Archive

Posts Tagged ‘SRa’

Tamil Author S Ramakrishnan on why we write Essays in Magazines and Fiction Novels?

June 15, 2012 1 comment

எழுதுவது ஏன்

நாள் : 10/16/2004 1:06:51 PM,

இத்தாலிய யூத எழுத்தாளரான பிரைமோ லெவி (primo levi) நாஜிகளின் சித்ரவதைக்கு உள்ளான எழுத்தாளர். ஆஸ்விட்ஸ் முகாமில் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்ட அவர் தனது வேதியல் அறிவின் காரணமாக நாஜிமுகாமில் சாவிலிருந்து தப்பினார். வேதியல் பேராசிரியரான அவர் குறிப்பிடத்தக்க நாவல்களையும் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். அவரது கட்டுரைகளில் மிகவும் பிரசித்திபெற்றது எழுதுவது ஏன் என்ற கேள்விக்கு லெவி தந்த பதில்.

எழுதுவதற்கு ஒன்பது காரணங்கள் இருக்ககூடும் என்று வரையறுக்கும் பிரைமோ லெவி அதைப்பற்றி விரிவாக விளக்குகிறார்

1) எழுதுவதற்கான அவசியத்தையும் உந்துதலையும் உணர்வதால்.

தனக்குள்ளிருந்து தன்னை யாரோ எழுதும்படியாக வற்புறுத்துவது போல ஒருவன் அடையும் நிலையில் தான் இந்த வகை எழுத்து உருவாகிறது. மிதமிஞ்சிய வேதனையை. தனிமையை பகிர்ந்து கொள்வதற்கு யாருமற்ற நிலையில் கதையோ, கவிதையோ எழுதுவது உருவாகிறது. பெரும்பான்மையான எழுத்தாளர்கள் இந்த வகையில் தான் துவங்குகிறார்கள்.

2) தன்னையும் மற்றவர்களையும் மகிழ்விக்க.

மிகச்சிறந்த இலக்கியவாதிகள் இந்த வகையைச் சேர்ந்தவர்களே. அவர்கள் தொழில்முறை எழுத்தாளர்கள் அல்ல. வாழ்வின் ஞானமும், சரளத்தன்மையும், அன்பையும் வெளிப்படுத்தவே அவர்கள் எழுதுகிறார்கள். தங்களது அனுபவங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதற்கு சந்தோஷமாக முன்வருகிறார்கள். வாசிப்பவனும் எழுத்தாளனைப் போலவே அந்த அனுபவத்தை துய்த்து உணருகிறான். உதாரணத்திற்கு லு¡யி கரோல் எழுதிய ஆலிஸின் அற்புத உலகம் அவரை சந்தோஷப்படுத்தியதோடு நு¡ற்றாண்டுகளாக குழந்தைகளை, பெரியவர்களைச் சந்தோஷப்படுத்திவருகிறது. இந்த வகை எழுத்து எதையும் போதிப்பதோ, கட்டாயப்படுத்துவதோ இல்லை.

3) யாருக்காவது எதையாவது கற்றுக் கொடுக்க

விற்பன்னர்களும், அறிஞர்களும் இந்த வகையைச் சேர்ந்தவர்களே. அவர்கள் வாசகனை தங்களை விடவும் அறிவில் குறைந்தவன் என்ற கருத்தில் தான் எழுதுகிறார்கள். அது சமையற்கலையாக இருந்தாலும் அணுவிஞ்ஞானமாக இருந்தாலும் நோக்கம் ஒன்றுதான்.

இந்த வகை எழுத்தில் எழுத்தாளனின் விருப்பம் நிறைவேறுவது அவனது அறிவின் திறன் அளவில் தான் சாத்தியமாகிறது. பலநேரங்களில் அதுவே படிக்கமுடியாமலும் செய்துவிடுகிறது. எளிமையும், ஆழ்ந்த அறிவும், விளக்கி சொல்லும் திறன்மிக்க மொழியும் ஒன்று சேர்ந்து எழுத்து உருவானால் அப்போது வாசகன் கற்றுக்கொள்வதோடு நல்ல கலைப்படைப்பை வாசித்த அனுபவத்தையும் பெறுகிறான்.

4) தன் கருத்துக்களை தெரியப்படுத்த

இந்த வகை எழுத்தாளர்கள் தாங்கள் தனித்துவமானவர்கள், ஞானம்பெற்றவர்கள், அதிக அறிவுதிறன் கொண்டவர்கள் என்று தங்களை நம்பக் கூடியவர்கள். உலகில் தங்களுக்கு மட்டுமே சில அரிய கருத்துகள் மனதில் உதயமாகியுள்ளதாக நம்புகிறவர்கள். தத்துவத்திலும் அரசியலிலும் விருப்பம் கொண்டவர்களே இந்தவகை எழுத்தில் அதிகம். இந்த வகை எழுத்தில் ஒரிஜினாலிடி மிக அரிதாகவேயிருக்கிறது.

5) வேதனையிலிருந்து விடுதலை அடைய

பிரச்சனைகளை நேரிடையாக சந்திக்க முடியாமலும், ஆறுதல் தேடுவதற்கு வழியற்றும், எழுதுவது ஒரு பாவமன்னிப்பு கோருதல் போல என நம்புகிறவர்களே இந்த வகை எழுத்தாளர்கள். ஆனால் எழுத்தாளனின் வேதனைகளை வாசகனின் மீது திணிப்பதும் பலநேரங்களில் தவறானதாகிவிடுகிறது. அது தானும் விடுதலை அடையமுடியாமல் வாசிப்பவனையும் நரகத்தில் தள்ளிவிடும்

6) புகழ்பெற

ஒரு பைத்தியக்காரன் தான் புகழ்பெறுவதற்கென்றே எழுத முயற்சிப்பான். காரணம் எழுதிப் புகழ்பெறுவது எளிதான காரியமில்லை. எல்லா எழுத்தாளர்களுக்கும் மனதில் தனக்குப் பெரிய புகழ் கிடைக்கவேண்டும் என்ற ஆசையிருக்கதான் செய்கிறது . ஆனால் அதற்காக யாராவது எழுதத் துவங்கினால் அந்த எழுத்து நிச்சயமற்ற பலனைத் தான் உருவாக்கும்

7) பணக்காரன் ஆக

சம்பாதிக்க, கடனை அடைக்க, வசதியாக வாழ என பலகாரணங்களுக்காக எழுதுபவர்கள் பலரிருக்கிறார்கள். உபயோகமான எந்த விஷயத்திற்கும் வழங்கபடுவது போல தான் எழுத்திற்கும் சன்மானம் வழங்கப்படுகிறது. ஆனால் பணத்துக்காக மட்டும் எழுதுவது ஆபத்தானது. அது மலிவான பாதைக்கு அழைத்துச் சென்றுவிடும்

8) உலகை செம்மைபடுத்த

இந்தவகை எழுத்தாளர்கள் உலகம் தங்களால் தான் காப்பாற்றப் படப் போகிறது என்று நம்புகிறவர்கள். மேலும் உலகைப் பற்றி தங்களுக்கு முழுமையாகத் தெரியும் என்று நம்புகிறவர்கள்.ஹிட்லர் மெயின்கேம்ப் எழுதியது கூட இந்த வகை ஈடுபாட்டில் உருவானது தான்.

9) பழக்கத்தின் காரணமாக.

இது தன்னைத் தானே காப்பிசெய்து கொள்வது போன்ற எழுத்து ரகம். தன்பெயரைத் தொடர்ந்து அச்சில் பார்ப்பது ஒரு நோக்கமாக இருக்க கூடும். மற்றவகையில் வெறுமனே பழக்கம் காரணமாக மட்டும் ஒருவர் தொடர்ந்து எழுதுவதை விடவும் மெளனமாக எதையும் எழுதாமலிருப்பது அவருக்கும் நல்லது, வாசகர்களுக்கும் நல்லது. .

லெவியை வாசித்த போது தமிழில் இந்த ஒன்பது வகைக்கும் அப்பாலும் நிறைய பிரிவுகள் இருப்பதை உணரமுடிகிறது. எனக்குத் தெரிந்த சில காரணங்கள்

1) அடுத்தவர் எழுதுகிறாரே என்று எழுதுவது.

அநேகமாக எனக்கு தெரிந்த பலரும் சொன்ன முதல்காரணம் இது தான். அதைப் பொறாமை என்று மட்டும் முடிவுசெய்து கொண்டுவிட முடியாது. நு¡ற்றுக்கும் மேற்பட்ட நுட்பமான காரணங்களிருக்கின்றன. சில புத்தகங்களை வாசித்து முடித்தவுடன் எழுதுவது என்றால் இவ்வளவுதானா? இது என்ன மாயவித்தையா என தோன்றுவதும் காரணமாகயிருக்கலாம்

2) பெண்நண்பர்கள் பெறுவதற்கு

இருபது வயதில் அதிகமாக எழுதும் ஆசை வருவதற்கு இதுவே முக்கிய காரணம். ஆனால் இந்த வகை எழுத்தாளர்களை பெண்கள் ஏறிட்டுக் கூடப் பார்ப்பதில்லை என்பது நிதர்சனம்

3)அலுவலக ஊழியர்களிடம் தனித்து காட்ட, பாராட்டு பெற

தனது அலுவலகத்தில் உள்ள மேலதிகரிகள் பாராட்டு பெறுவதற்கும், தான் அறிவுஜீவி என்று தனித்து காட்டுவதற்கும் எழுதும் கூட்டம் நிறைய இருக்கிறது. அவர்கள் யாராவது ஒய்வு பெறும் நாளில் கவிதை எழுதி அதை பரிசாக தந்து அனுப்பிவிடக்கூடியவர்கள்.

4) பதவி உயர்விற்காக எழுதுவது.

பேராசிரியர்கள், ஆய்வுமாணவர்கள் மற்றும் துறைவல்லுனர்கள் தங்களது பதவி உயர்விற்காக எழுதுகிறார்கள். நு¡லகத்தில் பாதி இந்த வகை எழுத்துகள் தான்.கையில் பேனாவும் சிந்தனையுமாக புகைப்படம் எடுத்துக் கொள்வது அவர்களின் தனித்துவம்.

5) சினிமாவிற்குள் நுழைவதற்கு

சினிமாவிற்குள் நுழைவதற்கு விசிட்டிங் கார்டு போல பயன்படுவதற்கு கவிதைத் தொகுப்புகள் வெளியிடுதல் அல்லது சிறுகதைகள் எழுதுதல் அதிகம்.. சென்னையில், கர்சீப் வைத்திருப்பது போல பாக்கெட்டில் கவிதை நோட்டுவைத்திருப்பவர்களை கோடம்பாக்கத்தில் எங்கே வேண்டுமானாலும் பார்க்கலாம்

6) சென்னைக்கு ஒடிவந்தபிறகு வாழ்வதற்கு என்ன செய்ய என்று எழுதுவது.

ஏதோவொரு காரணத்தால் சென்னைக்கு ஒடிவந்த பிறகு பிழைப்பிற்காக பத்திரிக்கைகளிலோ, பதிப்பகங்களுக்கோ எதையாவது எழுதி தருவது. முப்பது நாட்களில் நீச்சல் கற்றுத்தருவது, சைனீஸ் சமையற்கலை, ஆவியுலகம் ஒரு நேரடி அனுபவம் என ஏதாவது ஒரு தலைப்பில் 250 பக்க புத்தகம் எழுதி தருவதற்கு 175 ரூபாய் தருகிறார் தாராளமனதுடைய தமிழ்பதிப்பகத்தார்.

7) ஒய்வு பெற்ற பிறகு ஏதாவது செய்யவேண்டுமென என்று

ஒய்வு பெற்றபிறகு தமிழ் மொழி மீதும், தமிழ் மக்கள் மீதும் அளவுகடந்த ஆர்வம் உருவாகி அவர்களுக்கு சேவை செய்வதற்காக திருக்குறள், சங்கஇலக்கியம் துவங்கி எதையாவது பற்றி எழுதுவது. அதை தானே தனது பேத்தி பேரன் பெயரில் பதிப்பகம் துவங்கி வெளியிட்டு தன்வீட்டிற்கு வரும் உறவினர்களுக்கு தவறாமல் தருவது. சுதந்திர தினத்தன்று காலனியில் சொற்பொழிவு ஆற்றுவது இந்த ரகம்

8) பிரபலமானதை உறுதி செய்து கொள்வதற்கு எழுதுவது

தான் ஏதாவது ஒரு துறையில் பிரபலமாகிவிட்டால் அந்த பிரபலத்தின் காரணமாக மற்றவர்களுக்கு தனது அரிய சிந்தனைகளை, அறிவுதுளிகளை, கற்பனையை பகிர்ந்து கொள்வது. இந்த வியாதி அரசியல்வாதிகளுக்கு அதிகம். அது போலவே பிரபலமான வணிகநிறுவனங்களின் உரிமையாளர்கள் தங்கள் பிரபல்யத்தை புத்தகம் எழுதிதான் வெளிக்காட்டிக் கொள்கிறார்கள். பிரபலமான ஒரு ஸ்வீட் ஸ்டால் உரிமையாளர் எழுதிய திருக்குறள் உரை அங்கு வாங்கும் அல்வா மைசூர்பாகு மிக்சர் எது கால்கிலோ வாங்கினாலும் இலவசமாகத் தரப்படுகிறது. ஆன்மீகத்தில் நீங்கள் பிரபலமாகி விட்டால் புத்தகம் எழுதி அண்ணாநகரில் பிளாட்பிளாட்டாக வாங்கிப் போட்டுவிடலாம் என்று பஞ்சபட்சி ஜோதிடம் சொல்கிறது.

9) வீட்டில் பகலில் சும்மா இருப்பதால்

பெரும்பான்மை குடும்பதலைவிகள் எழுத்தாளராவது இந்த காரணத்தால் தான். கூடை பின்னுவது தோட்டம் போடுவது, அலங்கார பொருட்கள் செய்வது போலவே கவிதை செய்வது கதைகள் செய்வது என்று தங்கள் நேரத்தை பயனுள்ளதாக கழிக்கிறார்கள்.

10) எதற்கு என்றே தெரியாமலிருப்பது

தான் எதற்கு எழுதுகிறோம் என்றே தெரியாமலிருப்பவர்கள் தமிழில் ஏராளம். அது போன்ற ஒரு கேள்விளை சந்திக்கும் போது தான் இப்படியொரு கேள்வி இருப்பதே அவர்களுக்கு தெரியவரும். வாசகர்களை போலவே எழுத்தாளரும் பதிலை தேடிக்கொண்டே தானிருக்கிறார்கள்.

இது போல இன்னமும் பல 100 காரணங்களிருக்க கூடும். விருப்பமிருந்தால் தெரியப்படுத்துங்களேன்.

Kumudham Theeranadhy Interview with Writer Ess Ramakrishnan by Thalavaai Sundharam

June 15, 2012 1 comment

வாழ்வது என்பதே ஒரு மாயம் தான்.

சந்திப்பு . தளவாய் சுந்தரம்

தீராநதி பிப்ரவரி 2005 இதழில் எனது நேர்முகம் வெளியாகியிருக்கிறது. அப்பேட்டியின் சில பகுதிகள் அவர்களால் வெளியிடப்படவில்லை. இணைய வாசகர்களுக்காக முழுமையான நேர்முகம் பிரசுரிக்கப்படுகிறது. இலக்கியம் மற்றும் எனது வாழ்க்கை குறிப்புகள் சார்ந்த கேள்விகள் அடங்கிய எனது நேர்முகம் முன்னதாக காலச்சுவடு இதழிலும் ஆறாம் திணை இணைய இதழிலும் குமுதம் இலக்கியமலரிலும் வெளியாகியிருக்கின்றன. ஆகவே அக்கேள்விகள் இந்த சந்திப்பில் இடம் பெறவில்லை.

1) புதுவகை எழுத்துகள் ஒரு போக்காக தமிழில் அறிமுகமான காலகட்டத்தில் அந்த வகை எழுத்துக்களை முன்வைத்தவர்களில் நீங்களும் ஒருவர். அப்போது யதார்த்தவாதம் முடிந்துவிட்டது கதை யம்சம் தேவையில்லை என்பது போன்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டன ஆனால் அப்போதும் புதுமுயற்சிகளை செய்தவர்களில் நீங்கள் மட்டும் கதையம்சம் கொண்ட கதைகளை எழுதி வந்தீர்கள். அது சார்ந்து குறிப்பாக அப்போது நடைபெற்ற விவாதங்களை நீங்கள் எப்படி எதிர்கொண்டீர்கள்.?

யதார்த்தவாதம் என்ற பெயரில் சுயஅனுபவத்தை எழுதுவது மட்டுமே கதை என்று கூக்குரலிட்டுக் கொண்டுஒருசாராரும், மறுபக்கம் லட்சியவாத கோட்பாடுகளுக்கு ஏற்றபடி கதையை தைத்துக் கொடுக்கும் சீர்திருத்த கதாசியர்களுக்கும் இடையில் கதைகள் என்பது ஒரு புனைவு என்று சொன்னவர்களில் நானும் ஒருவன். அது ஒன்றும் எனது கண்டுபிடிப்பல்ல. கதைகள் புனைவு என்பது யாவரும் அறிந்த உண்மை தான். ஆனால் புனைவு என்பதை பொய் என்று புரிந்து வைத்திருப்பதை நான் மறுத்தேன். கற்பனை என்பது உண்மைக்கு எதிரானதல்ல. உண்மையை புரிந்து கொள்வதற்கும் வெளிப்படுத்துவதற்குமான சாத்தியபாடு என்று கூறினேன்.

யதார்த்தம் என்பதும் ஒரு புனைவே. அதை முன் முடிவுசெய்யப்பட்ட புனைவாக சொல்லலாம். கடந்த காலங்களில் யதார்த்தத்தை தட்டையான ஒற்றைப் பரிமாணமுள்ளதாக மட்டுமே புரிந்து கொண்டிருக்கிறார்கள். உண்மையில் யதார்த்தம் பலதளங்களை உடையது. அதீதமும் இயல்பும் ஒன்றாக முயங்கிகிடக்கக் கூடியது. காலத்திற்கு காலம் யதார்த்தத்தை பற்றிய புரிதல் தொடர்ந்து மாறிக் கொண்டேதானிருக்கிறது, யதார்த்தம் என்ற பெயல் நடைபெற்று வந்த சலிப்பூட்டும் ஒற்றைதன்மை கதைமுறைகளை மாற்றியமைக்க வேண்டும் என்று தான் பேசியும் எழுதியும் வந்திருக்கிறேன். நம் கதை மரபு ஒற்றைதன்மை வாய்ந்தது அல்ல. அது பன்முகத்தன்மை வாய்ந்தது,

கர்ப்பிணி ஒருத்தி நடந்துவரும் போது அவள் வயிற்றில் உள்ள குழந்தை தன் இருப்பிடத்தில் இருந்து நகரவேயில்லை ஆனால் குழந்தையும் பலமைல் துôரம் கடந்து தானே செல்கிறது. அது யதார்த்தமா, இல்லையா?

2) புதிய கதை எழுத்து இன்று தேக்கநிலை அடைந்துவிட்டிருக்கிறது. மீண்டும் யதார்த்தவாத கதைகள் வரத்துவங்கியுள்ளதே, அந்த மாற்றத்தை எப்படி பார்க்கிறீர்கள் ?

புதிய கதை எழுத்து என்று எதைச் சொல்கிறீர்கள் என தெயவில்லை. நான் புதிய கதை எழுத்து பாரதி புதுமைபித்தனில் துவங்கி மௌனி, நகுலன், முத்துசாமி, ஜி.நாகராஜன், சம்பத், கோபிகிருஷ்ணன், ஜெயமோகன், கோணங்கி, பிரேம் ரமேஷ், உமா வரதராஜன், முத்துலிங்கம். லட்சுமி மணிவண்ணன், காலபைரவன் என நீண்டு தொடர்ந்து வந்து கொண்டேயிருப்பதாகவே நினைக்கிறேன்.

எது யதார்த்தம் என எதாவது வரையறையிருக்கிறதா என்ன? பயன்பாட்டிற்கு உட்படுகின்றவற்றை மட்டுமே நாம் யதார்த்தமாக ஏற்றுக் கொண்டிருக்கிறோம். நம் புலன்கள் தான் யதார்த்தத்தின் வரையறையாயி”ருந்திருக்கிறது. ஆனால் புலன்கள் முழுமையானவையல்ல. அவை குறைபாடானவை என்பதை ஒவ்வொரு மனிதனும் பல சந்தர்ப்பங்களில் உணர்ந்து தானே இருக்கிறான். நம் கால இடப்பிரக்ஞை கூட புனைவு தானே. அதை நாம் அன்றாடம் புழங்கவில்லையா? புனைவை தான் நமது பெயராக சூடியிருக்கிறோம் .நம் உடல்கள் புனைவால் தானே நிரம்பியிருக்கிறது.

புனைவை புரிந்து கொள்வதற்கும் அதனுôடாக உள்ள புனைவடுக்குகளை கண்டறிவதற்கும், உருவாக்குவதற்குமே புதியகதை எழுத்து முயற்சிக்கிறது. அது தமிழில் தொடர்ந்து எழுதப்பட்டு கொண்டு தான் வருகிறது.

கடந்த கால எழுத்தாளர்கள் யதார்த்தத்தை புரிந்து கொள்ளவேயில்லை தங்கள் எழுத்து உண்மையை கண்ணாடி போல பிரதிபலிக்கின்றது என்று அறிவித்துக் கொண்டார்கள்.. ஆனால் கண்ணாடி உருவத்தை இடவலமாக மாற்றி தான் பிரதிபலிக்கும் என்றசாதாரண நிஜத்தை கூட புரிந்து கொள்ளாமல் இருந்தது தான் வேடிக்கையாக இருக்கிறது

3) இதுவரை யதார்த்தவாதமாக நம்பபட்டு வந்தவைகள் தவறானவைகளா?

சொல்லும் மரபிலிருந்து எழுத்து மரபிற்கு கதைகள் மாற்றம் கொண்ட போது கூட கதை மரபுகள் கைவிடப்படவில்லை. தமிழ்சிறுகதையின் ஆரம்ப கால முயற்சிகளில் வெளிப்படையாக இதை காணமுடிகிறது. குறிப்பாக உதிரி மனிதர்களுக்கும், அபௌதீக தளங்களுக்கும், மறுகதைகளுக்கும், இடமிருந்திருக்கிறது.

பாரதி, புதுமைபித்தன் கதைகளில் கதைசொல்லல் தனித்துவமாக தானே இருந்தன. ஆனால் அதன் அடுத்த தலைமுறை எழுத்தாளர்கள் கதையின் மையமாக குடும்பத்தை சுருக்கியதும் அதன் தினப்பாடுகளை பதிவு செய்வது மட்டுமே கதைகளின் வேலை என்று முடிவு செய்து கொண்டு ரேடியோ நாடகங்களை போல வாய்ஒயாமல் பேசும் கதாபாத்திரங்களை எழுதி நிரப்பியது தவறான வழிகாட்டுதலாக படுகிறது. இதன் தொடர்ச்சி அடுத்த பதினைந்து வருடங்களில் சிறுகதைகள் மத்தியதர வர்க்கத்து மனிதர்களின் புலம்பலுக்கும் நிராசைகளுக்கும் உரிய வடிவமாக சுருங்கிப் போய் விட்டது.

கார்க்கி, செகாவ், தஸ்தாயெவ்ஸ்கி, டால்ஸ்டாய் போன்றவர்களின் ருஷ்யசிறுதைகளும் மாப்பசான். பால்சாக் போன்ற பிரெஞ்ச் இலக்கியவாதிகளும் எட்கர்ஆலன் போ, ஜாக் லண்டன், ஸ்டீபன் கிரேன் போன்ற அமெரிக்க சிறுகதையாசியர்களும் தமிழில் அறிமுகப்படுத்தபட்ட போதும் அந்த எழுத்துகளிடமிருந்து தமிழ் எழுத்தாளர்கள் எதையும் கற்றுக் கொள்ளவில்லை என்பது ஆச்சரியமாக தானிருக்கின்றது.

அதே வேளையில் வளமையான சங்ககவிதைகளும் சமணபௌத்த காப்பியங்களும், நுôறுவகை கதை சொல்லல் முறைகொண்ட நாட்டார் கதைகளும், தொன்மங்களும் நம்பிக்கைகளும். கூட தமிழ் சிறுகதையாசியர்களை பாதிக்கவேயில்லை. பின் எதிலிருந்து தான் இவர்கள் உருவானார்கள்.? எதை தங்களது பார்வையின் அடித்தளமாக கொண்டிருந்தார்கள்.? எதை யதார்த்தம் என்று சொல்கிறார்கள் என புரியவில்லை.

4 ) உங்களது இரண்டாவது நாவலான நெடுங்குருதியை ஒட்டி உங்களது எழுத்துகளில் ஒரு மாற்றம் தெரியத்துவங்குகிறது. இக்காலகட்டத்தில் எழுதப்பட்ட கதைகளில் கூட இந்த மாற்றத்தை உணர முடிகிறது. குறிப்பாக நெடுங்குருதி ஒரு மேஜிக்கை தன்னுள் வைத்திருக்கும் அதே நேரத்தில் அது ஒரு யதார்த்த வாத நாவலாகவும் இருக்கிறது. உங்கள் எழுத்தில் நிகழ்ந்த இந்த மாற்றத்திற்கு காரணம் என்ன?

நெடுங்குருதி நாவலின் துவக்கம் பத்தாண்டுகளுக்கு முன் நான் எழுதிய காட்டின் உருவம் சிறுகதையிலே துவங்குகிறது. நெடுங்குருதி நாவல் வேம்பலை என்ற புனைவான கிராமத்தில் வாழும் வேம்பர்கள் என்ற மனிதர்களையும் அவர்களது மூர்க்கமான வாழ்க்கை போராட்டத்தையும், துக்கத்தையும் வேதனைகளையும் அவர்களது விசித்திர கனவுகளையும் சொல்கிறது.

உப பாண்டவம் போன்று ஒரு இதிகாசத்தின் மீதான மீள்புனைவாக ஒரு நாவலை எழுதிய பிறகு இருபதாண்டுகளுக்கும் மேலாக என்னுள் புதையுண்டிருந்த வேம்பலையை எப்படி பதிவு செய்வது என்று யோசனையாக இருந்தது.

பால்ய நாட்களில் மாட்டுதரகர்களோடு சந்தைக்கு செல்லும் போது அவர்கள் தாங்கள் அறிந்த கதையை வழியெல்லாம் சொல்லிக் கொண்டு வருவார்கள். அதில் எது நிஜம் எது பொய் என்று பிரிக்கமுடியாது. கதாபாத்திரம் போன்று வர்ணிக்கப்பட்ட மனிதனை சந்தையில் நேரிலே நாம் காண சந்தர்ப்பம் அமையும். அதே நேரம் அவர்கள் தங்களது நிலவியலையும் அதனை பீடித்திருக்கும் துர்கனவையும் தொடர்ந்து எல்லாகதைகளிலும் சொல்லிக் கொண்டிருப்பதை உணர முடிந்தது.

அந்த கதை சொல்லல் முறையை தான் நெடுங்குருதியிலும் காணமுடியும். குறிப்பாக இயற்கையையின் கரங்கள் வாழ்வை எப்படி புரட்டிப் போடுகின்றன என்பதையும் அதன் குரூரமும் கருணையும் எப்படி பீறீடுகின்றன என்பதையுமே இந்நாவல் மையமாக கொண்டிருக்கிறது.

என்னைப் பொருத்தமட்டில் அந்த நாவல் ஒரு வெயிலின் கதை . நிலப்பரப்பெங்கும் வெயில் ஒரு மூர்க்கமான மிருகத்தை போல தன்விருப்பப்படி சுற்றியலைகிறது. வெயிலை குடித்துக்கிறங்கிய மனிதர்கள் தீமையின் உருக்களை போல நடமாடுகிறார்கள். வாழ்வை பற்றிய உயர்வெண்ணங்கள் எதுவும் அவர்களிடமில்லை. சாவை குறித்த புலம்புதல்களுமில்லை. அந்த நிலவியலில் வாழ்வது என்பதே ஒரு மாயம் தான்.

தாவரங்களின் உரையாடலில் இருந்து எனது கதைவெளி மாறிக் கொண்டுவரத்துவங்கியது. அதன் தொடர்ச்சியாக வெயிலைக் கொண்டுவாருங்கள் தொகுப்பின் அதிகதைகளையும் உப பாண்டவம் நாவலையும் சொல்லலாம். அதன் பின்னணியில் தான் நெடுங்குருதி வந்திருக்கிறது. ஆகவே எழுத்து முறை இப்போது தான் மாற்றமடைந்துள்ளது என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.

5) தமிழில் யதார்த்தவாத கதைகளே முழுமையாக எழுதி முடிக்கபடவில்லை இந்நிலையில் புதுவகை எழுத்துக்களுக்கு அவசியம் இல்லை மேலை இலக்கியங்களை படித்துவிட்டு அடிக்கபடும் காப்பி என்கிற வகையில் விமர்சனங்கள் தற்போது முன்வைக்கபடுகின்றன அதற்கான உங்களது எதிர்வினை?

ஒரு நேரத்தில் ஒரேயொரு பொருளை மட்டுமே யாவரும் வாங்க வேண்டும் என்று கட்டயாப்படுத்துவதற்கு தமிழ் இலக்கியம் என்ன ரேஷன் கடையா? மேலை இலக்கியங்களை படித்து விட்டு காப்பியடிக்கிறார்கள் என்று சொல்பவர் யார்.? அவர்கள் என்ன வாசித்திருக்கிறார்கள்.? வம்பு பேச்சுகளும் அவதுôறுகளும் தொடாத துறையிருக்கிறதா என்ன.? இல்லை என்றால் யதார்த்தவாத கதைகள் இவ்வளவு நாட்களுக்குள் எழுதி முடிக்கபட்டுவிடும் என்று ஏதாவது ரிடயர்ட்மண்ட் தேதி ஏதாவது இருக்கிறதா என்ன ? தங்களுக்கு புரியாத எதுவாகயிருந்தாலும் அது வெளிநாட்டு இலக்கியத்தின் காப்பி என்று கூச்சப்படாமல் சொல்வதற்கு ஒரு கூட்டமே தயாராகயிருக்கிறது.

6)இன்றுள்ள தமிழ் இலக்கிய போக்குகள் எப்படியிருப்பதாக நினைக்கிறீர்கள்?

பன்முகப்பட்டதாகவும் பல்வேறு சீரிய தளங்களில் செயல்படுவதாகவும் புதிய எழுத்துவகை உருவாகியிருக்கிறது. குறிப்பாக தமிழ்கவிûயி”ல் பெண்கவிஞர்களின் வரவு இதுவரையில்லாத சாத்தியங்களை உருவாக்கியிருக்கிறது. இவர்கள் ஆபாசமாக எழுதுகிறார் என்று கூச்சலிடுவது அர்த்தமற்றது. ஆபாசம் வீட்டு தொலைகாட்சியில், பாடல்களில், பேச்சில், நடவடிக்கைளில் வீடுகளிலும் ஊடகங்களிலும் பெருகிவழிவதை ரசித்துக் கொண்டிருப்பவர்கள் பால்உணர்வுகளை ஒடுக்கபட்ட உடலின் குரலாக பெண் கவிதைகளில் வெளிப்படுத்துவதை எதிர்ப்பது ஒரு திட்டமிட்ட வன்முறை என்பேன்

சிறுகதையி”லும் அடிநிலை மனிதர்கள் பற்றியும் மனத்திரிபுகள், பால் இச்சைகள் குறித்து பேசும் கதைகள் சிறப்பாக எழுதப்பட்டுவருகின்றன. புத்தகவெளியிட்டில் ஒரு உலகத்தரம் தமிழுக்கு சாத்தியமாகியிருக்கிறது. ஆனால் நாவல்கள் மிக குறைவாகவே ஏழுதப்படுகின்றன. அதிலும் குறிப்பிடும்படியாக எதுவுமில்லை.
மாலதி மைத்ரி, தென்றல், குட்டிரேவதி, ராணி திலக், ஸ்ரீநேசன் போன்றவர்களின் கவிதைகள் பிடித்திருக்கின்றன. சிறுககைளி”ல் ஜே. பி. சாணக்யா, ஸ்ரீராம். லட்சுமி மணிவண்ணன். காலபைரவன் போன்றவர்கள் புதிய தளங்களை உருவாக்கி வருகிறார்கள். இவர்களை தவிர்த்து நான் தொ.பரமசிவத்தின் எழுத்துக்களையும். தியோடர் பாஸ்கரனின் கட்டுரைகளையும் ஈடுபாட்டுடன் வாசித்து வருகிறேன். மொழிபெயர்ப்பில் ஜி. குப்புசாமியின் செயல்பாடு மிகவும் கவனிக்கபட வேண்டியது.

7) இப்போது உலக அளவில் யாருடைய எழுத்துகளை முக்கியமானதாக கருதுகிறீர்கள்?

போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான ஜோஸ் சரமாகோ வின் நாவல்கள் மிகவும் சிறப்பானதாகயிருக்கின்றன. குறிப்பாக தி ஸ்டோன் ராப்ட், தி காஸ்பல் அக்கார்டிங் டு ஜீசஸ் கிரைஸ்ட் இரண்டையும் கடந்த பத்தாண்டுகளில் நான் வாசித்த மிகச்சிறந்த நாவல்களெனச் சொல்வேன். இன்னொருவர் ஆர்கன் பாமுக் என்ற துருக்கியை சேர்ந்தவர் இவரது மை நேம் இஸ் ரெட் என்ற நாவல் மார்க்வெஸின் நுôற்றாண்டுகால தனிமைக்கு நிகரானது. 26 மொழிகளில் மொழிபெயர்க்கபட்டிருக்கும் பின்நவீனத்துவ நாவலது.

ஹருகி முராகமியின் சிறுகதைகளும் வில்லா ஸிம்போர்ஸ்காவின் கவிதைகளும் வாசிப்பில் புதிய அனுபவம் தருகின்றன. மார்க்வெஸின் புதிய நாவல் மெமரீஸ் ஆப் மை மெலன்கலிக் வோர்ஸ் ஆங்கிலத்தில் இன்னமும் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகவில்லை. அது மிகச்சிறந்த நாவல் என்று எனது நண்பரும் முக்கிய லத்தீன் அமெரிக்க சிறுகதை எழுத்தாளருமான பெர்னான்டோ úஸôரான்டினோ மெயில் அனுப்பியிருக்கிறார். வாசிக்க காத்துக் கொண்டிருக்கிறேன்.

6) தமிழ் ஆலக்கிய விமர்சனம் என்ன வகையில் உள்ளது என்று கருதுகிறீர்கள்? தமிழ் விமர்சகர்கள் படைப்பாளிக்கு ஊக்கம் தருபவராக இருக்கிறாரா இல்லையா என்பதை ஒரு படைப்பாளி என்னும் முறையில் சொல்ல முடியுமா?

இன்று தமிழில் இலக்கிய விமர்சகர்களேயில்லை. தற்போது விமர்சகர்களாகயிருப்பவர்கள் பலரும் தங்களுக்கு பரிச்சயமான கோட்பாடுகளை பரிசோதித்து பார்ப்பதற்கான சோதனை எலியாக தான் இலக்கியபடைப்புகளை எடுத்துக் கொள்கிறார்கள். இவர்களுக்கு முறையானதொரு இலக்கிய கோட்பாடுகள், தத்துவங்களின் பரிச்சயமும், தமிழ் இலக்கியத்தின் தேர்ச்சியும் இல்லை.

இருபது ஆண்டுகளுக்கு முன்பிருந்த விமர்சன தந்தைகள் எதை எழுதுவது, எதை எழுதக்கூடாது என்று முடிவு செய்யும் கலாச்சார காவலர்களாக தங்களை கருதிக் கொண்டு வெட்டுக்கத்திகளுடன் தணிக்கையாளர்களை போல செயல்பட்டிருக்கிறார்கள். அன்றைய இலக்கிய விமர்சனம் தெருச்சண்டை போல வசைகளும் கொச்சையும் நிரம்பியதாக தான் காணப்படுகிறது.

இன்னொரு பக்கம் இலக்கிய விமர்சனம் என்ற பெயல் துதிபாடுதலும் ஆராதனைகளும் மிக அதிகமாக நடைபெற்றிருக்கிறது. தமிழ்நாட்டின் போர்ஹே, தமிழ் கால்வினோ, தமிழை காப்பாற்ற வந்த பின்நவீனத்துவ டொனால்டு பார்த்தல்மே, தமிழ் காப்கா. என தமிழ் எழுத்தாளர்களுக்கு உலக அங்கீகார பட்டங்கள் தந்தது உள்ளுர் விமர்சகர்களை தவிர வேறு யார்.?

புதுக்கவிதையை பற்றி உப்பு பெறாத இரண்டு விமர்சன கட்டுரை தொகுதிகளை வெளியிட்டுவிட்டு சாகித்ய அகாதமி பதவியையும் சர்வதேச அரங்கங்களில் கட்டுரைவாசிக்கும் சந்தர்ப்பத்தையும் உருவாக்கி கொள்ளும் அபத்தம் வேறு எங்காவது இருக்கிறதா என்ன? ஆங்கிலத்துறைகளில் பணியாற்றிக் கொண்டு அரைகுறையாக கற்றுக் கொண்ட விமர்சனபாடங்களை தமிழ் இலக்கியவாதிகளின் மீது ஏவிவிடும் உளறல் இன்னொரு புறம் பின்நவீனத்துவ விமர்சனமாக பெருகிக் கொண்டிருக்கிறது.

பல்கலை கழகங்கள் குறிப்பிடத்தகுந்த இலக்கிய விமர்சகர்களை உருவாக்கவேயி”ல்லை. மாறாக நல்ல நாவல்களை, கவிதைகளை பரிட்சைக்குரிய பத்துமார்க் கேள்விகளாக உருமாற்றி வகுப்பெடுத்து சராசரி ரசனை அளவை கூட சிதைந்து விட்டிருக்கிறார்கள். விதிவிலக்காக உள்ள தொ.பரமசிவம். அ.கா.பெருமாள், அ.மார்க்ஸ் வீ. அரசு போன்ற பேராசியர்கள் கூட கவிதை, நாவல், சிறுகதை போன்ற இலக்கிய விமர்சனத்தை விடவும் நாட்டார்கலைகள், மொழித்துறை, நாடகம், அரசியல் நிகழ்வுகள் சார்ந்து தான் அதிகம் செயல்பட்டு வருகிறார்கள். மிகவும் கவனத்துக்குரிய விமர்சகர்களாக மதிக்கபட்ட தமிழவன், நாகார்ஜூனன், எம்.டி.முத்துகுமாரசாமி, எஸ்.சண்முகம் போன்றவர்கள் இப்போது எழுதுவதேயில்லை.

அமெரிக்க பல்கலை கழகங்களில் பணியாற்றிக் கொண்டு தமிழ் இலக்கியத்திற்கு ஏ.கே.ராமானுஜமும் ஜார்ஜ் எல். ஹார்ட்டும் செய்த பங்களிப்பின் ஒரு பகுதியாவது இங்குள்ள கல்விதுறை அறிஞர்களால் செய்யப்பட்டிருக்கிறதா?

மிகைல் பக்தின் தஸ்தாயெவ்ஸ்கியின் படைப்புலகினை பற்றி விரிவாக 300 பக்க நுôலை எழுதியிருக்கிறார்.. இதாலோ கால்வினோ செவ்விலக்கியங்களை எப்படி வாசிப்பது என்று தனிப்புத்தகமே எழுதியிருக்கிறார். உம்பர்த்தோ ஈகோவின் கட்டுரைகள் மொழியலையும் மறைக்கபட்ட சரித்திரத்தையும் பேசுகின்றன. இவர்களை போலவே டெரிதாவும் லக்கானும் மிஷைல் பூக்கோவும் எழுதிய விமர்சனங்கள் நம் கையில் வாசிக்க கிடைக்கின்றன. இவர்கள் எவரும் எழுத்தாளர்களை புகழ்ந்து கொண்டாடுவதற்கு விமர்சனத்தை பயன்படுத்தவில்லை. மாறாக படைப்பை புரிந்து கொள்வதற்கான சாத்தியங்களை அதிகமாக்குகிறார்கள். தமிழில் இந்தவகை விமர்சனங்கள் இல்லை. அதனால் தான் இன்றைய இலக்கியவிமர்சகர்களை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை..

9)தற்போது உயிர்மை இதழில் உலக எழுத்தாளர்கள் பற்றி, அவர்களது எழுத்துக்கு அப்பாற்பட்ட ஆர்வங்களை பற்றி எழுதி வருகிறீர்கள். இதை எழுதவேண்டும் என்று என்ற எண்ணம் எப்படி உருவானது?

எனது பதினெட்டு வயதிலிருந்து உலக இலக்கியங்களை வாசித்துவருகிறேன். அத்தோடு சமகாலத்தின் முக்கிய படைப்புகள் எந்த தேசத்தில் எழுதப்பட்ட போதும் அவற்றை தேடிவாசிக்கும் பழக்கம் கொண்டிருக்கிறேன். இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு இலக்கியவாதிகளை தேடிச் சென்று பார்த்து அவர்களோடு எனது வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

எழுத்தாளர்களின் வேலை கதை எழுதுவது மட்டுமே என்று கற்பிக்கபட்டிருந்த பிம்பம் இந்த வாசித்தலில், சந்திப்பில் கொஞ்சம் கொஞ்சமாக தகர்ந்து போகத் துவங்கியிருந்தது. பஷீரை சந்தித்த போது சீன யாத்ரீகன் மார்க்கோ போலோவை சந்தித்து பேசிக் கொண்டிருந்தது போன்ற அனுபவமேயிருந்தது. மகேஸ்வததாதேவியை சந்தித்த போது பழங்குடியினருக்காக போராடும் போராளியை கண்ட சந்தோஷம் உண்டானது.

எழுத்தாளர்கள் கதைகளை விடவும் புதிராக வாழ்ந்திருக்கிறார்கள். எதை எதையோ தேடியலைந்திருக்கிறார்கள். அரசியல் ஈடுபாட்டின் காரணமாக சிறைபட்டிருக்கிறார்கள். ஒடுக்கபட்ட மக்களின் விடுதலைக்காக போராடியிருக்கிறார்கள். எழுத்தாளனின் செயல்பாடு பன்முகப்பட்டது. எழுத்தாளன் யாவையும் கடந்த ஒரு ஞானி, எழுத்து ஒரு அகதரிசனம் என்பதில் எல்லாம் எனக்கு நம்பிக்கையில்லை.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக என் வாசிப்பில் நான் நெருக்கமாக உணர்ந்த சிறந்த இருபது புத்தகங்கள் குறித்து வாக்கியங்களின் சாலை என்று ஒரு கட்டுரைத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறேன். இதன் தொடர்ச்சியாக தான்உயிர்மை இதழில் தற்போது எழுதி வரும் பத்தியை சொல்லலாம்.

10) இந்தத் தொடரில் தமிழ் எழுத்தாளர்கள் மீது அவர்களுக்கு பல்வேறு துறை சார்ந்த ஆர்வம் இல்லை என்ற விமர்சனத்தை முன்வைக்கிறீர்கள் இப்படியொரு ஆர்வம் எழுத்தாளர்களுக்கு கட்டயாம் இருக்க வேண்டும் என்று கருதுகிறீர்களா?

ஆர்வம் என்று அதை சொல்ல முடியாது. ஒரு கற்றுக் கொள்ளல் என்று சொல்லலாம். கற்றுக் கொள்வதை கட்டாயப்படுத்த முடியுமா என்ன? நாம் எழுதத் துவங்கியதும் கற்றுக் கொள்வதை நிறுத்திவிடுகிறோம்.

11) சமகால நிகழ்வுகள் இலக்கியத்தில் பதிவு செய்யப்படவேண்டியது அவசியமில்லையா?

சமகாலம் என்றால் என்ன? காலண்டர்தாட்கள் காட்டும் தேதியும் வருடமுமா அல்லது ஊடகங்கள் பெருக்கி காட்டும் பிரச்சனைகளை சமகாலம் என்று அர்த்தப்படுத்திக் கொள்கிறீர்களா.. சமகாலம் என்பது ஒரு தோற்றம் மட்டுமே. அதன் வேர்கள் எந்த நுôற்றாண்டில் ஒடிக் கொண்டிருக்கின்றன என்று சுலபத்தில் அறிந்து கொண்டுவிட முடியாது.

சோபாக்ளிசின் ஒடிபஸ் ரெக்சினை வாசிக்கும் போது அது நம் காலத்தை பிரதிபலிப்பதாகவே உள்ளது. ஆனால் நாடகம் எழுதப்பட்டு இரண்டாயிரமாண்டு கடந்துவிட்டிருக்கிறது. உம்பர்த்தோ ஈகோவின் நாவல்கள் பல நுôற்றாண்டுகளுக்கு முந்திய ரகசிய அமைப்பான டெம்பிளார்களையும் மடாலயங்களையும் நினைவுகள் அழிந்து போகும் தீவையுமே பேசுகின்றன. அதற்காக அதை கடந்த காலத்தின் கதை என்று விலக்கிவிட முடியுமா? அந்துவாந்த் சந்த் எக்சுபரின் குட்டி இளவரசன் எந்த சமகாலத்தின் வெளிப்பாடு என்று நினைக்கிறீர்கள்,

காலம் பற்றிய நமது புரிதல் தெளிவற்றது. நான் காலத்தை சதா திசைகளற்று பொங்கிக் கொண்டிருக்கும் ஒரு நீருற்றை போல தான் புரிந்து கொண்டிருக்கிறேன். ஒடிக்கொண்டிருக்கும் ஆற்றின் மீது அருகாமை மரங்களும் வானில் பறக்கும் பறவையின் நிழலும் தண்ணீல் பிரதிபலிக்கின்றன. ஆனால் நம் குடத்தில் அள்ளும் தண்ணீல் பிம்பங்கள் ஒட்டிக் கொண்டு வருவதில்லையே. என்றால் எங்கே பிரதிபலிப்பாகிறது பிம்பம்? தோற்றம் கடந்த நிஜம் இருப்பதை நாம் கவனிக்க வேண்டியதில்லையா?

12) தங்கள் கவனம் தற்போது எதில் குவிந்திருக்கிறது. அல்லது எதை தொடர்ந்து விரும்பி வாசித்து வருகிறீர்கள்?

புத்தரை தொடர்ந்து பத்தாண்டுகளாக பயின்று வருகிறேன். இந்தியசமூகத்தை, மனதை புரிந்து கொள்வதற்கு பௌத்தம் சரியான வழிகாட்டுதலாகயிருக்கிறது. சாஞ்சி, கயா, சாரநாத், நாகார்ஜூன கொண்டா என பௌத்த வாழ்விடங்களை தேடிச் சென்றும் பார்த்து வருகிறேன். இன்று பௌத்ததை கொண்டாடும் பலரும் அதன் சமூககருத்துக்களை மட்டும் ஏற்றுக் கொண்டு மற்றயாவையும் விலக்கிவிடுகிறார்கள். அரசியல் காரணங்களுக்கான மாற்றுபடிமமாக மட்டுமே புத்தர் பயன்படுத்தபட்டு வருகிறார் உண்மையில் பௌத்த வாழ்முறையில் எவருக்கும் ஈடுபாடில்லை. பௌத்த அரசியலை மேற்கொள்பவர்கள் வன்முறையை தங்களது ஆயுதமாக கொள்வதையும் சுயமோகத்தில் உறிப்போயிருப்பதையும் காணும்போது இவர்கள் எந்த புத்தரைப் பற்றி பேசுகிறார்கள் என்று சந்தேகமாகதானிருக்கிறது.

புத்தத்தினை புந்து கொள்ளாமல் போனதும் அதை வாழ்க்கை நெறியாக பின்பற்ற தவறியதும் இந்திய சமூகம் இழைத்த மாபெரும் தவறு. அதே போலவே பெரியாரை இந்து மத எதிர்பாளர் என்று சுருக்கி அவரை ஒரு திராவிட கட்சிதலைவரை போல கட்சி அடையாளத்திற்குள் அடைக்க முயன்றதும் தமிழ் அறிவாளிகளின் தவறான வழிகாட்டுதல் என்றே சொல்வேன்.

பெரியாரைப்பற்றிய இன்றைய விமர்சனங்கள் யாவும் அவதுôறுகளாவே உள்ளது. அவரின் சீரிய விவாதங்களை மூடிமறைப்பதற்கான தந்திரமாகவே தெரிகிறது. பெரியாரை நுட்பமாக வாசித்த எவரும் அவரை துதிபாட மாட்டார்கள். மாறாக தமிழ்சமூகத்தின் மீது அவர் எழுப்பிய கேள்விகளும் அவரது நேரடி செயல்பாடும் எத்தனை வலிமையானது என்று கட்டாயம் புரிந்து கொள்வார்கள். பெரியார் ஒரு சிந்தனை தளத்தை உருவாக்குகிறார். அதே வேளையில் அதன் செயல்பாட்டிற்கான சாத்தியபாடுகளையும் உருவாக்கியிருக்கிறார்.

புத்ததிற்கு ஒருவர் மதம் மாறுவது என்பதையே என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஒருவன் எந்த மதத்தினை சார்ந்து இருந்தாலும் அவன் பௌத்தனாக வாழமுடியும். பௌத்தம் ஒரு மதமல்ல ஒரு வாழ்முறை. ஒரு சிந்தனைவெளி. இன்னும் சொல்லப்போனால் பௌத்த ஈடுபாடு ஒரு மதமறுப்பு செயல்.

அதே நேரம் ஒன்றை ஒத்துக் கொள்ள வேண்டும் பௌத்தமும் முழுமையாக ஸ்தாபனமயமாக்கபட்டுவிட்டது. இரண்டு மகாபிரிவுகள். அதற்குள் நுôறு துணைபிரிவுகள். மாந்திரீகம் தாந்திரீகம், என ரகசிய சடங்குகளையும் பாலியல் கிளர்ச்சி தரும் வழிபாடுகள், பரபரப்பான மனிதர்களின் மனநெருக்கடியை போக்கும் எளிய தியானமுறை என்று எளிய வணிக தந்திரங்களைக் கொண்டதாகவும், என் மறைமுகஅதிகார சக்தியாகவும் கூட தன்னை உருமாற்றிக் கொண்டிருக்கிறது. ஆனால் பௌத்த சிந்தனைகளும் தத்துவமும் அறமும் ஸ்தாபன கட்டுபாடுகளுக்கு வெளியில் தனித்த சிந்தனைகளாக அறிவார்ந்த வழிகாட்டுதலாக உள்ளது. நாம் பின்பற்ற வேண்டியது இது போன்ற பௌத்தநெறியை தான் .

13) ஊர்சுற்றுவதில் உங்களுக்கு உள்ள ஆர்வம் வெறும் பயணியின் ஆசையா இல்லை எதையாவது தேடிச் சென்று கொண்டிருக்கிறீர்களா?

நான் சுற்றுலா பயணி அல்ல. இன்னும் சொல்லப்போனால் புகழ்பெற்ற சுற்றுலா ஸ்தலங்கள் எதையும் நான் பார்த்ததே கிடையாது. தாஜ்மகாலை கூட யமுûயி”ன் கரைகளை ஒட்டிய கிராமங்களில் சுற்றிக்கொண்டிருந்த போது வயல்வெளிகளின் பின்னிருந்து தான் பார்த்திருக்கிறேன். எனது தேடுதலின் காரணம் தெளிவற்றது. அது அவ்வப்போது கிளைக்க கூடியது. பயணத்தில் குறிப்பெடுப்பதோ, புகைப்படம் எடுத்துக் கொள்வதோ எதுவும் கிடையாது. குறிப்பாக எந்த ஊருக்குப் போகப்போகிறேன் என்ற திட்டம் கூட கிடையாது. இமயமலையின் பதினெட்டாயிரம் அடி உயரம் வரை சென்றிருக்கிறேன். கிர்காட்டிற்குள் நடந்து திரிந்திருக்கிறேன். கீழ்வாலை குகைஒவியங்களை கண்டிருக்கிறேன். அஜ்மீரின் தெருக்களில் உறங்கியிருக்கிறேன். புழுதிபடிந்த உடையும் பிளாட்பார கடைகளில் உணவுமாக வாழ்வது பழக்கபட்டிருக்கிறது. இப்போதும் எனது பயணம் இலக்கற்று எந்த நேரமும் புறப்பட தயராகதானிருக்கிறது. ஒரேயொரு வேறுபாடு பத்து ஆண்டுகளுக்கு முன்பிருந்தது போல பயமற்று எந்த நகரிலும் சுற்றித்திரிய முடிவதில்லை. அத்தோடு பலவருடமாக ஊர்சுற்றியதால் சம்பாதித்த உடல்கோளாறுகள் பயண எல்லையை சுருக்கிக் கொண்டுவிட்டிருக்கிறது.

14) தொலைகாட்சி தொடர்களிலும் சினிமாவிலும் பணியாற்றியிருக்கிறீர்கள் உங்கள் அனுபவத்தின் அடிப்படையில் தமிழ் திரைத்துறைக்குள் எழுத்தாளருக்கு உள்ள சாத்தியஙகள் சாத்தியமின்மை பற்றி சொல்ல முடியுமா?

எழுத்தாளின் தேவை காட்சி ஊடகங்களிலும் மிக அதிகமாகயிருக்கிறது. ஆனால் எழுத்தாளன் இடம் எவரோ ஒரு நகலெடுப்பவரால் நிரப்பபட்டு விடுகிறது சினிமாவில் கதை என்பது எழுதப்படுவதில்லை மாறாக உருவாக்கபடுவது. கதையை உருவாக்குவதற்கு என ஒரு கூட்டமே வேலை செய்கிறது. அதற்காக பல ஆயி”ரம் செலவு செய்கிறார்கள். அனால் அந்த செலவில் நுôறு ரூபாய் கூட புத்தகம் வாங்குவதற்கு செலவிடப்பட்டிருக்காது.

எந்த சினிமா நிறுவனத்திலும் நுôலகம் என்ற ஒன்றை நான் பார்த்ததேயில்லை. தந்திபேப்பரும் வார ஆதழ்களும் தவிர்த்து மருந்துக்கு கூட ஒரு நாவலோ சிறுகதை புத்தகமோ கதைவிவாதம் நடக்கும் அறைகளில் கண்டதேயில்லை.

சினிமாவிற்கான நல்ல கதைகள் இல்லை என்பது பொய். நல்ல கதைகளை படமாக்க தயாரிப்பாளர்கள், நடிகர்கள் முன்வரவில்லை என்பது தான் நிஜம். அதனால் தான் தமிழில் மிக அபூர்வமாகவே அழகி, ஆட்டோகிராப். காதல் போன்ற படங்கள் வெளிவருகின்றன.

கடந்த இரண்டு மாதங்களில் பெருமழைக்காலம், காழ்சா, அகலே என்று மூன்று மலையாள படங்களை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. மிக யதார்த்தமான, ரசனைமிக்க படங்கள். திரையரங்களில் அரங்கம் நிரம்பி வழிய தான் ஒடிக்கொண்டிருந்தது. இதில் அகலே என்ற படம் கண்ணாடி சிற்பங்கள் என்ற டென்னிசி வில்லியம்சின் உலகப்புகழ் பெற்ற நாடகத்தை அடிப்படையாக கொண்டு ஷியாம பிரசாத் இயக்கியது. இந்த அளவிற்கு கூட தமிழில் முயற்சிகள் நடைபெறவில்லை என்பது கவலைக்குயதாகவேயி”ருக்கிறது.

15) தற்போது வெளிவந்துள்ள உங்களது உலக சினிமா புத்தகத்தை எழுத வேண்டும் என்ற எண்ணம் எப்போது எருவானது. உலகசினிமாவின் மீது உங்களுக்கு எப்படி ஈடுபாடு வந்தது.?

கல்லுô நாட்களில் இருந்தே மதுரையி”ல் உள்ள திரைப்பட சங்கங்களின் வழியாக உலகதிரைப்படங்களை காணும் பழக்கம் எனக்கு உருவாகியி”ருந்தது. அத்தோடு கேரளாவில் ஜான் அபிரகாமால் துவக்கபட்ட ஒடேசா என்ற திரைப்பட இயக்கத்தின் நண்பர்களின் நட்பு தொடர்ந்து அவர்கள் நடத்திய சினிமாபயிலரங்குகளில் கலந்து கொள்ளவும் திரைப்படவிழாக்களில் பங்கேற்கவும் ஆர்வத்தை உருவாகியது. பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக நான் உலகதிரைப்படங்களை பார்த்து வருகிறேன். டெல்லி கல்கத்தா பெங்களுர் என பல்வேறு திரைப்படவிழாக்களுக்கு சென்று வந்திருக்கிறேன். அந்த்ரே தார்கோவெஸ்கியும், லுôயி புனுவலும், பெலினியும் குரசேவாவும் எனக்கு பிடித்தமான இயக்குனர்கள்.

சென்னை போன்ற பெருநகரங்களில் கூட திரைப்படங்களை திûயி”டுவதை தவிர்த்து அதைப்பற்றிய முறையான அறிமுகமோ, தீவிரமான விமர்சனங்களோ நடைபெறுவதேயில்லை. தியோடர் பாஸ்கரன், வெ. ஸ்ரீராம் போன்ற ஒரு சில தனிநபர்களின் ஈடுபாடு மட்டுமே சினிமவை புரிந்து கொள்வதற்கான எழுத்துப் பிரதிகளை உருவாக்கி தந்திருக்கிறது. சினிமாவை பற்றி எழுதுபவர்கள் தமிழில் மிக குறைவு. இலவசமாக உலகின் சிறந்த படங்கள் திரையிடப்படும் போது கூட அங்கு தமிழ் எழுத்தாளர்களோ, கவிஞர்களோ வந்து பார்ப்பதேயில்லை என்பது தான் உண்மை.

சென்னையில் மட்டும் ஆயிரக்கணக்கில் உதவி இயக்குனர்களும் துணை இயக்குனர்களுமிருக்கிறார்கள். இவர்களில் இருநுôறு பேராவது நல்ல புத்தகங்களை தேடி வாசிப்பவர்கள். ஆனால் இவர்கள் தெரிந்து கொள்வதற்கு கூட தமிழில் உலக சினிமாவை பற்றிய புத்தகங்களில்லை.

தற்போது சென்னையை தவிர்த்த சிறுநகரங்களில் வசிப்பவர்கள் கூட ஹாலிவுட் திரைப்படங்களை தவிர்த்து வேறு திரைப்படங்களை காண்பதற்கான சாத்தியம் டிவிடி வழியாக உருவாகி உள்ளது. ஆனால் எந்த படங்களை பார்ப்பது எப்படி தேர்வு செய்வது எப்படி புரிந்து கொள்வது எனத் தெரியவில்லை. நவீன ஒவியம், இசை போலவே சினிமாவினை ரசிப்பதற்கும் ஆழ்ந்த பயிற்சியும் உழைப்பும் தேவை. ஆகவே இதற்கான மாற்றுமுயற்சிகளில் ஒன்றாக சினிமா மீது ஆர்வம் கொண்டிருந்த இளம் நண்பர்கள் சிலரையும் ஒன்றிணைத்து உலகசினிமாவிற்கான ஒரு புத்தகத்தை உருவாக்கினேன். இந்த புத்தகம் உருவாவதற்கு மூன்று அண்டுகள் கால அவகாசம் தேவைபட்டது.

16) ஒரு சிறுபத்திக்கை எழுத்தாளராக அறியப்பட்டு வந்த நீங்கள் இன்று பிரபலமான தமிழ் எழுத்தாளராக ஆகியுள்ளீர்கள். இந்த மாற்றத்தை எப்படி உணர்கிறீர்கள்?

நான் 1984ல் எழுத துவங்கி இன்றுவரை இருபது ஆண்டுகள் கடந்துவிட்டன. இதுவரை இலக்கியவாசகர்களுக்கு மட்டுமே பரிச்சயமாகயிருந்த எனது எழுத்து இன்று பல்வகை பட்ட வாசகர்களை நோக்கி விரிந்திருக்கிறது. அது என் புத்தகங்களுக்கான வாசகர்களை அதிகப்படுத்தியிருக்கிறதே தவிர எனது ஈடுபாட்டில் எந்த மாற்றத்தையும் உருவாக்கவில்லை.

17) ஆனந்த விகடனில் வெளியான உங்கள் துணையெழுத்து தொடர் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது. ஆனால் அது இதுவரையில்லாத உங்கள் எழுத்தில் ஒரு ரொமான்டிசிசத்தை துணையெழுத்து கொண்டிருப்பதாக ஒரு விமர்சனமிருக்கிறது. இதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

துணையெழுத்து ஒரு கட்டுரைத் தொடர். எனது பயணத்தையும் நான் கண்ட மனிதர்களையும் முன்வைத்து எழுதப்பட்ட ஒரு பத்தி.. அது விகடனில் வெளியானதே தவிர எந்த சிறுபத்திரிக்கையிலும் வெளிவந்திருக்க கூடிய சாத்தியம் கொண்டது தான். நான் கட்டுரைகளை புனைவுமொழியில் எழுதுகின்றவன்.

தமிழில் பொதுவாக கட்டுரைகள் என்றாலே ஒரு சலிப்பூட்டும் நடையில் வழக்கொழிந்து போன வார்த்தைகளையும் புள்ளிவிபரங்களும் கோட்பாடுகளையும் நிரப்பி நம்மை மூச்சுதிணற வைப்பதாகவேயிருந்து வந்திருக்கின்றன. நான் வாசித்தவரை போர்ஹேயின் கட்டுரைகள் மிக தீவிரமானவை ஆனால் அதன் மொழி புனைவு தன்மை மிக்கது. உம்பர்த்தே இகோவை வாசித்த பாருங்கள் பெரிய விஷயங்களை கூட எத்தனை எளிமையாகவும் பரிகாசத்துடனும் புரிந்து கொள்ள வைக்கிறார். இதாலோ கால்வினோ, ஆக்டோவியா பாஸ், மார்க்வெஸ் என பல முக்கிய எழுத்தாளர்கள் எழுதிய கட்டுரைகள் தரும் வாசிப்பு அனுபவம் மிக உயர்ந்த நிலையிலிருக்கிறது.

காருகுறிச்சி அருணாசலம் மறைந்து நாற்பதாண்டுகள் முடிந்துவிட்டது அதுவரை அவருக்கு வாழ்க்கை வரலாறு கூட எழுதப்படவில்லை. அவரை பற்றி எந்த இதழிலும் யாரும் எழுதுவதில்லை என்று துணையெழுத்தில் அவரைப்பற்றி எழுதியதைப் படித்துவிட்டு அவரது மகள் நன்றி தெவித்ததோடு காருகுறிச்சிக்கு நினைவாக பூஜையில் வைக்கபட்டிருந்த சிறிய சந்தன நாதஸ்வரத்தை எனக்கு பரிசாகவும் அளித்தார்கள். இது போலவே பிரமீள் பற்றிய கட்டுரையை வாசித்துவிட்டு அவர் அடக்கம் செய்யப்பட்டுள்ள கரடிக்குடியில் ஒரு நினைவு மண்டபம் எழுப்புவதற்கு அமெரிக்காவிலிருந்து ஒரு மருத்துவர் ஒரு லட்ச ரூபாய் எனக்கு அனுப்பிவைத்திருந்தார்.

நினைவுமண்டபம் அனுப்புவதை விடவும் புத்தகவெளியீடுகள், இலக்கிய கூட்டங்கள் நடத்துவதற்காக சென்னையில் பிரமீள் பெயரால் ஒரு நினைவு அரங்கம் அமைப்பது நல்லது என்று தோன்றுவதாக சொல்லி அப்பணத்தை திருப்பி அனுப்பிவைத்தேன். இரண்டு ஆண்டுகளுக்குள் பிரமீள் பெயரால் அரங்கம் கட்டிதருவதற்கு இப்போது அவர் ஆர்வமாக பணம் சேகரித்துக் கொண்டிருக்கிறார். வாசிப்பை மீறி ஒரு செயல்பாடாக தான் துணையெழுத்தின் எதிர்வினை அமைந்திருந்தது.

17) தமிழில் சிறுபத்திரிக்கைகளின் எண்ணிக்கை குறைந்து இடைநிலை பத்திரிக்கைகள் அதிகரித்துள்ளதே. இன்று ஒரு சிறுபத்திரிக்கையின் தேவை என்ன என்று நினைக்கிறீர்கள்.?

எப்போதுமே சிறுபத்திரிக்கைகள் மாற்றுக்குரலுக்கு உரிய களத்தை உருவாக்குவதற்கு தான் முனைந்திருக்கின்றன. சிறு பத்திரிக்கை என்பதே ஒரு எதிர்திசையில் செல்லும் நீரோட்டம் தான். அதன் நோக்கம் வாசகர்களை விருத்தி செய்வது அல்ல. குறிப்பிட்ட ஒரு நோக்கம் சார்ந்து நண்பர்களால் தங்களது கைப்பணத்தை செலவு செய்தது தான் சிறுபத்திக்கைகள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. இன்று தமிழில் முக்கிய எழுத்தாளர்களாக அறியப்படும் யாவரும் சிறுபத்திக்கையில் எழுதி வந்தவர்களே. சிறுபத்திரிக்கைகளின் தேவை எப்போதுமே இருந்து வரக்கூடியது தான்.

இடைநிலை இதழ்களின் மீது எனக்கு நம்பிக்கையில்லை. இவை எந்த விததத்தில் தன்னை இடைநிலையாக நினைத்துக் கொள்கிறது என்று தெரியவில்லை. பத்தாயிரம் பேர் படிப்பதால் அது இடைநிலை இதழாகிவிடாது. அதுவும் சிறுபத்திரிக்கை தான். இடைநிலை இதழ் என்றால் தமிழ்சினிமா விமர்சனமிருக்கும் நாலு கலர்பக்கமிருக்கும். இத்தோடு ஒன்றிரண்டு மொழிபெயர்ப்பு கதைகள் வெளியிடப்படும் என்பது தானா? தமிழுக்கு தேவை தீவிரமான சிந்தனை தளத்தை உருவாக்க கூடிய இதழ்கள். இதை எத்தனை பேர் வாசகர்களாகயிருக்கிறார்கள் என்பதை வைத்து முடிவுசெய்ய முடியாது. இதே நேரம் சிறுபத்திரிக்கை என்ற பெயல் துதிபாடும் குழுக்களை உருவாக்கி கொள்வதையும் சகித்துக் கொள்ள முடியவில்லை..

18) எழுத்தாளனின் சமூக அக்கறை அரசியல் குறித்து இன்று அதிகம் பேசப்பட்டு வருகிறது. சமீபமாக சங்கராச்சாரியார் கைது செய்யப்ட்ட போது சமூகத்தில் முக்கிய நிகழ்வுகள் நடக்கும் போது எழுத்தாளர்கள் எதிர்வினையாற்ற வேண்டும் என்று சுந்தர ராமசாமி குறிப்பிட்டிருக்கிறார். ஒரு படைப்பாளியாக அதை எப்படி உணர்கிறீர்கள்.?

சங்கராச்சாரியாரின் கைது ஒரு முக்கிய சமூக நிகழ்வா என்ன? தலித் மக்கள் மீது தொடர்ந்து வரும் வன்முறையை கவனிக்க கூட முடியாமல் கண்ணை, காதை பொத்திக் கொண்டவர்கள் சங்கராச்சாரியார் விசயத்தில் மட்டும் சமூகபோராளியாவது வேடிக்கையாக இருக்கிறது. சுனாமியால் இத்தனை ஆயிரம் பேர் தங்கள் குழந்தைகளை இழந்து, வீட்டை இழந்து அகதிகளை போல ஆங்காங்கே தங்க வைக்கபட்டிருக்கிறார்கள். இறப்பு எண்ணிக்கை எவ்வளவு என்று இன்னமும் கண்டு பிடிக்கபடவேயில்லை. எத்தனை எழுத்தாளர்கள் அந்த முகாம்களுக்கு சென்று உதவிப்பணிகள் செய்திருக்கிறார்கள். தாமிரபரணி படுகொலையின் போது எங்கே போனார்கள் நாஞ்சில் நாட்டு எழுத்தாளர்கள். பாபர்மசூதி இடிப்பு, பம்பாய் மதக்கலவரம். குஜராத் கலவரம் என எத்தனையோ விஷயங்கள் நம்மை உலுக்கிய போதும் எதிர்வினையே தமிழில் ஆல்லை.

உண்மையை சொல்வதற்கு எனக்கு தயக்கமில்லை. நான் இது போன்ற சமூக நிகழ்வுகளுக்கு எதிரான கண்டன ஊர்வலங்களிலும் மேடைகளிலும் கலந்து கொண்டதில்லை. ஆனால் மதவாதத்தை ஒருபோதும் நான் ஆதரிப்பவனில்லை. சுனாமி முகாம்களில் எனது பதவியும் பங்களிப்பும் சொல்லிக் கொள்ளுமளவு முக்கியமானதில்லை. ஆனால் அவர்களின் துயரம் என்னை இன்றுவரை துôக்கமற்று செய்திருக்கிறது.

தொடர்ந்து தமிழகமெங்கும் சமணபௌத்த சின்னங்கள் இடிக்கபட்டும், படுகைகள் உள்ள மலைக்குகைகள் கல்குவாரிகளாக வெடிவைத்து தகர்க்கபடுவதும். கிராம மக்கள் தங்கள் வாழ்விடங்களை துறந்து நகரங்களை நோக்கி வந்து கொண்டேயிருப்பதையும், சாதி கிராமங்களில் முன்னை விட ஆழமாக வேர் ஊன்றிவிட்டதையும், ஆரம்ப கல்வியில் கூட மதவாதம் கலக்கபட்டு சரித்திரமும் கலாச்சாரமும் பொய்யால் நிரப்பபடுவதையும் சமூகபிரச்சனைகளாக நாம் கண்டுகொள்வதேயில்லை. அதைப் பற்றி குரல் கொடுப்பவர்களும் அதிகமில்லை.

நான் எனது அரசியல் சமூக நிலைப்பாடாக இந்த இரண்டாவது வகையை சார்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறேன். கல்வியிலும் கலாச்சார தளங்களிலும் ஏற்பட்டுவரும் சீரழிவுகளை தொடர்ந்து பல அரங்கங்களில் கண்டித்தும் எனது பார்வைகளை வலியுறுத்தியும் வருகிறேன். வாழ்விடங்களை விட்டு வெளியேறுபவர்களின் மீது எப்போதுமே அக்கறை கொண்டிருக்கிறேன்.

19)அரவான் என்ற உங்களது நாடகம் சமீபத்தில் அதிகம் பேசப்பட்டது. ஏன் நாடகத்திற்கு அரவானை தேர்வு செய்தீர்கள்.?

வியாச பாரத்தில் அரவான் களப்பலி பெரிதாக விவரிக்கபடவில்லை. ஆனால் தமிழகத்தில் அரவானுக்கு ஒரு முக்கியத்துவமிருக்கிறது. குறிப்பாக நாட்டார் மரபில் அரவான் கிருஷ்ணனால் தான் களப்பலிக்கு தேர்வு செய்யப்படுகிறான். பின்பு கிருஷ்ணனே பெண் வேடமிட்டு வந்து அரவானோடு கலவி கொள்கிறான். கிருஷ்ணன் ஆண் பெண் என இரண்டு உடல் கொண்டவானாகயிருந்ததால் அரவாணிகளும் அவரைப் போலவே நீலம் பூசிக்கொண்டு ஒரு இரவு அரவானை மணந்து மறுநாள் தாலியறுத்துவிட்டு ஒப்பாரி வைக்கிறார்கள். இந்த சடங்கு கூவாகத்தில் ஆண்டு தோறும் நடக்கிறது.

அரவான் ஒரே நேரத்தில் ஒடுக்கப்பட்ட மனிதனையும் விலக்கப்பட்ட பால் உறவிற்கும் அடையாளமாகயிருக்கிறான். அத்தோடு யுத்தத்தில் சாதாரண மனிதர்கள் பலிகொடுக்கபட்டு வருவது காலம்காலமாக நடந்துவருகின்றது என்பதற்கு சாட்சியாகவுமிருக்கிறான். அரவான் ஒரு வனகுடி. இப்படி பலதளங்கள் கொண்ட கதாபாத்திரமாகயிருப்பதால் தான் அரவானை நாடகமாக்கினேன்.

20)இப்போது என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்?

பௌத்த விகாரை ஒன்றை பற்றிய நாவலை எழுதிக் கொண்டிருக்கிறேன். விகடனில் கதாவிலாசம் என்று தமிழின் முக்கிய சிறுகதையாசியர்களை பற்றி ஒரு பத்தியை எழுதிக் கொண்டுவருகிறேன். இணையத்தில் அட்சரம் என்ற பெயல் உள்ள எனது பிளாக்கில் அவ்வப்போது சிறுகட்டுரைகள் .எழுதுகிறேன். இயற்கையை பற்றி உலகமெங்கும் உள்ள பல்வேறு பழங்குடி மக்களால் சொல்லப்பட்டுவரும் நுôறு குழந்தைகள் கதைகளை மொழிபெயர்த்திருக்கிறேன். அது ஏப்ரலில் தனிநுôலாக வெளிவரயிருக்கிறது.

21 ) இரண்டுவருடமாக சென்னைவாசியாகி விட்டீர்கள் எப்படியிருக்கிறது சென்னை வாழ்க்கை ?

எனக்கு எந்த மாற்றமும் தெரியவில்லை. குழந்தைகள் தான் விளையாடுவதற்கு இடமின்றியும். சேர்ந்து கதை பேச நண்பர்கள் இன்றியும், தனித்து விடப்பட்டிருக்கிறார்கள். கரை ஒதுங்கிய படகை போல ஒரு தீராத்தனிமை பீடித்திருக்கிறது. நான் தப்பிக் கொள்வதற்கு புத்தகங்களுக்குள் தலைகவிழ்ந்தபடியோ அல்லது யாவரும் உறங்கிய பின்இரவில் விழித்துக் கொண்டு தெருவை வேடிக்கை பார்த்தபடியோ இருக்கிறேன். மனைவியும் குழந்தைகளும் தங்களது இயல்பை மறந்து மௌனமாகிக் கொண்டு வருகிறார்கள். தொலைகாட்சியில் ஆழ்ந்துபோயிருக்கும் அவர்கள் முகங்களை கவனிக்கும் போது அது நிம்மதியற்றதாகவே தெரிகிறது. அதை நினைக்கும் போது தான் சற்றே பயமாக இருக்கிறது.

மறுமொழி

மூக்கன்

2/3/2005 , 7:23:01 PM அருமையாக இருந்தது திரு.ராமகிருஷ்ணன்.

உங்கள் கதாவிலாசமும் விகடனில் படித்து வருகிறேன்.
நேரம் கிடைக்கும்போது, இங்கேயும் எழுதுங்கள்.

PK Sivakumar

2/3/2005 , 7:41:59 PM Very good interview. Very thought provoking points. Each answers of yours have to be pondered, analysed and discussed more and thus would form an essay by itself. Punaivin Baaniyil Katurai ezuthuvathu ponra muyarchikal Tamilil illai enbathu ponra statements anaivarum yosika vendiya onru.

Ungalai patri pesum pothu Nanbarkalidam sonnathu ninaivuku varukirathu. La.sa.raku apuram kavithaiyaaka vurainadai ezuthubavar s.ra. enna, la.sa.ra.vin kavithai nadai thatuva vaathiyai pola sikalaanathu. ungal kavithai nadai, naataar kalai pola elimaiyanathu enru. Your interview makes me remember it again.

Thanks and regards, PK Sivakumar

மூர்த்தி

2/3/2005 , 9:37:29 PM மதிப்புமிகு எஸ்.ரா அவர்களுக்கு,

அருமையான கேள்விகள். மிகவும் அருமையான பதில்கள். நிறைகுடம் தளும்பாது என்பதற்கேற்ப எவ்வளவு புகழ்வரினும் தன்னடக்கமான பதில்கள். இது இதுதான் உங்களுக்கு மென்மேலும் புகழைச் சேர்க்கும். வாழ்க தங்களின் தமிழ் இலக்கிய பயணம்.

அவர் கேட்க மறந்த கேள்வி ஒன்று:

இணையத்தில் இலக்கியம் என்று ஏதும் படைக்கப்படுகிறதா இல்லையா?

தங்கமணி

2/3/2005 , 10:59:05 PM அருமையான பதிவு. மிக்க நன்றி. உங்களைப்பற்றிய அறிமுகம் மிகவும் நல்லவைகயில் எனக்குக் கிடைக்கவில்லை. வாசிப்பு என்ற வகையில் தாவரங்களின் உரையாடலையும், துணையெழுத்தையும் தவிர நான் உங்களின் எழுத்தெதையும் வாசிக்கவில்லை; அதனால் நான் முன்முடிவுகளை தவிர்க்கும்வண்ணம் இப்போதுதான் உபபாண்டவம் வாங்கினேன். இன்னும் வாசிக்கவில்லை.

இந்த நேர்காணல்/பதிவு பலபக்கங்களை கொண்டதாக இருப்பதையே இதன் உண்மைத்தன்மைக்கு சான்றாக நினைக்கிறேன். யதார்த்தத்தின் பரிமாணங்கள், புனைவின் உண்மைத்தன்மை (Chuang Tzu வின் பட்டாம்பூச்சி கனவு நினைவுக்கு வருகிறது), காலம், விமர்சன உலகம் என்று அழகாக, பின்புற அரசியல் நோக்கங்களின்றி, பார்வைகளின் (தரிசனங்களின்) வழியில் விரிகிறது உங்கள் பதிவு..

//பௌத்த ஈடுபாடு ஒரு மதமறுப்பு செயல்// என்ற வரிகளைப்படிக்கும் போது தி.ஜானகிராமனின் புத்த சாமியார் (அன்பே ஆரமுதே) ‘சாமியாரில் ஏதம்மா புத்தசாமியாரும், வேற சாமியாரும்’ என்பது நினைவில வந்தது. உண்மையில் பெளத்தம் சாட்சிப்படுத்தலின் மூலம் மனதை புறங்காணும் வழிமுறைகளை மிக எளிய முறையிலும், அழகாகவும் செய்துள்ளது. அதை நிறுவனமயமாக்கப் பட்ட மதங்கள் எளிதில் மூடிமறைக்க முயல்வதும், பெளத்தமே நிறுவனமயமாக்கப்பட்டதும் மிக இயல்பானதே.

காலம் பற்றிய புரிதல் மிக அழகானது. காலம் என்பது மனம் கடந்த நிலையில் இல்லாதொழிந்து, இக்கணமே நிலைக்கிறது. இக்கணத்தின் விரிவோ எல்லையும், திசையும் இல்லாதாது. அதனாலேயே மகா இலக்கியங்கள் அல்லது நாட்டார் கலை வந்த வடிவங்கள் எல்லாம் எல்லா காலத்தையும் (காலம் கடந்தும்) பிரதிபலிக்கும் தன்மைகொண்டவையாக இருக்கின்றன. காலம் பற்றிய அற்புதமான காட்சிப்படுத்தலை ஹெர்மன் ஹெஸ்ஸேயின் ‘சித்தார்த்தா’வின் கடைசி பக்கங்களில் கண்டபோது எனக்குள் எழுதவேண்டும் என்ற தவிப்பும், தேவையும் முற்றாக தீர்ந்துபோனதை உணர்ந்தேன்.

எழுத்தாளனின் சமூக அக்கறையைப் பற்றிய பதிலும் முக்கியமானது; இங்கு துரஷ்டிரவசமாக தமிழ் வலைபதிவுகளில் எழுத்து ஒருவித மீடியா தன்மையை கொண்டிருப்பதாலும், எழுதுபவர்கள் எழுத்தாளர்களாய் இருப்பவர்களை விட பத்திரிக்கையாளர்களாய் இருப்பதும் சங்கராச்சாரியாரின் கைது போன்றவை கவனஈர்ப்பைப் பெறுகின்றன.
உங்கள் விரிவான பதிவை வெளியிட்டமைக்கு மீண்டும் நன்றி!

s.velumani

2/4/2005 , 3:06:10 AM very good interview. pl do write regularly in atcharam.

கறுப்பி

2/4/2005 , 12:21:29 PM மிக அருமையான நேர்காணல் எஸ்.ராமகிருஷ்ணன்
புதிய கதை எழுத்து என்று பல இடைக்கால இலக்கியவாதிகள் புலம்பிக்கொண்டிருக்கின்றார்கள். இடைக்காலங்களில் யதார்த்தவாத எழுத்து என்று விட்டு வெறும் சமூகப்பாடம் சொல்லும் கதைகளாகவே வெளிவந்து கொண்டிருந்தன. அன்றைய கால எழுத்தாளர்களான பாரதி, புதுமைப்பித்தனும் ஜீ.நாகராஜனும் இப்போது இலக்கிய விமர்சகர்கள் வைக்கும் புதிய கதை எழுத்தைப் படைக்கவில்லையா. இடைக்காலங்களில் எழுத்தின் தன்மையில் ஒரு வித தேக்கம் கண்டு தற்போது அது மீண்டும் துளிர்க்கத் தொடங்கி விட்டது என்பதே என் கருத்து.
யதார்த்தவாதம் என்ற பெயரில் சுய அனுபவத்தை மட்டும் படைப்பாக்கி எழுத்தாளர்கள் தந்து கொண்டிருந்தமையால் தான் பெண்மொழி வெளியே வரவில்லை. பெண்கள் பெண்களுக்கான குடும்ப பாலியல் பிரச்சனைகளை தமது பிரச்சனைகளை எழுத்தில் கொணரும் பொழுது அவளது வாழ்க்கையோடு அதைச் சம்பந்தப்படுத்தி பெண் எழுத்தாளர்கள் கொச்சைப் படுத்தம்படும் தன்மை இருந்து கொண்டும் வந்தது. ஆனால் தற்போது அதை எதிர்நோக்கும் துணிவு, தன்மை பெண்களிடம் (மிகக்குறைந்த அளவிலேலும்) வந்து விட்டது.

sukumaran

2/9/2005 , 6:35:56 AM Dear Ramakrishnan,
Read your Interview in your blog.It was unpretentious and lively.

With regards
sukumaran

கணேசன்

2/9/2005 , 11:57:30 AM உங்களைப் போல் ஊர் சுற்றி..தெருவில் படுத்து இலக்கில்லாமல் அலைய ஆசை!
நினைத்தபடி வாழ அனைவருக்கும் கொடுப்பினை இல்லை…
வாழ்ந்த படியே (ஆசைகளை) நினைத்துக் கொள்ள வேண்டியதுதான்.

மதம் பற்றிய உங்களின் கருத்து உண்மை.

அன்புடன்,
கணேசன்.

7/23/2005 , 9:36:36 AM p

Karunharamoorthy.Po – பொ.கருணாகரமூர்த்தி, பெர்லின்.

3/21/2006 , 4:25:42 PM பௌத்தம் என்கிற சிந்தனை- வாழ்வியல் முறைமை புறந்தள்ளப்பட்டு அது ஸ்தாபனமயப்பட்டு வெறும் அரசியலாகவும் அதைத்தொடரும் வெறுப்பாகாகவும் வளர்ந்து நிற்பதற்கு இலங்கை மிகச்சிறந்த உதாரணம்.
புத்தர்கள் (என்று சொல்லப்படுபவர்கள்) சூழ்ந்த சமூகத்தில்தான் வாழ்ந்தோம், வாழ்கிறோம். ஆனாலும் பௌத்தம் பற்றி எதுவும் அறியமுடிந்ததில்லை. பௌத்த அரசுகள் புத்தர்சிலைகளை தமிழர் பகுதிகளில் நாட்டிச்செல்வதில் காட்டிய அக்கறையை பௌத்தர்களாக நடந்து காட்டுவதில் செலுத்தவில்லை.
பௌத்த சிந்தனை முறைமையை பற்றி முற்றாக அறிந்துகொள்ள தமிழில் இதுவரை ஏதொரு நூலும் கிடையாது. பத்து வருஷங்களாக ஆழ்ந்து பௌத்தத்தைப் பயிலும் நீங்கள் ஏன் பௌத்தம் பற்றிய ஒரு விரிவான நூலை எழுதக்கூடாது?

கால் முளைத்த கதைகள் – எஸ். ராமகிஷ்ணன் – உயிர்மை பதிப்பகம்

May 15, 2012 2 comments

ஆந்தைக்குத் தூக்கம் என்றால் ரொம்பவும் பிடிக்கும். அது பகல் முழுவதும் தூங்கிக் கொண்டேயிருக்கும். ஒரு நாள் ஒரு ஆந்தை மரத்தில் தூங்கிக் கொண்டிருந்தது. மரங்கொத்தி ஒன்று அந்த மரத்தை கொத்தத் துவங்கியது. தூக்கம் கலைந்து ஆந்தை கோபத்துடன் ஏன் மரத்தைக் கொத்துகிறாய் என்று கேட்டது. மரங்கொத்தி என் பசிக்கு மரத்தைச் சாப்பிடுகிறேன். நீ ஏன் எப்போதும் தூங்கிக்கொண்டே இருக்கிறாய் என்று கேட்டது. பதில் சொல்வதற்குள் ஆந்தை கொட்டாவி விட்டுக் கொண்டே மறுபடியும் தூங்கியது. மறுநாள் அந்த மரத்தில் ஒரு தூக்கனாங்குருவி கூடு கட்டியது. அதன் சப்தம் கேட்டு விழித்த ஆந்தை எதற்காகக் கூடு கட்டுகிறாய் என்று கேட்டது.

குருவியும் குளிர்காலத்தில் பாதுகாப்பாக இருக்க வேண்டாமா என்றது. ஆந்தை என்னை குளிர் எதுவும் செய்யாது நான் கூடு கட்டத் தேவையில்லை என்று சொல்லிவிட்டு தூங்கிவிட்டது. குளிர்காலம் வந்தது. நட்சத்திரங்கள் கூட நடுங்கத் துவங்கின. மரங்களில் இருந்த கூடுகளில் பறவைகள் அடைந்து கொண்டு விட்டன. ஆந்தை குளிரில் நடுங்கியது. கூடு கட்டுவது எப்படி என்றே தெரியாமல் போய்விட்டோமே என்று கலங்கியது. குளிர் நாளுக்கு நாள் அதிகமாகி ஆந்தையை வாட்டி எடுத்து எப்படியாவது ஒரு கூடு கட்டிக்கொள்ள வேண்டும் என்று ஆந்தை முடிவு செய்தது. குளிர்காலம் முடிந்து கோடைக்காலம் வந்தது.

ஆந்தை ஒரேயரு நாள் கூடு கட்டுவதற்கு சுள்ளிகளைப் பொறுக்கி வந்து மரத்தில் அடுக்கியது. அதற்குள் சோம்பேறித்தனம் அதிகமாகிவிட திரும்பவும் தூங்கத் துவங்கிவிட்டது. அன்றிலிருந்து இன்று வரை ஆந்தையால் கூட்டைக் கட்ட முடியவில்லை. இது தென் ஆப்பிரிக்காவின் ஒரு பழங்குடியினத்தவரின் கதை.

இதுபோல நெல் எப்படி உருவானது?

நாய் ஏன் வாலை ஆட்டுகிறது?

பெண்களுக்கு ஏன் தாடி வளர்வதில்லை?

என்கிற ஒரு நைஜீரியா கதை உள்ளிட்ட 80 கதைகளை ஒரு தொகுப்பாக வெளியிட்டுள்ளார் எஸ். ராமகிருஷ்ணன்,

உலகமெங்கும் உள்ள முப்பது பழங்குடியினத்தவர்கள் சொன்ன கதைகளிலிருந்து தேர்வு செய்து இந்த தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. சிறுவர்களுக்காக எழுதப்பட்ட நூலாக சொல்லப்பட்டாலும் அனைவரும் படிக்கும்படி மிகவும் சுவாரசியமாக இருக்கிறது இந்த நூல்.ஆக, குழந்தைகளுடைய மகிழ்ச்சிக்காகத் தன் பங்களிப்பை செய்திருக்கின்ற எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்கும் நாமெல்லாம் நன்றி சொல்லலாமே.

SRaa on Virginia Woolf: How to read the books: புத்தகம் படிப்பது எப்படி?

May 15, 2012 Leave a comment

புதிய புத்தகம் பேசுது – அக்டோபர்10

புத்தகம் படிப்பது என்பது எளிமையானதில்லை. அது ஒரு நுட்பமான கலை. என்ன படிப்பது. எப்படி படிப்பது. ஏன் சில புத்தகங்கள் உடனே புரிந்துவிடுகின்றன. சில புரிவதேயில்லை. ஒரே புத்தகம் எப்படி வெவ்வேறு வாசகர்களால் வேறு விதமாகப் படிக்கப்படுகிறது. சில புத்தகங்கள் ஏன் பல நூறு வருசமாக யாவருக்கும் பிடித்திருக்கிறது. படிப்பதனால் என்ன பயனிருக்கிறது. இப்படி புத்தகங்கள் தொடர்பாக நூறு கேள்விகளுக்கும் மேலாகயிருக்கின்றன.

இந்தக் கேள்விகளை வேறு வேறு வடிவங்களில் உலகின் எல்லா இடங்களிலும் யாரோ யாரிடமோ கேட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள். இதற்கான பதில்களை ஒவ்வொரு எழுத்தாளனும் அவனளவில் தெளிவுபடுத்திக் கொண்டேயிருக்கிறான். ஆனால் கேள்வி அப்படியே இருக்கிறது.

நான் படிக்கத் துவங்கிய வயதில் இதே கேள்விகளுடன் இருந்தேன். இன்று வாசிக்கத் துவங்கும் ஒரு இளம்வாசகன் அதே கேள்விகளுடன் என்னிடம் வருகிறான்.

இந்தக் கேள்விகளுக்கான பதிலாக நான் வாசிக்க சிபாரிசு செய்வது ஒரு கட்டுரையை . அதன் தலைப்பு. How Should One Read a Book?.

1926 வது வருடம் இந்த கட்டுரையை வர்ஜினியா வுல்ப் (Virginia Woolf) எழுதியிருக் கிறார். 83 வருசங்களுக்குப் பிறகும் இக்கட்டுரை தரும் விளக்கம் நெருக்கமாகவே உள்ளது. வர்ஜீனியாவின் கட்டுரை இந்தப் பதில்களை ஒரு அறிவுரையாக எடுத்துக் கொள்ளவேண்டாம் என்ற எச்சரிக்கையோடு துவங்குகிறது. காரணம் புத்தகம் வாசிப்பதற்கு எவரது அறிவுரையும் வழிகாட்டலும் பயனற்றதே. அது நீச்சல் அடிப்பது எப்படி என்று சொற்பொழிவு ஆற்றுவது போன்றது,

எது நல்ல புத்தகம் என்று நமது வாசிப்பு அனுபவத்தை வேண்டுமானால் பரிந்துரை செய்யலாம். மற்றபடி இப்படிப் படி, இப்படிப் படித்தால் மட்டுமே புரியும் என்ற அறிவுரைகள் பெரும்பாலும் பொருந்தக் கூடியதில்லை.

ஆகவே வர்ஜீனியா வுல்ப்பின் கட்டுரை எப்படி ஒரு புத்தகத்தை வாசிப்பது என்பதைப் பற்றிய தன்னிலை விளக்கம் போலவே உள்ளது. மூன்றே பக்கம் உள்ள சிறிய கட்டுரை. ஆனால் பலமுறை வாசித்து விவாதிக்க வேண்டியது. வர்ஜீனியாவின் முதல் பரிந்துரை. எந்தப் புத்தகத்தையும் படிப்பதற்கு முன்பும் அதைப் பற்றிய முன்முடிவுகள் வேண்டாம், திறந்த மனதோடு இருங்கள். எழுத்தாளரை உங்களது எதிரியைப் போல பாவிக்காதீர்கள். எழுத்தின் மீதான உங்கள் தீர்ப்பைச் சொல்வதற்காக படிக்க முயற்சிக்க வேண்டாம். அது உங்களை நீங்களே நீதிபதி ஸ்தானத்தில் உட்கார வைத்துக் கொண்டு புத்தகத்தையும் எழுத்தாளனையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவது போன்றது. அதில் நஷ்டமடையப் போவது நீங்களே.

ஒரு புத்தகம் அதிகம் விற்பனையாவதாலோ.அல்லது பிரபலமாக இருப்பதாலோ நல்லபுத்தகமாக இருக்கப்போவதில்லை. மாறாக அது நல்ல புத்தகமா இல்லையா என்பதைத் தீர்மானிக்கப் போவது நீங்களும் உங்களது திறந்த மனதுமே.அந்த மனது உள்ளுணர்வு சார்ந்தே பெரிதும் செயல்படக்கூடியது. ஆகவே உங்கள் உள்ளுணர்வு ஒன்றைப் படிக்கத் தேர்வு செய்கிறது என்றால் அதை அனுமதியுங்கள். படிப்பதற்கான மனநிலையும், நேரமும், விருப்பமும், பகிர்ந்து கொள்ள நட்புமே புத்தக வாசிப்பில் முக்கியமானவை.

இரண்டாவது பரிந்துரை. எழுத்தையும் எழுத்தாளர்களையும் விமர்சனம் செய்வது எளிமையானது. ஆனால் புரிந்து கொள்வது எளிதானதில்லை. அதற்கு வாசகன் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். எந்த ஒரு படைப்பையும் வாசிப்பதற்கு மூன்று விசயங்கள் முக்கியமானவை. ஒன்று அகப்பார்வை. அதாவது நாம் எதை வாசிக்கிறோமோ அதை நம் மனதால் உணர்ந்து கொள்வது. (Perception) ,

இரண்டாவது கற்பனை. (imagination) படைப்பின் ஊடாக வெளிப்படும் மனிதர்கள், நிலக்காட்சிகள், நிகழ்வுகள், நினைவுகளைக் கற்பனை செய்து புரிந்து கொள்ளும் இயல்பு.இதன் மூலமே கதையோ கவிதையோ நாம் அர்த்தப்படுத்திக் கொள்கிறோம்

மூன்றாவது கற்றல் (Learning) எழுத்தின் வழியாக நாம் கற்றுக் கொள்ள முன்வருவது. இது தகவலாகவோ, அறிவுத்தொகுப்பாகவோ, உண்மையாகவோ. வாழ்வியல் அனுபவமாகவோ எவ்விதமாகவும் இருக்கலாம். அதை நாம் கற்றுக் கொள்கிறோம் என்ற ஈடுபாடும், தீவிர அக்கறையுமே புத்தகத்தை ஆழ்ந்து வாசிக்க உதவும்.

ஒரு புத்தகம் புரியவில்லை என்றால் கொஞ்ச காலம் கழித்து மறுபடி படித்துப்பாருங்கள். அப்படியும் புரியவில்லை என்றால் இன்னும் கொஞ்ச நாள் காத்திருங்கள். அதற்காக புத்தகம் தவறானது என்ற முடிவிற்கு அவசரமாக வரவேண்டாம். காரணம் எளிய வரிகள் கூட இன்றும் புரிந்து கொள்ளப்படாமலே இருக்கின்றன. ஆத்திசூடியில் வரும் ஙப்போல்வளை என்பதற்கு என்ன பொருள் என்று கேளுங்கள். எண்பது சதவீதம் பேர் விழிப்பார்கள். ஆகவே எளிய விசயங்களில் கூட புரியாமை இருக்கவே செய்கிறது. கண்ணால் மரத்தைப் பார்த்துவிட முடியும். அதன் வேர்களைக் கண்ணால் பார்த்துத் தெரிந்து கொண்டுவிட முடியாது. அப்படித்தான் புத்தகங் களும். புத்தகங்களுடனான நமது உறவு எப்போதுமே உணர்வு பூர்வமானது. ஆகவே புத்தக வாசிப்பில் உணரச்சிவெளிப்பாட்டிற்கு முக்கிய இடமிருக்கிறது. ஒரு புத்தகம் எப்படி உணர்ச்சி களை வெளிப்படுத்துகிறது. எந்த கணங்களில் அது வாசகனை ஒன்றிணைக்கிறது. எந்த நிலைகளில் வாசகனை மீறிச்செல்கிறது என்று வாசகன் எப்போதுமே உன்னிப்பாக அவதானிக்கிறான்

அத்தோடு வாசிப்பின் வழியாக ஒரு இன்பம் துய்த்தலை வாசகன் நிகழ்த்துகிறான். இது புத்தகம் வாசிப்பதற்கான முக்கியக் காரணிகளில் ஒன்று. ஜனரஞ்சகமான நாவல்களின் வெற்றிக்கு முக்கியக் காரணம் அது தரும் உடனடி வாசிப்பு இன்பமே. அதே போல செவ்வியல் படைப்புகள் பலமுறை திரும்பத் திரும்ப வாசிக்கப்படுவதற்கும் அதன் தனித்துவமான வாசிப்பு இன்பமே முக்கியக் காரணமாகயிருக்கிறது.

வாசிப்பின் வெற்றியை முடிவு செய்வதில் வாசிப்பு இன்பத்திற்கு எப்போதுமே பெரிய பங்கிருக்கிறது. ஆகவே சுவாரஸ்யமாக இருப்பது இலக்கியத்தரமில்லாதது என்று முடிவு செய்துவிட முடியாது. அதே நேரம் வெறும் சுவாரஸ்யம் ஒரு போதும் இலக்கியமாகிவிடாது.

புரிந்து கொள்ள முடியவில்லை என்பதே புத்தக வாசிப்பின் பெரிய சவால். ஒரு புத்தகம் புரிந்து கொள்ளப்படாமல் போவதற்கு புத்தகம் மட்டுமே காரணமாக இருந்துவிடாது. வாசிப்பவனுக்கும் சமபங்கிருக்கிறது. அர்த்தம் புரியாமல் போவது வேறு. எதற்காக எழுதப்பட்டிருக்கிறது என்று புரிந்து கொள்ளாமல் போவது வேறு.

ஒன்று அதன் மொழி மற்றும் வாக்கிய அமைப்புகள் காரணமாக அது புரியாமல் போயிருக்கக் கூடும். எந்தப் பொருள் பற்றிப் பேசுகிறதோ அது நமக்கு பரிச்சயமற்றிருக்கக்கூடும். அல்லது அது ஆழ்ந்து புரிந்து கொள்ள வேண்டிய பயற்சி தேவைபட்டதாக இருக்கக்கூடும். அல்லது அந்தக் கதையோ. கவிதையோ எதைப்பற்றிப் பேசுகிறதோ அது நேரிடையாக இல்லாமல் மறைமுகமாக. அரூபமான தளங்களில் வெளிப்படுத்தப்பட்டிருக்கக் கூடும். ஒரு படைப்பைப் புரிந்துகொள்ள அது குறித்து ஆதாரமான அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். இசையைப் போல படைப்பை நாம் கற்பனை செய்து கொள்வதன் வழியே ஆழமான தளங்களை நோக்கி வாசிப்பை நகர்த்திக் கொண்டுபோக முடியும்.

சில புத்தகங்களை வாசிப்பதற்கு வயதும் அனுபவமும் போதாமல் இருக்கக் கூடும். அந்தப் புத்தகம் இன்னொரு வயதில் இன்னொரு மனநிலையில் புரிவதோடு நெருக்கமாகவும் மாறிவிடும். சமூக கலாச்சார, சரித்திர, விஞ்ஞான அறிவும், சங்கேதங்கள், குறியீடுகள், கவித்துவ எழுச்சிகளைப் புரிந்து கொள்ளும் நுட்பமும் வாசகனுக்கு அவசியமானவை. அவை ஒரு நாளில் உருவாகிவிடு வதில்லை. தொடர்ந்த வாசிப்பும், புரிதலுமே அதை சாத்தியமாக்கு கின்றன.

வர்ஜீனியாவும் அதையே சொல்கிறார். புத்தகங்களை நாம் எப்போதுமே இன்னொரு புத்தகத்தோடு ஒப்பிடுகிறோம். இந்த ஒப்பீட்டினை விமர்சனம் என்று நினைக்கிறோம் . ஒப்பிடுவது தவறில்லை. ஆனால் எதை எதோடு ஒப்பிடுகிறோம். அப்படி ஒப்பிட என்ன காரணம் என்று யோசிப்பதேயில்லை. ஒவ்வொரு புத்தகமும் ஒரு மனப்போக்கின் வெளிப்பாடு. அதன் தனித்தன்மையை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். பிறகு அதை ஒப்பீடு செய்து பார்க்கலாம். மோசமான புத்தகங்களைக் கழித்துக்கட்ட ஒப்பீடு அவசியம் தான். ஆனாலும் அப்போதும் கூட அந்த புத்தகத்தைப் பற்றிய தீர்ப்பு போன்று முடிவுகளை வெளிப்படுத்துவதை விட அதை எப்படிப் புரிந்து கொண்டேன், அதில் என்ன அம்சங்கள் மிகையாகவோ, வலிந்து உருவாக்கப்பட்டதாகவோ, செயற்கையாகவோ, பொருத்தமில்லாமலோ இருக்கிறது. அது எழுத்தாளனின் நோக்கமா. அல்லது வாசகன் அப்படிப் புரிந்து கொள்ள சுதந்திரமிருக்கிறதா என்று விவாதத்திற்கான புள்ளியாகவே வளர்த்து எடுக்க வேண்டும்.

நாவலை வாசிப்பது என்பது ஒரு பெரிய அடுக்குமாடிக் கட்டடம் ஒன்றை தூரத்தில் இருந்து பார்த்து அது ஒரு கட்டடம் என்று சொல்லிக் கடந்து போவதைப் போல எளிதானதில்லை. கண்ணில் பார்ப்பதைப் போல இலக்கியத்தில் யாவும் உடனே புரிந்துவிடாது. வார்த்தைகளைக் கொண்டு உருவாக்கிய உலகமது. ஆகவே அதைப் புரிந்து கொள்ள நீங்கள் எழுத்தாளரின் சகஜீவி போல உடன் வேலைசெய்யும் ஒருவரைப் போல இணக்கமான மனநிலையோடு அணுகுங்கள்.

ஒரு நண்பனைப் போல அவனோடு சேர்ந்து பயிலுங்கள். சேர்ந்து உரையாடுங்கள். எழுத்து ஒரு திறந்த உரையாடல். எல்லா எழுத்தாளர்களும் இயல்பில் வாசகர்களே. ஆகவே அவர்களும் நம்மைப் போலவே ஏதோ சில புத்தகங்களின் தீவிர வாசகர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.

எழுத்தாளர் பிரபலமானவர். புகழ் அடைந்தவர் என்பதற்காக எந்தப் புத்தகத்தையும் நல்லது என்று முடிவு செய்யாதீர்கள். நல்ல எழுத்தாளர்கள் மோசமான புத்தகங்களை எழுதியிருக்கிறார்கள். மோசமான எழுத்தாளர்கள் சமயங்களில் நல்ல புத்தகங்களை எழுதிவிடுகிறார்கள். ஆகவே புத்தகம் அதற்கான விதியைக் கொண்டிருக்கிறது. ஆகவே எழுத்தாளனின் பெயர் புகழால் மட்டுமே வாசகனின் விருப்பத்திற்கு உரியதாக புத்தகங்கள் அமைந்துவிடுவதில்லை.

ஷேக்ஸ்பியர், டிக்கன்ஸ்,விக்டர் க்யூகோ, பால்சாக், மாபசான், டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி உள்ளிட்ட உலகில் உள்ள பெரும்பான்மை வெற்றி பெற்ற எழுத்தாளர்கள் தங்கள் புத்தகங்களில் சில மிகக் குறைவான வாசகர்களையே பெற்றிருக்கிறது என்று அறிந்தேயிருந்தார்கள். லட்சம் பேர் படிப்பதால் எந்த ஒரு புத்தகமும் உயர்ந்த இலக்கியம் ஆகிவிடாது. நூறு பேர் மட்டுமே படிப்பதால் அது தரம்குறைந்தது என்று எண்ணிவிட முடியாது. புத்தகங்களை வாசிப்பவர்களின் எண்ணிக்கை நிலையானதில்லை. அது மாறிக் கொண்டேயிருக்கக் கூடியது.

ஒவ்வொரு புத்தகத்தையும் வாசகன் தனது ஒரு குறிப்பிட்ட மனநிலையில் இருந்தே படிக்கிறான். அதுவே புத்தகத்தைத் தேர்வு செய்கிறது. அதனால் தான் ஒரே நேரத்தில் வாசகனால் பல்வேறுவிதமான எழுத்தாளர்களின் புத்தகங்களைப் படிக்கவும் ரசிக்கவும் முடிகிறது. ஒரு புத்தகம் முழுவதும் பிடிக்காமல் போவது என்பது வேறு . புத்தகத்தின் சில பகுதிகள் பிடித்திருக்கிறது என்பது வேறு. பலநேரங்களில் முழுமையாக ஒரு புத்தகம் நமக்கு பிடித்திருக்காது. ஆனால் அதில் உள்ள சில நல்ல வரிகள் பத்திகளுக்காக அதை வாசித்துக் கொண்டேயிருப்போம்.

கதை கவிதை நாவல் சிறுகதை, கட்டுரை வாழ்க்கை வரலாறு, விமர்சனம் என இலக்கியத்தினை எத்தனையோ விதமாக வகைப்படுத்தி வைத்திருக்கிறோம். வாசகன் ஒவ்வொன்றையும் வாசிக்க ஒருவிதமான பயிற்சியும் நுட்பமும் வைத்திருக்கிறான். அதற்கென அவன் எந்த விசேசப் பயிற்சியும் எடுத்துக் கொண்டதில்லை

கவிதையில் அரூபமாக உள்ள ஒன்றை எளிதாகப் புரிந்து கொள்ளும் வாசகன் நாவலில் அரூபமான, மாயமான சம்பவங்களை ஒத்துக் கொள்ள மறுக்கிறான். தர்க்கம் செய்கிறான். அதுதான் வாசகனின் இயல்பு. ஆனால் வாழ்க்கை வரலாற்றை வாசிக்கையில் அது நாவல் போல உணர்வதும், நாவலை வாசிக்கையில் அது உண்மையான மனிதர்களின் வாழ்வு போல நம்பப்படுவதுமே இலக்கிய வாசிப்பின் நுட்பம்.

இன்று வாசகன் ஒரு ரசிகன் என்பதைத் தாண்டி எழுத்தாளனுக்கு இணையாக வைத்து பேசப்படுகிறான். தான் எப்படி ஒன்றைப் புரிந்து கொண்டேன் என்பதை முன்வைப்பதே வாசிப்பின் முதன்மைச் செயல்பாடாக உள்ளது.

புத்தகத்தைப் பற்றிய ஆசிரியரின் முடிவுகள் இன்று வாசகனைக் கட்டுப்படுத்துவதில்லை. சமூகம் , உளவியல், மொழியியல், தத்துவக்கோட்பாடுகள், தர்க்கம் மற்றும் விமர்சனப் பார்வைகளின் வழியே ஒரு படைப்பை ஆழ்ந்து அணுகி அதன் சமூக கலாச்சார அரசியல் தளங்களை, புரிதல்களைக் கண்டு அடைவதும் விமர்சிப்பதும் வாசகனின் முன்உள்ள சவாலாக உள்ளன.

ஆகவே வாசகன் ஒரு புத்தகத்தின் வழியே எழுத்தாளனின் மன அமைப்பை , அவனது பலம் பலவீனங்களை ஆராய்கிறான். அதற்கான உளவியல் காரணங்களைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறான். மொழியை எழுத்தாளன் பயன்படுத்தும் முறையும் அதன் அர்த்த தளங்களையும் கவனமாகப் பரிசீலனை செய்கிறான். விஞ்ஞானப் பரிசோதனைக் கூடங்களில் மேற்கொள்ளப்படும் ஆய்வு போலத் துல்லியமான தர்க்க ரீதியான ஆய்வுப்பொருளாக புத்தகங்களை வாசிக்கும் தீவிர வாசிப்பு நிலை இன்று சாத்தியமாகியிருக்கிறது.

அதற்காக ரசனை சார்ந்த வாசிப்பு கைவிடப் படவில்லை. பெருவாரியான வாசகர்கள் இன்றும் தங்களது புத்தக வாசித்தலுக்கான அடிப்படையாக ரசனையைக் கொண்டிருக்கிறார்கள். அந்த ரசனையின் தரமும், நுட்பமும் முன்பை விட இன்று வளர்ந்திருக்கிறது. எழுத்தாளரை ஒரு ரட்சகனைப் போல காண்பதைத் தாண்டி, எழுத்தாளன் மனசாட்சியைப் போல செயல்படுகிறான் என்றே வாசகர்கள் உணர்கிறார்கள்.

புத்தகத்தைப் புரிந்து கொள்ள வாசிப்பின் வழியாக நாம் பெற்ற அனுபவத்தை எழுதிப்பார்ப்பதே சிறந்தது என்கிறார் வர்ஜீனியா. காரணம் அப்போதுதான் சொற்கள் எவ்வளவு வலிமையானவை. எந்தச் சொல்லை எப்படிப் பயன்படுத்துகிறோம், அதில் எவ்வளவு சிரமம் சவால் உள்ளது என்ற எழுத்தின் நுட்பம் பிடிபடும் என்கிறார். ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத பொருட்கள் நிகழ்வுகள் எப்படி வாக்கியங்களின் வழியே ஒன்றிணைக்கப்படுகின்றன என்று நுணுகி வியந்து புரிந்து கொள்ள முயற்சிப்பவனே புத்தகத்தினைக் கொண்டாடுகிறான்

வாசகன் என்பதே ஒரு கற்பனை தான். ஒரு வாசகன் என்பவன் எப்படியிருப்பான் என்று இதுவரை தீர்மானமாக ஒரு சித்திரத்தை முடிவு செய்யவே முடியாது. ஆகவே உலகின் வியப்பூட்டும் கற்பனைக் கதாபாத்திரம் தான் வாசகன். அந்த முகமூடியை யாரும் அணிந்து கொண்டுவிட முடியும். அது யாவருக்கும் பொருந்தக்கூடியது என்கிறார் ஜோர்ஜ் லூயி போர்ஹே,

ஏய் வாசகா உனக்குத் தான் எத்தனை எழுத்தாளர்கள் என்று நகுலனின் ஒரு கவிதை வரிசொல்கிறது. அது தான் உண்மை.

வர்ஜீனியாவுல்பின் கட்டுரையைப் போல நானும் இதே கேள்விக்கான சில பதில்களை வைத்திருக்கிறேன். என்வரையில் ஒவ்வொரு புத்தகமும் மானுட வாழ்வின் ஏதோ சில புதிர்களை அவிழ்க்க முயற்சிக்கிறது. மனித இருப்பு குறித்த சில கவலைகள், ஆதங்கங்கள், வருத்தங்கள், சந்தோஷங்களை ஆவணப்படுத்துகிறது.

இயற்கை, பிறப்பு, இறப்பு, பசி, காமம், மூப்பு , நோய்மை, அதிகாரம், வெற்றி தோல்வி, விதிவசம் என்று எல்லா நூற்றாண்டிலும் மனிதன் சந்தித்த ஆதாரமான கேள்விகளுக்கான விடை தேட முயற்சிக்கிறது. மனித வாழ்வின் மீது நிஜமான அக்கறை கொள்கிறது. அதை மேம்படுத்தவும், சகமனிதனைப் புரிந்து கொள்ளவும் உதவி செய்கிறது.

அன்றாட வாழ்க்கை சார்ந்து உருவாகும் வலிகள், தோல்வியுணர்வு, வெறுப்பு, ஏமாற்றம், வெறுமை, இயலாமை, நிர்கதி யாவும் கடந்து மனிதனை வாழ்வின் மீது பற்றுக் கொள்ள வைக்கிறது. மானுட நினைவுகள் காற்றில் கரைந்து போய்விடாமல் காப்பாற்றி வைக்கிறது. ஆகவே புத்தகங்கள் வாழ்வின் சின்னஞ் சிறிய ஆவணங்கள். அதன்வழியே மனிதர்கள் கடந்தகாலத்தை அறிந்து கொள்ள முடியும். நிகழ்காலத்தை சந்திக்கத் துணை கொள்ளலாம். எதிர்காலத்தை திட்டமிட முடியும். நல்ல புத்தகங்கள் இதன் சாயல்களைக் கட்டாயம் கொண்டிருக்கின்றன.

எஸ்.ராமகிருஷ்ணன்: ‘கோடுகள் இல்லாத வரை படம்’ தொடர்

May 15, 2012 1 comment
  • வாஸ்கோட காமா,
  • மார்க்கோ போலோ,
  • இபின் பதூதா,- ibn battuta
  • அல்பெரூனி – Alberuni

– உள்ளிட்ட பயணிகளின் திரைகடலோடிய அநுபவங்களைப் பற்றிய சுவையான தொடர் இது.

Òஆதியில் கோவா பழங்குடியினரின் வாழ்விடமாக இருந்தது. அவர்களைக் கொன்று அந்த நிலப்பகுதியைக் கிறிஸ்துவ ராஜ்யமாக்கியதில் முதற்காரணகர்த்தா வாஸ்கோடகாமா. காமாவின் கடற்பயணம் எத்தனை சாகசங்களும், விசித்திரங்களும் நிறைந்ததோ அத்தனை அளவு வன்முறையும், வெறிச் செயலும், கட்டுப்பாடற்ற அராஜகமும் கொண்டது. வாஸ்கோட காமா போன்ற கடலோடிகள் தான் நாடு பிடிக்கும் ஆசைகளுக்கு அடிகோலிட்டவர்கள். அவர்களைக் கடல்வழி கண்டு பிடித்தவர்கள் என்று கொண்டாட முடியாது. மாறாக, ராஜ விசுவாசம் என்ற பெயரில் பல தேசங்களைக் கொள்ளையடித்து உயிர்க்கொலை செய்தவர்கள் என்றுதான் கொள்ள வேண்டும். . .’

வெறும் நிகழ்ச்சித் தொகுப்பாக இல்லாமல் இத்தகைய சமூக – அரசியல் சார்ந்த விமரிசனப் பார்வையுடன் எழுதியிருக்கிறார் எஸ்ரா.

S Ramakrishnan on State of Feminism in Tamils: பெண்களைக் குறித்து எஸ்ரா

May 15, 2012 Leave a comment

பெண்ணை உடைமைப் பொருளாக மாற்றிய நிலப்பிரபுத்துவப் பண்பாடுதான் அரசியலிலும் ஆளுமை செலுத்துகிறது. நிலத்தை உடைமையாக்கி, உரிமைகொள்கிற ஆக்கிரமப்பு மன நிலைதான் பெண்ணை ஆக்கிரமிப்பதிலும் செயல்படுகிறது. பெணைத் தனது உடைமையாக ஆண் கருதுகிற மன நிலையாக, அவளது நிலையைத் தீர்மானிப்பது தனது அதிகாரம் என்ற மனநிலையாகச் செயல்படுகிறது.

பெண்ணை வெற்றி கொள்வதே ஒரு முக்கியச் செயல்பாடாகிறது. ஒரு ஆண், தன் வாழ்நாள் முழுக்க எந்த அளவுக்குப் பெண்ணைக் கட்டுப்படுத்தி வைக்கிறானோ அந்த அளவுக்கு அவன் வெற்றி பெற்றவனாகப் பார்க்கப்படுகிறான். காதலி, மனைவி, தாய், மகள், சகோதரி என அனைத்து உறவுகளிலும் இந்த ஆளுமையும் ஆக்கிரமிப்பும் இருக்கின்றன.

அண்மையில் பழநி பேருந்து நிலையத்தில் பார்த்த காட்சி நினைவுக்கு வருகிறது. நள்ளிரவு நேரம். தங்களுடைய பேருந்துக்காகக் காத்திருந்த ஒரு குடும்பத்தில், இரண்டு இளம் பெண்கள் ஒருவர் மேல் ஒருவர் சாய்ந்து தூங்க முயல்கிறார்கள். அவர்களைத் தூங்கவிடாமல் தடுக்கிறான் தந்தை. பெண் பிள்ளைகள் பொது இடத்தில் தூங்கக் கூடாது என்று சொல்கிறான். அவனுடைய வயதான மனைவி தரையிலேயே படுத்துத் தூங்கிக்கொண்டிருந்ததை அவன் தடுக்கவில்லை. அவனுடைய மகன் தூங்கிக்கொண்டிருந்தான்,  அவனையும் தடுக்கவில்லை. ஆனால் வயதுக்கு வந்த மகள்கள் தூங்க அனுமதிக்கவில்லை. அவன் அசந்த நேரத்தில்தான் அவர்களும் சற்று கண்ணயர்ந்தார்கள். அவனுக்கு அவர்கள் மீது அக்கறையில்லை என்று சொல்ல முடியாது. அதே வேளையில், பெண்ணைக் கட்டுப்படுத்துவதன் மூலம் பாதுகாப்பாக வைக்கிற சமூக மனநிலையோடும் அவன் இருந்தான்.

பெண்கள் மீற முயல்கிறபோதெல்லாம் அவர்கள் சொல்ல முனைவது ஒன்றுதான். ‘நான் உன் உடைமைப்பொருள் அல்ல. நாம் இணைந்து வாழ்கிறோம். உனக்குள்ள உரிமைகள் எனக்கும் இருக்கிறது,’ என்பதுதான் மீறுகிற பெண் சொல்கிற செய்தி. ஆணோ, தன் உடைமைப் பொருளாகக் கருதுவதால், பெண்ணின் இடுப்பில் ஒரு கயிறைக்கட்டி, அந்தக் கயிறு எவ்வளவு நீளமோ அந்த நீளத்திற்கு மட்டும் சுதந்திரமாகச் செல்ல அனுமதிக்கிறான். குடும்பத்தின் நிலையைப் பொறுத்து, அந்தக் கயிறு அமெரிக்கா வரையில் கூட நீளும்!

அந்தக் கயிறை அறுக்கிற செயலில், அறுப்பது பற்றிப் பேசுவதில் பெண்கள் இப்போதுதான் இறங்கியிருக்கிறார்கள். பெண் தனியாகக் கூட வாழ முடியும் என்று காட்ட முயல்கிறார்கள். சமுதாயத்தின் சீரழிவுக் கட்டத்தில் இது நிகழ்வதால், பெண் இப்படி உரிமை பேசுவதே கூட ஒரு சீரழிவாகப் பார்க்கப்படுகிறது. கல்வியின் மூலம் சுதந்திரம் கிடைக்கும் என்று பெண் எதிர்பார்த்தாள். நேரெதிராக, இரட்டைச் சுமைதான் பெண்ணின் மீது ஏற்றப்பட்டது. நீ வேலைக்கும் போ, வீட்டு வேலையையும் பார், பண்பாட்டுப் பெருமையையும் காப்பாற்று என்று மேலும் நுட்பமான கயிறுதான் கட்டப்பட்டிருக்கிறது.

பண்பாட்டுப் பெருமை பேசுகிறபோது அதை பக்தியாக்குகிற, புராதனமாக்குகிற முயற்சிதான் நடக்கிறது. அது புனிதமானது, அதிலே கைவைக்கவே கூடாது என்று சொல்கிறார்கள். ஆனால், இப்படிப் பண்பாட்டுப் பெருமை பேசுகிறவர்களில் பெரும்பாலானவர்கள் அதைக் கடைப்பிடிக்காதவர்கள்தான். பெண்கள் பாரம்பரிய ஆடைகளை அணிய வேண்டும் என்பார்கள், அவர்கள் வீட்டுப் பெண்கள் தங்களுக்கு வசதியாக பேன்ட், சட்டை, சுடிதார் என்று தேர்ந்தெடுக்கிறபோது, அதை இவர்கள் தடுப்பதில்லை. சொந்த வாழ்க்கையில் மீறல்களை அனுமதித்துக்கொண்டே, பொது வாழ்க்கையில் பெருமை பேசுகிற இரட்டை நிலையைத்தான் பலரிடம் காண முடிகிறது. மேற்கத்திய நாடுகளில் ஒரு பண்பாட்டை வலியுறுத்துகிறார்கள் என்றால் அதை ஓரளவுக்குக் கைக்கொள்கிறார்கள். இந்தியச் சமூகத்தில்தான் இந்த இரட்டை நிலை.

நாம் விவாதிக்கிற பல கூறுகள் விக்டோரியன் மொராலிட்டி (விக்டோரியா அறம் – ஆங்கிலேய அறநெறி) சார்ந்தவை. அதன் தாக்கத்தில், இங்கே ஏற்கெனவே இருந்த சில முற்போக்கான கூறுகளை இழந்திருக்கிறோம். உதாரணமாக, நியூடிட்டி (நிர்வாணம்) தொடர்பாக இங்கே நிலவியிருந்த கோட்பாடே வேறு. ஆனால், இன்று விக்டோரியன் மொராலிட்டி அடிப்படையிலேயே பெண்ணின் உடல் சார்ந்த ஆபாசம், வக்கிரம் உள்ளிட்ட பார்வைகள் ஊட்டப்பட்டிருக்கின்றன. விதவைத் திருமணம் இங்கே இல்லாமலிருந்தது போன்ற சில பலவீனங்களைப் பயன்படுத்திக்கொண்டு வந்த ஆங்கிலேயர்கள், அவர்களுடைய பலவீனங்களை இங்கே திணித்துவிட்டார்கள்.

பெண்ணுக்குச் சுதந்திரமும் அதிகாரமும் இருப்பது போன்ற மனநிலையை ஏற்படுத்துவதில் மதம் ஒரு முக்கியப்பங்காற்றி வந்திருக்கிது. கதைகளாக, சடங்குகளாக பெண் தெய்வங்களாக பெண்ணின் உடல் சார்ந்த போதனைகளாக, பெண்ணுக்கு ஒரு பண்பாட்டு வெளி வழங்கப்பட்டிருக்கிறது என்ற மனநிலை கட்டப்பட்டிருக்கிறது. எல்லா மதங்களும் இதைச் செய்திருக்கின்றன. இந்து மதத்தில் உள்ள நிலைமைகள் நமக்குத் தெரியும். கிறிஸ்துவத்தில் பெண் புனிதத்துறவியாகிவிட முடிவதில்லை. இஸ்லாமியத்தில் பெண்ணுக்கு முகத்திரையோடு மேலங்கி போடப்பட்டுவிட்டது. பௌத்தத்தில் பெண் துறவிகளுக்குக் கட்டுப்பாடுகள் உள்ளன. சமணத்தில், கடுமையாகத் துறவறம் மேற்கொள்கிற பெண் அடுத்தபிறவியில் ஆணாகப் பிறக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஆன்மீக விடுதலைக்காகத்தான் மதம் என்கிறார்கள். அப்படியானால் அதில் பெண் வெளியே நிறுத்தப்பட்டது எப்படி? ஆகவே பெண் விடுதலை, மதத்திற்கு எதிரான போராட்டத்தோடும் இணைகிறது.

Thanks:

பண்பாடு- புரிதலை நோக்கி…ஒரு கலந்துரையாடல்

செகாவின் மீது பனிபெய்கிறது: எஸ்.ஏ.பி.

May 15, 2012 1 comment

உலக இலக்கியவாதிகளை அறிமுகப்படுத்தும் நூல்: புதிய புத்தகம் பேசுது  டிசம்பர்10  

 

இலக்கியங்கள் வாசிப்பதும், அவற்றைப் பற்றிப் பேசுவதும், எழுதுவதும் ஒரு அற்புதக்கலை. அதுவும் கூட மிகச்சிறந்த படைப்பாளிகளுக்கே அது சாத்தியமும் ஆகும். தமிழில் ஒரு காலத்தில் க.நா.சு. உலக இலக்கியங் களைப்பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தார். அவரது எழுத்துக்கள் கூட அவர்குறிப்பிடும் நாவல்கள், நோபல் பரிசு பெற்ற நாவல்களைப்படிக்கத் தூண்டுவதாக அமைந்ததில்லை. நாவலின் கதையம்சங்களை மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.

க.நா.சு. வுக்கு அடுத்து ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்பு எஸ்.ராமகிருஷ்ணன் அந்தக்களத்தில் இறங்கி வெற்றி நடைபோட்டு வருகிறார். உலக இலக்கிய ஆளுமைகள் பற்றி அவர் எழுதிய செகாவின் மீது பனிபெய்கிறது என்ற தொகுப்பு அண்மையில் உயிர்மை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. நூலில் குறிப்பிடப்பட்டுள்ள படைப்புகளை எப்படியும் நாம் படித்தே தீரவேண்டும் என்ற உந்துதலை எஸ்ராவின் இந்த நூல் நமக்கு வன்மையாக உணர்த்துகிறது. அதைவிட அந்தப் படைப்பாளியின் வாழ்வுபற்றியும் அவரது வாழ்வின் முக்கிய சம்பவங்களையும் அவை அவரது படைப்பில் நிலைத்திருப்பதையும் ஒரு சேரத்தருவதுதான் இந்த நூலின் புதுமையாகும்.

ஒரு படைப்பை அறிமுகம் செய்கிறபோது அந்தப்படைப்பாளியின் வாழ்வுபற்றிய முக்கிய அம்சங்களை எடுத்துக்கூறுவதில்தான் இந்நூலின் மேன்மையான வெற்றி அடங்கியுள்ளது.

லியோ டால்ஸ்டாய்,
தாஸ்தவெஸ்கி,
மாக்சிம் கார்க்கி,
வான்கா,
கோகல்,
பாசுஅலியேவா,
புஷ்கின்,
வர்ஜினியா உல்ப்,
பெசோ,
எர்னெஸ்ட் ஹெமிங்வே,
ராபர்ட்ருவார்க்,
மாப்பசான்,
ஹொமுசாய்,
ஜார்ஜ் ஆர்வெல்,
அன்டன் செகாவ்

போன்ற மாபெரும் இலக்கியகர்த்தாக்களையும் அவர்களது படைப்புலகையும் படித்து முடிக்கிறபோது நம்மை உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்துகிறது. இந்த நூல் அறிமுகம் படைப்பாளிகளின் துயரமான வாழ்க்கை நமது நெஞ்சை உலுக்குகிறது.

மகாத்மா காந்தியால் ‘மகான்’ என்று அழைக்கப்பட்ட டால்ஸ்டாயின் இறுதிநாள் பற்றிய விவரணையிலிருந்து நூல் துவங்குகிறது. போரும் அமைதியும், அன்னாகரீனினா, புத்துயிர்ப்பு போன்ற பிரம்மாண்ட இலக்கியங்களைப் படைத்த டால்ஸ்டாயின் இறுதிநாள் அஸ்தபோவ் என்ற ரயில்நிலைய ஓய்வறையில் முடிகிறது. மரணநேரத்தில் கூட தனக்காக பதிமூன்று பிள்ளைகளைப் பெற்று பல குழந்தைகளைப் பறி கொடுத்த மனைவியைக்கூடப் பார்க்காத சோகம் நம்மை வாட்டுகிறது. ஆனால் டால்ஸ்டாய் தனது மகள்களின் மீது பாசமழை பொழிவது வியப்பளிக்கிறது.

எழுத்தாளரின் வாழ்வு பற்றியும், அவரது படைப்புச் சூழல் மற்றும் கதா பாத்திரங்கள் குறித்தும் வாசகருக்கு நேர்காணல் போலக் காட்டுவதும், விளக்கிச் சொல்வதும் எஸ்ராவின் தனிச்சிறப்பான உத்தியாகும், இது புத்தகத்தை நாம் கீழே வைத்துவிடாமல் தடுக்கிறது. டால்ஸ்டாய் தனது கடைசிநாளில் தனது நூல்களின் பதிப்புரிமையை நாட்டுக்கே சொந்தமாக்கிட வேண்டும்; தனது நிலங்கள் அனைத்தையும் அவற்றை உழுது கொண்டிருக்கும் விவசாயிகளுக்கே பிரித்து தந்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். தனது பெயரால் ஒரு பண்ணை அமைத்து அங்கே இளைஞர்களை டால்ஸ்டாய் வாசிகளாக மாற்றிக் கொண்டிருந்தார். அவர் தனது குடும்பத்தைவிட ரஷ்ய சமூகமே முதன்மையானது என்று கருதினார். வியப்பூட்டும் இந்தச் செய்திகள் டால்ஸ்டாய் மீது நமக்கு மிகப்பெரிய மரியாதையை ஏற்படுத்துகின்றன.

கடைசிவரை தனது நோட்டில் குறிப்பு எழுதியவாறு டால்ஸ்டாய் பேசிக்கொண்டிருக்கிறார். அவர் எழுத முடியாமல் போனதும் தன் மகளை எழுதச் சொல்கிறார். அவரைத் தனது வீட்டுக்கு வந்து தங்கும்படி கடிதம் எழுதிய ஒரு விவசாயிக்கு தனது இயலாமை குறித்து எழுதி நன்றி தெரிவிக்கிறார். இதுவே அவரது கடைசிக் கடிதமாகும்.

9.11.1910ல் டால்ஸ்டாய் இறந்த தினத்தில் ரஷ்யா முழுவதும் துக்கம் அனுஷ்டிக்கப்பட்டது. நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. மாணவர்கள் தங்கள் வகுப்புகளை விட்டுவெளியேறி அஞ்சலிக் கூட்டங்கள் நடத்தினர். அவரது இறுதிச்சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். டால்ஸ்டாய் என்ற இலக்கியவாதி தனி மனிதன் இல்லை. அவர் ரஷ்யாவின் ஆன்மா என்று கொண்டாடப்பட்டார். டால்ஸ்டாயைப் பற்றி முழுமையாக விவரங்களை எஸ்.ரா. தெரிவித்துள்ளார். எழுத்தைவிட வாழ்க்கை அதிகப் புனைவும், திருப்பங் களும், புதிர்கள் அடங்கியதாகவும் இருக்கிறது. இதை அந்த மகானின் வாழ்க்கை நமக்கு சுற்றிக் காட்டுகிறது.

அண்டன் செகாவ் பிறந்து 150வது ஆண்டு இது. சிறுகதை உலகின் மிகப்பெரும் மேதையான செகாவின் வாழ்வும் படைப்புகளும் நெஞ்சை உலுக்குவதாக உள்ளது. சிறுவயதில் சாலையில் கைவிடப்பட்ட குதிரை ஒன்று பனியில் நனைந்தபடி நிற்பதை பார்த்து தானும் பனியில் நிற்கிறார். நீண்ட இரவில் பனி கொட்டி அவரை நடுகங்கச் செய்கிறது. செகாவ் ஒரு நோயாளி. ஆனாலும் அவர் தன்னை வாட்டும் குளிரில் நிற்கிறார். குதிரை இவரைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. மனித வேதனைகளில் முக்கியமானது கைவிடப்படுதலும் நிராகரிப்புமே முக்கியமானது என்பதைத் தனது கதைகளில் உணர்த்துகிறார். செகாவின் மீது பனிபெய்கிறது என்ற கட்டுரை அவரோடும் அந்தக் குதிரையோடும் கொட்டும் பனியில் நம்மையும் நிற்கவைத்துவிடுகிறது.

இரண்டு ஆசான்கள் என்ற கட்டுரையில் அண்டன் செகாவ், மாபசான் ஆகிய இரண்டு இலக்கியச் சிகரங்களை எஸ்ரா ஒப்பியல் ஆய்வுசெய்கிறார். இந்த இருவரையும் ஆழ்ந்து கற்றுத் தேர்ந்தவர்கள் எந்தக் கதையையும் சுலபமாக எழுதிவிடமுடியும் என்று எழுத்தாளர்களுக்கு எடுத்துக்கூறுகிறார். இருவருமே நாற்பது வயதுகளில் இறந்து போனவர்கள். இருவருமே தங்கள் நூற்றுக்கணக்கான சிறுகதைகளைப் பதிமூன்று தொகுதிகளாக வெளியிட்டிருக்கிறரர்கள். இருவருமே வாழ்வின் பெரும் பகுதியைப் பயணங்களிலும் எழுதுவதிலும் கழித்திருக்கிறார்கள். சொந்த வாழ்விலும் இருவரும் இளமையில் துயரமான அவல வாழ்வில் உழன்றிருக்கிறார்கள்.

செகாவ், மாபசான் ஆகிய இருவரின் கதைகள் பெண்களின் அகவுலகைப் பெரிதும் விவரிப்பவை. மனித அவலங் களைப் பிரதிபலிப்பவை. மனித அவலங்களைப் பிரதிபலிப்பவை. ஒதுக்கப்பட்ட மனிதர்கள் மீது இருவரும் அக்கறையுடன் எழுதியவர்கள். செகாவ், 40 வயதிலும் மாபசான் நாற்பத்திரண்டு வயதிலும் மரணமடைந்தனர். அதிலும் மாபசான் மோசமான முறையில் காலமானார். என்ற செய்தி இதுவரை அறியாத செய்தியாகும். ஆனால் இந்த இருவரும் சூறாவளியைப்போல் எழுதிக் குவித்தார்கள்.

ரஷ்ய இலக்கிய மகுடங்களில் ஒன்றாய் திகழ்ந்தவர் தாஸ்தவெஸ்கி. அவரது இளமைப்பருவம் ஆறாத மனத்துயரங்களோடு கடந்தது. அவரது தந்தை மிகயில் அந்திரேவிச் பெரும் குடிகாரர். தன் மனைவியைச் சந்தேகித்துச் சித்ரவதை செய்தே சீக்கிரம் சாகடித்த குடிகாரர். குடிபோதையில் தனது வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகளைத் தரக்குறைவாகத் திட்டியதால் அவர்கள் பச்சைச் சாராயத்தை வற்புறுத்தி வாயில் ஊற்றினர். பின்பு அவரது வாயையும் மூக்கையும் இறுக மூடியதால் மூச்சுமுட்டி இறந்தார். இந்தக் கொலைக்கு அந்த விவசாயிகள் இருவரின் மகள்களை இவர் சீரழித்ததாய் கூறப்பட்டது. தந்தையின் கொலைச் செய்தியைக் கேட்டதும் தாஸ்தவெஸ்கி உடல்நடுநடுங்கக் கீழே விழுந்தார். கையைக் காலை உதைத்தார். டாக்டர் வந்து பார்த்துவிட்டு இது காக்காய் வலிப்பு என்றார். அவருக்கு அதிர்ச்சியில் முதல் தடவை காக்காய் வலிப்பு ஏற்பட்டது அப்போதுதான். அது அவரது வாழ்வின் கடைசிவரை தொடர்ந்தது.

தாஸ்தவெஸ்கியின் முதல் படைப்பு “பாவப்பட்ட மக்கள்” பெரும் பாராட்டைப் பெற்றது. அது ரஷ்ய இலக்கியத்தின் முதல் சமூக நாவல் என்று கொண்டாடப் பட்டது. கோகலை மிஞ்சிய படைப்பாளி என்று புகழ்ந்தனர். இது தாஸ்தவெஸ்கிக்கு எழுதுவதில் பெரும் உற்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுத்தது. அவரது படைப்புகள் தனிரகமானவை. அவர் நாலரை ஆண்டுகள் ஜார் ஆட்சியாளர்களால் சைபீரியச்சிறையில் கொடுமையை அனுபவித்தனர். அவரது வாழ்வின் எல்லா அம்சங்களையும் தனது படைப்புகளின் கதாபாத்திரங்களில் உலவவிட்டவர். இந்நூலில் எஸ்ரா அவரது வெண்ணிற இரவுகள் நாவலைப்பற்றி திறம்பட்ட ஆய்வினை முன்வைத்துள்ளார்.

மாக்சிம் கார்க்கி தன் வாழ்க்கைப் பாதையில் சந்தித்த மனிதர்களைப் புனைவுடன் தனது கதைகளில் நடமாட விடுகிறார். அவரது வகை வகையான கதைகளிலிருந்து வகைவகையான கதைகள் பிறந்துள்ளன. கார்க்கியின் சிறுகதைகளில் சிரஞ்சீவித்தன்மை கொண்டதாக இன்றும் திகழ்வது இசர்கில் கிழவியின் கதைதான். இன்றைய மாந்திரீக எதார்த்தப் படைப்புகளுக்கெல்லாம் முன்னோடிப்படைப்பு அது. கார்க்கியின் கதைகளில் அடைபடாத தான்தோன்றித் தனமான நாயகர்கள் டாங்கோ, லாரா, லோய்கோ சோபார் கதையில் அவர்களைப் படிக்கும் போது வாசிப்பது போல இருக்காது. நம்ம ஊரில் பார்ப்பது போல இருக்கும்.இசர்கில் கிழவியின் இளம் பருவத்துக் காதல் அனுபவங்கள் கார்க்கியின் இளம் பருவத்தின் சாட்சி போலவே இருக்கிறது என்கிறார் எஸ்ரா.

தஜிகிஸ்தான் பெண் எழுத்தாளர் பாசுஅலியேவா எழுதிய மண்கட்டியைக் காற்றடித்துப் போகாது என்ற சிறந்த நாவலை நூலில் அறிமுகம் செய்துள்ளார் ஆசிரியர்.

இந்த நாவலை தோழர் பூ.சோமசுந்தரம் மூலத்தின் சுவை குன்றாமல் கவிதை நடையில் தமிழாக்கம் செய்துள்ளார். சுவாரியப் பழமொழிகளும், மலைகளும் பனித்துளிகளும், கிழவர் உமர்தாதாவும் நம்மை அந்த மண்ணுக்கே இட்டுச் செல்லும்.

புஷ்கினின் சூதாட்ட ராணி கதையும் ஜப்பானிய எழுத்தாளர் ஹரூகி முரகாசையின் பிறந்தநாள் கதையும் அருமையாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

வான்கோவின் தம்பி என்ற கட்டுரையை ஓவியர்களும், வீடில்லாத புத்தகங்களை எழுத்தாளர்களும் அவசியம் படிக்க வேண்டும்.

வர்ஜினியா உல்ப் ஒரு பென்சில் வாங்குவதற்கு கடைவீதிகளையும் காட்சிகளையும் பார்த்து எழுதியிருப்பது அற்புதமான ரசனை அனுபவத்தைத் தருகிறது.

கடலும் கிழவனும் நாவலை எழுதி நோபல் பரிசு பெற்றவர் எர்னஸ்ட் ஹெமிங்வே அவரது நெருங்கிய சகாவான அமெரிக்க எழுத்தாளர் ராபர்ட் ருவாக் எழுதிய கிழவனும் சிறுவனும் என்ற நாவல் பற்றிய கட்டுரை மிகச்சிறந்த அனுபவங்களைத் தருகிறது.

ஹெமிங்வே எழுத்தாளராகப் பரிணமிப்பதற்கு முன் அவர் கற்ற பாடங்களை வாசித்தால் அனைவருக்கும் பயன்படும். அதேபோல் இடதுசாரிக் கண்ணோட்டமுடைய பெர்கரின் ஓவியங்கள் பற்றிய கலை விமர்சனம் பற்றிய கட்டுரையும் பயனுள்ளதாகும். படைப்புலகம் பற்றிப் பரந்து விரிந்த ஞானம் உள்ள ஒருவரால்தான் இதுபோன்ற ஒரு நூலை எழுத முடியும். இதைப்படிக்காமல் அதை உணர முடியாது.

எஸ்.ராவின் இந்த அருமையான நூலை உயிர்மை பதிப்பகம் சிறந்த முறையில் வெளியிட்டுள்ளது.

கால்களால் சிந்திக்கிறேன் – எஸ்.ராமகிருஷ்ணன்

May 15, 2012 1 comment

மாற்று மருத்துவம் – ஏப்ரல்10

கனடாவில் வாழும் கவிஞர் மெலிஞ்சி முத்தனுடன் ஒரு நாள் பேசிக் கொண்டிருந்த போது அவர் தினமும் பத்து மைல் தூரமாவது நடந்து போவதாகவும் அப்படி நடக்கும் போதெல்லாம் எதையோ யோசித்தபடியே நடப்பது தனது இயல்பு என்றார். என்ன யோசிப்பீர்கள் என்று கேட்டதும் அவர் சிரித்தபடியே உண்மையில் நான் கால்களால் சிந்தித்தபடியே நடக்கிறேன் என்றார். எனக்கு அவர் சொன்ன கால்களால் சிந்திக்கிறேன் என்ற பிரயோகம் பிடித்திருந்தது.

புகழ்பெற்ற இயற்கையியலாளர் தோரூ நடத்தல் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார்.

உடல் ஒரு அதிசயம். அது கால்களின் மீது கட்டப்பட்டுள்ள கோட்டை என்கிறார் தோரூ.

நடக்கும் வழியை கண்டு கொள்வதும் அன்றாடம் நடப்பதன் வழியே காற்றையும் மரங்களையும் பறவைகளின் ஒலியையும் வீழ்த்து கிடக்கும் இலைகளையும் உதிர்ந்து கிடக்கும் பறவையின் சிறகுகளையும் கண்டு கொள்ளலாம். நடத்தல் ஒரு கண்டுபிடிப்பு. எதை எப்போது கண்டுபிடிப்போம் என்று தெரியாது என்கிறார் தோரூ.

ஒட்டகம் மட்டுமே நடக்கும்போது வாயசைத்துக் கொண்டேயிருக்கும். அதுபோல நமது மனது எதையோ அசைபோட்டபடியே தானிருக்கிறது என்கிறார் தோரூ. ஒரு முறை வோர்ட்ஸ்வொர்த் வீட்டிற்கு சென்ற ஒரு வாசகர், கவிஞர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று அவரது பணிப் பெண்ணிடம் கேட்டார். அந்த பெண் கவிஞர் வீட்டு நூலகத்தினுள் உட்கார்ந்திருக்கிறார். ஆனால் ஜன்னலுக்கு வெளியில் உள்ள உலகை படித்துக் கொண்டிருக்கிறார் என்றாராம். நடைப்பயிற்சி அப்படியான ஒரு அனுபவத்தையே தரக்கூடியது. கண்களால் உலகை வாசிப்பதன் பெயரே நடைபயிற்சி.

நடத்தலுக்கு ஏன் எப்போதுமே இயற்கை யான சூழல் தேவைப்படுகிறது. மரங்கள் அடர்ந்த பாதையில் அல்லது தனிமை நிரம்பிய சாலை களில் மட்டுமே ஏன் நடந்து போகவேண்டும். நடப்பதற்கு பிரதான சாலையோ அல்லது வணிக மையங்களையோ ஏன் தேர்வு செய்யக்கூடாது என்ற கேள்விக்கு தோரூ சொல்லும் பதில் அற்புதமானது.

நாம் நடக்கும் போது நாம் தனியாகவும் நம் மனது தனியாகவும் இயங்க கூடாது. வணிகமையம் ஒன்றினுள் நடந்து சென்றால் அது உங்கள் ஆசைகள், செய்ய வேண்டிய வேலைகள், அடுத்த திட்டங்கள் என்று தூண்டிவிட்டு உங்கள் நடையை விட வேகமாக உங்கள் மனது அலைந்து கொண்டிருக்கும். அதே வேளையில் தனிமையான இயற்கையான சாலையில் நடக்கும்போது மனதில் தூய்மையான காற்றும் இயற்கையான காட்சிகளும் மட்டுமே நிரம்பும். அப்போது தான் கால்களும் மனதும் ஒன்றாக நடக்கும். அது தான் நடத்தலின் ஆனந்தம்.

நடை பயிற்சி நம்மை பயத்திலிருந்து வெளியேற்றுகிறது. உலகம் மீது நாம் காரணமின்றி கொண்டுள்ள அச்சத்தை அது விலக்கிவிடுகிறது. அதே நேரம் எல்லா விலங்குகளும் தன் இரைதேடி குடிநீர் தேடி அலைந்து கொண்டுதானிருக்கின்றன.  தானும் அப்படியான இயற்கையின் ஒரு பகுதியே என்று மனிதனை உணர வைக்கிறது.

புதிய பாதைகள் விட பழைய பாதைகளே நடப்பதற்கு பிடித்தமானதாக இருக்கின்றது. புதிய பாதைகள் பரபரப்பான இயக்கத்துடன் ஓடுகின்றன. பழைய பாதைகளோ கைவிடப்பட்ட மனிதனை போல கண்டுகொள்ளப்படாமல் ஒதுங்கியிருக்கின்றன. அப்பாதைக்கு யாரோ நடப்பது மட்டுமே ஒரே ஆறுதல் தரக்கூடிய செயல்பாடு.

ஜே.கிருஷ்ணமூர்த்தி தினசரி பலமைல் நடக்க கூடியவர். அவருடன் ஒரு நாள் துணையாக நடந்த பத்திரிக்கையாளர் அதை பற்றி எழுதிய குறிப்பு முக்கியமானது கிருஷ்ணமூர்த்தி சாலையில் நடக்கும் போது காற்றில் மிதந்து செல்வது போல லகுவாக நடக்கிறார். வழியில் யாராவது நிறுத்தி பேசினால் அவர் நின்று பேசுவதில்லை. கடந்து சென்றபடியே இருக்கிறார். தற்செயலாக ஏதாவது ஒரு மரத்தையோ, நாயையோ கண்டதும் அவரது முகம் மலர்ச்சி கொள்கிறது. அதை பார்த்தபடியே நின்று கொண்டிருக்கிறார்.

சில வேளைகளில் அதை பார்த்து மிக நட்புணர்வோடு புன்னகை புரிவார். சாலை களோடு அவர் மௌனமாக எதையோ பேசிக்கொண்டு வருவது போலவே அவரது பார்வையிருக்கும். நீண்ட தூரம் நடந்து திரும்பிய போதும் அவரிடம் களைப்போ, அசதியோ காணப்படாது. மாறாக மிகுந்த புத்துணர்வும் சந்தோஷமும் முகத்தில் பீறிடும் என்கிறார்.

நடத்தலின் போது எதை உணர்ந்து கொண்டீர்கள் என்றதற்கு தோரூ சொன்ன பதில் ஆரம்ப நாட்களில் மட்டுமே நான் நடந்து கொண்டிருந்தேன். அதன்பிறகு இயற்கையின் விசை என்னை நடக்க வைக்கிறது. அது என்னை ஈர்க்கிறது என்பதை உணர்ந்து கொண்டேன். உண்மையில் எனது கழுத்தில் ஒரு கயிற்றை கட்டி அழைத்து கொண்டு போவது போல இயற்கை என்னை வசீகரமாக முன் அழைத்து போது போல உணர்கிறேன்.

அது தான் முற்றான உண்மையும் கூட

http://thoreau.eserver.org/walking.html

Tamil Nathy on EssRaa Essays and Internet Articles: எஸ்.ராமகிருஷ்ணனின், ‘மலைகள் சப்தமிடுவதில்லை’

May 15, 2012 Leave a comment

Thanks: புதிய புத்தகம் பேசுது  ஜனவரி10  தமிழ்நதி

கிராமங்களில் குழந்தைகள் திருவிழாவை எதிர்பார்த்துக் காத்திருப்பதுபோல, புத்தகக் கண்காட்சிக்கான ஆர்வக்குறுகுறுப்புடன் கூடிய எதிர்பார்ப்பு இப்போதிருந்தே ஆரம்பித்துவிட்டது. முன்னாரவாரங்களான புத்தக வெளியீட்டு விழாக்கள் நடந்தேறியது. அவற்றுள் ‘மலைகள் சப்தமிடுவதில்லை’என்ற கட்டுரைகளின் தொகுப்பை முதலில் வாசிக்கத் தேர்ந்தேன்.

எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகள் பெரும்பாலும் கதைத்தன்மை கொண்டவை. புனைவும் அ புனைவும் கலந்த ஒருவித வசீகரம் அவற்றில் இருக்கும். குறிப்பிட்ட துறைசார் ஆர்வமுடையவர்களாலன்றி ஏனையோரால் உட்செல்லமுடியாதிருந்த வறண்ட தன்மைகளிலிருந்து கட்டுரை வடிவத்தை ஈரலிப்பான வெகுஜன வடிவமாக்கியதில் அவருக்கும் பங்குண்டு. ‘மலைகள் சப்தமிடுவதில்லை’யில் தொகுக்கப்பட்டிருக்கும் பெரும்பாலான கட்டுரைகள் அவருடைய இணையதள வாசகர்களுக்காக எழுதப்பட்டவை. அவற்றில் பலவற்றை இணையம்வழி ஏற்கெனவே வாசித்திருந்தபோதிலும், தொகுப்பாக வாசிக்கும்போது கோர்வையான அனுபவத்தை அடையமுடிந்தது.

எழுத்து ஆளுமைகள், அனுபவம் – அக்கறைகள் என்ற இரண்டு பகுதிகளாக ‘மலைகள் சப்தமிடுவதில்லை’ வகைபிரித்துத் தொகுக்கப்பட்டிருக்கிறது. ‘தஸ்தாயெவ்ஸ்கி யோடு அலைந்த நாட்கள்’என்ற கட்டுரை மூலமாக, அந்த மகத்தான எழுத்துக் கலைஞனின் முகத்தை ஓரளவாவது தரிசிக்கவும், அவரது எழுத்து நோக்கிய தேடலுக்கும் தூண்டுகிறார் எஸ்.ரா. ஒரு வாசிப்பானது குறிப்பிட்ட பிரதியினுள்ளேயோ அன்றேல் வெளியிலேயோ. மேலதிக வாசிப்பை நோக்கிச் செலுத்தவேண்டும் என்பதன் அடிப்படையில் எஸ்.ரா.வின் எழுத்துகள் என்னைப்போல புதிதாக எழுத்துலகில் பிரவேசிப்பவர்களுக்கு உந்துதலளிக்கக்கூடியதொன்று. 

“அவருடைய எழுத்தில் அடிக்கடி வெயில் ஊர்கிறது, அடிக்கடி அவர் வெறுமையான சாலையைப் பார்த்துக்கொண்டு ஏதேதோ நினைவுகள் பொங்க நிற்கிறார்.”என்று எனது நண்பர்களில் ஒருவர் சொன்னார். “வெயில் ஒரே இடத்தில் ஒரே பொருளில் ஊரவில்லை. மேலும், காலந்தப்பிய காலத்தினுள் வேறு வேறு சாலைகளில் அவர் நின்று கொண்டிருக்கிறார் இடங்கள் மாறுகின்றபோது வாசிப்பவனின் அனுபவமும் மாறுகிறதுதானே”என்றும் பதிலளித்தேன்.

வாசகர்களுக்கும் புதிதாக எழுத வந்திருப்பவர்களுக்கும் முன் எழுந்துநிற்கும் பூதாகரமான கேள்வி ‘வாசிப்பினை எங்கிருந்து ஆரம்பிப்பது?’என்பதுதான். நான்குவழிச் சந்திப்பொன்றில் வழியைத் தேரமுடியாத மனதின் மலைப்பினையத்தது அது. ‘எப்படி வாசிக்கிறீர்கள்?’ என்ற கட்டுரையில்,

‘கடந்த பத்தாண்டுக் காலமாக ஒவ்வொரு ஆண்டும் ஒரு துறை சார்ந்து வாசிப்பது என்று முடிவுசெய்து அதன்படி வாசித்துவருகிறேன்’

என்று எஸ்.ரா. குறிப்பிட்டிருக்கிறார். அவ்வாறான ஒழுங்கமைப்பை வாசிப்பில் செயற்படுத்தமுடியுமா என்று வியப்பாக இருந்தது.

‘எழுத நினைத்த நாவல்’என்ற கட்டுரையில், நாவல் எழுதும் நோக்கத்துடன் காடொன்றில் போய்த் தங்கிவிட்டு எழுதமுடியாமல் திரும்பிவந்ததைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். புதிய இடங்கள் பார்ப்பதற்கேயன்றி,படைப்பதற்கல்ல என்பதை அவர் சொல்லிச்செல்லும்போது இடையிடையே காடு காட்டும் முகம் அழகாக இருக்கிறது. எழுதப்படாத நாவலைப் பற்றி எழுதுவதற்குக் கூட தமிழில் ஒரு தளம் இருக்கிறது. அடையாளப்படுத்தலின் வெளிச்சம் விழாமையினால் எழுதப்பட்ட நாவல்கள்கூட பதிப்பகங்களில் தேங்கிக் கிடப்பதும் இச்சூழலில்தான் சாத்தியப்பட்டிருக்கிறது.

இக்கட்டுரைகளில் கடைசி வாக்கியங்கள் முக்கியமானவை. இனந்தெரியாத துயரத்தை, ஏக்கத்தை, பரிதவிப்பை அவை கிளறிவிட்டுவிடுகின்றன.‘மலைகள் சப்தமிடுவதில்லை’யில் இடம்பெற்றிருக்கும் ‘பதிலற்ற மின்னஞ்சல்கள்’என்றொரு கட்டுரையை ஈழப்போர் அன்றேல் ஈழத்துக்கான போர் ‘முடிந்த’பிற்பாடு எழுதியிருக்கிறார். அதில் கீழ்க்கண்டவாறு குமுறியிருக்கிறார். 

“ஆயிரமாயிரம் மக்கள் கொட்டடிகளில் நிராதரவாக அடைக்கப்பட்டிருக்கிறார்கள். வதைமுகாம் போல அகதிமுகாம்கள் உள்ளன என்ற கண்கூடான உண்மைகள் வெளிவந்தபிறகும் அதைப்பற்றிய எந்தவிதமான கலக்கமும் இன்றி, இனி ஈழம் செய்யவேண்டியது என்னவென்று இலவசப் புத்திமதிகளை ஈழத்திற்கு வாரிவழங்கும் அறிவுவேசைத்தனம் வன்முறையில்லையா?”

எஸ்.ராமகிருஷ்ணன்: உலகம் – சிறுகதை

May 15, 2012 Leave a comment


உலகம் – சிறுகதை

 

  • அறையிலிருந்த இருளைப் போலவே அவளும் உருமாறிக்கொண்டு வருவதாக நினைத்தபடி அவசரமாக வெளியே வந்துவிடுவார்.
  • சந்தேகம் ஒரு காட்டை போன்றது. ஒன்றுக்குள் ஒன்று விரிந்து கொண்டே போய்க்கொண்டிருக்கும். சந்தேகத்தை தீர்த்துவிடக் கூடாது.
  • காகிதங்களை வெள்ளைக்காரர்கள் மலம் துடைக்கப் பயன்படுத்துகிறார்கள் என்பது தனக்குத் தெரியும் என்றும் சொன்னார். நான் அது வேறுவகையான காகிதம் என்றேன். ஓதுவார் அதைக் கேட்டுக் கொண்டதாகத் தெரியவில்லை.
  • தேவாரம் ஒரு பாடல் அல்ல — ஒரு ஜோதி அல்லது — ஒளிப்பிரவாகம் என்று மனதில் தோன்றியது. நெடுநேரம் பிராகாரத்திலே நின்றிருந்தேன். தேவாரத்தை பாடிய மனிதன் போய்விட்டிருக்கக்கூடும். ஆனால் கோவிலின் கற்தூண்களில் அப்பாடலின் ரீங்காரம் ஒளிந்திருந்தது.
  • ‘காற்று உடலுக்குள் சென்று வெளியேறி வருவதை நம்புகிறாயா? அப்படியானால் மனமும் அது போல உள்ளும் வெளியும் சென்றுவரக்கூடியது. ஓரிடத்தில் நிரந்தரமாகத் தங்காதது என்றால் நம்பமாட்டாயா?’நன்றி: kumudam.com