நன்றாக சொல்லப்பட்டிருக்கிறது. இதில் உள்ள வரலாறு புள்ளிவிபரங்கள் இல்லாமல் அன்றைய வாழ்கையும், மனிதர்களை பற்றியது. இந்த ஆண்டு வந்த மிக முக்கியமான நூலாக இதைக் கருதலாம்.
அசோகமித்திரன் முன்னுரையில் குறிப்பிடுவது போல் ..”இந்த நூலுக்கு ஒரு பெயர் மற்றும் பொருளகராதி தயாரித்தால் அது பல பக்கங்களுக்குப் போகும்…” அது புத்தகத்தைவிட பெரிதாக இருக்கும்.
“அது அந்தக் காலம்”, எஸ்.வி.ராமகிருஷ்ணன், உயிர்மை பதிப்பகம். 119 பக்கங்கள், 60/= ருபாய். படிக்க முன்று, மணி முப்பது நிமிடம் ( நடுவில் இரண்டு காப்பி, நான்கு தொலைபேசி அழைப்பு )
பிகு: நாளை ராமகிருஷ்ணன் “ரயில் பிரயாணத்தின் கதை” மற்றும் அசோகமித்திரன் எழுதிய “இரயில் பயணங்களில்” கட்டுரைகள் ஆகியவற்றை இங்கு பதிவு செய்ய உள்ளேன்.
எண்ணெய்க் குளிப் படலம்
எண்ணெய்க் குளிப் படலம் – எஸ்.வி. ராமகிருஷ்ணன்
தமிழ் நாட்டில் காலம் காலமாகப் புழங்கி வந்த நியதிகளில் ஒன்று வாரம் இரு முறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டுமென்பது. ஆண்களுக்கு புதன் கிழமையும் சனிக்கிழமையும் எண்ணை ஸ்நானம், பெண்களுக்கு செவ்வாயும், வெள்ளியும் என்று வரையறுக்கப்பட்டிருந்தது. இன்றைக்கு அறுபதாண்டுகளுக்கு முன் (1945) கால தேச வர்த்த மானங்களையட்டி, இது வாரம் ஒரு தடவையாகச் சுருங்கி இருந்தது. ஆனால் அந்த அளவுக்காவது கண்டிப்பாக அனுசரிக்கப்பட்டு வந்தது. பெரியவர்கள் அலுவல் சௌகரியங்களை ஒட்டி கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து கொண்டார்கள். அதாவது, அரசாங்க அதிகாரிகள், வக்கீல்கள் முதலியோர் பலரும் சனிக்கிழமைக்கு பதில் விடுமுறை தினமான ஞாயிறு அன்று வைத்துக் கொண்டார்கள். ஆனால் அவர்களின் பையன்களுக்கு சனிக்கிழமையும், பெண்களுக்கு வெள்ளியன்றும் எண்ணைக்குளி கட்டாயமாக உண்டு. அப்போதெல்லாம் பெண்பாலர் வெளி வேலைக்குப் போவது அரிது என்பதை நினைவில் கொள்ளலாம். ‘வயது வந்த’ பெண்கள் பலரும் பள்ளிக் கூடத்துக்கே போகவில்லை.
என் மாதிரி சின்னப்பையன்களுக்கு அம்மாக்களே எண்ணை தேய்த்து விடுவது வழக்கம். கிழக்கே பார்த்து உட்கார வைத்து மிளகு போட்டுக் காய்ச்சிய நல்லெண்ணையை இளஞ்சூடாக என் தலை மீது வைத்து, என் தாயார் தன் பலத்தையெல்லாம் பிரயோகித்து அழுத்தித் தேய்ப்பார். சில சமயம் நல்லெண்ணைக்குப் பதில் பாட்டில்களில் கிடைக்கும் சந்தனாதித் தைலம், அரைக்கீரை விதைத் தைலம். (கும்பகோணம் டி. எஸ். ஆர் கம்பெனியின் சரக்குகள் பிரபலம்) இவை இருக்கும். சிலர் தங்கள் வீட்டிலேயே கரிசலாங்கண்ணி போன்ற தைலங்களைக் காய்ச்சி உபயோகிப்பார்கள், சென்னையிலிருந்து வரும் பண்டிட் கோபாலாசார்லுவின் பிருங்காமலகத் தைலம் புகழ்பெற்றது. ஆனால் விலை அதிகம். மூளைக்குக் குளிர்ச்சி என்று சொல்லுவார்கள். மூளையையே மூலதனமாகக் கொண்டு வக்கீல் தொழில் செய்து வந்த என் தந்தை இதையே வாங்கி உபயோகித்தார். அதில் போட்டிருக்கும் வைத்தியரின் படம் கற்பனையில் பதியக்கூடிய ஒரு போட்டோ, கோட்டு, டர்பன் அணிந்து, நீள தாடி மீசையுடன், நீண்ட நாமமும் தரித்திருப்பார்.
தலைக்கு எண்ணை தேய்ப்பது முதல் கட்டம். இதுவரை எனக்கு அழுகை ஆட்சேபம் ஒன்றும் கிடையாது. ஆனால் அடுத்த கட்டமாக பழனி முருகன் போல் கோவனாண்டியாக நின்று உடம்பு முழுவதும் எண்ணை பூசிக்கொள்ள வேண்டும். (இது காய்ச்சப்படாத நல்லெண்ணையாக இருக்கும்) இது எனக்குப் பிடிக்காத ஐட்டம். முக்கியமாக, முகத்தில் எண்ணை தடவிக் கொள்வதில் எனக்கு பயங்கர விரோதம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த மாதிரி விஷயங்களில் என் அனுமதி கோரப்படவில்லை. அம்மா வைத்ததுதான் சட்டமாக இருந்தது. வீட்டுக்கு வீடு இதே வாசற்படிதான் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
எண்ணை தேய்த்துக் கொண்டு பதினைந்து இருபது நிமிடங்கள் ஊற வேண்டும். அப்போது வெயிலில் போகக் கூடாது, ஒன்றும் தின்னக் கூடாது என்று இரண்டு விதிமுறைகள். அப்போது மட்டும் அல்ல குளித்த பிறகுகூட அன்று வெளியில் போகக்கூடாது. போனால் தலைவலி வரும். ஆக, சனிக்கிழமை விடுமுறை நாளானாலும் பொழுது சாயும் வரை வீட்டிக்குள்ளேயே அடங்கிக் கிடக்க வேண்டியிருந்தது. வீட்டுத் தோட்டத்தில் சுற்றினால்கூட வசவு விழும்.
பச்சைத் தண்ணீரில் குளிப்பவர்களானாலும் சரி, வெண்ணீரில் குளிப்பவர்களாக இருந்தாலும் சரி, எண்ணை ஸ்நானம் என்றால் வெண்ணீரில்தான் குளிக்க வேண்டும். எண்ணை குளிர்ச்சி என்பதால் ஈடுகட்டுவதற்காக அன்று வெந்நீர் கொஞ்சம் கூடவே வெம்மையாக வைக்கப்படும். தலையிலிருந்து எண்ணையை எடுக்க அந்த நாளில் ஷாம்பூ, போன்ற ‘ஜோர்’ எல்லாம் வரவில்லை. சோப்புக்குக் கூட அன்று லீவுதான் தொன்று தொட்டு வழங்கி வந்த சீயக்காய்(தெலுங்குச் சீமையில், அதாவது சுந்தரத் தெலுங்கு பேசின சென்னை மாகாணத்தின் ஆந்திர ஜில்லாக்களில், ‘குங்குடிக்காயை’ அரைத்து நமது சீயக்காய் மாதிரி உபயோகித்தனர். நம்ம ஊரில் சீயக்காய்க்கு சிலசமயம் (ஷிஷீணீஜீ ழிut) என்று ஆங்கிலத்தில் எழுதினர். ஆனால் ‘குங்குடிக்காய்’ தான் நிஜமான ‘சோப் நட்’. சோப்பு போலவே அதில் நிறைய நுரைவரும். நமது சீயக்காய் எண்ணையை எடுக்குமே தவிர நுரை ஒன்றும் பெரிதாக வராது. ஆரம்ப காலத்தில் வெள்ளைக்காரர்கள் குங்குடிக்காயைப் பார்த்து விட்டுச் சூட்டின பெயர் நம்மூர் சீயக்காய்க்கும் ணிஜ்tமீஸீபீ ஆகியிருக்கலாம். கோயமுத்தூர் கலெக்டர் கர்நூலுக்கும், மலபார் கலெக்டர் திருநெல்வேலிக்கும் மாற்றலாகிப் போன காலம். சென்னை மாநகரத்தில் இன்றும் கம்பீரமாக (சிலை ரூபத்தில்) வீற்றிருக்கும் ஸர் தாமஸ் மன்றோ, பாரா மஹால் (தர்மபுரி) யில் ரயத்துவாரி முறைத் தீர்வையை நிறுவிப் புகழ்பெற்ற கையோடு கடப்பா கலெக்டராக நீண்ட காலம் கோலோச்சினார்.) ப் பொடியும் அரப்புப் பொடியுமாகக் கலந்து வெந்நீரில் கரைத்துத் தலையில் தேய்த்தார்கள். சீயக்காய் உஷ்ணம், அதைத் தனியே தலையில் தேய்த்தால் கண் எரியும் என்பதால் தன்மையையே தனது தன்மையாகக் கொண்ட அரப்பு சேர்த்தார்கள். சீயக்காய், அவரை வகையைச் சேர்ந்த, ஆனால் சாப்பிட லாயக்கில்லாத (uஸீ ணிணீtணீதீறீமீ) ஒரு. காய் அரப்பு என்பது ஒரு மரத்தின் இலை. இவற்றை உலர்த்திப் பொடித்தார்கள். நாட்டு வைத்தியத்தை அடிப்படையாகக் கொண்டு பழைய காலத் தினசரி வாழ்க்கை முறையில் இது மாதிரியான ‘திரிதோஷ சமனம்’ . பித்தம், வாதம், சிலேஷ்மம் ஆகிய சரீரத்தின் முக்குணங்களின் சமநிலை (ஙிணீறீணீஸீநீமீ ஷீயீ tலீமீ ஜிலீக்ஷீமீமீ ) நிறையவே கையாளப்பட்டது. அரப்பு குளிர்ச்சி மட்டும் அல்ல. சீயக்காய் கொஞ்சம் ‘ஸ்ட்ராங்’ சாதனம். அதை மட்டும் போட்டால் அடியோடு எண்ணையை நீக்கி மேனியை வறவற என்று ஆக்கக் கூடியது. அரப்பு ஒரு கொழ கொழப்பான பொருள் கலவைக்கு வழவழப்பையும் மிருதுத்தன்மையையும் அளிக்கக் கூடியது. இதே இரண்டு காரணங்களுக்காக மலையாளத்தில் அரப்புக்குப் பதில் செம்பருத்திச் செடியின் இலையையோ, பழங்கஞ்சி (அதாவது நேற்று வடித்த கஞ்சி) யையோ உபயோகித்தனர். எங்கள் ஊரில் வாழ்ந்த மலையாளிகள் அப்போது மலபார், சென்னை மாகாணத்தில் இருந்ததால் தமிழ் நாடெங்கும் அரசு உட்பட எல்லாத் துறைகளிலும் மலையாளிகள் நிறையவே காணப்பட்டனர். அவர்கள் இப்படிச் செய்து பார்த்திருக்கிறேன். ஆனால் கொங்கு நாட்டுத் தமிழர்களிடையே இது வழக்கம் இல்லை.
அரப்புக் கலவை தலைக்குத்தான். உடம்பில் வழியும் எண்ணையை எடுக்க சீயக்காய்த் தூளுடன் பச்சைப் பயற்று மாவைக் கலந்தார்கள். வெறும் சீயக்காயைப் போட்டாலும் உடம்புக்குக் கெடுதல் ஒன்றும் இல்லை. என்றாலும் இந்தக் கலவை சருமத்துக்கு அதிகம் சுகமாக இருக்கும். பயத்த மாவுடன் கொஞ்சம் கடலை மாவு கலப்பதையும் கூடக் கண்டிருக்கிறேன். சிறு குழந்தைகள் என்றால் சீயக்காயே கிடையாது. அவற்றின் மிருதுவான சரீரத்துக்கு பொருத்தமாக ‘பயத்தம் மாவை’ மட்டுமே பயன்படுத்தினார்கள்.
ஒரு முறை எங்கம்மாவுக்கு அம்மை போட்டு விட்டது. அப்போதெல்லாம் அம்மை வகைக் காய்ச்சல்கள் (பெரியம்மை, சின்னம்மை, தட்டம்மை, மணல்வாரி, பொன்னுக்கு வீங்கி, இத்தியாதி) வந்தால் , ஜுரம் நின்ற பின்னும் பத்திய உணவு கொடுக்கப்பட்டது. சூட்டை அதிகரிக்கும் பொருட்கள் எல்லாமே விலக்கு. உஷ்ணத்தைத் தணிக்க தினம் எண்ணை தேய்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் சீயக்காய் கொஞ்சம் உஷ்ணம் என்பதால் அனுமதிக்கப்படவில்லை. வெறும் அரப்பைத் தேய்க்கச் சொன்னார்கள். சீயக்காய் இல்லாது கூந்தலிலிருந்து எண்ணை எப்படிப் போகும் என்று அம்மாவுக்கு ஒரே மலைப்பு. ஆனால், தேய்த்துப் பார்த்த போது ஆச்சரியகரமாக அரப்பு மட்டுமே வேலையை செவ்வனே செய்து முடித்து விட்டது.
எண்ணைக் குளி என்றாலே கண்ணில் சீயக்காய்த்தூள் விழுந்துவிடும் சிறிய அபாயம் எப்போதும் உண்டு. முக்கியமாகச் சிறுவர்கள் ‘தலையில் சீயக்காய் இருக்கும்போது கண்ணை இறுக்க மூடிக்கொள்’ என்று அம்மாக்கள் படித்துப் படித்துச் சொல்லியிருந்தும், அவர்களுடைய இயற்கையான ஆவலினாலும் துடிப்பினாலும் உந்தப்பட்டு சில சமயங்களில் கண்ணைத் திறந்து விடுவார்கள். அப்புறம் கண் எரிகிறதென்று அழுது ஊரைக் கூட்டுவார்கள். இந்த விஷயத்திலெல்லாம் சிறுமிகள் தேவலை கொஞ்சம் அம்மா சொன்னபடி கேட்டார்கள்.
சிலர் எண்ணை தேய்த்துக் கொள்ளும்போது காதிலும் இரண்டு சொட்டு நல்லெண்ணை விட்டுக் கொள்வார்கள். இந்த வழக்கம் எங்கள் வீட்டில் இல்லாததால் எனக்கு இந்த அனுபவம் இல்லை. டாக்டர்களிடம் சொன்னால், இது கூடவே கூடாது, கெடுதல் என்றார்கள். அதே சமயம் நான் பார்த்த வரையில் காதில் எண்ணை விட்டுக் கொள்பவர்கள் நன்றாகத்தான் இருந்தார்கள்.
பின்னாளில் கண்டேன், வடநாட்டில் எண்ணை தேய்த்து விடுவதற்கென்று இருக்கும் தனி ஆட்களை (அதை அவர்கள் ஒரு கலையாக வளர்த்திருக்கிறார்கள்) முக்கியமாக, குளிர் மாதங்களில் பெரிய மனிதர்கள் ‘மாலிஷ்வாலா’ வை வீட்டுக்கு அழைத்து தலையிலிருந்து கால்வரை விஸ்தாரமாக எண்ணை தேய்த்துக் கொள்வார்கள். பெரும்பாலும் கடுகெண்ணையாக இருக்கும். 1956 வாக்கில் ஸி. ஐ. டி (சி. மி. ஞி) என்ற ஹிந்திப் படத்தில் ‘தேல் மாலீஷ்’ என்ற முகமது ரஃபியின் பாட்டு பெரிய ‘ஹிட்’ ஆயிற்று. அந்த இசையின் முன்னணியில் நகைச்சுவை நடிகர் ஜானி வாக்கர் பம்பாயின் கடற்கரையில் எண்ணை மாலிஷ் போடுவார். இது பலருக்கும் ஞாபகம் வரக்கூடிய, பிரபலமானதொரு ஸீன். இன்றும், பம்பாய் சௌபாத்தியில் மாலீஷ் வாலாக்கள் கையில் குப்பியுடன் அலைவதைக் காணலாம்.
தமிழ் நாட்டிலும் எனக்கு இரண்டு தலைமுறைகளுக்கு முன்பு நாவிதர்கள் க்ஷவரம் செய்துவிட்டு எண்ணையும் தேய்த்து விடுவார்களாம். அந்த நாட்களில் எல்லோருக்கும் ‘கட்டுக் குடுமி’ இருந்ததால் நாவிதர்களுக்கு வாடிக்கையாளர்களின் தலையில் அதிக வேலை இருந்திருக்க முடியாது. ஆனால் என் காலத்தில் குடுமி மறைந்து ‘கிராப்’ வந்துவிட்ட படியால், அவர்களின் கவனம் விதவிதமான ‘கட்டிங்’குகளின் பால் திரும்பவே, ‘மாலிஷ்’ கலையை அவர்கள் மறந்திருக்கக் கூடும்.
நன்றி: உயிர்மை, மார்ச் 2005
பணம் காசின் பரிணாமம்
பணம் காசின் பரிணாமம் – எஸ்.வி. ராமகிருஷ்ணன்
ஓரிடந் தனிலே
நிலைநில்லாது லகினிலே
உருண்டோடிடும்
பணங்காசெனும்
உருவமான பொருளே
’வேலைக்காரி’ படத்தில் (1949) ஒரு பாடல்.
எனக்கு ஏழு வயது ஆனபோது (1944) ஒரு அசாதாரணமான சம்பவம் நிகழ்ந்தது. அதுதான் ஓட்டைக் காலணாவின் பிறப்பு.
காலணா என்பது ஒரு ரூபாயின் 1/64 பகுதி. இன்று அதற்கு அர்த்தமே இருக்க முடியாது. ஆனால் அன்றைய தேதியில் அதற்கு மிட்டாயோ தேங்காய் பர்பியோ வாங்க முடியும். ‘சின்னக் கிளாஸ் பசங்களிடம்’ அதிகமாகப் புழங்கியது காலணாக்கள்தான். காலணாதான் குழந்தைகளின் அடிப்படை நாணயமென்றே சொல்லலாம். அதுவரையில் வழங்கி வந்த காலணாவுக்கான செப்பு நாணயங்கள் பெரிதாகவும் கறுத்துப் போயும் சில சமயங்களில் பச்சைக் களிம்பு பிடித்தும் காணப்படும். ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய விக்டோரியா மகாராணியின் காலணாவிலிருந்து என் காலத்தின் ஆறாம் ஜார்ஜ் சக்கரவர்த்தி படம் பொறித்த காலணா வரையிலும் இதேபோலத்தான் இருந்தன. ஆனால் திடீரென்று முளைத்த புதிய காலணாவோ அதுவரை கேட்டிராத அதிசயமாக நடுவில் பெரிய ஓட்டையுடன் ‘வாஷர்’ மாதிரி விளங்கியது. பளபளவென்று தங்கம்போல் மின்னியது. இது குழந்தைகளின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டதில் அதிசயம் இல்லை. அதே சமயம், பெரியவர்களின் பார்வை வேறு விதமாக இருந்தது. அரசாங்கம் ‘பாப்பர்’ ஆகிக் கொண்டிருக்கிறதுபோல் இருக்கிறது என்று பலரும் சொன்னார்கள். ஆங்கிலேயே ஆட்சி அஸ்தமிக்க ஆரம்பித்துவிட்டதென்றுகூடப் பலருக்குத் தோன்றியிருந்தால் அதுவும் நிஜமே. உண்மையில் யுத்த காலச் செலவுகளால் ‘போண்டி’யாகிக் கொண்டிருந்த பிரிட்டிஷ் இந்திய அரசுக்குக் குறைந்த செலவில் மட்டமான நாணயங்களைத் தயாரிப்பதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. அதனால் தாமிரச் செலவு குறைந்ததென்றால் அரசாங்கத்தின் மதிப்பும் தாழ்ந்து போயிற்று.
ஓட்டைக் காலணாவின் பிரதாபத்தைச் சொல்லுமுன் ஐம்பது வயதுக்குக் கீழே உள்ளவர்களுக்காக அன்றைய நாணயங்களை (coinage) பற்றியதொரு அறிமுகம் தேவைப்படலாம்.
மெட்ரிக் முறையென்பது, ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பதுகளில் பாட புத்தகங்களில் மட்டுமே இருந்தது. நடைமுறையில் இருக்கவில்லை. முகவை நிறுவை அளவுகளிலிருந்து நாணய மாற்று விகிதம் வரை எல்லாம் திறிஷி (பிரிட்டிஷ்) முறைதான். கடைக்குப் போனால் ஒன்றரை வீசை ரவையை நிறுத்தும் ஒரு படி உப்பை அளந்தும் கொடுத்துவிட்டு ஒரு ரூபாய் ஏழரை அணா (1-7-6) என்று விலை சொல்லுவார்கள். ஒரு ரூபாய்க்கு 192 தம்பிடி. அதற்கு ஆங்கிலத்தில் பை (Pie) என்று பெயர். இலங்கையிலும் ஆட்சி செலுத்தி வந்த அதே பிரிட்டிஷார் ரூபாய்க்கு 100 சதம் (Cent) என்று வைத்துப் பள்ளிச் சிறுவர்களின் பாரத்தைக் குறைத்தார்கள். ஏனோ இந்தியாவுக்கு அந்தக் கருணையைக் காட்டவில்லை.
அதோடு கணக்கு நின்றுவிடவில்லை. பனிரெண்டு தம்பிடிகள் சேர்ந்தது ஒரு அணா. அதுபோல் பதினாறு அணாக்கள் சேர்ந்தால் ஒரு ரூபாய் ஆகும். இதெல்லாம் பிரிட்டிஷ் இந்தியாவில் அதாவது மாகாணங்களில். மகாராஜாக்கள் ஆண்ட சுதேச சமஸ்தானங்கள் ரூபாய்க்குக் கீழ்ப்பட்ட நாணயங்களைத் தத்தம் பாணியில் அச்சடித்தன. உதாரணமாக, திருவாங்கூரில் சக்கரம் இருந்தது. நம்ம ஊரிலே “அவன் கையிலே நாலு காசு சேர்ந்து போச்சு, திமிர் ஏறிடுத்து” என்று சொல்வது போல திருவாங்கூரில் “அவன் கையிலே நாலு சக்கரம் சேர்ந்து போச்சு . . .” என்று பேசுவார்கள். இருபத்தெட்டு சக்கரம் ஒரு ‘சர்க்கார் ரூபாய்’ (திருவாங்கூர் ரூபாய்.) பிரிட்டிஷ் ரூபாயின் மதிப்பு இன்னும் கொஞ்சம் கூடுதல். அதாவது 28 லு சக்கரம். இதில் இரண்டு வினோதங்கள். திருவாங்கூரின் சர்க்கார் ரூபாய் என்பது ஒரு மதிப்புதான். அப்படி ஒரு ரூபாய் நாணயம் அச்சிடப்படவில்லை. மற்றும் பிரிட்டிஷ் நாணயம் சமஸ்தானங்களில் செல்லுபடியாகும். ஆனால் சமஸ்தான நாணயங்கள் சென்னையிலோ கோவையிலோ செல்லுபடியாகவில்லை.
ஒரு ரூபாய், எட்டணா (இன்றைய 50 பைசா), நாலணா (25 பைசா), மற்றும் இப்போது இல்லாத இரண்டணா, ஓரணா, அரையணா, காலணா, தம்பிடி என்ற நாணயங்கள் இருந்தன. விக்டோரியா மகாராணி காலத்திய (அவருடைய உருவம் பொறிக்கப்பட்ட) பழைய ரூபாய் நாணயங்கள் ஏறக்குறைய முழு வெள்ளியால் ஆனவை. முதல் உலக யுத்தத்துக்குப் (1914-1918) பிந்தைய ஐந்தாம் ஜார்ஜ் (1911-35) படம் போட்ட ரூபாய்கள் அதைவிடத் தரம் குறைந்தாலும் கணிசமாக வெள்ளிதான். எனக்குத் தெரிந்த ஆறாம் ஜார்ஜ் சக்கரவர்த்தியின் (பட்டம் : 1938) ரூபாய்கள் இரண்டாவது உலக யுத்தத்தினால் (1939-45) மேலும் பாதிக்கப்பட்டுக் கொஞ்சம் பாவமாக இருந்தன. அவற்றின் வெள்ளி எடை 6/16 தோலா என்று கேட்ட நினைவு. (ரூபாய் நாணயத்தின் எடை ஒரு தோலா.) சுதந்திரம் வரும் தருவாயில் (1947) முதன் முறையாக வெள்ளியே இல்லாமல் நிக்கலினால் ஆன ஒரு ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டது. ஒரு பக்கத்தில் புலி போட்டிருந்தது. வெள்ளியே இல்லாமல் ரூபாயா? நம்ப முடியாத கிழவர்கள் “கலி முற்றிவிட்டது” என்று அங்கலாய்த்தார்கள்.
அரை ரூபாய் என்பது ஏறக்குறைய ரூபாயின் பாதி அளவிலும் நாலணா நாணயம் (இதைப் பொதுமக்கள் ‘பணம்’ என்று சொன்னார்கள்) அதிலும் பாதி சைஸிலும் வட்டமாக இருந்தன. ஆனால் ஒரு பணத்தின் பாதி மதிப்பு கொண்ட இரண்டணாவோ அளவில் நாலணாவைவிடப் பெரிதாகவும் உருவத்தில் சதுரமாகவும் இருக்கும். ஓரணா நாணயம் வட்டமும் அல்லாது சதுரமுமல்லாது ஒரு அலங்காரமான டிசைனில் இருக்கும். இரண்டணாவின் ஒரு சின்ன சைஸ் பிரதி போலக் காணப்பட்ட அரையணா நாணயமும் உண்டு. இவை எல்லாம் நிக்கல் கலந்த அல்லது கலக்காத வெவ்வேறு உலோகக் கலவைகள். அதற்கும் கீழே இருந்த காலணாவுக்கும் தம்பிடிக்கும் அந்த அந்தஸ்து கிடையாது. அவை வெறும் தாமிரத்தினால் அடிக்கப்பட்டவை. மின்சாரம் பெரிய அளவில் தூர இடங்களுக்கு அனுப்பப்படும் வரை (electrical transmission) செம்பின் விலை மதிப்பு மிகக் குறைவாக இருந்திருக்க வேண்டும். அதனால்தான் “என் கிட்டே செப்பால் அடித்த காசு கூடக் கிடையாது” என்ற வாக்கியம் வந்திருக்க வேண்டும். எனக்குத் தெரிந்தபோது சாதாரணமாகப் பிச்சைக்காரர்களுக்குக் காலணா போட்டார்கள். அதற்கு முன், அதாவது இரண்டாம் உலக யுத்தம் வந்து விலைவாசிகள் கண்டபடி உயரும் வரை, பிச்சைக்காரர்களுக்கு ஒரு தம்பிடிதான் கொடுத்தார்களாம். ஆனால் 1945ல் ஒரு தம்பிடி கொடுத்தால் பிச்சைக்காரர்கள் முறைத்தார்கள். “நீயே வைத்துக்கொள்” என்று கூட எப்போதாவது சொன்னார்கள். பழனி போன்ற கோயில்களுக்குச் செல்பவர்கள் மாத்திரம் பின்னால் வெகுகாலம்வரை கூடத் தம்பிடி கொடுத்தனர். மலை ஏறும் வழி நெடுக இரண்டு பக்கமும் நூற்றுக்கணக்கான பிச்சைக்காரர்கள் உட்கார்ந்திருப்பார்கள். அவர்கள் எல்லோருக்கும் ஆளுக்குக் காலணா கொடுத்துக் கட்டுபடியாகாது. தவிரவும், தலைக்கு ஒரு தம்பிடி என்றால்கூட அவர்களின் தினசரி கலெக்ஷன் நல்லபடியாக இருக்குமாதலால் இது இருசாராருக்குமே அனுகூலமாக இருந்தது. ஐம்பதுகளில் தம்பிடிகளின் புழக்கம் கடைவீதியில் அடியோடு அற்றுப் போய்விட்டது. ஆனால் பழனியில் சில்லறை விற்கும் வியாபாரிகள் ஒரு ரூபாய்க்கு 150 என்ற விகிதத்தில் தம்பிடி நாணயங்கள் கொடுப்பார்கள். (எண்ணிப் பார்த்தால் இதைவிடக் குறையும் என்று சொன்னார்கள். ஆனால் முருகன் தரிசனத்துக்கு மலை ஏறும் அவசரத்தில் யாரும் எண்ணினதாகத் தெரியவில்லை!)
இந்தத் தம்பிடிகள் பிச்சைக்காரர்கள் கைக்குப் போய்த் திரும்ப அதே கடைக்காரர்களிடம் ராத்திரிக்குள் வந்து சேர்ந்துவிடும். அவர்கள் அதை எடுத்துக்கொண்டு பிச்சைக்காரர்களுக்கு ரூபாயாகவும் அணாவாகவும் கொடுப்பார்கள். அதிலும் கமிஷன் அடிக்காமல் ஆண்டிகளுக்கு அவர்களின் சம்பாத்தியத்தின் முழு மதிப்பு கிடைத்திருக்குமா என்று எனக்குத் தெரியவில்லை.
முதலில் ஒரு ரூபாய்க்கு உலோக நாணயம்தான் இருந்ததாம். அதாவது நோட்டு கிடையாது. எனக்குத் தெரிந்தபோது ஒரு ரூபாய்க்குக் காகித நோட்டும் இருந்தது. அதுவும் யுத்த காலத்தில் தான் தொடங்கிற்றாம். இதிலும் அரசின் மதிப்பைக் குறைக்கும் ஒரு விஷயம் இருந்தது. ஐந்து, பத்து, நூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் எல்லாவற்றிலும் ரிசர்வ் பாங்க் கவர்னர் ஒரு உறுதி மொழி அளித்துக் கையப்பம் வைத்திருப்பார். அதன்படி எவரும் ரூபாய் நோட்டுக்களை ரூபாயாக கஜானாவில் மாற்றிக்கொள்ள உரிமை உண்டு. அதற்கு அர்த்தம் அந்த அளவு வெள்ளியைத் திருப்பிக் கொடுக்க அரசு கடமைப்பட்டிருந்தது என்பதே. அதாவது அரசாங்கம் கையிருப்பில் வேண்டிய வெள்ளியை வைத்துக் கொள்ளாமல் இஷ்டப்படி கரன்ஸி நோட்டு அடிக்க முடியாது. அடிப்படை (ஒரு ரூபாய் நோட்டில் நீதித்துறைச் செயலர்தான் கையெழுத்திட்டிருப்பார்.) நாணயமான ரூபாயையே காகிதமாக அடிப்பது என்ற குறுக்கு வழியை ஆங்கில ஆளுகையின் முதல் 180 ஆண்டுகளுக்கு எவரும் நினைத்துப் பார்த்ததில்லை. ஆனால் ரூபாயே நோட்டாக வந்த பிறகு இப்போது உயர் மதிப்பு நோட்டுகளைக் கஜானாவுக்குக் கொண்டு சென்றால்கூட அவர்கள் அந்த அளவு ஒரு ரூபாய் நோட்டு கொடுத்தால் போதும் என்று ஆகிவிட்டது. இது அரசாங்கம் இஷ்டப்படி நோட்டு அச்சடிக்க அனுசரணையாயிற்று. பணவீக்கமும் அதிகரித்தது.
யுத்தத்தினால் அதிகரித்தது பணப்புழக்கமும் பணவீக்கமும் மட்டுமல்ல. எல்லாவற்றுக்கும் தட்டுப்பாடு, கட்டுபாடு ஏற்பட (பின்னால் ராஜாஜி நாமகரணம் செய்த) ‘கண்ட்ரோல் பெர்மிட் லைசென்ஸ் ராஜ்யம்’ அப்போதுதான் தொடங்கிற்று. அதற்குத் தகுந்தவாறு லஞ்ச ஊழலும் கறுப்புச் சந்தையும் தலையெடுத்தன. வியாபாரிகள் பலர் கறுப்புச் சந்தையில் கொள்ளையடித்தனர் என்றால் அதிகாரம் இருந்த இடத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு லஞ்ச லாவண்யம் பெருகிற்று. திடீரென்று (1945இல் என்று நினைக்கிறேன்) வைஸ்ராயின் நிர்வாக சபை – இன்றைய மத்திய அமைச்சரவை போன்றது – ஒரு வெடிகுண்டைத் தூக்கிப் போட்டது. ஆயிரம் ரூபாய் நோட்டுகளை இன்றிலிருந்து செல்லாது என்றது அந்த ஆணை. தாங்கள் நியாயமான வழியில் சம்பாதித்த பணத்தையும் பலர் ஆயிரம் ரூபாய் நோட்டாக வைத்திருக்கக்கூடும். (அப்போதெல்லாம் வங்கியில் பணம் போடும் வழக்கம் இன்று போல வளர்ந்திருக்கவில்லை என்பதை நினைவிற் கொள்க.)
அவர்கள் அந்தப் பணம் தங்களுக்கு எப்படிக் கிடைத்தது என்று சொல்லி அந்த நோட்டுகளை ரிசர்வ் பாங்கிலோ அல்லது இம்பீரியல் பாங்கிலோ (ஸ்டேட் பாங்கின் அன்றைய பெயர்) மாற்றிக்கொள்ளலாம். ஒன்று இரண்டு நோட்டுகளைக் கொண்டு போனால் அவர்கள் ஆட்சேபணை இல்லாமல் கொடுத்து விடுவார்கள். ஆனால் லட்சக் கணக்கில் கொள்ளையடித்து சேமித்து வைத்திருந்தவர்களுக்கு மிகக் கஷ்டம். இதில் பெரிதும் பாதிக்கப்பட்டவர் சென்னை மாகாணத்தின் அன்றைய வெள்ளைக்கார கவர்னர் ஸர். ஆர்தர் ஹோப் என்று பரவலாக நம்பப்பட்டது. சாதாரணமாக பிரிட்டிஷ் கவர்னர்கள் லஞ்சத்தில் ஈடுபட மாட்டார்கள். ஆர்தர் ஹோப் யுத்தகாலக் காற்று அடிக்கும்போது தூற்றிக் கொண்டவர். வர்த்தக உலகில் பெரும் புள்ளிகள் சிலரைத் துணைக்கு அழைத்து முடிந்த வரை கறுப்புப் பணத்தை மாற்றிக் கொண்டாராம் ஹோப். எங்கள் கோயமுத்தூரின் புகழ்பெற்ற தொழிலதிபர் ஒருவர் – கவர்னருக்கு மிக வேண்டியவர் – இரண்டு லட்சம் ரூபாய் இதுபோல் மாற்றிக் கொடுத்தாராம். அந்த நாளில் ஒரு லட்சமே மிகப் பெரிய தொகை. அதை உடையவர்களை ‘லக்ஷ£திபதி’ என்று உசத்தியாகச் சொன்ன காலம்.
ரூபாய் அணா பைசாக் கணக்கு சிக்கலானது. மெட்ரிக் முறை போல் பூஜ்யத்தைச் சேர்த்தால் காரியம் ஆகிவிடாது. உதாரணமாகப் பள்ளிக்கூடத்தில் ஒரு கீழ் வகுப்புக் கணக்கு பின்வரும் ரீதியில் அமைந்திருக்கும்.
ரூ அ பை *
147 13 7 x
16
___________________________
2365 9 4
(* ரூபாய், அணா, பைசா)
இந்தக் கணக்கைப் போடுவதானால் முதலில் 7 தம்பிடியை 16ஆல் பெருக்கி, வரும் 112ஐ 12ஆல் வகுப்பது முதல் கட்டம். மீதி வரும் 4 தம்பிடிகளை அங்கேயே விட்டுவிட்டு வகுத்தலில் தேறும் 9 முழு அணாக்களைப் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்தது 13 அணாக்களைப் பதினாறால் பெருக்கிக் கிடைக்கும் 208 அணாவுடன் கையில் வைத்திருக்கும் 9 அணாக்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதை 16ல் வகுத்தால் கிடைக்கும் மீதி 9 அணாவை அணாக் கணக்கில் விட்டுவிட்டு ஈவுத் தொகையாக 13 ரூபாயை கையில் வைத்திருந்து ரூ.147ஐப் பதினாறால் பெருக்கிக் கிடைக்கும் 2352 ரூபாயுடன் கூட்டி மொத்தம் 2365ஐ ரூபாய்க் கணக்கில் எழுதினால் கணக்கு முடிந்தது. இதைப் படிப்போருக்குப் ‘போர்’ அடித்தாலோ தலை சுற்றினாலோ நான் அதற்குப் பொறுப்பாளி அல்ல. பணக் கணக்கு என்பது அப்படித்தான் இருந்தது. இப்போதானால் இந்தக் கணக்கைப் போட பெரும்பாலோர் கால்குலேட்டரை நாடுவார்கள். அன்றோ ஒன்பது வயதுக் குழந்தைகள் இதைக் காகிதம், பென்சில் (அல்லது சிலேட்டு, பலப்பம்) மூலம் கணக்கிட்டார்கள். சில சமயம் தப்பு போட்டுக் குட்டும் வாங்கினார்கள். அல்லது பெஞ்சு மேல் ஏறி நின்றார்கள். நான் கணக்குப் பாடத்தில் மக்காக இருந்ததால் இதை அனுபவ பூர்வமாகச் சொல்ல முடியும். இப்போதுகூட நான் எழுதியிருக்கும் மாதிரிக் கணக்கின் விடை தப்பாக இருந்தால் ஆச்சரியப்பட மாட்டேன். நல்ல வேளையாகக் குட்டி வைக்க எங்கள் வாத்தியார்கள் இன்று இல்லை!
திருவாங்கூர் நாணயத்தைப் பற்றிச் சொன்னேன். அங்கே இரண்டுவித நாணயங்கள் புழங்கியதால், இதைவிடச் சிக்கலான கணக்குகள் கொடுத்துப் பிள்ளைகளின் உயிரை வாங்குவதற்கு சௌகரியமாக அமைந்தது. 137 ரூபாய் ‘சர்க்கார் நாணயத்தை’ பிரிட்டிஷ் நாணயமாக மாற்றுக என்று பள்ளிக்கூடக் கணக்குகள் கொடுப்பார்கள். 137ஐ இருபத்தெட்டு சக்கரத்தால் குணிக்க (பெருக்க) வேண்டும். வரும் விடையை 28 லு சக்கரத்தால் வகுத்தால் பிரிட்டிஷ் நாணய மதிப்பு கிட்டும்.
சுதந்திரம் வந்து பத்தாண்டு காலத்திற்குப் பிறகு, 1958ல் என்று நினைக்கிறேன். நேரு அரசு மெட்ரிக் முறையின் அடிப்படையில் அமைந்த நாணயச் சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தது. ரூபாய் அப்படியே இருக்க, இலங்கையின் சதம் போல, அது நூறு புதுக் காசுகள் ஆக்கப்பட்டது. புதுக்காசு ‘நயா பைசா’ என்று பெயர் சூட்டப்பட்டது. சரியான மொழிபெயர்ப்புதான்.
புதிய காசு மக்களுக்குப் பழக்கமாகும் வரை சில வருடங்களுக்குப் பழைய நாணயங்களும் கூடவே அனுமதிக்கப்பட்டன. ஆனால் புதிதாகப் பதிப்பிக்கப்படவில்லை. தவிரவும் கொஞ்சங் கொஞ்சமாகத் திரும்பப் பெற்றுக்கொண்டு உருக்கப்பட்டன என்று நினைக்கிறேன். ஆக காலக்கிரமத்தில் அவை வழக்கிலிருந்து மறைந்தொழிந்தன. ஆனால் இது நாலணா, எட்டணா இரண்டுக்கும் பொருந்தாது. புதிய காசுக்கு நாலணா 25 பைசாவாகவும் எட்டணா 50 பைசாவாகவும் கச்சிதமாய்ப் பொருந்தியதால் அவை நீடிப்பதற்குத் தடையேதும் இல்லை. ஆனால் அவற்றின் புதிய பதிப்புகள் அணாக் கணக்கில் எழுதப்படவில்லை. 25 பைசா அல்லது 50 பைசா என்றே குறிக்கப்பட்டன. அதே சமயம் அவற்றின் பழைய நாணயங்களும் செல்லும்.
இருபத்தைந்து பைசாவுக்குக் கீழே புதிதாகக் கொண்டுவரப்பட்ட நாணயங்கள் வருமாறு (ஒரு) நயா பைசா, இரண்டு நயா பைசா, ஐந்து நயா பைசா, பத்து நயா பைசா. பின்னால் இருபது பைசா நாணயமும் வெளியாயிற்று (இப்போது காண்பது அரிது.) நாலணா எட்டணா தவிர மற்ற பழைய நாணயங்களான தம்பிடி, காலணா, அரையணா, ஓரணா, இரண்டணா முதலியவை புதிய காசுக் கணக்கில் பொருந்தாததால் சில சிக்கல்கள் ஏற்பட்டன. அதுவரை, பல பொருட்களுக்கு ஓரணா அல்லது இரண்டணா என்று விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. உதாரணமாக சுதேசமித்திரன் (தினத்தாள்) ஓரணாவாக இருந்து வந்தது. நயா பைசா மதிப்பில் இது 6ரு பைசாவாகும். தொலையட்டும் என்று பிரதிக்கு ரு பைசா நஷ்டத்தில் அப்பத்திரிகையின் நிர்வாகம் அதை 6 நயாபைசா என்று நிர்ணயித்தது. நல்லவர்களுக்குக் காலம் இல்லை என்பது போல் சுதேசமித்திரன் அதிலிருந்து க்ஷீணமடைந்து சில ஆண்டுகளில் மூடப்பட்டது. ‘ஹிந்து’வோ இரண்டணாவுக்கு விற்று வந்த பத்திரிகை. அதன் சரியான நயா பைசா மதிப்பு 12லு வரும். கிட்டிய மதிப்பு என்ற கொள்கையைக் கடைப்பிடித்து அதை 13 நயாபைசா என்று வைத்துவிட்டார்கள். ஆக, நாணய சீர்திருத்தத்தினால் ஹிந்து பத்திரிகை பிரதிக்கு லு பைசா லாபம் அடைந்தது. Unearned income என்று சொல்லலாம்! குமுதம், விகடன், கல்கி போன்ற நாலணாப் பத்திரிகைகள் பாதிக்கப்படவில்லை. நாலணா என்பதற்குப் பதில் 25 நயா பைசா என்று விலையை எழுதினார்கள். விலை அதேதான்.
இதுபோல் பல சாமான்கள் பாதிக்கப்பட்டன. பெரும்பாலும் கிட்டிய மதிப்பு வியாபாரிகளுக்குத்தான் அனுகூலமாக அமைந்ததே தவிர நுகர்வோருக்கல்ல. ஒன்றரை அணா விற்ற பல பொருள்களும் 10 பைசாவாக உயர்த்தப்பட்டன (+1 பைசா) இதெல்லாம் rounding off என்ற பெயரில் நடந்த அநியாயங்கள். இதனால் ஒரு சிறிய அளவுக்குப் பணவீக்கம் அதிகரித்தது என்று கூடக் கேட்டிருக்கிறேன். அதே சமயம் (1957-62) தொடங்கி இருந்த இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தினாலும் இருக்கக் கூடும். அத்திட்டத்தில் பணவீக்கத்தை உண்டு பண்ணும் அம்சங்கள் நிறையவே காணப்பட்டன. வலதுசாரியான மினூ மஸானியும் இடதுசாரியைச் சேர்ந்த பூபேஷ் குப்தாவும் இத்திட்டத்தைத் தாக்கிக் காரசாரமாக எழுதினார்கள். ஆனால் பணம் என்னமோ வீங்கிக் கொண்டேதான் போயிற்று.
ஆரம்ப காலத்துக்கென்று, அரை நயா பைசா நாணயம் ஒன்றை அச்சடித்திருந்தால் இதுபோன்ற சில சங்கடங்களை அரசு தவிர்த்திருக்கலாம். சில ஆண்டுகளுக்குப் பிறகு அதை வாபஸ் பெற்றிருக்கலாம். ஏனோ இதைச் செய்யவில்லை. சில ஆண்டுகளிலேயே பணவீக்கம் ஒரு நயாபைசா, இரண்டு நயா பைசா நாணயங்களைப் புழக்கத்தில் இருந்து விரட்டிவிட்டது. இன்றைய இளைஞர்கள் பலர் ஒரு நயா பைசா என்ற காசைக் கண்ணால்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் கொள்கை அளவில் (in theory) இன்றும் அது செலாவணியில் இருக்கும் நாணயம்தான். நயா பைசாவைத் தொடர்ந்து பின்னாட்களில் ஐந்து பைசாவும் பின்னர் பத்து பைசாவும் கொஞ்சங் கொஞ்சமாக மறைந்தன. இன்று இருபத்தைந்து பைசாதான் குறைந்தபட்ச நாணயமாக விளங்குகிறதெனலாம்.
எது எப்படியிருந்தாலும் கணக்கு மிகவும் சுலபமாகிப் போனது. எல்லாத் தொகைகளுக்கும் ஒரு தசம புள்ளியை இந்தப் பக்கமோ அந்தப் பக்கமோ நகர்த்தினால் பெருக்கலும் வகுத்தலும் முடிந்து போயின. அல்லது பைசா ரூபாயாகவோ ரூபாய் பைசாவாகவோ ஆகிவிட்டது. இதன் விளைவாகக் கணக்கு வாத்தியார்களின் மகிமையும் குறைந்து போயிருக்கக்கூடும்!
ஆனால் இதற்கெல்லாம் கொஞ்ச காலம் பிடித்தது. ஆரம்ப நாட்களில் பரவலான குழப்பம் இருந்தது. படித்தவர்கள் படிக்காதவர்களைவிட அதிகமாகத் தப்பு செய்தார்கள். எனக்கு ஞாபகம் இருக்கிறது, கல்லூரி மாணவனான நான் சென்னைக்கு ரயிலில் வரும்போது என்னிடம் ஒரு வயதான மாது அன்பாகப் பேசிக் கொண்டிருந்தவர், சென்ட்ரல் வந்தவுடன் அடுத்த நாளைக்காகப் புனாவுக்கு ஒரு டிக்கெட் வாங்கித் தரச் சொல்லிக் கேட்டுக் கொண்டார். பணமும் கொடுத்தார். நானும் நல்ல பிள்ளையாக ஓடிப் போய் வாங்கி வந்து கொடுத்தேன். ஆனால் புக்கிங் கிளார்க் ஆறு அணாவுக்குப் பதில் தவறுதலாக ஆறு பைசா பாக்கி கொடுத்துவிட்டார். (அப்போது நயா பைசா வந்த புதிது, எல்லோருமே இது போன்ற தப்புகள் செய்து கொண்டிருந்த சமயம்.) நானும் கண்ணை மூடிக்கொண்டு வாங்கிக்கொண்டு வந்து பெருமையோடு அந்த அம்மாளிடம் சமர்ப்பித்தேன். அவருக்குக் கழுகுக் கண் போலும், உடனே தப்பைச் சுட்டிக்காட்டினார். நானும் சிரமத்தைப் பாராமல் கௌண்டருக்கு ஓடிச் சரியான சில்லறை வாங்கி வந்தேன். ஆனால் அதைக் கொடுக்கும்போது டிக்கெட்டை அவரிடம் கொடுக்க மறந்துவிட்டேன். சில்லறையைக் கண்ணில் எண்ணை விட்டுக்கொண்டு எண்ணிய அந்த மாமியும் இதை கவனிக்காமல் கோட்டை விட்டு விட்டார். நான் வீட்டுக்கு வந்த பிறகு என் பாக்கெட்டில் டிக்கெட் இருப்பது கண்டு திடுக்கிட்டேன். ரிசர்வேஷன் இல்லாத டிக்கெட் (அப்போது அது சகஜம்.) உடனே விழுந்தடித்துக்கொண்டு சென்ட்ரலுக்கு ஓடிப் போய் டிக்கெட்டை ‘கான்சல்’ பண்ணி பணத்தைத் திருப்பி வாங்கியதுகூடப் பெரிதில்லை. அவர் பேச்சோடு பேச்சாகச் சொல்லியிருந்த ஒரு பொது நண்பரின் பெயரை மாத்திரம் வைத்துக்கொண்டு துப்புத் துலக்கி அந்த அம்மாளின் விலாசத்தைக் கண்டுபிடித்ததும் பணத்தை அனுப்பி வைத்ததும் ஒரு நீண்ட கதை!
பின் குறிப்பு : ஒன்று சொல்ல மறந்து விட்டேன். காரல் மார்க்ஸில் ‘ஸ்டேட்’ போல காலக்கிரமத்தில் அதன் அவசியம் தீர்ந்து போன பிறகு, நயா பைசாவின் ‘நயா’ பகுதி ‘உதிர்ந்து’ போயிற்று (withered away) மக்களும் அவர்களைப் பின்பற்றி அரசும் அதை விட்டு விட்டனர்.
நன்றி: உயிர்மை, மே 2005
ரயில் பிரயாணத்தின் கதை – ரயில் பயணங்களில்
ரயில் பிரயாணத்தின் கதை
எஸ்.வி. ராமகிருஷ்ணன்
எனக்கு விவரம் வந்தபின் அமைந்த முதல் நீண்ட ரயில் பிரயாணம் 1945ஆம் ஆண்டில். அப்போதெல்லாம் ரயில் என்றால் நிஜமாகவே “புகைவண்டி.’ அதாவது குப்குப்பென்று புகை விட்டுக் கொண்டு சிறுவர்களின் (ஏன், பெரியவர்களின்கூட) கற்பனையைத் தூண்டிவிடும், நிலக்கரியை எரித்துத் தீயாக்கும் நீராவி வண்டி. மலையாளத்தில் அதன் பெயரே தீவண்டிதான். நமது இலங்கைச் சகோதரர்கள் யாழ்ப்பாணத்துக்கே உரித்தான அழகுத் தமிழில் அதைப் புகை இரதம் என்று அழைக்கிறார்கள்.
அந்தக் காலத்தில் ரயில் வண்டியில் மூன்று வகுப்புகள் இருந்தன. முதல் வகுப்பு என்பது பலருக்கும் எட்டாக்கை . . . அதாவது மிகப்பெரும்பாலானோர்க்கு அப்பாற்பட்டதொரு சங்கதி. வெள்ளைக்கார துரைகளும் ஐ.ஸி.எஸ். அதிகாரிகளும் இந்தியர்களில் ஜமீன்தார்களும் அதில் பிரயாணம் செய்தார்கள். இரண்டாம் வகுப்பு என்பதும் (கடந்த பத்தாண்டுகளில் ஏறக் குறையக் காணாமலேயே போய்விட்ட இன்றைய முதல் வகுப்பின் முந்தைய அவதாரம்) அன்றைய ரூபாய் மதிப்பின்படி மிகவும் விலை உயர்ந்ததாகக் கருதப்பட்டது. செல்வந்தர்கள் மற்றும் உயர் மத்திய வகுப்பினரில் சிலருமே அதில் பயணித்தனர்.
மூன்றாவது வகுப்புதான் ஜனதா வகுப்பு. டிக்கெட் இல்லாத பஞ்சை பனாதைகளிலிருந்து மத்திய தர வகுப்பினர் வரை எல்லோராலும் உபயோகிக்கப்பட்டது. இதன் நிலைமை இன்று நினைத்துப் பார்க்க முடியாத அளவு மோசமாக இருந்தது. மூன்றாவது வகுப்புப் பெட்டி என்பது எவ்வளவு பேர் வேண்டுமானாலும் ஏறக்கூடியதொரு சங்கப் பலகை. எந்தவிதமான ரிசர்வேஷனும் கிடையாது. உட்கார இடம்கூட அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது என்றால் தூங்கும் வசதியைப் பற்றிப் பேச வேண்டியதில்லை. ஆனால் ஒன்று. பிரெஞ்சுக்காரர்கள் ஆண்டு வந்த இந்தோ சைனாவில் ரயில் இதைவிட மோசம் என்று சொன்னார்கள். அங்கே நாலாவது வகுப்பு ஒன்றும் உண்டாம். அதில் ஸீட்டுகளே (பெஞ்சுகள்) கிடையாது, தரையில் உட்கார வேண்டுமாம்.
மூன்றாவது வகுப்பைப் பற்றி இன்னொரு விஷயம். அதில் மின்சார விசிறிகள் கிடையாது என்பது. கோடையில் பயணிகள் பனை ஓலை விசிறிகளைக் கொண்டு வந்து வீசிக்கொள்வார்கள். அதேசமயம் ஒன்று சொல்ல வேண்டும். இன்று போலில்லாமல் பெட்டிகளில் பெரும்பகுதி மரத்தினால் ஆனது. அதனால் இப்போதைய பெட்டிகள்போல் அத்தனை சூடாகவில்லை.
வண்டி கிளம்பும் ஸ்டேஷனில் போர்ட்டர்கள் யார்டில் இருந்து வண்டி வரு முன்பே அதில் ஏறி, சாமான்கள் வைப்பதற்காக மேலே இருக்கும் பலகைமீது ஒரு அழுக்குத் துண்டை விரித்து வைப்பார்கள். சுமார் எட்டணா அல்லது பன்னிரண்டு அணா பேரத்துக்கு அது “ஸ்லீப்பிங் பெர்த்’தாகத் தரப்படும். அந்தப் பலகை மீது ‘For Luggage only’ என்று ஆங்கிலத்தில் எழுதியிருக்கும் வார்த்தைகளை எவரும் கண்டுகொள்வதில்லை. ரயிலில் ஏறுவது ஒரு “பிரம்மப் பிரயத்தனம்.’ அப்போதெல்லாம் எல்லோரும் ஏகப்பட்ட சாமான்கள் மூட்டை முடிச்சுகளோடுதான் ரயிலேறுவார்கள். இரும்பினால் ஆன டிரங்குப் பெட்டிகள், ஹோல்டால், தண்ணீர்க் கூஜா இத்தியாதி கண்டிப்பாக இருக்கும். தவிர பட்சணக் கூடைகள், அம்மா பெண்ணுக்காகப் பறித்த (வீட்டு மரத்தில் பழுத்த) மாம்பழம் முதலியவும் அவ்வப்போது இருக்கும். ஹோல்டால் என்பது படுக்கை மட்டுமல்லாமல் எல்லா விதமான கண்டா முண்டா சாமான்களையும் திணிக்கக்கூடியது. லக்கேஜ் எடையைக் குறைவாகக் காட்டுவதற்காகக் கல்லூரி மாணவர்கள் புத்தகங்களை ஹோல்டாலில் புகுத்திவிடுவதும் உண்டு.
ஒவ்வொரு ஸ்டேஷனிலும் ரயில் வண்டி இப்போதைவிட அதிக நாழிகை நிற்கும். நம்மை ஏற்றிவிட வேண்டியது போர்ட்டரின் பொறுப்பு. எறும்பு தன் எடையைவிட அதிகமான பளுவைத் தூக்குகிறது என்று உயிரியல் விஞ்ஞானிகள் சொல்லுகிறார்களே, அதை நமது பழைய காலப் போர்ட்டர்கள் செய்தே காட்டினார்கள்! ரயில் வந்து நின்றவுடன் உள்ளே ஏற்கனவே இருப்பவர்களுக்கும் “வந்தேறி’களுக்கும் ஒரு பெரிய போராட்டம் துவங்கும். ஜன்னலோரம் உட்கார்ந்திருப்பவர் “”ஏன்யா இங்கேயே வந்து விழறீங்க? பின்னால் பெட்டியெல்லாம் காலியாக் கிடக்குது” என்று ஆசை காட்டுவார். பின்புறப் பெட்டிகளின் நிலைமை அவருக்கு எப்படி ஞானதிருஷ்டியில் புலப்பட்டது என்பது ஒரு மர்மம்.
அந்த யுத்தத்தில் உள்ளே ஏறுபவர்களின் உறுதுணையான போர்ட்டரோ இதை ஒன்றும் லட்சியம் செய்யாமல் “”நீங்க பாட்டுக்கு ஏறுங்க சாமி, சாமானை நான் ஏத்திடறேன்” என்று சொல்லிவிட்டுச் சாமான்களைக் கூசாமல் ஜன்னல் வழியாய் உள்ளே தள்ளிவிடுவார் (அன்றைய ரயில் பெட்டியில் ஜன்னல் கிடையாது.) உள்ளே அணிவகுத்து நிற்பவர்கள் “”ஐயோ பாவி என் காலிலே போட்டுட்டியே” என்று கூக்குரலிடுவார்கள். அது எல்லாம் மாய்மாலம் என்று அனுபவ பூர்வமாய்த் தெரிந்து வைத்திருக்கும் போர்ட்டரோ மீதி சாமான்களையும் தள்ளிவிடுவார். அதற்குள் சாமான்களின் உரிமையாளக் குடும்பங்களும் எப்படியோ அடித்துப் பிடித்துக்கொண்டு உள்ளே போயிருக்கும். அடுத்த படலம் போர்ட்டருக்குக் கூலி கொடுத்தல். குடும்பஸ்தர் முதலில் பேசிய எட்டணாவைக் கொடுப்பார். உடனே போர்ட்டர் நன்கு மனப்பாடம் செய்யப்பட்ட சில வசனங்களை அவிழ்த்துவிடுவார். “”கஸ்டத்தைப் பார்த்துக் காசு கொடுங்க ஐயா; பிள்ளை குட்டிக்காரன் சாமி. இன்னும் நாலணா போட்டுக் கொடுங்க” என்ற ரீதியில். கடைசியில், கூட இரண்டணா வாங்கிக்கொண்டு திருப்தியடைவார்.
ரயில் கிளம்பும்வரை பயணிகளின் மத்தியில் “டென்ஷன்’ நீடிக்கும். மண்ணின் மைந்தர்கள் வந்தேறிகளுக்கு இடம்விடாமல் தாங்களே ஸீட்டை ஆக்கிரமித்திருப்பார்கள். வேண்டுமென்றே காலை நீட்டிப் படுத்துக்கொண்டு தூங்குவது போல் பாசாங்கு செய்வதும் உண்டு. ஆனால் ரயில் நகர்ந்தவுடன் இந்தியா -சீனா மாதிரி உறவுகள் மாறிவிடும். இன்முகம் தலையெடுக்கும். “”நீங்க எங்கே ஸôர் போறேள்?” “”தம்பிக்கு எந்த ஊரு?” போன்ற விசாரிப்புகள் சுமுக உறவுக்கு வழி வகுக்கும். இதில் வேடிக்கை என்னவென்றால் அடுத்த ஸ்டேஷன் வருவதற்குள் இரண்டு கட்சிக்காரர்களும் ஒன்றாகிவிடுவார்கள். மட்டுமல்லாது புதிதாக ஏற வருபவர்களை விரட்டுவதில் ஒன்றாகச் செயல்படுவார்கள்.
மூன்றாவது வகுப்பில் உள்ளே சாப்பாடு வராது. சாப்பாட்டு நேரத்தில் வரும் ஜங்ஷன்களில் அருமையான சாப்பாடு கிடைக்கும். காண்டீன் வரை போய்ச் சாப்பிட்டுவிட்டுத் திரும்ப வேண்டிய நேரத்துக்கு வண்டியும் நிற்கும். காண்டீனில் சாப்பாடு மட்டுமல்லாது டிபனும் காப்பியும் உண்டு. வெஜிடேரியன் காண்டீனும் நான்-வெஜிடேரியன் காண்டீனும் பிளாட்பாரத்தின் இருமுனைகளில் வடதுருவம் தென்துருவம்போல் அமைந்திருக்கும். வெஜிடேரியன் காண்டீனில் காப்பிதான் கிடைக்கும். டீ வேண்டுமென்றால் அசைவ காண்டீனுக்கு (அதாவது பிளாட்பாரத்தின் மறுகோடிக்குத்)தான் போக வேண்டும். தேநீர் அசைவமாகக் கருதப்பட்டது ஏன் என்று தெரியவில்லை. காண்டீனைத் தவிர, பிளாட்பாரத்தில் தயிர்சாதம், புளியஞ்சாதம் முதலிய பட்டைச் சோறுகள் கிடைக்கும். அநேகமாக பாக்கு மட்டையில் சுற்றி அழகாகப் “பேக்’ செய்யப்பட்டிருக்கும். பெட்டியில் உட்கார்ந்தபடியே வாங்கலாம். வெளியே இறங்க முடியாதவர்களும் பெண்களும் இந்த வசதியை உபயோகித்துக் கொண்டனர். அதே சமயம் ஆண் துணையற்ற பெண் பாலர்க்கு இரங்கி ஆண்கள் அவர்களின் கூஜாவைக் கொண்டு போய்க் காப்பி வாங்கி வருவதும் உண்டு.
பிளாட்பாரத்தில் வயிற்றுப் பசியைத் தவிர அறிவுப் பசியைத் தீர்க்கும் சாதனங்களும் விற்கப்பட்டன. ரயில் வந்து நின்றதும் “ஹிந்து பேப்பர், சுதேசமித்திரன், தினமணி, இந்து நேசன், சந்திரோதயம்’ என்று ஒப்பித்தவாறு பையன்கள் ஜன்னல்தோறும் முற்றுகையிட்டுப் பத்திரிகை விற்பார்கள். இதில் “இந்துநேசன்’ லக்ஷ்மிகாந்தன் கொலைக்குப் பிறகு நின்று போயிற்று.
கடைசி நிமிஷத்தில் ஓடிவந்து ரயிலைப் பிடிப்பவர்களுக்கு டிக்கெட் வாங்க நேரமில்லையென்றால் கார்டினிடம் (Guard) ஒரு வார்த்தை சொல்லிவிட்டு ரயிலில் தொற்றிக்கொள்ளலாம். பின்னால் டிக்கெட் இன்ஸ்பெக்டர் பிரயாணியிடம் வந்து கட்டணத்தை வசூலித்துக் கொண்டு காகித ரூபத்தில் (அட்டை அல்ல) டிக்கெட் கொடுத்துவிட்டுப் போவார். அதற்காகக் கூடுதல் சார்ஜ் ஒன்றும் கிடையாது. டிக்கெட் இல்லாமல் பயணித்து மாட்டிக்கொண்டால் கடைசி ஜங்ஷனிலிருந்து இரட்டைக் கட்டணம் செலுத்தினால் போதும். டிக்கெட் இல்லாமல் பயணிப்பதில் நிபுணர்கள் உண்டு. செக்கிங் இன்ஸ்பெக்டர் வந்தால் அவர்களுக்கு மூக்கில் வியர்த்துவிடும்.
அதற்குள் வண்டி நின்றால் அவர்கள் ஓசைப்படாமல் நழுவுவார்கள். இல்லாவிடில் கழிப் பறைக்குள் புகுந்து தாளிட்டுக்கொண்டு நேரத்தைக் கடத்துவதும் உண்டு. அந்தக் காலத்துப் பிரயாணிகளுக்கு இரக்க சுபாவம் அதிகம் என்று நினைக்கிறேன். யாரும் இன்ஸ்பெக்டரிடம் அவர்களைக் காட்டிக் கொடுக்கமாட்டார்கள். இத்தனைக்கும் பாத்ரூம் போக முடியாமல் அவதிப்பட்டுக்கொண்டிருப்பவர்கள் இந்தப் பிரயாணிகளே.
அன்றைய புகைவண்டிப் பிரயாணத்தின் இன்றியமையாத ஒரு அம்சம் ரயில் பிச்சைக்காரர்கள். அதில் பாடுவோர், பாடாதோர் என்ற இருவகை உண்டு. பாடுவோரில் சிலர் தங்கள் காதில் கையை வைத்து அழுத்திக்கொண்டு அடிவயிற்றிலிருந்து நாதம் எழுப்புவர். அவர்களே தங்கள் பாட்டைக் கேட்க விருப்பம் இன்றி காதைப் பொத்திக் கொள்கிறார்களோ என்று தோன்றும். நெருப்புப் பெட்டியே தாள வாத்திய மாகப் பயன்படும். இன்னொருவரின் துணை கொண்டு வரும் குருட்டுப் பிச்சைக்காரர்களும் சகஜமான காட்சி. அவர்கள் எல்லோருக்கும் பிச்சை தாராளமாகவே கிடைத்தது. இவர்களைக் குறித்த ஒரு விசேஷமான சங்கதி என்னவெனில் எந்த ராஜா எந்தப் பட்டணம் போனாலும் என்ன டிக்கெட் செக்கிங் இருந்தாலும் இவர்களில் எவரும் ஒருபோதும் டிக்கெட் வாங்கியதாக வரலாறு இல்லை என்பது. இவர்கள் பின்னால் நடந்து ஒரு புண்ணியமும் இல்லை என்று ரயில்வே ஊழியர்கள் பிச்சைக்காரர்களைத் “தண்ணீர் தெளித்து’ விட்டிருந்தார்கள் என்று எண்ணுகிறேன்.
கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்ன என்னுடைய முதல் ரயில் பிரயாணத்தின் ஒரு காட்சி என் மனதில் விரிகிறது. அப்போது நான் மதுரையிலிருந்து தென்காசிக்கு மூன்றாம் வகுப்பில் போய்க்கொண்டிருந்தேன். ஏதோ ஒரு ஸ்டேஷனில் நின்ற ரயில் கிளம்பும் தருணத்தில், பாமரள் (“குடிமகள்’ மாதிரி, “பாமரனி’ன் பெண்பால்) போலத் தென்பட்ட ஒரு குடுகுடு கிழவி ஏறி “”இந்த வண்டி விருதுபட்டி போகுமா” என்று கேட்டாள் சிலர் “”போகாது, போகாது, இறங்கு” என்று பதறினார்கள். நல்லவேளையாக அதைக் கேட்ட ஒருவர் மட்டும் “”போகும் பாட்டி, உள்ளே வா” என்று அவளை ஏற்றிக்கொண்டார். “”நீ விருதுபட்டி என்று சொன்னால் இப்போதெல்லாம் யாருக்குப் புரியும்? விருதுநகர் என்று சொல்லு” என்று அறிவுரையும் வழங்கினார். முதலில் விருதுபட்டியாக இருந்ததுதான் பின்னால் ஸ்டைலாக விருதுநகர் என்று மாறினது அப்போதுதான் எல்லோருக்கும் தெரியவந்தது. “விருதுபட்டிச் சனியனை விலைக்கு வாங்குவது’ எங்கிருந்து வந்தது என்பதும் புரிந்தது. சனியனைப் பற்றிய கதைதான் தெரியவில்லை. இது நடந்தது 1945இல். அப்பொழுதே விருதுபட்டி என்ற பெயர் அறுகிப் போய்விட்டிருந்தது போலும், சில வயதான பட்டிக்காட்டுப் பெண்பிள்ளைகளிடம் தவிர!
ரயிலைப் பற்றிய இந்தச் சித்திரம் 1945-1955 என்ற கால கட்டத்தியது. அதன் பிறகு பெரிய பல மாற்றங்கள் நிகழ்ந்தன. இருக்கை வசதி, படுக்கும் வசதி என்று மூன்றாம் வகுப்புப் பிரயாணிகளுக்குத் தொடர்ந்து யோகம் அடித்தது. அதுவரையில் கீழ் வகுப்புப் பயணிகள் அதையெல்லாம் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. இதற்குக் கொஞ்ச காலம் முன்னால், யாருடைய பர்ஸ÷க்கும் எட்டாமல் பெரும்பாலும் காலியாகவே ஓடிக்கொண்டிருந்த பழைய முதல் வகுப்பு எடுக்கப்பட்டு இரண்டாவது வகுப்புக்கு முதல் வகுப்பு என்ற நாமகரணமும் நடைபெற்றது. கூடவே பல வருடங்கள் (யுத்த காலத்திலிருந்து) காணாமற்போய் அண்மையில் திரும்பி வந்திருந்த மத்திய வகுப்பு (இண்டர் கிளாஸ்) இரண்டாம் வகுப்பென்ற பெயரைத் தட்டிக்கொண்டது. இந்த வகுப்புப் பெட்டிகளில் குஷன் தைக்கப்பட்ட ஸீட்டுகள் இருக்கும். பிரயாணிகளின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டதால் உட்காரும் வசதி உறுதிப்படுத்தப்பட்டது. மூன்றாம் வகுப்பில் ரிசர்வேஷன் அடியோடு இல்லாத நிலையில் இது ஒரு கூடுதல் அனுகூலந்தான். ஆனால் தூங்கும் பெர்த் வசதி கிடையாது. பாத்ரூம்கள் மூன்றாம் வகுப்பைவிட இன்னும் வசதியுடனும் சுத்தமாகவும் இருக்கும். பிரயாணிகளின் தரமும் ஓரளவு உசத்தியாக இருக்கும். ஆனால் கட்டணம் கணிசமாக அதிகம். இதையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்து உயர் வகுப்பினர்கூடப் பகல் நேரப் பயணங்களுக்கு மட்டுமே இதைப் பெரும்பாலும் உபயோகித்தனர்.
அடுத்து வந்த ஆண்டுகளில் மூன்றாம் வகுப்பில் தூங்கும் வசதி (ஸ்லீப்பர்)யும் உட்காரும் வசதியும் (ஸீட் ரிசர்வேஷன்) பெருகவே, உட்கார மட்டும் வசதி கொண்ட இந்தப் புதிய இரண்டாம் வகுப்பை நாடுவார் இல்லாமற் போக, அதுவும் ஒருவழியாக நீக்கப்பட்டு மூன்றாம் வகுப்பிற்கே அந்தப் பெயர் சூட்டப்பட்டது. இன்னும் நீடிக்கிறது.
பின்னுரை
குளிப்பதற்கு வசதி படைத்த பாத்ரூம்களும் குடி தண்ணீர் வசதியும் கொண்டு மின் விசிறிகள் நிறைந்து ஆர்டர் பண்ணினால் சாப்பாடும் வரும் இன்றைய ஸ்லீப்பர்களைப் பார்த்தால் இவைதான் முந்தைய யுகத்தின் மூன்றாம் வகுப்புப் பெட்டிகளா என்று வியப்பாக இருக்கிறது. வேறு எதில் நடந்ததோ இல்லையோ, இந்த விஷயத்தில் மட்டுமாவது சுதந்திர இந்தியாவில் ஒரு காலத்தில் மாக்களாக நடத்தப்பட்ட சாமானியர்கள் மக்களாக உயர்வு பெற்றிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.
இரயில் பயணங்களில்
அசோகமித்திரன் – (எஸ்.வி. ராமகிருஷ்ணனைத் தொடர்ந்து)
ஆகஸ்ட் 2004இல் மதுரை சென்றுவிட்டு வந்தேன். மிகவும் வசதியான இரயில் வண்டி, வசதியான படுக்கை, நெரிசலேயில்லாத சூழ்நிலை, மிகக் குறைந்த சப்தமெழுப்பும் தொழில்முறை நுட்பம், குறித்த காலத்தில் வண்டி போய்க்கொண்டிருப்பது – எல்லாமே தூக்கம் வராமல் செய்தன. எஸ்.வி. ராமகிருஷ்ணன் ஒரு பத்து வருட இந்திய இரயில் வரலாறைக் கூறியிருந்தார். அவர் கூறியது ஒவ்வொன்றும் மிகையில்லாத உண்மை என்று நான் கூற முடியும். நான் இன்னும் பத்தாண்டுகளுக்கு முன்பே, அதாவது 1935ýருந்தே இந்திய இரயிலுக்கு அடிமைப்பட்டுவிட்டேன்.
அன்றைய இரயில் கால அட்டவணையைப் பார்த் தால் சில நிலையங்களுக்குப் பக்கத்தில் R என்றும் W என்றும் அல்லது RW என்றும் இருக்கும். எங்கள் குடும்பம் இரயில் குடும்பமாதலால் அந்த ஆங்கில எழுத்துக்களின் பொருள் தெரியும். R என்றால் அந்த நிலையங்களில் சிற்றுண்டி கிடைக்கும். W என்பது தண்ணீர் நிரப்பும் நிலையங்கள். பயணிகள் பெட்டிக்குத் தண்ணீர் கிடைக்காது போனாலும் இஞ்ஜின் தண்ணீர் குடிக்கும். இப்போது அதெல்லாம் கிடையாது.
பயணத்தின்போது R நிலையம் வந்தால் ஒரு பாத் திரத்தை எடுத்துக்கொண்டு ஒருவரே சமாளிக்கும் சிற்றுண்டிச்சாலைக்குப் போய் காபி வாங்கிக்கொண்டு வரவேண்டும். எங்கள் பயணம் முந்தைய இரவு சிகந்தராபாத்தில் தொடங்கி பெறுவாடா (இன்றைய விஜயவாடா) நிலையத்தில் இரயில் மாறி சூளூர்ப்பேட்டை என்ற நிலையத்திற்கு வந்தடையும்போது அடுத்த நாள் மாலை நான்கு அல்லது நான்கரையாகும். இப்போது அந்த நிலையம் தெலுங்குப்படுத்தப்பட்டு சூளூர்ப்பேட்டா என்றாகிவிட்டது. அந்தச் சிறு நிலையத்தின் சைவ சிற்றுண்டிச் சாலையை நடத்தியவர் என் பள்ளி நண்பன்/விளையாட்டுத் தோழன்/எதிரி சந்தானத்தின் உறவினர். காபி மிகவும் நன்றாக இருக்கும். ஆனால் சிறு பையனாக இருந்து சுடச்சுடக் காபி நிறைந்த சொம்பைப் பத்திரமாக அம்மாவிடம் கொண்டு வந்து கொடுப்பது மிகத் தீவிரமான அனுபவம். ரிசர்வேஷன் கிடையாது, எல்லாரும் படுக்கை, டிபன்காரியர், கூஜா, இரும்பு டிரங்கு சகிதம் பயணம் செய்தாக வேண்டும். தோளுயரப் பையன், பெண்ணாக இருந்தாலும் வயது இரண்டரைதான் என்று சாதிக்கும் மக்கள், டிக்கெட்டே இல்லாமல் பயணம் செய்யும் பிச்சைக்காரர்கள், சந்நியாசிகள் – இவ்வளவு தடை களையும் மீறிக் காபி வாங்கி வருவது பெருமையாக இருக்கும். அதுவும் சந்தானத்தின் மாமா அல்லது சித்தப்பா கொடுத்த காபி. ரயிலே மொத்தம் ஏழெட்டுப் பெட்டிகளோடு முடிந்துவிடும். ஆதலால் எந்தப் பெட்டியின் கதவு உங்கள் எதிரில் இருக்கிறதோ அதில் ஏறியே தீர்ந்தாக வேண்டும். வண்டியில் ஏற்கெனவே உள்ளவர்கள் ஏறுபவர்களைப் பரம விரோதியாகப் பார்ப்பார்கள். ஏறுபவர்களுக்குப் பெட்டியில் இருப்பவர்கள் மனதில் ஈரமே இல்லாத அரக்கர்களாகத் தோன்றுவார்கள். உண்மையில் இரயில் எந்த நிலையத்தில் நின்றாலும் ஒவ்வொரு கதவருகிலும் தேவாசுரப் போர் நிகழும்.
பெஜ்வாடா – சென்னைக்கிடையேதான் அபூர்வ இசை மேதைகள் அவர்களுடைய மேதைமையைத் திட்டமிட்ட பிரதிபலன் இல்லாது பயணிகளுக்கு அளிப்பார்கள். ஆர்மோனியம்தான் அவர்கள் கையில் எப்படியெல்லாம் செயல்படும்? அந்த நாளில் சினிமா சங்கீதமே ஆர்மோனியத்தால்தான் உருவானது என் றால் அது பொய்யாகாது. சைகல், பங்கஜ்மல்ýக், கே. சி. டே, கண்ணன் பாலாவிýருந்து அன்றைய தமிழ் -தெலுங்கு சினிமா நடிகர்களின் பாடல்கள் வரை அந்த ஆர்மோனியத்தில் விசேஷ ரசாயனமாக உருவாகும். ஒரு தமிழ்க் கட்டுரையில் ராண்டார் கை என்ற தமிழ் சினிமா வரலாற்றாசிரியர் ஒரு பாட்டைக் குறிப்பிட்டு “அந்த நாளில் இந்தப் பாட்டைப் பாடாத பிச்சைக்காரரே கிடையாது” என்றார். அந்தப் பாட்டின் முதல் வரி: ஐயா சிறு பெண் ஏழையென்பால் மன மிரங்காதா?
இன்று இரயில் பயணத்தின்போது ஏதோ போட்டோ எடுக்கப் போவதற்குப் போல உடை உடுத்திக்கொண்டு போகிறார்கள். அந்த நாளில் அது சாத்தியமில்லை. இரயில் பயணம் என்றாலே கரி, அழுக்கு. ஆதலால் இரயிலுக்குப் போட்டுக்கொள்வது என்று ஒரு பழைய சட்டை அல்லது பாவாடை தாவணி அல்லது புடவைதான் பொறுக்கி எடுத்து வைக்கப்பட்டிருக்கும். இந்த “ஐயா சிறு பெண்” பாட்டைப் பயணிகள் பாடினாலும் பொருத்தமாக இருக்கும்.
ஒரு ஜீவனுள்ள கதை அல்லது கட்டுரை உடனே படிப்போரை நினைவில் ஆழ்த்தி அவர்களுடைய அனுபவங்களையும் எழுத்தாளருடையதுடன் பொருத் திக்கொள்ளச் செய்யும். எஸ்.வி. ராமகிருஷ்ணனின் கட்டுரை ஓர் எடுத்துக்காட்டு.
நன்றி: உயிர்மை
ஐஸூக்கு வந்த மவுஸ்!
ஐஸூக்கு வந்த மவுஸ்! – எஸ்.வி. ராமகிருஷ்ணன்
1944. ஐரோப்பாவில் மட்டுமல்லாது இந்தியாவில் இம்பால் முனையிலும் (மணிப்பூர் சமஸ்தானம் – இந்திய பர்மா எல்லை) உலக யுத்தம் உக்கிரமாக நடந்த காலம். தாராபுரத்தில் பார்க் ரோட்டில் எங்கள் வீட்டிலிருந்து ஐந்தாறு காம்பவுண்டுகள் தள்ளி இருந்த ஒரு பங்களாவை (காம்பவுண்டு வைத்த தனி வீடுகளை அப்படித்தான் சொன்னார்கள். தனி வீடு என்று தனியாகச் சொல்ல வேண்டியதுகூட இல்லை. ஏனெனில் திறீணீt என்ற கூடுகளை, பம்பாய் போய் வந்தவர்களைத் தவிர யாரும் பார்த்ததுகூட இல்லை) ராணுவத்தினர் எடுத்துக்கொண்டு இருந்தனர். அங்கே எப்போதும் சீருடை அணிந்த துருப்புகள் ஜீப்பிலும் மிலிட்டரி லாரியிலும் வருவதும் போவதுமாக இருக்கும். அவர்களுக்கும் ஊர்க்காரர்களுக்கும் தொடர்பே இருக்கவில்லை. அது ஒரு தனி உலகம்.
ஒரு நாள் பார்க் ரோட்டில் ஒரு பரபரப்பு. ராணுவத்தினரின் உபயோகத்துக்காக வந்த ஐஸ் கட்டிகள் உபரியாக இருந் திருக்க வேண்டும். பாறை போன்ற ஒரு பெரிய ஐஸ் கட்டியை அவர்கள் வீட்டுக்கு வெளியே சாலையில் கொண்டுவந்து போட்டுவிட்டுப் போய்விட்டார்கள். எல்லோரும் காணாதது கண்ட மாதிரி அதை வெட்டி எடுத்துக் கட்டிகளை வீட்டுக்குக் கொண்டுசென்றனர். எங்கள் வீட்டு சமையற்காரர் அப்பா துரையும் தன் பங்குக்கு ஒரு கட்டியைக் கொண்டுவந்து எங்கள் எல்லோருக்கும் ஐஸ் சர்பத் பண்ணிக் கொடுத்தார். ஆம். அன்று ஐஸ் என்பது ஒரு அபூர்வமான பொருள். ஃபிரிட்ஜ் என்பது (முனிசிபல் நகரமான) தாராபுரத்தில் யார் வீட்டிலும் இல்லாத காலம். வியாபார ரீதியில் பனிக்கட்டிகள் விற்கப்பட வில்லை. வெள்ளைக்காரர்களுக்கு ஐஸ் ஒரு அத்தியாவசிய மான பொருள். ஆதி நாட்களில் ஆஸ்திரேலியாவிலிருந்து கப்பலில் பாளம் பாளமாக இறக்குமதி செய்து ஐஸ் ஹவுஸில் (இன்றைய விவேகானந்தா ஹவுஸ்) வைத்திருப்பார்களாம். அங்கிருந்து உஷ்ணம் ஏறாமல் பாதுகாப்பாக மரத்தூள் சுற்றி பல ஊர்களுக்கு ரயில் மூலம் அனுப்பப்படும். ரயில்வேயிலேயே முதல் வகுப்புகளில் (அன்றைய முதல் வகுப்பு ஒரு ‘சூப்பர் கிளாஸ்’ என்று சொல்லலாம். ஆங்கிலேயர் போன பின்னர் பிரயாணிகளே இல்லை என்று நீக்கப்பட்டது) உபயோகத்துக் காகவும் ஜில்லாத் தலைநகரங்களில் இருந்த இங்கிலீஷ் கிளப்புகளில் துரைகளின் குடி உபயோகத்துக்காகவும் சென்றது.
நான் சொல்லும் காலத்தில் இறக்குமதிக்கெல்லாம் அவசி யம் இருக்கவில்லை. ஐஸ் உற்பத்தி செய்யும் ரெப்ரெஜிரேஷன் சாதனம் வந்துவிட்டது. ஆனால் மக்களின் பரவலான உபயோகத்துக்கு ஏற்ற மாதிரியல்ல. கடைவீதியில் போய் ஐஸ் கட்டி வாங்க முடியாது. அதனால் ஐஸ் என்றால் சிறுவர்களுக்கு அத்தனை ‘எக்சைட்மெண்ட்.’ ஒரு கட்டி கிடைத்தால் ஆசையோடு கடித்துச் சாப்பிடுவார்கள். “பல் போயிடுண்டா” என்று கூடவே பெரியவர்கள் கத்திக்கொண்டிருப்பது அவர்களின் காதிலேயே ஏறாது.
அவர்களின் ஆசை நிறைவேறும் காலமும் சீக்கிரமே வந்தது. 1945 ஆகஸ்டில் உலக யுத்தம் முடிந்துபோயிற்று. அடுத்த ஒரு வருடத்தில் ராணுவ உபயோகத்துக்காக வர வழைத்து வைத்திருந்த சாதனங்கள் பொது உபயோகத்துக்காக வியாபாரத்துக்கு வந்திருக்க வேண்டும். ஆக, சுதந்திரம் வருவதற்குச் சற்று முன்பே எங்கள் பள்ளிக்கூட வாசலில் ‘குச்சி ஐஸ்’ என்ற புதிய வஸ்து தோன்றியது. அதுவரை மிட்டாய், சாக்லேட், பர்பி, கொய்யாப் பழம், இலந்தை, வடாம் முதலியவைதான் பள்ளிச் சிறுவர்களின் வேட்டை. இப்போது போட்டியாகக் குச்சி ஐஸ் முளைத்தது. மதிய உணவு இடை வேளையில் இந்தப் புதுமையைச் சுற்றி நாங்கள் கூட்டம் போடுவோம். ஆளுக்கு அரையணா வாங்கிக்கொண்டு (அதாவது முதலில் ஆர்டர்கள் எடுத்துக்கொண்ட பின்னர்) ஐஸ்காரன் ராஜா தன் அதிசய வஸ்துவை உண்டுபண்ணுவான். ஈரத் துணியில் சுற்றி வைத்திருந்த ஒரு பெரிய ஐஸ் கட்டியை எடுத்து தேங்காய், மாங்காய் மாதிரி துருவுவான். ஒரு கைப்பிடி அளவு துருவலை ஒரு குச்சியைச் சுற்றி பைத்துணியால் பிடித்து இறுக்குவான். ஐஸ் துருவல் எப்படியோ குச்சியைச் சுற்றி ஒட்டிக்கொண்டுவிடும். அந்த அற்புதத்தை நாங்கள் கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருப்போம்.
அடுத்தது தித்திப்பான சர்பத் எஸென்ஸை அதன் மேல் ஊற்றி எங்களுக்கு கொடுப்பான். நாங்கள் அதைச் சுவைக்கச் சுவைக்க அது உருகி எங்கள் சட்டையில் வழிந்துகொண்டே இருக்கும். இப்போதெல்லாம் ஐஸ் எந்தத் தண்ணியில் உண்டாக் கப்பட்டது, அமீபா இருக்குமா, சேர்க்கப்பட்டிருக்கும் கலர்கள் அங்கீகரிக்கப்பட்டவையா என்றெல்லாம் பெரியவர்கள் மட்டு மல்லாது சிறுவர்கள்கூட கவலைப்படக்கூடும். அன்று அதைப் பற்றியெல்லாம் யாரும் அலட்டிக்கொள்ளவில்லை. ஊரில் காலரா, டைபாய்டு போன்ற விஷ ஜுரங்கள் பரவியிருந்தால் மட்டுமே எங்களை எச்சரித்தார்கள்.
குரங்காக ஆரம்பித்து மனிதனாக வளர்ச்சி பெற்றது போலவே, குச்சி ஐஸின் அடுத்த பரிமாணத் தோற்றம் தொடர்ந்தது. இதன் பெயர் ஐஸ்புரூட். இப்போது ராஜாவுக்கு பதில் ஒரு கூஜா வந்து சேர்ந்தான் (அவனுடைய பெயர் தெரிய வில்லை). ஒரு வினோதமான பெட்டி அவனிடம் இருக்கும். அதில் நிறையக் குழிகள் உண்டு. ஒவ்வொன்றிலும் எஸென்ஸ் கலந்த ஸிரப்பை ஊற்றி அதற்கு நடுவில் ஒரு குச்சியையும் செருகிவிட்டு அந்தப் பெட்டியை லொடலொடவென்று ஆட்டு வான். பெட்டிக்குள் பனிக்கட்டியையும், உப்பையும் கலந்து போட்டிருப்பான் என்று கேள்விப்பட்டேன் (அது அதிகக் குளிர்மையை விளைவிக்குமாம்). காசையும் கொடுத்துவிட்டுக் கொதிக்கும் வெய்யிலில் நாங்கள் பொறுமையாக (சில சமயங் களில் பொறுமை இல்லாமலும்) காத்துக்கொண்டிருப்போம். கடைசியில் கோயில் கதவு திறக்கிறாப் போல, ‘ரெடி’ என்று சொல்லி ஆளுக்கு ஒன்றாக எங்களிடம் ஒன்று கொடுப்பான். நாங்கள் அனைவரும் ‘ஏழாவது சொர்க்கத்துக்கு’ போவோம்.
இன்னும் இரண்டு வருடங்களில் மெஷினில் பண்ணிய ‘ரெடிமேட்’ ஐஸ்புரூட்டுகள் வரலாயின. இவை இன்னும் கெட்டியாக அமைந்திருக்கும். அளவில் பெரியது. அதற்குத் தகுந்தாற்போல விலையும் ஓரணா. தரத்தில் இது (கையால் எங்கள் முன்னிலையில் செய்த) பழைய ஐஸ்புரூட்டை விட உயர்ந்ததுதான்.
ஆனாலும் காத்துக்கொண்டிருந்து வாங்கிச் சாப்பிட்ட (அம்மா சுடச்சுடப் பண்ணி ஒவ்வொன்றாக நம் இலையில் போடும் தோசையைப் போன்ற) ‘த்ரில்’லும் திருப்தியும் இதில் இருக்கவில்லை.
நன்றி: உயிர்மை ( நவம்பர் 2005)
உடைந்த கையை ஒட்டின கதை
உடைந்த கையை ஒட்டின கதை
(1943)
எஸ்.வி. ராமகிருஷ்ணன்
என் ஆறாவது பிறந்த நாளைக் கொண்டாடி ஒரு வாரம்தான் ஆகியிருந்தது. ஜனவரி 1943. யுத்தத்தின் தாக்கம் உக்கிரமாக இருந்த காலம். நான் எண்ணும் எழுத்தும் அரைகுறையாகக் கற்றுக் கொண்டு ஆனால் பள்ளிக் கூடத் தில் சேராமல் சுதந்திரப் பறவையாக இருந்த கடைசிக் காலம். நாள் முழுக்க விளையாட முடியும் என்றிருந்த நேரம். சென்னையில் இருந்து வந்திருந்த, என் வயதை ஒத்த உறவுக்காரப் பெண் சரோஜா வுடன் மும்முரமாக சிங்க விளை யாட்டு விளையாடிக்கொண்டி ருந்தேன். நான்தான் சிங்கம். அவள் தயைகூர்ந்து ஆடாக இருக்க ஒப்புக் கொண்டிருந்தாள். சிங்கமாகிய நான் ஒரு கட்டிலின் மேல் வீற்றிருக்க, சரோஜா கட்டிலின் கீழ் பயந்து பதுங்கினாள்.
சிங்கம் ஒரு கர்ஜனையுடன் கீழே பாய்ந்தது. துரதிர்ஷ்டவசமாகக் கட்டிலிலிருந்து தொங்கிக்கொண்டி ருந்த ஒரு நாடாவில் அதன் ஒரு கால் மாட்டிக்கொள்ளவே, சிம்ம கர்ஜனை ஓலத்தில் முடிந்தது. நான் அழுத அழுகையைக் கேட்டு எல் லோரும் ஓடி வந்தார்கள். என்னை அள்ளி எடுத்துக்கொண்டு மாடியிலி ருந்து கீழே கொண்டு போய் பரி சோதித்தார்கள். கீழே விழுவதும் விழுந்தால் அழுவதும் சகஜமான விஷயங்கள்தானே, இது என்ன கொஞ்சம் ஜாஸ்தியாகவே கவனிக் கிறார்கள் என்று எனக்கே கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. என் மரியாதை போய்விடக் கூடாதே என்பதற்காகத் தொடர்ந்து ஓலமிட்டேன்.
“எலும்பு உடைந்துவிட்டாற் போலிருக்கிறது” என்று அப்பா சொன்னது கேட்டது. அதற்கெல் லாம் எனக்கு அர்த்தம் தெரியாத தால் சிராய்ப்பு மாதிரி ஏதோ இன்னொரு காயம் என்று நினைத் துக்கொண்டேன். என்னைத் தூக்கி வண்டியில் போட்டுக்கொண்டு ‘லேடியாஸ்பத்திரி’ என்று பொது மக்களால் அழைக்கப்பட்ட லேடி டாக்டர் மேரி வர்க்கியிடம் போனார்கள். ‘வர்க்கியம்மா’ எங்கள் குடும்ப டாக்டர் மட்டுமல்ல, எங் கள் வீட்டில் எல்லாப் பிரசவங் களையும் பார்த்து என்னையும் என் சகோதர சகோதரிகளையும் இவ் வுலகிற்கு அறிமுகம் பண்ணி வைத்தவரும் ஆவார். அப்போது பார்த்து பக்கத்து கிராமம் ஒன்றில் பிரசவம் பார்க்க அவர் போயிருந் தார். உடனே பெரியாஸ்பத்திரி என்று பெயர் பெற்ற கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு ஓடினோம். அங்கே ஒரு ‘ஆம்பிள்ளை டாக்டரும்’ ஒரு லேடி டாக்டரும் இருந்தனர். முதலாமவர் என்னைப் பரி சோதித்துவிட்டுக் கோயமுத்தூருக்கு எடுத்துப் போகும்படி அறிவுரை கொடுத்தார். அப்புறம் அம்மா சொல்லித் தெரிந்தது : என் இடது முழங்கை எலும்பு ஒடிந்துவிட்ட தாம். மூட்டில் பார்த்து முறிந்து வைத்ததால் எக்ஸ்ரே எடுத்து ரிப்பேர் பண்ண வேண்டிய கேஸாம். தாராபுரம் ‘பெரியாஸ்பத் திரி’யில் எக்ஸ்ரே கிடையாததால் கோயமுத்தூருக்குத்தான் போக வேண்டுமாம்.
எலும்பு முறிந்தால் மிகவும் வலி இருக்குமென்று பின்னால் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் நிஜமா கவே அன்று தொடர்ந்து வலி ஏதும் இருந்ததாக எனக்கு ஞாபகம் இல்லை. ஒருவேளை எனக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவமும், கோயமுத்தூருக்கு, அதுவும் காரில், போகும் வாய்ப்பும் கொடுத்த சந்தோஷத்தில் வலி அமுங்கிப் போயிருக்கக்கூடும். அப்போது கார் என்பது மிக அபூர்வம். எங்கள் வீட்டிலும் கார் கிடையாது. அப்பா அவசரமாகக் கச்சேரிக்கு (கோர்ட்டு) போய் வேலைகளை முடித்துக் கொண்டு சீக்கிரமே திரும்பினார். வழக்குகளுக்கு ‘வாய்தா’ வாங்கி இருக்க வேண்டும். டாக்ஸிக்குச் சொல்லியனுப்பினார்கள். தாரா புரத்தில் அந்த நாளில் டாக்ஸி என்றால் கள்ள டாக்ஸிதான். அதா வது பிரைவேட் கார் என்று பதிவு செய்துகொண்டு கறுப்பு போர்டில் வெள்ளை எண்கள் எழுதியிருப் பார்கள். ஆனாலும் வாடகைக்குத் தான் ஓடும். இந்தக் கார்களின் முக்கியமான உபயோகம் கல்யாண ஊர்வலங்களே. அதனாலோ என் னமோ அவை எல்லாமே கூரையை சுலபமாகத் திறக்கக்கூடிய ‘டூரர் டாப்’ வண்டிகளாகத்தான் இருந் தன. வெயிலிலும் மழையிலும் இருந்து பாதுகாப்பு கொடுப்பது கேன்வாஸ் துணிதான். (21 வருடங் கள் கழித்து என் கல்யாண ஊர் வலம் நடந்தபோது கூட இவை இருந்தன. பின்னால் காணாமற் போய்விட்டன.)
கிளம்புவதற்குள் ஒரு சிக்கல். கோவை வரை போய்த் திரும்பி வர வேண்டிய பெட்ரோல் இல்லை யாம். அப்போது உலக யுத்தத்தின் காலமாகையால் பெட்ரோலுக்குப் பயங்கரத் தட்டுப்பாடு நிலவியது. ரேஷன் என்று கொஞ்சம் கொடுப் பார்கள். கூடுதலாக வேண்டுமா னால் குதிரைக் கொம்புதான். எப்ப டியாவது ‘பிளாக் மார்க்கெட்டில்’ வாங்கிக்கொண்டு ஒரே மணியில் வந்துவிடுவதாகச் சொல்லி தாராள மாகவே பணம் வாங்கிக்கொண்டு போன டாக்ஸி டிரைவர் மூன்று மணி நேரம் ஆகியும் காணாமற் போக என் அம்மாவும் அப்பாவும் தவித்துப்போனார்கள். கடைசியில் கொஞ்சம் பெட்ரோலும் கொஞ்சம் சீமெண்ணையும் (சீமை எண்ணை -வெள்ளைக்காரன் கொண்டுவந்த எண்ணை; அதாவது கிரஸின் ஆயில்) கலந்து குடித்துவிட்டு ஒரு ஹைதர் காலத்து கார் வந்து நின்றது. இதை வைத்துக்கொண்டு கோய முத்தூர் போய்ச் சேர முடியுமா என்று அம்மாவுக்குக் கவலை. ஆனா லும் ஓட்டையோ உடைசலோ எப்படியோ ஒழுங்காகப் போய்ச் சேர்ந்துவிட்டோம்.
கோவையில் ராமராவ், லஷ்மண ராவ் என்று இரண்டு டாக்டர்கள். இருவரும் சகோதரர்கள். இதற் கென்று ஆஸ்பத்திரி கட்டி வைத்து ஜில்லாவில் யாருக்காவது எலும்பு முறியாதா என்று காத்துக்கொண்டி ருந்தார்கள். அன்று நான் கிடைத் தேன். ராமராவ் ரொம்ப நல்லவர். தம்பி கொஞ்சம் முசுடு. கோபக் காரர் என்று சொன்னார்கள். நல்ல வேளையாக ராமராவ்தான் என்னி டம் வந்தார். அன்பாகப் பேசினார். எண்ணத் தெரியுமா என்று கேட் டார். தெரியும் என்று பெருமை யாகச் சொன்னேன் எத்தனை வரை எண்ணுவாய் என்றார். தைரியமாக “நூறு” என்று சொன்ன பிறகு மனதுக்குள் கொஞ்சம் சந்தேகம் எழுந்து உறுத்தியது. ஆனால் என் கவலைக்கு அவசியம் இருக்க வில்லை. அவர் குளோரோபாரம் (அந்தக் காலத்தைய மயக்க மருந்து) கொடுப்பதற்காகத்தான் கேட்டிருக் கிறார். பெரியவர்களைக்கூட அப்படித்தான் எண்ணச் சொல்லி மயக்கம் கொடுப்பார்கள் என்று பின்னால் தெரிந்தது. பத்தொன்பது எண்ணிய பிறகு நடந்தது எதுவும் எனக்குத் தெரியாது. அதனால் லக்ஷ்மணராவின் முன்கோபம் (அவர்தான் எலும்பை இணைத்தா ராம்) என்னைப் பாதித்திருக்க முடியாது.
நான் விழித்தபோது என் இடது கையை மடக்கி பிளாஸ்டர் போட்டிருந்தது. இரண்டு நாள் கழித்து வீட்டுக்கு அனுப்பினார்கள். ஆனால் தாராபுரம் திரும்ப முடி யாது. அடிக்கடி டாக்டரிடம் கொண்டுவந்து காட்ட வேண்டும் என்பதால் இரண்டு வாரம் போல் நானும் என் அம்மாவும் கோவை யிலேயே எங்கள் மாமா வீட்டில் தங்கினோம். மாமா என்றாலும் என் அம்மாவின் கூடப்பிறந்த சகோ தரர் அல்ல. பெரியப்பாவின் பிள்ளை, ஒன்றுவிட்ட சகோதரர். இப்போது எல்லாம் சொந்த அண்ணன் வீட்டில் போய்த் தங்குவதற்கே யோசனை செய்கிறார் கள். அந்த நாளில் சொந்த பந்தங்கள் எல்லாம் இன்னும் நெருக்கமாக இருந்தன. ஒன்று விட்டாலும் சரி, இரண்டு விட்டாலும்கூட சரியே, தைரியமாக உரிமையோடு போய் ‘டேரா’ போடலாம்.
மாமா வீடு இருந்தது இப்போது ராம் நகர் என்றழைக்கப்படும் அன்றைய ‘பிராமின் எக்ஸ்டென் ஷன்.’ சுருக்கமாக எக்ஸ்டென்ஷன் என்று சொல்வார்கள். கோவையில் அந்தப் பகுதி அந்தக் காலத்தில் மிக அழகாகவும் அமைதியாகவும் இருந்தது. பிளான் போட்டு அமைத்த ஒழுங்கான, விசாலமான வீதிகள், மரங்கள் அடர்ந்த காம்ப வுண்டு கொண்ட தனித்தனி வீடு கள். மாமா வீட்டில் ஒரு மயில்கூட இருந்தது. ஆனால் அது தோகையை விரித்து ஆடாதது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. அதற்கு அம்மா சொன்ன காரணம்: அது பெண் மயிலாம், ஆண் மயில்கள் தான் டான்ஸ் ஆடுமாம்.
கை சீராக முன்னேற்றம் அடைந் ததால் கொஞ்ச காலத்துக்குப் பிறகு பிளாஸ்டரை உடைத்து ஒரு பெரிய துணிக்கட்டு போட்டார்கள். இன்னும் சில நாளில் ஊருக்குப் போக அனுமதித்தார்கள். இப்போது மறுபடி ஒரு கார் சவாரி. ஆனால் இம்முறை அது (என் பெற்றோருக்கு) ஒரு பதட்டமில்லாத, சமாதான மான யாத்திரையாக இருந்தது. சில வாரங்களுக்குப் பின் மீண்டும் ஒரு முறை வந்து காட்ட வேண்டும் என்று சொல்லி அனுப்பினார்கள்.
அடுத்த கோவை விஜயம்தான் கடைசி விசிட் கூட. கை முழு குணமாகிவிட்டது. என்று சொல்லிக் கட்டை எடுத்துவிட்டார்கள். பிறகு ஊருக்குப் போய், ஒட்டின கைக்கு மறுபடியும் பலம் வருவதற்காக தினசரி ஒரு சின்ன பயிற்சி. அதா வது ஒரு டிபன் பாக்ஸில் மணலை நிரப்பி என்னிடம் கொடுப்பார்கள். எங்கள் வீட்டுக் காம்பவுண்டிலேயே நான் முறிந்து ஒட்டின என் இடது கையால் அதைத் தூக்கிக்கொண்டு மேலும் கீழுமாகப் பத்து தடவை நடக்க வேண்டியது. கைக்கு இன்னும் முழு பலம் வராததால் சில சமயம் அது கொஞ்சம் கஷ்ட மாக இருந்தது. அதற்கு நானே ஒரு வழி கண்டுபிடித்தேன். கஷ்ட மாக இருக்கும்போதெல்லாம் டிபன் பாக்ஸை வலது கைக்கு மாற்றி நடந்துகொண்டிருந்தேன். பத்து தடவை என்னவோ கரெக்டாக நடந்துவிடுவேன். ஒரு நாள் அம்மா அதைக் கண்டுபிடித்துக் கொஞ்ச லாகக் கடிந்துகொண்டாள். அப் போதுதான் எனக்கு அந்தப் பயிற் சியே ஒடிந்த கைக்குத்தானே என்பது உறைத்தது!
சீக்கிரம் எலும்பு நன்றாகப் பிடித்துக்கொள்ளவும் பலப்படு வதற்கும் இன்னும் ஒரு உபாயமும் கையாளப்பட்டது. இது நாட்டு வைத்திய முறை. ‘கொசத்தி’ என் றழைக்கப்பட்ட குயவனின் மனை வியை அழைத்து என் கைக்கு மயி லெண்ணை தடவி நீவி விடச் சொல்லுவார்கள். அதற்கு ஏன் மயில் எண்ணை என்று பெயர், அது மயிலில் இருந்து எடுத்ததா என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால் அதன் மணம் என்னமோ சுகந்தமாக இருக்கவில்லையே என்பது மட்டும் நினைவிருக்கிறது.
எப்படியோ கை சீக்கிரத்திலேயே குணமாகிவிட்டது. ஐந்தே மாதங் களில் நான் பள்ளியில் சேர்ந்த போது என் இடது கைக்கு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை. எல்லாம் சுபம்!
நன்றி : உயிர்மை(Oct 2005 )
சோஷலிஸம் தோற்றுவிட்டதா?
எஸ்.வி. ராமகிருஷ்ணன்
சுதந்திரம் வருவதற்கு முன்பு இந்திய தேசிய காங்கிரஸ், காங்கிரஸ் மகாசபை என்று அழைக்கப்பட்டதுபோலவே செயலும்பட்டது. அதாவது வெறும் கட்சியாக இல்லாமல் இந்தியாவின் தேசிய முன்னணியாக இயங்கியது. வலதுசாரி, இடதுசாரி என்று பலதரப்பினரும் இணைந்து செயல்பட்டனர். அவர்களை இணைத்தது தேசியவாதம், சுதந்திரவேட்கை என்ற அடிப்படைக் கொள்கையும் மகாத்மா காந்தியின் தலைமையுமே. இவற்றில் இடதுசாரியினர் சோஷலிஸ சித்தாந்தத்தில் நம்பிக்கை வைத்தவர்கள். தமிழில் அபேதவாதம் என்று சொன்னார்கள். பின்னால் சமதர்மம் என்ற பதம் வழங்கலாயிற்று. காங்கிரஸிலேயே காங்கிரஸ் சோஷலிஸ்டு என்பது, சுபாஷ்போஸின் பார்வர்டு பிளாக்போல, ஒரு தனி உள்கட்சி (அன்று காங்கிரஸில் உட்கட்சிகள் அனுமதிக்கப்பட்டன). துடிப்புமிக்க இளைஞர்கள் நிறைந்த இக்கட்சியின் தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயண். தவிர ஆச்சார்யா நரேந்திரதேவ் (வயதில் கொஞ்சம் முதிர்ந்தவர்) பொருளாதார வல்லுநர் அசோக்மேத்தா, டாக்டர் ராம்மனோகர் லோஹியா, அச்சுத்பட்வர்த்தன், யூசுப் மேஹராலி என்று குறிப்பிடத்தக்கவர்கள் பலர். 1942 ஆகஸ்ட் போராட்டத்தின்போது பிரிட்டிஷ் அரசாங்கம் வரலாறு காணாத அடக்குமுறையை ஏவிவிட்டு காந்திஜியிலிருந்து காமராஜ் வரை காங்கிரஸ்காரர்களைக் கூண்டோடு கைலாசமாகச் சிறையிலிட்டபோது இவர்கள் தலைமறைவில் சென்று போராட்டத்தைத் தொடர்ந்தார்கள். பின்னால் பலர் பிடிக்கப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்டனர். மாறுவேடத்திலிருந்த ஜெயபிரகாஷ் லாகூரில் கைது செய்யப்பட்டு பனிக்கட்டிமீது மணிக்கணக்காக அமர்த்தப்பட்டார் (அதனால் அவரின் கால்கள் நிரந்தரமாக பலவீனமடைந்தன). அதேசமயம் தில்லியில் ஒரு பிரிட்டிஷ் உயர் அதிகாரியின் வீட்டிலேயே மாறுவேடத்தில் பணியில் அமர்ந்த அருணா அஸப்அலி கடைசிவரை (1945) போலீஸôர் கண்ணில் மண்ணைத் தூவிய சாகசச்செயலும் அந்நாளில் பிரபலம். 1947-ல் சுதந்திரம் வந்த கையோடு நாட்டைச் சமதர்மப் பாதையில் கொண்டு செல்ல வேண்டுமென்று இவர்கள் வற்புறுத்தினார்கள். காங்கிரஸின் மூத்த தலைவர்களோ, அதற்கு அவசரமில்லை, பாகிஸ்தான் பிரிவினையையொட்டி சமுத்திரம் பொங்கியதுபோல எழுந்த அகதிகள் புனர்வாழ்வு போன்ற உடனடிப் பிரச்னைகளை முதலில் கவனிக்கலாம் என்று கருதினர். சோஷலிஸ்டு இளைஞர்களோ சுதந்திரம் வந்த உற்சாகம் தணியுமுன் சூட்டோடு சூடாக சமத்துவச் சீர்திருத்தங்களை கொண்டுவராவிடில் ஆறினகஞ்சி பழங்கஞ்சி ஆகிவிடும் என்று அஞ்சினர். அவர்களிடம் லட்சியவாதம் உள்ள அளவுக்கு யதார்த்த உணர்வு இல்லை என்று அபிப்பிராயப்பட்ட சர்தார் படேல் அன்றைய நிலைமையில் நாட்டின் சொத்தை அனைவருக்கும் சமமாகப் பங்கிட்டால் ஆளுக்குக் காலணாதான் (இரண்டு நயாபைசா) தேறும் என்று சொன்னார். மகாத்மாவின் திடீர் மறைவைத் தொடர்ந்து விரிசல் அதிகரித்தது. தாங்கள் காங்கிரûஸவிட்டு வெளியேறிவிடுவோம் என்று அவர்கள் மிரட்டியபோது யார் போகவேண்டுமானாலும் காங்கிரஸின் கதவுகள் திறந்தே இருக்கின்றன என்று படேல் கூறினார். ஓரளவு இடதுசாரிக் கொள்கையுடையவரென அறியப்பட்ட நேரு மௌனம் காத்தார். மார்ச் 1948-ல் நாசிக் நகரத்தில் கூடிய காங்கிரஸ் சோஷலிஸ்டுகள் வெளியேறியே விடுவது என்று தீர்மானித்தார்கள். சோஷலிஸ்டு கட்சி என்ற தனி ஸ்தாபனம் உதயமாயிற்று. தேர்தல் சின்னம் ஆலமரம். இரண்டாண்டு கழித்து பழம்பெரும் தலைவர் ஆசார்யா கிருபளானி காங்கிரûஸத் துறந்து பிரஜா மஜ்தூர் கிசான் (விவசாயி – உழைப்பாளி) கட்சியைத் தோற்றுவித்ததைத் தொடர்ந்து இரு புதிய கட்சிகளும் (இருவருமே பழைய காங்கிரஸ்காரர்கள்) இணைந்து பிரஜா சோஷலிஸ்டு கட்சியாயின. 1950-ன் இறுதியில் நிகழ்ந்த படேலின் மரணத்துக்குப்பின் காங்கிரஸ் கட்சியும் மத்திய அரசும் நேருவின் முழு அதிகாரத்திற்குள் வந்தன. 1952 பொதுத்தேர்தல் வரும்போது நேரு ஒரு ஜனநாயக சர்வாதிகாரியாகவே விளங்கினார். பொதுத்தேர்தலில் பிரஜா சோஷலிஸ்டுகள் அகில இந்தியாவில் 10 சதவிகிதம் வாக்குகளைப் பெற்றார்கள். ஆனால் அவை பரவலாக இருந்ததால் அந்த விகிதத்துக்கு எம்.பி., எம்எல்.ஏ. இடங்கள் கிட்டவில்லை. அவர்களைவிட மொத்த வாக்குகள் குறைவாகப் பெற்ற கம்யூனிஸ்டுகளுக்கு அதைவிட அதிக இடங்கள் கிட்டின; காரணம் அவர்கள் பரவலாக இல்லாமல் ஆந்திரம், மலபார் போன்ற சில “பாக்கெட்டுகளில்’ மட்டுமே இருந்தாலும் அங்கு ஆழமாக இருந்ததே (நமது தேர்தல் பிரதிநிதித்துவ முறையின் இந்த முரண்பாடு இன்னும் தொடருகிறது. பட்ங் ரண்ய்ய்ங்ழ் ற்ஹந்ங்ள் ஹப்ப்!). 1952 தேர்தல் முடிவுகளில் பண்டித நேருவுக்கும் சில அதிர்ச்சிகள் காத்திருந்தன. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைத்தாலும் காங்கிரஸின் செல்வாக்கு சரிந்திருப்பது தெளிவாயிற்று. சென்னை மாகாணத்தில் அறுதிப் பெரும்பான்மை கூட இல்லை. உத்தரப்பிரதேசத்தில் நேருவுடன் போட்டியிட்ட தொகுதி “அபேட்சகர்’ (வேட்பாளர்) கூட கணிசமான ஓட்டுகள் பெற்றுத்தான் தோற்றார். “”காங்கிரஸின் பெயரில் ஒரு விளக்குக்கம்பம் நின்றாலும் ஜெயித்துவிடும்” என்று எல்லோரும் சொல்லிவந்த நிலைமை மாறிவிட்டது தெரிந்தது. அடுத்த தேர்தலுக்குள் மக்களின் கவனத்தையும் கற்பனையையும் கவர புதிதாக ஏதாவது செய்தாக வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, 1955 ஜனவரியில் நடைபெற்ற ஆவடி காங்கிரஸில் “சமதர்ம அடிப்படையிலான சமுதாயம்’ (நர்ஸ்ரீண்ஹப்ண்ள்ற்ண்ஸ்ரீ டஹற்ற்ங்ழ்ய் ர்ச் நர்ஸ்ரீண்ங்ற்ஹ்) என்பது காங்கிரஸின் லட்சியம் என்ற முக்கியமான கொள்கைத் தீர்மானம் “ஒருமனதாக’ நிறைவேறியது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் சித்தாந்தரீதியாக சோஷலிஸத்தை நம்பியவர்கள் அனைவரும் 1948-லேயே வெளியேறிவிட்டிருந்தார்கள். அதாவது சர்தார் படேலைப்போல கொள்கைரீதியான வலதுசாரிகளும், அல்லாவிடில் குறைந்தபட்சம், சமதர்மத்தில் அக்கறை கொள்ளாதவர்களுமே காங்கிரஸில் தங்கியிருந்தனர். பின்னால் இப்போது திடீரென்று, இன்றிலிருந்து கூண்டோடு கைலாசமாக கட்சி முழுவதுமே சோஷலிஸ்ட் ஆகிவிட்டது என்று ஆவடியில் தீர்மானம் போட்டபோது ஒருவர்கூட ஆட்சேபிக்காதது விந்தையிலும் விந்தைதான். ஆவடிக்குப்பிறகு, இந்தியாவில் உண்மையான சோஷலிஸ்டுகள் பெரும்பாலும் காங்கிரஸýக்கு வெளியேயும் சந்தர்ப்ப சோஷலிஸ்டுகள் உள்ளேயும் இருந்தார்கள் என்றால் அதிகத் தவறில்லைதான். ஏறக்குறைய இதேசமயத்தில், மாவோ சீனாவையே தான் கண்ட புரட்சிப்பாதைக்கு மாற்றியமைக்க முயன்று கொண்டிருந்தார். அவருடைய செயல்வீரர்கள் அவரது “கொள்கையில் ஊறிய’ (ண்ய்க்ர்ஸ்ரீற்ழ்ண்ய்ஹற்ங்க்) கம்யூனிஸ்ட் தொண்டர்கள். ஒரு சமுதாயப் புரட்சியை தாசில்தார் மூலம் நடத்த முடியாது. நேருஜியிடமோ சோஷலிச சித்தாந்தத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட சொந்தக் கட்சிக்காரர்கள் அதிகம் இருக்கவில்லை. ஆக இந்தியாவின் சோஷலிஸப் புரட்சி பெரும்பாலும் அரசு இயந்திரம் மூலமாகத்தான் நடந்தது. சட்டங்கள், அரசுடைமை தொழில்கள், இத்யாதி. அதை ராஜாஜி “லைசென்ஸ், கண்ட்ரோல், பெர்மிட் ராஜ்’ என்ற தன் பிரசித்தி பெற்ற சொற்றொடரால் சாடினார். இந்த விஷயத்தில் தன் கட்சியின் குறைபாட்டையும் அதன் விளைவாக தன் சோஷலிஸத்தின் பலவீனத்தையும் உணர்ந்த நேரு ஜாக்கிரதையாகச் செயல்பட்டார். உருக்கு போன்ற கனரகத் தொழில்களில் அரசு பிரவேசித்ததே ஒழிய ஏற்கெனவே தனியார் மூலம் அமைந்திருந்த தொழில்களைத் தேசியமயமாக்குவதில் அவர் நிதானம் காட்டினார். அவரின் இறுதியாண்டுகளில் (1960 – 64) சீனாவுடன் ஏற்பட்ட சச்சரவும் யுத்தமும் அவரது வேகத்தையும், கடைசியில் அவரது ஆயுளையுமே கூட குறைத்தன. அவருக்கு கொஞ்சகாலம் பின் ஆட்சிக்கு வந்த இந்திரா காந்தி முழுக்க முழுக்க ஒரு அரசியல்வாதியாகவே விளங்கினார். தன் தந்தையைப் போலன்றி அவருக்கு “இஸம்’ எதுவும் கிடையாது. உண்மையில் அவர் ஒரு பிரத்யட்சவாதியேதவிர, வலதுசாரியுமல்ல, இடதுசாரியுமல்ல. அரசியல் காரணங்களினால் இடதுசார்பைக் கைக்கொண்டார். காலத்தின் கட்டாயம் எனலாம். துரதிர்ஷ்டவசமாக அவர் அரசியலைப் புரிந்துகொண்டதுபோல பொருளாதாரத்தைப் புரிந்துகொண்டிருக்கவில்லை. அதனால் பிரதானமாக அரசியல் அனுகூலங்களைக் கருத்தில் கொண்டு அவருடைய பொருளாதாரக் கொள்கை அமைந்தது. தொழில்களைத் தேசியமயமாக்குவதிலும் கட்டுப்பட்ட பொருளாதாரத்தை நிறுவுவதிலும் தந்தை காட்டிய விவேகமும் நிதானமும் மகளின் ஆட்சியில் காணப்படவில்லை. விளைவு, பணவீக்கம், வரிச்சுமை ஏற்றம், லஞ்சம், ஊழல் பெருக்கம், தனிமனித சுதந்திரம் சுருங்கியது முதலியன. சோஷலிஸம் என்ற பெயரில் அப்போது ஏற்பட்டது உண்மையில் “அரசாங்க முதலாளித்துவம்’தான். அவரைத் தொடர்ந்து வந்த ராஜீவின் குறுகிய ஆட்சிக்காலத்தின்போது காலமும் அதன் கட்டாயங்களுமே பெரிதும் மாறத் தொடங்கி இருந்தன. அப்போதே தொடங்கிய போக்கு அவருக்குப் பின் தீவிரமடைந்து இன்று தாராளமயக்கொள்கை என்று அழைக்கப்படுகிறது. காங்கிரஸ், பாரதிய ஜனதா என்ற இரண்டு பெரிய கட்சிகளுமே இதைக் கொள்கையளவிலும் நடைமுறையிலும் ஏற்றுக்கொண்டுவிட்டன. இன்று சோஷலிஸம் என்பது பாஷன் அல்ல என்பது தெரிகிறது. அதேசமயம், இந்தியாவில் சோஷலிஸம் வென்றதா அல்லது தோற்றதா என்றால், இரண்டுமே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், சில ஐரோப்பிய நாடுகளின் நிஜமான சோஷலிஸம்போல இந்தியாவில் ஒருபோதும் வரவேயில்லை. புகுத்தப்பட்ட அரசு முதலாளித்துவம் என்பது வேறு ஒருமுறை. அது சோஷலிஸம் ஆகாது.
எரிசக்திக் கொள்கையில் நடந்த இமாலயத் தவறுகள்
எஸ்.வி. ராமகிருஷ்ணன்
இரண்டாவது உலக யுத்தத்துக்கு முன் இந்தியாவில் எரிபொருள் பிரச்னை என்று ஒன்று இருக்கவில்லை. அப்போதெல்லாம் ரயில்களும் மாட்டுவண்டிகளும்தான் சரக்குப் போக்குவரத்தில் பெரும்பகுதியை வகித்தன. பஸ்ஸýம் லாரியும் உண்டு. ஆனால் மிகக் குறைவு. பல கிராமப்புறச் சாலைகளில் அவை போகக்கூட முடியாது.பெரும்பாலான மக்கள் (நகரங்களில்கூட) அடுப்பெரிப்பதற்கு விறகையே உபயோகித்தனர். ஓரளவுக்கு மண்ணெண்ணெயும் உண்டு. தவிர இன்னொரு அடுப்பு எரிபொருள் மாட்டுச்சாணம். அதாவது இன்று அற்றுப்போன வரட்டி. நாட்டின் தேவைக்கு வேண்டிய பெட்ரோலியத்துக்கு மிக அதிகமாகவே பர்மாவில் உற்பத்தியாயிற்று. அந்த பர்மா அன்று (1937 வரை) இந்தியாவின் ஒரு மாகாணம். யுத்தத்தின் போது நிலைமை தலைகீழாயிற்று. 1942-ல் ஜப்பானியர் பர்மாவைக் கைப்பற்றினர். கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் கிடைத்த சிறிதளவு எண்ணெயிலும் ராணுவ முஸ்தீப்புக்குத்தான் முதலிடம். பெட்ரோலுக்கும் “சீமையெண்ணெய்க்கும்’ கடுமையான ரேஷன், பேருந்துகள் கரியில் ஓடுமாறு மாற்றப்பட்டன. அடுப்புக்கரிக்கும் கிராக்கி அதிகரிக்கவே, காடுகள் பெருவாரியாக அழிக்கப்பட்டன. யுத்தம் முடிந்து சுதந்திரமும் ஐந்தாண்டுத் திட்டங்களும் வந்தபின், ஐம்பதுகளில் இந்தியாவின் தொழிற்புரட்சி வலுவடைந்தது. இன்றைய தொழில் மற்றும் தொழில் நுட்பத்தின் அஸ்திவாரம் அன்று இடப்பட்டதெனலாம். அங்கலேஸ்வர் (குஜராத்) போன்ற புதிய எண்ணெய்வளக் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தது அடுத்த பத்தாண்டுகளில். அப்போது நடந்த முதற்பெரும் தவறு அத்துறையை ஓஎன்ஜிசி என்ற அரசு நிறுவனத்தின் ஏகபோக உரிமை ஆக்கியதே. அதேசமயம் 1965 வரை சொந்த எண்ணெய்வளம் அறியாத பிரிட்டன் வடக்குக் கடலில் எண்ணெய் வளத்தைக் கண்டுபிடித்து உடனேயே முழுமூச்சுடன் அதில் இறங்கிப் பெரிய பெட்ரோலியம் உற்பத்தியாளராகி 1990-களில் தினசரி நான்கு மில்லியன் டன் எண்ணெய் எடுத்தது. நாமும் அதே வேகத்தில் செயல்பட்டிருந்தால் அரபி, வங்கக் கடல்களிலிருந்து நமக்கு வேண்டிய முழு அளவு எண்ணெயையும் பெற்றிருக்கலாம். ஆனால் 1990-களில் நமது சுயதேவை பூர்த்தி வெறும் 25 சதவிகிதம்தான் வளர்ந்திருந்தது. அண்மையில் இத்துறையில் தனியாரையும் அனுமதித்தபின் ரிலையன்ஸ் கண்டுபிடித்திருக்கும் வளங்கள் அறுபதுகளிலும் அங்கேதான் இருந்தன; ஆனால் ஓஎன்ஜிசியின் கிட்டப்பார்வைக்கு அவை எட்டவில்லை. அரசு நிறுவனங்களுக்கே உரித்தான மெத்தனத்தினால் நாற்பது ஆண்டுகளுக்கு நமது பொருளாதார முன்னேற்றத்துக்கான பாதையைத் தவறவிட்டு விட்டோம். இப்போதாவது கண்டுபிடித்தோமே என்பதுதான் ஆறுதல். அடுத்தது, இதைவிடப் பெரிய “இமாலயத்’ தவறு. அரசியலைத் தவிர வேறொரு காரணமும் இல்லாமல், 1970-களில் இந்திரா காந்தி நிலக்கரிச் சுரங்கங்களை தேசியமயமாக்கினார். மூன்றே ஆண்டுகளில் உற்பத்தி சரிந்து நிலக்கரி விலை நம்ப முடியாத 300 சதவிகிதம் ஆயிற்று என்பதை அரசாங்கமே ஒப்புக்கொள்ள வேண்டிவந்தது. ஊழல்களும் மலிந்து, குறிப்பாக பிகாரில், மாபியாக்களின் ஆதிக்கம் வலுத்தது. அவை இன்னும் நிலக்கரித் தொழிலைத் தங்கள் பிடியில் வைத்திருக்கின்றன. தனியார் தவறு செய்தால் தட்டிக்கேட்கும் நிலையிலிருந்த அரசாங்கம், அரசுடமை நிறுவனங்களே தவறிழைக்கும்போது செயலிழந்து நின்றது. மொத்தத்தில் வெள்ளைக்காரன் காலத்திலிருந்து நமக்கிருந்த ஓர் அரிய செல்வத்தை இன்று இழந்து நிற்கிறோம். அதேசமயம் நமது ரயில்வே கொள்கையும் தப்பான பாதையில் போகலாயிற்று. குப்குப் என்று புகைவிடும் கரி எஞ்ஜின்களுக்குப் பதில் டீசல் எஞ்ஜின்களைப் போட்டு 48 மணி நேரம் ஓடிய தூரத்தை 36 மணியில் கடப்பதில் பெருமிதம் கொண்டோம். நம்மிடம் இல்லாத (வெளிநாட்டுப்) பெட்ரோலியத்தை நம்புவதைவிட உள்ளூர்ச் சரக்கான நிலக்கரியை உபயோகித்து கொஞ்சம் மெள்ளப் பிரயாணம் செய்வதே விவேகம் என்பதை மறந்தோம். சொல்லிவைத்தாற்போல் 1973 அரபு – இஸ்ரேலியப் போரைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென்று உயர்ந்தபோது இந்தியப் பொருளாதாரமே சற்று ஆடித்தான் போயிற்று. பணவீக்கத்திலிருந்து அன்னியச் செலாவணித் தட்டுப்பாடு வரை எல்லாச் சிக்கல்களையும் எதிர்கொள்ள வேண்டி வந்தது. அதைப்பற்றிய பிரக்ஞையே இல்லாது இதே கொள்கைத் தவறு இன்னும் சில துறைகளிலும் செய்யப்பட்டது. காலங்காலமாக நமக்குக் கைகொடுத்துவந்த கால்நடைச் செல்வத்தைத் தொலைத்துவிட்டு இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பான விவசாயத்துக்கு டிராக்டர்களையும் உள்ளூர்ப் போக்குவரத்துக்கு (சிற்றூர்களிலும்கூட) மாட்டுவண்டி, ஜட்காவுக்குப் பதில் ஆட்டோமொபைல் வாகனங்களையும் கைக்கொண்ட கொடுமை அறுபதுகளில் தொடங்கி தொண்ணூறுகளில் முழுமையடைந்தது. கால்நடைகளால் சுற்றுப்புறச் சூழலும் மாசுபடவில்லை. அன்னியச் செலாவணியும் மிச்சம் என்பதையெல்லாம் எண்ணிப்பார்க்கக்கூட தில்லி, சென்னை போன்ற மாநகரங்களில் இருந்து கோலோச்சிய மாட்சிமை தங்கிய அரசுகளுக்கு நேரம் இருக்கவில்லை. எண்ணெய் வளம், நிலக்கரி, கால்நடையை விடவும் கூட நவீன கால நாகரிகத்தில் தலையாய முக்கியத்துவம் பெற்றிருக்கும் மின்சக்தியின் நிலையை அடுத்துக் கவனிப்போம். ஐம்பது, அறுபதுகளில் ஏறக்குறைய நாட்டின் நதிகள் எல்லாவற்றிலும் அணைகட்டி விட்டோம். அதனால்தான் இந்தியாவின் லட்சக்கணக்கான கிராமங்களுக்கும் ஆண்டுக்கு ஆண்டு பல்கிப் பெருகிய தொழில்களுக்கும் மின்சாரம் கொடுக்க முடிந்தது. ஆனால் மலைச்சரிவுகளில் காடுகள் அழிந்து ஆறுகள் வறட்சி அடைந்துவரும் இன்றைய நிலையில் இன்னும் அதிகப்படியான மின்சக்தியை ஆறுகளில் இருந்து எதிர்பார்க்க முடியாது. நிலக்கரி வளத்தை முழுமையாக உபயோகித்துக் கொண்டிருந்தால் அனல் மின்சாரம் நமது தேவையைப் பூர்த்தி செய்திருக்கலாம். இன்று அது நடக்காத காரியம். அதனால், ஆபத்தானது என்றாலும் அணுமின்சாரத்தைக் கொண்டு ஓரளவு சமாளித்து வருகிறோம். நாம் முன்னேறுவதற்கு மாநில அரசுகளின் மின்வாரியங்களே பெரிய தடையாய் இருக்கின்றன. உற்பத்தி, விநியோகம் இரண்டு திசைகளிலும் பொய்த்துப்போய் நாட்டின் தொழில் அஸ்திவாரத்தையே பலவீனப்படுத்தி வருகின்றன. இதற்குப் பிரதான காரணம் அரசுகளாலும் ஆளுங்கட்சிகளாலும் அரசியல் லாபங்களுக்காக அவை பயன்படுத்தப்படுவதே. உதாரணமாக, இலவச மின்சாரம் கொடுப்பது, மின்திருட்டைக் கண்டுகொள்ளாமல் விடுதல் முதலியன. அரசியல்வாதிகளின் தலையீட்டால் இல்வாரியங்கள் அளவுக்கு அதிகமான ஊழியர்களைச் சுமந்து அவர்களுக்குச் சம்பளம் கொடுப்பதற்கே திணறுகின்றன. நஷ்டத்தினால் பணமுடை, அதன் விளைவாக விஸ்தரிப்பு, புதுப்பித்தல் இரண்டுமே இயலாத நிலை என்று மின்வாரியங்கள் கொஞ்சம் கொஞ்சமாக முழுகிக் கொண்டிருக்கின்றன. நூறாண்டுகளுக்குமுன் சீனாவில் மஞ்சுப் பேரரசு காலத்தில் உயர் குடும்பப் பெண்கள் இரும்புக் காலணிகளால் இறுக்கப்பட்டு வளர்ச்சி குன்றிய சிறிய பாதங்களால் தங்கள் சரீர பாரத்தைச் சுமக்க முடியாமல் திணறுவார்கள் என்று படித்திருக்கிறோம். மின்உற்பத்தியும் விநியோகமும் சீர்திருந்தி நம்பகமான சப்ளை கிடைத்தாலொழிய, இன்று மிகப்பெரிய அளவில் வளர்ந்து வரும் இந்தியாவின் தொழில்கள் வருங்காலத்தில் அந்த மஞ்சுப் பெண்மணிகளின் நிலைக்குத் தள்ளப்படலாம்.
வார்த்தை நவம்பர் 2009 இதழில்… (10/29/09)
ஆகாசவாணி – எஸ்.வி. ராமகிருஷ்ணன்
கட்டுரை
சென்ற ‘விய’ வருடத்தில் வாழ்க்கை
எஸ்.வி. ராமகிருஷ்ணன்
வழக்கம்போல் அறுபதாண்டு கழித்து விய வருடம் மறுபடியும் எட்டிப் பார்க்கிறது. அறுபது வருடமென்றால் இரண்டு தலைமுறைகள் கழிந்துவிட்ட காலம். இந்த இடைவெளி நமது வாழ்க்கைமுறை பெரிதும் மாறிவிட்ட காலம். 19ஆம் நூற்றாண்டின் சுவடுகள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து நவீன இந்தியா உருவான காலம்.
விய வருடத்தில் (1946-47) நம் வாழ்க்கை முறையை இன்றைய வாழ்க்கைமுறையுடன் ஒப்பிட்டால் வியப்பாகவும் திகைப்பூட்டும் அளவுக்கு வித்தியாசமாகவும் இருக்கும். உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். இடச் சிக்கனத்தை உத்தேசித்துச் சிலவற்றை மட்டும் இங்கே கொடுக்கிறேன். இன்று பட்டிதொட்டியெல்லாம் வியாபித்திருக்கும் செல்பேசி (cell phone) பற்றி நான் சொல்லவரவில்லை. அது நம் கண்ணுக்கு முன்னால் கடந்த பத்தாண்டுக் காலத்தில் பரவிய வசதி. சாதாரணத் தொலைபேசியே (landline) அன்று ஒரு பேரதிசயம். பம்பாய், சென்னை போன்ற பெரு நகரங்களில்கூட மிகக் குறைவாகவே காணப்பட்ட வஸ்து. Mofussil என்று அழைக்கப்பட்ட ஜில்லாக்களை எடுத்துக்கொண்டால், கலெக்டருக்குத் தொலைபேசி உண்டு, தாசில்தாருக்குக் கிடையாது. அந்த அளவுக்கு மட்டாக இருந்தது என்பதை விளக்குவதற்குச் சொல்கிறேன். “அம்மாவின் உடல்நிலை மோசம் உடனே கிளம்பவும்” என்று சென்னையில் வசிக்கும் தனயனுக்குத் தெரியப்படுத்த கோவையில் இருக்கும் தந்தை உபயோகித்த சாதனம் தந்திதான், ஃபோன் அல்ல. பாட்டி போய்விட்டார் என்று லெட்டர் போடுவார்கள். ஆனால் ஒன்று சொல்ல வேண்டும். அந்த நாளில் தபால் அடுத்த நாளே போய்ச் சேர்ந்துகொண்டிருந்தது. விய வருடத்தில் அஞ்சலட்டை (post card) முக்காலணாவிலிருந்து அரையணாவாகக் குறைந்தது. யுத்த காலச் செலவுகளை ஈடுகட்டுவதற்காக அது அரையணாவிலிருந்து உயர்த்தப்பட்டிருந்ததாகவும் இப்போது யுத்தம் முடிந்ததை ஒட்டி மீண்டும் குறைக்கப்பட்டதாகவும் என் தாயார் அப்போது சொன்னது ஞாபகம் இருக்கிறது. கவர் ஒன்றரை அணா. அப்போது இன்லண்ட் லெட்டர் இருக்கவில்லை (அது இன்னும் ஐந்து வருடங்கள் கழித்து சுதந்திர இந்தியாவில் ரஃபி அகமத் கித்வாயினால் கொண்டுவரப்பட்டது). தபால் ஆபீஸில் கார்டு, தபால் தலை தவிர கொய்னாவும் விற்றார்கள் என்பது பலருக்கும் அதிசயமாக இருக்கும். ஆம், மலேரியாவுக்கான அந்த மகா ஔஷதத்தைப் பட்டிக்காட்டு ஏழை எளியவர்களுக்கும் கிடைக்கச் செய்யப்பட்டது இந்த ஏற்பாடு. ஞாயிற்றுக்கிழமைகளில் தபால் ஆபீஸ் பூட்டியிருக்கும். ஆனால் தபால் பட்டுவாடா உண்டு. கடிதங்கள் வரும். தபாற்பெட்டியில்** போட்டால் ஞாயிறன்றேகூட எடுப்பார்கள்.
மகாத்மா காந்தியை மக்கள் வெறும் தலைவராகப் பார்க்கவில்லை. கடவுளாகவே மதித்தார்கள். தீண்டாமை ஒழிப்பின் அவசியத்தை அவர் எடுத்துச் சொன்னதில் பெருமளவை ஏற்றுக்கொண்டார்கள். ஹரிஜனங்களுக்குத் திறந்து விடப்படாத எந்தக் கோயிலுக்கும் தான் வரமாட்டேன் என்று காந்தி சொல்லிவிட்டதை ஒட்டிப் பெரிய கோயில்கள் பலவற்றின் கதவுகளும் திறக்கலாயின. விய வருடத்தில் இவ்வாறு திறந்து காந்திஜி விஜயம் செய்த கோயில் பழனி. அந்த ஆண்டில் நீண்ட காலத்துக்கு (ஒரு மாதத்துக்கும் மேற்பட்டு) மகாத்மா சென்னை ஹிந்தி பிரச்சார சபாவில் தங்கினார். தினமும் பிரார்த்தனைக் கூட்டங்கள் நடைபெறும். “All are welcome”. அவரைச் சென்று சந்திக்காத சென்னைவாசிகளே இல்லை எனலாம். காந்தியடிகளின் கையெழுத்துக்காகப் பலரும் அவரை முற்றுகையிடுவது வழக்கம். ஆனால் கையெழுத்து வேண்டுமானால் ஐந்து ரூபாய் கொடுத்துவிட வேண்டும். அந்தப் பணம் ஹரிஜன நிதிக்குப் போய்ச்சேரும்.
அதே காந்தி என்ன முட்டிக்கொண்டாலும் கைகுத்தலரிசி நசித்துக்கொண்டே வந்தது. நகரங்களில் அரிசி என்றாலே மில் அரிசிதான். கைகுத்தலரிசியைப் பார்க்கக்கூடக் கிடைக்காது. அதிலும் வெள்ளைவெளேர் என்று ‘பாலிஷ்’ பண்ணி (அப்போதுதான் பார்வையாயிருக்குமாம்) சத்தில்லாமல் சாப்பிடும் பொல்லாத வழக்கம் அதிகரித்துக் கொண்டிருந்தது. ஆனால் (நல்ல வேளையாக) காந்தியார் பரிந்துரைத்த வெல்லத்தின் நிலைமை இப்படி இருக்கவில்லை. குறிப்பாக உழைக்கும் வர்க்கத்தினர் அஸ்கா என்று அந்நாளில் அழைக்கப்பட்ட வெள்ளைச் சர்க்கரையை (refined sugar) உபயோகிக்கவில்லை. வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரையை மட்டுமே பாவித்தார்கள். மேல் தட்டுகளிலும்கூட வெல்லம், அஸ்கா சர்க்கரையின் உபயோகம் பாதிப் பாதியாக இருந்தது. எங்கள் வீட்டில் வேலைக்காரர்கள் ரேஷன் அட்டைக்குக் கிடைக்கும் அஸ்காவை எங்கள் அம்மாவிடம் கொடுத்துவிட்டு எங்கள் பங்கு ‘சீமை எண்ணெயை’ (மண்ணெண்ணெய்) சந்தோஷமாக வாங்கிச் செல்வார்கள்.
ஆமாம், யுத்த காலத்தில் ஆரம்பித்த, ‘கூப்பன்’ என்று பொதுமக்களால் அழைக்கப்பட்ட ரேஷன் கார்டு வெகுவாக அமலில் இருந்தது. அரிசி, மண்ணெண்ணெய், வெள்ளைச் சர்க்கரை என எல்லாவற்றுக்கும் ரேஷன். ‘கூப்பன்’ மாதிரி ஏழை மக்களை வறுத்தெடுத்த இன்னொரு கொடுமையை என் வாழ்நாளில் பார்க்கவில்லை. சிவப்பு நாடா, லஞ்ச ஊழல் எல்லாவற்றாலும் ஊறியிருந்த கூப்பன் முறை மக்களை, குறிப்பாக ஏழைகளை, நிஜமாகவே ‘வயிற்றில் அடித்தது’. பல தடவை அரிசி புழுத்துப் போய் இருக்கும். கடைக்காரர்கள் நிறுவையிலும் அளவையிலும் அநியாயம் செய்வார்கள். ரேஷன் கடைகளில் நீண்ட கியூ நிற்கும். விற்பவர்களின் சந்தை (seller’s market) என்பதால் கடைக்காரர்கள் வைத்ததுதான் சட்டம். விய வருடத்தில் அரிசி 8 அவுன்ஸ் போட்டார்கள். ஒரு சமயத்தில் 6 அவுன்ஸாகக் கூடக் குறைந்தது. பாக்கி அவுன்ஸ்களுக்குக் கோதுமை போட்டார்கள். கோதுமை சாப்பிட்டு வழக்கமில்லாத தமிழர்கள் தவித்துக் கொண்டிருந்தார்கள்.
வாழ்க்கை இன்னும் ‘சிம்பிளாக’ இருந்தது. வீட்டுக்கு வீடு கிணறு இருந்தது. அதில் தண்ணீரும் இருந்தது.
காரணம், ஏரிகளும் குளங்களும் ஆக்கிரமிக்கப்படவில்லை. பல நதிகளும் ஜீவநதிகளாக இருந்தன##. ஆறுகளில் தண்ணீரைத் தவிர மணல் தாராளமாகக் காணப்பட்டது. வீடு கட்டுவதற்காக மாட்டு வண்டிகளில் எடுத்துச் செல்லப்பட்டது, லாரி லாரியாக அல்ல. ‘ஆற்று மணற்கொள்ளை’ என்பது அன்று எவரும் கேள்விப்படாத பிற்கால அதிசயம். சென்னை, கோவையைவிடச் சிறிய நகரங்களில் (உ.ம்: திருப்பூர்) குழாய்த் தண்ணீர் சப்ளை எதுவும் இருக்கவில்லை. குழாய் இருந்த பெரிய நகரங்களில் கூடப் பெரும்பாலோர் கிணற்றுத் நீரையே உபயோகித்தனர். நல்ல கிணற்று ஜலம் இருக்கும்போது செலவு செய்து பைப்லைன் வைப்பானேன், நகர சபைக்குத் தண்டம் கட்டுவானேன் என்றே பெரும்பாலோரும் எண்ணினர். கிணறு என்றால் சங்க காலத்திலிருந்து வரும் தண்ணீர் சேந்தும் கிணறு. போர்வெல் என்பது அப்போது அறியப்படாத விஷயம்.
நூற்றாண்டின் முதல் 45 ஆண்டுகளிலேயே நாட்டு வைத்தியம் க்ஷீணித்து ‘இங்கிலீஷ்’ வைத்தியத்தின் கை ஓங்கியிருந்தது. ஆனால் எம்.பி.பி.எஸ் டாக்டர்கள் குறைவாகவே இருந்தார்கள். பெரும்பாலான டாக்டர்கள் எல்.எம்.பிக்கள்தான். தவிர எல்.ஐ.எம் என்ற கூட்டு மருத்துவம் (integrated medicine) படித்தவர்கள் இருந்தார்கள். ஆங்கில மற்றும் ஆயுர்வேத முறைகளைச் சேர்த்துப் பயின்றவர்கள். அவர்களும் பெரும்பாலும் அலோபதி மருந்துகளே கொடுத்தனர். சுலபம், மற்றும் வரும்படிக்கு உகந்ததாயிருந்த காரணத்தால். சல்ஃபா மருந்துகளே மிக வீரியமுள்ளதாகக் கருதப்பட்டன. ஆண்டிபயாடிக்குகளின் சகாப்தம் (ணீஸீtவீதீவீஷீtவீநீ ணீரீமீ) இன்னும் தொடங்கவில்லை என்றே சொல்ல வேண்டும். விய வருடத்தில்தான் பெனிசிலின் எட்டிப்பார்க்க ஆரம்பித்திருந்தது. ஆனால் விலை மிக அதிகம். தவிர அன்றைய பெனிசிலினுக்குக் குளிர் சாதனம் தேவை. அது அன்று பரவலாக இருக்கவில்லை. இன்று நமக்குக் குளிர்விட்டுப் போன டைபாய்டு ஜுரத்திருந்து க்ஷயரோகம் (காசம்) வரையிலான பல நோய்கள் அன்று பயங்கர எமன்களாய் விளங்கின.
இன்று தொழுநோய் என்றழைக்கப்படும் குஷ்டரோகத்துக்கு மருந்து இல்லாததால் அது கர்ம வியாதி என்றே கருதப்பட்டது. அவ்வப்போது காலராவும் எப்போதாவது பிளேக் நோயும் தோன்றி உயிர்களை அள்ளிக்கொண்டு போயின. அப்போதெல்லாம் கார்கள் (பிளஷர் என்று சொல்வார்கள்) மட்டுமின்றி ரேடியோக்களும் மிகக் குறைவாக இருந்த காலம். விய வருடம் வைகாசி மாதம் (மே 1946) லண்டனிலிருந்து வந்திருந்த காபினெட் மிஷனின் இந்திய சுதந்திரம் பற்றிய மிக முக்கியமான முடிவைப் பற்றி ரேடியோவில் சொல்லப்போகிறார்கள். அதை நேரடியாகவும் உடனடியாகவும் கேட்பதற்காக எங்கள் வீட்டில் ஒரு கூட்டமே கூடியது நினைவிலிருக்கிறது. முனிசிபல் நகரமான தாராபுரத்தில் அப்போது இரண்டு மூன்று பேர்களின் வீட்டில்தான் வானொலிப் பெட்டி இருந்ததாம். கிராமங்களில் மின்சாரம் இல்லாததும் நகரங்களில் பெரும்பாலான வீடுகள் மின்வசதி வைத்துக்கொள்ளாததும் காரணமாயிருக்கலாம்.
நூற்றாண்டின் தொடக்கத்தில் மாதவையா பிரலாபித்த சமூக அவலங்கள் இன்னும் காணப்பட்டன. போன விய வருடத்தில் பெண்டாட்டியைத் ‘தள்ளி’ வைத்துவிட்டு இன்னொரு பெண்ணை மணந்துகொள்வது சட்டத்துக்குப் புறம்பாக இருக்கவில்லை. ‘இருதார மணத் தடைச் சட்டம்’ வர இன்னும் ஓரிரு ஆண்டுகள் இருந்தன.
** தபால் + பெட்டியின் சந்தியைத் தமிழ்ப்படுத்தி ‘தபாற்பெட்டி’யென்று அந்தக் காலத்தில் எழுதினார்கள் என்பதிலிருந்து இந்தச் சொல் தமிழில் பூரணமாக இணைந்து absorb / integrate ஆகிவிட்டது என்பது தெரிகிறது. இது போன்ற பதங்களைக் களைந்துவிட்டு செயற்கையான சொற்களைப் புனைவதற்கு அவசியம் இல்லை என்றும் தோன்றுகிறது.
## எனக்குத் தெரிந்து ஜீவநதியாக இருந்து அண்மைக் காலத்தில் அந்த அந்தஸ்தை இழந்தது எங்கள் ஊர் அமராவதி. அந்த நாளில் கடுங்கோடையிலும் முழங்கால் தண்ணீராவது ஓடும். இன்று பல மாதங்களுக்கு வற்றிப்போகிறது.
ஓவியங்கள்: என்.சீனிவாசன்
அது அந்தக் காலம்
‘அஸ்கா சர்க்கரை’ என்று கேள்விப்படுகிறோமே, அப்படியென்றால் என்ன ? அந்தப் பெயர் எப்படி வந்தது ? – இந்தத் தகவல்கள், எஸ். வி. ராமகிருஷ்ணன் எழுதிய ‘அது அந்தக் காலம்’ என்ற அருமையான கட்டுரைத் தொகுதியில் கிடைத்தது. (உயிர்மை பதிப்பகம் – 120 பக்கங்கள் – ரூ 60/-)
‘அஸ்கா என்றால், நிறத்திலிருந்து சத்துவரையான சர்க்கரைக்கே உரிய எல்லா இயல்புகளும் பாழடிக்கப்பட்டு, நாமெல்லோரும் இன்று விழுந்து விழுந்து சாப்பிடுகிறோமே, அந்த வெள்ளையான படிகச் சர்க்கரை’, என்று எழுதுகிறார் எஸ். வி. ராமகிருஷ்ணன்.
ஆதிகாலத்தில் சென்னை ராஜதானி முழுவதற்கும் ஒரே ஒரு சர்க்கரை ஆலைதானாம். அந்த ஆலை (தற்போது ஒரிஸாவில் உள்ள) ‘அஸ்கா’ என்ற ஊரில் இருந்ததாம், ஆகவே, அங்கே தயாராகும் சர்க்கரையை ‘அஸ்கா சர்க்கரை’ என்று அழைக்கத் தொடங்கினார்கள்போல !
அன்புள்ள ஜெயமோகன்,
குற்றமும் தண்டனையும் படித்தேன். இரு சிறு திருத்தங்கள்
1. மகாத்மா காந்தி தேசத்துரோக (Treason) குற்றத்துக்காக விசாரிக்கப்படவில்லை ராஜதுரோகக் (Sedition) குற்றத்துக்காகவே விசாரிக்கப்பட்டார். ராஜதுரோகம் என்பது அரசை நிந்தனைசெய்வது, அதன் அடிப்படைகளை எதிர்ப்பது. தேசத்துரோகம் என்பது தேசத்துக்கு எதிராக போர் செய்வது. தேசத்துரோகம் சிலநாடுகளில் குற்றமாகக் கருதப்படுகிறது. உதாரணமாக மாதாஹாரி ·ப்ரான்ஸில் முதல் உலகப்போர் நாட்களில் ராஜத்துரோக வழக்குக்காக மரணதண்டனைக்கு ஆளானார். ஆனால் அது பிரிட்டிஷ் சட்டப்படி பெரும்குற்றம் அல்ல. அரசுக்கு எதிராக போர் செய்தல் என்னும் தேசத்துரோகம் என்பது பெரும்குற்றம். அது மரணதண்டனை அல்லது நாடுகடத்தல் தண்டனைக்கு உரியது. வ.உ.சிதம்பரம்பிள்ளை, வீர் சவார்க்கர் போன்றவர்கள் அக்குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்
2. இரண்டாம் உலகப்போரில் வெற்றிபெற்றவர்களால் அமைக்கப்பட்ட போர்க்குற்றநீதிமன்றம் ஜெர்மனியில் நியூரம்பர்க் நகரில் நடைபெற்றது, ஆஸ்டர்விட்ஸில் நடந்தது என்று சொல்லியிருக்கிறீர்கள். போலந்து நாட்டில் உள்ள ஆஸ்விட்ஸ் நகரில் யூதர்கள் படுகொலை செய்யப்பட்ட படுகொலை முகாம்கள் இருந்தன. ஆஸ்விட்ஸ் என்பதே உச்சரிப்பு. ஆஸ்டர்லிட்ஸ் என்று இன்னொரு நகரம் உள்ளது. 1805ல் நெப்போலியன் அங்கே ஒரு பெரும் வெற்றியை அடைந்தார். மற்றபடி அதுஅ ழகிய நல்ல ஊர்.
மேலதிகாரிகளின் ஆணையின்படி நடந்தோம் என்ற குற்றவாளிகளின் விளக்கம் விசாரணை மன்றத்தால் ஏற்கப்படவில்லை. அத்துடன் போரின்போது மேலதிகாரிகளை மீறி ஜெர்மனிய படைவீரர்கள் நடந்துகொண்டார்கள் என்றும் ஏராளமான குற்றச்சாட்டுகள் அப்போது இருந்தன. அந்த ஜெர்மானிய வீரர்கள் கோர்ட் மார்ஷியல் செய்யபப்ட்டு சுட்டுக்கொல்லப்பட்டார்கள். [ நேசநாடுகளிலும் சட்டம் வேறாக இருக்கவில்லை, ராணுவத்தைப்பொறுத்தவரை]
பின்னர் இரண்டாம் உலகப்போர் குற்றநீதிமன்றம் ஜப்பானிய வீரர்களையும் டோஜோவையும் விசாரிக்கக் கூடியபோது அதில் ஒரு இந்திய நீதிபதியும் இருந்தார். ராதா பெனோட் பால் [Radha Benode Pal] வெற்றிபெற்றவர்கள் தோற்றவர்களை விசாரித்து தண்டிப்பதில் உள்ள அறப்பிரச்சினையை பற்றி அவர் ஒரு மாறுபாடுக் குறிப்பை எழுதினார்.வென்றவர்கள் அணுகுண்டை பயன்படுத்தி மானுடக்குலம் கண்டிராத அழிவை உருவாக்கினார்கள்.[ போர் குற்ற விசாரணை மன்றத்தில் அதேயளவுக்கு கொடும்போர்க்குற்றங்களைச் செய்த ஸ்டாலினின் ரஷ்யா நீதிபதியின் பீடத்தில் வீற்றிருந்தது] ஜஸ்டிஸ் பாலின் தீர்ப்பு பெரிதும் மதிக்கபப்ட்ட ஒரு செவ்வியல் தீர்ப்பு. ஆனால் அவரது குரல் தனித்து ஒலித்தது, டோஜோ விசாரணைக்குப்பின் தூக்குத்தண்டனைக்கு ஆளானார்
அன்புடன்
எஸ்.வி.ராமகிருஷ்ணன்
ஹைதராபாத்
அன்புள்ள எஸ்.வி. ராமகிருஷ்ணன் அவர்களுக்கு,
தங்கள் கடிதத்துக்கு நன்றி. நியூரம்பர்க் பற்றிய தகவல் ஒரு நினைவுப்பிசகு . திருத்தியிருக்கிறேன்.தேசத்துரோக- ராஜதுரோக குற்றச்சாட்டுகள் நடுவே உள்ள வேறுபட்டும், நீதிபதி பால் பற்றிய தகவலும் எனக்குப் புதியவை. நன்றி
*
With @ksrk Satyarajkumar in East Falls Church
Sent from my Verizon Wireless BlackBerry
JM: my top readers r from India. 80%. US followed by Canada. & mostly from small cities like Tharapuram rather than Malaysia
Sent from my Verizon Wireless BlackBerry
ஆடம் எகோயான் – மைத்ரேயன்
The Walrus Magazine » The Unsettler » By Denis Seguin » Film: “Atom Egoyan’s Adoration renews a provocative intellectual vision”
உலக இயக்குநர்களில் குறிப்பிடத் தக்க ஒருவர். எனக்குப் பிடித்தமான இயக்குநர்களில் ஒருவர்.
கனடியர். ஏதேதோ அதிசயமான பொருளை எல்லாம் கருவாகக் கொண்டு திரைப்படங்கள் எடுப்பவர்.
ஆர்மீனிய மூலம் இவரது குடும்பம் என்பதால் உலக அகதிகளின் அவல வாழ்வில் இவரது சிந்தனை ஆழமாக வேர் கொண்டது. மனிதத்தின் பல பரிமாணங்களை இரக்கமற்ற நேர்ப்பார்வையில் காட்டக் கூடிய அதே நேரம் இவரது பாத்திரங்களை இவர் சிறிதும் வெறுக்காது கதைகளை நகர்த்துகிறார்.
பல படங்களைப் பார்த்தால் இவரது உலகப் பார்வை வசப்படும். சாவி போட்டால் போல எல்லா படங்களுக்கும் கதவு உடனே திறக்கும்.
Timeline: US shooting sprees – History of school shootings
‘Are you not all dead yet?’ — teenage gunman kills 15 in school massacre in Germany | World news | guardian.co.uk: Wednesday 11 March 2009
“• Nine pupils among dead in rampage by former pupil
• Teenager killed himself after shoot-out with police”
Some of the worst shooting incidents inside US schools and universities in recent years:
August 1966: Charles Whitman is one of the most notorious names among America’s mass killers. In August 1966 he climbed a 27-storey tower at the University of Texas in Aust in and shot passersby on the campus below before being killed by police. Fifteen people were killed, including his mother and wife, whom he had shot the night before. An autopsy found he had been suffering from a brain tumour.
October 1997: A 16-year-old boy stabs his mother, then shoots dead two students at a school in Mississippi, injuring several others.
December 1997: A 14-year-old boy kills three students in Kentucky.
March 1998: At Westside Middle School in Jonesboro, Arkansas, two boys aged 13 and 11 set off the fire alarm and killed four students and a teacher as they left the school.
April 1998: A 14-year-old shoots dead a teacher and wounds two students in Pennsylvania.
May 1998: A 15-year-old shoots dead two students in a school cafeteria in Oregon.
June1998: Two adults are hurt in a shooting by a teenage student at a Virginia high school.
April 1999: Two heavily armed teenage students, Eric Harris and Dylan Klebold, rampage through their school in Littleton, Colorado, killing 12 students and a teacher, as well as wounding 24 others, before committing suicide
May 1999: A student injures six pupils in a shoot-out in Georgia.
November 1999:A 13-year-old girl is shot dead by a classmate in New Mexico.
February 2000: A six-year-old girl is shot dead by a classmate in Michigan.
March 2001: A pupil opens fire at a school in California, killing two students.
January 2002: A student who had been dismissed from the Appalachian School of Law in Grundy, Virginia, kills the dean, a professor and a student, and wounds three others.
April 2003: A teenager shoots dead the head-teacher at a Pennsylvania school, then kills himself.
May 2004: Four people are injured in a shooting at a school in Maryland.
March 2005: Jeffrey Weise, a 16-year-old high school student guns down five students, a teacher and a security guard at Red Lake High School in northern Minnesota before killing himself. He also killed his grandfather and his grandfather’s girlfriend elsewhere on the Chippewa Indian reservation.
November 2005: A student in Tennessee shoots dead an assistant principal and wounds two other administrators.
September 2006: Duane Morrison, a 53-year-old drifter, takes six female high school students hostage in Bailey, Colorado, after entering Platte Canyon High School, claiming to be carrying a bomb. He sexually assaulted them and then shot one, fatally, before killing himself when police arrived.
September 2006: Two days after the Bailey killing, a 15-year-old student kills his school’s principal in western Wisconsin after telling another student “you better run”.
October 2006: Charles Roberts, a 32-year-old milk truck driver takes hostages and eventually shoots 10 girls girls aged seven to 13, killing five, before shooting himself. Roberts had indicated to his wife over the phone that he had dreams about molesting children.
April 2007: A gunman kills at least 31 people in a dormitory and classroom at Virginia Tech university before being shot dead himself.
—-
April 2007: At least 22 people are killed as a gunman goes on the rampage at the campus of Virginia Tech
October 2006: A 32-year-old gunman goes on the rampage at an Amish school in Pennsylvania, shooting dead at least three girls before killing himself
September 2006: A gunman in Colorado shoots and fatally wounds a teenage schoolgirl, and then kills himself
September 2006: Two days later a teenager kills the headteacher of a school in Cazenovia, Wisconsin
November 2005: Student in Tennessee shoots dead an assistant principal and wounds two other administrators
March 2005: Schoolboy in Minnesota kills nine, and then shoots himself
May 2004: Four people are injured in a shooting at a school in Maryland
April 2003: Teenager shoots dead a head-teacher at a Pennsylvania school, and then kills himself
January 2002: A student who had been dismissed from the Appalachian School of Law in Grundy, Virginia, killed the dean, a professor and a student, and wounded three others.
March 2001: A pupil kills two students after opening fire at a school in California
February 2000: A classmate shoots dead a six-year-old girl in Michigan.
November 1999: A 13-year-old girl is murdered by a classmate in New Mexico, again via a shooting.
May 1999: Six are injured by a student in a shoot-out in Georgia.
April 1999: Two teenagers shoot dead 12 students and a teacher before killing themselves at Columbine School in Colorado. An award-winning documentary was later made about the killing.
June 1998: Two adults are hurt in shooting by teenage student at high school in Virginia
—-
The Erfurt massacre is the worst school shooting in Europe since a gunman killed 16 children and their teacher in Scotland in 1996.
Detailed below are some of the worst incidents of the past decade.
Scotland, March 1996: Gun enthusiast Thomas Hamilton shoots 16 children and their teacher dead at their primary school in Dunblane, Scotland before killing himself.
Yemen, March 1997: A man with an assault rifle attacked hundreds of pupils at two schools in Sanaa, Yemen, killing six children and two others. He was sentenced to death the next day.
United States, October 1997: A 16-year-old boy fatally stabbed his mother before shooting dead two students, including his former girlfriend, at Pearl High School in Pearl, Mississippi.
United States, December 1997: A 14-year old boy killed three students attending a prayer meeting at Heath High School in West Paducah, Kentucky.
United States, March 1998: Two boys aged 13 and 11 killed four pupils and a teacher after setting off fire alarms at Westside Middle School in Jonesboro, Arkansas.
United States, April 1999: Dylan Klebold and Eric Harris killed 12 of their classmates and a teacher at Columbine High School in Littleton, Colorado, before killing themselves.
Germany, November 1999: A 15-year-old student in Meissen, eastern Germany, stabbed his teacher to death after taking bets from classmates he would dare commit the crime.
He was later jailed for seven years.
Germany, March 2000: A 16-year-old pupil at a private boarding school in the Bavarian town of Branneburg, shot a 57-year-old teacher, who later died from injuries.
The teenager – who also shot himself – was facing expulsion from school after failing a cannabis test.
Germany, February 2002: A former pupil killed his headmaster and set off pipe bombs in the technical school he had recently been expelled from in Freising near Munich.
The man also shot dead his boss and a foreman at the company he worked for before turning the gun on himself. Another teacher was shot in the face, but survived.
Germany, April 2002: Seventeen people killed after a gunman – a former pupil – opens fire in a school in Erfurt, eastern Germany. He then turned the gun on himself.
—-
Following is a chronology of some of the deadlier mass shootings in the United States in recent years:
March 1998 – At Westside Middle School in Jonesboro, Arkansas, two boys aged 13 and 11 pulled a fire alarm and began shooting teachers and classmates as they left the school, killing four students and a teacher.
April 1999 – Two students shot to death 12 other students and a teacher at Columbine High School in Littleton, Colorado, before killing themselves.
July 1999 – A day trader killed his wife and two children before shooting nine people to death at two Atlanta brokerages. He then killed himself.
September 1999 – A 47-year-old loner killed seven people in a Fort Worth, Texas, Baptist church. Then he killed himself.
November 1999 – A Xerox copier repairman in Honolulu gunned down seven co-workers before fleeing, triggering one of the biggest manhunts in Hawaii history. He was located and surrendered to police after a five-hour armed standoff.
March 2005 – A 16-year-old high school student gunned down five students, a teacher and a security guard at Red Lake High School in far northern Minnesota before killing himself. He also killed his grandfather and his grandfather’s companion elsewhere on the Chippewa Indian reservation.
October 2, 2006 – A local milk truck driver who was not Amish, tied up and shot 10 Amish schoolgirls aged 6 to 14 in their classroom, killing five of them before turning the gun on himself in Lancaster County, Pennsylvania, about 60 miles (97 km) west of Philadelphia.
April 16, 2007 – A university in Blacksburg, Virginia, Virginia Tech, became the site of the deadliest rampage in U.S. history when a gunman killed 32 people and himself.
December 5, 2007 – A gunman opened fire from a balcony in a shopping mall in Omaha, Nebraska, killing eight people and wounding five, before taking his own life, police said.
—-
Following is a chronology of some of the deadly mass shootings in the United States in the past year, a period in which candidates have been actively campaigning for the November 2008 presidential election:
April 16, 2007 – Virginia Tech, a university in Blacksburg, Virginia, became the site of the deadliest rampage in U.S. history when a gunman killed 32 people and himself.
December 5, 2007 – A gunman opened fire from a balcony in a shopping mall in Omaha, Nebraska, killing eight people and wounding five, before fatally shooting himself, police said.
February 2, 2008 – Five women were shot dead in a clothing store at a suburban Chicago shopping center in what police said appeared to be a botched robbery. Police were searching for a gunman spotted outside the store by a witness.
Feb 7, 2008 – A gunman killed two police officers and three city officials when he stormed a city council meeting in a St. Louis suburb. The gunman was later shot dead by police.
February 8, 2008 – A nursing student fatally shot two women and killed herself in front of classmates at Louisiana Technical College in the state capital, Baton Rouge.
February 14, 2008 – A man fired into a lecture hall packed with students at North Illinois University, killing five people and wounding 18 before shooting himself dead.
—–
Feb. 14, 2008: A 27-year-old man goes on a rampage at Northern Illinois University in DeKalb, shooting 21 people, killing five and later himself. University police report that the suspect, a former student, had stopped taking medication and had been acting “somewhat erratic.”
Feb. 12, 2008: In Oxnard, Calif., a 14-year-old shoots a 15-year-old classmate, who later dies of his injuries. Law enforcement cites “bad blood” between the teens.
Feb. 11, 2008: In Memphis, a 19-year-old senior is shot in his school’s gym by a 17-year-old sophomore, following a feud that started off campus earlier in the week; after the shooting, the suspect hands his gun to a coach, saying, “It’s over now.”
Feb. 8, 2008: A nursing student shoots two women and then herself in a classroom at Louisiana Technical College, outside Baton Rouge.
Feb. 7, 2008: In Portsmouth, Ohio, a small community near the Kentucky border, a man shoots his estranged wife at the Notre Dame Elementary School.
Feb. 4, 2008: In Memphis’s Hamilton High School, a 16-year-old student is shot in the leg during an argument with another student over music.
Jan. 16, 2008: As students are being dismissed early from school, one is wounded in the shoulder after being shot in the parking lot of Crossroads Charter High School in Charlotte, N.C.
Dec. 13, 2007: Two doctoral students from India are shot and killed in student apartments on the Louisiana State University campus.
Dec. 12, 2007: After taking his father’s pistol to school, a student shoots a 14-year-old classmate at a private school outside New Delhi; gun violence is very rare in India.
Dec. 10, 2007: A 24-year-old goes on a shooting spree at a megachurch in Colorado Springs and a Denver-area missionary training school, killing four and wounding four others; the gunman, who law enforcement sources said “hated Christians,” kills himself.
Nov. 7, 2007: An 18-year-old man, a former student, shoots seven people and wounds 11 others before taking his own life at a high school in southern Finland; this is the first known school shooting in Finland, where gun ownership is fairly common by European standards but shootings are rare.
Oct. 24, 2007: In Saginaw, Mich., four South Middle School students are shot by a high school student at a middle school football game; the victims’ injuries are not life threatening.
Oct. 10, 2007: A 14-year-old gunman opens fire at Success Tech Academy, a nontraditional high school in Cleveland, wounding two students and two teachers before killing himself.
Sept. 30, 2007: A University of Memphis football player dies after being shot and then crashing his car into a tree, following a botched robbery attempt outside a university housing complex.
Sept. 21, 2007: Two Delaware State University students are shot and wounded at the Campus Mall while returning from an on-campus cafe.
Aug. 5, 2007: Four young people are shot in the head at close range, three fatally, in the parking lot of the K-8 Mount Vernon School in Newark, N.J.; all of the victims had been planning to attend Delaware State in the fall.
April 16, 2007: Before killing himself, a 23-year-old Virginia Tech student, Seung Hui Cho, kills two students in a dorm; then two hours later across campus in Norris Hall, he kills 25 more students and five faculty members. Fifteen others are wounded in the deadliest campus shooting in U.S. history.
April 2, 2007: A program coordinator for the University of Washington’s College of Architecture is shot and killed by a man in an apparent murder-suicide.
Oct. 2, 2006: A gunman kills six people, including himself, and wounds more at a one-room Amish schoolhouse in Lancaster County, Pa.
Sept. 29, 2006: A 15-year-old student brings two guns to Weston Schools in rural Cazenovia, Wis., and fatally shoots his principal after the principal had given him a disciplinary warning for having tobacco on school grounds.
Sept. 27, 2006: A 53-year-old gunman takes six girls hostage at Platte Canyon High School in Bailey, Colo. The gunman uses the girls as human shields for hours before fatally wounding a 16-year-old and then killing himself.
Sept. 17, 2006: Five Duquesne University basketball players are injured in a campus shooting by two men after a dance.
Sept. 2, 2006: Douglas Pennington, 49, kills his two sons and himself while visiting Shepherd University in West Virginia.
Nov. 8, 2005: A high school freshman is arrested in the fatal shooting of an assistant principal and wounding of two other school administrators at Campbell County High School in eastern Tennessee.
March 21, 2005: A 16-year-old student shoots and kills five schoolmates, a teacher, and an unarmed guard at Red Lake High School on the Red Lake Indian Reservation in Minnesota before taking his own life.
Sept. 24, 2003: A 15-year-old student fatally shoots two fellow students at Rocori High School in Cold Spring, Minn.
April 24, 2003: A 14-year-old student shoots and kills the principal of Red Lion Area Junior High School in south-central Pennsylvania before killing himself.
Oct. 28, 2002: A student at the University of Arizona Nursing College kills three of his instructors before killing himself.
Jan. 16, 2002: A graduate student at the Appalachian School of Law shoots and kills the dean, a professor, and a student and wounds three other students.
March 5, 2001: A 15-year-old student kills two fellow students and wounds 13 others at Santana High School in Santee, Calif., in San Diego County.
Aug. 28, 2000: A graduate student at the University of Arkansas is found dead with his English professor in an apparent murder-suicide.
May 26, 2000: A 13-year-old student kills his English teacher on the last day of classes in Lake Worth, Fla., after the teacher refused to let him talk with two girls in his classroom.
March 10, 2000: Two students in Savannah, Ga., are killed by a 19-year-old student while leaving a dance sponsored by Beach High School.
Feb. 29, 2000: A 6-year-old boy shoots and kills a 6-year-old classmate at Buell Elementary School in Mount Morris Township, Mich.
Nov. 19, 1999: A 13-year-old girl is shot in the head by a 12-year-old boy in school at Deming, N.M.
April 20, 1999: Eric Harris, 18, and Dylan Klebold, 17, kill 12 students and a teacher and wound 23 others before killing themselves at Columbine High School in Littleton, Colo.
June 15, 1998: One teacher and one guidance counselor are wounded by a 14-year-old boy in a Richmond, Va., school hallway.
May 21, 1998: Two teenagers are killed and more than 20 people hurt when a teenage boy opens fire at a high school in Springfield, Ore., after killing his parents.
May 19, 1998: Three days before his graduation, an 18-year-old honor student opens fire at a high school in Fayetteville, Tenn., killing a classmate who was dating his ex-girlfriend.
April 24, 1998: A 15-year-old student opens fire at an eighth-grade dance in Edinboro, Pa., killing a science teacher.
March 24, 1998: Two boys, 11 and 13, fire on their Jonesboro, Ark., middle school from nearby woods, killing four girls and a teacher and wounding 10 others.
Dec. 15, 1997: Two students in Stamps, Ark., are wounded by a 14-year-old boy who was hiding in the woods when he shot the students as they stood in the parking lot.
Dec. 1, 1997: Three students are killed and five wounded by a 14-year-old student at Heath High School in West Paducah, Ky.
Oct. 1, 1997: A 16-year-old in Pearl, Miss., fatally shoots two students to death and wounds seven others after stabbing his mother to death.
Feb. 19, 1997: A 16-year-old boy takes a shotgun and a bag of shells to school in Bethel, Alaska, and kills the principal and a student and injures two others.
Aug. 15, 1996: A graduate student studying engineering at San Diego State University shoots and kills three professors while he defends his thesis.
Feb. 2, 1996: Two students and one teacher are killed and another is wounded when a 14-year-old student in Moses Lake, Wash., opens fire on his algebra class.
March 23, 1994: A 16-year-old student in Seattle is killed in a gang-related drive-by shooting at the school.
Nov. 1, 1991: A physics graduate student kills five University of Iowa officials and wounds two others. The student then fatally shoots himself.
Aug. 12, 1986: Five people are shot and one killed by a student at New York Technical College in Brooklyn.
Nov. 26, 1985: A high school student in Washington State dies after shooting herself the previous day. Police say the female student earlier shot and killed two 14-year-old boys, one of them her former boyfriend.
Oct. 23, 1985: The dean of Bates College in Maine is shot in the back by a sniper while standing in his kitchen in a house just off campus. The dean survives the shooting, and the captain of the school’s swim team is arrested in connection with the incident.
Feb. 22, 1978: After being taunted for his beliefs, a 15-year-old self-proclaimed Nazi, kills one student and wounds a second with a Luger-style pistol in Lansing, Mich.
Dec. 30, 1974: In Olean, N.Y., Anthony Barbaro, a 17-year-old Regents scholar armed with a rifle and shotgun, kills three adults and wounds 11 others at his high school, which was closed for the Christmas holiday. Barbaro was reportedly a loner who kept a diary describing several “battle plans” for his attack on the school.
May 4, 1970: Four students are killed and nine wounded when National Guard soldiers attempt to control an antiwar demonstration at Ohio’s Kent State University.
Jan. 17, 1969: Two students are shot and killed at the University of California-Los Angeles during a student meeting.
Aug. 1, 1966: Charles Whitman climbs atop the observation deck at the University of Texas-Austin, killing 16 people and wounding 31 during a 96-minute rampage.
Timeline: School shootings
School mass shootings since 1966
- guardian.co.uk, Tuesday 23 September 2008
- Article history
August 1966, United States: A student at the University of Texas in Austin killed 14 people and wounded 31 others in a shooting rampage from the observation deck of the university’s 32-storey administrative building. Charles Joseph, 25, was eventually shot and killed by police. An autopsy revealed he had a highly cancerous brain tumour.
January 1979, United States: Brenda Spencer was 16 when she went to the school opposite her house and began shooting at pupils and staff with a gun she had been given by her father for Christmas. The principal and the head custodian were killed, and eight children and a police officer were wounded in the six-hour siege. When asked why she had done it, she is reported to have said: “I don’t like Mondays”. She is currently serving life imprisonment in California.
December 1989, Canada: The École Polytechnique massacre in Quebec left 14 women dead and another 14 injured. Marc Lépine, 25, armed with a legally obtained semi-automatic rifle, a hunting knife and claiming to be “fighting feminism”, moved through the college specifically targeting women to shoot. In less than 20 minutes, he shot 28 people, killing 14 women, before turning the gun on himself. The incident led to more stringent gun control laws in Canada.
March 1996, Scotland: An unemployed former Scout leader opened fire at Dunblane primary school, killing 16 children and one teacher before committing suicide. Thomas Hamilton walked into the school and made his way to the gymnasium where he began shooting a class of five and six year olds, killing all but one of them. He then made his way around the school, injuring a further eleven children and three adults.
March 1997, Yemen: Hundreds of pupils at the Sanaa school in Sanaa came under a hail of bullets from Mohammad Ahman al-Naziri, 48, who fired on the school with an assault rifle. He killed six pupils and two teachers. He was sentenced to death the next day and executed.
April 1999, United States: The schoolboys Eric Harris and Dylan Klebold embarked on a shooting spree at Columbine high school in Denver, killing 12 students and a teacher, as well as wounding 23 others, before both committing suicide. The massacre provoked huge debate regarding gun control laws in the US.
April 2002, Germany: Wearing a mask and dressed as a ninja, 19-year-old expelled student Robert Steinhäuser shot and killed 16 people at the Johann Gutenberg gymnasium in Erfurt. Thirteen teachers, two students and one police officer were killed and another seven people were injured, as he moved from classroom to classroom. His last words before his suicide were: “That’s enough for today”, said to a teacher who confronted him.
October 2006, United States: A one-room schoolhouse in the Amish community of Nickel Mines in Pennsylvania became the target of the gunman Charles Carl Roberts. He ordered the boys to leave before barricading himself in the school with the female pupils. He lined them up in front of the blackboard, killing five and injuring seven. The schoolhouse was knocked down after the killings.
April 2007, United States: Seung-Hui Cho killed 32 people and wounded many more at the Virginia Tech college in Blacksburg, Virginia, in two separate incidents on the same day. Cho had been diagnosed with a severe anxiety disorder. A review of the killings criticised the college for failing to take action after the first reports of the shooting, which might have reduced the number of casualties.
November 2007: Pekka-Eric Auvinen, an 18-year-old student, opened fire at his school in Tuusula, killing eight people. Among the dead were a number of pupils and a teacher at the Jokela high school. On the morning of the incident, Auvinen posted a video on YouTube announcing the massacre at the school.
February 2008, United States: Students at the Northern Illinois University, near Chicago, had to run for cover as a man armed with two handguns and a shotgun opened fire during a science lecture. The 27-year-old former student Stephen Kazmierczak killed five people and then turned the gun on himself. Another 15 people were injured in the attack.
September 2008, Finland: A student killed 10 people after opening fire at a vocational school in Kauhajoki, north-west Finland. According to local reports, the gunman was carrying an automatic weapon and wearing a ski mask as he entered the school. He turned the gun on himself and later died from his injuries.
3 people shot at Gardena High School
School police officer shot near El Camino Real High
Police say a Los Angeles Unified School District police officer has been wounded in a shooting near El Camino Real High School in Woodland Hills.
The shooting occurred at about 11:45 a.m. today on the campus at Valley Circle and Burbank Boulevard.
Related Articles
- Gabrielle Giffords shooting: from Columbine to Tucson (telegraph.co.uk)
- How Many Deaths Are Enough? (nytimes.com)
- The 15 Biggest Campus Massacres (rawjustice.com)
- Two hurt in ‘accidental’ US school shooting: police – AFP (news.google.com)
- Teachers Carrying Guns: Nebraska Senator Mark Christensen Introduces Bill To Keep Schools Safe (huffingtonpost.com)
- Gardena High School shooting: Two people shot after gunman goes on rampage in high school (dailymail.co.uk)
- Girl wounded in LA school shooting awakens (sfgate.com)
Chronology – Major bomb blasts in India
![]() |
RECENT BOMB ATTACKS
![]() August 2007: Bombs in open-air auditorium and restaurant in Hyderabad kill more than 40
May 2007: Bomb in historic Hyderabad mosque kills 14
February 2007: Twin blasts on train travelling from Delhi to Pakistan kills at least 66 people near Panipat
July 2006: More than 160 killed by seven bombs on train network in Mumbai
March 2006: Bombs at Hindu temple and railway station in Varanasi kill 15
October 2005: Three blasts in Delhi kill 62
![]() |
Recent Comments