Archive
எழுத்தாளர்களுக்கு… சிறுகதை எழுதுவது எப்படி? – டிப்ஸ்
பா. ராகவன்
பழைய பெட்டிகளைக் கொஞ்சம் குடைந்துகொண்டிருந்தேன். எழுத ஆரம்பித்து அதிசுமார் 20 கதைகள் வரை பிரசுரமாகியிருந்த தொண்ணூறுகளின் முற்பகுதியில் எனக்கான சிறுகதை இலக்கணம் என்று ஒரு பத்திருபது பாயிண்டுகள் எழுதிவைத்தேன். இப்போது தற்செயலாக அகப்பட்ட அந்தக் குறிப்புகளை இங்கே போடலாம் என்று தோன்றியது. காப்பிரைட் என்னுடையது அல்ல. யார்யாரோ சொன்னதன் தொகுப்பு அல்லது திரட்டு அல்லது திருட்டு.
1. கையெழுத்துப்பிரதியாக 5 பக்கங்களுக்கு மேல் ஒரு சிறுகதை வளராமல் பார்த்துக்கொள்.(பெரும்பாலான சப் எடிட்டர்களுக்கு இது விஷயத்தில் பொறுமை இருப்பதில்லை)
2. தன்மை ஒருமையில் ஒரு டிரா·ப்ட் எழுதிக்கொண்டு பிறகு அதை தேர்ட் பர்சனுக்கு மாற்றி எழுதுவது நல்லது. நான் என்று தொடங்கி எழுதும்போது தான் கதையில் ஒரு உயிர்ப்பு வருகிறது.
ஆனால் கதைக்கு நான் கூடாது என்பதால் எழுதிவிட்டு அவனாக்கிக் கொள்வது பெட்டர்.
3. ஒரு செண்டன்ஸில் நாலைந்து சொற்களுக்கு மேல் கூடாது.
4. நாலு பேராவுக்கு ஒரு வர்ணனை வை. பெண்ணையோ, பேயையோ உன்னையோ எதையாவது ரெண்டு வரி வருணிப்பதன் மூலம் கொஞ்சம் வாசனை கூடுகிறது.
5. கதாபாத்திரம் ஒரு அலைவரிசையில் இயங்கிக்கொண்டிருக்கும்போது நீ குறுக்கே மூக்கு நுழைக்காதே. கதாபாத்திரத்தின் கருத்துடன் உன்னுடையது ஒத்துப்போகாவிட்டால் ஒன்றும் கொலைபாதகம் இல்லை.
6. கூடியவரை சிறுகதையில் காலம் காட்டாதே. அதாவது மணி, நாள், மாதம், வருஷமெல்லாம் வேண்டாம். உணர்ச்சிகளை முக்கியப்படுத்து. தேவையானபோது மட்டும் சம்பவங்கள்.
7. செகண்ட் பர்சனில் கதை எழுதிப்பழகு. அது தொழில்நுட்பத் தேர்ச்சி தரும்.
8. புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், கி.ரா., இவர்களெல்லாம் சிறுகதையில் மிகவும் சாதித்தவர்கள் என்பார்கள். ஆனால் உனக்கு உதவாது. ஆரம்பத்தில் நீ பின்பற்றவேண்டியவர்கள் ஜானகிராமன், சுஜாதா, ஆதவன், சுப்ரமணியராஜு, சுந்தரராமசாமி ஆகியோர் மட்டுமே.
9. ஒரு போதும் முழுக்கதையை முடிவு செய்துவிட்டு எழுதத் தொடங்காதே. உனக்கு அந்த உரிமை இல்லை. முதல் வரிக்கு மட்டும் முயற்சி செய். கதை தன்னை உற்பத்தி செய்துகொள்ளும்.
10.சிறு சிறு விவரங்கள் சிறுகதைக்கு முக்கியம். ஒரு கதையில் ஆள், உயரம்,வாசனை,நடை, நாற்றம்,லே அவுட், மேனரிசம், கோபம், புன்னகை,அழுகை, துடிப்பு, வேகம்,சூழல், செயல், செயலின்மை, பேச்சு, மௌனம் இதெல்லாம் வரவேண்டும்; தெரியவேண்டும்.
11. வசனங்கள் கூடியவரை குறைவாக இருக்கவேண்டும். வசனம் என்பது நாடகத்தின் கருவி. சிறுகதைக்கு மௌனமே சிறப்பு.
12. ஒரு கதை எழுதுமுன் ஒரு நல்ல கதையைப் படி. உனக்கு உகந்தது, அசோகமித்திரனின் மகா ஒற்றன், ஆதவனின் கருப்பாக, உயரமாக…, லா.ச.ரா.வின் த்வனி. இந்த சமயத்தில் தி.ஜாவையோ சுஜாதாவையோ தொடாதே. வாசனை ஒட்டிக்கொள்ளும்.
(திண்ணை-யில் இருந்து: சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல் – 1 : ஆதவன் | 2 | 3)
13. எழுதி முடித்ததும் கடைசியிலிருந்து வெட்டிக்கொண்டு வா.(வரிவரியாக.)
14. மிரட்டும் சொற்கள் வெண்டாம். எளிமையே ஆபரணம்.
15. ஒவ்வொரு கதை எழுதி முடிக்க முடிந்ததும் கடவுளுக்கு நன்றி சொல்லு.
பி.கு: இவையெல்லாம் என்க்கு நானே சொல்லிக்கொண்டவை. இன்றுவரை, அநேகமாக அனைத்து ரூல்களையும் பின்பற்றுகிறேன்.யாருக்காவது உபயோகப்படுமானால் சந்தோஷம்.
சாண்டில்யன்
எழுதுவது எப்படி என்பதனைப் பற்றி சாண்டில்யன் கட்டுரை:
நல்ல எழுத்துக்கு வேண்டியது – முதலில் உணர்ச்சி வேகம். இரண்டாவது ஆழ்ந்த படிப்பு.
எழுத முற்படுவோர், தாங்கள் எழுதவேண்டியது அவசியந்தானா? அதற்கான வேட்கை, உணர்ச்சி வேகம் இயற்கையாக இருக்கின்றனவா என்பதை யோசித்துக்கொள்ளவேண்டும்.
இரண்டாவதாக, தங்களுக்கு ஆழ்ந்த படிப்பு இருக்கிறதா என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். இல்லையென்று தோன்றும் பட்சத்தில், படிக்கவும் முயலவேண்டும். கற்பனை தானாக ஊறிவிடுமென்பது வீண் பிரமை.
“தொட்டனைத்து ஊறும் மணற்கேணி, மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் கல்வி”, என்று தெய்வத் திருவள்ளுவரே கூறியிருக்கிறார்.
நல்ல கதைக்கோப்பும், கதை வேகமும், சொல்லாட்சியுமுள்ள கதை எத்தனை பெரிதாயிருந்தாலும் மக்கள் அதனைப் படிப்பார்கள். இந்த அம்சங்கள் இல்லாத கதை, எத்தனைச் சிறியதாக இருந்தாலும் மக்களின் மனத்தை ஆட்கொள்ளமுடியாது.
கற்பனைச்செறிவும், இயற்கையையும் வாழ்க்கையையும் ஊன்றிப்பார்க்கும் திறனும் இருந்தால், உவமைகள் உங்கள் பேனாவின் மையில் தானாகப் பிரவாகமாகிவிடும்.
– சாண்டில்யனின் ‘நாவல் எழுதுவது எப்படி?’ (சில பகுதிகள்)
சுந்தர ராமசாமி
Thinnai: “ஒரு படைப்பாளி இளைய தலைமுறைக்குக் கூற விரும்புபவை :: சுந்தர ராமசாமி”
என்னுடைய முதல்பட்சமான அக்கறைகள் வாழ்க்கையைப் பற்றியவை. இந்த அக்கறைகளைச் சார்ந்துதான் இலக்கியப் படைப்புக்கள் உருவாகின்றன. ஆக, ஒரு இலக்கியப் படைப்பாளி என்று எடுத்துக் கொள்ளும் போதும் சரி, வாழ்க்கையைப் படைப்புக் கண்ணோடு பார்க்க விரும்புகிறவன் என்று எடுத்துக் கொள்ளும் போதும் சரி முதல்பட்சமாக நான் ஒரு வாசகனாக இருப்பதையே உணருகிறேன்.
நம்முடன் உரையாட வந்தவர்கள் ஏதோ சாதாரண விஷயங்களைப் பற்றி நம்மிடம் சொல்வதில்லை. அவர்களுடைய வாழ்க்கைக் கண்ணோட்டத்தில் மிகச் சாரமான பகுதியை – மிக மேலான பகுதியை – அதிக அளவிற்குப் பொருட்படுத்தத் தகுந்த பகுதியைப்பற்றியே நம்மிடம் பேசுகிறார்கள்…எல்லா சிறந்த எழுத்தாளரையும் நாம் இருக்குமிடத்திலிருந்தே சந்திக்க முடியும். இந்தப் பெரிய வாய்ப்பை எண்ணி எவன் புளகாங்கிதப்படுகிறானோ அவனைத்தான் நான் சிறந்த வாசகன் என்று கருதுகிறேன்.
துறை சார்ந்த சமாளிப்பு என்பது ஒன்று; இந்தத் துறை சார்ந்த வல்லமை என்பது மற்றொன்று. பெரும்பாலும் எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் – அது வைத்தியமாக இருக்கலாம், அல்லது பொறியியலாக இருக்கலாம் – அல்லது வணிகமாக இருக்கலாம் அல்லது சட்டமாக இருக்கலாம் –
அந்த துறையைச் சேர்ந்தவர்கள் அதிக அளவுக்கு அந்தந்த துறையைச் சார்ந்த உத்திகள், பந்தாக்கள், சொற்றொடர்கள் ஆகியவற்றைக் கற்று, அதில் மிகுந்த தேர்ச்சி பெற்றவர் போன்ற பாவனையைப் பிறரிடம் உருவாக்கி அதன் மூலம் வாழ்க்கையைச் சமாளித்துக் கொண்டிருக்கக்கூடிய கோலத்தைத்தான் அதிக அளவில் பார்க்க முடிகிறது.
முக்கியமாக இன்று நான்கு விஷயங்களை நான் உங்களுடைய கவனத்திற்குக் கொண்டு வர விரும்பினேன். ஒன்று வாசிப்பு சம்பந்தபட்ட விஷயம்; மற்றொன்று உங்களுக்கு உகந்த துறையை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொண்டு அந்தத் துறையில் நீங்கள் போதிய திறமை பெற்று நம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்ளக்கூடிய விஷயம். மூன்றாவது தாழ்வு மனப்பான்மை என்று நான் நம்பக்கூடிய நோயிலிருந்து முற்றாக விடுதலை பெறுவதற்கான வழிகள். நான்காவது இந்திய வாழ்க்கையைச் சார்ந்தோ, தமிழக வாழ்க்கையைச் சார்ந்தோ, தமிழக வாழ்க்கையை எதிர்கொள்ளுவதன் மூலம் நமக்குச் சொந்தமான, சுயமான கண்ணோட்டங்களை நாம் உருவாக்கி கொள்ளக்கூடிய முயற்சி. இந்த நான்கு கருத்துக்களையும் விவாதத்திற்காக உங்கள் முன் வைக்கிறேன்.
மெலட்டூர்.இரா.நடராஜன்
முதலில் ஒன்றை தெளிவு படுத்திவிடுகிறேன். தயவு செய்து நான் சொல்லுவதுதான் இலக்கணம் என்று எண்ணிவிட வேண்டாம். எனது அனுபவத்தில், நான் என்னை செம்மைப்படுத்திக் கொள்ள, முட்டி மோதி அறிந்து கொண்டதை, புரிந்து கொண்டதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். அவ்வளவே. ஒரு சிலருக்காவது பயண்பட்டால் அது என் பாக்கியமே.
எது நல்ல சிறுகதை என்று யாராலும் அறுதியிட்டு சொல்லமுடியாது. அதனால்தான் என்னவோ, முதல் பரிசு பெற்ற சிறுகதை நமக்கு மொக்கையாக தெரியலாம். ஆறுதல் பரிசு பெற்ற கதை முதல் பரிசுக்கு உரியதாக இருக்கலாம். ஆனால் ஒன்று. ஒரு சிறுகதை, நம் உள் வட்ட நண்பர்களை, உறவினர்களை தாண்டி, ஒரு சிலரையேனும் திருப்தி படுத்திவிட்டது என்றால் அது நமக்கு வெற்றியே. அந்த பெருவாரியான ரசிப்புத்தன்மையை நோக்கியே ஒரு எழுத்தாளன் இயங்க வேண்டும்.
1. சிறுகதை என்பது ஒரு சிறு நிகழ்வு. எனவே இதில் நாம் எடுத்துக் கொள்வது ஒரு சிறிய சம்பவமாக இருக்கட்டும். அதை மையமாக வைத்து முன்னே பிளாஷ்பேக் சேர்த்து, பின் பகுதியில் முடிவைச் சொல்லி கதை செய்யலாம். மாதங்கள், வருடங்கள் என்றெல்லாம் உருட்ட தேவையில்லை.
2. கதைக்கு தொடக்க வார்த்தைகள் மிக மிக அவசியம். இவைகள்தான் வாசகர்களை படிக்க தூண்டுபவை. எனவே நேரடியாக கதைக்கு சம்பந்தமான விஷயங்களை கொண்டுவந்துவிடுதல் நல்லது. ஒரு நல்ல தொடக்கம், பாதி முடிவை எட்டும் என்று ஒரு பேச்சு இருக்கிறது. இன்றைய உலகம் அவசர உலகம். கதையை படிப்பதற்கு முன்னால் எவ்வளவு பக்கம் என்று பார்க்கும் மனப்பாண்மை கொண்டது. எனவே குழப்பமில்லாமல், ஜெட் வேகத்தில் சுறு சுறுவென தொடங்கும் கதை நிச்சயம் படிக்கப்படும்.
3. சிறுகதையில் எந்தவித தேவையில்லாத வார்த்தைகள் இருக்கக் கூடாது. இந்த ஒரு வரியை எடுத்துவிடுவதால் கதை விழுந்துவிடும் என்ற அளவுக்கு வார்த்தை சிக்கனம் வேண்டும். கதையை எழுதியவுடன் ஒரு வெளி ஆசாமியாக இருந்து தானே படிக்கும் போது அதிகப்படியானவை பளிச்சென்று தெரிந்துவிடும்.
4. கதை சொல்லும் வார்த்தைகளில் ஒரு ரசிப்புத் தன்மை இருக்க வேண்டும். அந்த வார்த்தைகளை படிக்கும் வாசகனை அது எந்த விதத்திலாவது பாதிக்க வேண்டும். வார்த்தைகளில் உள்ள ஜாலம்தான் உங்களுக்கு ஒரு முத்திரையை அளிக்கிறது. எனவே மேம்போக்காக எழுதாமல், ஒரு சிற்பக் கலைஞன் சிற்பம் செதுக்குவது மாதிரி வார்த்தைகளை கையாளுங்கள்.
5. நடுநடுவே வரும் வசனங்கள் பளிச் பளிச் என்று ஆணித்தரமாக இருக்க வேண்டும். அது கதையின் ஓட்டத்தை தீர்மாணிப்பதாக இருக்க வேண்டும்.வெட்டியாக வரும் வசனங்கள் வாசகனை வெறுப்பேற்றும்.
6. முடிவு நெத்தியடியாக இருக்க வேண்டும். அந்த வரியை படித்ததும், வாசகன் ‘அட’ என்று வியக்க வேண்டும். அவன் திருப்தியுடன் ஒரு புன்னகை செய்தால் அது உங்களுடைய வெற்றி.
7. கதை எழுதுவதற்கு முன்னால் அதை பகுதி பகுதியாக பிரித்து ஒவ்வொன்றிலும் என்ன சொல்லப் போகிறோம், அவைகள் சீராக இருக்கின்றனவா என்று மனசுக்குள் ஒரு காட்சி மாதிரி ஓடவிட்டு பார்த்துவிட்டு எழுத உட்கார்ந்தால் நல்லது.
8. ஒரு கதைக்கான கரு கிடைத்துவிட்டால், அதை மனசுக்குள் கொஞ்ச நாட்கள் உருட்டிக் கொண்டே இருங்கள். அது சம்பந்தமாக விவரங்கள், விவரனைகள், தர்க வாதங்கள், உங்களின் அனுமானங்கள் ஆகியனவற்றை அலசி செம்மை படுத்துங்கள்.
9. இன்றைய பத்திரிக்கை உலகில் சிறுகதைகள் என்பது A4 சைஸ் பேப்பரில் எழுத்துரு 10ல் இரண்டரை பக்கங்களுக்கு மிக கூடாது. புதிய எழுத்தாளர்கள், தங்களின் கையெழுத்து மிக தெளிவாக இருந்தால் மட்டுமே, கையிலால் எழுதி அனுப்பலாம். கொஞ்சம் மோசமான கையெழுத்து கொண்டவர்கள் கம்ப்யூட்டரில் அடித்து அனுப்புவது நல்லது. தற்போதைய சூழலில் பொறுமையாக படிக்க ஆளில்லை.
10. கதைக்கான களம் மிகவும் வித்தியானமானதாக இருந்தால் மிக நல்லது. மண்வாசனை கொண்ட கதைகளுக்கு என்றுமே மரியாதை உண்டு. அதற்காக வாசகர்களை ரொம்ப கஷ்டப்படுத்தக் கூடாது. புதிய கோணத்தில் கதை சொல்லுவது ஜெயிக்கும் குதிரையில் பணம் கட்டுவது மாதிரி.
11. முதலில் உங்கள் கதை ஒரு பத்திரிக்கையால் நிராகரிப்பட்டால் அதை முழுவதுமாக ஏற்றுக் கொள்ளுங்கள். வளரும் எழுத்தாளருக்கு எதிர்மறை விமர்சனங்களை பண்புடன் எற்றுக் கொள்ளும் பக்குவம் வேண்டும். ஏன் இந்தக் கதை அவர்களை திருப்தி படுத்தவில்லை? என்ற கேள்வி போட்டு ஆராயுங்கள். அந்த பத்திரிக்கையில் வரும் கதைகளின் போக்கை கவனியுங்கள். அவர்களின் மன ஓட்டம் புரியும். அதற்கு ஒத்துப்போக முடிந்தால் நல்லது. இன்லையேல்லை அதை விட்டுவிட்டு வேறு பத்திரிக்கையை பாருங்கள்.
12. ஒரு கதை நிராகரிப்பட்டததும், அதை மாற்றி எழுத சோம்பல் படவே கூடாது. எனது பல சிறுகதைகள், மாற்றி எழுதப்பட்டு, வேறு பத்திரிக்கைகளில் வெளியாகி இருக்கின்றன.
13. கதை எழுதுவதற்கு மிக அடித்தளமாக இருப்பது அப்ஸர்வேஷன். நம்மை சுற்றி நடக்கும் பல விஷயங்களை உண்ணிப்பாக கவனியுங்கள். ஒரு குடிகாரனை பற்றி எழுதினீர்களானால், அவன் இயல்பை ரசிப்புத்தன்மையோடு எழுதுங்கள். வண்ணதாசன், சுஜாதா, இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்களின் எழுத்துக்களை படியுங்கள். அவர்கள் எப்படி எழுத்துக்களை நகர்த்துகிறார்கள் என்பது புரியும். கதை படிக்கும் போது எழுத்துக்கள், ஆடி வரும் தேர் மாதிரி மனசை கொள்ளை கொள்ள வேண்டும்.
14. கதையில் ஒரு இடத்தைப் பற்றியோ அல்லது டெக்னிகலான விஷயங்கள் பற்றியோ எழுதப்போகிறீர்கள் என்றால் அதை பற்றி விலாவாரியாக படியுங்கள். அதன் பிறகு
எழுதினால், அதன் உண்மைத்தண்மை வாசகர்களை ஈர்க்கும். வாசகனின் தேடுதல்
வேட்க்கையை நீங்கள்தான் தீர்க்க வேண்டும்.
15. கூடுமானவரை உங்களது அனுபவங்களை, நீங்கள் பார்த்ததை, எழுத்தில் கொண்டுவாருங்கள். அதை அப்படியே நேரடியாக எழுதாமல் உங்கள் கற்பனையை ஓடவிட்டு, ஒட்டு சேருங்கள். ஆண் சம்பந்தப்பட்டதை பெண் ஆக்குங்கள். ஒரிஜினல் சித்தப்பாவை கதையில் மாமாவாக்குங்கள். அவர்கள் கதையை அப்படியே எழுதினால் பல் பிரச்சனைகள் பின்னால் எழலாம். தவிர, உங்களது தனித்தன்மை அடிப்பட்டு போய்விடும்.
16. ஒவ்வொரு பத்திரிக்கைக்கும் ஒரு ஸ்டைல் இருக்கிறது. குமுதத்திலும், குங்குமத்திலும் கொஞ்சம் விலங்கமான/லைட்டான கதைகள் எழுதலாம். கல்கியில் அதை செய்யமுடியாது. ஆனந்தவிகடனில் இதுவரை எழுதப்படாத புதிய களன்களில், புதிய கோணத்தில் எழுதப்பட்ட கதையை வரவேற்ப்பார்கள். ஒவ்வொரு பாராவிலும் வார்த்தை நயம் அவசியம் இருக்க வேண்டும். பெண்கள் பத்திரிக்கையில் குடும்ப பிரச்சனைகளை அலசும் கதைகள் வரவேற்கப்படும்.
17. கதையை எழுதி முடித்தவுடன், உங்கள் நண்பர் குழுவில் எந்தவித சங்கோஜமும் இல்லாமல் நேரடியாக விமர்சனம் செய்யும் ஒருவரிடம் கொடுத்து படிக்கச் சொல்லுங்கள். ஒரு வாசகனாக அவருக்கு வரும் சந்தேகங்களை குறித்துக் கொண்டு அதை நிவர்த்தி செய்யுங்கள்.
18. ஒரு கதைக்கான கரு நேரடியாக கிடைக்காது. ஒரு நிகழ்வின் தாக்கம்தான் ஒரு கதைக்கான கருவாக இருக்கமுடியும். ஒரு முறை, சிக்னலில் ஸ்கூட்டரின் பின் சீட்டில் அம்மாவின் தோளில் தலை தொங்கி தூங்கிக் கொண்டிருந்த குழந்தை ஒன்றை பார்த்தேன். அதை வைத்து சின்னு என்ற சிறுகதையை எழுதினேன். குங்குமத்தில் வந்தது. ராஜேஷ்குமாரன் நிறைய க்ரைம் கதைகளுக்கு தினசரிகளே அதிகம் உதவுவதாக ஒரு முறை சொல்லியிருக்கிறார்.
19. எழுத எழுததான் வார்த்தைகள் வசப்படும். எனவே நிறைய எழுதுங்கள். அதற்காக நிறைய படியுங்கள். வார்த்தைகளை கொட்டித்தள்ளாமல் அம்மா கைமுறுக்கு சுற்றுவது மாதிரி நிதானமாக கையாளுங்கள். ஒரு அரை மணிநேர கச்சேரிக்கு பின்னால் ஒரு நூறு மணிநேர உழைப்பு இருக்கும். எனவே பலமுறை அடித்து திருத்தி மாற்றியமைத்து உங்கள் மனசுக்கு திருப்தியாகும் வரை முயற்சி செய்யுங்கள்.
20.ஒரு கதையின் நீளத்தை அந்த கதைதான் தீர்மானிக்க வேண்டும். ஒரு பக்க கதைக்கான விஷயத்தை வைத்துக் கொண்டு டி.வி.சீரியல் மாதிரி மூன்று பக்கங்களுக்கு இழுக்காதீர்கள். உங்கள் டி.ஆர்.பி. ரேட்டிங் விழுந்துவிடும். உங்களை மிகவும் கவர்ந்த ஒரு சில வார்த்தைகள், பாராக்கள்,நீங்கள் கதையில் சேர்த்திருப்பீர்கள். அது கதையின் போக்குக்கு அதிகப்படியாக இருக்குமானால், யோசிக்காமல் வெட்டித்தள்ளுங்கள்.
என்ன, சரிதானே. புறப்படுங்கள்.
தி.ஜானகிராமன்
எல்லோரும் நாட்டியம் ஆடுவதில்லை. எல்லோரும் சங்கீதம் பாடுவதில்லை. எல்லோரும் வயலினோ, மிருதங்கமோ வாசிப்பதில்லை. சிலருக்குத்தான் இந்தக் காரியங்களைச் செய்ய முடிகிறது. அந்தச் சிலரிலேயே ஓரிரண்டுபேர் செய்யும் பொழுது நமக்கு மெய் மறந்துவிடுகிறது. தெய்வத்தையே கண்டு விட்டாற்போல புல்லரித்துப் போகிறோம். வேறு பலர் செய்யும் பொழுது, நமக்கு இந்த அனுபவம் ஏற்படுவதில்லை. ஒரு சமயம் நாம் பிரமிக்கலாம். மலைக்கலாம். வியக்கலாம். நுட்பமான ரசானுபவம், தன்மறதி போன்ற உணர்வு நிலைகள் வருவதில்லை. கலைஞர் உணர்வு மயமாகி ஆகி ஆடும்போதோ, வாசிக்கும் போதோ, தானாக ஒரு முழுமையும் ஓர் ஒருமையும் அந்தக் கலைப்படைப்பில் நிறைந்து, நம்முள்ளேயும் பரவி நிரம்பும். உணர்வு இல்லாமல் இயந்திர ரீதியில் படைக்கிறவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் சாமர்த்தியத்தையும் அசகாய சூரத்தனத்தையும் காட்டி நம்மைப் பிரமிக்க வைக்க முடியும், ஆனால் மெய்மறக்கச் செய்ய இயலாது. நான் இந்த நோக்கில்தான் எந்தக் கலைப் படைப்பையும் பார்க்கிற வழக்கம். சிறுகதையையும் அப்படித்தான் பார்க்கிறேன்.
எந்தக் கலைப்படைப்புக்கும் முழுமையும் ஒருமையும் அவசியம். அவை பிரிக்க முடியாத அம்சங்கள். சிறுகதையில் அவை உயிர்நாடி. ஓர் அனுபவத்தைக் கலைவடிவில் வெளிப்படுத்த சிறுகதையில் இடமும் காலமும் குறுகியவை. எனவே எடுத்துக்கொண்ட விஷயம் உணர்வோ, சிரிப்போ, புன்சிரிப்போ, நகையாடலோ முறுக்கேறிய, துடிப்பான ஒரு கட்டத்தில்தான் இருக்கமுடியும். சிறிது நேரத்தில் வெடித்துவிடப் போகிற ஒரு தெறிப்பும், ஓர் அவசரத் தன்மையும் நம்மை ஆட்கொள்ள வேண்டும். தெறிக்கப் போகிறது பட்டுக் கயிறாக இருக்கலாம். எஃகு வடமாக இருக்கலாம். ஆனால் அந்தத் தெறிப்பும் நிரம்பி வழிகிற துடிப்பும் இருக்கத்தான் வேண்டும். இந்தத் தெறிப்பு விஷயத்திறகுத் தகுந்தாற்போல் வேறுபடுவது சகஜம். கதையின் பொருள் சோம்பல், காதல், வீரம், தியாகம், நிராசை, ஏமாற்றம், நம்பிக்கை, பக்தி, உல்லாசம், புதிர் அவிழல் அல்லது இவற்றில் சிலவற்றின் கலவைகளாக இருக்கலாம். அதற்குத் தகுந்தபடி அந்தத் தெறிப்பு பஞ்சின் தெறிப்பாகவோ, பட்டின் தெறிப்பாகவோ, எஃகின் தெறிப்பாகவோ, குண்டு மருந்தின் வெடிப்பாகவோ சத்தம் அதிகமாகவோ குறைந்தோ மௌனமாகவோ மாறுபடும். எனக்கு வேறு மாதிரியாக இந்த அனுபவத்தை விளக்கத் தெரியவில்லை. பல சமயங்களில் சிறுகதையைப் பற்றி நினைக்கும் போது, நூறு அல்லது ஐம்பது கஜ ஓட்டப்பந்தயத்திற்கு ஆயத்தம் செய்து கொள்ளுகிற பரபரப்பும், நிலைகொள்ளாமையும் என்னைக் கவ்விக் கொள்கிறதுண்டு. இது ஒரு மைல் ஓட்டப்பந்தயமல்ல. சைக்கிளில் பல ஊர்கள், வெளிகள், பாலங்கள், சோலைகள், சாலைகள் என்று வெகுதூரம் போகிற பந்தயம் இல்லை. நூறு கஜ ஓட்டத்தில் ஒவ்வோர் அடியும் ஒவ்வோர் அசைவும் முடிவை நோக்கித் துள்ளி ஓடுகிற அடி அசைவு. ஆர அமர,வேடிக்கை பார்த்துக் கொண்டு செல்லவோ வேகத்தை மாற்றிக் கொள்ளவோ இடமில்லை. சிறுகதையில் சிக்கனம் மிக மிக அவசியம். வளவளப்புக்கு இடமே கிடையாது. வளவளப்பு என்றால் அதிகச்சுமை. ஓடுவது கஷ்டம்.
இத்தனை தெறிப்பும் துடிப்பும் வேகமும் தேவையான சிறுகதை எழுத எத்தனையோ பேர் வழிகள் சொல்லியிருக்கிறார்கள். வகுப்புக்கூட நடத்துகிறார்கள். தபால் ட்யூஷன்கூட நடத்துவதாகக் கேள்வி. என்ன நடத்தினாலும் உத்திகளைத்தான் சொல்லிக்கொடுக்கலாம். உணர்வில் தோய்வதைச் சொல்லிக் கொடுக்க முடியாது. உணர்வில் லயிப்பதையும் முறுக்கேறுவதையும் சொல்லிக் கொடுக்க முடியாது. ஆனால் உத்திகளைச் சரியாகக் கையாண்டு, இலக்கண ரீதியாகப் பழுதில்லாத ஆயிரம் சிறுகதைகள் இப்பொழுது நம் நாட்டிலும் அயல்நாடுகளிலும் பல பத்திரிகைகளில் வருகின்றன. ஆனால் நாவலோ, நாடகமோ எழுதும் ஆசிரியர்களின் எண்ணிக்கையில் நூற்றில் ஒரு பங்குகூட அசல் சிறுகதை ஆசிரியர்கள் இந்த உலகத்தில் இல்லை. இதுதான் வேடிகக்கை. உத்திகளைத் தெரிந்து கொண்டு மட்டும் சிறுகதைகள் எழுதி, பத்திரிகைகளை நிரப்பலாம். அது ஒன்றும் பெரிய காரியமில்லை. செக்காவின் உத்திக்கு ஓர் அச்சு தயார் செய்துகொண்டு அதில் நம் சரக்கைப் போட்டு வார்த்துவிடலாம். ஆனால் அது செக்காவ் அச்சின் வார்ப்பாகத்தான் இருக்கும். புதிதாக ஒன்றும் வந்துவிடாது. உணர்வும் நம் பார்வையின் தனித்தன்மையும்தான் முக்கியம். அவை கண்யமாகவும் தீவிரமாகவும் இருந்தால் நமக்கு என்று ஓர் உருவம் கிடைக்கும். இதை எப்படிச் சொல்லிக் கொடுக்கப் போகிறார்கள்?
தனித்தன்மையும், உணர்ச்சி நிறைவும், தெறிப்பும் எல்லாம் இல்லாவிட்டால் சிறுகதையின் பிரசித்திபெற்ற இலக்கணமான ஒருமைப்பாடு உயிரில்லாத ஜடமாகத்தான் இருக்கும். இன்று உலகப் பத்திரிகைகளில் வரும் பெரும்பாலான கதைகள் தனித்தன்மை இல்லாத, அல்லது போலி உணர்ச்சிகள் நிறைந்த ஜடங்கள்தான். ஆனால் பொதுவாகப் பத்திரிகைகள்தான் சிறுகதைக் கலையை வளர்ப்பதில் பெரும் பங்குகொண்ட கருவியாக இருந்திருக்கின்றன. செக்காவ், மாப்பஸான், ஹென்ரி ஜேம்ஸ், மாம், மெல்வில், ஸ்டீபன், க்ரேன், ப்ரெட் ஹார்ட்டி முதல் ஜெர்மனி, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளில் எழுதிய எழுதுகிற சிறுகதை எழுத்தாளர்கள் வரை முக்காலே மூனறு வீசம்பேர் பத்திரிகைகளில்தான் எழுதியிருக்கிறார்கள்எழுதுகிறார்கள். எனவே, பொறுப்புள்ள பத்திரிகைகள் நல்ல சிறுகதைகளையும், பொறுப்பில்லாதவை ஜடங்களையும் வளர்க்கின்றன என்று சொல்லிவிட்டு மேலே போவோம்,
சிறுகதையில் வரும் கதையோ நிகழ்ச்சியோ ஒரு க்ஷணத்திலோ,நிமிஷத்திலோ, ஒரு நாளிலோ, பல வருடங்களிலோ நடக்கக்கூடியதாக இருக்கலாம். காலையில் தொடங்கி இரவிலோ, மறுநாள் காலையிலோ அல்லது அந்த மாதிரி ஒரு குறுகிய காலத்திலோ முடிந்துவிட வேண்டும் என்று அவசியமில்லை. சொல்லப்படவேண்டிய பொருளின் ஒருமைதான் முக்கியமானது. எட்டு நாளில் நடந்த சங்கதியை முதல் நாளிலிருந்து வரிசையாகச் சொல்லிக்கொண்டு போகலாம். இரண்டாவது, மூன்றாவது, நாலாவது நாளிலிருந்தோ அல்லது கடைசிக் கணத்திலிருந்தோ ஆரம்பித்து, பின் பார்வையாகப் பார்த்துச் சொல்லிக் கொண்டு போகலாம். நடந்தது, நடக்கப் போவது இரண்டுக்கும் இடையே ஒரு வசதியான காலகட்டத்தில் நின்றுகொண்டு நிகழ்ச்சியைச் சித்திரித்துக்கொண்டு போகலாம். எப்படிச் சொன்னாலும் ஒரு பிரச்னை, ஒரு பொருள், ஓர் உணர்வு, ஒரு கருத்துதான் “ஓங்கியிருக்கிறது’ என்ற நிலைதான் சிறுகதைக்கு உயிர்.
சிறுகதையில் சொல்லக்கூடாத விஷயங்களே இல்லை. கடந்த 100 ஆண்டுகளில் சிறுகதை வளர்ந்துள்ள போக்கைப் பார்த்தாலே இது தெரியும். வெறும் புற நிகழ்ச்சிகளில் தொடங்கி நுட்பமான மனத்தத்துவ ஆராய்ச்சி வரையில் அதன் பொருள் இப்பொழுது விரிந்திருக்கிறது. மேலெழுந்த வாரியான கவனத்திற்குப் புலப்படாத அக உணர்வுகள், நினைவோட்டங்கள், அடிமன நிலைகள் வெறும் கண்பார்வைக்குப் பின்னால் ஒளிந்து கிடக்கும் மன உந்தல் இவை எல்லாம் இன்று சிறுகதைப் பொருளாக வந்துள்ளன. ஆனால் எதைச் சொன்னாலும் ஓங்கி நிற்கும் ஒருமை அவசியம். ஒருமையுள்ள சிறுகதை முடிய வேண்டிய இடத்தில் தானாக முடிந்துவிடும். முடிகிற எல்லையைக் கடந்தால் ஒருமைக்கோப்புக்கும் ஊறுவிளையத்தான் செய்யும். பந்து எல்லையைக் கடந்து ஓடினால் கிரிக்கெட்டில் ஒன்றுக்கு நாலாக ரன் கிடைக்கும். சிறுகதையில் கிடைப்பது பூஜ்யம்தான்.
என்னை ஒரு நண்பர் கேட்டார். சிறுகதை, நாவல் எழுதுகிறவன் பெரிய இலக்கிய கர்த்தர்களின் நூல்களைப் படிக்க வேண்டுமா என்று. அவசியமில்லை என்று நான் சொன்னேன். அது எனக்கும் என்னைப் போன்றவர்களுக்கும் சொல்லவில்லை. இயற்கையாகவே அபாரமாக எழுதும் மேதை படைத்தவர்களை, புது வழிவகுக்கும் ஆற்றல் படைத்தவர்களை மனதில் வைத்துக்கொண்டு சொன்னது. என்னைப் போன்றவர் நிறைய படித்தால்தான் நல்லது. செக்காவ், மாப்பஸான், போ, மாம், தாகூர், கு.ப.ரா. புதுமைப்பித்தன், லா.ச.ரா, ஸீன் ஓகாஸி, ஜாய்ஸ், ஸ்டீஃபன் க்ரேன், ஹென்றி ஜேம்ஸ், போவன், காவபாட்டா போன்ற வெவ்வேறு சிறுகதை ஆசிரியர்களைப் படித்தால், சிறுகதைக்கான பொருள்களை நாடுவதில் எத்தனை சாத்தியக் கூறுகள் உண்டு என்பதும், சிறுகதை உருவத்தில் எத்தனை நூறு வகைகள் சாத்தியம் என்பதும் தெரியும். உருவம் என்று சொல்லும் போது ஆரம்பம், இடை, முடிவு மூன்றும் தெள்ளத் தெளிவாகத்தான் இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்பதும் இந்தக் கதைகளைப் படித்தால் தெரியும். இந்த மூன்றும் தெளிவாகத்தெரிவதும், தெளிவில்லாமல் பூசினாற் போல் இருப்பதும் சொல்லுகிற விஷயத்தைப் பொறுத்தவை. ஒரு மரத்தின் நிழல் கருக்காகக் கத்தரித்தாற் போலும் விழலாம். பூசினாற் போலும் விழலாம். அது விளக்கின் தூரம், ஒளி முதலியவற்றைப் பொறுத்தது. உருவம் சரியாக அமைவது நம்முடைய உணர்வின் தீவிரத் தன்மையைப் பொறுத்தது. என்னுடைய அனுபவத்தில், உணர்ச்சியோ, சிந்தனையோ போதிய தீவிரத்தன்மை பெறும்போது, உருவமும் தானாக ஒருமைப்பாட்டுடன் அமைந்துவிடுகிறது. உணர்ச்சியின் தீராத தன்மை எப்போது, எந்தக் கால அளவில் போதிய அளவுக்குக் கைகூடும் என்று சட்டம் போடுவதில்லை. அது ஒவ்வொர் ஆசிரியரின் திறமையைப் பொறுத்தது. ஒருவருக்கு ஒரு மணியிலோ, ஒரு நிமிஷத்திலோ கைகூடுகிற தீவிரத்தன்மை, ஊறும்தன்மை, எனக்குக் கிட்ட ஒரு வாரமோ, ஒரு வருஷமோ பிடிக்கலாம். எனக்கு ஒரு கதையைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கையில், திடீரென்று வேறு ஒரு கதை தோன்றிச் சில நிமிஷங்களில் அதை எழுதி முடித்ததுண்டு. யோசித்துப் பார்த்தால், அந்தக் கதைக்கான வித்து மனத்தில் விழுந்து எத்தனையோ வருஷங்கள் ஆகியிருக்கும். தோட்டத்து மண்ணில் எப்பொழுதோ உதிர்ந்த விதையொன்று, மண்ணுள் பல காலம் உறங்கி, திடீரென்று ஒரு மழை அல்லது நைப்பிற்குப் பிறகு முளைப்பது மாதிரிதான் அது. உணர்ச்சியைக் குறுகிய காலத்தில் தீவிரமாக அனுபவிக்கப் பழக்கியும் கொள்ளலாம் என்று சொல்கிறார்கள். எழுத்து தொழிலாகி, பத்திரிகைகள் பெருகிவிட்ட இந்த நாளில் இப்படிப் பழக்கிக் கொள்வது அவசியம் என்பதில் தவறில்லை.
எப்படி எழுதுவது என்பதை எனக்குச் சரியாக விவரிக்கத் தெரியவில்லை. மாபஸான் “நெக்லேஸை”யோ, “இரு நண்பர்களை”யோ, செக்காவ் “டார்லிங்”கையோ, “கோரஸ் பாடகி”யையோ, கு.ப.ரா. “நூருன்னிஸா”வையோ, பிச்சமூர்த்தி “பதினெட்டாம் பெருக்கை”யோ, டாகூர் “ஊர் திரும்புதலை”யோ எப்படி எழுதினார்கள் என்று அவர்களைக் கேட்டால்தான் தெரியும். என் சொந்த அநுபவத்தில் தெரிந்ததைத்தான் நான் சொல்லுவேன். ஒரு நாள் நான் ரயிலில் போய்க்கொண்டிருந்தபோது கச்சலும், கறுப்புமாக நாய் பிடுங்கினாற் போன்ற ஒரு பத்து வயதுப் பெண்குழந்தையுடன் யாரோ பணக்கார அம்மாள் எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தாள். பள்ளிக்கூட விடுமுறைக்கு மூத்த அக்காளின் ஊரில் தங்கிவிட்டு ஊர் திரும்புகிறது அந்தப் பெண். நல்ல துணை ஒன்று இந்தப் பணக்கார அம்மாளின் உருவில் கிடைக்கவே, அக்காள் அந்த அம்மாளோடு குழந்தையை அனுப்பியிருக்கிறாள். ஏதோ பேசிக் கொண்டிருக்கும்போது அந்த அம்மாள் “இது படித்து என்ன பண்ணப் போகிறது? நான் கூட, கூடமாட ஒத்தாசையாயிருக்க இதையே சாப்பாடு போட்டு வீட்டில் வைத்துக்கொண்டு விடலாம் என்று பார்க்கிறேன்” என்றாள். என்னமோ, அந்த யோசனையும் அந்த அம்மாள் அதைச்சொன்ன தோரணையும் உள் மனத்தில் பாய்ந்து குத்திக்கொண்டுவிட்டன. அந்தப் பெண்ணையே பார்த்துக் கொண்டு வந்தேன். அந்த ஆறு மணி நேரப்பயணத்தில் ஒன்றும் வேண்டும் என்றுகேட்காமல், ஆசைப்படாமல், கேட்ட கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லிக்கொண்டு வந்தது அது. எனக்கு உணர்ச்சி வசப்படுகிற இயல்பு அதிகம். அந்தப் பெண் தன் பொறுமையினாலும், பொறுப்பினாலும் எதையும் சமாளிக்கும். எதையும் ஆளும் என்று தோன்றிற்று. ஓடி ஆடி, கத்திக் கூச்சலிட்டு, விளையாடிப் பிதற்ற வேண்டிய வயதில் அது உலகத்தின் சுமைகளையும், கவலைகளையும் தாங்கிக் கொண்டிருப்பது போல் எனக்குத் தோன்றிற்று. எனக்குப் பயமாக இருந்தது. வயிற்றைக் கலக்கிற்று. அது ஒரு படம்.
இன்னொரு படம். என் மகன் ஆறு வயதில் ஒரு விடுமுறைக்கு அவன் தாத்தா வீட்டுக்குப் போயிருந்தான். நான் போய்த் திரும்பி அழைத்து வந்தேன். குணத்தில் எனக்குநேர் விரோதம் அவன். கூப்பிடாததற்கு முன் போய் யாரோடும் பேசிச் சிரித்து, நெடுநாள் சிநேகம் போல ஐக்கியமாகிவிடுகிற சுபாவம். பார்ப்பதற்கும் அப்போது கஷ்கு முஷ்கென்று உருட்டி விட்டாற்போல் இருப்பான். கூடப் பிரயாணம் செய்தவர்களோடு பேசிச் சிரித்துக் களைத்துப்போய் அவன் தூங்கத் தொடங்கினான். ஆரஞ்சுப் பழத்திற்காகக் கத்திவிட்டு, வாங்கிக் கொடுத்ததும் சாப்பிடாமல் தூங்கிவிட்டான். அது கையிலிருந்து உருண்டு ஒரு ஓரமாகக் கிடந்தது. அவ்வளவு கத்தினவன் ஏன் உடனே அதைத் தின்னவில்லை? எனக்கு அப்போது முன்பொருதடவை ரயில் பயணம் செய்தபோது பார்த்த அந்தப் பெண்ணின் ஞாபகம் வந்தது. இந்த இரண்டு படங்களும் எனக்கு அடிக்கடி ஞாபகம் வருவதுண்டு. ஆனால் எழுத வேண்டும் என்று தோன்றவில்லை. சுமார் ஒரு வருடம் கழித்து கலைமகள் தீபாவளி மலருக்காக அழைப்பு வந்தபோது,இந்த இரண்டு படங்களும் இணைந்து கலந்து “சிலிர்ப்பு” என்ற கதையாக உருவாயின. அதை வேகமாக எழுதின ஞாபகம் எனக்கு. கம்ப்யூட்டரில் கொடுத்தது போல இந்த இரு நிகழ்ச்சிகளும் அந்த ஒரு வருஷ காலத்திற்குள் ஒரு கதையை உருவாக்கிவிட்டனவோ என்னவோ! உட்கார்ந்து கதையை எழுதி முடிக்கிற வரையில் என்னால் துயரம் தாங்கமுடியவில்லை. ஒரு அபூர்வமான உணர்ச்சிலயம் அது. உடல், உள்ளமெல்லாம் நிரம்பி அன்று நான் கரைந்து கொண்டிருந்த ஞாபகம். 13 வருஷம் கழிந்தும் இன்னும் தெளிவாக நினைவிருக்கிறது. கடைசி வரிகளை எழுதும்போது ஒரு குழந்தையின் நிர்மலமான அன்பில் திளைக்கும் சிலிர்ப்பும் கசிவும் என்னைக் கரைத்துக் கொண்டிருந்தன. எழுதி முடித்ததும் ஒரு அதிசயமான சுமையிறக்கமும் விடுதலையும் நெஞ்சு கொள்ளாத நிறைவும் என்னை வந்து அணைத்துக்கொண்ட நினைவு இன்னும் எனக்கு இருக்கிறது. “சிலிர்ப்பு’ என்றே பெயர்வைத்துக் கதையை அனுப்பினேன். (எழுதி முடித்த பிறகுதான் தலைப்புக் கொடுக்கிற பழக்கம் எனக்கு.)
நான் ஒரு சின்ன ஹோட்டலில் சாப்பிடப் போனபோது ஒரு புதுக் கண்டாமணி கல்லாவிற்கருகில் வைத்திருந்தது. ஹோட்டல் முதலாளி அதைக் கோவிலுக்கு விடப்போவதாகச் சொன்னார். ஏதோ செல்லக் குழந்தையைப் பார்ப்பது போல அதை அவர் பார்த்துக் கொண்டு நின்றார். எதற்காக மணி வாங்கிவிடுகிறார் என்று எனக்குள் கேட்டுக் கொள்ளத் தொடங்கினேன். இன்னொரு நாள் லஸ் மூலை ஹோட்டல் ஒன்றில் சாப்பிடுகையில் ரவாதோசையின் மடிப்பைத் திறந்தபோது பாதி குடித்த பீடி ஒன்று கிடந்தது. ஹோட்டல் முதலாளியிடம் காண்பித்தேன். அவருக்கு வருத்தம், பத்துப் பேருக்கு நடுவில் சொன்னார். அதே லஸ் மூலையில் இன்னொரு ஹோட்டலில் சாம்பாரில் ஒரு சின்ன கருவண்டு கிடைத்தது. நல்ல வேளையாகச் சுண்டை வற்றல் குழம்பு இல்லை. வண்டு அடையாளம் தெரிந்தது. (ஒரு தடவை ரசத்தில் பல்லிகூடக் கிடைத்திருக்கிறது. சாப்பாடு விஷயத்தில் எனக்குத் தனி அதிர்ஷ்டம் உண்டு.) சர்வரிடம் சொன்னதும், பீடி தோசை முதலாளி போலல்லாமல், அவர் பயந்து பரபரவென்று காதோடு காதாக மன்னிப்புக் கேட்டுக்கொண்டு ராஜோபசாரம் செய்து என்னை வழியனுப்பி வைத்தார். பல ஆண்டுகள் கழித்து இவையெல்லாம் சேர்ந்து “கண்டாமணி’ என்ற கதையாக உருவாயின. இந்தக் கதைக்கு மையக்கரு, சந்தேகம் அல்லது பயம். ஒரு உணவு விடுதிக்காரர் சாதம் குழம்புகள் பரிமாறிவிட்டு உள்ளே வந்தபோது, குழம்பிற்குள் கரண்டியை விட்டுக் கிளறித் தூக்கிய போது நீளமாகப் பாம்பு குட்டி போன்ற ஒரு ஜந்து கிடப்பதைப் பார்த்தார். கணவனும் மனைவியும் பதறிப்போய் தெய்வத்திடன் அபவாதம் ஆபத்து ஏதும் வராமல் காப்பாற்றும்படி வேண்டிக்கொள்கிறார்கள். செய்தி பரவாமலிருக்க வேண்டும் என்று அவர்களுக்குக்கவலை. கண்டாமணி வார்த்துக் கட்டுவதாக நேர்ந்து கொள்கிறார்கள். மறுநாள் காலை அநத் ஆள் செத்துப் போய்விட்டதாகத் தெரிகிறது. அது இங்கே சாப்பிட்டதனால்தானா என்று நிச்சயமாகச் சொல்வதற்கில்லை. ஆனால் விடுதிக்காரருக்குத்தன் குழம்புதான் யமன் என்று பயம். சந்தேகமும் பயமும் அவரை ஆட்டுகின்றன. சொன்னபடி கண்டாமணி வார்த்துக் கோயிலில் கட்டிவிடுகிறார். ஆனால் அந்த மணியோசையைக் கேட்கும்போதெல்லாம், தான் செய்து விட்டதாக நினைத்த குற்றம் அவரை அலைக்கழிக்கிறது. கடைசியில் தாங்க முடியாமல் கோயில் நிர்வாகியிடம் சென்று வேறு என்னவோ சாக்குகள் சொல்லி மணியைத் திருப்பிப் பெறப்பார்க்கிறார். சின்னச் சின்னதாக வெள்ளிமணிகள் செய்து வைக்கிறேன் என்று வேண்டுகிறார். கண்டாமணியோ நன்றாக அமைந்துவிட்டது. அதிகாரி அதை எண்ணி, “போய்யா பைத்தியம்” என்கிற மாதிரி சிரித்துவிட்டு மறுத்துவிடுகிறார். விடுதிக்காரருக்கு அழுத்தி வற்புறத்தவும் பயம். பேசாமல் திரும்பிவிடுகிறார். இந்தக் கதையைச் “சிலிர்ப்பு” மாதிரி பரபரவென்று நான் எழுதவில்லை. அந்தச் சந்தேகமும் பயமும் கதாநாயகர்களாக இருப்பதாலோ என்னவோ மெள்ள மெள்ளத்தான் எழுத முடிந்தது. வேறு தொல்லைகள் குறுக்கிட்டதனாலும் மூன்று நான்கு தடவை உட்கார்ந்து எழுதி முடித்ததாக ஞாபகம்.
இந்த மாதிரி பல கதைகளுக்குச் சொல்லிக்கொண்டு போகலாம். அதனால் உங்களுக்கு எந்தப் பிரயோசனமும் இராது. அவரவர்கள் அனுபவிப்பதும் எழுத்தாக வடிப்பதும் அவரவர் முறை.
என் அனுபவத்தை மீண்டும் ஒருமுறை சொல்ல ஆசைப்படுகிறேன். எந்த அனுபவத்தையும் மனசில் நன்றாக ஊறப்போடுவதுதான் நல்லது. பார்த்த அல்லது கேட்ட ஓர் அனுபவம் அல்லது நிகழ்ச்சியைப் பற்றி உணர்ந்து சிந்தித்துச் சிந்தித்து ஆறப்போடத்தான் வேண்டும். இந்த மன நிலையை ஜே. கிருஷ்ணமூர்த்தி அடிக்கடி சொல்லும் “ Choice-less Awareness” என்ற நிலைக்கு ஒப்பிடத் தோன்றுகிறது. ஒரு நிகழ்ச்சியைச் சுற்றி சித்தம் வட்டமிட, வட்டமிட, அதன் உண்மை நம் அகத்தின் முன்னே மலரும். கதை உருவு முழுமையுடன் வடிவதற்கு என் அனுபவத்தில் இதுதான் வழி. அனுபவம் நம்முள்ளில் தோய்ந்து ஒன்றி பக்குவநிலைக்கு வருமுன் அவசரப்பட்டு எழுதினால் உருவம் மூளிப்பட்டு விடுகிறது. பழக்கத்தில் இது தெரியும்.
நான் சிறுகதை ஆசிரியனும் இல்லை. சிறுகதை வாத்தியாரும் இல்லை. (சிறுகதை எழுது என்று யாராவது என்னைக் கேட்டால் எனக்கு வயிற்றில் புளியைக் கரைக்கத் தொடங்கிவிடும்.!) நான் எழுதிய நூற்றுக்கு மேற்பட்ட கதைகளில் ஒன்றோ இரண்டோதான் சிறுகதை என்ற சொல்லுக்குச் சற்று அருகில் நிற்கின்றன. மற்றவைகளைச் சிறுகதை என்றால் சிறுகதை என்ற சொல்லுக்கே இழிவு செய்கிற மாதிரி. இப்படியானல் ஏன் இத்தனை நாழி கதைத்தாய் என்று கேட்காதீர்கள். தோல்வி பெற்றவர்கள்தான் உங்களுக்கு வழி சொல்லமுடியும்.
தொகுத்தவர் – மகரம். (1969)
சுஜாதா
’சிறுகதை எழுதுவது எப்படி?’ என்பது கற்றுக்கொடுப்பதற்காக எழுதப்பட்ட பாட புத்தகம் அல்ல. அது சுஜாதாவின் ஒரு சிறுகதை தொகுப்பு என்பது சுஜாதாவின் ரசிகர்களுக்கு தெரிந்திருக்கும். தொகுப்பில் உள்ள முதல் கதையின் தலைப்பே, புத்தகத்தின் தலைப்பு. முழுக்க முழுக்க நகைச்சுவை படர்ந்திருக்கும் கதை இது. குங்குமத்தில் வெளியானது. எப்போது என்று சரியாக தெரியவில்லை. ஆனால், கண்டிப்பாக 1981க்கு முன்பு.
சுஜாதாவின் கதைகள் எல்லாவற்றிலும் முதல் வரி படிப்போரை உள்ளே இழுத்துவிடும். கதை எழுதுபவர்களுக்கு அவர் சொல்லும் அறிவுரையும் இதுதான். இந்த கதையின் முதல் பாரா…
ஒரு அரிய வாய்ப்பு! நீங்கள் நல்ல சிறுகதைகள் எழுத விரும்புகிறீர்களா? குமுதம், விகடன், குங்குமம், சாவி, இதயம், கல்கி போன்ற முன்னணி இதழ்களில் உங்கள் சிறுகதைகள் பிரசுரமாக வேண்டுமா? சுஜாதாவிடம் கற்றுக் கொள்ளத்தொடர்பு கொள்ளுங்கள்: த.பெட்டி எண்: 2355.
முழுக்க முழுக்க சுவாரஸ்யமாக இந்த கதையை படிக்க விரும்புபவர்கள், இப்படியே கிளம்பி விடவும். நான் வாசித்து ரொம்பவும் ரசித்த கதையை இங்கே பகிர்ந்துக்கொள்ள போகிறேன்.
கதையின் நாயகன் ராஜரத்தினம், மேலே இருக்கும் விளம்பரத்தை தினமணியில் பார்ப்பதில் தொடங்குகிறது கதை. ராஜரத்தினத்துக்கு அவர் எழுதும் கதைகள் பத்திரிக்கையில் வர வேண்டுமென்பது ஆசை. ஆனால், எழுதிய கதைகள் ஒன்றும் பிரசுரமாகவில்லை. ஒருநாள் இந்த விளம்பரத்தைப் பார்த்து அவர் எடுக்கும் முடிவுகள், அதன் விளைவுகள், அதை ராஜரத்தினத்தின் வார்த்தைகளிலே சுஜாதா எழுதியிருக்கிறார்.
சுஜாதா பற்றி அவருடைய கதாபாத்திரமான ராஜரத்தினம் என்ன நினைக்கிறார்?
“சுஜாதாவிடம் கற்றுக்கொள்ள!” சர்தான், சுஜாதா வராறா! அந்த ஆளு சுமாரான எழுத்தாளன்தான்; ஒத்துக்கறேன், அங்க இங்க படிப்பேன். வாத்யார்கிட்டே சரக்கு இருக்கலாம். அவருதான் லாண்டரி கணக்கு எழுதினாக்கூட போடறாங்களாமே!
விளம்பரத்தை பார்த்து சுஜாதா நடத்தும் சிறுகதை பட்டறைக்கு விண்ணப்பம் எழுதிப்போடுகிறார் ராஜரத்தினம். அவர்களும் வர சொல்கிறார்கள். இவரும் அவர்கள் வர சொன்ன ஹோட்டலுக்கு சொல்கிறார். அங்கு ஒருவர் அவரை விசாரித்துவிட்டு மாடியில் இருக்கும் அறைக்கு போக சொல்கிறார்.
மெள்ள மாடிப்படில ஏறிப் போனேன், எதிர்பார்ப்பில என்னோட இருதயம் ஒரு ரெண்டு படி முன்னாலேயே ஏறுது. அந்த ரூம் கதவைத் தட்டினேன். இல்லை, ‘டக் டக் கினேன்…’ எப்படி?
என்ன குசும்பு, பாருங்க? கதை வந்த ஆண்டை நினைத்துக்கொள்ளவும்.
அப்புறம் அந்த அறையின் கதவை ராஜரத்தினம் தட்ட, கதவை திறப்பது ஒரு பெண்.
“மன்னிச்சுக்கங்க, இதானே ஒம்பது?”
“ஆமாம் உள்ளே வாங்க.”
“சுஜாதாவை சந்திக்கலாம்னுட்டு”
“நான்தான் சுஜாதா”ங்கறா அந்தப் பொண்ணு.
அடுத்த ஆறு பக்கத்துக்கு அந்த பொண்ணுக்கூட நடக்குற கசமுசா தான் கதை. முடிவு ஆஹா ஓஹோ’ன்னு சொல்லுற மாதிரி இல்லாம, யூகிக்கும்படி இருந்தாலும், அந்த எள்ளலும் நக்கலும் கலந்த நடை இருக்கே? சூப்பரு…
“ஒரு பெண்ணை வர்ணிக்கிறீங்க. சரி, நல்ல ஆரம்பம். ஆனா நீங்க ஒரு பெண்ணைக் கிட்டத்தில பார்த்திருக்கீங்களா?”
“ம்… இல்லைதான்”
“எடுங்க பேப்பரை. என்னைப் பாருங்க. வர்ணிங்க. எழுதுங்க”
இப்படியே ராஜரத்தினத்துக்கு கதை எழுத பழக்கிவிடுறாங்க.
ராஜரத்தினம், “வேண்டாங்க. கதை கொஞ்சம் வேற மாதிரி போவுது.”
“என்ன வேற மாதிரி?”
“அடுத்த பக்கத்தில அவங்க ரெண்டு பேரும் ஒரு கணத்தில் சபலத்தில் தம்மை இழந்துர்றாங்கன்னு வரது!”
“சரி, அதுக்கென்ன இழந்துட்டாப் போச்சு!”
“என்னங்க இது?”
“இலக்கியங்க! வாங்க!”
—
- சிறுகதை எழுதுவது எப்படி?
- சுஜாதா
- விசா பப்ளிகேஷன்ஸ்
- 112 பக்கங்கள்
- 50 ரூபாய்
கு.அழகிரிசாமி
சிறுகதைகள் குறுகிய காலத்தில் படித்து முடிப்பதற்காகவே தோன்றின; எனினும். அது ஒன்று மட்டுமே அவற்றின் இலக்கணமாகிவிடவில்லை. இலக்கியம் பல பிரிவுகளை உடையது: ஒவ்வொரு பிரிவுக்கும் ஒவ்வொரு வடிவம் உண்டு; தனித்தனியே சில இலக்கணங்கள் உள்ளன. எனவே. குறுகிய காலத்தில் படித்து முடிக்கக்ó கூடியது. என்பது சிறுகதைகளின் வெளி வடிவ அமைப்புக்குரிய இலக்கணமேயன்றி. அதன் உள்ளமைப்புக்குரிய இலக்கணங்கள் வேறு. இந்த இருவகை அமைப்புகளுக்கும் உரிய இலக்கணங்களை ஒன்று சேர்த்து. ஸாமர்ஸட் மாம் என்ற மேலை நாட்டுச் சிறுகதை ஆசிரியர் கூறுகிறார்:
“சிறந்த சிறுகதையில் நல்ல கதையம்சம் இருக்க வேண்டும். அது ஏதாவது ஒரு நிகழ்ச்சியை மட்டுமே விவரிப்பதாக இருக்க வேண்டும். ஒரு மூச்சில் படித்து முடிக்கக்கூடியதாக அதை அமைக்க வேண்டும். அது தனக்கென ஒரு தனிப்பண்பைக் கொண்டிருக்க வேண்டும். படிப்போர் மனத்தில் ஆழப் பதிந்து கிளுகிளுப்பை ஏற்படுத்த வேண்டும். ஆரம்பத்திறீருந்து முடிவு வரையில் தொய்வின்றி ஒரே சீராகச் செல்ல வேண்டும்.”
– ஸாமர்ஸட் மாம்
“சிறுகதை என்பது இலக்கியத்தில் ஒரு பகுதி; இலக்கியத்தின் ஒரு வடிவம். இலக்கியம் என்பது ஒரு கலை. கலையைப் படைப்பது படைப்புத்திறன். படைப்புத்திறனை ஒருவன் இன்னொருவனுக்குக் கற்பிக்க முடியது; ஒருவனிடமிருந்து இன்னொருவன் கற்றுக்கொள்ளவும் முடியாது. அப்படிக் கற்பிக்க முடியாமலும் கற்றுக்கொள்ள முடியாமலும் இருப்பதுதான் படைப்புத்திறன்.
படைப்புத்திறனைக் கற்பிக்க முடியாதா? இது என்ன புதிர்? என்று சிலர் ஆச்சரியப்படலாம். ஆம்! அதைக் கற்பிக்க முடியாதுதான். விருத்தப்பாவை இயற்றுவது எப்படி என்று ஒருவன் மற்றொருவனுக்குக் கற்பிக்கலாம். கற்றுக் கொண்டவன் விருத்தப்பாவை இயற்றிவிடலாம். ஆனால் அந்த விருத்தப்பா ஒரு கலைப்படைப்பாக. ஒரு சிறந்த கவிதையாக அமைவது. இயற்றியவரின் திறமையைப் பொறுத்த விஷயம். உலகில் எல்லா நாடுகளிலும் கோடிக் கணக்கானவர்கள் இலக்கிய இலக்கணங்களைக் கற்றிருக்கிறார்கள். ஆனால் கவிஞர்கள்
கோடிக்கணக்கில் இருக்கவில்லை. கம்பர். ஷேக்ஸ்பியர். காளிதாசர். தாந்தே என்று ஒரு சிலவரைத் தான் மகாகவிகள் என்று சொல்கிறோம். அந்த மகாகவிகள் மற்றவர்களிடம் இலக்கணத்தையும். இலக்கியத்தையும். அதன் நயங்களையும்தான் கற்றுக்கொண்டார்களே ஒழிய படைப்புத் திறனைக் கற்கவில்லை.
கதையின் மையமான அம்சமே. அதன் கருவே. கதையின் உருவத்தையும். நடையையும் நிர்ணயிக்கக்கூடியதாகும். எனவே கதையின் சிறப்புக்கு மூலகாரணமாக இருப்பது அதன் கருதான். கருவில் திரு இல்லையென்றால். கதையிலும் வளம் இராது. எனவே கரு பலமானதாக இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளவேண்டும். அடுத்தபடி அந்தக் கருவுக்கு கொடுக்கப்பட்ட கதை – உருவம் – சரிதானா என்று பார்க்கவேண்டியது அவசியம். அந்த உருவத்தில் கதையின் கரு சிறப்பாக முழு வளர்ச்சி பெற்று. கதைக்குச் சிறப்பைக் கொடுக்கிறதா. அல்லது வேறொரு உருவில் கதையை எழுதியிருந்தால் இன்னும் நன்றாக இருக்குமா என்று கவனிக்கவேண்டும். எழுதப்பட்ட கதைக்குக் கொடுக்கப்பட்ட உருவத்தைவிட. வேறோர் உருவம் நன்றாக இருக்குமென்று தோன்றினால் அந்த உருவத்தில் எழுதவேண்டும். இதற்கு. உருவத்தைப் பற்றிய உணர்வு எழுத்தாளனுக்கு இருக்கவேண்டியது அவசியம். உருவம் என்றால் என்ன? மையக்
கருத்தைக் கச்சிதமாகவும். குன்றாமலும். குறையாமலும் சரியான இடத்தில் தொடங்கிச் சரியான இடத்தில்ó முடிப்பது உருவத்திற்கு மேற்போக்கான ஒரு விளக்கமாகும்.
வேண்டாத விளக்கங்களோ. வர்ணனைகளோ இருக்கக்கூடாது. வேண்டிய விளக்கங்களும். வர்ணனைகளும் இல்லாமல் போய்விடவும் கூடாது. உருவம் அமைவதற்கு இன்றியமையாத விஷயங்கள் இவை. கதையில் சில பகுதிகளைக் குறைத்து விட்டால் உருவம் கெடாது. அல்லது உருவம் அமையும். அல்லது உருவம் இன்னும் கச்சிதமாக அமையும் என்று தோன்றினால் அந்தப் பகுதிகளைக் குறைத்துவிட வேண்டும். சொல்லப்போனால். ஒரு சிறுகதையில் தேவையில்லாமல் ஒரு பகுதி மட்டுமல்ல. ஒரு வார்த்தையோ. ஒரு காற்புள்ளியோ (‘கமா’)
கூட இருக்கக்கூடாது. இருந்தால் அந்த அளவுக்கு அது கதைக்குக் கேடு செய்யும்.
கதையின் கருத்தும். உருவமும். நடையும் சிறப்பாக இருப்பதுடன். தங்குதடையற்ற ஓட்டமும் இருக்கிறதா என்று கவனிக்கவேண்டும். கதையை அந்தரத்தில் நிறுத்தி வைக்கும் எந்த அற்புத வியாக்கியானமும் சரி. வர்ணனையும் சரி கதைக்கு அறவே ஆகாத விஷயம் என்று கொள்ளவேண்டும்.
கடைசியாகச் சில முக்கிய கருத்துகள் பின்வருமாறு:
1. சிறு கதை எழுதுகிறவன் வாழ் நாளெல்லாம் மற்றவர்களுடைய சிறுகதைகளைப் படித்துக்கொண்டே இருக்க வேண்டும்.
2. சிறுகதைகளோடு. காவியம். நாவல். நாடகம் போன்ற இலக்கியங்களையும். உலக அனுபவங்களையும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்.
3. தான் காண்கிற. கேட்கிற. படிக்கிற. அனுபவிக்கிற ஒவ்வொன்றினுடைய உண்மையையும் சாரத்தையும் கண்டறிவதற்கு முயலவேண்டும்.
4. இலக்கியங்களைப் படிப்பதோடு. இலக்கிய விமர்சனங்களையும் படிக்க வேண்டும்.
5. பிறர் செய்யாத ஒரு காரியத்தை அல்லது ஒரு புதுமையைச் சாதிப்பதற்கு மட்டும்தான் சிறுகதை எழுத வேண்டும்.
6. சொந்தப் புத்தியை உபயோகிக்காமல் பிறர் கருத்தை அப்படியே ஏற்கும் கண்மூடித்தனமோ அல்லது அலட்சியமாக உதாசீனம் செய்யும் அகம்பாவமோ கூடவே கூடாது.
7. எழுதும் பயிற்சியை நிரந்தரமாக வைத்துக்கொள்ள வேண்டும். நீண்ட காலம் எழுதாமல் நிறுத்திவைப்பது தவறு. எழுத எழுதத்தான் எழுத்து சிறக்கும். ’சித்திரமும் கைப்பழக்கம்’ என்பது
போல். எழுத்துச் சித்திரமும் கைப்பழக்கத்தால் தான் சிறக்கும்.
8. நடைமுறை வாழ்க்கையை ஆதாரமாக வைத்து எழுதும் கதைகளில் நடக்கமுடியாத சம்பவங்களையும். காண முடியாத பாத்திரங்களையும். கேள்விப்படாத பெயர்களையும் புகுத்தவே கூடாது.
தேவமைந்தன்
இன்றைக்குச் சிறுகதை தமிழுலகில் எத்தனையோ தொலைவு பயணம் செய்து வடிவமிழந்து உருவமிழந்து அன்னியமாகி சிறுத்து பயிற்சிப் பட்டறைகளில் சான்றிதழ் மட்டுமே பெறும் அளவு ‘மவுசு’ குறைந்து தனக்கான அடையாளம் தேடி அலைகிறது. தமிழருக்குக் கரும்பு போலவும்(சீனா) மிளகாய் போலவும்(சிலி) மணிலாப் பயறு போலவும்(மணிலா) மெய்யாகவே அன்னியமான சிறுகதையின் உரைநடை வடிவம் தமிழ் இலக்கிய உலகில் புகுந்து எப்படியெல்லாம் இலக்கணப்படுத்தப்பட்டது என்பதைப் பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கம். எந்த அளவு முன்னோக்கித் தொலைநோக்க முடியுமோ அதே அளவு சரியாகப் பின்னோக்கித் தொலைநோக்கவும் சிங்கத்துக்கு மட்டுமே முடியுமாம். இதற்கு ‘அரிமா நோக்கு’ என்று பெயரிட்டு, தமிழ் உரையாசிரியர்கள் தம் உத்திகளுள் இதைத் தலையாய உத்தியாக ஏழு நூற்றாண்டுகளுக்கு முன்பே கொண்டார்கள். இந்த உத்தியின் ஒரு பாதியை இந்தக் கட்டுரையில் பயன்படுத்துகிறேன். தமிழுக்குப் புதுவரவாக இருந்த சிறுகதைக் குழந்தை, யார் யார் மடிகளிலெல்லாம் தவழ்ந்து ஆளானது, மறக்கப்பட்டுவிட்ட/மறக்கடிக்கப்பட்ட அவர்கள் யார் என்பதைக் கூடுமான அளவு ஒழுங்குடன் வெளிப்படுத்துவதும் இதன் அடுத்த நோக்கம்.
காவியங்களில் சிறுகதைகள் – டாக்டர் மா.இராசமாணிக்கனார் நோக்கு:
நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரத்தில், கவுந்தியடிகள் மாதரிக்குக் கூறிய அடைக்கலச் சிறப்புப் பற்றிய வணிகமாதின் கதை, செய்யுளில் அமைந்த சிறுகதை. மதுராபதி தெய்வம் கண்ணகிக்குக் கூறிய பொற்கைப் பாண்டியன் கதையும் சிறுகதையே ஆகும். இங்ஙனமே மணிமேகலை என்னும் காவியத்தில் கூறப்பட்டுள்ள சுதமதியின் வரலாறு, ஆபுத்திரன் வரலாறு ஆகியவற்றில் சிறுகதை நிகழ்ச்சிகள் அடங்கியுள்ளன. இவற்றை விரித்து உரைநடையில் எழுதினால் அவை இலக்கிய நயமுள்ள சிறுகதைகளாக உருவெடுக்கும். இவ்வாறே கொங்குவேள் பாடிய பெருங்கதையிலும் சீவக சிந்தாமணியிலும் சிறுகதைகள் பல செருகப் பெற்றுள்ளன. ஆயினும் இவை அனைத்தும் செய்யுள் வடிவில் அமைந்துள்ளன.(1)
தொடக்க காலத்தில் சிறுகதைகள் – டாக்டர் மா.இராசமாணிக்கனார் நோக்கு:
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாளிதழ்களும், கிழமை திங்கள் இதழ்களும் பெருகத் தொடங்கிய பொழுது, மேனாட்டுச் சிறுகதைகளைப் பின்பற்றி நம்மவர் தமிழில் சிறுகதைகளை எழுதலாயினர். பண்டித நடேச சாஸ்திரியார் (1859-1906) ‘ஈசாப் கதைகள்,’ ‘தக்காணத்து பூர்வ கதைகள்,’ ‘தக்காணத்து மத்திய காலக் கதைகள்’ என்று மூன்று கதை நூல்களை எழுதினார். இந்த நூற்றாண்டில் பேராசிரியர் செல்வக்கேசவராய முதலியார் எழுதிய ‘அபிநவ கதைகள்’ காலத்தால் முற்பட்டவை என்றும், அறிஞர் வ.வே.சு. ஐயர் அவர்கள் பாலபாரதியில் எழுதிய கதைகள் சிறுகதைகளுக்கு உயிரும் ஒளியும் கொடுத்தன என்றும் புதுமைப்பித்தன் எழுதியுள்ளார்.
கவியரசர் பாரதியாரும், இராமாநுசலு நாயடு என்பவரும் சிறுகதைகள் எழுதினர். 1930க்குப் பின்பு கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள். எஸ்.வி.வி., கொனஷ்டை, ஆகியோர் நகைச்சுவை பொருந்திய சிறுகதைகளை வரைந்து பெயர் பெற்றனர். திருவாளர்கள் ந.பிச்சமூர்த்தி, கு.ப.ரா., பி.எஸ்.ராமையா, சிதம்பரம் சுப்பிரமணியன், புதுமைப்பித்தன் ஆகியோரும் சுவை மிகுந்த சிறுகதைகளை எழுதலாயினர், மௌனி என்பவர் எழுதியுள்ள ‘நட்சத்திரக் குழந்தைகள்,”சிவசைவம்,’ ‘எங்கிருந்தோ வந்தான்’ போன்ற கதைகள் உயர்ந்தவை….வை.மு.கோதைநாயகி அம்மையார் எழுதியுள்ள சிறுகதைகள் – ‘மூன்று வைரங்கள்,’ ‘கதம்ப மாலை,’ ‘பட்சமாலிகா,’ ‘சுடர் விளக்கு,’ ‘பெண் தர்மம்’ என்னும் ஐந்து [தொகுப்பு] நூல்களாக வெளிவந்துள்ளன.
வாழ்க்கை நிகழ்ச்சிகளுள் ஒன்றை மட்டும் எடுத்து, அதற்கு முதல்-இடை-கடை என்னும் மூன்று உறுப்புகளை அமைத்து, விளங்க வரைவது சிறுகதை அல்லது குறுங்கதை எனலாம். சுருங்கக் கூறின், பெருங்கதை வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டும் நிலைக் கண்ணாடி எனலாம்.
புதுமைப்பித்தனுடைய சிறுகதைகளில் பல சிறந்த உண்மைகள் காணப்படுகின்றன. அவற்றுள் இரண்டனைக் கீழே காண்க:
(அ) “பெரிய மீன் சின்ன மீனைத் தின்னலாம்; ஆனால் சின்ன மீன் அதற்கும் சின்ன மீனைத் தின்றால், பெரிய மீன், ‘குற்றம் செய்கின்றாய்’ என்று தண்டிக்க வருகின்றது. இதுதான் சமூகம்.”
(ஆ) “உணர்ச்சி, தேவனையும் மிருகமாக்கி விடுகிறது.”(2)
விடுதலைப் போராட்டப் பின்னணி – கல்கியின் சிறுகதைச் சாதனை – கா.திரவியம் நோக்கு:
கல்கியின் சிறுகதைகள் தேசியத்துக்கு ஆற்றிய சிறப்பான தொண்டு, அக்கதைகள் பெரும்பாலானவற்றில், நாட்டுப்பற்றும் நாட்டுக்கு ஆக்கம் தேடிய நல்ல கருத்துக்களும் கதையில் இழையோடியதாகும். சிறை சென்ற தேசபக்தனைக் கதாநாயகனாகவும், சமூகசேவை ஆற்றும் பெண்ணைக் கதாநாயகியாகவும் கொண்டு பின்னப்பட்டிருந்த இக்கதைகள்,தியாகிகளையும் ஊழியர்களையும் நம் கண்முன் நிறுத்தி, அவர்கள் தொண்டினாலும் துன்பங்களினாலும் ஊழியத்தினாலும் உள்ளக் கிளர்ச்சிகளாலும் படிப்பவர்களை ஆட்கொண்டன. அரசின் அடக்குமுறைக்கும், பொதுவாகப் பலரின் அலட்சியத்துக்கும் ஆளாகியிருந்த இந்த வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் தம் கதைகள் மூலம் சமூகத்தின் ஏற்பையும் பாராட்டுதலையும் பெற்றுத் தந்தது, கல்கியின் சிறந்த சாதனைகளில் ஒன்று.(3)
விடுதலைப் போராட்டப் பின்னணி – அகிலனின் சிறுகதைச் சாதனை – கா.திரவியம் நோக்கு:
விடுதலைப் போராட்டத்தைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட கதைகளில், போராட்ட உணர்ச்சி பொங்கி வழிகிறது அகிலனின் ‘பொங்குமாங்கடல்’ என்ற கதையில். சிதம்பரம் பிள்ளையைச் சிறையிலே தள்ளி செக்கிழுக்க வைத்த ஆங்கிலேய அதிகாரிகளைப் பழிவாங்கத் துடித்துக் கொண்டிருந்த புரட்சிவாதிகளை மையமாகக் கொண்டு நெய்யப்பட்ட நெஞ்சை அள்ளும் கதை இது.(4)
முதன்முதலில் தமிழில் சிறுகதை குறித்து ஆய்வுக் கண்ணோட்டத்துடன் சிந்தித்தெழுதிய டாக்டர் அ. சிதம்பரநாதன் கருத்துகள்:
“தமிழில் சிறுகதையைப் பற்றி ஆய்வுக் கண்ணோட்டத்தோடு சிந்தித்து, தரம் அறிந்து வகைப்படுத்தித் திறனாய்வு செய்த முதல் தமிழ்ப் பேரறிஞர் இவரே” என்று, “தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்”(ஏப்ரல் 1977) என்ற அரிய சிறு அளவிலான புத்தகத்தைப் பதிப்பித்த பேரா.புளோரம்மாள், ம.செ.இரபிசிங் கூறியுள்ளனர்.(5) 22+vi பக்கங்கள்; ரூபா ஒன்று மட்டுமே விலையுள்ளது இந்நூல். இது [இக்கட்டுரை எழுதும்] இப்பொழுது கிடைப்பதில்லை. மூன்றாவது அகில இந்திய எழுத்தாளர் மாநாட்டில் அ.சிதம்பரநாதன் ஆற்றிய பொழிவின் சுருக்கமும், இலக்கிய இதழ்களில் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளும் இதில் இடம் பெற்றுள்ளன. இதிலுள்ள சில முதன்மைக் கருத்துகளை – கூடுமானவரை சிதம்பரநாதனின் நடையிலேயே தருகிறேன். அந்தப் பகுதிகளில் மட்டும் காலம் வேறுபட்டிருக்கும்.
எட்கர் ஆலன் போ, ஹென்றி ஹட்சன், பெயின்(Barry Paine) ஆகியோர் கூறும் சிறுகதை இலக்கணம்:
1. சிறுகதை என்பது உட்கார்ந்து ஒரே மூச்சிலேயே படித்துவிடக் கூடியதாக இருத்தல் வேண்டும்.
2. 2000 அல்லது 3000 சொற்களுக்குமேல் போவதாக இருக்கக்கூடாது.
3. அரை மணி அல்லது ஒரு மணிக்குமேல் படிப்பதற்கு நேரம் எடுத்துக்கொள்ளக் கூடியதல்லாததாக இருக்கவேண்டும்.
அளவு ஒன்றே சிறுகதைக்கு இலக்கணம் அல்லாவிட்டாலும், அளவும் சிறுகதையின் இலக்கணங்களுள் ஒன்றாகும்.
கவிஞர் ரவீந்தரநாத் தாகூர் எழுதிய ‘குமுதினி’ என்னும் கதை 300 பக்கமாயினும் அது சிறுகதைதான் என்று வாதிப்பார் உண்டு. ஆங்கிலத்திலும் மெரிடித் என்பார் எழுதிய ‘குளோவின் கதை'(Tale of Chloe) என்பது சிறுகதைதானா அன்றா என்ற செய்தி பற்றி இன்னும் ஆராய்ச்சி நடந்துகொண்டு இருக்கிறது.
சிறுகதை எழுத்தாளர்கள் சிக்கலான பெரிய செய்திகளைப் பொருளாக எடுத்துக்கொள்ளக் கூடாது.(“They should not saddle themselves with a complicated plot.” Paine P.38) ஆடுகின்ற பெண் ஒருத்தி தான் ஆடுகின்ற அரங்கத்தின் நீள அகலத்திற்கேற்ப தனது ஆட்டங்களைச் சுருக்கிக்கொள்ளுதல் போல, சிறுகதை ஆசிரியர்கள் தம்முடைய கதைப்பொருளைத் தேர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
சிறுகதைகளில் ஒரே நோக்கமும் ஒரே விளைவுந்தான் எதிர்பார்க்கப்படுகின்றன.(“Singleness of aim and singleness of effect are the two great canons by which we have to try the value of a short story – as a piece of art.” Henry Hudson, Introduction To The Study Of Literature, P.445) நோக்கம் நிறைவேறும் வகையில் சிறுகதை அமைந்திருத்தல் போதுமானது. பல எழுத்தாளர்களுக்கு இது கைவரப்பெறாததால்தான் புதினங்களை[நாவல்களை] எழுதத் தலைப்படுகிறார்கள் என்று சொல்வது தவறாகமாட்டாது.
சிறுகதை எழுதுகிறவர்கள், கதை பொய் என்ற உணர்ச்சி வாசகர்கள் இடத்தில் உண்டாகும்படி எழுதுவார்களேயானால், அக்கதையில் நன்மைகள் பல உண்டு என்றாலும் அவை முழுப்பயன் அளித்தல் இல்லை.(“If a story once felt to be false, then all the virtues are of no avail”) மெழுகுவர்த்தி பார்ப்பதற்கு அழகாகவும் தொடுவதற்கு இனியதாகவும் முகருவதற்கு மனமுடையதாகவும் இருந்தாலும் அது எரியவில்லை என்றால், எவ்வாறு தக்க பயன் விளைத்தல் இல்லையோ அவ்வாறே மெய்போன்றது என்ற உணர்ச்சியை எழுப்பாத சிறுகதை முழுப்பயன் தராது என்பது நம்பிக்கை.
சிறுகதை எழுதுகிறவர்கள் நிகழ்ச்சிகளைப் படர்க்கையில் வைத்துத் தெரிவிக்கலாம்; கதைத் தலைவனோ கதைத் தலைவியோ தானே பேசுவதுபோல அமைக்கவும் செய்யலாம்; கடிதங்கள் மூலமோ, நாட்குறிப்புகள் மூலமோ, பிற பாத்திரங்கள் மூலமோ ஒன்றன்பின் ஒன்றாகச் செயல்கள் வெளிப்படுமாறு செய்யலாம். இந்த மூன்று வகைகளில் எதனை வேண்டுமானாலும் சிறுகதை ஆசிரியர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்பது மரபு.
சிறுகதையில் உரையாடல் இருப்பது விரும்பத்தக்கது என்றாலும்.இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. சிலருடைய சிறுகதை உரையாடலே இல்லாமல் நிகழ்தல் கூடும்; சிலருடைய சிறுகதையிற் சிறிதளவு உரையாடல் இருத்தல் கூடும்; சிலருடைய சிறுகதையில் எல்லாம் உரையாடலாகவே அமைந்துவிடுதலும் உண்டு.
சிறுகதையின் தொடக்க வாக்கியங்களைப் படித்த அளவில் கதையின் நோக்கம் இன்னது என்று வாசகருக்குப் புலப்பட்டுவிட வேண்டும்.(“Initial sentences should bring out the aim.”-W.H.Hudson)
சிறுகதையின் முடிவு எவ்வாறிருக்க வேண்டும்? இன்பியல் முடிவினாலோ துன்பியல் முடிவினாலோ கலை அழகு பெற்றுவிடாது; கலையழகிற்கு ஏனைய பல காரணங்கள் உண்டு.(“Happiness and unhappiness have nothing to do with art; the artistic ending is the right and inevitable ending.” – Paine)
அ.சிதம்பரநாதன் ‘தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்'(1977)நூலில் சுட்டியுள்ள சிறுகதை ஆசிரியர்களும் அவர்கள் படைத்த சிறுகதைகளும்:
1921வரை வாழ்ந்த சுப்பிரமணிய பாரதியார்தான் சிறுகதை எழுத்தாளர்களுக்கு விடிவெள்ளியாய் இருந்தவர்.. அவர் இயற்றிய ‘திண்டிம சாஸ்திரி,’ ‘சுவர்ண குமாரி’ போன்றவற்றின் அடிப்படையில் பின்னர்ச் சிறுகதைகள் எழுந்துள்ளன. வேதநாயகம் பிள்ளை, வ.வே.சு.ஐயர், மறைமலையடிகள் போன்றவர்களும் சிறுகதை போன்ற சிலவற்றை முன்னர் எழுதியுள்ளார்கள்…
சரியான சிறுகதை இலக்கியத்தின் தந்தையாகத் தமிழில் மதிக்கத்தக்கவர் ‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி என்று கூறுவது பொருத்தமற்றதாகாது. அவருடைய சிறுகதைகளிற் சில நெடுங்கதைகளாக இருக்கின்றன..அவரோடு சமகாலத்திலே வேறு இரு பெரும் எழுத்தாளர்கள் தோன்றினர். கு.ப.இராசகோபாலனும் புதுமைப்பித்தன் என்ற சொ.விருத்தாசலமும் நம் சந்ததியாராலும் விரும்பிப் படிக்கத்தக்க அளவு சிறப்பும் ஆற்றலும் பெற்றிருந்த சிறுகதை ஆசிரியர்கள். அவர்கள் இருவரும் காலஞ் சென்றுவிட்டனர். புதுமைப்பித்தன், உலகச் சிறுகதைகள் பலவற்றை மொழிபெயர்த்துள்ளார்…அவர் மிக்க சுருக்கமாகவும், திட்பமாகவும் எழுதுதலில் வல்லவர்; வரிதோறும் தொனிப் பொருளோடு வரையும் பெற்றி படைத்தவர். கு.ப.இராசகோபாலன், உயிரோடு திகழ்வாரைப் போலப் பல பாத்திரங்களைத் தமது கதைகளில் கொடுத்துள்ளார். சாதாரணமாக நம்மால் ஒதுக்கிவிடப்படுகிற, நம் கண்ணுக்குத் தெரியாது போய்விடக் கூடிய வாழ்க்கை நிகழ்ச்சிகளை வைத்துக் கொண்டு அவர் கதைகளை எழுப்பியுள்ளார். அவர் சொல்லாட்சி ஒரு தனிமதிப்புடையது. சில சொற்களில் அடங்கிக் கிடக்கும் பொருள் விரித்தால் அகன்று காட்டும். ‘காணாமலே காதல்’ ‘புனர்ஜென்மம்’ ‘கனகாம்பரம்’ முதலிய அவருடைய சிறுகதைத் தொகுதிகளாலன்றியும், ‘இரட்டை மனிதன்’ போன்ற மொழிபெயர்ப்பு நாவல்களாலும் அவர் புகழ் நிலவும் என்பது உறுதி. சமூக நோக்கில் ஜீவா* எழுதிய சிறுகதைகள், ‘வேதாந்த கேசரி’ ‘பிரதிவாதி பயங்கரம்’ முதலியவை. விந்தனின் ‘பொன்னி’ முதலிய சிறுகதைகள் சமூகப் பார்வையில் அமைந்தவை. கணையாழி எழுதிய ‘நொண்டிக் குருவி’ வெளியே ஜீவகாருண்யம் பேசி வீட்டில் அதைப் பின்பற்றாதவரை அம்பலப் படுத்தியது. “யார் குற்றவாளி?” என்ற கருத்தோடு எழுதப்படும் கதைகள் பல. இராசகோபாலாச்சாரியார் எழுதிய ‘பட்டாசு,’ அண்ணாதுரை எழுதிய ‘குற்றவாளி யார்?,’ புதுமைப்பித்தன் எழுதிய ‘பொன்னகரம்,’ ஜீவா எழுதிய ‘கொலு பொம்மை’ ஆகிய கதைகளில் வரும் பாத்திரங்கள் திருடியதாகவோ, விபசாரம் செய்ததாகவோ இருந்தன. அதற்குக் காரணம் அவ்வாறு அவர்களைச் செய்யும்படி பாழான ஏழ்மை நிலையில் விட்டுவிட்ட சமுதாயமே என்பது காட்டப்படுகிறது.
புதுமெருகு பெற்ற பழங்கதைகள்:
கு.ப.ரா. எழுதிய ‘துரோகமா?,’ கருணாநிதி எழுதிய ‘ராயசம் வெங்கண்ணா’ ஆகிய சிறுகதைகள், தஞ்சாவூர் – நாயக்கர்களிடமிருந்து மராத்தியர் கைக்குப் போகும்படி ஏற்பட்ட சரித்திரக் குறிப்பின் அடிப்படையில் எழுதப்பட்டவை. அவ்விரு ஆசிரியர்களும் நிகழ்ச்சியை வெவ்வேறு கோணத்திலிருந்து படம் பிடித்துக் காட்டியுள்ளார்கள். புஷ்பத்துறை சுப்பிரமணியன் அஜாத சத்ருவைப் ‘பாடலி’ என்ற கதையில் திரும்பவும் நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார். ‘கொனஷ்டை’ எழுதிய கதைகளில் மகனுக்கு முதுமையைக் கொடுத்து இளமையைத் தான் பெற்றுக் கொண்ட யயாதி ஒரே நாளில் பட்ட அல்லல்கள், ஆயிரம் ஆண்டுகளில் படுவதோடு சமம் என்ற அரிய கருத்து காட்டப்பட்டிருக்கிறது. ‘அகல்யை’ என்ற புதுமைப்பித்தன் கதை புத்துருவமே பெற்று நிற்கிறது.
கதையாசிரியர்களின் வாழ்க்கைநிலையை வைத்து எழுதப்பட்ட கதைகள்:
சுண்டு எழுதிய ‘சந்நியாசம்’ என்ற சிறுகதை, தன்னால் காதலிக்கப்பட்ட பெண்ணொருத்தியைத் திரைப்பட முதலாளியொருவர் தன் ஆசை நாயகியாக ஆக்கிக்கொண்டுவிட்டபடியால் எவ்வாறு படத்திலாவது சந்நியாசியாகிவிட்டார் என்பதைக் காட்டுகிறது. விந்தன் தனக்கேயுரிய பாணியில், தமிழ்நாட்டில் தம் பெருமை அறியப்படாத கதாசிரியர் ஒருவர் வடநாடு சென்று அங்கிருந்துகொண்டு ‘வக்ரநாத்ஜி’ என்ற புனைபெயரில் கதைகளெழுதித் தமிழ்நாட்டில் புகழும் செல்வமும் பெற்றார் என்பதைச் சித்தரித்தார்.
ஆண்-பெண்களின் மனநிலைகளை நன்றாகக் கவனித்து உணர்ந்து எழுதிய சிறுகதை ஆசிரியர்கள் -அரு.இராமநாதன்(‘காதல்’ இதழ்க் கதைகள்), டி.கே.சீனிவாசன்(‘துன்பக் கதை’) ஆகியோர். பெண்களின் மனநிலையை நுட்பமாக அறிந்துணர்ந்து, தெளிந்த உணர்த்தலோடு எழுதியவர் லக்ஷ்மி(திரிபுரசுந்தரி). அவர் எழுதிய ‘விசித்திரப் பெண்கள்,’ ‘முதல் வகுப்பு டிக்கெட்’ ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
ஏழைத் தொழிலாளர்களின் மனநிலையை நன்கு உணர்ந்து எழுதியவர், தானும் தொழிலாளராய் இருந்து எழுத்தாளரான விந்தன். பெ.தூரன்,மு.வரதராசன், ராஜம் கிருஷ்ணன்(‘பிஞ்சு மனம்’), கி.வா.ஜகந்நாதன்(‘பவள மல்லிகை’)ஆகியோரையும் இவருடன் குறிப்பிடலாம்.
கலைஞர் சிலருடைய முக்கிய விருப்பத்திற்குப் பாத்திரமாக இருப்பவர் கண்முன்னே இல்லாமல் மறைந்து விட்டால், அவருடைய கலைத்திறன் மங்கிவிடுகிறது என்பதை ஜீவாவின் ‘பிடில் நாதப்பிரமம்’, புஷ்பத்துறை சுப்பிரமணியத்தின் ‘ஜீவ சிலை’ என்ற சிறுகதைகள் வெளிப்படுத்தின.
சினிமாப்பட முதலாளிகளும் டைரக்டர்களும் தரும் தொல்லைகளை ஜீவாவின் ‘மிருநாளினி,’ கல்கியின் ‘சுண்டுவின் சந்நியாசம்’ புலப்படுத்தின.
சீர்திருத்த நோக்கில் படைக்கப்பட்ட சிறுகதைகள்:
கல்கியின் ‘விஷ மந்திரம்’ தீண்டாமையைப் பொசுக்கிவிடும் வகையில் அமைந்தது.
காசி நகரப் பண்டாக்களுக்கு இக்கதையை மொழி பெயர்த்துக் காட்டுதல் வேண்டும். ஏ.எஸ்.பி. ஐயர் எழுதிய ‘வான் மலர்’ என்னும் கதை, விதவை மறுமணத்தைப் பற்றியது. இது தொடர்பாக, இதைவிட மிகச் சிறந்தது புதுமைப்பித்தனுடைய ‘வழி’ என்ற சிறுகதை. சுத்தானந்த பாரதியாரின் ‘கலிமாவின் கதை’ முஸ்லிம் பக்கிரி ஒருவனின் மகள் இந்துமதம் சார்ந்தவன் ஒருவனை மணந்துகொண்டதை விவரித்தது. அண்ணாத்துரையின் ‘பேரன் பெங்களூரில்’ என்ற சிறுகதை, பிராமண விதவை ஒருத்தி முதலியார் குலத்து ஆசிரியரை மணந்து, ஒரு சூழ்ச்சியால், தந்தையின் ஆசியைப் பெற விழைவதுபோலக் காட்டுகிறது.
இலக்கிய மணம் வீசும் சிறுகதைகள்:
பொதுமக்கள் மதிப்புக்கு அதிகமாக ஆசைப்படாமல், தம்மை அறிந்து வாசித்து மகிழக்கூடிய மக்களுக்கு ஒத்ததாக மு.வரதராசனின் நடை அமைந்துள்ளது. அவர் எழுதிய ‘விடுதலையா?’ முதலிய கதைகளைக் காணலாம். ‘கட்டாயம் வேண்டும்’ என்ற தலைப்பிலே, வேலையின்மையும் வறுமையும் இரந்தும் பெறாமையும் எவ்வாறு ஓர் இளைஞனைத் தற்கொலைக்குத் தூண்டிவிட்டன என்ற கருத்துள்ளது. ஜீவாவின் ‘முல்லை,’ மகுதூம் என்பவரின் ‘திருமறையின் தீர்ப்பு’ ஆகிய கதைகளில் நல்ல இலக்கிய மணம் வீசக் காண்கிறோம்.
சிறுகதைகளைப் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தலாமா?
கருணாநிதி, அண்ணாத்துரை, ஏ.எஸ்.பி.ஐயர், சுத்தானந்த பாரதியார் போன்றவர்கள் சமூகக் குறைகளைப் போக்குவதன் பொருட்டு சிறுகதைகள் படைத்தார்கள். ஐரோப்பாவில் இந்நிலை நிலவியது குறித்து “தமது கதைகளைப் படிக்கும் வாசகர்களைப் பொறுத்து, விட்டுக் கொடுக்க வேண்டிய விஷயம் இது” என்று பேர்ரி பெயின் கூறினார். அண்ணாத்துரையின் “சிறுகதைகள்” என்ற தொகுப்பில் பிரச்சாரம் இடம் பெற்ற அளவு “கற்பனைச் சித்திரம்” என்ற புத்தகத்தில் இல்லை.
தொகுப்பாக…
தொகுப்பாக இறுதியில் டாக்டர் அ. சிதம்பரநாதன் குறிப்பிடும் எழுத்தாளர்களையும் அவர்களின் சிறுகதைகளையும் சுருக்கமாக இங்கே காணலாம்.
மாயாவியின் ‘பனித்திரை’ போன்ற கதைகள், மாணவர்களுக்கு ஏற்றதாக சி.எம்.இராமச்சந்திரஞ் செட்டியார் எழுதிய ‘சிறுகதைத் திரள்,’ கா.அப்பாத்துரையார் எழுதிய ‘சமூகக் கதைகள்,’ ‘நாட்டுப்புறக் கதைகள்’…பி.என்.அப்புசாமி எழுதிய ‘விஞ்ஞானக் கதைகள்,’ பாலூர் கண்ணப்ப முதலியார் எழுதிய ‘சிறுகதைக் களஞ்சியம்’ முதலியவற்றை டாக்டர் அ. சிதம்பரநாதன் இங்கே குறிப்பிடுகிறார்.
பிறமொழிச் சிறுகதைகளை மொழிபெயர்ப்பதில் வல்லவர்களாக – புதுமைப்பித்தன், கு.ப.ரா., ஆர்.வீழிநாதன், சேனாதிபதி, டி.என்.குமாரசாமி, ஏ.கே.ஜெயராமன் முதலியோரைக் குறிப்பிடுகிறார். 1946இல் எஸ்.குருசாமி ‘இந்தியச் சிறுகதைகள்’ என்ற தலைப்பில் பல்வேறு இந்திய மொழிகளில் எழுதப்பட்ட சிறுகதைகளை மொழிபெயர்த்ததைச் சிறப்பாக நினைவுகூர்கிறார்.
இலங்கை எழுத்தாளர்களில் அரியரத்தினம், வைத்திலிங்கம், சம்பந்தம், இலங்கையர்கோன் ஆகியவர்களைப் பொதுவாகப் பாராட்டுகிறார்.
சிறுவர்க்கான கதைகள் எழுதுவதில் வல்லவர்களாக – அழ.வள்ளியப்பா, அம்புலிமாமா, தமிழ்வாணன், கண்ணன் ஆகியோரைக் குறிப்பிடுகிறார்.
சிறுகதை போன்ற உரைநடைச் சித்திரங்களால் வாசகர்கள் மனங்களில் இடம் பிடித்தவர்களாக – எஸ்.வி.வி., தூரன், சுகி, நாடோடி ஆகியோரைக் குறிப்பிடுகிறார்.
இதழ்களில் வந்த சிறந்த சிறுகதைகளாக டாக்டர் அ.சிதம்பரநாதன் தேர்பவை:-
- கணையாழி எழுதிய ‘நொண்டிக்குருவி’
- ஜெகசிற்பியன் எழுதிய ‘ஜலசமாதி’
- சோமு எழுதிய ‘கடலும் கரையும்’
- ஞானாம்பாள் எழுதிய ‘தம்பியும் தமையனும்’
- கே.ஆர்.கோபாலன் எழுதிய ‘அன்னபூரணி’
- சோமாஸ் எழுதிய ‘அவன் ஆண்மகன்’
- கெளசிகன் எழுதிய ‘அடுத்த வீடு’
- எஸ்.டி.சீனிவாசன் எழுதிய ‘கனிவு’
பிற மொழிகளில் மொழிபெயர்த்தேயாக வேண்டிய சிறுகதைகளாக டாக்டர் அ.சிதம்பரநாதன் தேர்பவை:-
- கு.ப.ராஜகோபாலனின் ‘காணாமலே காதல்’
- புதுமைப்பித்தனின் ‘வழி ‘
- கல்கியின் ‘விஷ மந்திரம்’
- சுத்தானந்த பாரதியாரின் ‘கடிகாரச் சங்கிலி ‘
- அகிலனின் ‘இதயச் சிறையில்’
- விந்தனின் ‘முல்லைக்கொடியாள்’
- லட்சுமியின் ‘வில் வண்டி’
- ஜீவாவின் ‘வேதாந்த கேசரி’
- டி.கே.சீனிவாசனின் ‘துன்பக் கதை’
- புஷ்பத்துறை சுப்பிரமணியத்தின் ‘ஜீவ சிலை’
- கணையாழியின் ‘நொண்டிக் குருவி’
தன் காலத்தில் இதழ்களில் அடிக்கடி சிறுகதை எழுதுவோராக டாக்டர் அ.சிதம்பரநாதன் குறிப்பிடும் பிறர்:-
- கே.என்.சுப்பிரமணியன்
- ஜி.கெளசல்யா,
- இராதாமணாளன்
- தில்லை வில்லாளன்
- புஷ்பா மகாதேவன்
- வேங்கடலட்சுமி
- புரசு பாலகிருஷ்ணன்
- ஜி.எஸ்.பாலகிருஷ்ணன்
‘தமிழில் சிறுகதைகள்’ என்ற இந்தக் கட்டுரை, டாக்டர் அ.சிதம்பரநாதன் மறைந்து பத்தாண்டுகள் கழித்து 1977 ஏப்ரல் பதிப்பில் வெளியானபோதும், எழுதப்பட்டு வாசிக்கப்பட்ட காலம் – மூன்றாவது அகில இந்திய எழுத்தாளர் மாநாடு நிகழ்ந்த காலம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அதனால்தான் த.ஜெயகாந்தன் குறித்த குறிப்பு ஏதும் இக்கட்டுரையில் இல்லை. முடிவுரையில், “சிறுகதை இலக்கியம் எனப்படுவது தமிழில் அண்மையான காலத்தில்தான் எழுந்தது” என்று டாக்டர் அ.சிதம்பரநாதன் குறிப்பிட்டிருப்பதும் இதற்கு மற்றுமோர் ஆதாரம்.
***
1967 ஜூலையில், ‘தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்ற இதே தலைப்பிலானதும் – இதற்கு முற்றிலும் மாறானதோர் உணர்வெழுச்சி ஊட்டியதும் – – யாழ்ப்பாணப் பல்கலைக் கழக இணைத்தமிழ்ப் பேராசிரியராக அப்பொழுது பணியாற்றிய டாக்டர் கார்த்திகேசு சிவத்தம்பி எழுதியதுமான கட்டுரைத் தொகுதியைத் தமிழ்ப் புத்தகாலயம் திரு கண.முத்தையா அவர்கள் பதிப்பித்தார். இலங்கை ‘தினகரன்’ வாரப்பதிப்புக்கு எழுதப்பட்ட கட்டுரைகள் அவை. தினகரன் ஆசிரியர் திரு இ.சிவகுருநாதன், திரு செ.கணேசலிங்கன், திருமதி ரூபவதி ஆகிய மூவரால்தான் இந்நூல் வெளிவந்தது என்று கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள், வல்வெட்டித்துறை நடராஜ கோட்டத்திலிலிருந்து 22-7-1967 அன்று எழுதிய முன்னுரையில் குறிப்பிடுகிறார். கலாநிதி க.கைலாசபதி அவர்கள் பிரதிவாசித்துதவிய பாங்கையும் குறிப்பிடுகிறார். 1980இல் வெளியான என் ‘புல்வெளி’ என்ற கவிதைத் தொகுதியை வாசித்துக் கலாநிதி க.கைலாசபதி எழுதிய விளக்கமான கடிதத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். தஞ்சையில் ஒருமுறை பிரகாஷ் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்குக்குப்பின்(அப்பொழுது சிவத்தம்பி அவர்களுக்கு ஐம்பது வயதுதானிருக்கும் என்று நினைவு) ‘தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்ற கா.சிவத்தம்பியின் கட்டுரைத் தொகுப்பு, சிதம்பரநாதனின் புத்தகத்தை மட்டுமே அறிந்திருந்த ஆய்வு மாணவர்களுக்கும் தமிழ் முதுகலை மாணவர்களுக்கும் புத்துணர்ச்சியையும் எழுச்சியையும் ஊட்டியது என்று குறிப்பிட்டேன். சிரித்துக் கொண்டார். சிவத்தம்பியின் புத்தகத்தின் சிறப்புக்கு அதன் 160 பக்கங்களிலிருந்து ஒரு மிகச் சிறிய பகுதியை மட்டும் இங்கே முன்வைக்கிறேன்:
“ஜெயகாந்தனது இலக்கிய எதிர்காலம் எப்படியிருப்பினும், அவர் சாதித்தவை அவருக்குச் சிறுகதை வரலாற்றில் முக்கிய இடம் அளிக்கின்றன.
இலக்கியத் தரமான சிறுகதைகள், சனரஞ்சகமாக அமையமாட்டா என்ற கருத்துத் தவறானது என்பதனைச் சாதனையால் நிறுவியவர் ஜெயகாந்தன்.
சிறுகதையின் உருவ அமைதியில் ஜெயகாந்தன் கதைகள் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. பொருளமைதியில் முக்கியமான ஒரு மாற்றத்தினை ஏற்படுத்தின. அதுவே அவர் வெற்றிக்குக் காரணமாகவும் அமைந்தது.
கற்பித மனோரம்மிய இலக்கிய நோக்கு ஆட்சி புரிந்தவிடங்களில் யதார்த்த இலக்கிய நோக்கினைப் புகுத்தி அந்நோக்கின் சிறப்பை நன்கு உணர்த்தியமையே அப்பண்பாகும்.”(6)
**
தமிழ்ச் சிறுகதை முன்னோடிகளைக் குறித்து டாக்டர் இரா.தண்டாயுதம் எழுதிய புத்தகம் இவ்வரிசையில் குறிப்பிடத்தக்கது.
தமிழ்ச் சிறுகதை வரலாறு குறித்துச் சிந்தித்தும் ஆராய்ந்தும் எழுதியவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் க.நா.சு., தொ.மு.சி.ரகுநாதன், சிட்டி சிவபாதசுந்தரம் டொமினிக் ஜீவா,டாக்டர்கள் மா.இராமலிங்கம், இரா.மோகன், எம்.வேதசகாய குமார் முதலியவர்கள் ஆவர்.
அடிக்குறிப்புகள்
* ஜீவா என்று டாக்டர் அ. சிதம்பரநாதன் கட்டுரையில் குறிப்பிடப்படுபவர் ‘உயிரோவியம்’ என்ற நாவலால் புகழ் பெற்ற நாரண துரைக்கண்ணன் ஆவார்.
(1) டாக்டர் மா.இராசமாணிக்கனார், இருபதாம் நூற்றாண்டில் தமிழ் உரைநடை வளர்ச்சி, பக்.243-244.
(2) மேலது, ப.252.
(3) கா.திரவியம், தேசியம் வளர்த்த தமிழ், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை,1974, பக்.200-201.
(4) மேலது, ப.203.
(5) டாக்டர் அ. சிதம்பரநாதன் செட்டியார், தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். பதிப்பாசிரியர்: பேராசிரியர் பிளோரம்மாள், ம.செ.இரபிசிங். பிலோமினா பதிப்பகம், 5/25, புதுத்தெரு, சென்னை-600004. 1977. ப.v. இந்தப் புத்தகத்தின் கருத்துகளே தொடர்ந்து வருவதால் அடிக்குறிப்புகளிடவில்லை. மொத்தப் பக்கங்களே 22தான்.
(6)டாக்டர் கார்த்திகேசு சிவத்தம்பி, தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும், தமிழ்ப் புத்தகாலயம், 58, டி.பி.கோயில் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-600005. மூன்றாம் பதிப்பு அக்டோபர், 1980. ப.139
சிறுகதை இலக்கணம்
வாழ்க்கையின் ஒரு சின்னஞ்சிறு காட்சியோ, மின்னல் போன்ற நிகழ்ச்சியோ, மெல்லிய அசைவோ, சூறாவளியின் சுழற்சியோ, நீர்க்குமிழியின் வட்டமோ, ஏதாவது ஒரு அணுவின் சலனமோ சிறுகதையாக இடமுண்டு.
சிறுகதைக்கு இலக்கணமோ, வரைமுறையோ, பண்போ கிடையாது என்று கூறுவோரும் உண்டு. ஆனால் சிறுகதைக்கு, பண்போ தனி இலக்கணமோ இல்லை என்று கூறிவிட முடியாது என்போரும் உண்டு. சிறுகதைக்கென இரண்டு நூற்றாண்டு காலப் புதிய மரபு தோன்றிவிட்டது. 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சிறுகதையின் பொதுவான தன்மைகள் குறித்து ஆய்வுக் கருத்துகள் வெளிவந்துள்ளன. இதன் அடிப்படையில் ஆய்வாளர்கள் சிறுகதைக்கெனச் சில வரைமுறைகளைச் சுட்டிக் காண்பித்துள்ளனர்.
இலக்கணம்
1) சிறுகதை என்றால் அளவில் சிறியதாய் இருக்க வேண்டும்.
2) தனிமனித அல்லது சமுதாய வாழ்க்கையைச் சுவையோடு பிரதிபலிக்க வேண்டும்.
3) சிறுகதையில் ஒரு மனிதர் அல்லது ஓர் உணர்வு, ஒரு நிகழ்ச்சி அல்லது ஒரு சிக்கல் தான் தலைதூக்கியிருக்க வேண்டும்.
4) அளவுக்கு அதிகமான கதைமாந்தர்களுக்கு அங்கு இடமில்லை.
5) விரிவான வருணனைக்கும், சூழ்நிலைக்கும் சிறுகதை இடம்தரல் கூடாது.
6) குறைவான, ஏற்ற சொற்களால் இவை சுட்டிக்காட்டப்பட வேண்டும்.
7) பாத்திரங்களின் உரையாடல்களில் சொற்செட்டு அவசியம்.
8) சிறுகதை அளவிற் சிறியதாய், முழுமை பெற்று இருக்க வேண்டும்.
9) சிறுகதை நம்பக் கூடிய உண்மைத் தன்மையினைக் கொண்டு விளங்குதல் வேண்டும்.
10) நல்ல சிறுகதை ஆல விதையைப் போல் விரிவாகக் கூடிய கதைக்கருவைக் கொண்டிருத்தல் வேண்டும்.
ஒரு நல்ல சிறுகதை என்பது ஒரு சுவைமிக்க மாம்பழத்தை இறுதிவரை விரும்பிச் சுவைப்பது போன்றதாகும். அவ்வாறு இன்றி, மாம்பழத்தை முதல் கடியிலேயே வீசியெறிந்து விட வேண்டும் என்ற எண்ணத்தை ஒரு சிறுகதை ஏற்படுத்தினால், அச்சிறுகதையினால் பயன் ஒன்றும் இல்லை என்பது தெரியவருகிறது.
ஒரு சிறுகதைக்குப் பின்னே உள்ள படைப்பாளரின் கலை ஆற்றல், கற்பனைத் திறன், சொல்லாட்சி, அவர் மறைமுகமாகக் கூறும் செய்தி – இவையனைத்தும் இலக்கண வரம்புகளை விட முக்கியமானவை.
குறிஞ்சிக் கலியில் (51) கபிலர் பாடிய கள்வன் மகன் என்ற செய்யுள் கருத்தை இங்கு எடுத்துக் கொள்வோம். தாகத்திற்கு நீர் பருக வரும் வழிப்போக்கன் போல, தலைவன், தலைவி வீட்டிற்கு வருகிறான். தாகத்தைத் தணிக்க, நீர் ஊற்றும்போது தலைவன் அவள் கையைப் பற்றுகிறான். தலைவி கூச்சலிடுகின்றாள். இதைக் கேட்ட தாய் பதறி ஓடிவருவதைக் கண்டு, தலைவனைக் காட்டிக் கொடுக்காமல் ‘அவனுக்கு விக்கிக் கொண்டு விட்டது’ என்று தலைவி ஒரு பொய்யைக் கூறுகிறாள். கள்வன் மகன் என்று அவனை அன்பு பொங்க ஏசுகிறாள்.
இவ்வளவும் ஒரே நொடிப் பொழுதில் நிகழ்ந்து விடுகிறது. குறிப்பிட்ட ஒரே இடம். மூன்றே பாத்திரங்கள். ஒரே உணர்ச்சி. சின்னஞ் சிறு நிகழ்வுகள் மூலம் விரியும் கதை. எவ்வளவு சொற்செட்டு!, எவ்வளவு உயிராற்றல்! அந்தச் செய்யுள் எந்த நீதியையும் புகட்டவில்லை. ஆனால் இயற்கையான உணர்ச்சிக்கும், பெண்மையின் பண்புக்கும் இடையேயான போராட்டத்தைச் சித்திரித்து வெற்றி கண்டுள்ளது. படைப்பாளரின் இத்திறன் இலக்கணத்தை விட முக்கியமானதாகவே கருத இடமளிக்கிறது.
1.2.1 சிறுகதையின் தொடக்கம்
சிறுகதையின் தொடக்கம் குதிரைப் பந்தயம் போன்று விறுவிறுப்பாய் அமைதல் வேண்டும். சிறந்த சிறுகதைக்குச் சிறப்பான தொடக்கம் இன்றியமையாததாகிறது. அப்பொழுது தான் அதன் தொடர்ச்சி நெகிழ்ச்சியின்றி அமையும். படிப்போரின் கவனத்தை ஒருமுகப்படுத்தவும் உதவும். சிறுகதையின் தொடக்கம் வாசகர்களை ஈர்த்து, படிக்கத் தூண்டுவதாய் இருத்தல் வேண்டும். சிறுகதையில் ஒவ்வொரு வரியும் முக்கியம். அதில் அநாவசியத்திற்கு இடமில்லை என்பதிலிருந்து தொடக்கம் சிறப்பாக அமைய வேண்டியதன் அவசியத்தை உணரலாம்.
சிறுகதையைத் தொடங்கி எழுதுவது என்பது யானை உருவத்தைச் செதுக்குவதற்கு ஒப்பாகும். தேக்கு மரத்துண்டில் யானையைச் செதுக்க விரும்புகின்றவன், முதலில் யானையின் உருவத்தை மனத்தில் பதித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒவ்வொரு செதுக்கலையும் யானையின் உருவத்தை நோக்கிச் செலுத்த வேண்டும். அவ்வாறு இன்றி, சிலையைச் செதுக்குபவன் நடுவில் ஒரு குதிரையை மனத்தில் நினைத்தான் என்றால் சிலையானது யானையின் முகமும், குதிரையின் உடலுமாய் மாறி அமைந்துவிடவும் கூடும். அதாவது யாதிரை அல்லது குனை ஆக உருவாகிவிடக் கூடும். இவ்வளவிலே சிறுகதையின் தொடக்கமும் சிறப்பாக அமையப்பெறவில்லை, எனில் அதன் தொடர்நிகழ்வுகளை ஒருமுகப்படுத்தல் என்பதும் இயலாமல் போய்விடும்.
மேற்கண்ட அளவில் சிறுகதைத் தொடக்கத்தின் முக்கியத்துவம் அறியப்படுகிறது.
1.2.2 சிறுகதையின் முடிவு
சிறுகதையின் தொடக்கத்தைப் போன்றே முடிவும் முக்கியத்துவம் பெறல் வேண்டும். சிறுகதையின் முடிவு இறுதிவரை படிப்போரின் கவனத்தைக் கவரக் கூடியதாய் இருக்க வேண்டும். சிறுகதையில் முடிவு கூறப்படவில்லை எனில் அது மனத்தில் நிலைத்து நிற்காது. கதையின் முடிவு உரைக்கப்படல் அல்லது சிந்திக்கச் செய்தல் ஆகியவற்றின் மூலமே படைப்பாளரின் ஆற்றல் உணரப்படும். ஆகவே சிறந்த சிறுகதைக்குச் சிறப்பான முடிவு அவசியம் என்பது உணரப்படுகிறது.
சிறுகதையின் முடிவு நன்மையானதாகவும் அன்றித் தீமையானதாகவும் அமையலாம். சில வேளைகளில் கதையின் முடிவு முரண்பாடானதாகவும் அமைவது உண்டு. முரண்பாடான முடிவுகள் படிப்பவர்களைச் சிந்திக்க வைப்பதும் உண்டு. சிறந்த முடிவினைக் கொண்ட சிறுகதையே மனத்தில் நிலைக்கும். சிறுகதையின் சிறந்த முடிவு சமூகப்பயன் விளைவிக்கக் கூடியது. சிலவேளைகளில் சிறுகதைகளின் முடிவுகள் தலைப்புகளாய் அமைந்த நிலையில் அவை சிறப்புப் பெறுவதும் உண்டு. இத்தகைய சிறுகதைகளைப் படிக்கத் தொடங்கிய உடனேயே அந்தக் கதையின் போக்கையும், அதன் முடிவையும் அறிந்து கொள்ள இயலும்.
முடிவுகளைத் தலைப்புகளாகக் கொண்ட சிறுகதைகள் சிலவற்றின் பெயர்களை இங்குக் காணலாம். நா.பார்த்தசாரதியின் ஊமைப் பேச்சு, ஜெயகாந்தனின் வேலை கொடுத்தவன், புதுமைப்பித்தனின் திண்ணைப் பேர்வழி, சோமுவின் மங்களம் போன்ற கதைகளை இதற்கு உதாரணங்களாகக் கூறலாம்.
1.2.3 சிறுகதையின் உச்சநிலை
உச்சநிலை என்பது, வாசகர்கள் எதிர்பாராத வகையில் அல்லது உணர்ச்சிக் கொந்தளிப்பின் உச்சியில் கதையை முடித்தலாகும். சிறுகதைகளில் உச்சநிலைக்கு இடமில்லை எனில் அது சாதாரணக் கதையாகவே கருத இடமளிக்கும். படைப்பிலக்கிய நிலைக்குத் தகுதியுடையதாகாது. உச்சநிலையே படைப்பாளரின் தனித்தன்மையை வெளிப்படுத்துவதாயுள்ளது. படைப்பாளரின் மறைமுகக் கருத்துகள் சில வேளைகளில் உச்ச நிலைக்கு இடமளிப்பதும் உண்டு.
சிறுகதைகள், படிப்பவரிடத்தே அடுத்தடுத்து என்ன நிகழுமோ என்ற எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி, அதன்பின் உச்சநிலைக்கு உரியதாகிப் பயன் விளைவிக்கவேண்டும். உச்சநிலையை எதிர்பார்த்துப் படிக்குமளவில்தான் சிறுகதை அமைப்புத் தொய்வின்றி அமையும். சிறுகதையின் உச்சநிலை முடிவினையும், பயனையும் வழங்க வல்லதாய் அமைகிறது. கதை நிகழ்ச்சி, கதைமாந்தர் மூலமாகவே உச்சநிலை உயிர் பெறுகிறது. படைப்பாளர் உச்சநிலையினை அமைத்துக் கொடுப்பதன் மூலமே சிறுகதையின் வெற்றிக்கு வழிவகுக்க முடியும்.
கல்கி அவர்களின் கேதாரியின் தாயார் சிறுகதையில் உச்சநிலை சிறப்பிடம் பெறுகிறது. இச்சிறுகதையின் கதைத்தலைவன், கணவனை இழந்த பெண்களுக்கு மொட்டையடித்து முக்காடு இடும் பிராமணச் சமூக வழக்கத்தை முற்றிலும் வெறுப்பவனாக, அதை மாற்ற முயல்பவனாகக் காட்டப்படுகிறான். மேலும் அவன் அம்மாவுக்கு நேர்ந்த அந்நிலையை எண்ணி எண்ணி வருந்தி உயிரை விடுபவனாகவும் காட்டப்படுகிறான். கதை முழுவதிலும் இத்தகைய அவனது மனநிலையையே விவரிக்கும் படைப்பாளர், அவன் இறந்த பிறகு அவன் மனைவிக்கும் அதே நிலை ஏற்படுவதை உச்சக்கட்டமாக அமைத்து மனத்தில் பாதிப்பினை ஏற்படுத்தி விடுகிறார்.
1.2.4 சிறுகதையின் அமைப்பு
சிறுகதை விறுவிறுப்பாய்த் தொடங்கி, அதன் தொடர்ச்சியில் நெகிழ்ச்சி இல்லாமல் இயங்கி, உச்சநிலைக்குச் சென்று முடிவுவரை படிப்பவரின் கவனத்தை ஒருமுகப்படுத்த வேண்டும். படிப்பவர்களைச் சோர்வடையச் செய்யக் கூடாது. கதை உணர்ச்சியோட்டம் உடையதாய் அமைதல் வேண்டும். கதையமைப்பானது சங்கிலித்தொடர் போன்று கதைமாந்தர்களிடையே பின்னிப் பிணைந்து காணப்பட வேண்டும். கதையின் கருப்பொருள் எளிமையானதாய் இருக்க வேண்டும்.
சிறுகதை மக்களுக்கு நம்பிக்கையூட்டுவதாய் அமைதல் வேண்டும். சமுதாயத் தேவையை நிறைவு செய்யும் பாங்கிலும் அமைதல் வேண்டும். நல்ல சிறுகதைக்கு, தொடக்கமும், முடிவும் இன்றியமையாதவையாகின்றன. சிறுகதையைப் படிக்கும் போது அடுத்து என்ன நிகழும் என்ற உணர்ச்சியும், எதிர்பார்ப்பும் ஏற்படுத்தும் வண்ணம் கதையமைப்பு இருத்தல் வேண்டும். படைப்பாளன் கதையில் இன்ன உணர்ச்சிதான் இடம்பெறவேண்டும் என்பதை முதலில் முடிவு செய்து கொள்ள வேண்டும்.
உணர்ச்சிகள்
1) காதல்
2) வீரம்
3) சோகம்
4) நகை
5) வியப்பு
6) வெறுப்பு
7) அச்சம்
8) சாந்தம்
9) கருணை
இந்த ஒன்பது வகையான உணர்ச்சிகளுள் ஒன்றோ, பலவோ கலந்து சிறுகதைகளை உருவாக்க வேண்டும். சிறந்த சிறுகதைகள் படைப்பாளரின் மொழி, நடை, கற்பனை, வருணனை ஆகியவற்றைக் கொண்டு அமையும்.
சிறுகதைகள் அரை மணியிலிருந்து இரண்டு மணி நேரத்திற்குள் படித்து முடிக்கக் கூடியதாயிருக்க வேண்டும். சிறுகதையின் நீளம் என்பது வரையறுக்கப்படாத ஒன்று. ஒரு பக்கத்தில் முடிந்த சிறுகதைகளும் உண்டு. அறுபது பக்கம் வரை வளர்ந்த சிறுகதைகளும் உண்டு. பொதுவாக, கதையின் கருத்துக்குப் பொருந்துகின்ற நீளம்தான் உண்மையான நீளம். இதைப் படைப்பாளர்தான் தீர்மானிக்க வேண்டும். சிறுகதைகள் எளிய நடையமைப்பில் அமைதல் வேண்டும்.
க. நா. சுப்ரமண்யம்
சிறுகதை என்றால் என்ன?
உருவத்தால் சிறியதாக இருக்கவேண்டும் என்றும், கதையாக இருக்கவேண்டும் என்றும் சட்டென்று பதில் கூறிவிடலாம். ஓரளவு திருப்தி தருகிற பதில் மாதிரித்தான் இருக்கிறது. ஆனால் யோசித்துப் பார்க்கும்போது தோன்றுகிறது – உருவத்தில் சிறியது என்றால் எவ்வளவு சிறியது என்றும், கதை என்றால் என்ன என்றும் கேள்விகள் தோன்றுகின்றன.
இரண்டாவது கேள்விக்குப் பதில் முதலில் சொல்லிப் பார்க்கலாம். அத்தைப் பாட்டி கதையிலிருந்து, கம்பராமாயணத்தின் கருப்பொருள் வரையில், ஏசாப்புக் கதைகளிலிருந்து மஹாபாரதத்து குருக்ஷேத்திரம் வரையில், எல்லாமே கதையை ஆதாரமாகக் கொண்டவைதான்.
நாவல், நாடகம் என்கிற இலக்கியத் துறைக்கும் ஆதாரமான விஷயம் கதைகள்தான்.
சிறுகதைக்கு ஆதாரமான கதை என்ன? எப்படியிருக்க வேண்டும்?
ஓ. ஹென்றியின் கதைகளிலே பல சம்பவங்கள் அடுக்கடுக்காக வந்து கடைசியில் ஒரு திருப்பம் திரும்பி ஒடித்து வக்கிரமாக நிற்கும். மோபஸான் கதைகளிலே அடுக்கடுக்காகப் பல விஷயங்கள் சொல்லப்பட்டு, ஒரு சம்பவத்தைச் செயற்கை முத்தைப்போல உருட்டித் திரட்டித் தரும். சம்பவங்களை நம்புகிற இந்த இரண்டு கதைகளுக்கும் அப்பாற்பட்டதாக செகாவின் சிறுகதைகள் நுண்ணிய விவரங்கள் ஒன்றன் மேல் ஒன்றாக வந்து விழ, முடிவுறாத கோர்வையாக, நடக்காத ஒரு காரியமாக நின்றுவிடும். முடிவுறாத கோர்வையும், நடக்காத காரியமும், செயல்படாத செய்கையும் சிறுகதைதான்; சம்பவக் கோவையும் திருப்பமும் சிறுகதைதான்; உருட்டித் திரட்டி வைத்த மெருகேற்றிய அந்த முத்து உருவமும் சிறுகதைதான்.
மூன்றும் சிறுகதைதான் என்று சொல்கிறபோது, மூன்று சிறுகதைப் பாணிக்கும் பொதுவான ஒரு அம்சம் தெரிகிறது. அதுதான் மூன்று பேருடைய கதைகளிலும் ஓடுகிற ஒற்றைச்சரடு. அது ஒரு பாவமோ, ஒரு கோபமோ, ஒரு ஆத்திரமோ, ஒரு செயலோ, ஒரு குணாதிசயமோ ஒன்றாகப் பரவி ஓடிக் கடைசிவரை நீடித்திருக்கிறது சிறுகதையிலே என்று சொல்லலாம். அந்த ஒரு சரடுதான் மையக் கரு சிறுகதைக்கு.
அப்படியானால் மையக் கருத்து, சரடு ஒன்று காவியத்துக்குக் கிடையாதா, நாடகத்துக்குக் கிடையாதா, நாவலுக்குக் கிடையாதா என்று கேட்கலாம். உண்டு. ஆனால் நாவலாசிரியனும், காவியாசிரியனும் அந்தச் சரடைவிட்டு வெகு தூரம் நகர்ந்து உல்லாஸமாகப் போய்த் திரிந்து வரலாம். சிறுகதாசிரியன் அப்படிச் செய்யமுடியாது. பாவ ஒருமைப்பாடும், ஆழமும் போய்விடும் அந்த மையக் கருத்தைவிட்டு அவன் நகர்ந்துவிட்டால்.
கதையில் ஒன்று – ஒரே ஒன்று – ஒரு கருத்து, ஒரு பாவம் அல்லது ஒரு குணசித்திரம்தான் – மையக்கருத்தாக இருக்கவேண்டும். அதைவிட்டுச் சிறுகதாசிரியன் அதிகம் விலகக்கூடாது என்று சொன்னேன். அத்தோடு சேர்த்துக்கொள்ளவேண்டியது இதையும் – கதை என்பது ஒரு சம்பவமாக இருக்கலாம். ஒரு மனோபாவமாக இருக்கலாம். ஒரு உள்ளப்போராட்டமாக இருக்கலாம். அது ஏதாவது ஒன்றாக இருக்கும் வரையில், சிறுகதை பிறக்கும். இரண்டாகவோ அதிகமாகவோ இருந்தால் சிறுகதை பிறக்காது – வேறு என்ன பிறந்தாலும்.
இலக்கியத்தில் எந்தத் துறையிலானாலும் சரி, ஒரு உருவம் ஒரு குறிப்பிட்ட முடிவை நோக்கி நகருகிறது என்பது வெளிப்படை. அந்த முடிவு சாதாரணமாக நாவலில், காவியத்தில், நாடகத்தில் முதலில் வெளியாகாமல் இருக்கலாம். ஆனால் சிறுகதையில் முதல் வாக்கியத்திலேயே, சில சமயம் முதல் வார்த்தையிலேயே வெளியாகிவிடும். பின்னர் வருகிற ஒவ்வொரு வாக்கியமும் வார்த்தையும் இந்த முடிவு நோக்கி நகரும் காரியத்தைத் தெள்ளத் தெளியச் செய்யவேண்டும். அப்போதுதான் நல்ல சிறுகதை தோன்றுகிறது.
ஆரம்பம், நடுவு, முடிவு முதலியனவும், இடைப்பாகங்களும் சரியாகப் பொருந்தியுள்ள சிறுகதைகளை நல்ல உருவம் பெற்றவையாக நாம் போற்றுகிறோம். ஆனால் சில ஆசிரியர்களின் சிறுகதைகளிலே, முக்கியமாக செகாவ், ஸரோயன் போன்றவர்களின் கதைகளிலே – ஆரம்பம், நடு, முடிவு தெரியாதபடி செய்திருக்கிறார்கள். எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ போகிறவர்கள் மாதிரிச் செய்து சட்டென்று முடித்துவிடுவார்கள்.
செகாவின் கதைகள் முடிந்துவிட்ட பிறகும்கூட முடிவு கண்டுவிட்ட மாதிரித் தோன்றாதபடி, தொடர்ந்து நடக்கிற மாதிரிச் செய்யப்பட்டிருக்கின்றன.
இந்த ஒரு விஷயத்திலேனும் ரவீந்திரநாத் தாகுர் இந்தியச் சிறுகதைக்கு ஒரு இந்திய உருவம் தந்திருக்கிறார் என்று சொல்லவேண்டும். ஆதிமத்யாந்தரகிதமான சர்வேசுவரனை நினைவூட்டும் – அற்புதமாக நினைவூட்டும் பல சிறுகதைகளைத் தாகுர் எழுதியிருக்கிறார்.
இந்த ஆரம்ப – நடு – முடிவற்ற தன்மை ஏதோ அநாயாசமாகப் பிரக்ஞையில்லாமல் வந்துவிடுகிற விஷயம் அல்ல. செகாவிலும் சரி, தாகுரிலும் சரி – கலையை மறைக்கும் அந்தக் கலை எளிமையுடன், முழுப் பிரக்ஞையுடன் வருவதுதான்.
மனிதனுடைய நடத்தையும் லக்ஷியமும் ஏணியின் கால்கள்போல என்றும் ஒன்று சேராத இரட்டைக் காலில்தான் நடக்கிறது என்பதை அறிவுறுத்துகிற புதுமைப்பித்தனின் ‘சாப விமோசனம்’ தமிழுக்குத் தனியாக வந்து வாய்த்த ஒரு சிறுகதை உருவம். ராமனானால் என்ன? அகல்யையானால் என்ன? இருவரும் மனிதர்கள்தானே! இதே அளவில் ‘அன்றிரவு’ம் சிறப்பாக வெற்றி கண்ட கதை புதுமைப்பித்தன் இலக்கியத்திலே. ஆனால் அது பழசை ஒட்டி எழுந்தது. ‘சாப விமோசனம்’ புதுமையை ஒட்டி எழுந்தது.
உருவம் என்று காணமுடியாத உருவத்தை மெளனி, தமிழ்ச் சிறுகதையில் சிறப்பாகவே செய்திருக்கிறார். ந. பிச்சமூர்த்தி அவர்களும், லேசாகப் பல விஷயங்களைச் சொல்லி, முன்னரே நிர்ணயிக்கப்பட்ட ஒரு தீர்மானத்தை எட்டி விந்தை புரிபவர். மற்றப்படி கு. ப. ராஜகோபாலன், சிதம்பர சுப்பிரமணியன் முதலியவர்கள் சாதாரணமாகத் தெரிந்துகொள்ளக்கூடிய உருவங்களையே கையாண்டவர்கள். சி. சு. செல்லப்பா கதைக்கு உருவத்தைவிடச் சூழ்நிலையே முக்கியமென்று எண்ணுவது அவர் சிறுகதைகளிலிருந்து தெரியும்.
சிறுகதையில் மற்றொரு அம்சமான நீளம் என்பதும் உருவத்தில் ஒரு பகுதியாகவே, இவ்வளவுக்கும் பிறகு, தோன்றிவிடும். எடுத்துக்கொண்ட ஒருமையைக் கலைக்காமல், எவ்வளவு தூரம் ஓடிக் கதை தானாக நிற்கிறதோ அதுவே அதன் நீளம். ஒரு பக்கத்திலிருந்து இருநூறு பக்கங்கள் வரையிலும் சிறுகதைகள் இருக்கலாம்; மேலும் இருக்கலாம்தான். ஆழ்ந்து ஒருமைப்பட்ட சூழ்நிலையும் விவரணங்களும், பகைப்புலமும் சிலவிதக் கதைகளுக்குத் தேவைப்படுகின்றன. ஹெமிங்வே பல சம்பவங்களைச் சொல்லி ஒரு நிகழ்ச்சியில், கதையின் ஒருமைப்பாடு கெடாமல் முடிப்பார். இதெல்லாம் ஆசிரியருடைய சாமர்த்தியத்தைப் பொறுத்தது என்று சொல்லவேண்டுமே ஒழிய தனியாகச் சொல்லித் தெரியாது.
எல்லா இலக்கியத் துறைகளுக்கும் போலவே, சிறுகதைக்கும் தனி இலக்கணம் சொல்ல முடியாது. எந்த இலக்கிய சிருஷ்டியுமே இலக்கணத்தை மீறிய ஒரு செய்கை.
ஒவ்வொரு சிறுகதையும் ஒரு தனி உலகம் – அது ஒரு தனி கலை உலகம். அதிலே சாதிகள் என்றோ, கட்டுப்பாடு என்றோ ஒன்றும் கிடையாது. ஒன்று. ஒன்று ஒன்றுதான் முக்கியம் என்று செய்யப்படுவதுதான் சிறுகதை.
(சிறு குறிப்புகள் என்ற கட்டுரையிலிருந்து ஒரு பகுதி.)
காஷ்யபன்
வசன நடையில் உள்ள மிகச் சிறிய கற்பனை “பொறி”தான் சிறுகதை.அது எவ்வளவு சிறியதாக இருக்கலாம்? பத்தாயிரம் வார்த்தைகளுக்கு மிகாமல்,அரைமணி நேரத்தில் படித்து முடிக்கக் கூடியதாக இருக்கலாம் என்கிறார் ஏச்.ஜி. வெல்ஸ்.
அதன் உள்ளடக்கம் , கட்டுமானம் பற்றி எதுவும் இல்லை.ஆனால் இன்று அது பல்வேறு வடிவங்களில், பல்வேறு உள்ளடக்கத்தோடு நமக்குக் கிடைகிறது.ஆங்கில சிறு கதைகளின் தந்தை என்று போற்றப்படும் எட்கர் ஆலன் போ இது பற்றி அதிகம் கூறியிருக்கிறார்.அவரது கருத்தை ஒட்டி சாமர் செட் மாம் கூறும்போது” ஒரு குறிப்பிட்ட ஒரே சம்பவத்தைச்சோல்லும் கற்பனை” என்கிறார்.” அது துடிப்போடு, மின்னலைப் போல மனதோடு இணைய வேண்டும் “என்கிறார். “ஆரம்பத்திலிருந்து முடிவுவரை சீராக கோடுபோட்டது போல் செல்லவேண்டும்” என்றும் குறிபிடுகிறார்.
சிறுகதை பாத்திரத்தைச்சுற்றி வராது.மாறாக கதையின் நோக்கத்தைச்சுற்றிவரும்.இது கவிதையைப் போன்று உணர்ச்சிகரமானதாக இருக்க வேண்டும்.மனதை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும்.. உபதேசம் செய்யக்கூடாது.
இலக்கியப் பண்டிதர்கள் சிறுகதையை இலக்கியத்தின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கத் தயங்கவே செய்கிறார்கள்.நூற்றுக்கணக்கான உலக மொழிகளில் ஆயிரக்கணக்கான எழுத்தாளர்கள்,நல்லதும் பொல்லாததுமாக லட்சக்கணக்கில் எழுதித் தள்ளியுள்ளார்கள். இவற்றை பார்த்து ஆரய்ந்து சொல்லமுடியாத சிரமமும் இதில் அடங்கியுள்ளது.ஆக்ஸ்வர்டு ஆங்கில வரலாற்று நூல் இது பற்றி, இந்த வடிவம் பற்றி குறிப்பிடவே இல்லை.மற்ற மொழிகளிலும் இது தான் நிலை..
மனிதம் பற்றி ஆழமான சித்தரிப்பு இருந்தால் மட்டுமேஅங்கீகாரம் கிடைக்கும் என்று விமரிசகர்கள் கருதுகிறார்கள்.எழுத்தாளன் தன்னைச்சுற்றி என்ன நடக்கிறது என்பதை உணர்ந்து புரிந்து கொண்டால் தான் இத்தகைய ஆக்கபூர்வமான,வாழ்க்கைக்கு நெருக்கமான படைப்புகளை உருவாக்க முடியும உணர்வுகளை துல்லியமாக,சரியாக,.மெச்சத்தகுந்தவகையில்வெளிபடுத்தும் திறமை கொண்டவனே ஆக்கபூர்வமான எழுத்தாளன்.சிதறிய கண்ணாடித்துண்டுகளில் தெரியும் பிம்பங்களாக அவை இருக்கக் கூடாது.
சிறுகதை எழுத்தாளர்கள் பல தரப்பட்டவர்கள். அவர்கள் இலக்கியம் படித்தவர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.அவர்கள் எழுதுகிறார்கள். மனதில் உள்ளதைக் கொட்டித் தீர்க்க எழுது கிறார்கள்.உணர்வுகளின்அழுத்தத்திலிருந்துவிடுபடஎழுதுகிறார்கள்.தேசீயம்,சீர்திருத்தம்,கலாசாரம்,பண்பாடு,தத்துவம்,உளவியல்,நவீனத்துவம்,பின்நவீனத்துவம் என்று அவர்களுக்குத் தெரிந்ததை தெளிவாகவு ம், தெளிவின்றியும் எழுதுகிறார்கள். இவர்களுக்கு போதமூட்டி கற்று கொடுப்பது சிரமமான காரியமல்ல.
மேலை நாட்டு இலக்கியங்களை, குறிப்பாக,பிரஞ்சு,ரஷ்ய, ஆங்கில இலக்கியங்களை முன் மாதிரியாகக் கொண்டு இந்திய மொழிகளில் நவீன சிறுகதைவடிவம் உருவாயிற்று.
- 1854 ம் ஆண்டு மராத்திய மொழியில் தான் முதன் முதலாக நவீன சிறுகதை வெளிவந்ததாக இலக்கிய வரலாற்றாளர்கள் கருதுகிறார்கள்.விஷ்ணு கண் ஸ்யாம் என்ற பெயர் கொண்ட எழுத்தாளர் எழுதிய இந்தஸ் சிறுகதையின் தலைப்பு தெரியவில்லை.
- 1872ம் ஆண்டு வங்க மொழியில் பூர்ண சந்திர சட்டர்ஜி என்பவர் “மதுமதி” என்கிற சிறுகதையை எழுதியுள்ளார்.
- 1891ம் ஆண்டு குஞ்ஞு ராமன் நாயனார் என்ற மலையாள எழுத்தாளர் “பழக்க தோஷங்கள்” என்ற சிறுகதையை எழுதியுள்ளார்.
- 1900ம் ஆண்டு “என் அத்தை” என்ற சிறுகதையை பன்சே மங்கேஷ்ராவ் என்பவர் கன்னட மொழியில் எழுதியுள்ளார்.
(ஆதாரம்: Compaaritive Indian Literature vol 111, Kerala Sahithya Academy)
1854ம் ஆண்டுக்கு முன் நம் நாட்டில் சிறுகதைகள் என்ற வடிவம் இருந்த்ததில்லயா?
இருந்தது என்பதுதான் உண்மை.கதை சொல்வது என்பது மிகவும் பழமையான கலையாகும்.உலகத்திலேயே மிக அதிகமான கதைகளை கைவசம் இந்தியாதான் வைத்திருக்கிறது. பாரதி,தாகூர் போன்றவர்கள் அவற்றை நவீனப்படுத்த முயற்சித்தார்கள்..
எழுதியவர்: காஷ்யபன்
Served as a Sub-Editor with ‘Theekkathir’ a leading Tamil Daily, and also a monthly called ‘Semmalar’ for over thirty five years. Published three short story collections in Tamil, one in Hindi and English each, and a novel and a Drama in Tamil. Spend most of the time reading writing and chatting with like minded friends.
மற்றவர்கள்
நியு ஜெர்சி தமிழ் இலக்கிய சங்கம்: நாஞ்சில் நாடன் வாசகர் சந்திப்பு
நன்றி: Dyno Buoy
இன்றைய மாலை நாஞ்சில் நாடன் அவர்களுடன் இனிதே கழிந்தது. மெல்லிய பேச்சு, ஆனால் அதே சமயத்தில் தன் கருத்துக்களை வலுவாகவும் ஆணித்தரமாக எடுத்து வைக்கிறார்.
அமெரிக்க இந்திய கல்வி முறை, தமிழக அரசியல், ஈழ போராட்டம் என்று ஆரம்பித்த பேச்சு கம்பனைப்பற்றி பேசத்துவங்கியதும் நாஞ்சிலின் கண்களில் ஒரு ஒளி வந்து சேர்ந்து கொண்டது. கம்பனை பற்றி பேசும் போது ஒருவகை பரவச நிலையை அடைவதை பார்க்கமுடியும். கம்பனின் செய்யுளை மேற்கோள்காட்டிப்பேசும் போது அந்த பரவசம் உச்சத்தை அடைக்கிறது. கம்பனின் சொற்பிரவாகங்களைப்பற்றி நிறைய தெரிந்து வைத்திருக்கிறார். சட்டென்று கம்பராமாயணத்தில் இருந்து செய்யுள் எதையாவது சொல்லி அதன் அர்த்தங்களை ஒரு ஆராய்ச்சி மாணவனின் துறுதுறுப்புடன் விவரிக்கிறார்.
இசையை பற்றி அறிந்து வைத்திருக்கிறார். சஞ்சய் சுப்ரமணியனை பற்றி உயர்ந்த அபிப்பிராயங்களை கொண்டிருந்தார். தமிழ் இசை வளர தமிழ் பாடல்கள் ஸ்வரப்படுத்தப்படவேண்டிய கட்டாயத்தை வழியுறுத்தினார். அதை செய்ய இன்று யாரும் நம்மிடையே இல்லை என்று வருத்தம் தெரிவித்தார்.
தமிழ் மொழியில் சுமார் 8-10 லட்சம் சொற்கள் இருக்கலாம் என்றும், அதையெல்லாம் தொகுக்க ஆளில்லை என்று அங்கலாய்த்தார். இப்போதைய லெக்சிக்கான் அகராதிகளில் அதிகபட்சம் 40-50 ஆயிரம் வார்த்தைகளே இருக்கும் என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
விமர்சகர்களின் பார்வை, அவர்களின் நோக்கம் குறித்து பேசினார். அன்றைய விமர்சகர்கள் எதையும் எதிர்பாராமல் படைப்பை வாசித்தே மதிப்புரை வழக்கிய காலகட்டத்தையும் இன்று ரூம் போட்டு சரக்கும் கொடுத்தால்தான் ரெண்டு பக்க மதிப்புரை தேத்த முடியும் என்பதையும் வருத்தத்தோடு தெரிவித்தார்.
இன்னும் பல விசயங்களை பற்றியும் ஆணித்தரமான கருத்துக்களை மென்மையாக வழியுறுத்தினார்.
தமிழின் நல்ல ஆளுமையை சந்தித்த மகிழ்ச்சியில் மனநிறைவோடு வீடு திரும்பினோம்… வயிற்றுக்கும் உணவளித்த மதுசூதனன் தம்பதியினருக்கு நன்றிகள் பல!!
கால் முளைத்த கதைகள் – எஸ். ராமகிஷ்ணன் – உயிர்மை பதிப்பகம்
ஆந்தைக்குத் தூக்கம் என்றால் ரொம்பவும் பிடிக்கும். அது பகல் முழுவதும் தூங்கிக் கொண்டேயிருக்கும். ஒரு நாள் ஒரு ஆந்தை மரத்தில் தூங்கிக் கொண்டிருந்தது. மரங்கொத்தி ஒன்று அந்த மரத்தை கொத்தத் துவங்கியது. தூக்கம் கலைந்து ஆந்தை கோபத்துடன் ஏன் மரத்தைக் கொத்துகிறாய் என்று கேட்டது. மரங்கொத்தி என் பசிக்கு மரத்தைச் சாப்பிடுகிறேன். நீ ஏன் எப்போதும் தூங்கிக்கொண்டே இருக்கிறாய் என்று கேட்டது. பதில் சொல்வதற்குள் ஆந்தை கொட்டாவி விட்டுக் கொண்டே மறுபடியும் தூங்கியது. மறுநாள் அந்த மரத்தில் ஒரு தூக்கனாங்குருவி கூடு கட்டியது. அதன் சப்தம் கேட்டு விழித்த ஆந்தை எதற்காகக் கூடு கட்டுகிறாய் என்று கேட்டது.
குருவியும் குளிர்காலத்தில் பாதுகாப்பாக இருக்க வேண்டாமா என்றது. ஆந்தை என்னை குளிர் எதுவும் செய்யாது நான் கூடு கட்டத் தேவையில்லை என்று சொல்லிவிட்டு தூங்கிவிட்டது. குளிர்காலம் வந்தது. நட்சத்திரங்கள் கூட நடுங்கத் துவங்கின. மரங்களில் இருந்த கூடுகளில் பறவைகள் அடைந்து கொண்டு விட்டன. ஆந்தை குளிரில் நடுங்கியது. கூடு கட்டுவது எப்படி என்றே தெரியாமல் போய்விட்டோமே என்று கலங்கியது. குளிர் நாளுக்கு நாள் அதிகமாகி ஆந்தையை வாட்டி எடுத்து எப்படியாவது ஒரு கூடு கட்டிக்கொள்ள வேண்டும் என்று ஆந்தை முடிவு செய்தது. குளிர்காலம் முடிந்து கோடைக்காலம் வந்தது.
ஆந்தை ஒரேயரு நாள் கூடு கட்டுவதற்கு சுள்ளிகளைப் பொறுக்கி வந்து மரத்தில் அடுக்கியது. அதற்குள் சோம்பேறித்தனம் அதிகமாகிவிட திரும்பவும் தூங்கத் துவங்கிவிட்டது. அன்றிலிருந்து இன்று வரை ஆந்தையால் கூட்டைக் கட்ட முடியவில்லை. இது தென் ஆப்பிரிக்காவின் ஒரு பழங்குடியினத்தவரின் கதை.
இதுபோல நெல் எப்படி உருவானது?
நாய் ஏன் வாலை ஆட்டுகிறது?
பெண்களுக்கு ஏன் தாடி வளர்வதில்லை?
என்கிற ஒரு நைஜீரியா கதை உள்ளிட்ட 80 கதைகளை ஒரு தொகுப்பாக வெளியிட்டுள்ளார் எஸ். ராமகிருஷ்ணன்,
உலகமெங்கும் உள்ள முப்பது பழங்குடியினத்தவர்கள் சொன்ன கதைகளிலிருந்து தேர்வு செய்து இந்த தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. சிறுவர்களுக்காக எழுதப்பட்ட நூலாக சொல்லப்பட்டாலும் அனைவரும் படிக்கும்படி மிகவும் சுவாரசியமாக இருக்கிறது இந்த நூல்.ஆக, குழந்தைகளுடைய மகிழ்ச்சிக்காகத் தன் பங்களிப்பை செய்திருக்கின்ற எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்கும் நாமெல்லாம் நன்றி சொல்லலாமே.
S Ramakrishnan on State of Feminism in Tamils: பெண்களைக் குறித்து எஸ்ரா
பெண்ணை உடைமைப் பொருளாக மாற்றிய நிலப்பிரபுத்துவப் பண்பாடுதான் அரசியலிலும் ஆளுமை செலுத்துகிறது. நிலத்தை உடைமையாக்கி, உரிமைகொள்கிற ஆக்கிரமப்பு மன நிலைதான் பெண்ணை ஆக்கிரமிப்பதிலும் செயல்படுகிறது. பெணைத் தனது உடைமையாக ஆண் கருதுகிற மன நிலையாக, அவளது நிலையைத் தீர்மானிப்பது தனது அதிகாரம் என்ற மனநிலையாகச் செயல்படுகிறது.
பெண்ணை வெற்றி கொள்வதே ஒரு முக்கியச் செயல்பாடாகிறது. ஒரு ஆண், தன் வாழ்நாள் முழுக்க எந்த அளவுக்குப் பெண்ணைக் கட்டுப்படுத்தி வைக்கிறானோ அந்த அளவுக்கு அவன் வெற்றி பெற்றவனாகப் பார்க்கப்படுகிறான். காதலி, மனைவி, தாய், மகள், சகோதரி என அனைத்து உறவுகளிலும் இந்த ஆளுமையும் ஆக்கிரமிப்பும் இருக்கின்றன.
அண்மையில் பழநி பேருந்து நிலையத்தில் பார்த்த காட்சி நினைவுக்கு வருகிறது. நள்ளிரவு நேரம். தங்களுடைய பேருந்துக்காகக் காத்திருந்த ஒரு குடும்பத்தில், இரண்டு இளம் பெண்கள் ஒருவர் மேல் ஒருவர் சாய்ந்து தூங்க முயல்கிறார்கள். அவர்களைத் தூங்கவிடாமல் தடுக்கிறான் தந்தை. பெண் பிள்ளைகள் பொது இடத்தில் தூங்கக் கூடாது என்று சொல்கிறான். அவனுடைய வயதான மனைவி தரையிலேயே படுத்துத் தூங்கிக்கொண்டிருந்ததை அவன் தடுக்கவில்லை. அவனுடைய மகன் தூங்கிக்கொண்டிருந்தான், அவனையும் தடுக்கவில்லை. ஆனால் வயதுக்கு வந்த மகள்கள் தூங்க அனுமதிக்கவில்லை. அவன் அசந்த நேரத்தில்தான் அவர்களும் சற்று கண்ணயர்ந்தார்கள். அவனுக்கு அவர்கள் மீது அக்கறையில்லை என்று சொல்ல முடியாது. அதே வேளையில், பெண்ணைக் கட்டுப்படுத்துவதன் மூலம் பாதுகாப்பாக வைக்கிற சமூக மனநிலையோடும் அவன் இருந்தான்.
பெண்கள் மீற முயல்கிறபோதெல்லாம் அவர்கள் சொல்ல முனைவது ஒன்றுதான். ‘நான் உன் உடைமைப்பொருள் அல்ல. நாம் இணைந்து வாழ்கிறோம். உனக்குள்ள உரிமைகள் எனக்கும் இருக்கிறது,’ என்பதுதான் மீறுகிற பெண் சொல்கிற செய்தி. ஆணோ, தன் உடைமைப் பொருளாகக் கருதுவதால், பெண்ணின் இடுப்பில் ஒரு கயிறைக்கட்டி, அந்தக் கயிறு எவ்வளவு நீளமோ அந்த நீளத்திற்கு மட்டும் சுதந்திரமாகச் செல்ல அனுமதிக்கிறான். குடும்பத்தின் நிலையைப் பொறுத்து, அந்தக் கயிறு அமெரிக்கா வரையில் கூட நீளும்!
அந்தக் கயிறை அறுக்கிற செயலில், அறுப்பது பற்றிப் பேசுவதில் பெண்கள் இப்போதுதான் இறங்கியிருக்கிறார்கள். பெண் தனியாகக் கூட வாழ முடியும் என்று காட்ட முயல்கிறார்கள். சமுதாயத்தின் சீரழிவுக் கட்டத்தில் இது நிகழ்வதால், பெண் இப்படி உரிமை பேசுவதே கூட ஒரு சீரழிவாகப் பார்க்கப்படுகிறது. கல்வியின் மூலம் சுதந்திரம் கிடைக்கும் என்று பெண் எதிர்பார்த்தாள். நேரெதிராக, இரட்டைச் சுமைதான் பெண்ணின் மீது ஏற்றப்பட்டது. நீ வேலைக்கும் போ, வீட்டு வேலையையும் பார், பண்பாட்டுப் பெருமையையும் காப்பாற்று என்று மேலும் நுட்பமான கயிறுதான் கட்டப்பட்டிருக்கிறது.
பண்பாட்டுப் பெருமை பேசுகிறபோது அதை பக்தியாக்குகிற, புராதனமாக்குகிற முயற்சிதான் நடக்கிறது. அது புனிதமானது, அதிலே கைவைக்கவே கூடாது என்று சொல்கிறார்கள். ஆனால், இப்படிப் பண்பாட்டுப் பெருமை பேசுகிறவர்களில் பெரும்பாலானவர்கள் அதைக் கடைப்பிடிக்காதவர்கள்தான். பெண்கள் பாரம்பரிய ஆடைகளை அணிய வேண்டும் என்பார்கள், அவர்கள் வீட்டுப் பெண்கள் தங்களுக்கு வசதியாக பேன்ட், சட்டை, சுடிதார் என்று தேர்ந்தெடுக்கிறபோது, அதை இவர்கள் தடுப்பதில்லை. சொந்த வாழ்க்கையில் மீறல்களை அனுமதித்துக்கொண்டே, பொது வாழ்க்கையில் பெருமை பேசுகிற இரட்டை நிலையைத்தான் பலரிடம் காண முடிகிறது. மேற்கத்திய நாடுகளில் ஒரு பண்பாட்டை வலியுறுத்துகிறார்கள் என்றால் அதை ஓரளவுக்குக் கைக்கொள்கிறார்கள். இந்தியச் சமூகத்தில்தான் இந்த இரட்டை நிலை.
நாம் விவாதிக்கிற பல கூறுகள் விக்டோரியன் மொராலிட்டி (விக்டோரியா அறம் – ஆங்கிலேய அறநெறி) சார்ந்தவை. அதன் தாக்கத்தில், இங்கே ஏற்கெனவே இருந்த சில முற்போக்கான கூறுகளை இழந்திருக்கிறோம். உதாரணமாக, நியூடிட்டி (நிர்வாணம்) தொடர்பாக இங்கே நிலவியிருந்த கோட்பாடே வேறு. ஆனால், இன்று விக்டோரியன் மொராலிட்டி அடிப்படையிலேயே பெண்ணின் உடல் சார்ந்த ஆபாசம், வக்கிரம் உள்ளிட்ட பார்வைகள் ஊட்டப்பட்டிருக்கின்றன. விதவைத் திருமணம் இங்கே இல்லாமலிருந்தது போன்ற சில பலவீனங்களைப் பயன்படுத்திக்கொண்டு வந்த ஆங்கிலேயர்கள், அவர்களுடைய பலவீனங்களை இங்கே திணித்துவிட்டார்கள்.
பெண்ணுக்குச் சுதந்திரமும் அதிகாரமும் இருப்பது போன்ற மனநிலையை ஏற்படுத்துவதில் மதம் ஒரு முக்கியப்பங்காற்றி வந்திருக்கிது. கதைகளாக, சடங்குகளாக பெண் தெய்வங்களாக பெண்ணின் உடல் சார்ந்த போதனைகளாக, பெண்ணுக்கு ஒரு பண்பாட்டு வெளி வழங்கப்பட்டிருக்கிறது என்ற மனநிலை கட்டப்பட்டிருக்கிறது. எல்லா மதங்களும் இதைச் செய்திருக்கின்றன. இந்து மதத்தில் உள்ள நிலைமைகள் நமக்குத் தெரியும். கிறிஸ்துவத்தில் பெண் புனிதத்துறவியாகிவிட முடிவதில்லை. இஸ்லாமியத்தில் பெண்ணுக்கு முகத்திரையோடு மேலங்கி போடப்பட்டுவிட்டது. பௌத்தத்தில் பெண் துறவிகளுக்குக் கட்டுப்பாடுகள் உள்ளன. சமணத்தில், கடுமையாகத் துறவறம் மேற்கொள்கிற பெண் அடுத்தபிறவியில் ஆணாகப் பிறக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஆன்மீக விடுதலைக்காகத்தான் மதம் என்கிறார்கள். அப்படியானால் அதில் பெண் வெளியே நிறுத்தப்பட்டது எப்படி? ஆகவே பெண் விடுதலை, மதத்திற்கு எதிரான போராட்டத்தோடும் இணைகிறது.
Thanks:
பண்பாடு- புரிதலை நோக்கி…ஒரு கலந்துரையாடல்
Interview with Tamil Poet A Vennila: Nakheeran

நிலவைப் பற்றி எழுதாத கவிஞர்களே இல்லை என்று சொல்லலாம். அப்படியிருக்க; ஒரு கவிஞரின் பெயரே வெண்ணிலா.
வசித்து வரும் வந்தவாசியிலிருந்து அவர் தொலைபேசி வாயிலாக தனது வாழ்வை வாசித்தார். இதோ – சென்னையில் பதிவான வெண்ணிலாவின் வெளிச்சம்.
நவீன இலக்கியத்தளம் விட்டு இடம்பெயரும் எண்ணமில்லையா?

அதிகம் படிக்கும் பழக்கம் இருக்கு. ஆனால் அதிகம் படைப்பதில்லையே ஏன்?
தலைப்பில்லா கவிதைகளே எழுதிவருகிறீர்களே; தலையாய காரணம் என்ன?

காதலித்தால் கவிதை வரும் என்பார்கள். கவிதை எழுதினாலும் காதல் வரும் என்பார்கள். நீங்க சொல்லுங்க. கவிதை வந்ததும் காதல் வந்ததா? காதல் வந்ததும் கவிதை வந்ததா?

இனிசியல் குறித்து பேசியதால் நினைவுக்கு வந்தது. ஆண்கள் – பெண் பெயரில் எழுதக்கூடாது என்று சொல்லிவருகிறீர்களே?
இன்றைக்கு ஒடுக்கப்பட்ட, கீழ்நிலைக்குத் தள்ளப்பட்ட பால்வேறுபாட்டை/இன வேறுபாட்டை அடையாளப்படுத்தும் குரல்களும் ஒலிக்கத் துவங்கியுள்ள காலத்தில் எழுதுபவன் சுயம் பற்றிய அடையாளமும் தேவைப்படுகிறது. பொதுவான இலக்கியம் படைப்பவர்கள் வரலாற்று திரிபு ஏற்பட காரணமாக இருக்கக்கூடாது.
பெண் சிறுகதை எழுத்தாளர்களின் வரலாற்றை ஆவணப்படுத்தும் எண்ணம் எப்படி வந்தது?

எழுத்தாளர் அனுத்தமாவுக்கு இப்போது 90வயசு. சரியாக பேச முடியாத நிலையில் இருந்தார். சிரமப்பட்டுத்தான் அவரும் பேசினார்; நானும் குறிப்புகளை சேகரித்தேன். மூப்பின் காரணமாக சரியாக பேசமுடியாத நிலையிலும் காது கேளாத நிலையிலும் சுயநினைவு சரியாக இல்லாத நிலையிலும் இருந்தார் கிருத்திகா. அவரது உறவினர்களின் உதவியுடன் அவரை கொஞ்சம் கொஞ்சம் பேச வைத்தேன். இந்த தொகுப்பில் இருக்கும் பலர் இப்போது உயிருடன் இல்லை. இந்நூல் வருவதற்கு உதவிய வல்லிக்கண்ணன், சிட்டி முதலான பெரும் படைப்பாளிகள் இந்நூல் வெளிவந்தபோது உயிருடன் இல்லை. மனசுக்கு கஷ்டமாக இருந்தது.
முதுபெரும் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் இப்போது முதியோர் இல்லத்தில் இருக்கிறாரே; சந்தித்தீர்களா?
‘மீதமிருக்கும் சொற்கள்’-க்காக அவருடன் தொலைபேசியில் தான் பேசினேன். இப்போது அவர் விச்ராந்தி முதியோர் இல்லத்தில் இருப்பதாக கேள்விப்பட்டேன். பிள்ளைகள் இல்லாததால் கணவர் இறந்தபிறகு ( 2002ல்) சொந்தத்தை நம்பி இருந்திருக்கிறார். இருந்ததை எல்லாம் சொந்தங்கள் பிடிங்கிக்கொண்டதால் இந்த என்பத்து மூன்று வயதில் இப்படிப்பட்ட நிலைக்கு வந்திருக்கிறார்.
தேவதாசிகளின் போராளி ராமாமிர்தத்தின் போராட்டங்கள் குறித்தும் வரலாற்றில் அவருக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படவில்லை என நீங்க எழுதியிருப்பதும் முக்கியமான பதிவு. ராமாமிர்தம் பற்றி அறிய முற்பட்டது எப்படி?
மதிபெற்ற மைனர் அல்லது தாசிகளின் மோசவலை என்று மூவலூர் ஆ.ராமாமிர்தம் எழுதிய நாவலை படித்தேன். அந்த நாவல் கிட்டத்தட்ட சுயசரிதை போன்று தன் வாழ்வை அடிப்படையாகக்கொண்டு அவர் எழுதியிருக்கிறார். இந்த நாவலே அவரைப் பற்றி, தேவதாசிகளும் ராமாமிர்தத்தின் போராட்டங்களும் என்ற கட்டுரை எழுத வைத்தது. தேவதாசிப்பெண்களிடையே விழிப்புணர்வை உண்டாக்குவதற்காக அவர்களையே உறுப்பினர்களாக கொண்ட நாகபாசத்தார் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினார். இந்த சங்கமே இசை வேளாளர் சங்கம் என பெயர் மாற்றப்பட்டு இசை வேளாளர் மாநாடு, தேவதாசிகள் மாநாடு போன்றவற்றை நடத்தியுள்ளது.
தமிழகத்தில் இசை வேளாளர் சமூகத்தை சேர்ந்த பெண்களே தேவதாசிகளாக்கப்பட்டுள்ளனர். பொட்டு கட்டுதல், சுமங்கலி சடங்கு முதலான சடங்குகளின் மூலம் ஒரு பெண் தேவதாசியாக்கப்பட்டிருக்கிறாள்.
நாட்டின் கலை கலாச்சாரத்தினை காப்பதற்கு ஒரே வழி தேவதாசி முறையை தக்க வைத்திருப்பதே என்று முட்டுக்கட்டை போட்டனர். இத்தனை காலம் எங்கள் வீட்டுப்பெண்கள் கலையையும் கலாச்சாரத்தையும் காப்பாற்றியது போதும். இனி கொஞ்ச காலத்திற்கு உங்கள் வீட்டு பெண்களை தேவதாசிகளாக்குங்கள் என்று முத்துலட்சுமியை சட்டமன்றத்தில் பேசவைத்தவர் மூவலூர் ராமாமிர்தம். தேவதாசிகள் முறை ஒழிப்பு போராட்டத்தில் ராமாமிர்தம் முக்கிய பங்கு வகித்தார். அவரின் போராட்டத்திற்கு முத்துலட்சுமியும் உறுதுணையாக இருந்துள்ளார். ஆனால் வரலாற்றில் முத்துலட்சுமிக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் ராமாமிர்தத்துக்கு தரவில்லை என்பதுதான் வேதனை.
இசை வேளாளப்பெண்களின் தொழிலாக இருந்த பரதமும் நாட்டியமும் எப்படி மேல் தட்டு நாகரிகமானது என்ற கேள்விக்குறியோடு அந்த கட்டுரையை நிறைவு செய்திருந்தீர்கள். எப்படி என்பதற்கான தேடல் தொடர்ந்ததா?
இன்று பரதநாட்டியம் என்றால் ’கலாஷேத்ரா’, கலாஷேத்ரா என்றால் பரதநாட்டியம் என்கிறார்கள். இந்த கலாஷேத்ராவை நிறுவியவர் அமரர் ருக்மணி அருண்டேல். இவருடைய காலத்திற்கு பிறகுதான் இசை வேளாளப்பெண்களின் பரதநாட்டியம் மேல் தட்டு மக்களின் கலையானது. குறிப்பாக பார்ப்பனப் பெண்களின் கலையானது.
பார்ப்பனப் பெண்ணான ருக்மணி அருண்டேல் பரதநாட்டியத்தின் மேல் ஆர்வம் கொண்டபோது, தேவதாசிகளின் கலையின் மேல் நீ ஆர்வம் கொள்வதா என்று பார்ப்பனர்களால் எதிர்ப்பு கிளம்பியது. பல எதிர்ப்புகளையும் மீறி அந்தக்கலையை கற்றுக்கொண்டதோடு அல்லாமல் அதை கற்றுக்கொடுக்கவும் ஆரம்பித்தார். இப்படித்தான் இது மேல் தட்டு கலையாக மாறியிருக்கிறது. பொதுவாக இது மக்களுக்கான கலை என்று அடையாளப்படுதாமல் உயர் சாதிக்கென்று ஆக்கிவிட்டார். அதுதான் கொஞ்சம் நெருடுகிறது.
இதைப்பற்றி பேசும்போது இது சம்பந்தமான வருத்தத்தையும் சொல்லவேண்டும். தேவதாசி ஒழிப்பு போராட்டத்தால் அரசு செவிசாய்த்தது. கோயில்களில் இருந்து தேவதாசிகளை விலக்கி வைத்து தேவதாசிகளுக்கு சொந்தமான நிலங்களை கட்டாயம் தேவதாசிகளிடம் வழங்கவேண்டும் என்று அரசு சட்டம் போட்டது. ஆனால் அச்சட்டம் முறையாக நடைமுறைப் படுத்தவில்லை.
கோயில் நிலங்களை தங்கள் வசம் வைத்திருந்த பிராமணர்களும் பிறசாதியினரும் தேவதாசிகளுக்கு நிலங்களை வழங்கவில்லை. நிலவருவாய் அளிப்பதையும் நிறுத்திவிட்டனர். பிழைக்க வழியின்றி சமூக புறக்கணிப்போடு பல தேவதாசிகளின் வாழ்க்கை கேள்விக்குறியானது. இதனால் ராமாமிர்தம், முத்துலட்சுமி ரெட்டி இருவரையும் தேவதாசிகளின் முன் குற்றவாளிகள் போல் ஆகிவிட்டார்கள். பழைய வாழ்வே நல்லாதானே இருந்தது… இப்படி நடுத்தெருவுக்கு கொண்டுவந்துவிட்டாளே நம் குலத்தை அழிக்க பிறந்தவள்… என்று ராமாமிர்தத்தை தீட்டித்தீர்த்துள்ளார்கள் தேவதாசிப்பெண்கள்.
அடுத்து உங்களின் படைப்பு என்ன?
சாகித்ய அகாதமிக்காக ‘கனவும் விடியும்’எழுதியிருக்கிறேன். அடுத்து, கைத்தறி நெசவு மக்களின் கையொடிந்து போன வாழ்க்கையை பதிவு செய்யும் முயற்சியில் மும்முரமாயிருக்கிறேன்.
படிப்பது, படைப்பது ஒரு பக்கம் இருந்தாலும் பாடவேண்டும்(நன்றாக) என்பது நெடுநாள் ஆசை. அதற்காக வாய்ப்பாடு கற்று வருகிறேன். கைத்தறி நெசவு மக்கள் பதிவுக்கு பிறகு எனது படைப்பு தனிபாடல் தொகுப்பாக இருக்கலாம். ஆசிரியையாகவும் இருப்பதால் நினைத்த நேரத்தில் எதையும் செய்ய முடியவில்லை.
உங்க மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் பற்றி சொல்லமுடியுமா?
சுற்றி வளைத்து எங்கே வருகிறீர்கள் என்பது புரிகிறது. ( ஒரு சிறிய சிரிப்புக்கு பின் ) ஆசிரியர் என்பதற்கு அர்த்தம் தெரியும். அதன்படி நடக்கிறேன். ஆனால் ஆசிரியர் பணியில் சேர்ந்த ஆரம்ப காலங்களில் அழுது அடம்பிடித்துக் கொண்டுதான் பள்ளிக்கு போவேன்.
இப்போது எம்.ஏ.உளவியல், பி.எஸ்.சி.கணிதம், எம்.எட். படித்திருக்கிறேன். அப்போது பத்தாம் வகுப்பு படித்ததும் அப்பாவும், அம்மாவும்(வசந்தா) ஆசிரியர் பயிற்சிக்கு படிக்கவைத்தார்கள். பதினெட்டு வயதிலேயே ஆசிரியர் ஆகிவிட்டேன். வேண்டா வெறுப்பாகத்தான் ஆசிரியர் பொறுப்பேற்றேன். ஒவ்வொரு நாட்டின் தலைவிதியும் வகுப்பறையில் தான் நிர்ணயிக்கப்படுகின்றன என்று நேரு சொல்வதை மெல்ல மெல்ல உணர்ந்தேன். நான் படித்த அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியிலேயே இப்போது பணியாற்றுகிறேன்..’ என்று அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே வெண்ஸ் யாரு போன்ல….என்ற குரல். ’அவர் வந்திருக்கிறார்’ என்றபடி தொடர்ந்தார்.
இதைப்போய் எதுக்கு சொல்லனும் என்று ஜாடையொளி சிந்தியிருப்பாரா வெண்ணிலாவின் அவர். ’ம்..இருக்கட்டும்’ என்று அங்கே பதில் சொல்லிவிட்டு, ’என் மேல் அவருக்கு ரொம்ப பிரியம்….’ என்று இங்கே சொல்லிவிட்டு மீண்டும் ஒரு சிறிய சிரிப்பு. வெளியே இப்படிச் சொன்னாலும் இன்னும் தன் கணவரின் காதலை முழுமையாக பெறவில்லை வெண்ணிலா.
சாப்பிடும் சோறு
பேசும் பேச்சு
சிரிக்கும் சிரிப்பு
எல்லாம் குழந்தைக்காக என
கரு சுமந்து…
நாளை
உன்னோட வண்டியில்
முன்நின்று சிரித்து வர
உன் இனிசியல் போட்டுக்கொள்ள
உனக்கு பிள்ளை பெற்றுத் தருவேன்
நான்கைந்து மணிநேரம்
ரத்த வெள்ளத்தில் மிதந்து
கேட்டால் கிடைக்கும்தான்
உன் முத்தம்
உன் அரவணைப்பு
உன் ஆறுதல்
பச்சப்புள்ள கேட்டா
பாலூட்டுகிறோம்
கரு சுமந்து
குழந்தை தவமிருக்கும் பெண்களை
சுமக்க
எந்த ஆணுக்கு உள்ளது கருப்பை!.
— என்று அவர் எழுதியிருக்கும் கவிதை அதைத்தான் உணர்த்துகிறது.
எழுத்தாக்கம் : கதிரவன்
ஈழத் தமிழரின் போர்க்காலப் பிரசுரங்களும், போராட்ட இலக்கியங்களும்
ஈழத்தமிழரின் போர்க்கால இலக்கியம். உங்கள் குரல்: தமிழ்ச் செம்மொழிச் சிறப்பு மலர், (தொகுப்பாசிரியர்: செ.சீனி நைனா முகம்மது, ஆசிரியர் உங்கள் குரல்) ஜனவரி 2007, ப. 269-284. (உங்கள் குரல், அறை எண் 2, முதல் மாடி, 22, சைனா சித்திரீட்டு, 10200, புலாவ் பினாங்கு, மலேசியா).
என்.செல்வராஜா,
நூலகவியலாளர், ஐக்கிய இராச்சியம்
1948 இல் இலங்கை பிரித்தானியரிடமிருந்து சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர் தமிழ் பேசும் மக்களுக்கெதிரான ஒடுக்குமுறைகள் படிப்படியாகத் தீவிரமடைந்து வந்தது. தமிழரின் பிரதிநிதிகளாகப் பாராளுமன்றம் சென்ற தமிழ் அரசியல்வாதிகள் சாத்விகப் போராட்டங்களின் வழியாக இந்த அடக்குமுறைகளுக்குத் தீர்வுகாண முயன்று தோல்வி கண்டமை இன்று வரலாறாகி விட்டது. இலங்கையில் தமிழரின் விடுதலைப் போராட்டம் சாத்வீகப் போராட்ட நிலையிலிருந்து ஆயுதப் போராட்டமுறைக்குப் பரிணாம வளர்ச்சி பெற்ற எழுபதுகளின் இறுதிப்பகுதிகளிலேயே போரியல் சார்ந்த நூல்கள் ஆங்காங்கே வெளிவர ஆரம்பித்து விட்டன.
1974ம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டு இறுதி நாளில் பதினொரு அப்பாவித் தமிழ் மக்களின் உயிர்ப்பலியுடன் இலங்கை அரசு தமிழ் மக்களுக்கெதிராக விடுத்த வெளிப்படையான அச்சுறுத்தலானது, கல்வித்துறையின் திட்டமிட்ட தரப்படுத்தல்களால் எதிர்காலத்தையே இழந்துநின்ற தமிழ் இளைஞர்களை ஆயுதப் போராட்டத்தின்பால் தள்ளியது. தொடர்ந்து சிங்கள அரசியல்வாதிகளால் 1977, 1983 ஆண்டுகளில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இனக்கலவர வன்முறைகளும் தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமைக்கான அவசியத்தையும் தனி நாடு ஒன்றிற்கான தேவையையும் வலியுறுத்தின.
1981இல் யாழ்ப்பாண மண்ணில் யாழ்ப்பாணப் பொது நூலகம், ஈழநாடு பத்திரிகை அலுவலகம், பூபாலசிங்கம் புத்தகசாலை ஆகிய தமிழரின் அறிவியல், ஊடகவியல் நிறுவனங்களை சிங்கள அரசின் கூலிப்படைகளால் பகிரங்கமாகத் தீயிட்டுக் கொழுத்தப்பட்ட சம்பவமானது, அதுவரை காலமும் கொரில்லாப் போராட்டமுறைகளை இளைஞர்களின் வன்முறைப் போராட்டவடிவமாகக் கருதி வந்த புத்திஜீவிகளையும் விடுதலைப் போராட்டத்தின்பால் ஈர்த்தது.
அரசின் பாரிய கெடுபிடிகளுக்கு மத்தியில் ஈழ விடுதலைப் போராட்டம் பற்றிய பிரசுரங்களை தாயக மண்ணில் வெளிப்படையாக அச்சிட முடியாத நிலை ஆரம்பத்தில் காணப்பட்டது. தமிழ்ப் பிரதேசங்களில் இயங்கிய தமிழரின் அச்சகங்கள் எவையும் பகிரங்கமாக இப்பிரசுரங்களை தாயக மண்ணில் அச்சிட முன்வரவில்லை. அச்சகங்கள் அனைத்தும் அரசின் காவல்துறையினரால் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வந்தன. இனவிடுதலைப் போராட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்த துணிச்சலுடன் முன்வந்த பல ஈழத்துப் படைப்பாளிகளும் அந்நாட்களில் புனைபெயரினுள் மறைந்திருந்தே இத்தகைய இலக்கியங்களைப் படைக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருந்தது. ஆரம்பகால விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்;டிருந்த பல்வேறு போராட்ட அமைப்புக்களும் தமது தளங்களை தமிழகத்திலும் கொண்டியங்கியதால் அக்காலகட்ட வெளியீடுகள் அதிகளவில் தமிழகத்தில் அச்சிடப்பெற்று, தாயகத்துக்குக் கொண்டுவரப்பட்டு விநியோகிக்கப்பட்டன. விடுதலைப் போராளிகளில் படைப்பிலக்கிய ஆர்வம் கொண்டிருந்தவர்களுக்கும் இது நல்ல வாய்ப்பாயிற்று.
ஈழத்தவரின் ஈழவிடுதலைப் போராட்டத்துக்கு முன்னோடியாக பல நூல்கள் ஆரம்பகாலத்தில் வெளிவந்திருந்தன. பண்டிதர் க.பொ.இரத்தினம், கவிஞர் காசி ஆனந்தன் போன்றேரின் விடுதலை உணர்ச்சிமிக்க படைப்புகளை சுதந்திரன், தீப்பொறி போன்ற அரசியல் ஏடுகள் எழுபதுகளில் தாங்கி வந்தன. தனி ஆட்சி என்ற நூல் கா.பொ.இரத்தினம் அவர்களால் எழுதப்பெற்று, யாழ்ப்பாணத்திலிருந்து ஒக்டோபர் 1972 இல் வெளிவந்திருந்தது. பண்டிதர் கா.பொ.இரத்தினம் அவர்கள் இலங்கை அரசியலில் ஈடுபட்டு பாராளுமன்ற உறுப்பினராக இருந்த வேளையில் 1970-71 ஆண்டுக் காலப்பகுதியில் ஆற்றிய உரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டிருந்தன.
ஈழத்தவரின் போராட்ட வரலாற்றுடன் தொடர்புபட்ட முக்கியமானதொரு நூல் லங்காராணி என்பதாகும். அருளர் எழுதி சென்னை கனல் வெளியீடாக டிசம்பர், 1978 இல் 256 பக்கங்களில் இந்த வரலாற்று முக்கியத்துவமான நூல் வெளிவந்திருந்தது. இதன் இரண்டாவது பதிப்பு, யாழ்ப்பாணத்திலிருந்து ஈழப்புரட்சி அமைப்பினரால் (ஈரோஸ்) 1988 இல் வெளியிடப்பட்டிருந்தது. 1977 ஆகஸ்ட் இலங்கை இனக்கலவரத்தின் போது கொழும்பிலிருந்து ஈழத்தமிழர்களை அகதிகளாக ஏற்றி, வடபுலத்திற்குக் கொண்டு வந்த கப்பலின் பெயர் லங்காராணி. லங்காராணியின் கடற்பிரயாணத்தின் பின்னணியில் அதன் பிரயாணிகளின் உணர்வலைகளின் ஊடாக ஈழத்து இனப்பிரச்சினையின் பூதாகாரத்தன்மை யையும் விடுதலைப் போராட்டத்தின் தேவையையும் அழகாகச் சித்திரிக்கும் நாவல்; இதுவாகும். விடுதலைப் போராட்டத்தில் நேரடியாக இளைஞர்களை ஈடுபடத் தூண்டிய நூலாக இந்நூல் கருதப்படுகின்றது.
ஈழப் போராட்டம் பல்வேறு இயக்கங்களால் முன்னெடுத்துச் செல்லப்பட்ட எண்பதுகளின் ஆரம்பப் பகுதியில் புதியதோர் உலகம் என்ற நாவல் கோவிந்தன் என்ற போராளியால் எழுதப்பட்டு சென்னையிலிருந்து வெளியிடப்பட்டது. வெளியீட்டாளர் விபரமோ, அச்சக விபரமோ இந்நூலில் குறிப்பிடப்படவில்லை. மே 1985 இல் 365 பக்கங்களில் முதற்பதிப்பு வெளிவந்தது. இரண்டாவது பதிப்பு, கோவை, விடியல் பதிப்பகத்தினால் உப்பிலிப்பாளையத்திலிருந்து ஏப்ரல் 1997இல் மாணவர் மறுதோன்றி அச்சகத்தில் அச்சிடப்பட்டு வெளிவந்தது. விடுதலைப் போராளியான இந்நூலாசிரியர் இந்நூலுக்கான முன்னுரையில் குறிப்பிட்ட சில வாசகங்கள் நூலின் உள்ளடக்கத்தை தெளிவாக்குகின்றது. “பெப்ரவரி 15, 1985 இல் நான் அங்கம் வகித்த தமிழீழ விடுதலை அமைப்பில் இருந்து வெளியேறிய தோழர்களுடன் நானும் சேர்ந்து கொண்டேன். நாம் வெளியேறிய பின்பு எம்மை அழிப்பதற்காகத் தேடிய அவர்களிடமிருந்து எம்மைப் பாதுகாத்துக் கொண்டு இரு மாதங்கள் தலைமறைவாக இருந்தோம். அக்காலத்திலேயே இந்நாவல் படைக்கப்பட்டது. இந்நாவல் தனியொரு மனிதனின் படைப்பல்ல. பல தோழர்களின் ஆலோசனைகள், ஒத்துழைப்புடன் உருவான கூட்டுப்படைப்பு. தமிழீழவிடுதலைப் போராட்டத்தில் ஒரு வருடகாலமாக நடைபெற்ற உண்மைச் சம்பவங்களிலிருந்தே இந்நாவல் உருப்பெற்றுள்ளது.” இந்நாவலைப் படைத்த கோவிந்தன் பின்னர் இனந்தெரியாதோரினால் கொல்லப்பட்டார்.
முறிந்த பனை என்ற மற்றொரு நூலும் ஈழப்போராட்டத்தின் பின்புலத்தில் நூலாசிரியரை படுகொலைக்குள்ளாக்கிய மற்றொரு நூலாகும். ராஜினி திரணகம, ராஜன் ஹ_ல், தயா சோமசுந்தரம், கே.ஸ்ரீதரன் ஆகிய நால்வர் இணைந்து இவ்வாவணத்தைத் தொகுத்திருந்தார்கள். யாழ்ப்பாணம், மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் என்ற அமைப்பு இந்நூலை ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளியிட்டிருந்தது. 1வது பதிப்பு, 1996 இல் வெளிவந்திருந்தது. 576 பக்கங்கள் கொண்டதாக புகைப்படங்கள் சகிதம் வெளியான இந்நூல் இரு பகுதிகளாக அமைந்திருந்தது. இந்நூலின் முதற்பாகம் 1987இல் இலங்கை இந்திய ஒப்பந்தமும் இந்தியப்படையின் வருகையும் நிகழ்ந்த காலகட்டத்தில் நின்று ஈழத்து இனப்பிரச்சினையின் ஒரு பரிமாணத்தை-ஈழத்தமிழர் போராட்டத்தின் வரலாற்றை வெளிக்கொண்டுவரும் நோக்கில் எழுதப்பட்ட ஆங்கில நூலின் தமிழாக்கமாகவும், இரண்டாம் பகுதி அக்காலகட்டத்தில் இந்தியப்படையினரின் தாக்குதல் பற்றிய பல்வேறு புலனாய்வு அறிக்கைகளும் ஆய்வுகளும் கொண்டதாகவும் அமைந்துள்ளது. The Broken Palmyrah என்ற தலைப்பில் இதன் மூல நூல் ஆங்கிலத்தில் வெளியான சிறிது காலத்தில் இந்நூலின் முக்கிய பங்காளியான ராஜினி திரணகம அவர்கள் யாழ்ப்பாணத்தில் இனந்தெரியாத இளைஞர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
எண்பதுகளில் வெளியான பல போராட்ட அறிவியல் நூல்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமே விளைநிலமாக இருந்துள்ளது என்றால் மிகையாகாது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மறுமலர்ச்சிக்கழகம் என்ற மாணவர் அமைப்பு பல சிறுநூல்களை வெளியிட்டு அரசியலறிவை மக்களிடையேயும் மாணவர்களிடையேயும் ஜனரஞ்சகமாகப் பரப்புவதில் தீவிரமாக ஈடுபட்டு வந்தது.
தான்பிரீன்-தொடரும் பயணம் என்ற நூல் ப.ராமஸ்வாமி என்ற புனைபெயரில் எழுதப்பெற்று மறுமலர்ச்சிக் கழகத்தினால் 1985இல் வெளியிடப்பட்டது. அயர்லாந்து விடுதலைப் போராட்டம் பிரித்தானிய ஆதிக்கத்தை எதிர்த்து 750 ஆண்டுகளாகத் தொடர்கின்றது. 1916-1948 காலப்பகுதியில் சிறப்பினைப்பெற்ற தலைவர்கள் ஆர்தர் கிரிபித், மைக்கல் கொலின்ஸ், டி வலெரா பொன்றோருக்கு இணையாகக் குறிப்பிடத்தகுந்த ஒரு போராளியான தான்பிரீன் அவர்களின் வீரம் செறிந்த போராட்ட வரலாறே இந்நூலாகும்.
தெலுங்கானா போராட்டம் என்ற மற்றொரு நூலும் மறுமலர்ச்சிக் கழகத்தின் முக்கிய நூலாகும். சுகந்தம் வெளியீடாக 1986இல் 60 பக்கம் கொண்டதாக வெளிவந்திருந்தது. இந்நூல் தெலுங்கானா ஹைதராபாத் சமஸ்தானத்தி;ன் ஒரு பகுதியாக இருந்த காலகட்டத்தில் (இன்று அது ஆந்திரப்பிரதேசத்தின் ஒரு பகுதியாகும்) நடைபெற்ற நிலவுடைமைக்கு எதிரானதோர் போராட்டத்தின் வரலாற்றை விளக்குவதாக அமைந்திருந்தது.
அரசியல் விழிப்புணர்வினை ஒரு நீண்டகாலப் போராட்டத்துக்குத் தயாராகும் ஈழத்தமிழ் மக்களுக்கு வழங்குவதென்பது மிக முக்கியமான போராட்ட முன்னெடுப்பாக அந்நாட்களில் கருதப்பட்டது. அரசியல், கொள்கை பரப்பு நூல்களாக பல நூல்கள் அவ்வேளையில் வெளியிடப்பட்டன. அரச பாதுகாப்புப்படையினரின் கழுகுக் கண்களிலிருந்து தப்பி, மலிவு விலையிலும், இலவச வெளியீடுகளாகவும் இவை மக்கள் மத்தியில் பரவலாக விநியோகிக்கப்பட்டன.
சோசலிசத் தமிழீழத்தை நோக்கி என்ற நூல் இவ்வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கை பரப்பு, வெளியீட்டுப் பிரிவினால் மாசி 1980இல் தமிழ்நாட்டிலிருந்து அச்சிட்டு விநியோகிக்கப்பட்டது. இரண்டு பகுதிகள் அடங்கியுள்ள இந்நூலின் முதலாம் பாகத்தில், சுயநிர்ணய உரிமையும், தனிநாட்டுக் கோரிக்கையும் என்ற தலைப்பில் இலங்கையின் மார்க்சியவாதிகளின் குழம்பிய நிலையும், சுயநிர்ணய உரிமையும் பிரிந்துசெல்லும் உரிமையும், தனிநாட்டுக் கோரிக்கையும் பாட்டாளிவர்க்க ஒருமைப்பாடும், விடுதலைப் புலிகளும் வர்க்கப் போராட்டமும், தனித்தமிழ் ஈழம் சாத்தியமாகுமா ஆகிய விடயங்கள் ஆய்வுக்குள்ளாகியுள்ளன. இரண்டாம் பாகத்தில், சிங்கள இளைஞரின் ஆயுதக் கிளர்ச்சி என்ற தலைப்பில் 1971 ஏப்ரலில் இடம்பெற்ற ஜனதா விமுக்தி பெரமுன என்ற துஏP இயக்கத்தின் போராட்டம் தோல்வியில் முடிந்தமை பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரசியலும் இராணுவமும் என்ற நூலும் இந்த வகையில் குறிப்பிடத்தகுந்ததாகும். ஆசிரியர் விபரம் இல்லாத இந்நூல் தீப்பொறி வெளியீடாக மார்கழி 1985.இல் வெளிவந்திருந்தது. தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் அரசியல்தன்மை, பொதுமக்கள், விடுதலை இயக்கங்கள் மத்தியிலுள்ள போராட்டம், இராணுவம் பற்றிய தவறான கருத்துக்களின் தன்மை, அவற்றால் விடுதலைப் போராட்டத்திலே ஏற்பட்டிருந்த மோசமான பின்னடைவுகள் போன்றவற்றை இச்சிறுநூல் ஆராய முற்படுகின்றது. தோழர் சந்ததியார் (வசந்தன்) நினைவு வெளியீடாக வெளியிடப்பட்ட தீப்பொறி வெளியீடு என்பதைத்தவிர வேறு எவ்வித பிரசுரத்தகவல்களும் அக்காலகட்டத்து அரசியல் நெருக்கடிகளின் காரணமாக நூலில் குறிப்பிடப்படவில்லை.
ஒன்றிணைந்து போராடுவோம் என்ற நூல் தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளியீட்டுப் பிரிவினால் மே 1985 இல் வெளியிடப்பட்டிருந்தது. இலங்கை அரசு, இஸ்ரவேலிய மொஸாட் அமைப்புடன் இணைந்து தமிழ்-முஸ்லீம் மக்களிடையே பெரும் மோதலைத் திட்டமிட்டு ஏற்படுத்தியது. அவ்வேளையில் இவ்விரு இனங்களுக்குமிடையே ஒற்றுமையைப் பேணும் வகையில் ஈழப் போரியல் வரலாற்றில் முக்கிய திருப்புமுனையானதொரு காலகட்டத்தில் இச்சிறுநூல் பிரசுரமானது.
சோசலிசத் தத்துவமும் கெரில்லா யுத்தமும் என்ற மற்றொரு நூலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரச்சார வெளியீட்டு வாரியத்தினால் வெளியிடப்பட்டிருந்தது. இதன் 2வது பதிப்பு, டிசம்பர் 1984இல் 92 பக்கங்களில் வெளியானது. செ.குவேரா எழுதிய “கெரில்லாப் போராட்டத்தின் சாராம்சம்”, ரெஜி டெப்ரே எழுதிய “புரட்சியில் புரட்சி” என்ற கட்டுரையின் சில பகுதிகள், மாவோ சே துங் எழுதிய “கெரில்லா போர்முறை”, அமில்கார் கப்ரால் எழுதிய “தேசிய விடுதலையும் சமூக புரட்சியும்”, “மக்கள் மத்தியில் கெரில்லாக்கள்” ஆகிய நான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய நூல் இதுவாகும். விடுதலைப் போராளிகளின் அரசியல் அறிவினை விருத்திசெய்யும் வகையில் இத்தகைய தேர்ந்த படைப்புகள் பல சிறுநூலுருவில் அக்காலத்தில் வெளிவந்தன.
தமிழ்த் தேசியமும் சமுதாயக் கொந்தளிப்பும். என்ற தலைப்பில் கா.சிவத்தம்பி அவர்களால் எழுதப்பட்ட கட்டுரையொன்று சென்னையிலிருந்து ஈரோஸ் ஆவணக்காப்பக வெளியீடாக பெப்ரவரி 1986இல் வெளியிடப்பட்டிருந்தது. 1986 ஜனவரி 2ம் திகதி முதல் 8ம் திகதிவரை, ||ஈழமுரசு|| நாளேட்டில் தொடர்கட்டுரையாக வெளிவந்த இவ்வுரை தொகுத்து வெளியிடப்பட்டுள்ளது. இது 31.12.1985இல் யாழ்ப்பாணம் புனித ஜோன்ஸ் கல்லூரி மண்டபத்தில் பேராசிரியர் ஆங்கிலத்தில் நிகழ்த்திய ||ஹண்டி பேரின்பநாயகம் நினைவுப் பேருரை||யின் தமிழாக்கமாகும்.
ஈழப்போராட்டத்தின் எழுச்சிக்கு கட்டியம்கூறும் வகையில் எம்மவரின் படைப்பிலக்கியங்களும் அந்நாளில் வீறுடன் எழுந்தன. அவை இன்றுவரை தொடர்ந்தவண்ணம் உள்ளன. தாயகத்தில் போரிலக்கியமாகப் படைக்கப்பட்ட பல கவிதை நூல்களை அடியொற்றிப் பின்னாளில் புலம்பெயர்ந்த தமிழர் மத்தியிலும் பரணிபாடுதலாக அது தொடரச் செய்தது.
மரணம் என்ற கவிதைத் தொகுதி செழியன் என்பவரால் படைக்கப்பெற்று சென்னை 94: சிவா பதிப்பகத்தினால் சூளைமேட்டில் அச்சிடப்பெற்று 40 பக்கங்களில் வெளியாகியிருந்தது. விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகால கட்டத்தில் வெளியான இந்த நூலின் முன்னுரையில் “தினமும் துப்பாக்கி வேட்டுக்களும் உயிரற்ற உடல்களும் எரிகின்ற மணமும் கொண்ட தேசத்திலே நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அழகிய அந்திக் காட்சிகளை, பௌர்ணமி நிலாவைப்பற்றி எண்ணி எங்களால் எழுத முடியவில்லை. சிறையிடப்பட்ட எங்கள் இரவுகளை, அதிகாலைப் பொழுதுகளை, முட்களை ஏந்தும் பூக்களைப் பற்றியே எழுதமுடிகிறது.” என்று குறிப்பிட்டிருந்தார். இதுவே ஈழத்தவரின் போர்க்கால கவிதை இலக்கியங்களின் அடிநாதமாக அமைந்திருந்தது.
ஆளற்ற தனித்த தீவுகளில் நிலவு, ஈரமற்ற மழை என்ற தொகுப்பு செழியனின் மற்றொரு பிற்காலப் படைப்பாகும். கொழும்பு மூன்றாவது மனிதன் வெளியீடாக, ஆகஸ்ட் 2002 இல் இது வெளிவந்திருந்தது. தேசிய விடுதலைப்போராட்ட இலக்கியத்தில் முன்னோடியானவையாகவும் பல தளங்களில் முதன்மையானவையாகவும் அமைந்த கவிதைகளில் செழியனின் கவிதைகளும் அடங்கும். அனுபவத்தின் ஆழம், உணர்வின் செறிவு, கடப்பாட்டின் தீவிரம் என்பன அவரது கவிதைகளின் அடிநாதமாக அமைந்துள்ளன.
மரணத்துள் வாழ்வோம் என்ற பெயரில் உ.சேரன், அ.யேசுராசா, இ.பத்மநாப ஐயர், மயிலங்கூடலூர் பி.நடராஜன் ஆகிய நால்வரும் தொகுத்து ஒரு போரியல் கவிதைத் தொகுதியை வெளியிட்டிருந்தார்கள். முதலில் யாழ்ப்பாணம் தமிழியல் வெளியீடாக 1985 இலும் பின்னர் கோவை விடியல் பதிப்பகத்தின் வாயிலாக உப்பிலிபாளையத்திலிருந்து 2வது பதிப்பாக டிசம்பர் 1996 இலும் இந்த நூல் 170 பக்கங்களில் வெளிவந்திருந்தது. ஈழத்தின் 31 இளம் கவிஞர்களின் 82 கவிதைகளின் தொகுப்பு இதுவாகும். சமகால ஈழத்து இனப் பிரச்சினையைப் பகைப்புலமாகக் கொண்ட இக் கவிதைத் தொகுப்பில் மூன்று பெண் கவிஞர்களின் பெண்நிலைப்பட்ட அநுபவங்கள் உயிர்த்துடிப்புடன் வந்துள்ளமையும் சிறப்பம்சமாகும்.
இந்நூலின் தொகுப்பாளர்களில் ஒருவரான உருத்திரமூர்த்தி சேரன், ஈழத்தின் புகழ்பூத்த முன்னோடிக் கவிஞரான “மஹாகவி” (அமரர் து.உருத்திரமூர்த்தி) அவர்களின் மகனாவார். சேரன் ஈழத்தின் போர்க்கால படைப்பாளிகளுள் குறிப்பிடத்தகுந்தவர். இரண்டாவது சூரிய உதயம் என்ற சேரனின் முதலாவது கவிதைத் தொகுப்பு சென்னை பொதுமை வெளியீடாக ஜுன் 1983 இல் வெளிவந்தது. சேரனின் மூன்று நெடுங்கவிதைகளும் ஏழு சிறுகவிதைகளும் ஒரு பாடலும் இத்தொகுப்பில் இடம்பெற்றிருந்தன. 1978-82 காலப்பகுதியில் சிங்களப் பேரினவாதத்தால் தொடர்ந்து அவமதிக்கப்பட்டு வரும் சிறுபான்மையினத்தவர்களின் உண்மையான-வாழ்ந்து பெற்ற-அனுபவம் இக்கவிதைகளில் சிறப்பாக வெளிக்காட்டப்பட்டிருந்தது. யமன் என்ற இவரது மற்றொரு கவிதைத் தொகுப்பு, இவரது சொந்தமண்ணான அளவெட்டியிலிருந்து படைப்பாளிகள் வட்டம் வெளியீடாக 1984 இல் யாழ்ப்பாணம் புனிதவளன் கத்தோலிக்க அச்சகத்தில் அச்சிடப்பட்டு வெளியாகியது. இக்கவிதைத் தொகுதியில் இடம்பெற்றுள்ள கவிதைகள் அனைத்தும் ஜுலை 1983க்குப் பிறகு எழுதப்பட்டவை. ஈழத்தமிழரின் பல்வேறு இன்னல்களை உணர்வுகலந்து சொல்லிச் செல்பவை. கானல் வரி என்ற இவரது கவிதைத் தொகுப்பும் சென்னை, பொன்னி வெளியீடாக சென்னை இராசகிளி பிரின்டர்ஸ் வாயிலாக அச்சிடப்பெற்றிருந்தது. 1975 முதல் 1981 வரையிலான காலப்பகுதியில் சேரன் எழுதிய கவிதைகளில் தேர்ந்தெடுத்த 28 கவிதைகளின் தொகுப்பு இதுவாகும். பின்னாளில் இவர் புலம்பெயர்ந்து கனடாவில் புலம்பெயர்ந்து வாழத் தொடங்கிய பின்னர் எலும்புக்கூடுகளின் ஊர்வலம் என்ற கவிதைத் தொகுப்பினை கனடா, தேடல் பதிப்பகத்தின் வாயிலாக வெளியிட்டிருந்தார். தாயக தேசத்தின் அன்றாட வாழ்வில் ஏற்பட்ட அவலங்களையும் அலங்கோல அரசியலையும் தாளலயங்;களைக் கடந்து வரலாறு ஆக்கும் முயற்சியாக எலும்புக்கூடுகளின் ஊர்வலம் அமைந்திருந்தது. காலம் காலமாக நின்று எமது துயரங்களையும் சொல்லில் மாளாத இழப்புக்களையும் மரணத்துள் வாழ்ந்த கதைகளையும் சொல்லி உலகின் மனச்சாட்சியை அதிரவைத்துக் கொண்டிருக்கும் கவிதைகள் இவை. இதைத் தொடர்ந்து நீ இப்பொழுது இறங்கும் ஆறு என்ற தலைப்பில் சேரனின் 100 கவிதைகளைக் கொண்ட தொகுப்பொன்று ஓகஸ்ட் 2000 இலும் மீண்டும் கடலுக்கு என்ற தலைப்பில் மற்றொரு கவிதைத் தொகுப்பு டிசம்பர் 2004 இலும் வெளியாகியிருந்தன. அவருடைய கவிதைகள் அன்றைய காலத்துச் சமூக அசைவியக்கத்தின் பதிவுகளாக மட்டுமல்லாமல் சமூக விமர்சனமாகவும் அமைவதுதான் அவற்றின் சிறப்பு. ஈழப் போராட்டத்தின் ஆரம்பகால அனுபவங்களை, தமிழ்ச் சமூகம் எதிர்கொண்ட நெருக்கடிகளை, ஒடுக்குமுறைகளை, சேரன் கவிதைகளாகத் தந்தபோது அது போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் இலக்கியமாயிற்று. மறுபுறத்தில் சமூக விமர்சனமாகவும் அது விரிந்தபோது, சமூகம் சார்ந்த பல அரசியல், அறவியல், சமூகவியல் விவாதங்களுக்கு இட்டுச்சென்றது. அந்த வகையில் கவிதையின் இன்னுமொரு முக்கியமான பரிமாணத்தை அவருடைய கவிதைகள் வெளிப்படுத்துகின்றன. கனடா யோர்க் பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்று அங்கு பேராசிரியராகப் பணிபுரியும் சேரனின் கவிதைத் துறைப் பங்களிப்பு ஈழத்தின் போரியல் இலக்கியத்தின் வரலாற்றுப் பதிவாகின்றது.
சேரனைப் போன்றே ஈழத்தின் போர்க்கால இலக்கியத்துக்குச் செழுமை சேர்த்த மற்றொரு படைப்பாளி, கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் என்பவராவார். தற்போது புவம்பெயர்ந்த நோர்வேயில் வாழும் இவரது ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும் என்ற கவிதைத் தொகுதி சென்னை காந்தளகத்தின் வாயிலாக 1986இல் வெளிவந்தது. இச்சிறு காவியம் ஈழ விடுதலைப் போராட்டத்தின் கோரத்தையும் கொடுமையையும் மட்டுமல்லாது தீரத்தையும் தியாகத்தையும் சித்திரிக்கின்றது. இதே ஆண்டு சூரியனோடு பேசுதல் என்ற மற்றொரு தொகுதியை வ.ஐ.ச.ஜெயபாலன் அவர்கள் கோவை, யாழ். பதிப்பகத்தின வாயிலாக பெப்ரவரி 1986 இல் வெளியிட்டார். இதன் இரண்டாவது பதிப்பு ஜுலை 1987 இல் மைலாப்பூர் மிதிலா அச்சகத்தினால் வெளியிடப்பட்டது. இந்நூலுக்கான வெளியீட்டுரையில் துரை மடங்கன் அவர்கள் “போர்க்களமாய் மாறிப்போன ஈழமண்ணிலிருந்து முகிழ்த்த இவரது இலக்கியங்கள் மக்களின் வாழ்க்கையைப் பலப்பல பரிமாணங்களுடன் புலனாக்குவதால் இவற்றை மக்களுக்கு வழங்குவதும் கூடப் போராட்டத்துக்குப் புரியும் உதவியே” என்று குறிப்பிட்டிருந்தார்.
நமக்கென்றொரு புல்வெளி என்ற கவிதைத் தொகுதியையும் இவர் சென்னை, க்ரியா வெளியீடாக மார்ச் 1987இல் வெளியிட்டிருந்தார். ஒரு அகதியின் பாடல் என்ற கவிதைத் தொகுதியில் வ.ஐ.ச.ஜெயபாலன் தான் வாழுகின்ற காலத்தின் நெருக்கடியைப் பல்வேறு தளங்களில் அனுபவித்துக் கவிதையாக்கியிருந்தார். அவை போரிலக்கியத்தில் ஒரு அகதியின் குரலாகத் துயரங்களைச் சொல்லி நிற்கின்றது. கனடா: தேடல் பதிப்பகம், ரொரன்ரோவிலிருந்து மார்ச் 1991 இல் இந்நூலை வெளியிட்டிருந்தது. வ.ஐ.ச. ஜெயபாலனின் கவிதைகளின் பெரும்பாலானவற்றைத் தொகுத்து 320 பக்கங்களில் வ.ஐ.ச.ஜெயபாலனின் கவிதைகள்: பெருந்தொகை என்ற பெயரில் சென்னை ஸ்நேகா வெளியீட்டகம் ஒரு பாரிய தொகுதியை ஏப்ரல் 2002இல் வெளியிட்டிருக்கின்றது. நேரடித்தன்மையும் உள்ளுறை உவமமும் ஒருசேரவாய்க்கப்பெற்ற எளிமையான, எனினும் செறிவான மொழிவளம் கொண்ட வ.ஐ.ச. ஜெயபாலனின் கவிதைகளின் பெருந்தொகுப்பு இதுவாகும். ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும் என்ற இவரது குறுங்காவியம் உள்ளிட்ட பெரும்பான்மையான கவிதைகள் இதில் அடங்கியுள்ளன. ஈழத்தமிழரின் போரியல் வாழ்வின் கணிசமான காலப்பகுதியின் குறுக்குவெட்டுமுகத்தை இக்கவிதைகளில் தரிசிக்க முடிகின்றது.
ஈழத்து போரியல் கவிதை இலக்கியத்தில் காசி ஆனந்தனின் பணி குறிப்பிடத்தகுந்ததாகும். அவரின் பாதிப்பில் இன்றும் பல இளங்கவிஞர்கள் எழுச்சிக் கவிதைகளைப் பாடி வருகின்றார்கள். காசி ஆனந்தனின் ஆரம்பகாலக் கவிதாவரிகள் இன்றைய பல கவிதைகளில் பொது வாசகங்களாக எடுத்தாளப்பட்டுள்ளன. ஈழப்போராட்டத்தின் இலக்கியத் தடத்தை இன்று வழிநடத்திச் செல்பவராக புதுவை இரத்தினதுரை இனங்காணப்படுகின்றார்.
இரத்த புஷ்பங்கள் என்ற கவிதைத் தொகுப்பு புதுவை இரத்தினதுரை அவர்கள் ஆரம்ப காலங்களில் எழுதி கண்டி கலைஞர் பதிப்பகத்தின் வாயிலாக மார்ச் 1980 இல் வெளியிட்ட கவிதைத் தொகுதியாகும். வானம் சிவக்கிறது, ஒரு தோழனின் காதல் கடிதம் என்ற இரு கவிதைத் தொகுதிகளை ஏற்கெனவே தந்த புதுவை இரத்தினதுரையின் மூன்றாவது நூலாக வெளிவந்த 27 கவிதைகளைக்கொண்ட தொகுப்;பு இதுவாகும்.
பூவரசம் வேலியும் புலுனிக் குஞ்சுகளும் என்ற புதுவை இரத்தினதுரையின் கவிதைத் தொகுப்பு யாழ்ப்பாணம் நங்கூரம் வெளியீடாக அண்மையில் வெளிவந்துள்ளது. பங்குனி 2005இல் 432 பக்கங்களுடன் வெளியான இத்தொகுப்பில், வெளிச்சம் இதழில் கார்த்திகை 1993இல் வெளிவந்த “தூரப் பறந்துவிட்ட துணிவுப் பறவைகளே” என்ற கவிதையில் தொடங்கி, வெளிச்சம் சஞ்சிகையின் மாசி 2005இல் வெளியான “இருந்ததும் இல்லையென்றானதும்” என்ற கவிதை வரை 12 ஆண்டுகளில் கவிஞர் புதுவை இயற்றிய மொத்தம் 155 கவிதைகள் இடம் பிடித்திருக்கின்றன. இந்நூலையும் நூலாசிரியரையும், நூலாசிரியரின் கவித்துவ வளர்ச்சிப்படிநிலைகளையும் கவிஞரின் இலக்கிய வரலாற்றினையும் ஆழமாக அறிமுகம் செய்வதாக அமைந்த பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களின் 28 பக்கங்கள் கொண்ட விரிவான விமர்சனக் கட்டுரை, இந்நூலுக்கு நுழைவாயிலாக அமைந்துள்ளது.
வியாசனின் உலைக்களம் புதுவை இரத்தினதுரை அவர்களின் மற்றொரு பரிமாணத்தை வித்தியாசமான ஈழத்துப் போராட்டக்கால இலக்கிய வடிவத்தில் தரிசிக்க வைக்கின்றது. தாயகத்திலிருந்து தமிழ்த்தாய் வெளியீடாக ஜுலை 2003இல் கிளிநொச்சி நிலா பதிப்பகத்தின் வாயிலாக 256 பக்கங்களுடன் இந்நூல் வெளிவந்துள்ளது. கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் வியாசன் என்ற புனைபெயரில் ||விடுதலைப்புலிகள்|| அதிகாரபூர்வ ஏட்டில் எழுதிய கவிதைகளின் தொகுப்பு இந்நூல். போரியலையும் அது சார்ந்திருக்கும் அரசியலின் ஆழப்பாடுகளையும் சுழியோடி, நுகர்ந்து, மென்று விழுங்கி, அதை அக்கு வேறு ஆணி வேறாகத் தனது பேனாமுனையால் உலைக்களத்தின் மூலம் வெளிக்கொண்டுவரும் முயற்சியாக இது அமைந்துள்ளது. விடுதலைப்புலிகள் ஏட்டில் இக்கவிதைகள் வெளியான போது, விடுதலைப் போரின் அந்தந்தக் காலங்களிலான சமூக அரசியல் நிலைமைகளையும் ஒரு கவிஞனின் அதன் மீதான பார்வையையும் தரிசிக்க வைப்பதாக அமைந்திருந்தன. காலத்தின் பிரதிபிம்பமாக இக்கவிதைகள் விளங்குகின்றன.
ஈழத்தின் கவிதை இலக்கியத்துறையில் நினைவுகொள்ளத்தக்க மற்றொரு கவிஞர் கி.பி.அரவிந்தன் ஆவார். புலம்பெயர்ந்து பிரான்ஸ் தேசத்தில் தற்போது வாழ்கின்ற இவர் ஈழப் போhட்டத்தில் விடுதலைப் போராளியாக இருந்தவர். இவரது படைப்புக்களில் ஈழவிடுதலைப் போராட்டமும், ஈழத்தமிழரின் புகலிட வாழ்வியலும் முனைப்புடன் காணப்படுகின்றன. முத்தான மூன்று படைப்புக்களை தமிழகத்திலிருந்து வெளியீடு செய்தவர் இவர்.
இனி ஒரு வைகறை கி.பி.அரவிந்தன் எழுதிய முதலாவது கவிதைத் தொகுப்பாகும். சென்னை அடையாறிலிருந்து பொன்னி வெளியீடாக மார்ச் 1991இல் சென்னை இராசகிளி அச்சகத்தில் அச்சிடப்பட்டு வெளியானது. தனது முகவுரையில் இவர் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றார். “இவை எனது குறிப்பேடுகளிலிருந்து பெயர்த்தெடுக்கப்பட்டவை. எழுத்துக்களினாலான இவ்வுணர்வுகள் கவிதைகளாயிருப்பின் போராளியாயிருந்த ஒருவன் கவிஞனாகின்றான்”. முகம்கொள் கி.பி.அரவிந்தனின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு. சென்னை கீதாஞ்சலி வெளியீடாக, நவம்பர் 1992 இல் இந்நூல் வெளிவந்தது. இத் தொகுதியிலுள்ள கவிதைகள் மூன்று வகை அனுபவங்களை உள்ளடக்கியவை. யாழ்ப்பாணத்து அனுபவங்கள், தமிழகத்தில் வாழ்ந்த இடைக்காலத்தனுபவங்கள், அகதி வாழ்வின் பாதிப்புக்கள். இக்கவிதைகள் வரலாற்று அனுபவங்களில் தோய்ந்து எழுந்தவை மட்டுமல்ல, அவ்வனுபவங்கள் அலாதியான ஒரு கற்பனைத் திறத்தால் பளிங்கு போன்றதொரு தெளிவான மொழியால் சீரமைக்கப்பட்டு பண்படுத்தப்பட்டு கவிதைகளாக வார்த்தெடுக்கப்பட்டுள்ளன. கனவின் மீதி. இவரது மூன்றாவது கவிதைத் தொகுதியாகும். சென்னை, மடிப்பாக்கம் பொன்னி வெளியீடாக ஆகஸ்ட் 1999 இல் இந்நூல் வெளிவந்தது. “ஒரு நாட்டில் வாழுகின்ற ஓர் இனத்திலுள்ள அகதியின் அவலத்தை இனத்தின் அவலமாக, நாட்டின் அவலமாக, உலகின் அவலமாகக் காட்டுகின்ற திறமை அரவிந்தனுக்கு கைவந்துள்ளதென்றே கருதுகின்றேன்” என்று இந்நூலுக்கான முன்னுரையில் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் குறிப்பிட்டுள்ளார். இத்தொகுப்பில் 31 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. புலம்பெயர்வாழ்வின் நெருக்கடிகள் பற்றி இவை பேசுகின்றன.
ஈழத்தின் போரியல் வரலாற்றுக் காலகட்டத்தில் வெளியான அனைத்துக் கவிதைகளும் போராட்டம் சார்ந்தவையல்ல. போராட்டத்தின் வலிகள், போராளிகளின் வீரதீரங்கள், உடன்பிறப்புக்களின் இழப்புக்கள், வன்மங்கள், உடைமைகளின் அழிப்புக்கள், இடப்பெயர்வின் அவலங்கள், புலம்பெயர்ந்து சென்ற உறவுகளின் பிரிவுத் துயர், மானிடத்தையும் பெண்மையையும் இழிவுபடுத்தும் சித்திரவதை நுணுக்கங்கள் என ஒரு போராட்ட வாழ்வின் பல்வேறு பக்கங்களையும் போரியல் இலக்கியங்கள் தொட்டுச் செல்கின்றன. ஈழத்தமிழரின் தனித்துவமான இலக்கியமாக உலகளாவிய தமிழ் இலக்கியப் படைப்புக்களில், நின்று நிலைத்திருக்கப்போகும் வலிமைபெற்ற போரியல் இலக்;கியத்துக்குக் கதியால் போட்டு நீரூற்றி வளர்த்த ஈழத்துக் கவிஞர்கள் அனைவரையும் இச்சிறு கட்டுரைக்குள் அடக்குவது என்பது இயலாத காரியமாகும். அங்கொன்றும் இங்கொன்றுமாக மாதிரிக்கு ஒன்றாகவே இப்படைப்பாளிகளை உதாரணமாக இங்கு காட்டக்கூடியதாக உள்ளது. அந்த வகையில் குறிப்பிடத்தகுந்த மேலும் சில படைப்புக்களை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
அந்த விடியலுக்கு என்ற கவிதைத் தொகுப்பினை க.இளங்கோ. சென்னை சூளைமேட்டிலிருந்து சிவா பதிப்பகத்தின் வாயிலாக 1985இல் வெளியிட்டிருந்தார். “தான் பார்த்து-தான் ரசித்து-தான் வெதும்பி-தான் பாடிய சுதந்திர கீதங்கள் ஈழப்போர்முனைக்கு இசையமைக்க வருகின்றது. மக்களே! மக்களே!! என்பதே இந்தக் கவிதைக்குப் பின்னால் கேட்கும் மிருதங்கம். எழுக! எழுக! என்பதே இந்தக் கவிதையோடு இயல்பாகப் பின்னப்பட்ட வயலின் இசை.|| என்று முல்லையூரான் அவர்கள் இந்நூலுக்கான முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மண்ணும் எங்கள் நாட்களும் என்ற கவிதைத் தொகுதி யாழ்ப்பாணம்: தர்க்கீகம் வெளியீடாக வைகாசி 1982இல் வெளிவந்தது. ஈழத்தின் முன்னணிக் கவிஞர்களான குறிஞ்சித்தென்னவன், மு.புஷ்பராஜன், வ.ஐ.ச.ஜெயபாலன், சாருமதி, க.ஆதவன், எம்.ஏ.நுஃமான், ஹம்சத்வனி, கவியரசன், புசல்லாவை குறிஞ்சிவளவன், சு.வில்வரத்தினம், சுந்தரன், அ.யேசுராசா, அரு.சிவானந்தன், யோகராணி, ரவீந்திரன், ஆகிய ஈழத்துக் கவிஞர்களின் விடுதலைக்கவிதைகளின் தொகுப்பாக இது அமைந்திருந்தது.
இந்த மழை ஓயாதோ? என்ற கவிதைத் தொகுப்பு கனகரவி (இயற்பெயர்: கனகரத்தினம் இரவீந்திரன்) அவர்களால் வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்ட வெளியீடாக 2001இல் வெளிவந்திருந்தது. சமகால மக்களின் அவலங்களும் அலட்சியங்களும் கவிதைகளாகப் பதிவு செய்யப்படுவது எதிர்கால சந்ததியினருக்கு அவசியமான ஒன்று என்ற அடிப்படையில் இக்கவிதைத் தொகுதி முக்கியத்துவம் பெறுகின்றது. இடப்பெயர்வு, மீள்குடியேற்றம், நாடுவிட்டு ஓடுவோர், குண்டு போடும் அரசு, துப்பாக்கி ஏந்தியோரின் அநியாயச் செயல்கள், மண்ணோடு போராடும் மனிதர்கள், அமைதி விருப்பம், சிறையினில் வாடுவோர் துயரம், பிந்துனுவௌ முகாம் அழிப்பு, காணாமல் போனவர்கள் என்று பல்வேறு சமகால ஈழத்துப் போராட்ட வாழ்வியலை இக்கவிதைகள் படம்பிடிக்கின்றன. ஊடகவியலாளரான கவிஞரின் பாடுபொருள் பரந்துபட்டதாக உள்ளது இத்தொகுதிக்கான சிறப்பம்சமாகும்.
இலக்குத் தெரிகிறது என்ற தொகுதி தூயவன் என்ற விடுதலைப் போராளியின் படைப்பாகும். (இயற்பெயர்: சு.தனேஸ்குமார்). தமிழீழ விடுதலைப்புலிகளின் வெளியீட்டுப்பிரிவு இத்தொகுப்பினை சித்திரை 1993இல் வெளியிட்டிருந்தது. கவிஞர் தூயவன், ஈழவிடுதலைப்போரில் களத்தில் நின்று போராடும் ஒரு போராளி. விடுதலையை அவாவி நிற்பவர். வாழ்வில் மற்றவரின் கண்களுக்குப் புலப்படாத பக்கங்கள் இவரின் பார்வைக்குக் கிட்டுகின்றன. அவை இங்கு கவிதைகளில் பதிவுக்குள்ளாகியுள்ளன.
அக்கரைக்குப் போன அம்மாவுக்கு என்ற தொகுதி ஹம்சத்வனி என்ற முக்கியமான படைப்பாளியின் கவிதைத் தொகுப்பாகும். சென்னை: தமிழியல் வெளியீடாக ஓகஸ்ட் 1985 இல் இது வெளிவந்தது. நூலாசிரியரின் முன்னுரையில் குறிப்பிடும் வாசகங்களே இந்நூலுக்கான விளக்கத்தைத் தருகின்றது. “தமிழ் ஈழத்தின் மிகப்பயங்கரமான கணங்கள் என்னுள்ளே ஏற்படுத்திய ஆழமான அதிர்வின் பிரதிபலிப்புக்களே எனது கவிதைகள். எனது கிராமங்களும் வீதிகளும் பச்சை வயல்வெளிகளும் ஒரு நாள் சிறைமீட்கப்படும். அந்த மீட்சிக்கு ஒரு உரமாக எனது கவிதைகள் அமையுமாயின் நான் மகிழ்வேன்” என்று தன் ஆதங்கத்தை இந்நூலில் கவிஞர் ஹம்சத்வனி வெளிப்படுத்தியுள்ளார். 1980-1985 ஆண்டுகளுக்கிடைப்பட்ட ஈழத்தமிழரின் துயர்மிகு அவல வாழ்வை இக்கவிதைகள் பதிவு செய்கின்றன.
அனுபவ வலிகள் என்ற தொகுதி இரணையூர் பாலசுதர்சினி அவர்களால் வவுனியா: விண்மணி வெளியீட்டகத்தினூடாக வெளியிடப்பெற்ற கவிதைத் தொகுப்பாகும். இதன் 1வது பதிப்பு, 2004இல் வெளியிடப்பட்டது. வன்னி மண்ணின் இரணையூரிலிருந்து புறப்பட்ட பெண் எழுத்தாளரான பாலசுதர்சனியின் கவிதைகள் இவை. மண் பற்றியும், மனிதர்கள் பற்றியும் இவை பேசுகின்றன. சமாதான சாபங்கள், எழு பெண்ணாய், வெற்றி நிச்சயம், சுதந்திர ஒளி, சீதனம், அகதியாய் எனப் பல்வேறுபட்ட விடயங்களினூடாக பெண்களின் முடக்கி வைக்கப்பட்ட அனுபவ வலிகளைத் தன் கவிதைவரிகளினூடாக வெளிக் கொண்டுவரும் கவிதைத் தொகுதி இது. போரியல் வாழ்வில் ஈழப்பெண்களின் பார்வை இக்கவிதைகளில் முனைப்புப்பெற்றுள்ளன.
ஆனையிறவு என்ற தொகுப்பு 42 கவிஞர்களின் கவிதைகளைக் கொண்டது. வவுனியாவிலிருந்து வெளிச்சம் வெளியீடாக, தமிழீழ விடுதலைப்புலிகளின் பண்பாட்டுக் கழகம், நடுவப்பணியகம், ஜுன் 2000 இல் இத்தொகுப்பினை வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட ஆனையிறவு இராணுவ முகாம் ஆக்கிரமிப்பு வெற்றியைக் களத்திலேயே நின்று தரிசித்த பாட்டுத் திறத்தோர் எழுதிய கவிதைகள் இவை. ஆனையிறவு மீட்புச் சமர்களில் இதுவரை வீரமரணமடைந்த மாவீரர்களுக்;குக் காணிக்கையாக இக் கவிதைத் தொகுதி வெளிவந்தது.
செம்மணி. என்ற தலைப்பில் வெளியான நூலி;ல் 24 கவிஞர்களின் கவிதைகள் இடம்பெற்றிருந்தன. வெளிச்சம் வெளியீடாக தமிழீழ விடுதலைப் புலிகளின் பண்பாட்டுக் கழகத்தின் நடுவப் பணியகம், செப்டெம்பர் 1998இல் இத்தொகுப்பை வெளியிட்டது. யாழ்ப்பாணத்தில் இராணுவ முற்றுகையின் போது கடத்திச் செல்லப்பட்டு காணாமற் போனோராக்கப்பட்டு வதையின் பின் புதைக்கப்பட்ட எம் உறவுகளுக்கான கவிதைகள் இவை. 1995இல் ரிவிரச என்ற யாழ்ப்பாண ஆக்கிரமிப்புப் போரின்பின், தென்மராட்சியிலும்; வடமராட்சியிலும் தஞ்சமடைந்த தமிழ்மக்களை மீண்டும் ஒரு இராணுவ நடவடிக்கைமூலம் சிறைப்படுத்திச் சொந்த இடங்களுக்கு அழைத்துச் சென்றது. அக்காலகட்டத்தில்; சிங்கள இராணுவம் அவர்களை யாருங்காணாமற் பிடித்துச்சென்று படுகொலைசெய்து செம்மணியிற் புதைத்த வஞ்சகச்செயலை அம்பலப்படுத்தும் பதிவுகளாக இவை அமைகின்றன. செம்மணிப் புதைகுழிகள் எம்மக்களிடையே ஏற்படுத்திய கொதிப்புணர்வின் அடையாளமாகவே இக்கவிதைகள் அமைகின்றன.
சிறுகதை, நாவல் இலக்கியத் துறையில் போரியல் பதிவுகள் ஏராளமாக ஈழத்தமிழர்களால் மேற்கொள்ளப்படுகின்றன. 1980களிலிருந்து ஈழத்தில் வெளியாகும் சிறுகதைகளில் இதன் பாதிப்பு பெரிதளவில் இருப்பதை அவதானிக்கலாம். குறிப்பாக வன்னி மண்ணிலிருந்து வெளியாகும் படைப்பிலக்கியங்கள் அனைத்திலும் இதன் பாதிப்பு துலக்கமாகத் தெரிகின்றது.
வாசல் ஒவ்வொன்றும் என்ற பெயரில் புதுவை இரத்தினதுரை அவர்கள் கருணாகரன் என்பவருடன் இணைந்து சிறுகதைத் தொகுதியொன்றினையும் வெளியிட்டிருந்தார். கோயம்புத்தூர் விடியல் பதிப்பகம், இந்நூலை டிசம்பர் 2001இல் 160 பக்கங்களில் வெளியிட்டிருந்தது. தமிழீழ விடுதலைப்புலிகளின் கலை பண்பாட்டுக் கழகத்தின் இலக்கிய இதழான வெளிச்சம் சஞ்சிகையில் வெளிவந்த பத்தொன்பது படைப்பாளிகளின் 19 சிறுகதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இவ்வகையில் இது இரண்டாவது தொகுப்பாகவும் அமைகின்றது. இரு தசாப்தங்களைத் தாண்டி நடந்துகொண்டிருக்கும் யுத்தசூழலின் அவலங்கள், அது மனித வாழ்விலும், மனிதவிழுமியங்களிலும் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள், நம்பிக்கை, தோல்வி, வெறுப்பு, கோபம் உள்ளிட்ட மனித உணர்வுகளின் ஆதிக்கம், அவற்றில் தொழிற்படும் தன்மை என்பன பற்றிய இயல்பான வெளிப்பாடுகளாக அமைந்துள்ள கதைகள் இவை.
வெளிச்சம் சிறுகதைகள் 1. என்ற பெயரில் வெளிச்சம் ஆசிரியர் குழுவினரால் தொகுக்கப்பட்ட சிறுகதைத் தொகுப்பு நல்லதொரு உதாரணமாகின்றது. விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுக் கழகம் இத்தொகுப்பினை மேற்கொண்டிருந்தது. மார்ச் 1996 இல் வெளியான இந்நூலில் வெளிச்சம் சஞ்சிகையில் வெளிவந்த தேர்ந்த சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. இதில் 15 சிறுகதைகள் உள்ளன. தாயக விடுதலைப் போரின் பல்வேறு பரிணாமங்கள், இலக்கிய வடிவில் பிரதிபலிக்கின்றன. சிங்கள பௌத்த பேரினவாதத்துக்கு எதிரான போராட்டத்தின் அரசியல் எழுச்சியையும், மன உணர்வுகளையும் போராட்டக் கால அனுபவங்களையும் இக்கதைகள் பேசுகின்றன.
அதிர்ச்சி நோய் எமக்கல்ல என்ற உருவகக் கதைத் தொகுதி நாக.பத்மநாதன் அவர்களால் யாழ்ப்பாணம்: தமிழ்த்தாய் வெளியீடாக புரட்டாதி 1993இல் வெளிவந்திருந்தது. மண்பற்றும், இன விடுதலையும்-இதற்கான தியாகங்களும் அலை வீசி நிற்கும் 34 உருவகக் கதைகளின் தொகுப்பு இதுவாகும்.
அம்மாளைக் கும்பிடுறானுகள் சிறுகதைத் தொகுதி, இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக்கால உண்மைக் கதைகளைக் கொண்டது. தமிழீழ விடுதலைப்புலிகளின் வெளியீட்டுப் பிரிவு ஓகஸ்ட் 1994இல் முதற் பதிப்பையும், ஆகஸ்ட் 1997இல் 2வது பதிப்பையும் மேற்கொண்டிருந்தது. இந்திய அமைதிப்படையின் ஆக்கிரமிப்புக் காலகட்ட வாழ்க்கையையும், அந்த வாழ்க்கையின் அவலங்களையும் சோகங்களையும் சித்திரிக்கும் படைப்புக்களாக 14 கதைகளும் ஸ்ரீலங்கா இராணுவத்தின் கொடூரத்தினைச் சித்திரிப்பதாக ஒரு கதையும் இத்தொகுதியில் அமைகின்றன. இத்தொகுப்பின் இரண்டாவது பாகமாக வில்லுக்குளத்துப் பறவைகள் என்ற தலைப்பில் மேலும் பல உண்மைக் கதைகளைக் கொண்ட மற்றொரு தொகுப்பு தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியீட்டுப் பிரிவினால், ஆடி 1995இல் வெளியிடப்பட்டது. இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்புக் காலகட்டத்தின் உண்மை நிகழ்வுகள் கதைவடிவில் தொகுக்கப்பட்ட இரண்டாம் பகுதியாக இந்நூல் அமைகின்றது. 17 உண்மைக் கதைகளைக் கொண்ட இத்தொகுதியில் இந்திய அமைதிப்படையின் வேட்டைக்குப் பலியான அப்பாவித் தமிழ் மக்களின் கதைகள், போராட்டத்தில் தம்மைப் பலியாக்கிய மக்களின் கதைகள், போராளிகளை நேசித்து அவர்களைக் காப்பாற்றத் துணிவுடனும் சாதுரியத்துடனும் செயற்பட்;ட மக்களின் கதைகள் எனப் பலவாறாகப் பதிவுபெறுகின்றன.
ஈழத்தின் போர்க்கால இலக்கியத்தில் தாமரைச் செல்வியின் (ரதிதேவி கந்தசாமி) பங்களிப்பு குறிப்பிடத்தகுந்தது. அழுவதற்கு நேரமில்லை என்ற இவரது சிறுகதைத் தொகுதி, பரந்தன் சுப்ரம் பிரசுராலய வெளியீடாக டிசம்பர் 2002இல் வெளியானது. ஒரு சிறுகதை தவிர மற்றைய 11 கதைகளும் இடப்பெயர்வின் பின்வந்த நாட்களில் எழுதப்பட்டவை. 1995இல் ஏற்பட்ட வடபுலப்பெயர்ச்சி-வன்னிக்கான யாழ்ப்பாணப் புலப்பெயர்வு மிகப்பெரிய தாக்கத்தை ஈழத்தவரில் ஏற்படுத்தியது. இதனூடாகவும் இதனைத் தொடர்ந்தும் அகதிப் பிரச்சினை மோசமடைந்து மிக உக்கிரமான நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் புதிய நிலைமையைச் சுட்டிக்காட்டும்வகையில் அனைத்துக் கதைகளும் அமைந்துள்ளன.
போரியல் இலக்கியத்திற்கு புதுவடிவம் கொடுத்த ஈழத்து இளந்தலைமுறைப் படைப்பாளிகள் வரிசையில் ஷோபாசக்தி குறிப்பிடத்தகுந்தவராகின்றார். தேசத் துரோகி; என்ற ஷோபாசக்தியின் (இயற்பெயர்: அந்தோனிதாசன்) சிறுகதைத் தொகுப்பு அடையாளம் வெளியீடாகத் தமிழகத்திலிருந்து மே 2003இல் வெளிவந்துள்ளது புலம்பெயர்ந்து வாழும் எழுத்தாளர்களில் முக்கியமானவராகக் கருதப்படுபவர் ஷோபாசக்தி. நிகழ்கால ஈழத்து அரசியலைப் புனைவாக்கிய கொரில்லா இவரது முதல் நாவல். தேசத்துரோகி இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு. எக்சில், அம்மா ஆகிய சஞ்சிகைகளிலும் இருள்வெளி, இனியும் சூல்கொள், கறுப்பு ஆகிய தொகுப்பு நூல்களிலும் வெளியான இவரது சிறுகதைகளும், பிரசுரமாகாத சூக்குமம், குரு வணக்கம் ஆகிய இரு பிரசுரமாகாத கதைகளையும் கொண்டதாக மொத்தம் 14 கதைகளுடன் தேசத்துரோகி என்ற நூல் வெளியாகியுள்ளது.
நீலமாகி வரும் கடல் முல்லை யேசுதாசன் அவர்களின் சிறுகதைத் தொகுப்பாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதர்சனம் வெளியீடாக வெளிவந்த இச்சிறுகதைத் தொகுப்பு ஒக்டோபர் 2003இல் முல்லைத்தீவு: அந்திவானம் பதிப்பகத்தால் அச்சிடப்பட்டுள்ளது. கடலோர வாழ்வின் அழியாத ஞாபகங்களும் நிகழ்காலமுமாக முல்லை யேசுதாசனின் கதைகள் அமைகின்றன. பழகிய கடலும், கரையும் மனிதர்களும் இவரது கதைகளில் ஊடாடுகின்றனர். காயங்களோடும் குருதியோடும் போர் நாட்களின் கடலாகிப் போன நீர் மீதும் அலைமீதும் தத்தளித்த நிகழ்காலத்தையும் வாழ்வையும் தனது கதைகளில் சொல்கிறார். கடலோடியாகவும், கடலோடும் கலங்களைக் கட்டும் கலைஞனாகவும், அரங்கக் கலையில் ஈடுபாடு கொண்டு தாயகத்தில் பல குறும்படங்களின் உருவாக்கத்தில் உழைத்தவருமான யேசுதாசனி;ன் யதார்த்தமான பாத்திரப் படைப்புக்கள் ஒவ்வொரு போரியல் சிறுகதைகளிலும் அவரது வாழ்வனுபவத்தின் வழியே பளிச்சிடுகின்றன.
புதிய கதைகள்; என்ற தொகுதி மலைமகள் அவர்களால் எழுதப்பட்ட கதைகளைக் கொண்டது. கிளிநொச்சி, கப்டன் வானதி வெளியீட்டகம் ஏப்ரல் 2004இல் இந்நூலை வெளியிட்டது. இத்தொகுப்பிலுள்ள 15 கதைகளும் ஈழப்போராட்டத்தில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட பெண் போராளிகளின் களநிலை அனுபவங்களின் பிழிவாக அமைகின்றன. ஈழப் பெண்கள் பற்றிய புதிய பார்வையை இவை தருகின்றன. இந்த மண்ணின் பெண்கள் யார், இவர்கள் எத்தகையவர்கள், என்ன செய்கிறார்கள் என்பதையும், விடுதலைப் போராட்டத்தில் பெண் போராளிகளின் பங்கு, அவர்களது மனோதிடம், அர்ப்பணிப்பு, களமுனை வாழ்க்கை என்பனவற்றையும் கருப்பொருளாகக் கொண்டு அமையும் இக்கதைகள் ஈழ விடுதலைப் போராட்டத்தின் மிக நெருக்கமானதொரு காட்சிப் படிமத்தை வாசகரின் மனக்கண்முன் நிறுத்துகின்றன. இது கப்டன் வானதி வெளியீட்டுத் தொடரின் ஐந்தாவது வெளியீடாகும்.
தீபா குமரேஷ் எழுதிய புரிதல் என்ற சிறுகதைத் தொகுதி முல்லைத்தீவு ஆரண்யம் வெளியீட்டகத்தால் மார்ச் 2003இல் வெளியாகியது. தாயகமண்ணில் வாழ்ந்து பெற்ற அனுபவங்களைக் கருவாக்கித் தரும் முயற்சியில் விளைந்த ஆசிரியரின் கன்னிப் படைப்பு இதுவாகும். போராட்ட மண்ணின் பகைப்புலத்தில் நின்று எழுதப்பட்ட 13 சிறுகதைகள் இந்நூலில் காணப்படுகின்றன.
ஈழத்தின் ஜனரஞ்சக நாவலாசிரியரான செங்கை ஆழியான் (இயற்பெயர்: க.குணராசா). அவர்களும் மண்வாசனை கலந்த போர்க்கால இலக்கியங்கள் சிலவற்றை படைத்துள்ளார். யாழ்ப்பாணத்து இராத்திரிகள் யாழ்ப்பாணம், யாழ். இலக்கிய வட்ட வெளியீடாக ஒக்டோபர் 1993இல் வெளியானது. இருபத்திமூன்று சிறுகதைகள் கொண்ட இத்தொகுப்பில் ஆசிரியர் தான் வாழும் யாழ்ப்பாணத்துச் சூழலை, மக்களின் மன ஓட்டங்களை, அவர்களது ஆசாபாசங்களைத் துல்லியமாகக் கொண்டுவந்துள்ளார்.
அக்கினிக் குஞ்சு என்ற இவரது குறுநாவல் ஜனவரி 1983இல் யாழ்ப்பாணம் விவேகா னந்தா அச்சகத்தில் அச்சிடப்பெற்று வெளியாகியது. யாழ். இலக்கியவட்டத்தின் 29வது வெளியீடு. தினகரன் நடத்திய குறுநாவல் போட்டியில் 1978இல் பரிசில் பெற்றது. தமிழ்மக்கள் மீதான இனவெறிக் கொடுமையும், தமிழர்களிடையே புரையோடிப்போன சாதிப்பாகுபாட்டுக் கொடுமைகளும் ஒப்பீட்டுரீதியில் பிணையப்பெற்ற குறுநாவல். 1976களில் யாழ்ப்பாணத்தில் தீவிரவாத இளைஞர்களைத் தேடி இராணுவமும் பொலிசாரும் வலைவீசித் திரிந்த காலத்தினைச் சித்திரிக்கும் கதையம்சம் கொண்டது.
இரவு நேரப் பயணிகள் செங்கை ஆழியானின் மற்றொரு சிறுகதைத் தொகுப்பு. இதுவும் யாழ்ப்பாணம் கமலம் பதிப்பகத்தின் ஜனவரி 1995இல் வெளிவந்தது. செங்கை ஆழியானின் மூன்றாவது சிறுகதைத்தொகுதி இதுவாகும். போராட்டச் சூழலில் தமிழ்மக்கள் படுகின்ற அவலங்களையும் அந்த அவலங்களைச் சந்திப்பதால் வன்மம் பெறுகின்ற உள்ளங்களையும் சித்திரிக்கும் கதைகள். டொமினிக் ஜீவாவின் முன்னுரையுடன் கூடிய இந்நூலில் உள்ள சிறுகதைகள் மல்லிகை, வீரகேசரி, வெளிச்சம், ஈழநாதம், ஈழநாடு(பாரிஸ்) ஆகியவற்றில் பிரசுரமானவை. ராத்திரிய நொனசாய் என்ற தலைப்பில் சிங்களத்திலும் சிறுகதைத் தொகுப்பாக வெளியிடப்பட்டது.
கொழும்பு லொட்ஜ் என்ற நாவல் செங்கை ஆழியானால் எழுதப்பட்டு யாழ்ப்பாணம் யாழ். இலக்கிய வட்ட வெளியீடாக டிசம்பர் 1998இல் வெளிவந்தது. இலங்கையின் ஆட்சிப்பொறுப்பை சந்திரிகா அரசு ஏற்றுக்கொண்ட ஆரம்பகாலவேளையில் எழுதப்பட்டதும், சமகால வாழ்வியல் இடர்பாடுகளின் ஓர் அம்சத்தைச் சித்திரிப்பதற்காக எழுதப்பட்டதுமான ஒரு நாவல் இது. யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கும் பெருநிலப்பரப்புக்கும் இடையிலான ஆனையிரவுப்பாதை அடைக்கப்பட்ட நிலையில் கிளாலிக்கடலேரியூடாக யாழ்ப்பாண மக்கள் இரவுநேரங்களில் பயணம்செய்து, பல இடர்ப்பாடுகளினூடாகக் கொழும்பு வந்து, அங்குள்ள விடுதிகளில் பல்வேறு கனவுகளோடும் ஏக்கங்களோடும் தங்கி வாழ்ந்த துயரங்களை இந்நாவல் சித்திரிக்கின்றது. இன்றைய அவலச் சூழ்நிலையில் நமது மக்கள் பாரம்பரியமான பண்பாட்டு இறுக்கங்களையும் மரபுக் கட்டுப்பாடுகளையும் உதறிவிடும் மீறல்களை இந்த நாவல் விபரிக்கின்றது. தினக்குரல் ஞாயிறு மலரில் 1997இல் தொடராக வெளிவந்தது. வடக்குக் கிழக்கு மாகாண இலக்கியப்பரிசில் பெற்ற நூல்.
ஈழத்தில் எண்பதுகளின் பின்னர் வெளிவந்த நாவல்களின் கதைக்களம் பெரும்பாலும் போராட்டமும் அது சார்ந்த அனுபவங்களுமாகவே உள்ளன. ஈழத்தவர் புலம்பெயர்ந்து வாழும் மண்ணிலிருந்து அவர்களால் படைக்கப்பட்ட நாவல்களும் கூட கணிசமான அளவில் எமது விடுதலைப்போராட்டம் சார்ந்ததாக இனம்காணப்படுகின்றது.
பச்சை வயல் கனவு தாமரைச்செல்வியின் பெயர் சொல்லும் ஒரு நாவலாகும். இது பரந்தன் சுப்ரம் பிரசுராலய வெளியீடாக ஆகஸ்ட் 2004இல் வெளிவந்தது. பச்சை வயல் கனவுகளுடன் கிளிநொச்சியில் வந்து குடியேறிய குடியேற்றவாசிகளின் கதை. கிளிநொச்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும், தமிழ் ஈழ விடுதலைப் பயணத்தில் கிளிநொச்சி மண்ணின் பாத்திரமும் இந்நாவலில் அழகாகச் சொல்லப்பட்டுள்ளது. கிளிநொச்சி மக்களின் வாழ்க்கை முறைகள், எதிர்பார்ப்பகள், போராட்டங்கள், நம்பிக்கைகள், நலந் தீங்குகள், கலைகள், விழாக்கள் அனைத்தையும் ஆவணப்படுத்தும் சுவையான நாவல். கடந்த 30 வருடங்களாக சிறுகதைகள், நாவல்கள் எனக் கூடுதலாக எழுதியிருக்கும் தாமரைச்செல்வியின் எட்டாவது நூல் இது. சிறுகதைகள் பல பிறமொழிகளிலும் பயணித்திருக்கின்றன. சில தேர்ந்த கதைத் தொகுப்புகளிலும் அடையாளம் காணப்பட்டுள்ளன. தமிழ்ப் படைப்புலகிலும், பெண் படைப்பாளிகளிலும் தாமரைச் செல்வி பெறும் இடம் முக்கியமானது.
வீதியெல்லாம் தோரணங்கள் என்ற நாவலும் தாமரைச்செல்வியின் மற்றொரு போரிலக்கியப் படைப்பாகும். கொழும்பு 5 மீரா பதிப்பகம் இந்நாவலை நவம்பர் 2003இல் வெளியிட்டது. மீரா வெளியீட்டகத்தின் 40ஆவது வெளியீடான இந்நாவல், இந்திய இராணுவம் இந்த மண்ணில் நிலைகொண்டிருந்த காலத்தைப் பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்டது. ஏற்கெனவே நொந்து போய்க்கிடந்த மக்களின் வெந்தபுண் மீது ஐPமுகு என்ற பெயரில் இந்திய அமைதிகாக்கும் படை வந்து வேல் பாய்ச்சிய காலம் அது. ஈழமண்ணில் ஓரிடத்தில் ஏற்படும் போரின் அனர்த்தங்களின் விளைவுகளை அதன் வலிகளைச் சுமந்தவாறு இன்னோரிடத்தில் வாழ்கின்ற மனிதர்களை இந்நாவலில் சந்திக்க முடிகின்றது. 1989இல் யாழ் இலக்கிய வட்டம்- வீரகேசரியுடன் இணைந்து நடத்திய போட்டியில் 2ம் பரிசினைப் பெற்ற நாவல். 1.3.1992 முதல் 3.5.1992 வரை வீரகேசரி வார வெளியீட்டில் தொடராகவும் இது வெளிவந்திருந்தது.
ஈழப்போராட்ட வரலாற்றை முழுமையாக ஒரு மகா நாவலில் உள்ளடக்கும் பாரிய முயற்சியை மேற்கொண்டவர் தேவகாந்தன் ஆவார். கனவுச்சிறை என்ற மகா நாவலை 5 பாகங்களில் தந்தவர் இவர். இத்தொகுதியை சென்னை இலக்கு நூல்கள் வெளியீடாக ஜுன் 1998 முதல் தேவகாந்தன் வெளியிட்டார்.
1 ஐந்து தொகுதிகளாக விரியும் கனவுச்சிறை மகாநாவலின் திருப்படையாட்சி என்ற முதற்பாகம் 1981-1983 காலகட்டத்தை களமாகக் கொண்டது. 1981இல் அக்கினிப் பொறி போன்ற மையச் சம்பவமொன்றின் உந்திப்புடன் ஆரம்பிக்கும் நாவலில் 1983 கறுப்புஜுலை, தேசம் தாண்டுதல், அகதிமுகாம் அவலங்கள், மேற்குலகின் அடையாளச் சிக்கல்கள், சமூக நிலை மாற்றங்களும் தேசமளாவிய கருத்துருவின் புத்தாக்கமும் என்று வியாபிக்கும் சரித்திர வெளியில் இன்னொரு சரித்திரம் சொல்லப்பட்டுள்ளது. ஈழத்துடன் இணைந்த சிறுதீவான நயினாதீவின் வடகரையிலிருந்து தொடங்கும் கதை. கட்சிப் பூசல்கள், கூட்டணி அமைப்பு, தமிழீழத்தின் தத்துவார்த்த உதயம், போராட்ட இயக்கங்களின் வளர்ச்சி என்பவற்றின் இலக்கியச் சாட்சியமாகின்றது கனவுச்சிறை. இந்நாவல் நகரும் காலத்தை பிரதானப்படுத்தி 5 பாகங்களில் எழுதி முடிக்கப்பட்டதாகும். 1981 தொடக்கம் 2001 வரையிலான காலப்பகுதிக்குரிய 21 ஆண்டுக்கால இலங்கையின் வாழ்நிலைக்களத்தில் நின்று 5 பாகங்களிலும் கதை நகர்த்தப்படுகின்றது. 1981-1983காலப்பகுதியைக் கூறும் திருப்படையாட்சி, 1985-1987 காலப்பகுதியைக் கூறும் வினாக்காலம்;, 1989,1991,1993 காலப்பகுதிகளைக் கூறும் அக்னி திரவம், 1995-1999 வரையிலான காலப்பகுதியை கதைக்களமாகக் கொண்ட உதிர்வின் ஓசை, 1999-2001 வரையான கதைக்களனைக் கொண்ட ஒரு புதிய காலம் என்றவாறாக இந்நாவல் யுத்தத்திற்கானதாகவோ அன்றி சமாதானத்துக்கானதாகவோ எழுதப்படாது சமகால அரசியல் நியாயமொன்றை விசுவாசமாகச் சொல்லியிருக்கின்றது. 1981-2001வரையான 21 ஆண்டுகளில் 21 நூற்றாண்டுகளின் இலங்கைச் சரித்திரத்தை புல்லின் தலைப் பனித்துளியின் பிரபஞ்சப் பிரதிபலிப்பாக இந்நாவல் மீளுருவாக்கம் செய்கின்றது என்று கூறினால் அது மிகையாகாது.
தேவகாந்தனின் யுத்தத்தின் முதலாம் அதிகாரம் என்ற நாவல், கொழும்பு பூபாலசிங்கம் பதிப்பகத்தினால் 2003 இல் வெளியிடப்பட்டது. சமூகம் வளருமென்பது அதன் முரண்விளைவுகளை உள்ளடக்கியதுமாகும். குடியேற்றத் திட்டங்கள் நல்ல பலன்களைத் தந்தன. ஆனால் பெருகிய குடியேற்றங்களால் நிலம், நீர்ப்பங்கீடு சார்ந்த குரோதங்கள் எழுந்தன. இனரீதியாய் இப்பிரச்சினை வடிவெடுத்தது தான் இலங்கை வரலாற்றில் நிகழ்ந்த சோகம். இந்தப் பகைப்புலத்தில் தான் முதல் துவக்கு வெடிச்சத்தம் இங்கே அதிர்ந்தெழுகிறது. அந்த வருடம் 1975. சுமார் இரண்டு நூற்றாண்டுக்காலச் சமூக வரலாற்றுப் புலத்தில் இந்நாவல் விரிகிறது.
இனி வானம் வெளிச்சிடும் என்ற நாவல் தமிழ்க்கவி என்ற வன்னி எழுத்தாளரால் படைக்கப்பட்ட நாவல். கிளிநொச்சி அறிவமுது பதிப்பகம் செப்டெம்பர் 2002இல் இந்நாவலை வெளியிட்டிருந்தது. இந்நாவல் பற்றி படைப்பாளியின் சுயவிமர்சனம் இது: “இது எனது முதலாவது கதை. இது என்னுடன் இருந்து என்னைத் தாக்கி என் உணர்வுகளைக் கிழித்துத் தைத்த ஒரு விவகாரம். என் அனுபவங்களைக் கலந்து இக்கதையை எழுதினேனா? இக்கதையில் எனது அனுபவங்களைக் கலந்தேனா என்பதும் புதிரல்ல. இனவாத அரசின் செயற்பாடுகளால் எழும் வன்முறைகள், அடிமனதின் ஆழத்தில் புதையுண்டு போய், அதுவே சந்ததி வழியாகக் காவிச் செல்லப்பட்டு இயலுமை உண்டான போது வெளிப்போந்து வீரியம் பெறுகின்றது. என் மகனும் இவ்வெளிப்பாட்டின் ஒரு குறியீடே. இவன் போராடப் போனபோது நான் எனக்குள் வருந்தியதுண்டு. எனக்குச் சொல்லாமல் போய்விட்டான் என்பதற்காக. ஓவ்வொரு போராளியின் பின்னணியிலும் ஒரு சரித்திரம் உண்டு. அந்தப் பிஞ்சு உள்ளத்தின் ஆதங்கத்தை மதித்தேன். ஒரு நாள் அவனைத் துப்பாக்கி ஏந்தியவனாய் சீருடையில் பார்க்கத் துடித்தேன். ஆகாயக் கடல் வெளிச் சமரில் அவன் ஆகுதியான செய்திதான் கிடைத்தது. இது எனது மகனின் கதை”
கொரில்லா என்ற நாவல் ஷோபாசக்தியின் அற்புதமான படைப்பாகும். தமிழகத்தில் புதுநந்தனம் அடையாளம் வெளியீடாக நவம்பர் 2001இல் வெளிவந்த நாவல் இது. பிரான்சில் வாழும் இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களில் தொடர்ச்சியாக இலக்கியம் படைத்து, எழுத்தைத் தன் பிரத்தியேக ஊடகமாகக் கொண்டு செயற்படும் ஷோபாசக்தி, பல நல்ல சிறுகதைகளையும், ஓரிரு நாடகங்களையும், தமிழ்மொழிக்குத் தந்தவர். அவரது முதல் நவீனம் இதுவாகும். இலங்கைப் போர்ச் சூழலினால் ஏற்படும் சம்பவங்கள், இடம்பெயர்வுகள், இடம்பெயர்ந்த தேசங்களில் ஏற்படும் அவலங்கள் ஆகியன இந்நவீனத்தின் அத்திவாரமாக அமைகின்றன. விடுதலைப் போராட்ட அமைப்புகளின் உள்ளகப் பார்வையில் விரியும் சம்பவக் கோர்ப்புக்கள் வாசகரை போர்க்கால யாழ்ப்பாணத்தின் தீவக மண்ணுக்கே அழைத்துச் செல்லும் வல்லமை மிக்கதாக அமைந்துள்ளது.
ம் என்ற ஒற்றைப் பெயரிலான ஷோபா சக்தியின் மற்றொரு நாவல் சென்னை கருப்புப் பிரதிகள், வெளியீடாக அக்டோபர் 2004இல் வெளிவந்துள்ளது. “கொரில்லா”வை அடுத்து ஷோபா சக்தியின் இரண்டாவது நாவல் இது. பேரினவாதக் கொடுமைகள், இயக்க நடவடிக்கைகள், ஆகியவற்றினூடாக அகதியாக ஐரோப்பாவில் வாழும் ஒருவனின் வரலாறு இது. ஆழம் காட்டமுடியாத மனித சுயத்தின் வேறுசில பரிமாணங்களை அடையாளம் காட்டும் முயற்சியாக இது அமைகின்றது. வெலிக்கடை சிறைப் படுகொலை, மட்டக்களப்புச் சிறை உடைப்பு, இயக்கப் படுகொலைகள் என்கின்ற வரலாற்றுப் பின்னணியில் மனித இருப்பைப் புரிந்துகொள்ள முயலும் சிக்கலான பணியை வேகம் குன்றாமல் செய்கின்றது இந்நாவல்.
போரே நீ போ செங்கை ஆழியானின் நாவலாகும். கொழும்பு பூபாலசிங்கம் பதிப்பகம் இதை ஜுன் 2002இல் வெளியிட்டது. தாயகத்தின் சமகாலப் பிரச்சினையைக் கூறும் நாவல் இது. 1995இல் நிகழ்ந்த பாரிய இடப்பெயர்வின்போது, இடம்பெயர்ந்த மக்களையும், இடம்பெயராத மக்களையும் இணைத்த நூலாக இது அமைகின்றது. மானிடவாழ்வின் பெறுமதி வாய்ந்த உயிர்களையும் இளமைக் கனவுகளையும் போர் எவ்வளவுதூரம் நாசப்படுத்தி வருகின்றதென்ற அவலநிலைகளை போரே நீ போ சித்;;திரிக்கின்றது. யாழ்ப்பாணம், உதயன் பத்திரிகையில் தொடராக வெளிவந்தது.
ஈழப் போராட்டத்தில் தாயக மண்ணில் ஏற்பட்ட அழிவுகளைக் கதைக்களனாகக் கொண்டு அந்தச் சம்பவத்தை வரலாறாகப் பதிந்துவைக்கும் நோக்கில் பல படைப்புகள் வெளியாகியுள்ளன. இவை கற்பனை கலவாத சம்பவக்கோப்புகள். படைப்பாளியின் கைவண்ணத்தில் இவை விறுவிறுப்பான கதையாகச் சொல்லப்படுகின்றது. இக்கட்டுரையின் ஆரம்பத்தில் சொல்லப்பட்ட லங்காராணி, புதியதோர் உலகம் போன்றே இவையும் ஈழ விடுதலைப்போராட்டத்தின் ஏதோவொரு சம்பவத்தை வரலாறாக்குகின்றன.
இருபத்திநான்கு மணிநேரம் என்ற நூலை நீலவண்ணன் என்ற புனைபெயரில் செங்கை ஆழியான் எழுதியிருந்தார். யாழ்;ப்பாணம்: கமலம் வெளியீடாக ஒக்டோபர் 1977இல் வெளிவந்தது. பல பதிப்புக்களை பின்னாளில் கண்டது. 1977 ஆகஸ்ட் மாதம் 16ம் திகதி இலங்கையில் ஆரம்பமான இனக்கலவரத்தின் முதல்; நாள் யாழ்ப்பாணத்தில் நடந்தது என்ன என்பதைச் சித்திரிக்கும் வரலாற்றுப் பதிவு இது. வரதர்; வெளியீடாக 16.10.1977இல் வெளியிடப்பட்ட முதற்பதிப்பு 15 நாட்களில் விற்பனையாகி விட்டநிலையில் 31.10.1977அன்று மீள்பதிப்புச் செய்யப்பட்டது. இந்நூலின் வரலாற்று முக்கியத்துவம் கருதி 25வருடங்களின் பின்னர் 3வது பதிப்பையும் 2003இல் கண்டுள்ளது.
எத்தனை எத்தனை வித்துக்கள் வீழ்ந்தன என்ற நூல் உண்மை நிகழ்வுகளின் மற்றொரு விவரணமாகும். நாவண்ணன் அவர்களின் கைவண்ணத்தில் யாழ்ப்பாணம்: தமிழ்த்தாய் வெளியீட்டக வெளியீடாக ஒக்டோபர் 1995 இல் வெளியாகியது. ||முன்னோக்கிப் பாய்தல்|| இராணுவ நடவடிக்கை இலங்கை அரசு 9.7.1995 முதல் 16.7.1995 அதிகாலை வரை வலிகாமம் மேற்கு பகுதியில் நடாத்தியது. அவ்வேளையில் படுகொலை செய்யப்பட்ட 239 பேரில், விமானக்;குண்டுவீச்சசுக்கு இலக்காகி நவாலித் தேவாலயச்சுற்றாடலில் பலியான 141பேரின் துயரச் சம்பவங்கள் உட்பட அந்தப் படையெடுப்பின் போது குறித்த நிலப்பகுதியில் பரவலாக நடந்த படுகொலைகள் விவரண வடிவில் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. வலிகாமம் மேற்குப் பகுதியில் புலிகளின் எதிர்நடவடிக்கைகளைத் தொடர்ந்து தாம் ஆக்கிரமித்த பகுதிகளை விட்டு இராணுவம் பின்வாங்கிய ஒரு சில நாட்களில் அவ்விடங்களுக்குச் சென்று நேரடியாகச் சேகரித்த தகவல்கள் இவை.
அக்கினிக் கரங்கள் நாவண்ணனின் மற்றுமொரு போரிலக்கியமாகும். யாழ்ப்பாணம்: தமிழ்த்தாய் வெளியீடாக மலர்ந்துள்ள இது ஐப்பசி 1995இல் முதற்பதிப்பைக் கண்டது. ஈழத்தமிழரின் இனப்பிரச்சினையைப் பகைப்புலமாகக் கொண்ட உண்மை நிகழ்வுகளை கலாபூர்வமாகப் பதிவுசெய்து வைக்கும் பணியிலேயே திரு நாவண்ணனின் இலக்கிய வாழ்வின் பெரும்பகுதி கழிந்திருக்கிறது. அக்கினிக்கரங்கள் என்ற இந்தக் குறுநாவலும் அந்த வகைக்குள்ளேயே அடங்குகின்றது. 1987ம் ஆண்டு ஒக்டோபர் 21ம், 22ம் திகதிகளில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் இந்திய அமைதிகாக்கும் படையினர் புகுந்து புரிந்த படுகொலைகளை மையமாக வைத்து இக்குறுநாவல் எழுதப்பட்டுள்ளது.
நாவண்ணனின் பெயர்சொல்லும் மற்றொரு படைப்பு கரும்புலி காவியம்: பாகம் 1. கிளிநொச்சி அறிவு அமுது பதிப்பகம் மார்ச் 2003இல் இந்நூலை வெளியிட்டது. விடுதலைப் போராட்டத்தில், சிங்கள இராணுவத்தின் சிம்மசொப்பனமாகக் கருதப்படும் கரும்புலிகளின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் எழுச்சியையும் கூறும் கரும்புலி காவியத்தை இந்நூல் தருகின்றது. இதில் கரும்புலிகளின் உள்ளத்து உணர்வுகளையும் அவர்களது அளவு கடந்த அர்ப்பணிப்புகளையும் மிகவும் நுட்பமாகவும் சாதுர்யமாகவும் சொற்களை நெகிழ்த்திச்சென்று தத்ரூபமாக வெளிப்படுத்தியிருக்கின்றார்.
நாவண்ணன் போன்று போரியல் சம்பவங்களை வரலாறாகப் பதியும் மற்றொரு முயற்சியை மேற்கொள்பவர் வல்வை ந.அநந்தராஜ் அவர்கள். வல்வைப் படுகொலைகள் என்ற இவரது நூல் வல்வெட்டித்துறை நந்தி பதிப்பக வெளியீடாக 1989இல் வெளிவந்தது. இந்திய இராணுவத்தினர் இலங்கையை ஆக்கிரமித்திருந்த வேளையில் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட பல படுகொலைகளில் உலகையே உலுக்கிய படுகொலைகளாக வல்வெட்டித்துறைப் படுகொலைகள் இடம் பெற்றிருந்தன. 1989ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2, 3, 4 ஆம் திகதிகளில் வல்வெட்டித்துறையில் ஊரடங்குச் சட்டத்தைப் பிரகடனப்படுத்தியபின் இந்திய இராணுவத்தினரால் கண்மூடித்தனமாக மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் தொடர்பான விபரங்கள், கதைகளாக நெஞ்சைஉருக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளன. மக்களின் அவலங்களைச் சித்திரிக்கும் கறுப்பு வெள்ளை, வண்ணப் புகைப்படங்களுடன் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. இது பாதிக்கப்பட்ட வல்வைமக்களின் சத்தியப் பிரமாண வாக்குமூலங்களை உள்ளடக்கியதாக ஐNனுஐயு’ளு ஆலுடுயுஐ என்ற பெயரில் ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலுக்கான அணிந்துரை முன்னாள் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் பெர்ணான்டசினால் மிக உணர்வுபூர்வமாக வழங்கப்பட்டிருந்தது.
வல்வை அநந்தராஜ் அவர்கள் வல்லை ஆனந்தன் என்ற புனைபெயரில் எழுதிய மற்றொர வரலாற்றுப் பதிவு உதிரம் உறைந்த மண்: ஒரு மாணவப் படுகொலையின் அழியாத சுவடுகள் என்ற நூலாகும். கிளிநொச்சி: தமிழ்த்தாய் வெளியீட்டகம் வெளியிட்ட இந்நூலில்22.9.1995 அன்று வடமராட்சியில் நாகர்கோயில் மஹா வித்தியாலயத்தின் மீது இலங்கை இராணுவத்தின் வான்படை குண்டுவீசியதை அடுத்து அங்கு பலியான, காயமடைந்த பள்ளிச் சிறுவர்களின சோக நிகழ்வை உணர்ச்சி ததும்ப விபரித்துள்ளார். பத்திரிகைத் தணிக்கை அமுலிலிருந்த இக்காலத்தில் இந்தப் பாரிய கொடுமை வெளியுலகத்திற்கு எடுத்துச் சொல்லப்படுவதில் இருந்த தடங்கலை இந்நூல் நீக்கி, அந்நிகழ்வை வரலாற்றில் பதிந்துள்ளது.
ஈழ விடுதலைப் போராட்டம் சார்ந்த நூல்கள் பற்றிப் பேசும்போது, அவ்விடுதலைப் போராட்டக் களத்தின் அரசியல் தத்துவார்த்த நெறியாளராக நின்று செயற்பட்டவர்கள் எழுதிய நூல்கள் பற்றியும் குறிப்பிடல் வேண்டும். உதாரணமாக ஈழவர் இடர்தீர என்ற தலைப்பில் இ.இரத்தினசபாபதி அவர்கள் ஐக்கிய இராச்சியத்திலிருந்து ஒர நூலை வெளியிட்டிருந்தார். Eelam Research Organisation என்ற நிறுவனத்தின் மூலம் செப்டெம்பர் 1984இல் இந்நூல் வெளிவந்திருந்தது. ஈழப்புரட்சி அமைப்பின் (ஈரோஸ்) நிறுவனரான இந்நூலாசிரியர், இவ்வமைப்பின் அதிகாரபூர்வ ஏடான தர்க்கீகம் இதழ்களின் வாயிலாக வெளியிட்ட ஆய்வுக்கட்டுரைகளின் தொகுப்பு இதுவாகும். மொழிவெறியாகவும், மாணவர் உயர்கல்விப் பிரச்சினையாகவும் 1975ம் ஆண்டுவரை அணுகப்பட்ட ஈழப்பிரச்சினையை இவரது கருத்துக்கள், மார்க்சிய பார்வையில் தமிழ்பேசும் மக்களின் உடைமைப்பாட்டுப் பிரச்சினையாக அணுகியிருந்தது.
ஈழ விடுதலை அரசியல் சார்ந்த நூல்கள் பற்றிக் குறிப்பிடும்போது அன்ரன் பாலசிங்கம் – அடேல் பாலசிங்கம் தம்பதியினரின் எழுத்தியல் பங்களிப்பு முக்கியமானதாகும். இரண்டு தசாப்தங்களும் புலிகளும் என்ற நூல் அன்ரன் பாலசிங்கம் அவர்களால் எழுதப்பட்டு தமிழீழ விடுதலைப் புலிகளால் ஆகஸ்ட் 1992இல் வெளியிடப்பட்டது. 1991ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் நடாத்திய முத்தமிழ் விழாவையொட்டி வெளியிடப்பட்ட மலரில் இடம்பெற்ற ஒரு அரசியல் கட்டுரையின் நூல் வடிவமாக இது அமைந்துள்ளது. இருபது வருடகால புலிகளின் வரலாற்றை சித்திரிக்கும் ஆரம்பகால ஆவணம் என்ற வகையில் இந்நூலும் வரலாற்ற முக்கியத்துவம் பெறுகின்றது. இந்நூல் போலவெ பின்னாளில் அன்ரன் பாலசிங்கத்தின் துணைவியார் அடேல் பாலசிங்கம், ஆங்கிலத்தில் ஒர நூலை எழுதினார். Will to Freedom என்ற அந்நூல் பின்னாளில் ஓகஸ்ட் 2002இல் ஏ.சீ.தாசீசியஸ், அன்ரன் பாலசிங்கம் ஆகியோரால் தமிழாக்கம் செய்யப்பட்டு சுதந்திர வேட்கை: தமிழீழ விடுதலைப் போராட்டம் உள்ளிருந்து ஒரு நோக்கு என்ற பெயரில் வெளிவந்தது. இந்நூல் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட வாழ்வினை உள்ளிருந்த பார்வையாக, ஆழமாகத் தரிசிக்கின்றது. சுயதரிசன விவரணமாகவும், வரலாற்று நோக்குடனும் எழுதப்பட்ட இந்த நூலில் விடுதலைப்புலிகள் பற்றி இதுவரை வெளிவராத பல்வேறு சுவையான தகவல்கள் தரப்பட்டுள்ளன. கடந்த 20 ஆண்டுக்காலமான தமிழீழ சுதந்திரப் போராட்டத்தின் படிநிலை வளர்ச்சியில் நிகழ்ந்த முக்கிய வரலாற்று நிகழ்வுகள் திருப்பங்கள் இந்நூலில் துல்லியமாகக் காட்டப்பட்டுள்ளன. அவுஸ்திரேலியரான திருமதி அடேல் பாலசிங்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றுபவர். தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் வாழ்ந்து தமிழ் சமூகக் கட்டமைப்புப் பற்றி நன்கறிந்தவர். விடுதலைப்புலிகளின் பெண் போராளிகள் பற்றியும் யாழ்ப்பாணச் சமூக சீதன முறை பற்றியும் நூல்கள் எழுதியுள்ளார்.
விடுதலை என்ற தலைப்பில் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் கட்டுரைத் தொகுப்பு நூலொன்றும் நொவெம்பர் 2003இலலண்டனிலிருந்து வெளிவந்துள்ளது. தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகால வளர்ச்சிக்கும், எழுச்சிக்கும் முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களின் பங்களிப்பும், 1987 ஜுலையில் புதுடில்லியில் நிகழ்ந்த சந்திப்பின்போது ராஜீவ்-பிரபாகரன் இடையே செய்து கொள்ளப்பட்ட இரகசிய ஒப்பந்தம் உள்ளிட்ட பல விடயங்களையும் தெளிவுபடுத்தும் 11 கட்டுரைகள் இதில் உள்ளன. மனிதவாழ்வு பற்றியும், மனித வரலாறு பற்றியும், மனித விடுதலைபற்றியும் புதுமையான, புரட்சிகரமான சிந்தனைகள் இந்நூலில் அறிமுகமாகியுள்ளன. அன்ரன் பாலசிங்கம் அவர்களின் மிக அண்மைக்கால வெளியீடாக றுயச யனெ Pநயஉந என்ற நூலும், அதன் தமிழாக்கமான போரும் சமாதானமும் என்ற நூலும் குறிப்பிடத்தகுந்த மற்றொரு நூலாகும்.
ஈழ விடுதலைப் போராட்ட காலத்தில் யாழ்ப்பாண மண்ணில் பல இடையூறுகளுக்குள் வெளிவந்த பிராந்தியப் பத்திரிகை ஈழநாடு என்ற நாளிதழாகும். 1984ம் ஆண்டுக்காலப்பகுதியில் தமிழ்ப் பிரதேசங்களில் நீண்டகால ஊரடங்குச் சட்டங்கள் பிரயோகிக்கப்பட்டு அரசின் நெருக்கடிகளால் விடுதலைப் போராட்டத்தின்பால் மக்களின் ஈடுபாட்டைநசுக்கும் கீழ்த்தரமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அக்கால கட்டங்களில் ஈழநாடு நாழிதளில் வெளியான ஆசிரியத் தலையங்கங்கள் சில ஊரடங்கு வாழ்வு என்ற பெயரில் தனிநூலாக மீளப் பிரசுரமாயிருந்தது. ஈழத்தமிழருடைய போராட்ட வரலாற்றில் உண்மையாய் எழுதப்பட்ட பதிவேடுகள் இவை. இக்கட்டுரைகளின் ஆழத்தையும் சமூகப் பின்னணியையும் விரிவாக ஆராய்ந்து அச்சிடக்கூடிய நிலை அன்றிருக்கவில்லை. வரலாற்றுப்பதிவான அந்த ஆசிரியத் தலையங்கங்கள் எதிர்காலத்தில் ஈழ வரலாறு பற்றிய பல ஆய்வுகளுக்கு மூலாதார நூலாக விளங்கக்கூடும்.
பத்திரிகையாளர்கள் பலர் போராட்ட பூமியிலிருந்தும், பின்னர் அங்கிருந்து நெருக்கடிகளால் புலம்பெயர்ந்த வந்து புகலிட தெசத்தில் நிலைகொண்டிருந்தும் பல நூல்களை தமத அனுபவங்களாக எழுதி வெளியிட்டிரந்தார்கள். ஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை என்ற நூல் இவ்வகையில் உதாரணமாகக் குறிப்பிடலாம். எஸ்.எம்.கோபாலரத்தினம். மட்டக்களப்பிலிருந்து ஆகஸ்ட் 2000த்தில் இந்நூலை வெளியிட்டிருந்தார். இந்நூலில் இந்திய அமைதிப்படையினரால் இந்நூலாசிரியர் கைது செய்யப்பட்டதன் பின்னரான இரண்டு மாத சிறை அனுபவம் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டதிலிருந்து விடுதலையாகும் வரை நடந்த நிகழ்வுகள், சிறையில் சந்தித்தவர்கள், அவர்களிடமிருந்து கேட்டறிந்தவை அனைத்தும் பதிவுக்குள்ளாகியுள்ளன.
போரியல் சார்ந்த படைப்பிலக்கியங்களைச் செறிவாகக் கொண்ட சிறப்பிதழ்கள் பல தாயக மண்ணிலிருந்து காலத்திற்குக் காலம் வெளியாகியுள்ளன.
வெளிச்சம்: பவள இதழ் 2001. இதில் குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும். விடுதலைப்புலிகள் கலை பண்பாட்டுக் கழகம், நடுவப்பணியகம் இத்தொகுப்பினை 2002இல் வவுனியா வடக்கு பல நோக்குக் கூட்டுறவுச்சங்கப் பதிப்பகத்தின் வாயிலாக புதுக்குடியிருப்பிலிருந்து வெளியிட்டுள்ளது. 300 பக்கம் கொண்ட இம்மலர், தமிழீழ விடுதலைப்புலிகளின் கலை பண்பாட்டுக் கழகத்தின் பருவ இதழாக வெளிவரும் வெளிச்சம் சஞ்சிகையின் 75வது இதழாகும். இது கார்த்திகை–மார்கழி 2001இல் பவள இதழாக மலர்ந்துள்ளது. இச்சிறப்பிதழில் ஈழவிடுதலைப் போராட்டம் தொடர்பான கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்புக்கள் ஆகியன தொகுக்கப்பட்டுள்ளன.
இத்தொடரில் குறிப்பிடத் தகுந்த மற்றொரு மலர் புலிகளின்குரல் வானோசை பத்தாவது ஆண்டு நிறைவு மலராகும். புலிகளின் குரல் நிறுவனம் இம்மலரை நவம்பர் 2000இல் புதுக்குடியிருப்பு: சந்திரன் பதிப்பகத்தில் அச்சிட்டு வெளியிட்டிருந்தனர். 332 பக்கம் கொண்ட இத்தொகுப்பு பல்வேறு புகைப்படங்கள் சகிதம் வெளியிடப்பட்டிருந்தது. 1990ம் ஆண்டு நவம்பர் 21இல் தமிழீழ மாவீரர் நாளில் தொடங்கப்பட்ட புலிகளின்குரல் வானொலிச்சேவையின் 10வது ஆண்டைக் குறிக்கும் வகையில் வெளியான சிறப்பிதழ் இதுவாகும். வே.இளங்குமரன், நா.தமிழன்பன், பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரம், இ.இராஜேஸ்வரன், வை.சச்சிதானந்தசிவம், ராதேயன், ப.வசந்தன், ஆகியோரை மலர்க்குழுவாகக் கொண்டு இது வெளிவந்துள்ளது. 52 கட்டுரைகளும், 67 கவிதைகளும் கொண்ட பாரிய தொகுப்பு. இவை புலிகளின்குரல் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள், படைப்பாளிகள், கலைஞர்கள் உள்ளிட்ட ஆக்ககர்த்தாக்களின் ஈழவிடுதலைப் போராட்டம் சார்ந்த ஆக்கங்களாகும்.
போர் நடவடிக்கைகளால் உளவியல்ரீதியில் பாதிப்புற்ற தாயக மக்களின் உளவியல் பிரச்சினைகளை ஆராயும் வகையிலும் சில நூல்கள் போர்க்கால ஈழத்தில் மலர்ந்துள்ளன.
மனவடு: நெருக்கீட்டின் உள விளைவுகளும் அவற்றை எதிர்கொள்ளும் முறைகளும் என்ற நூல் வைத்திய கலாநிதி தயா சோமசுந்தரம் அவர்களால் எழுதப்பட்டு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளியீடாக 1993 இல் வெளிவந்தது. 230 பக்கம் கொண்ட இந்நூல் விளக்கப்படங்கள் சகிதம் வெளிவந்துள்ளது. தாயகத்தின் இன்றைய போர்ச் சூழலில் மக்கள் பல்வேறு நெருக்கீடுகளுக்கு உட்படுகிறார்கள். பரபரப்பு, பதகளிப்பு, அச்சம், தவிப்பு, போன்ற உளப்பாதிப்புக்கும் நெருக்கீடுகளுக்கும் உள்ளாகின்ற இவர்கள் இவற்றை எதிர்கொள்ள எவ்வகையான வழிமுறைகளைக் கையாளலாம் என்பதை விளக்கும் முக்கிய நூல் இதுவாகும்.
தமிழ் சமுதாயத்தில் உளநலம் என்ற மற்றொரு நூலும் தயா சோமசுந்தரம், சா.சிவயோகன் ஆகிய இருவராலும் எழுதப்பட்டு, சாந்திகம் என வழங்கப்படும் யாழ்ப்பாணம், பண்பாடுகளினூடான உளசமூக நிறுவனம் என்ற தொண்டர் நிறுவனத்தால் 2000ம் ஆண்டில் 246 பக்கம் கொண்டதாக புகைப்பட விளக்கப்படங்கள் சகிதம் வெளியிடப்பட்டது. இது பின்னர் 2004இலும் மீள் பிரசுரம் செய்யப்பட்டது. ஈழத்தமிழருடைய வாழ்வில் நிகழும் இடப்பெயர்வுகள் அவர்களில் பாரிய உளப்பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றன. சமுதாய மீள்சீராக்கல் நடவடிக்கைகளுள் உளநலத்தைப் பேணுதலும் இன்றியமையாதது. இந்தப் பின்னணியில் உருவான நூல் இது. உளச் சமூகத் தொண்டர்கள், உளநலம் விரும்பும் ஆர்வலர்கள் படித்துப் பயனடையும் வகையில் அரிய பல தகவல்களைக் கொண்டது. பல்வேறு உளநலப் பிரச்சினைகளும் அவை தோன்றுவதற்கான காரணங்களும் அவற்றிலிருந்து விடுபடும் வழிமுறைகளும் இங்கு எளிமையாகக் கூறப்பட்டுள்ளன.
போரியல் சார்ந்த நூல்களில் படைப்பிலக்கியங்களுக்கு அப்பால் போர்ச்சூழலில் வெளியான இரண்டு நூல்கள் பற்றிய பதிவையும் இங்கு மேற்கொள்வது பயனுள்ளதாக அமையும் என்று கருதுகின்றேன்.
இலங்கை அரசபடைகளின் அட்டூழியங்களின் உச்சகட்டமாக வான்படையால் எரியூட்டும் குண்டுகள் வீசும் நடவடிக்கைகளுக்கு முகம்கொடுக்கம் வகையில் எமது மக்களைப் பாதுகாக்கும் பொருட்டு அவர்களிடையே தற்பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்பெறச் செய்யும் வகையில் எரியூட்டும் குண்டிலிருந்து பாதுகாப்பு என்ற நூல் வெளியிடப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப்பிரிவு இந்நூலை செப்டெம்பர் 1986இல் வெளியிட்டது. மக்கள் பாதுகாப்பு என்னும் தொடர் வரிசையில் இரண்டாவது சிறுநூலாக வெளிவந்துள்ளது. போர்க்காலச் சூழலில் இலங்கை அரசபடையினரின் உயர்சக்தி மிக்க எரிகுண்டுத் தாக்குதலிலிருந்து ஈழத் தமிழ் மக்கள் தம்மை எப்படிப் பாதுகாத்துக் கொள்வது என்ற அடிப்படைத் தகவல்களை விளக்கப் படங்களின் உதவியுடன் இந்நூல் தெளிவாகக் கூறுகின்றது. எரியூட்டும் குண்டு வகைகள், இரசாயனச் சேர்க்கைகள், அதன் பாதிப்புக்கள் என்பனவும் விளக்கமாகத் தரப்பட்டுள்ளன. போர்க்காலத் தற்பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஒன்றான பதுங்குகழிகளை அமைத்தல் தொடர்பான சிறு பிரசுரங்களும் அக்கால கட்டத்தில் பரவலாக விநியோகிக்கப்பட்டன.
சமரும் மருத்துவமும்: போர்க்களப்பதிவுகளும் புதிய புதினங்களும் என்ற நூல் தூயவன் என்ற மருத்துவப் போராளியால் எழுதப்பட்டது. (இயற்பெயர்: சு.தனேஸ்குமார்). கிளிநொச்சி தமிழ்த்தாய் வெளியீட்டகத்தினால் மே 2003 இல் வெளியிடப்பட்ட இந்நூல் கிளிநொச்சி நிலா பதிப்பகத்தில் அச்சிடப்பட்டது. 108 பக்கம் கொண்ட இந்நூலில் தமிழீழ விடுதலைப்புலிகளின் மருத்துவத்துறையைச் சேர்ந்த தூயவன், தன்னுடைய களமருத்துவப்பணிகளை நூலாக்கித் தந்துள்ளார். இதில் கடந்த 10 வருடகாலத்தில் களங்களிலும், தள சத்திரசிகிச்சைக்கூடங்களிலும் ஏற்பட்ட தனது நேரடி அனுபவங்களை ஆவணப்படுத்தியிருக்கிறார். 1993-2003 வரையான காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் ஏடு, வெளிச்சம் சஞ்சிகை, புலிகளின் குரல் வானொலி ஆகியவற்றில் வெளியானவை இவை.
ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டம் தமிழில் போரியல் இலக்கியங்கள் பல உருவாகுவதற்கு வழிகோலியுள்ளது. புலம்பெயர்ந்து திக்கெட்டும் சென்ற ஈழத்தவரால் இவ்விலக்கியங்கள் உலக மொழிகளிலும் சேர்க்கப்படுகின்றன. இலங்கையின் தமிழர்களின் இனப்படுகொலைகள், வீரம் செறிந்த விடுதலைப் போராட்டங்கள், பாரிய இடப்பெயர்வுகள் என்பனவற்றை எதிர்காலத்தில் ஆராய முற்படுவோருக்கு இக்கட்டுரை ஒரு சிறு பொறியேயாகும். பெருங்கடலுள் ஆழ்ந்திருக்கும் பனிப்பாறையின் முகட்டை மாத்திரம் இங்கு காட்டமுடிகின்றது. இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் நூல்கள் மட்டுமே ஈழத்து தமிழ் படைப்புலகத்தை அழகு படுத்துகின்றனவென்றோ, இங்கு குறிப்பிட்ட படைப்பாளிகள் மாத்திரம் தான் ஈழத்துத் தமிழ் இலக்கியத்துறையில் இன்று ஈடுபட்டுழைக்கிறார்கள் என்றோ வாசகர் பொருள் கொள்ளலாகாது.
ஈழத்துத் தமிழ் நூல்களில், குறிப்பாக போர்க்கல வெளியீடுகளை, அவற்றின் ஆழ்ந்தகன்ற இருப்பினை பதிவுக்குள்ளாக்கும் முயற்சி ஏற்கெனவே தொடங்கப்பெற்றுள்ளது. ஈழத்தமிழரின் படைப்புக்கள் பற்றிய விரிவான தேடலை மேற்கொள்ள விரும்பும் ஆய்வாளர்களுக்கு இக்கட்டுரையாளர் (என்.செல்வராஜா) தொகுத்துவரும் நூல்தேட்டம் என்ற ஈழத்துத் தமிழ் வெளியீடுகளின் குறிப்புரையுடனான நூல்விபரப் பட்டியல் துணைபுரியும். தொகுதியொன்றுக்கு ஆயிரம் நூல்கள் என்ற வகையில் மூன்று தொகுதிகளில் 3000 ஈழத்தமிழ் நூல்கள் பற்றிய விபரங்கள் இதுவரை தொகுத்து வெளியிடப்பட்டுள்ளன. இத்தொகுப்பின் நான்காவது தொகுதி 2006ம் ஆண்டு இறுதிப்பகுதியில் வெளிவரவுள்ளது. ஒவ்வொரு நூலினதும் விரிவான நூலியல் அம்சங்களை பதிவு செய்வதுடன் அந்நூல் பற்றிய சிறுகுறிப்புரையும் இப்பதிவுகளில் காணப்படுவது சிறப்பாகும். இத்தொகுப்பின் பிரதிகளை இலங்கையிலுள்ள பிரபல புத்தக விற்பனையாளர்களிடம் பெற்றுக்கொள்ளலாம்.
கவிஞர் ஜெயபாஸ்கரன்
நன்றி:- கல்கி
ஒலிம்பிக் போட்டியை தங்கள் நாட்டில் நடத்திவிட வேண்டுமென்று ஒவ்வொரு நாடும்
போட்டியிட்டு களத்தில் குதிக்குமே.. அது போல இருந்தது. தமிழ் விழாவை நடத்த
தமிழ்ச்சங்கங்களிடையே நடந்த போட்டி. எங்கே என்கிறீர்களா?
தமிழ் நாட்டிலில்லை.
வட அமெரிக்காவில், வட அமெரிக்காவின் தமிழ்ச் சங்கங்களின் ஆதரவில் (FETNA) இந்த
ஆண்டு ஜார்ஜியா மாகாணம் அட்லாண்டா நகரில் நடைபெற்றது அவ்விழா என்கிறார். அதில்
கலந்து கொண்ட கவிஞர் ஜெயபாஸ்கரன்.
[image:http://img.dinamalar.com/data/images_piraithal/kalkinews_72759646178.jpg%5D
வடஅமெரிக்காத் தமிழ்ச்சங்க பேரவை {Federation of Tamil Sangams of North
America – FETNA} சுருக்கமாகவும், செல்லமாகவும், சொல்கிறார்கள். அமெரிக்கத்
தமிழர்கள்.
– வாஷிங்டன்
– நியூ யார்க்
– நியூ ஜெர்சி
– அட்லாண்டா மற்றும்
– கனடாவில்
உள்ள தமிழ்ச் சங்கங்களையும் சேர்த்துக்கொண்டு கிட்டத்தட்ட நாற்பத்தொரு
தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பாக உருவாக்கப்பட்டது தான் வட அமெரிக்கத்
தமிழ்ச்சங்க பேரவை.
விழாவுக்கு ஆண்களும், பெண்களும், குடும்பங்களும், குழந்தைகளுமாக ஆயிரத்து
ஐந்நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களில் இருந்தும்
வந்து குழுமிவிட்டார்கள். அனைவருக்கும் நுழைவுக்கட்டணம் உண்டு. விழா நடந்த
ஜார்ஜியா டெக் என்கிற உயர்கல்வி வளாகத்தின் அரங்கம். கோலங்களாலும், வாழை
மரங்களாலும் களை கட்டியது.
ஒவ்வொரு ஆண்டும் அழைப்பதை போலவே இவ்வாண்டும்,
– சிலம்பொலி செல்லப்பன்
– தமிழருவி மணியன்
– வைரமுத்து
– கோபிநாத் (நீயா, நானா)
– அறிவியல் அறிஞர் மயில்சாமி அண்ணாதுரை
– தமிழ் இணையப் பல்கலைக்கழக துணைவேந்தர் நக்கீரன் போன்றோருடன்
– நானும் (கவிஞர் ஜெயபாஸ்கரன்)
அழைக்கப்பட்டிருந்தேன்.
– ஜீவா
– பசுபதி
– அனுராதா ஸ்ரீராம்
போன்ற திரைக் கலைஞர்களோடு,
– ஜோதிக்கண்ணன் எனும் அதியற்புதமான சிலம்பாட்ட கலைஞரும்
அழைக்கப்பட்டிருந்தார்.
தமிழறிஞர் இரா.திரு.முருகன் (புதுச்சேரி) அழைக்கப்பட்டிருந்தர்களில்
முதன்மையானவர். எதிர்பாராதவிதமாக அவர் மறைந்து விட்டதால், அவரை நினைத்து
அவ்வப்போது மனம் கலங்கி வருத்தப்பட்டு கொண்டிருந்தார். FETNA தலைவர் டாக்டர்
முத்துவேல் செல்லையா.
மூன்று நாள் நிகழ்ச்சிகளுக்காக தங்களுக்கு தாங்களே பயிற்சியளித்து கொண்டு,
பல்வேறு விதமான நிகழ்ச்சிகளை வழங்கி, பார்வையாளர்களை உண்மையிலேயே வியக்க செய்து
விட்டார்கள் அமெரிக்க தமிழர்கள்.
– வாஷிங்டன் சங்கர பாண்டியன், பீற்றர் இரோனிமூஸ் இருவரும் சேர்ந்து
திட்டமிட்டு அரங்கேற்றிய அறிவியல் வினாடி வினா நிகழ்ச்சிக்கும்,
– அட்லாண்டா செல்வக்குமார் எழுதி அரங்கேற்றிய “பிரதிமை” எனும்
நாடகத்துக்கும்,
– ஈழத்தமிழர்களின் துயரங்களை எதிரொலித்த பா.சுந்தர வடிவேல் எழுதி இயக்கிய
“என்ன செய்யப்போகிறார்?” எனும் நாடகத்துக்கும்
ஏகப்பட்ட வரவேற்பு.
மனித உரிமைப்போராளியும், அமெரிக்கப் பெண்மணியுமான ஹெலன் ஷாண்டர் நிகழ்த்திய
இலங்கை இனப்படுகொலை பற்றிய ஆய்வுரையை சர்வதேச மனசாட்சி என்றே குறிப்பிடலாம்.
“வென்றாக வேண்டும்” தமிழ் எனும் தலைப்பில் என் தலைமையில் நடந்த
கவியரங்கத்துக்கு ஒன்றரை மணிநேரம் ஒதுக்கியிருந்தார்கள். பங்கேற்ற எட்டுக்
கவிஞர்களும் அமெரிக்காவில் இருப்பவர்கள். சும்மா சொல்லக்கூடாது. .. கவிதைகள்
மட்டுமல்ல, அவர்களின் நேர உணர்வும் வரவேற்கப்படக் கூடியதாகவே இருந்தது.
தமிழ் அன்னை என்னை பார்த்து பல கேள்விகள் கேட்பதை போல என் கவிதையை
எழுதியிருந்தேன். பதினைந்து நிமிடங்கள் அரங்கேறிய அக்கவிதையின் முடிவில்
அரங்கில் இருந்த அவ்வளவு பேரும் எழுந்து நின்று தொடர்ந்து கரவொலி எழுப்பியது.
எனக்கொரு புதிய நெகிழ்வுட்டக்கூடிய அனுபவம்.
வெற்றிலைக்குன்று எனும் வியத்தகு தமிழ் பெயரை, பத்தலக்குண்டு என்கிறாயே! பாவி
நீ விளங்குவாயா?
திருவள்ளுவர் தெருவை TV Street என்கிறாரே உன் TV மோகத்துக்கு ஒரு தீர்வே
கிடையாதா.
அடையாறு என்பதை அடையார் என்கிறாயே அடைய வேண்டியதை அடையவே மாட்டாய் நீ.
என்று நீண்ட என் வசன கவிதையின் பெரும்பான்மையான வரிகளுக்கு கிடைத்த வரவேற்பும்,
கரவொலியும் அமெரிக்கத் தமிழர்களின் தமிழுணர்வையே எதிரொலித்தது.
ஒவ்வொரு ஆண்டும் தமிழ் விழாவில் ஒரு பிரகடனத்தை மையப்படுத்தியே நிகழ்ச்சிகளை
நடத்துகிறார்கள். அண்ணா நூற்றாண்டு விழாவாக அரங்கேறிய இவ்வாண்டு தமிழ் விழா,
“உணர்வு கொள்வோம், உரிமை காப்போம்” எனும் முழக்கத்தை அடிப்படையாக
கொண்டிருந்தது.
ஒவ்வொரு ஆண்டும் தமிழ் விழாவில் வெளியிடப்படுகிற மலரில் மிகவும் ஆய்வு
பூர்வமான, செழுமையான படைப்புகளை உலக அளவில் படைப்பாளிகளிடமிருந்து திரட்டி
வெளியிடுதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். இவ்வாண்டு மலரை விழா மேடையில்
தமிழருவி மணியன் வெளியிட, அதை பெற்றுக்கொள்கிற வாய்ப்பு எனக்கு கிட்டியது.
மிகவும் பொருட்செலவில் உயர்ரக தாளில் சொந்த செலவில் அச்சடித்து, அனுப்பி
வைக்கிறார் மதுரை மீனாட்சி மருத்துவமனை நிறுவனர் மருத்துவர் ந.சேதுராமன்.
அடுத்த ஆண்டு தமிழ் விழா – 2010 ஜூலை முதல் வாரத்தில் கனெக்டிக் நகரில் நடைபெற
இருப்பதால் அதற்கான பணிகளை இப்போதே தொடங்கிவிட்டார். பேரவையின் தலைவர் டாக்டர்
முத்துவேல் செல்லையா.
அட்லாண்டா விமான நிலையத்தில் வாஷிங்டனுக்கு என்னை வழி அனுப்பும்போது, இது
மாதிரி நாங்க சந்தோஷமா இருந்து கூட்டம், கூட்டமாக நம்ம ஜனங்களை பார்க்க இன்னும்
ஒரு வருஷம் காத்து இருக்கணும் என இரவிக்குமார் (விழா பொறுப்பாளர்) சொன்ன போது
அவரது குரல் உடைந்திருந்தது.
Cornering Prabhakaran
India Today – India’s most widely read magazine.: “Raj Chengappa”
EXCLUSIVE: FROM THE LANKA BATTLE ZONE

It’s only when you fly over the Wanni jungle do you begin to understand why it’s taken the Sri Lankan armed forces months to wrest territory from the Liberation Tigers of Tamil Eelam (LTTE).
And why despite launching a decisive assault to recapture the crucial city of Kilinochchi, the LTTE’s headquarters in the northern province, the security forces have made slow progress.
They are still some 10 km from the main town which they had planned to take before they got bogged down by the north-east monsoon that has just set in.
The trees of the surrounding tropical jungle soar to over 60 ft in many places and the canopy is so thick and dense that even sunlight finds it difficult to penetrate.
![]() |
These are the jungles that the LTTE has made its second home, melting into greenery whenever there is a major assault and setting up deadly booby traps and ambushes for government troops in pursuit.
It’s the reason why the Sri Lankan Air Force Bell 212 helicopter flies at tree-top height right through the 40-minute-ride from Anuradhapura to the frontlines of the battle.
As Squadron Leader Dakshin Pereira explained later, “If we fly higher we become sitting ducks to sniper fire—it gives the terrorists time to aim and shoot. When we fly just over the trees they have no time to cock their guns and fire.”
Suddenly the jungle thins out and a small clearing appears. Four armed soldiers guard its periphery as the helicopter swoops down and deposits us on wet ground.
Even the landing spots are decided in an impromptu manner and changed everyday to avoid detection and fire by the LTTE.
I am driven to meet Major General Jagath Dias, commander of the 57 Division, the main strike force of the army that has over 10,000 men with their armaments moving determinedly towards
Kilinochchi.
The divisional headquarters is a makeshift row of zinc sheet-covered huts. Dias uses one of these as his office. It bristles with communication equipment and has a large map that is updated by the hour to show the progress of his four brigades.
Sporting a bushy moustache, Dias is hands on as is his boss Lt-General Sarath Fonseka who despite being away in the US on a well-earned holiday, calls everyday to check the progress.
Dias has fought the LTTE in previous years in many terrains.
He refuses to be rushed into an all-out assault to capture the town or occupy highways as in the past.
Instead, he uses guerrilla tactics that the LTTE had specialised in. So his men move out in platoons into the jungles, clearing the area of mines.
On the table is a large cross-sectional map with tiny blue flags to indicate where his platoons are engaging the LTTE.
At any given time, they are fighting at 30 different points, forcing the LTTE to spread out its defences.
Military balance
|
Dias says, “We are deliberately drawing LTTE troops into the jungles as we find that they don’t seem to fight there as well as before. Now we are fighting a guerrilla war while the LTTE tends to rely on conventional tactics.”
I travel to the frontline by a Tata truck that has an armour-plate chasis to protect against mines. We whizz past abandoned villages.
My escort Colonel Priyantha Gunaratne points to LTTE bunkers and fortified bunds that the army had to destroy to overcome resistance.
He claims that the civilians were forced to leave their houses by the LTTE who used them as a human shield when they retreated and also to recruit their young.
They left their dogs behind and these have become a menace for the troops, poaching on their food and attacking some of them.
We reach Mallawi town, once a district centre, which now has most of its rooftops blown away.
In 2002, I had attended a press conference here held by LTTE chief Velupillai Prabhakaran after the then government had declared a ceasefire.
He was in full command, having won in the previous years decisive military battles against a demoralised Sri Lankan Army that saw him gain control of districts in the North, East and parts of the West.
After 9/11, terror was a bad word and Prabhakaran cleverly sheathed his claws. For him, the ceasefire was an opportunity not only to set up LTTE’s civil control over the region but also consolidate its armed wing.
He formed a Tamil Eelam civil service cadre and police that even collected taxes and controlled law and order.
His dream of establishing an independent Tamil nation seemed real till Mahinda Rajapakse emerged as the President in late 2005 and months later scrapped the ceasefire agreement and launched an all-out war.
Fire power |
||
Sri Lanka |
LTTE |
|
Soldiers |
30,000 |
5,000 |
Tanks |
200 |
— |
Artillery guns |
400 |
60 |
Attack aircraft |
60 |
3* |
Fast-attack vessels |
40 |
30* |
* Only for Divisions operating in the battle zone. |
Mallawi was also a centre for NGOs who provided humanitarian aid to the Tamils living in the area.
They were asked to leave in September when the offensive began.
The Brigade Major Kaushal Gunashekara, who rides a Bajaj Pulsar with a gun-toting assistant seated behind, charges that many of them supplied arms and money to the Tigers.
He takes me to a graveyard for the so called LTTE martyrs where the stones are well-cemented, in contrast to the mud huts the residents lived in.
We reach the last checkpost where a platoon is getting ready to head to battle, donning their backpacks and helmets.
In their early 20s, they look sleep deprived but determined. The deep boom of artillery fire rends the air and it’s the first time I get a sense that I am in the thick of the battle.
I ask Lance Corporal Manjula Kariyawasam what he thinks of the LTTE. He says: “They fight well in the beginning but if you show stiff resistance they usually run away.”
The helicopter to ferry me back lands at a nearby field and when we board we find that our companions are three young soldiers, all nursing gory wounds and one lying on the floor of the chopper.
Just as we settle down, the pilot asks us to get off. Two soldiers had been grievously injured and they have been ordered to pick them up as well.
In five minutes, the chopper is back with the injured personnel and it is a disturbing sight.
Two of them, whom I just talked to, lie on the floor badly injured. One of them had his left leg blown away after stepping on a mine and also lost his right eye.
He lay on the floor with a drip bottle, blood still oozing from his wound. The other had pellet marks all over his body and his leg muscles seemed to have been destroyed.
We completed the journey back to base in pensive silence. This is a war where no mercy is asked or given.
Already, over 10,000 Tigers have been killed in the fighting in the past two years—reducing their strength of trained personnel to around 5,000.
The Sri Lankan Army too has lost over 2,000 of its men, a third of them to mine blasts. It is a fight to finish—a determined battle by the Sri Lankan Government to defeat the LTTE, regain territory and capture Prabhakaran—dead or alive.
A day earlier at his residence in Colombo, President Rajapakse told me: “For us this war will be over only when we get Prabhakaran and his key deputies.”
Under Rajapakse’s leadership, the Sri Lankan Government has made substantial progress in the conduct of the war. Much of it has to do with the decisive political will and the unwavering support to the armed forces.
What has helped is that by appointing his brother Gotabhaya as the defence secretary, there has been a rare unanimity of tactics and clarity of purpose.
This has seen the Sri Lankan armed forces take the Eastern province last year after successfully winning over Karuna, Prabhakaran’s former military commander, who joined forces with them to put the LTTE on the run.
The Government then held provincial elections in the East in May and Sivanesathurai Santhirakanthan alias Pillayan, a former LTTE child soldier and political leader who defected along with Karuna, emerged as the chief minister.
Meanwhile, Karuna was rewarded with a seat in Parliament under the nominated category.
Having secured the East and loosened the stranglehold the Tigers had in Mannar in the West, the Sri Lankan armed forces have restricted the LTTE’s writ to two major provinces in the North, Kilinochchi and Mullaittivu, the vital port town that the Sea Tigers use as a base.
Showing that they are still a formidable force to reckon with, the Tigers have put up stiff resistance in these two districts and then counter-attacked with terror strikes and air raids over Colombo.
The LTTE is said to have two light aircraft which they use with tremendous psychological advantage.
On October 28, the aircraft evaded radar detection and dropped a couple of bombs over Colombo resulting in a blackout for an hour.
Despite these strikes, experts agree that the LTTE is in a bad shape. Intercepts of their wireless communications show them urging their cadres to stay on and battle it out.
With the Government’s intelligence proving to be good, they have been able to strike decisively at key LTTE leaders even killing their political chief Thamilselvan recently.

Prabhakaran, who is on the run has withdrawn reportedly to the jungles around Puthukkudiyiruppu using the two lakh Tamil refugees as a human shield against Sri Lankan air raids.
Other experts though believe that the LTTE still has the capability of bouncing back and the Sri Lankan Army is being overstretched and would be bogged down in Wanni.
Signs that the LTTE was losing ground became evident when major political parties in Tamil Nadu, lead by the ruling DMK, protested against “human rights violations” of Tamils in Sri Lanka demanding a ceasefire.
With the DMK, a key ally of the Congress-led UPA Government at the Centre, threatening to have its MPs resign from Parliament and ministers quit the Union Cabinet, Prime Minister Manmohan Singh acted swiftly to quell the crisis.
He called up Rajapakse and gave him an earful about human rights violations of Sri Lankan Tamils and also about Indian fishermen near the Gulf at Mannar being shot at by the Sri Lankan Navy.
While not calling for a ceasefire, he reiterated India’s stand that there is no military solution to the ethnic crisis and that Rajapakse’s Government must come up with a credible political process.
Rajapakse though is sticking to his standthat he needs to continue the military operations against the LTTE and will not agree to a ceasefire.
He maintains that a political solution would emerge once Prabhakaran is defeated. As an example of his sincerity he points to the East where he claims to have restored the democratic process.
He also states that he has convened an all-party committee consisting of the major Sinhala parties to go into the question of devolution of powers to the Tamils.
The committee though has run into trouble with the United National Party, the main Opposition party, pulling out of the talks.
Meanwhile, the pro-LTTE Sri Lankan Tamil MPs have been as critical of the way Rajapakse’s Government has been conducting the war. R. Sampanthan, an MP and parliamentary leader of the Tamil National Alliance party, says that the all-party committee is “a charade and a hoax”.
He says, “The Government is intent on seeking a purely military solution. This war is against the legitimate rights of the Tamil people. The Government has never come up with a set of proposals that can constitute a political challenge to the LTTE.”
He is critical of Rajapakse’s showcasing the East saying, “The province doesn’t enjoy the powers as that of an Indian state like Tamil Nadu or for that matter a Union Territory of India. There is no autonomy or devolution of powers. The provincial government is a puppet in the hands of the Sri Lankan Government.”
India, which so far had nuanced its policy in Sri Lanka, is forced to make a strategic return into its affairs after the Tamil Nadu fallout.
After the failure of the 1987 Indo-Sri Lankan Accord and with the Indian Peace Keeping Force being asked to leave in 1990, India has been averse to intervene militarily again in Sri Lanka’s civil war.
It has refrained from selling arms to the Government, though of late it has assisted with intelligence and the supply of radars.
Initially, the Indian Government allowed Rajapakse to conduct war in the North with a relatively free hand as it looked upon the LTTE as a terrorist organisation which, among other things, had assassinated Rajiv Gandhi.
But now India is pressuring Rajapakse to come up with a parallel political process that would work for genuine autonomy for the Tamils.
While Rajapakse continues to have the support of the Sinhala majority, despite inflation being over 25 per cent, he is unlikely to let up on the military operations.
But if the war drags on till mid next year and casualties mount, then his Government would begin to feel the heat.
Prabhakaran knows that and has deliberately slowed down the pace of the battle.
He is now biding his time. In the past he has bounced back after being in a seemingly helpless position. But this time he is being confronted by a resolute Sri Lankan Government and an army whose morale is high and tactics that match his if not better than them.
Prabhakaran has never been in a situation as tight as this and is going to find it difficult to come out of the corner that he finds himself in.
Related links:
- Exclusive interview with Lankan President Rajapakse
- In the east, a fragile peace
- LTTE chief decorates Air Tigers
- We’re pushing ahead in LTTE strongholds: Lanka Army
Recent Comments