Archive
Pon Chinnathambi Murugesan: Marco Polo Travel Journal in Tamil Nadu
“மார்க்கோ போலோ பயணக்குறிப்புகள்’ – தமிழ் மொழிபெயர்ப்பு நூலில் பொன் சின்னத்தம்பி முருகேசன்
ஜெய்லான் தீவை (சிலோன்) விட்டு வெளியேறி மேற்காக 60 மைல் தூரம் கலங்களைச் செலுத்தினால் மாபர் (இந்தியா) எனப்படும் பெரிய பிரதேசத்தை அடையலாம். அது ஒரு தீவு அல்ல. இந்தியா எனப்படுகிற பெரிய கண்டத்தின் ஒரு பகுதி. அதன் பெயருக்கேற்றாற்போல உலகிலேயே மிகவும் புனிதமான வளம் கொழிக்கும் நாடு.
அப்பகுதி நான்கு அரசர்களால் ஆளப்பட்டது. அவர்களின் தலையாய மன்னர் சுந்தரபாண்டி என்று அழைக்கப்படுபவர். அவருடைய ஆளுகைக்குள் மாபர் நாட்டிற்கும் ஜெய்லான் தீவிற்கும் இடைப்பட்ட வளைகுடாப் பகுதியில் முத்துக் குளிக்கும் தொழில் நடைபெறுகிறது. அப்பகுதியில் நீர்மட்டம் 60 அடியிலிருந்து 72 அடி மட்டுமே இருக்கும். சில இடங்களில் 12 அடி மட்டுமே இருக்கும்.
முத்துக்குளிக்கும் தொழிலை நடத்துகிற உரிமை மன்னருக்குரியது. கிடைப்பதில் பத்தில் ஒரு பங்கு முத்துக்களை அவருக்குக் கொடுத்துவிட வேண்டும். 20-ல் ஒரு பங்கு மாந்திரீகர்களைச் சேர்ந்தது. (வளைகுடாப் பகுதியில் ஒரு வகையான பெரிய மீன்கள் திரிகின்றன. அவை முத்துக் குளிப்பவர்களுக்கு சேதத்தை விளைவிக்கின்றன. வியாபாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிராமண வகுப்பைச் சேர்ந்த சில மாந்திரீகர்களை தம்முடன் அழைத்துச் செல்வர். கண்கட்டி வித்தைகளில் தேர்ந்தவர்கள் என்பதால் அவ்வகை மீன்களை மயக்கி அவற்றின் அட்டகாசத்தை தடுத்துவிடுவார்கள். பகலில் மட்டுமே முத்துக்குளிக்கும் பணி நடைபெறுவதால் இரவு நேரங்களில் மந்திர சக்தியை நீக்கிவிடுவார்கள். ஏனென்றால் நேர்மையற்ற ஆட்கள் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு இரவு நேரங்களில் மூழ்கி முத்துக்குளிப்பதை தடுத்துவிடலாம் அல்லவா? மாந்திரீகர்கள் எல்லாவிதமான விலங்கினங்களையும் பறவையையும் மயக்குவிக்கும் மாய சக்தி படைத்தவர்கள்.)
ஏப்ரல் மாதத்தில் ஆரம்பிக்கப்படும் முத்துக்குளிக்கும் பணி மே மாதம் 2-ம் வாரம் வரை நடைபெறும். இந்தக் காலத்திற்குள் சிப்பிகள் அனைத்தும் எடுக்கப்பட்டு தீர்ந்து போய்விடுகின்றன. இந்த வளைகுடாப் பகுதியில் கிடைக்கக்கூடிய முத்துக்களில் பெரும்பாலானவை உருண்டையாகவும், ஒளிமிக்கவையாகவும் உள்ளன. சிப்பிகள் பெருவாரியாகக் கிடைக்கக்கூடிய இடங்களைப் “பெத்தலா’ என்று அழைப்பார்கள்.
Paithiyakkaaran on S Ramakrishnan Short Story collection: Tamil Fiction Reviews
Jeyamohan
http://www.jeyamohan.in/?p=6321
ஒரு வாசகன் இலக்கியப்படைப்பில் தான் வாசித்தவற்றைப் பற்றிச் சொல்ல வந்தாலே கேட்கப்படும் மூன்று கேள்விகள் உண்டு .
1. இதையெல்லாம் அந்த எழுத்தாளன் உத்தேசித்திருப்பானா?
2. இதுக்கெல்லாம் அந்த எழுத்திலே இடமிருக்கா
3. இது எனக்கு ஏன் தோணல்லை?
மூன்றுமே இலக்கியத்தை சரிவர உள்வாங்கத் தடையாகும் வினாக்கள்.
மதியம் திங்கள், ஜனவரி 11, 2010
எஸ்.ராமகிருஷ்ணன்: விருட்ச(ங்களின்)த்தின் விதை(கள்)
வாழ்க்கையின் போக்கில் எந்தவொரு சுழலை எதிர்கொள்ள நேர்ந்தாலும் அதிலிருந்து மீள்வதற்கு கலையின் துணையை நாடுவது மனிதர்களின் இயல்பு. அது நெருங்கிய மனிதர்களின் இறப்பாக இருக்கலாம், பிரிவாக இருக்கலாம், அல்லது காதலை கண்டடைந்த சந்தோஷமாக இருக்கலாம். எப்படியாக இருந்தாலும் அறியப்பட்ட உணர்ச்சியிலிருந்து வெளியேற கலை என்னும் வடிவமே பலவகைகளில் துணையாக இருக்கிறது. இதுகுறித்து பிரியத்துக்குரிய எஸ்.ராமகிருஷ்ணன் என்னிடமும், நண்பர் சுரேஷ் கண்ணனிடமும் புத்தகக் கண்காட்சியில் நீண்ட நேரம் உரையாடினார். இந்த சந்திப்பு குறித்த இடுகையை நண்பர் சுரேஷ் கண்ணன் விரிவாக எழுதுவார் என்பதால் இங்கு அதை தவிர்க்கிறேன். ஆனால், முதல் வாக்கியத்திலிருந்துதான் இந்த இடுகை கிளை பரப்பி விரிகிறது என்பதை குறிப்பிட்டு சொல்ல வேண்டியது கடமை.
‘கலை’ என்ற சொல்லுக்கு பின்னால் கவிதை, சிறுகதைகள், புதினங்கள், ஓவியம், இசை, நாடகம்… என பல்வேறு சொற்கள் அடங்கியிருக்கின்றன. இவையெல்லாமே உடலியல் சார்ந்த கலைச் செயற்பாடுகள். நிலையான புள்ளியில் நின்று சாத்தியப்படுவன அல்ல. பல்வேறு திசைகளில், குறிகளற்று பயணிப்பவை. இந்த புரிதலில் இருந்து எஸ்ராவின் சிறுகதைகளை பார்க்கலாம் என்று தோன்றுகிறது.
காரணம், தமிழ்ச் சிறுகதை உலகு என்னும் பெருங்கடலில் கலந்த – கலக்கும் – மிகப் பெரிய ஆறு, எஸ்ரா. ஜீவநதிகளை போல், வற்றாமல் சிறுகதைகளை தொடர்ந்து எழுதி வருபவர். இவரளவுக்கு தொடர்ச்சியாக சிறுகதைகளை எழுதி வருபவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். யதார்த்த – அ யதார்த்த – மாந்த்ரீக – வட்டச்சூழல் – என அனைத்து வடிவங்களிலும் புனைவு உலகை பரிசோதனை செய்திருக்கிறார். தொடர்ந்த பங்களிப்பின் வழியே எல்லாவிதமான மன அழுத்த; மனப் போக்கு கொண்டவர்களுக்கும் தன் பிரதிகளின் வழியே அளவில் சிறியதான சாவியை எடுத்து தருகிறார். அந்தச் சாவியைக் கொண்டு கதவை திறக்க வேண்டியது மட்டுமே வாசகனின்/வாசகியின் வேலை. அப்படி அவன்/ள் திறக்கும்பட்சத்தில் விரிவது 7 கடல்கள், 7 மலைகள் தாண்டி மறைந்திருக்கும் வாழ்க்கையின் ரகசியம். இன்னொரு விதமாகவும் இதையே சொல்லலாம். எஸ்ராவின் சிறுகதைகளுக்குள் எழுதப்படாத நாவல்கள் மறைந்திருக்கின்றன.
எஸ்ராவின் இரண்டு சிறுகதைகளை உதாரணத்துக்கு எடுத்துக் கொள்வோம். ‘உறவும் பிரிவும் இன்றி’, ‘தெரிந்தவர்கள்’. இந்த இரு சிறுகதைகளும் 80களில் எழுதப்பட்டவை. சென்னை புக்ஸ் சார்பாக வெளியான ‘வெளியில் ஒருவன்’ தொகுப்பில் இடம் பெற்றவை. இதுதான் எஸ்ராவின் முதல் தொகுப்பு. இன்றைய தேதி வரை நூற்றுக்கும் அதிகமான சிறுகதைகளை எஸ்ரா எழுதியிருக்க, ஆரம்பக்கால இந்த இரு புனைவுகளை மட்டுமே இந்த இடுகை ஏன் கணக்கில் எடுக்க வேண்டும்?
தனிப்பட்ட காரணங்கள் எதுவுமில்லை. எழுத ஆரம்பித்த காலத்தில் பிரசவமான படைப்பு எப்படி இன்றும் உயிர்த்துடிப்புடன் இருக்கிறது என்பதை பார்க்கவும், சின்ன ஊற்று எப்படி வற்றாத ஆறாக விரிந்தது என்பதை ஆராயவும்.
இது வாசகனின் பார்வையில் எழுதப்பட்ட இடுகை. விமர்சனம் அல்லது திறனாய்வு என்னும் வார்த்தைகளுக்குள் அடங்காது.
இந்த இரு புனைவுகளுமே ‘பணம்’ அல்லது ‘கடன்’ என்னும் மூன்றெழுத்து தரும் உணர்ச்சியை அடிநாதமாக கொண்டவை.
‘உறவும் பிரிவும் இன்றி’ சிறுகதையில் தயாளன் – கதிரேசன் என இருவர் வருகிறார்கள். இருவரும் உறவுக்காரர்கள். தயாளனின் தங்கச்சியை கதிரேசனின் தம்பிக்கு திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்கள்.
தயாளனின் ஊரில் காலியாக ஒரு கடை இருக்கிறது. அதன் உரிமையாளர் மார்டின். தயாளனும் மார்ட்டினும் ஒரே இடத்தில் வேலைப் பார்ப்பவர்கள். எனவே மார்ட்டினிடம் பேசி அந்தக் கடையை தனக்கு எடுத்து தரும்படி தயாளனிடம் வேண்டுகோள் வைக்கிறார் கதிரேசன். அதற்காக முன் பணமாக ரூபாய் ஆயிரத்தை தயாளனிடம் தரவும் செய்கிறார்.
ஆனால், கடையை இன்னொருவரிடம் தர மார்ட்டினுக்கு விருப்பமில்லை. தானே நடத்தப் போவதாக சொல்கிறான். எனவே கதிரேசனிடம் பணம் தருவதற்காக தயாளன் காத்திருக்கிறான். ஆனால், நடுவில் சில எதிர்பாராத தருணங்களால் அந்தப் பணம் செலவாகிவிடுகிறது. கதிரேசன் வந்து கேட்கும்போது தயாளனிடம் பணமில்லை. பிறகு தருவதாக சொல்கிறான். ஆனால், ஒவ்வொரு முறை கதிரேசன் பணம் கேட்கும்போதும் இதே நிலையே தொடர்கிறது. தயாளனிடம் பணம் இல்லாத நேரமாக கதிரேசன் வருகிறார். ஒரு கட்டத்தில், நடுத்தெருவில் இருவருக்கும் கை கலப்பு ஏற்படுகிறது.
கதை என்று பார்த்தால் இவ்வளவுதான். ஆனால், அதை பிரம்மாண்டமான உணர்வாக மாற்றிவிடுகிறார் எஸ்ரா.
சிறுகதையின் ஆரம்பம், கிழிந்த சட்டையுடன் தயாளன் சைக்கிளை தள்ளிக் கொண்டு போவதிலிருந்து ஆரம்பிக்கிறது. நாலாவது பத்தி, இப்படி வருகிறது:
”கதிரேசன் மச்சானை அடித்திருக்கக் கூடாது என்றுதான் தோன்றியது. அவர்தான் முதலில் அடித்தார். என்றாலும், அவன் அடித்தது போல் அவர் அடிக்கவில்லை. அப்போது அவனுக்கு ஏக கோபமாயிருந்தது. அவர் சட்டையைப் பிடித்து இழுத்ததும் பின்வாங்கத்தான் செய்தான். அவர்தான் கன்னத்தில் அறைந்தார்.”
7வது பத்தியின் ஆரம்பம் இது: ”கதிரேச மச்சான்தான் எவ்வளவு நல்லவர் என்று தோணியதும் மனதுக்குள் ஏதோ செய்தது.”
தயாளன் – கதிரேசன் ஆகிய இருவர் மீதும் தவறோ குற்றமோ இல்லை. சந்தர்ப்பங்கள் அப்படி அமைந்துவிட்டன என்பதை கதைச்சொல்லி முதலிலேயே தெளிவாக உணர்த்தி விடுகிறார்.
கடை வேண்டும் என முன்பணமாக ரூபாய் ஆயிரத்தை கதிரேசன் தரும் இடம் நுட்பமானது. ”மஞ்சள் பைக்கட்டில் இருந்து ரூபாயை எடுத்தார். பாதிக்கு மேல் பழைய தாள்கள். அஞ்சும் பத்துமாக எண்ணி நூல் போட்டுக் கட்டியிருந்தார்…”
தயாளனின் பார்வையில் செல்லும் இந்தக் கதையில் கதிரேசன் ஏற்படுத்தும் தாக்கத்தை விட, அவரது மனைவியும் குழந்தைகளும் தரும் பாதிப்பு அதிகம். இத்தனைக்கும் அவர்கள் புனைவில் அதிகம் வருவதில்லை. சொல்லிக் கொள்ளும்படியான உரையாடல்களும் அவர்களுக்குள் இல்லை. ஆனால், வாசகனா(கியா)ல் அதை எப்படி வேண்டுமானாலும் நிரப்பிக் கொள்ள முடியும்.
கிழிந்த ரூபாய் நோட்டுகள் என்றால் குடும்பம் வறுமை. கதிரேசனின் மனைவி நூல் கட்டி மோதிரத்தை அணிந்திருக்கிறாள். ஏழைகள். பணம் அவசியம். அது கிடைக்காதபோது கதிரேசன் தன் குடும்பத்தை எப்படி எதிர் கொண்டிருப்பார்? அவர் மனைவி வார்த்தைகளால் அவரை எப்படி துளைத்திருப்பாள்? குழந்தைகளின் பசியை எப்படி அவள் போக்கியிருப்பாள்? உறவினரிடம் தன் கணவன் பணம் கொடுத்து ஏமாந்துவிட்டான் என்பதை எப்படி எதிர்கொண்டிருப்பாள்?
தயாளனின் மனைவியும் கதையில் அதிகம் வரவில்லை. ஆனால், அவளது மருத்துவத்துக்காகத்தான் தயாளன் அந்தப் பணத்தையே செலவு செய்திருந்தான். எனில், தயாளனின் மனைவிக்கு இந்த விஷயம் தெரியுமா? கதிரேசனுக்கு பணத்தை திருப்பித் தந்துவிடுங்கள் என ஒருமுறைக் கூட அவள் சொன்னதில்லையா? குடும்பச் செலவை குறைத்து பணத்தை சேமித்து கதிரேசனுக்கு திருப்பித் தர ஏன் முயற்சி செய்யவில்லை?
இப்படி தொடரும் கேள்விகளுக்கு வாசகன் விடை தேடிக் கொண்டே செல்லும்போது எழுதப்படாத ஒரு நாவலை தன்னையும் அறியாமல் எழுத ஆரம்பிக்கிறான். தன் பிரதிகளின் வழியே அளவில் சிறியதான சாவியை எடுத்து எஸ்ரா தருகிறார் என்று குறிப்பிடுவது இதனால்தான். சிறுகதைகளுக்குள் நாவலை மறைத்து வைத்திருக்கும் ரகசியம்.
‘தெரிந்தவர்கள்’ சிறுகதை நண்பர்களுக்கு இடையிலானது.
வெளிநாட்டில் வேலைப் பார்ப்பவன் மணி. சம்பாதிக்கும் பணத்தை கதிருக்கு அனுப்புவான். கதிர் அதை மணியின் வீட்டில் தருவான். கடைசியாக மணி அனுப்பிய ரூபாய் பத்தாயிரத்தை கதிர் அவன் வீட்டில் தரவில்லை. தன் தங்கையின் திருமண செலவுக்கு அதை பயன்படுத்திக் கொண்டான். இப்படி செலவு செய்துவிட்டேன் என்பதையும் மணியிடம் கதிர் சொல்லவில்லை.
இச்சிறுகதை வெளிநாட்டிலிருந்து திரும்பி வரும் மணியின் பார்வையில் விரிகிறது. பிரதி முழுக்க அவன், அவன் என்றே வரும். இறுதியில்தான் மணி என்னும் பெயருடன் அவன் இருப்பான். அதேபோல் வெளிநாடு என எங்கும் குறிப்பிடப்பட்டிருக்காது. முதல் பத்தி, இப்படி ஆரம்பிக்கிறது:
”காலையில்தான் வந்திருந்தான். ஸ்டேஷனை விட்டு வெளியே வரும்போது குளிர் அதிகமாக இருந்தது காலையில். இந்தக் குளிர்க் காற்று கூட இங்கே அதன் இயல்பில் இருப்பதாகப்பட்டது. அவன் இருந்த இடத்தில் கடுங்குளிர், கடுமையான வெப்பம்.”
இறுதியில் இப்படி வருகிறது.
”நான் அனுப்பின ரூவா என்னாச்சு?”
பதில் சொல்லவில்லை.
”வரலையா?”
”வந்துச்சு.”
”என்ன செஞ்சே?”
”திடீர்னு கல்யாணம் பண்ண வேண்டியிருந்ததால செலவு ஆகிப் போச்சு. அப்பாவுக்கு வர வேண்டிய இடத்தில பணம் வரலே…”
”அதை எனக்கு எழுதியிருக்கலாம்ல. இல்ல வீட்ல பணத்தைக் கொடுத்திட்டு கேட்டு வாங்கி இருக்கலாம்ல…”
இப்படியே தொடரும் உரையாடல், இறுதியில் சண்டையில் முடிகிறது.
”உன் பிச்சைக்காசு ஒண்ணும் வேணா. நான் வரேன்” அவன் இறங்கிக் கீழே போனான். புழுதி கலைந்து பறந்தது. மணி எழுந்து நின்று பார்த்தான். கதிர் வேகமாகப் போய்க் கொண்டிருந்தான்.
நுணுக்கமான விஷயங்கள் இந்தக் கதை நெடுக உண்டு. மணியின் மனைவிக்கும், அம்மாவுக்குமான பிரச்னை. வெளிநாட்டிலிருந்து வந்திருக்கும் தம்பியிடம் தனியாக தன் வீட்டுக்கு வரும்படி அக்கா அழைப்பது, ”தனியா உங்கக்கா என்ன பேசினாங்க?” என மனைவி கேட்பது, ”நீங்க ஊர்ல இல்லாதப்ப உங்கக்கா இங்க எட்டிக் கூட பார்த்ததில்ல. உங்கம்மாவும் அவங்க வீட்லயேதான் இருந்தாங்க…”
கதிர் வீட்டு விவரணைகள் அபாரமானவை. மாடியில் தூங்கிக் கொண்டிருந்த கதிர், மணி வந்து எழுப்பியதும் மலங்க மலங்க விழிப்பது, மணி பணம் குறித்து கேட்பதற்குள், ”உனக்கு பிடிச்ச மீன் வாங்கிட்டு வரேன்” என சட்டென கீழே இறங்கிச் செல்வது, சாப்பிட்டு முடித்ததும் திருமணமான தங்கசியுடன் வருவதாக சொல்லி மணியை நாசுக்காக அவன் வீட்டுக்கு அனுப்புவது…
எந்த இடத்திலுமே இந்தக் கதையில் ப்ளாஷ்பேக் உத்தி செயல்படவில்லை. மணி – கதிர் நட்பு எப்போது ஆரம்பித்தது, எப்படி மலர்ந்தது என்பதெல்லாம் பிரதி சொல்லவேயில்லை. ஆனால், வாசிப்பவர்கள் அந்த இடத்தை நிரப்பிக் கொள்ளலாம்.
கதிரின் தங்கைக்கு மணியும் அண்ணன்தான். சந்தோஷமாக அப்படித்தான் அழைக்கிறாள். மணியின் வீட்டில் பணப் பிரச்னையில்லை. கதிரின் வீட்டில் தேவை அப்படி செய்ய வைத்தது. சொல்லிவிட்டு பணத்தை எடுத்திருக்கலாமே என்பது மணியின் வாதம். எடுத்தாலும் நீ தவறாக நினைக்கமாட்டாய் என்று நினைத்தேன் என்பது கதிரின் தரப்பு.
சரி, கதிர் கேட்டிருந்தால் மணி என்ன செய்திருப்பான்? மணி மறுத்திருந்தால் கதிர் என்ன செய்திருப்பான்?
இப்படியாக விரித்துக் கொண்டே செல்லலாம்.
இன்னொரு மாதிரியாக வாசிப்போம். ‘தெரிந்தவர்கள்’ சிறுகதையில் மணியும், கதிரும் உறவினர்களாக இருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும்? ‘உறவும் பிரிவும் இன்றி’ தயாளனும், கதிரேசனும் நண்பர்களாக இருந்திருந்தால் செலவான ஆயிரம் ரூபாய் குறித்த விவரணை எப்படி சென்றிருக்கும்? ‘தெரிந்தவர்கள்’ பிரதியில் ஏன் ப்ளாஷ்பேக் இல்லை? ‘உறவும் பிரிவும் இன்றி’யில் ஏன் ப்ளாஷ் பேக் இருக்கிறது?
இந்த சிறு சிறுகதைகளிலும் ஆண்களே முக்கிய பாத்திரங்களாக இருக்கிறார்கள். இதுவே பெண் பாத்திரங்களாக இருந்தால், இந்தச் சூழலை எப்படி எதிர்கொண்டிருப்பார்கள்? வெளிநாட்டில் வேலைப் பார்க்கும் பெண், தன் சிநேகிதிக்கு பணம் அனுப்பி வீட்டில் தரச் சொல்வதைவிட, தானே வீட்டுக்கு பணம் அனுப்பிவிடுவாள் என எளிமையாக இந்தக் கற்பனையை குறுக்கிவிடாமல் இருக்கும் பிரதிக்குள் ஊடுரிவிப் பார்த்தால் எப்படி இருக்கும்?
இப்படி யோசிக்க யோசிக்க விதை, விருட்சமாக வளர்ந்துக் கொண்டே செல்வதை காணலாம்.
அதனாலேயே எஸ்ராவின் சிறுகதைகள் அல்லது புனைவுகள், அனைத்து முனைகளிலும் திறந்த தன்மையுடையதாக இருக்கிறது என்று சொல்லத் தோன்றுகிறது. ஒவ்வொரு வாசிப்பின் நிகழ்வும் மற்றொரு வாசிப்புக்கான முன்னுரையாக அமைகிறது. இப்படி இவரது ஒவ்வொரு சிறுகதையை குறித்தும் சொல்லிக் கொண்டே போகலாம். அல்லது நாவலாக வாசித்துக் கொண்டே போகலாம்.
நன்றி: ‘எஸ். ராமகிருஷ்ணன் கதைகள்’ – உயிர்மை வெளியீடு.
Nanjil Nadan – Kaalachuvadu: காலச்சுவடு சஞ்சிகையில் நாஞ்சில் நாடன்
பதிவுகள்: அற்றைத் திங்கள்
மார்ச் 15, சேலம் தமிழ்ச் சங்கம்படைப்பு என்பது கதை சொல்வதல்ல
அ. கார்த்திகேயன்
சேலம் தமிழ்ச் சங்கத்தில் காலச்சுவடு, கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸ், சேலம் தமிழ்ச் சங்க அறக்கட்டளை இணைந்து நடத்திய ‘அற்றைத் திங்கள்’ நிகழ்ச்சியில் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் கலந்துகொண்டார். சிறந்த சிறுகதையாளராய், தேர்ந்த நாவலாசிரியராய் நுட்பமான வாசகர்களால் கொண்டாடப்படும் அவரை, சேலம் தமிழ்ச் சங்கச் செயலாளர் க.வை. பழனிச்சாமி அறிமுகப்படுத்தினார்.
அடிப்படையில் தான் ஒரு விவசாயக் குடும்பத்தைச் சார்ந்தவன், ஐம்பது ஆண்டு கால விவசாய வாழ்க்கையில் எவ்வித மாற்றத்தையும் காணாத கசப்பான வாழ்வு அனுபவம் தனக்கு உண்டு எனத் தொடங்கிய நாஞ்சில் நாடன், தன் பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பைப் பற்றி விரிவாகக் கூறினார்.
தனக்குக் கிடைத்த நல்ல தமிழாசிரியர்களின் மூலமாக ஆழமான தமிழறிவைப் பெற்றதாகக் குறிப்பிட்ட அவர், கணிதத்தை முதன்மைப் பாடமாகப் படித்ததாகவும் பிற்பாடு தமிழ்மீது கொண்ட ஈடுபாட்டால் ஏராளமான பழந்தமிழ் நூல்களைக் கற்க முடிந்தது என்றும் குறிப்பிட்டார்.
தனது இளமைக் காலத்தில் எல்லோரையும் போலவே திராவிட இயக்கமும் திராவிட இலக்கியமும் தன்னைப் பாதித்ததாகவும் அப்போது புகழ்பெற்று விளங்கிய திராவிட இயக்கப் பேச்சாளர்களின் பேச்சைக் கேட்டு மதி மயங்கியதாகவும் திமுகவிற்காக வாக்குச் சேகரிக்கச் சென்ற அரசியல் தீவிரம் தனக்கு இருந்ததாகவும், நாளடைவில் அந்த ‘மயக்கம்’ அகன்றதையும் சுவாரசியமாகக் குறிப்பிட்ட நாஞ்சில் நாடன், பிழைப்பைத் தேடி மும்பை சென்று அங்கு தான் அடைந்த அவமானங்கள், காயங்கள், ஏமாற்றங்கள், ஆற்றாமைகளைச் சொற்கோலங்களாக தன் பேச்சில் வெளிப்படுத்த, ‘மிதவை’ நாவலின் காட்சியலைகள் பார்வையாளர்களின் மனத்திரையில் தெரிய ஆரம்பித்தன.
திராவிட மாயையினின்று தான் விடுபடப் பழந்தமிழ் வாசிப்புதான் மிகவும் உதவியாக இருந்தது என்றும் நிறைய வாசிக்கும்போதுதான் படைப்பாளிக்கு ஏராளமான சொற்கள் கிடைக்குமென்றும் காத்திரமான படைப்புக்கு அச்சொற்களே வழி வகுக்கும் என்றும் தெரிவித்த அவர், தான் சங்க இலக்கியம் தொடங்கி இன்றைய நாவல்வரை தொடர்ந்து படித்துக்கொண்டிருப்பதாகப் பெருமைபடக் கூறினார். படிப்பதன் மூலம் படைப்பில் நல்ல சொல்லாட்சிகளைக் கொண்டு வர முடியுமெனத் திடமாக நம்புவதாகவும் தனது எழுத்தில் நாஞ்சில் நாட்டுச் சொற்களைக் கூடுமானவரைக் கொண்டுவரத் தான் முயல்வதாகவும் குறிப்பிட்டார்.
வாழ்க்கை பற்றிய புரிதல் வாழும் போதுதான் கிடைக்கும். தமது 25 வருட எழுத்து வாழ்க்கையில் அந்தப் புரிதலைப் பல்வேறு கோணங்களில் தான் பதிவுசெய்திருப்பதாகக் கூறிய நாஞ்சில் நாடன், இன்றைய அரசியல் நிலை குறித்து தனது படைப்புகள் கவலை மற்றும் கோபம் கொள்வதைச் சுட்டிக்காட்டினார். படைப்புகளில் அவை குறித்துக் கவன ஈர்ப்பு பெற வைப்பதையும், பண்பாட்டுக் கூறுகள் குறித்துத் தனக்கு ஏற்படும் அதிர்வுகளைப் படைப்பாக்கங்களில் பதிவு செய்வதையும் தனது கடமையென்றும் கூறினார்.
படைப்பு என்பது கதை சொல்வது மட்டும் அல்ல, பண்பாட்டுக் கூறுகளை, தகவல்களை அடுத்தத் தலை முறைக்கு எடுத்துச் செல்வது எனக் கூறியவர் பார்வையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு விரிவான பதிலளித்தார்.
தங்களது நாவல் (தலைகீழ் விகிதங்கள்) திரைப்படமாய் (சொல்ல மறந்த கதை) வெளிவந்தபோது எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியது என்ற கேள்விக்கு, ‘ஒரு மாற்றமும் ஏற்படவில்லை. பொதுவாக எல்லோரும் நினைத்துக்கொண்டிருப்பதைப் போலத் திரைப்படப் புகழ், பரபரப்பு எதுவும் தன்மீது விழவில்லை’ எனப் பதிலளித்தவர், இழந்த, நமது அடையாளங்களை மீட்க முடியுமா என்னும் கேள்விக்கு நமது அடையாளம் என்ன என்பதை முதலில் அறிய வேண்டுமென்றும் தன்னுடைய அடையாளம் எது என்பதைத் தேடிக்கொண்டிருப்பதாகவும் விடையளித்தார்.
பாடப் புத்தகங்களை மீறி நமது குழந்தைகள் ஏராளமானவற்றை அறிந்து கொள்வதுடன் நவீன வாழ்வு தரும் அதிர்ச்சிகரமான அலைகளிலிருந்து மீள வாழ்வைப் புதிய கோணத்தில், புதிய வார்ப்பில் எதிர்கொள்ள வேண்டுமெனவும் பார்வையாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.
o
பதிவு: கருத்தரங்கு – நாஞ்சில் நாடன் படைப்புகள்
வலி தரும் எழுத்து
அ.கா. பெருமாள்
நாகர்கோவில் திருச்சிலுவைக் கல்லூரியும் நெய்தல் இலக்கிய அமைப்பும் இணைந்து நடத்திய நாஞ்சில் நாடன் படைப்புகள் கருத்தரங்கு 24.01.2007 புதன்கிழமை திருச்சிலுவைக் கல்லூரியிலுள்ள செசில் அரங்கில் நடைபெற்றது.
கருத்தரங்கின் முதல் அமர்வில் கல்லூரித் தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் வி. ஹெர்மனா ஜில்ட் ஆராச்சி தன் தலைமை உரையில், “தென்மாவட்டப் படைப்பாளிகளில் முக்கியமானவரான நாஞ்சில் நாடனைப் பற்றிய இந்தக் கருத்தரங்கை நாஞ்சில் நாடனின் பாராட்டு நிகழ்ச்சியாகவும் கருதலாம்” என்று குறிப்பிட்டார். கல்லூரித் துணை முதல்வர் முனைவர் அருட்சகோ. சோபி முன்னிலை வகித்தார். கல்லூரிச் செயலர் முனைவர் அருட்சகோ. ஜெரார்டின் ஜெயம் வாழ்த்துரை வழங்கினார்.
இரண்டாம் அமர்வின் தொடக்கத்தில் நெய்தல் கிருஷ்ணன் கருத்தரங்கின் நோக்கத்தை விளக்கினார். “நாஞ்சில் நாடன் படைப்புகள் பற்றிய கருத்தரங்கம் நடத்த வேண்டும் என்று நெய்தல் அமைப்பு முடிவுசெய்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டாலும் மனதில் நெருடலை ஏற்படுத்தாத இடத்தில் நடப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. கல்விப் புலத்திற்கும் நவீன இலக்கியத்திற்குமான இடைவெளியைக் குறைப்பதும் மாணவர்களிடம் புத்தக வாசிப்பின் ஆர்வத்தைத் தூண்டுவதும்தான் இந்தக் கருத்தரங்கின் முக்கிய நோக்கம்” என்றார்.
நாஞ்சில் நாடனின் நாவல்கள் பற்றி எம். வேதசகாயகுமார் பேசினார். “நாஞ்சில் நாடன் கவிதை, சிறுகதை போன்ற வடிவங்களின் மூலம் படைப்புலகுடனான தொடர்பைத் தக்க வைத்துக்கொண்டிருப்பவர். இவரது நாவல்களின் மறு வாசிப்பு புதிய உணர்வைக் கொடுக்கிறது. நாஞ்சில் நாடனின் அனுபவ வாழ்வின் பரப்பு சுருங்கியது. ஆனால் பொய்ச் சாயம் கலவாதது. படைப்பிற்கென அனுபவ வாழ்வை வலிந்து பெறும் அவலம் இவருக்கு என்றுமே இருந்ததில்லை. நிகழ்வுகளை ஒரு மையத்தில் குவித்து உணர்வுகளை எழுப்பி வாழ்க்கைச் சிக்கல்களைத் தனக்குச் சாதகமான தளத்தில் இனங்கண்டு வாழ்வைப் படைப்பிற்கென்று எளிமைப்படுத்த நாஞ்சில் நாடன் முனையவில்லை. நாஞ்சில் நாடன் அவரது படைப்புகளிலிருந்து அந்நியப்பட்டு நிற்கிறார்” என்றார்.
தொடர்ந்து, ‘நாஞ்சில் நாடனின் கட்டுரைகள்’ என்ற தலைப்பில் பேசிய சின்னசாமி, “நாஞ்சில் நாடனின் சிறுகதை, நாவல்களைவிடக் கட்டுரைகளை முக்கியமாகக் கருதலாம். இவர் கட்டுரைகளுக்காக எடுத்துக்கொண்ட விஷயங்கள் யதார்த்த வாழ்க்கையிலிருந்து எடுக்கப்பட்டவை. சாதாரண வாழ்க்கையுடன் உறவுடையவை. இவரிடம் மனிதாபிமானமும் ஆர்வமும் அதிகம். இவரது நூலின் தலைப்பு ‘நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை’ என்பது. கம்பராமாயணப் பாடலில் வரும் வரி இது. எல்லாம் விதியின் மேல் காரணம் காட்டிப் பேசுவது இப்பாடல். இந்தத் தொனி நாஞ்சில் நாடனின் கட்டுரைகளில் சற்று இடம்பெயர்ந்து வருகிறது. மனிதனின் பிழை எதுவும் இல்லை; எல்லாம் சமூகத்தின் பிழை என்ற கருத்து பொதுவாக இழையோடுகிறது. கட்டுரைகளில் வரும் எள்ளல் தொனி படிக்கும் வேகத்தைக் கூட்டுகிறது. இவரது படைப்புகளைப் போலவே கட்டுரைகளும் என்பதற்கு வட்டார வழக்குச் சொற்களை இவர் லாகவமாகக் கையாளும் திறன்தான் அடையாளம். கட்டுரைகளை இவர் தொடர்ந்து எழுத வேண்டும்” என்று தன் எண்ணங்களை வெளிப்படுத்தினார்.
நாஞ்சில் நாடனின் ‘நாஞ்சில்நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை’ நூல் பற்றி அ.கா. பெருமாள் பேசும்போது, “தமிழகத்தில் சாதி பற்றிய நூற்கள் நிறையவே வந்துள்ளன. அவற்றில் பெரும்பாலானவை தங்கள் சாதியின் புகழ்பாட எழுதப்பட்டவை. வெளிநாட்டு ஆய்வாளர்கள் சாதி பற்றி எழுத ஆரம்பித்தபோது திரட்டப்பட்ட தகவல்கள்கூட இன்றைய நிலையில் பரிசீலனை செய்ய வேண்டிய அளவில்தான் உள்ளன. நாஞ்சில் நாடனின் நூல் இந்த இடத்தில் வேறுபடுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் வாழும் மக்கள்வழி வேளாளர், மருமக்கள்வழி வேளாளர், சைவ வேளாளர், துளுவ வேளாளர், செட்டி வேளாளர் என்னும் ஐந்து வேளாளர் உட்பிரிவுகளில் மக்கள்வழி, மருமக்கள்வழி வேளாளரை மட்டுமே இவர் பதிவுசெய்திருக்கிறார். நாஞ்சில் நாட்டு வேளாளர் பற்றி 1909இல் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை, 1921இல் தாணம்மாள், 1986இல் பேரா. எல். சி. தாணு ஆகியோர் எழுதிய கட்டுரைகளை இன்று திரும்பிப் பார்க்கின்றபோது நாஞ்சில் நாடன் அவர்களுடன் ஒத்துப் போவது தெரிகிறது. அவரது படைப்பைப் போலவே இந்த நூலும் யதார்த்தமான பதிவு” என்றார்.
உணவு இடைவேளைக்குப் பின் தொடங்கிய மூன்றாவது அமர்வில் ஜெயமோகன் பேசினார். “உலகம் முழுக்க வானத்தைப் பார்ப்பது, மண்ணைப் பார்ப்பது என்ற பார்வை இருக்கிறது. மண்ணுக்கு அப்பால் வானத்தைப் பார்த்து உலகத்துத் துக்கத்தை வெளிப்படுத்திய பழைய பாடல்களை இன்று படித்தாலும் உணர முடியும். ஒட்டுமொத்த பார்வை வானத்தைப் பார்க்கும்போது புரியும். ஆனால் மண்ணைப் பார்ப்பது வித்தியாசமானது. இது யதார்த்தமானது. இந்த மண்ணிலேயே சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையிலிருந்து தேடிக் கண்டடைவதற்கான முயற்சிதான் யதார்த்தவாதம்.
“தமிழ் யதார்த்தவாதத்தின் முதல் படைப்பு மாதவையாவிலிருந்து தொடங்குகிறது. மண்ணின் பிரச்சினையை விண்ணில் எதிர்நோக்காத பார்வையை இவர் தடம் பதித்த பின்னர் வந்த படைப்பாளிகளில் புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், அசோகமித்திரன், நீல. பத்மநாபன், சுந்தர ராமசாமி, ஆ. மாதவன் என்ற வரிசையில் வருபவர்கள் முக்கியமானவர்கள். இவர்களில் நாஞ்சில் நாடனுக்குத் தனி இடம் உண்டு. இந்த வரிசையில் வருபவர்களில் நான்கு பேர் கன்னியாகுமரி மாவட்டத்துக்காரர்கள். நாஞ்சில் நாடன் அன்றாட வாழ்க்கையில் காணப்படும் சின்னச் சின்ன விஷயங்களைப் பார்த்தவர், எவரையும் புண்படுத்தாதவர். இவரிடம் இழையோடும் சிரிப்பும் மண்ணின் மணமும் இவரை இனம் காட்டுகின்றன” என்றார்.
இறுதியாக நாஞ்சில் நாடன் உரை நிகழ்த்தினார். “நான் எழுத ஆரம்பித்தபோது என்னைத் தட்டிக்கேட்டு உணர்த்தியவர் சுந்தர ராமசாமி. ‘நாஞ்சில், நம்மிடம் நிறைய எதிர்பார்க்க அதிகம் பேர் இல்லை என்பதை நினைத்துக் கொள்ளுங்கள்’ என்றார். இதே தொனியை இப்போது எனக்கு ஜெயமோகன் உணர்த்துகிறார்.
“நான் இருக்கிறேன்; அதனால் வாழ்கிறேன்; இதை உணர்த்துவது என் எழுத்துதான். எனக்கு எழுதவும் சொல்லவும் இன்னும் எவ்வளவோ இருக்கிறது. எல்லாவற்றையும் பதிவு செய்ய வேண்டும் என்பதை இப்போது உணருகிறேன். இதைத் திமிர் என்றுகூடச் சொல்லலாம். இது எனக்கு முன்பு இருந்ததில்லை. இதை நல்ல அர்த்தத்திலேயே சொல்கிறேன். எழுத்து, வலியை ஏற்படுத்த வேண்டும். படிப்பவர்கள் வலியை உணர்ந்தால் உணர்வு இருக்கிறது என்று அர்த்தம்” என்றார்.
டாக்டர் வ. ஜெயசீலி வரவேற்றுப் பேசினார். பேரா. ஜாக்குலின் நன்றி கூறினார். செல்வி மெர்லின்மேரி ஒருங்கிணைப்பாளராக இருந்தார். முதல் அமர்விலும் மூன்றாம் அமர்விலும் கவிஞர் ராஜ்குமார் பாடிய பாட்டு மாணவ மாணவிகளை உற்சாகப்படுத்தியது இக்கருத்தரங்கின் சிறப்பு. இன்னொரு சிறப்பு பேரா. அ. பெர்னார்டு, சந்திரா இருவரும் முறையே நாஞ்சில் நாடனையும் ஜெயமோகனையும் அறிமுகப்படுத்தியது. சொற்புனைவு இல்லாமல் அறிமுகப்படுத்த முடியும் என்பதைச் சந்திரா இக்கருத்தரங்கில் நிரூபித்தார். நவீன இலக்கிய அரங்குகளில் பேராசிரியர்களும் மாணவர்களும் பின்பற்ற வேண்டிய முன்மாதிரியாக இவரது அறிமுக உரைகளைக் கொள்ளலாம்.
தமிழர் பண்பாடு
குமரி மண்ணின் மரபு :: நாஞ்சில்நாடும் விளவங்கோடும்
குமாரசெல்வா
உன் பேச்சு உன்னை வெளிப்படுத்துகிறது”
(மத்தேயு 26 : 73)
விளவங்கோடு வட்டார மக்களிடையே நாட்டுப் புறக் கதை ஒன்று வழக்கில் உள்ளது. விளவங்கோட்டுக்காரன் ஒருவன் மதுரைக்குப் போனான். அங்குள்ள மக்களின் பேச்சைக் கேட்டுத் தானும் இனிமேல் செந்தமிழில் பேசுவதாகச் சபதம் கொண்டான். எதிரே பழக்கடை தென்பட்டது. அங்கே சென்று உரையாடினான்.
“வணிகரே! பழங்கள் உள்ளனவா?”
“இங்க இருப்பது பழங்களாகத் தெரியலையா?”
“பொறுத்தருள்க! பழம் ஒன்று என்ன விலையோ?”
“ஒரு ரூபாய்.”
“ஐம்பது காசுக்குத் தரக் கூடாதா?”
“தருகிறேன்.”
“அப்படியானால் இரண்டு பழங்கள் பூயும்.”
“பூயுமா? அப்படீண்ணா என்னாங்க?”
“வேல மயிரு காட்டாத ரெண்டு பழம் இனிஞ்சி எடுவிலே இஞ்ச.”
தனது வட்டாரச் சுபாவத்தை ஒருவனால் ஒருபோதும் திரைபோட்டு மறைக்க முடியாது. மனத்தில் ஆழப்பதிந்த அது எந்த வகையிலாவது பேச்சில் வெளிப்பட்டே தீரும். அதனால்தான் விளவங்கோட்டுக்காரனால் இன்னொரு வட்டாரம் சார்ந்த மொழியில் தொடர்ந்து உரையாட முடியவில்லை.
தாய்த் தமிழகத்திலுள்ள மக்கள் பலரும் என்னிடம் அதிகமாகக் கேட்கும் கேள்வி, “நீங்கள் தமிளும் மளையாளமும் களந்து பேசுகிறீர்களே?” என்பதாகும். அப்போதெல்லாம், நாங்கள் மலையாளிகள் அல்ல என்றும் தமிழன் இழந்த நிலப்பரப்பில் முதன்முதலாக அறுநூறு சதுர கி.மீ. பரப்பளவை மலையாளிகளிடமிருந்து மீட்டெடுத்தவர்கள் நாங்கள்தானென்றும் அதற்கான வீரஞ்செறிந்த போராட்டத்தில் சுடப்பட்டு இறந்தும் வீட்டுக்கொருவர் ஊனம்பட்ட கதைகள் குறித்தும் நாங்கள் பேசும் தமிழ் சங்க இலக்கியத்தில் எங்கெல்லாம் இருக்கிறது என்றும் பட்டியலிட்டு மிகப் பெரிய சொற்பொழிவையே நிகழ்த்த நேரிடும்.
இதற்கு ஒரு படி மேலே போய் இலக்கியவாதிகள் என்னிடம், “ஒங்க நாஞ்சில் தமிழ் அருமை” என்று கூறுவதுண்டு. நாஞ்சில் நாட்டுக்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று நான் அவர்களுக்கு விளக்குவது இருக்கட்டும், முதலில் ஒட்டுமொத்தக் குமரிமாவட்டத்தையும் ‘நாஞ்சில்நாடா’க மாற்றியவர்கள் யாரென்று தெரிந்துகொள்வது அவசியம் அல்லவா.
குமரி மண்ணின் மேற்குக் கரையோரமாக இருக்கும் எங்கள் விளவங்கோடு வட்டாரத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகளில் சிலர் தங்கள் பெயருக்கு முன்னால் ‘நாஞ்சில்’ என்னும் அடைமொழியை ஏன், எதற்கென்று தெரியாமலேயே போட்டுக்கொள்கிறார்கள். மலையாளம் தாய்மொழியாகக் கொண்ட நாஞ்சில் மனோகரனைப் பார்த்துச் சூடுபோட்டுக் கொள்ளும் முயற்சி இது. தென்னைமரமேறும் சாதியைச் சேர்ந்த மனோகரனுக்குத் திராவிட அரசியலில் தன்னை வெள்ளாளராக அடையாளம் காட்டிக்கொள்ள வேண்டிய அவசியம் இருந்தது. அடுத்தது இலக்கியவாதிகள். “ஹெப்சிபாவின் கதை மாந்தர்கள் தென்மாவட்டமான நாஞ்சில் பகுதியின் கிறிஸ்தவச் சமயத்திலிருந்து விளைந்தவர்கள்”- சிற்பி. பாலசுப்ரமணியன்.
“கன்னியாகுமரி மாவட்டமும் திருவனந்தபுரத்தின் தமிழ்ப் பகுதியும் இங்கு நாஞ்சில்நாடாகக் கருதப்படுகிறது. வயலும், வயல் சார்ந்த பகுதியாக உள்ள இதனை உழவுக்கருவியால் நாஞ்சில் என்று வழங்குகின்றனர்.” (சு. சண்முகசுந்தரம், தமிழில் வட்டார நாவல்கள், ப:13)
“அகஸ்தீசுவரம், தோவாளை ஆகிய இரு தாலுகாக்கள் மட்டுமே நாஞ்சில்நாடு என்று திட்டவட்டமாகக் கூறப்பட்டபோதிலும் அகஸ்தீசுவரம், தோவாளை, விளவங்கோடு, கல்குளம் ஆகிய நான்கு தாலுகாக்களுமே பொதுவாக நாஞ்சில்நாடு எனக் கருதப்படுகிறது என்பதைக் குமரிமாவட்டம் நீங்கலாக இதர மாவட்டங்களிலுள்ள வாசகர்களுக்கு விளக்குவது அவசியம் என்று கருதுகிறேன்” (என். ராமகிருஷ்ணன், ஜி.எஸ். மணி – குமரிக்கடலின் புயற்பறவை)
மேற்கூறியவற்றிலிருந்து இதற்குப் பொறுப்பானவர்கள் அரசியல்வாதிகளும் இலக்கியவாதிகளும் என்று நாம் அறிந்துகொள்ளலாம். இந்தத் தாராளவாதப் போக்கில் ஒலிப்பது வெள்ளாளக் கருத்தியல் புனைவாகும்.
1684 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட இன்றைய குமரிமாவட்டம் கிழக்கு மற்றும் வடக்குப் பகுதியில் திருநெல்வேலி மாவட்டத்தையும் மேற்கு மற்றும் வடமேற்குப் பகுதியில் கேரள மாநிலத்தையும் தென்கிழக்குப் பகுதியில் மன்னார் வளைகுடாவையும் தெற்கு மற்றும் தென்மேற்குப் பகுதியில் இந்தியப் பெருங்கடலையும் அரபிக்கடலையும் எல்லைகளாகக் கொண்டு விளங்குகிறது. இதில் மூன்று முக்கிய இயற்கைப் பிரிவுகள் அடங்கியுள்ளன. வடகிழக்குப் பகுதி மேற்குத் தொடர்ச்சி மலையால் சூழப்பட்டதாகும். விளவங்கோடு, கல்குளம் தாலுகாக்கள் அதிகமாக இதன் பாதிப்பில் உள்ளன. ‘காணிகள்’ என்று சொல்லப்படும் ஆதிவாசிகள், ரப்பர் தொழிலில் ஈடுபடும் தோட்டத் தொழிலாளர்கள், பனையேறிகள், கேரளம் முழுக்கச் சென்று கட்டடம் கட்டும் உழைப்பாளர்கள், வாழை, மரிச்சினி கிழங்கு, காய்கறி உற்பத்தி செய்யும் விவசாயிகள் பலரும் இவ்விரு தாலுகாக்களையும் சேர்ந்தவர்கள். தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு ஆகிய மூன்று புறங்களும் நீரோடி முதல் ஆரோக்கியபுரம்வரை 68 கி.மீ. தூரம் நீண்ட கடற்கரை. இப்பகுதிகளில் மீனவர்களும் இசுலாமியர்களும் பிறசாதி மக்களும் வசிக்கிறார்கள். மலையின் ஆதிக்கத்தில் உள்ள சமவெளிப் பிரதேசமான தோவாளைப் பகுதியின் சில பாகங்களே நாஞ்சில்நாடாகும். அகஸ்தீசுவரம் தாலுகாவில் காற்றாடிமலை, மருத்துவா மலை, கல்மலை இருப்பதுபோலத் தோவாளை தாலுகாவிலும் தாடகை, மகேந்திரகிரி மலைகள் உள்ளன. மகேந்திரகிரி மலையின் வடக்குப் பகுதியிலிருந்து உற்பத்தியாகும் பறளியாறு, கல்குளம் மற்றும் விளவங்கோடு தாலுகாக்களின் வழியாக ஓடித் திருவெட்டாற்றில் கலந்து தேங்காய்ப்பட்டணம் கடலோடு சேர்கிறது. நாஞ்சில்நாட்டின் வேளாண்மைக்காகப் பறளியாற்றின் குறுக்கே பாண்டிய மன்னனால் கட்டப்பட்ட ‘பாண்டியன் அணை’ கல்குளம் தாலுகாவில் உள்ளது. தாய்த் தமிழகத்தோடு பண்பாட்டுத் தொடர்பை ஓரளவு வைத்திருப்பது தோவாளை தாலுகா என்பதால்தான் நாஞ்சில்நாட்டை மொத்தத்திற்கும் சேர்த்துக்கொண்டிருக்கலாம். ஆரல்வாய் மொழிக் கணவாய் தமிழ்நாட்டிலிருந்து துண்டிக்கும் வகையில் அமைந்து, நெல்லையைத் தாய்த் தமிழகத்தின் எல்லையாகவும் குமரியைத் தொல்லையாகவும் ஆக்கிவிட்டது.
தமிழகத்தோடுள்ள தொடர்பு நிலவியல் எல்லை என்பதையும் தாண்டி வரலாற்றிலிருந்தே அதற்கான ஆதாரங்களை நாம் கண்டுகொள்ள முடியும். நாஞ்சில் நாட்டைப் பாண்டியர்களும் அதன் பின் சோழ மன்னர்களும் ஆண்டபோது, விளவங்கோடு பகுதிக் குறுநில மன்னர்களான ஆய் மற்றும் வேணாட்டரசர்களின் கீழ் இருந்துவந்தது. பாண்டிய மன்னர்கள் ஆய்க்குறுநில மன்னர்கள்மீது தொடர்ந்து படையெடுப்புகளை நடத்தினார்கள். மேற்குத் தொடர்ச்சி மலைக்குக் கிழக்கே ஆய் மன்னர்களின் ஆதிக்கம் முற்றிலும் சிதைக்கப்பட்டதால் மேற்குப் பகுதியில் அவர்கள் நிலைபெற்றனர். இந்தப் பேரரசு – சிற்றரசு மோதல்தான் இன்றளவும் நீடித்துக்கொண்டிருக்கிறது. அகஸ்தீசுவரம், தோவாளை ஆகிய இரு தாலுகாக்களைக்கூட ‘நாஞ்சில் நாடு’ என்று திட்டவட்டமாகச் சொல்ல முடியாது. கல்வெட்டுக் குறிப்புகள் அகஸ்தீசுவரம் தாலுகாவிலுள்ள பல பகுதிகள், அதாவது கன்னியாகுமரி, சாமித்தோப்பு, சுசீந்திரம், வடசேரி இவையெல்லாம் ‘புறத்தாய நாடு’ என்பதன் கீழ் அடங்கியிருந்ததாகக் கூறுகிறது. இது தவிரக் கல்குளம் தாலுகாவில் ‘வள்ளுவ நாடு’ என்றொரு நாடு இருந்த தகவலையும் அறிகிறோம். உழக்கிலே கிழக்கு மேற்கு என்றாற்போல முஞ்சிறைச் செப்புப்பட்டயங்களைப் பார்க்கும்போது, முடாலநாடு, தெங்க நாடு, ஓமாயநாடு, குறும்பனைநாடு என்று பலநாடுகள் இருந்திருக்கும்போது பண்பாட்டுக்குள்ளே மாற்றங்களும் வித்தியாசங்களும் உருவாகாமலா இருக்கும்?
வட்டாரம்சார்ந்தும் சாதிசார்ந்தும் மொழிசார்ந்தும் பண்பாடுசார்ந்தும் எத்தனையோ பிரிவுகள் இந்த இரண்டாயிரத்துக்கும் குறைவான சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்ட, மொத்தத் தமிழ்நாட்டில் 1.29 சதவீதம் நிலமுடைய, இந்தப் பகுதியில் காணப்படுகின்றன. சேரநாட்டு அரசதிகாரத்தின் கீழாகவும் பாண்டிய மன்னர்களின் ஆட்சியிலும் சோழர்களின் அதிகாரத்திலும் மலையாள ஆட்சியின் இன அழிப்பு நடவடிக்கையின் கீழும், பல்வேறு அரசியல் போராட்டங்களின் களமாகவும் இப்பகுதி திகழ்ந்துள்ளது. இயேசுவின் சீடரான தோமா, பிரான்சிஸ் சேவியர், வாஸ்கோடகாமா, இஸ்லாமியரான முகிலன், அய்யா வைகுண்டர், நாராயண குரு, டிலனாய், றிங்கல் தௌபே, புத்தசமயம், சமணசமயம், விவேகானந்தர் தவம், பீர்முகமது அப்பா ஞானி இன்னும் எத்தனையோ சிந்தனைகள் முட்டி மோதிநிற்கும் களம் இது. எழுத்தாளர்களிடம் இந்த வேறுபாடுகள் மிகப் பெரியதாக விளங்குகின்றன.
ஒரே சாதிசார்ந்த, ஒரே மதம்சார்ந்த இரண்டு எழுத்தாளர்கள் ஹெப்சிபா ஜேசுதாசனும் ஐசக் அருமைராசனும். ஆனால் எழுத்தில் வேறுபடுகிறார்கள். ஒரே வட்டாரத்தைச் சேர்ந்த ஐசக் அருமைராசனுக்கும் சுந்தர ராமசாமிக்கும் இடையே பெருத்த வேறுபாடுகள். இருவருமே புன்னைக் காடு பற்றி எழுதி இருந்தாலும் இரண்டுமே வேறுபட்டவை. நீல. பத்மநாபனின் தலைமுறைகள் சாதிசார்ந்தும் தோப்பில் மீரானின் சாய்வு நாற்காலி சமயம்சார்ந்தும் வெளிப்படுகின்றன. மீனவர் சமுதாயத்திலிருந்தும் ஆதிவாசிகள் சமூகத்திலிருந்தும் காத்திரமான படைப்புகள் இன்னும் வெளிப்படவில்லை. தமிழவன், லஷ்மி மணிவண்ணன் ஆகிய இருவரின் எழுத்துக்களும் ஏனைய குமரிமாவட்ட எழுத்தாளர்களிடமிருந்து வேறுபட்டுத் தனித்து நிற்பவை. புனைகதை எழுத்துக்களைவிடக் கவிதைகளில் இந்த வேறுபாடுகள் துல்லியமாகத் தெரிகின்றன. இவை எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக ‘நாஞ்சில் இலக்கியமாக’ எப்படிப் பொதுவாக்க முடியும்?
இந்த உண்மையை உணர்ந்த நாஞ்சில் நாடன் கூறுகிறார், “பொதுவாக ஆராய்ச்சியாளர்கள் சுந்தர ராமசாமியின் ஒரு புளிய மரத்தின் கதையையும் நீல. பத்மநாபனின் தலைமுறைகளையும் ஹெப்சிபா ஜேசுதானின் புத்தம் வீட்டையும் தோப்பில் முகம்மது மீரானின் நாவல்களையும் ஜெயமோகனின் ரப்பரையும் ஐசக் அருமைராசனின் கீறல்களையும் எனது நாவல்களையும் நாஞ்சில் வட்டார வழக்கு நாவல்கள் என்கிறார்கள். இது எவ்வளவு நகைப்புக்குரிய பகுப்பு. இவர்கள் எழுதுவது எல்லாம் ஒரு மொழியா? ஒரு வட்டாரமா? எவ்வளவு வேறுபாடுகள் கொண்ட மொழி, வாழ்க்கை, பண்பாடுகள்” (‘எனது நாவல்களும் வட்டார வழக்கும்’ கட்டுரையிலிருந்து.)
ஒரு வட்டாரம் அதற்குள்ளேயே சுழலும்போது மதம் அல்லது சாதியின் மேட்டிமைப் பண்பால் இறுகிவிடக்கூடிய அபாயம் உண்டு. பிறசமூகங்களுடன் கலப்பை ஏற்படுத்தும்போது அந்த வட்டாரம் படைப்பிற்குள் விரிவடைந்து இன்னொரு பரிமாணம் பெறுகிறது. நாஞ்சில் நாடனின் என்பிலதனை வெயில் காயும் நாவல் இதற்கு உதாரணம். அரங்கநாதனின் பரளியாற்று மாந்தர்கள் நாவலில் வரும் நல்ல பெருமாள் உதாரணம். ஒரு வட்டாரம் எனப் பகுத்த எல்லைக்கு உள்ளேயும் நமக்குத் தெரியாத வாழ்க்கை இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது என்பதற்கு வாஸவேச்வரம் கிருத்திகாவும் பா. விசாலமும் அழகிய நாயகி அம்மையாரும் சாட்சிகள்.
பிறசமூகங்களிடையே கலப்பு ஏற்படுத்தி எழுதுபவர் விளவங்கோடு வட்டார எழுத்தாளர் தோப்பில் மீரான். இவரளவுக்கு இஸ்லாமிய – மீனவ மக்களின் பேச்சைக் கலந்து எழுதிய எழுத்தாளர்கள் குமரி மாவட்டத்தில் வேறு எவரும் இல்லை. கரையோரம் வாழும் நாடார், ஆசாரி, புலையர், வண்ணார், காணி போன்ற சிறுகுழுக்களின் அடையாளங்களையும் பதிவுசெய்தவர் இவர். சாதிக்கலவரத்தில் தப்பியோடிய இஸ்லாமியக் குழந்தைக்குப் புலையர் சாதி தேவி பால்கொடுப்பது, இரவில் ஓலைச்சூட்டுப் பந்தம் கொடுக்க இஸ்லாமியரிடையே குடியமர்த்தப்பட்ட இந்து அப்பா, ஆங்கிலப் பள்ளியை சரஸ்வதி கோயில் என்று கூறிக் கொளுத்த மறுக்கும் தாழ்த்தப்பட்ட கறுப்பன், முன்சிறை சின்னான் ஆசான் போன்றவர் மாணிகளின் மருத்துவப் பணிகளை விதந்தோதுவது போன்ற சித்தரிப்புகள் மீரானைப் பெருந்தன்மை மிக்க படைப்பாளியாக்குகின்றன. இளைய தலைமுறைப் படைப்பாளிகள் பார்த்துப் படிக்க வேண்டிய மிகப் பெரிய முன்னுதாரணத்தை மிகப் பிந்தி இலக்கிய உலகில் வெளிப்பட்ட இந்த மூத்த எழுத்தாளர் தருகிறார்.
விளவங்கோடு வட்டாரத்தில் ஜோசப்பிலிப், அசோகஜெயன், ஜெயடேவி, ஜே. ஆர். வி. எட்வர்ட், அதங்கோடு கலா போன்ற எழுத்தாளர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களின் எழுத்துக்களில் கேரள எல்லைப் பகுதியில் அரிசி கடத்துபவர்கள், முந்திரி ஆலைத் தொழிலாளர்கள், வயோதிகக் காலத்திலும் பனையேறிப் பிழைப்பவர்கள், கேரளா சென்று பிழைக்கும் கட்டடத் தொழிலாளர்கள், ரப்பர் பால் வெட்டும் தொழிலாளர்கள் போன்றவர்களின் அவலங்கள் வெளிப்படுகின்றன. குமரிமாவட்டத்தின் இதரப் பகுதி எழுத்தாளர்களிடமிருந்து தனித்தும் வித்தியாசப்பட்டும் எழுதும் இவர்கள் ஒவ்வொரு தொகுப்புடன் அடங்கிப்போனதால் தாய்த் தமிழகம் இவர்களை அறியும் வாய்ப்பு இல்லாமற்போய்விட்டது.
விளவங்கோடு வட்டாரத்தில் தற்போது குறும்பனை பெர்லின், புத்தன்துறை தாமஸ் போன்ற எழுத்தாளர்கள் மீனவர்களிடையே தோன்றி எழுதுகிறார்கள். இவர்களின் எழுத்துக்களைச் சற்றுப் பொறுத்திருந்து மதிப்பிடலாம். அதுவரைக்கும் ஒட்டுமொத்த ஆதரவை வழங்கி நிலைநிறுத்துவோம். ஆதிவாசிச் சமூகம் இவர்களைப் போல் தனக்குள்ளிருந்து ஒரு எழுத்தாளனை நாளை தரலாம். சுரேஷ்சாமியார் காணி என்ற பழங்குடி பாரதி போன்ற காணி மக்களின் முன்னேற்றத் தொண்டர்கள் இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டால் நல்லது. இந்த வித்தியாசங்கள் அனைத்தையும் உள்ளடக்கி ‘குமரி மண்ணின் எழுத்து மரபு’ எனக் கூறலாமே தவிர, ‘நாஞ்சில்’ என்பதன் கீழாகவோ அதற்கெதிராகத் தக்கலையில் சிலர் ‘வேணாடு’ என்று நிலைநிறுத்துவதுபோலவோ செயல்பட்டால் அவை எல்லாம் சாதியை நிலைநிறுத்தும் மரபுகளாக மாறிவிடும்.
விழிபிதுங்கி நிற்பவன் வாசகன். சகலத்தையும் வாசித்து முடிக்கும் முன்னரே காலண்டரில் தேதிகள் பறக்கும் வேகத்தில் அடுத்த மாதத்தின் முதற்கிழமை தலைநீட்டிவிடுகிறது. பேச்சினிடையே நாஞ்சில் நாடன் ஒருமுறை, “வாங்குற புஸ்தகத்தையெல்லாம் படிக்கணும்னு ஆசைப்படறது ஒரு வகையில சாகாவாரம் கேட்கற மாதிரி” என்றது நினைவுக்குவருகிறது.
‘ஆனந்த விகட’னில் தான் எழுதிய ஒரு கட்டுரைக்கு விளக்கமளிக்க பெருமாளைத் தொடர்புகொண்டதாகவும் அவர் அளித்த தமிழக வரலாற்று ஆவணங்களைக் கொண்டு, தான் தெரிவித்த கருத்தில் உறுதியாக நிற்க முடிந்தது எனவும் நாவலாசிரியர் நாஞ்சில் நாடன் நினைவுகூர்ந்ததோடு மண்டிகர் வாழ்க் கையை அற்புதமாக அவர் பதிவு செய்துள்ள விதத்தையும் பாராட்டினார்.
ராஜமார்த்தாண்டன் கவிதைகள் எழுதியிருக்கிறார், இதழ் நடத்தியிருக்கிறார், பெரிய இதழில் பணியாற்றியிருக்கிறார். ஆனால், கவிதை விமரிசகராகவே அவரது இடம் உறுதிப்பட்டிருப்பதாகக் கூறிய நாஞ்சில் நாடன் “நான் சுமார் நாற்பது வருடங்களாகச் சுக்குப்பால் குடித்து வருகிறேன் குடிக்கும் ஒவ்வொரு முறையும் நாக்கு பொத்ததுண்டு. ஆனால் ராஜமார்த்தாண்டனோடு பலமுறை இலக்கிய விவாதத்தில் ஈடுபட்டபோது வார்த்தைகளில் சூடேறி நட்புறவு பொத்ததில்லை என்று கூறினார்.
பாரதியார் புதுவையில் இருந்தபோது அவருக்குக் குறிப்பறிந்து உதவி செய்ய ஒரு செட்டியார் நண்பர் எப்போதும் உடனிருப்பார் என்று வ.ரா. தமது நூலில் குறிப்பிட்டுள்ளார். இதுபோலவே சு.ரா.விற்கு நண்பராக எம்.எஸ். இருந்தார் என வரலாற்றாய்வாளர் அ.கா. பெருமாள் கூறினார். சு.ரா. வீட்டில் நிகழும் இலக்கிய விவாதங்களில் எம்.எஸ். இருப்பார். ஆண்டுகள் குறித்தோ ஆசிரியர் பெயர் குறித்தோ சந்தேகம் வரும்போது எம்.எஸ். பக்கம் சு.ரா. திரும்புவார். அதற்குரிய பதிலை மட்டும் ஒரு சில சொற்களில் அவர் கூறுவார். அளவாகவே பேசுவார். உணவிலும் கட்டுப்பாடு உண்டு. தமது அடையாளம் சு.ரா.வின் நண்பர் என்றிருக்க வேண்டும் எனக் கருதுவார். காகங்கள் முதல் கூட்டத்தின் முடிவில் யாரும் எதிர்பாராத நேரத்தில் நாஞ்சில் நாடன் நாவல் குறித்த தமது விமரிசனக் கட்டுரையைப் படித்தார். நாஞ்சில் நாடன் அவரைக் குறிப்பிடும்போது ‘நோய்களை அண்டவிடாதவர்’ என்பார். ‘காலச்சுவடு’ முதல் இதழின் உள்கட்டமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை ‘ஒரு மாதிரி இதழ்’ தயாரித்து அளித்தார். செயல் திறன் மிக்கவர் என்று அ.கா. பெருமாள் தமது பாராட்டுரையை நிறைவுசெய்தார்.
நாஞ்சில் நாடன் | நடுநிலைச் செம்மல் விருது |
சென்னை சங்கமம்
தமிழ் இயல் கருத்தரங்கம்
சொற்பந்தல்களைத் தாண்டி ஓர் அரங்கம்
பழ. அதியமான்
‘நாவலின் எதிர்காலம்’ நாஞ்சில் நாடனின் கையில் இருந்தது. தமிழ் நாவலின் வரலாற்றில் தமிழ் பேசும் மற்ற நாடுகளுக்கும் பங்கு உண்டு என்பதை நிரூபிக்கத் தமிழ் நாவல் வரலாற்றை மறுபடியும் பேசும்படியாயிற்று. ஒரு நாவல் எழுதிப் புகழ் பெற்றவர்கள் உள்பட சக நாவலாசிரியர்களை வஞ்சனையில்லாமல் புகழ்ந்தார். நாட்டில் நடைபெறும் சமூகச் செயல்பாடுகளைப் பற்றிக் கவலைப்படாமல் ஓர் எழுத்தாளனால் கண்ணை மூடிக்கொண்டு எப்படி எழுத முடியும் என்று கேட்டார். நொய்டாவில் நடந்த உடல் உறுப்புத் திருட்டு, பாலியல் வன்முறையாகத் திரிக்கப்படுவதாகப் பத்திரிகைகள்மீது குற்றம்சாட்டினார். இன்று நொய்டாவில் நடந்தது நாளை ஏன் சென்னை, திருப்பூரில் நடக்காது என்று கோபமும் வருத்தமும்கூடிய தாங்கொணாத் துயரத்தோடு வினவினார். வலி நிரம்பிய வாழ்க்கையின் வேதனையைப் பற்றிப் பேசாமல் நம் கதைகள் தொடர்ந்து காப்பி ஆற்றிக்கொண்டிருக்க இயலாது என்று முடித்தார் தீர்க்கமாக. பிரபஞ்சனின் தொனியிலிருந்து மாறுபடாததாகவே நாஞ்சில் நாடனின் குரல் அன்று ஒலித்தது.
வட்டாரப் படைப்புகளும் ஒற்றைநோக்கும்
பெருமாள்முருகன்
சாதிகளாகப் பிரிந்து கிடக்கும் தமிழ்ச் சமூகத்தில் எழுத்தாளனுக்குப் பலவிதத் தடைகள் உள்ளன. சுதந்திரமாகப் படைப்பை உருவாக்க வாய்ப்பில்லை. திராவிட இயக்க எழுத்துக்கள்போல ஒரு ஊரில் ஒரு பண்ணையார், அவனிடம் ஒரு அடிமை என்பதாகச் சாதிப் பெயர்களை அடையாளப்படுத்தாமல் எழுதினால் பிரச்சினையில்லை சாதிப்பெயர்களைக் குறிப்பிட்டு எழுதும்போது மனம் தன்னை அறியாமலே சில எச்சரிக்கைகளுக்கு ஆளாகிவிடுகிறது. ஆகவே நிலவுடைமைகொண்ட, பிற்படுத்தப்பட்ட சாதிகளைப் பற்றி எழுதப்பட்டவையான வட்டார இலக்கியங்கள் தமக்கெனச் சில எல்லைகளை வகுத்துக்கொண்டன என்று சொல்லலாம்.
சாதிக்கு மேன்மைதரும் வகையாக எழுதுவது அல்லது கீழ்மைதரும் விசயங்களைத் தவிர்த்துவிடுவது என்னும் வரையறை இவற்றிற்குள் செயல்பட்டுள்ளது. ஒரு சாதியின் ஒரு குடும்பத்துப் பிரச்சினைகளை எழுதிவிட்டால் போதும். ஒரு சாதிக்குள்ளேயே நிகழும் பங்காளித் தகராறு, குடும்பப் பிரச்சினைகள் ஆகியவற்றை எழுதுவது என்பதான வரையறைகள் காணப்படுகின்றன. ஆர். சண்முகசுந்தரம், ஹெப்சிபா ஜேசுதாசன், நாஞ்சில் நாடன் உள்ளிட்ட பலரது நாவல்களை அவ்வாறு காணலாம்.
சு.ரா. பக்கங்கள்
காலத்தின் கனல் – 4
4.1.97 சனிக்கிழமை
நேர் நிரை – சிறுகதை. நாஞ்சில் நாடன். ‘ஓம் சக்தி’ தீபாவளி மலர் 96.
கூழைக் கொம்புப் பசு. காளையங்கன்றுகள். கடைசி ஈத்து. (பிரசவம். மிருகங்கள் சம்பந்தப்பட்டு). கிடாரியா கிடேரியா? ஆனை அறுகம் புல். பால்ராஜ் ஈர்நேர் சம்சாரி. தொழுப்பிறப்பு. பின் ஈன்ற இரண்டையும் காயடித்து மூக்குப் பூறி லாடம் அடிக்க வேண்டும். காலால் பசு ஒற்ற ஆரம்பித்தது.
நல்ல தமிழ். பின்னணியையும் வாழ்க்கை முறையையும் கண் முன்னே நிறுத்த உதவும் மொழி.
பால்ராஜ் தன் சகோதரி பேரின்பத்திற்குத் தன் வீட்டுப் பசுங்கன்றைத் தர விரும்பி அவள் வீட்டுக்குச் செல்கிறான். கதையின் முக்கால் பங்கு இந்த விஷயத்தை நுட்பத்துடன் சொல்கிறது. அடுத்தது கங்காதரனைப் பற்றியது. சுகவாசி, மண்ணோடு சம்பந்தமில்லாமல், உழைப்பில் ஈடுபடாமல் இருக்கிறான். கங்காதரன் ஓட்டலில் உணவருந்தும்போது பால்ராஜ் வந்து அவன் மேஜைமீது உட்கார்ந்து கொள்கிறான். கங்காதரன் இடம் மாறுகிறான். கங்காதரனிடம் உழைப்பும் இல்லை; காலமாற்றத்தை ஏற்றுக்கொள்ளவும் முடிவதில்லை. பால்ராஜின் வாழ்க்கை, பேரின்பத்தின் வாழ்க்கை விரும்பும்படி இருக்கிறது.
ஜே.ஆர்.வி. எட்வர்ட்
குமாரசெல்வாவின் கட்டுரை (காலச்சுவடு, மார்ச் 2011) தொடர்பான எனது கருத்துகள்:
ஒட்டுமொத்த குமரிமாவட்டத்தையும் நாஞ்சில்நாடாகக் கருதும் மயக்கம் பெரும்பான்மையான குமரி மக்களிடமும் இருக்கிறது. ‘நாஞ்சில் நாடு’ என்பது ஒட்டுமொத்த குமரி மண்ணையும் குறிப்பதல்ல என்பது அநேகருக்குத் தெரியாது. நாகர்கோவில் – கோவை ரயிலுக்கு ‘நாஞ்சில் எக்ஸ்பிரஸ்’ என்று பெயர் சூட்ட வேண்டுமென எழுந்த கோரிக்கை இந்த அறியாமையின் விளைவே.
குமரி மக்களின் மனங்களில் குடிகொண்டுள்ள கிழக்கு x மேற்கு என்ற எதிர்வு, நாஞ்சில் நாடு x விளவங்கோடு எதிர்வின் நீட்சியாகவே தெரிகிறது. இது இப்போது மறைந்துவருகிறது என்றாலும் அதன் சுவடுகள் பலரது மனங்களிலும் இன்னும் அழியாமல் உள்ளன.
‘விளவங்கோட்டான்’ என்னும் பதத்தைப் ‘பண்பாடற்றவன்’ என்னும் பொருளில் பிரயோகிப்பவர்கள் இன்றும் இருக்கிறார்கள். அப்படிப் பிரயோகிப்பவர்களில் பெரும்பாலோரும் கற்றவர்கள் என்பது ஒரு கூடுதல் தகவல். பிடிவாதம், மனஉறுதி, பின்வாங்காமை இவை விளவங் கோட்டுச் சுபாவங்களாம். குமரி மாவட்ட விடுதலைப் போரில் விளவங்கோட்டுப் பிற்பட்ட வகுப்பினர்கள் காட்டிய தீவிரமும் உறுதியும் அவர்களுக்கு இந்த நற்பெயரைப் பெற்றுத் தந்திருக்கலாம். ஆனால் அது கிண்டல் கேலியாக எதிர்மறைப் பொருளில் மாறிய கதையின் பின்னணி தெரியவில்லை. ‘விளவங்கோட்டான்’ என்பது ஒட்டுமொத்த விளவங்கோட்டு மக்களையும் குறிப்பதில்லை. விளவங்கோட்டு உயர்சாதியினர் இதற்குள் அடங்கமாட்டார்கள்.
நாஞ்சில்நாட்டு மக்கள் நெல்லையுடன் நெருக்கமான தொடர்பு வைத்திருப்பார்கள். விளவங்கோட்டு மக்களோ திருவனந்தபுரம் மாவட்டத்துடன் தொடர்பும் ஈடுபாடும் கொண்டிருந்தவர்கள். கேரளத்திலிருந்து பிரிந்து தமிழகத்துடன் இணையப் போராடினாலும் கேரளத்து மக்களுடன் தொடர்ந்து பரிமாற்றமும் மணஉறவும் செய்துவருபவர்கள் விளவங்கோட்டு மக்கள்.
குமாரசெல்வா கட்டுரை ஒரு ஆழமான ஆய்வுக்கான தொடக்கப்புள்ளி மட்டுமே. நுட்பமாய் ஆய்ந்து பட்டியலிட எண்ணற்ற விஷயங்கள் இருக்கின்றன.
எதிர்வினை
தமிழர் பண்பாடு என்னும் கற்பிதம்
மதிகண்ணன்
குமரி மரபு, நாஞ்சில் மரபாக மாறிப்போனதாகக் கூறவரும் கட்டுரையில் ‘உன் பேச்சு உன்னை வெளிப்படுத்துகிறது’ (மத்தேயு 26:73) என்னும் விவிலியத்தின் வரிகளை முன்னொட்டாகக்கொண்டு தொடங்குகிறார் குமார செல்வா. 15 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையில் லயோலோ கல்லூரியின் தொடர்பு மற்றும் பண்பாட்டியல் துறையால் சு. சமுத்திரத்தின் தலைமையில் ஒருங்கிணைக்கப்பட்டிருந்த பின் நவீனத்துவக் கருத்தரங்கில் மலையாளம் கலந்த தன் பேச்சுமொழியில் அற்புதமாகப் படைப்பாளராகத் தான் பரிணாமப்பட்ட வரலாற்றைச் சொல்லிக்கொண்டிருந்தார் குமார செல்வா. அந்தக் கருத்தரங்கில் அனைவரையும் கவனிக்கவைத்த மிகச் சிறந்த பேச்சுகளில் குமார செல்வாவினுடையதும் ஒன்று. அந்த உரையினூடே தான் பள்ளிக் கல்வி முடிக்கும்வரை பாடத்திட்டத்திற்கு வெளியே தனக்குப் படிக்கக் கிடைத்த ஒரே நூல் பைபிள் மட்டுமே எனக் குறிப்பிட்டார் அவர். இளமைக் காலந்தொட்டு தொடர்ந்த பாதிப்பின் வழிப்பட்டதாகவே இந்தக் கட்டுரையின் முன்னொட்டை என்னால் பார்க்க முடிகிறது. அது அவரது நம்பிக்கை / உள்ளுணர்வு / ஊறிப்போன அகம் சார்ந்த விஷயமன்றி வேறல்ல. பழையதொரு (புனித / பாவ) நூலின் வரிகள் அதற்கு எதிர்மறைப் பொருள் தரும் படைப்பிற்கோ கட்டுரைக்கோ முன்னொட்டாக இருக்குமாயின் அதுவும்கூட எழுத்தாளரின் அகம் சார்ந்த விஷயம்தான். இதுவும் பண்பாட்டின் அங்கம்தான் எனில் பண்பாடென்பது மொழி சார்ந்ததா? மதம் சார்ந்ததா?
வெவ்வேறு வட்டார வழக்கில் எழுதக்கூடிய பலரையும் நாஞ்சில் இலக்கியவாதிகள் என்பது தவறு. சிறு பகுதியிலேயே இத்தனை மொழி, வாழ்க்கை, பண்பாடுகள் எனில் ஒட்டு மொத்தத் தமிழகத்திற்கும் ஒரே மொழி, ஒரே வாழ்க்கை, ஒரே பண்பாடு என்பது சாத்தியமா?
a
Thendral Interview with Nanjil Nadan by Aravind Saminathan
‘தலைகீழ் விகிதங்கள்’ என்ற நாவலின் மூலம் தமிழ் இலக்கிய உலகின் கவனம் கவர்ந்த படைப்பாளி நாஞ்சில்நாடன். நாஞ்சில் நாட்டின் தனித்துவமிக்க மொழியில் சமூக அக்கறையுடன் வீரியமிக்க படைப்புகளைத் தந்து கொண்டிருப்பவர். நவீனச் சூழலில் நாம் இழந்து கொண்டிருக்கும் விழுமியங்களை, பண்பாட்டை, கலாசாரத்தை தமது காத்திரமான படைப்புகள் மூலம் தொடர்ந்து வலியுறுத்தி வருபவர்.
‘என்பிலதனை வெயில் காயும்’, ‘மாமிசப் படைப்பு’, ‘மிதவை’, ‘சதுரங்கக் குதிரை’, ‘எட்டுத்திக்கும் மதயானை’ ஆகியன இவரது நாவல்கள். ‘தெய்வங்கள் ஆடுகள் ஓநாய்கள்’, ‘வாக்குப்பொறுக்கிகள்’, ‘உப்பு’, ‘பிராந்து’, ‘பேய்க்கொட்டு’, ‘சூடிய பூ சூடற்க’ ‘கான்சாகிப்’ போன்றவை சிறுகதைத் தொகுதிகள்.
‘சூடிய பூ சூடற்க’ 2010ம் ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது பெற்றது. ‘மண்ணுளிப்பாம்பு’, ‘பச்சை நாயகி’ போன்றவை கவிதைத் தொகுதிகள்.
‘நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை’, ‘நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று’, ‘நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை’, ‘தீதும் நன்றும்’, ‘காவலன் காவான் எனின்’, ‘திகம்பரம்’ போன்றவை கட்டுரைத் தொகுப்புகள்.
இவரது கதைகள் அனைத்தையும் தொகுத்து ‘தமிழினி’ வெளியிட்டுள்ளது. தனது படைப்புகளுக்காக இலக்கியச் சிந்தனை, தமிழ் வளர்ச்சித் துறை, பம்பாய், கல்கத்தா தமிழ் எழுத்தாளர் சங்கம், திருப்பூர் தமிழ்ச் சங்கம், கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் உள்ளிட்ட பல அமைப்புகளிலிருந்து பரிசுகளும் பாராட்டுகளும் பெற்றவர்.
கலைமாமணி, கண்ணதாசன் விருது போன்ற விருதுகள் பெற்றவர். இவரது படைப்புகளை ஆராய்ந்து 15க்கும் மேற்பட்டவர்கள் முனைவர், இளமுனைவர் பட்டம் பெற்றுள்ளனர். தில்லிப் பல்கலைக்கழகம், கேரளப் பல்கலைக்கழகம், மனோன்மணீயம் சுந்தரனார், மதுரை காமராசர், பாரதியார் உள்ளிட்ட பல பல்கலைக் கழகங்களில், கல்லூரிகளில் இவரது படைப்புகள் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. ஆங்கிலம், ஃப்ரெஞ்ச், மலையாளம் உள்ளிட்டவற்றில் இவரது படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அமெரிக்கப் பயணத்திற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக இருந்தவரிடம் உரையாடினோம். அதிலிருந்து….
கே: உங்கள் மனதில் இலக்கிய விதை விழுந்தது எப்போது?
ப: பள்ளியில் நான் படித்துக் கொண்டிருந்த காலத்திலேயே தான். எங்கள் ஊரில் பொதுவுடைமை மற்றும் திராவிட இயக்கத்தினர் அரசியல் கூட்டம் நடத்துவார்கள். அதில் பேச்சாளர்கள் சொல்லும் பாடல் வரிகள் என்னை மிகவும் ஈர்க்கும். நூலகத்திற்குச் சென்று அவற்றைத் தேடி முழுமையாக அறிந்துகொள்வேன். பள்ளியில் நடக்கும் கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக நூல்களைத் தேடிப் படிக்க ஆரம்பித்தேன். இப்படி ஏற்பட்டதுதான் இலக்கிய ஆர்வம்.
கே: உங்கள் முதல் படைப்பு பற்றிச் சொல்லுங்கள்…
ப: நான் எம்.எஸ்ஸி. முடித்து விட்டு 1972ல் வேலைக்காக மும்பை சென்றேன். நான் வேலை பார்த்த தொழிற்சாலையில் மராத்தியரும், உத்திரப் பிரதேசத்தினரும்தான் அதிகம் இருந்தனர். ஒரே ஒரு மலையாளி இருந்தார். தமிழர் யாரும் கிடையாது. ஆனால் எனக்கு நிறைய நேரம் கிடைத்தது. அதனால் மும்பை தமிழ்ச் சங்க நூலகத்துக்குப் போக ஆரம்பித்தேன். எனது கிராமம், உறவுகள் பற்றிய ஏக்கம் எப்போதும் மனதில் இருக்கும். எனது தனிமையை, ஏக்கத்தைப் போக்குவதற்காக எழுத ஆரம்பித்தேன். அப்போது பம்பாய் தமிழ்ச் சங்கத்தின் மாத இதழில் என்னை எழுதக் கேட்டுக் கொண்டார்கள். வாராந்திரக் கூட்ட அறிக்கை தயாரிப்பது போன்ற வேலைகளையும் செய்வேன். அந்தக் காலத்தில் ‘விரதம்’ என்ற தலைப்பில் ஒரு சிறுகதையை எழுதி ‘தீபம்’ இதழுக்கு அனுப்பினேன். 1975 ஆகஸ்டில் அந்தச் சிறுகதை வெளியானதோடு, அந்த ஆண்டின் சிறந்த கதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இலக்கியச் சிந்தனை பரிசும் கிடைத்தது. அது தந்த நம்பிக்கையில் தொடர்ந்து எழுத ஆரம்பித்தேன்.
கே: சங்க இலக்கியங்களிலும், தேவார, திருவாசகங்களிலும், கம்பனிலும் நல்ல புலமையுடையவர் நீங்கள் என்பதை உங்கள் படைப்புகளில் காண முடிகிறது. அந்த ஆர்வம் எப்படி முகிழ்த்தது?
ப: என் அப்பாவழித் தாத்தா அந்தக் காலத்தில் வில்லுப்பாட்டுக் கலைஞர்களுக்குப் பாடல்கள், கதைகளைச் சொல்லித் தந்திருக்கிறார். ராமநாடக கீர்த்தனைப் பாடல்களை பாடுவார். குறிப்பாக பங்குனி, சித்திரை மாதங்களில் வீட்டின் படிப்பறையில் அமர்ந்து கிராம மக்களுக்கு ராமாயண, மகாபாரதக் கதைகளைச் சொல்லுவார். என் தந்தைக்குத் திருக்குறளில் ஆர்வம் உண்டு. சிறுவயதில் நான் வாசித்த நூல்களும், மும்பைத் தமிழ்ச் சங்கத்தில் பயின்ற நூல்களும், அங்கு கேட்ட சொற்பொழிவுகளும்தான் எனது பழந்தமிழ் இலக்கிய ஆர்வத்துக்குக் காரணம். மும்பை தமிழ்ச் சங்கத்தில் கி.வா.ஜ., அ.ச.ஞா., குன்றக்குடி அடிகளார், ப. நமசிவாயம், ராதாகிருஷ்ணன், ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள் எனப் பல சான்றோர்கள் வந்து பேசுவர்.
கே: பொதுவாக உங்களது பேச்சைக் கேட்கிறவர்கள், ஒரு தமிழாய்ந்த பேராசிரியரின் உரையைக் கேட்பது போல் இருந்தது என்று சொல்லியிருக்கிறார்கள். பேராசிரியர் ஆக வேண்டும் என்பது உங்கள் சிறுவயது ஆசையாக இருந்ததுண்டா?
ப: நான் பி.எஸ்ஸி. கணிதம் படித்தேன். எங்கள் மாவடத்தில் மேலே எம்.ஏ. தமிழ் படிக்கும் வாய்ப்பு மட்டுமே இருந்தது. என் பெற்றோர், கணிதம் படித்துவிட்டுத் தமிழ் படிப்பதா என்று ஒப்புக் கொள்ளவில்லை. எம்.எஸ்ஸி கணிதம் படிககத் திருவனந்தபுரத்துக்கு அனுப்பினார்கள். நல்ல பல தமிழ்ப் பேராசிரியர்களிடம் அவர்கள் அனுமதி பெற்று வகுப்பில் கலந்து கொண்டு பாடம் கேட்டிருக்கிறேன். அது எனது இந்த உரையாற்றலுக்குக் காரணமாக இருக்கலாம். நான் அடிப்படையில் ஒரு படைப்பிலக்கியவாதி. ஒரு தொழில்முறைச் சொற்பொழிவாளன் பார்வைக்கும், ஒரு படைப்பிலக்கியவாதியின் பார்வைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். அந்த வேறுபாடுதான் ஒருவேளை எனது பேச்சிற்கு பேராசிரியர் தொனியைத் தருகிறதோ என்னவோ. நான் கற்றதைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதுதான் என் ஆர்வமே தவிர, சொற்பொழிவாளனாக அறியப்படுவதில் எனக்கு விருப்பம் இல்லை. எழுத்துதான் என்னுடைய தலையாய பணி. முதற்பணி.
கே: குடும்ப வறுமைச் சூழல் குறித்துச் சொன்னீர்கள். இளமைப்பருவ நாட்களைப் பற்றிச் சொல்லுங்களேன்…
ப: மிகவும் சிரமமான குடும்பச் சூழல். ஒரே ஒரு ஏர்மாடுதான். 3, 4 ஏக்கர் நிலம் குத்தகைக்கு எடுத்தது – நாங்க பாட்டத்துக்கு எடுத்தது என்று சொல்லுவோம் – அதில் பயிர்செய்து, அதில் வரும் வருமானத்தைக் கொண்டு, அப்பா, அம்மா, அப்பாவின் அம்மா, அம்மாவின் அம்மா, நாங்கள் ஏழு குழந்தைகள் எல்லோரும் ஜீவிக்க வேண்டும். நான் முதல் குழந்தை. சாப்பாடே ஒரு போராட்டம்தான். அறுவடை முடிந்து நான்கு மாதம் ஆன பிறகு, அடுத்த அறுவடைக்கு ஒரு மாதம் ஆகும் என்ற நிலையில் பல நாட்கள் பட்டினி கிடந்திருக்கிறோம். மரவள்ளிக் கிழங்கை வேகவைத்துச் சாப்பிட்டிருக்கிறோம். மரவள்ளிக் கிழங்கைப் பறிக்க நான் வடக்குமலைக்கு ஏறிச் சுமந்து வந்திருக்கிறேன். சின்னச் சின்ன கூலி வேலைகளைச் செய்திருக்கிறேன். அதே சமயம் அந்த வேலைகள் என் சுயமரியாதையை பாதிக்க அனுமதித்ததில்லை. துயரப்பட்டிருக்கிறேன்; துன்பப்பட்டிருக்கிறேன். பட்டினி கிடந்திருக்கிறேன். பசி என்றால் என்னவென்று தெரியும். ஆனாலும் என்னுடைய சுயத்தைக் காப்பாற்றிக் கொள்வதில் முனைப்பாகவே இருந்திருக்கிறேன்.
காமராஜர் பள்ளிக் கல்வியை இலவசமாக்கியதால் என்னால் எஸ்.எஸ்.எல்.சி. வரை படிக்க முடிந்தது. நான் பி.யூ.சி. படிக்கும்போது ஆண்டுக் கட்டணம் 192 ரூபாய் கட்டுவதற்காக என் தந்தை கடன் பத்திரம் எழுதிக் கொடுத்துக் கடன் வாங்கி வந்தார். கல்லூரியில் படிக்கும்போது டாக்டர் ராதாகிருஷ்ணன் குடியரசுத் தலைவராக இருந்தார். அவர் நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்காக Loan Scholarship என்ற திட்டத்தைக் கொண்டு வந்தார். அது எனக்குக் கிடைத்தது. அந்தக் கடன் உதவித் தொகையைக் கொண்டுதான் நான் ஆறு ஆண்டுகள் எம்.எஸ்ஸி. வரை படித்தேன். அந்தத் திட்டத்தின்படி, நீங்கள் ஆசிரியர் பணிக்குப் போவதாக இருந்தால் அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டாம். வேறு பணிக்குச் சென்றால் கடனைக் குறிப்பிட்ட காலத்திற்குள் திருப்பிச் செலுத்தியாக வேண்டும். என்னால் ஆசிரியர் பணிக்குச் செல்ல முடியவில்லை. தனியார் பணிதான் கிடைத்தது. மகாராஷ்டிர அரசின் ஆட்சி அதிகாரி மூலம் நான் வாங்கிய கடன் அனைத்தையும் அரசுக்குத் திருப்பிச் செலுத்தினேன். அந்த ரசீதுகளை இன்னமும் பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். இதை எதற்குச் சொல்கிறேன் என்றால், பெற்றோர்கள் பட்டினியும் பசியும் கிடந்து என்னைப் படிக்க வைத்தார்கள். நானும் அந்தப் பொறுப்பை உணர்ந்து விடுமுறை நாட்களில் மண் சுமந்து, செங்கல் சுமந்து, உர மூட்டைகள் சுமந்து படித்தேன். இன்று நல்ல நிலைமையில் இருக்கிறேன். அந்த அனுபவங்களை நினைத்து எனக்கு வருத்தமில்லை. சந்தோஷமாகத்தான் இருக்கிறேன். அவையெல்லாம் சேர்ந்துதான் என்னை ஒரு படைப்பாளியாக்கி இருக்கின்றன.
கே: உங்கள் ‘நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை’ மிக முக்கியமான ஆவணம் என்று சொல்லலாம். அதை எழுதத் தூண்டியது எது?
ப: சுந்தரராமசாமி நாகர்கோவிலில் பாம்பன்விளை என்ற இடத்தில் வருஷத்திற்கு இரண்டு முறை இலக்கிய முகாம் நடத்துவார். நான் அக்கால கட்டத்தில் சிறுகதைகள் மட்டுமே எழுதிக் கொண்டிருந்தேன். சுந்தரராமசாமி என்னிடம் “நீங்கள் வாழும் சமுதாயம் பற்றிய உங்களது 50 ஆண்டுக் கால அவதானிப்புகளையே ஒரு கட்டுரையாக எழுதி வாசிக்கலாமே” என்று சொன்னார். நானும் ஒரு இருபது பக்கத்துக்குக் கட்டுரை எழுதி வாசித்தேன். அதற்கு நல்ல வரவேற்பு. பின்னர் சுந்தரராமசாமியும் அவரது மகன் கண்ணனும் அதையே ஒரு நூலாக எழுதலாமே என்றனர். அதன்படி அந்தக் கட்டுரையை மேலும் விரிவாக்கி, மேலும் பல தரவுகளையும், பகுப்புகளையும் சேர்த்து நூலாக்கினேன். இப்படி உருவானதுதான் ‘நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை’. அந்த நூலில் நான் என்னுடைய நினைவில் இருந்து அந்தச் சமுதாயத்தை சின்ன வயதில் நான் எப்படிப் பார்த்தேன், இப்போது எப்படிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன், என்ன நடந்தது, என்ன நடந்திருக்க வேண்டும் என்பதையெல்லாம் விலகி நின்று ஒரு பொதுமனிதனாகப் பார்த்து எழுதினேன். நம்முடைய மொழியில் அது மாதிரியான புத்தகங்களில் அதுதான் முதல் என்று சொல்லலாம்.
கே: உங்கள் சிறுகதைகளில் நகைச்சுவை, சமூகத்தின் மீதான தார்மீகக் கோபம் என எல்லாவற்றையும் வெளிப்படுத்தி அறச்சீற்றம் காட்டும் ‘கும்பமுனி’ பற்றிக் சொல்லுங்கள்…
ப: சில பிரச்சனைகளை நாம் கதையாக எழுத முடியாது. ஆனால் கதை என்ற வடிவத்தைத் தாண்டி அதைச் சொல்ல வேண்டும். அதற்காக நான் ஒரு கதாபாத்திரத்தைச் சிருஷ்டிக்கிறேன். அவர்தான் கும்பமுனி. நான் இன்னும் பல வருடங்கள் கடந்து, ஒரு கிழவனாகி, சமூக நிலைகளைக் கண்டு கோபம் கட்டுக்கடங்காமல் போகும் நிலைமையில் எப்படிச் செயல்படக்கூடும் என்று கற்பனை செய்கிறேன். அதன் விளைவுதான் ‘கும்பமுனி.’ இந்தப் பாத்திரப் படைப்பில் ஓரளவுக்கு நகுலனின் பாதிப்பு உண்டு. அவர் தோற்றம், குணம், செயல்பாடு, விட்டேத்தியான பேச்சு, புலமை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டவர்தான் கும்பமுனி. ஆனால் நான் பேசும் மொழி அவர் மொழி அல்ல. அந்தக் கதாபாத்திரத்தின் மூலமாகச் சிறுகதையாக என்னால் எழுத முடியாத, வெளிப்படையாக எழுதக்கூடாத பலவற்றை என்னால் பேச முடிகிறது. இதுவரைக்கும் கும்பமுனி கதைகள் என்று 11 கதைகள் எழுதியிருக்கிறேன். இன்னும் நிறைய எழுதலாம்தான். ஆனால் ஓராண்டாக கட்டுரை எழுதுவதிலேயே எனது நேரம் போகிறது. மீதி நேரம் தொல்லிலக்கிய வாசிப்பு, இடைவிடாத பயணம் என்று போய்க் கொண்டிருக்கிறது.
கே: படைப்பை விடுத்து அதை எழுதியவரை விமர்சிக்கும் போக்கு இப்போது அதிகரித்திருக்கிறது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
ப: நிச்சயமாக இது படைப்பிலக்கிய வளர்ச்சிக்கு ஆரோக்கியமானது கிடையாது. இதற்கெல்லாம் குழு மனப்பான்மைதான் காரணம். ஒரு படைப்பின் மீது வைக்கப்படும் விமர்சனத்தை நேர்மையாக எதிர்கொள்ள முடியாதவர்கள், சகிப்புத்தன்மை அற்றவர்கள்தான், விமர்சித்தவர் மீது ஜாதிய முத்திரை குத்தியும் தனிப்பட்ட விரோதம் கொண்டும் தனிநபர்த் தாக்குதலில் இறங்குகிறார்கள். ஆனால் இது தமிழ் இலக்கியத்திற்குப் புதிதல்ல. க.நா.சு., வெங்கட் சாமிநாதன் மீதுகூட ஜாதி முத்திரை குத்தினார்கள். பொதுவாகத் தனது ஜாதி பற்றி எழுதும்போது எழுதுபவருக்கு ஒரு சிக்கல் இருக்கும். ‘ஜாதி வெறியர்’ என்றோ ‘சுயஜாதிச் சொறிதல்’ என்றோ முத்திரை குத்தப்படலாம். எனக்கும் இது நேர்ந்திருக்கிறது. நான் கடுமையான ஒரு விமர்சனத்தை ஒரு கவிதை மீதோ, சிறுகதை மீதோ அல்லது ஏதேனும் படைப்பு மீதோ வைக்கும்போது ‘ஜாதி முத்திரை’ குத்துகிறார்கள். ஆனால் நான் அவற்றைப் பொருட்படுத்துவதில்லை. என்னளவில் நான் சுத்தமாக இருக்கிறேன். ஜாதியை வசவாகச் சிலர் பயன்படுத்துவதில் எனக்கு வருத்தமில்லை. ஆனால் நான் அவர்களிடம் திருப்பிக் கேட்கிறேன், “நீங்களும் குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்தானே, உங்கள் ஜாதியைப் பற்றி அவ்வாறு சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா?’ என்று. பதில் வராது. நான் அநியாயமாக ஒரு மதத்துக்கோ, இனத்துக்கோ, குழுவுக்கோ ஆதரவாக இருக்கின்றேனா என்பது பற்றித்தான் கவலைப்படுவேனே தவிர, இது போன்ற முத்திரைகளைப் பற்றிக் கவலைப்பட்டு, அதற்கு பதில் சொல்ல ஆரம்பித்தால் முடிவே இருக்காது.
கே: விருதுகள் தகுதியானவர்களுக்கு வழங்கப்படுவதில்லை; சரியான படைப்புகளுக்கு வழங்கப்படுவதில்லை அல்லது மிகக் காலம் தாழ்த்தி வழங்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டுகள் குறித்து உங்கள் கருத்தென்ன?
ப: இந்தக் குற்றச்சாட்டை உண்மை என்றுதான் சொல்ல வேண்டும். தற்செயலாகத்தான் நல்ல படைப்பாளிகளுக்கு விருது கிடைக்கிறது. விருது அளிக்கும் அமைப்பில் இருப்பவர்கள் யாருக்கும் நவீன இலக்கியப் பரிச்சயம் இருப்பதில்லை. அவர்கள் விருதுக்கு மூன்று புத்தகங்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்றால் அதை வாசித்திருப்பார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. நடுவர்களாக நியமிக்கப்படுவர்களுக்கு அந்த ஆண்டில் என்ன புத்தகங்கள் புதிதாக வந்திருக்கின்றன என்பது தெரியாது. சில கல்வித்துறையில் இருக்கிறார்கள். அவர்களுக்கும் நவீன எழுத்துக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. நான் யார்மீதும் குற்றம் சாட்ட விரும்பவில்லை. யார் நன்றாக எழுதக் கூடியவர், யார் எழுதாதவர் என்பதுகூட அவர்களுக்குத் தெரியாது. காரணம், அவர்கள் நவீன எழுத்துக்களை வாசிப்பதில்லை. மேலும் நம் மொழியில் பல விருதுகள் பரிந்துரைகள் மூலம் வாங்கப்படுகின்றன. அரசியல் செல்வாக்கை, ஜாதி செல்வாக்கைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். நடுவர்களின் வீடுகளுக்கு நடையாய் நடந்து விருது வாங்குபவர்களும் உண்டு. சமீபத்தில் ஒரு நடுவர், “எட்டுமுறை வீட்டுக்கு வந்து பார்த்துட்டுப் போனான்யா. சரி என்னதான் பண்றது. போனாப் போவுது கொடுத்துருவோமேன்னு சொல்லிக் கொடுத்திட்டோம்’ என்றார். ஒரு விருதின் முதலிடத்துக்கு நான்கு நல்ல புத்தகங்கள் வருகிறது. நான்கிற்குமே கொடுக்க முடியாது. அதில் ஒன்றுக்குக் கொடுக்கிறார்கள் என்றால் நமக்கு வழக்கில்லை. ஆனால் எந்தவிதத் தகுதியுமில்லாத, மொழியினுடைய மேன்மையையோ, சிறப்பையோ, நவீனத்துவத்தையோ வெளிப்படுத்தாத, புலப்படுத்தாத புத்தகங்களுக்கு விருதுகள் வழங்கப்படும்போதுதான் நாம் அதுபற்றி விமர்சிக்க வேண்டியதாகிறது. நம்மை அது வருத்தப்பட வைக்கிறது.
கே: விஞ்ஞான யுகம், வளர்ச்சி என்று ஒருபக்கம் சொல்கிறோம். இன்னொரு பக்கம் நம் மண்சார்ந்த பலவற்றை இழந்து வருகிறோம். இது குறித்த உங்கள் கருத்தென்ன?
ப: ஒரு படைப்பாளியால் உணர்வை எழுப்ப, கவனத்தை ஈர்க்க, முடியும். அதை வளர்த்து முன்னெடுத்துச் செல்வது ஒரு நல்ல அரசியல் தலைமையால் மட்டுமே முடியும். நமது துர்ப்பாக்கியம், இந்தியாவிலும் சரி, தமிழ் நாட்டிலும் சரி, நம்பிப் பின்னால் செல்லக்கூடிய அரசியல் தலைமை அரிதாகிவிட்டது. நம்பத் தக்கவர்களோ முதுமையடைந்து விட்டார்கள். இளைஞர்களுக்குப் சமூகப் பிரச்சனைகள் மீது பெரிதாக அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை. அவர்களுடைய ஆர்வம் வாழ்க்கை வசதிகளின் மீதுதான் அதிகம் இருக்கிறதே தவிர ஒரு பொதுப் பிரச்சனைக்காகத் தெருவில் இறங்கிப் போராட வேண்டும், ஒரு குரலாவது கொடுக்க வேண்டும் என்பதில் இல்லை. 1964-65ல் ஹிந்தியை எதிர்த்து நடத்திய போராட்டத்திற்குப் பின் தமிழ்நாட்டில் இளைஞர்கள் ஒன்றுகூடிப் போராட்டம் எதுவுமே நிகழவில்லை. போராட்டம் நடக்க வேண்டும் என்பது நமக்கு ஆசை கிடையாது. ஆனால் நாட்டில் பல்வேறு பிரச்சனைகள் இருக்கும்போது அதற்கு எந்த எதிர்வினையும் காட்டாது இளைஞர்கள் இருப்பது எதிர்கால சமூகத்துக்கு நல்லதல்ல. இலங்கையில் லட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டபோது அதை எதிர்த்து ஒரு கருப்புக் கொடி ஊர்வலம் கூட இங்கே நடக்கவில்லை. இதைப் பார்க்கும்போது ஒரு சிக்கலுக்குள் இருக்கிறோமோ என்று தோன்றுகிறது. படைப்பாளிகளும் கலைஞர்களும் எச்சரிக்கை உணர்வைத் தட்டி எழுப்பியபடியே இருக்க வேண்டும். அதுதான் அவனது முக்கியப் பணி.
ஆனால் இதற்காக நம்பிக்கை இழக்க வேண்டிய அவசியமில்லை. இளைஞர்கள் இந்தப் பிரச்சனைகளைப் பற்றிப் புரிந்தவர்களாக இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்குச் சரியான தலைமை இல்லை. இதை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அரசியல் தளம் இங்கே ஆரோக்கியமானதாக இல்லை. சரியான பிரச்சனைக்காக, சரியான காரணங்களுக்காக சரியான நேரத்தில் ஒரு எதிர்ப்பைக் கொண்டு செல்ல எந்த அரசியல் கட்சிக்கும் ஆர்வம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இளைஞர்களுக்கு உணர்வு இருக்கிறது. ஆனால் அதை ஒருமுகப்படுத்துவது யார்?
கே: சமீப காலமாக பல வெளிநாடுகளுக்குப் பயணம் செய்து வருகிறீர்கள். அங்கு தமிழ் இலக்கியம் குறித்து நீஙகள் அவதானிக்கும் விஷயங்கள் என்னென்ன?
ப: நானும் ஜெயமோகனும் வேறு சில நண்பர்களும் இரண்டு வருடங்களுக்கு முன்னால் மலேசியாவுக்குச் சென்றிருந்தோம். அங்கு ஏழு நாட்கள் இருந்தோம். அங்குள்ள எழுத்தாளர்களைச் சந்தித்தோம். சமீபத்தில் குவைத், துபை சென்று வந்தோம். உலகம் பூராவுமே தமிழர்கள் தற்போது நவீன எழுத்துக்களில் மிகவும் ஆர்வமுடையவர்களாய் இருக்கிறார்கள். எங்கு சென்றாலும், இணையம் மற்றும் நூல்களின் வழி நம்மைப் படித்த வாசகர்களைச் சந்திக்க முடிகிறது. அவர்கள் நம்மிடம் வாசிப்பு பற்றிப் பேசுகிறார்கள். படைப்புகளில் சந்தேகம் கேட்கிறார்கள். நாம் சொல்லும் புத்தகத்தைத் தேடிப் படிக்கிறார்கள். தமிழ்நாட்டில் இருக்கும் குழு மனப்பான்மை அவர்களிடம் இல்லை. ஒரு படைப்பாளியாக இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது.
கே: ஒரு எழுத்தாளராக உங்கள் கடமை அல்லது பணி என்று எதைச் சொல்வீர்கள்?
ப: என்னுடைய படைப்புக்கு நேர்மையானவனாக, நியாயம் உள்ளவனாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான். ஒரு பிரச்சனைக்குப் பல தரப்புகள் இருக்கலாம். எல்லாத் தரப்பிலிருந்தும் அந்தப் பிரச்சனைகளைப் பார்க்கலாம். என் தரப்பிலிருந்து நான் நேர்மையாகப் பார்க்க வேண்டும் என விரும்புகிறேன். இரண்டாவது கலை சார்ந்த வெற்றிக்கு நான் பாடுபட வேண்டும் என நினைக்கிறேன். பசி, காதல், காமம் என்பதெல்லாம் உலகம் தோன்றிய காலம் முதல் இருந்து கொண்டே இருக்கிறது. திரும்பத் திரும்ப நாம் இவற்றை எழுதிக் கொண்டேதான் இருக்கிறோம். ஆனாலும் வித்தியாசமான படைப்புகளை எழுதத்தான் செய்கிறோம். ஒரு படைப்பாளி எப்படிப் பார்க்கிறான், எப்படி உணர்கிறான், எப்படி மொழியைக் கையாளுகிறான், எப்படி வெளிப்படுத்துகிறான் என்பதைப் பொறுத்து அது அமைகிறது. என் எழுத்து என் அனுபவங்களுக்கு நேர்மையாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். சமயங்களில் சில படைப்புகளில் கலைத்தன்மை குறைவாக இருந்தாலும் கூட, இருந்து விட்டுப் போகட்டுமே அது பேசுவது உண்மையாக இருக்கும் பட்சத்தில் என்று நினைக்கிறேன். படைப்பு உண்மை அனுபவத்தைப் பற்றிப் பேசும்போது அதில் கலையம்சங்கள் சில குறைந்தாலும் அதை பெரிதுபடுத்த வேண்டியதில்லை. ஜாதி, மதம், இனம், கொள்கை, கோட்பாடு, தத்துவம் இவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமல் என் அனுபவங்களுக்கு நேர்மையாக இருப்பதே என் கடமை.
கே: தற்போதைய எழுத்துலகம் பற்றியும் இளம் படைப்பாளிகள் குறித்துச் சொல்லுங்கள்..
ப: நிறைய இளம் படைப்பாளிகள் எழுத வந்திருக்கிறார்கள். நாற்பது வயசு கொண்ட எழுத்தாளர்கள் என்று பார்த்தால் கீரனூர் ஜாகிர் ராஜா கதைகளும், சிறுகதைகளும் மிகச் சிறப்பாக எழுதி வருகிறார். அதுபோல கண்மணி குணசேகரன், சு. வேணுகோபால், எஸ். செந்தில்குமார், லக்ஷ்மி சரவணகுமார், சந்திரா, கணேசகுமாரன், குமார் அம்பாயிரம், திருச்செந்தாழை என நிறையப் பேர் நல்ல படைப்புகளைத் தந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவர்களின் எண்ணிக்கை குறைவுதான்.
ஒரு முக்கியமான விருதுக் குழுவின் நடுவராக நான் இருந்தேன். அவர்களது ஒரே ஒரு கண்டிஷன் என்னவென்றால் விருதுக்குப் பரிந்துரை செய்யப்படும் ஆசிரியர் 35 வயதுக்குள் இருக்க வேண்டும் என்பதுதான். இப்படி 35 வயதுக்குள் என்று வைத்துப் பார்த்தால் அதிகம் எழுத்தாளர்கள் இல்லை. அதாவது நன்றாக எழுதக்கூடியவர்கள் எல்லாம் 40, 42 வயதுக்கு வந்து விட்டார்கள். நான் என்னை வைத்துப் பேச வேண்டுமென்றால் ‘தலைகீழ் விகிதங்கள்’ என்னுடைய 29, 30 வயதில் எழுதியாகி விட்டது. சுந்தர ராமசாமி புளியமரத்தின் கதையை 30 வயதில் எழுதி விட்டார். ஜெயமோகனின் ரப்பரும் 30 வயதில் வந்துவிட்டது. நான் எழுதவந்த காலத்தில் வந்த வண்ணநிலவன், வண்ணதாசன், பா. செயப்பிரகாசம், விக்கிரமாதித்யன், கலாப்ரியா, பூமணி, ராஜேந்திர சோழன் உள்ளிட்ட எல்லோருமே தங்கள் முதல் படைப்பை 25-30 வயதுக்குள் கொண்டு வந்து விட்டார்கள். இவர்கள் எல்லாம் திறமையான எழுத்தாளர்கள். புத்தங்களும் காத்திரமான புத்தகங்கள். அதை ஒப்பிட்டுப் பார்த்தால் இப்போது எழுதும் எழுத்தாளர்களின் எண்ணிக்கை, வெளியாகும் புத்தகங்களின் தொகை குறைவாகத்தான் இருக்கிறது. ஆனால் அப்படி வருபவர்களின் எழுத்து வீரியமாக, காத்திரமாக இருக்கிறது.
கே: பொதுவாக எழுத்தாளர்களிடையே நிலவும் ஒற்றுமையின்மை மற்றும் குழு மனப்பான்மைக்கு என்ன காரணமாக இருக்க முடியும்?
ப: இது எல்லா மொழிகளிலும் இருக்கிறது. நம் மொழிக்கு ஒன்றும் புதிதல்ல. ஆனால் இது தனிப்பட்ட விரோதமாக ஆகாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். ஒரு படைப்பை ஒருவர் சரியில்லை என்று விமர்சித்து விட்டால் அவரை எதிரியாக நினைக்கும் போக்கு வளர்ந்து வருகிறது. இது படைப்பில்லக்கிய வளர்ச்சிக்கு ஆரோக்கியமானதல்ல. விமர்சனம் செய்தவரும், விமர்சனத்துக்கு உள்ளான படைப்பை எழுதியவரும் சேர்ந்து டீ குடிக்கப் போக வேண்டும். இதுதான் நல்ல மரபு. ஆனால் இது பிற மொழிகளில் இருக்கும் அளவுக்கு நம் மொழியில் இல்லை. எழுத்தாளர்களிடையே பொறாமை தவறானதில்லை, அது ஆரோக்கியமான போட்டிக்கு வழி வகுக்கும் என்றால். ஆனால் விரோதம், புறம் பேசுதல், சொந்த வாழ்க்கை பற்றி அவதூறு பேசுதல், குழுவாக உட்கார்ந்து மதுவருந்தி விட்டு மற்றொரு படைப்பாளியை மிகவும் கேவலமாகப் பேசுதல் இவைதான் கூடாது. முரண்பட்ட கொள்கையுடைய எதிரெதிர் துருவங்களாகப் படைப்பாளிகள் இருந்தாலும், பொது இடத்தில் புன்னகையுடன் கை குலுக்கிவிட்டுச் செல்ல வேண்டும். அதுதான் ஆரோக்கியம். முகத்தைத் திருப்பிக் கொண்டு செல்வது அழகல்ல. பண்புமல்ல. ஆனால் அதை நோக்கித்தான் நாம் போய்க் கொண்டிருக்கிறோமோ என்ற அச்சம் எனக்கிருக்கிறது.
கே: இளம் எழுத்தாளர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
ப: நான் சொல்ல வருவது இதுதான்: நம் மொழி மிக அற்புதமான மொழி. பல ஆயிரம் ஆண்டுகள் தொன்மையான இலக்கியங்களைக் கொண்ட மொழி. இந்த மொழியில் எழுதிப் பெயர் வாங்குவது அவ்வளவு லேசான காரியமல்ல. நான் சாகித்ய அகாதமி விருது வாங்கச் சென்றிருந்தபோது பிறமொழிப் படைப்பாளிகள் சிலரைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். அவர்கள் மொழியில் எழுதி, புத்தகம் கொண்டு வந்து பரிசு பெறுவது மாதிரி அல்ல நாம் தமிழில் எழுதுவது. தமிழின் மிகத் தீவிரமான சிறந்த முயற்சிகளுக்கு நடுவே நாம் போட்டி போட வேண்டி இருக்கிறது. இதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.
உரையாடல்: அரவிந்த் சுவாமிநாதன்
படங்கள்: சுல்தான்
*****
மும்பையும் நானும்
மும்பைக்கு நான் போயிருக்கவில்லை என்றால் ‘நாஞ்சில்நாடன்’ என்ற படைப்பாளி தோன்றியிருக்க மாட்டான். மும்பை மற்ற இந்திய நகரங்களை விட மிக வித்தியாசமான நகரம். மும்பைக்காரர்கள் வித்தியாசமானவர்கள். ஒரு பிரச்னை என்றால் வேறுபாடுகளை மறந்து எல்லோரும் ஒன்று சேர்வார்கள். உதவுவார்கள். தயை காட்டுவார்கள். அதை பெருமழைக் காலங்களில், விபத்துக் காலங்களில், போக்குவரத்து ஸ்தம்பிக்கும் காலங்களில் உணரமுடியும். மற்ற நகரங்களில் இதைப் பார்க்க முடியாது. நான் 18 வருடங்கள் மும்பையில் இருந்தேன். அங்கேதான் பாதல் சர்க்கார், அமோல் பாலேகர், ஸ்ரீராம் லாகூ ஆகியோரது நவீன நாடகங்களின் அறிமுகம் கிடைத்தது. பலமொழி நாடகங்களைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. எல்லா மொழிகளின் நவீன திரைப்படங்களைக் காணும் வாய்ப்புக் கிடைத்ததும் கர்நாடிக், ஹிந்துஸ்தானி என எனது இசை ஈடுபாட்டை வளர்த்துக் கொள்ள முடிந்தது. மும்பை வீதிகளின் பழைய புத்தகக் கடைகளில் நல்ல புத்தகங்களை மிகக் குறைவான விலைக்கு வாங்க முடியும். என்னுடைய புத்தகச் சேகரிப்பு அப்படி உருவானதுதான். ஆங்கிலத்தில் நிறைய வாசிக்கும் வாய்ப்பு மும்பையில்தான் எனக்குக் கிடைத்தது. அதுபோல மும்பைத் தமிழ்ச் சங்கம் எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது. அதில் புலமையுடைய மக்கள் பலர் இருந்தனர். அவர்கள் என் சந்தேகங்களுக்குப் பொறுமையாக விளக்கம் சொல்வார்கள். மிக நல்ல மனிதர்களாக இருந்தார்கள். இவையெல்லாம் நான் எழுத்தாளனாக என்னை வளர்த்துக் கொள்ள மிக உறுதுணையாக இருந்த விஷயங்கள்.
நாஞ்சில்நாடன்
*****
கட்டுரை இலக்கியம்
நான் கடந்த பத்து வருடங்களாகக் கட்டுரைகள்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன். நாவல் எழுதி 12 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. தொடர்ந்து சிறுகதைகள் எழுதிக் கொண்டிருக்கிறேன். அந்தச் சிறுகதைகளும் கூட சில சமயங்களில் கட்டுரை வடிவில் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. ஆனால் இதிலிருந்து ஒரு படைப்பிலக்கியவாதியால் எளிதில் மீண்டு வந்துவிட முடியும். அது தானாகவே நடக்கவேண்டும் என்று நினைப்பவன் நான். இப்போது எனக்குத் தொல்லிலக்கியங்களில் ஆர்வம் இருக்கிறது. அவற்றைப்பற்றி எழுதுவதிலே முனைப்பாக இருக்கிறேன். அதே சமயம் நான் எழுதும் கட்டுரைகள் சமகாலப் படைப்பிலக்கியவாதிகள் பிறரால் எழுதப்பட முடியாதவை. ஒரு சிறுகதையைப் போலவே ஒரு கட்டுரையும் வாசிக்கப்பட வேண்டும். டெல்லி தமிழ்ச் சங்கத்தில் ஒரு கருத்தரங்கத்தை முடித்தபின் நடந்த கலந்துரையாடலில் டெல்லியைச் சேர்ந்த ஒரு பெரியவர், “நீங்க கட்டுரை எல்லாம் எழுதி அரசாங்கத்தையோ, மக்களையோ திருத்த முடியாது. கதை எழுதுவதுதான் உங்கள் வேலை” என்ற மாதிரி காரசாரமாகச் சொல்லிவிட்டுப் போனார். உடனே மேடை ஏறிய இருபது கல்லூரி மாணவர்கள், ‘நீங்கள் இனி கட்டுரைதான் எழுத வேண்டும். அதுதான் காத்திரமாக இருக்கிறது. சொல்ல வேண்டியதைச் சரியாகச் சொல்கிறது. காலத்தின் தேவையாக இருக்கிறது” என்று சொன்னார்கள். “கதை, நாவல் யார் வேண்டுமானாலும் எழுத முடியும் ஐயா. இது போன்ற கட்டுரைகளை நீங்கள் மட்டுமே எழுத முடியும்” என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். “எப்பதான் சார் உங்க அடுத்த நாவலை எழுதுவீங்க?” என்று உரிமையோடு கேட்பவர்களும் இருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை எனக்கு எது விருப்பமாக இருக்கிறதோ அதையே செய்வேன்.
நாஞ்சில்நாடன்
*****
பதிப்புச் சூழல்-அன்றும் இன்றும்
நான் எழுதத் தொடங்கிய காலத்தில் 1200 படிகள் அச்சிடுவார்கள். அது விற்பதற்கு வருடக்கணக்கில் காத்திருக்க வேண்டும். இன்றைக்கு கணினி அச்சுக் காலத்தில் 250 படிகள்கூட அச்சிடமுடிகிறது. விற்றுத் தீர்ந்ததும் மீண்டும் 250 படிகளை அச்சிட முடிகிறது. சமீபத்தில் ஒரு நண்பர், “வெறும் ஆறே ஆறு படிகள்கூட அச்சிட முடியும். அதை நூலகம் அல்லது வேறு தேர்வுக் குழுவுக்கு அனுப்பி, ஆர்டர் வந்ததும் தேவையான பிரதிகளை அச்சிட்டுக் கொள்ளலாம்” என்றார். மற்றொன்று, எந்த ஒரு பதிப்பாளரும் படைப்பாளிகளுக்கு, எழுத்தாளர்களுக்கு புத்தகங்களுக்கான நியாயமான ராயல்டி தொகையைத் தர வேண்டும் என்ற அறவுணர்வோடு இல்லை. நீ எழுதிக் கொடுப்பதைப் போடுவதே பெரிய விஷயம் என்பது மாதிரி நடந்து கொள்கிறார்கள். ஒரு சிலர் ‘முதல் பதிப்புக்குத்தான் ராயல்டி கொடுத்தாகி விட்டாதே! இரண்டாவது பதிப்புக்கு என்ன திருப்பி எழுதவா செய்கிறார். அதற்கு எதற்கு ராயல்டி கொடுக்க வேண்டும்’ என்ற மனநிலையில் இருக்கிறார்கள். பதிப்பாளர்களின் இந்த மனப்பான்மை மிகவும் வருந்தத்தக்கது.
ஆனால் புத்தக விற்பனை வளர்ச்சி அடைந்திருக்கிறது என்று சொல்வதற்கில்லை. ஒரு பதிப்பாள நண்பர் சொன்னார், ஓர் ஆண்டின் மொத்தப் புத்தக விற்பனையே 35 கோடி ரூபாய்தானாம். எட்டுக் கோடித் தமிழர்கள் வசிக்கும் மாநிலத்தில் இவ்வளவுதான் என்றால் இதில் என்ன வளர்ச்சி இருக்கிறது? ஒரு ஓட்டல் அல்லது மற்றத் தொழிலுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இந்தத் தொகை ஒன்றுமே இல்லை. ஆனாலும் நல்ல புத்தகங்கள் வெளிவருகின்றன. வாசகர்கள் வாசிக்கிறார்கள் என்று சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம். அவ்வளவுதான்.
நாஞ்சில்நாடன்
TV, Media Updates from Tamil Nadu: Magazines, Journals, Periodicals
எனக்குப் பத்திரிகையும் பதிப்பகமும் மீடியாவும்தான் சந்தோஷத்தைத் தருவன. அதுவும் புதிய முயற்சிகள் மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பன. அந்த வகையில்,
1. நேற்று திரிசக்தி என்ற ஆன்மிக இதழும், தேவதை என்ற பெண்கள் இதழும் வெளியாயின. திரிசக்திக்கு, பி.சுவாமிநாதன் ஆசிரியர். இவர் சக்தி விகடனின் முன்னாள் பொறுப்பாசிரியர். தயாமலர் தேவதைக்கு ஆசிரியர். இவர் அவள் விகடனின் முன்னாள் ஆசிரியர்.
2. நான் விரும்பிப் படிக்கும் ஆங்கில வணிக இதழான மிண்ட், சென்னை பதிப்பு கொண்டு வந்துவிட்டது. சென்ற திங்கள் (13.07.2009) முதல் சென்னைப் பதிப்பு வந்திருக்கிறது. பெரிய பப்ளிசிட்டி இல்லாமல் சாஃப்ட் லாஞ்ச். மிகவும் உபயோகமாக இருக்கிறது.
3. ஆகஸ்டு மாதத்தில், மாலனை ஆசிரியராகக் கொண்டு எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனங்கள் இளைஞர்களுக்கான ஓர் தமிழ் வார இதழைத் தொடங்க இருக்கிறது. அதைத் தொடர்ந்து ஆங்கில இதழும், ஒரு தொலைக்காட்சி சேனலும் வரவிருக்கின்றன.
4. விகடனின் அடுத்த குழந்தை – டாக்டர் விகடன். எஸ்.நாகராஜகுமார் பொறுப்பாசிரியர். இவர் மறைந்த எழுத்தாளர் ராஜேந்திர குமாரின் வளர்ப்பு மகன்.
5. ஆகஸ்டு 23 முதல், சேலத்தில் புகழ்பெற்ற லோக்கல் சேனலான பாலிமர், இப்போது உலகமெங்கும் தெரியும் அளவுக்குத் தன் பரப்பை விரிக்க இருக்கிறது. ஜெயா டிவியில் இருந்த முரளிராமன் மற்றும் அவரது நிகழ்ச்சி தயாரிப்புக் குழுவினர், பாலிமருக்கு வந்துவிட்டனர்.
Roots of Capitalism – Maithreyan
இந்தச் செய்தி மருந்து தீர்ந்து போன அமெரிக்க ராணுவத்தைச் சுட்டுகிறதா, அல்லது உலகப் போலிஸ்காரனாக இருக்க அமெரிக்காவுக்கு இனி அரிப்பு இல்லை என்பதைச் சுட்டுகிறதா, அல்லது இதில் தனக்கென்ன ஆதாயம் என்று அலட்சியம் காட்டும் அமெரிக்க வழக்கத்தைக் காட்டுகிறதா?
இத்தனை நூற்றாண்டுகள் கழித்து மறுபடியும் கடற்கொள்ளைக்காரர்கள் இந்திய மாக்கடலில் ஆட்சி செய்கிறார்கள் என்பது முதலியம் மறுபடி கொள்ளையர்களால்தான் வழிநடத்தப்படும் என்று சுட்டுகிறதா? சீனாவில் ஏற்கனவே அப்படித்தான்.
தமிழ்நாட்டில் கூட அப்படித்தான்.
அல்பேனியா, ரஷ்யா, சூடான், நைஜீரியா என்று பல நாடுகளில் கொள்ளையர் ஆட்சி செய்கிறார் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் உலகமே அப்படித்தான் ஆகப் போகிறதா என்பதுதான் கேள்வி.
இத்தினியூண்டு கடற்கொள்ளைக்காரர்களை ஏதும் செய்ய முடியாத அமெரிக்கக் கடற்படையை யார் இனி சட்டை செய்வார்கள்? – Could Mercenaries Return as Pirate Foes? | Danger Room from Wired.com
34 comments:
//தனிப்பட்ட காரணங்கள் எதுவுமில்லை. எழுத ஆரம்பித்த காலத்தில் பிரசவமான படைப்பு எப்படி இன்றும் உயிர்த்துடிப்புடன் இருக்கிறது என்பதை பார்க்கவும், சின்ன ஊற்று எப்படி வற்றாத ஆறாக விரிந்தது என்பதை ஆராயவும்.
//
//இப்படி யோசிக்க யோசிக்க விதை, விருட்சமாக வளர்ந்துக் கொண்டே செல்வதை காணலாம். //
எஸ்.ரா. Yes.Rocks.
எஸ்.ராவைப் பற்றி அறியாமலேயே ‘காட்டின் உருவம்’ என்கிற சிறுகதைத் தொகுதியை பல ஆண்டுகளுக்கு முன் வாங்கி வாசித்த நினைவு வருகிறது. நீங்கள் குறிப்பிட்ட மாதிரி எஸ்.ரா. சிறுகதையின் வடிவத்தில் பல்வேறு சோதனைகளை முயன்று பார்த்துக் கொண்டே வந்திருப்பதை தொடர்ந்து வாசித்தால் அவதானித்துக் கொள்ள முடியும்.
ஆனால் ஒரு குறிப்பிட்ட எழுத்தாளரின் பெரும்பான்மையான சிறுகதைகளை ஒரே நேரத்தில் படிப்பது ஒரு சலிப்பான வாசிப்பனுபவத்தைத்தான் தரும் என்பதை என் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். சுவாரசியமாக எழுதும் சுஜாதாவிற்கும் இதே நிலைதான். மற்றவருக்கு இது மாறுபடலாம்.
எழுதப்பட்டதை விட எழுதப்படாத விஷயங்களை உள்நுழைத்து வாசகனின் கற்பனைக்காக விட்டு வைப்பது ஒரு எழுத்தாளனின் முக்கிய அம்சம். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இரு சிறுகதைகளும் அந்த நோக்கில் வெற்றி பெற்றிருக்கின்றன என்பது உங்கள் விவரிப்பில் தெரிகிறது. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
இதை ஒவ்வொரு எழுத்தாளரையும் அடிப்படையாக வைத்து ஒரு தொடராகவே எழுதலாம் என்கிற வேண்டுகோளை முன்வைக்கிறேன். அடுத்த பதிவு ஆதவனாக இருக்கலாம் என்கிற நேயர் விருப்பத்தையும். 🙂
//நண்பர் சுரேஷ் கண்ணன் விரிவாக எழுதுவார்//
அதைப் பற்றியும் நீங்களே எழுதிவிடலாம். உங்கள் அளவிற்கு நேர்த்தியாக என்னால் எழுத முடியுமா என்று தெரியவில்லை.
2009 ‘தினகரன் தீபாவளி மலரில்’ வெளியான இவரது ‘புர்ரா…’ சிறுகதை விரிக்கும் உலகு, வேலைக்கு செல்லும் கணவன் – மனைவியின் உலகை, அவர்களது குழந்தையின் அவஸ்தையை வெகு நுட்பமாக ஆராய்வது.
இடுகையில் குறிப்பிட்டுள்ள ‘பணம்’ அல்லது ‘கடன்’ என்னும் கருத்தைக் கொண்டு புதுமைப்பித்தனில் ஆரம்பித்து பலரும் சிறுகதைகள் எழுதியிருக்கிறார்கள். அவைகள் இதுபோல் நாவலாக – புதினமாக விரிகிறதா என்பதை வாசித்தவர்களின் கவனத்துக்கே விட்டுவிடுகிறேன்.
எத்தனை சிறுகதைகள் அல்லது புனைவுகள் இதுபோல் தன்னுள் நாவலை மறைத்து வைத்திருக்கின்றன என்றுப் பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும்.
தோழமையுடன்
பைத்தியக்காரன்
உதிரிப்பூக்கள் திரைப்படத்தில் விஜயனும் சரத்பாபுவும் சண்டையிட்டுக் கொள்கிற காட்சி நினைவுக்கு வருகிறது. இந்த அளவிற்கு நுட்பமான காட்சிகள் தமிழ் சினிமாவில் சொற்பமே. உங்கள் பதிவின் சாரத்தைப் போன்று, பார்வையாளன்தான் அவர்களுக்குள் நிகழ்நத மோதலை யூகிக்க வேண்டும்.
படைப்பு பாதி என்றால் நீங்கள் தங்கள் பரந்த கற்பனையின் மூலம் மீதியை நிரப்பி கொள்கிரீர்கள். இது போன்ற வாசகன் கிடைக்க எழுத்தாளர்கள் குடுத்து வைத்திருக்க வேண்டும். ஆனால் ஒன்று என்னை போன்ற சாதாரண வாசகன் தங்கள் அளவு கற்பனை குதிரையை ஓட்ட முடியாது. :))
நிற்க. நானும் எஸ். ரா வை ரசிப்பவனே. பகிர்வுக்கு நன்றி
அன்பின் சுரேஷ், விரிவான பின்னூட்டத்துக்கு நன்றி. ஆதவன்? நல்ல யோசனை. செய்யலாம். எஸ்ராவுடன் உரையாடியதை குறித்து நீங்கள் எழுதுவதே சரி. வாசிக்க காத்திருக்கிறேன்.
அன்பின் இராஜ ப்ரியன், வருகைக்கும், பின்னூட்டத்துக்கும் நன்றி.
அன்பின் மோகன் குமார், தன்னடக்கம் காரணமாக உங்களை நீங்கள் சாதாரண வாசகர் என்று சொல்லிக் கொண்டாலும், அப்படியில்லை என்று நன்றாகவே தெரியும். வாசகரில் சாதாரணமானவர் / அசாதாரணமானவர் என யாராவது இருக்கிறார்களா என்ன?
தோழமையுடன்
பைத்தியக்காரன்
பிளீஸ் ஹெல் மீ…
கதை எங்கிருந்து ஆரம்பிக்குது எந்த ஊரு என்பதையும் வாசகரே கற்பனை செஞ்சுக்கனும் ரைட்டு,
அவர்களுக்குள் நட்பு எப்படி உருவாச்சு என்பதையும் வாசகரே கற்பனை செஞ்சுக்கனும் ரைட்டு…
முடிவையும் வாசகரே இப்படி அல்லது அப்படின்னு விதவிதமா கற்பனை செஞ்சுக்கனும்… ரைட்டு.
இப்படி வாசகரை கற்பனை செஞ்சுக்க விடுவதுதான் புனைவு என்பது வரை புரியுது…
நடுவில் தம்மாதுண்டு கதை சொல்வதுக்கு பதில் தலைப்பை மட்டும் கொடுத்துவிட்டால் வாசகரே கதையையும் கற்பனை செஞ்சுக்கவிட்டா அது பெரும் புனைவா?
பிளீஸ் ஆன்சர் மை கொஸ்டினு? (15 பைசா அக்னாலெஜ்மெண்ட் கார்ட்டும் வெச்சு கேள்வி கேட்டு இருக்கேன்)
//அந்தச் சாவியைக் கொண்டு கதவை திறக்க வேண்டியது மட்டுமே வாசகனின்/வாசகியின் வேலை. அப்படி அவன்/ள் திறக்கும்பட்சத்தில் விரிவது 7 கடல்கள், 7 மலைகள் தாண்டி மறைந்திருக்கும் வாழ்க்கையின் ரகசியம்.//
அன்பின் குசும்பன், நீங்கள் அனுப்பிய 15 பைசா அக்னாலெஜ்மெண்ட் கார்ட்டு இன்னும் வந்து சேரவில்லை. சேர்ந்ததும் பதில் அனுப்புகிறேன் 🙂
அன்பின் தாமோதர் சந்துரு, வருகைக்கும், நண்பர் அமரபாரதிக்கு பதில் சொன்னததற்கும் நன்றி.
அன்பின் மகேந்திரன்.பெ, பிரியத்துகுரிய குசும்பனுக்கு பதில் சொல்லிவிட்டேன்…
தோழமையுடன்
பைத்தியக்காரன்
அவரே தனது சிறந்த சிறுகதைகளில் ‘தாவரங்களின் உரையாடல்’ மற்றும் ‘புலிக்கட்டம்’ என்ற இரு சிறுகதைகளைக் குறிப்பிட்டு இருந்ததாக ஞாபகம். இரண்டுமே இன்னும் படிக்க வாய்க்கவில்லை.
அனுஜன்யா
முதல் வாசிப்பில், இது எஸ்ராவின் கதாவிலாசத்தின் தொடர்ச்சியோ, என்று தான் எனக்கு தோன்றியது
சிவராமன் நான் எஸ்ராவின் புத்தகங்கள் வாசிப்பேன் .
நல்ல விமர்சனம் எழுதியிருக்கீங்க
இதே போல எஸ் ராவின் ஒரு சிறுகதை உண்டு (தலைப்பு மறந்து விட்டேன், இருக்கன்குடி கோவிலில் மொட்டை அடிக்கும் ஒரு பெண் பற்றிய கதை,
////அந்தச் சாவியைக் கொண்டு கதவை திறக்க வேண்டியது மட்டுமே வாசகனின்/வாசகியின் வேலை. அப்படி அவன்/ள் திறக்கும்பட்சத்தில் விரிவது 7 கடல்கள், 7 மலைகள் தாண்டி மறைந்திருக்கும் வாழ்க்கையின் ரகசியம்.////
என்னமோ போங்க. எனக்கு ஒன்னும் புரியல. எதுக்கு இவ்வளவு சிரமப்படனும். எழுதியிருக்கறத படிச்சுட்டு நேரடியான அர்த்தம் புரிஞ்சா போதாதா?
அவரது எத்தனை எழுத்துக்களைப் படித்தாலும், ’உறவும், பிரிவும் இன்றி’ என் ஞாபக அடுக்குகளில் எப்போதும் மேலே மிதந்து கொண்டே இருக்கிறது. அடேயப்பா!
பகிர்ந்தமைக்கு நன்றி தோழர்!
வாசகபர்வம்
உபபாண்டவம் வாசிக்க கிடைத்தது
இம்முறை தொகுப்பு வாங்கி வர வேண்டும் இந்தியாவிலிருந்து வரும்போது….
வாசகனுக்கான வெளியை உருவாக்கும் சொற்கள் வாய்த்திருக்கிறது அவரின் கதைகளுக்கு
வாசக பார்வை.. உள்ளங்கையில் ஊற்றி ருசி பார்க்கும் கரம்
அன்பின் சங்கர், ஸ்டார்ஜன், அன்புடன் அருணா, குப்பன் யாஹு, வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி.
அன்பின் மாதவராஜ், முதலில் வாழ்த்துகள். பதிவர்களின் படைப்புகளை நூலாக நீங்களும் பவாவும் அருமையாக கொண்டு வந்திருக்கிறீர்கள். பக்கத்துக்கு பக்கம் உங்கள் உழைப்பு தெரிகிறது என்பதைவிட, பதிவர்கள் மீது நீங்கள் கொண்டுள்ள அன்பு நிரம்பி வழிகிறது என்று சொல்வது மிகப் பொருத்தமாக இருக்கும். தனி இடுகையாக, விரிவாக இதுகுறித்து எழுதப் போகிறேன். எஸ்ரா சிறுகதைகள் குறித்து நீங்கள் பகிர்ந்திருக்கும் விதம், அருமை.
அன்பின் நேசமித்ரன், வருகைக்கும், நெகிழ்ச்சியான பின்னூட்டத்துக்கும் நன்றி.
தோழமையுடன்
பைத்தியக்காரன்
http://www.kaveriganesh.blogspot.com
நல்ல பகிர்வுக்கு நன்றி
சிறுமி வாங்கிய கடன் விவரங்களை, குடும்பம் காலி செய்துவிட்டுப்போன அறை சுவற்றில் நாம் படித்திருக்கிறோம்.
எங்கோ வடகிழக்கு மூலை மாநிலத்தில் உள்ள ஏரியின் கண்கள், நம்மை உற்று நோக்குவதை நாம் உணர்ந்திருக்கிறோம்.
நிகழ் களத்தில் நம்மையும் அழுந்திக் காலூன்ற வைப்பதுதுதான் எஸ்ராவின் தனிச்சிறப்பு.
அன்பின் rama, நேர்மையான உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி. எஸ்ரா எழுத்துக்கள் ஒரு வாசகனாக எனக்கு சலிப்பை தரவில்லை என்பதை இங்கு பதிவு செய்வது என் கடமை.
தோழமையுடன்
பைத்தியக்காரன்
படிச்சி முடிச்சிட்டேன், முதன் வேலையா அவருக்கு சுட்டி குடுத்துட்டேன் – சரி அவரும் படிக்கட்டும் அவரை நான் ஏன் பிங்கனும்.
விமர்சிக்கும் அளவுக்கு தெளிவில்லை
உங்கள் பார்வை இரசிக்கும்படியாக …
எஸ்.ரா. எடுத்து எழுதுகிற சூழ்நிலைச் சிக்கல் அவருடைய ஓரொரு கதையையும் வாசிக்கையில் என்னை வியப்பில் ஆழ்த்தும். உலகின் சிறந்த எழுத்தாளர்கள் தம் படைப்புகளில் வருவதற்கு நிகரான வாழ்க்கைச் சிக்கல்களைக் கண்டு புனைகிறார்.
ஆனால் மொழிநடையில் அவருக்கு சற்று கவனக் குறைவு உண்டோ என்று நான் எண்ணுவதுண்டு. (‘எறும்பு ஊர்வது மாதிரி கையெழுத்து’ என்கிற சொல்லாடலை, எடுத்துக் காட்டாக, இரண்டு மூன்று கதைகளில் வாசித்துவிட்டேன்). அல்லது அவருக்கு வந்து முட்டும் கருத்துகளின் பெருக்கத்தை அணைகட்டித் தருகிற அளவுக்கு மொழிவல்லமையை வளர்த்துக் கொள்வதில் அக்கறையற்று இருக்கிறாரோ? ‘Effect’க்காக எழுதப்படுவது நல்ல எழுத்தன்று என்று நானும், ஹிட்ச்காக் படங்களைப் பார்ப்பது வரை, கொள்கை கொண்டிருந்தேன். எஸ்.ரா. தனது தளத்தில் ‘Story of sign’என்றொரு குறும்படத்தைப் பரிந்து இட்டிருக்கிறார். அதற்கு நன்றி, ஆனால் அவருக்கே அதைப் பரிந்துரைக்கக் கூச்சமாக இருக்காதா? அவர் craftsman-ஓ இல்லையோ ஐயமில்லாமல் ஒரு கலைஞன்.
அது யார் rama? சென்ற பதிவின் பின்னூட்டத்திலும் அவர் கவனம் கவனிக்கப்படும்படியாக இருந்தது.
– ராஜசுந்தரராஜன்
உறவும் பிரிவும் இன்றி ஏற்கனவே வாசித்திருக்கிறேன். உங்கள் பதிவு கண்ட பிறகு, மீண்டும் வாசித்து, பின் ̀தெரிந்தவர்களையும்’ வாசித்தேன். 80களின் பல கதை சொல்லல்கள் நம் மனதுக்கு மிகவும் நெருக்கமானவை. வண்ண நிலவன், வண்ணதாசனை படித்து நெகிழ்ந்திருக்கிறோம். அந்தவகையில் எனக்கு வண்ண நிலவனின் கதை வாசிப்பனுபவம் போல இந்த இரண்டு கதைகளும் இருந்தன. (வண்ணதாசனின் தளம் வேறு.) ஆனால் நீங்கள் முன்வைக்கும் தன்மைகள் கதைக்கு இருக்கின்றனவா என்று எனக்கு மிகவும் சந்தேகமாக உள்ளது.
இரண்டு கதைகளும் தட்டையான மொழியில், ஒற்றை பரிமாணத்தில்தான் உள்ளன. அதை குறையாக நான் சொல்லவில்லை. ஆனால் நீங்கள் சொல்வது போல இரு சிறுகதைகளும் ஒரு நாவலை உள்ளடக்கியதாக எனக்கு தோன்றவில்லை. சிறுகதைகளை முன்வைத்து நீங்கள் உங்கள் வாசிப்பை விரிப்பது உங்கள் அக உலகம் சம்பந்தப்பட்டது. அதை நீங்கள் எழுதுவது சுவாரசியமாக இருக்கலாம். ஆனால் அது உங்கள் வாசிப்பு மட்டுமே. இது பல கதைகளுக்கு (வண்ண நிலவனின் கதைகளுக்கும்) சாத்தியமாகலாம். ஆனல் எஸ்ரா அப்படி பல நுட்பங்களை உள்ளடக்கி, மௌனத்தை கிளை கதைகளாக மாற்றியதாக, இந்த கதைகளில் எனக்கு தோன்றவில்லை.
̀கடன்’ என்ற கருப்பொருளை புதுமைப்பித்தன் தொடங்கி பலர் கையாண்ட விதம் பற்றிய உங்கள் பார்வையை எழுதினால் சுவாரசியமாக இருக்கும்.
அன்பின் மகாகவி, தங்கள் வருகையும் அவதானிப்பும் அருமை. //உலகின் சிறந்த எழுத்தாளர்கள் தம் படைப்புகளில் வருவதற்கு நிகரான வாழ்க்கைச் சிக்கல்களைக் கண்டு புனைகிறார்.// என்பது உண்மை. மொழிநடை குறித்த உங்கள் விமர்சனத்தை, நிச்சயம் எஸ்ரா கவனத்தில் கொள்வார்.
அன்பின் ரோசா, சட்டென நூலை பிடித்துவிட்டீர்கள். ஆரம்பக்கால எஸ்ரா சிறுகதைகளில் வண்ணநிலவனின் பாதிப்பு உண்டு. பிறகு உலக இலக்கியங்களை வாசிக்க ஆரம்பித்து அந்த பாதிப்பிலிருந்து விலகினார்.
எஸ்ரா சிறுகதைகள் எழுதப்படாத நாவலை சொல்வதாக எனக்கு தோன்றியது. அந்த வாசக அனுபவத்தையே இடுகையாக்கினேன்.
//̀கடன்’ என்ற கருப்பொருளை புதுமைப்பித்தன் தொடங்கி பலர் கையாண்ட விதம் பற்றிய உங்கள் பார்வையை எழுதினால் சுவாரசியமாக இருக்கும்.// முயற்சிக்கிறேன் ரோசா.
தோழமையுடன்
பைத்தியக்காரன்