Archive
Paithiyakkaaran on S Ramakrishnan Short Story collection: Tamil Fiction Reviews
Jeyamohan
http://www.jeyamohan.in/?p=6321
ஒரு வாசகன் இலக்கியப்படைப்பில் தான் வாசித்தவற்றைப் பற்றிச் சொல்ல வந்தாலே கேட்கப்படும் மூன்று கேள்விகள் உண்டு .
1. இதையெல்லாம் அந்த எழுத்தாளன் உத்தேசித்திருப்பானா?
2. இதுக்கெல்லாம் அந்த எழுத்திலே இடமிருக்கா
3. இது எனக்கு ஏன் தோணல்லை?
மூன்றுமே இலக்கியத்தை சரிவர உள்வாங்கத் தடையாகும் வினாக்கள்.
மதியம் திங்கள், ஜனவரி 11, 2010
எஸ்.ராமகிருஷ்ணன்: விருட்ச(ங்களின்)த்தின் விதை(கள்)
வாழ்க்கையின் போக்கில் எந்தவொரு சுழலை எதிர்கொள்ள நேர்ந்தாலும் அதிலிருந்து மீள்வதற்கு கலையின் துணையை நாடுவது மனிதர்களின் இயல்பு. அது நெருங்கிய மனிதர்களின் இறப்பாக இருக்கலாம், பிரிவாக இருக்கலாம், அல்லது காதலை கண்டடைந்த சந்தோஷமாக இருக்கலாம். எப்படியாக இருந்தாலும் அறியப்பட்ட உணர்ச்சியிலிருந்து வெளியேற கலை என்னும் வடிவமே பலவகைகளில் துணையாக இருக்கிறது. இதுகுறித்து பிரியத்துக்குரிய எஸ்.ராமகிருஷ்ணன் என்னிடமும், நண்பர் சுரேஷ் கண்ணனிடமும் புத்தகக் கண்காட்சியில் நீண்ட நேரம் உரையாடினார். இந்த சந்திப்பு குறித்த இடுகையை நண்பர் சுரேஷ் கண்ணன் விரிவாக எழுதுவார் என்பதால் இங்கு அதை தவிர்க்கிறேன். ஆனால், முதல் வாக்கியத்திலிருந்துதான் இந்த இடுகை கிளை பரப்பி விரிகிறது என்பதை குறிப்பிட்டு சொல்ல வேண்டியது கடமை.
‘கலை’ என்ற சொல்லுக்கு பின்னால் கவிதை, சிறுகதைகள், புதினங்கள், ஓவியம், இசை, நாடகம்… என பல்வேறு சொற்கள் அடங்கியிருக்கின்றன. இவையெல்லாமே உடலியல் சார்ந்த கலைச் செயற்பாடுகள். நிலையான புள்ளியில் நின்று சாத்தியப்படுவன அல்ல. பல்வேறு திசைகளில், குறிகளற்று பயணிப்பவை. இந்த புரிதலில் இருந்து எஸ்ராவின் சிறுகதைகளை பார்க்கலாம் என்று தோன்றுகிறது.
காரணம், தமிழ்ச் சிறுகதை உலகு என்னும் பெருங்கடலில் கலந்த – கலக்கும் – மிகப் பெரிய ஆறு, எஸ்ரா. ஜீவநதிகளை போல், வற்றாமல் சிறுகதைகளை தொடர்ந்து எழுதி வருபவர். இவரளவுக்கு தொடர்ச்சியாக சிறுகதைகளை எழுதி வருபவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். யதார்த்த – அ யதார்த்த – மாந்த்ரீக – வட்டச்சூழல் – என அனைத்து வடிவங்களிலும் புனைவு உலகை பரிசோதனை செய்திருக்கிறார். தொடர்ந்த பங்களிப்பின் வழியே எல்லாவிதமான மன அழுத்த; மனப் போக்கு கொண்டவர்களுக்கும் தன் பிரதிகளின் வழியே அளவில் சிறியதான சாவியை எடுத்து தருகிறார். அந்தச் சாவியைக் கொண்டு கதவை திறக்க வேண்டியது மட்டுமே வாசகனின்/வாசகியின் வேலை. அப்படி அவன்/ள் திறக்கும்பட்சத்தில் விரிவது 7 கடல்கள், 7 மலைகள் தாண்டி மறைந்திருக்கும் வாழ்க்கையின் ரகசியம். இன்னொரு விதமாகவும் இதையே சொல்லலாம். எஸ்ராவின் சிறுகதைகளுக்குள் எழுதப்படாத நாவல்கள் மறைந்திருக்கின்றன.
எஸ்ராவின் இரண்டு சிறுகதைகளை உதாரணத்துக்கு எடுத்துக் கொள்வோம். ‘உறவும் பிரிவும் இன்றி’, ‘தெரிந்தவர்கள்’. இந்த இரு சிறுகதைகளும் 80களில் எழுதப்பட்டவை. சென்னை புக்ஸ் சார்பாக வெளியான ‘வெளியில் ஒருவன்’ தொகுப்பில் இடம் பெற்றவை. இதுதான் எஸ்ராவின் முதல் தொகுப்பு. இன்றைய தேதி வரை நூற்றுக்கும் அதிகமான சிறுகதைகளை எஸ்ரா எழுதியிருக்க, ஆரம்பக்கால இந்த இரு புனைவுகளை மட்டுமே இந்த இடுகை ஏன் கணக்கில் எடுக்க வேண்டும்?
தனிப்பட்ட காரணங்கள் எதுவுமில்லை. எழுத ஆரம்பித்த காலத்தில் பிரசவமான படைப்பு எப்படி இன்றும் உயிர்த்துடிப்புடன் இருக்கிறது என்பதை பார்க்கவும், சின்ன ஊற்று எப்படி வற்றாத ஆறாக விரிந்தது என்பதை ஆராயவும்.
இது வாசகனின் பார்வையில் எழுதப்பட்ட இடுகை. விமர்சனம் அல்லது திறனாய்வு என்னும் வார்த்தைகளுக்குள் அடங்காது.
இந்த இரு புனைவுகளுமே ‘பணம்’ அல்லது ‘கடன்’ என்னும் மூன்றெழுத்து தரும் உணர்ச்சியை அடிநாதமாக கொண்டவை.
‘உறவும் பிரிவும் இன்றி’ சிறுகதையில் தயாளன் – கதிரேசன் என இருவர் வருகிறார்கள். இருவரும் உறவுக்காரர்கள். தயாளனின் தங்கச்சியை கதிரேசனின் தம்பிக்கு திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்கள்.
தயாளனின் ஊரில் காலியாக ஒரு கடை இருக்கிறது. அதன் உரிமையாளர் மார்டின். தயாளனும் மார்ட்டினும் ஒரே இடத்தில் வேலைப் பார்ப்பவர்கள். எனவே மார்ட்டினிடம் பேசி அந்தக் கடையை தனக்கு எடுத்து தரும்படி தயாளனிடம் வேண்டுகோள் வைக்கிறார் கதிரேசன். அதற்காக முன் பணமாக ரூபாய் ஆயிரத்தை தயாளனிடம் தரவும் செய்கிறார்.
ஆனால், கடையை இன்னொருவரிடம் தர மார்ட்டினுக்கு விருப்பமில்லை. தானே நடத்தப் போவதாக சொல்கிறான். எனவே கதிரேசனிடம் பணம் தருவதற்காக தயாளன் காத்திருக்கிறான். ஆனால், நடுவில் சில எதிர்பாராத தருணங்களால் அந்தப் பணம் செலவாகிவிடுகிறது. கதிரேசன் வந்து கேட்கும்போது தயாளனிடம் பணமில்லை. பிறகு தருவதாக சொல்கிறான். ஆனால், ஒவ்வொரு முறை கதிரேசன் பணம் கேட்கும்போதும் இதே நிலையே தொடர்கிறது. தயாளனிடம் பணம் இல்லாத நேரமாக கதிரேசன் வருகிறார். ஒரு கட்டத்தில், நடுத்தெருவில் இருவருக்கும் கை கலப்பு ஏற்படுகிறது.
கதை என்று பார்த்தால் இவ்வளவுதான். ஆனால், அதை பிரம்மாண்டமான உணர்வாக மாற்றிவிடுகிறார் எஸ்ரா.
சிறுகதையின் ஆரம்பம், கிழிந்த சட்டையுடன் தயாளன் சைக்கிளை தள்ளிக் கொண்டு போவதிலிருந்து ஆரம்பிக்கிறது. நாலாவது பத்தி, இப்படி வருகிறது:
”கதிரேசன் மச்சானை அடித்திருக்கக் கூடாது என்றுதான் தோன்றியது. அவர்தான் முதலில் அடித்தார். என்றாலும், அவன் அடித்தது போல் அவர் அடிக்கவில்லை. அப்போது அவனுக்கு ஏக கோபமாயிருந்தது. அவர் சட்டையைப் பிடித்து இழுத்ததும் பின்வாங்கத்தான் செய்தான். அவர்தான் கன்னத்தில் அறைந்தார்.”
7வது பத்தியின் ஆரம்பம் இது: ”கதிரேச மச்சான்தான் எவ்வளவு நல்லவர் என்று தோணியதும் மனதுக்குள் ஏதோ செய்தது.”
தயாளன் – கதிரேசன் ஆகிய இருவர் மீதும் தவறோ குற்றமோ இல்லை. சந்தர்ப்பங்கள் அப்படி அமைந்துவிட்டன என்பதை கதைச்சொல்லி முதலிலேயே தெளிவாக உணர்த்தி விடுகிறார்.
கடை வேண்டும் என முன்பணமாக ரூபாய் ஆயிரத்தை கதிரேசன் தரும் இடம் நுட்பமானது. ”மஞ்சள் பைக்கட்டில் இருந்து ரூபாயை எடுத்தார். பாதிக்கு மேல் பழைய தாள்கள். அஞ்சும் பத்துமாக எண்ணி நூல் போட்டுக் கட்டியிருந்தார்…”
தயாளனின் பார்வையில் செல்லும் இந்தக் கதையில் கதிரேசன் ஏற்படுத்தும் தாக்கத்தை விட, அவரது மனைவியும் குழந்தைகளும் தரும் பாதிப்பு அதிகம். இத்தனைக்கும் அவர்கள் புனைவில் அதிகம் வருவதில்லை. சொல்லிக் கொள்ளும்படியான உரையாடல்களும் அவர்களுக்குள் இல்லை. ஆனால், வாசகனா(கியா)ல் அதை எப்படி வேண்டுமானாலும் நிரப்பிக் கொள்ள முடியும்.
கிழிந்த ரூபாய் நோட்டுகள் என்றால் குடும்பம் வறுமை. கதிரேசனின் மனைவி நூல் கட்டி மோதிரத்தை அணிந்திருக்கிறாள். ஏழைகள். பணம் அவசியம். அது கிடைக்காதபோது கதிரேசன் தன் குடும்பத்தை எப்படி எதிர் கொண்டிருப்பார்? அவர் மனைவி வார்த்தைகளால் அவரை எப்படி துளைத்திருப்பாள்? குழந்தைகளின் பசியை எப்படி அவள் போக்கியிருப்பாள்? உறவினரிடம் தன் கணவன் பணம் கொடுத்து ஏமாந்துவிட்டான் என்பதை எப்படி எதிர்கொண்டிருப்பாள்?
தயாளனின் மனைவியும் கதையில் அதிகம் வரவில்லை. ஆனால், அவளது மருத்துவத்துக்காகத்தான் தயாளன் அந்தப் பணத்தையே செலவு செய்திருந்தான். எனில், தயாளனின் மனைவிக்கு இந்த விஷயம் தெரியுமா? கதிரேசனுக்கு பணத்தை திருப்பித் தந்துவிடுங்கள் என ஒருமுறைக் கூட அவள் சொன்னதில்லையா? குடும்பச் செலவை குறைத்து பணத்தை சேமித்து கதிரேசனுக்கு திருப்பித் தர ஏன் முயற்சி செய்யவில்லை?
இப்படி தொடரும் கேள்விகளுக்கு வாசகன் விடை தேடிக் கொண்டே செல்லும்போது எழுதப்படாத ஒரு நாவலை தன்னையும் அறியாமல் எழுத ஆரம்பிக்கிறான். தன் பிரதிகளின் வழியே அளவில் சிறியதான சாவியை எடுத்து எஸ்ரா தருகிறார் என்று குறிப்பிடுவது இதனால்தான். சிறுகதைகளுக்குள் நாவலை மறைத்து வைத்திருக்கும் ரகசியம்.
‘தெரிந்தவர்கள்’ சிறுகதை நண்பர்களுக்கு இடையிலானது.
வெளிநாட்டில் வேலைப் பார்ப்பவன் மணி. சம்பாதிக்கும் பணத்தை கதிருக்கு அனுப்புவான். கதிர் அதை மணியின் வீட்டில் தருவான். கடைசியாக மணி அனுப்பிய ரூபாய் பத்தாயிரத்தை கதிர் அவன் வீட்டில் தரவில்லை. தன் தங்கையின் திருமண செலவுக்கு அதை பயன்படுத்திக் கொண்டான். இப்படி செலவு செய்துவிட்டேன் என்பதையும் மணியிடம் கதிர் சொல்லவில்லை.
இச்சிறுகதை வெளிநாட்டிலிருந்து திரும்பி வரும் மணியின் பார்வையில் விரிகிறது. பிரதி முழுக்க அவன், அவன் என்றே வரும். இறுதியில்தான் மணி என்னும் பெயருடன் அவன் இருப்பான். அதேபோல் வெளிநாடு என எங்கும் குறிப்பிடப்பட்டிருக்காது. முதல் பத்தி, இப்படி ஆரம்பிக்கிறது:
”காலையில்தான் வந்திருந்தான். ஸ்டேஷனை விட்டு வெளியே வரும்போது குளிர் அதிகமாக இருந்தது காலையில். இந்தக் குளிர்க் காற்று கூட இங்கே அதன் இயல்பில் இருப்பதாகப்பட்டது. அவன் இருந்த இடத்தில் கடுங்குளிர், கடுமையான வெப்பம்.”
இறுதியில் இப்படி வருகிறது.
”நான் அனுப்பின ரூவா என்னாச்சு?”
பதில் சொல்லவில்லை.
”வரலையா?”
”வந்துச்சு.”
”என்ன செஞ்சே?”
”திடீர்னு கல்யாணம் பண்ண வேண்டியிருந்ததால செலவு ஆகிப் போச்சு. அப்பாவுக்கு வர வேண்டிய இடத்தில பணம் வரலே…”
”அதை எனக்கு எழுதியிருக்கலாம்ல. இல்ல வீட்ல பணத்தைக் கொடுத்திட்டு கேட்டு வாங்கி இருக்கலாம்ல…”
இப்படியே தொடரும் உரையாடல், இறுதியில் சண்டையில் முடிகிறது.
”உன் பிச்சைக்காசு ஒண்ணும் வேணா. நான் வரேன்” அவன் இறங்கிக் கீழே போனான். புழுதி கலைந்து பறந்தது. மணி எழுந்து நின்று பார்த்தான். கதிர் வேகமாகப் போய்க் கொண்டிருந்தான்.
நுணுக்கமான விஷயங்கள் இந்தக் கதை நெடுக உண்டு. மணியின் மனைவிக்கும், அம்மாவுக்குமான பிரச்னை. வெளிநாட்டிலிருந்து வந்திருக்கும் தம்பியிடம் தனியாக தன் வீட்டுக்கு வரும்படி அக்கா அழைப்பது, ”தனியா உங்கக்கா என்ன பேசினாங்க?” என மனைவி கேட்பது, ”நீங்க ஊர்ல இல்லாதப்ப உங்கக்கா இங்க எட்டிக் கூட பார்த்ததில்ல. உங்கம்மாவும் அவங்க வீட்லயேதான் இருந்தாங்க…”
கதிர் வீட்டு விவரணைகள் அபாரமானவை. மாடியில் தூங்கிக் கொண்டிருந்த கதிர், மணி வந்து எழுப்பியதும் மலங்க மலங்க விழிப்பது, மணி பணம் குறித்து கேட்பதற்குள், ”உனக்கு பிடிச்ச மீன் வாங்கிட்டு வரேன்” என சட்டென கீழே இறங்கிச் செல்வது, சாப்பிட்டு முடித்ததும் திருமணமான தங்கசியுடன் வருவதாக சொல்லி மணியை நாசுக்காக அவன் வீட்டுக்கு அனுப்புவது…
எந்த இடத்திலுமே இந்தக் கதையில் ப்ளாஷ்பேக் உத்தி செயல்படவில்லை. மணி – கதிர் நட்பு எப்போது ஆரம்பித்தது, எப்படி மலர்ந்தது என்பதெல்லாம் பிரதி சொல்லவேயில்லை. ஆனால், வாசிப்பவர்கள் அந்த இடத்தை நிரப்பிக் கொள்ளலாம்.
கதிரின் தங்கைக்கு மணியும் அண்ணன்தான். சந்தோஷமாக அப்படித்தான் அழைக்கிறாள். மணியின் வீட்டில் பணப் பிரச்னையில்லை. கதிரின் வீட்டில் தேவை அப்படி செய்ய வைத்தது. சொல்லிவிட்டு பணத்தை எடுத்திருக்கலாமே என்பது மணியின் வாதம். எடுத்தாலும் நீ தவறாக நினைக்கமாட்டாய் என்று நினைத்தேன் என்பது கதிரின் தரப்பு.
சரி, கதிர் கேட்டிருந்தால் மணி என்ன செய்திருப்பான்? மணி மறுத்திருந்தால் கதிர் என்ன செய்திருப்பான்?
இப்படியாக விரித்துக் கொண்டே செல்லலாம்.
இன்னொரு மாதிரியாக வாசிப்போம். ‘தெரிந்தவர்கள்’ சிறுகதையில் மணியும், கதிரும் உறவினர்களாக இருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும்? ‘உறவும் பிரிவும் இன்றி’ தயாளனும், கதிரேசனும் நண்பர்களாக இருந்திருந்தால் செலவான ஆயிரம் ரூபாய் குறித்த விவரணை எப்படி சென்றிருக்கும்? ‘தெரிந்தவர்கள்’ பிரதியில் ஏன் ப்ளாஷ்பேக் இல்லை? ‘உறவும் பிரிவும் இன்றி’யில் ஏன் ப்ளாஷ் பேக் இருக்கிறது?
இந்த சிறு சிறுகதைகளிலும் ஆண்களே முக்கிய பாத்திரங்களாக இருக்கிறார்கள். இதுவே பெண் பாத்திரங்களாக இருந்தால், இந்தச் சூழலை எப்படி எதிர்கொண்டிருப்பார்கள்? வெளிநாட்டில் வேலைப் பார்க்கும் பெண், தன் சிநேகிதிக்கு பணம் அனுப்பி வீட்டில் தரச் சொல்வதைவிட, தானே வீட்டுக்கு பணம் அனுப்பிவிடுவாள் என எளிமையாக இந்தக் கற்பனையை குறுக்கிவிடாமல் இருக்கும் பிரதிக்குள் ஊடுரிவிப் பார்த்தால் எப்படி இருக்கும்?
இப்படி யோசிக்க யோசிக்க விதை, விருட்சமாக வளர்ந்துக் கொண்டே செல்வதை காணலாம்.
அதனாலேயே எஸ்ராவின் சிறுகதைகள் அல்லது புனைவுகள், அனைத்து முனைகளிலும் திறந்த தன்மையுடையதாக இருக்கிறது என்று சொல்லத் தோன்றுகிறது. ஒவ்வொரு வாசிப்பின் நிகழ்வும் மற்றொரு வாசிப்புக்கான முன்னுரையாக அமைகிறது. இப்படி இவரது ஒவ்வொரு சிறுகதையை குறித்தும் சொல்லிக் கொண்டே போகலாம். அல்லது நாவலாக வாசித்துக் கொண்டே போகலாம்.
நன்றி: ‘எஸ். ராமகிருஷ்ணன் கதைகள்’ – உயிர்மை வெளியீடு.
Nanjil Nadan in Uyirmmai Magazine: உயிர்மை Notes & Writings from and on நாஞ்சில் நாடன்
சேத்தன் பகத்தும், நாஞ்சில் நாடனும்
மணி
புறநகர் பேருந்தின் – இலக்கியப்பதிவு:
சேத்தன் பகத்தின் எழுத்துக்கள் மெட்ரோதன்மையின் இளமைப்பக்கத்தைக் காட்டுகிற நேரத்தில் நாஞ்சில் நாடனின் ‘மொகித்தே’ கதை ஒரு மும்பை தமிழ் சாமான்யனின் அக, புற உலக வாழ்க்கையின் குறுக்குத்தோற்றத்தைக் காட்டுகிறது.
புறநகர்ப் பேருந்தில் பயணம் செய்யும் பயணியின், அதன் பேருந்து நடத்துனருக்குமான கதை. தளவாய் – மும்பாய் பெஸ்ட் – பயணி. தன் குடியிருப்பில் புதிதாய் வசிக்கவரும் மொகித்தே – பேருந்து நடத்துனர்.புதிதாய்க் குடிபுகுந்த வீட்டின் பூசைக்கு மொகித்தே அழைக்கிறான்.தளவாயும், அவன் மனைவியும் சென்று வருகிறார்கள். உறவு துளிர்க்கிறது.
இங்கிருந்து இட்லி போகிறது. அங்கிருந்து காய்கறி பரிவர்த்தனை.மொகித்தே – அவன் போகும் பேருந்துக்கும் நடத்துனராகிறார். ஆனால் அவனிடம் மட்டும் பயணச்சீட்டு வாங்கப்படுவதேயில்லை. தளவாய்க்குக் குற்றவுணர்ச்சி. கவனமாய் உணர்கிறான். இடையில் ஏறும் பரிசோதகர் பற்றிக் கவலை வேறு. நேராய் போய் மொகித்தேயிடம் கேட்கிறார். அவன் திரும்பிக் கேட்கும் கேள்விதான் – கதையின் நாதம்..
” எனக்கு சொந்தக்காரன் ஒருத்தனை எப்ப வேணும்னாலும் எத்தனை மட்டம் வேணும்னாலும் கூட்டிட்டுப் போலாம். கட்டணம் இல்லாமல். ஒரு பய கேக்கமுடியாது.”
” காய் அண்ணாதும்.. ? எனக்கு சொந்தக்காரன் இல்லையா .. நீ.. “
ஒன்றும் பேசமுடியவில்லை தளவாய்க்கு. நமக்கும்தான்.
கதை மெல்லிய நட்புறவையும், சகோரத்துவத்தையும் பற்றியது. மும்பை வாழ்வுக்கும், எழுத்துக்குமிடையேயான இடைவெளியைக் குறைக்கவல்லவை. புலம்பெயர்ந்தவர்களின் கலாச்சாரக் கலப்பின் நல்ல பக்கத்தைக் காட்டக்கூடியவை. இந்த மாதிரி மெல்லிய கதைகள்தான் உண்மை விளிம்புகள் எனப்படுகின்றன.
ஒரு வரியில் உறவுகள் இறுகி, பல்கி உயர்ந்து வானத்தையும் கிழித்து விடுகிறது. எல்லா நல்ல உறவுகள் எல்லாமே இப்படித்தான்.ஆர்ப்பாட்டமில்லாது அமைதியான நீரோடைபோல் தெளிவாய், ஈரமாய் ஓடிக்கொண்டேயிருக்கும். அது சாதி, மொழி தாண்டி உறவின் உணர்வுகள்.மும்பை போன்ற நகரில் புலம்பெயர்ந்து, நம் அக்கம் பக்கங்களில் அத்தகைய உறவுகளின் வாசம் கண்டோர் அதிபாக்கியசாலிகள். அவர்களின் அன்பு உலகங்கள் எல்லையற்றது.
கண்ணுக்குத் தெரியாத நட்பு நூலிழைகளுக்குள் அது இணைந்து விடுகிறது.‘யாதும் ஊரே.. யாவரும் கேளீர் ‘ என்று மேடை போட்டுப் பிளிறும் போலித் தன்மையற்றது அந்த உறவுகள். குறிப்பாய் இத்தகைய உறவுகளில் ‘சாதி‘வெகுவேகமாய்க் காணாமல் போய்விடுகிறது.
‘மொகித்தெ’ எந்த அரசியலும், தலைவர்களும் தரமுடியாத நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் – நம்மைப்போல் புலம்பெயர்ந்தவர்களுக்குக் கொடுத்து, நம் வாழ்க்கையின் இருப்பை அர்த்தமாக்குவான்.
மும்பை வாழ்வின் – அப்பட்டமான, நிர்வாண உண்மைகளைப் பதிவு செய்யும் பாசாங்கற்ற வரிகள் கீழேயுள்ளவை.
‘சமயங்களில் வேலை நேரத்துக்கு இணையாக பிரயாண நேரம் அமைந்துவிடும்.”
”வாடகைக்குக் குடியிருப்போரெனில் பதினோரு மாதத்தில் ஒரு முறை சனிப்பெயர்ச்சி“
“இட்லி சாம்பார் என்பது பாற்கடலைக் கடைந்தபோது திரண்டு வந்ததன் சாறு“
காலை அகட்டிவைக்கிற கண்டக்டர், சில்லறையில்லாததால் மராத்திய வசவு, போகும் வழியில் பேப்பேர் படிப்பு, உலகச் சந்தை அரட்டையடிப்பு, ( 40 %வாழ்க்கையைப் பயணத்தில் மும்பைக்காரர்கள் தொலைக்கிறார்கள் –என்கிறது ஒரு கணக்கு.) பயணச்சீட்டு துளையிடும் கருவியின் டிக்..டிக்..ஒலி.. பெஸ்ட் ( BEST) பேருந்தில் பயணம் செய்யும் வரம் பெற்றால் நீங்கள் கண்டிப்பாய் மொகித்தேவைத் தேடவேண்டும்…
எந்த அரசியலும், தலைவர்களும் தரமுடியாத நம்பிக்கையையும்,மகிழ்ச்சியையும் – நம்மைப்போல் புலம்பெயர்ந்தவர்களுக்குக் கொடுத்து, நம் வாழ்க்கையின் இருப்பை அர்த்தமாக்குவான்.
நாஞ்சில் நாடனின் மும்பை பற்றிய சிறுகதைகள், நாவல்கள் பெரும்பாலும் ஊரை நோக்கி எழும் ஏங்கல் பார்வை மற்றும் பழைய ஞாபகக்கிளறல்கள் மட்டும்தான் என்றாலும் ’மொகித்தே’ புறநகர் பேருந்து தமிழ் இலக்கியத்தில் படைக்கப்பட்ட காலம் தாண்டி நிற்கிற – மெட்ரோ சாமான்யன்.
*
கிராமங்கள் கூட மெட்ரோ புறநகரின் பிரதியாக மாறக்கூடிய வேகவளர்ச்சி.எதிர்கால இலக்கியத்தில் கிராம இலக்கியங்கள் புத்தகத்தில் மட்டுமான ஒரு பழைய நினைவாகத்தானிருக்கும் போல. இடம் சார்ந்த இலக்கியத்தின் எதிர்காலம் மெட்ரோ மற்றும் மெட்ரோ புறநகரில்தான் ஒட்டிக் கொண்டிருப்பதாக நினைக்கத் தோன்றுகிறது.
அறிவின் பரிமாணங்கள்: நாஞ்சில் நாடனின் வாய் கசந்தது: அ.ராமசாமி
சொல்லில் சுழன்ற இசை
உயிர்மையில் ‘இசைபட வாழ்தல்’ என்ற தலைப்பில் ஷாஜி எழுதிவரும் பத்தியின் முதல் தொகுதி சமீபத்தில் வெளிவந்தது. இதற்கான ஒரு அறிமுகக் கூட்டம் கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி சனிக்கிழமை மாலை சென்னை சிதம்பரம் செட்டியார் பள்ளி வளாகத்தில் அமைந்த சிவகாமி பெத்தாட்சி அரங்கில் நடைபெற்றது. இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், ரமேஷ் விநாயகம், பாடகர்கள் P.B. ஸ்ரீனிவாஸ், கார்த்திக், எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன், பிரபஞ்சன், எஸ்.ராமகிருஷ்ணன், மனுஷ்யபுத்திரன் ஆகியோர் நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினர்.
நிகழ்ச்சியை மெஹ்தி ஹஸன் ரசிகர் குழு, Saint Gobain Glass நிறுவனம் ஆகியோரின் ஒத்துழைப்புடன் உயிர்மை பதிப்பகம் ஏற்பாடு செய்திருந்தது.
நாஞ்சில் நாடன்
இசை இறை அனுபவம் என்று சொல்கிறார்கள். அதை விவரிக்க முடியாது. வேற்று மொழியில் பாடுகிறார்கள் என்று விமர்சிக்கிறார்கள். வாத்தியங்கள் ஊமை மொழியில் தானே பேசுகிறது. தங்கமே தமிழ் பாட்டு பாடு என எளிதாக சொல்லி விட்டு போகிறார்கள். ஆனால் பாடிக்கொண்டிருந்த தமிழ் பாடல்களை என்ன செய்தோம். நாட்டுப்புற ஆய்வாளர் அ.கா.பெருமாள் சொல்வார், குமரி மாவட்டத்தில் அறுபத்து மூன்று வகையான நிகழ்த்துக்கலைகள் இருந்தது என்று. ஆனால் அதில் இப்போது பதினோரு கலைகள் மாத்திரமே எஞ்சியிருக்கின்றன. அடுத்த தலைமுறையில் அதுவும் கூட இல்லாமல் போய்விடலாம் அந்த கலைகளில் பயன்படுத்திய வாத்தியங்களை இனி மியூஸியத்தில் கூட பார்க்க முடியாது. ஷாஜியின் இசை குறித்த இந்நூல் தமிழுக்கு அபூர்வ வரவு.
பாரதி மணி
என் தில்லி வாழ்க்கையை இப்போது அசைபோடும்போது, சில அனுபவங்களில் நான்தான் ஹீரோ என்பதுபோல் எனக்கே தோன்றினால், அதைப்பற்றி எழுதுவதைத் தவிர்த்துவிடுவேன். கட்டுரைகள் என்னைப்பற்றிய சுயதம்பட்டமாக அமைவதில் எனக்கு உடன்பாடில்லை.
என் ஒரே புத்தகமான ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ வெளி வருவதற்கு முன்பு, அதை அச்சுப்பிழைதிருத்துவதற்காக மனுஷ்ய புத்திரன் எனக்கு அனுப்பி யிருந்தார். அப்போது சென்னை வந்திருந்த நண்பர் நாஞ்சில் நாடன் என் வீட்டில் தங்கியிருந்தார்.
என் எல்லாக் கட்டுரைகளையும் மறுபடியும் ஒரே மூச்சில் படித்துமுடித்த அவரிடம், ‘நாஞ்சில், இதில் எங்காவது ஒரு இடத்திலாவது என்னை முன்னிலைப்படுத்தி எழுதியதாக இருக்கிறதா?’ என்று கேட்டேன். அதற்கு ‘இவை உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள். அவற்றில் எப்படி உங்களைத் தவிர்த்து எழுதமுடியும்? தன் புகழ் பாடவே புத்தகம் எழுதும் சிலர் உண்டு. இதில் எந்த இடத்திலும் அதுமாதிரி இல்லை. உங்கள் பரந்துபட்ட தில்லி அனுபவங்களை நேர்மையுடன் வாசகர்களுடன் பகிர்ந்துகொண்டதாகவே நான் நினைக்கிறேன். அதில் நீங்கள் வந்து போவதைத் தவிர்க்கவே முடியாது. அப்படி, இப்படினு ஒங்களப்பத்தி எழுதறதும் ஒரு சுவாரஸ்யமாத்தான் இருக்கு!’ என்று பதிலளித்தார்.
அவர் கொடுத்த தைரியத்தில்தான் இந்தக் கட்டுரையும் உங்கள் கையில் இருக்கிறது!
ஆஸ்பத்திரி – சுதேசமித்திரன்
நாவல் வடிவம் சர்வ சுதந்திரங்களையும் வழங்கும் ஒன்று. அந்தச் சுதந்திரத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு எழுதப்பெற்ற நாவல் ஆஸ்பத்திரி. சுதேசமித்திரனின் சிறப்பு என அவரது மொழியையும், கழிவிரக்கமற்ற சுயஎள்ளலையும், அங்கதத்தையும், வெளிப்படைத்தன்மையையும் கருதுவதுண்டு. இத்தனை வெளிப்படையான எழுத்து தமிழில் அபூர்வமானது. வாசகனைக் கூசச்செய்யும் உண்மை கொண்டு அறைவது. நேரடித்தன்மையும் நியாயமும் கொண்டது. மொழியைக் கையாளும் திறனும் தீவிரமும் கொண்டது எனவே தனித்தன்மையானது. (நாஞ்சில் நாடன் முன்னுரையிலிருந்து)
கால் முளைத்த கதைகள் – எஸ். ராமகிஷ்ணன் – உயிர்மை பதிப்பகம்
ஆந்தைக்குத் தூக்கம் என்றால் ரொம்பவும் பிடிக்கும். அது பகல் முழுவதும் தூங்கிக் கொண்டேயிருக்கும். ஒரு நாள் ஒரு ஆந்தை மரத்தில் தூங்கிக் கொண்டிருந்தது. மரங்கொத்தி ஒன்று அந்த மரத்தை கொத்தத் துவங்கியது. தூக்கம் கலைந்து ஆந்தை கோபத்துடன் ஏன் மரத்தைக் கொத்துகிறாய் என்று கேட்டது. மரங்கொத்தி என் பசிக்கு மரத்தைச் சாப்பிடுகிறேன். நீ ஏன் எப்போதும் தூங்கிக்கொண்டே இருக்கிறாய் என்று கேட்டது. பதில் சொல்வதற்குள் ஆந்தை கொட்டாவி விட்டுக் கொண்டே மறுபடியும் தூங்கியது. மறுநாள் அந்த மரத்தில் ஒரு தூக்கனாங்குருவி கூடு கட்டியது. அதன் சப்தம் கேட்டு விழித்த ஆந்தை எதற்காகக் கூடு கட்டுகிறாய் என்று கேட்டது.
குருவியும் குளிர்காலத்தில் பாதுகாப்பாக இருக்க வேண்டாமா என்றது. ஆந்தை என்னை குளிர் எதுவும் செய்யாது நான் கூடு கட்டத் தேவையில்லை என்று சொல்லிவிட்டு தூங்கிவிட்டது. குளிர்காலம் வந்தது. நட்சத்திரங்கள் கூட நடுங்கத் துவங்கின. மரங்களில் இருந்த கூடுகளில் பறவைகள் அடைந்து கொண்டு விட்டன. ஆந்தை குளிரில் நடுங்கியது. கூடு கட்டுவது எப்படி என்றே தெரியாமல் போய்விட்டோமே என்று கலங்கியது. குளிர் நாளுக்கு நாள் அதிகமாகி ஆந்தையை வாட்டி எடுத்து எப்படியாவது ஒரு கூடு கட்டிக்கொள்ள வேண்டும் என்று ஆந்தை முடிவு செய்தது. குளிர்காலம் முடிந்து கோடைக்காலம் வந்தது.
ஆந்தை ஒரேயரு நாள் கூடு கட்டுவதற்கு சுள்ளிகளைப் பொறுக்கி வந்து மரத்தில் அடுக்கியது. அதற்குள் சோம்பேறித்தனம் அதிகமாகிவிட திரும்பவும் தூங்கத் துவங்கிவிட்டது. அன்றிலிருந்து இன்று வரை ஆந்தையால் கூட்டைக் கட்ட முடியவில்லை. இது தென் ஆப்பிரிக்காவின் ஒரு பழங்குடியினத்தவரின் கதை.
இதுபோல நெல் எப்படி உருவானது?
நாய் ஏன் வாலை ஆட்டுகிறது?
பெண்களுக்கு ஏன் தாடி வளர்வதில்லை?
என்கிற ஒரு நைஜீரியா கதை உள்ளிட்ட 80 கதைகளை ஒரு தொகுப்பாக வெளியிட்டுள்ளார் எஸ். ராமகிருஷ்ணன்,
உலகமெங்கும் உள்ள முப்பது பழங்குடியினத்தவர்கள் சொன்ன கதைகளிலிருந்து தேர்வு செய்து இந்த தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. சிறுவர்களுக்காக எழுதப்பட்ட நூலாக சொல்லப்பட்டாலும் அனைவரும் படிக்கும்படி மிகவும் சுவாரசியமாக இருக்கிறது இந்த நூல்.ஆக, குழந்தைகளுடைய மகிழ்ச்சிக்காகத் தன் பங்களிப்பை செய்திருக்கின்ற எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்கும் நாமெல்லாம் நன்றி சொல்லலாமே.
Documentary & Short Filmmaker Amshan Kumar – அம்ஷன் குமார்
இயக்குநர் அம்ஷன் குமார் திரைப்படம் மீதான ஆர்வத்தால் தான் பார்த்து வந்த பணியை உதறி விட்டுத் திரைப்படத்துறையில் நுழைந்தவர். இருபது ஆண்டுகளுக்கும் மேலாக உலக சினிமாவையும், தமிழ் சினிமாவையும் அவதானித்து வருபவர். சினிமா குறித்த பல கட்டுரைகளை எழுதியவர். ஒருத்தி திரைப்படத்தின் இயக்குநர். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளிவந்த சுப்ரமணிய பாரதி என்கிற டாக்குமெண்டரியின் இயக்குநர். அசோகமித்திரனைப் பற்றியும் சாகித்திய அகாடமிக்காக ஒரு டாக்குமெண்டரி இயக்கியுள்ளார். சினிமா மட்டுமில்லாமல் இலக்கியத்தின் மீதும் ஆர்வம் உள்ளவர்.
ஜூன் 2005 மாத காலச்சுவடு இதழில் தமிழ்ப் படங்களில் பிற மொழிகள் என்னும் தலைப்பில் இயக்குநர் அம்ஷன் குமார் எழுதியுள்ள கட்டுரை தமிழ்ப் படங்களில் பிற மொழிகளின் வரலாற்றையும், இடத்தையும், பிற மொழிகள் பயன்படுத்தப்படுவதற்கான தமிழ் மன உளவியலையும், இன்ன பிறவற்றையும் மிகவும் விரிவான உதாரணங்களுடன் அலசி ஆராய்கிறது.
அம்ஷன் குமார் இப்பொழுது நிறைய ஆவணப்பட விழாக்கள் உலகெங்கிலும் நடக்கின்றன என்றார். இவற்றைப் பற்றி பத்திரிகைகளும் எழுத ஆரம்பித்து விட்டன. ஆனால் முக்கியமாக தொலைக்காட்சி சானல்கள் கண்டு கொள்வதேயில்லை. அவ்வப்போது அதையும் மீறி ஓரிரு ஆவணப்படங்களோ, குறும்படங்களோ தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்படுகின்றன. ஆனால் அதுவும் வர்த்தக ரீதியில் வெற்றி பெறுவதில்லை என்று சொல்லிவிடுகின்றனர். ஆனால் உண்மையில் வர்த்தக ரீதியில் இவை வெற்றிபெறுவதை தொலைக்காட்சிகள் விரும்புவதில்லை. இரண்டு நாண்களுக்கு முன்னர் செய்தித்தாள்களில் ஒரு சிறிய செய்தி வந்திருந்தது. சீனாவில், பீஜிங்கில் நடக்க இருக்கும் ஒரு திரைப்பட விழாவில் தமிழிலிருந்து ஆறு படங்கள் அனுப்பப்படுகின்றனவாம்.
என்ன படங்கள்?
திருடா திருடி, தூள், கில்லி, இன்னமும் வேறெதோ படங்கள். வர்த்தக ரீதியில் உள்ள படங்களைத்தான் அனுப்புகின்றனராம். அனுப்பிவிட்டுப் போகட்டும்….
‘யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்’ என்று அனைவர் மீதும் நாம் பார்க்கும் படங்களையே திணிக்கின்றனர். ஆனால் சீனாவில் உள்ளவர்கள் இந்தப் படங்களை விரும்புவாரா? அதைப் பற்றி யாரும் யோசிப்பதில்லை. நேரு திரைப்படங்களுக்கான பரிசுகள்/விருதுகளைத் தொடங்கும்போது நல்ல படங்கள், யாராலும் கவனிக்கப்படாத படங்கள் ஆகியவற்றை முன்னுக்குக் கொண்டு வரவேண்டும் என்பதற்காகச் செய்தார். ஆனால் இப்பொழுது வர்த்தகப் படங்களுக்குத்தான் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. அதல்ல நேருவின் நோக்கம்.
1950களில் ரஷ்யாவிலிருந்து புடோகின்(?) என்றொரு ரஷ்ய திரைப்பட இயக்குனர் இந்தியா வந்திருந்தார். அவருக்கு இந்தியப் படங்களைப் பார்க்க ஆசையாயிருந்தது. பல படங்களை அவருக்குக் காண்பித்தனர். அவர் அத்தனை படங்களையும் பார்த்து விட்டு, இவையெல்லாம் இந்தியாவில் எடுத்த படங்கள், ஆனால் இந்தியப் படங்கள் அல்ல என்றார்.
பின்னர் நிமாய் கோஷ் (Nemai Ghosh) என்ற வங்காளி எடுத்திருந்த ‘சின்னாமுல்’ (Chinnamul) என்ற படத்தை அவருக்குக் காண்பித்தனர். படம் பார்க்க ஆரம்பித்த ஐந்து நிமிடங்களிலேயே அவர் எழுந்திருந்து, இதுதான் இந்தியப் படம் என்று கோஷைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டார். பின்னர், ரஷ்யா சென்றதும், சின்னாமுல்லை அங்கு திரையிட வைத்தார். இந்தியாவில் எத்தனை பிரிண்டுகள் போனதோ தெரியாது, ஆனால் ரஷ்யாவில் 140 பிரிண்டுகள் போட்டனர்.
நல்ல தரமான படங்களுக்கு இந்தியாவில் சந்தையை ஏற்படுத்த வேண்டும் என்று முடித்தார் அம்ஷன் குமார். சிந்தனை வட்டத்துடன் தனக்குள்ள தொடர்பு, சுப்ரமண்ய பாரதி பற்றி தான் இயக்கிய குறும்படம் பற்றியும் பேசினார்.
– குறும்பட/ஆவணப்பட விழா பரிசளிப்பு நிகழ்ச்சி
சந்திரசேகர வெங்கட ராமன் (CV Raman)
PKS said…
பத்ரி,
விழாவில் கலந்து கொண்டமைக்கும் அதைப் பற்றி எழுதியமைக்கும் நன்றி. உங்கள் பதிவின் சுட்டியை – விழா பற்றிய என் புகைப்படப் பதிவில் இணைத்துள்ளேன்.
நான்கு வருட உழைப்பின் பலன் இப்படம் என்றார் நியூஜெர்ஸி சிந்தனைவட்ட நிர்வாகியும் தயாரிப்பாளருமான முருகானந்தம். தொடர்ந்து, நோபல் பரிசு பெற்ற சந்திரசேகரைப் பற்றிய படம் எடுக்கிற ஆசையும் திட்டமும் வைத்திருக்கிறார். சுப்ரமணிய பாரதி, சி.வி. இராமன் வரிசையில் அவர் இன்னும் நிறைய படங்களைத் தயாரிக்க வேண்டும் என்றும், அதன் பலன்களைத் தமிழ்ச் சமூகம் உணரவும், உவந்து பெறவும் வேண்டுகிறேன்.
– பி.கே. சிவகுமார்
ஸ்ரீதர் எல்லை தாண்டாத புதுமைகள் | ![]() |
![]() |
|||
|
|||||
அஞ்சலி எல்லிஸ் ஆர். டங்கன் விட்டுச் சென்ற இடத்திலிருந்து தமிழ் சினிமாவைத் தொடர்ந்தவர் என ஸ்ரீதர் பற்றிய நினைவுகளைத் துவங்கலாம். அவர் எடுத்த எடுப்பிலேயே ஒரு புத்திசாலி இயக்குநர் என்று இளைஞர்கள் மத்தியில் அறியப்பட்டார். முதன் முதலாக ரசிகர்கள் ஒரு டைரக்டரின் பெயரைப் பார்த்து படத்திற்குப் போகத் துவங்கியது ஸ்ரீதர் படங்கள் வந்த பிறகுதான். அடுக்குமொழி வசனங்களால் கடுகடுத்துபோன நடிகர்களை அவர் தனது படங்களில் மென்மையான முகபாவங்களுடன் நடிக்க வைத்தார். காதல், நகைச்சுவை இரண்டையும் 1959ல் வெளிவந்த கல்யாணப் பரிசு படம் ஒரு புதிய தலைமுறை தமிழ் சினிமா ரசிகர்களை உருவாக்கியது. அது கல்லூரி வாழ்க்கையை ஒரு முக்கிய பகுதியாகக் கொண்ட படம். கல்லூரியில் படிக்கும் வயதை எப்போதோ தாண்டிய நடிகர்கள் அதில் மாணவர்களாக நடித்திருந்தார்கள். ஜெமினி கணேசன் சினிமாவிற்கு வருவதற்கு முன்னரேயே ஒரு கல்லூரியில் ட்யூட்டராக வேலை பார்த்தவர். ரசிகர்கள் இதையெல்லாம் எப்பொழுதும் பெரிதுபடுத்துவதில்லை. ஆனால் கல்யாண பரிசில் கல்லுரியில் நடக்கும் காதலும் கல்வி நிர்வாகத்தால் காதல் எவ்வாறு பார்க்கப்படுகிறது என்பதும் ரசிகர்களுக்கு புதிய நிகழ்வுகளாகத் தோன்றின. காதலைத் தியாகம் செய்வதாகக் காட்டப்படும் படங்கள் பெரும்பாலும் வெற்றி பெறுவதுண்டு. காதல் தியாகத்தை அடிப்படையாக் கொண்ட கல்யாணப்பரிசு, நெஞ்சில் ஓர் ஆலயம் இரண்டும் அவரது பெரும் வெற்றிப் படங்கள். ரசிகர்கள் தங்கள் மீது கொண்டிருக்கும் கழிவிரக்கம்தான் இதற்கு முக்கிய காரணம். காதலர்களாய் தங்களை உருவகித்துப் பார்க்கும் ரசிகர்கள் தியாகிகளாயும் தங்களை உருவகித்துக்கொள்ள இப்படங்கள் சந்தர்ப்பங்கள் தருகின்றன. இவையெல்லாம் தகுந்த விகிதாசாரத்தில் இருக்க வேண்டும். கல்யாணப் பரிசுக்கு பல வருடங்கள் கழித்து நெஞ்சிருக்கும் வரை (1967) என்ற படத்தை ஸ்ரீதர் எடுத்தார். இதிலும் முக்கோண காதல் கதை. நண்பனுக்காக காதலை தியாகம் செய்யும் கதாநாயகன் தன்னைப் புனிதமானவனாகக் காண்பிக்கவேண்டி துப் பாக்கியால் தன்னையே சுட்டுக் கொள்கிறான். படம் முழுவதும் நடிகர்கள் மேக்கப் போட்டுக்கொள்ளாது நடித்திருந்தார்கள். வி.கோபாலகிருஷ்ணன், சிவாஜி கணேசன் ஆகியோரின் நடிப்பும் நினைவில் கொள்ளும்படி இருந்தது. ஆனால் படத்தில் பொழுது போக்கு எதுவுமில்லை. சோகத்தை வடித்துக் கொட்டியிருந்தார் ஸ்ரீதர். பட விளம்பரங்களிலும் நடிகர்களின் புகைப்படங்கள் இல்லாமல் அவர்களது கறுப்பு வெள்ளை கோட்டு சித்திரங்கள் வரையப்பட்டிருந்தது படத்தின் வெற்றியை முற்றாக பாதித்தது. இதே கதையை டெக்னிக்கலரில் பணக்கார பின்னணியில் ராஜ்கபூர் ஏற்கனவே எடுத்திருந்த சங்கம் இந்திப் படம் வசூலில் சக்கைபோடு போட்டது.
நாடகத்திலிருந்து சினிமாவிற்கு வந்தாலும் சினிமாவில் நடிப்பதற்கு நாடகப் பயிற்சி அவசியம் இல்லை என்பதை அவர் நன்கு உணர்ந்திருந்தார். எந்தவித முன் அனுபவமும் இல்லாத பலரை புதுமுகங்களாக நடிக்கவைத்து வெற்றிபெற்றார். இந்த அணுகுமுறையால் சினிமாவில் பலரும் பின்னாட்களில் எளிதில் நுழைய முடிந்தது.
சித்ராலயா என்னும் சினிமா பத்திரிகையையும் அவர் நடத்தினார். Tabloid வடிவில் வந்த வழக்கமான சினிமா பத்திரிகையான அதில் சர்வதேசப் படங்கள் பற்றி ஒரு புதுப் பகுதியும் தலைக் காட்டியது. அதற்குள் பத்திரிகை நின்று போனது. இந்தி உட்பட பல மொழிப் படங்களை இயக்கிய பொழுதும் அவர் தமிழ்ப் பட இயக்குநராகத்தான் அறியப்பட்டார். மக்கள் மத்தியிலும் சினிமா உலகிலும் பிரபலமாக இருந்தாலும் பெரும் விருதுகள், அங்கீகாரங்கள் அவரை அடையவில்லை. அவர் அளவிற்கு சினிமாவில் பயணம் செய்த பிறமொழிக் கலைஞர்கள் தாதாசாகேப் பால்கே விருது பெற்றார்கள் என்பதை அறிந்தால் இங்குள்ளவர்களிடமிருந்து இறுக்கமான பெருமூச்சுகள் கிளம்பும். புகைப்படங்கள் உதவி: ஞானப்பிரகாசம் |
தமிழர் வாழ , தமிழ் மட்டும் போதுமா !!!
நன்றி -அம்ஷன் குமார் ,உயிர்மை.
தமிழுக்கு மிகுந்த சோதனைகள் வாய்த்துள்ளதாகத் திரும்பத் திரும்பக் குரல் எழுப்பப்பட்டு வருகிற ஒரு காலகட்டத்தில் நாம் இருந்து கொண்டிருக்கிறோம். தமிழுக்கு அப்படி என்னதான் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன என்று பார்ப்போம். ஒரு வகையில் பார்த்தால் முன்னெப் பொழுதும் இல்லாத வகையில் தமிழ் பல ஏற்றங்களைக் கண்டிருக்கிறது. உலகெங்கிலும் சுமார் எட்டு கோடித் தமிழர்கள் இன்று வாழ்கிறார்கள். இவர்கள் அனைவருமே தமிழ் பேசத் தெரிந்தவர்கள். பல தலைமுறைகளாக வெளிநாடுகளில் தங்கி அந்நாட்டு மொழியையும் வேறு மொழிகளையும் கற்றுக் கொண்டுவிட்டு, தமிழைப் பயன்படுத்தவே முடியாத சூழலில் தமிழ் பேசாத தமிழர்களும் இருக்கிறார்கள். அவர்களின் மொத்த எண்ணிக்கை சில ஆயிரங்களைத் தாண்டாது என்று கொள்ளலாம். இப்படியொரு அதிக அளவில் தமிழ் பேசத் தெரிந்தவர்கள் தமிழினம் தொடங்கிய காலம் முதல் இப்போதுதான் இருக்கிறார்கள். உலக மக்கள் தொகை பெருக்கத்தின் நேரடி விளைவாகவும் இதனைப் பார்த்தால் இதற்கு தனிச்சிறப்பு இருப்பதாகவும் கொள்ளமுடியாது.
ஆனால் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்கையும் இப்பொழுது உள்ள அளவிற்கு இதுநாள்வரை இருந்ததில்லை என்பதை ஒரு பலமாகவும் பார்க்கலாம். தமிழில் பத்திரிகைகள், புத்தகங்கள் எண்ணற்ற அளவில் ஆண்டுதோறும் பிரசுரமாகின்றன. தமிழ்புத்தகங்களின் மொத்த ஆண்டு விற்பனைத் தொகை ரூ.80 கோடியைத் தாண்டிவிட்டது. எட்டு கோடி தமிழர்களின் புத்தகச் செலவு இதுதான் என்று பார்க்கும் பொழுது இந்த தொகை அவ்வளவு பொருட்படுத்தத்தக்கதாக இல்லை என்று கூறலாம். ஆனால் இவர்களில் ஆறரை கோடித் தமிழகத் தமிழர்கள்தான் புத்தகங்களை அதிகம் வாங்கியவர்கள். அது சுலபமான யூகம்தான். தமிழகத் தமிழர்களிலும் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் இருபது சதவிகிதத்தினருக்கு மேற்பட்டவர்கள். எழுதப் படிக்கத் தெரிந்தவர்களில் பலரும் புத்தகம் வாங்கும் பழக்கத்தை இன்னமும் கைக் கொள்ளாதவர்கள் என்றெல்லாம் பார்க்கும் பொழுது புத்தக விற்பனையின் ஏறுமுகம் நம்பிக்கை அளிப்பதாகவே உள்ளது.
நூலகங்கள் தவிர ஒரு சிறுபான்மையினரே புத்தகங்கள் வாங்குகின்றனர் என்றாலும் தமிழ்ப் புத்தகம் வாங்குபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் பெருகி வருவதைக் கண் கூடாகப் பார்க்கலாம். தமிழ் நிகழ்ச் சிகளைத் தயாரிக்கும் வானொலி, தொலைக்காட்சி நிலையங்கள் அதிகரித்து வருகின்றன. தமிழுக்கு செம் மொழி அங்கீகாரம் கிடைத்துள்ளது. கணினியிலும் தமிழ் காலந்தாழ்த்தாது நுழைந்து விட்டது.
ஆனால் தமிழைக் கல்வி நிலையங்களில் கற்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இளைஞர்கள் விருப்புடன் தமிழைக் கற்பதில்லை. மேடைகளில், தொலைக்காட்சிகளில் தமிழ் நிகழ்ச்சி நடத்துபவர்கள் தமிழ் சொற்களைச் சரியாக உச்சரிப்பதில்லை. ஆங்கிலத்தை விரும்பி உபயோகிக்கும் தமிழர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. இரண்டு தமிழர்கள் சந்தித்தால் அவர்கள் ஆங்கிலத்தில் உரையாடவே விரும்புகிறார்கள். தமிழ் மத்தியில் ஆட்சி மொழியாக வில்¬. தமிழ்நாட்டு பள்ளிக்கூடங்களில் தமிழ் போதிக்கப்படுவதில்லை. அவ்வாறே போதிக்கப்படும் இடங்களிலும் மேல்நிலை வகுப்புகளில் தமிழ் இடம் பெறுவதில்லை. அங் கெல்லாம் ஆங்கிலம் ஆதிக்கம் செலுத்துகிறது. குழந்தைகள் அப்பா அம்மா என்றெல்லாம் அழைக்காமல் டாடி, மம்மி என்று அழைக்கின்றனர். சுருங்கக் கூறினால் தமிழின் மிகப் பெரும் அச்சுறுத்தலாக ஆங்கிலம் கருதப்படுகிறது.
தனித்தமிழை வேண்டியவர்கள் வடமொழி மீதுதான் வெறுப்பு கொண்டிருந்தனர். ஆங்கிலத்தின் மீது அல்ல. இப்பொழுது குறைந்த அளவில் மட்டுமே வடமொழி தமிழுக்கு ஊறு விளைவிக்கும் மொழியாகக் கருதப்படுகிறது. வடமொழிச் சொற்களைத் தமிழில் கலக்கக்கூடாது என்பது பலரின் வேண்டுகோள். இந்த வேண்டுகோள் பெருமளவில் நிறைவேற்றப்பட்டதாகவே கொள்ளலாம். மணிப்பிரவாள நடை வழக்கொழிந்து போய்விட்டது. வட மொழிச் சொற்களுக்கு மாற்றான தமிழ்ச் சொற்களைப் பலரும் விருப்புடன் எடுத்தாளத் துவங்கிவிட்டனர். வட மொழியினால் தமிழுக்கு அபாயம் எதுவும் இல்லை. ஏனெனில் தமிழும் வடமொழியும் தனித்தனியேயான உள்ளார்ந்த குணங்கள் கொண்டவை. வடமொழியில் இதிகாசங்களும் வேதங்களும் வளர்ந்தன. தமிழில் இலக்கியங்களும் நீதி நூல்களும் படைக்கப்பட்டன. பக்தி இலக்கியங்கள் தோன்றும்வரை இந்த நடைமுறை இருந்திருக்கிறது. வட மொழி வழக்கொழிந்து போனதற்கும் தமிழ் இன்றளவும் மக்கள் மொழியாக இருப்பதற்கும் இவையும் கூட காரணங்கள் எனலாம்.
ஆனால் தமிழர்கள் தங்களுக்கு வைத்துள்ள பெயர்கள் தமிழ்ப் பெயர்களாக இருக்க வேண்டும் என்பதில் கருத்து வேற்றுமைகள் உள்ளன. இந்து சமயத்தைச் சேர்ந்த தமிழர்கள் இந்துக் கடவுள்களின் மற்றும் மகான்களின் பெயர்களைத் தங்களுக்கும் தங்கள் பிள்ளைகளுக்கும் வைப்பதால் அவை தமிழ்ச் சொற்களாக இருப்பதில்லை. பெரும்பாலும் அவை வடமொழி சார்ந்தவை. ஆனால் அப்பெயர்களை வைப்பவர்கள் சமய இறையுணர்வு காரணமாகச் செயல்படுகிறார்களேயன்றி அவர்கள் தமிழ் உணர்வற்றவர்கள் என்று கொள்வது தவறான கற்பிதம். தமிழர்களான இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சமணர்கள் போன்றோரும் தங்கள் இறைவழிபாட்டு பண்பினையொட்டி சமயப் பெயர்களைச் சூட்டுகிறார்கள். அப் பெயர்களும் அந்நிய மொழியிலிருந்து பெறப்பட்டவை. அவற்றுக்கும் மூலம் தமிழ் கிடையாது. கார்ல் மார்க்ஸ், சாக்ரடீஸ், இங்கர்சால் போன்ற அறிஞர்களின் பெயர்களை விரும்பி வைத்துக் கொள்பவர்களும் உள்ளனர். அப்பெயர்களும் தமிழ்ப் பெயர்கள் அல்ல. எனவே இந்துக்கள் மட்டும் தங்கள் இறை நம்பிக்கை அடிப்படையில் அமைந்த பெயர்களை அவை வடமொழி மூலம் கொண்டிருக்கின்றன என்கிற காரணத்தால் வைத்துக் கொள்ளக்கூடாது என்று கூறுவது எவ்வகையிலும் நியாயமானதல்ல.
அது போன்றே ஷ,ஜ,ஸ ஆகிய எழுத்துகள் வந்தால் அவற்றுக்குப் பதிலாக ச என்ற எழுத்தையும் ஹ வந்தால் அதற்குப் பதிலாக அ என்ற எழுத்தையும் போட்டு எழுதுகிற பழக்கம் தமிழ்ப் பற்றை நிரூபிப்பதாகக் கொள்வது. வடமொழியில் மட்டும் இன்றி இந்த எழுத்துகள் பாரசீகம், அரபு, ஆப்ரிக்க மற்றும் ஐரோப்பிய மொழிகளிலும் காணப்படுகின்றன. எனவே பிறமொழிச் சொற்கள் கொண்டுள்ள ஒலியினை வரி வடிவத்தில் தமிழில் தர வேண்டும் என்றால் இந்த எழுத்துகளைக் கட்டாயமாக நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும். இதை மொழி பெயர்ப்பு இலக்கியம் அசட்டை செய்ய இயலாது. ஷேக்ஸ்பியரை செகப்பிரியர் என்று எழுதுவதால் என்ன பயன்? இவரல்ல அவர் என்கிற முடிவிற்கு வருவதைத் தவிர? ஒருவரது பெயரையே ஒப்புக்கொள்ளாதவர்கள் அவருடைய படைப்புக்கு எத்தகைய நியாயத்தை வழங்கி விட முடியும்? நம் மொழிக்குப் பிறர் இத்தகைய சிதைவுகளைச் செய்தால் நாம் மனம் ஒப்புவோமா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். ஆங்கிலேயர்கள் நம் ஊர் பெயர்களைச் சிதைத்ததை நாம் மீட்டெடுக்க முயற்சிக்கிறோம். தனித்துவம் மிக்க ழ என்கிற தமிழ் எழுத்து ஆங்கிலத்தில் LA என்று எழுதப்படுவதைவிட zha என்று அதன் உச்சரிப்பு கெடாமல் வரவேண்டும் என்று நாம் விரும்புகிறோம். இதே ஆற்றலை நாம் மற்ற மொழிகளுக்கும் தர வேண்டுமல்லவா? வடமொழி உள்ளிட்டு எந்த மொழி மீதும் வெறுப்பினை வளர்த்துக் கொள்ளக் கூடாது. மொழிகள் பரஸ்பரம் கொள்கிற பாதிப்புகள் நாகரிகத்தின் அடையாளம். ‘பிற மொழிகள் மீது பகைமை கொள்ளாதே பாப்பா’ என்கிற வரியையும் பாப்பா பாட்டில் சேர்த்துப் படிக்க வேண்டும்.
ஆங்கிலத்தைப் பொறுத்தவரை அதன் மீதான எதிர்கொளல் சிந்தித்துச் செயல்பட வேண்டிய ஒன்றாக உள்ளது. ஆங்கிலத்தை விரும்பிக் கற்பவர்களாயும் அதைப் பயன்படுத்துபவர்களாயும் உள்ள தமிழர்களை ஆங்கில மோகிகள் என்று வர்ணிப்பது பிழை. மோகம் என்பது பயனற்ற அர்த்தமற்ற விளைவுக்கு இட்டுச் செல்கிற மனோபாவத்தைக் குறிக்கும். தேர்ச்சி பெறுவதென்பது காலத்தின் இன்றியமையாமை ஆகும். ஆங்கிலத்தில் இரண்டு தமிழர்கள் ஒருவருக்கொருவர் ஆங்கிலத்தில் உரையாடுவது தவறு என்று பேசப்பட்டு வருகிற காலம் இது. ஆங்கிலத்தில் உரையாடினால் தமிழ் மெல்லச் சாகும் என்று சொல்லுமளவுக்குத் தமிழ் பலவீனமான மொழி அல்ல. தமிழர்களும் தமிழைத் தவிக்க விடுவதற்காக ஆங்கிலம் பேசுவதில்லை. தேவை கருதியும் தன்னம்பிக்கையின் அடையாளமுமாயும்தான் அவர்கள் ஆங்கிலம் பேசுகிறார்கள். அவர்கள் முழுதும் ஆங்கிலத்திலேயே பேசிக் கொண்டிருப்பதில்லை என்பதையும், அது இயலாத ஒன்று என்பதையும் கூட கவனிக்க வேண்டும். இன்று தமிழர்களின் சமூக, பொருளாதார நிலை உயர்ந்திருக்கிறதென்றால் அதற்கு மிக முக்கிய காரணம் ஆங்கிலக் கல்வி. தமிழர்களின் வாழ்வில் வளம் சேர்ப்பது ஆங்கிலம்தான். தமிழர்களாகிய நாம் நம்மிடையே உள்ள பிற வளங்கள் என்ன என்பதைப் பட்டியலிட்டுப் பார்க்க வேண்டும். நம்மிடம் இயற்கை வளங்கள் குறைவு. வற்றாத நதிகள் என்று எதுவும் இல்லை. குடிநீருக்கே பிற மாநிலங்களை யாசிக்க வேண்டிய நிலை. ஏற்றுமதி செய்யத்தக்க கனிமப் பொருட்களோ நுகர் பொருட்களோ கணிசமான அளவில் இங்கு கிடையாது.
நாடு என்ப நாடாவளத்தன நாடல்ல / நாட வளம் தரும்நாடு என்றார் வள்ளுவர். நமக்கே இயற்கையாக வாய்க்கப்பெற்ற வளம்தான் நம்முடையது என்னும் பட்சத்தில் நம்மிடம் இருப்பதெல்லாம் மனித வளம்தான். நாம் மற்றவரிடமிருந்து எதையாவது பெறவேண்டுமென்றால் நாம் எதையாவது அவர்களுக்குக் கொடுக்க வேண்டுமல்லவா? நம்மால் கொடுக்க முடிவது மனித வளத்தைத்தான். காலம் காலமாகத் தமிழர்களாகிய நாம் நம் உழைப்பைத்தான் மற்றவர்களுக்குக் கொடுத்து வந்திருக்கிறோம். பிஜி, ஆப்ரிக்கா,இலங்கை,மலேசியா போன்ற நாடுகளுக்குக் கூலி வேலை செய்பவர்களைத் தருபவர்களாக தமிழகம் இருந்திருக்கிறது. ஆனால் இன்று அந்த அவல நிலை மாறி பிற நாடுகளுக்கு நாம் அறிவு சார்ந்த துறைகளில் வேலை செய்வதற்காக தமிழர்களை அனுப்பிக் கொண்டிருக்கிறோம். இதற்கெல்லாம் காரணம் ஆங்கில அறிவுதான். ஆங்கிலத்தில் நம்மவர்கள் பேசவும் எழுதவும் பெற்ற தேர்ச்சியின் விளைவே இது.
இந்தத் தேர்ச்சியை நாம் எவ்வாறு பெற்றோம்?
பல வருடங்களாக ஆங்கிலம் கற்றுப் பேசி எழுதிப் பெற்ற தேர்ச்சி இது. எனவே ஆங்கிலத்தில் பேச தேர்ச்சி பெற வேண்டுமென்றால் தமிழர்கள் பிற தமிழர்களிடம்தான் பேச வேண்டும். தமிழ் தெரியாதவர்களிடம் மட்டுமே ஆங்கிலம் பேச வேண்டுமென்றால் இந்தத் தேர்ச்சி வந்திருக்காது. சிறு வயது முதல் ஆங்கிலம் படித்தாலும் ஆங்கிலமே பேசியிராதவர்கள் இருபது வயதுக்கு மேல் வேலை நிமித்தமாக திடீரென சரளமாக ஆங்கிலத்தில் உரையாட முடியுமா? மொழிப் பயிற்சி சிறு வயதிலிருந்தே வருவது நல்லது.
நான் மம்மி என்று கூப்பிடுகிறேன். அதனால் நீ கவுன் அணிந்து முள் கரண்டியால் எனக்கு ரொட்டியை ஊட்டு என்றெல்லாமா அக்குழந்தை தன் தாயிடம் கேட்கிறது? தமிழ் உணர்வுடன் பண்பாட்டுடன்தான் அக்குழந்தை பேசுகிறது. மம்மி என்பது அக்குழந்தையின் ஆங்கில மழலை. நீ எனக்கு அம்மா என்ற சொல்லைக் கற்றுக் கொடுத்தாய், நான் மம்மி என்ற சொல்லைக் கற்று வந்திருக்கிறேன் பார் என்று அது பெருமிதத்துடன் சொல்வதைத் தமிழுக்கு எதிரான செயலாகப் படம் பிடித்துக் காட்டுவதும் ஆங்கிலத்தை விட்டுத் தமிழில் பேசுகிற குழந்தைகளுக்கு அபராதம் போடுகிற ஆங்கில வழிக் கல்வி தரும் பள்ளி ஆசிரியர்களின் கொடூரமும் மொழி பற்றிய புரிதலின்மை என்கிற ஒரே நாணயத்தின் இரு பக்கங்களாகும். மம்மி, டாடி என்பதெல்லாம் சரி, நீ அம்மா அப்பா என்றுதான் கூப்பிட வேண்டும் என்று அன்பாகக் கூறினால் அக்குழந்தை ஒரே நொடியில் தன்னை மாற்றிக் கொள்ளும்.
ஆங்கிலம் தமிழ்ச் சமூகம் வளர்ந்துள்ளது. ஆங்கிலம் போன்ற ஒரு மொழியின் வளத்தையும் உபயோகத்தையும் அம்மொழி தரும் வாய்ப்புகளையும் தமிழ் தரவேண்டுமென விரும்பும் நாம் ஆங்கிலத்தை ஒதுக்கி வைப்பது கூடாது. இந்தியாவின் எதிர்காலத்தை தொலைநோக்குடன் பார்த்த காந்தி, நேரு, அம்பேத்கர், பெரியார் போன்றோர் நம்மை அடிமைப்படுத்தியவன் ஆங்கிலேயன் என்ற ஒரு காரணத்திற்காக ஆங்கிலத்தைப் பகைத்துக் கொள்ளுமாறு போதிக்கவில்லை. தலித் மக்களுக்கு ஆங்கிலக் கல்வி அவர்களது பின்தங்கிய நிலைகளிலிருந்து விடுதலையை அளிக்கும் என்று நம்பினார் அம்பேத்கர்.
இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த சிந்தனையாளர்களில் ஒருவரான பாரதிக்கு மட்டும் ஏனோ அச்சிறப்பு மிக்க கண்ணோட்டம் வாய்க்கவில்லை. ஆங்கிலக் கல்வியையும் ஏன், தன்னிடம் ஆங்கிலம் பேச வந்த தமிழர்களையும் சினந்தார் பாரதி. ஆங்கிலத் தேர்ச்சி மற்றும் பெற்றிராவிடில் பாரதி நவயுகத்தின் மகாகவியாக ஆகியிருக்க முடியாது என்பது நிச்சயம். ஷெல்லி, வால்ட் விட்மன் ஆகியோரின் நேரிடையான பாதிப்புகளுக்கு மட்டுமின்றி அவரது கவிதைகளில் இடம் பெற்ற முன்னோடியான சிந்தனைகளுக்கும் அவரது ஆங்கில அறிவே காரணம். கவிஞராக மட்டுமல்ல, ஒரு பத்திரிகையாளராக பாரதி ஆங்கில அறிவினால் அடைந்த பயன்களும் ஏராளம்.
ஆனால் பாரதி உட்பட அனைத்துத் தமிழர்களும் புத்திசாலிகள். அவர்கள் ஒருபோதும் மெய்யாக ஆங்கிலத்தைப் பகைத்துக் கொள்வதில்லை. தலைவன் முதல் தொண்டன்வரை ஆங்கிலத்திற்கு எதிராகப் பொது வெளிகளில் பேசுகிற அனைவரும் ஆங்கிலம்மீது விருப்பு கொண்டவர்கள். தங்கள் பிள்ளைகள் நன்கு ஆங்கிலம் கற்க வேண்டும் என்பதில் உறுதியானவர்கள். ஒரு பக்கம் வாழ்க்கை வெற்றிக்குத் தேவையான ஆங்கில அறிவை அடையும் முயற்சி. இன்னொரு பக்கம் தமிழ் பின்தங்கிவிடக்கூடாது என்று எண்ணிச் செயல்படுகிற தவிப்பு. இவைதான் தமிழனின் இன்றைய நிலை.
தமிழ் அசாதாரணமானதும் அற்புதமானதுமான ஒரு மொழி என்பதில் சந்தேகம் இல்லை. இத்தனை ஆயிரம் வருடங்களாக அது எத்தனையோ இடர்களைக் கடந்து இன்றும் இளமையுடன் தோன்றுகிறது. உலக ஓட்டத்துடன் தமிழ் தன்னைச் சளைக்காமல் இணைத்துக் கொள்கிறது. எந்த மொழியில் புதிய சொல்லாக்கங்கள் ஏற்பட்டாலும் அதற்குத் தமிழில் தக்க ஒரு சொல்லை உருவாக்கிவிட முடிகிறது. ஆனால் இதனால் நாம் எதையோ இழக்கிறோமோ என்றும் தோன்றுகிறது. ஆங்கில வழியில் வரும் சொற்கள் தான் தமிழில் மிகுதியாக இவ்வாறு மறு ஆக்கம் செய்யப்படுகின்றன.ங்கிலப் பதங்களுக்கு தமிழ்ச் சொற்களை உருவாக்குவது என்றில்லாமல் சுயமாக ஒரு கருத்துக்குத் தமிழில் சொல்லாக்கம் செய்வது என்பது அரிதாக உள்ளது. அவ்வாறு சமீபத்தில் வெற்றிகரமாகப் பெறப்பட்ட ஒரு சொல் திருநங்கை. நேரிடையாக பல ஆங்கிலச் சொற்களுக்குத் தமிழில் சொற்கள் உருவாக்கப்படுகின்றன. குதிரை பேரம், பங்குச் சந்தை வார்த்தைகளான கரடி, காளை, தொங்கு பாராளுமன்றம், ஓடு தடம், மென்பொருள், அலை வரிசை, கறுப்பு ஆடு, நீர்வீழ்ச்சி, தொலைக்காட்சி இப்படி ஏராளமான சொற்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். அத்தனை நேரிடையாக இல்லாமல் பொருளை உள்வாங்கி உருவாக்கப்படும் சொற்களும் உள்ளன. நகை, முரண், புகைப்படம், பேருந்து, காசோலை, கணினி, வானொலி போன்ற பல சொற்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.
அவ்வாறு இருவகையிலும் உருவாக்கப்பட்ட சொற்கள் கலைச் சொற்கள் போன்றவை. தமிழ் எழுத்து நடையில் இத்தகைய சொற்கள் நாளும் பெருகி வருவதைப் பார்க்க முடிகிறது. இன்னும் சில ஆண்டுகளில் இத்தகைய சொற்களின் வரத்து அதிகமாகி எழுத்து தமிழ் உருவாக்கப்பட்ட சொற்களின் கோவையாக விளங்கக்கூடும். பேச்சுத் தமிழுக்கும் எழுத்து தமிழுக்கும் மேலும் இடைவெளி இதனால் அதிகமாகும் என்பதோடு மட்டுமின்றி, இது நாள் வரை தமிழ் மொழி என்பது வாழ்விலிருந்து பெறப்பட்டது என்கிற வழக்கிலிருந்தும் மாறுபட்டதாகி தமிழுக்கு செயற்கைத் தன்மை வந்து சேரும். இது தமிழ் மட்டுமின்றி பிற இந்திய மொழிகளுக்கும்கூட பொருந்தும்.
இதற்கெல்லாம் காரணம் தமிழர்களாகிய (இந்தியர்களாகிய) நாம் உலகை ஆள்வதில் பங்கேற்பதில்லை என்பதுதான். பொருளாதாரம், அரசியல் ஆகியவற்றில் முன்னோடி அங்கம் ஏற்பதில்லை என்பதில் மட்டுமல்ல, அறிவு சார்ந்த இயக்கங்களையும் நாம் உருவாக்குவதில்லை. தமிழில் இலக்கியம் தவிர புதிதாக எதுவும் படைக்கப்படுவதில்லை. கண்டுபிடிப்புகள், கருத்தாக்கங்கள் அனைத்தும் நமக்கு மேற்கிலிருந்து வருகின்றன. நாம் அவற்றை நம் மொழியில் செவ்வனே பொருத்திக் கொள்கிறோம். அதற்கேற்ப மாற்றுச் சொற்களை உருவாக்கிக் கொள்கிறோம். சுயமாக கண்டுபிடிப்புகளும் கருத்தாக்கங்களும் தமிழர்களால் செய்யப்பட்டு அவை தமிழில் பதிக்கப்படும் வரை இந்த வறுமை நீடிக்கும். அதுவரை கோடிக்கணக்கானவர்களின் அன்றாட மொழியாகத் தொடர்ந்தாலும் தமிழ், மொழி சார்ந்த பெருமையில்தான் திளைக்க வேண்டியிருக்கும். நோபல் பரிசு பெற்ற தமிழ் விஞ்ஞானிகளான சி.வி.ராமன், எஸ்.சந்திரசேகர், வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் ஆகியோர் தங்கள் ஆய்வுகளைத் தமிழிலும் எழுதி வெளியிட்டிருந்தார் களேயானால் இந்த நிலைமை மாறியிருக்கும். இனிவரும் காலங்களில் பல்துறை சார்ந்த தமிழ் அறிஞர்கள் தங்கள் ஆய்வுகளை ஆங்கிலத்தில் வெளியிடுகிற அதே சமயத்தில் சற்றும் காலம் தாழ்த்தாது தமிழிலும் வெளியிட்டால் அது ஒரு முன் மாதிரியான முயற்சியாகத் தமிழை உலகத்திற்கு எடுத்துச் செல்கிற செயலாக இருக்கும். இவ்வாறு செய்பவர்களுக்கு ஊக்கத்தொகை, விருது என்றெல்லாம் எதுவும் தரப்பட வேண்டியதில்லை. இயல்பான தமிழ் உணர்வு எல்லா தமிழர்களிடமும் செயல்பட வேண்டும்.
தமிழை மற்ற மொழிகளுடன் குறிப்பாக, ஆங்கிலத்துடன் போட்டியிடும் மொழியாகப் பாவிப்பதனால் தான் பல பிரச்சினைகள் எழுகின்றன. வேலை வாய்ப்புக்கும் வெளி உலகத் தொடர்புக்கும் தமிழ் உபயோகமாக இருக்குமா என்ற கோணத்தில் தமிழைப் பார்க்கக்கூடாது. அவ்வாறு தமிழ் இல்லாத பட்சத்திலும் தமிழ் நம் மொழி, அதை நன்கு கற்பது நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை உணர வேண்டும். தமிழ்நாட்டிற்குள் மட்டும் செயல்படுகிற நீதிமன்றங்கள், அரசு நிர்வாகங்கள் ஆகியன தமிழில் இருக்க வேண்டும்.
வருங்கால சந்ததியினருக்கு தமிழின்பால் தன்னார்வத்தை தூண்டுமாறு இன்றைய தலைமுறையினர் செய்யவேண்டும். தமிழ் படிக்க வரும் மாணவர்களை வேதனைப்படுத்தக்கூடாது. கடினமான தமிழைப் படிப்பதைவிட பிரெஞ்சு, வடமொழி ஆகியவற்றைப் படித்தால் சுலபமாக மார்க் வாங்கிவிடலாம் என்ற யதார்த்தத்தை மாற்றும் வகையில் தமிழ் படிப்பும் சுலபமாக இருக்க வேண்டும். தமிழை வைத்து தமிழ் மாணவர்களையே மிரட்டினால் பின்னர் அதைப் படிக்க வேறுயார் வருவார்கள்? பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இன்று இருப்பது போல் வெறும் இலக்கிய, இலக்கணப் படிப்பாக மட்டும் தமிழ் இருக்கக் கூடாது.
தமிழ் அதிகாரப்பூர்வ செம்மொழியாகி விட்டபடியால் உலகெங்கிலுமுள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் ஏற்படுத்தப்படவேண்டும். இதை அரசாங்கம்தான் செய்ய வேண்டும் என்றில்லாது வசதி படைத்த தனியார்களும் செய்ய விரைந்து முன்வரலாம். தமிழைப் பரப்புவது என்பது தமிழைத் தமிழர்களின் எல்லைக்கு அப்பால் கொண்டு செல்வதாகும். தமிழைத் தமிழர் மட்டுமே படிப்பது, எழுதுவது என்றில்லாது தமிழைத் தமிழ் அல்லாதோரும் அறிந்து கொள்ளுமாறு செய்யவேண்டும். அதுவே தமிழருக்கும் தமிழுக்கும் பெருமை.
தமிழ்-நாடகம்-சினிமா:பரஸ்பர பாதிப்புகள் | ![]() |
![]() |
|||
|
|||||
தமிழ்-நாடகம்-சினிமா:பரஸ்பர பாதிப்புகள் அம்ஷன் குமார்
தமிழ்நாட்டில் தயாரான மௌனப் படங்கள் மீது தமிழ்நாட்டு நாடகங்கள் மற்றும் வெளிநாட்டு மௌனப் படங்கள் ஆகியவற்றின் பாதிப்பு என்ன என்பதை நாம் ஒரு போதும் அறிய முடியாது. அதற்கான ஆவணங்கள்- முக்கியமாக தமிழ் மௌனப்படங்கள் நம்மிடையே இல்லை. ஆனால் சினிமாவின் அச் சுறுத்தல்கள் அன்று நாடகங்களுக்கு இல்லை. சினிமா ஒரு சர்க்கஸ் மாதிரியான நிகழ்ச்சியாக ஆனால் முற்றிலும் மாறுபட்ட அதிசய பொழுது போக்காக இருந்திருக்கிறது. நிரந்தர வருவாய் தரும் துறையாகவும் கலாசாரத்தையொட்டி நிறைவளிக்கும் பொழுதுபோக்காகவும் நாடகம் மட்டுமே இருந்தது. பேசும் படம் வந்த பிறகு நிலைமை மாறத்தொடங்கியது. முதலாவதான மாற்றம் அரங்கத்திலேயே நிகழத் தொடங்கிவிட்டது. அமெரிக்காவில் நிக்கல் என்கிற ஐந்து சென்ட் நாணயத்தைக் கொடுத்தாலே இந்தக் கேளிக்கையை அனுபவிக்கலாம் என்றாயிற்று. நிலப்பிரபுத்துவக் கலையான நாடகம் தனது அரங்கில் சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளை செவ்வனே கடைப்பிடித்தது. கீழ் சாதியினருக்கு அனுமதி மறுக்கப்பட்ட அரங்குகளும் இங்கு இருந்தன. முதலாளித்துவக் கலையான சினிமா தனது அரங்கில் கட்டணம் செலுத்திய பஞ்சமர்களையும் சமமாகக் கருதியது. சமூகத்தில் தங்கள் முன்னால் கைகட்டி நிற்பவர்கள் சினிமா அரங்கில் பீடி புகைத்துக் கொண்டும் மகிழ்ச்சியினை கட்டற்ற ஆரவாரத்துடன் வெளிப்படுத்திக்கொண்டும் இருந்ததை பெரிய மனிதர்களால் காணச் சகியாமல்போயிற்று. இதனால் சினிமா பார்ப்பதையே நிறுத்திய ஒரு தலைமுறையும் உருவாகியது. இதைக்கண்டு துவண்டு விடாத சினிமா தனது ஆதாரப் பார்வையாளர்கள் யார் என்பதைப் புரிந்துகொண்டு அவர்களுக்கு ஏற்ற பொழுதுபோக்கினை வடிவமைக்கத் தொடங்கியது. சினிமா பெரும் சக்திவாய்ந்த ஊடகம் என்கிற எண்ணம் எல்லோருக்கும் ஏற்பட்டது. ஆனால் உடனே நாடகம் அதனால் மதிப்பிழந்துவிடவில்லை. நாடகத்திலுள்ள கலைஞர்கள் சினிமாவில் இடம் பெறத் துவங்கினர். சினிமாவில் இருந்தாலும் நாடகத்திலும் பங்கு கொள்வதைத் தவிர்க்கமுடியாத மனோபாவம் அவர்களுக்கிருந்தது. சினிமாவில் நடிப்பதற்கு நாடகத்தில் அடித்தள அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்கிற எண்ணம் அக்காலத்தில் வேரூன்றி இருந்தது. ‘நாடகம் தாய்; சினிமா சேய்’ என்று சொல்லப்பட்டு வந்தது. இதிலிருந்து இரண்டு ஊடகங்களுக்கும் ஒன்றின்மீது மற்றொன்றிற்கு நிகழ்ந்த பரிமாறல்கள் தோழமையுடன் இருந்ததைப் புரிந்து கொள்ளமுடியும். மேலும் நாடகம் அதன் தொன்மை கருதி தெய்வீகக் கலை என்றும் ஆராதிக்கப்பட்டது. சினிமா கலைஞர்களும் அவ்வாறே நாடகத்தை பாவித்தனர்.
நாடகத்திற்கு இணையான ஊடகமாக சினிமா இருக்க வேண்டும் என்கிற பரிதவிப்பும் சினிமா கலைஞர்களுக்கு இருந்தது. அன்றைய நாடகத்தின் முக்கிய அம்சம் பாடல்கள். ஒரு நாடகத்தில் நாற்பது பாடல்கள் இருக்கிறது என்றால் அதைவிட அதிகமான பாடல்கள் கொண்ட நாடகத்தை நாங்கள் காட்டுகிறோம் என்று இன்னொரு நாடக கம்பெனி விளம்பரம் செய்யும். சினிமா பின் தங்கிவிடக்கூடாது என்பதால் அதிலும் பாடல்கள் அதிக எண்ணிக்கையில் இடம் பெற்றன. பாடல்கள் எல்லோர் வாயிலும் முணுமுணுக்கப்பட்டால் அந்தப்பாடல்கள் இடம் பெற்ற படங்களும் பிரபலமாயின என்பதால் இந்த அம்சத்தை எல்லோரும் பொருட்படுத்தவேண்டியதாக இருந்தது. அதிக எண்ணிக்கையிலான பாடல்கள் சினிமாவிற்குத் தேவை இல்லை என்கிற எண்ணம் மெல்ல பரவத்தொடங்கியது. ஊடக ரீதியாக சினிமாவிற்கும் நாடகத்திற்குமான முதல் வித்தியாசம் இவ்வாறு புரிந்து கொள்ளப்பட்டது என்றுகூட அதைக் குறிப்பிடலாம். 1937இல் வெளிவந்த சிந் தாமணி 25 பாடல்களைக் கொண்டிருந்தது. அதே வருடம் தமிழ் பேசும் படக்காட்சி என்னும் நூல் வெளிவந்தது. சினிமாவைப்பற்றிய முதல் தமிழ் நூல் இது. இதை எழுதியவர் நாடகாசிரியர்-கலைஞர் பம்மல் சம்மந்தமுதலியார். அவர் மிதமிஞ்சிய பாடல்கள் படங்களில் இடம் பெறும் பொருந்தாமை பற்றி பின்வருமாறு எழுதுகிறார்: “தமிழ் நாடக மேடையில் வருகிறதும் சங்கீதத்தில், போகிறதும் சங்கீதத்தில், உட்காருவதும் சங்கீதத்தில், சிரிப்பதும் சங்கீதத்தில், அழுவதும் சங் கீதத்தில், மரிப்பதும் சங்கீதத்தில்’ என்று மற்றவர்கள் ஏளனம் செய்ய இடமாயிருக்கிறது. இந்தக் குற்றமானது தமிழ் நாடகங்களைப் பேசும் படங்களாக மாற்றும் பொழுது, அப்படியே பேசும்படங்களிலும் பதிக்கப்படுகிறது. சங்கீதம் மிதமிஞ்சியிருப்பது நாடகமேடைக்கே பொருந் தாதென்றால் பேசும் படங்களுக்கு கேட்கவேண்டியதில்லை. நாடக மேடைக்கும் சினிமா தியேட்டர்களுக்கும் உள்ள முக்கிய வித்தியாசத்தை அறிந்தவர்கள் இதை எளிதில் ஒப்புக்கொள்வார்கள் என்பது நிச்சயம்.” நாடகமேடைக்கும் சினிமாவிற்குமான பல முக்கிய வேறுபாடுகளை அந்நாளிலேயே ஒரு நாடகக்காரரான சம்மந்த முதலியார் உணர்ந்திருந்தது ஆச்சரியமானது. சினிமா ஊடகத்தை போதிக்க அன்று வகுப்புகள் நடத்தப்படவில்லை. சினிமா பற்றி உயர்வான எண்ணம் கொண்ட ஒரு சிறுபான்மையினரும்கூட அன்று இருக்கவில்லை. சம்மந்த முதலியார் சினிமா பற்றி வெளி வந்த ஆங்கிலப்புத்தகங்களைப் படித்துதான் தனது அறிவை வளர்த்துக் கொண்டிருக்கிறார். நாடு விடுதலை அடைவதற்கு முந்தைய காலக்கட்டத்தில் வெளிநாட்டுப்படங்கள் இங்கு வருவதில் தட்டுப்பாடுகளும் தடைகளும் இருந்தனவேயொழிய ஆங்கிலத்தில் வெளியான நல்ல சினிமா புத்தகங்கள் தாராளமாகக் கிடைத்தன என்பது இதன் மூலம் தெரிய வருகிறது. புடோவ்கின் எழுதிய சினிமா நடிப்பு -திவீறீனீ கிநீtவீஸீரீ- என்ற நூலை அவர் படித்திருப்பதை அறிய முடிகிறது. சினிமாவில் நடிகர் தேர்வு, திரைக்கதை அமைப்பு, ஒளிப்பதிவு, படவிளம்பரம், வினியோகம், இயக்கம் என்று பல்வேறு பிரிவுகள் பற்றியும் அவர் அவதானித்திருக்கிறார்.
நாடகக் கலைஞராக இருப்பதால் அவர் ஒத்திகையின் இன்றியமையாத்தன்மை பற்றியும் குறிப்பிடுகிறார். பின்னர் அவரே படத்தை இயக்கும் வாய்ப்பு வந்த பொழுது நடிகர்களுக்கு ஒத்திகைகள் நடத்தியதை அவரது பேசும் படம் அனுபவங்கள் கட்டுரை வாயிலாக அறிகிறோம். மணிக்கொடி எழுத்தாளர் பி.எஸ். ராமையா ‘சினிமா?’ என்கிற புத்தகத்தை 1943இல் எழுதினார். தன்னுடைய புத்தகம்தான் சினிமா பற்றிய முதல் நூல் என்று சொல்வதிலிருந்து அவர் பம்மல் சம்மந்த முதலியார் நூலைப் பற்றி கேள்விப்பட்டிருக்கவில்லை என்று தெரிகிறது. எழுத்தாளர் என்பதால் கதை எழுதுவதற்கும் திரைக்கதை எழுதுவதற்குமுள்ள வேறுபாடுகளை அவர் சுட்டிக்காட்டிய பொழுதும் நாடக மேடைக்கும் சினிமாவிற்குமுள்ள வேறுபாடுகள் மீதுதான் அவரும் அதிகமாக கவனம் கொண்டிருந்தார். கேமரா என்கிற இயந்திரம் எவ் வாறெல்லாம் நடிகர்களைக் காட்டுகிறது என்பதையும் அவையெல்லாம் மேடையில் சாத்தியமில்லை என்றும் விளக்குகிறார். மேடை வசனத்திற்கும் சினிமா வசனத்திற்குமுள்ள வேறுபாடுகள் பற்றியும் அவர் குறிப்பிட்டுள்ளார். ராமையாவும் சம்மந்த முதலியாரைப் போல நிறைய சினிமா புத்தகங்களைப் படித்தவர். புடோவ்கினை அவரும் குறிப்பிடுகிறார். பாஸில் ரைட் என்கிற டாகுமெண்டரி இயக்குநர் உட்பட வேறு பலரின் கருத்துகளையும் ஹாலிவுட் படங்களிலிருந்து எடுத்துக்காட்டல்களையும் அதில் தந்திருக்கிறார். சினிமா தொழிலில் ஈடுபடுபவர்களுக்குக் கையேடுகளாகப் பயன்பட வேண்டும் என்கிற கருத்தில் இவர்களது புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. நாடகத்திலிருந்து சினிமாவிற்கு வருபவர்களின் எண்ணிக்கை மிகக் கணிசமானது என்பதால் இவர்களது அக்கறையில் நாடகம் முக்கிய இடத்தைப் பெற்றது. நாடகத்தைப் போல சினிமாவில் தனக்குத்தானே நடிகர்கள் உரத்துப் பேசிக் கொள்வது தவிர்க்கப்படவேண்டியதை இருவரும் குறிப்பிட்டுள்ளார்கள் என்பது சிறப்பாக கவனிக்கப்பட வேண்டியது. இவற்றையெல்லாம் அன்றைய காலத்தில் சினிமாவிற்குள் நுழைந்தவர்கள் படித்து அவற்றை தங்கள் தொழிலில் பின் பற்றியிருந்தால் என்னவெல்லாம் நடந்திருக்கும் என்றுதான் நாம் எண்ணவேண்டியுள்ளது.
விடுதலை அடைந்த பிறகு நாடகத்திற்கும் சினிமாவிற்கும் இடையேயான தொடர்புகள் மெல்ல மெல்ல விடுபட ஆரம்பித்ததோடு மட்டுமின்றி போட்டிகளும் ஏற்பட்டன. விடுதலைக்கு முன்வரை இரண்டிலும் புராணம், தேசபக்தி,வீரம், மேன்மையான மனித சுபாவங்கள் பற்றிய உயர்வான கதையாடல்கள், நித்தியத்திற்கும் தேவை என்று கருதப்பட்ட மதிப்பீடுகள் ஆகியவை பொதுவான கதைக்களன்களாகவும் கருத்துகளாகவும் இடம் பெற்றன. பகுத்தறிவுப் பிரசாரங்கள் விடுதலைக்குப் பின் நாடகத்தில்தான் அதிகம் இடம் பெற்றன. சமூகம் பற்றிய எண்ணங்கள், தனிமனித வெளிப்பாடுகள் ஆகியவை முக்கியமாக இடம் பெற்றன. திராவிட இயக்கத்தினரின் நுழைவு இக்கட்டத்தில்தான் நடந்தது. சி. என். அண்ணாதுரை, மு.கருணாநிதி உள்ளிட்ட பலரின் நாடக அனுபவங்கள் அவர்களது திரை உலக இயக்கங்களுக்கு நேரிடையான பாதிப்பினைக் கொண்டு வந்தன. நிர்வாகம், மதம், ஜாதி ஆகியவற்றின் பெயரால் நடைபெறும் முறைகேடுகளை நாடகங்களைப்போலவே அவர்களது படங்களும் கேள்விகளை எழுப்பின. இரண்டிலும் பிரச்சாரங்களே முன்னிறுத்தப்பட்டன என்பதால் வசனங்கள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டன.திரைப்பட வசனத்திற்கும் நாடக வசனத்திற்கும் அவர்கள் வித்தியாசம் காட்டவில்லை. ஒரு காலகட்டத்திற்கு மேல் திராவிட இயக்கத்தினர் நாடகப் படைப்புகளிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டனர். ஆனால் அவர்களது சினிமா ஈடுபாடு இன்றளவும் தொடர்கிற ஒன்று. வர்த்தகரீதியாக பல மாற்றங்கள் நிகழ்ந்தன. கலைஞர்கள் சினிமாவிற்கே முதலிடம் கொடுத்தனர். மிக அதிக வருவாய் ஈட்டப்படக் கூடிய தொழிலாக சினிமா வளர்ந்தது. பண முதலீடு அதில் அதிகம் செய்யப்பட்டது. வியாபார உத்திகள் பெருகின. திரையரங்குகள் எல்லா ஊர்களிலும் கட்டப்பட்டன. புராண சரித்திர நாடகங்களுக்கு வரவேற்பு குறைந்தன. தொழில் முறை நாடகக் கம்பெனிகள் நசித்துப் போயின. நாடகத்திலிருந்து சிவாஜி கணேசன், எம்.ஜி. ராமச்சந்திரன், எம். ஆர்.ராதா, எஸ். வி. சகஸ்ரநாமம், எஸ். எஸ்.ராஜேந்திரன், கே.ஆர். ராமசாமி, முத்துராமன், மனோரமா, ஜி. சகுந்தலா, காந்திமதி, இப்படிப் பலர் சினிமாவில் நுழைந்து பிரபலமடைந்தனர். முதலில் இவர்களது நடிப்பில் நாடக பாணி தூக்கலாக இருந்தது. பல படங்களில் நடிகர்கள் ஒவ்வொரு காட்சியிலும் இப்போது சினிமாவை ஒரு போட்டியாக நாடகக் கலைஞர்கள் பாவித்தனர். மக்களை மீண்டும் நாடகத்தின் பால் இழுப்பது ஒரு சவாலாகக் கருதப்பட்டது. மாலிகாபூர், இலங்கேஸ்வரன், கம்சன்,இந்திரஜித் போன்ற நாடகங்கள் மூலம் ஆர்.எஸ். மனோகர் கயவர்கள் என்று கருதப்பட்ட கதாபாத்திரங்களை நல்ல கதாநாயக பாத்திரங்களாக தனது நாடகங்களில் காட்டினார். இவற்றைத் திரைப்படங்கள் செய்யத் துணியவில்லை. பெரிய செட்டுகளை நாடகங்களில் காட்டினார். அவற்றை காட்சிக்கு காட்சி அதிவிரைவில் மாற்றி மக்களை வியப்புறவைத்தார். இந்த உத்தி மாஜிக் ஷோ உத்தி என்று விமர்சகர்களால் கேலி செய்யப்பட்டது. டிராமாஸ்கோப் என்று சினிமா ஸ்கோப்பிற்கு இணையான வடிவத்தை அவர் முயற்சி செய்தார். நாடகத்தின் வாயிலாக மணத்தை பார்வையாளர்கள் சுகிக்க வேண்டும் என்று கருதி Odoroscope என்ற ஒரு வடிவத்தை அவர் உருவாக்க விழைந்தார். சினிமாவில் மணத்தைப் பரப்ப முடியாது. ஒலி ஒளியைத்தான் அதனால் தர முடியும். ஆனால் நிகழ்த்துகலையான நாடகத்தில் மேடையில் நடிகர்கள் உணரும் மணத்தை பார்வையாளர்களும் பெறமுடியும் என்ற நினைப்பில் நாடக அரங்கினுள் மணத்தை இயந்திரக்கருவிகள் மூலம் பரப்ப அவர் திட்டமிட்டார். அதாவது மேடையில் நடிகர்கள் பிரியாணி சாப்பிட்டால் பார்வையாளர்களுக்கும் அந்த வாசனை வந்தடையும். அது பரி சோதனையாகவே முடிந்தது. நல்ல வேளையாக அந்த அனுபவத்திலிருந்து தமிழர்கள் தப்பினார்கள். நாடக அனுபவமின்றித் திரைப்படங்களில் நடிக்கலாம் என்கிற நடைமுறையும் கொண்டு வரப்பட்டது. வருங்காலத்தில் பிற துறைகளிலிருந்து சினிமாவில் நடிப்பதற்கு வேண்டிய கற்பனையும் முகவெட்டும் உள்ளவர்கள் ஏராளமாக வந்து சேர்வார்கள் என்ற பி.எஸ். ராமையாவின் தீர்க்க தரிசனம் மெய்ப்பிக்கப்பட்டது. நாடக அனுபவமில்லாத ரவிச்சந்திரன் காதலிக்க நேரமில்லையில் ஸ்ரீதரால் ஒரு கதாநாயகனாக அறிமுகப்படுத்தப்பட்ட பொழுது அது வியப்புக்குரியதாக அக்காலத்தில் கருதப்பட்டது. எந்தவித அனுபவமுமில்லாமல் சினிமாவில் நடிக்கலாம் என்பது இப்பொழுது வாடிக்கையாகிவிட்டது. இந்த வகையில் சினிமாவிற்கும் நாடகத்திற்குமான தொடர்பு முற்றாக அறுந்துவிட்டது என்று கூறலாம். மேடை நாடகங்களைத் திரைப்படங்களாக எடுக்கப்பட்டதும் இதே நிலையை எட்டியது. சினிமாவிற்குப் போட்டியாக இல்லாவிட்டாலும் சினிமாவால் முடக்கப்படாத நாடகமாக அமெச்சூர் சபா நாடகங்கள் போடப்பட்டன. இவற்றின் தலையாய அம்சம் நகைச்சுவை. இரண்டு மணி நேரமும் பார்வையாளர்கள் சிரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இவை நிகழ்த்தப்பட்டன. இவை துணுக்குத் தோரணங்கள் என்று விமர்சிக்கப்பட்டன. சோ, எஸ்.வி. சேகர், ஒய்.ஜி. மகேந்திரன், கிரேஸி மோகன், காத்தாடி ராமமூர்த்தி போன்ற பலரின் நாடகங்கள் இவை. சென்னையில் இருந்த அளவிற்கு மற்ற இடங்களில் இவை பிரபலம் அடைய முடியவில்லை. சோவைத் தவிர மற்றவர்களால் முந்தைய நாடக நடிகர்களைப் போல் சினிமாவில் பெரிதாகக் காலூன்ற இயலவில்லை. திரைப்பட நகைச்சுவை சபா நாடக நகைச்சுவையை நிராகரித்தது. இரண்டிலும் விஷூவலான நகைச்சுவை இல்லை என்பதே இவற்றுக்குள்ள ஒரே ஒற்றுமை. சபா நாடக மேடைக்கும் சினிமாவிற்கும் பாலமாக விளங்கியவர் கே.பாலசந்தர். அவர் மேடை நாடகங்களை இயக்கிய பிறகு திரைப்படங்களுக்கு வந்து பெரும் வெற்றிபெற்றார். நூறு படங்களுக்கு மேல் இயக்கிய ஒரு சில இயக்குநர்களில் அவரும் ஒருவர். அவரது நாடக அனுபவம் அவரது படங்களைப் பெரிதும் பாதித்தது. முக்கியமாக அவர் நடிகர்களை இயக்கியவிதம் நாடகபாணியிலானது. அவரது படங்களில் நடித்தவர்கள் பலரும் உரக்க வசனம் பேசுவது, மிகையான முக உடலசைவுகள் செய்வது ஆகியவற்றின் வாயிலாக தாங்கள் யாரால் இயக்கப்படுகிறார்கள் என்பதை சுலபமாகக் கண்டுகொள்ளும்படி செய்தனர். அவரைத் தங்கள் குருவாக அறிவித்துக்கொண்ட கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோரிடம் மட்டும் அவரது முத்திரை பாதிப்பு இல்லை என்பதும் ஒரு ஆச்சரியம். நாடகத்தைவிட்டு சினிமா செல்பவர்கள் பலர் மீண்டும் நாடகத்திற்குத் திரும்புவதில்லை. சில அமெச்சூர் நாடகக்காரர்கள் நாடகத்தில் தங்களுக்குள்ள செல்வாக்கைத் தக்க வைக்க வேண்டித் தொடர்ந்து நாடகங்களிலும் பங்கேற்ற வண்ணம் இருப்பார்கள். ஆனால் அத்தகைய அவசியம் ஏது மற்ற கே.பாலசந்தர் மீண்டும் மேடை நாடகத்திற்குத் திரும்பியிருப்பது பாராட்டத்தக்க ஒரு நிகழ்வுதான். எழுபதுகளில் நாடக உலகில் பல திருப்பங்கள் நிகழ்ந்தன. நாடக உருவம் பற்றிய மேல் நாட்டின் அழகியல் தாக்கங்கள், சுயமான நாடகங்கள், பிறமொழி நாடகங்களின் தமிழ் மொழி பெயர்ப்புகள், நிகழ்த்து கலையை உடற்கூற்றின் நுட்பங்களாய் வெளிப்படுத்தும் பயிற்சிப் பட்டறைகள் ஆகியன தமிழ் நாடகத்தினை முற்றாக மாற்றின. நாடகக்காரர்கள் தங்கள் கலைமீதான பெருமிதத்தை உணர்ந்தவர்களாய் இருந்தனர். வெகுஜன கலாச்சாரத்தையும் ஊடக சீரழிவினையும் விமர்சிப்பவர்களாயிருந்தனர். மரபான நாடகக் கம்பெனிகள் முற்றாக மறைந்து போய்விட்ட தருணத்தில் ந.முத்துசாமியின் முயற்சியால் கூத்துப்பட்டறை என்கிற புதிய நாடகத்தின் தொழில் முறையான முழு நேரக்குழு ஒன்று தோன்றியதும் முக்கிய நிகழ்வாகும். ஆனால் புதிய நாடகத்தை தமிழ் சினிமாவோ தமிழ் சினிமாவை புதிய நாடகமோ பாதிக்கவில்லை. இரண்டும் எதிரெதிர் துருவங்களில் செயல்பட்டன. பிரளயனின் வீதி நாடகம் அன்பே சிவம் படத்தில் ஒரு காட்சியாக வந்து சென்றதைத் தவிர குறிப்பிடத்தக்க எவ்விதப் பரிமாற்றமும் நிகழவில்லை. புதிய நாடகத்தைச் சேர்ந்த கலைஞர்களான மு.இராமசாமி, கே.ஏ. குண சேகரன், ராஜூ, ஜெயகுமார், பாரதிமணி, ந. முத்துசாமி, கலைராணி, பசுபதி, ஜார்ஜ், ப்ரவின் போன்றோர் திரைப்படங்களில் நுழைந்துள்ளனர். இவர்களது பங்கினால் சினிமாவில் எத்தகைய மாற்றங்கள் நிகழும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். |
அம்ஷன் குமார் தொடர்ந்து உயிர்மை, கால்ச்சுவடு, ஹிண்டு போன்ற இதழ்களில் எழுதி வருபவர். சுப்பிரமணிய பாரதி, சர் சி வி ராமன், அசோகமித்திரன், வங்க நாடக முன்னோடி பாதல் சர்க்கார் ஆகியோ ர் பர்றிய சிறப்பான ஆவணப் படங்களை இயக்கியவர். அவர் இயக்கிய “ஒருத்தி” (கதை – கி ராஜ நாராயணன்) திரைப்படம் பல திரைப்பட விழாக்களில் பங்கு பெற்றிருக்கிறது சிறந்த திரைப்படத்துக்கான அரசு விருதை பாண்டிச்சேரி மானிலம் வழங்கியுள்ளது.னியூ ஜெர்சி சிந்தனை வட்டமும் இந்தப் பட்த்திற்கு சிறந்த திரைப்படத்துக்கான விருதினை வழங்கி கௌரவித்துள்ளது.
தமிழில் “சினிமா ரசனை” என்ற முக்கியமான நூலின் ஆசிரியர்.
திரைப்பட இயக்குனர், எழுத்தாளர் அம்ஷன் குமாருடன் சந்தித்து உரையாட ஒரு வாய்ப்பு.
வட அமெரிக்காவில் நியூ ஜெர்சி, பாஸ்டன் மற்றும் கனக்டிகட் மானிலங்களில் சந்திப்பு நடைபெறும்.
ஜூலை 23 அல்லது 24 தேதிகளில் நியூ ஜெர்சி
ஜூலை 30-ல் பாஸ்டன்
ஜூலை 31-ல் மில்ஃபோர்ட், கனக்டிகட்.
தொடர்பு முகவரி – gorajaram@gmail.com
http://www.kalachuvadu.com/issue-126/page75.asp
http://www.kalachuvadu.com/issue-93/page26.asp
http://www.kalachuvadu.com/issue-133/page47.asp
http://www.kalachuvadu.com/issue-89/interview.asp
http://www.kalachuvadu.com/issue-103/page39.asp
நேர்காணல்: தியடோர் பாஸ்கரன்
சினிமா பற்றிப் பேசுவதற்கான கலைச் சொற்களே இங்கு இல்லை
சந்திப்பு: அம்ஷன் குமார், தேவிபாரதி
ஒருத்தி
ராஜநாராயணின் முடிவிலிருந்து அம்ஷன் குமார் விலகுகிறார் [என அறிகிறேன்]. பிரிட்டிஷ் அதிகாரி எழுதப் பயன்படுத்திய பறவை இறகை செவனி முன்னர் பத்திரப்படுத்தியிருந்தாள். அவளது தோழிகள் அந்த இறகை விளையாட்டாக எடுத்து விட்டெறிய, பறந்து வரும் இறகை செவனி பாய்ந்து ஓர் எழுதுகோலைப் பிடிப்பது போலப் பிடிக்கிறாள். படம் அத்துடன் நிறைவு பெறுகிறது.
அம்ஷன் குமாரின் திரைக்கதையும், படமாக்கலும் பெரும்பாலும் தொய்வின்றி அழகாக எடுத்துச் செல்லப்படுகின்றன. படத்துக்கு இசை பலவீனமாகவே உள்ளது. தேவையற்ற இடங்களில் உச்சஸ்தாயியில் இசை பேச்சை மூழ்கடிக்கிறது. இன்னமும் இதமாக, இருப்பதே தெரியாமல் இருந்திருக்கலாம். செவனியாக நடித்த பூர்வஜா மிக நன்றாகச் செய்துள்ளார். எல்லப்பனாக நடித்த கணேஷ் பாபு இன்னமும் நன்றாகச் செய்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. இவர்கள் இருவரையும் விட துணை நடிகர்களான கிதாரியாக (கிடைத் தலைவர்) நடித்த பாரதி மணி, ஊர் புத்திசாலி சுப்பையாவாக நடித்தவர் (பெயர் தெரியவில்லை), மற்றும் பலர் மிக நன்றாக, இயல்பாக நடித்தனர். ஒரு காட்சியில் மட்டும் வரும் சுருட்டு பிடிக்கும் கிழவி, கணக்கு வாத்தியார், கோமணத்தோடு ஊரைச் சுற்றும் சிறுவர்கள், செவனியின் வாயே-பேசாத முறை மாமன் (கடைசியில் அறுவாளை எடுத்து செவனியை ஒரே வெட்டில் வெட்டி விடுவேன் என்பான்), கை துரு-துருவென எதையாவது திருடியே ஆக வேண்டும் என்று துடிக்கும், ஆனால் கால்நடைகளுக்கு இலவச வைத்தியம் செய்யும் மருத்துவர், திரு-திருவென முழிக்கும் மீசையில்லாத துபாஷ், கஞ்சா போதையில் சதா சிரித்துக் கொண்டேயிருக்கும் ஜமீன்தார் என்று ஒவ்வொரு பாத்திரமும் பார்த்துப் பார்த்துச் செய்யப்பட்டுள்ளது.
இத்தனை திறமையுள்ள நடிகர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள் என்று நினைக்கும்போது சந்தோஷமாக உள்ளது. அவர்களை திறம்படப் பயன்படுத்தாதது யார் குற்றம்?
அம்ஷன் குமாரின் நெறியாள்கை மிகவும் பாராட்டப்பட வேண்டியது. செவனி, பிரிட்டிஷ் அதிகாரி நெருக்கம் இயல்பாகத் தோன்றவில்லை. ஜான் வில்லியம்ஸ் கேம்பில் அவள் எப்பொழுதும் இருப்பது போல காண்பிப்பது சரியாகத் தோன்றவில்லை. அதே சமயம் செவனிக்கு ஜான் வில்லியம்ஸ் மீது வெறும் மதிப்பும் மரியாதையும் மட்டும்தானா, அல்லது உடல் ரீதியாக விருப்பமும் உண்டா என்பதை பார்வையாளர்கள் கருத்துக்கே அழகாக விட்டுவிடுகிறார். திடீரென ஒருநாள் ஜான் வில்லியம்ஸ் சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பிப் போய்விட செவனி பதைபதைப்பது நன்கு படமாக்கப்பட்டுள்ளது. சின்னச்சின்ன விஷயங்களான ஜமீன்தார் வெற்றிலைக்குள் அபின் வைத்து சாப்பிடுவது, கிராம மக்கள் வெற்றிலை போடுவது, மூக்குப்பொடி போடுவது, முள் எடுப்பான் மூலம் முள் எடுப்பது, உணவு முறை, உள்ளூர்ப் பழக்க வழக்கங்கள், கல்யாணச் சடங்கு, பெரியவர்கள் கள் குடித்துவிட்டு உளறுவது, திருமண ஊர்வலம், உள்ளூர இருக்கும் சாதிப்பற்று, நாட்டார் கடவுள்கள் பற்றி, சாமியாடுவது, குறி பார்ப்பது என்று பார்த்துப் பார்த்துச் செய்திருக்கிறார். கி.ராஜநாராயணனின் கதையின் கட்டுக்கோப்பும் இதற்கு வெகுவாக உதவியிருக்கக் கூடும். ஆயினும் நல்ல நல்ல கதைகளையும் கூட குதறும் இயக்குனர்கள் மத்தியில் இத்தனை ஈடுபாட்டுடன், உலகத் தரத்துடன் ‘ஒருத்தி’யை எடுத்த ஒருவரை, நல்ல தமிழ் சினிமாவை வேண்டும் அத்தனை பேரும் வாழ்த்தி வரவேற்க வேண்டும்.
பி.எஸ்.தரனின் கேமரா உறுத்தாமல், மிக அழகாய் இயங்கியுள்ளது. எடிடிங் நன்றாக உள்ளது.
இந்தப் படத்தை இன்னமும் கூட நன்றாகச் செய்திருக்கலாம் என்ற நினைப்பு தோன்றலாம். ஆனால் தமிழ் சினிமாவின் இன்றைய நிலையையும், இதுபோன்ற படங்கள் எடுக்கக் கிடைக்கும் குறைந்த பட்ஜெட்டையும் பார்க்கும்போது இந்தப் படம் தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு மைல்கல். படத் தயாரிப்பாளர்கள் தாரா அம்ஷன்குமார், திண்ணை கோபால் ராஜாராம், இணை-தயாரிப்பாளர் காஞ்சனா தாமோதரன் ஆகியோருக்கு நன்றி!
சப்-டைட்டில்கள் பல இடங்களில் சரியாக இல்லை. அதனைச் சரி செய்ய வேண்டும். [சாமியாடி பாடுவதெல்லாம் அபத்தமாக ஆங்கிலத்தில் மாற்றப்பட்டுள்ளன போலத் தெரிகிறது!]
தமிழ்ச் சிற்றேடுகளின் சினிமா அக்கறைகள்
0
இலக்கியத்திற்காகவே தொடங்கப்பட்ட சிறுபத்திரிகைகளில் எழுபதுகளிலிருந்து பிற துறைகள் பற்றிய கவனமும் வெளிப்படத் தொடங்கியது. சிறுபத்திரிகை வாசகர்கள், எழுத்தாளர்கள் ஆகியோருக்குப் பிற துறைகள் பற்றிய அறிதல் முக்கியமானதாக இருந்தது. அவ்வறிதல் சிறுபத்திரிகைகள் வாயிலாகப் பகிர்ந்துகொள்ளப்பட்டது. சிறுகதைகள் புதுக்கவிதைகள் தவிர அவற்றில் வெளிவந்த கட்டுரைகளில் அப்பகிர்தல்கள் நடந்தன. இலக்கிய விமர்சனங்களிலும் பிற கலைகள் பற்றிய எடுத்துக்காட்டல்கள், குறிப்புகள் தரப்பட்டன. நமக்குரிய நாடகம் என்ன என்பதற்கான தேடல்கள் இவற்றில் விவாதிக்கப்பட்டன. சுயமான தமிழ் நாடகங்களும் பிரசுரிக்கப்பட்டன. ஓவியம் பற்றி நல்ல கட்டுரைகள் வெளிவந்துள்ளன. இசை, நடனம் ஆகியன பற்றி அவ்வளவாகச் சிறுபத்திரிகைகள் கவனம் கொள்ளவில்லை. ஆனால், சினிமா பற்றிய விமர்சனங்கள் விவாதங்கள் ஆகியன சிறுபத்திரிகைகளின் எல்லையைத் தாண்டியும் நிகழ்த்தப்பட்டன.
சினிமாவைப் பற்றி எழுதப்பட்ட கட்டுரைகள் வெகுஜனக் கலாச்சாரத்தைக் கடுமையாக விமர்சித்தவை என்பதால் அவற்றிற்குப் பல்வேறு தளங்கள் தயாராக இருந்தன. பெரிய பத்திரிகைகளிலும் சினிமாவின் சீரழிவு பற்றி முதலைக்கண்ணீர்விடப்பட்டது.
இவற்றிற்கிடையே சினிமாவைப் பற்றிப் பிரக்ஞைபூர்வமாகச் செயல்பட்டவர்கள் வெகுசிலர். அவர்களில் அசோகமித்திரனை முக்கியமானவராகக் கருதுகிறேன். அசோகமித்திரன் பெரிய பத்திரிகைகள், சிறுபத்திரிகைகள் ஆகியவற்றில் சினிமா பற்றி எழுதியவை அலாதியானவை. வாசன் எப்படிப் படமெடுத்தார், ராஜாஜி எப்படிப் படம் பார்த்தார் என்பதிலிருந்து அவர் சென்ற திரைப்பட விழாக்கள் மற்றும் நேற்றுவரை பார்த்த படங்கள் என்று ஆவண மதிப்பிற்கும் ரசனைக்கும் உரித்தான கட்டுரைகளை எழுதியிருப்பவர் அவர். ஒரு படம் கலைப் படமானாலும் சரி, வெகுஜனப் படமானாலும் சரி, அது தகுதியுடையதாக இருப்பின் அதை நுட்பமாகச் சிலாகிப்பதும் அது தகுதிக் குறைவானதாக இருந்தால் தனக்கேயுரிய நகைச்சுவையுடன் அதை விமர்சிப்பதும் சினிமாக் கலைஞர்கள்மீது அவர் கொண்டுள்ள பரிவும் அவரைப் பிறரிலிருந்து வேறுபட்ட அணுகல் உடையவராகக் காட்டுகின்றன.
தமிழ் சினிமா சரித்திரம் பற்றி நிறையக் கட்டுரைகள், புத்தகங்கள் வந்துள்ளன. சிறுபத்திரிகைகளுக்கு அப்பால் நடந்த நிகழ்வுகள் இவற்றில் அதிகம். தமிழ் சினிமா பற்றிய நிறையத் தகவல்களைச் செய்திகளாகத் தொகுக்கும் ராண்டார்கை ஆங்கிலத்தில் எழுதுபவர். இடதுசாரி அக்கறையுடன் தமிழ் சினிமாவின் பல்வேறு முகங்களை உற்றுநோக்கிய அறந்தை நாராயணன் சிறுபத்திரிகை எழுத்தாளர் என்னும் அடையாளம் பெறாதவர். அவர் நடத்திய கல்பனா இதழ்கூடச் சிற்றிதழ் என்று சொல்லத்தக்கதல்ல. அசோகமித்திரனைப் போன்று புனைகதைகளிலும் திரையுலக வாழ்வினைச் சித்தரித்தவர். தியடோர் பாஸ்கரன் தமிழ் சினிமா ஆய்வுகளை முதலில் ஆங்கிலத்தில் படைத்தார். கடந்த இருபதாண்டுகளாகத்தான் ஒரு தொடர்ச்சியுடன் அவர் தமிழ்ச் சிறுபத்திரிகைகளில் எழுதுபவராக இருக்கிறார்.
இதையெல்லாம் இங்கே சொல்வதற்கான காரணம் சிறுபத்திரிகைகளில் வெளிவந்த உலக சினிமா, தமிழ் சினிமா கட்டுரைகளை விவாதிக்கும்பொழுது, அவற்றிற்கு அப்பால் வெளிவந்த படைப்புகளையும் இணைத்துப் பார்க்க வேண்டிய ஒரு பின்னிப்பிணைந்த தன்மை இருக்கிறது என்பதை நினைவுறுத்திக் கொள்ளவே.
சினிமா பற்றிய முதல் நூல்களைத் தமிழில் பம்மல் சம்பந்த முதலியார், பி.எஸ். ராமையா ஆகியோர் எழுதினர். சினிமா உலகத்திற்குள் நுழைபவர்களுக்குப் பயன்படும் வகையில் அவை எழுதப்பட்டிருந்தன. சினிமாவை அத்தொழிலில் ஈடுபடுபவர்கள்தான் கற்க வேண்டும் என்கிற மனோபாவம் வெகுகாலமாகச் செயல்பட்டுக்கொண்டிருந்தது. பின்னர்தான் சினிமா ரசனை முக்கியத்துவம் பெற்றது.
சிறுபத்திரிகைகளில் எழுபது, எண்பதுகளில் வெளிவந்த கட்டுரைகள் சினிமாவைப் புரிந்துகொள்பவையாக இருந்தன. மேலைநாட்டுப் படங்களைப் புரிந்துகொள்வதென்பது அவற்றில் முக்கியமானதாக இருந்தது. வெ. சாமிநாதன் அஃக் பத்திரிகையில் கார்டியாக் படம் பற்றி ஒரு நீண்ட கட்டுரை எழுதியதை ஓர் உதாரணமாகக் கூறலாம். இந்தியாவில் தயாராகிய மாற்றுப் படங்கள் பற்றியும் கட்டுரைகள் வெளிவந்தன. ஆதவன் கணையாழியில் பாசு பட்டாச்சார்யாவின் அனுபவ் படம் பற்றி ஒரு நல்ல கட்டுரையை எழுதியிருந்தார். பிரக்ஞையில் மிருணாள் சென்னின் படங்கள் பற்றி வீராச்சாமி எழுதிய கட்டுரை, வர்க்க வேறுபாடுகளை வலியுறுத்தும் பார்வையைக் கொண்டிருந்தது.
தமிழ் சினிமாவைப் பற்றிய வசவுகளும் விசும்பல்களும் வெளிப்பட்டுக்கொண்டிருந்த அதே காலத்தில், சென்னையில் 1971இல் நடந்த சி.எல்.எஸ். கருத்தரங்கில் எஸ். ஆல்பர்ட் ஒரு கட்டுரையைப் படித்தார்.1 சினிமா ஊடகம் பற்றிய ஒரு சுருக்கமான வரைவு அவர் பார்வையில் குறிப்பிடத்தக்கதாயுள்ள தமிழ்ப் படங்களைப் பற்றிய சீரான கண்ணோட்டம் ஆகியனவெல்லாம் கடந்து முத்தாய்ப்பாகச் சில கருத்துகளை உரத்து வெளியிட்டார். அதிலிருந்து சில வரிகள்: ‘தமிழ் சினிமாக்காரர்கள் ஒரு ரென்வார், ஒரு கோடார்டு, ஒரு பிரஸோன் படத்தைப் பார்த்துவிட்டுத்தான் தமிழில் ஒரு படம் பண்ண வேண்டும் என்று நான் விதிக்கவில்லை. மேலை நாட்டுச் செடிகளைப் பிடுங்கிக்கொண்டுவந்து இங்கே நட்டு வளர்த்து இவர்கள் நஷ்டம் அடைய வேண்டாம். ஷேக்ஸ்பியரை நமக்குத் தெரியும். காதல், காமம், நீண்ட வசனங்கள், பாட்டுகள் ஏறக்குறைய நம் தமிழ் ரசிகர்கள் கேட்டு அடம்பிடிக்கும் மிட்டாய்கள் எலந்த வடைகள்தான். அவர்கள் கேட்டதையெல்லாம் போட்டு ஆனால், அவற்றையெல்லாம் அர்த்தத்தோடு ஆழத்தில் ஒரு அரிய தரிசனத்தில் கலந்துவிட்டார். விளைவு ஒரு வண்ணமிக்க, ஆழமான, அழுத்தமான கனமான செறிவுள்ள ஒரு காவிய நாடகம். இப்படி நாமும் தமிழ் சினிமாவில் வெற்றிக்குத் தேவையான சரக்கனைத்தையும் உள்ளடக்கி அர்த்தபுஷ்டியான படைப்புகளைச் செய்யலாமே? தயவுசெய்து ஷேக்ஸ்பியர் ஒரு மேதை என்று சொல்லிவிட்டுத் தூங்கப்போய்விடாதீர்கள்’.
அப்படியன்றும் தமிழ் சினிமா அபாயகரமான நிலையில் இல்லை என்கிறது அவர் வாதம். அதில் மண்டிக்கிடக்கும் அம்சங்களை ஒரு மேதையால் மேலுக்கு எடுத்துவர முடியும் என்றும் அவர் நம்புகிறார். ஆங்கிலப் பேராசிரியரான ஆல்பர்ட் தமிழ் சினிமாவை ஒரு ஷேக்ஸ்பியரால்தான் காப்பாற்ற முடியும் என்று எண்ணுவதாக ஒரு ஐரனியும் இதில் இழையோடுகிறதோ! தமிழ் சினிமாவைக் கருத்தோட்டம் மிக்கதாக உருவாக்க இயலாததற்குக் கலைஞன் தான் பொறுப்பேற்க வேண்டும் என்கிற குற்றச்சாட்டிற்கு அவரது வாதம் நம்மை இட்டுச் செல்லாமல் கலைஞர்கள் இந்த நெருக்கடியை எவ்வாறு சமாளிக்கலாம் என்பதற்கான ஒரு யோசனையாக அது தரப்பட்டிருக்கிறது. சூழலை முன்வைத்து வாதிடும் மற்றொரு போக்கு வெ. சாமிநாதனுடையது. தமிழ் சினிமாவைப் பாலைப் பரப்பினதாகப் பார்க்கும் அவர் பதேர் பாஞ்சாலி சென்னையில் இரண்டு நாள்கள் -’இரண்டே நாள்கள்’ – ஓடியது குறித்து மனம் வெதும்புகிறார். ‘இப்படத்தை ரசிக்கச் சென்னையில் ரசிகர்கள் இல்லை. படம் வங்காள மொழியில் இருந்தது என்பதல்ல காரணம் ஹிந்தி, ஆங்கிலப் படங்களைப் பார்க்கும் ரசிகர்கள் வங்காளிப் படத்தையும் மொழியறியாமலேயே பார்த்திருப்பார்கள்; அவர்கள் ரசனைக்கு உட்பட்டதாக இருந்தால். ஆனால், அவர்கள் வளர்த்த, வளர்ந்த ரசனை வேறு. மற்றவர்கள் அடையும் முன்னேற்றத்தைக் கண்டு தங்கள் பிற்போக்கை உணரும் மனப்பக்குவத்தில் தமிழர்கள் இல்லை. நம் சமுதாயம் கலையுணர்வு கொண்ட சமுதாயமாகச் சிந்திக்கும் சமுதாயமாக என்றோ அழிந்துவிட்டது, என்று எழுத்துவில் அவர் எழுதுகிறார். வழக்கம்போல வியாபார நோக்கம்கொண்ட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் என்று பழியை மற்றவர்கள்மீது திணிக்காது நமது பலவீனமாகிப்போன சூழல் மரபை -நம்மை – அவர் சாடுகிறார்.2
இலக்கியச் சிற்றேடுகளில் வரும் புதுக்கவிதை மற்றும் சிறுகதைகளைப் படித்துவிட்டு ‘இவற்றால் பாட்டாளி வர்க்கத்திற்கு என்ன நன்மை?’ என்று கேட்டுவிட்டு விமர்சனத்தை முடக்கிக்கொள்ளும் ஓர் இடதுசாரிப் போக்கும் எழுபதுகளில் பரவலாக இருந்தது. வெகுஜனப் படங்களின் நச்சுத்தன்மையை, பாரதிராஜா, பாலுமகேந்திரா படங்களை முன்வைத்துச் சிகரம் விமர்சித்தது. மகேந்திரனின் உதிரிப்பூக்கள் மட்டும் தப்புகிறது. ஆனால், சத்யஜித்ராயின் சோனார் கெல்லாவிற்கு அந்த அதிர்ஷ்டம் இல்லை. மிருணாள் சென்னின் இண்டர்வியு படத்திற்கு இளவேனில் செய்த விமர்சனத்தில் ஆர்ட் படம் மட்டுமின்றி ஆர்ட்பட ரசிகர்களும் பகடி செய்யப்படுகின்றனர். திலீபன் அதற்கு எழுதிய மறுப்பில் இடதுசாரி விமர்சனம் ஆரோக்கியமாகத் திசை திருப்பப்படுகிறது. ராய் படங்களை ஏற்றுக் கொள்ளாவிடினும் அவரது மேதமை பற்றிய கவர்ச்சியால் நேரடியான அவரது பேட்டி அதில் காணப்பட்டது. ‘தமிழ்ப் படங்களைப் பற்றி எனக்குத் தெரியாது. தமிழில் நிறையப் படங்கள் தயாரிக்கப்படுவது மட்டும் தெரியும். ஒளிப்பதிவாளர் நிமாய் கோஷைத் தமிழ்த் திரையுலகம் எந்த அளவுக்குப் பயன்படுத்திக்கொண்டது என்று எனக்குத் தெரியாது’ என்று ராய் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். ராஜாராம் எழுதிய மிருணாள் சென்னின் மிருகயா விமர்சனக் கட்டுரையில் சென், பெனகல் ஆகியோரின் படங்களில் வரும் நிலப்பிரபு, காமவெறியாளனாகக் காட்டப்படுவதால் சுரண்டலைக் காட்டிலும் ஒழுக்கம் பிரச்சினையில் முக்கிய இடம்பெறுவதாகச் சொல்லப்படுகிறது. ஒழுக்கம் வாய்ந்த நிலப்பிரபுவிடமும் ஆதிக்க விரிப்பு இருக்கும் யதார்த்தத்தை அவர் கவனப்படுத்துகிறார். ஊடகங்கள் வர்க்க வேறுபாட்டினைச் சரிவர முன்வைப்பதில் உள்ள பிரச்சினை பற்றிய நுண்மையான அணுகல் அது.3
மேலைநாடுகளில் இரண்டாம் உலகப்போருக்குப் பின் சினிமாவை ஒரு பாடமாகப் பயிலும் நடைமுறை உருவாகியது. சினிமாவைப் பயில்வதன் மூலம் சினிமாத் தொழிலில் புகவேண்டிய நியதி இன்றி ஒரு கல்வியாளராகவோ ஆராய்ச்சியாளராகவோ இருக்க முடியும் என்பது யதார்த்தமாகிற்று. இப்பாடமுறையில் வெகுஜன சினிமாவிற்கு அதுவரை இல்லாத அழுத்தம் தரப்பட்டது. கிளாசிக் என்று சொல்லப்பட்ட படங்கள் மட்டுமின்றி சாதாரண பார்வையாளர்களிடம் செல்வாக்குப் பெற்ற படங்களை ஆழ்ந்து நோக்கும் தன்மை ஓர் இயலாக மாறியது. இதற்கு முக்கியக் காரணகர்த்தாக்கள் கல்வியாளர்களோ ஆராய்ச்சியாளர்களோ அல்ல. அவர்கள் காஹியர் து சினிமா பிரெஞ்சு இதழில் எழுதிய சினிமா விரும்பிகள். திரையியலாளர் ஆந்ரே பாஸைன் உள்ளிட்டுப் பின்னாளில் புதிய அலை இயக்குநர்களாக உருவெடுத்த ட்ரூபோ, சாப்ரோல், கோடார்டு போன்றோர்.
சினிமாவை வணிகத்தனம் என்கிற கோணத்திலிருந்து பார்க்கும் பார்வையின் போதாமையை இப் புதிய அலை விமர்சனம் வெளிக்கொணர்ந்தது. இனி, சிறுபத்திரிகையில் இப்போக்கினை முன்னுதாரணமாகக் கொண்டு வெங்கடேஷ் சக்ரவர்த்தி ஒரு கட்டுரை எழுதினார். காஹியர் து சினிமா விமர்சகர்கள், ஹாலிவுட் இயக்குநர்கள் தங்கள் முன்னிருந்த நிர்ப்பந்தங்களை மீறித் தங்கள் படங்களில் பதித்த முத்திரைகளை அடையாளம் கண்டதுபோல் பாரதிராஜாவின் படங்களிலும் காண முடியும் என்கிற வாதத்தை எடுத்துவைத்தார். அக்கட்டுரையில் பதினாறு வயதினிலே படத்தை அவர் தனக்கு ஆதரவாக எடுத்துக்கொள்கிறார். அப்படம் ஆரம்பித்த இடத்திலேயே வந்து முடிவதை மேற்கத்திய படங்களின் பாணியுடன் ஒப்பிட்டார். ப்ளாஷ் பார்வேர்ட் ஓர் இணைப்பு உத்தியாகப் பாரதிராஜாவின் படங்களில் உபயோகப்படுத்தப்படுகின்றது. மரபார்ந்த மூடநம்பிக்கைகளை அவர் படங்கள் எதிர்க்கின்றன. அதே சமயம் இவையெல்லாம் உத்தி நிலையில் தேக்கமுறுகின்றனவோ என்கிற ஐயப்பாடும் எழுகிறது. புதுமைப்பெண் பாரதிராஜாவின் பிற்போக்கான படம். ஏனெனில், அதில் கேமராவே கதாநாயகியைக் கற்பழிப்பதுபோல் படமாக்கப்பட்டுள்ளது. முதல் மரியாதையிலும் குல கௌரவம் காக்க வேண்டி ஒரு பெண் பலியிடப்படுகிறாள். வசனத்தைவிட இசையை அதிகம் பயன்படுத்திக் காட்சி அமைக்கிற உத்தி பாரதிராஜாவினுடையது. இவையெல்லாம் சக்ரவர்த்தியின் அவதானிப்புகள். இவற்றை ஆதரித்தும் மறுத்தும் இனியில் கட்டுரைகள் வெளிவந்தன. பாப்பாண்ணன் மகன், பிரெஞ்சு திரைக்கருத்தாக்கமான ஆசிரியர் கோட்பாட்டின் வழியாகப் பாரதி ராஜாவைப் பார்க்கவியலாது என்றும் அவரை ஒரு டெக்னிகல் திறமையுள்ள ஏமாற்றுவாதியாகத்தான் பார்க்க வேண்டும் என்றும் தனது வாதங்களை வெளியிட்டார்.
கோ. ராஜாராமிடமிருந்து மற்றொரு எதிர்வினை. பாரதிராஜா கிராமியச் சமூகத்தின் முரண்பாடுகளை மேலோட்டமாக முன்வைக்கிறார். அவர் மூடநம்பிக்கைகள், ஐதீகங்கள் ஆகியவற்றையும் வகையாக எதிர்ப்பவரல்ல. பெண் தன் தாலியைக் கழற்றி எறிவதைப் பாலச்சந்தர் (பாரதிராஜாவுக்கு முன்பாகவே) அவர்கள் படத்தில் காட்டியிருக்கிறார். இவை கோ. ராஜாராம் தரப்பு வாதங்கள். ஆனால், இருவரும் சக்ரவர்த்தியின் முயற்சியைப் பாராட்டுகிறார்கள்.4
ஒரு கருத்தியலுக்கான முழுமையை அடையாத வாதங்கள் என்றபோதிலும் இவை பின்னர் சிறுபத்திரிகைகள் தொடர்ந்து வெகுஜனப் படங்கள் பற்றி எழுத வழிவகுத்தன என்று சொல்லலாம்.
சினிமாவிற்கென்று வெளிவந்த சிறுபத்திரிகைகள் சலனம், நிழல் ஆகியன. மூன்று ஆண்டுகள் வெளி வந்த சலனம் சிற்றேட்டில் மொழி பெயர்ப்புக் கட்டுரைகள் அதிகம். உலக சினிமாச் சாதனையாளர்கள் பற்றிய கட்டுரைகள் வந்தன. அழகியல் பார்வைக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. பி.கே. நாயர் சலனத்திற்காகவே ஒரு கட்டுரைத் தொடரை எழுதினார். மற்றபடி தமிழ் சினிமா பற்றிய விமர்சனங்கள், விவாதங்கள் அதில் சொற்பமாகவே இருந்தன. கே.எஸ். சேதுமாதவனின் பேட்டி அவர் எடுத்த மறுபக்கம் படத்திற்குத் தங்கத்தாமரை கிடைத்ததையட்டி அதில் வெளியாயிற்று. அது பற்றிய ஒரு நினைவு. முதன்முதலாகத் தங்கத் தாமரை கிடைத்த படம் என்ற போதிலும், தமிழ்ப் பத்திரிகைகள் அச்செய்தியைப் பொருட்படுத்தி வெளியிடவில்லை. சேதுமாதவனைச் சலனத்திற்காகப் பேட்டி காணச் சென்றபொழுது மலையாளப் பத்திரிகைகள் அச்செய்தியை முன்பக்கத்தில் வெளியிட்டிருந்ததை வருத்தத்துடன் எடுத்துக்காட்டினார். நான் அவரைச் சமாதானப்படுத்தினேன். இது நடந்தது 1991இல். அப்பொழுதெல்லாம் திரைப்படம் அரசாங்க விருது வாங்குவதை ஏதோ தெய்வகுற்றம்போல் பாவித்தனர் கோடம்பாக்கத்தினர். இன்று விருதுகள், பட விழாக்கள் என்று தமிழ் சினிமா அமர்க்களப்படுகிறது. எத்தகைய படங்களை நாம் எடுக்கிறோம் என்கிற சுயப்பிரக்ஞை மட்டும் குறைவாகவே இருக்கிறது. இப்பொழுது வந்து கொண்டிருக்கும் நிழல் சிற்றேட்டில் நிறையத் திரைக்கதைகள் வெளியிடப்பட்டுள்ளன. திரைப்பட விழாக்கள், இயக்குநர்களின் நேர்காணல்கள், சினிமா தயாரிப்பு பற்றிய கட்டுரைகள் இதில் காணப்படுகின்றன. தமிழ் சினிமா சரித்திரம், கலைஞர்கள் பற்றிய காத்திரமான ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறது.
சமூகத்தின் வர்க்கப் போராட்டத்தினை முன்னெடுத்துச் செல்லும் இடதுசாரி விமர்சனத்தைவிடச் சாதி அடிப்படையில் பன்னெடுங்காலமாகப் புரையோடியுள்ள சமூகத்தின் அவல முரண்களை ஆராயும் தலித் விமர்சனம் தமிழில் உள்ளார்ந்த பலத்துடன் செயல்படுகிறது. மொழி சிற்றேட்டில் வெளிவந்த ஸ்டாலின் ராஜாங்கத்தின் ஒரு கட்டுரையை நான் இதற்கு எடுத்துக்காட்டாக முன்வைக்கிறேன். இக்கட்டுரையில் தலித் சமூகம் எவ்வாறு ஊடகங்களில் சித்தரிக்கப்படுகிறது என்பதை ஸ்டாலின் அலசுகிறார். மிகுதியாகத் திரைப்பட ஊடகம் பற்றிய அவரது கருத்துகள் இடம்பெற்றுள்ன. வெகுஜனப் படம், டாகுமெண்டரி ஆகியவற்றை அவர் தனது விமர்சனத்திற்கு எடுத்துக்கொண்டிருக்கிறார். இடதுசாரி, திராவிட மற்றும் அரசியல் சார்பில்லாத கலைஞர்கள் எடுத்த படங்களில் தலித்துகள் முக்கியமற்றவர்களாகப் படைக்கப்பட்டிருக்கிறார்கள். திராவிடக் கருத்தியல் தாக்கம் பெற்றவர்களும் பிராமணிய மதிப்பீடுகளுக்குள் அடங்கிப்போய்விடுகிறார்கள். சினிமாவை இவர்கள் மேலும் இருட்டுக்குள் தள்ளினார்கள் என்றெல்லாம் கூறும் ஸ்டாலின் காதலுக்கு எதிராய் நின்று வன்முறையை ஏவிய சாதியிலிருந்தே தியாகியை உருவாக்கிய காதல் படமும் தலித் பாத்திரங்களை அவற்றின் சமூகத் தன்னிலையோடு சொல்லாது மறைத்துவிடுகின்றன என்கிறார்.5
இப்பொழுது சிறுபத்திரிகைகளில் சினிமா விமர்சனங்கள் மலிந்துவிட்டன. ஒரு காலத்தில் படங்கள் இல்லாத பத்திரிகைகள் என்று பரிகாசமான அடையாளம் பெற்றிருந்த சிற்றேடுகள் இன்று பல புகைப் படங்களுடன் சினிமாக் கட்டுரைகளை வெளியிடுகின்றன. சிற்றேடுகளின் லேஅவுட் மாற்றத்திற்கு இக்கட்டுரைகளும் ஒரு காரணம். பெரும்பாலான விமர்சகர்கள் உணர்ச்சிப் பிழம்பாக மாறிவிடுகிறார்கள். தங்களுக்குப் பிடித்த படங்களைக் காவியங்கள் என்றெல்லாம் புகழ்கிறார்கள். திரையில் காவியம் படைப்பது அத்தனை எளிதா என்ன? எண்பதுகளில் தமிழ் சினிமா விமர்சனம் ஒரு நிதான உணர்வுடன் செய்யப்பட்டது. அந்த உணர்வு இப்போது அடியோடு போய்விட்டது. உலகத் திரைப்பட வரலாற்றையே மாற்றி அமைத்த படங்களுடன், பிற தமிழ்ப் படங்களிலிருந்து ஆறு வித்தியாசங்களுடன் வெளிவரும் தமிழ்ப் படங்களை ஒப்பிடுகிறார்கள். வெற்றிப் படங்கள் விரைந்து கவனிக்கப்படுகின்றன. வித்தியாசமான முயற்சிகளை அவற்றிற்குள்ளேயே தேடுகிறார்கள். மாற்றுப் படங்களைப் பற்றி அவர்கள் கவலைகொள்வதில்லை. கமலஹாசனின் விருமாண்டி (2004) படம்தான் முதன்முதலாகத் தூக்குத் தண்டனைக்கெதிரான தமிழ்ப் படம் என்று எழுதப்பட்டுவருகிறது. அதற்கு முன்னரே அப்பிரச்சினை லெனின் எடுத்த ஊருக்கு நூறுபேர் (2001) படத்தில் கையாளப்பட்டிருக்கிறது. இது பல விமர்சகர்களுக்குத் தெரியாது. சினிமா விமர்சகர்களுக்கு சினிமா சரித்திரமும் தெரிவதில்லை. பாதை தெரியுது பார், உன்னைப் போல் ஒருவன் என்று சகட்டு மேனிக்கு எழுதுகிறார்கள். எத்தனை பேர்கள் அவற்றை உண்மையிலேயே பார்த்தார்கள் என்பது கேள்விக்குறி.
தொடர்ந்து தமிழ் சினிமா சரித்திரத்தைச் சீரமைத்து வரும் தியடோர் பாஸ்கரன் தமிழில் வரும் மாற்றுப் படங்களைப் பற்றியும் தவறாது எழுதிவிடுகிறார். ஆங்கிலத்திலும் தமிழ்ச் சிற்றேடுகளிலும் அவர் எழுதும் கட்டுரைகள் வாயிலாக மாற்றுப்பட முயற்சிகளை அறிந்தவர்கள் பலர். ஊருக்கு நூறு பேர் பற்றி அவர் ஹிந்துவில் எழுதியதைப் படித்துவிட்டு நியுஜெர்சியில் இயங்கும் சிந்தனை வட்டத்தினர் அப்படத்தைத் தருவித்து அங்கே திரையிட்ட சம்பவத்தை ஓர் உதாரணமாகச் சொல்லலாம்.
லண்டனிலிருந்து தொடர்ந்து எழுதிவரும் யமுனா ராஜேந்திரன் மற்றொரு குறிப்பிடத்தக்க சினிமா விமர்சகர் – ஆய்வாளர். எவ்வகைப் படமானாலும் அதை விமர்சிக்கையில் அதன் அரசியலை அவர் கண்டுகொள்கிறார். இது அரசியல் பார்வையையும் வெகுஜன மக்களை நோக்கிய சினிமாமீது கொண்டுள்ள தளர்த்தப்பட்ட மதிப்பீடுகளையும் இணைக்க விழைகிறார். ஆனால், வேறொரு சந்தர்ப்பத்தில் தன்னால் தளர்த்தப்பட்டவற்றை அவர் தானே இறுக்கிக்கொள்வதும் உண்டு. பாலுமகேந்திராவின் படங்களைப் பற்றி அவர் கொள்கிற மதிப்பீடுகள் பெறும் அடிக்கடியான மாற்றத்தை இதற்கு ஓர் உதாரணமாகக் கூறலாம். தமிழ் சினிமாவை உலக சினிமாவுடன் சரளமாக ஒப்பிட்டு வேறுபடுத்திப் பார்த்துச் செல்லும் மனப்பாங்கினை இவரிடம் காணலாம். காலனி ஆதிக்கம், வல்லரசு எதேச்சதிகாரம் ஆகியவற்றை எதிர்க்கும் உலக சினிமாவைப் பற்றிய தொடர்ந்த சொல்லாடல்களைக் கொண்ட ஒரே தமிழ் சினிமா விமர்சகர் யமுனா ராஜேந்திரன் என்பது மிகையாகாது. பல உலகத் தமிழ்ச் சிற்றேடுகளில் இவர் எழுத்துக்கள் பிரசுரமாகின்றன.
உலக சினிமா எதையும் நினைவு படுத்திக்கொள்ளாது செந்தமிழ் பரப்பிற்குள்ளாகவே, தனது சினிமா பார்வையை வடிவமைப்பவர் அ. ராமசாமி. இவரும் முழுக்க ஒரு சிறுபத்திரிகை எழுத்தாளர். பார்வையாளனை உத்தேசித்து எழுப்பப்படும் விவாதங்களாகத் தனது எழுத்துக்களை அவர் பார்க்கிறார். விருப்பு வெறுப்புகள் நிறைந்த அப்பார்வையாளனாக அ. ராமசாமியையே வாசகர்கள் அடையாளம் காண்பார்கள். ஒரு படம் எப்படி வெற்றிபெற்றது ஏன் தோல்வியுற்றது என்பதற்கான காரணங்களை ஆராய அதிக சிரத்தை எடுத்துக்கொள்ளும் ராமசாமி அவற்றையெல்லாம் ஒரே பாய்ச்சலில் தாண்டி மற்றவர்கள் புகாத ஒரு மையத்திற்குள் சென்று, அதுவே அதன் உட்பொருள் என வாதிடுகிறார். வசீகரமாகத் தோற்றமளிக்கும் அம்மையம் சில தருணங்களில் மிகைப்படுத்தலாகவும் தெரிகிறது. காதல் படத்தில் பெரியார் சிலைக்கு அருகில் பைத்தியமாகிவிட்ட காதல் தோல்வியடைந்த காதலன் நிற்பதை இயக்குநர் அவன் பெரியாரால் கைவிடப்பட்டவனாக உருவகிக்கிறார் என்று வாதிடுகிறார். இயக்குநரின் உத்தி கேமராவில் மேலிருந்து கீழ்நோக்கும் கோணமாக சினிமா மொழியாக வெளிப்படுவதாக அவர் விமர்சனத்தை நிறுவுகிறார். இது தற்செயலான கேமரா கோணமா, கருத்தினை வலிறுத்த வைத்த கோணமா என்பதெல்லாம் விவாதத்திற்குரியவை. ஆனால், அவ்வாறெல்லாம் பார்ப்பதற்கு அப்படைப்பில் இடமிருந்தால் வெகுஜன சினிமா என்னும் காரணத்தை வைத்து அப்பார்வையை மறுக்கக் கூடாது. சினிமா ரசனையின் அடிப்படையே இதுதான். வெகுஜன சினிமாவை அடர்த்தியான மொழிகொண்டதாகப் பார்க்கும் போக்கின் மூலமாக அதன் படைப்பாக்கம் சற்றே மாறுதலடையும் என்றால்கூட அது வரவேற்கத்தக்கதுதான்.
சிற்றேடுகளில் ஒரு சிலவற்றைத் தவிர மற்ற அனைத்தும் எல்லா விதமான சினிமாப் பார்வைகளுக்கும் களன்களாக அமைவதால் அப் பத்திரிகைகளின் சினிமா அக்கறைகள் என்று சில குணநலன் களைத் தேர்வுசெய்வது இயலாது. அவற்றில் எழுதும் படைப்பாளிகளின் பார்வைகளைத்தான் அக்கறைகளாகக் காண முடியும்.
குறிப்புகள்
1. எஸ். ஆல்பர்ட்டின் கட்டுரை ‘தமிழ்ப் படங்கள் காட்டும் மனிதனும் சமூகமும்’ இன்றைய தமிழ் இலக்கியத்தில் மனிதன் என்னும் தொகுப்பு நூலில் 1972இல் வந்தது. அது காலச்சுவடு வெளியீடான சித்திரம் பேசுதடி (2004) நூலில் மறுபிரசுரம் செய்யப்பட்டுள்ளது.
2. இக்கட்டுரை வெ. சாமிநாதனின் பாலையும் பாழையும் நூலில் சேர்க்கப்பட்டுள்ளது.
3. சிகரம் இதழ்த் தொகுப்பில் இக்கட்டுரைகளைக் காணலாம். பக். 521 – 560 வரை. சிகரம் பதிப்பகம் சென்னை – 78, தொகுப்பாளர், கமலாலயன்.
4. இனி இதழ்கள் அக்டோபர், நவம்பர், டிசம்பர் 1986.
5. மொழி – ஆகஸ்ட் 2006.
நன்றி: காலச்சுவடு, இதழ் 100, ஏப்பல் 2008
http://www.kalachuvadu.com/issue-100/page87.asp
பாரதியின் இளம் நண்பர்கள்
சுப்பிரமணிய பாரதி’ டாகுமெண்டரி படம் அனைவரையும் எளிதில் சென்றடைவதாக இருக்க வேண்டும் என்று அதன் தயாரிப்பாளர் ந. முருகானந்தமும் நானும் முடிவு செய்தோம். ஒரு மணி நேரப் படமாக அது திட்டமிட்டபொழுது அதற்கான காட்சிகளைத் தீர்மானிப்பது அவ்வளவு எளிதாக இல்லை. பாரதி பற்றி நூல்கள் எழுதத் தேவையான தரவுகள் நிறைய உள்ளன. அவரது வாழ்வைக் காட்சிப்படுத்தப் போதுமான ஆவணங்கள் இல்லை. ரா. அ. பத்மநாபனின் ‘சித்திர பாரதி’யில் உள்ள புகைப்படங்கள் அவற்றிற்கு ஒரு தோற்றுவாயைத் தந்தன. எனவே இப்படத்தை எடுக்கும்பொழுதே எதிர்காலத்திற்கும் தேவையான காட்சி ஆவணங்களைத் தயாரிப்பது அவசியமென்று உணர்ந்தோம். அதன்படி பாரதியின் வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட வீடுகள், இடங்கள், கல்வி நிலையங்கள், படித்த, பணியாற்றிய பத்திரிகைகள் ஆகியனவெல்லாம் படம்பிடிக்கப்பட்டன. பாரதியை ஏதாவது காரணம் காட்டிக் கைதுசெய்யத் துடித்தது பிரிட்டிஷ் அரசாங்கம். தடைசெய்யப்பட்ட ‘காலிக் அமெரிக்கன்’ என்னும் அமெரிக்காவிலிருந்து வெளியான அயர்லாந்து விடுதலை ஆதரவுப் பத்திரிகையின் சந்தாதாரர் என்னும் குற்றச்சாட்டினைச் சுமத்தி அவர்மீது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. படத்தில் இடம்பெற வேண்டி அப்பத்திரிகை அமெரிக்காவிலிருந்து மிகுந்த பிரையாசைக்கிடையில் வரவழைக்கப்பட்டுச் சேர்க்கப்பட்டது. பல தடயங்கள் அழிந்துபோயிருந்தன. எஞ்சிய அனைத்தையும் ஒன்றுவிடாமல் சேர்க்க வேண்டிப் புதுவை, சென்னை, எட்டயபுரம், கடையம், மதுரை, திருநெல்வேலி, கானாடுகாத்தான், காரைக்குடி, காசி ஆகிய இடங்களிலெல்லாம் படப்பிடிப்பை நடத்தினேன்.
அந்த இடங்களுக்கெல்லாம் சென்று அங்குள்ள வயது முதிர்ந்தவர்களையெல்லாம் பார்த்தபொழுது அவர்கள் யாராவது பாரதியைச் சந்தித்திருக்க மாட்டார்களா அவர்களது அனுபவங்களைச் சொல்ல வைத்துப் படம்பிடிக்கமாட்டோமா என்னும் ஏக்கம் எனக்குள் தலைதூக்கியது. பாரதி இறந்தது 1921இல், நான் 1998இல் படம் பிடிக்கிறேன். பாரதியை நேருக்குநேர் சந்தித்த சமயத்தில் அவர்களுக்குக் குறைந்தது பத்து வயதாவது இருந்திருக்கும் பட்சத்தில் தற்சமயம் அவர்கள் 88 வயதுக்காரர்களாக இருக்க வேண்டும். அத்தகைய அபூர்வ மனிதர்கள் உயிருடன் இருப்பார்களோ இல்லையோ என்ற எண்ணத்துடன் நான் படப்பிடிப்பை நடத்திக்கொண்டிருந்தேன். ஒரு இருபது வருடங்களுக்கு முன்னால் இந்தப் படம் எடுக்கப்பட்டிருந்தால் என்னால் பாரதியுடன் பழகிய நிறையப் பேர்களைச் சந்தித்திருக்க முடியும். இதற்கு முன்னால் தமிழ்நாடு பிலிம்ஸ் டிவிஷன் 16 எம்.எம்.மில் எடுத்திருந்த பாரதி டாக்குமெண்டரி ஒன்றில் அவருடைய இளைய சகோதரர் சி. விசுவ நாதனின் பேட்டியைப் பார்க்க முடிந்தது. அவரைத் தவிர பாரதியுடன் பழகிய வேறு எவருடைய நேர் காணலும் படம் எடுக்கப்படவில்லை. இப்பொழுது அவரும் உயிருடன் இல்லை.
சில இடங்களில் பாரதியுடன் நன்கு பழகியவர்கள் இருப்பதாக எனக்குத் தகவல்கள் கிடைக்கும். அவர்களைத் தேடிச் சென்று சந்தித்த உடனேயே அவர்கள் பிறந்த ஆண்டைத் தெரிந்துகொள்வேன். எந்தெந்த ஊரில் பாரதி எவ்வளவு காலம் தங்கியிருந்தார் என்பதுடன் அவர்கள் சொல்லும் வருடத்தையும் ஒப்பிட்டு ஒரு மனக்கணக்குப் போட்டுவிடுவேன். ஆனால் அதற்கெல்லாம் முன்பாக அவர்கள் தாங்களாகவே பாரதியைச் சந்தித்தது கிடையாது என்று கூறிவிடுவார்கள். பாரதி பற்றித் தங்களுக்கு அங்கு வாழ்ந்த தங்களைவிட மூத்தவர்கள் கூறிய தகவல்கள் மட்டுமே தெரியும் என்று கூறிவிடுவார்கள். ஓரிருவர் பொய் சொல்லி மாட்டிக்கொண்டதும் உண்டு. அவர்கள் பாரதியை நேரடியாகத் தங்களுக்குத் தெரியும் என்று கூறிச் சுற்று வட்டாரத்தில் அதன் காரணமாகச் செல்வாக்கை அனுபவித்தவர்கள்.
கடையத்தில் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு குழுவினருடன் வேனில் செல்ல முற்பட்டபொழுது ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி என்னை அணுகினார். பாரதியை நேரில் அறிந்தவர்கள் அங்கு யாரும் இருக்கிறார்களா என்று நான் விசாரித்துக்கொண்டிருந்ததை அவர் கேட்டதாகவும் தொண்ணூறைக் கடந்த ஒரு முதியவர் இன்னமும் அங்கு வாழ்ந்துகொண்டிருப்பதாகவும் அவர் சொன்னார். அந்த முதியவரின் பெயர் கல்யாணசுந்தரம் என்றும் அவர் தற்சமயம் விக்கிரமசிங்கபுரத்தில் தன் மகள் வீட்டில் இருப்பதாகவும் கூறினார்.
எதற்கும் அங்கு சென்று பார்த்துவிடுவோமே என்று எனக்குத் தோன்றியது. மாலையில் விக்கிரமசிங்கபுரத்தை சென்றடைந்தபொழுது லேசாக மழை தூறி நின்றிருந்தது. அவர் தங்கியிருந்த வீட்டைக் கண்டுபிடிப்பது ஒருவர் வழிகாட்டியபின் சுலபமாக இருந்தது. கைவைத்த பனியன் போட்ட சிவந்த நிறமுடைய க. பி. கல்யாணசுந்தரம் ஈஸிசேரில் அமர்ந்து ‘கல்கி’ படித்துக்கொண்டிருந்தார். தலையில் போதுமான நரைமுடி. வயதைக் குறைத்து மதிப்பிடலாம் என்பது போன்ற உடல் தோற்றம். ஒரு பருவத்திற்குமேல் உடலின் மூப்படையும் வேகம் குறைத்துவிடுகிறது. என்னைச் சுருக்கமாக அறிமுகம் செய்துகொண்டேன். வெற்றிலை பாக்கைக் குதப்பிக் கொண்டிருந்தவரிடம் ‘உங்களுக்குப் பாரதியைத் தெரியுமா?’ என்று கேட்டவுடன் அவர் முகத்தில் அப்படியொரு மலர்ச்சியைக் காட்டினார். ‘ஓ! தெரியுமே! என்றவர் கடகடவென்று தனது நினைவுகளை வெளிக்கொணர்ந்தார். அவர் பேச ஆரம்பித்த முப்பது விநாடிகளுக்குள் அவர் பாரதியுடன் உண்மையிலேயே பழகியிருக்கிறார் என்பது எனக்குத் தெரிந்துவிட்டது. கேமராவையும் உபகரணங்களையும் வேனிலிருந்து இறக்குமாறு எனது உதவியாளரிடம் கூறிவிட்டு, அவரிடம் வேறு திசையில் சம்பாஷணையைத் தொடங்கினேன்.
திரைப்படத்திற்காகப் பேட்டி எடுப்பது பத்திரிகைக்காகப் பேட்டி எடுப்பதிலிருந்து வேறுபட்டது. பத்திரிகைப் பேட்டியில் முகபாவங்கள், சைகைகள், குரலிறக்கங்கள் முக்கியமல்ல. வார்த்தைகள் கிடைத்தால் போதும். படத்திற்குத் தரும் பேட்டியில் பேட்டி தருபவரின் உடல்மொழி பதிவுசெய்யப்பட வேண்டும். சிலர் பேட்டி காணச் சென்றவுடன் தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு சிரிப்பார்கள், ஆத்திரப்படுவார்கள், அழுவார்கள். அவர்கள் திரும்பவும் கேமராவின் முன் அவற்றைச் சொல்லும்பொழுது அந்த உணர்வுகள் வெளிவராது. பழகிப்போன ஓர் உணர்வுடன் அவற்றைப் பேசுவார்கள். எங்கே என்னிடம் பேசும்பொழுது தனது உணர்ச்சிகளைக் கொட்டித் தீர்த்துவிடுவாரோ எனப் பயந்தேன். படத்திற்காகப் பேசும்பொழுது அவை முதன்முதலாக வெளிவரட்டும் என்பதற்காக அவரிடம் அவர் வாழ்க்கை பற்றிக் கேட்டுக்கொண்டிருந்தேன். அவர் கூட்டுறவுச் சங்கத்தில் வேலை பார்த்து ஓய்வுபெற்றிருந்தார். மரபுக் கவிதைகள் எழுதுவதில் அவருக்கு ஆர்வம் இருந்திருக்கிறது. பேட்டி எடுத்தபொழுது அவருக்கு 92 வயது. இடையிடையே பாரதி பற்றி ஞாபகங்கள் கிளர்ந்தெழ அவை பற்றியும் பேசிக் கொண்டிருந்தார். 1919இல் பாரதியுடன் பழகியிருந்தார்.
கேமரா கொண்டுவரப்பட்டுப் படப்பிடிப்பிற்கு எல்லோரும் தயாராக இருந்தோம். அவர் வீட்டிலுள்ளவர்கள் அவருக்கு வெள்ளை முழுக்கைச் சட்டை அணிவித்து நெற்றியில் குங்குமப் பொட்டை வைத்தனர். என்னுடைய கேள்விகளுக்கு நிதானமாகப் பதில் கூறினர். அவ்வப்போது ஒன்றுக்கு வருகிறது என்று பள்ளிச் சிறுவன்போல் விரலைக்காட்டி அனுமதி கேட்டார்.
நீங்கள் எப்பொழுது பிறந்தீர்கள்? பிறந்ததிலிருந்தே கடையத்தில்தான் வாழ்கிறீர்களா?
நான் 1908 ஜனவரி 16ஆம் தேதி பிறந்தேன். தாயார் வீடு தென்காசி. என் தாத்தா புலியூர் கர்ணம். தைப் பொங்கலிட்ட சமயம் பொங்கல்படி வாங்குவதற்காக மேளதாளம் தப்பட்டைகளுடன் வந்து பொங்கலிட்ட சமயத்தில் நான் பொறந்தேன். நான் பொறந்ததிலிருந்து கடையத்தில்தான் வாழ்கிறேன்.
பாரதியாரைச் சந்திக்கிற சந்தர்ப்பம் எப்படிக் கிடைத்தது? அவருடன் எவ்வாறு பழகினீர்கள்?
எனக்குப் பன்னிரெண்டு வயசு இருக்கும்னு நினைக்கிறேன். அப்பொழுதுதான் நான் பாரதியாரைச் சந்திச்சேன். சின்னப்பசங்க எந்தவொரு வேடிக்கையா இருந்தாலும் நாங்க போய்ப் பார்ப்போம். அது மாதிரி பாரதி ஒரு வேடிக்கையான ஆள். அவர் யார்கூடவும் அதிகம் பேசிக்கிட மாட்டாரு. அவர் டிரஸ் பண்ற விதமே தனி. ஒரு க்ளோஸ் கோட்- அல்பகா கோட்- போட்டிருப்பாரு. அதுக்குள்ளே ஷர்ட் போடமாட்டாரு. வேஷ்டியை உள்ளுக்கு வச்சு அதுக்குமேலே கோட்டை மாட்டி ஒரு நீல நிற வேஷ்டியை டர்பன் கட்டித் தொங்கப் போட்டுவிட்டு ஸ்ட்ரெய்ட் ஆ கையை வைச்சுகிட்டு நடுத்தெருவிலே மார்ச் பண்றமாதிரி போவாரு. யாரையும் பாக்கமாட்டாரு . . .
முக்கு வந்தா அட் ரைட் ஆங்கிள்- ரைட் லெப்ட் திரும்பற மாதிரி திரும்புவாரு (கையில் சைகை செய்து காண்பிக்கிறார்) ஆக அவரு ஒரு தனிப்பட்ட பிறவி அப்படிங்கற எண்ணத்திலே அவரை நாங்க எல்லாம் வேடிக்கை பார்ப்போம். அப்பறம் கொஞ்சநாள் ஆகவும் இவரோடு ப்ரண்ட்ஷிப் நமக்குக் கிடைச்சா தேவலியே, புது மாதிரி ஆளா இருக்காரேன்னு எண்ணம் வந்தது.
அப்ப என்கூடச் சேர்ந்த பையனுங்க இரண்டு மூணுபேர். அவருக்குத் தனியா ஒரு வீடு கொடுத்திருந்தாங்க தங்கியிருக்க. அவர் கடையத்தில் இருக்கும்பொழுது அந்த வீட்டில்தான் தங்கி இருந்தாரு. அவருடைய மனைவி வீடு பக்கத்திலுள்ள பெருமாள் கோவில் தெரு. அதைப் பழைய கிராமம்னு சொல்லுவாங்க. அங்க இருந்து சாப்பாடு இவர் இருக்கிற வீட்டிலே கொண்ணாந்து கொடுப்பாங்க. இவரு சாப்பிட்டுட்டு எழுத்து வேலையைப் பாத்துக்கிட்டு இருப்பார். கவிதை எழுதுவாரு. அவரு என்ன எழுதுவாருங்கிறதைப் பத்தி நாங்க கவலைப்படமாட்டோம். நிறைய தபால் எழுதுவார். கார்டில் எழுதினதைத் தானே கைப்பட போஸ்ட் ஆபீசிலே கொண்டுபோய்ப் போட்டுட்டு வருவாரு. அந்த மாதிரி நாங்க அவரோட பழகிக்கிட்டு இருந்தோம்.
அந்தத் தபால் கார்டுகள் பற்றி சொல்லிக் கொண்டிருந்தீங்க…
என்னுடைய தோழன் ஒருவன். அவன் பின்னால் வாத்தியார் வேலை பார்த்தான். அவன் என் க்ளாஸ்மேட். அவன் பாரதி வெச்சிருந்த அந்தக் கார்டுகளில் சிலதைத் தனக்கு உபயோகப்படும்னு எடுத்தானோ என்ன காரணமோ. அவன் கார்டு எழுதக்கூடிய பையனாவும் தெரியலே. எதுக்கோ எடுத்து மடியிலே வைச்சிகிட்டான். பாரதியார் இன்ன இன்னார்க்கு எழுதனும்னு ஒரு திட்டத்தோட நிறையக் கார்டு வாங்கி வச்சிருப்பாரு. அதில நாலு கார்டு காணலேன்னா தேடத்தானே செய்வாரு! ஏழெட்டுக் கார்டை எடுத்து மடிக்குள்ளே வைச்சுக்கிட்டான். அவரு பத்து இருபது கார்டு வாங்கிக்கொண்டு வந்து வச்சிருந்தார்னு நெனைக்கேன். அவர் வந்த உடனே எழுத ஆரம்பிச்சாரு.
நாங்க அப்போ வீட்டுத் தோட்டத்துக்கு முன்னாலே பின்னாலே ஓடி விளையாடிகிட்டு இருப்போம். அப்ப இவர் பார்த்து ‘இங்கே வாங்கடா. இதிலே இருந்து போஸ்ட் கார்டை யாராவது எடுத்தீங்களா?’ அப்படின்னு கேட்டாரு. எங்கள் ஒருத்தருக்கும் தெரியாது. நான் பரக்க பரக்க முழிச்சேன். யார் அவர் எழுதற இடத்தில உள்ளதை எடுக்கப்போறா. அங்க நாங்க போகமாட்டோம். அவன் ஒருத்தன் மட்டும் ஒரு மாதிரியா முழிச்சான். ‘யாரும் எடுக்கலியே, ஒண்ணும் எடுக்கலியே’ அப்படின்னான். அவர் கூர்மையா அவன் மடி கனமா இருந்ததைப் பார்த்துக்கிட்டு ‘வேட்டியை அவுருடா’ அப்படின்னு சொன்னார் (சிரிப்பு). அவன் வேட்டியை அவுக்கும்போதே கீழே மடியிலே சொருகி வச்சிருந்த கார்டு பொலுபொலுன்னு விழுந்தது. உடனே அவருக்கு மகாகோபம் வந்து அவனை அடிச்சிட்டாரு. அடிச்சவுடனே ஓன்னு அழுதான். தெரியாம செஞ்சிட்டேன். அப்படி இப்படின்னு.
‘ஏண்டா, மத்த பையனுங்களையும் சேர்த்துத் திருட்டுப் பயலாக்க பாத்தியே நீ! இப்படிச் செய்யலாமா? செய்யறது தப்பு இல்லையா? நீ உணரல்லையா?’ அப்படியெல்லாம் கேட்டாரு. அவர் அவன் அறியக்கூடிய சக்திக்கு மேற்பட்ட அளவிலே கேள்விகள் கேட்டாரு. தெரியாம செஞ்சிட்டேன். தெரியாம செஞ்சிட்டேன்னு’ சொல்லிக்கிட்டிருந்தான்.
‘சரி. அழாதே. இனிமே நான் உன்னை அடிக்க மாட்டேன்’. கொஞ்ச நேரம் கழிச்சு அவனைக் கையெடுத்துக் கும்பிட்டார். ‘இனிமேல் நீ நல்ல பையனா இருக்கணும். நீ பொய் பேசக் கூடாது. அதனாலதான் உன்னை அடிச்சேன். கோழைப்பயல், தைரியம் இல்லாதவன்தான் பொய் பேசுவான். உள்ளதை மறைச்சுப் பேசணும்கிற அவசியம் அவனுக்குத்தான் உண்டு. நீ யாருக்கும் பயப்பட வேண்டாம். பொய் சொல்லப் பயப்படணும். உண்மை சொல்றவன் யாருக்கும் பயப்படத் தேவை கிடையாது’ அப்படின்னு அவனுக்குப் பெரிசா ஒரு உபந்நியாசமே செய்து முடிச் சிட்டாரு. அப்புறம் எங்களோட விளையாட விட்டுட்டாரு. அவன் நாலஞ்சு நாள் வராமல் இருந்தான். பாரதியார் கேட்டாரு ‘ஏண்டா, ராமையா உங்ககூட வரலையா?’ன்னு.
‘என்னமோ வரலை சார்.’ அப்படின்னேன்.
‘அவன் வந்தா வரட்டும். அவன வரவேண்டாம்னு நான் சொல்லலை’ அப்படின்னு சொன்னார். அப்புறம் அவன் கொஞ்சம் கொஞ்சமா எங்களோட வந்தான்.
தொடர்ந்து பாரதியாரோட ஒத்துப்போகிற ஆள் நான் ஒருத்தன்தான். மத்த பசங்க எல்லாம் விளையாடிட்டுப் போயிடுவாங்க.
நீங்கள் சொல்வதிலிருந்து பாரதியுடன் நீங்களெல்லாம் அதிக நேரத்தைக் கழித்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது. அவர் பாடக் கேட்டிருக்கிறீர்களா?
எங்க ஊர்ல பெரிய மணல் பரப்பு. அதிலே போய் உக்காருவோம். சாயங்கால நேரத்தில் அவர் பாடுவாரு. அவர் கவிதைகளை புனைவதற்குத்தான் பாடுகிறாரா அல்லது புனைந்து வைத்த கவிதைகளைத்தான் பாடுகிறாரான்னு எனக்குத் தெரியாது. கார்வையான தொண்டை. கடுவா மாதிரி இருக்கும். ஆனால் நல்ல இசை நுட்பத்தோடதான் அவர் பாடுவாரு. அவர் பாடிகிட்டு இருக்கிறதை நாங்க கேட்டுக்கிட்டே இருப்போம். முடிஞ்ச உடனே போகலாமான்னு கேட்பாரு. அவருக்குப் பின்னாலே போவோம். எங்க ஊர்ல கல்யாணி அம்மன் கோயில் இருக்கும். அந்தக் கோயிலுக்குப் பின்பக்கம் பொத்தைன்னு சொல்லுவாங்க. சிறு குன்றுகள், நிறைய இருக்கும். அதுமேல போய் உச்சிக்குப் போவாரு. அது ஒரு கிலோ மீட்டர் இருக்கும். நாங்க எல்லாம் அது கிட்டப் போகப் பயப்படுவோம். இவரு போறாரேன்னு கூடவே போவோம். அப்போ இடையிலே சத்தம் போடுவாரு. எதிரொலிச் சத்தம் கேட்கும். அதுல அவருக்கு ஒரு வேடிக்கை. இரண்டு மூணு தடவை சத்தம் போடுவாரு. ‘அங்க ஒருத்தன் பதில் சொல்றான் பாத்தியா’ அப்படின்னு எங்ககிட்ட வேடிக்கை பண்ணிகிட்டே கூட்டிப் போவாரு. மேலே போய் நின்னு பாடுவாரு.
பாரதி மேலே கடையத்து மக்களுக்கு ஒரு பகை உணர்வு இருந்தது இல்லையா? அந்தச் சமயத்தில் அவருடன் நெருங்கிப் பழகின உங்களுக்கெல்லாம் அங்கே உள்ளவங்க என்ன மாதிரி வரவேற்பு கொடுத்தாங்க?
எங்க வீட்ல பாரதியார் வீட்டுக்குப் போறேன் அவரோட பழகிறேன்னு கேள்விப்பட்டு எனக்கு உதைதான் கிடைக்கும். சண்டை பிடிப்பாங்க. எங்க வீட்ல நான் சொல்லவேமாட்டேன். அவங்க எப்படியோ தெரிஞ்சு ‘ஏண்டா, அந்த ஐயர் வீட்டுக்கு போறே. பாரதி வீட்டுக்குப் போறியாமில்லே. அவன் ஒரு கிறுக்கன்.’ பாரதியாரை ஒரு கிறுக்கன் என்றே வைத்திருந்தார்கள். அவருடைய உடை இவர்கள் உடை மாதிரி இல்லே. அவர் ஒரு மாதிரி பஞ்சகச்சம் வைச்சுக் கட்டியிருப்பாரு. அதுக்கு மேல ஒரு வேஷ்டியைப் போத்தி அதுக்குமேலே அல்பகாக் கோட்டை போடுவாரு. அதுமேல ஒரு டர்பன் கட்டியிருப்பாரு. அப்படியே அகலமா ஜவ்வாது பொட்டுப் போட்டிருப்பாரு. இதுதான் அவரது அலங்காரம். பெரிய ஆளுங்க எல்லாம் உக்கார்ந்து பேசுவாங்க. இவர் போனா ஒருத்தரும் அவர்கிட்டே பேசமாட்டாங்க. இவர் பாட்டுக்கு அதைச் சட்டை பண்ணாமப் போவாரு. இவரோட நோக்கம் என்னவோ அதைப் பாத்துக்கிட்டு வருவாரு.
சிறுவர்களைத் தவிர பாரதியுடன் அங்கு பழகியவர்கள் வேறு யார்?
அப்ப எல்லாம் சிலபேர் கொஞ்சம் பழகிறவங்களும் இருப்பாங்க. சில பழக்கங்கள் உள்ளவர்களிடம் இவர் போய்ப் பழகுவாரு. கொஞ்சம் குடி, மதுபான பழக்கம் இவர்கிட்டே உண்டு. நாராயணசாமி பிள்ளைன்னு ஒருத்தர் இருப்பார். அவர் பாட்டிலில் நிறைய பிராந்தி, விஸ்கி எல்லாம் வைச்சு கிளாஸ்ல ஊத்திக் கொடுப்பார். ‘பாரதி, நீங்கள் என்னவெல்லாம் கவிதை பாடுவீங்க?’ன்னு கேட்பார்.
‘எது எல்லாம் தோணுதோ அதை.’
‘நான் கொடுக்கிற கவிதையை நீங்க புது மாதிரியாப் பாட முடியுமா? கவிதையில அகவல்னு ஒண்ணு இருக்கு. அதைப் பாடுங்க’ன்னாரு.
‘அப்படியா. நீங்க அதைச் சொல்லுங்க. நான் எப்படிப் பாடறேன்னு காட்டறேன்.’
‘நான்முகன் படைத்த நானாவித உலகில்’ அப்படின்னு அவர் பாடிக்காட்டுனாரு.
உடனே பாரதி தடையில்லாமல் நான்முகன் படைத்ததுவாம். இந்த நானாவித உலகில்’ அப்படின்னு தனிச் சீர் வைச்சு இப்படிப் பூராவையும் பாடினார். இது ஒரு நாள் நடந்தது.
பாரதியோட ஒத்திசைந்த சிறுவனா நீங்க இருந்தீங்கன்னு சொன்னீங்க. பாரதிக்கும் உங்களுக்குமிடையே நடந்த தனிப்பட்ட உரையாடல் எதுவும் ஞாபகம் இருக்கா?
அநேகமா ஞாபகம் இருக்கு. சில விஷயம் மறந்திருக்கு. அந்தச் சமயத்தில என் வயசில கனமான சம்பாஷணை எதுவும் இருக்காது. விளையாட்டுப் போக்கிலதான் இருக்கும். அதைத்தான் கவனிப்போம். அந்த வயசு அதுதானே? ஒரு தடவை பெருமாள் கோவில்கிட்டே ஒரு பெரிய மைதானம். அங்க அப்பத்தான் போட்ட ஒரு கழுதைக்குட்டி. கழுதைக்குட்டி நல்லாதானே இருக்கும்! (சிரிக்கிறார்.) அக்ரஹாரப் பிராமணர்கள் ரொம்ப ஆர்தடாக்ஸ். ஆத்தங்கரையில குளிச்சிட்டு ரொம்ப மடியா வருவாங்க. இவரு அப்படியே ஓடிப்போய் அந்தக் கழுதைக்குட்டியை எடுத்து முத்தம் கொஞ்சினார். அந்தப் பெரிய கழுதை பேசாமல் நின்னுது. ‘இவனைப் போய் . . . கர்மம் கர்மம்’னு தலையிலே அடிச்சுகிட்டுப் போய்ட்டாங்க. இவங்களுக்கு என்ன கெட்டுப் போச்சுன்னு சொல்லிட்டு இவர் வந்திட்டாரு. அவர் சம்சாரம் செல்லம்மா அப்ப சின்ன வயசுதானே. என்ன இப்படியெல்லாம் பண்றேள்! கிராமத்துல எல்லோரும் மதிப்பா நம்மளைப் பேச வேணாமா? எனக்கு ரொம்ப அவமானமா இருக்கு’ம்பாங்க.
‘நீ அவங்க பேசறதை ஏன் கவனிக்கறே? அதைப் பத்தி உனக்கென்ன? நான் எனக்கு இஷ்டப்பட்டதைச் செய்யறேன். அது வேற யாருக்கும் இடையூறா இருக்கா? அவங்க அதைப் பாக்க வேணாம். அவ்வளவுதான்’ அப்படின்னு செல்லிடுவாரு. அதை ரொம்ப சிம்பிளா முடிச்சிடுவாரு.
பாரதியாரோட பழக்கவழக்கங்கள் பற்றி?
அவருக்குச் சில வீக்னஸும் உண்டு. கஞ்சா குடிக்கறது. வடநாட்டுக்கெல்லாம் போயிருந்திருக்காரு இல்லே. சிறு வயசிலே காசியிலதான் முக்கியமா இருந்திருக்காரு. அங்க கஞ்சா குடிக்கிற பழக்கத்தைப் பாத்திருக்காரு. எங்க ஊர் கடையம் சின்ன கிராமம். அங்கேயும் ஒரு கஞ்சா ஆசாமி. அவன் ஒருத்தன் கிட்டேதான் கிடைக்கும். எங்கேயிருந்தோ அவன் வாங்கிட்டு வந்திடுவான். அவன் பெயர் ஆறுமுகம். கோவில்ல பணி செய்யறான். ஓச்சன்னு சொல்லுவாங்க. அவனைத் தெரிஞ்சு வீட்டுக்கு வரவழைச்சாரு. அவனைக் ‘கஞ்சா கொண்டாறியா’ன்னு கேட்பாரு. அவன் கொண்ணாந்தான்.
சிலும்பியை (விரல்களை விரிக்கிறார்) அப்ப பார்த்ததுதான். அதுக்கு முன்னாலே அதெல்லாம் தெரியாது. அதை நல்லாக் கசக்கி உள்ளே வைப்பார். அதைப் பத்தவைக்க முக்கியமா தேங்காய் நார் வேணும். அதுக்கு என்ன செய்றது? அவர் வீட்டுக்குப் பின்னாலே ஒரு கிணறு. அந்தக் கிணத்திலே ஒரு ராட்டினம் போட்டிருந்தது. ராட்டினத்தில ஒரு கத்தைக் கயிறு. கிணத்துத் தண்ணீரை இறைக்கிற அளவுக்கு நீளக் கயிறு அது. வர வர அதோட நீளம் குறைஞ்சிருச்சு.
அதைக் கட் பண்ணிடுவாரு. இவ்வளவு நீளம் கட் பண்ணினால்தான் கனியும். அப்ப இந்தக் கஞ்சாவை ஊன்னு உறிஞ்சுடுவாரு (சிலும்பியை உறிவதுபோல் பாவனை செய்கிறார்). அப்படி உறியும் போதே பரலோகத்திலே போற மாதிரி கண்ணை மூடிக்குவாரு. அது ஒரு வேடிக்கை. அவரும் இவனும் மாறிமாறிக் குடிப்பாங்க. ஒருநாள் ‘என்ன கிணத்திலே வாளிக் கயிறு எட்டமாட்டேங்குதே’ன்னு செல்லம்மா கேக்கறாங்க ‘அதுக்கு வேற வாங்கிக்கோ. இப்ப அதுக்காக என்ன? கொஞ்சம்தானே எடுத்தேன். இனிமே எடுக்கமாட்டேன்’ அப்படின்னு ஒரு சமாதானம் சொல்லிவிட்டுட்டாரு. இப்படி ஒரு வேடிக்கையான ஆளு அவரு.
எல்லோர் கூடவும் அவர் பழகியிருக்காரு. அவரோட மைத்துனர் அண்ணாத் துரைன்னு ஒருத்தர் சிங்கப்பூர் அங்கே இங்கே எல்லாம் போய்ட்டாரு. அவர் ரொம்ப வேகமாகப் பேசுவாரு. அவருக்கு இவரைப் பத்தி அப்ரிசியேஷன்தான். ஆனா வீட்ல அவரை யாரும் விரும்பமாட்டாங்க. பேச்சே வச்சுக்கமாட்டாங்க. மத்த பிராமணர்களும் அவரோட பழக்கம் வச்சுக்கமாட்டாங்க. ஆக பிராமணர் இல்லாத கூட்டம். அதிலேயும் கொஞ்சம் தன் கூட்டத்திலே சேருகிற மாதிரி ஆட்களைத்தான் வச்சுக்குவாரு. ஆக நாங்களே அவருக்குத் துணைவர்களா ஆயிட்டோம். எங்களுக்கு அது ஒரு பெருமை. நாங்க சின்னப் பையங்க. அவர் ஒரு பெரிய புலவர். வரகவி. நாங்க பள்ளிக்கூடத்துப் பாடத்தையே சரியாப் படிக்கத் தெரியாதவங்க. எங்க தொடர்பு அந்த மாதிரி ஆரம்பிச்சுது. அவர் எங்கமேலே ரொம்பப் பிரியமா இருப்பாரு. கல்யாணசுந்தரம் இன்னைக்கு வரக் காணோமேன்னு சொல்லுவாரு. வராதவனையெல்லாம் நோட் பண்ணிக்கிடுவாரு. அந்த அளவுக்கு எங்ககூடப் பழகினாரு. அந்த அம்மாவுக்கு எப்பவும் கஷ்டம்.
வறுமைதான். அவங்க எங்கேயோ போயி ரவை உப்புமா கிண்டி டிபன் எடுத்துவந்து அவர் கையில் கொடுப்பாங்க. இவர் அந்த வீட்டுச் சுவர்மீது ஏறி உச்சிக்குப் போயிடுவாரு. அங்கே உக்காந்து அதைத் தூக்கித் தூக்கிப் போடுவாரு. கடன் வாங்கித் தன் புருஷன் பட்டினியா கிடக்கக்கூடாதுன்னு சொல்லி ஆதங்கத்தோட கொண்டு வந்ததையெல்லாம் எடுத்து அநாயாசமா வீசுவாரு. உடனே வரும் காக்கா குருவி எல்லாம். ‘காக்கை குருவி எங்கள் ஜாதி நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்’ இவரோட நோக்கம் பரந்த நோக்கம். இவரிடம் எவ்வளவு பரந்த இதயம் இருக்கோ அவ்வளவுக்கு அவ்வளவு சுருக்கம் அவங்களுக்கு. இவரை அவங்களாலே புரிஞ்சிக்க முடியாது.
பாரதியோட புதல்வி சகுந்தலா உங்களோட படிச்சவங்கன்னு சொன்னீங்க?
அது ஒரு க்ளாஸ். என்னோட ஜூனியர். ‘ஓடி விளையாடு பாப்பா’ன்னு அதுக்காகத்தான் பாடினார். பாரதி அதைப் பாடச் சொல்லுவார். அது பாடும். எங்களுக்கும் சொல்லித்தருவார். ஒரு ஆர்மோனியம். மிருதங்கம் இருக்கும். மிருதங்கம் படிக்கிறாரு. அந்தத் தாள லயம். ததிதும்நம் அப்படின்னு அந்த விரல். அவருகிட்டேதான் நான் படிச்சேன். அதுதான் மிருங்கத்திற்கு முதல் பாடம். மிருதங்கத்தை எவனோ கொண்டுவந்து போட்டிருந்தான். அநேகமாக அது ஆறுமுகமாத்தான் இருக்கும். அப்புறம் ஒரு ஆர்மோனியம். ஆர்மோனியம் எல்லோர் வீட்டிலேயும் இருக்கும். அதையும் வச்சுப் பாடுவாரு. பாட்டுக்குச் சுரம் வாசிச்சுப் பாத்துக்கிடுவாரு. சுரத்தை எழுதி அந்தச் சந்தத்திலேயே பாட்டுப் பாடுவாரு.
செல்லம்மா பாரதியுடன் உங்களுக்குப் பழக்கம் உண்டா?
எல்லோரையும் தெரியும். நான் இன்னார் வீட்டுப் பிள்ளைன்னு தெரியும். ஆகையினால எங்க அப்பாமீது கவுரவம் வச்சிருந்தாங்க. என்ன உங்க பையன் பாரதியோட திரியறான்னு அவங்களே சொல்லுவாங்க. எங்க அப்பாகிட்டே போய் கம்ப்ளெய்ண்ட் பண்ணி இருக்காங்க. அதைப் பாரதியார் லட்சியப்படுத்த மாட்டார். ‘சொன்னாங்களா, சொல்லிட்டுப் போகட்டும். நீ பயப்படறியா’ன்னு கேட்பாரு. நான் பயப்பட மாட்டேன். அவர் ‘வா போகலாம்’னு இன்னொரு இடத்துக்குக் கூட்டிக்கிட்டுப் போயிடுவாரு. மது பானத்தை அந்தந்த கிளாஸ்லேதான் ஊத்திச் சாப்பிடணும்னு அவர்கிட்டே ஒரு கண்டிப்பு கிடையாது. சாயந்திரம் வயக்காட்டிலே வேலை செஞ்சிட்டு அரிஜனங்கள் போவாங்க. போற வழியிலே அங்கே சேரிப் பக்கம் கள்ளுக்கடை இருக்கும். அவங்க பட்டையைக் குடிச்சிட்டு அலுப்புத் தீர ஆட்டம் பாட்டம் எல்லாம் போடுவாங்க. ஒரு நிமிஷம் இதோ வந்திடறேன்னு எங்ககிட்டே சொல்லிட்டு உள்ளே போயிடுவாரு. அவரு பட்டையை நீட்டமாகப் புடிச்சிக்குவார். ‘ஏ சாமி வந்திருக்கார்’னு அதில ரெண்டு மூணு விடுவான். நல்லா நிறையச் சாப்பிடுவாரு. அவங்க எல்லாம் ஆடுவாங்க. பாடுவாங்க. இவரு நேராக் கிளம்பி வந்திடுவார். அந்த ஸ்மெல் மட்டும் கொஞ்சம் இருக்கும். மற்றபடி எந்தவித நடவடிக்கைகளிலும் வித்தியாசம் இருக்காது.
பாரதி மது அருந்திவிட்டுக் கலாட்டா ஏதாவது பண்ணினார்னு செய்திகள் உண்டா?
பண்ணமாட்டார். ரொம்ப டீஸண்ட் ஆனவர் அவர். ஒழுக்கம் உடையவர். நல்லொழுக்கம் பற்றி எவ்வளவோ பாடியிருக்கிறார். பேசியிருக்கார். அவங்களெல்லாம் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே நான் கவிதை எழுதறேன்னு சொல்லுவார். ஸ்தோத்திர கீதங்கள், தேசிய கீதங்கள், பாப்பா பாட்டு இப்படித் தனித்தனியா புஸ்தகம் ப்ரிண்ட் பண்ணினார். யார் வாங்குவா? எங்ககிட்டேக் கொடுத்து இதையெல்லாம் வித்துக்கொண்டு வாங்கடான்னு சொல்லுவாரு. நாங்க அதை எடுத்துக்கிட்டுச் சுற்றுவோம். சார், ஒண்ணு வாங்கிக்கிறீங்களா’ன்னு மத்தவங்ககிட்டே கேப்போம். ‘பாரதி எழுதின பாட்டுன்னு, என்கிட்டே அந்தக் கதையெல்லாம் விடாதே போ அப்படிம்பாங்க. நாங்க மனம் ஒடிஞ்சு, ஒரு புஸ்தகம்கூட விக்கலேன்னு அவர்கிட்டே சொல்லுவோம். இப்படி ஒருத்தரும் வாங்காமல் இருந்ததுதான் ‘பாரத ரத்னா விருது’ வாங்கக்கூடிய அளவுக்கு மேல் மதிப்பு பெற்றது.
பாரதிக்கு யானையைப் பிடிக்கும்னு சொன்னீங்க!
யானையை அவருக்குப் பிடிக்கும். கழுதைக் குட்டியை வைத்து முத்தம் கொஞ்சினார்னு சொன்னேனே! அதே மாதிரி எங்க ஊர்க் கோவிலுக்குச் சித்திரை மாத உற்சவத்திற்குச் சங்கரன் கோவிலிலிருந்து ஒரு யானை வரும். அதோடு யானைப்பாகன் வருவான். நாராயணசாமி பிள்ளைன்னு கவிதை அகவல் பத்தி சொன்னேனே அவர்தான் கோவில் ட்ரஸ்டி. இலுப்பைத் தோப்பில் யானையைக் கட்டியிருப்பார்கள். அந்தப் பாகனிடம் போய் ‘யானைகிட்டே நான் விளையாடப் போகணும்’னு சொல்லுவார். ‘சரி கிட்டே போங்க. ஆனா அதை ஒண்ணும் செஞ்சிடாதீங்க. அப்புறம் அது மிதிச்சுப் போட்டுச்சுன்னா என்மேலே பழிவரும்’ என்றான்.
அதோட துதிக்கை அவ்வளவுதான் இருக்கும். அதன் துதிக்கையைக் கட்டி முத்தம் கொஞ்சினார். அதன் தந்தத்திற்குத் தான் அவர் உயரம். தந்தத்தைக் கரகரன்னு கடிச்ச சத்தம் எங்களுக்குக் கேட்டது. ஏது இவரு வம்பு பண்ண ஆரம்பிச்சிட்டாரேன்னு பயந்தோம். அது ஒண்ணும் செய்யலை. பாகனும் கவனிச்சிக்கிட்டிருந்தான். அப்புறம் கொஞ்சநேரம் கழிச்சு யானையிடம் ‘வரோம்’ன்னு விடைபெற்றுக்கொண்டார். திருவல்லிக்கேணி யானைகிட்டே விளையாடக் கேட்டிருக்காரு. ஏதோ எசகுபிசகாப் போய் அவர் மாட்டிக்கிட்டார். தூக்கி வீசி எறிஞ்சிடுச்சி. ஒரு சமட்டுச் சமட்டினால் அங்கேயே க்ளோஸ் ஆயிருப்பாரு. யானை ஒரு மனுசனைத் தூக்கி வீசினா சுவத்திலே பாய்ச்சை மாதிரி அப்பிக்குவான். அவர் பயந்துபோனாரு. அந்த ஷாக்கில் அவரை மெள்ள ஆட்கள் வீட்டுக்குக் கூட்டிப் போனாங்களாம். அதோட படுத்து டிசண்டரி மாதிரி சீக்கு வந்திடுச்சி. அதிலதான் இறந்திருக்கார்னு சொன்னாங்க.
பாரதி இறந்த செய்தி உங்களுக்கு எப்படிக் கிடைச்சது?
நாங்க (நானும் எனது நண்பரும்) பாளையங் கோட்டையிலே படிக்கப் போனோம். செயிண்ட் சேவியர் காலேஜ். அப்போது அது ஹைஸ்கூலா இருந்தது. அங்க ஒரு ஹாஸ்டல்லே நாங்க படிச்சுக்கிட்டு இருந்தோம். 21ஆம் வருஷம்னு நினைக்கிறேன். அப்ப ஒருத்தன் வந்து பாரதி செத்துப்போயிட்டாராண்டான்னு சொன்னான். சொன்னவுடன் நான் நம்பலே. யானை தூக்கிப்போட்டு அவரைக் கொன்னுட்டதாம்ன்னு அவன் சொன்னான். உடனே நானும் எனது நண்பனும் அழுதுகிட்டு இருந்தோம். ‘என்னடா, ரொம்ப அழுதுகிட்டு இருக்கீங்க’ன்னு வார்டன் வந்து கேட்டார். ‘எங்க ஊர்ல பாரதின்னு ஒருத்தர் இருந்தார். அவர் எங்களுக்கெல்லாம் ரொம்ப ப்ரண்டு. அவர் வீட்டிலேயே போய் இருப்போம் ‘அவர் எங்களுக்கெல்லாம் ரொம்ப நல்லவரா இருந்தார்’ அப்படின்னோம். அதோட எங்களோட உறவு முடிஞ்சிப்போச்சு. பின்னால அவர் வீட்டு ஆட்களோட எனக்குத் தொடர்பில்லை.
mmm
படப்பிடிப்பு முடிந்து சென்னைக்குத் திரும்பிய சில நாட்களில் கல்யாணசுந்தரத்திடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் பாரதி பற்றிய ஞாபகங்களைத் தன்னுள் தூண்டிவிட்டதற்காக எனக்கு நன்றி தெரிவித்திருந்தார். டாகுமெண்டரி படத்தைப் பார்த்த பத்திரிகையாளர்கள் அவர் வீட்டை நோக்கிப் படையெடுத்தார்கள். இணையதளங்களில்கூட அவரது பேட்டிகள் வெளிவந்தன. அவருக்கு டாகுமெண்டரியின் வீடியோ கேசட்டை அனுப்பி வைத்தேன். அதை அவர் பலமுறை பார்த்திருக்கிறார். நள்ளிரவில் இறந்த அவர் அன்று மாலைகூட அப்படத்தைப் போடச்சொல்லிப் பார்த்து மகிழ்ந்தார் என்று அவரது உறவினர் கூறினார். 2003இல் அவர் இறந்தபொழுது அவருக்கு 95 வயது.
mmm
நா. ராமசாமி ஐயர் என் கண்டுபிடிப்பு அல்ல. அவர் பாரதியை நேரிடையாகப் பார்த்துப் பழகியவராக ஏற்கனவே டி.ஜி.என். ஆன்மிக மையம் வெளியிட்ட ‘பாரதி விழா மலர்’ ஒன்றில் அறிமுகமாகி இருந்தார். அப்போது இந்தியாவின் அடிஷனல் சொலிசிட்டராகப் பணியாற்றிய அவரது மகன் என்.ஆர். சந்திரனுடன் தொடர்புகொண்டு படப்பிடிப்பிற்கான நாள் குறித்தேன். அடையாறிலுள்ள பத்மநாப நகரிலுள்ள அவர் வீட்டிற்கு ஒரு நாள் சென்றபொழுது அவர் ஜிப்பா, உருத்திராட்ச மாலை, பச்சை சால்வை ஆகியன அணிந்து எங்களை வரவேற்கத் தயாராக இருந்தார். உடல் உறுதியாக இருந்தது. கணீரென்று பேசினார். கேட்கும் சக்தியை காது வேகமாக இழந்துகொண்டிருந்தது என்பதைத் தவிர 97 வயதில் மிக ஆரோக்கியமாக இருந்தார். புதுக்கோட்டையில் பலகாலம் வழக்குரைஞராகப் பணியாற்றியவர். சில காலம் அமெச்சூர் நாடகங்களில் நடித்ததாகவும் கூறினார். 1901இல் பிறந்தவர். பாரதியுடன் 1920இல் பழகியிருந்தார். கல்யாணசுந்தரம் போலவே இவருக்கும் கேமராக் கூச்சம் அறவே இல்லை. இருவரது பேட்டிகளும் 1998இல் எடுக்கப்பட்டவை.
நீங்க முதன்முதலா பாரதியை எப்பொழுது பார்த்தீர்கள்?
நான் புதுக்கோட்டைவாசி, எனக்கு இப்ப வயசு 97 ஆகிறது. “நான் ஆதியிலே 1919லே புதுக்கோட்டைக் காலேஜிலே எம்.ஏ. படிச்சுகிட்டு இருந்தேன். அப்போ பாரதியோட மருமான் (சகோதரியின் மகன்) டி. சங்கரன்ங்கிறவர் அரசர் கல்லூரியில் வாத்தியாரா இருந்தார். ஸ்கௌட் மாஸ்டர் ஆகவும் இருந்தார். அவரைச் சந்திக்க நேர்ந்தபோதெல்லாம் பாரதியோட பாட்டையெல்லாம் பாடுவார். அவர் பேசும்பொழுது வாய் திக்கினாலும், பாரதியார் பாட்டுப் பாடும்பொழுது வாய் திக்கவே திக்காது. அது எங்களுக்கெல்லாம் ஒரே ஆச்சரியம். பாரதியார் பாட்டிலே எனக்கொரு மோகம் வந்து அவர் பாடிய பாட்டை நெட்டுரு பன்னிப் பாடியிருந்தேன். சங்கரனை எனக்குத் தெரிஞ்சது பெரிய அதிர்ஷ்டம். மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ்லே பி.ஏ. வாசிக்க வந்தேன். அப்ப என்னோட ஒன்னுவிட்ட மாமா வீட்லே 12, மேட்டுத் தெருவிலே ஒரு போர்ஷன்ல தங்கும்படியா நேர்ந்தது. ஹாஸ்டல்ல சீட் கிடைக்காததால அங்கே ஒரு நாலைஞ்சு மாசம் தங்கியிருந்தேன். மேட்டுத் தெரு ப்ரண்ட் போர்ஷன். தம்புச்செட்டி தெரு. அதன் நம்பர் 209. எண்ட்ரன்ஸ் மேட்டுத்தெருன்னு சொல்லுவா ஆனால் நடுவிலே வாசப்படி தொறப்பு உண்டு. பாரதியார் 209இல் இருந்ததால் பின் போர்ஷனில் இருந்த எனக்கு அவரை அடிக்கடி சந்திக்கிற சான்ஸ் ஏற்பட்டது. ஒரு நாள் அவரை சந்திச்சு நான் புதுக்கோட்டைவாசி, உங்க மருமான்கிட்டே உங்க பாட்டையெல்லாம் கேட்டு நெட்டுரு பண்ணியிருக்கேன்னு அறிமுகமானேன். அவர் என்னை ராமுன்னு தான் கூப்பிடுவார்.
அவருடன் வேறு யார் இருந்தார்கள்? அவர் என்ன செய்தார்னு ஞாபகம் இருக்கா?
அப்ப அவர் சம்சாரம், கூடவே, பத்துப் பன்னிரெண்டு வயசு பொண்ணு ஒண்ணும் இருக்கும். நேரம் இருக்கும்போதெல்லாம் காலை வேளையிலே அவர் வீட்டுக்குப் போவோம். அவர் சம்சாரத்தைப் பார்ப்போம். அவர் ‘சுதேசமித்திர’னில் சப்-எடிட்டர் ஆக இருந்தார். அவருக்கு அப்போ ஐம்பது ரூபாய் சம்பளம். காலம்பரை பத்துமணிக்கு ரிக்ஷாவில் போயிட்டுச் சாயங்காலம் ஆறு மணிக்கு வந்திடுவார். அதனாலே அவரோட அடிக்கடி பேசுவோம். அவர் வெட்டிப்பேச்சே பேசமாட்டார். நல்ல ஆழ்ந்த கருத்துள்ள பேச்சைத்தான் பேசுவார். ஒழிஞ்ச வேளையிலே ரூம்லே கதவைச் சாத்திக்கிட்டு எழுதிண்டிருப்பார். இல்லேன்னா ஏதாவது படிச்சிண்டிருப்பார். காலை வேளைலே சாப்பிட்டுச் சரியா டயத்துக்குப் போயிடுவர். ராத்திரி வேளைலே சாப்பிடறதுக்கு அவருக்குச் சாப்பாட்டு நினைவே இருக்காது. அந்தச் சமயங்கள்லே எங்களைப் போல முட்டாள்ங்ககிட்டே அந்த அம்மா வந்து சொன்னாக்கா, நான் அவரை மாமான்னுதான் கூப்பிடுவேன். ‘மாமா, மாமி குழந்தையெல்லாம் சாப்பிடாம காத்திண்டிருக்காளே. நீங்க இப்படிக் கதவை சாத்திண்டிருக்கேளே’. ‘அடடே நாழியாயிடுச்சா’ன்னு சொல்லிச் சிரிச்ச முகமா இருப்பார். கோபமே வராது அவருக்கு. குடும்ப ஞாபகமோ பண ஞாபகமோ லட்சியம் பண்ணமாட்டார். அந்த வகையிலே அவர் ஒரு ஞானி. இந்தக் குடும்ப பாரம் பணத்தைப் பத்திய கவலை அதெல்லாம் அவருக்குக் கிடையவே கிடையாது. அவருக்குத் தங்கமும் ஒண்ணுதான். மண்ணாங்கட்டியும் ஒண்ணுதான். அப்படிப்பட்ட மனுஷன். அவர் அடிக்கடி சகஜமாப் பேசுவார். வாரத்திலே ரெண்டு மூணு நாளு ராத்திரி வேளையிலே தம்புச்செட்டி வீட்டு முகப்பில் உள்ள பெரிய திண்ணையில் ஷேட் விளக்கு வச்சுகிட்டு பஜனை விளக்கம், பேச்சு எல்லாம் நடக்கும். நல்ல ஜனக்கூட்டம். தெருவிலே டிராபிக்கெல்லாம் இடைஞ்சல் ஏற்படற மாதிரி ஜனக் கூட்டம் சேர்ந்துடும். அவர் புதுப்புதுப் பாட்டாப் பாடுவார். விளக்கம் சொல்லுவார். ரசிகா ரொம்ப பேர். தெருவிலே இருக்கிற ஆட்கள் எல்லாம் கூடிடுவா. அது இரண்டு மணிநேரம் இருக்கும்.
பாரதி பார்ப்பதற்கு எப்படி இருப்பார்?
எனக்குத் தெரிஞ்ச பாரதி இந்த போட்டோவிலே இருக்கிற மாதிரி இல்லே. அவர் இந்த மாதிரி ட்விஸ்ட் மீசை வைச்சுக்கலே. மாநிறம். ரொம்ப சாமான்யமா இருப்பார். எப்பவாவது குர்தா போட்டுக்குவார். இல்லேன்னா வெறும் பாடியோடதான் இருப்பார். வெளியிலே போகும்போது கோட் போட்டுக்கிட்டுத் தலைப்பா கட்டிக்குவார். அப்படித்தான் நான் பார்த்திருக்கேன்.
பண விஷயத்திலே பிறத்தியார் கஷ்டப்படுவதை அவர் சகிக்கமாட்டார். ‘சுதேசமித்திரன்’ எடிட்டர் சி.ஆர். சீனிவாசன், அவராலேதான் தம்புச்செட்டி தெரு வீடு கிடைச்சதுன்னு பாரதி சொன்னார். ஒரு விசை பாரதி சம்பளம் வாங்கிட்டு வரும்போது அவரைக் கொண்டுவந்த ரிக்ஷாக்காரன் தான் ரொம்ப கஷ்டப்படறேன்னு சொன்னதுக்காக கோட் பையிலிருந்த அந்த ஐம்பது ரூபாயையும் கொடுத்திட்டார். வீட்டுக்கு வந்து அவர் சம்சாரத்துக்கிட்டே இந்த மாதிரி ரிக்ஷாகாரன் கஷ்டப்பட்டான். கொடுத்திட்டேன்னு சொல்லியிருக்கார். அந்த அம்மாவாலே ஒண்ணும் சொல்ல முடியல்லே. அப்பறமா அந்த அம்மா என்னைக் கூப்பிட்டு ‘இந்த மாதிரி மாமா பண்ணிட்டார். ரிக்ஷாகாரனுக்குப் பணத்தைக் கொடுத்திட்டார். நம்ம குடும்பச் செலவை எப்படிப் பண்றதுன்னு நேக்குப் புரியலை’ன்னு அந்த அம்மா சொன்னா. அந்த ரிக்ஷாக்காரன் வழக்கமா வர்றவன். நானும் என் சிநேகிதனும் அவனைத் தேடிப் புடிச்சி என்னடா, அய்யாகிட்டே பூராப் பணத்தையும் வாங்கிட்டு வந்திட்டே. அவாளுக்கு வேண்டாமான்னு சொன்னப்புறம் அவன் அஞ்சு ரூபாய் செலவழிச்சதுபோகப் பெருந்தன்மையா நாற்பத்தி அஞ்சு ரூபாயையும் கொடுத்துட்டான். அப்புறம் அதை அந்த அம்மாகிட்டே கொடுத்ததிலே அந்த அம்மாவுக்கும் பெரிய திருப்தி.
செல்லம்மா எப்படி இருப்பார்?
எனக்கு அந்த அம்மாகிட்டே ரொம்ப மரியாதை. ஏன்னா நம்ம ஹிந்துப் பெண்கள் எப்படி இருக்கணுமோ கிரஹனி எப்படி இருக்கணுமோ அப்படி இருப்பாங்க. மடிசார்தான் கட்டிக்குவாங்க. மேலாக்கை எடுக்கவே மாட்டாங்க. ராமுன்னுதான் (என்னை) கூப்பிடுவாங்க. குழந்தை மாதிரி ட்ரீட் பண்ணுவாங்க. ஏதாவது வீட்ல பண்ணியிருந்தா எனக்குக் கொடுப்பாங்க. அந்த அம்மாவுக்கு ஏதாவது அப்பப்ப எங்களால் ஆன உதவி நாங்க செய்வோம். எதிர்பார்க்கமாட்டாங்க. நாங்க வாலண்டர் பண்ணிக்குவோம். ஏன்னா அவங்க தனியா இருப்பாங்க. வெளிவாசல் போறதே இல்லே. அதை நான் பார்த்ததே இல்லே. எனக்கு இன்னிக்கும் அந்த அம்மாவின் முகம்தான் முன்னால் நிக்கறது. பாரதியாரைவிட. எனக்கு அவங்ககிட்டே பிரமாத பக்தி. ரொம்ப பிரியமா இருப்பாங்க. எனக்கு இந்த நாலு மாசமும் ஏண்டா முடிஞ்சதுன்னு இருந்தது. நான் அதுக்குமேலே ஹாஸ்டலுக்குப் போய்ட்டதனாலே பழக முடியலே. என்னோட வாழ்க்கை பாரதியார் குடும்பத்தோட ஏற்பட்ட தொடர்ச்சியை மறக்கவே முடியலே. எப்பவும் அதை நினைச்சிண்டு இருப்பேன். எனக்கு இந்த வாய்ப்புக் கொடுத்ததற்கு உங்களுக்கெல்லாம் ரொம்ப நன்றி.
mmm
சென்னையில் ஜூலை 1999இல் நடைபெற்ற டாகுமெண்டரி வெளியீட்டு விழாவிற்குச் சென்னைவாசி என்பதால் ராமசாமி ஐயர் அழைத்துவரப்பட்டார். ஜெயகாந்தன் வீடியோ கேசட்டை வெளியிட அதன் முதல் பிரதியை அவர் பெற்றுக்கொண்டார். பல மாதங்களுக்குப் பிறகு அன்று அவரை மீண்டும் சந்தித்த பொழுது அவர் சக்தி இழந்தவராகத் தோன்றினார். ‘நீங்க கூப்பிட்டதாலே வந்தேன். என்னாலே முடியல்ல’ என்று கூறிவிட்டு உடனே சென்றுவிட்டார். அவரை அப்படிப் பார்த்தது மனதிற்கு வருத்தமாக இருந்தது. மறுவருடமே அவர் காலமானார். அப்போது அவருக்கு வயது 99.
mmm
‘சுப்பிரமணிய பாரதி’ டாகுமெண்டரி படம் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் தமிழர்கள் வாழும் நாடுகள் பலவற்றிலும் திரையிடப்பட்டது. மிக அதிகமான தடவைகள் திரையிடப்பட்ட தமிழ் டாகுமெண்டரி இதுவாகத்தான் இருக்கும். பாரதிமீது மக்கள் கொண்டுள்ள அபிமானம் அத்தகையது. பாரதியின் நண்பர்களின் பேட்டிகள் படத்தில் அதிகம் பாராட்டப்பட்டன. கூடவே விமர்சனங்களும் எழுந்தன.
படத்திற்கான வர்ணனையை இந்திரா பார்த்தசாரதி ஆய்வுநுட்பம் மிக எழுதியிருந்தார். படப்பிடிப்பு முடிந்து எடிட் செய்யும்பொழுது மேலும் தேவையான பகுதிகளுக்கு அவருடன் ஆலோசித்து நான் வர்ணனைகளை எழுதிச் சேர்த்துக்கொண்டேன். ‘குடும்ப வறுமை, நியாயமான எதிர்பார்ப்புகளுக்குக் கிடைத்த தோல்விகள், பலகாலமாகத் தொடர்ந்துவந்த அரசாங்க அச்சுறுத்தல்கள், போதைப் பொருள் பழக்கம் ஆகியவற்றால் ஏற்கனவே நலிவுற்றிருந்த உடலும் மனமும் மேலும் சீர்கெட்டது’ என்று எழுதி அவரது முடிவுக் காட்சிகள் மீது அதை ஒலிக்கச் செய்திருந்தேன். ‘போதைப் பொருள் பழக்கம்’ என்கிற தொடருக்கு எதிர்ப்புகள் கிளம்பின. அதை நீக்கிவிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டேன். இளைஞர்கள் அதை அறிந்து கெட்டுப்போய்விடுவார்கள் என்பது அவர்களது வாதம். ‘போதைப் பழக்கம் கொடியது என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறதேயொழிய அது சிகரெட் விளம்பரம்போல் கவர்ச்சியாக்கப்படவில்லை. பாரதியைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் அவரது வாழ்க்கையை முழுதாக அறிந்துகொள்ள வேண்டும். வ.உ.சி, வ.ரா, யதுகிரி அம்மாள் ஆகியோர் இது பற்றி ஏற்கனவே எழுதியுள்ளார்கள்’ என்று கூறியதைக் கேட்டுச் சிலர் சமாதானமடைந்தார்கள்.
இங்கே தரப்பட்டுள்ள கல்யாணசுந்தரம், ராமசாமி ஐயர் ஆகியோரின் பேட்டிகளிலிருந்து படத்தின் மைய ஓட்டத்திற்குத் தேவையான சில பகுதிகளைத்தான் படத்தில் இணைத்திருந்தேன். பாரதி சிலும்பியில் கஞ்சா புகைத்தது, பட்டைச் சாராயம் அருந்தியது ஆகியவற்றையெல்லாம் கல்யாணசுந்தரம் சொல்வதைக் காட்டியிருந்தால் எத்தகைய எதிர்ப்புகள் தோன்றியிருக்கும் என்பதை என்னால் ஊகிக்க முடிந்தது.
அவர்களது பேட்டிகள் முழுவதையும் பரந்த நோக்குடன் பார்த்த பாரதி அன்பர்கள் அவற்றின் அரிய ஆவண மதிப்பைச் சுட்டிக்காட்டினார்கள். இதுவரை எங்கும் வெளிப்படாத பாரதியை அவற்றில் பார்க்க முடிவதாகவும் கருத்துத் தெரிவித்தனர்.
கல்யாணசுந்தரம், ராமசாமி ஐயர் ஆகியோரிடம் பாரதியின் வெவ்வேறு நடத்தைகள் பதிவாகியுள்ளன. கடையத்தில் தன்னிடம் வம்பு செய்தவர்களைக் கலவரப்படுத்த வேண்டி அவர் மேற்கொண்ட நடை உடை பாவனைகளைச் சென்னையில் அவரிடம் நாம் காணவில்லை. தான் உண்டு, தன் வேலையுண்டு என்று அவர் செயல்பட்டிருக்கிறார். வெளிப்படையான கொந்தளிப்பை அவரது நடவடிக்கைகளில் பார்க்க முடியவில்லை. பஜனைகள் பாடித் தன்னையும் பிறரையும் மகிழ்வித்திருக்கிறார். தனது படைப்புகள் அனைத்தையும் நாற்பது நூல்களாக வெளியிடத் திட்டமிட்டு அதற்குப் பொருளுதவி கேட்டுப் பலருக்கும் கடிதங்கள் எழுதித் தோல்வி சுமந்த பின்னணியில்தான் தபால் கார்டு சம்பவம் நிகழ்ந்திருப்பது தெரியவரும். பாரதி சிறுவர்களுக்குத் தோழனாகவும் ஆசிரியனாகவும் இருந்திருக்கிறார். குன்றுகளில் அவர்களுடன் சுற்றித் திரிந்ததைக் கேட்கும்பொழுதே கவித்துவமான காட்சிகள் மனத்தில் தோன்றுகின்றன.
‘சுதேசமித்திர’னில் உதவி ஆசியராக வேலைபார்த்த அவருக்கு ஐம்பது ரூபாய்ச் சம்பளம் என்கிற தகவல் கிடைத்திருக்கிறது. அன்றைய காலகட்டத்தில் அது நல்ல தொகை. அந்தச் சம்பளம் அவருக்குத் தரப்பட்டது என்னும் பட்சத்தில் அவரது இறுதி நாட்களில் அவருக்கு வறுமைத்தொல்லை ஏற்படவில்லை என்று கருதலாம். தம்புச் செட்டி தெரு வீட்டில் குடியிருந்த நாட்களில் பாரதியும், செல்லம்மாவும் மகிழ்வுடனும் மன அமைதியுடனும் குடும்ப வாழ்க்கை நடத்தியிருப்பதையும் நம்மால் அறிய முடிகிறது.
நன்றி காலச்சுவடு
மதிப்புரை
வரையறையை மீறும் கலை
தமிழில் வெளிவரும் பல சினிமாக் கட்டுரைகள் வெண்டைக்காய் சேர்த்துச் செய்யப்பட்ட மோர்க் குழம்பையோ பொட்டல் வெயிலின் உக்கிரத்தையோ தம் மொழியாகக் கொண்டுள்ளன. “காஹியர் து சினிமாவில் முதல் கட்டுரையை வெளியிடுவதென்பது எங்களுக்கு முதல் படத்தை எடுப்பதற்கு நிகரானது” என பிரெஞ்சு டைரக்டர் கோதார் (Godard) கூறியதாகப் பேசும் பொற்சித்திரத்தின் 28ஆம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழில் இப்படியான எண்ணங்களுடன் செறிவான சினிமாக் கட்டுரைகளோ புத்தகங்களோ ஏன் வருவதில்லை என்ற நமது ஆதங்கத்தைப் பிரதிபலிக்கும் விதமாகவே இதன் முதல் கட்டுரை தொடங்குகிறது. 1991 முதல் 2007 வரையிலான 16 ஆண்டுக்காலத்தில் பல்வேறு பத்திரிகைகளில் பிரசுரமான கட்டுரைகள், சில இடங்களில் ஆற்றிய உரைகளை அடிப்படையாகக்கொண்ட கட்டுரைகள், சில புதிய கட்டுரைகள் என மொத்தம் 25 கட்டுரைகள் அம்ஷன் குமாரின் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
தீவிர இலக்கியத்தில் இறுமாப்போடு இயங்கியவர்கள் சினிமாத் துறைக்குள் நுழையும்போது, சிறந்த சினிமா, எழுத்துக்களை வாசக மனம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. அதற்குத் தாங்கள் எந்தவிதத்திலும் பொறுப்பாளிகள் அல்ல என்பதான விதத்தில் சினிமாவில் தமது இருப்பை உறுதிப்படுத்த அவர்கள் மேற்கொள்ளும் ‘நெளிவுசுழிவுக’ளால் வாசகனுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஒரு வணிகனின் இடத்தை ஒரு இலக்கியவாதி ஆக்கிரமித்ததைத் தாண்டிச் சிறப்பு நிகழ்வுகள் எதுவும் நிகழ்த்தப்படுவதில்லை.
இத்தகு சூழலில் வாசகனோடு நெருக்கத்தை உண்டாக்கக்கூடிய விதமான கட்டுரைகளாக இருப்பதாலேயே அம்ஷன் குமாரின் இத்தொகுப்பு தனித்துத் தெரிகின்றது. பராசக்தியைக் குழந்தையாகக் கண்டு பாரதி பாடிய “சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா. . .”வில் பேசும் பொற்சித்திரமென குழந்தை வருணிக்கப்பட்டுள்ளது. திரைப்படத்தை ஒரு குழந்தைபோல் நேசிக்க முடிந்தமையால் இத்தலைப்பு சாத்தியமாயிருக்கக்கூடும்.
இன்னமும் திரைப்படம் பொழுதுபோக்குச் சாதனம் மட்டுமே என்ற பரவலான புரிதலின் அறியாமையைப் போக்கும் ஆர்வத்துடனும் முயற்சியுடனும் காட்சி ஊடகத்தின் பன்முகங்களான திரைப்படங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள், விளம்பரப்படங்கள் போன்ற பலவற்றையும் கையிலெடுத்து அவற்றின் தோற்றம், வளர்ச்சி, அரசியல், உளவியல் என அனைத்துக் கூறுகளையும் அலசுகிறார் அம்ஷன் குமார். குறுகிய கண்ணோட்டத்தில் சினிமாவைப் பொழுதுபோக்காக மட்டும் குறுக்காமல் அதைத் தொழிலாகவும் கலையாகவும் முன்னெடுத்துச்செல்லும் வேகத்துடன் கட்டுரைகள் அமைந்திருக்கின்றன. வெவ்வேறு சந்தர்ப்பங்களில் எழுதப்பட்ட போதிலும் ஒருசேர வாசிக்கும்போது வெளிப்படும் ஆசிரியரின் சினிமா குறித்த பார்வை சீராக உள்ளதை அவதானிக்க முடிகிறது. வெறுமனே திரைப்படக் கதைகளாகச் சொல்லி அலுப்பூட்டாமல் திரைப்படங்கள் பற்றிய கதைகளை, வரலாறுகளைச் சொல்லிச் செல்லும் விதம் வாசிப்பில் அயற்சியை அகற்றுகிறது.
ஸ்ரீதர்,ஜெயகாந்தன், பாலுமகேந்திரா, மகேந்திரன், அடூர் கோபாலகிருஷ்ணன், ஜி. அரவிந்தன், ஜான் ஆப்ரஹாம், சத்யஜித் ராய், நிமாய் கோஷ், ரித்விக் கட்டக், சாப்ளின், அகிரா குரோசாவா, இங்மர் பெர்க்மென், கோதார் (Godard), பிரடரிகோ ஃபெல்லினி போன்ற பல ஆளுமைகளின் திரைப்படங்களும் அவற்றின் தன்மைகளும் கட்டுரைகளில் குறுக்கும் நெடுக்குமாக ஆராயப்படுகின்றன. புள்ளிவிவரங்களும் வரலாறுகளும் தேவைக்கேற்ப மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன. எங்கேயும் பெயர்களைக் கூறி வாசகனைப் பிரமிப்பில் ஆழ்த்த வேண்டும் என்ற தொனி இன்றி அத்தகு பெயர்களையும் அவற்றோடு சம்பந்தப்பட்ட செய்திகளையும் வாசகனுக்கு இணக்கமாக்கும் முனைப்பே கட்டுரைகளின் மையமாகத் தென்படுகிறது.
திரைப்படம் குறித்த எந்த விஷயமும் விடுபட்டுவிடக் கூடாது என்ற அக்கறையோடு தொகுக்கப்பட்டுள்ளது இந்நூல். தொலைக்காட்சியில் ரசிக்கப்படும் விளம்பரங்கள் தியேட்டர்களில் ஏன் வெறுக்கப்படுகின்றன என்பதை, பிறமொழி பேசுவோர் சினிமாவில் கையாளப்படும் விதத்தை, சினிமா சங்கங்களின் கதையை எனப் பலவற்றையும் ஆராய்கிறார் ஆசிரியர். ஆவணப்படங்கள், குறும்படங்களுக்கு மாற்றுத் திரையரங்குகள் தேவைப்படுவதையும் காட்சிக்கெனக் கட்டணத்தைப் பார்வையாளர்களைத் தரச்செய்ய வேண்டுமென்ற அக்கறையையும் ஒரு கட்டுரை கோடிட்டுக் காட்டியுள்ளது.
நிமாய் கோஷின் ஒளிப்பதிவில் வெளிவந்த முதல் தமிழ்ப் படம் பொன்வயல் (1954) என அவரே தன்னிடம் தெரிவித்ததாகவும் ஆனால், அதற்கு முன்னரே 1953இல் இன்ஸ்பெக்டர் படத்திற்கு அவர் ஒளிப்பதிவு செய்ததாக ஃபிலிம் நியூஸ் ஆனந்தனின் நூல் ஒன்று குறிப்பிடுவதாகவும் சொல்கிறார் இவர் (பக்.48). எது சரி எது தவறு என எந்தக் குறிப்பும் இல்லை. செய்திகளைச் செய்திகளாகவே பதிவுசெய்துள்ள விதம் ஈர்ப்பை ஏற்படுத்துகிறது. பல அரிதான திரைப்படங்களோடு திரை ஆளுமைகளும் தொடர்ந்து வலம்வந்தபடியே இருக்கின்றனர் கட்டுரைகளில். திரைத் துறை பற்றிய விழிப்புணர்வும் ஆழ்ந்த புரிதலும் தொடர்ந்து அதன் இயக்கத்தோடு தொடர்பும் கொண்ட ஒருவரால்தான் அதன் அனைத்துப் பரிமாணங்களையும் ஆராயவும் வெளிப்படுத்தவும் முடியும். தான் அத்தகையவர் என்பதை இக்கட்டுரைகள் மூலம் நிரூபித்துள்ளார் அம்ஷன் குமார்.
ஹாலிவுட் படங்களை அப்பட்டமாகக் காப்பி அடித்து அவற்றை அவர்களிடமே அனுப்பி ஆஸ்கார் பரிசும் கேட்கிற லஜ்ஜையின்மை இங்கு குடிகொண்டுள்ளது. (பக். 111, 112) கலைஞர்கள் என்று தங்களை அழைக்க வேண்டுமென்று விரும்புவார்கள். பட்டப் பெயர்களையெல்லாம் சூட்டிக்கொண்டு மகிழ்வார்கள். ஆனால், அவர்கள் பங்கேற்கும் படம் கலைப்படமா என்று யாராவது கேட்டுவிட்டால் போதும். உடனே தோப்புக்கரணம் போடாத குறையாக அது முழுக்க முழுக்க கமர்ஷியல் படம் என்று கதறுவார்கள் (பக். 156) என எழுதும் போது ஒரு கலைஞனின் நியாயமான கோபம் சம்பந்தப்பட்டவர்களின் போலித்தனத்தை உரிக்கிறது.
வாசித்தலின்போது சின்னச் சின்னப் பிழைகள் ஆங்காங்கே எதிர்ப்படுகின்றன. இவை தவிர்க்கப்பட்டிருப்பின் நலமாய் இருந்திருக்கும். பக்கம் 115இல் அடிக்குறிப்பு 3இல் ‘பார்க்க: காலச்சுவடு இதழ் எண் 167 ப. 20’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. காலச்சுவடின் 167ஆம் இதழ் இன்னும் வெளிவரவில்லை. இது போன்றவை அடுத்த பதிப்பில் களையப்படும் என நம்பலாம். நூலில் கடைசியாக இடம்பெற்றுள்ள பொருளடைவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இந்நூல் சினிமா குறித்து அறிய விரும்புபவருக்கும் அறிந்து வைத்திருப்பவருக்கும் வாசித்தலில் நிறைவைத் தரும். அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள் நாவலைப் போன்று சினிமா, சினிமாக்காரர்கள் குறித்த ஒரு முழுமையான சித்திரத்தை வாசகனின் மனத்திரையில் காட்சிப்படுத்துகிறது இந்நூல்.
” ஒரு படைப்பு சாதனத்தின் வடிவ அமைதி, வெளிப்பாட்டுத்திறன், பரஸ்பர மனிதநேயம், கருத்துச் சுதந்திரம் ஆகியவற்றின் அடிப்படையில் எழுப்பப்படும் ரசனையே அழகியல்” எனச் அடையாளப் படுத்தும் அம்ஷன்குமாரின் அழகியல் பார்வை.
“பொழுதுபோக்கினை உயர்ந்த அனுபவமாக மாற்றுவது திரைப்பட மொழி. அம்மொழியின் அம்சங்களை நெறிப்படுத்துவது அழகியல்” (அம்ஷன் குமார், “பேசும் பொற்சித்திரம்”).
“சிறந்த நடிப்பு, பிரித்துப் பார்க்க வியலாதவகையில் அமைந்துள்ள ஒலி-ஒளி, பல்வேறு தளங்களில் செயல்படும் ஆற்றொழுக்கான கதையாடல், ஆழ்ந்த வாழ்வியல் நோக்கு பொன்றவற்றை ஒரு சேரக் கொண்டுள்ள படம், முழுமையான சினிமாவின் பிரதான கூறுகளைக் கொண்டது” (அம்ஷன் குமார், பேசும் பொற்சித்திரம்).
வாழ்க்கை வரலாற்றுப் படங்களைப் (அவை விவரணப்படமாயினும், கதை வடிவப் படமாயினும்)பற்றி இந்திய, தமிழகப் பொதுப்புத்தி நாம் அறிந்த ஒன்றே”. மகாத்மா காந்தியின் வாழ்வை டாக்குமெண்டரி படமாக எடுக்க தன் வாழ்வை அரிப்பணித்த, A.K. செட்டியார்
“சென்னையிலுள்ள பல படமுதலாளிகள் எனது திட்டத்தைப் பார்த்து நகைத்தனர். சிலரால் அதனை அறிந்து கொள்ளக் கூட முடியவில்லை. ஒரு பிரபல பிளம் கம்பெனி மானேஜர் என் எதிரிலேயே தன் முதலாளிடம் வாழ்க்கைச் சித்திரப்படம் (டாக்குமெண்டரி பிளம்) இலவசமாக காண்பித்தால் கூட ஜனங்கள் பார்க்க வரமாட்டார்கள் எனக் கூறினார்.
என எழுதியிருப்பதை அவரது நூலின்படி அறிகிறோம். தமிழ்நாட்டில் தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், தனியார் சேனல் நிர்வாகிகள் ஆகியோர் இன்றைக்கும் இவ்வாறு தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள்”
என்கிறார் அம்ஷன் குமார் தனது “பேசும்பொற்சித்திரம்” நூலின் கட்டுரையில்
‘மாறுதலான சினிமாவும் மாறிவரும் சினிமா பார்வையும் ‘
அம்ஷன் குமார்
1896ல்தான் சினிமா என்கிற சாதனம் உலகிற்கு பரவலாகத் தெரிய வந்தது. ஆனால் சில வருடங்களுக்குள்ளாகவே–அதன் சாத்தியக்கூறுகள் உணரப்படாத நிலையில் அது இன்னும் பேசவே துவங்காத போழ்தில், அது ஒரு பிரும்மாண்டமான தொழில் என்பது நிதர்சனமாகாத கால கட்டத்தில் திரையியல் தோன்றிவிட்டது. அமெரிக்க கவிஞர் வஷேல் லிண்ட்ஸே (Vachel Lindsay) 1916ல் சினிமா சாதனத்தின் மேன்மைபற்றி ஒரு கருத்தாய்வினை முன்வைத்தார். அதே வருடம் ஹ்யூகோ முன்ஸ்டர்பர்கின் (Hugo Munsterberg) மற்றொரு திரையியல் ஆய்வும் வெளியானது.
லிண்ட்ஸே, முன்ஸ்டர்பர்க் ஆகியோர் திரைப்படத்தை உடனேயே பெரும் கலையாக மதிக்கத்தொடங்கினர். கிரிஃபித்தைத் தவிர, பெரும் கலைஞர்கள் எவரும் புகழ் பரப்பியிராத நேரமது. சாப்ளின் அப்பொழுதுதான் காலடி எடுத்து வைத்திருந்தார். இருந்தும்கூட சினிமாவின் சாத்தியத்தை அவர்கள் உற்சாகத்துடன் உணரத் தொடங்கினர். இது முன்னுதாரணங்களற்ற பெரும் நிகழ்வாகும். அரிஸ்டாடில் துன்பவியலை ஆதரமாக வைத்து தனது கோட்பாடுகளை எழுப்பியபொழுது ஏற்கனவே அவருக்கு முன் மாதிரியாக பல ஒப்பற்ற கிரேக்க நாடகங்கள் எழுதப்பட்டிருந்தன. முன்னுதாரணங்களுக்கேற்ற படங்கள் வெளிவராத நிலையிலும்கூட திரையியல் தோன்ற மேற்கின் பாரம்பரிய செழுமைதான் காரணமாகியுள்ளது.
சினிமா தோன்றியபொழுது அது மற்ற கலைகளுடன் எவ்வாறு தொடர்பும் வித்தியாசமும் கொண்டிருந்தது என்ற சர்ச்சைகள் மலிந்தன. இந்தியாவிற்கு சினிமா இறக்குமதியான பொழுது இத்தகைய சர்ச்சைகள் நடத்தப்படவில்லை. ஏன் இன்றும் கூட அவை இந்திய குணாம்சங்களுடன் நடத்தப்படுவதாகத் தெரியவில்லை. பின்னர் பேசும்படம் வந்த பொழுது மெளனப் படத்தின் ஆதரவாளர்கள் அதற்கெதிராக பெரும் சம்வாதத்தை நடத்தினர். இந்தியாவில் பேசும்படம் உடனேயே ஆதரவினைப் பெற்றது. அறிவார்ந்த சம்வாதங்கள் ஆதரவாகவோ எதிராகவோ நடை பெறவில்லை. இப்பொழுது சினிமா–வீடியோ ஆகிய சாதன உரிமையாளர்களிடையே நடைபெறும் வழக்கு வெறும் வியாபாரத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. சினிமாவை திரையியல் வாயிலாக நமதாக்கிக் கொள்ள நாம் எக்காலத்திலும் முயற்சிக்கவில்லை.
ஒரு விஷயத்தை நாம் இங்கு நினைவு கூற வேண்டும். சினிமாவிற்கு துணை செய்த பாரம்பரியம் மேற்கிற்கு இருந்ததைப் போன்று நமக்கில்லாவிடினும் ஒரு சலனக் காட்சி சாதனமாகத்தான் சினிமாவை நாம் கண்டுகொண்டு வரவேற்றிருக்கிறோம் என்பது உற்சாகத்தைத் தரக்கூடியது. சாமிக்கண்ணு வின்செந், ஆர்.வெங்கையா, ஆர்.நடராஜா முதலியார் ஆகியோர் தமிழ்நாட்டிலும் பாத்வாகர், சேத்னா ஆகியோர் பம்பாயிலும் ஜே.எஃப்.மதன், ஹரிலால் சென் ஆகியோர் கல்கத்தாவிலும் இந் நூற்றாண்டின் துவக்கத்தில் மெளனப்படத்தைத்தான் சினிமாவாக பாவித்திருக்கிறார்கள். மேலும் அப்போது சினிமா பேசக்கூடும் என்று யாருக்கும் தெரியாது. மக்களும் சினிமாவை அவ்விதமாகவே பாவித்து வரவேற்பு கொடுத்துள்ளனர். ஆனால் பேசும்படம் வந்த பிறகு நிலைமை தலைகீழாக மாறத் தொடங்கி விட்டது.
திரையியல் துறையை புறக்கணித்தபோதிலும் திரைப்படத்தையே முற்றிலும் நாம் புறக்கணித்து விடவில்லை. காலந்தாழ்த்தி–மிகக் காலந்தாழ்த்திதான் என்றாலும்–நல்ல திரைப்படங்கள் இந்தியாவில் எடுக்கப்பட்டு வருகின்றன. இவற்றை சிறுபான்மையினர்தான் பார்க்கிறார்கள். ஆனால் இந்தியாவில் கலைப்பட முயற்சிகளுக்கு முன்னோடியான ‘பதேர் பாஞ்சாலி ‘ சினிமா ஆர்வம் நிரப்பிய சிறுபான்மையர்களின் ஆதரவை மட்டும் பெற்றதல்ல. அது பெருவாரியான வங்காளிகளைக் கவர்ந்த படம். முதல் வெளியீட்டின்போதே அது நல்ல வசூலைக் கொடுத்தது. ஏற்கனவே நன்கு பழக்கமாயிருந்த சினிமா வகை ஒன்றிணைத்தான் ராய் தன் முதல் படத்திற்கு தேர்ந்தெடுத்திருக்கிறார். அது குடும்பப் படம் என்னும் வகையாகும்.ஒரு சிறு குடும்பம்–தாய், தந்தை, சிறுவன், சிறுமி, கிழவி, வாத்தியார் எல்லாம் உண்டு. கமர்ஷியல் குடும்பப் படத்தில் வரும் காதல், தியாகம், குடும்ப வில்லன் ஆகியவை அதில் இல்லை. குடும்பம் ஒரு கிராமத்திலுள்ளது என்பதால் அதனுடன் தொடர்பு கொண்ட பல குடும்பங்களையும் சேர்த்து ஒரு கிராமத்தின் கதையையும் அப்படம் சொல்லிற்று. ராயின் படங்கள் அனைத்தும் வங்காளத்தில் நன்றாக ஓடுபவை. ‘கோபி கைனே பாகா பைனே ‘ படம் வந்த பொழுது அதன் பாடல்களைப் பாடாத வங்காளி சிறுவர்களே இல்லை என்று கூறப்பட்டது.
புரட்சிகரமான கதை சொல்லவோ பொறி தட்டுகிறாற் போன்ற சம்பவக் கோர்வைகளையோ அவர் நாடுவதில்லை. முத்தக் காட்சியை நேரிடையாகக் காட்டுகிற ‘துணிச்சலும் ‘ அவரிடம் இல்லை. வங்காளத்தின் பயங்கரப் பஞ்சத்தைக் கூட பஞ்சத்தால் பாதிக்கப்படாத பிராமணனை விமர்சிப்பதன் மூலம் படம் எடுத்தவர் அவர். அதீத நிலைகளில் காணப்படும் மனித வாழ்வை ராய் பெரும்பாலு கண்டு கொள்வதில்லை. தாஸ் தாவ்ஸ்கி, காஃப்கா ஆகியோரது படைப்புகளில் காணப்படும் அத்தகைய வாழ்க்கைப் போராட்டத்தை நாம் திரையில் பெர்க்மென், ஃபெல்லினி, குரஸோவா ஆகியோரிடம் காண்கிறோம். ‘பதேர் பாஞ்சாலி ‘யில் காற்றின் சீற்றமும் கடும் மழையும் கூடிய இரவில் துர்கா மரணப் படுக்கையில் பிதற்றுகிற ஒரு கட்டத்தைத் தவிர ராயின் படங்களில் வாழ்வா சாவா போராட்டம் வேறெங்கும் காணப்படுவதில்லை. ஆனால் ஒழுக்கப் பார்வையின் அடிப்படையில் வாழ்வு நோக்கு ஒரு போராட்டமாக பல படங்களில் உருக்கொள்கிறது. ராயின் பலவீனங்களைக் கணக்கெடுக்கும் சினிமா பார்வையுடன் அப் பலவீனங்களையே பலமாகப் பார்க்கும் சினிமாப் பார்வையும் கூடவே தொடர்ந்து வருகிறது. கதைக் கருவில் புரட்சியையோ தற்சார்பான எண்ணங்களையோ ஏற்றாமல் அவர் தன் கவனத்தை சினிமா என்னும் சாதன நுணுக்கங்களை வெளிக் கொணர்வதில் செலவிட்டிருக்கிறார்.
நல்லகதை, நல்லநடிப்பு, பொருத்தமான இசை என்று சினிமாவின் பல்வேறு அம்சங்களும் அவர் படத்தில் ஒருங்கே காணப்படுகின்றன. முழுமையான சினிமாவை உலக அரங்கில் ராய் போன்ற விரல் விட்டு எண்ணக் கூடிய டைரக்டர்களிடமே நாம் பார்க்கிறோம். ஆர்ப்பாட்டங்களுக்கோ சர்ச்சைகளுக்கோ செல்லாததால் அவருக்கு தணிக்கையாளர்களிடமிருந்து எவ்விதமான பிரச்னையும் வருவதில்லை. இது பயங்கொள்ளித்தனமாக அவரிடம் இல்லை. பிரச்னைகளின் கட்டுப்பாடான வெளிப்பாடு அவரது பார்வையின் உள்ளடக்கமாக மிளிர்கிறது.
‘நேருவின் வாழ்க்கையைப் படமெடுக்குமாறு இந்திய அரசாங்கம் உங்களைப் பணித்ததே, உங்கள் பதில் என்ன ? ‘ என்ற தொனியில் ஒரு பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு ராய் தந்த பதில். ‘நான் இந்திய சுதந்திரப் போராட்டத்தைப் படமெடுக்க விரும்புகிறேன் ‘. ராயின் கலைத் திறமையையும் வாழ்வு நோக்கையும் இப் பதில் மிகத்தெளிவாகப் பிரதிபலிப்பதாக நான் உணர்கிறேன்.
ரித்விக் கட்டக்கின் படங்கள் இந்திய சினிமா பார்வைக்குப் புதிய அணுகலைக் கொண்டு வந்தன. ராயின் படங்களை ரசிக்க மேற்கத்திய கலா ரசனை அத்யாவசியம் என்று கருதப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் ராய் மேற்கத்திய ரசிகர்களின் கண்டுபிடிப்பாக உணரப் பட்டதுதான். எனவே அப்போது புதிதாக உதித்திருந்த இந்திய சினிமாப் பிரக்ஞை தன் கவனத்தை கட்டக்கின் மீது குவித்தது. கட்டக் ஏராளமான மாணவர்களைப் பெற்றிருந்தார். அவர்களிடம் கட்டக்கின் பாதிப்பு நிறைய இருந்தது. ராய்க்கு ரசிகர்கள்தான் உண்டேயொழிய சீடர்கள் இல்லை. ராயின் பாணியை வேறு எந்த இந்திய டைரக்டரிடமும் நாம் காண முடியாது.
ஆனால் கட்டக்கின் மாணவர்கள் அறிவுஜீவிகள். அவர்களது கட்டக் பற்றிய திறனாய்வு சில சமயங்களில் ஆழமாயும் ஒத்துக் கொள்ளக்கூடியதாயும் பிற சமயங்களில் மறைபொருளான கோட்பாடாயும் அந்நியமாயும் விளங்கிற்று. காவிய பாவம், காளி பிரதிமை, தாந்திரிகம் போன்ற பாரம்பரியக் காரணிகளுடன் தங்கள் பார்வையை உள்முகப்படுத்த அவர்கள் முயன்றனர்.
கட்டக்கின் முக்கிய சீடரான குமார்சஹானி மேக தாக தாராவின் அமைப்பை பின்வருமாறு விளக்குகிறார்:-
‘முன் நாளைய கீழ் மட்டப் பொருள் முதல்வாத கலாச்சாரத்திலிருந்து எடுக்கப்பட்ட சரடினை இன்றைய மார்க்ஸீய கலாச்சாரத்துடன் பிணைத்தது இந்தியப் படங்களுக்கு கட்டக்கின் பங்கீடாகும்…
‘மேக தாக தாரா என்னும் மாபெரும் படைப்பில் இதனை அவர் எய்தியுள்ளார். தாந்திரிக அரூபத்திலிருந்து எடுக்கப்பட்ட முக்கோணப் பிரிவு இந்த சிக்கல் வாய்ந்த படத்தினை அறிந்து கொள்ள உதவும் திறவுகோலாகும். தலைகீழாக்கப்பட்ட இந்த முக்கோணம் இந்திய பாரம்பரியத்தில் இனப்பெருக்கத்தையும் பெண்பால் கோட்பாடினையும் பிரதிநிதித்துவம் செய்கிறது. சமூகம் பெண்மையின் மூன்று பகுதிகளாகப் பாகுபடுத்தப்படுகிறது. மூன்று பிரதான பெண் கதாபாத்திரங்கள் பெண் சக்தியின் பாரம்பரிய குணங்களை உள்ளடக்கியுள்ளார்கள். கதாநாயகி நிடா காக்கவும் பேணவும் செய்கிற குணம். அவளது சகோதரி கீதா புலனின்பத்தைப் விரும்புகிற பெண். அவர்களது தாய் கொடுமையான அம்சத்தைப் பிரதிபலிக்கிறாள். ‘ *****
மேக தாக தாராவில் வரும் மூன்று பெண்களைப் பற்றிய சுஹானியின் கணிப்பு பற்றி மாறுபாடான கருத்து எதுவுமில்லை. ஆனால் அவர்களை தாந்திரிக மரபுடன் ஏன் வலிந்து உள்முகப் படுத்த வேண்டும் ? அம்மரபு வழிவராத ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றிலும் இந்த மூன்று பெண்களையும் காணலாம். உலகெங்கிலும் அவர்கள் காணப்படுகிறார்கள்.
கட்டக்கை மிகவும் பாதித்தது இந்திய–பாகிஸ்தான் பிரிவினை. ‘பாரி தேகே பலியே ‘ படத்தில் எல்லோரையும் ஒரு வகையில் அகதியாக சித்தரிப்பதன் மூலம் இப் பாதிப்பு கலை ஆளுமை பெறுகிறது. அது ஓர் அற்புதமான படம். ஆனால் ‘சுபர்ணரேகா ‘ வில் எல்லாமே வலிந்து சொல்லப்படுகிறது. பிரிவினை அவதி கலை அமைதியின்றி ஒரு ரணமாகக் காட்சி அளிக்கிறது.
கட்டக் இந்திய மக்களின் உள் மனப்பிரக்ஞை என்று ஒன்றைக் கண்டு கொண்டு அதனைப் படங்களாக எடுத்தார். ஆனால் மக்கள் அவற்றைக் கண்டு கொண்டு அவற்றைத் தங்களுடைய பிரதிபலிப்பாக உணரவில்லை.
கட்டக்கின் மாணவர்களான குமார் சஹானி, மணிகெளல் ஆகியோர் யதார்த்த வாத நடையை முற்றாகப் புறக்கணிக்கும் டைரக்டர்கள். அரவிந்தனையும் இவர்களுடன் சேர்த்துக் கொள்ளலாம். மெதுவாக நகர்கிற நீண்டநேர கேமரா ஷாட்டுகளை அறிமுகப்படுத்தியவர்கள். அதே பாணியைத் தொடர்ந்து மேற்கொள்பவர்கள் இந்த பாணியை சற்று ஆராய்வது அவசியம். மெதுவாக நகர்கிற படங்கள் என்ற குற்றச்சாட்டினை வைத்து இம் மாதிரியான கலைப் படங்களை முற்றாக ஒதுக்குவது ஒருவகையில் சினிமா கண்ணோட்டத்தின் சுவாரஸ்ய முரணாகத் தென்படுகிறது. நமது புராணங்கள் இதிகாசங்கள் மற்றும் இலக்கியங்கள் பலவும் மிகையான குணங்கள் கொண்டிருப்பினும் சிவாஜி கணேசனின் நடிப்பை மட்டும் மிகையானது என்று கூறி நம்மிலிருந்து நாமே அந்நியப்பட்டு போவதைப் போலவே கலைப்படங்களை மட்டும் மந்தமான நடையுடையவை என்று கூறும்பொழுதும் நாம் நமது சினிமாவை மறந்தவர்களாகிறோம். கலைப்படங்கள் மட்டுமல்ல நமது கமர்ஷியல் படங்களும் மந்தமான கதியில்தான் செல்கின்றன. 25 பாடல்கள் கொண்ட படங்கள் பக்கம் பக்கமாக வசனங்கள் பேசப்பட்ட படங்கள் இவற்றிலெல்லாம் எங்கே துரிதம் இருந்தது ? எனவே மந்தமான படங்கள் என்று கலைப் படங்கள் உணரப்படுவதற்கு வேறு வகையான காரணிகள் உதவியுள்ளன. அவற்றில் மிருணாள் சென் கூறிய ஐந்து அம்சங்கள் இருந்தன.***
அவை:-
i) பெரிய நட்சத்திரமோ, கவர்ச்சியோ எதுவும் இல்லாமல் பெரும்பாலும் தொழில் ரீதியாக இல்லாதவர்களால் தயாரிக்கப்பட்ட வித்தியாசமான வகை.
ii)மிகக்குறைந்த செலவிலான தயாரிப்பு.
iii)பெரும்பாலும் ஸ்டுடியோக்களில் எடுக்காமல் பொருத்தமான வெளிப்புறங்களில் படம் பிடிப்பது.
iv)யதார்த்தத்தையும், கற்பனையையும் படைப்பு ரீதியான அம்சத்தோடு பொருத்தமாக இணைத்து எடுக்கப்படும் படங்கள்.
v)இறுதியாக புதிய துடிப்பான இளம் கலைஞர்களால் உருவாக்கப்படும் படங்கள்.
இவ்வகையில் தயாரான படங்களை மாறுதலான படங்கள் என்று சொல்வதற்கு பதில் எதிர்ப்பு சினிமா என்று சொல்வது பொருத்தமானதாக இருக்கும். பெரும்பாலும் அரசாங்கமும் சில சமயங்களில் நல்ல படங்களின் மீது ஆர்வம் ஒன்றினையே பிரதானமாகக் கொண்ட சில தனிமனிதர்களும் வருமானத்தை எதிர்பார்க்காது பணமுதலீடு செய்த படியால் இவை பரிசோதனைப் படங்களாயிற்று. திரைப்பட விமர்சகர்களும் அக்கறை கொண்ட ரசிகர்களும் இவற்றை வலிந்து வரவேற்றனர். சினிமா பார்வை ரசிக்கத்தக்கது அல்லாதது என்னும் கறார் தன்மையை இழந்து அரவணைக்கும் போக்கைப் பெற்றது.
ஆனால் பரிசோதனை பரிசோதனையாகத் தேங்கிற்று. நீண்ட நேர ஷாட்டுகள் ஒரு குறிப்பிட்ட வாதத்தை அடிப்படையாய் கொண்டிருந்தன. அதாவது காலம் வெளி என்னும் பண்புகள் யதார்த்தவாதத்தின் குரூரங்கள் என்றும் அவற்றை நீக்கிய இப்படங்களை ரசிகன் தனது மூளையில் நிர்வகிக்க வேண்டும் என்பது தான் அந்த வாதம். அதன்படி படம் பார்வைப் புலனுக்குள்– ஃப்ரேமுக்குள்–நடைபெறுகிற ஒன்றல்ல. படம் பார்த்தவன் படத்தை அசை போடுவதன் மூலமே அதனைப் புரிந்துகொண்டு நிர்மானிக்கிறான் . துரதிருஷ்ட வசமாக அவ்வாறு ‘புரிந்து ‘ கொண்ட பிறகு படத்தில் ரசிக்கத்தக்க விஷயங்களை ரசிகனால் பார்க்க முடிவதில்லை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால் புதிய பிரதேசம் ஒன்றினுள் நுழைகிற ஒருவன் அங்கு குறிப்பிட்டுச் சொல்லும்படி எதையும் விசேஷமாகக் காணாது திரும்பி வருவதான எண்ணமே இப்படங்களைப் பார்த்தவுடன் ஏற்பட்டது. ‘மாயாதர்பனி ‘ல்(குமார் சஹானி) வண்ணம் பற்றிய பிரக்ஞை இருந்தது. ஆனால் வண்ணங்கள் எதற்காக அவ்விதம் படத்தில் இடம் பெற்றன என்பதைப் புரிந்த பிறகு படம் சுவாரஸ்யத்தை இழந்தது. ‘காஞ்சன சீதா ‘ (அரவிந்தன்) மிகத் துணிச்சலான படம். ராமாயணத்தை முற்றிலும் வேறு விதமாக சித்தரித்தது. ஆனால் படம் பரிசோதனை என்கிற அளவிலேயே தேங்கிவிட்டது. படம் பிடித்த பாணியைத் தவிர அதில் வேறு சிறப்பு எதுவும் இல்லை என்றாகி விட்டது. ‘துவிதா ‘ (மணி கெளல்) படத்தில் வழக்கமாக கதை சொல்கிற பாணி தவிர்க்கப்பட்டது. ஆனால் படத்தில் பேசுவதற்கு ஒழுக்கம் பற்றிய பிரச்னையை எழுப்பிய கதைதான் எஞ்சியிருந்தது. திரைப்படக் கலை பற்றி நிச்சயிமற்று செயலாற்றுகிற கலைஞனின் நடுக்கத்தை மூடி மறைக்கிற உத்தியாகவும் நீண்டநேர ஷாட்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இவை தவிர கலைக்குப் புறம்பான சில சமாச்சாரங்களும் இப் படங்களில் நடந்தேறியுள்ளன. சர்வதேச சந்தையில் விலை போக வேண்டி ‘இது தான் இந்தியா ‘ என்ற பாணியில் சில படங்கள் எடுக்கப்பட்டன. இவற்றையெல்லாம் இப்போது ரசிகர்கள் கண்டு கொண்டு விட்டனர். இதனால் இவற்றை அரவணைக்கும் பார்வை மெல்ல விடுபட ஆரம்பித்துள்ளது.
கலைப்படம் என்ற வகை பூரண திருப்தியளிக்காததனாலும் அதை அரசாங்கம் போஷிக்க வேண்டியிருப்பதாலும் பெருவாரியான மக்களின் ஆதரவுடன் அர்த்தமுள்ள திரைப்படங்கள் உருவாக வேண்டுமென்ற அவாவினால் இடைவகை சினிமா (middle cinema) பற்றி பேச்சுகள் எழுந்த வண்ணமுள்ளன. கலைப்படங்களால் திருப்தியுறாத சினிமா விமர்சகர் சித்தானந்த தாஸ்குப்தா இந்திய சினிமாவின் பொற்காலம் இனிமேல்தான் வரவேண்டுமென 1975ல் எழுதினார்.** இடைவகை சினிமா ஏற்கனவே உள்ளது. என்னைப் பொறுத்தவரை ‘பதேர் பாஞ்சாலி ‘யே இடைவகை சினிமாவிற்கு நல்ல முன்னுதாரணம். ஜனரஞ்சகமாயும் கலைத்திறனுடனும் கூடிய திரைப்படம்தான் இடைவகை சினிமா என்றால் ‘பதேர் பாஞ்சாலி ‘ அந்த ஸ்தானத்திற்கு எல்லா தகுதிகளையும் உடையதாக உள்ளது. ஆனால் இடைவகை சினிமா ஆதரவாளர்கள் மேலும் இறுக்கங்கள் தளர்த்தப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள். இன்னமும் ரசித்துக் கேட்குமளவிற்குள்ள பாடல்கள் மெலோ டிராமாவான கதை ஆகியவற்றுடன் பெரும்பான்மையான ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்கிற அதே தருணம் பராக்கிரம் அசிங்கங்களற்ற ஆளுமை இவற்றை வைத்து எடுக்கப்பட்ட குருதத்தின் படங்கள் இடைவகை சினிமாவைச் சேர்ந்தவைதான். மீண்டும் நம் காலத்திற்கேற்றவாறு குருதத்தை எவ்வாறு பின்பற்றுவது என்பது ஒரு பிரச்னையாகும். சாப்ளின், ஷேக்ஸ்பியர் ஆகியோரை ஆதர்சங்களாக வைத்துப் பேசுகிற போக்கு இடைவகை சினிமா ஆதரவாளர்களிடம் உண்டு.
மிருணாள் சென்னின் ‘புஷன் ஷோம் ‘ (1969ல் வெளி வந்தது) பரவலாக இத்தகைய பாணிப்படம் என்று நம்பப்படுகிறது. *கேடன் மெஹ்தாவின் ‘ஹோலி ‘ மற்று ‘மிர்ச் மசாலா ‘ பாலுமகேந்திராவின் ‘வீடு ‘ மற்றும் ‘சந்தியா ராகம் ‘ ஆகியவையும் இடைவகை சினிமாதான். கூடவே ஷ்யாம் பெனஹலின் ‘ஆங்குர் ‘ ‘மன்தன் ‘ கோவிந்த் நிஹலானியின் ‘ஆக்ரோஷ் ‘ ‘அர்த் சத்யா ‘ ஆகியவையும், அரசியலை–அதிகார வர்க்கத்தை எவ்வளவு வேண்டுமானாலும் படங்களில் வெளிப்படுத்தலாம் என்று சொல்லுமளவுக்கு தணிக்கைக்குழு தாராளமாக நடந்து கொள்கிறது. முன்பு மிருணாள்சென் அரசாங்கத்தை நேரடியாக விமர்சிக்க இயலாது குறியீடுகள் உருவகங்கள் ஆகியவை மூலம் தனது ஆரம்ப காலப் படங்களை எடுக்கவேண்டிய நிலை இருந்தது. அதனுடன் அரசாங்கத்தை நேரிடையாகக் குற்றம் சாட்டுகிற ஆனந்த பட்வர்த்தனின் டாகுமெண்டரிப் படம் ஒன்று (In memory of my friends என்பது அதன் ஆங்கிலத் தலைப்பு) இவ்வருட இந்திய சர்வதேச திரைப்படவிழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் காட்டப்பட்டது என்ற இன்றைய நிலையை ஒப்பிட்டு பார்க்கவேண்டு. இது அரசாங்கத்தின் சினிமா பார்வையைக் காட்டுகிறது. எதிர்ப்புக் குரலை அமுக்கி அதன் மூலம் கலைஞனை கலகக்காரனாக பிரபலப் படுத்திவிடாது அவனை வெளிப்படுத்தவிட்டு பின்னர் அதைக் கண்டும் காணாததுபோல் இருந்து விடுகிற தந்திரம் இது.
ஆனால் மதம், ஜாதி இனம் போன்றவற்றின் தாக்கங்களை விமர்சனப் பார்வையுடனோ ஏன் யதார்த்தமாகவோ கூட சித்தரிப்பதென்பது இயலாததாகி விட்டது. ‘தமஸ் ‘ படம் விமர்சனத்திற்கு மட்டுமின்றி வன்முறைத் தாக்குதலுக்கும் பயன்படுத்தப்பட்டது. இக்கலவரங்களை நடத்துபவர்கள் சினிமா ரசிகர்கள் அல்லர் என்பது ஆறுதலான விஷயம்.
மாறுதலான சினிமாவை மட்டுமின்றி மாற்றங்கான விரும்பாத சினிமாவை அணுகுகின்ற முறைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அப்படங்களை வியாபாரப் படங்கள் என்று ஒரேயடியாகத் தாக்குவது இன்னமும் பெரும்பாலோரிடமும் காணப்படும் போக்கு என்ற போதிலும் பலராலும் விரும்பிப் பார்க்கப்படும் படங்களை வேறுவிதமான ஆய்வுக்கு உட்படுத்தும் சினிமா பார்வை இது. சினிமா என்பது கூட்டாக மக்கள் காண்கிற கனவு என்னும் அடிப்படையில் எழுந்த பார்வை இது. யுங்கின் உளவியல், அமைப்பியல் வாதம் ஆகியவை இந்த ஆய்வுக்குப் பயன் படுத்தப்படுகின்றன. ஒரு படம் ஏன் பிரும்மாண்டமாக வெற்றி பெற்றது, மக்கள் அதில் எதைக் கண்டு கொண்டார்கள் என்பது பற்றியெல்லாம் சமூகவியல் நோக்கில் இந்த ஆய்வு கவலை கொள்கிறது. காஸ்டன் ராபர்ஜ் ‘பாபி ‘ ‘ஷோலே ‘ படங்களை இத்தகைய ஆய்வு செய்தார். பல விமர்சகர்கள் (இக்பால் மசூத் போன்றோர்)அவ்வப்போது இதனைத் தொடர்கிறார்கள்.
ஆனால் வெற்றிப்படங்களை மட்டுமின்றி தோல்விப்படங்களையும் இந்த ஆய்வு கணக்கில் எடுத்துக் கொள்ளுமாயின் இதன் முடிவுகள் மேலும் உதவி புரிபவனவாக இருக்கும். வெற்றிப் படங்களை மட்டுமே ஆய்வதும் சினிமா பார்வையின் கமர்ஷியல் நோக்காகவே தோன்றுகிறது. பெண்நிலைவாத சினிமா பார்வை இன்னும் இங்கே வேரூன்றவில்லை. இப் பார்வைக்கு நிறைய சாத்தியங்கள் இருக்கின்றன.
***** Ritwik Kumer Ghatak By Haimanti Banerjee-National Film Archives Of India.
*** சினிமா-ஒரு-பார்வை-மிருணாள் சென். சென்னை புக் ஹவுஸ் வெளியீடு. பக் 17.
** Another Cinema For Another Society by Gaston Roberge Seagull Books. 1985. பக் 64.
* ஆனால் மிருணாள் சென் இடைவகை சினிமாவை ‘காக்டெய்ல் ‘ என்று கிண்டல் செய்பவர். இதன் மூலம் சென் பிரக்ஞையுடன் இடைவகை சினிமாவை முயற்சிப்பவரல்லர் என்று தெரிகிறது.
அம்ஷன் குமாரின் பாரதியாரும் பாரதி துவேஷிகளும்
மலர் மன்னன்
சென்னையில் நேஷனல் போக்லோர் ஸப்போர்ட் சென்டர் (தேசிய நாட்டாரியல் ஆதரவு மையம்) என்றொரு அமைப்பு இயங்கிவருகிறது. அண்மையில் இந்த அமைப்பு அம்ஷன் குமார் இயக்கிய பாரதியார் ஆவணப் படத்தைத் தனது அரங்கில் திரையிட்டது. ( இந்தப் படத்தை தயாரித்தவர்கள் நியூ ஜெர்சி சிந்தனை வட்டமும் , அதன் முன்னணி பாரதி அன்பருமான முருகானந்தமும். ) நிகழ்ச்சிக்கு அகில பாரத பாரதிய ஜனதாவின் துணைத் தலைவர் இல. கணேசனையும் என்னோடு அழைத்துச் சென்றிருந்தேன். உடனே, பார்த்தாயா, பார்த்தாயா மறுபடியும் பெயர்களை உதிர்க்கத் தொடங்கிவிட்தடான் என்று எவரும் ஆரம்பித்துவிடக்கூடும். காரணமாகத்தான் அவரது பெயரைக் குறிப்பிட்டிருக்கிறேன். பின்னர் அது பற்றியக் குறிப்பிடுகிறேன்விவரம் வரும். முக்கியமாக அவர் இல. கணேசன் பாரதிப் பிரியர். பல பாரதி பாடல்களை உணர்ச்சிப் பெருக்குடன் மனப்பாடமாகப் பாடுபவர். எனவேதான் அவரையும் அழைத்துச் சென்றேன். மகிழ்ச்சியுடன் வந்தார்.
தமிழர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் ஒரு பெரியார் இருக்கக் கூடுமாயின் அது சுப்பிரமணிய பாரதியாகத்தான் இருக்க முடியும், நாற்பது வயது நிரம்புவதற்கு முன்னரே அவர் மறைந்துவிட்டபோதிலும் என்று நான் பல கூட்டங்களிலும் குறிப்பிட்டு வருகிறேன்.
வ.உ. சிதம்பரம் அவர்களும் பாரதியாரைப் பெரியார், பெரியார் என்று பல இடங்களில் குறிப்பிட்டு எழுதியும் பேசியும் வந்துள்ளார். கவிஞர் பாரதிதாசன் பாரதியாரை ஐயர் என்று மரியாதையுடன் அழைக்கக் கேட்டிருக்கிறேன். ஒருமுறை பாரதிதாசன் பாரதியாரின் மனைவியார் செல்லம்மா அவர்களைச் சந்தித்துவிட்டு வந்து, அந்த அம்மாவை விழுந்து வணங்கிவிட்டு வந்ததாகக் குறிப்பிட்டார். அது அவரது சுபாவத்திற்கு மாறானதாக இருக்கவே, காலில் விழுந்து கும்பிட்டுவிட்டா வந்தீர்கள் என்று வியப்புடன் கேட்டோம்.
என்ன இருந்தாலும் ஐயரின் மார்பைப் புல்லியவரல்லவா அந்த அம்மையார் என்று சிலிர்ப்புடன் பதிலளித்தார், பாரதிதாசன். இந்தச் சம்பவம் இப்போது மிகவும் முதியவராகிவிட்ட சுரதாவுக்கு நினைவிருக்கலாம். அல்லது இப்போதுள்ள நிலமைக்கு ஏற்ப அப்படியொரு சம்பவம் நிகழவில்லை என்று அவர் கூறினாலும் ஆச்சரியப்பட மாட்டேன்!
பாரதியாரைத் தமிழரின் பெரியார் எனக் கருதுவதால் அவர் தொடர்பான எந்த நிகழ்ச்சியானாலும் கலந்துகொள்ளத் தவறுவதில்லை. ஞானசேகரனின் பாரதியைப் பார்த்தது போலவே அம்ஷன் குமாரின் பாரதியையும் ஆவலுடன் காணச் சென்றேன்.
அம்ஷன் குமாரின் ஆவணப் படத்திலிருந்து இரு புதிய தகவல்கள் கிடைத்தன. இரண்டுமே பாரதியின் குணவியல்பைப் புலப்படுத்தும் அருமையான விஷயங்கள். இரண்டுமே அவரது அந்திமக் காலத்தில் நிகழ்ந்தவை.
புதுச்சேரியிலிருந்து வெளியேறிய பாரதியார் தமக்கெனப் போக்கிடம் இன்றி, மனைவியின் ஊரான கடையத்திற்குச் சென்று சில காலம் வசித்த நாட்களில் அங்கிருந்த பல்வேறு சாதிச் சிறுவர்களும் தம்மோடு தயக்கமின்றிப் பழக இடமளித்தது ஒரு தகவல். அப்படிப் பழகிய சிறுவர்களில் ஒருவரின் நேர்காணல் ஆவணப் படத்தில் இடம்பெற்றுள்ளது.
பாரதியார் கிட்ட அக்கிரகாரத்திலே யாருமே பேசமாட்டாங்க. சின்னப் பசங்களையும் அவரோட பழகவிட மாட்டாங்க. நாங்க சிலபேர் மட்டும் அவரோட பழகறதுண்டு.
அவர் தனியாளா தெருவிலே ஒரு சிப்பாய் மாதிரி விறைப்பா நடந்து போவாரு. அதப் பார்த்தாலே எங்களுக்கு சுவாரசியமா இருக்கும் என்றெல்லாம் தகவல்களை அளித்தார் அவர்.
பாரதியார் தினந்தோறும் பலருக்கு கார்டு எழுதிப் போட்டுக்கொண்டே இருப்பாராம். எழுதிய கார்டுகளை அவரே எடுத்துப் போய் அஞ்சலகத்திலுள்ள பெட்டியில் போட்டுவிட்டு வருவாராம். தமது நூல்களை வெளியிடுவதற்காக அவர் பலரிடம் நிதியுதவி கேட்டு வின்ணப்பித்து ஒரு பலனும் கிடைக்கப்பெறாமல் மீண்டும் சென்னையில் சுதேசமித்திரன் நாளிதழில் ஒரு சாதாரண உதவி ஆசிரியராகப் பணிசெய்யப் போக நேர்ந்தது நமக்குத் தெரியும்தானே!
ஒரு முறை அவரோடு பழகிய சிறுவர்களில் ஒருவன் அவர் அடுக்கிவைத்திருந்த அஞ்சலட்டைகளில் நாலைந்தை ஏதோ ஆர்வத்தில் எடுத்துத் தன் மடியில் ஒளித்துவைத்துக் கொண்டானாம். கார்டுகளைக் கணக்குப் பார்த்து வைத்திருந்த பாரதியாருக்கு சில கார்டுகள் குறைவது தெரிந்துவிட்டது. வேறு யாரும் அங்கு வராததால் அந்தச் சிறுவர்களை விசாரித்திருக்கிறார், பாரதியார். நாங்கள் யாரும் எடுக்கவில்லை என்று சிறுவர்கள் கூறியிருக்கிறாகள். கார்டுகளை எடுத்த பையனும் அவ்வாறே கூறியிருக்கிறான். பிறகு அவன் விளையாடுகிறபோது இடுப்புத் துணி நழுவி, மடியில் அவன் ஒளித்துவைத்திருந்த கார்டுகள் கீழே விழுந்துவிட்டன!
அதைப் பார்த்துவிட்டார், பாரதியார். சிறுவன் கார்டுகளைத் திருடியதைவிடவும் எடுக்கவில்லை என்று அவன் பொய் சொன்னதுதான் அவருக்குப் பொறுக்கவில்லை. கோபத்தில் சிறுவனை அடித்துவிட்டாராம். பிறகு, கோழைகள்தான் பொய் சொல்லுவார்கள், நெஞ்சில் துணிவுள்ளவர்கள் பொய் சொல்லமாட்டார்கள், ஆகவே எந்த இக்கட்டானாலும் பொய் சொல்லக் கூடாது என்றெல்லாம் புத்தி சொல்லி சமாதானப் படுத்தினாராம். ஆனால் மறு நாளிலிருந்து அந்தச் சிறுவன் வருவதை நிறுத்திவிட்டானாம். பாரதியார் மற்ற சிறுவர்களிடம் அவன் ஏன் முன்போல வருவதில்லை, வரச் சொல்லுங்கள், எனக்கு அவன் மீது கோபம் இல்லை என்பாராம்.
கடையத்தில் ஊருக்கு வெளியே எவரும் போகாத குன்றின் மீது எறுவதற்குப் போவாராம். சிறுவர்களும் துணிவு பெற்றவர்களாய் அவருடன் போவார்களாம். இவ்வாறாகக் கடையத்தில் அக்கிரகாரத்து பிராமணர்களின் புறக்கணிப்பிற்கும் அலட்சியத்திற்கும் இலக்கான பாரதியாருக்கு, பிராமணரல்லாத சிறுவர்களின் தோழமை வாய்த்து, தனிமைப் படுத்தப் படுவதிலிருந்து மீட்சி கிட்டியிருக்கிறது.
தமது நூல் வெளியீட்டு முயற்சி தோற்று, பாரதி இரண்டாவது முறையாகச் சென்னைக்கு வந்து சுதேசமித்திரனில் பணியாற்ற நேர்ந்திருக்கிறது. இம்முறை தேச சேவைக்காக அல்ல, வயிற்றுப் பாட்டிற்காக! இந்த வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். அத்தருணத்தில் அவர் எவ்வளவு தூரம் மனம் கசந்து போயிருப்பார் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். பத்திருபது ஆண்டுகள் முழு மூச்சுடன் தம் மொழிக்கும் தாயகத்திற்கும் ஆற்றிய பணிகளுக்குக் கிடைத்த மரியாதை அவரை எந்த அளவுக்குச் சோர்வடையச் செய்திருக்கும் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்.
புதுச்சேரியிலிருந்து வெளியேறிய பாரதியார் கடலூரில் பிரிட்டிஷ் அரசின் போலீசில் சிக்கிச் சில நாட்கள் சிறைப்பட நேர்ந்தபோது இனி அரசியலில் ஈடுபடுவதில்லை என உறுதிமொழி யளித்துத் தான் விடுதலை பெற முடிந்தது. அந்த உறுதி மொழிக்கு இணங்க சுதேச மித்திரனில் மாதச் சம்பளத்திற்கு வேலை பார்க்கிற உதவி ஆசிரியராகப் பெரும்பாலும் செய்தித் தந்திகளைத் தமிழ்ப் படுத்துகிற பணியைத்தான் அவர் செய்து வந்திருக்கிறார். எனவேதான் அவரது அந்திமக் காலத்தில், அவர் சுதேசமித்திரனில் பணிசெய்த சமயம்
நிகழ்ந்த ஜாலியன்வாலா பாக் படுகொலை பற்றி அவர் தமது பெயரிட்டு கண்டனம் எதுவும் எழுதாமல் விட்டிருக்க வேண்டும்.
நெஞ்சுரமும் ஆவேசமும் சுதந்திர வேட்கையும் மிகுந்த ஒரு கவிஞனை இவ்வாறு செயலிழக்கச் செய்த பழி அவர் காலத்துத் தமிழ்ச் சமுதாயத்தையே சாரும். ஆனால் இவ்வாறான சிந்தனையின்றி, ஆவணப் படம் திரையிட்டான பிறகு நடந்த கலந்துரையாடலின்போது பாரதியார் மீது இதற்காக வியப்புத்தெரிவிக்கும் போக்கே காணப்பட்டது.
பாரதியார் சுதேச மித்திரனில் பணியாற்ற வந்தபோது முதலில் வட சென்னையில் தம்புச் செட்டித் தெருவில்தான் குடியிருந்தாராம். அவர் குடியிருந்த வீட்டின் இன்னொரு பகுதியில் குடியிருந்தவரின் நேர் காணல் நான் குறிப்பிட்ட மற்றொரு அம்சம்.
தம்புச் செட்டித் தெருவிலிருந்து சுதேசமித்திரன் அலுவலகத்திற்கு தினமும் ரிக்ஷாவில் செல்வதும் அவ்வாறே வீடு திரும்புவதும் பாரதியாரின் வழக்கமாம். ஒரு சம்பள தினத்தன்று ரிக்ஷாவில் பாரதியார் திரும்புகையில் ரிக்ஷாக்காரன் தனது வறிய நிலையைச் சொல்லி வருந்தவும், பாரதியார் மனமிரங்கித் தமது சட்டைப் பையிலிருந்த சம்பளப் பணம் முழுவதையும் எடுத்து அவனிடம் கொடுத்துவிட்டாராம்!
வீடு சென்றதும் பாரதியார் இதைச் சொன்னதும், மாதம் முழுவதும் செலவுக்கு என்ன செய்வது என்று செல்லம்மா தவித்துப் போனாராம். குடியிருந்தவரிடம் (அப்போது மிகவும் இளைஞராக இருந்தவர்) பாரடா மாமா செய்திருப்பதை, இப்போது மாதம் முழுவதும் செலவுக்கு என்ன செய்யப் போகிறேனோ என்று வருத்தப்பட்டாராம். உடனே இளஞர் ரிக்ஷாக்காரனைத் தேடிச் சென்று என்னப்பா இது, அய்யர்தான் கொடுத்தார் என்றால் நீ முழுப்பணத்தையுமா வாங்கிக் கொள்வது என்று சொல்லி, அதற்குள் அவன் ஐந்து ரூபா செலவழித்துவிட்டிருக்க மிச்சப் பணத்தை வாங்கிவந்து செல்லம்மா மாமியிடம் கொடுத்தாராம்.
பாரதியார் ஒன்றும் மனைவியின் தவிப்பைப் பார்த்துவிட்டு ரிக்ஷாக்காரனிடம் கொடுத்த பணத்தைத் திரும்பப் பெற ஓடவில்லை. குடியிருந்த இளைஞர்தான் மாதச் சம்பளத்தையே நம்பி வாழ வேண்டியிருக்கிற ஒரு மத்தியதர வர்க்கத்துப் பெண்மணியின் நியாயமான கவலையைத் தீர்க்க ரிக்ஷாக்காரனிடம் சென்று பாரதியார் கொடுத்த பணத்தைத் திரும்ப வாங்கி வந்திருக்கிறார். எனினும் கலந்துரையாடலின் போது, தமக்கென்று எதுவும் வைத்துக்கொள்ளாமல் பிறருக்குக் கொடுத்துவிடுபவர் என்று பாரதியார் பற்றி ஒரு கருத்து உருவாகிவிட்டிருக்கிறது; ஆனால் ஒரு குரூப்பு பின்னாலேயே போய் பணத்தை வாங்கி
வந்துவிட்டிருப்பது இப்போது புரிகிறது என்று எகத்தாளமாக ஒரு குரல் ஒலித்தது. பாரதியாருக்கு கண்ணம்மா என்ற பெயரில் ஒரு பெண்ணின் தொடர்பு இருந்ததாகவும், அந்தப் பெண்ணின் தம்பி என்று ஒருவரைச் சமீபத்தில் பெங்களூரில் தமக்கு அறிமுகம் செய்தார்கள் என்றும் ஒருவர் தெரிவித்தார். ஆவணப்படத்தில் பாரதியாருக்கு அபின் அருந்தும் பழக்கம் இருந்தது பற்றிய குறிப்பு இடம் பெற்றிருந்தது அனாவசியம் என்று இல. கணேசன் அம்ஷன் குமாரிடம் வருந்தினார். ஆனால் நான் அதில் ஒரு தவறும் இல்லை எனத் தெரிவித்தேன். பாரதியார் போன்ற ஒரு வரைப் பற்றிய தகவல்கள் முழுமையாகப் பதிவு செய்யப்படுவது சரிதான்; அபின் அருந்தும் பழக்கம் இருந்ததாலேயே அவரது ஆளுமையோ அவரது பங்களிப்போ பங்கம் அடைந்துவிடாது என்று சொன்னேன். பொதுவாக நம் மக்களுக்கு எதிர்மறையான விஷயங்கள்தாம் உடனடியாக மனதில் பதிந்துவிடுகின்றன. இப்போதுகூடப் பார்த்தோம் அல்லவா, கலந்துரையாடலில் உத்சாகத்துடன் பேசப்பட்டது எதிர்மறையானவைதாமே, என்றார், இல. கணேசன்.
ஆம், பாரதியாருக்கு ஜாதியபிமானம் இருந்ததாகக் கூட ஒருவர் சந்தேகம் எழுப்பினார்! இப்படியொரு சந்தேகம் வருவானேன் என்று பின்னர் விசாரித்தபோது ஒரு விவரம் கவனத்திற்கு வந்தது.
கடையத்தில் பாரதியார் இருந்த சமயம் அவரோடு நண்பர்போல் உரிமையெடுத்துக்கொன்டு பழகியிருக்கிறார், பிராமணரல்லாத, ஆனால் மேல் ஜாதியைச் சேர்ந்த ஒரு நபர். ஒரு நாள், பாரதியாரே உமக்குத்தான் ஜாதி வித்தியாசம் கிடையாதே உங்கள் பாப்பா சகுந்தலாவை என் பையனுக்குக் கலியாணம் செய்து கொடுக்கிறீர்களா என்று அந்த நபர் கேட்டாராம். உடனே பாரதியாருக்கு அடக்க மாட்டாத கோபம் வந்துவிட்டதாம்.
என்னைக் கேட்டால் பாரதியாருக்குக் கோபம் வந்தது சரிதான் என்பேன். முதலில் அந்த நபர் எந்த தொனியில் அவ்வாறு கேட்டாரோ, கெரியாது. அன்றைக்கு பாரதியார் இருந்த நிலையை நினைத்துப் பார்க்கிற போது, ஒரு இளக்காரத்துடன்தான் அந்த நபர் கேட்டிருக்கக்கூடும். சொந்த ஜாதியாராலேயே ஒதுக்கப்பட்டும் உதாசீனம் செய்யப்பட்டும் கிடந்தவர் மட்டுமல்ல, மனநிலை பிறழ்ந்தவர் என்றும் ஏளனம் செய்யப்படுபவராகத்தான் பாரதியார் அப்போது இருந்திருக்கிறார். இன்னொன்றையும் என் சொந்த அனுபவத்தை வைத்துச் சொல்லிவிடுகிறேன்.
சிதம்பரத்தில் நான் இருந்த காலத்தில் தென்னார்க்காடு மாவட்ட திராவிடர் கழகச் செயலாளராக இருந்தவர் கிருஷ்ண சாமி உடையார். அவர் மகன் எனக்கு ஓரளவு பழக்கம்.
ஒருமுறை உடையார் என்னிடம் சொன்னார்:
ஒரு காலத்திலே நாங்க யாரும் எங்க கிராமத்திலே அக்கிரகாரத்துக்குள்ளவே நொழைய முடியாது தம்பீ! செருப்புப் போட்டுக்கிட்டோ, தலப்பா கட்திக்கிட்டோ அய்யமாரை நெருங்க முடியாது. இப்ப அப்படியில்லே. அக்கிரகாரத்துக்குள்ள வீடெல்லாங்கூட வாங்கிக் குடியிருக்க முடியுது!
இதை மிகவும் பெருமையாக. ஒரு கவுரவம் வாய்த்தது போன்ற உணர்வுடன் அவர் சொன்னார்.
ரொம்ப சந்தோஷங்க. இதே மாதிரி உங்க தெருக்கள் எல்லாம் இருக்குதே அங்க பள்ளர், பறையர், எல்லாரும் செருப்புப் போட்டுக்கிட்டும், தலைப்பா கட்டிக்கிட்டும் நொழையமுடியுது இல்லீங்களா? அவங்க உங்க தெருக்கள்லே வீடுவாங்கி குடியேற முடியுது இல்லீங்களா? என்று கேட்டேன்.
உடையார் முகம் கறுத்தது. இந்தப் பையனிடம் பேச்சுக் கொடுத்திருக்கலாகாது என்று வருந்துபவராகக் காணப்பட்டார். அந்த மாதிரியெல்லாம் நடந்துடலே என்றார் சுருக்கமாக. மேற்கொண்டு அவர் பேச்சைத் தொடரவில்லை.
ஆக, எந்தச் சாதியாருக்கும் சாதி பாகுபாடு போக வேண்டும் என்றால் அது தமது சாதியைவிட ஒரு படி மேலேயுள்ளவரோடு கலந்து போவதுதானேயன்றித் தமக்குக் கீழேயுள்ள சாதியாரைத் தம்மோடு இணைத்துக்கொள்வது அல்ல!
ஒரு சக்கிலியக் குடும்பத்திலோ பறையர் குடும்பத்திலோ பெண் எடுக்க மனம் இல்லாத மேல் சாதி பிராமணரல்லாதவருக்கு பிராமணரான பாரதியார் வீட்டுப் பெண் கேட்கிறது! ஆதுதான் அவருக்குத் தெரிந்த சாதியொழிப்பு! அதிலும் இயலாமையிலே இருந்த பிராமணரான பாரதியாரிடம்தான் அவருக்கு அவ்வாறு கேட்கிற துணிவு வந்திருக்கிறது! மேலும் மிகவும் இயாலமையிலிருந்த ஒரு பிராமணர் மனைவியைக் கள்ளத்தனமாக வைத்துக்கொள்கிற கொழுப்பும் அந்த நபருக்கு இருந்திருக்கிறது! அந்தக் கொழுப்புதான் பாரதியாரிடம் அப்படிக் கேட்கிற துணிவையும் கொடுத்திருக்கிறது! இப்படிப்பட்ட ஒரு ஈனப் பிறவி பாரதியாரிடம் தன் மகனுக்குப் பெண் கேட்கிறது தைரியமாக! பாரதியார் ஜாதி மறுப்பாளர் என்பதால் அவரை மடக்கிவிடுகிற அகந்தையும் அதில் தொனிக்கிறது! பாரதியாருக்குக் கோபம் வந்ததில் என்ன தவறு? ஜாதி வித்தியாசமின்றி பாரதி அன்பர்கள் அனைவருக்குமே ரத்தம் கொதிக்கச் செய்யும் விஷயம் அல்லவா இது?
சாதியொழிப்பும் சாதி மறுப்பும் ஒரு சாதி தனக்கு மேலாக உள்ள சாதியுடன் சம்பந்தம் கொள்வது மட்டுமல்ல, தனக்குக் கீழ் ழுள்ள சாதியோடும் உறவாடுவதுதான்!
இது உறைக்காமல் ஒரு பிறவி பாரதியாரிடம் சம்பந்தம் பேசுமாம், அதற்கு பாரதியார் சூடு கொடுத்தால் பாரதியார் ஜாதியபிமானமுள்ளவராம். சாதிகள் இல்லையடி பாப்பா என்று அவர் பாடியது வெறும் பாசாங்காம்!
துவேஷத்திற்கும் ஓர் எல்லையில்லையா?
பாரதியாரின் படைப்பாற்றல் மிகத் தீவிரமாக இயங்கியது புதுச்சேரியில்தான். அவரது ஆன்மிக விழிப்பும் அங்குதான் முழு உத்வேகம் பெற்றது. ஆனால் அம்ஷன் குமாரின் பாரதியாரில் பாரதியின் புதுச்சேரி வாழ்க்கை பற்றிய விவரங்கள் முழுமையாக இல்லை. புதுச்சேரியில் பாரதி என்று தனியாகவே ஒரு ஆவணப்படம் எடுக்கலாம் என்றார் அம்ஷன் குமார். இந்த ஆவணப் படத்திற்கே நிர்வாகத் தரப்பில் எவ்வித ஒத்துழைப்பும் கிட்டவில்லை என்றார். பாரதி வைக்கப்பட்டிருந்த சிறைக் கொட்டடியைப் பார்க்கவும் படம் எடுக்கவும் அனுமதி கிட்டவில்லையாம்!
பாரதியார் பற்றிய ஆவணப் படம் எடுக்கும் வாய்ப்பு அம்ஷன் குமாருக்கு வருவதற்குள் பாரதியாரின் சம காலத்தவர் பலர் மறைந்துவிட்டனர். ஏறத்தாழ நாற்பது, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே எடுக்கப்பட்டிருக்க வேண்டிய ஆவணப் படம் இது. அப்படி எடுத்திருந்தால் பாரதியாரைப்பற்றிய ஏராளமான தகவல்களைப் பதிவு செய்திருக்க முடியும். அன்று பாரத செய்தித் துறையின் ஆவணப் படப் பிரிவு இல்லாமல் இல்லை. தமிழ் மாநிலத்திலும் ஓர் அரசு அத்தகைய வசதியுடன் இல்லாமல் போய்விடவில்லை. எனினும் அன்றைக்கும் பாரதியைத் துவேஷிப்பவர்கள் இருந்தனர் போலும்.
***
33வது சர்வதேச இந்திய திரைப்பட விழா
அம்ஷன் குமார்
இந்தியப் படவிழா அமைப்பு மோசம், அரங்கில் திரையிடல்கள் படு மோசம், திட்டமிடல் அறவே இல்லை என்றெல்லாம் பிலாக்கணம் புரிந்துவிட்டு காட்டப்பட்ட படங்களைப் பற்றிய ஒரு சில வரிகள்– அவையும் தரம் குறைந்தவை என்கிற பாணியில் எழுதுவது— சினிமா விமர்சகனின் வாடிக்கையாக இருந்து வருகிறது. ஒரு மாறுதலாக இந்த வருடம் அக்டோபர் 1ம் தேதியிலிருந்து 10ம் தேதிவரை புதுடெல்லியில் நடைபெற்ற 33வது சர்வதேச இந்திய திரைப்படவிழாவின் நடைமுறைகள் அமைந்திருந்தன. ஏசியாட் விளையாட்டுப்போட்டிகள் துவங்கப் பட்ட சமயத்தில் கலாச்சார நடவடிக்கைகளுக்காக கட்டப்பட்ட சிறப்பான சிரிபோர்ட் அரங்கங்களில் பிரதிநிதிகளுக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் படங்கள் திரையிடப்பட்டன. நிர்வாகிகள் நிகழ்ச்சி நிரல்களை முன்னதாகவே அளித்ததுடன் அவற்றைக் கடைப்பிடிக்கவும் செய்தனர். பொது மக்களுக்காக இப்படங்களை குறைந்த கட்டணத்தில் திரையிட சில தியேட்டர்களும் முன் வந்தன.ஆனால் படங்களின் தரம் ?
ஆசிய படங்களுக்கான போட்டிப்பிரிவு, உலக சினிமாபிரிவு, இந்திய பனோரமா பிரிவு, ஜனரஞ்சக இந்திய சினிமா பிரிவு போன்ற பல பிரிவுகளின் கீழ் படங்கள் திரையிடப்பட்டன.
விழாவின் தங்கமயில் விருது ‘லெட்டர் டு எல்சா ‘ என்னும் ரஷ்யப் படத்திற்குக் கிடைத்தது. ஒல்கா தனது கணவனுடன் ஒரு கிராமத்தில் ஒதுக்குப்புறமான பகுதியில் வாழ்கிறாள். கணவன் செல்வந்தன். ஆனால் அவனது நடவடிக்கைகள் எதுவும் அவளுக்குத் தெரியாது. அந்த கிராமத்திற்கு வருகைத் தரும் ஒரு பொம்மலாட்டக்காரனுடன் அவள் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தாள் என்பதற்காக அவளை அவள் கணவன் விரட்டி அனுப்புகிறான். தன்னிடம் இனிமையாகவும் தன்னை நெருங்க முனையும் மனிதர்களிடம் விரோதத்துடனும் நடந்து கொள்ளும் கணவனை புரிந்து கொள்ள முயலுமுன்னரே அவன் விபத்தில் இறந்து போகிறான். ஒல்கா புதிதாக தனது வாழ்க்கையைத் துவங்குகிறாள். ஆழமான கதாபாத்திர சித்தரிப்புகளோ, சம்பவங்களோ இன்றி நகர்கிற படத்தில் கணவனின் வாழ்க்கை மர்மம் பற்றிய ஒரு சிறு சலசலப்பு மட்டுமே குறிப்பிடத்தக்க நிகழ்வாகிறது.
‘அண்டர் த மூன் லைட் ‘ என்னும் இரானியப் படத்திற்கு வெள்ளி மயில் பரிசு கிடைத்தது. மதகுருவாக மாற விரும்பும் சையத்தின் உடமைகளை ஒரு சிறுவன் திருடிச் செல்கிறான். அவனைத் தொடரும் சையத்திற்கு முன்னால் வேறு ஒரு உலகம் தென்படுகிறது. விசேஷ ஜுரிப் பரிசை எகிப்திய ‘அஸ்ரர் எல்பனட் ‘ இந்திய `மித்ர்-மை பிரண்ட் ‘ ஆகிய இரண்டும் பங்கு போட்டுக் கொண்டன.
`அஸ்ரர் எல்பனட்` டான் ஏஜ் கவர்ச்சி. அச்சிறுமி கருவுற்று விடுகிறாள். தான் கருவுற்ற விஷயத்தை ஒருவருக்குமே சொல்லாது மறைத்து இறுதியில் அத்தை வீட்டில் குறைமாத பிள்ளை பெற்று விடுகிறாள். அவள் குழந்தை பெறும் நேரம் வரை யாருக்குமே அது தெரியாமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. குறைமாதப் பிரசவம் என்பதால் அது ஓரளவு சாத்தியம் போல் படுகிறது. குழந்தையின் தந்தை அதற்கு பொறுப்பேற்க வருகிறான். பழமைவாதிகள் நிறைந்த சமூகத்திற்கு அந்த விஷயம் தெரிந்தால் என்னென்ன விபரீதங்கள் நடக்கும் என்பதை உணர்ந்த சம்பந்தப்பட்ட பெற்றொர்கள் சம்பவத்தை மூடி மறைத்து இருவருக்கும் திருமணம் செய்து வைக்கிறார்கள். ‘அக்கினிப் பிரவேசம் ‘ கதையைப் படிப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. ஆனால் அடுத்தக் கட்டமாக அவர்களது வாழ்க்கை எவ்வாறு திட்டமிடப்படும் என்பதை அறிந்து கொள்ள காத்திருக்கும் பொழுது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் குழந்தை இறந்து போவதால் எல்லாம் பழைய நிலைமைக்கு திரும்பி விடுகிறது.பெண்ணின் தந்தை விவாகரத்தையும் பெற்று விடுகிறார். அரைக்கிணறு தாண்டிய நிலையில் படம் முடிகிறது.
‘மித்ர்- மை பிரண்ட் ‘ நடிகை ரேவதி இயக்கிய முதல் படம். பெண்ணின் தனிமை பற்றிய படம் போல் துவங்கி கலாச்சார வேற்றுமைகளை ஆராய்கிற படம் போல் பயணித்து காமெடிப் படம் போல் முடிவடைகிறது. பரிசு பெற்ற இப்படங்களை விட சாந்தினி பார்(இந்தியா) டோக்யோ மரிகோல்ட்(ஜப்பான்) லல்சாலு(பங்களாதேஷ்) ஆகிய படங்கள் உயர்வானவை என்பதை ரசிகர்கள் புரிந்திருந்தார்கள். மது பந்தார்க்கர் இயக்கிய ‘சாந்தினி பார் ‘ ஏற்கனவே நமக்கெல்லாம் நன்கு அறிமுகமான படம். தியேட்டர்களிலும் வெளியிடப்பட்டு பொது மக்களின் கவனத்தைப் பெற்றிருந்தது. பம்பாய் பார்களில் விரசமாக நடனமாடும் பரிதாப மங்கைகளைப் பற்றிய விரசமற்ற படம். ‘டோக்யோ மரிகோல்ட் ‘ எரிகோ என்னும் பெண், பாய் பிரண்டுக்கு பிடித்தமான காதலி அமெரிக்காவில் வாழ்வதைப் அறிகிற அதே நேரத்தில் அவனையும் சரிவர புரிந்துக் கொள்கிறாள்.அவன் எதையும் மூடி மறைக்காது கள்ளமற்று வாழ்கிறான் என்பதை உணர்கிற அவள் அவனுடன் ஒரு வருடமாவது சேர்ந்து வாழத்துடிக்கிறாள்.வித்தியாசமான கதை.
‘லல்சாலு ‘ படம் பங்களாதேஷில் உள்ள ஒரு குக்கிராமத்தில் திடாரென்று தோன்றும் மஜீத் மதத்தின் பெயரால் நடத்தும் வெற்றிகரமான மோசடிகளை சித்தரிக்கிறது. தனது எதிரிகளை சுலபமாக அவனால் வெல்ல முடிகிறது.ஆனால் அவனது இரண்டாவது மனைவி அவனது கயமையை ஏற்றுக் கொள்ள ம்றுக்கிறாள்.ஆர்ப்பாட்டமின்றி மெளனமாக வெளிப்படும் அவளது சீற்றத்தினை எதிர்கொள்ள முடியாது மஜீத் தவிக்கிறான்.கூடவே இயற்கையின் சீற்றம்(வெள்ளம்) அவனது தவிப்பை தோல்வியாக மாற்றுகிறது. லாபத்திற்காக மதத்தின் பெயரால் வன்முறைகளை செயல்படுத்தும் மஜீத் இஸ்லாமிய பழமைவாதத்தின் குறியீடாகிறான். அதை முடிவுக்கு கொண்டு வருகிற சக்தியினை பெண்கள் பெற்றிருக்கிறார்கள் என்பதை படம் நம்பிக்கையுடன் சொல்கிறது. நிச்சியமாக விருது பெற்றிருக்க வேண்டிய படம். மஜீத்தாக நடித்த ராய்சுல் இஸ்லாம் அஸாத்தின் நடிப்பும் குறிப்பிடத்தக்கது.
இருபதுக்கும் மேற்பட்ட உலக நாடுகளிலிருந்து படங்கள் உலக சினிமா பகுதியில் திரையிடப்பட்டிருந்தாலும் அவற்றில் ஒரு சில படங்கள் தான் பொறுமையாக பார்க்கிற வண்ணம் அமைந்திருந்தன. அகி கெளரிஸ்மகியின்(பின்லாந்து) ‘மேன் வித் அவுட் எ பாஸ்ட் ‘ நகைச்சுவையுடன் கடந்த காலத்தை மறந்து விட்ட மனிதனின் புதிய பயணம் பற்றிய நம்பிக்கையை சொல்கிறது. செறிவுடனும் எளிமையுடனும் படம் எடுக்கப்பட்டிருந்தது. இது விழாவின் இறுதிப் படமாகவும் காட்டப்பட்டது. ஆனால் விழாவின் ஒரே சலசலப்பானப் படம் என்னும் பெயரை ‘ல பளகார்ட் ‘ என்னும் பிரெஞ்சு படம் தட்டிச் சென்றது.இப்படம் சென்ற ஆண்டு கான் திரைப்பட விழாவில் கலந்துக் கொண்டது. பிரான்ஸ்வா பிக்னான் என்னும் குமாஸ்தா ஒரு அசுவாரஸ்யமான பேர்வழி என்பதற்காக வேலை நீக்கத்தை எதிர் நோக்குகிறான். அவனது மனைவி மகன் ஆகியோரும் அவனைப் பிரிந்து வாழ்கிறார்கள். அச்சமயம் அவனது அண்டை வீட்டுக்காரனின் திட்டப்படி பிரான்ஸ்வா ஒரு ஹோமோ செக்சுவலாக அறிவிக்கப்படுகிறான். ஆணுறைகளைத் தயாரிக்கும் அவனது கம்பெனி திடாரென சங்கடத்திற்குள்ளாகிறது. ஒரு ஹோமோ செக்சுவல் என்கிற காரணத்திற்காக அவன் வேலை நீக்கம் செய்யப்படுகிறான் என்ற அவப்பெயர் கம்பெனிக்கு வந்துவிடக்கூடாது என்பதால் அவன் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்படுகிறான். அவனை அலட்சியமாகப் பார்த்த அழகிகள் திடாரென அவன் மீது மையல் கொள்கிறார்கள். மகனும் திரும்ப வருகிறான். உண்மை ஒரு சிலருக்கு ம்ட்டும் தெரிகிறது. ஆனால் அதற்குள் அவனது வாழ்வு சீரமைக்கப்பட்டுவிடுகிறது. வயிறு குலுங்க சிரிக்க வைத்த சம்பவங்கள் இதனை ஒரு சிரிப்புப் படமாக ஆக்கிவிடாமல் சமூகம் மனிதன் மீது கொண்டுள்ள கணிப்புகள் பற்றிய ஆய்வாகவும் காட்டியது.
இந்த வருடம் இந்தியன் பனோரமாவில் வந்த சில படங்கள் விழாவில் திரையிடப்பட்ட பல உலகப் படங்களை விட சுவாரஸ்யமானவையாக விளங்கின. பல வருடங்களுக்குப் பிறகு மிருணாள் சென் ‘ஆமர்புவன் ‘ என்னும் புதிய வங்கப்படத்துடன் வருகை புரிந்திருந்தார். காதல், விவாகரத்து, மறுமணம் போன்ற நிகழ்வுகள் சில மனிதர்களிடையே ஏற்படுத்தும் பாதிப்புகளை மெல்லிய உணர்வுகளுடன் சொல்கிற படம் இது. நூர், சகீனாவை விவாகம் முடித்து ஒரே வருடத்திற்குள் அவளை விவாகரத்தும் செய்து விட்டு அரேபியாவிற்கு சென்று விடுகிறான். பணக்காரனாகிவிட்ட அவன் வேறு திருமணமும் புரிந்து கொண்டிருக்கிறான். சகீனாவிற்கும் வேறு திருமணம் நடந்து மூன்று குழந்தைகளுக்கு தாயாகியும் இருக்கிறாள். நூரும் சகீனாவும் மீண்டும் சந்திக்கிறார்கள். இருவருக்கும் பழைய நினைவுகள். ஆனால் அவற்றில் தோய்வதால் இனி எவ்வித எதிர்காலமும் இல்லை என்பதை மெள்ள புரிந்து கொள்கிறார்கள்.
புத்ததேவ் தாஸ் குப்தாவின் ‘மந்தாமெயர் உபாக்யான் ‘ வங்கப்படம் பலரையும் கவர்ந்தது.
1969ல் கதை நடக்கிறது. மலைகளுக்குப் பின்னால் ஒதுங்கியுள்ள ஒரு விபச்சார விடுதி. ரஜனி தனது மகள் லதி தன்னைப்போல் ஒரு விபச்சாரியாக ஆகிவிடாமல் யாராவது ஒரு செல்வந்தனுக்கு வைப்பாட்டியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாள். சினிமா கொட்டகையின் வயதான உரிமையாளன் லதியைக் கேட்டு வருகிறான். ரஜனிக்கு இதில் முழு சம்மதம். ஆனால் லதி தனது படிப்பைத் தொடர விரும்புகிறாள். அங்கிருந்து தப்பித்து தன்னுடைய வாத்தியாருடன் கல்கத்தாவிற்கு ரயில் ஏறி சென்று விடுகிறாள். சந்திரனில் மனிதன் காலடி எடுத்து வைக்கும் நிகழ்ச்சியை அவள் அங்கிருந்து தெரிந்து கொள்கிறாள். எங்கு விட்டாலும் திரும்பி வந்துவிடுகிற பூனை, தன் ஜீப்பில் ஏற்றிவிடப் பட்ட வயதான தம்பதியினரை ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்க்க முடியாமல் அலையும் டிரைவர், உலக உருண்டையை கையில் வைத்துப் பார்த்துக் கொண்டிருக்கும் லதி, செக்ஸ் காட்சிகளை தனது தியேட்டரில் திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டிருக்கும் தியேட்டர் உரிமையாளன், மனிதனின் விதியை முன் கூட்டியே அறிந்து சொல்லும் வண்ணானின் கழுதை, சந்திரனில் மனிதன் இறங்குவது இப்படி பல குறியீடுகள். படம் விறுவிறுப்பாகவும் அழகியல் உணர்வுகளுடனும் நகர்கிறது. ஆனால் விபச்சாரியின் மகள் விபச்சாரத்திலிருந்து தப்பி ஓடுவது ஒன்றும் புதிய கதை அல்ல. ஏற்கனவே வந்த ஷியாம் பெனகலின் ‘மண்டி ‘ இது போன்ற ஒரு படம் தான்.
இந்திய பனோரமாவில் என்னைக் கவர்ந்த படம் ஜானு பருவாவின் அஸ்ஸாமியப் படம். ‘கோனிகர் ராம்தேனு. ‘ குகோய் நன்றாகப் படிக்கும் சிறுவன். அவனுக்குத் தாய் தந்தை கிடையாது. படிக்க வசதியற்ற அவன் கிராமத்திலிருந்து ஓடிவந்து கெளகாத்தியில் ஒரு மோட்டர் மெகானிக்காக வேலை பார்க்கிறான். மோட்டார் கராஜின் முதலாளி தணு அவனைத் தகாத உறவில் ஈடுபடுத்துகிறான். கொகாய் தற்காப்பின் பொருட்டு அவனை ஒரு இரும்புத் தடியால் தாக்க அவன் இறந்து விடுகிறான். கொகாய் சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு கொலைக் குற்றம் சாட்டப்பட்டு அனுப்பப்படுகிறான். ஆனால் அதிர்ச்சிக்குள்ளான அவன் வாயிலிருந்து ஒரு வார்த்தையும் வெளி வருவதில்லை. இது வழக்கிற்கு மிகவும் இடையூறாக உள்ளது. வார்டன் பரோ பெருமுயற்சி செய்து அவனுடன் நெருக்கமாகிறார். அவனுக்காக வாதாடி விடுவித்து தன்னுடன் அழைத்தும் செல்கிறார். சீர்திருத்த பள்ளியின் நடைமுறைகள், சிறுவர்கள் மீது ஒரு சாராரின் இரக்கமும் மறுசாராரின் கயமைகளும்,அதிகாரத்தை வைத்திருந்தாலும் கையைப்பிசையும் நிலையிலுள்ள லட்சியவாதிகள் அவர்களுக்கு நேர் எதிராக அவர்கள் அருகிலேயே இருந்துகொண்டு சிறுவர்களை பலவிதங்களிலும் பயன்படுத்துகிறவர்கள் அடங்கிய நிர்வாகம் என்று ஒரு உலகையே பருவா நிர்மாணித்து விடுகிறார். சிறுவர் சைகாலஜியை இப்படம் சிறப்பாக பயன்படுத்துகிறது.
‘ஜமீலா ‘, சாரா அபுபக்கரின் ‘சந்திரகிரி ஆற்றங்கரையில் ‘ நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட தமிழ்த் திரைப்படம். தலாக்(விவாகரத்து) சொல்வதிலுள்ள இஸ்லாமிய கோட்பாடிற்கும் நடைமுறைக்குமுள்ள முரண்பாடினை ஆராய்கிறது படம். வலுவான கரு. இதைப் படமாக்க வேண்டும் என்பதே தைரியமான எண்ணம். ஆனால் அதை படமாக்க பூவண்ணன் எடுத்துக் கொண்ட முயற்சியில் சிறிதும் நேர்த்தி இல்லை. முஸ்லீம் கதாபாத்திரங்களை சந்திக்கிற உணர்வுகளைக் கூட படம் ஏற்படுத்தவில்லை.
தேவதாஸ் நாவலை வைத்து எடுத்த படங்கள் அனைத்தும் ஒரு சேர இந்த விழாவில் திரையிடப்பட்டன. இத்தனை மொழிகளில் திரைப்படமாக ஒரு சமூக நாவல் இந்தியாவில் இதுவரை எடுக்கப்படவில்லை. சரத்சந்திர சட்டர்ஜி தனது தேவதாஸ் நாவலை வெற்றிகரமானதாகக் கருதவில்லை. ‘அதை வெற்றிப் படமாக நான் எடுத்துக் காட்டுகிறேன் ‘ என்று நியு டாக்கிஸ் தயாரிப்பாளர் பி. என். சர்க்கார் சவால் விடுத்தார். பி.சி.பருவா டைரக்ஷனில் 1935ல் வங்காளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ஒரே சமயத்தில் ‘தேவதாஸ் ‘ எடுக்கப் பட்டு பெரும் வற்றி கண்டது. எழுத்தாக கதை தரும் கண்ணோட்டத்திற்கும் சினிமாவாக அது ரசவாதத்திற்குள்ளாகும் நிலைபற்றியும் இலக்கியவாதிக்கும் சினிமா கலைஞருக்குமிடையே ஏற்படுத்தும் தவிர்க்கவியலாத இடைவெளியை உருவகப்படுத்துவதாக இந்நிகழ்ச்சி அமைந்துள்ளது. இந்தியாவில் இலக்கிய வாசகர்களும் சினிமா ரசிகர்களூம் கொண்டுள்ளசாதனங்கள் ரீதியான பாகுபாட்டினையும் கூட இது உருவகப்படுத்துவதாகவும் கொள்ளலாம். வங்கப்பட பிரிண்ட் முற்றாக அழிந்து போய்விட்டதாக கருதப்பட்ட நிலையில் வங்க தேசத்தில் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. பங்களாதேஷ் ஆவணத்திலிருந்து அப்பிரிண்ட் பல கெடுபிடிகளுடன் வந்து பனோரமாவில் காட்டப்பட்டது. பிரிண்ட் முழுவதிலும் கோடுகளும் இரைச்சலும் மிக அதிகம். உடனடியாக புனருத்தாரணம் செய்யப்படாவிடின் அதுவும் முற்றாக அழிந்து போய்விடும் என்பதில் சந்தேகமில்லை. அப்படங்களில் பார்வதியாக நடித்திருந்த 82வயது ஜமுனா சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். 1956ல் எடுத்த பிமல் ராயின் ‘தேவதாஸ் ‘ பல வகைகளில் சிறப்பான படம். மனிதன் யதார்த்தம் கடந்து மது மயக்க எல்லையினைத் தொடும் கோடுகளை பலமுறை ராய் நன்றாகக் காட்சிப் படுத்தியிருக்கிறார். திலிப்குமாருக்கே உரிய மிதமான சோக நடிப்பு படத்தின் மற்றொரு பரிமாணம். வேதாந்தம் ராகவைய்யா எடுத்த தேவதாஸ்(1952) நாகேஸ்வர ராவ், சாவித்திரி ஆகியோரின் நடிப்பிற்காகவும் பாடல்களுக்காகவும் புகழ் பெற்ற படம்.
ஏன் தேவதாஸ் கதை ஒவ்வொரு முறையும் மக்களிடையே ஏகோபித்த ஆதரவினைப் பெறுகிறது ?
காதலில் ஈடுபடும் பெருவாரியான இந்தியர்கள் தேவதாஸைப் போலவே தாய்தந்தையர் குறுக்கீட்டால் திருமணம்வரை செல்வதில்லை. அந்த அளவில் தேவதாஸின் நிலையுடன் அவர்கள் தங்களைப் பொருத்திப் பார்க்க முடிகிறது. ஜாக்கிரதையாக தேவதாஸின் விதியிலிருந்து தாங்கள் தப்பிவிட்டதற்காக குற்ற உணர்வு கொள்ளும் அவர்கள், கடைசிவரை காதலியின் நினைவாகவே வாழ்ந்து தன்னைத் தானே வருத்தி மாய்ந்த தேவதாஸ் மீது இரக்கமும் அன்பும் கொள்கிறார்கள் போலும். தேவதாஸ் கதாபாத்திரத்தின் மீது ரசிகர்கள் கொள்ளூம் ஈடுபாடு ஒன்றுக்கு மேற்பட்ட கோணங்கள் கொண்டுள்ளது. மேலும் கதையாடலில் இந்தியர்களுக்கு மிகவும் பிடித்தமான முக்கோணக்காதல், தூய்மையான வேசி கதாபாத்திரம்(சந்திரமுகி) திருமணமானவுடன் தனிமனித ஆசாபாசங்களை ஒதுக்கிவிட்டு குடும்பத்தின் அங்கமாகிவிடுகிற பெண் போன்ற பல அம்சங்களும் தேவதாஸில் உச்ச நிலையில் செயல்படுகின்றன. காதல் திருமணங்கள் மலிந்துவிட்ட இன்றைய காலக் கட்டத்தில் எத்தனை இளைஞர்களால் தேவதாஸீடன் தங்களைப் பொருத்திப் பார்க்கமுடியும் என்ற கேள்வி எழுகிறது. இதனாலேயே தேவதாஸ் கதையை சமுகப்படமாக சித்தரிக்காது பிரம்மாண்டப்படுத்தி ஒரு புராணப்படம் போல் எடுத்திருக்கிறார் சஞ்சய் லீலா பன்சாலி. ‘தேவதாஸ் ‘ மேலும் பல அவதாரங்களை எடுக்கக் கூடும். அதன் பாதிப்பு கொண்ட படங்கள் ஏற்கனவே ஏராளமாக வந்துவிட்டன. குடிகாரக் கதாநாயகர்கள் அனைவருமே தேவதாஸின் நிழல்கள்தாம்.
படவிழா முடிந்த நிலையில் வந்திருந்த ரசிகர்களுக்கு ஆயாசமே மிகுதியாக இருந்தது. படவிழா நடத்தியவர்களுக்கும் இந்த விழா ஒரு தேவையற்ற சடங்காகத் தோன்றத் தொடங்கியிருக்கலாம். விழா நடத்துவதற்கு மாநிலங்களின் ஆதரவோ பட உலகினரின் ஆதரவோ அற்றுப் போய்விட்ட நிலையில் சர்வதேச இந்திய திரைப்பட விழாவின் எதிர்காலம் பற்றி ஆருடம் கூறுவது கடினம். ஏற்கனவே கீதா கிருஷ்ணன் கமிஷன் செலவுகளைச் சுட்டிக் காட்டி திரைப்படவிழா நடத்துவதைக் கைவிடுமாறு பரிந்துரை செய்துள்ளது. ஒரு வேளை திரைப்படவிழாவிற்கு மூடுவிழா நடக்குமேயானால் அதனால் பாதிக்கப்பட போகிறவர்கள் அரசங்கத்தினரோ திரைப்படத்துரையினரோ அல்லர். உலகின் பல பாகங்களிலிருந்து வரும் சமிபத்திய படங்களை தியேட்டர்களில் அமர்ந்து பார்க்க இந்தியர்களுக்கு கிடைக்கும் ஒரே சந்தர்ப்பம் இதுதான். திருவனந்தபுரம், கல்கத்தா ஆகிய நகரங்களில் தனிப்பட்ட திரைப்பட விழாக்கள் நடத்தப்பட்டாலும் பாரம்பரியமாக நடத்தப்படும் இவ்விழாக்களின் சிறப்பு தனியானதுதான். அத்தகைய சிறப்பினை உறுதி செய்கிறார்போல் நன்கு திட்டமிட்டு தொடர்ந்து பட விழா நடத்தப் படவேண்டும் என்பதே நமது விருப்பம்.
***
வேறு பெயரில் மீதி சரித்திரம்
-அம்ஷன் குமார்
பாதல் சர்க்கார் நாடகம் என்று பொதுவாக அறியப்படும் வகையிலிருந்து பெரிதும் மாறுபட்ட பாதல் சர்க்கார் நாடகம் ‘பாக்கி இதிஹாஸ். ‘
இது ஏற்கனவே ‘மீதி சரித்திரம் ‘ என்ற பெயரில் தமிழில் மேடையேற்றப்பட்டிருக்கிறது. ‘பிறகொரு இந்திரஜித் ‘ தில் வரும் நாடகாசிரியன் தனது நாடகத்தில் நாடகத் தன்மையுடைய கதா பாத்திரங்கள் இல்லை என்று அங்கலாய்த்துக் கொள்வதைப் போல ‘பாக்கி இதிஹாஸ் ‘ நாடகத்தை காணும் பார்வையாளர்கள் செய்ய முடியாது. நாடகத்தன்மை, விறு விறுப்பு, சம்பவக் கோர்வை ஆகியன கொண்டது இந்த நாடகம். வாழ்வு பற்றிய கணிப்பை கனமற்ற நடையில் வெளிப்படுத்தும் கடைசிக் காட்சியும் இதிலுண்டு.
‘மீதி சரித்திரம் ‘ என்ற நேரான, அழகான பொருட் செறிவுள்ள தமிழ்ப்படுத்தலை ஒதுக்கிவிட்டு ‘பாலு ஏன் தற்கொலை செய்து கொண்டான் ? ‘ என்ற கண்ணராவியான தலைப்பை, நீண்ட நாட்களுக்குப் பின் தாங்கள் மேடைக்கு வர தேர்ந்தெடுத்த இந்நாடகத்திற்கு பரீக்ஷா குழுவினர் ஏனோ தந்துள்ளனர்.
விமர்சனம் என்றால் நாடகத்தின் கதை சுருக்கத்தை ஈந்து பின்னர் அதன் இலக்கிய குணாம்சங்களைப் பற்றிப் பேச வேண்டும் என்ற சம்பிரதாயத்தை ஒதுக்கிவிட்டு நாடகத் தயாரிப்பு பற்றி மட்டும் கவனம் செலுத்தினால், சிறப்பாக தென்படுவது நடிக நடிகையரின் நடிப்பு. மூர்த்தியாக வரும் ராமானுஜம் அலாதியான நடிப்பாற்றலை வெளிப் படுத்துகிறார். உடலை விறைப்பாக உணர்ந்து கொண்டு ‘தடபுட ‘லாக நடிக்கும் ஞானிக்கு நேரெதிராக உடலின் தொய்வை பாத்திர ஈடுபாடு பிரக்ஞையின் பாற்பட்டதான ஆற்றலாக மாற்றுகிறார் ராமானுஜம். வசந்தியாக நடிக்கும் ப்ரீதம் வீட்டிற்குள் ஒரு குடும்பத் தலைவி எவ்வாறு இயல்பாக நடப்பாளோ அதே போன்ற நடையுடன் உலவுவது ஒரு குறிப்பிடத்தக்க அம்சம். நீண்ட நாட்களுக்குப் பிறகு நடித்தாலும் ப்ரீதம் கச்சிதமான அசைவுகள் தருகிறார். மூர்த்தியின் நண்பராக வரும் நடிகர் துரை மறந்து போய் பையை வைத்துவிட்டு போய்விட்டாலும் ப்ரீதம் அதை குறையாக்கிவிடாது ‘உங்கள் நண்பர் பையை வைத்துவிட்டு போய்விட்டார் ‘ என்று சாமர்த்தியமாக வசனம் பேசி சமாளிக்கிறார்.
நாடகத்தில் நிகழ்ச்சிகள் மாறினாலும் களன் மாறுவதில்லை. அதே வரவேற்பரை, நாடகம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது. அதில் தவறில்லை. ஆனால் கற்பனை காப்பாற்றப்படவில்லை. உதாரணமாக, மூர்த்தி வீட்டிலுள்ள வரவேற்பறையில் உள்ள புத்தக அலமாரியிலிருந்து வேறு காட்சியில் கதை மாற்றத்திற்கேற்ப பாலுவின் மாமனார் ஒரு பருமனான புத்தகத்தை எடுத்துப் போகிறார். அந்தப் புத்தகம் எடுத்து செல்லப் பட்டது செல்லப் பட்டது தான். பின்னர் மூர்த்தியின் வீடாக மீண்டும் காட்டப்படும் பொழுதும் அந்தப் புத்தகம் ஷெல்ஃபில் இடம் பெற்றிருக்கவில்லை. மாமனார் பாலுவின் வீட்டிலிருந்து மட்டுமின்றி மூர்த்தியின் வீட்டிலிருந்தும் புத்தகத்தை எடுத்துப் போய்விட்டதாக எண்ணங் கொள்ள வேண்டியுள்ளது.
எல். வைத்தியநாதன், எல். சங்கார் ஆகியோரின் இசைப் பகுதிகள் நாடகத்தில் வரும் சிக்கலையோ அவதியையோ அடிக்கோடிடும் வண்ணம் அமையவில்லை. நாடகம் நேரம் ஆக ஆக தொய்வினை பற்றிக் கொள்கிறது. திரும்பத் திரும்ப மேடையேற்றுவதன் மூலம் இதன் குறைகள் நிவர்த்திக்கப்படலாம்.
பின் குறிப்பு
மெலிதாக நகைச்சுவை தலையெடுக்கும் இடங்களில் கூட பார்வையாளர்கள் வாய்விட்டுச் சிரிக்கிறார்கள். நாடகம் என்றால் பிரதானமாக சிரிப்பதற்கான நிகழ்ச்சி என்று அமெச்சூர் நாடக கலாச்சாரம் ஏற்படுத்தியுள்ள புரையோடலான பாதிப்பு எல்லா தரப்பு பார்வையாளர்களையும் இவ்விதம் நடந்துக் கொள்ள வைக்கிறது.
அழிந்துபோன 97 ஆயிரம் நூல்களின் சொல்லப்படாத கதை
– அம்ஷன் குமார் –
ஜூன் 1, 1981. யாழ்ப்பாணம். நள்ளிரவில் காவல் துறையினரும் அடியாட்களும் ஆயுதங்களுடன் ஒரு நெடிய வளாகத்தினுள் நுழைகின்றனர். அவர்களது நோக்கம் மனிதர்களைத் தாக்குவது அல்ல. மாறாக மனிதர்களின் பாதுகாப்பு சற்றும் இல்லாத நேரம் பார்த்து அங்குள்ள பொருள்களையும் அந்த வளாகத்தையும் நாசப்படுத்துவது. வளாகம் உலகப் பிரசித்திபெற்ற யாழ்ப்பாணப் பொதுசன நூலகம். அதிலுள்ள பொருள்கள் சுமார் 97,000 புத்தகங்கள். சில மணி நேரங்களில் இரண்டுமே தீக்கிரையாகின்றன. அன்று காலை கண் விழித்த உலகம் இக் காட்டுமிராண்டித்தனமான செயலால் அதிர்ந்துபோனது.
ஒரு நூல் ஒரு தனி மனிதனின் எண்ண வெளிப்பாடு என்றால் ஒரு பெரும் நூலகம் மனிதகுல நாகரிகத்தின் கருவூலம். சிங்களவர்களாகிய தங்கள்மீது தமிழர்கள் அறிவாதிக்கம் கொண்டிருப்பதாக நினைத்து அதனை அழிக்க வேண்டித் தமிழர்களின் தொன்மை, இலக்கியம் ஆகியவற்றின் பாசறை யாழ் நூலகம் என்ற எண்ணத்தில் அதை எரித்ததன் வாயிலாக, சிங்களவர்கள் தங்களையும் சேர்த்து அழித்துக்கொண்டார்கள். அந்நூலகத்தில் இருந்தவை தமிழர்களின் உடமைகள் மட்டுமே என்று அவர்களால் எவ்வாறு எண்ண முடிந்தது? ஸ்ரீலங்காவின் மொத்த சரித்திரமும் அங்குதானே குடிகொண்டிருக்கும்? பேதமைக்கு இதைவிடவும் வேறொரு உதாரணம் கூற முடியுமா?
ஆனால், இது பேதமையன்று. இனப்போருக்குக் கிடைத்த வெற்றி என்ற ஸ்ரீலங்கா அரசின் அரசியல் பார்வையைத் தமிழர்கள் எவ்வாறு பாவித்தனர் என்பதைப் பற்றிய 49 நிமிட நேர டாகுமெண்டரி படம் எரியும் நினைவுகள். இனப்போர் பற்றிய பெரும் வரைவுகளுக்குச் செல்லாது படம் யாழ்ப்பாண நூலகம் என்னும் மையத்திற்கு உடனே சென்றுவிடுகிறது.
1933இல் யாழ்ப்பாணத்தில் கே. எம். செல்லப்பா என்னும் ஒரு நூல் ஆர்வலரின் முயற்சியால் ஒரு சிறு நூல்நிலையம் தொடங்கப்பட்டது. பொதுமக்களின் கொடையாகப் பெறப்பட்ட 844 நூல்களுடன் அது 1935இல் யாழ்ப்பாண நகரசபையின் வசம் ஒப்புவிக்கப்பட்டது. பெரிய கட்டடத்திற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நூலக விஞ்ஞானி எஸ். ஆர். ரங்கநாதன் அழைக்கப்பட்டார். கட்டடக் கலைஞர் நரசிம்மன் வரைபடம் தந்தார். இருவரும் இந்தியர்கள். 1954இல் யாழ்ப்பாணப் பொதுசன நூலகக் கட்டட அடிக்கல் நாட்டப்பட்டு 1959இல் நூலகத் திறப்பு விழா நடைபெற்றது. யாழ்ப்பாணத்தில் இயங்கிவந்த அமெரிக்க நூலகம் அதனுடன் இணைந்ததால் நூல்களின் எண்ணிக்கை பெருகியது. பயன்பெறுபவர்களும் அதிகமாயினர். ஆனால், இந்தச் சரித்திரம் மே 31, 1981 அன்று முடிவிற்குவந்தது.
அன்றைய யாழ்ப்பாண மாநகர முதல்வர் இராசா. விஸ்வநாதன் யாழ் நூலக எரிப்பு, அதைத் தொடர்ந்து கடைகள், ஈழ நாடு பத்திரிகை அலுவலக நாசங்கள் ஆகியவற்றினால் மொத்த இழப்பு 100 மில்லியன் ரூபாய் அளவுக்கு இருக்கும் என்று கணக்கிடுகிறார். சமன் செய்யும் முயற்சிகளில் ஒன்றாக யாழ்ப்பாண நூலகப் புனருத்தாரணம் மேற்கொள்ளப்பட்டது. 1984இல், எரிக்கப்பட்ட நூலகத்தின் மூன்றாமாண்டு நினைவாகப் புதிய நூலகக் கட்டடம் பழைய கட்டடத்தின் மேற்குப் பகுதியில் சிறிய அளவில் திறந்து வைக்கப்பட்டது. மே 1985இல் மீண்டும் அங்கே குண்டுகள் வெடித்தன. அது யுத்த களமாக மாறியது. வட பகுதியில் மூண்ட போரில் யாழ்ப்பாணத்திலிருந்து 5 லட்ச மக்கள் ஒரே நாளில் வெளியேறினர். சிங்களவர்களை எதிர்க்கவோ ராணுவத்தினருக்குப் பதிலடி கொடுக்கவோ தமிழர்களால் இயலாத நேரம் அது. ஆனால், நிலைமை விரைவில் மாறியது. ஆயுதம் ஏந்திய தமிழ்ப் போராளிகளின் தாக்குதல், தமிழீழம் என்னும் கோரிக்கை ஆகியவற்றால் நிலைகுலைந்த அரசு சமாதானப் பேச்சிற்கு இணங்கிற்று. சந்திரிகா குமாரதுங்கா அந்த எதிர்பார்ப்பினைப் பூர்த்திசெய்யக்கூடியவராகக் கருதப்பட்டவராதலால் அவர் 1994இல் அதிபரானார்.
நல்ல பெயர் எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திலிருந்த பொதுசன ஐக்கிய முன்னணி, நூலகத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டது. புத்தகமும் செங்கல்லும் திரட்டும் பணியில் ஈடுபட்டது. அதாவது பள்ளிக் குழந்தைகளும் கிராம மக்களும் ஒவ்வொருவரும் நூலகத்திற்கு ஒரு புத்தகமோ செங்கல்லையோ அளிக்கும்படி வேண்டப்பட்டது. அத்திட்டம் பெரும் வெற்றி பெற்றது. அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்க ஆர்வம் காட்டாது நூலகத்தை மீண்டும் எழுப்புவது என்னும் அடையாளச் செயல்பாட்டை மோசமான அரசியலாகத் தமிழர்கள் பார்த்தார்கள். சாம்பலாக்கப்பட்ட நூலகம் நினைவுச் சின்னமாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அவர்கள் நிபந்தனையிட்டனர். ஆனால், ஸ்ரீலங்கா அரசினர் அதை நிராகரித்துவிட்டு அதே இடத்தில் புதிய நூலகத்தை எழுப்பியுள்ளனர். அதன் திறப்பு விழாவிற்குத் தமிழர்கள் எதிர்ப்பினைக் காட்டவே, அந்த விழாவை நடத்தாமலேயே நூலகம் 2003இல் இயங்கத் தொடங்கியது. நூலகப் பகுதி ராணுவத்தின் உச்ச பாதுகாப்பு வளையத்தினுள் இருப்பதால் அது இன்று ஒரு சிறையாகக் காட்சியளிக்கிறது.
யாழ் நூலகம் ஒரு எரிகிற பிரச்சினையாகத் தொடர்கிறது.
இதுவரை எவரும் தொட்டிராத ஒரு நிகழ்வினை, யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட அதே ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பிறந்த இயக்குநர் சோமிதரன் திறம்படக் கையாண்டிருக்கிறார். இம்மாதிரிக் கடந்த காலமொன்றைப் படம்பிடிக்கும்பொழுது தகுந்த ஆவணங்கள் தேவை. இனப்போரில் ஸ்ரீலங்கா ஈடுபட்டுள்ள நிலையில் அத்தகைய ஆவணங்கள் அங்கிருந்து கிடைப்பது அவ்வளவு சுலபமானதல்ல. சோமிதரன் அந்தக் குறைபாட்டினைப் பார்வையாளர்கள் அதிகம் உணராத வண்ணம் நேர்காணல்கள் வாயிலாகவே படத்தை எடுத்துச்செல்கிறார். ராணுவம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள யாழ் நூலகத்தைப் படம்பிடிப்பது சற்றும் எளிதானதல்ல. அவர் மிகுந்த லாவகத்துடன் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார். மினி டிவி, ஹேண்டிகேம் என்று கிடைத்த உபகரணங்களைக் கொண்டு யாருடைய கவனத்தையும் ஈர்க்காமல், அந்த இடத்திற்குத் தன்னை அழைத்துச் சென்ற கார் டிரைவரை வைத்தே சொற்ப வசதிகளுடன் அவர் துணிகரமாகச் செயல்பட்டிருக்கிறார். படத்திற்கான ஆய்வினையும் அவரே மேற்கொண்டுள்ளார். லயோலா கல்லூரி விஷ§வல் கம்யூனிகேஷன் மாணவரான அவர், ‘நிகரி’ என்கிற அமைப்பினூடாகத் தொழில் திறன் மிகுந்த இப் படத்தைத் தயாரித்துள்ளார்.
நூலக எரிப்பு உணர்வுபூர்வமாகப் பார்க்கப்பட்டிருக்கிறது. ஆனால், நூலக இழப்பு விஞ்ஞானப் பார்வையுடன் அணுகப்பட்டிருக்க வேண்டும். 97,000 நூல்கள் தீயில் கருகின என்பதை அடிக்கடி சொல்லும்பொழுது அவற்றில் இருந்த அரிதான நூல்கள் பற்றிக் குறிப்பிட்டிருக்க வேண்டும். நூலகத்தின் சிறப்புப் பயன்பெற்றவர்களின் நேர்காணல்களைச் சேர்த்திருக்க வேண்டும். புலம்பெயர்ந்து வாழ்கிற ஸ்ரீலங்காத் தமிழர்களையும் இதன் பொருட்டு நாடியிருக்கலாம். அப்போதுதான் நாம் எவற்றையெல்லாம் இழந்து நிற்கிறோம் என்பதை இன்றைய தலைமுறையினர் உணர முடியும். பேராசிரியர் கா. சிவத்தம்பி அணுகப்பட்டிருந்தும் அவரிடமிருந்து அடர்த்தியான விஷயங்கள் எதுவும் திரளாதது ஏமாற்றம்தான். நூலகம் பற்றி எடுக்கப்பட்ட இப்படத்தில் இவை சுட்டிக்காட்டப்பட வேண்டிய குறைகள். ஆனால், இது வீடியோ படம் என்பதால் அடுத்த பதிப்பிலேயே இக்குறைகளை நேர் செய்துகொள்ள முடியும்.
சூடான அரசியல் விவாதங்களை வெளிப்படையாக எதிர்பார்ப்பவர்களுக்கு இப்படம் ஏமாற்றம் அளிக்கக்கூடும். ஆனால், பல்வேறு விவாதங்களுக்கும் படத்தில் இடம் உண்டு. இன்று நிலவும் அரசியல் நிலைமை குறித்த கவனத்துடன் ஒரு சுய தணிக்கையை மேற்கொண்டு சோமிதரன் படத்தை எடுத்திருக்கிறார். மிதவாதிகளே நேர்காணல்களில் இடம்பெற்றுள்ளனர். இது போன்ற காரணங்களால் இப்படம் சிக்கல்களின்றி எங்கும் உறுதியாகத் திரையிடப்படும் வாய்ப்பினைக் கொண்டுள்ளது. இருபத்தியேழு வருடங்களுக்கு முன் நடந்த ஒரு பேரழிவு ஏதோ நேற்று நடந்தது போன்ற அண்மை உணர்வு கொள்ளும் வகையில் படத்தில் சித்தரிக்கப்பட்டிருப்பது இயக்குநரின் திறமைக்கு மேலும் ஓர் எடுத்துக்காட்டு.
fotos – burningmemories.org
Quelle – http://www.kalachuvadu.com/issue-103/page39.asp
பாரதியின் பாராட்டு
அம்ஷன் குமார்
சில அசடுகளுக்குப் பிறர் எத்தனை அசாத்தியமான காரியம் செய்தாலும் அதைப் பாராட்டத் தெரியாது. இன்னும் சில ஜென்மங்கள் பாராட்ட வேண்டிய தருணங்களில் அழுத்தமாக வாய்மூடி இருப்பார்கள். வேறு சில மேதாவிகள் உயிரோடிருப்பவர்களைப் பாராட்ட மாட்டோம் என்று கொள்கைப் பிடிப்புடன் இருப்பார்கள். தங்கள் திருவாய் மலர்ந்தால் எங்கே உயிரோடிருப்பவர்கள் புகழ் பெற்று விடுவார்களோ என்ற பொல்லாத பயம்! மகாகவி பாரதி பிறரைப் பாராட்டிப் புகழ்வதில் ஈடு இணையற்றவர். தனது சமகாலத்தவர்களை அவரைப் போல் ஜீவனுடன் பாராட்டியவர்கள் வேறு எவரும் இல்லை.
புதுச்சேரியில் அவர் இருந்தபொழுது கனக சுப்புரத்தினம் என்கிற இளைஞரின் கவிதை இயற்றும் திறனைப் பார்த்து அவரைக் கவிராயர் என்று அழைக்கத் தொடங்கினார். ஒரு மாபெரும் கவிஞர், அதுவரை சாதனைகள் படைத்திராத ஒருவரை அவ்வாறு பாராட்டுவது சாதாரண நிகழ்வல்ல.
அந்த இளைஞரும், அப்பாராட்டிற்கு தான் தக்கவன்தான் என்று நிரூபித்துக் காட்டினார். தனது குரு பக்தியைக் காட்டுமுகமாகத் தன் பெயரையே பாரதிதாசன் என்றும் மாற்றிக் கொண்டார்.
பாரதி மற்றொரு புதுச்சேரிவாசியாக மாறிய ஆன்மிகவாதியான அரவிந்தரைப் பாராட்டி எழுதினார். அரவிந்தர் பாரதியுடன் நெருங்கிப் பழகியிருந்தும் அவரைப் பற்றி ஒரு வரி கூட எழுதவில்லை. அதுபோலவே, உ.வே. சாமிநாத அய்யரை, “இறப்பின்றித் துலங்குவாயே,” என்று பாரதி பாராட்டினார். தமிழாராய்ச்சியையே தனது உயிர் மூச்சாகக் கொண்டிருந்த உ.வே.சா, பாரதி உயிரோடிருக்கும்வரை, அவரைப் பாராட்டி நாலு வார்த்தை சொல்லவில்லை.
பாரதியை இவையெல்லாம் பாதிக்கவில்லை. அவர் தன் கருத்தில் பட்டவர்களையெல்லாம் பாராட்டி, படிப்பவர் மனத்தில் உற்சாகத்தை ஏற்படுத்திக் கொண்டேயிருந்தார். போற்றுவதற்குரிய அம்சங்கள் அவர் கண்களில் சதாகாலமும் பட்டுக்கொண்டேயிருந்ததுதான் இதற்குக் காரணம்.
1906ல் கல்கத்தாவில் விவேகானந்தரின் சீடரான நிவேதிதாவை ஒரே ஒருமுறை சந்தித்த பின் “அருளுக்கு நிவேதனமாய் விளங்குபவர்,” என்று எழுதினார். அக்கவிதையைப் படித்த பலரும் சக்தி உபாசகரான பாரதி, நிவேதிதாவிடமிருந்துதான் பெண் விடுதலையையே கற்றுக் கொண்டதாகக் கற்பிதம் செய்யலாயினர். அத்தனை சக்தி வாய்ந்த பாராட்டு அது. பாரதி யாரையாவது பாராட்டினால் பின்னர் வேறு ஒருவரால் அவரைப்போல் அந்த நபரைப் பாராட்டுவது எளிதல்ல.
“பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந்தன்னை வாழ்விக்க வந்த மகாத்மா,” என்று காந்தி மீது பஞ்சகம் பாடினார் பாரதி. அப்பாராட்டிற்கு இணையாகப் பிறிதொன்றைக் கூற வேண்டுமெனில் அது விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், காந்திக்குச் செலுத்திய அஞ்சலியைத் தான் குறிப்பிட வேண்டும். விரிக்கின் பெருக்கும் என்று சொல்லத்தக்க வகையில் அபேதாநந்தா, ரவி வர்மா, திலகர், லஜபதிராய், வ.உ.சி., கோகலே, தாகூர், தாதாபாய் நெளரோஜி போன்று பலரை பாராட்டி உள்ளார்.
தன்னைக் கவர்ந்தவர்கள் எளிமையானவர்களானாலும் சரி அவர்களைப் பற்றிய சொல்லோவியத்தை பாரதி வரைந்து விடுவார். அவரது நண்பரான குள்ளச்சாமியை “மனுஷ விதிகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட,” அதிசய மனிதராக நம்மிடையே உலாவச் செய்து விடுகிறார். அதுபோலவே கோவிந்தசாமி, யாழ்ப்பாணத்துசாமி ஆகியோரும். சிலர் அவரது பாராட்டினால் மட்டுமே இன்று அமரத்துவம் படைத்தவர்களாக உள்ளனர். தனிப்பட்ட மனிதர்களில் அவரால் வசைபாடப் பெற்றவர் விஞ்ச் துரை மட்டுமே.
மனிதர்களை மட்டுமல்ல, நாடுகளையும் வாழ்த்திப் பாராட்டியவர் பாரதி. ரஷியப் புரட்சி நடந்த சில தினங்களிலேயே அதைக் கவிதையாக்கியவர் பாரதி. பெல்ஜியத்திற்கு வாழ்த்துத் தெரிவித்தார். மாஜினியின் சபதத்தை தனது உரையில் வடித்துப் பாராட்டினார்.
மேலும் இயற்கையைப் பற்றி பாரதி எழுதியவை அனைத்தும் பாராட்டுகள்தானே! காடு, மலை, அருவி, கடல், நிலம், தீ, வான் என்று எல்லாவற்றையும் இனிதென்றும், நன்றென்றும் புகழ்ந்தார்.
சிறுமைகளைக் கண்டு கொதித்தெழுந்த பாரதி, அதேமூச்சில் பாராட்டுகளைத் தெளித்து உலகை உற்சாகத்தில் ஆழ்த்தவும் தயங்கியதில்லை. இதனாலேயே பாரதியைப் படிப்பது இலக்கிய ரசனைக்குரியதாக மட்டுமன்றி வாழ்வின்பால் உற்சாகத்தை வளர்ப்பதாகவும் இருக்கிறது.
நன்றி: அம்ஷன் குமார்
http://www.dinamani.com/NewsItems.aspID=DNE20061210095622&Title=Editorial+Page&lTitle=R%FBXVeLm&Topic=0
நியுஜெர்சி ரவுண்டப் : நியூ ஜெர்சி திரைப்படவிழா
– பாஸ்டன் பாலாஜி
சிறு எண்ணவோட்டங்கள்:
1. சர் சி வி ராமன் (இயக்கம் : அம்ஷன் குமார்)
நான் சென்றபோது ஆரம்பித்திருந்தது. தன்னம்பிக்கை சிவி ராமனின் முகத்தில் மிளிர்கிறது. வெளிநாடுகளில் தங்கி பத்தோடு பதினொன்றாக ஆகாமல், தாயகம் திரும்பி பளிச்சிட்டதை சிறப்பாக வெளிக் கொணர்ந்திருந்தார். தனியாக ஆராய்ச்சி மையம் துவக்கியது, பலரையும் ஊக்கமூட்டும் விதமாக படமாக்கப்பட்டிருந்தது.
படத்தில் கவர்ந்த காட்சி: இரவு உணவு உண்ட பின் அனைவரும் இளைப்பாறும் தருணத்தில் இராமனின் நண்பர், அவரின் தலைப்பாகையை அவிழ்த்துவிட்டு ரிலாக்ஸ் செய்யச் சொல்கிறார். ‘அதில் என்னுடைய ஈகோ இருக்கிறது. அவிழ்த்தால் தலைக்கனம் வெளியே வந்துவிடும்’ என்று நகைச்சுவையும் சமயோசியதமாகவும் ராமன் பதிலளிக்கிறார்.
2. எம் எஸ் சுவாமிநாதன் (இயக்கம் : அம்ஷன் குமார்)
‘இன்னும் இருபதாண்டுகளில் பசி, பட்டினியால் இந்தியாவே காலி’ என்று உலகம் உச்சரித்ததை மாற்றிக் காட்டியவர். பசுமைப் புரட்சியில் முக்கிய தூணாக இருந்தவரின் வாழ்க்கையை அறிய முடிகிறது.
அசோகமித்திரன் (இயக்கம் : அம்ஷன் குமார்)
‘Finding Neverland’ திரைப்படத்தில் பீட்டர் பான் பிறந்த கதையை விவரிப்பது போல் ஹைதராபாத் நகரமும் பதினெட்டாவது அட்சரக் கோடும் உருவான கதை, குறும்படத்தை ஆக்கிரமித்திருந்தது. எழுத்தாளர்களுக்கே உரித்தான, துண்டுக் காகிதத்திலும் நெடுங்கதைகளை அடித்தல் திருத்தல்களுடன் எழுதும் பழக்கத்தினை வெளிக்கொணர்ந்தார். சா. கந்தசாமி, வாஸந்தி என்று பொருத்தமானவர்களைத் தேடிப் பிடித்து பேட்டிகளை இணைத்திருந்தார்.
‘தான் கண்ட காட்சிகளையும் மனிதர்களையும் எழுதி முடிக்க இன்னும் ஓர் ஆயிரம் ஆண்டுகளாவது பிடிக்கும்’ என்று அ.மி. சொன்னதை வைத்தது, வெகு சிறப்பான முத்தாய்ப்பு.
எத்தனை எத்தனை ஓவியர்கள்!
தமிழ்நாட்டில் நவீன ஓவியக் கலையின் தோற்றமும் வளர்ச்சியும் தாக்கமும் குறித்த வரலாறு இதுவரை முறையாக ஆவணப்படுத்தப்படவில்லை என்ற குறையை இனி யாரும் கூறமுடியாது.
மைசூரில் உள்ள மத்திய இந்திய மொழிகள் அமைப்பு, அந்தப் பொறுப்பை இயக்குனர் அம்ஷன்குமாரிடம் மிகச் சரியாக ஒப்படைத்திருக்கிறது என்பதை இரண்டு பாகங்களாக சுமார் ஒரு மணிநேரக் குறும்படமாக அவர் தயாரித்துக் கொடுத்திருக்கும் ஆவணப்படத்தைப் பார்த்தவுடன் தோன்றிற்று.
அம்ஷன் குமார் ஏற்கனவே சுமார் 20 டாக்குமென்டரிகள் தயாரித்தவர். பாரதியார், உ.வே.சாமிநாதய்யர், சி.வி.ராமன், அசோகமித்திரன், தமிழ் நாடகம் என்று ஒவ்வொரு படைப்பும் அவருடைய தெளிவான பார்வையை எடுத்துக்காட்டின.
சென்னை எழும்பூர் கவின் கலைக் கல்லூரியில், சென்ற வாரம் இந்த டாக்குமென்டரியை, கல்லூரியைச் சேர்ந்த மாணவர், மாணவியருடன் பார்க்க நேர்ந்தது.
முதலில் ஏன் இந்த டாக்குமென்டரி, அம்ஷன்குமார்?
“”நவீன ஓவியம் என்றால் புரியாது என்று ஒரு கருத்து நிலவி வருகிறது. அதை நீக்கவும், நவீன ஓவியத் துறையில் தமிழ்நாட்டில் எத்தனை ஓவியர்கள் சாதனை படைத்திருக்கிறார்கள் என்பதை விளக்கவும் தான் இந்த முதல் முயற்சி. இதில் ஓவியர்களே தங்கள் ஓவியங்கள் குறித்துப் பேசியிருக்கிறார்கள். பார்வையாளனுக்கும் படைப்பாளிக்கும் இடையே பாலமாக இருக்கவே இதைத் தயாரித்தேன்!” என்கிறார் அம்ஷன்குமார்.
டாக்குமென்டரியின் முதல் பகுதி, நவீன ஓவியக் கலை தமிழ்நாட்டில் தொடங்கிய காலத்திலிருந்து அறுபதுகள் வரையிலான காலத்தை விவரிக்கிறது. 1850-ல் விக்டோரியா கலைச் சுவையை இந்தப் பகுதி மாணவரிடையே உண்டாக்கத் தோற்றுவிக்கப்பட்டதுதான் எழும்பூர் கவின் கலைக் கல்லூரி. ஆனால் நவீன ஓவியக் கலையில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஏற்பட்ட 1929-ல் டி.பி.ராய் செüத்ரி கல்லூரி முதல்வராகப் பொறுப்பேற்றதுதான்.
ஏராளமான மாணவர்களை இந்த நவீன ஓவியத் துறையில் தூண்டிவிட்டு வளரச் செய்தவர் தேவி பிரசாத் ராய் செüத்ரி. (மெரினா கடற்கரையிலுள்ள மகாத்மா காந்தி சிலையையும், உழைப்பாளர் சிலையையும் உருவாக்கியவர் ராய் செüத்ரி) இவருக்குப் பின் வந்த கே.சி.எல். பணிக்கர், நவீன ஓவியக் கலையை ஓர் இயக்கமாகவே தமிழ்நாட்டில் ஈஞ்சம்பாக்கத்தில் உருவாக்கியதில் இவருக்கு முக்கியப் பங்கு உண்டு.
கும்பகோணத்தில் இருந்த அரசு கவின் கலைக் கல்லூரி, ஆலயங்களின் சூழலில், இயற்கையாகவே பாரம்பரிய வழியில் படைப்புகள் உருவாக்க, அந்தப் பகுதி மாணவருக்கு வசதியாக அமைந்தது. பிரபல ஓவியர்கள் எஸ்.தனபால், ஏ.பி.சந்தானராஜ், ஆர்.கிருஷ்ணா ராவ், ஆர்.பி.பாஸ்கரன், வித்யா சங்கர் ஸ்தபதி, அல்ஃபோன்úஸô, அருள்தாஸ் ஆகியோர் சென்னையிலும் கும்பகோணத்திலும் பணியாற்றியுள்ளனர்.
சி.ஜே.அந்தோணிதாஸ், எல்.முனுசாமி, கிருஷ்ணராவ், பி.வி.ஜானகிராமன், ராமானுஜன் மற்றும் சிலரின் பாணிகள் அவர்களுடைய பின்னணியுடன் பேசப்படுகின்றன.. இந்த முதல் பகுதியில்.
இரண்டாம் பகுதியில், 70-களில் தொடங்கி இன்றுவரையிலான இயக்கத்தை நிறையத் தகவல்களோடு சொல்கிறார் அம்ஷன்குமார்.
ஆர்.பி.பாஸ்கரன், அல்ஃபோன்úஸô, அருள்தாஸ், அச்சுதன் கூடலூர், கே.முரளிதரன் மற்றும் வித்யா சங்கர் ஸ்தபதி ஆகியோரின் பேட்டிகள் இதில் தரப்படுகின்றன. வகுப்பில் திடீரென்று நுழைந்த ஒரு பூனையை வைத்துக் கொண்டு, பூனைகளாகவே வரைந்து தள்ளினார் ஆர்.பி.பாஸ்கரன்!
கறுப்பு வெள்ளைக் கோட்டோவியத்தில் மகாத்மா காந்தியை வரைந்த ஆதிமூலம் பின்னர் தைல ஓவியங்களுக்கு மாறியது சுவையான திருப்பம். உருவங்களை மாற்றம் செய்து வரைவது, ஓவியரும் இயக்குனருமான பி.கிருஷ்ணமூர்த்தியின் பாணி. இது மேற்கத்திய நாடுகளில் பல சோதனைகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு வந்தது என்றார்.
அபராஜிதன், ஷைலேஷ், சீனிவாசன் போன்றோரின் சில ஓவியங்களும் இடம்பெற்றன. ஓவியத்துக்கும், ஓவிய மாணவருக்கும் நல்ல எதிர்காலம் இருக்கிறது என்ற நம்பிக்கையான செய்தியை ஆர்.பி.பாஸ்கரன் தெரிவிக்கும் முத்தாய்ப்போடு குறும்படம் முடிகிறது.
சில ஓவியர்களை விட்டுவிட்டீர்களே?
“”நான் வேண்டுமென்றே விடவில்லை. கால அவகாசம் குறைவு என்பதால் இந்தப் பதிவில் சிலரின் பெயர் விடுபட்டிருக்கலாம். உதாரணங்களை மட்டுமே என்னால் கொடுக்க முடிந்தது. இதுவே முழுமையானது என நான் கூறவில்லை. பட்டியல் போல ஓவியர்களின் பெயரைச் சொல்லுவதை விட, இதுபோல மேலும் பல குறும்படங்கள், ஆவணப்படங்கள் தயாரிக்கப்பட்டு அவர்களின் பணி பேசப்படவேண்டும் என்பதே என் விருப்பம். இதில் இடம்பெற்ற ஓவியர்கள் முக்கியமானவர்கள். ஆனால் விடுபட்டவர்கள் அவர்களை விடக் குறைந்தவர்கள் அல்லர்.”
டி.பி.ராய் செüத்ரி பற்றி அம்ஷன் குமார் கூறிய ஓர் உண்மைச் சம்பவம்:
ஒருமுறை ஓர் ஓவியம் தீட்டிக் கொண்டே இடது கையால் காபி கோப்பையைப் பிடித்துக் கொண்டு பருகிக் கொண்டிருந்தாராம் ராய் செüத்ரி. காபி ஓவியத்தில் சிந்திவிட்டது. அவர் அதைத் தூர எறிந்துவிடுவார் என மாணவர்கள் நினைத்தனர். ஆனால் ராய் செüத்ரியோ இன்னும் சில கோப்பை காபியை வரவழைத்து ஓவியத்தின் மீது ஊற்றி, ஒரே மாதிரி சமமான வண்ணம் அதில் தோன்றும்படி செய்தாராம்!
அம்ஷன்குமார், கி.ராஜநாராயணனின் “கிடை’ என்ற கதையை ஆதாரமாகக் கொண்டு “ஒருத்தி’ என்ற திரைப்படமும் தயாரித்திருக்கிறார். இந்தியன் பனோரமாவில் இதற்குப் பரிசும் கிடைத்திருக்கிறது. திரைப்படங்கள் குறித்து அம்ஷன்குமார் எழுதிய “சினிமா ரசனை’ நூல் வித்தியாசமான படைப்பு. இப்போது புதிய திரைப்படம் ஒன்று தயாரிப்பதில் ஈடுபட்டிருக்கிறார் அம்ஷன்குமார்.
- சாருகேசி
விழாவின் பிரதான விருந்தினராகக் கலந்துகொண்டவர் தமிழ் நாட்டில் ஆவணப் படங்களை உருவாக்கும் முயற்சிகளில் தன் வாழ்வை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட திரு. அம்ஷன் குமார் அவர்கள். அவர் தனது உரையில் ‘தமிழ் நாட்டில் தரமான குறும்படங்களையோ ஆவணப் படங்களையோ உருவாக்குவதில் யாரும் பெரிதாக அக்கறை காட்டுவதில்லை. ஆனால் ஈழத் தமிழர்கள் தமது உழைப்பின் மூலம் குறும்படங்களின் தரத்தை மிகவும் பாராட்டக் கூடிய உயரத்திற்கு கொண்டு சென்று விட்டதை நான் பார்க்கிறேன். இதற்கான தளத்தை அமைத்த விம்பம் அமைப்பையும் நான் பாராட்ட விரும்புகிறேன்’ என்றார். அவரது இயக்கத்தில் வெளியான ஒரேயொரு முழுநீளத் திரைப்படமான ‘ஒருத்தி’ யை பார்வையாளருக்கு இலவசமாக காண்பிக்க அனுமதி வழங்கியிருந்தார்.
ரேகை
ஆவணப்பட விமர்சனம்: அம்ஷன் குமார்
தீண்டத்தகாதவர்கள் என்ற பெயரில் ஒரு பெரும் பிரிவினர் தொன்று தொட்டு சாப விமோசனம் இன்றி கொடுமைப்படுத்தப்பட்டு வருவது இந்தியாவின் பெருத்த அவமானம் ஆகும். தீண்டத்தாகாதவர்கள் என்று சொல்லப்பட்ட தலித்துகள் செய்யும் ஒரே பாவம் ஆதிக்க ஜாதிகளால் வரையறுக்கப்பட்ட ஜாதிகளில் சந்ததிகளாக இருப்பது மட்டுமே. இது போதாதென்று பிரிட்டிஷ் அரசு தன் அதிகாரத்தின் வாயிலாக குற்றப்பரம்பரை என்றும் புதிய ஜாதியை உருவாக்கியது.
தீண்டத்தகாதவர்கள் என்கிற முத்திரையைக் குத்தி அவர்களை அடிமைப்படுத்தி அவர்களது உழைப்பினை சுலபமாக சுரண்டுவதற்கு சமூகம் ஒரு கயமையான உபாயத்தை இதன் மூலம் வகுத்ததைப் போலவே, பிரிட்டிஷ் அரசு தன்னை இயல்பான வீரத்துடன் எதிர்க்கும் இந்தியப் பழங்குடியினர் பலரை பிறப்பிலேயே குற்றம் புரிபவர்கள் என்ற அடையாளப்படுத்தி அவர்களை விசாரணை ஏதுமின்றி கண்காணிக்கவும் தண்டிக்கவும் தன்னைக் கொடுமையாக பலப்படுத்திக் கொண்டது.
தினகரன் ஜெய் இயக்கி எழுதியுள்ள “ரேகை” டாகுமெண்டரி மிகுதியாக தமிழ்நாட்டில் பிறப்பினால் குற்றப்பழி சுமந்த ஒரு பரம்பரையினரைப் பற்றியும் அதன் மீது பிரிட்டிஷ் அரசு நடத்திய அடக்குமுறைகளையும் அடுக்கடுக்காக விவரிக்கிறது.
பிரெஞ்சு புரட்சிப் பின்னணியிலிருந்து படத்தை துவக்குகிறார் தினகரன் ஜெய். ஆளும் வர்க்கத்தினருக்கெதிராக போராடியவர்களில் நாடோடி வம்சத்தை சேர்ந்தவர்களும் இருந்தனர். எனவே, அவர்கள் மீது ஒடுக்குமுறைகளைக் கட்டவிழ்த்தது பிரெஞ்சு அரசு. பிரெஞ்சு அரசின் இந்த உபாயத்தைக் கடைபிடித்ததின் விளைவாக பிரிட்டிஷ் அரசும் தனது காலனிய ஆதிக்கத்தின் கீழ் இருந்த இந்தியாவிலும் இந்த நடைமுறையைப் பின்பற்றியது. இங்குள்ள பழங்குடியினர் இருப்பிடமற்ற நாடோடிகள், பிச்சைக்காரர்கள், ஜோதிடக்காரர்கள், விபச்சாரிகள் ஆகியோரை அபாயகரமானவர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டனர். இதனால் சமூக வாழ்விலிருந்து அவர்கள் விலக்கப்பட்டனர். பழங்குடியினர் போரிடுவதன் மூலம் தங்கள் சுதேசியத்தை வெளிப்படுத்தினர் என்பதால் அதை ஒரு முகாந்தரமாகக் கொண்டு அவர்கள் மீது குற்றப் பரம்பரை சட்டம் அவிழ்த்து விடப்பட்டது. 1871லிருந்தே இது அமலில் இருந்தது. 1897, 1911, 1924, 1944 என பலகால கட்டங்களில் இச்சட்டத்தின் திருத்தங்கள் தீவிரம் கொண்டன.
இந்தியாவில் 200க்கும் மேற்பட்ட ஜாதியினர் குற்றப்பரம்பரை பிரிவின் கீழ் இருந்தனர். தமிழகத்தில் மட்டும் 90க்கும் மேற்பட்ட ஜாதிகள் இதன் கீழ் பட்டியலிடப்பட்டன. பன்றி இறைச்சி சாப்பிடுபவர்களும் குற்றப் பரம்பரையினராயினர். அரவாணிகளும் கண்காணிக்கப்பட்டனர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகியோர் 1911ல் இச்சட்டத்தின் கீழ் கண்காணிக்கப்பட்டனர். வரி கொடாத இயக்கத்தில் சேர்ந்த பிறமலைக் கள்ளர்கள் அதிக பாதிப்புக்குள்ளாயினர்.
இத்தனைக்கும் பிறகும் போலீசாரால் இவர்களை குற்றம் செய்தவர்கள் என்று வழக்குகளின் அடிப்படையில் நிரூபிக்க இயலவில்லை. குற்றப் பரம்பரையினரின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. அவர்களுக்கு சுதந்திரமாக உலாவுவதில் கட்டுப்பாடுகள் இயற்றப்பட்டன. ரேகைப் பதிவு சட்டத்தை எதிர்த்து பெருங்காமநல்லூர் கிராமத்தில் நடந்த போராட்டத்தில் பலர் உயிரிழந்தனர். இச்சட்டத்தை பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கடுமையாக எதிர்த்தார். காங்கிரஸ் கட்சியும் இதற்கு ஆதரவு அளித்தது. இறுதியாக இச்சட்டம் 1947 ஜுன் மாதம் 5ம் தேதி ரத்து செய்யப்பட்டது.
தினகரன் ஜெய் மருது சகோதரர்களின் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கெதிரான பங்களிப்பினைப் பற்றி தென்னிந்தியப் புரட்சி 1801 என்ற (மருதிருவர்) டாகுமெண்டரி எடுத்திருக்கிறார். தினகரன் ஜெய்க்கு ஆவணங்களை வைத்து பிரச்சனைகளை சித்தரிப்பதில் திறமையும் ஆர்வமும் இருக்கிறது. அந்த டாகுமெண்டரியைப் போலவே இதிலும் வரைபடங்கள், ஆவணங்கள், புகைப்படங்கள் ஆகியவை தக்க இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. நிகழ்த்திக் காட்டலும் இதில் உண்டு.
எழுத்தாளர் வேல. இராமமூர்த்தி, நாட்டுப்புறவினர் இ.முத்தையா ஆகியோரின் பேட்டிகள் சுருக்கமாகத் தரப்பட்டுள்ளன. பல சிறப்புகள் கொண்ட இப்படத்தில் நான் காண விரும்பிய முக்கிய அம்சம் குற்றப்பரம்பரை சட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் நேர்காணல்கள். 1947வரை அச்சட்டம் இருந்ததால் அதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் நம்மிடையே முதியவர்களாக இருக்கத்தான் செய்வார்கள். அவர்களது சித்திரவதை அனுபவங்கள் படத்தை மேலும் ஈர்ப்புடையதாக ஆக்கியிருக்கும். சட்டங்கள் வாயிலாக அடக்குமுறைகள் செயல்பட்டதால் ஒரு சட்டவியல் நிபுணரின் நேர்காணலும் படத்திற்கு மேலும் செறிவினை ஊட்டியிருக்கும்.
ஏறத்தாழ எழுபத்தைந்து வருடங்கள் பல்வேறு சட்டங்கள் மூலம் அராஜகம் புரிந்து அவிந்து போன குற்றப்பரம்பரை என்னும் கொடிய நடைமுறையைப் பற்றி ஏதும் அறிந்திராதவர்கள் கூட “ரேகை” என்ற இந்த ஆவணப்படத்தைப் பார்த்து தெளிவான தகவல்களை அடைய முடியும்.
ராஜராஜன் என்னும் முடிந்த பெருங்கனவும் முடியாத ஆதிக்கப் புன்மரபும்
ராஜ ராஜ சோழன் – தமிழ் புத்தகத் தொகுப்புகள் | Snap Judgment
பிரபஞ்சன்
முழுமையான தமிழக வரலாறு இன்னும் எழுதப்படவில்லை என்பது, தமிழ் அறிவுலகத்துக்கு ஒரு வசையாக இன்னும் நீடித்துக் கொண்டிருப்பது சரிதானா என்பதைத் தீவிரமாக யோசிக்க வேண்டிய தருணம் இது. வெற்றிலை பாக்குக் கடைகள் மாதிரிப் பெருகும் பல்கலைக்கழகங்கள், அவைகளில் வரலாற்றுத் துறைகள், அவைகளில் பல்லாயிரம் சம்பளம் பெறும் பேராசிரியப் பெரு மக்கள், ஆய்வு அறிஞர்கள், அவர்களை மேல் நிர்வாகம் செய்துவரும் உயர்கல்வித்துறை எல்லாம் இவை பற்றிக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
தமிழ்மொழி மற்றும் தமிழ்நாடு பற்றி நமக்கு அக்கறை உண்டு. தமிழக வரலாறு எழுதப்படாமைக்கு என்ன காரணங்கள் இருக்கமுடியும்? பல்லாயிரக்கணக்கான கல்வெட்டுகள், கோயில் சார்ந்த கல்வெட்டுகள், செப்பேடுகள், அகழ் வாய்வு முடிவுகள், இன்னும் பதிவு செய்யப்படாமையும், பதிப்பிக்கப் பெற்று வெளியிடப்படாமையும், முக்கியமான காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. மறுபக்கம், இருக்கக்கூடிய ஆதாரங்களும் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டுள்ளன. ஒரு கோவில் பழுது பார்க்கப்பட்டு, விழா நடத்தப்படும் போதெல்லாம், குறைந்தது ஐம்பது கல்வெட்டுக்களாவது அழிந்து போகும் அவலம் நேரிடுவது தமிழர் போன்ற பெருமைமிகு இனத்துக்கு எந்த வகையிலும் சிறுமையையே சேர்க்கும். அதிகாரத்தில் உள்ளவர்கள் இந்த அடிப்படைகளை ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் என்று நமக்குப் புரியவில்லை.
இன்று தமிழகம் என்று அறியப்படும் நிலப்பரப்பின்கீழ், மறைந்து போன இன்னும் ஒரு தமிழ்நாடு புதைந்து கிடக்கிறது. தொல்லியல் துறையினர் இதை நன்கு அறிவார்கள். என்றாலும், அத்துறைக்குப் போதுமான சௌகர்யங்கள் செய்து கொடுத்து, வரலாற்றைத் தோண்டி எடுத்து ஆவணமாக்கிக் கொள்ளும் ஆர்வமோ, ஈடுபாடோ அரசிடம் இல்லை. உதாரணத்துக்குப் பூம்புகார். காவியங்கள் போற்றிப்புகழும் பழைய பூம்புகார், மதுரை, காஞ்சி, நகரங்கள் மண்ணுக்குள் பெறற்கரிய ஆவணங்களை வைத்துக்கொண்டு காத்துக் கிடக்கின்றன. சங்ககாலத்து நல்லியக்கோடனின் கிடங்கில் கோட்டை (திண்டிவனம் அருகில்) இன்று சுத்தமாக அழிந்தே போயிற்று. ஒரு கோட்டையின் அழிவு, மிகப் பெரிய வரலாற்றுக் கலாச்சார அழிவு என்பதை யாரும் உணரத் தயாரில்லை.
தம் சொந்த ஆர்வம் தூண்ட, தம் பேருழைப்பை நல்கி, பெரும் பொருட் செலவில் சில தனிப்பட்ட ஆய்வாளர்கள் இது குறித்து ஆய்வு செய்து சில உருப்படியான மரியாதைக்குரிய ஆய்வுகளை நிகழ்த்தி வருகிறார்கள். அவர்களில் ஒருவர் முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன். இவர் எழுதிய தஞ்சாவூர் எனும் பாரிய ஆய்வு, ஊராய்வுகளில் ஒரு முன் மாதிரி ஆய்வு என்று உறுதியாகச் சொல்லலாம். இது போன்ற ஊர் ஆய்வுகள் பெருகப் பெருக, தமிழ் நாட்டாய்வுக்கு வளம் சேரும் என்பதோடு வரலாறு எழுது வதற்கும் அவை அடிப்படையாக இருக்கும்.
பிற்காலச் சோழர்களில் மிகப் புகழ் பெற்றவனும், தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு சோழப் பேரரசைக் கட்டியெழுப்பியவனும் ஆகிய இராஜராஜசோழன் தோற்றுவித்த ராஜராஜேச்சுரம் எனும் பெரிய கோயிலுக்கு இவ்வாண்டு ஆயிரமாண்டு நிறைவடைகிறது. ஆயிரம் ஆண்டுகள் ஒரு பெரும் கலாச்சார நிறுவனமாக, தமிழகப் பெருமைகளுள் ஒன்றாக விளங்கும் பெரிய கோவிலையும், அது நிலை பெற்ற தஞ்சையையும், குடவாயில் பாலசுப்ரமணியன் நூல்வழி அறிந்துகொள்வோம்.
தஞ்சாவூரின் இருப்பையும் அதன் சிறப்பையும் இலக்கியங்கள் வழியும், கல்வெட்டு, செப்பேடுகள் வழியும் ஆராய்கிறார் குடவாயில் பாலசுப்ரமணியன். தஞ்சை எனும் பெயரை முதல்முதலாக இலக்கியத்தில் ஆண்டவர் அப்பர் எனும் திருநாவுக்கரசரே. சிறந்த சிவாலயங்கள் இருந்த ஊர்களின் பட்டியலில் தஞ்சையைச் சேர்க்கிறார். அந்தச் சிவாலயத்து இறைவரின் பெயர் தனிக்குளத்தார். தனிக்குளத்தின் அருகில் கட்டப்பட்ட கோயிலாகலாம் இது. கி.பி. எட்டாம் நூற்றாண்டினராக அறியப்படும் திருநாவுக்கரசர் தஞ்சையைக் குறிக்கிறார் என்றால், சுமார் ஆயிரத்தைநூறு ஆண்டுகளாகவாவது தஞ்சை எனும் ஊர் நிலைபெற்றிருக்க வேண்டும். அது சோழர்களுக்கு ஆட்படும் முன்னர், பல்லவர்களிடம் இருந்திருக்கிறது. மகேந்திர வர்ம பல்லவனின் தந்தை சிம்ம விஷ்ணுவே தஞ்சையைக் கைப்பற்றி இருக்கிறார். அந்த வெற்றி கி.பி. 6 அல்லது 7ம் நூற்றாண்டாகலாம்.
திருநாவுக்கரசருக்குப் பின்னர், தஞ்சையைப் பாட்டில் வைத்தவர், பூதத்தாழ்வார். அவரைத் தொடர்ந்து திருமங்கைஆழ்வார். நாயன்மாரும், ஆழ்வார்களும் கருதி வந்து தொழுத சைவ-வைணவக் கோயில்கள் தஞ்சையில் இருந்திருக்கின்றன. அக்காலங்களில் தஞ்சை, கோவில்களால் சிறப்புற்றிருந்திருக்கிறது. பல்லவர்களுக்கு உட்பட்ட சிற்றரசர்களாக முத்தரையர்களின் தலைநகரமாகச் சில காலம் தஞ்சை இருந்துள்ளது. முத்தரையன் ஒருவனிடம் இருந்தே விஜயாலய சோழன், தஞ்சாவூரைக் கைப்பற்றி, பிற்காலச் சோழர் ஆட்சியைக் கி.பி. 850ல் தொடங்கிவைத்திருக்கிறார். அதன் பிறகு சுமார், முன்னூற்று அறுபத்து எட்டு ஆண்டுகள் சோழர் வசம் இருந்த தஞ்சையை மாறவர்மன் சுந்தரபாண்டியன் 1218ம் ஆண்டு கைப்பற்றி அந்நகரை எரித்துத் தரை மட்டமாக்கினான்.
நாட்டைக் கைப்பற்றுதல், காரணம் இருக்கிறதோ இல்லையோ, ஒரு நாட்டின் மேல் வேற்று நாட்டு அரசன் படையெடுப்பதும், வெல்வதும், அந்நகரை இடித்துப் பாழ்பண்ணுவதும், நிலத்தைப் பாழ்பண்ணும் நோக்கத்துடன் வரகு விதைப்பதும், கழுதை ஏர் பூட்டி உழுவதும், அங்குள்ள பெண்களைச் சிறைப்பிடித்து அடிமைகளாகக் கொணர்ந்தும், தாசித் தொழிலில் ஈடுபடச் செய்ததும் அந்தக் காலத்தில் வீரம் எனப்பட்டது. இதன் பொருள் எல்லாக் காலங்களிலும் மக்கள் என்பவர்கள், ஒரு உயிர்ப் பொருள் என்ற எண்ணம், அவர்களுக்கும் வாழ்க்கை என்ற ஒன்று உள்ளது என்கிற புரிதல் வரலாற்றில் பெரும்பாலான மன்னர்களிடம் இல்லை என்பதே வரலாறு நமக்குத் தரும் பாடம்.
விஜயாலயர், ஆதித்த சோழன், பராந்தகன், அரிஞ்சயன், கண்ட ராதித்தன், சுந்தர சோழன், ஆதித்த கரிகாலன், மதுராந்தகன், இராசராசன் என்று பெரு மன்னர்கள் காலமாகிய நூற்று எழுபத்தாறு ஆண்டுகள் தஞ்சை, தமிழர் வாழ்க்கையில் மிகச் சிறப்புற்று வாழ்ந்த காலமாகும்.
நான் 1965ம் ஆண்டு கரந்தைத் தமிழ்ச் சங்கத் தமிழ்க் கல்லூரியில் மாணவனாகப் போய்ச் சேர்ந்தேன். தஞ்சை எனக்குப் புதிய ஊர், புதிய பிரதேசம் இல்லை. என் தாய் மாமன்கள் தஞ்சை காரியமங்கலத்தை அடுத்த இரும்புதலை எனும் சிற்றூரில் வாழ்ந்தார்கள். வாழ்கிறார்கள். எங்கள் பூர்வீகம், கும்பகோணத்தை அடுத்த அரிசிலாற்றுக்கரைக் கிராமங்களில் ஒன்றான தூவாக்குடி எனும் கிராமமே ஆகும். இங்கிருந்தே, பதினெட்டாம் நூற்றாண்டு ஆற்காட்டு நவாப்புகள், மராட்டியர் கலவரத்தில் குடிபெயர்ந்து ‘அமைதியைத்தேடி’ நூற்றுக்கணக்கான குடும்பங்கள் செய்த பயணத்தில் எங்கள் குடும்பம் புதுச்சேரியை வந் தடைந்தது. எங்கள் குலத்தொழிலாகிய கள் தொழிலுக்கும் புதுச்சேரித் தென்னைமரச் சூழல், பேருதவியாக இருந்துள்ளது.
தஞ்சாவூர் பற்றிய ஜானகிராமனின் பதிவுகள், அவர் காலத்திய, அவர் பார்த்த தஞ்சாவூர் இல்லை. அவர் தந்தை மற்றும் மூதாதையர் மூலம் அவர் செவிக்கு வந்து சேர்ந்த தஞ்சையையே அவர் எழுதினார். அவர் காலத்திலேயே தஞ்சை வரளத் தொடங்கி இருந்தது. என்றாலும் காவிரியில் தண்ணீர் இருந்தது. என் 1965க்குப் பிறகான தஞ்சையிலும் வெண்ணாறும், வடவாறும், புது ஆறும் நுரை பொங்க, இருகரையும் தொட்டு வெள்ளம் ஓடியதை நானே கண்டிருக்கிறேன். ஆளோடிய ஊருக்கெல்லாம் உள்ள அழகு, தஞ்சைக்கும் உண்டு. காவேரியைப் பார்க்க என்றே, அதன் கரையில் அமர்ந்து இலக்கியம் பேச என்றே, பிரகா ஷும், எம்.வி.வெங்கட்ராமனும், கரிச்சான் குஞ்சுவும், நானும் திருவையாற்றுக்குப் பயணம் மேற்கொள்வோம். தியாகையர் சந்நிதிக்கு மேற்புறம், காவேரியில் கால் நனைத்துக் கொண்டு வெள்ளை மணற்பரப்பில் அமர்ந்து பேச மிகச் சௌக்கியமாக இருக்கும்.
ஆறோடும் ஊரின் அதிகாலைகள் மிக அழகியவை. நிகரற்றதும், தமிழகத்தில் வேறு எங்கும் கிடைக்காததுமான டிகிரி காபியோடு விடியும் தஞ்சை வைகறை ஈடற்றது என்று நான் நிச்சயமாகச் சொல்வேன். அனேகமாக எங்கள் காலைகள். வெண்ணாற்றங்கரையிலேயே இருக்கும். அங்குள்ள அக்ரகாரத்தில்தான் எங்கள் சம்ஸ்கிருத குருவின் வீடு இருந்தது. அழகிய கோலம் போட்ட தெருவாசலைக் கொண்ட வீடு எங்கள் குருவினுடையது. ஒரு நாளின் ஒப்பற்ற விடியலை தன்னைப் போலவே பிரசாசிக்கச் செய்து கொண்டிருந்தாள் எங்கள் குருவின் மகள். ஜானகிராமன் கட்டுண்டு கிடந்த ‘நிகுநிகு கூந்தல்’ அவளுக்கும் இருந்தது. அவள் கூந்தலில் ஜானகிராமனின் வாசம் என்ற தைலம் பூசி இருந்தது. இலக்கியம், காலம் காலமாகச் சிலவற்றை ‘விளங்கச்’ செய்வதையே தன் பணியாகக் கொண்டிருந்தது. நிலவை அழகிய பொருள் என்று கொண்டாடியவர்கள் கவிஞர்களாகவே இருந்தார்கள்.
தஞ்சாவூரில்தான் யமுனா வாழ்கிறாள். நான்தான் பாபுவாக இருந்தேன். பிரகாஷும் கொஞ்சகாலம் அந்தப் பாத்திரம் வகித்தார். எனக்கு அதனால் பொறாமை இல்லை. யமுனாவின் வீட்டைக் கண்டடைந்தது எங்கள் சாதனை என்று நான் உள்ளபடியே நம்புகிறேன். தஞ்சை ரயில்வே நிலையத்து அருகில் உள்ள துக்காம்பாளையத் தெருதான் யமுனா ஆட்சி செய்த பிரதேசம். தெருவின் நடுவாக, தெருவில் இருந்து நான்கு படிகளை மிதித்தேறிமேல் எழுந்து நிற்கும் வீடே யமுனாவின் அரண்மனை. மராட்டியர்களின் வீட்டின் அடையாளங்களில் ஒன்று அவைகளின் தளம் குள்ளமாக கையெட்டும் தூரத்தில் இருக்கும். பக்கத்து வீடுகளில் பேசி அங்கு பல ஆண்டுகளுக்கு முன் மராட்டியக் குடும்பம் இருந்ததை உறுதிப்படுத்திக் கொண்டோம். எனக்குத் தஞ்சாவூர் என்பது இரண்டு தெருக்கள். ஒன்று துக்காம்பாளையத் தெரு. மற்றது குதிரை கட்டித் தெரு. அங்கு சுமதி இருந்தாள். மதுவிலக்கை ஒழித்துத் தி.மு.க. ஆட்சி, மதுக் கடையைத் திறந்த அந்த முதல் இரவு 12 மணிப்பொழுதில், கூடிய பெரும் கூட்டத்தின் ஊடறுத்து முதல் விஸ்கி பாட்டில் வாங்கிய பெருமை எனக்குண்டு.
இராசராசன் மிக இளவயதிலேயே தந்தை தாயை இழந்தவன். தந்தையோடு தாய் உடன்கட்டை ஏறியதை அவன் பார்த்திருக்கக்கூடும். பாட்டியாலும், அக்கா குந்தவைப் பிராட்டியாலும் வளர்க்கப்பட்டவன். கி.பி.985ல் அரசுப் பொறுப்பு ஏற்றான். இவனது பெரிய சாதனை, பெரிய கோவில். மன்னர்கள் அரண்மனைகள் மறைந்தன. கோவில்கள், சத்திரம் சாவடிகள் போன்றவை நிலைபெற்றன. இவன் எடுத்த கோவில் 1009-ம் ஆண்டு ஜூலை மாதம் 22-ம் தேதி குடமுழுக்கு நடந்தேறி இருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஒப்பற்ற கலைச்சிறப்புகள் கொண்ட கலைச்சின்னம் ஒன்று நம்மோடு இருப்பது நம் பெருமைகளுள் ஒன்று. சிவன் கோயில்கள், இறைவனுக்கு முன்னால் தேவாரம் ஓதும் வழக்கத்தைக் கொண்டிருந்ததை, ராசராசன் முறைமைப்படுத்தி ஒழுங்குறச் செய்திருக்கிறான். 1010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22ம் தேதி செப்புக்குடம் விமானத்தின் மேல் வைக்கப்பட்டது என்று ஆராய்ச்சியாளர் என்.சேதுராமன் எழுதுகிறார். இவர் காலத்தில்தான் திரு முறைகளில் முதல் ஏழும் தொகுக்கப்பட்டிருக்கின்றன. தேவாரம் ஓத எனவே 48 ஓதுவார்களை நியமித்து இருக்கின்றான்.
தஞ்சைப் பெரிய கோவிலின் சிறப்பை குடவாயில் பாலசுப்ரமணியன் மிக விரிவாகப் பதிவு செய்திருக்கிறார்.
மன்னனின் பெயராலேயே ராஜ ராஜேச்சுரம் என்று வழங்கிய கோயில், பிரஹத் ஈஸ்வரம் என்று வடமொழிப் பெயராலும், பெரிய கோவில் என்று மக்களாலும் வழங்கப் பெறுகிறது. சென்ற நூற்றாண்டுவரை இதன் வரலாறு அறியப்படாமல்தான் இருந்திருக்கிறது. ஜி.யூ. போப் இக்கோயிலைக் காடு வெட்டிச் சோழன் கட்டினான் என்று எழுதுகிறார். 1886-ல் சென்னை அரசால் நியமனம் பெற்ற ஹுல்ஷ் என்ற ஜெர்மன் கல்வெட்டாராய்ச்சியாளரே, இக்கோவிலில் உள்ள கல்வெட்டுகளை ஆராய்ந்து இதைக் கட்டியவன் ராஜராஜன் என்று பதிவு செய்கிறார்.
முதன்முதலாகக் கோவிலைக் கட்டிய கலைஞர் பெயரையும், கோவிலோடு தொடர்புடைய அனைவர் பெயரையும் கல்வெட்டில் பதிவு செய்து, நன்றி செலுத்திய மன்னன் ராஜராஜனாகத்தான் இருப்பார். வீரசோழன் குஞ்சரமல்லன் என்கிற பெருந்தச்சனே முதல் தலைமைக் கட்டடக் கலைஞன் என்பதும், அவன் துணையாளர்களாக மதுராந்தகன் நித்தவினோதன் மற்றும் இலத்திசடையனான கண்டராதித்தப் பெருந்தச்சன் ஆகியோர் உதவிப் பொறியாளராகப் பணியாற்றியுள்ளதைக் கல்வெட்டால் அறிகிறோம். அக்காள் குந்தவை, மகன் ராஜேந்திரன், அமைச்சர், ஈசான சிவபண்டிதர் என்கிற ராஜகுரு முதலான பலருக்கும் கல்வெட்டில் இடம் கிடைக்கிறது.
அவன் இயற்பெயர் அருண்மொழி என்பதும் கல்வெட்டே நமக்கு உணர்த்துகிறது. ராஜராஜனுக்குக் காஞ்சி கயிலாசநாதன் ஆலயமே மனம் கவர்ந்ததாய் இருந்து, அதன் விரிவாக்கமாகவே இப்பெயர் கோவிலை எடுப்பித்திருக்கிறான். எடுத்தேன் என்று சொல்லாமல், ‘எடுப்பித்தேன்’ என்று பணிவுடன் சொல்லிக் கொள்ளும் பணிவும் இவனிடம் இருந்திருக்கிறது. கற்களே இல்லாத தஞ்சையில், பல ஆயிரக்கணக்கான டன் கற்களைப் புதுக் கோட்டை மாவட்டத்து குள்ளாண்டார் கோவில் பகுதியில் இருந்து சுமார் 75 கிலோ மீட்டர் தொலைவிலிருந்து கொண்டுவந்து கட்டி இருக்கிறான் அவன்.
குஜராத்தில் கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய லகுலீசர் என்ற ஞானி, சைவத்தின் ஒரு பெரும்பிரிவான பாசுபதத்தை நிலைநாட்டி இருக்கிறார். இதன் பிரிவுகளாகப் பிற்காலத்தில் காளாமுகம், காபாலிகம், மஹாவிருதம் ஆகியவை தோன்றின. கி.பி.ஆறாம் நூற்றாண்டு அளவில் பாசுபதம் தமிழகத்துக்குள் நுழைகிறது. ராஜராஜன், சைவத்தில் பாசுபதப்பிரிவை ஏற்றவனாக இருந்தான்.
சிற்பம் என்ற நுணுக்கத்தின் பல அற்புதச் சிலை வெளிப்பாடுகள் கொண்ட கோவில் பெரிய கோவில். அதற்கு நிகராக ஓவியத்திலும் முழுமை கண்டிருக்கிறது இக்கோவில். ராஜராஜன் காலத்து ஓவியங்கள் அருமை தெரியாத நாயக்க மன்னர்கள், அவ்வோவியங்களின் மேலேயே, சுண்ணாம்பு பூசி, தம் ஓவியங்களை வரைந்திருக்கிறார்கள். வரலாற்றின் ஒரு செழும் பண்பாட்டுத் தளத்தை நாயக்கர்களின் மூடமை அழித்தது. கடந்த ஆயிரத்தைநூறு ஆண்டுகால தமிழ் வரலாற்றைத் தமிழர்கள் தங்கள் அறியாமையாலும், அதிகார வெறியினாலும், கோயில் குட முழுக்கு என்ற பெயராலும், இன்றுவரை அழித்துக்கொண்டே இருக்கிறார்கள்.
முடியாட்சியோ, மன்னர் ஆட்சியோ, நிலப்பிரபுத்துவ ஆட்சியோ, அவைகளின் கலை வெளிப்பாடு எத்தனை சிறப்புற்றவை ஆயினும், அக்கலைகளின் உன்னதங்களை ஏற்றுக்கொள்ளும் நாம் அவைகளைப் போற்றிப் பாதுகாக்கவும் கடமைப்பட்ட நாம், அந்த ஆதிக்கவாதிகளின் அரசியலை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளக் கூடாது. தமிழ் ஆர்வலர், வரலாற்றாசிரியர் குடவாயில் பாலசுப்ரமணியன் போன்ற ஒரு சிலர் நீங்கலாக பலரும் இந்த ஆதிக்க வெறியை வீரம் எனும் பெயரால் வழிபடுவதை ஏற்றுக்கொள்வது ஜனநாயகப் போக்குக்கு எதிரானது. ராஜராஜனின் போர்கள், நியாயத்தின் அடிப்படையில் நடந்ததாகச் சொல்லமுடியாது. அவர் மகன் ராஜேந்திரன் கங்கையை வென்றதாகச் சொல்வதையும், கடாரத்தைக் கொண்டதாகச் சொல்வதையும் ஒரு பெருமை மிகு நிகழ்வாகச் சொல்வதற்கில்லை. பேரரசுக் கட்டுமானத்தின் முதல் அழிவுக்கும் கடைசி அழிவுக்கும் உள்ளாகிறவர்கள் மக்கள். அதிகமாகத் துயரமுறுவோர் பெண்கள். இராஜராஜனை நியாயப்படுத்துவது, அமெரிக்க புஷ்ஷை நியாயப்படுத்துவதாகும்.
ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது, தஞ்சாவூருக்குச் செல்கிறேன். இலக்கியம் தொடர்பான வேலைதான். ஆறுகள் கெட்டு, அமுக்குக்கோவணம் போல சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது. ஆற்று மணல், அதற்கென்றே தோன்றி இருக்கும் வெள்ளைச் சட்டை அணிந்த மிகப்பெரும் கொள்ளைக்காரர்களால் கொள்ளை அடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. கோரைகள், குத்துச்செடிகள் மிகுந்து ஆறுகள் பாழ்பட்டுவிட்டன. தெருக்களும் மக்களும் உலர்ந்து, நைந்து காணப்படுகிறார்கள். சுழன்றும் கனன்றும் வீசும் ஈரமற்ற காற்றால் புல்தரை பொசுங்குகிறது. அரசியல் தொழில் மட்டும் கிளைவிட்டுப் பரவிச் செழிக்கிறது. ஊர் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. சீனிவாசா நகர் மற்றும் ராஜராஜன் நகர் கட்டிடங்களின் கீழ்தான் ராஜராஜனின் அரண்மனை புதைந்திருக்கிறது என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.
அரண்மனைகள் அப்படித்தான் அழியும். இனியும் அழியும்.
State of Tamil Short Story circuit: Literature – Poet Sugumaran
‘செம்மை’யான நஞ்சுண்டர்!
நண்பர் நஞ்சுண்டன் ஒரு சிறு கதைச் செம்மையாக்க முகாமைச் சென்ற மாதம் நடத்தினார். முகாமுக்காக அவர் தேர்வு செய்திருந்த இடம் – தரங்கம்பாடி.
மதத்தைப் பரப்புவதற்காக வந்த பார்த்தலூமியோ சீகன்பால்க் தமிழறிஞர் சீகன்பால்க் அய்யராக உருமாற்றம் பெற்ற இடம். அவர் கட்டிய தேவாலயத்துக்கு எதிரில் இருந்த மையத்தில் முகாம். தங்குமிடத்துக்கு அடுத்த தெருவில் அவர் உருவாக்கிய அச்சுக்கூடம். முதன் முதலாகத் தமிழ்மொழி அச்சேறிய இடம். தேவாலயத்தின் பலிபீடத்துக்கு அருகில் சீகன் பால்க்கின் சமாதி. பார்த்துக் கொண்டிருந்தபோது சில நூற்றாண்டுகள் பின்னோக்கி நடந்ததுபோலத் தோன்றியது.
அறிமுகமானவர்களும் புதியவர்களுமாக பத்துப் பதினைந்து கதைக்காரர்கள். அவர்கள் எழுதிய சிறுகதைகளை எப்படியெல்லாம் செம்மைப்படுத்தலாம் என்பது முகாமின் செயல்திட்டம். இந்தத் திட்டத்தை நஞ்சுண்டன் செயல்படுத்திய விதம் அறிவியல் பூர்வமாக இருந்தது. கணினிகள், உடனடியான கதைப் பிரதிகள், அவற்றின் ஒவ்வொரு கட்டத் திருத்தத்தையும் காட்ட வெவ்வேறு வண்ணத்தாள்கள், மேல்நோக்கு எழுத்தாளர்களாக தேவிபாரதி, சூத்ரதாரி போன்ற சீனியர்கள், வேளாவேளைக்கு சிற்றுண்டியும் பேருண்டியும் என்று பெரும் நிறுவனங்கள் செய்யத் திணறும் திட்டத்தை இயல்பாக நிறைவேற்றினார். அவ்வப்போது பேராசிரியராக மாறி கண்டிக்கவும்செய்தார்.
இன்று தமிழ்ப் பதிப்புலகில் எடிட்டரின் தேவை தவிர்க்க இயலாதது என்று படுகிறது. மிகக் காத்திரமான படைப்புகள் கூட இன்னும் கொஞ்சம் செம்மைப் படுத்தப்பட்டிருக்கலாமோ என்ற ஏக்கத்தைத் தரும் பின்னணியில் ‘நஞ்சுண்டர்’களின் இடையீடு அவசியம். படைப்புக்கும் வாசகனுக்கும் இடையிலான உறவில் அந்த உறவைச் செம்மைப்படுத்தும் மூன்றாவது பார்வை எடிட்டருடையது. படைப்பு ஓர் அனுபவம் என்பதையும் மீறி மொழிக்கு வலு சேர்க்கும் பங்களிப்புக்கூட. ஒரு படைப்பாளி தன் காலத்தின் மொழியையும் நிகழ்வுகளையும் படைப்பில் வரலாற்றுவயப்படுத்துகிறான். ‘ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ் நாட்டில் தென்னை மரம் இருந்ததா, இல்லையா?’ என்ற கேள்விக்கு நமக்கு விடையளிக்கக் கூடிய முதன்மை ஆதாரங்கள் சங்க இலக்கியத்தில் உள்ளதாகக் கருதப்படுவதன் காரணம் இதுதான். மொழியைக் கையாளுவதிலும் இது உதவும். ‘பதினைந்து குதிரைகள் நடந்து வந்தது’ என்பதைச் செம்மைப்படுத்த ஒருவர் இருப்பது குறுக்கீடல்ல; உதவி. படைப்பின் மீதான அக்கறைக்கும் மொழியின் மீதான மரியாதைக்குமான உதவி.
முகாமில் கலந்து கொள்வதையொட்டி பதினைந்து தொகுதிகளிலிருந்து சுமார் நூறு கதைகளையாவது வாசித்திருப்பேன். ஜே.பி. சாணக்கியா, என்.ஸ்ரீராம் முதல் பா. திருச்செந்தாழை, எஸ் செந்தில்குமார், கே.என்.செந்தில்வரை. எல்லா எழுத்தாளர்களின் தொகுப்பிலும் முக்கியமான மூன்றோ நான்கோ கதைகள் இருக்கின்றன. புதிய கதையாடல்களும் நேர்த்திகளும் இந்தக் கதைகளில் இருக்கின்றன.
எனினும் முந்தைய தலைமுறை எழுத்தாளர்களின் தொகுப்பை வாசிக்கும்போது கிடைத்த இலக்கிய முழுமை இவற்றில் ஏன் இல்லை? ஓர் எழுத்தாளன் இங்கே இருக்கிறான் என்று அறிவிக்கும் தொகுப்பாக ஏன் எதுவும் இல்லை? ஆகச் சிறந்த கதைகளும் பரவாயில்லாத கதைகளும் கொண்ட தொகுப்பு வண்ணநிலவனின் ‘எஸ்தர்’. அவரது முதல் தொகுப்பு. அது ஒரு எழுத்தாளனின் வருகையைக் கட்டியம் கூறியது. இன்றைய சிறுகதைத் தொகுப்புகள் ஏன் அப்படி இல்லை? இந்தக் கேள்விகளுக்குப் பதிலைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.
வழக்கமான இலக்கியக் கூட்டங்களைப் போலவே சிறுகதைச் செம்மையாக்க முகாமிலும் நிகழ்ச்சி நிரலுக்கு அப்பாற்பட்ட தனி உரையாடல்கள் சுவாரசியமாக இருந்தன. டேனிஷ் கோட்டைக்கு அருகில் கடற்கரையில் கூடி உட்கார்ந்து பேசியதில் இரவு மந்தமாக நகர்ந்தது. முகாமின் முதல் நாள் மாலை நஞ் சுண்டனின் மகன் சுகவனம் குட்டிக் கச்சேரி நிகழ்த்தினான். மழலை கலையத் தொடங்கும் குரல் அவனுக்கு. அந்தக் குரலில் உச்ச ஸ்தாயியைத் தொட அவன் செய்த சாகசம் வியப்படையச் செய்தது. ‘காக்கைச் சிறகினிலே நந்தலாலா’ என்ற பாரதி பாடலை அவன் பாடிய விதம் ஒரு சவால். இந்தப் பாடலை எல்லாப் பாடகர்களும் ‘பிருந்தாவன சாரங்கா’வில்தான் அதிகம் பாடியிருக்கிறார்கள். சுகவனம் பாடியது – ‘யதுகுல காம் போதி’யில். பாரதி அந்தப் பாடலை இயற்றியது அந்த ராகத்தில்தான். எல். வைத்தியநாதன் மட்டுமே பாரதியைப் பொருட்படுத்தி ஏழாவது மனிதன் படத்தில் அதேராகத்தில் மெட்டமைத்திருந்தார்.
Writer SV Ramakrishnan: எஸ்.வி. ராமகிருஷ்ணன்
எஸ்.வி.ராமகிருஷ்ணன் 1936இல் கோவை மாவட்டம் தாராபுரத்தில் பிறந்தார். சரித்திரமும் சட்டமும் பயின்ற ராம கிருஷ்ணன் சுங்கம் கலால்ஆணையாளராக இந்தியாவின் பல பகுதிகளிலும் பணிபுரிந்து, முதன்மை ஆணையராக ஓய்வு பெற்றார். தற்போது ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். தமிழின் முன்னணிஇதழ்களில் கடந்த கால இந்தியாவைச் சித்தரிக்கும் விதமாக இவர் எழுதிய கட்டுரைகளை ‘அது அந்த காலம்’ என்ற தலைப்பில் உயிர்மை பதிப்பகம் 2004இல் வெளியிட்டது.
இரண்டு தலைமுறை மூத்தவரான இந்திரா பார்த்தசாரதி யூனிகோடில் அடித்து மின்னஞ்சல் அனுப்புவார்( 70 வயதுக்கு மேல் கணினி கற்றுக்கொண்டு கணினியில் எழுதும் மற்ற இரண்டு தமிழ் எழுத்தாளர்கள் எஸ்.வி.ராமகிருஷ்ணன், பாரதிமணி).
Book Name | : அது அந்தக் காலம் |
PublishedYear | : Dec.2004 |
Description | |
ராமகிருஷ்ணனின் கட்டுரைகள் 1940கள் காலத்தை ஜீவனுடன் சித்தரிக்கின்றன. அந்தக் காலத்தில் வாழ்ந்த எனக்கும் என்னை ஒத்த வயதுக்காரர்களுக்கும் இக்கட்டுரைகள் நினைவூட்டல் மூலம் ஓர் இலக்கிய அனுபவத்தைத் தந்தால், இளைஞர்களுக்கு இவை வியப்பு கலந்த இலக்கிய அனுபவம் தரும். இந்த நூலைச் சமீப காலத்தில் வெளிவருபவைகளில் மிக முக்கியமானதாகக் கருதுகிறேன். இதிலுள்ள வரலாறு நகமும் ரத்தமும் சதையுமுடைய மனிதர்களை உள்ளடக்கியது. இதிலுள்ள மனிதர்களுக்குப் பிரதிபலிப்பாக இன்றும் இருக்கிறார்கள். (அசோகமித்திரன்) |
Name : வைஸ்ராயின் கடைசி நிமிடங்கள்
Description
இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்திய வாழ்க்கையின் அழுத்தமான காட்சிகளையும் யதார்த்தத்தையும் வெகுநேர்த்தியாகச் சித்தரிப்பவை எஸ்.வி.ராமகிருஷ்ணனின் எழுத்துகள். கடந்தகாலத்தின் மெல்லிய ஏக்கம் ததும்பும் நினைவுகளையும் கடந்து சென்ற ஒரு பண்பாட்டு வாழ்க்கையின் பதிவுகளையும் இக்கட்டுரைகள் ஒரு தலைமுறையின் கனவுச் சித்திரங்களாக நம் நெஞ்சில் எழச் செய்கின்றன. ‘அது அந்தக் காலம்’ தொகுப்பின் மூலம் பெரும் கவனம் பெற்ற எஸ்.வி.ராமகிருஷ்ணனின் இரண்டாவது கட்டுரைத் தொகுப்பு இது.
ஒரு திருடனின் சுயசரிதை |
![]() |
![]() |
|||
|
நான் ஒரு திருடன். அதாவது அறுபத்துநான்கு கலைகளில் ஒன்றான திருட்டு என்ற கலையை முறையாகப் பயின்று பரம்பரைத் தொழிலாகக் கொண்டிருந்தவன். இன்று நாய்க்குடைகள் மாதிரி முளைத்து சினிமாவில் பார்த்த உத்திகளைக் கையாண்டு பிழைக்கிறார்களே அது போன்று ‘வந்தேறி’ அல்ல, ரயிலில் மயக்க மருந்து பிஸ் கட்டு கொடுத்துப் பிரயாணிகளின் பொருளை அபகரிக்கும் கீழ்த்தரத் திருடனுமல்ல என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
நான் என் தொழிலை இன்ன தேதியில் தொடங்கினேன் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. முதலில் நான் தொழில் செய்தது பெரியவர்களோடு கூடப் போய் ‘அசிஸ்டெண்ட்’ போலத்தான். கொஞ்ச கொஞ்சமாகத் தேர்ந்த பிறகு தான் என்னைத் தனியாகப் போக அனுமதித்தார்கள். நான் தேர்ச்சியடைந்துவிட்டேனென்று என் தகப்பனாரும் பாராட்டினார். இரண்டுமுறை அப்படிப் போய் வெற்றிகரமாகக் கைவரிசையைக் காட்டினவுடன் எனக்கு அசாத்திய தன்னம்பிக்கையும் தைரியமும் வந்துவிட்டன.
இதெல்லாம் நடந்து ஒரு ஐம்பத்தைந்து வருடங்களாவது ஆகியிருக்கும். இப்போது எனக்கு வயசாகிவிட்டது. இரவு கண் முழித்தும் ஓடியும் ஒளிந்தும் பணிபுரியும் வயசு தாண்டிவிட்டது. என்னுடைய ஒரே மகன் வேறு லைனுக்குப் போய்விட்டான். பெண்களையும் கட்டிக் கொடுத்து விட்டேன். இன்று நான் ஒரு ‘மாஜி’ திருடன்தான். தொழிலில் இருந்து ரிடையர் ஆகிப் பல வருடங்கள் ஆகிவிட்டன.
ஆனால் சொல்லப் போனால் இவ்வளவு சீக்கிரம் நான் தொழிலை விட்டிருக்க மாட்டேன். இப்போதும் என் உடம்பில் தெம்பு இருக்கிறது. சுருங்கச் சொன்னால் நானாகத் தொழிலை விடவில்லை, உலகம் மாறி வரும் வேகத்தை ஜீரணித்துக் கொள்ள முடியாமல் நான் விலக வேண்டி வந்தது என்பது தான் கொடுமை. என் நீண்ட நாள் ஆற்றாமையை இங்கேயா வது சொல்லிக் கொள்ளுகிறேன்.
நான் தொழில் தொடங்கும் நாட்களில் வீடுகள் காரையால் கட்டப்பட்டிருக்கும். அதாவது செங்கல்களுக்கு நடுவில் காரைச் சாந்து (சுண்ணாம்பும் மணலும் சேர்ந்த கலவை) பூசிக் கட்டியிருப்பார்கள். சிலசமயம் மண் சாந்து பூசுவதும் உண்டு. அந்த மாதிரி கட்டின சுவர்களில் கன்னம் வைக்க முடியும். அதற்காக எல்லோராலும் அது முடியும் என்று நினைத் துக்கொள்ள வேண்டாம். கன்னம் வைப்பது ஒரு அரிய கலை. கற்றுக் கொண்டு அப்பியாசம் செய்யவேண்டும். எனக்கு இதில் பழுத்த அனுபவம் இருந்தது. ஜாக்கிரதையாகவும் லாகவத்துடனும் செய்ய வேண்டிய வேலை. ஒரு ஆள் புகுந்து போக வேண்டிய அளவில் சுவரில் ஒரு ஓட்டை போட வேண்டும், அதே சமயம் சத்தமில்லாமலும் செய்யவேண்டுமென்றால் சும்மாவா? ஆனால் நான் தொழில் தொடங்கி சில ஆண்டுகள் கழித்து சில விபரீ தங்கள் நிகழலாயின. காரை எங்கோ காணாமல் போய் சிமெண்ட் வந்து விட்டது. அதற்கு முன்னே தரைக்குத்தான் சிமெண்ட் போட்டுக் கொண்டிருந்தார்கள். அது சுவற்றுக்கும் பரவவே கன்னம் வைப்பது கஷ்டமாகிப் போனது. சுவற்றுக்குப் பதிலாக ஜன்னல் வழியாகப் புகுவதே சிலாக்கியம் என்றாயிற்று. ஜன்னல் கம்பிகளை வளைத்தோ அறுத்தோவிட்டு உள்ளே போக வேண்டும்.
வெகு சீக்கிரமே தனி வீடுகள் என்பதே குறைந்து எல்லாம் பயங்கரமான அடுக்கு மாடிக் கட்டடங்களாயின. அத்தனையும் கெட்டி கான் கிரீட் கட்டடங்கள். அதிலும் மூன்றாவது மாடியிலும் ஐந்தாவது மாடியிலும் ஏறிக் கன்னம் வைக்கவா முடியும்? முதலில் இந்த மாறுதல்களெல்லாம் பெரிய நகரங்களில் தான் வந்தது. சின்ன ஊர்களில் அவை வருவதற்கு நாள் பிடித்தது. அப்போது நாங்கள் அடிக்கடி சிற்றூர்களுக்கு விஜயம் செய்யலானோம். எங்களில் சிலர் பட்டணத்தை விட்டு வெளியூருக்குக் குடிபெயர்ந்ததும் உண்டு. ஆனால் காலம் போகப்போக அவையும் பெரிய ஊர்களின் அடிச்சுவட்டைப் பின் பற்றிக் கழுதையாகிவிட்டன.
இதே சமயம் நடந்த இன்னொரு நவீனகால அநியாயத்தையும் சொல்ல வேண்டும். வெகு நாளைக்கு முன்னால் எல்லோரும் தங்கள் வீட்டில் தான் பணத்தைப் பதுக்கி வைத்துக் கொண்டிருந்தார்கள். சாதாரணமாக ‘Safe’ என்ற பலமான இரும்புப் பெட்டகங்களில் (சிலசமயம் பெட்டிகளில்) இருக்கும். சில யுக்திக்காரர்கள் சமையற்கட்டில் ஏதோ பழைய அலுமினியப் பாத்திரத்துக்குள்ளேயோ அல்லது அழுக் குத்துணிக் கூடைக்குள்ளேயோ, அசா தாரணமான இடங்களில் பணத்தை வைப்பார்கள். குறிப்பாக, தனியாக இருந்த சில கிழவிகள் இப்படிச் செய்வதைக் கண்டிருக்கிறேன்.
அங்கேயெல்லாம் பணம் இருக்கும் என்று யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள் என்பது அந்தப் புத்திசாலிகளின் அனுமானம். ஆனால் அந்த ரகசிய இடங்களைக் கண்டுபிடிப்பது எங்களுக்கு அவ்வளவு ஒன்றும் கஷ்டமாயிருக்கவில்லை. இதெல்லாம் அனுபவத்தில் உதிக்கும் ஞானம், வீட்டுக்காரர்களின் குருட்டு யோசனைகளைக் கடந்து போகக் கூடியது. அதே போல் எந்தவிதமான இரும்புப் பெட்டி, பெட்டகங்களையும் மறு சாவி போட்டுத் திறப்பதற்கான பயிற்சியும் ஆற்றலும் எங்களுக்கு இருந்தது. குறிப்பாக நான் அதில் ஒரு நிபுணன் என்று பிரசித்தி பெற்றிருந்தேன்.
ஆனால் பின்னால் நடந்தது என்னவென்றால், கையில் நாலு காசு சேர்ந்துவிட்டால் ஒவ்வொருத்தனும் வங்கிக் கணக்கு வைத்துக் கொண்டு கொடுக்கல் வாங்கல் எல்லாவற்றையும் ‘செக்’ மூலமாகப் பண்ண ஆரம்பித்தான். பணக்கார வீடுகளில் பணமாக வைத்துக்கொள்வதே குறைந்து போயிற்று. ஆனாலும் தங்கம், வைர நகைகளை பெட்டகத்துள் வைப்பது தொடர்ந்தது. என் துரதிர்ஷ்டம் சில ஆண்டுகளில் இவையும் வீட்டை விட்டு வெளியேறி வங்கி ‘லாக்கர்’களில் குடியேறத் தொடங்கின. வருமான வரிக்காரர்களுக்குப் பயந்துகூட இப்படிச் செய்தார்கள். பக்கம் பக்கமாக வெவ் வேறு வங்கிகளின் லாக்கர்களில் ஒளித்து வைத்தால் இன்கம்டாக்ஸ்காரர்களின் கண்ணில் மண்ணைத் தூவலாம் என்பது அவர்களின் கருத்து. இதெல்லாம் என் வயிற்றில் மண்ணை அள்ளிப்போட்ட தென்னவோ நிச்சயம்.
நாளடைவில் என் திறமை, அனுபவம் எல்லாமே வீணாகப்போவது போலத் தோன்றிற்று. ஆயிரம் பாடு பட்டு ஒரு வீட்டுக்குள் ஏறி இரண்டாயிரம் பாடுபட்டு இரும்புப் பெட்டியைத் திறந்தபின் அத்தனையும் வியர்த்தம் என்று தெரிந்தால் என் மனம் என்ன பாடுபட்டிருக்கும் என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளலாம். கடைசியில், காலம் கெட்டுப் போச்சு, இத்தொழிலுக்கு இனிமேல் நான் லாயக்கில்லை, கூட்டம் கூட்டமாக வட நாட்டில் எங்கெங்கிருந்தோ வந்து புதுப்புது உத்திகளைக் கையாளுகிறார்களே அந்தப் பையன்களுடன் என்னால் போட்டி போட முடியாது என்று தீர்மானித்து நான் கௌரவமாக விலகிவிட்டேன்.
இதுதான் என் உத்தியோக சுயசரிதை.
தேர்தல் – 1946 :: “மஞ்சள் பெட்டிக்கே உங்கள் ஓட்டு”
1946இல் நடைபெற்ற பொதுத்தேர்தல்தான் நான் கண்ட முதல் தேர்தல். ஃபர்ஸ்ட் பாரம் என்றழைக்கப்பட்ட ஆறாவது வகுப்பில் நான் படித்துக் கொண்டிருக்கும் போது நடந்தது. இரண்டாவது உலகயுத்தத்தில் நம்மைக் கேட்காமலேயே பிரிட்டிஷ் இந்திய சர்க்கார் ஜெர்மனி மீது யுத்தப் பிரகடனம் செய்ததிலிருந்து (1939) தோன்றி யுத்தகாலம் முழுதும் நீடித்த காங்கிரஸ் – பிரிட்டிஷ் பிணக்கம் சமீபத்தில்தான் ஒருவழியாக முடிவு பெற்று இணக்கமாக மாறிக்கொண்டிருந்தது. காரணம் அதற்குச் சில மாதங்கள் முன்பு இங்கிலாந்தில் (அதாவது பிரிட்டனில் – அப்போதெல்லாம் மூத்த தலைமுறையினர், என் அப்பா அம்மா உட்பட, இங்கிலாந்து என்றுதான் சொன்னார்கள். ஏன், பிரிட்டிஷ் பிரதமராயிருத்த சர்ச்சிலும் கடைசிநாள் வரை அப்படித்தான் சொன்னதாகவும் ஸ்காட்லந்துக்காரர்களின் எரிச்சலைப் பற்றிக் கவலைப்படவில்லை என்றும் கூடத் தெரிகிறது.) ஆட்சி மாறியதே. சில மாதங்களுக்கு முன் இந்தியாவின் அனுதாபிகள் (உ.ம். கிரிப்ஸ், பெதிக்-லாரன்ஸ்) நிறைந்த தொழிற்கட்சி சர்ச்சிலின் கன்சர்வேடிவ் கட்சியைத் தேர்தலில் முறியடித்து அமோகவெற்றி பெற்றிருந்தது (1945). அந்த முடிவைத் தெரிந்து கொள்வதற்காக அன்று பி.பி.ஸி செய்திகள் வரும்போது என் தந்தை கடமுட என்று சத்தம் பண்ணிக்கொண்டிருந்த ரேடியோவிலேயே காதைப் பதித்துக் கொண்டிருந்தது ஞாபகம் இருக்கிறது. நியூஸ் கேட்டுவிட்டு மிகுந்த சந்தோஷத்துடன் கூடத்துக்கு (ஹால்) வந்து நற்செய்தியைச் சொன்னவுடன் அம்மா உடனே பாயசம் பண்ணி எல்லோருக்கும் கொடுத்ததும் ஒரு ‘இனிய’ நினைவு. புதிய லண்டன் அரசு தாமதமின்றி இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுப்பதைத் தங்கள் கொள்கைப்பிரகடனமாகச் செய்துவிட்டது . உடனடியாக சிறையிலிருந்த காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட அதைத் தொடர்ந்துதான் இப்போது, 1937இல் இருந்து ஒன்பதாண்டுகளுக்குப்பின், மறுபடியும் பொதுத்தேர்தல் வந்திருக்கிறது.
தாராபுரத்தில் உற்சாகவெள்ளம் கரைபுரண்டோடியது. நாடு முழுவதிலும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். ஊரெங்கும் சுவர்களின் மீது “மங்களமான மஞ்சள் பெட்டிக்கே உங்கள் ஓட்டு” என்று கொட்டை கொட்டையாக எழுதினார்கள். (கூடாதென்று சொல்ல அப்போது எலெக்ஷன் கமிஷனர் எல்லாம் கிடையாது). ‘வாக்கு’ என்ற பதம் அப்போதும் இன்னும் சில வருடங்கள் வரையிலும்கூட உபயோகித்து நான் கேட்டதாக நினைவில்லை. ஆங்கிலச் சொல்லான ‘வோட்’ ஆனது (‘ரயில்’ மாதிரியாக) ஓட்டு என்றொரு தமிழ் வார்த்தையாகப் பரிணமித்து நிலைபெற்றிருந்தது. அதேபோல, தேர்தலில் நிற்பவர் ‘அபேட்சகர்’ என்று அழைக்கப்பட்டார். அவர் ‘வேட்பாளர்’ ஆனது இன்னும் பல காலத்திற்குப் பிறகுதான். வடமொழியிலிருந்து வந்த ‘அபேட்சகரின்’ நேரடி சுத்தத்தமிழ் மொழிபெயர்ப்பு.
சினிமா நோட்டீஸ் மாதிரி பிரசாரத் துண்டுக்காகிதங்கள் (அதற்கும் நோட்டீஸ் என்றுதான் சொன்னார்கள்) அச்சடித்து வினியோகிக்கப்பட்டன. இளைஞர்கள், குறிப்பாக மாணவர்கள், வீடு வீடாகப் படியேறி மக்களை நேரில் சந்தித்து நோட்டீசுகளைக் கொடுத்தும் விண்ணப்பித்தும் ‘காந்திக்கட்சிக்கு’ வாக்கு சேகரித்தார்கள். தொண்டர்கள் தெருத்தெருவாக மெகாபோனில் முழங்கிக் கொண்டும் போனார்கள். இன்று காணாமற்போன மெகாபோனைப்பற்றிச் சில வார்த்தைகள் சொல்ல வேண்டுமென்றால் அது சௌகரியமானதொரு சாதனம். மலிவும் கூட. மின்சாரம், பேட்டரி எதுவும் கேட்காது. நாம் போடும் சத்தத்தை இன்னும் கொஞ்சம் பெரிதாகக் கூட்டும், அவ்வளவுதான். ஒலிபெருக்கி போலக் காதைத் துளைக்காது. அடிக்கடி காங்கிரஸ் பொதுக் கூட்டங்கள் நடந்தன. மட்டப்பாறை வெங்கட்ராமய்யர் (‘மட்டப்பாறைச் சிங்கம்’), ம.பொ.சிவஞான கிராமணி யார், அல்லாப்பிச்சை என்று வெளியூரில் இருந்தும் தலைவர்கள் வந்து பேசினார்கள். அவர்களில் ஒருவர் எங்கள் வீட்டுக்கு வருகை தந்து என் தந்தையிடம் கொஞ்சநேரம் பேசி விட்டுப் போனார். அவர்தான் காமராஜ நாடார் (அப்போது அப்படித்தான் அவர் பெயர். பின்னாளில் ‘நாடார்’ என்ற பகுதி , காரல் மார்க்ஸின் பாஷையில் சொல்லப்போனால், ‘உதிர்ந்துபோயிற்று’ ) என்று அப்புறம் அப்பா சொன்னார். “அட, அப்பவே தெரிஞ்சிருந்தால் எட்டிப் பார்த்திருப்பேனே என்று குறைபட்டுக்கொண்டார் அம்மா.
அதென்ன மஞ்சள் பெட்டி என்ற கேள்வி இதைப் படிக்கும் பலர் மனதிலும் எழக்கூடும். அது ஒரு தனிக்கதை. சைமன் கமிஷன் வந்துவிட்டுப் போனதற்குப் பின் 1931இல் வைஸ்ராய் ஒரு கமிஷனை நியமித்தார். அதன் வேலை இந்தியாவுடன் ஒப்பிடக் கூடிய பல நாடுகளில் என்ன செய்கிறார்கள் என்று பார்த்து நமக்கு தேர்தல் முறைகளைச் சிபாரிசு செய்தல். வெள்ளைக்காரர்கள் எப்போதும் ரொம்ப systematic. (அதை நாம் அவர்களிடம் கற்றுக்கொள்ளத் தவறிவிட்டோம் எனத் தோன்றுகிறது. உதாரணமாக, அண்மையில் Right to Information Act வந்தது. இயற்றுவதற்கு முன்னர், சில முன்னேறிய நாடுகளிலும், மற்றும் பிலிப்பைன்ஸ் தாய்லாந்து, மொரீஷஸ் போன்ற சில கிழக்கத்திய நாடுகளிலும் இதை எப்படிச் செய்திருக்கிறார்கள், சட்டம் மட்டுமில்லாது நடைமுறையில் எப்படி இருக்கிறது என்று ஆராய்ந்திருக்க வேண்டும். அதைச் செய்யாமல் ‘காப்பியடித்து’ இயற்றப்போக, இன்று அந்தச் சட்டம் பாட்டுக்கு ஒரு பக்கம் இருக்கிறது, சொல்லும்படியாக சாமானிய மக்களுக்குப் பிரயோஜனம் எதுவும் இல்லை). முன்னேறிய மேனாடுகள் போலன்றி இங்கே ஒவ்வொரு கட்சிக்கும் (சுயேச்சை அபேட்சகருக்கும்) தனித்தனிக் கலரில் பெட்டிகள் வைப்பதென்ற கமிஷனின் பரிந்துரை ஏற்கப்பட்டது. காங்கிரஸ் தேர்தலில் பங் கெடுத்துக்கொள்ளச் சம்மதித்த 1937இலிருந்து அதற்கு மஞ்சள் பெட்டி என்றாயிற்று. 1946இல் ஜின்னாவின் முஸ்லிம்லீகுக்கு பச்சைப்பெட்டி. மற்றவர்களுக்கு என்ன என்னவென்று எனக்குத் தெரியவில்லை. சுயேச்சைகளும் கோதாவில் உண்டு.
ஒரு முக்கியமான சமாச்சாரத்தை இங்கே சொல்லவேண்டும். அன்று வயதுவந்தவர் எல்லோருக்கும் ஓட்டுரிமை கிடையாது. இத்தனை படிப்பு அல்லது இத்தனை சொத்து என்று வைத்திருந்தார்கள். அந்தத் தகுதி இருந்தால்தான் ஓட்டுப்போடலாம். அதனால் ஜனத்தொகையில் ஓட்டுரிமை பெற்றவர்களின் சதவீதம் இன்றைவிட மிகக்குறைவாக இருந்தது. இங்கே எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. பின்னால் 1952இல் இருபத்தோரு வயதானவர் எல்லோருக்கும் வாக்குரிமை வந்தபோது எளியவர்கள் பலருக்கு அது தெரியவில்லை. அப்போது எங்கள் வீட்டில் ஒரு சமையற்கார மாமி இருந்தார். விதவை, வயதான மாது. “ஓட்டுச்சாவடி நம்ம வீட்டில் இருந்து நாலு எட்டில் இருக்கிறதே, நீங்கள் ஒட்டுப்போடப் போகவில்லையா, மாமி?” என்று கேட்டேன். “எனக்கெல்லாம் ஓட்டு கிடையாதப்பா, அதுக்கு சொத்து எதாவது இருக்கணும்” என்று பதில் சொன்னார். இல்லை, இப்போது சட்டம் மாறியிருக்கிறது என்று நான் சொன்னபோதும் மாமிக்கு நம்பிக்கை வரவில்லை. நான் வெறும் பதினைந்து வயதுப் பையனாயிருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். என் தாயாரும் வந்து வற்புறுத்திச் சொன்ன பிறகுதான் போனார்.
1946இல் இருந்து, பின்னால் மறைந்து போன ஒரு பாரிய விஷயம் முஸ்லிம்களுக்கென்று இருந்த ‘தனித்தொகுதி’. தனித்தொகுதி என்றால் இன்று ஷெட்யூல்வகுப்பினருக்கு ஒதுக்கியிருப்பது போல அல்ல. முஸ்லிம் மக்கள் முஸ்லிம் வேட்பாளர்களுக்குத்தான் ஓட்டளிக்க முடியும். ஒரு முஸ்லிம் லீகர், ஒரு தேசீய முஸ்லிம், ஒரு முஸ்லிம் சுயேச்சை என்று நின்றால், அந்த மூன்று பேரில் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை தான் இஸ்லாமிய ஓட்டர்களுக்கு உண்டு. அவர்களுக்கும் முஸ்லிமல்லாத அபேட்சகர்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. மட்டுமல்ல, ஹிந்து, கிறிஸ்தவ ஓட்டர்கள் முஸ்லிம் வேட்பாளர்கள் யாருக்கும் ஓட்டுப் போடவும் முடியாது. 37 வருடங்களுக்கு முன் இந்தியர்களைப் பிரித்தாளுவதற்கு ஆங்கிலேயர் கொண்டு வந்த இத்திட்டம் கடைசியில் இந்தியாவையே பிரித்துவிட்டது. மேலே விவரிக்கப்பட்டது 1946 தேர்தலின் அடிப்படையில்தான். ஆனால், பிரித்தல் முழுமை பெற்றபோது (1947) ஆளுவதற்குத்தான், அந்த விஷமத்தை ஆரம்பித்து வைத்த வெள்ளையர் இருக்கவில்லை!
*
சகுனம்

அந்த நாளிலே ரொம்பவே சகுனம் பார்த்தார்கள். எல்லாரும் இல்லாவிடினும் பலபேர். சகுனம் என்றால் உடனே எனக்கு நினைவுக்கு வருவது என் கல்லூரித் தோழன் பரமாத்மாதான்1. 1950களின் மத்திய பகுதியில் நானும் அவனும் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் படித்தோம். இருவரும் ஒரே ஹாஸ்டலில் (சேலையூர் ஹால்) தங்கியிருந்தோம். என் ரூம் நம்பர் 57 என்றால் அவனுடைய அறை 59. கல்லூரியில் என் பாடம் சரித்திரம், அவனுடைய பாடம் பௌதீகம் என்று வெவ்வேறு திசைகளில் இருந்தும் எங்களிருவரின் பல ருசிகள் (சினிமா, சங்கீதம், இலக்கியம்) ஒரே திக்கில் அமைந்ததால் நாங்கள் சீக்கிரத்திலேயே நெருக்கமாகிவிட்டோம். இந்நிலையில் அவனுடைய தந்தை ஹைவேஸ் இன்ஜினீயர் விஸ்வநாதையருக்கு எங்கள் ஊர் தாராபுரத்தில் அசிஸ்டண்ட் இன்ஜினீயராக மாற்றல் ஆயிற்று. அந்தக் காலத்தில் ஏ.இ. என்றால் தாலூக்கா பூராவிலும் நெடுஞ்சாலைத் துறைக்குத் தலைவர். இன்றுபோல் ஊருக்கு மூன்று ஏ.இ.க்கள் அப்போது இருக்கவில்லை. காலாண்டு, அரையாண்டு கல்லூரி விடுமுறை என்றால் நானும் பரமாத்மாவும் ஒன்றாகவே தாராபுரம் சென்று சென்னை திரும்புவோம். தாம்பரத்தில் இருந்து போவது எங்கள் இஷ்டப்படி. ஆனால் லீவு முடிந்து திரும்பும்போது அவனுடைய அப்பா பிடித்துக்கொள்வார். அவர் கொஞ்சம் பழைய மோஸ்தர் மனுஷர். நம்பிக்கைகள், வாழ்க்கை முறை எல்லாவற்றிலும் அவர் மிகவும் ‘கர்நாடகம்’ என்று சொன்னார்கள். அதாவது காலங்காலமாய் இருந்து வரும் மரபைத் தீவிரமாய் அனுசரிப்பவர். இப்போது இந்த வார்த்தை வழக்கில் இருக்கிறதா என்று நிச்சயமாகத் தெரியவில்லை.
தாராபுரத்தில் (அது வெறும் தாலூக்கா தலைநகராயிருந்த அன்றும் சரி, கோட்டத் தலைநகராயிருக்கும் இன்றும் சரி) ரயில் கிடையாது. சென்னை செல்வதற்கு திருப்பூர் அல்லது ஈரோடு வரை பஸ்ஸில் பயணித்து புகைவண்டியைப்2 பிடிக்கவேண்டும். எங்கள் இருவர் வீடுகளும் பார்க் ரோடு எனப்பட்ட மெயின்ரோட்டில் அமைந்திருந்ததால் ஒரு சௌகரியம். வெளியூர் போகும் பேருந்துகள் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய்க் கையெழுத்துப் போட்டுவிட்டுத்தான் போக வேண்டும் என்று அப்போது ஒரு நியதி இருந்தது. அப்போது மத்திய பஸ் நிலையம் (Central Bus Stand) என்று ஒன்று வந்திராத காலம். பஸ் ஒவ்வொன்றும் அந்தந்தக் கம்பெனியின் ஸ்டாண்டில் இருந்துதான் கிளம்பும். அது திருப்பூர் பஸ்ஸாயிருந்தால் அதன் ஜி.எம்.எஸ். பஸ் ஸ்டாண்டிலிருந்து எங்கள் ரோடு வழியாகத்தான் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போகவேண்டும். போகும் போது எங்கள் வீட்டு வாசலில் பெட்டியுடன்4 நின்று கைகாட்டினால் பஸ்ஸை நிறுத்தி எங்களை ஏற்றிக்கொண்டு போவார்கள். ஈரோடு போய் பஸ், ரயிலைப் பிடிப்பதாயிருந்தால் நாங்கள் எஸ்.எம்.எஸ். பஸ் ஸ்டாண்டுக்குத்தான் போகவேண்டும். அந்த பஸ் எங்கள் ரோடு வழியாகப் போவதில்லை.

இப்போதெல்லாம் தமிழ்நாட்டில் வெளியூர் போகும் பஸ்களும் கூட டவுன் பஸ் மாதிரி பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை வந்துகொண்டே இருக்கின்றன. அதற்காக என்று குறிப்பிட்ட நேரத்தில் நாம் போகவேண்டியதில்லை என்று தெரிகிறது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னாலெல்லாம் ஒரு மணி பஸ், பிறகு நான்கு மணி பஸ், அடுத்தது ஆறரை மணிக்கு என்று நீண்ட இடைவெளியில்தான் பேருந்துகள் ஓடின. ஆனால் குறித்த நேரத்தில் கிளம்பி விடும். அதன் குறித்த நேரம் 4 மணி என்றால் அதற்கு அரைமணி முன்னதாக நாங்கள் வீட்டில் இருந்து கிளம்பினால் போதும். ஆனால் நல்ல நேரத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்ட பரமாத்மாவின் தந்தை திடீரென்று ஒரு குண்டைத் தூக்கிப்போடுவார். அன்று பார்த்து, பகல் 3 மணியில் இருந்து நேரம் நன்றாக இராது. ராகுகாலம், யமகண்டம் என்று ஏதாவது இருந்து தொலைக்கும். அதனால் 2-30 மணிக்கே கிளம்பி விடுங்கள் என்று சொல்லுவார். சின்னப்பையன்களாகிய நாங்கள் அஜாக்கிரதையாய் இருக்கக்கூடும் என்று எண்ணி அந்த நாள் சாப்பிட்டபின் ஆபீஸுக்குத் திரும்பாமல் நாங்கள் கிளம்பும்வரை வீட்டிலேயே இருக்கவும் செய்வார். நாலுமணி வண்டிக்கு ஊருக்கு முன் போய் ‘வேகு வேகு’ என்று ஸ்டாண்டில் காத்திருப்பது என்றால் எங்கள் இருவருக்குமே ரொம்ப அழுகை. விஸ்வநாதையரோ தங்கமான குணம் உள்ளவர். எங்களைக் கஷ்டப்படுத்தவும் அவருக்கு இஷ்டம் இல்லை. அதே சமயம் யோகம், நேரம் எல்லாவற்றையும் அவருக்குப் பார்த்தாக வேண்டும். கடைசியில் ஒரு வழி கண்டுபிடித்தார். அதுதான் ‘பரஸ்தானம் போவது’.
பரஸ்தானம் என்றால் ‘வேறு இடம்’. பகல் இரண்டு மணிக்கே பஸ் ஸ்டாண்டுக்குப் போவது தொந்தரவாயிருந்தால், அதே நேரத்தில் பெட்டி படுக்கையை எடுத்துக்கொண்டு பரஸ்தானமாகிய எங்கள் வீட்டில் கொண்டு வைத்து விட்டால் ராகுகாலப் பிரச்சினை தீர்ந்துபோகும். சாமான்களைப் பரஸ்தானத்ததுக்கு எடுத்துக் கொண்டுபோவது நல்ல நேரத்தில் இருந்தால் போதும், பின்னால் எப்போது அந்த ஸ்தானத்திலிருந்து (அதாவது எங்கள் வீட்டிலிருந்து) பஸ் ஸ்டாண்டுக்குப் போகிறான் என்பது பொருட்டல்ல. கொழுத்த ராகுகாலத்தில் போனாலும் ஒன்றும் இல்லை. ஆனால் கிளம்பினவன் எக்காரணத்தைக் கொண்டும் திரும்பித் தனது வீட்டுக்கு வரக்கூடாது. அவனுடைய சாமான்களும் திரும்பிவரக்கூடாது. திரும்பினால் பரஸ்தானம் பலனில்லாமல் போகும். எங்கள் வீட்டில் இருந்து நேராக பஸ் ஸ்டாண்டுக்குப் போய்விட்டால் சரி. எங்கள் வீட்டில் நேரம், காலம் பார்க்கும் வழக்கம் இல்லை என்பதால், இந்த உபாயத்தினால் எல்லோருக்கும் திருப்திதான். யாருக்கும் ஆட்சேபணை இல்லை.

திருப்பூர் பஸ்ஸில்தான் போகிறோம், வாசலிலேயே ஏறிக்கொள்ளலாம் என்கிற போது கூட எங்கள் வீட்டிலிருந்து ஐந்தே வீடுகள் தள்ளி அமைந்திருந்த அவனுடைய இல்லத்துக்கு நான் போவதற்குப் பதில்தான் எங்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்து கொள்வதையே விரும்பினான் பரமாத்மா. அதற்கு ஒரு காரணம் இருந்தது. அவன் பெட்டியை எடுத்துக்கொண்டு வீதிக்கு வருவதற்கு சகுனம் பார்ப்பார் அவனது அப்பா. “நீ உள்ளேயே இரு. நான் பச்சைக் கொடி காட்டினபிறகு வந்தால் போதும்” என்று உத்தரவு இட்டுவிட்டு வாசலில் வந்து நிற்பார்.
ஒரு சுமங்கலி தண்ணீர்க்குடத்துடன் சாலையில் நடந்துபோவதைப் பார்த்தவுடன் “நல்ல சகுனம். உடனே வா” என்று மகனை அவசரமாக அழைப்பார். அப்போது பார்த்து “அம்மாவிடம் சொல்லிக்கொண்டு வருகிறேன்” என்று சில நிமிடங்கள் தாமதம் பண்ணி விடுவான் என் நண்பன். அவன் வருவதற்குள் சுமங்கலி போய் ஒரு கழுதை (மூதேவியின் வாகனமான அது நல்ல சகுனமாயிருக்க வழியில்லை) எதிரே வரும். “டூ லேட். மறுபடியும் உள்ளே போ” என்று கோபமாக இரைவார் தந்தை. அந்தக் கழுதை அதற்குள் கத்த ஆரம்பித்தால் (நல்ல சகுனம்) அவனைப் போக அனு மதிப்பார். ஆனால் அதற்குள் பஸ் போய்விடமுடியும். இது மாதிரி ஓரிரண்டு முறை அவர் வாயில் விழுந்தபின், ஒரு மணி நேரம் முன்னதாகவே எப்பொழுது நல்ல சகுனம் அமைகிறதோ அப்போதே கிளம்பி எங்கள் வீட்டுக்கு வந்துவிடுவதன் மூலம் பிரச்சினையைத் தீர்த்து வைத்தான் பரமாத்மா.
*
1. இந்த அதிசயமான பெயர் அவனது வீடு, உற்றார் உறவினர் அளவில்தான் புழங்கியது. கல்லூரியில் அவன் ‘பத்மநாபன்’ என்றுதான் அறியப்பட்டான். அதுதான் அவனுடைய ‘உத்தியோகபூர்வமான’ (Official) பெயர். நமது தாத்தாக்களின் பெயர்கள் சிலசமயம் நிகழ்காலப் ஃபாஷனுடன் (fashion) ஒத்துப்போவதில்லை என்பதுதான் பிரச்னை.
2. அந்நாளில் ரயில் என்றால் நிஜமாகவே ‘புகைவண்டி’யாகத்தான் இருந்தது. இரவு முழுதும் பிரயாணம் செய்து சென்னை போய்க் காலையில் இறங்கும்போது சட்டை முழுதும் கரி படிந்திருக்கும். முன்னால் இருக்கும் கம்பார்ட்மெண்டில் ஏறியிருந்தால் கரிப்பூச்சு இன்னும் கூடுதலாயிருக்கும். டீசல், எலெக்ட்ரிக் இன்ஜின் வராத நிலக்கரி காலம்.
3. சொல்லப்போனால் அன்று எங்கள் ஊரில் பேருந்துகள் என்றாலே வெளியூர் செல்பவைதான். உள்ளூர்ப் பேருந்துகள், அதாவது டவுன் பஸ்கள் எதுவும் கோய முத்தூரைவிடச் சின்ன நகரங்களில் ஓடவில்லை. பொடிநடையில் முடித்துவிடக் கூடிய ஒரு மைல், இரண்டு மைல் தூரங்களைக் கடப்பதற்கு இரண்டணா பஸ்சார்ஜ் அழுவதற்கு தாராபுரத்துக்காரர்கள் எவரும் தயாராயிருக்கவில்லை. “கையும் காலும் நன்றாகத்தானே இருக்கிறது” என்பார்கள்.
4. அந்நாளில் ஹோல்டால் எனப்படும் படுக்கையும் இருப்பதுண்டு. படுக்கைக்கு லக்கேஜ் கட்டணம் கிடையாது என்று வெள்ளைக்காரன் காலத்தில் இருந்து ரயில்வேக்காரர்கள் மனமுவந்து ஒரு ‘இலவசம்’ கொடுத்திருந்தார்கள். கல்லூரி மாணவர்கள் வெயிட் அதிகமாயிருக்கும் பாடப் புத்தகங்களை அதற்குள் பதுக்குவதும் உண்டு. சலுகையின் துஷ்பிரயோகம் தான் என்றாலும், “சின்னப் பசங்கதானே” என்று ஸ்டேஷன் அதிகாரிகளும் இதைக் கண்டுகொள்வதில்லை. அவர்களும் மாணவப் பருவத்தில் அதே வேலையைச் செய்திருக்கக்கூடும் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்..


விளையாட்டுச் சாமான் அல்லது விபரீதக் கொலை
எஸ்.வி.ராமகிருஷ்ணன்
அறுபதாண்டுகள் முன்னால் (அதாவது ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பதுகளில்) தமிழில் ஜனரஞ்சக நாவல்கள் என்று பார்த்தால் முன்னணியில் நின்றவை ஆரணி குப்புசாமி முதலியார் மற்றும் வடுவூர் துரைசாமி அய்யங்காரின் எழுத்துக்கள். இத்தனைக்கும் அந்த இரண்டு எழுத்தாளர்களும் அப்போதே -வடுவூரார் 1940லும் ஆரணியார் அதற்கும் பதினைந்து ஆண்டுகள் முன்னேயும் – காலமாய் விட்டிருந்தார்கள். ஆனால் அவர்களின் நாவல்கள் ஒவ்வொரு நூல்நிலையத்திலும் (நூலகம் என்ற சொல் அப்போது புழக்கத்தில் இல்லை. லைப்ரரிக்கு தமிழ் வார்த்தை நூல்நிலையம்; ரீடிங்ரூமுக்கு வாசகசாலை) நிறையவே காணப்பட்டது மட்டுமல்ல, அவை எப்போதும் சுற்றிலேயும் இருந்தன என்பதும் நினைவிருக்கிறது. அவை இரண்டிலேயுமே இலக்கிய நயம், முக்கியத்துவம், எதுவும் கிடையாது. ஆனால் படிக்க சுவாரசியமாயிருக்கும். பொழுதுபோக்கு இலக்கியம் எனலாம்.
இவர்களில் ஆரணி குப்புசாமி முதலியாரின் நவீனங்கள் (நாவலுக்கு அன்றைய தமிழ்ப்பெயர்) முழுக்க முழுக்க ஆங்கில நாவல்களின் தமிழாக்கம். வேண்டுமென்றேதான் நான் மொழிபெயர்ப்பு என்று சொல்லவில்லை. ஆங்கிலக்கதைகளை அப்படியே எடுத்துக்கொண்டு அதில் வரும் பாத்திரங்கள் மற்றும் ஊர் பெயர்களை முழுவதும் அவர் தமிழ்ப்படுத்தி விடுவார். லண்டன் லட்சு மணபுரி ஆகிவிடும். பாரிஸுக்கு பருதிபுரம்.
மேடலின் என்ற கதாநாயகி பத்மாசனி என்றும், எட்வர்ட் ஸ்மித் என்ற கதாபாத்திரம் ராஜசேகரன் என்றும் புனர் நாமகரணம் செய்யப்படுவார்கள். அவர் கதையை மாற்றுவதில்லையாதலால் அதன் சூழல் என்னமோ மேனாட்டுப்பாணியில் தான் இருக்கும். அந்த நாகரிகம் முதலியாருக்கு ஏற்புடையதல்ல. அதை அவர் ஆங்காங்கே தெளிவுபடுத்தி விடுவார். எப்படியென்றால் ஒவ்வொரு அத்தியாயத்திலும் நடுநடுவே ஒரு சின்ன உபன்னியாசம் செய்திருப்பார். அதன் ரீதி பின்வருமாறு இருக்கும்: “பார்த்தீர்களா வாசகர்களே, மேலே விவரித்த கேடுகள் அனைத்தும் மேனாட்டு நாகரிகத்தில் ஸ்திரீ புருஷர்கள் நெருங்கிப் பழகுவதால் விளையும் அனர்த்தம் அன்றோ? இதை உணராது நம் நாட்டினர் சிலர் ஐரோப்பியர் போலவே நமது தேசத்திலும் ஆடவரும் பெண்டிரும் சேர்ந்து போஜனம் செய்ய வேண்டும் நடனம் ஆடவேண்டும் என்று சொல்லுகிறார்களே, என்ன மதியீனம்!” என்று தன் கருத்துகளைச் சொல்லிவிட்டு “இது நிற்க. நமது பத்மாவதி என்ன ஆனாள் என்று கவனிப்போம்” என்று மீண்டும் கதைக்கு வருவார்.
ஆரணி குப்புசாமி முதலியாரின் நாவல்கள் ரெயினால்ட்ஸ் என்ற 19ஆம் நூற்றாண்டு ஆங்கில நாவலாசிரியரின் கதைகளைத் தழுவி எழுதப்பட்டவை என்று பரவலாகச் சொன்னார்கள். ஆனால் இது பொத் தாம்பொதுவாகச் சொல்லப்பட்ட ஒரு கருத்து தான் என்று கூறவேண்டும். நிச்சயமாக அவரின் எல்லா நவீனங்களும் ரெயினால்ட்ஸிடமிருந்து எடுக்கப்படவில்லை. அவரது மூலங்கள் அனைத்தும் மேனாட்டு நாவல்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம்.. உதாரணமாக பிரசித்தி பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் அலெக்ஸாந்தர் தூமாவின் (Alexander Dumas) மாண்டி க்ரிஸ்டோ பிரபு என்ற நாவலைத் தமிழில் செய்த முதலியாரது தமிழாக்கம் (இது அவரது புத்தகங்களிலேயே தடிமனானது கூட) ‘தீன தயாளன் அல்லது துஷ்ட நிக்கிரக சிஷ்ட பரிபாலனம்’ என்ற தலைப்பில் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்தத் தமிழ் நாவலிலும் தூமாவின் Count of Monte Cristo ஆனவர் மாண்டி கிரிஸ்டோ பிரபுவாகவே வருவார். ஆனால் அவரது பழைய காதலி மெர்சிடெஸ்ஸின் பெயர் மீனாள் என்று மாற்றப்பட்டிருக்கும். முதலியாரின் ‘ஆனந்த சிங்கின் அற்புதச்செயல்கள்’ என்ற புத்தகத்தில் (இது முதலில் ஆனந்த போதினி பத்திரிகையில் தொடராக வந்தது) வரும் சில செயல்களாவது ஆர்தர் கோனன்டாயிலின் ஷெர்லக் ஹோம்ஸ் கதைகளில் இருந்து வந்தவை என்று தெரிகிறது.
முதலியார் தனது நாவல்களின் பெயர்களைத் தன் வாசகர்களின் கவனத்தைக் கவரும் வகையிலும் அவர்களைப் படிக்கத் தூண்டுமாறும் வைத்திருப்பார். அந்தக்காலத்து வழக்கப்படி அவற்றில் பலவற்றிற்கும் இரட்டைத் தலைப்புகளும் இருக்கும். உதாரணமாக ‘விளையாட்டுச் சாமான் அல்லது விபரீதக்கொலை’. கதையே 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய புதிய யுத்தியான ‘தபால் குண்டு’டன் தொடங்கும். ஒரு பிரபுவின் பிறந்தநாளை ஒட்டி அவரது மாளிகையில் நடை பெறும் ஆடம்பரமான விழாவின் போது அவருக்கு வரும் ஒரு பிறந்தநாள் பரிசுப் பார்சலை அவர் நண்பர் குழாம் புடைசூழ ஆரவாரத்துடன் திறப்பார். அந்தோ! அவர்கள் எவரும் எதிர்பார்த்திரா வண்ணம் பார்சலுக்குள் பதுக்கப்பட்டிருந்த வெடிகுண்டு பலத்த சத்தத்துடன் வெடித்துச்சிதறி அவரைக் கொன்று விடும்1. இந்த திடுக்கிடும் சம்பவத்துடன் முதல் அத்தியாயத்தை முதலியார் முடித்து விட, ஆனந்தபோதினிக்காரர்கள் இரக்கமில்லாமல் ‘தொடரும்’ என்று போட்டு விடுவார்கள். திக் திக் என்று இதயம் அடித்துக்கொள்ள வாசகர்கள் அடுத்த இதழுக்காக ஆவலோடு காத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் என் தலைமுறையினருக்கு இந்தக் கஷ்டம் இருக்கவில்லை. ஆனந்தபோதினி பத்திரிகை வெகுநாள் முன்பே நின்று போயிருந்தாலும், அவர்களின் பிரசுராலயம் ஆரணியாரின் முழு நாவல்களையும் அச்சிட்டு வைத்திருந்தது.. நான் மேலே சொன்னதுபோல் அந்நாவல்களும் நூல்நிலையங்களில் தாராளமாகவே கிடைத்தன. மின்சார மாயவன், தபால் கொள்ளைக்காரர்கள், இரத்தினபுரி ரகசியம், மதனகல்யாணி என்று அவருடைய நாவல்களை லிஸ்ட் எடுத்தால் அவைடஜன் கணக்கில் நீளும்..
முதலியாரின் நாவல்களில் பிரபுக்களும் சீமாட்டிகளும் நிறையவே உலா வருவார்கள். பருதிபுரத்தின் பிரதான சாலையில் ஒரு உயரமான கட்டடம் இருக்கும். அதன் சாளரங்களில் திரைச்சீலைகள் (curtains) தொங்கவிடப்பட்டிருக்கும். சூரியன் அஸ்தமித்தபிறகு நாணயமாக உடைதரித்த ஒரு மாது உயர்தரமான வெள்ளைக்குதிரைகள் பூட்டிய வண்டியில் வந்திறங்கி அதன் நுழைவாயிலில் மணியடிப்பாள். தீபம் ஏந்திய ஒரு பணிப்பெண் உள்ளேயிருந்து வந்து கதவைத்திறப்பாள். இவளைக் கண்டதும் வந்தனமளித்து (வணக்கம் செலுத்தி) உள்ளே அழைத்துச் செல்வாள். சிலசமயங்களில் ஆடம்பரமாக உடையணிந்த ஒரு கனவான் கிலமாகக் காணப்படும் ஒரு புராதன வீட்டில் நுழைவார். இத்தியாதி. மொத்தத்தில் முதலியாரது நடையும் பிரயோகங்களும் ஒரு தனித்துவம் கொண்டிருந்தன.
பின்குறிப்பு :
1. இந்தத் தந்திரோபாயம் ‘அராஜகவாதிகள்’ (Anarchists) என்றழைக்கப்பட்ட, இன்றைய நமது நக்ஸலைட்டுகள் போன்ற, ஐரோப்பிய பயங்கரவாத இயக்கத்தாரால் அப்போது கையாளப்பட்டது என்று நினைக்கிறேன். சமூகநீதி கோரி இவர்கள் அரசர்களையும் அரசியல் பிரமுகர்களையும் கொல்ல முற்பட்டனர். பின்னாட்களில் I.R.A. எனும் ஐரிஷ் பயங்கரவாதிகளும் இந்த உத்தியைப் பெரிய அளவில் பயன்படுத்தினர். 1980களில் நான் சிலகாலம் இங்கிலாந்தில் இருந்தபோது இது பிரித்தானிய அரசுக்கு ஒரு தலைவலியாக இருந்தது. அஞ்சல் துறையினர், பார்சல்களை எச்சரிக்கையுடன் எப்படித் திறப்பது என்பது குறித்து விளம்பரங்கள் வெளியிட்டார்கள்.
*
தெலுங்கானா பிரச்சினை நடந்தவையும் நடக்கக் கூடியவையும் |
![]() |
![]() |
|||
|
|||||
சில எரிமலைகள் பல ஆண்டுகள் மௌனமாக இருந்துவிட்டு திடீரெனக் குமுறத் தொடங்கும். எப்போது வேண்டுமானால் லாவாவைக்கக்கலாம், சிலசமயம் வெடிக்கவும் செய்யலாம் எனக் கேட்டு இருக்கிறோம். இன்று தெலுங்கானா பிரச்சினை அப்படித்தான் இருக்கிறது. நாற்பதாண்டு முன் முதன்முறை அவ்வூருக்குப் போனபோது கேட்டது: ஹைதராபாத் வீதியில் யாரோ பேசிக்கொண்டு நடக்கிறார்கள். “தூகானம் குல்லா உந்தா?” என்று கணவன் மனைவியைக் கேட்டது என் கவனத்தைக் கவர்ந்தது. தமிழில் சொல்வதானால் “கடை திறந்திருக்கிறதா” என்று கேட்கிறார். அவருடைய கேள்வியில் இருக்கும் மூன்று சொற்களில் தூகானம் (அதாவது கடை) என்பது தூகான் என்ற ஹிந்தி வார்த்தையின் மருவிய ரூபம், குல்லா (திறந்து) என்பது அசல் ஹிந்தியேதான். உந்தா (உள்ளதா, இருக்கிறதா) என்பது மட்டுமே தெலுங்கு. அவர் தெலுங்கு பேசுவதாகத்தான் எண்ணியிருக்கிறார். ஆனால் இதைத் தெலுங்கு என்று அசல் ஆந்திரர்கள் அதாவது கூட்டு சென்னை ராஜ்யத்திலிருந்து* 1953ல் பிரிந்து ஆந்திரம் என்று ஒரு தனிமாநிலம் – சுதந்திர இந்தியாவின் முதல் பாஷாவாரி மாகாணம்-(அமைத்தவர்கள்) ஒப்புக்கொள்ளமாட்டார்கள். பல நாடகங்களிலும் திரைப்படங்களிலும் சுவையைக் கூட்டும் தமிழின் ‘மெட்ராஸ் பாஷைÕயைப் பற்றி சோழநாட்டுத் தமிழர்கள் நினைப்பது போலத்தான் அவர்களுடைய பேச்சுத் தெலுங்கு. இதைவிட சுத்தத் தெலுங்கு, குறிப்பாக கடற்கரை ஜில்லாக்களின் தெலுங்கு சுந்தரத் தெலுங்கு. அதைப் பற்றி அவர்களுக்குப் பெருமையும் உண்டு. விஜயவாடாவில் இதே கேள்வி “அங்காடி தீசி உந்தா” என்றிருந்திருக்கும். இந்த உதாரணம் தினசரி வாழ்க்கையில் காணப்படும் ஆந்திரா-தெலுங்கானா வித்தியாசத்தின் ஒரு பிரத்தியட்ச வெளிப்பாடு. சொல்லப் போனால் வெளிப்பாட்டின் பல அம்சங்களில் ஒன்று. இதுபோல் பற்பல. 2009 நவம்பர் இறுதியில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டி.ஆர்.எஸ்.) தலைவர் சந்திரசேகர ராவ் தெலுங்கானா வேண்டி ‘சாகும்வரை உண்ணாவிரதம்’ இருக்கப்போகிறேன் என்று ஆரம்பித்தபோது யாரும் அதை அத்தனை சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. அவர், கட்சி அரசியல் நடத்தும் ஒரு “இந்தக் காலத்து அரசியல்வாதி”தான். ஆந்திர மாநிலம் வேண்டி உயிரையே விட்ட அந்தக் காலத்து பொட்டி ஸ்ரீராமுலுவைப் போல் (1953) தியாகியெல்லாம் கிடையாது என்று எல்லோருக்கும் தெரியும். அந்த உண்ணாவிரதத்தின் விளைவு. இத்தனை தீவிரமாயிருக்கும் என்று நிச்சயமாக, சொல்லப் போனால் சந்திரசேகர ராவ் உள்பட, எவருமே எதிர்பார்க்கவில்லை. 2009 பொதுத் தேர்தலில் தனித் தெலுங்கானா மாநிலம் என்ற கோரிக்கையைப் பிரதானமாக முன்வைத்து பெரிய எதிர்பார்ப்புகளுடன் தேர்தல் களத்தில் இறங்கிய டி.ஆர்.எஸ். எதிர்பாராத தோல்வியினால் துவண்டு போயிருந்தது. தெலுங்கானா பிரிய வேண்டுமென்று சொன்ன ஒரே அகில இந்தியக் கட்சியான பி.ஜே.பி.யின் நிலை அதைவிட மோசம். தேர்தலில் தெலுங்கானா பிராந்தியத்தில் கூட முதல்வர் ராஜசேகரரெட்டியின் காங்கிரஸ் நன்றாகவே செய்திருந்தது வருக்கும் வியப்பைத் தந்தது.. அண்மைக் காலத்தில் அப்பகுதியில் கிளைத்து வந்த தெலுங்கானா உணர்வு இப் போது களைத்துத் தூங்கிக்கொண்டிருந்தது போலத் தென்பட்டது. வெற்றிபெற்று மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்த ராஜ சேகரரெட்டி “நான் இருக்கும்வரை தெலுங்கானா பிரிவது என்ற பேச்சுக்கே இடமில்லை” என்றே தோள் தட்டி அறிவித்தபோது அதை எவரும் தட்டிக்கேட்கவில்லை. இந் நிலையில் முதல்வர் ரெட்டியின் திடீர் மரணத்துக்குப்பின் ஆளுங்கட்சியினரிடையே தோன்றிய உட்கட்சிப் பூசலும் குழப்பமும் (முக்கியமாக, பழைய முதல்வரின் மகன் ஜகன்மோகன் ரெட்டி முதல்வர் பதவி வேண்டிக் கொடி பிடித்தது) கண்ட சந்திரசேகர ராவுக்கு சிறிது நம்பிக்கை மீண்டது. அரசியலில் கொஞ்சம் சலசலப்பை ஏற்படுத்தி, பலவீனமடைந்திருந்த தன் கட்சிக்குப் புத்துயிரூட்டுவதற்கு இதுதான் தருணம் இன்று கருதியே சந்திரசேகர ராவ் உண்ணாவிரதம் அறிவித்தார். உயிருக்கு ஆபத்து தேடிக்கொள்ள அவர் தயாராயில்லை. அதனால், இன்று எல்லா அரசியல்வாதிகளும் செய்வதுபோலவே தொடங்கி சில நாட்களிலேயே எதிர்க்கட்சித் தலைவர்களிலிருந்து ஆளுங்கட்சியினர் வரை பலரும் உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு விடுத்த கோரிக்கையை ஏற்று, கௌரவமாக விரதத்தை முடித்துக் கொண்டார். அப்போதுதான் ஒரு திடீர்த்திருப்பம் நிகழ்ந்தது. தெலுங்கானாவில் பரவலாக, முக்கியமாக மாணவர்களிடையே நீறுபூத்த நெருப்பு போல இருந்துவந்த தனித் தெலுங்கானா உணர்வு இந்த உண்ணா விரதத்தை சாக்காகக் கொண்டு திடீரென்று கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்திருந்தது. ஹைதராபாத்தின் மூத்த பத்திரிகையாளர் ஒருவர் அப்போது என்னிடம் தனிப்பட்ட முறையில் நாங்கள் பேசிக்கொண்டிருக்கையில் தனது கணிப்பைத் தெரிவித்தார் (அப்போது அவர் இதைப் பேப்பரில் எழுதியதாகத் தெரியவில்லை) அதில் இரண்டு விஷயங்கள் இருந்தன. ஒன்று: இந்தத் தடவை, முன்னால் (1969ல்) ஆனது போல் தீ அடங்காது, தொடரும். இரண்டு: ஆனால் சந்திரசேகரராவ் இதனால் அதிகப் பயன் அடையமாட்டார். ஏனெனில் இயக்கத்தையே மாணவ சமுதாயம் தன் கையில் எடுத்துக் கொண்டுவிட்டதால் என்ன ஆகும் என்று சொல்லமுடியாது ஆனால் ராவுடைய தலைமையை அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது நிச்சயம் என்பது அவரது ஹேஷ்யம். அவரது கணிப்பு ரொம்பவே சரி என்று ஒரு வார காலத்திலேயே புலனாயிற்று. சந்திரசேகரராவ் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளுகிறார் என்று கேட்டதும் மாணவர்கள் பொங்கியெழுந்தார்கள். அவரைச் சூழ்ந்துகொண்டு முற்றுகையிட்டார்கள். இந்த நிலையில் அவர் விரதத்தை நிறுத்தினால் உத்வேகம் பெற்று வந்த இயக்கம் மறுபடி மந்தகதிக்குத் திரும்பும் என அவர்கள் பயந்தனர். கடைசியில் ராவ் வேறுவழியின்றி உண்ணா நோன்பைத் தொடரலானார். இந் நிலையில் அரசு அவரைக் கைது செய்தது. அவரது உடல்நிலை சீர் குலையவே அவரை நிம்ஸ் (NIMS) என்ற அரசினர் ஆஸ்பத்திரியில் வைத்தது. சிலநாளிலேயே அவர்நிலை கவலைக்கிடமாக, எல்லா அரசியல் தலைவர்களும் உண்ணா விரதத்தைக் கைவிடுமாறு அவருக்கு வேண்டுகோள் விடுக்கலாயினர். ஆனால் இம்முறையும் அப்படிச் செய்வது அரசியல் தற்கொலையாக முடியும் என்பதை நன்குணர்ந்தராவ், அதைவிட தான் ஒரு தெலுங்கானாவின் பொட்டி ஸ்ரீராமுலுவாக சரித்திரத்தில் இடம்பெறுவது சிலாக்கியம் எனக் கருதி விரதத்தைத் தொடர்ந்தார். ஆனால் மத்திய அரசு இன்னொரு 1952 டிசம்பரை** எதிர்கொள்ளத் தயாராயில்லாத நிலையில் டிசம்பர் 9ம் தேதி நள்ளிரவில் உள்துறை மந்திரி சிதம்பரம் டி.வி.யில் தோன்றி தனித் தெலுங்கானா அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று அறிவித்தார். உடனே ராவ் உண்ணாவிரதத்தை முடித்தார். ஹைதராபாதில் வெற்றிக் களியாட்டங்கள் நிகழலாயின. டெல்லி முற்றிலும் எதிர்பாராத வகையில் இது ஆந்திரப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பிரதானமாக அப் பிராந்தியத்திலே நிலைகொண்ட பிரஜாராஜ்யமும்(நடிகர் சிரஞ்சீவியின் கட்சி) தெலுங்கு தேசமும் உடனேயே ஐக்கிய ஆந்திரம் என்ற நிலைப்பாட்டை எடுத்தனர். பொது ஜன உணர்ச்சியின் தீவிரத்தைக் கண்டு மருண்டுபோன ஆந்திரப் பிராந்திய காங்கிரஸ் எம்.பி.க்களும் எம்எல்ஏக்களும் அதையே இன்னும் கூட ஆவேசமாக முழங்கலாயினர். இல்லாவிடில் அவர்கள் தங்கள் தொகுதி மக்கள் முகத்தில் விழிக்க முடியாதென்ற நிலை. சிலநாள் முன்புதான் தனித் தெலுங்கானா கொடுக்கிறோம் என்ற மத்திய அரசு இப்போது தர்மசங்கடத்தில் சிக்கியது. ஆந்திரப் பிரதேசம் காங்கிரஸுக்கு முக்கியமான மாநிலமென்றால், அதன் இரு பகுதிகளில் ஜனத்தொகை, தொகுதிகள் எண்ணிக்கை, பணச்செழிப்பு அனைத்திலும் முன்னின்ற ஆந்திரம்தான் தெலுங்கானாவைவிட அதற்கு முக்கியமாயிருந்தது. தவிர, அங்கேதான் தற்போதைய நிலையில் வெற்றி வாய்ப்பும் அதிகம். தனித் தெலுங்கானாவை ஆதரித்துவந்த டி.ஆர்.எஸ். பி.ஜே.பி. இரண்டின் செல்வாக்கும் தெலுங்கானாவில் மட்டுமே. ஆந்திரத்தில் பலம்படைத்த ஒரே எதிரியான சந்திரபாபுவை சிரஞ்சீவியுடன் கூட்டு வைத்துக்கொண்டு எளிதில் சமாளித்துவிடலாம் என்று காங்கிரஸ் தலைமை கணக்குப் போட்டது. (அந்தக் கணக்கு இன்றும் நீடிக்கிறது.). அதே சமயம், சிதம்பரத்தின் டிவி. அறிவிப்பைத் தொடர்ந்து, தெலுங்கானாவிலும் தனி மாநிலம் என்ற உணர்வு தினம் அதிகரித்துக் கொண்டே போயிற்று. ஐக்கிய ஆந்திரமே நல்லதென்று எண்ணும் தெலுங்கானா பிரமுகர்கள் கூட அதைத் தைரியமாய்ச் சொல்லும் நிலையில் இல்லை. சொன்னால் அவர்கள் வீடு தாக்கப்படலாம், கார் கொளுத்தப்படும் என்ற நிலை. இத்தகைய நெருக்கடிகளில் காலங்காலமாய்க் கைகொடுத்த உபாயத்தை இப்போது மத்திய அரசு கடைப்பிடித்தது. ஜஸ்டிஸ் ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் ஒரு கமிஷனை நியமித்து தெலுங்கானா அமைப்பது குறித்து அனைத்துத் தரப்புகளின் அபிப்பிராயத்தைக் கேட்டறிந்து, ஆராய்ந்து ஒரு வருடத்தில் ரிப் போர்ட் கொடுக்குமாறு பணித்தது. இது ஏமாற்று வேலையென்றும் சிதம்பரத்தின் வாக்கு காப்பாற்றப்படவில்லையென்றும் தெலுங்கானாவில் பலத்த கூக்குரல்கள் எழுந்தன. கல்லூரி மாணவர்கள் பெரிய அளவில் கிளர்ந்தெழ, உஸ்மானியா பல்கலைக்கழகம் ஒரு போர்க்களமாய்த் தோற்றமளித்தது. டி.ஆர்.எஸ்., பி.ஜே.பி.யின் தெலுங்கானா எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து துணைத்தேர்தலெனும் பலப் பரீட்சையை அரசின் மீது திணித்தார்கள். சில மாதங்கள் கழித்தே நடந்த அத்தேர்தலில் அவர்கள் அனைவருமே ஜெயித்தும் காட்டினார்கள். அவர்கள் விரும்பியவாறே இப்பகுதியில் தனி மாநிலக் கோரிக்கைக்கு பொதுஜன ஆதரவு இருக்கிறது என்பதை நிரூபித்து விட்டார்கள். இத்தேர்தலில் மிகப்பெரிய இழப்பு, தெலுங்கு தேசத்துக்குத்தான். காங்கிரஸ் அபேட்சகர்கள் வெறுமனே தோற்றார்கள், அவ்வளவுதான்; சந்திரபாபு கட்சியினர் டெபாசிட்டை இழந்தார்கள். இத்தனைக்கும் 2009 தேர்தலில் தெலுங்குதேசம் தெலுங்கானவில் 39 இடங்கள் பெற்றிருந்தது. (டி.ஆர்.எஸ்.ஸைப் போல் மூன்று மடங்கு.) தெலுங்கானாவில் அக்கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியாகியிருக்கிறது என்று பலர் எண்ணுகிறார்கள். ஆனால் குழப்பமான இந்த அரசியலில் எதையும் சொல்வதற்கில்லை. சரியோ தப்போ, இப்போது தெலுங்கான முழுதும் கிராமங்களிலும் சரி, நகரங்களிலும் சரி… தனி மாநிலம் வேண்டும் என்ற விருப்பம் பரவலாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆந்திரர்களுக்கும் மற்ற வெளியார்களுக்கும் எதிரான வெறியாகவும் உருவெடுத்துக்கொண்டிருப்பது கவலை தரும் விஷயம். 1969ல் தனித் தெலுங்கானா வேண்டி ஒரு பலமான போராட்டம் நடந்தது. அரசியல் சதுரங்கத்தில் வல்லவரான இந்திரா காந்தி முதலில் விஷயத்தை ஆறவைத்துப் பின் அதன் தலைவர் சென்னா ரெட்டியையே ஆந்திரப் பிரதேச முதல்வராக்கி, அவருடைய பிரஜா சமிதி கட்சியையும் காங்கிரஸில் இணைக்க வைத்தார். இந்தமுறை கிளர்ச்சி பலமாதங்கள் கடந்தும் ஆறுவதாகக் காணோம். தற்போதைக்கு எரியவில்லையே தவிர, புகைந்து கொண்டேயிருக்கிறது. டெல்லியில் இந்திராவைப்போலவோ ஹைதராபாத்தில் ராஜசேகர ரெட்டியைப் போலவோ சாலக்காக கையாளுவோர் (பீமீயீt லீணீஸீபீறீவீஸீரீ) எவரும் இல்லை. இரண்டு கேள்விகள் – கிரேக்கப் புராணத்தில் வரும் டெமோ கிளின் கத்தி (ஞிணீனீஷீநீறீமீs’ sஷ்ஷீக்ஷீபீ) போல் தலைக்குமேல் தொங்கிக் கொண்டிருக்கும்போது வெளிநாட்டிலிருந்தும் சரி உள்நாட்டிலிருந்தும் சரி, முன்போலப் பெரிய முதலீடுகள் வருவதில்லை. போனவருடம் வரை அசுரவேகத்தில் வளர்ந்து வந்த ஹைதராபாத் அம்முதலீடுகளை பெங்களூருக்கும் சென்னைக்கும் இழந்துவிட்டு ஸ்தம்பித்து நிற்கிறது. முதலீட்டாளரைத் தயங்க வைக்கும் அவ்விரண்டு வினாக்கள்: ஒன்று: இன்றைய ஆந்திரப் பிரதேசம் ஆந்திரம், தெலுங்கானா என்று பிரிக்கப்படுமா.? இரண்டாவது கேள்வி (அவர்களுக்கு இன்னும் முக்கியமானது): பிரிக்கப்பட்டால் ஹைதராபாத்தின் அந்தஸ்து என்ன? தெலுங்கானாவைப் பிரிப்பதில் மத்திய அரசுக்குப் பல கஷ்டங்கள் இருக்கின்றன. 1. இதைக் கொடுத்தால் விதர்ப்பா, கூர்க்காலாந்து என்று பக்கம் பக்க மாக பிரிவினைக் கிளர்ச்சிகள் வீறு கொண்டு எழும்பும். அது பெரிய தலைவலி. 2. பிரிவினை நதிநீர் பங்கீடு முதல் பல விஷயங்களிலும் சச்சரவுக்கு வழிவகுக்கும். 3. ஆந்திரர்கள் தெலுங்கானா பிரிய சம்மதிக்கலாம், ஆனால் பெரிதும் அவர்களால் (அவர்களுடைய முதல், அவர்களின் தொழில்திறன்) வளர்ந்த ஹைதராபாத் பெரு நகரை இழக்கச் சம்மதிக்கமாட்டார்கள். ஹைதராபாத்திலேயே பிறந்து வளர்ந்த இரண்டாவது தலை முறை பல லட்சம் ஆந்திரர்கள் பெருநகரில் இருக்கின்றனர். தொழிலதிபர்களில் முக்கால்வாசியும் அவர்களே. நகரம் தெலுங்கானவுக்குப் போனால் அவர்களுக்கு நியாயம் கிடைக்காதென்று அஞ்ச இடமிருக்கிறது. இதற்கெல்லாம் ஒரு தீர்வு, நகரை யூனியன் பிரதேசமாக்கி இரண்டு மாநிலங்களுக்கும் தலைநகரமாக்குவது. அப்படியிருந்தால்தான் முதலீட்டாளர்களும் தொழில் வளர்ச்சியும் திரும்புவதற்கும் ஏதுவாகும். 3. இதிலும் சில சிரமங்கள் இருக்கின்றன. அ. சண்டீகரைப் போலன்றி இத்தலைநகர் இரு ராஜ்யங்களுக்கு மத்தியில் அமையாமல், தெலுங்கானாவுக்கு நட்டநடுவே ஆந்திரத்திலிருந்து நூறுமைல் தூரத்திலிருக்கும். ஆ. தெலுங்கானர்கள் இதை எதிர்ப்பார்கள். மொத்தத்தில் பார்க்கும்போது ஸ்ரீகிருஷ்ணா ரிப்போர்ட் எப்படியிருந்தாலும் டெல்லி அரசு தெலுங்கானாவைத் தள்ளிப் போட்டுக் கொண்டே போகக்கூடும். அதற்கு இருக்கும் ஒரு அனுகூலம், நாடாளுமன்றம், ஆந்திர சட்டசபை இரண்டிற்குமே இன்னும் மூன்றரை ஆண்டுகளுக்குமேல் ஆயுள் இருப்பது. அதற்குள் எவ்வளவோ நடக்கலாம், அப் புறம் பார்க்கலாம் என்ற யோசனை இருக்கிறாற்போல் தெரிகிறது. அடிக்குறிப்பு
|
எஸ். ராமகிருஷ்ணன் : ஏற்புரை
போர்ஹேஸ் கூறுவார். “உலகத்திலேயே மிகச் சிறந்த கற்பனா கதாபாத்திரங்கள் வாசகர்கள்தான்’’ என்று. வாசகன் என்கிற முகமூடிதான் மிக எளிமையானது. அதை எப்போது வேண்டுமானாலும் மாட்டிக்கொள்ளலாம். மார்க்வெஸ், தஸ்தாயெவ்ஸ்கி ஆகியோர் முன் இன்றும் நான் வாசகன்தான். ஒரு ஷேக்ஸ்பியரைப் படிக்கிறீர்கள் என்றால் உங்களுக்குள்ளும் ஒரு ஷேக்ஸ்பியர் இருக்கிறார் என்றுதானே அர்த்தம்.
என்னுடைய கட்டுரைகள் புனைவுகள் சார்ந்து எழுதப்படுகின்றன. புனைவுகள் ஒரு எழுத்தாளனுக்கு பல சாத்தியங்களை, பரிசோதனை முயற்சிகளை வழங்குகிறது.
ஒரு மனிதன் எல்லாவற்றையும் சீக்கிரம் மறந்து விடுகிறான். நினைவுகள்தான் தொடர்ந்து ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கிறது. எழுத்தாளர்கள் தொடர்ந்து அதைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள். எழுத்தாளன் உலகத்துக்கு எதிராக எதிர்வினை தொடுக்கிறான். அந்த எதிர்வினையை உண்மையாகச் செய்கிறான். அதில் பாசாங்கு இல்லை. போலித்தனம் இல்லை. எப்போதுமே எழுத்தாளன் தன் அகக்குரலுக்கு பயப்படுகிறான். இன்று தமிழில் எழுதப்படும் அனைத்து படைப்பாளிகளின் எழுத்துகளிலும் முன்னோடிகள் இருக்கிறார்கள். அவர்களின் மரபு தொடர்கிறது. இன்று வெளியிடப்பட்ட நான்கு நூல்களிலுள்ள கட்டுரை மற்றும் கதைகள் நான் இந்த உலகத்தின் மீது காட்டும் எதிர்வினை அல்லது அக்கறை என்று சொல்லலாம்.
எஸ்.வி.ராமகிருஷ்ணன் கட்டுரைகள் – 0 1
கும்பகோணம் சென்ற போது ஒரு ஹோட்டலில் திரு எஸ்.வி.ராமகிருஷ்ணனை எதேச்சையாக சந்தித்து கொஞ்சம் நேரம் பேசிக்கொண்டிருந்தேன். “நீங்கள் சமீபத்தில் எழுதிய கட்டுரைகளை எனக்கு அனுப்பினால் சந்தோஷப்படுவேன்” என்றேன். மறக்காமல் அவைகளை எனக்கு மூன்று கட்டுரைகளை மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்தார். என் வலைப்பதிவில் அவைகளை பதிவு செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன். முதலில் ‘மொட்டைக் கடுதாசி’
மொட்டைக் கடுதாசி – எஸ்.வி.ராமகிருஷ்ணன்
சுமார் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் கவர்னர் ஜெனரல் டல்ஹெளஸி பிரபு மலிவுத்தபால் முறையை அறிமுகப்படுத்தியதிலிருந்து தொடங்கி இந்தியா முழுவதும் செழித்து வளர்ந்ததொரு பயிர் மொட்டைக் கடுதாசி. சுமார் நான்கு தலைமுறைகளுக்கு (120 வருடங்கள்) ஆயிரக்கணக்கான திருமணங்களை வெற்றிகரமாக நிறுத்தியும் பல்லாயிரக்கணக்கானவர்களின் (குறிப்பாகப் பெண்களின்) வாழ்க்கையை நாசமாக்கியும் அட்டகாசமாகக் கொடிகட்டி பறந்தது இந்தப் பழம்பெரும் institution. பின்னர் பிரதாபம் மங்கத் தொடங்கிய மொட்டைக் கடிதம் இன்று மட்கி மட்கி மடியும் தருவாய்க்கே வந்திருப்பதாகத் தெரிகிறது. ஏனாம்? ஆராய்ந்து பார்த்தால் கிடைக்கும் பதில் இன்னும் வினோதமாக இருக்கிறது. காலம் என்ற பரிமாணமே காலங்காலமாக இருந்தாற்போல் இல்லையாம். காலமே அவசரக் கோலம் கொண்டு சுருங்கிவிட்டதாம். அதாவது எவருக்கும் நேரம் இல்லையாம். பொழுதைப் போக்க வழியில்லாமல் வம்பு பேசி மகிழ்த நாட்கள் போய் இப்போது யாருக்குமே அவகாசம் இல்லாமற் போய்விட்டதாம். மொட்டைக் கடுதாசிகள் தயாரிப்பதற்கு வேண்டிய ஓய்வோ அவகாசமோ இல்லாமற் போய்விட்டதாம். உலகமே அமெரிக்காவாகி இந்தியா முழுவதும் பம்பாய் ஆகிவிட்டதாம். இந்த நிலையில் மறைந்து வரும் மொட்டைக் கடுதாசியைப் பேணி வளர்ப்பதில் எவருக்கும் அக்கறை இல்லையென்றால் அதில் அதிசயமும் ஏமி லேது தான்.
நூறாண்டு முன் வந்த (அந்தக்காலத்தில் நவீனம் என்று அழைக்கப்பட்ட) தமிழ் நாவல்கள் பலவற்றிலும் – உதாரணம் : பத்மாவதி சரித்திரம் (1898 -1900)** – ஒரு சோப்ளாங்கி வில்லன் ஒரு மொட்டைக்கடிதம் மூலம் கதை வளர வித்திடுவான். ஐம்பது அறுபது ஆண்டுகள் முன்னால் தமிழ் சினிமாக்களில் கதாநாயகிகளுக்கு கல்யாணம் நிச்சயமானவுடன் மனோகர், நம்பியார் (அல்லது கள்ள பார்ட் நடராஜனாகக் கூட இருக்கலாம்) போன்ற வில்லன்கள் ‘டாண்’ என்று காரியத்தில் இறங்குவார்கள். அவர்கள் காட்டும் முதல் கைவரிசை அநேகமாக மொட்டைக் கடிதம் எழுதுவதாகத்தானிருக்கும் சில சமயங்களில் அதற்கு நேரம் இல்லாமற் போனால் நேராக முகூர்த்ததில் ஆஜராகி தாலிகட்டும் தருணத்தில் ‘நிறுத்து’ என்று கூச்சலிட்டுக்கொண்டு போய் வாய்வழியாக அபவாதம் ஏதேனும் சொல்லுவதும் உண்டு. ஆனால் மொட்டைக் கடுதாசி மாதிரி வராது, செலவும் குறைவு. விஷம் மாதிரி வேலை செய்யும். வைத்தவர்கள் பெயர் வெளியே தெரியாமலேயே இருக்கவும் முடியும்.
ஆமாம் அரையணா (3 பைசா) கூடப் போதும். மிஞ்சிப் போனால் ஒன்றரையணா (9 பைசா) கவர். இருப்பதையும் இல்லாததையும் எழுதி அடியில் ‘உண்மை விளம்பி’ ‘உன் நலம் நாடுபவன்’ என்று ஏதாவது எழுதினால் வேலை முடிந்து போகும். கும்பகோணத்திலிருந்து ஒரு மாப்பிள்ளை வீட்டார் கோயம்புத்தூர் வந்து பெண்ணைப் பார்த்திருப்பார்கள். சம்பிரதாயமாக சொஜ்ஜி பஜ்ஜி தின்று சம்மதமும் சொல்லியிருப்பார்கள். பெண்ணுக்காகக் கொட்டாவி விட்டுக்கொண்டிருக்கும் உள்ளூர்க்கார சோதா ஒருவன் – அவன் பெண்ணுக்கு முறைப் பையனாகவும் இருக்கக்கூடும் – பெண்ணின் நடத்தை சரியில்லை என்றும் அவளுடைய காதலன் ஒருவன் சேலத்தில் இருப்பதாகவும் அவனுக்குக் கொடுக்க இஷ்டப்படாத பெற்றோர்கள் அவசரமாக விவரம் அறியாத தூரதேசப் பார்ட்டியைத் தேடி திருமணம் நிச்சயத்திருப்பதாகவும் ஒரு போடு போடுவான். “தீர விசாரித்தால் உண்மை விளங்கும்” என்று வேறு சேர்த்திருப்பான். சம்பந்திமார்கள் குழம்பிப் போவார்கள். சரி நமக்கெதற்கு வம்பு? இவளை விட்டால் வேறு பெண் இல்லையா என்று பையனின் அம்மா அபிப்பிராயப் படுவாள். கடைசியில் அவ்வாறே தீர்மானிக்கப்பட்டு “எங்கள் குலதெய்வத்துக்கு முன் பூக்கட்டி பார்த்தோம் சரியாக வரவில்லை. மன்னிக்கவும்” என்று ஒரு புருடா விடப்படும். பெண்வீட்டார் நிலை குலைந்து போவார்கள். இரண்டு மூன்று முறை இப்படி நிச்சயமாகி நின்று போனால் அதற்கப்புறம் அந்தப் பெண்ணுக்கு கல்யாணம் ஆவதே கஷ்டம்தான். ஏனென்றால் ஊராரே ‘கசமுச’ வென்று பேசத்தொடங்கி விடுவார்கள். உலை வாயை மூடினாலும் ஊர் வாயை முடமுடியுமா?இந்த நிலையில், இதுவரை எட்டாத பழத்துக்கு ஏங்கிக் கொட்டாவி விட்டுக் கொண்டிருந்த முறைப்பையனின் மடியிலேயே பழம் விழுவதற்கு நிறையவே வாய்ப்பு உண்டு.
சுவாரசியமான ஒரு இன்ஸ்ட்டியூஷன் நம்மிடையில் இருந்து மறைந்து கொண்டிருக்கிறது என்பது தெரிகிறது. அது உண்மையில் இழப்புதானா என்பது வேறு விஷயம். முன்னாளில் கதாசிரியர்களுக்கும் சினிமாக்காரர்களுக்கும் ரெடியாக எப்போதும் கைவசம் இருந்த ஒரு ப்ளாட் கை நழுவிப்போனது என்னவோ உண்மை !
** மாதவையாவின் இந்த நாவல் முதல் பாகம் 1898 லும் இரண்டாம் பாகம் இரண்டு ஆண்டுகள் கழித்தும் வெளி வந்தது.
பட்டக்காரர் சப்ளை – எஸ்.வி.ராமகிருஷ்ணன்
மொட்டைக் கடுதாசியை தொடர்ந்து மேலும் ஒரு கட்டுரை –
பட்டக்காரர் சப்ளை – எஸ்.வி.ராமகிருஷ்ணன்
தாராபுரம் போர்டு ஹைஸ்கூலில் வருடத்திற்கு ஒரு முறை எங்கள் (மாணவர்களின்) பார்வையில் மிக முக்கியத்துவம் வாய்ந்த நாள் ஒன்று வரும். அதுதான் ‘பட்டக்காரர் சப்ளை’.
பட்டக்காரர் என்றால் என்னவென்று கொங்கு நாட்டிற்கு வெளியே பிறந்து வளர்ந்தவருக்குத் தெரியாமல் இருக்கக்கூடும். பட்டக்காரர் என்பவர் கொங்கு மண்ணின் பிரதான மைந்தர்களான கவுண்டர்களின் சமூகத்தலைவர் எனலாம். நிலப்பிரபுத்துவ காலத்திலிருந்து வந்த ஒரு பட்டம், பதவி. பழைய கோட்டைப் பட்டக்காரர் நல்ல சேனாதிபதி சர்க்கரை மன்றாடியார் காமராஜர் மந்திரிசபையில் அங்கம் வகித்தது பலருக்கும் நினைவிருக்கலாம். தாராபுரத்தில் இருந்தவர் சங்கரண்டாம்பாளையம் பட்டக்காரர். அவருக்குத் தாராபுரம் அனுமந்தராயர் அக்கிரஹாரத்தில் மாளிகை போன்றதொரு வீடு உண்டு. பட்டக்காரர் அவ்வப்போது அங்கே வந்து போவாரே ஒழிய அவர் வசித்தது சங்கரண்டாம்பாளையத்தில்தான். வங்காளம் போல் நிலப்பிரபுக்களும் ஜமீந்தார்களும் தங்கள் சிற்றூரில் வதியாது நகரங்களிலேயே உல்லாசமாக் காலங்கழிக்கும் வழக்கம் அந்தக் காலத்தில் தமிழ்நாட்டில் வந்திருக்கவில்லை#. கவுண்டர் சமூகத்தைச்சேர்ந்த பிள்ளைகள் சிலர் பட்டக்காரர் வீட்டிலேயே தங்கி ஹைஸ்கூலில் படித்தார்கள்.
பட்டக்காரரின் ஒரே மகன் தாராபுரம் ஹைஸ்கூலில் படித்துவந்தவன், சில ஆண்டுகளுக்கு முன் (1930களில்) தவறிவிட்டான். இது நடந்து ஆண்டுகள் பல ஆகிவிட்டாலும், பட்டக்காரர் அந்தப் பையனின் ஞாபகர்த்தமாக அவனுடைய பிறந்த நாளில் பள்ளி மாணவ, மாணவியர்க்குத் தின்பண்டங்கள் அனுப்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அன்று காலையில் பியூன் வெங்கட்டப்பன் எல்லா வகுப்புகளுக்கும் ஒரு சர்குலர் கொண்டு வருவான். பிற்பகல் இரண்டாவது பீரியடில் பட்டக்காரர் சப்ளை இருக்கும் என்றும் அதற்குப் பிறகு பள்ளிக்கூடம் இருக்காது என்றும் அதில் கண்டிருக்கும். மதியம் உணவு இடைவேளைக்குப் பிறகு முதல் பீரியடு(2.15 லிருந்து 3 மணி) சுமாராக நடக்கும். அப்போதே பையன்களின் மனதெல்லாம் எதிர்பார்ப்பில் லயித்து இருக்கும்.
இரண்டாவது பீரியடு தொடங்கினவுடனே சாரதா விலாஸ் ஹோட்டல் ஆட்கள் கூடை கூடையாக இனிப்புகளைச் சுமந்துகொண்டு ஒவ்வொரு கிளாஸாக வருவார்கள். அடுத்த வகுப்பிற்கு அவர்கள் வந்தது தெரிந்தவுடனே எங்கள் கிளாஸிலும் கசமுசவென்று சத்தம் தொடங்கிவிடும். இந்த ஒருநாள், வாத்தியார்களும் அதற்க்கெல்லாம் ஒன்றும் சொல்ல மாட்டார்கள். அடுத்தது கூடைகள் எங்கள் வகுப்புக்கும் வந்து விடும். ஆசிரியருக்கு முன்பக்கத்தில் கூடைகளை வைத்துக்கொண்டு ஹோட்டல்காரர்கள் ஒவ்வொரு பையனுக்கும் ஒரு லட்டு, ஒரு ஜாங்கிரி, ஒரு மைசூர்பாகு, தவிர பக்கோடா, காராபூந்தி இத்தனையும் விநியோகிப்பார்கள். அவற்றை வாங்கிக்கொண்டு குழந்தைகள் தலை கால் புரியாத சந்தோஷத்துடன் வீட்டுக்கு ஓடுவார்கள். வாத்தியார்களுக்கும் உண்டென்பதால் அவர்களுக்கும் சந்தோஷமே. பட்டக்காரர் இருந்தவரை வருடா வருடம் இதை சிரத்தையுடன் செவ்வனே செய்து நூற்றுக்கணக்கான பிஞ்சு உள்ளங்களில் உவகையை வரவழைத்து வந்தார். துரதிர்ஷ்டவசமாக (1952 ல் என்று நினைக்கிறேன்) ,பட்டக்காரர் ஒரு முறை பழனி மலைக்குப் போய் பிராகாரத்தை வலம் வந்து கொண்டிருக்கையில் அவருடைய எதிரிகள் யாரோ திடீரென்று அவரை மறித்துக் கத்தியால் வெட்டி விட்டார்கள். அவர் ஸ்தலத்திலேயே மரணமடைந்தார். அத்துடன் ‘பட்டக்காரர் சப்ளை’யும் நின்று போனது.
# வங்காளத்தில் இதனாலேயே கல்கத்தா பூதாகரமாக வளர, மீதி வங்காளம் முழுவதிலும் கோவை, மதுரை போன்ற பட்டணங்கள் வளரவில்லை.
கல்யாண ஊர்வலம்
கல்யாண ஊர்வலம் – எஸ்.வி.ராமகிருஷ்ணன்
ஐம்பது அறுபது வருடங்களுக்கு முன் கல்யாண ஊர்வலம் என்று ஒரு கண்கொள்ளாக் காட்சி அடிக் கடி காணக் கிடைத்தது, ஆடி மாதம், மார்கழி மாதம் போன்ற சில காலங்களைத் தவிர. கல்யா ணத்துக்கு முன் தினம் ‘மாப் பிள்ளை அழைப்பை’ (ஜான வாசம் என்றும் சொல்வதுண்டு) ஒட்டி மாப்பிள்ளையைத் திறந்த காரில்1 உட்கார வைத்து ஊர்வலமாக (வழக்குச் சொல்லில் இது சில சம யம் ‘ஊர்கோல’மாகவும் திரிந்தது) அழைத்துச் செல்வார்கள்.
நன்றாக இருட்டின பின்னர் தான் ஊர்வலம் நடைபெறும். பெண்கள் கலர்கலரான பட்டுப் புடவைகள் சரசரக்க, அவற்றின் ஜரிகையானது கியாஸ் விளக்கின் ஒளியில் பளபளக்க, மல்லிகைப் பூவின் நறுமணத்தைப் பரப்பிக் கொண்டு காருக்குப் பின் நடப்பார் கள். கார் இரண்டாவது கியரில் ஆமை வேகத்தில் நகர்ந்துகொண் டிருக்கும். முன்னாலும் பின்னாலும் கியாஸ் விளக்குகளைச் சுமக்க முடி யாமல் சுமந்துகொண்டு கூலிக்காரர் கள் நடப்பார்கள். அது ஒரு பெரிய சைஸ் பெட்ரோமாக்ஸ் விளக்கே. மிகவும் பிரகாசமான ஒளியையும் மண்ணெண்ணை மணத்தையும் ஒருங்கே பரப்பிக்கொண்டிருக்கும். ஆனால் அந்த மண்ணெண்ணை வாசம் மல்லிகை மணத்தோடு இழைந்து சுகந்தமான ஒரு நறு மணமாகவே தோன்றும். அந்த வாசனை இல்லாமல் கல்யாண ஊர்வலங்கள் பரிமளிக்க முடியாது.
அந்தக் காலத்தில் கார் என்பது அபூர்வமான வஸ்து. பல குழந்தை கள் காரிலே ஏறியிருந்திருக்கக்கூட மாட்டார்கள். அதனால் ஊர்வலத்துக்குக் கார் வந்து நின்ற உடனேயே, கல்யாணத்துக்கு வந்த குழந்தைகள், முக்கியமாக மாப்பிள்ளை வீட்டைச் சேர்ந்தவர்கள் காணாதது கண்ட மாதிரி ஓடி வந்து அதை ஆக்கிரமித் துக்கொள்வார்கள். அப்புறம் மாப் பிள்ளை வரும்பொழுது அவருக்கு பின் ஸீட்டில் எப்படியோ இடம் பண்ணிக் கொடுப்பார்கள். ஊர் வலம் தொடங்கும்போது அவருக்கு இரண்டு பக்கமும் உறவின வாண்டு கள் பெருமை தலைகொள்ளாமல் நெருக்கியடித்துக்கொண்டு உட்கார்ந்திருக்கும். முன் ஸீட்டில் டிரைவரின் நிலை நெருக்கடி நிலை தான். பரம்பரை பாத்தியதை என் பது போல இது விஷயத்தில் குழந்தைகளுக்கு ஒரு உரிமை இருந்தது. தீபாவளிக்குப் பட்டாஸ் மாதிரி இந்தக் குழந்தைப் பட்டா ளம் இல்லாது மாப்பிள்ளை ஊர் வலம் கிடையாது; சோபிக்கவும் சோபிக்காது.
சாதாரணமாக மாப்பிள்ளை வெளியூர்க்காரராக இருப்பார் என் பதால் அவர் எப்படி இருக்கிறார் என்ற ஆவல் ஊர்க்காரர்கள் எல் லோருக்கும் உண்டு. ஆகவே ஊர் வலம் போகும் வீதிகளில் எல்லோர் வீட்டு வாசற்படிகளும் நிறைந்து காணப்படும்.
முதல் நாள் ஊர்வலத்தில் மாப்பிள்ளை மட்டும்தான் என்றால் அடுத்த நாள் திருமணம் ஆன பிறகு ராத்திரி ஊர்வலம் இன்னும் வெகு ஜோராக இருக்கும். இதில் பெண் மாப்பிள்ளை இருவரும் ஜோடியாக அமர்ந்திருப்பார்கள். அநேகமாக அதே காராகத்தான் இருக்கும். புஷ்ப அலங்காரங்கள் கொஞ்சம் அதிகமாக இருக்கக்கூடும். ஊர் வலத்துடன் போகும் கூட்டம், வேடிக்கை பார்த்து நிற்கும் கும்பல் இரண்டுமே இன்று கூடுதலாக இருக்கும். “நல்ல ஜோடிப் பொருத் தம்” என்று மகிழ்பவர்களையும் மனதார வாழ்த்துபவர்களையும் தவிர பார்த்து வயிறு எரிபவர்களும் ஊர்க்காரர் கூட்டத்தில் இருப்பர். கல்யாண விருந்தினாலோ அலைச்ச லினாலோ அடுத்த நாள் மணமக்க ளில் யாருக்காவது உடல்நிலை சற்று பாதிக்கப்பட்டால் “பொல்லாதவர் களின் கண்கள்தாம் காரணம்” என்று சொல்லப்படுவது வழக்கமா யிருந்தது.
நாற்பதுகளுக்கும் முந்தின காலத்தில் ஊர்வலத்திற்காக சாரட்டு வண்டிகளும் நிறைய இருந் திருக்க வேண்டும். சில ஊர்களில் இன்னும் கொஞ்சம் பாக்கி இருந் தன. 1950ல் திண்டுக்கல்லில் ஒரு திருமணத்திற்குப் போயிருந்தேன். பெண்ணின் தந்தையால் “விசாரித் துக் கொண்டு வா” என்று அனுப் பப்பட்டவர் திரும்பி வந்து, “கார் 30 ரூபாய், சாரட்டு (அலங்காரக் குதிரை வண்டி) 12 ரூபாயாம்” என்று ரிப்போர்ட் கொடுத்தார். காதைத் தீட்டிக்கொண்டு ஒட்டுக் கேட்டுக்கொண்டிருந்த நான் ‘அழகான சாரட்டை விட்டுவிட்டுக் கூடப் பணமும் கொடுத்து ஓட் டைக் கார் யாராவது வைப்பார் களா’ என்று எண்ணினேன். எங்கள் ஊரில் சாரட்டு கிடையாது. நான் சாரட்டு ஊர்வலத்தைப் பார்த்த தில்லை. ஆகையால் என் சொந்த நலனும் இதில் கலந்திருந்தது என்னவோ உண்மை. பெண்ணைப் பெற்ற தகப்பனார் பிசினஸ் கொஞ்சம் நொடித்துப் போய் பண முடையில் இருந்தார் என்றும் நான் கேள்விப்பட்டிருந்ததனால் பதி னெட்டு ரூபாயை மிச்சம் பண்ணி ராஜாராணி காலம் போல் சாரட்டை ஏற்படுத்துவார் என்று நம்பிக்கையோடு காத்திருந்தேன். இரண்டு நிமிஷம் யோசனை செய்த வர் “சரி, காரே இருக்கட்டும்” என்று சொல்லிவிட்டார். எனக்குத் தலை யில் இடி விழுந்தாற் போலிருந்தது. என்ன செய்வது? அன்று நான் இழந்த சாரட்டு ஊர்வலம் காணும் பாக்கியம் அப்புறம் என்றுமே வாய்க் கவில்லை. மத்திய அறுபதுகளில் நடந்த என் கல்யாணத்துக்கு சாரட்டு வர ‘சான்ஸ்’ உண்டா என்று ஜாடைமாடையாக, ஆனால் ரொம்ப நம்பிக்கையில்லாமல்தான் விசாரித்துப் பார்த்தேன். சாரட்டு என்பது சரித்திரம் ஆகிவிட்டது என்று தெரிய வந்தது.
ஊர்வலத்தைப் பற்றிய கதையை ‘மாப்பிள்ளை டிரஸ்’ பற்றி இரண் டொரு வார்த்தைகள் சொல்லாமல் முடிக்க முடியாது. மாப்பிள்ளை அழைப்பு என்றால் கோட்டு, ஸ¨ட்டு, டை (எல்லாம் மாப்பிள் ளைக்கு மாமனாரின் உபயம்) இன்றி யமையாத அயிட்டங்கள். அவற்றை அணிந்துதான் மாப்பிள்ளை முறுக்குடன் பவனி வருவார். சில மாப்பிள்ளைகளுக்கு ஸ¨ட்டும் ‘டை’யும் அணிவது முதல் தடவை யாகவே இருக்கும்.2 பலருக்கும் தெரிந்தவர் யாராவது டை கட்டி விடுவார்கள். அந்தக் காலத்தில் டெரிலீன் டெரிவுல் போன்ற துணி கள் கிடையாது. கசங்காமல் இருக்க வேண்டும் என்றால் உல்லனே உத்த மம். ஸ¨ட் என்பது ‘ஆயுள் பரியந் தம்’ (ஆயுள் முழுவதும்) வைத்துக் கொள்ள வேண்டியதாகவும் கருதப் பட்டது. அதனால் பெரும்பாலும் ‘மாப்பிள்ளை டிரஸ்’ கம்பளி ஆடையால்தான் தைக்கப்பட்டது. தமிழ்நாட்டின் சீதோஷ்ணத்துக்கு அவ்வளவு ஏற்புடையதில்லைதான். அதுவும் கல்யாணம் சித்திரை மாதத்தில் இருந்தால், மாப்பிள்ளை யானவர் குழந்தைகளின் கும்பலின் நடுவே வியர்க்க வியர்க்க உட்கார்ந் திருப்பது காண்போர் மனத்தைக் கரைக்கக்கூடியதொரு காட்சி.
_________________________________________________________________________________
(1. அதாவது டூரர் டாப் என்ற, கேன்வாஸ் துணியால் ஆன கூரையைக் கொண்ட வண்டி. பழைய மாடல்களில் சகஜமாகக் காணப்பட்ட இது பிற்காலத்தில் ஏனோ அருகிப்போயிற்று. நாற்பதுகளில் இருந்தே வெளிவருவது அபூர்வமாயிற்று. வெயிலையும் வெப்பத்தையும் இன்றைய கார்களை விட அது நன்றாகவே சமாளித்தது என்று தோன்றுகிறது.
2. இதற்கும் முந்தின காலத்தில் கோட்டு அணிவது பரவலாக இருந்திருக்கிறது. ஆனால் ஸ¨ட் அபூர்வம். நாற்பதுகளில் இருந்து கோட்டும் மிகக் குறைந்துவிட்டது.)
அது அந்தக் காலம்
சமீபத்தில் சென்னை புத்தகக் கண்காட்சியில் சில புத்தகங்களைத் தேடி வாங்கினேன். அப்படி வாங்கிய புத்தகங்களில் “அது அந்தக் காலம்” என்ற புத்தமும் ஒன்று.
நான்கு மாதம் என்று நினைக்கிறேன். உயிர்மையில் எஸ்.வி.ராமகிருஷ்ணன் அவர்கள் “ரயில் பிரயாணத்தின் கதை” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார். மிகவும் நல்ல கட்டுரை. அடுத்த மாதம் அசோகமித்திரன் “இரயில் பயணங்களில்” என்று அதைத் தெடர்ந்து எழுதினார். இது ஒரு போனஸாக அமைந்தது.
நண்பர் மனுஷ்ய புத்திரனிடம் எஸ்.வி.ராமகிருஷ்ணனின் மற்ற கட்டுரைகள் கிடைக்குமா என்று விசாரித்ததில், இவரின் கட்டுரை தொகுப்பு ஜனவரியில் வரவிருப்பதாகச் சொன்னார்.
எஸ்.வி.ராமகிருஷ்ணன் பற்றி …
எஸ்.வி.ராமகிருஷ்ணன் 1936இல் கோவை மாவட்டம் தாராபுரத்தில் பிறந்தவர். சரித்திரமும் சட்டமும் பயின்ற ராமகிருஷ்ணன் சுங்க ஆனையாளராக இந்தியாவின் பல பகுதிகளிலும் பணிபுரிந்து, முதன்மை ஆனணயாராக ஓய்வுபெற்றார். தற்போது ஹைதராபாத்தில் வசித்துவருகிறார். தமிழின் முன்னணி இதழ்களில் கடந்தகால இந்தியாவைச் சித்தரிக்கும் கட்டுரைகளை எழுதியுள்ள இவரது முதல் கட்டுரைத் தொகுப்பு “அது அந்த காலம்”
இவர் எழுதிய கட்டுரைகள் – ஓம்சக்தி, துக்ளக், தினமணி, கணையாழி, உயிர்மை, போன்ற தொப்புள் சமாச்சாரம் இல்லாத பத்திரிக்கைகளில் வந்தவை.
புத்தகத்தில் 1940கள் காலத்தை அழகாகச் சித்தரிக்கிறது. இன்னும் சொல்லப் போனால், அந்தக் காலத்தில் நான் இல்லையே என்று ஏங்க வைக்கிறது. பல வரலாற்றுச் செய்திகள், மிகைப்படுத்தப்படாமல் மெலிதான நகைச்சுவையுடன் சொல்லியுள்ளார். இந்தப் புத்தகத்தை படித்த போது ஒரு வயதானவர் தன் அனுபவத்தை எனக்குச் சொல்லதாகவே எனக்குத் தோன்றியது.
[ … அப்போது மிக சிலரே கார் வைத்துக்கொண்டிருந்தனர். அவற்றுக்கு ரேஷன் முறையில் கொஞ்சம் பெட்ரோல் கொடுத்த அரசாங்கம், பேருந்துகளுக்கு அடியோடு மறுத்துவிட்டது. விளைவு, எல்லா பஸ்களும் அடுப்புக் கரியில் ஓடின. பஸ்களுக்கு பின் ஒரு ‘டிராம்’ இணைக்கப்பட்டிருக்கும். அதில் கரியை கொட்டி, வண்டி கிளம்புவதற்கு ஒரு மணி நேரம் முன்னால் குமுட்டி அடுப்பு போல பற்ற வைப்பார்கள்….]
சில விஷயம் நாம் கேள்விப்படாதது
[… கஸ்தூரிபாவின் உடல் தகனம் செய்யப்பட்டு சில மணி நேரம் கழித்து சிதையில் கஸ்தூரிபாவின் இரண்டு கண்ணாடி வளையல்கள் மட்டும் முழுதாகவும் நிறம் மாறாமலும் இருப்பதைக் கண்டு ஓடோடி வந்து காந்திஜியிடம் சொன்னார். அதை நம்ப மறுத்த மகாத்மாவிடம் நேரில் வந்து பார்க்குமாறு மன்றாடினார். காந்திஜி போய்ப் பார்க்கையில் அவ்வாறே கிடக்கக் கண்டார். கஸ்தூரிபா ஒரு சிறந்த பதிவிரதையாதலால் இப்படி நடத்திருக்கிறது என்று கருதிய காந்திஜி அவற்றை எடுத்துப் பத்திரமாகப் போற்றி வைத்துக்கொண்டார்…]
காலம் எப்படி மாறியுள்ளது என்று இதைப் படித்தால் புரியும்
[ … பல நகரங்களும் சிற்றூர்களும் நதிக்கரையிலேயே அமைந்திருந்தன அதில் சென்னையும் அடக்கம். சென்ற நூற்றாண்டில், தான் தினந்தோறும் கூவம் ஆற்றில் குளித்துவிட்டுக் கோயிலுக்குப் போனதாகப் பச்சையப்ப முதலியார் எழுதிவைத்திருக்கிறார். ஆனால் இக்கட்டுரையை நாம் படித்துக்கொண்டிருக்கும் காலத்திலேயே கூவம் முழுச் சாக்கடையாகவே மாறிவிட்டிருக்கிறது. நல்ல வேளையாக இந்தக் கதி காவேரி, தாமிரவருணி, அமராவதி போன்ற நதிகளுக்கு வந்த்திருக்கவில்லை…]
தண்ணீர் பற்றி அவர் எழுதியுள்ளது சிந்தனையைத் தூண்டுவதாக உள்ளது
[… வீட்டுக் கிணற்றில் இருந்து எடுத்த தண்ணீரைத் தையரியமாக அப்படியே குடிக்கலாம். ஆற்று நீராக இருந்தால் காய்ச்சிக் குடிப்பது நல்லது என்று சொன்னார்கள். கோடைகாலத்தில் ஆற்றில் நீர் மட்டம் குறைந்த போதும் ஊரில், டைப்பாய்டு வியாதிகள் பரவிய சமயங்களில் சுகாதார இலாகாவினர் இதை வலியுறுத்தினார்கள்……மாடும் மனிதனும் குளிப்பதும், துணி துவைப்பதும் அன்றைய அசுத்தங்கள்….அறுகள் இந்தச் சின்ன அழுக்குகளை ஜீரணம் செய்துகொள்ள முடிந்தது…இன்றைய நதிகள், வரலாற்றில் காணாத இன்றைய ராட்சஸ ஆலைகளின் கழிவுகளால் வந்த அஜீர்ணத்தால் துடித்துக்கொண்டிருக்கின்றன…. சுவையான குடிநீருக்குத் தட்டுப்பாடு உள்ள இடங்கள் சிலவற்றில் இன்னொரு தண்ணீர் சப்பளை இருந்தது. அது எஸ்.ஐ.ஆர். என்று அழைக்கப்பட்ட தென்னிந்திய ரயில்வே கம்பெனியாரின் உபயம். …சிறு சிறு ஸ்டேஷன்களில் குப்பம்வாழ் ஏழைமக்கள் சட்டிபானைகளோடு தண்ணீருக்கு வந்து நிற்பார்கள். என்ஜின் டிரைவர்கள் கரிசனத்தோடு இவர்களுக்கு என்ஜின் பாய்லரில் கொதித்த வெண்ணீரைத் தாராளமாக வழங்குவார்கள்….]
சில தகவல்கள் ஓ அப்படியா என்று வியக்க வைக்கிறது.
[…நெல் குத்தினால் வரும் அரிசி மனிதனுக்கு உணவென்றால், தவிடு மாட்டுக்கு முக்கியமான உணவு. முன்றாவதாக வரும் உமிக்கும் உபயோகம் உண்டு. உமியைக் குவித்து அதில் ஒரு தணலை வைத்துவிட்டால் அது கொஞ்சம் கொஞ்சமாக நாள் முழுவதும் கனன்று உமி முழுவதும் உமிக்கரியாகிவிடும். அதுதான் குடும்பத்தினர் எல்லோருக்கும் வருடாந்திர உபயோகத்துக்கான பல் பொடி. அதை அப்படியேயோ அல்லது சிறுது உப்பு லவங்கம், சேர்த்தோ உபயோகிப்பார்கள். கரிக்கு(Carbon) ஈறுகளை உறுத்தாமலும் எனாமலைச் சிதைக்காமலும் அழுக்குகள் அனைத்தையும் இழுத்துக் கொள்ள கூடிய சக்தி உள்ளதால் பிரஷ் தேவையில்லை. விஞ்ஞான ரீதியாக நிருபிக்கப்பட்ட இந்த உண்மை பன்னாட்டுப் பற்பசைக் கம்பெனிகளின் விளம்பரப் பிரச்சார வெள்ள்த்திற்கு முன்பு இன்று பின்வாங்கி விட்டது….]
பிராமனர் விட்டு ‘பத்து’ பற்றி இப்படி குறிப்பிடுகிறார்.
[… “பத்து” என்ற ஒரு ஆசாரம் சில வகுப்பினரிடையே, குறிப்பாகப் பிராமணர் வீடுகளில் அனுசரிக்கப்பட்டது. சுருங்கச் சொன்னால் ஒரு நாளில் கொட்டு போய்விடக் கூடிய பதார்த்தங்கள் அவ்வளவும் பத்து. உதாரணமாக, முறுக்கு பத்து இல்லை. ஆனால் சாதம், சாம்பார், இட்லி முதலியன பத்து. அவற்றையோ, அவை வைக்கப்படிருக்கும் பாத்திரங்களையோ தொட்டால் கையை அலம்பிக்கொள்ள வேண்டும். இதனால் எல்லாம் அனவாசியமாகப் பெண்களுக்கு வேளை கூடிற்று…இன்று உடற்பயிற்சி இல்லாமல் உடம்பு வலி வருவது போல், அதற்கு நேர்மாறான காரணங்களால் உடம்பு வலி வந்து அவஸ்தைப் பட்டனர் அன்றைய இல்லத்தரசிகள்…]
நாற்பதுகளில் சினிமா, குடும்ப டாக்டர், அடுப்பங்கரை, கலாச்சாரம், போட்டோ, பேனா, கல்யாணங்கள் என்று பல விஷயங்கள் நன்றாக சொல்லப்பட்டிருக்கிறது. இதில் உள்ள வரலாறு புள்ளிவிபரங்கள் இல்லாமல் அன்றைய வாழ்கையும், மனிதர்களை பற்றியது. இந்த ஆண்டு வந்த மிக முக்கியமான நூலாக இதைக் கருதலாம்.
அசோகமித்திரன் முன்னுரையில் குறிப்பிடுவது போல் ..”இந்த நூலுக்கு ஒரு பெயர் மற்றும் பொருளகராதி தயாரித்தால் அது பல பக்கங்களுக்குப் போகும்…” அது புத்தகத்தைவிட பெரிதாக இருக்கும்.
“அது அந்தக் காலம்”, எஸ்.வி.ராமகிருஷ்ணன், உயிர்மை பதிப்பகம். 119 பக்கங்கள், 60/= ருபாய். படிக்க முன்று, மணி முப்பது நிமிடம் ( நடுவில் இரண்டு காப்பி, நான்கு தொலைபேசி அழைப்பு )
பிகு: நாளை ராமகிருஷ்ணன் “ரயில் பிரயாணத்தின் கதை” மற்றும் அசோகமித்திரன் எழுதிய “இரயில் பயணங்களில்” கட்டுரைகள் ஆகியவற்றை இங்கு பதிவு செய்ய உள்ளேன்.
எண்ணெய்க் குளிப் படலம்
எண்ணெய்க் குளிப் படலம் – எஸ்.வி. ராமகிருஷ்ணன்
தமிழ் நாட்டில் காலம் காலமாகப் புழங்கி வந்த நியதிகளில் ஒன்று வாரம் இரு முறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டுமென்பது. ஆண்களுக்கு புதன் கிழமையும் சனிக்கிழமையும் எண்ணை ஸ்நானம், பெண்களுக்கு செவ்வாயும், வெள்ளியும் என்று வரையறுக்கப்பட்டிருந்தது. இன்றைக்கு அறுபதாண்டுகளுக்கு முன் (1945) கால தேச வர்த்த மானங்களையட்டி, இது வாரம் ஒரு தடவையாகச் சுருங்கி இருந்தது. ஆனால் அந்த அளவுக்காவது கண்டிப்பாக அனுசரிக்கப்பட்டு வந்தது. பெரியவர்கள் அலுவல் சௌகரியங்களை ஒட்டி கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து கொண்டார்கள். அதாவது, அரசாங்க அதிகாரிகள், வக்கீல்கள் முதலியோர் பலரும் சனிக்கிழமைக்கு பதில் விடுமுறை தினமான ஞாயிறு அன்று வைத்துக் கொண்டார்கள். ஆனால் அவர்களின் பையன்களுக்கு சனிக்கிழமையும், பெண்களுக்கு வெள்ளியன்றும் எண்ணைக்குளி கட்டாயமாக உண்டு. அப்போதெல்லாம் பெண்பாலர் வெளி வேலைக்குப் போவது அரிது என்பதை நினைவில் கொள்ளலாம். ‘வயது வந்த’ பெண்கள் பலரும் பள்ளிக் கூடத்துக்கே போகவில்லை.
என் மாதிரி சின்னப்பையன்களுக்கு அம்மாக்களே எண்ணை தேய்த்து விடுவது வழக்கம். கிழக்கே பார்த்து உட்கார வைத்து மிளகு போட்டுக் காய்ச்சிய நல்லெண்ணையை இளஞ்சூடாக என் தலை மீது வைத்து, என் தாயார் தன் பலத்தையெல்லாம் பிரயோகித்து அழுத்தித் தேய்ப்பார். சில சமயம் நல்லெண்ணைக்குப் பதில் பாட்டில்களில் கிடைக்கும் சந்தனாதித் தைலம், அரைக்கீரை விதைத் தைலம். (கும்பகோணம் டி. எஸ். ஆர் கம்பெனியின் சரக்குகள் பிரபலம்) இவை இருக்கும். சிலர் தங்கள் வீட்டிலேயே கரிசலாங்கண்ணி போன்ற தைலங்களைக் காய்ச்சி உபயோகிப்பார்கள், சென்னையிலிருந்து வரும் பண்டிட் கோபாலாசார்லுவின் பிருங்காமலகத் தைலம் புகழ்பெற்றது. ஆனால் விலை அதிகம். மூளைக்குக் குளிர்ச்சி என்று சொல்லுவார்கள். மூளையையே மூலதனமாகக் கொண்டு வக்கீல் தொழில் செய்து வந்த என் தந்தை இதையே வாங்கி உபயோகித்தார். அதில் போட்டிருக்கும் வைத்தியரின் படம் கற்பனையில் பதியக்கூடிய ஒரு போட்டோ, கோட்டு, டர்பன் அணிந்து, நீள தாடி மீசையுடன், நீண்ட நாமமும் தரித்திருப்பார்.
தலைக்கு எண்ணை தேய்ப்பது முதல் கட்டம். இதுவரை எனக்கு அழுகை ஆட்சேபம் ஒன்றும் கிடையாது. ஆனால் அடுத்த கட்டமாக பழனி முருகன் போல் கோவனாண்டியாக நின்று உடம்பு முழுவதும் எண்ணை பூசிக்கொள்ள வேண்டும். (இது காய்ச்சப்படாத நல்லெண்ணையாக இருக்கும்) இது எனக்குப் பிடிக்காத ஐட்டம். முக்கியமாக, முகத்தில் எண்ணை தடவிக் கொள்வதில் எனக்கு பயங்கர விரோதம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த மாதிரி விஷயங்களில் என் அனுமதி கோரப்படவில்லை. அம்மா வைத்ததுதான் சட்டமாக இருந்தது. வீட்டுக்கு வீடு இதே வாசற்படிதான் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
எண்ணை தேய்த்துக் கொண்டு பதினைந்து இருபது நிமிடங்கள் ஊற வேண்டும். அப்போது வெயிலில் போகக் கூடாது, ஒன்றும் தின்னக் கூடாது என்று இரண்டு விதிமுறைகள். அப்போது மட்டும் அல்ல குளித்த பிறகுகூட அன்று வெளியில் போகக்கூடாது. போனால் தலைவலி வரும். ஆக, சனிக்கிழமை விடுமுறை நாளானாலும் பொழுது சாயும் வரை வீட்டிக்குள்ளேயே அடங்கிக் கிடக்க வேண்டியிருந்தது. வீட்டுத் தோட்டத்தில் சுற்றினால்கூட வசவு விழும்.
பச்சைத் தண்ணீரில் குளிப்பவர்களானாலும் சரி, வெண்ணீரில் குளிப்பவர்களாக இருந்தாலும் சரி, எண்ணை ஸ்நானம் என்றால் வெண்ணீரில்தான் குளிக்க வேண்டும். எண்ணை குளிர்ச்சி என்பதால் ஈடுகட்டுவதற்காக அன்று வெந்நீர் கொஞ்சம் கூடவே வெம்மையாக வைக்கப்படும். தலையிலிருந்து எண்ணையை எடுக்க அந்த நாளில் ஷாம்பூ, போன்ற ‘ஜோர்’ எல்லாம் வரவில்லை. சோப்புக்குக் கூட அன்று லீவுதான் தொன்று தொட்டு வழங்கி வந்த சீயக்காய்(தெலுங்குச் சீமையில், அதாவது சுந்தரத் தெலுங்கு பேசின சென்னை மாகாணத்தின் ஆந்திர ஜில்லாக்களில், ‘குங்குடிக்காயை’ அரைத்து நமது சீயக்காய் மாதிரி உபயோகித்தனர். நம்ம ஊரில் சீயக்காய்க்கு சிலசமயம் (ஷிஷீணீஜீ ழிut) என்று ஆங்கிலத்தில் எழுதினர். ஆனால் ‘குங்குடிக்காய்’ தான் நிஜமான ‘சோப் நட்’. சோப்பு போலவே அதில் நிறைய நுரைவரும். நமது சீயக்காய் எண்ணையை எடுக்குமே தவிர நுரை ஒன்றும் பெரிதாக வராது. ஆரம்ப காலத்தில் வெள்ளைக்காரர்கள் குங்குடிக்காயைப் பார்த்து விட்டுச் சூட்டின பெயர் நம்மூர் சீயக்காய்க்கும் ணிஜ்tமீஸீபீ ஆகியிருக்கலாம். கோயமுத்தூர் கலெக்டர் கர்நூலுக்கும், மலபார் கலெக்டர் திருநெல்வேலிக்கும் மாற்றலாகிப் போன காலம். சென்னை மாநகரத்தில் இன்றும் கம்பீரமாக (சிலை ரூபத்தில்) வீற்றிருக்கும் ஸர் தாமஸ் மன்றோ, பாரா மஹால் (தர்மபுரி) யில் ரயத்துவாரி முறைத் தீர்வையை நிறுவிப் புகழ்பெற்ற கையோடு கடப்பா கலெக்டராக நீண்ட காலம் கோலோச்சினார்.) ப் பொடியும் அரப்புப் பொடியுமாகக் கலந்து வெந்நீரில் கரைத்துத் தலையில் தேய்த்தார்கள். சீயக்காய் உஷ்ணம், அதைத் தனியே தலையில் தேய்த்தால் கண் எரியும் என்பதால் தன்மையையே தனது தன்மையாகக் கொண்ட அரப்பு சேர்த்தார்கள். சீயக்காய், அவரை வகையைச் சேர்ந்த, ஆனால் சாப்பிட லாயக்கில்லாத (uஸீ ணிணீtணீதீறீமீ) ஒரு. காய் அரப்பு என்பது ஒரு மரத்தின் இலை. இவற்றை உலர்த்திப் பொடித்தார்கள். நாட்டு வைத்தியத்தை அடிப்படையாகக் கொண்டு பழைய காலத் தினசரி வாழ்க்கை முறையில் இது மாதிரியான ‘திரிதோஷ சமனம்’ . பித்தம், வாதம், சிலேஷ்மம் ஆகிய சரீரத்தின் முக்குணங்களின் சமநிலை (ஙிணீறீணீஸீநீமீ ஷீயீ tலீமீ ஜிலீக்ஷீமீமீ ) நிறையவே கையாளப்பட்டது. அரப்பு குளிர்ச்சி மட்டும் அல்ல. சீயக்காய் கொஞ்சம் ‘ஸ்ட்ராங்’ சாதனம். அதை மட்டும் போட்டால் அடியோடு எண்ணையை நீக்கி மேனியை வறவற என்று ஆக்கக் கூடியது. அரப்பு ஒரு கொழ கொழப்பான பொருள் கலவைக்கு வழவழப்பையும் மிருதுத்தன்மையையும் அளிக்கக் கூடியது. இதே இரண்டு காரணங்களுக்காக மலையாளத்தில் அரப்புக்குப் பதில் செம்பருத்திச் செடியின் இலையையோ, பழங்கஞ்சி (அதாவது நேற்று வடித்த கஞ்சி) யையோ உபயோகித்தனர். எங்கள் ஊரில் வாழ்ந்த மலையாளிகள் அப்போது மலபார், சென்னை மாகாணத்தில் இருந்ததால் தமிழ் நாடெங்கும் அரசு உட்பட எல்லாத் துறைகளிலும் மலையாளிகள் நிறையவே காணப்பட்டனர். அவர்கள் இப்படிச் செய்து பார்த்திருக்கிறேன். ஆனால் கொங்கு நாட்டுத் தமிழர்களிடையே இது வழக்கம் இல்லை.
அரப்புக் கலவை தலைக்குத்தான். உடம்பில் வழியும் எண்ணையை எடுக்க சீயக்காய்த் தூளுடன் பச்சைப் பயற்று மாவைக் கலந்தார்கள். வெறும் சீயக்காயைப் போட்டாலும் உடம்புக்குக் கெடுதல் ஒன்றும் இல்லை. என்றாலும் இந்தக் கலவை சருமத்துக்கு அதிகம் சுகமாக இருக்கும். பயத்த மாவுடன் கொஞ்சம் கடலை மாவு கலப்பதையும் கூடக் கண்டிருக்கிறேன். சிறு குழந்தைகள் என்றால் சீயக்காயே கிடையாது. அவற்றின் மிருதுவான சரீரத்துக்கு பொருத்தமாக ‘பயத்தம் மாவை’ மட்டுமே பயன்படுத்தினார்கள்.
ஒரு முறை எங்கம்மாவுக்கு அம்மை போட்டு விட்டது. அப்போதெல்லாம் அம்மை வகைக் காய்ச்சல்கள் (பெரியம்மை, சின்னம்மை, தட்டம்மை, மணல்வாரி, பொன்னுக்கு வீங்கி, இத்தியாதி) வந்தால் , ஜுரம் நின்ற பின்னும் பத்திய உணவு கொடுக்கப்பட்டது. சூட்டை அதிகரிக்கும் பொருட்கள் எல்லாமே விலக்கு. உஷ்ணத்தைத் தணிக்க தினம் எண்ணை தேய்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் சீயக்காய் கொஞ்சம் உஷ்ணம் என்பதால் அனுமதிக்கப்படவில்லை. வெறும் அரப்பைத் தேய்க்கச் சொன்னார்கள். சீயக்காய் இல்லாது கூந்தலிலிருந்து எண்ணை எப்படிப் போகும் என்று அம்மாவுக்கு ஒரே மலைப்பு. ஆனால், தேய்த்துப் பார்த்த போது ஆச்சரியகரமாக அரப்பு மட்டுமே வேலையை செவ்வனே செய்து முடித்து விட்டது.
எண்ணைக் குளி என்றாலே கண்ணில் சீயக்காய்த்தூள் விழுந்துவிடும் சிறிய அபாயம் எப்போதும் உண்டு. முக்கியமாகச் சிறுவர்கள் ‘தலையில் சீயக்காய் இருக்கும்போது கண்ணை இறுக்க மூடிக்கொள்’ என்று அம்மாக்கள் படித்துப் படித்துச் சொல்லியிருந்தும், அவர்களுடைய இயற்கையான ஆவலினாலும் துடிப்பினாலும் உந்தப்பட்டு சில சமயங்களில் கண்ணைத் திறந்து விடுவார்கள். அப்புறம் கண் எரிகிறதென்று அழுது ஊரைக் கூட்டுவார்கள். இந்த விஷயத்திலெல்லாம் சிறுமிகள் தேவலை கொஞ்சம் அம்மா சொன்னபடி கேட்டார்கள்.
சிலர் எண்ணை தேய்த்துக் கொள்ளும்போது காதிலும் இரண்டு சொட்டு நல்லெண்ணை விட்டுக் கொள்வார்கள். இந்த வழக்கம் எங்கள் வீட்டில் இல்லாததால் எனக்கு இந்த அனுபவம் இல்லை. டாக்டர்களிடம் சொன்னால், இது கூடவே கூடாது, கெடுதல் என்றார்கள். அதே சமயம் நான் பார்த்த வரையில் காதில் எண்ணை விட்டுக் கொள்பவர்கள் நன்றாகத்தான் இருந்தார்கள்.
பின்னாளில் கண்டேன், வடநாட்டில் எண்ணை தேய்த்து விடுவதற்கென்று இருக்கும் தனி ஆட்களை (அதை அவர்கள் ஒரு கலையாக வளர்த்திருக்கிறார்கள்) முக்கியமாக, குளிர் மாதங்களில் பெரிய மனிதர்கள் ‘மாலிஷ்வாலா’ வை வீட்டுக்கு அழைத்து தலையிலிருந்து கால்வரை விஸ்தாரமாக எண்ணை தேய்த்துக் கொள்வார்கள். பெரும்பாலும் கடுகெண்ணையாக இருக்கும். 1956 வாக்கில் ஸி. ஐ. டி (சி. மி. ஞி) என்ற ஹிந்திப் படத்தில் ‘தேல் மாலீஷ்’ என்ற முகமது ரஃபியின் பாட்டு பெரிய ‘ஹிட்’ ஆயிற்று. அந்த இசையின் முன்னணியில் நகைச்சுவை நடிகர் ஜானி வாக்கர் பம்பாயின் கடற்கரையில் எண்ணை மாலிஷ் போடுவார். இது பலருக்கும் ஞாபகம் வரக்கூடிய, பிரபலமானதொரு ஸீன். இன்றும், பம்பாய் சௌபாத்தியில் மாலீஷ் வாலாக்கள் கையில் குப்பியுடன் அலைவதைக் காணலாம்.
தமிழ் நாட்டிலும் எனக்கு இரண்டு தலைமுறைகளுக்கு முன்பு நாவிதர்கள் க்ஷவரம் செய்துவிட்டு எண்ணையும் தேய்த்து விடுவார்களாம். அந்த நாட்களில் எல்லோருக்கும் ‘கட்டுக் குடுமி’ இருந்ததால் நாவிதர்களுக்கு வாடிக்கையாளர்களின் தலையில் அதிக வேலை இருந்திருக்க முடியாது. ஆனால் என் காலத்தில் குடுமி மறைந்து ‘கிராப்’ வந்துவிட்ட படியால், அவர்களின் கவனம் விதவிதமான ‘கட்டிங்’குகளின் பால் திரும்பவே, ‘மாலிஷ்’ கலையை அவர்கள் மறந்திருக்கக் கூடும்.
நன்றி: உயிர்மை, மார்ச் 2005
பணம் காசின் பரிணாமம்
பணம் காசின் பரிணாமம் – எஸ்.வி. ராமகிருஷ்ணன்
ஓரிடந் தனிலே
நிலைநில்லாது லகினிலே
உருண்டோடிடும்
பணங்காசெனும்
உருவமான பொருளே
’வேலைக்காரி’ படத்தில் (1949) ஒரு பாடல்.
எனக்கு ஏழு வயது ஆனபோது (1944) ஒரு அசாதாரணமான சம்பவம் நிகழ்ந்தது. அதுதான் ஓட்டைக் காலணாவின் பிறப்பு.
காலணா என்பது ஒரு ரூபாயின் 1/64 பகுதி. இன்று அதற்கு அர்த்தமே இருக்க முடியாது. ஆனால் அன்றைய தேதியில் அதற்கு மிட்டாயோ தேங்காய் பர்பியோ வாங்க முடியும். ‘சின்னக் கிளாஸ் பசங்களிடம்’ அதிகமாகப் புழங்கியது காலணாக்கள்தான். காலணாதான் குழந்தைகளின் அடிப்படை நாணயமென்றே சொல்லலாம். அதுவரையில் வழங்கி வந்த காலணாவுக்கான செப்பு நாணயங்கள் பெரிதாகவும் கறுத்துப் போயும் சில சமயங்களில் பச்சைக் களிம்பு பிடித்தும் காணப்படும். ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய விக்டோரியா மகாராணியின் காலணாவிலிருந்து என் காலத்தின் ஆறாம் ஜார்ஜ் சக்கரவர்த்தி படம் பொறித்த காலணா வரையிலும் இதேபோலத்தான் இருந்தன. ஆனால் திடீரென்று முளைத்த புதிய காலணாவோ அதுவரை கேட்டிராத அதிசயமாக நடுவில் பெரிய ஓட்டையுடன் ‘வாஷர்’ மாதிரி விளங்கியது. பளபளவென்று தங்கம்போல் மின்னியது. இது குழந்தைகளின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டதில் அதிசயம் இல்லை. அதே சமயம், பெரியவர்களின் பார்வை வேறு விதமாக இருந்தது. அரசாங்கம் ‘பாப்பர்’ ஆகிக் கொண்டிருக்கிறதுபோல் இருக்கிறது என்று பலரும் சொன்னார்கள். ஆங்கிலேயே ஆட்சி அஸ்தமிக்க ஆரம்பித்துவிட்டதென்றுகூடப் பலருக்குத் தோன்றியிருந்தால் அதுவும் நிஜமே. உண்மையில் யுத்த காலச் செலவுகளால் ‘போண்டி’யாகிக் கொண்டிருந்த பிரிட்டிஷ் இந்திய அரசுக்குக் குறைந்த செலவில் மட்டமான நாணயங்களைத் தயாரிப்பதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. அதனால் தாமிரச் செலவு குறைந்ததென்றால் அரசாங்கத்தின் மதிப்பும் தாழ்ந்து போயிற்று.
ஓட்டைக் காலணாவின் பிரதாபத்தைச் சொல்லுமுன் ஐம்பது வயதுக்குக் கீழே உள்ளவர்களுக்காக அன்றைய நாணயங்களை (coinage) பற்றியதொரு அறிமுகம் தேவைப்படலாம்.
மெட்ரிக் முறையென்பது, ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பதுகளில் பாட புத்தகங்களில் மட்டுமே இருந்தது. நடைமுறையில் இருக்கவில்லை. முகவை நிறுவை அளவுகளிலிருந்து நாணய மாற்று விகிதம் வரை எல்லாம் திறிஷி (பிரிட்டிஷ்) முறைதான். கடைக்குப் போனால் ஒன்றரை வீசை ரவையை நிறுத்தும் ஒரு படி உப்பை அளந்தும் கொடுத்துவிட்டு ஒரு ரூபாய் ஏழரை அணா (1-7-6) என்று விலை சொல்லுவார்கள். ஒரு ரூபாய்க்கு 192 தம்பிடி. அதற்கு ஆங்கிலத்தில் பை (Pie) என்று பெயர். இலங்கையிலும் ஆட்சி செலுத்தி வந்த அதே பிரிட்டிஷார் ரூபாய்க்கு 100 சதம் (Cent) என்று வைத்துப் பள்ளிச் சிறுவர்களின் பாரத்தைக் குறைத்தார்கள். ஏனோ இந்தியாவுக்கு அந்தக் கருணையைக் காட்டவில்லை.
அதோடு கணக்கு நின்றுவிடவில்லை. பனிரெண்டு தம்பிடிகள் சேர்ந்தது ஒரு அணா. அதுபோல் பதினாறு அணாக்கள் சேர்ந்தால் ஒரு ரூபாய் ஆகும். இதெல்லாம் பிரிட்டிஷ் இந்தியாவில் அதாவது மாகாணங்களில். மகாராஜாக்கள் ஆண்ட சுதேச சமஸ்தானங்கள் ரூபாய்க்குக் கீழ்ப்பட்ட நாணயங்களைத் தத்தம் பாணியில் அச்சடித்தன. உதாரணமாக, திருவாங்கூரில் சக்கரம் இருந்தது. நம்ம ஊரிலே “அவன் கையிலே நாலு காசு சேர்ந்து போச்சு, திமிர் ஏறிடுத்து” என்று சொல்வது போல திருவாங்கூரில் “அவன் கையிலே நாலு சக்கரம் சேர்ந்து போச்சு . . .” என்று பேசுவார்கள். இருபத்தெட்டு சக்கரம் ஒரு ‘சர்க்கார் ரூபாய்’ (திருவாங்கூர் ரூபாய்.) பிரிட்டிஷ் ரூபாயின் மதிப்பு இன்னும் கொஞ்சம் கூடுதல். அதாவது 28 லு சக்கரம். இதில் இரண்டு வினோதங்கள். திருவாங்கூரின் சர்க்கார் ரூபாய் என்பது ஒரு மதிப்புதான். அப்படி ஒரு ரூபாய் நாணயம் அச்சிடப்படவில்லை. மற்றும் பிரிட்டிஷ் நாணயம் சமஸ்தானங்களில் செல்லுபடியாகும். ஆனால் சமஸ்தான நாணயங்கள் சென்னையிலோ கோவையிலோ செல்லுபடியாகவில்லை.
ஒரு ரூபாய், எட்டணா (இன்றைய 50 பைசா), நாலணா (25 பைசா), மற்றும் இப்போது இல்லாத இரண்டணா, ஓரணா, அரையணா, காலணா, தம்பிடி என்ற நாணயங்கள் இருந்தன. விக்டோரியா மகாராணி காலத்திய (அவருடைய உருவம் பொறிக்கப்பட்ட) பழைய ரூபாய் நாணயங்கள் ஏறக்குறைய முழு வெள்ளியால் ஆனவை. முதல் உலக யுத்தத்துக்குப் (1914-1918) பிந்தைய ஐந்தாம் ஜார்ஜ் (1911-35) படம் போட்ட ரூபாய்கள் அதைவிடத் தரம் குறைந்தாலும் கணிசமாக வெள்ளிதான். எனக்குத் தெரிந்த ஆறாம் ஜார்ஜ் சக்கரவர்த்தியின் (பட்டம் : 1938) ரூபாய்கள் இரண்டாவது உலக யுத்தத்தினால் (1939-45) மேலும் பாதிக்கப்பட்டுக் கொஞ்சம் பாவமாக இருந்தன. அவற்றின் வெள்ளி எடை 6/16 தோலா என்று கேட்ட நினைவு. (ரூபாய் நாணயத்தின் எடை ஒரு தோலா.) சுதந்திரம் வரும் தருவாயில் (1947) முதன் முறையாக வெள்ளியே இல்லாமல் நிக்கலினால் ஆன ஒரு ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டது. ஒரு பக்கத்தில் புலி போட்டிருந்தது. வெள்ளியே இல்லாமல் ரூபாயா? நம்ப முடியாத கிழவர்கள் “கலி முற்றிவிட்டது” என்று அங்கலாய்த்தார்கள்.
அரை ரூபாய் என்பது ஏறக்குறைய ரூபாயின் பாதி அளவிலும் நாலணா நாணயம் (இதைப் பொதுமக்கள் ‘பணம்’ என்று சொன்னார்கள்) அதிலும் பாதி சைஸிலும் வட்டமாக இருந்தன. ஆனால் ஒரு பணத்தின் பாதி மதிப்பு கொண்ட இரண்டணாவோ அளவில் நாலணாவைவிடப் பெரிதாகவும் உருவத்தில் சதுரமாகவும் இருக்கும். ஓரணா நாணயம் வட்டமும் அல்லாது சதுரமுமல்லாது ஒரு அலங்காரமான டிசைனில் இருக்கும். இரண்டணாவின் ஒரு சின்ன சைஸ் பிரதி போலக் காணப்பட்ட அரையணா நாணயமும் உண்டு. இவை எல்லாம் நிக்கல் கலந்த அல்லது கலக்காத வெவ்வேறு உலோகக் கலவைகள். அதற்கும் கீழே இருந்த காலணாவுக்கும் தம்பிடிக்கும் அந்த அந்தஸ்து கிடையாது. அவை வெறும் தாமிரத்தினால் அடிக்கப்பட்டவை. மின்சாரம் பெரிய அளவில் தூர இடங்களுக்கு அனுப்பப்படும் வரை (electrical transmission) செம்பின் விலை மதிப்பு மிகக் குறைவாக இருந்திருக்க வேண்டும். அதனால்தான் “என் கிட்டே செப்பால் அடித்த காசு கூடக் கிடையாது” என்ற வாக்கியம் வந்திருக்க வேண்டும். எனக்குத் தெரிந்தபோது சாதாரணமாகப் பிச்சைக்காரர்களுக்குக் காலணா போட்டார்கள். அதற்கு முன், அதாவது இரண்டாம் உலக யுத்தம் வந்து விலைவாசிகள் கண்டபடி உயரும் வரை, பிச்சைக்காரர்களுக்கு ஒரு தம்பிடிதான் கொடுத்தார்களாம். ஆனால் 1945ல் ஒரு தம்பிடி கொடுத்தால் பிச்சைக்காரர்கள் முறைத்தார்கள். “நீயே வைத்துக்கொள்” என்று கூட எப்போதாவது சொன்னார்கள். பழனி போன்ற கோயில்களுக்குச் செல்பவர்கள் மாத்திரம் பின்னால் வெகுகாலம்வரை கூடத் தம்பிடி கொடுத்தனர். மலை ஏறும் வழி நெடுக இரண்டு பக்கமும் நூற்றுக்கணக்கான பிச்சைக்காரர்கள் உட்கார்ந்திருப்பார்கள். அவர்கள் எல்லோருக்கும் ஆளுக்குக் காலணா கொடுத்துக் கட்டுபடியாகாது. தவிரவும், தலைக்கு ஒரு தம்பிடி என்றால்கூட அவர்களின் தினசரி கலெக்ஷன் நல்லபடியாக இருக்குமாதலால் இது இருசாராருக்குமே அனுகூலமாக இருந்தது. ஐம்பதுகளில் தம்பிடிகளின் புழக்கம் கடைவீதியில் அடியோடு அற்றுப் போய்விட்டது. ஆனால் பழனியில் சில்லறை விற்கும் வியாபாரிகள் ஒரு ரூபாய்க்கு 150 என்ற விகிதத்தில் தம்பிடி நாணயங்கள் கொடுப்பார்கள். (எண்ணிப் பார்த்தால் இதைவிடக் குறையும் என்று சொன்னார்கள். ஆனால் முருகன் தரிசனத்துக்கு மலை ஏறும் அவசரத்தில் யாரும் எண்ணினதாகத் தெரியவில்லை!)
இந்தத் தம்பிடிகள் பிச்சைக்காரர்கள் கைக்குப் போய்த் திரும்ப அதே கடைக்காரர்களிடம் ராத்திரிக்குள் வந்து சேர்ந்துவிடும். அவர்கள் அதை எடுத்துக்கொண்டு பிச்சைக்காரர்களுக்கு ரூபாயாகவும் அணாவாகவும் கொடுப்பார்கள். அதிலும் கமிஷன் அடிக்காமல் ஆண்டிகளுக்கு அவர்களின் சம்பாத்தியத்தின் முழு மதிப்பு கிடைத்திருக்குமா என்று எனக்குத் தெரியவில்லை.
முதலில் ஒரு ரூபாய்க்கு உலோக நாணயம்தான் இருந்ததாம். அதாவது நோட்டு கிடையாது. எனக்குத் தெரிந்தபோது ஒரு ரூபாய்க்குக் காகித நோட்டும் இருந்தது. அதுவும் யுத்த காலத்தில் தான் தொடங்கிற்றாம். இதிலும் அரசின் மதிப்பைக் குறைக்கும் ஒரு விஷயம் இருந்தது. ஐந்து, பத்து, நூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் எல்லாவற்றிலும் ரிசர்வ் பாங்க் கவர்னர் ஒரு உறுதி மொழி அளித்துக் கையப்பம் வைத்திருப்பார். அதன்படி எவரும் ரூபாய் நோட்டுக்களை ரூபாயாக கஜானாவில் மாற்றிக்கொள்ள உரிமை உண்டு. அதற்கு அர்த்தம் அந்த அளவு வெள்ளியைத் திருப்பிக் கொடுக்க அரசு கடமைப்பட்டிருந்தது என்பதே. அதாவது அரசாங்கம் கையிருப்பில் வேண்டிய வெள்ளியை வைத்துக் கொள்ளாமல் இஷ்டப்படி கரன்ஸி நோட்டு அடிக்க முடியாது. அடிப்படை (ஒரு ரூபாய் நோட்டில் நீதித்துறைச் செயலர்தான் கையெழுத்திட்டிருப்பார்.) நாணயமான ரூபாயையே காகிதமாக அடிப்பது என்ற குறுக்கு வழியை ஆங்கில ஆளுகையின் முதல் 180 ஆண்டுகளுக்கு எவரும் நினைத்துப் பார்த்ததில்லை. ஆனால் ரூபாயே நோட்டாக வந்த பிறகு இப்போது உயர் மதிப்பு நோட்டுகளைக் கஜானாவுக்குக் கொண்டு சென்றால்கூட அவர்கள் அந்த அளவு ஒரு ரூபாய் நோட்டு கொடுத்தால் போதும் என்று ஆகிவிட்டது. இது அரசாங்கம் இஷ்டப்படி நோட்டு அச்சடிக்க அனுசரணையாயிற்று. பணவீக்கமும் அதிகரித்தது.
யுத்தத்தினால் அதிகரித்தது பணப்புழக்கமும் பணவீக்கமும் மட்டுமல்ல. எல்லாவற்றுக்கும் தட்டுப்பாடு, கட்டுபாடு ஏற்பட (பின்னால் ராஜாஜி நாமகரணம் செய்த) ‘கண்ட்ரோல் பெர்மிட் லைசென்ஸ் ராஜ்யம்’ அப்போதுதான் தொடங்கிற்று. அதற்குத் தகுந்தவாறு லஞ்ச ஊழலும் கறுப்புச் சந்தையும் தலையெடுத்தன. வியாபாரிகள் பலர் கறுப்புச் சந்தையில் கொள்ளையடித்தனர் என்றால் அதிகாரம் இருந்த இடத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு லஞ்ச லாவண்யம் பெருகிற்று. திடீரென்று (1945இல் என்று நினைக்கிறேன்) வைஸ்ராயின் நிர்வாக சபை – இன்றைய மத்திய அமைச்சரவை போன்றது – ஒரு வெடிகுண்டைத் தூக்கிப் போட்டது. ஆயிரம் ரூபாய் நோட்டுகளை இன்றிலிருந்து செல்லாது என்றது அந்த ஆணை. தாங்கள் நியாயமான வழியில் சம்பாதித்த பணத்தையும் பலர் ஆயிரம் ரூபாய் நோட்டாக வைத்திருக்கக்கூடும். (அப்போதெல்லாம் வங்கியில் பணம் போடும் வழக்கம் இன்று போல வளர்ந்திருக்கவில்லை என்பதை நினைவிற் கொள்க.)
அவர்கள் அந்தப் பணம் தங்களுக்கு எப்படிக் கிடைத்தது என்று சொல்லி அந்த நோட்டுகளை ரிசர்வ் பாங்கிலோ அல்லது இம்பீரியல் பாங்கிலோ (ஸ்டேட் பாங்கின் அன்றைய பெயர்) மாற்றிக்கொள்ளலாம். ஒன்று இரண்டு நோட்டுகளைக் கொண்டு போனால் அவர்கள் ஆட்சேபணை இல்லாமல் கொடுத்து விடுவார்கள். ஆனால் லட்சக் கணக்கில் கொள்ளையடித்து சேமித்து வைத்திருந்தவர்களுக்கு மிகக் கஷ்டம். இதில் பெரிதும் பாதிக்கப்பட்டவர் சென்னை மாகாணத்தின் அன்றைய வெள்ளைக்கார கவர்னர் ஸர். ஆர்தர் ஹோப் என்று பரவலாக நம்பப்பட்டது. சாதாரணமாக பிரிட்டிஷ் கவர்னர்கள் லஞ்சத்தில் ஈடுபட மாட்டார்கள். ஆர்தர் ஹோப் யுத்தகாலக் காற்று அடிக்கும்போது தூற்றிக் கொண்டவர். வர்த்தக உலகில் பெரும் புள்ளிகள் சிலரைத் துணைக்கு அழைத்து முடிந்த வரை கறுப்புப் பணத்தை மாற்றிக் கொண்டாராம் ஹோப். எங்கள் கோயமுத்தூரின் புகழ்பெற்ற தொழிலதிபர் ஒருவர் – கவர்னருக்கு மிக வேண்டியவர் – இரண்டு லட்சம் ரூபாய் இதுபோல் மாற்றிக் கொடுத்தாராம். அந்த நாளில் ஒரு லட்சமே மிகப் பெரிய தொகை. அதை உடையவர்களை ‘லக்ஷ£திபதி’ என்று உசத்தியாகச் சொன்ன காலம்.
ரூபாய் அணா பைசாக் கணக்கு சிக்கலானது. மெட்ரிக் முறை போல் பூஜ்யத்தைச் சேர்த்தால் காரியம் ஆகிவிடாது. உதாரணமாகப் பள்ளிக்கூடத்தில் ஒரு கீழ் வகுப்புக் கணக்கு பின்வரும் ரீதியில் அமைந்திருக்கும்.
ரூ அ பை *
147 13 7 x
16
___________________________
2365 9 4
(* ரூபாய், அணா, பைசா)
இந்தக் கணக்கைப் போடுவதானால் முதலில் 7 தம்பிடியை 16ஆல் பெருக்கி, வரும் 112ஐ 12ஆல் வகுப்பது முதல் கட்டம். மீதி வரும் 4 தம்பிடிகளை அங்கேயே விட்டுவிட்டு வகுத்தலில் தேறும் 9 முழு அணாக்களைப் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்தது 13 அணாக்களைப் பதினாறால் பெருக்கிக் கிடைக்கும் 208 அணாவுடன் கையில் வைத்திருக்கும் 9 அணாக்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதை 16ல் வகுத்தால் கிடைக்கும் மீதி 9 அணாவை அணாக் கணக்கில் விட்டுவிட்டு ஈவுத் தொகையாக 13 ரூபாயை கையில் வைத்திருந்து ரூ.147ஐப் பதினாறால் பெருக்கிக் கிடைக்கும் 2352 ரூபாயுடன் கூட்டி மொத்தம் 2365ஐ ரூபாய்க் கணக்கில் எழுதினால் கணக்கு முடிந்தது. இதைப் படிப்போருக்குப் ‘போர்’ அடித்தாலோ தலை சுற்றினாலோ நான் அதற்குப் பொறுப்பாளி அல்ல. பணக் கணக்கு என்பது அப்படித்தான் இருந்தது. இப்போதானால் இந்தக் கணக்கைப் போட பெரும்பாலோர் கால்குலேட்டரை நாடுவார்கள். அன்றோ ஒன்பது வயதுக் குழந்தைகள் இதைக் காகிதம், பென்சில் (அல்லது சிலேட்டு, பலப்பம்) மூலம் கணக்கிட்டார்கள். சில சமயம் தப்பு போட்டுக் குட்டும் வாங்கினார்கள். அல்லது பெஞ்சு மேல் ஏறி நின்றார்கள். நான் கணக்குப் பாடத்தில் மக்காக இருந்ததால் இதை அனுபவ பூர்வமாகச் சொல்ல முடியும். இப்போதுகூட நான் எழுதியிருக்கும் மாதிரிக் கணக்கின் விடை தப்பாக இருந்தால் ஆச்சரியப்பட மாட்டேன். நல்ல வேளையாகக் குட்டி வைக்க எங்கள் வாத்தியார்கள் இன்று இல்லை!
திருவாங்கூர் நாணயத்தைப் பற்றிச் சொன்னேன். அங்கே இரண்டுவித நாணயங்கள் புழங்கியதால், இதைவிடச் சிக்கலான கணக்குகள் கொடுத்துப் பிள்ளைகளின் உயிரை வாங்குவதற்கு சௌகரியமாக அமைந்தது. 137 ரூபாய் ‘சர்க்கார் நாணயத்தை’ பிரிட்டிஷ் நாணயமாக மாற்றுக என்று பள்ளிக்கூடக் கணக்குகள் கொடுப்பார்கள். 137ஐ இருபத்தெட்டு சக்கரத்தால் குணிக்க (பெருக்க) வேண்டும். வரும் விடையை 28 லு சக்கரத்தால் வகுத்தால் பிரிட்டிஷ் நாணய மதிப்பு கிட்டும்.
சுதந்திரம் வந்து பத்தாண்டு காலத்திற்குப் பிறகு, 1958ல் என்று நினைக்கிறேன். நேரு அரசு மெட்ரிக் முறையின் அடிப்படையில் அமைந்த நாணயச் சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தது. ரூபாய் அப்படியே இருக்க, இலங்கையின் சதம் போல, அது நூறு புதுக் காசுகள் ஆக்கப்பட்டது. புதுக்காசு ‘நயா பைசா’ என்று பெயர் சூட்டப்பட்டது. சரியான மொழிபெயர்ப்புதான்.
புதிய காசு மக்களுக்குப் பழக்கமாகும் வரை சில வருடங்களுக்குப் பழைய நாணயங்களும் கூடவே அனுமதிக்கப்பட்டன. ஆனால் புதிதாகப் பதிப்பிக்கப்படவில்லை. தவிரவும் கொஞ்சங் கொஞ்சமாகத் திரும்பப் பெற்றுக்கொண்டு உருக்கப்பட்டன என்று நினைக்கிறேன். ஆக காலக்கிரமத்தில் அவை வழக்கிலிருந்து மறைந்தொழிந்தன. ஆனால் இது நாலணா, எட்டணா இரண்டுக்கும் பொருந்தாது. புதிய காசுக்கு நாலணா 25 பைசாவாகவும் எட்டணா 50 பைசாவாகவும் கச்சிதமாய்ப் பொருந்தியதால் அவை நீடிப்பதற்குத் தடையேதும் இல்லை. ஆனால் அவற்றின் புதிய பதிப்புகள் அணாக் கணக்கில் எழுதப்படவில்லை. 25 பைசா அல்லது 50 பைசா என்றே குறிக்கப்பட்டன. அதே சமயம் அவற்றின் பழைய நாணயங்களும் செல்லும்.
இருபத்தைந்து பைசாவுக்குக் கீழே புதிதாகக் கொண்டுவரப்பட்ட நாணயங்கள் வருமாறு (ஒரு) நயா பைசா, இரண்டு நயா பைசா, ஐந்து நயா பைசா, பத்து நயா பைசா. பின்னால் இருபது பைசா நாணயமும் வெளியாயிற்று (இப்போது காண்பது அரிது.) நாலணா எட்டணா தவிர மற்ற பழைய நாணயங்களான தம்பிடி, காலணா, அரையணா, ஓரணா, இரண்டணா முதலியவை புதிய காசுக் கணக்கில் பொருந்தாததால் சில சிக்கல்கள் ஏற்பட்டன. அதுவரை, பல பொருட்களுக்கு ஓரணா அல்லது இரண்டணா என்று விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. உதாரணமாக சுதேசமித்திரன் (தினத்தாள்) ஓரணாவாக இருந்து வந்தது. நயா பைசா மதிப்பில் இது 6ரு பைசாவாகும். தொலையட்டும் என்று பிரதிக்கு ரு பைசா நஷ்டத்தில் அப்பத்திரிகையின் நிர்வாகம் அதை 6 நயாபைசா என்று நிர்ணயித்தது. நல்லவர்களுக்குக் காலம் இல்லை என்பது போல் சுதேசமித்திரன் அதிலிருந்து க்ஷீணமடைந்து சில ஆண்டுகளில் மூடப்பட்டது. ‘ஹிந்து’வோ இரண்டணாவுக்கு விற்று வந்த பத்திரிகை. அதன் சரியான நயா பைசா மதிப்பு 12லு வரும். கிட்டிய மதிப்பு என்ற கொள்கையைக் கடைப்பிடித்து அதை 13 நயாபைசா என்று வைத்துவிட்டார்கள். ஆக, நாணய சீர்திருத்தத்தினால் ஹிந்து பத்திரிகை பிரதிக்கு லு பைசா லாபம் அடைந்தது. Unearned income என்று சொல்லலாம்! குமுதம், விகடன், கல்கி போன்ற நாலணாப் பத்திரிகைகள் பாதிக்கப்படவில்லை. நாலணா என்பதற்குப் பதில் 25 நயா பைசா என்று விலையை எழுதினார்கள். விலை அதேதான்.
இதுபோல் பல சாமான்கள் பாதிக்கப்பட்டன. பெரும்பாலும் கிட்டிய மதிப்பு வியாபாரிகளுக்குத்தான் அனுகூலமாக அமைந்ததே தவிர நுகர்வோருக்கல்ல. ஒன்றரை அணா விற்ற பல பொருள்களும் 10 பைசாவாக உயர்த்தப்பட்டன (+1 பைசா) இதெல்லாம் rounding off என்ற பெயரில் நடந்த அநியாயங்கள். இதனால் ஒரு சிறிய அளவுக்குப் பணவீக்கம் அதிகரித்தது என்று கூடக் கேட்டிருக்கிறேன். அதே சமயம் (1957-62) தொடங்கி இருந்த இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தினாலும் இருக்கக் கூடும். அத்திட்டத்தில் பணவீக்கத்தை உண்டு பண்ணும் அம்சங்கள் நிறையவே காணப்பட்டன. வலதுசாரியான மினூ மஸானியும் இடதுசாரியைச் சேர்ந்த பூபேஷ் குப்தாவும் இத்திட்டத்தைத் தாக்கிக் காரசாரமாக எழுதினார்கள். ஆனால் பணம் என்னமோ வீங்கிக் கொண்டேதான் போயிற்று.
ஆரம்ப காலத்துக்கென்று, அரை நயா பைசா நாணயம் ஒன்றை அச்சடித்திருந்தால் இதுபோன்ற சில சங்கடங்களை அரசு தவிர்த்திருக்கலாம். சில ஆண்டுகளுக்குப் பிறகு அதை வாபஸ் பெற்றிருக்கலாம். ஏனோ இதைச் செய்யவில்லை. சில ஆண்டுகளிலேயே பணவீக்கம் ஒரு நயாபைசா, இரண்டு நயா பைசா நாணயங்களைப் புழக்கத்தில் இருந்து விரட்டிவிட்டது. இன்றைய இளைஞர்கள் பலர் ஒரு நயா பைசா என்ற காசைக் கண்ணால்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் கொள்கை அளவில் (in theory) இன்றும் அது செலாவணியில் இருக்கும் நாணயம்தான். நயா பைசாவைத் தொடர்ந்து பின்னாட்களில் ஐந்து பைசாவும் பின்னர் பத்து பைசாவும் கொஞ்சங் கொஞ்சமாக மறைந்தன. இன்று இருபத்தைந்து பைசாதான் குறைந்தபட்ச நாணயமாக விளங்குகிறதெனலாம்.
எது எப்படியிருந்தாலும் கணக்கு மிகவும் சுலபமாகிப் போனது. எல்லாத் தொகைகளுக்கும் ஒரு தசம புள்ளியை இந்தப் பக்கமோ அந்தப் பக்கமோ நகர்த்தினால் பெருக்கலும் வகுத்தலும் முடிந்து போயின. அல்லது பைசா ரூபாயாகவோ ரூபாய் பைசாவாகவோ ஆகிவிட்டது. இதன் விளைவாகக் கணக்கு வாத்தியார்களின் மகிமையும் குறைந்து போயிருக்கக்கூடும்!
ஆனால் இதற்கெல்லாம் கொஞ்ச காலம் பிடித்தது. ஆரம்ப நாட்களில் பரவலான குழப்பம் இருந்தது. படித்தவர்கள் படிக்காதவர்களைவிட அதிகமாகத் தப்பு செய்தார்கள். எனக்கு ஞாபகம் இருக்கிறது, கல்லூரி மாணவனான நான் சென்னைக்கு ரயிலில் வரும்போது என்னிடம் ஒரு வயதான மாது அன்பாகப் பேசிக் கொண்டிருந்தவர், சென்ட்ரல் வந்தவுடன் அடுத்த நாளைக்காகப் புனாவுக்கு ஒரு டிக்கெட் வாங்கித் தரச் சொல்லிக் கேட்டுக் கொண்டார். பணமும் கொடுத்தார். நானும் நல்ல பிள்ளையாக ஓடிப் போய் வாங்கி வந்து கொடுத்தேன். ஆனால் புக்கிங் கிளார்க் ஆறு அணாவுக்குப் பதில் தவறுதலாக ஆறு பைசா பாக்கி கொடுத்துவிட்டார். (அப்போது நயா பைசா வந்த புதிது, எல்லோருமே இது போன்ற தப்புகள் செய்து கொண்டிருந்த சமயம்.) நானும் கண்ணை மூடிக்கொண்டு வாங்கிக்கொண்டு வந்து பெருமையோடு அந்த அம்மாளிடம் சமர்ப்பித்தேன். அவருக்குக் கழுகுக் கண் போலும், உடனே தப்பைச் சுட்டிக்காட்டினார். நானும் சிரமத்தைப் பாராமல் கௌண்டருக்கு ஓடிச் சரியான சில்லறை வாங்கி வந்தேன். ஆனால் அதைக் கொடுக்கும்போது டிக்கெட்டை அவரிடம் கொடுக்க மறந்துவிட்டேன். சில்லறையைக் கண்ணில் எண்ணை விட்டுக்கொண்டு எண்ணிய அந்த மாமியும் இதை கவனிக்காமல் கோட்டை விட்டு விட்டார். நான் வீட்டுக்கு வந்த பிறகு என் பாக்கெட்டில் டிக்கெட் இருப்பது கண்டு திடுக்கிட்டேன். ரிசர்வேஷன் இல்லாத டிக்கெட் (அப்போது அது சகஜம்.) உடனே விழுந்தடித்துக்கொண்டு சென்ட்ரலுக்கு ஓடிப் போய் டிக்கெட்டை ‘கான்சல்’ பண்ணி பணத்தைத் திருப்பி வாங்கியதுகூடப் பெரிதில்லை. அவர் பேச்சோடு பேச்சாகச் சொல்லியிருந்த ஒரு பொது நண்பரின் பெயரை மாத்திரம் வைத்துக்கொண்டு துப்புத் துலக்கி அந்த அம்மாளின் விலாசத்தைக் கண்டுபிடித்ததும் பணத்தை அனுப்பி வைத்ததும் ஒரு நீண்ட கதை!
பின் குறிப்பு : ஒன்று சொல்ல மறந்து விட்டேன். காரல் மார்க்ஸில் ‘ஸ்டேட்’ போல காலக்கிரமத்தில் அதன் அவசியம் தீர்ந்து போன பிறகு, நயா பைசாவின் ‘நயா’ பகுதி ‘உதிர்ந்து’ போயிற்று (withered away) மக்களும் அவர்களைப் பின்பற்றி அரசும் அதை விட்டு விட்டனர்.
நன்றி: உயிர்மை, மே 2005
ரயில் பிரயாணத்தின் கதை – ரயில் பயணங்களில்
ரயில் பிரயாணத்தின் கதை
எஸ்.வி. ராமகிருஷ்ணன்
எனக்கு விவரம் வந்தபின் அமைந்த முதல் நீண்ட ரயில் பிரயாணம் 1945ஆம் ஆண்டில். அப்போதெல்லாம் ரயில் என்றால் நிஜமாகவே “புகைவண்டி.’ அதாவது குப்குப்பென்று புகை விட்டுக் கொண்டு சிறுவர்களின் (ஏன், பெரியவர்களின்கூட) கற்பனையைத் தூண்டிவிடும், நிலக்கரியை எரித்துத் தீயாக்கும் நீராவி வண்டி. மலையாளத்தில் அதன் பெயரே தீவண்டிதான். நமது இலங்கைச் சகோதரர்கள் யாழ்ப்பாணத்துக்கே உரித்தான அழகுத் தமிழில் அதைப் புகை இரதம் என்று அழைக்கிறார்கள்.
அந்தக் காலத்தில் ரயில் வண்டியில் மூன்று வகுப்புகள் இருந்தன. முதல் வகுப்பு என்பது பலருக்கும் எட்டாக்கை . . . அதாவது மிகப்பெரும்பாலானோர்க்கு அப்பாற்பட்டதொரு சங்கதி. வெள்ளைக்கார துரைகளும் ஐ.ஸி.எஸ். அதிகாரிகளும் இந்தியர்களில் ஜமீன்தார்களும் அதில் பிரயாணம் செய்தார்கள். இரண்டாம் வகுப்பு என்பதும் (கடந்த பத்தாண்டுகளில் ஏறக் குறையக் காணாமலேயே போய்விட்ட இன்றைய முதல் வகுப்பின் முந்தைய அவதாரம்) அன்றைய ரூபாய் மதிப்பின்படி மிகவும் விலை உயர்ந்ததாகக் கருதப்பட்டது. செல்வந்தர்கள் மற்றும் உயர் மத்திய வகுப்பினரில் சிலருமே அதில் பயணித்தனர்.
மூன்றாவது வகுப்புதான் ஜனதா வகுப்பு. டிக்கெட் இல்லாத பஞ்சை பனாதைகளிலிருந்து மத்திய தர வகுப்பினர் வரை எல்லோராலும் உபயோகிக்கப்பட்டது. இதன் நிலைமை இன்று நினைத்துப் பார்க்க முடியாத அளவு மோசமாக இருந்தது. மூன்றாவது வகுப்புப் பெட்டி என்பது எவ்வளவு பேர் வேண்டுமானாலும் ஏறக்கூடியதொரு சங்கப் பலகை. எந்தவிதமான ரிசர்வேஷனும் கிடையாது. உட்கார இடம்கூட அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது என்றால் தூங்கும் வசதியைப் பற்றிப் பேச வேண்டியதில்லை. ஆனால் ஒன்று. பிரெஞ்சுக்காரர்கள் ஆண்டு வந்த இந்தோ சைனாவில் ரயில் இதைவிட மோசம் என்று சொன்னார்கள். அங்கே நாலாவது வகுப்பு ஒன்றும் உண்டாம். அதில் ஸீட்டுகளே (பெஞ்சுகள்) கிடையாது, தரையில் உட்கார வேண்டுமாம்.
மூன்றாவது வகுப்பைப் பற்றி இன்னொரு விஷயம். அதில் மின்சார விசிறிகள் கிடையாது என்பது. கோடையில் பயணிகள் பனை ஓலை விசிறிகளைக் கொண்டு வந்து வீசிக்கொள்வார்கள். அதேசமயம் ஒன்று சொல்ல வேண்டும். இன்று போலில்லாமல் பெட்டிகளில் பெரும்பகுதி மரத்தினால் ஆனது. அதனால் இப்போதைய பெட்டிகள்போல் அத்தனை சூடாகவில்லை.
வண்டி கிளம்பும் ஸ்டேஷனில் போர்ட்டர்கள் யார்டில் இருந்து வண்டி வரு முன்பே அதில் ஏறி, சாமான்கள் வைப்பதற்காக மேலே இருக்கும் பலகைமீது ஒரு அழுக்குத் துண்டை விரித்து வைப்பார்கள். சுமார் எட்டணா அல்லது பன்னிரண்டு அணா பேரத்துக்கு அது “ஸ்லீப்பிங் பெர்த்’தாகத் தரப்படும். அந்தப் பலகை மீது ‘For Luggage only’ என்று ஆங்கிலத்தில் எழுதியிருக்கும் வார்த்தைகளை எவரும் கண்டுகொள்வதில்லை. ரயிலில் ஏறுவது ஒரு “பிரம்மப் பிரயத்தனம்.’ அப்போதெல்லாம் எல்லோரும் ஏகப்பட்ட சாமான்கள் மூட்டை முடிச்சுகளோடுதான் ரயிலேறுவார்கள். இரும்பினால் ஆன டிரங்குப் பெட்டிகள், ஹோல்டால், தண்ணீர்க் கூஜா இத்தியாதி கண்டிப்பாக இருக்கும். தவிர பட்சணக் கூடைகள், அம்மா பெண்ணுக்காகப் பறித்த (வீட்டு மரத்தில் பழுத்த) மாம்பழம் முதலியவும் அவ்வப்போது இருக்கும். ஹோல்டால் என்பது படுக்கை மட்டுமல்லாமல் எல்லா விதமான கண்டா முண்டா சாமான்களையும் திணிக்கக்கூடியது. லக்கேஜ் எடையைக் குறைவாகக் காட்டுவதற்காகக் கல்லூரி மாணவர்கள் புத்தகங்களை ஹோல்டாலில் புகுத்திவிடுவதும் உண்டு.
ஒவ்வொரு ஸ்டேஷனிலும் ரயில் வண்டி இப்போதைவிட அதிக நாழிகை நிற்கும். நம்மை ஏற்றிவிட வேண்டியது போர்ட்டரின் பொறுப்பு. எறும்பு தன் எடையைவிட அதிகமான பளுவைத் தூக்குகிறது என்று உயிரியல் விஞ்ஞானிகள் சொல்லுகிறார்களே, அதை நமது பழைய காலப் போர்ட்டர்கள் செய்தே காட்டினார்கள்! ரயில் வந்து நின்றவுடன் உள்ளே ஏற்கனவே இருப்பவர்களுக்கும் “வந்தேறி’களுக்கும் ஒரு பெரிய போராட்டம் துவங்கும். ஜன்னலோரம் உட்கார்ந்திருப்பவர் “”ஏன்யா இங்கேயே வந்து விழறீங்க? பின்னால் பெட்டியெல்லாம் காலியாக் கிடக்குது” என்று ஆசை காட்டுவார். பின்புறப் பெட்டிகளின் நிலைமை அவருக்கு எப்படி ஞானதிருஷ்டியில் புலப்பட்டது என்பது ஒரு மர்மம்.
அந்த யுத்தத்தில் உள்ளே ஏறுபவர்களின் உறுதுணையான போர்ட்டரோ இதை ஒன்றும் லட்சியம் செய்யாமல் “”நீங்க பாட்டுக்கு ஏறுங்க சாமி, சாமானை நான் ஏத்திடறேன்” என்று சொல்லிவிட்டுச் சாமான்களைக் கூசாமல் ஜன்னல் வழியாய் உள்ளே தள்ளிவிடுவார் (அன்றைய ரயில் பெட்டியில் ஜன்னல் கிடையாது.) உள்ளே அணிவகுத்து நிற்பவர்கள் “”ஐயோ பாவி என் காலிலே போட்டுட்டியே” என்று கூக்குரலிடுவார்கள். அது எல்லாம் மாய்மாலம் என்று அனுபவ பூர்வமாய்த் தெரிந்து வைத்திருக்கும் போர்ட்டரோ மீதி சாமான்களையும் தள்ளிவிடுவார். அதற்குள் சாமான்களின் உரிமையாளக் குடும்பங்களும் எப்படியோ அடித்துப் பிடித்துக்கொண்டு உள்ளே போயிருக்கும். அடுத்த படலம் போர்ட்டருக்குக் கூலி கொடுத்தல். குடும்பஸ்தர் முதலில் பேசிய எட்டணாவைக் கொடுப்பார். உடனே போர்ட்டர் நன்கு மனப்பாடம் செய்யப்பட்ட சில வசனங்களை அவிழ்த்துவிடுவார். “”கஸ்டத்தைப் பார்த்துக் காசு கொடுங்க ஐயா; பிள்ளை குட்டிக்காரன் சாமி. இன்னும் நாலணா போட்டுக் கொடுங்க” என்ற ரீதியில். கடைசியில், கூட இரண்டணா வாங்கிக்கொண்டு திருப்தியடைவார்.
ரயில் கிளம்பும்வரை பயணிகளின் மத்தியில் “டென்ஷன்’ நீடிக்கும். மண்ணின் மைந்தர்கள் வந்தேறிகளுக்கு இடம்விடாமல் தாங்களே ஸீட்டை ஆக்கிரமித்திருப்பார்கள். வேண்டுமென்றே காலை நீட்டிப் படுத்துக்கொண்டு தூங்குவது போல் பாசாங்கு செய்வதும் உண்டு. ஆனால் ரயில் நகர்ந்தவுடன் இந்தியா -சீனா மாதிரி உறவுகள் மாறிவிடும். இன்முகம் தலையெடுக்கும். “”நீங்க எங்கே ஸôர் போறேள்?” “”தம்பிக்கு எந்த ஊரு?” போன்ற விசாரிப்புகள் சுமுக உறவுக்கு வழி வகுக்கும். இதில் வேடிக்கை என்னவென்றால் அடுத்த ஸ்டேஷன் வருவதற்குள் இரண்டு கட்சிக்காரர்களும் ஒன்றாகிவிடுவார்கள். மட்டுமல்லாது புதிதாக ஏற வருபவர்களை விரட்டுவதில் ஒன்றாகச் செயல்படுவார்கள்.
மூன்றாவது வகுப்பில் உள்ளே சாப்பாடு வராது. சாப்பாட்டு நேரத்தில் வரும் ஜங்ஷன்களில் அருமையான சாப்பாடு கிடைக்கும். காண்டீன் வரை போய்ச் சாப்பிட்டுவிட்டுத் திரும்ப வேண்டிய நேரத்துக்கு வண்டியும் நிற்கும். காண்டீனில் சாப்பாடு மட்டுமல்லாது டிபனும் காப்பியும் உண்டு. வெஜிடேரியன் காண்டீனும் நான்-வெஜிடேரியன் காண்டீனும் பிளாட்பாரத்தின் இருமுனைகளில் வடதுருவம் தென்துருவம்போல் அமைந்திருக்கும். வெஜிடேரியன் காண்டீனில் காப்பிதான் கிடைக்கும். டீ வேண்டுமென்றால் அசைவ காண்டீனுக்கு (அதாவது பிளாட்பாரத்தின் மறுகோடிக்குத்)தான் போக வேண்டும். தேநீர் அசைவமாகக் கருதப்பட்டது ஏன் என்று தெரியவில்லை. காண்டீனைத் தவிர, பிளாட்பாரத்தில் தயிர்சாதம், புளியஞ்சாதம் முதலிய பட்டைச் சோறுகள் கிடைக்கும். அநேகமாக பாக்கு மட்டையில் சுற்றி அழகாகப் “பேக்’ செய்யப்பட்டிருக்கும். பெட்டியில் உட்கார்ந்தபடியே வாங்கலாம். வெளியே இறங்க முடியாதவர்களும் பெண்களும் இந்த வசதியை உபயோகித்துக் கொண்டனர். அதே சமயம் ஆண் துணையற்ற பெண் பாலர்க்கு இரங்கி ஆண்கள் அவர்களின் கூஜாவைக் கொண்டு போய்க் காப்பி வாங்கி வருவதும் உண்டு.
பிளாட்பாரத்தில் வயிற்றுப் பசியைத் தவிர அறிவுப் பசியைத் தீர்க்கும் சாதனங்களும் விற்கப்பட்டன. ரயில் வந்து நின்றதும் “ஹிந்து பேப்பர், சுதேசமித்திரன், தினமணி, இந்து நேசன், சந்திரோதயம்’ என்று ஒப்பித்தவாறு பையன்கள் ஜன்னல்தோறும் முற்றுகையிட்டுப் பத்திரிகை விற்பார்கள். இதில் “இந்துநேசன்’ லக்ஷ்மிகாந்தன் கொலைக்குப் பிறகு நின்று போயிற்று.
கடைசி நிமிஷத்தில் ஓடிவந்து ரயிலைப் பிடிப்பவர்களுக்கு டிக்கெட் வாங்க நேரமில்லையென்றால் கார்டினிடம் (Guard) ஒரு வார்த்தை சொல்லிவிட்டு ரயிலில் தொற்றிக்கொள்ளலாம். பின்னால் டிக்கெட் இன்ஸ்பெக்டர் பிரயாணியிடம் வந்து கட்டணத்தை வசூலித்துக் கொண்டு காகித ரூபத்தில் (அட்டை அல்ல) டிக்கெட் கொடுத்துவிட்டுப் போவார். அதற்காகக் கூடுதல் சார்ஜ் ஒன்றும் கிடையாது. டிக்கெட் இல்லாமல் பயணித்து மாட்டிக்கொண்டால் கடைசி ஜங்ஷனிலிருந்து இரட்டைக் கட்டணம் செலுத்தினால் போதும். டிக்கெட் இல்லாமல் பயணிப்பதில் நிபுணர்கள் உண்டு. செக்கிங் இன்ஸ்பெக்டர் வந்தால் அவர்களுக்கு மூக்கில் வியர்த்துவிடும்.
அதற்குள் வண்டி நின்றால் அவர்கள் ஓசைப்படாமல் நழுவுவார்கள். இல்லாவிடில் கழிப் பறைக்குள் புகுந்து தாளிட்டுக்கொண்டு நேரத்தைக் கடத்துவதும் உண்டு. அந்தக் காலத்துப் பிரயாணிகளுக்கு இரக்க சுபாவம் அதிகம் என்று நினைக்கிறேன். யாரும் இன்ஸ்பெக்டரிடம் அவர்களைக் காட்டிக் கொடுக்கமாட்டார்கள். இத்தனைக்கும் பாத்ரூம் போக முடியாமல் அவதிப்பட்டுக்கொண்டிருப்பவர்கள் இந்தப் பிரயாணிகளே.
அன்றைய புகைவண்டிப் பிரயாணத்தின் இன்றியமையாத ஒரு அம்சம் ரயில் பிச்சைக்காரர்கள். அதில் பாடுவோர், பாடாதோர் என்ற இருவகை உண்டு. பாடுவோரில் சிலர் தங்கள் காதில் கையை வைத்து அழுத்திக்கொண்டு அடிவயிற்றிலிருந்து நாதம் எழுப்புவர். அவர்களே தங்கள் பாட்டைக் கேட்க விருப்பம் இன்றி காதைப் பொத்திக் கொள்கிறார்களோ என்று தோன்றும். நெருப்புப் பெட்டியே தாள வாத்திய மாகப் பயன்படும். இன்னொருவரின் துணை கொண்டு வரும் குருட்டுப் பிச்சைக்காரர்களும் சகஜமான காட்சி. அவர்கள் எல்லோருக்கும் பிச்சை தாராளமாகவே கிடைத்தது. இவர்களைக் குறித்த ஒரு விசேஷமான சங்கதி என்னவெனில் எந்த ராஜா எந்தப் பட்டணம் போனாலும் என்ன டிக்கெட் செக்கிங் இருந்தாலும் இவர்களில் எவரும் ஒருபோதும் டிக்கெட் வாங்கியதாக வரலாறு இல்லை என்பது. இவர்கள் பின்னால் நடந்து ஒரு புண்ணியமும் இல்லை என்று ரயில்வே ஊழியர்கள் பிச்சைக்காரர்களைத் “தண்ணீர் தெளித்து’ விட்டிருந்தார்கள் என்று எண்ணுகிறேன்.
கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்ன என்னுடைய முதல் ரயில் பிரயாணத்தின் ஒரு காட்சி என் மனதில் விரிகிறது. அப்போது நான் மதுரையிலிருந்து தென்காசிக்கு மூன்றாம் வகுப்பில் போய்க்கொண்டிருந்தேன். ஏதோ ஒரு ஸ்டேஷனில் நின்ற ரயில் கிளம்பும் தருணத்தில், பாமரள் (“குடிமகள்’ மாதிரி, “பாமரனி’ன் பெண்பால்) போலத் தென்பட்ட ஒரு குடுகுடு கிழவி ஏறி “”இந்த வண்டி விருதுபட்டி போகுமா” என்று கேட்டாள் சிலர் “”போகாது, போகாது, இறங்கு” என்று பதறினார்கள். நல்லவேளையாக அதைக் கேட்ட ஒருவர் மட்டும் “”போகும் பாட்டி, உள்ளே வா” என்று அவளை ஏற்றிக்கொண்டார். “”நீ விருதுபட்டி என்று சொன்னால் இப்போதெல்லாம் யாருக்குப் புரியும்? விருதுநகர் என்று சொல்லு” என்று அறிவுரையும் வழங்கினார். முதலில் விருதுபட்டியாக இருந்ததுதான் பின்னால் ஸ்டைலாக விருதுநகர் என்று மாறினது அப்போதுதான் எல்லோருக்கும் தெரியவந்தது. “விருதுபட்டிச் சனியனை விலைக்கு வாங்குவது’ எங்கிருந்து வந்தது என்பதும் புரிந்தது. சனியனைப் பற்றிய கதைதான் தெரியவில்லை. இது நடந்தது 1945இல். அப்பொழுதே விருதுபட்டி என்ற பெயர் அறுகிப் போய்விட்டிருந்தது போலும், சில வயதான பட்டிக்காட்டுப் பெண்பிள்ளைகளிடம் தவிர!
ரயிலைப் பற்றிய இந்தச் சித்திரம் 1945-1955 என்ற கால கட்டத்தியது. அதன் பிறகு பெரிய பல மாற்றங்கள் நிகழ்ந்தன. இருக்கை வசதி, படுக்கும் வசதி என்று மூன்றாம் வகுப்புப் பிரயாணிகளுக்குத் தொடர்ந்து யோகம் அடித்தது. அதுவரையில் கீழ் வகுப்புப் பயணிகள் அதையெல்லாம் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. இதற்குக் கொஞ்ச காலம் முன்னால், யாருடைய பர்ஸ÷க்கும் எட்டாமல் பெரும்பாலும் காலியாகவே ஓடிக்கொண்டிருந்த பழைய முதல் வகுப்பு எடுக்கப்பட்டு இரண்டாவது வகுப்புக்கு முதல் வகுப்பு என்ற நாமகரணமும் நடைபெற்றது. கூடவே பல வருடங்கள் (யுத்த காலத்திலிருந்து) காணாமற்போய் அண்மையில் திரும்பி வந்திருந்த மத்திய வகுப்பு (இண்டர் கிளாஸ்) இரண்டாம் வகுப்பென்ற பெயரைத் தட்டிக்கொண்டது. இந்த வகுப்புப் பெட்டிகளில் குஷன் தைக்கப்பட்ட ஸீட்டுகள் இருக்கும். பிரயாணிகளின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டதால் உட்காரும் வசதி உறுதிப்படுத்தப்பட்டது. மூன்றாம் வகுப்பில் ரிசர்வேஷன் அடியோடு இல்லாத நிலையில் இது ஒரு கூடுதல் அனுகூலந்தான். ஆனால் தூங்கும் பெர்த் வசதி கிடையாது. பாத்ரூம்கள் மூன்றாம் வகுப்பைவிட இன்னும் வசதியுடனும் சுத்தமாகவும் இருக்கும். பிரயாணிகளின் தரமும் ஓரளவு உசத்தியாக இருக்கும். ஆனால் கட்டணம் கணிசமாக அதிகம். இதையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்து உயர் வகுப்பினர்கூடப் பகல் நேரப் பயணங்களுக்கு மட்டுமே இதைப் பெரும்பாலும் உபயோகித்தனர்.
அடுத்து வந்த ஆண்டுகளில் மூன்றாம் வகுப்பில் தூங்கும் வசதி (ஸ்லீப்பர்)யும் உட்காரும் வசதியும் (ஸீட் ரிசர்வேஷன்) பெருகவே, உட்கார மட்டும் வசதி கொண்ட இந்தப் புதிய இரண்டாம் வகுப்பை நாடுவார் இல்லாமற் போக, அதுவும் ஒருவழியாக நீக்கப்பட்டு மூன்றாம் வகுப்பிற்கே அந்தப் பெயர் சூட்டப்பட்டது. இன்னும் நீடிக்கிறது.
பின்னுரை
குளிப்பதற்கு வசதி படைத்த பாத்ரூம்களும் குடி தண்ணீர் வசதியும் கொண்டு மின் விசிறிகள் நிறைந்து ஆர்டர் பண்ணினால் சாப்பாடும் வரும் இன்றைய ஸ்லீப்பர்களைப் பார்த்தால் இவைதான் முந்தைய யுகத்தின் மூன்றாம் வகுப்புப் பெட்டிகளா என்று வியப்பாக இருக்கிறது. வேறு எதில் நடந்ததோ இல்லையோ, இந்த விஷயத்தில் மட்டுமாவது சுதந்திர இந்தியாவில் ஒரு காலத்தில் மாக்களாக நடத்தப்பட்ட சாமானியர்கள் மக்களாக உயர்வு பெற்றிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.
இரயில் பயணங்களில்
அசோகமித்திரன் – (எஸ்.வி. ராமகிருஷ்ணனைத் தொடர்ந்து)
ஆகஸ்ட் 2004இல் மதுரை சென்றுவிட்டு வந்தேன். மிகவும் வசதியான இரயில் வண்டி, வசதியான படுக்கை, நெரிசலேயில்லாத சூழ்நிலை, மிகக் குறைந்த சப்தமெழுப்பும் தொழில்முறை நுட்பம், குறித்த காலத்தில் வண்டி போய்க்கொண்டிருப்பது – எல்லாமே தூக்கம் வராமல் செய்தன. எஸ்.வி. ராமகிருஷ்ணன் ஒரு பத்து வருட இந்திய இரயில் வரலாறைக் கூறியிருந்தார். அவர் கூறியது ஒவ்வொன்றும் மிகையில்லாத உண்மை என்று நான் கூற முடியும். நான் இன்னும் பத்தாண்டுகளுக்கு முன்பே, அதாவது 1935ýருந்தே இந்திய இரயிலுக்கு அடிமைப்பட்டுவிட்டேன்.
அன்றைய இரயில் கால அட்டவணையைப் பார்த் தால் சில நிலையங்களுக்குப் பக்கத்தில் R என்றும் W என்றும் அல்லது RW என்றும் இருக்கும். எங்கள் குடும்பம் இரயில் குடும்பமாதலால் அந்த ஆங்கில எழுத்துக்களின் பொருள் தெரியும். R என்றால் அந்த நிலையங்களில் சிற்றுண்டி கிடைக்கும். W என்பது தண்ணீர் நிரப்பும் நிலையங்கள். பயணிகள் பெட்டிக்குத் தண்ணீர் கிடைக்காது போனாலும் இஞ்ஜின் தண்ணீர் குடிக்கும். இப்போது அதெல்லாம் கிடையாது.
பயணத்தின்போது R நிலையம் வந்தால் ஒரு பாத் திரத்தை எடுத்துக்கொண்டு ஒருவரே சமாளிக்கும் சிற்றுண்டிச்சாலைக்குப் போய் காபி வாங்கிக்கொண்டு வரவேண்டும். எங்கள் பயணம் முந்தைய இரவு சிகந்தராபாத்தில் தொடங்கி பெறுவாடா (இன்றைய விஜயவாடா) நிலையத்தில் இரயில் மாறி சூளூர்ப்பேட்டை என்ற நிலையத்திற்கு வந்தடையும்போது அடுத்த நாள் மாலை நான்கு அல்லது நான்கரையாகும். இப்போது அந்த நிலையம் தெலுங்குப்படுத்தப்பட்டு சூளூர்ப்பேட்டா என்றாகிவிட்டது. அந்தச் சிறு நிலையத்தின் சைவ சிற்றுண்டிச் சாலையை நடத்தியவர் என் பள்ளி நண்பன்/விளையாட்டுத் தோழன்/எதிரி சந்தானத்தின் உறவினர். காபி மிகவும் நன்றாக இருக்கும். ஆனால் சிறு பையனாக இருந்து சுடச்சுடக் காபி நிறைந்த சொம்பைப் பத்திரமாக அம்மாவிடம் கொண்டு வந்து கொடுப்பது மிகத் தீவிரமான அனுபவம். ரிசர்வேஷன் கிடையாது, எல்லாரும் படுக்கை, டிபன்காரியர், கூஜா, இரும்பு டிரங்கு சகிதம் பயணம் செய்தாக வேண்டும். தோளுயரப் பையன், பெண்ணாக இருந்தாலும் வயது இரண்டரைதான் என்று சாதிக்கும் மக்கள், டிக்கெட்டே இல்லாமல் பயணம் செய்யும் பிச்சைக்காரர்கள், சந்நியாசிகள் – இவ்வளவு தடை களையும் மீறிக் காபி வாங்கி வருவது பெருமையாக இருக்கும். அதுவும் சந்தானத்தின் மாமா அல்லது சித்தப்பா கொடுத்த காபி. ரயிலே மொத்தம் ஏழெட்டுப் பெட்டிகளோடு முடிந்துவிடும். ஆதலால் எந்தப் பெட்டியின் கதவு உங்கள் எதிரில் இருக்கிறதோ அதில் ஏறியே தீர்ந்தாக வேண்டும். வண்டியில் ஏற்கெனவே உள்ளவர்கள் ஏறுபவர்களைப் பரம விரோதியாகப் பார்ப்பார்கள். ஏறுபவர்களுக்குப் பெட்டியில் இருப்பவர்கள் மனதில் ஈரமே இல்லாத அரக்கர்களாகத் தோன்றுவார்கள். உண்மையில் இரயில் எந்த நிலையத்தில் நின்றாலும் ஒவ்வொரு கதவருகிலும் தேவாசுரப் போர் நிகழும்.
பெஜ்வாடா – சென்னைக்கிடையேதான் அபூர்வ இசை மேதைகள் அவர்களுடைய மேதைமையைத் திட்டமிட்ட பிரதிபலன் இல்லாது பயணிகளுக்கு அளிப்பார்கள். ஆர்மோனியம்தான் அவர்கள் கையில் எப்படியெல்லாம் செயல்படும்? அந்த நாளில் சினிமா சங்கீதமே ஆர்மோனியத்தால்தான் உருவானது என் றால் அது பொய்யாகாது. சைகல், பங்கஜ்மல்ýக், கே. சி. டே, கண்ணன் பாலாவிýருந்து அன்றைய தமிழ் -தெலுங்கு சினிமா நடிகர்களின் பாடல்கள் வரை அந்த ஆர்மோனியத்தில் விசேஷ ரசாயனமாக உருவாகும். ஒரு தமிழ்க் கட்டுரையில் ராண்டார் கை என்ற தமிழ் சினிமா வரலாற்றாசிரியர் ஒரு பாட்டைக் குறிப்பிட்டு “அந்த நாளில் இந்தப் பாட்டைப் பாடாத பிச்சைக்காரரே கிடையாது” என்றார். அந்தப் பாட்டின் முதல் வரி: ஐயா சிறு பெண் ஏழையென்பால் மன மிரங்காதா?
இன்று இரயில் பயணத்தின்போது ஏதோ போட்டோ எடுக்கப் போவதற்குப் போல உடை உடுத்திக்கொண்டு போகிறார்கள். அந்த நாளில் அது சாத்தியமில்லை. இரயில் பயணம் என்றாலே கரி, அழுக்கு. ஆதலால் இரயிலுக்குப் போட்டுக்கொள்வது என்று ஒரு பழைய சட்டை அல்லது பாவாடை தாவணி அல்லது புடவைதான் பொறுக்கி எடுத்து வைக்கப்பட்டிருக்கும். இந்த “ஐயா சிறு பெண்” பாட்டைப் பயணிகள் பாடினாலும் பொருத்தமாக இருக்கும்.
ஒரு ஜீவனுள்ள கதை அல்லது கட்டுரை உடனே படிப்போரை நினைவில் ஆழ்த்தி அவர்களுடைய அனுபவங்களையும் எழுத்தாளருடையதுடன் பொருத் திக்கொள்ளச் செய்யும். எஸ்.வி. ராமகிருஷ்ணனின் கட்டுரை ஓர் எடுத்துக்காட்டு.
நன்றி: உயிர்மை
ஐஸூக்கு வந்த மவுஸ்!
ஐஸூக்கு வந்த மவுஸ்! – எஸ்.வி. ராமகிருஷ்ணன்
1944. ஐரோப்பாவில் மட்டுமல்லாது இந்தியாவில் இம்பால் முனையிலும் (மணிப்பூர் சமஸ்தானம் – இந்திய பர்மா எல்லை) உலக யுத்தம் உக்கிரமாக நடந்த காலம். தாராபுரத்தில் பார்க் ரோட்டில் எங்கள் வீட்டிலிருந்து ஐந்தாறு காம்பவுண்டுகள் தள்ளி இருந்த ஒரு பங்களாவை (காம்பவுண்டு வைத்த தனி வீடுகளை அப்படித்தான் சொன்னார்கள். தனி வீடு என்று தனியாகச் சொல்ல வேண்டியதுகூட இல்லை. ஏனெனில் திறீணீt என்ற கூடுகளை, பம்பாய் போய் வந்தவர்களைத் தவிர யாரும் பார்த்ததுகூட இல்லை) ராணுவத்தினர் எடுத்துக்கொண்டு இருந்தனர். அங்கே எப்போதும் சீருடை அணிந்த துருப்புகள் ஜீப்பிலும் மிலிட்டரி லாரியிலும் வருவதும் போவதுமாக இருக்கும். அவர்களுக்கும் ஊர்க்காரர்களுக்கும் தொடர்பே இருக்கவில்லை. அது ஒரு தனி உலகம்.
ஒரு நாள் பார்க் ரோட்டில் ஒரு பரபரப்பு. ராணுவத்தினரின் உபயோகத்துக்காக வந்த ஐஸ் கட்டிகள் உபரியாக இருந் திருக்க வேண்டும். பாறை போன்ற ஒரு பெரிய ஐஸ் கட்டியை அவர்கள் வீட்டுக்கு வெளியே சாலையில் கொண்டுவந்து போட்டுவிட்டுப் போய்விட்டார்கள். எல்லோரும் காணாதது கண்ட மாதிரி அதை வெட்டி எடுத்துக் கட்டிகளை வீட்டுக்குக் கொண்டுசென்றனர். எங்கள் வீட்டு சமையற்காரர் அப்பா துரையும் தன் பங்குக்கு ஒரு கட்டியைக் கொண்டுவந்து எங்கள் எல்லோருக்கும் ஐஸ் சர்பத் பண்ணிக் கொடுத்தார். ஆம். அன்று ஐஸ் என்பது ஒரு அபூர்வமான பொருள். ஃபிரிட்ஜ் என்பது (முனிசிபல் நகரமான) தாராபுரத்தில் யார் வீட்டிலும் இல்லாத காலம். வியாபார ரீதியில் பனிக்கட்டிகள் விற்கப்பட வில்லை. வெள்ளைக்காரர்களுக்கு ஐஸ் ஒரு அத்தியாவசிய மான பொருள். ஆதி நாட்களில் ஆஸ்திரேலியாவிலிருந்து கப்பலில் பாளம் பாளமாக இறக்குமதி செய்து ஐஸ் ஹவுஸில் (இன்றைய விவேகானந்தா ஹவுஸ்) வைத்திருப்பார்களாம். அங்கிருந்து உஷ்ணம் ஏறாமல் பாதுகாப்பாக மரத்தூள் சுற்றி பல ஊர்களுக்கு ரயில் மூலம் அனுப்பப்படும். ரயில்வேயிலேயே முதல் வகுப்புகளில் (அன்றைய முதல் வகுப்பு ஒரு ‘சூப்பர் கிளாஸ்’ என்று சொல்லலாம். ஆங்கிலேயர் போன பின்னர் பிரயாணிகளே இல்லை என்று நீக்கப்பட்டது) உபயோகத்துக் காகவும் ஜில்லாத் தலைநகரங்களில் இருந்த இங்கிலீஷ் கிளப்புகளில் துரைகளின் குடி உபயோகத்துக்காகவும் சென்றது.
நான் சொல்லும் காலத்தில் இறக்குமதிக்கெல்லாம் அவசி யம் இருக்கவில்லை. ஐஸ் உற்பத்தி செய்யும் ரெப்ரெஜிரேஷன் சாதனம் வந்துவிட்டது. ஆனால் மக்களின் பரவலான உபயோகத்துக்கு ஏற்ற மாதிரியல்ல. கடைவீதியில் போய் ஐஸ் கட்டி வாங்க முடியாது. அதனால் ஐஸ் என்றால் சிறுவர்களுக்கு அத்தனை ‘எக்சைட்மெண்ட்.’ ஒரு கட்டி கிடைத்தால் ஆசையோடு கடித்துச் சாப்பிடுவார்கள். “பல் போயிடுண்டா” என்று கூடவே பெரியவர்கள் கத்திக்கொண்டிருப்பது அவர்களின் காதிலேயே ஏறாது.
அவர்களின் ஆசை நிறைவேறும் காலமும் சீக்கிரமே வந்தது. 1945 ஆகஸ்டில் உலக யுத்தம் முடிந்துபோயிற்று. அடுத்த ஒரு வருடத்தில் ராணுவ உபயோகத்துக்காக வர வழைத்து வைத்திருந்த சாதனங்கள் பொது உபயோகத்துக்காக வியாபாரத்துக்கு வந்திருக்க வேண்டும். ஆக, சுதந்திரம் வருவதற்குச் சற்று முன்பே எங்கள் பள்ளிக்கூட வாசலில் ‘குச்சி ஐஸ்’ என்ற புதிய வஸ்து தோன்றியது. அதுவரை மிட்டாய், சாக்லேட், பர்பி, கொய்யாப் பழம், இலந்தை, வடாம் முதலியவைதான் பள்ளிச் சிறுவர்களின் வேட்டை. இப்போது போட்டியாகக் குச்சி ஐஸ் முளைத்தது. மதிய உணவு இடை வேளையில் இந்தப் புதுமையைச் சுற்றி நாங்கள் கூட்டம் போடுவோம். ஆளுக்கு அரையணா வாங்கிக்கொண்டு (அதாவது முதலில் ஆர்டர்கள் எடுத்துக்கொண்ட பின்னர்) ஐஸ்காரன் ராஜா தன் அதிசய வஸ்துவை உண்டுபண்ணுவான். ஈரத் துணியில் சுற்றி வைத்திருந்த ஒரு பெரிய ஐஸ் கட்டியை எடுத்து தேங்காய், மாங்காய் மாதிரி துருவுவான். ஒரு கைப்பிடி அளவு துருவலை ஒரு குச்சியைச் சுற்றி பைத்துணியால் பிடித்து இறுக்குவான். ஐஸ் துருவல் எப்படியோ குச்சியைச் சுற்றி ஒட்டிக்கொண்டுவிடும். அந்த அற்புதத்தை நாங்கள் கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருப்போம்.
அடுத்தது தித்திப்பான சர்பத் எஸென்ஸை அதன் மேல் ஊற்றி எங்களுக்கு கொடுப்பான். நாங்கள் அதைச் சுவைக்கச் சுவைக்க அது உருகி எங்கள் சட்டையில் வழிந்துகொண்டே இருக்கும். இப்போதெல்லாம் ஐஸ் எந்தத் தண்ணியில் உண்டாக் கப்பட்டது, அமீபா இருக்குமா, சேர்க்கப்பட்டிருக்கும் கலர்கள் அங்கீகரிக்கப்பட்டவையா என்றெல்லாம் பெரியவர்கள் மட்டு மல்லாது சிறுவர்கள்கூட கவலைப்படக்கூடும். அன்று அதைப் பற்றியெல்லாம் யாரும் அலட்டிக்கொள்ளவில்லை. ஊரில் காலரா, டைபாய்டு போன்ற விஷ ஜுரங்கள் பரவியிருந்தால் மட்டுமே எங்களை எச்சரித்தார்கள்.
குரங்காக ஆரம்பித்து மனிதனாக வளர்ச்சி பெற்றது போலவே, குச்சி ஐஸின் அடுத்த பரிமாணத் தோற்றம் தொடர்ந்தது. இதன் பெயர் ஐஸ்புரூட். இப்போது ராஜாவுக்கு பதில் ஒரு கூஜா வந்து சேர்ந்தான் (அவனுடைய பெயர் தெரிய வில்லை). ஒரு வினோதமான பெட்டி அவனிடம் இருக்கும். அதில் நிறையக் குழிகள் உண்டு. ஒவ்வொன்றிலும் எஸென்ஸ் கலந்த ஸிரப்பை ஊற்றி அதற்கு நடுவில் ஒரு குச்சியையும் செருகிவிட்டு அந்தப் பெட்டியை லொடலொடவென்று ஆட்டு வான். பெட்டிக்குள் பனிக்கட்டியையும், உப்பையும் கலந்து போட்டிருப்பான் என்று கேள்விப்பட்டேன் (அது அதிகக் குளிர்மையை விளைவிக்குமாம்). காசையும் கொடுத்துவிட்டுக் கொதிக்கும் வெய்யிலில் நாங்கள் பொறுமையாக (சில சமயங் களில் பொறுமை இல்லாமலும்) காத்துக்கொண்டிருப்போம். கடைசியில் கோயில் கதவு திறக்கிறாப் போல, ‘ரெடி’ என்று சொல்லி ஆளுக்கு ஒன்றாக எங்களிடம் ஒன்று கொடுப்பான். நாங்கள் அனைவரும் ‘ஏழாவது சொர்க்கத்துக்கு’ போவோம்.
இன்னும் இரண்டு வருடங்களில் மெஷினில் பண்ணிய ‘ரெடிமேட்’ ஐஸ்புரூட்டுகள் வரலாயின. இவை இன்னும் கெட்டியாக அமைந்திருக்கும். அளவில் பெரியது. அதற்குத் தகுந்தாற்போல விலையும் ஓரணா. தரத்தில் இது (கையால் எங்கள் முன்னிலையில் செய்த) பழைய ஐஸ்புரூட்டை விட உயர்ந்ததுதான்.
ஆனாலும் காத்துக்கொண்டிருந்து வாங்கிச் சாப்பிட்ட (அம்மா சுடச்சுடப் பண்ணி ஒவ்வொன்றாக நம் இலையில் போடும் தோசையைப் போன்ற) ‘த்ரில்’லும் திருப்தியும் இதில் இருக்கவில்லை.
நன்றி: உயிர்மை ( நவம்பர் 2005)
உடைந்த கையை ஒட்டின கதை
உடைந்த கையை ஒட்டின கதை
(1943)
எஸ்.வி. ராமகிருஷ்ணன்
என் ஆறாவது பிறந்த நாளைக் கொண்டாடி ஒரு வாரம்தான் ஆகியிருந்தது. ஜனவரி 1943. யுத்தத்தின் தாக்கம் உக்கிரமாக இருந்த காலம். நான் எண்ணும் எழுத்தும் அரைகுறையாகக் கற்றுக் கொண்டு ஆனால் பள்ளிக் கூடத் தில் சேராமல் சுதந்திரப் பறவையாக இருந்த கடைசிக் காலம். நாள் முழுக்க விளையாட முடியும் என்றிருந்த நேரம். சென்னையில் இருந்து வந்திருந்த, என் வயதை ஒத்த உறவுக்காரப் பெண் சரோஜா வுடன் மும்முரமாக சிங்க விளை யாட்டு விளையாடிக்கொண்டி ருந்தேன். நான்தான் சிங்கம். அவள் தயைகூர்ந்து ஆடாக இருக்க ஒப்புக் கொண்டிருந்தாள். சிங்கமாகிய நான் ஒரு கட்டிலின் மேல் வீற்றிருக்க, சரோஜா கட்டிலின் கீழ் பயந்து பதுங்கினாள்.
சிங்கம் ஒரு கர்ஜனையுடன் கீழே பாய்ந்தது. துரதிர்ஷ்டவசமாகக் கட்டிலிலிருந்து தொங்கிக்கொண்டி ருந்த ஒரு நாடாவில் அதன் ஒரு கால் மாட்டிக்கொள்ளவே, சிம்ம கர்ஜனை ஓலத்தில் முடிந்தது. நான் அழுத அழுகையைக் கேட்டு எல் லோரும் ஓடி வந்தார்கள். என்னை அள்ளி எடுத்துக்கொண்டு மாடியிலி ருந்து கீழே கொண்டு போய் பரி சோதித்தார்கள். கீழே விழுவதும் விழுந்தால் அழுவதும் சகஜமான விஷயங்கள்தானே, இது என்ன கொஞ்சம் ஜாஸ்தியாகவே கவனிக் கிறார்கள் என்று எனக்கே கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. என் மரியாதை போய்விடக் கூடாதே என்பதற்காகத் தொடர்ந்து ஓலமிட்டேன்.
“எலும்பு உடைந்துவிட்டாற் போலிருக்கிறது” என்று அப்பா சொன்னது கேட்டது. அதற்கெல் லாம் எனக்கு அர்த்தம் தெரியாத தால் சிராய்ப்பு மாதிரி ஏதோ இன்னொரு காயம் என்று நினைத் துக்கொண்டேன். என்னைத் தூக்கி வண்டியில் போட்டுக்கொண்டு ‘லேடியாஸ்பத்திரி’ என்று பொது மக்களால் அழைக்கப்பட்ட லேடி டாக்டர் மேரி வர்க்கியிடம் போனார்கள். ‘வர்க்கியம்மா’ எங்கள் குடும்ப டாக்டர் மட்டுமல்ல, எங் கள் வீட்டில் எல்லாப் பிரசவங் களையும் பார்த்து என்னையும் என் சகோதர சகோதரிகளையும் இவ் வுலகிற்கு அறிமுகம் பண்ணி வைத்தவரும் ஆவார். அப்போது பார்த்து பக்கத்து கிராமம் ஒன்றில் பிரசவம் பார்க்க அவர் போயிருந் தார். உடனே பெரியாஸ்பத்திரி என்று பெயர் பெற்ற கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு ஓடினோம். அங்கே ஒரு ‘ஆம்பிள்ளை டாக்டரும்’ ஒரு லேடி டாக்டரும் இருந்தனர். முதலாமவர் என்னைப் பரி சோதித்துவிட்டுக் கோயமுத்தூருக்கு எடுத்துப் போகும்படி அறிவுரை கொடுத்தார். அப்புறம் அம்மா சொல்லித் தெரிந்தது : என் இடது முழங்கை எலும்பு ஒடிந்துவிட்ட தாம். மூட்டில் பார்த்து முறிந்து வைத்ததால் எக்ஸ்ரே எடுத்து ரிப்பேர் பண்ண வேண்டிய கேஸாம். தாராபுரம் ‘பெரியாஸ்பத் திரி’யில் எக்ஸ்ரே கிடையாததால் கோயமுத்தூருக்குத்தான் போக வேண்டுமாம்.
எலும்பு முறிந்தால் மிகவும் வலி இருக்குமென்று பின்னால் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் நிஜமா கவே அன்று தொடர்ந்து வலி ஏதும் இருந்ததாக எனக்கு ஞாபகம் இல்லை. ஒருவேளை எனக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவமும், கோயமுத்தூருக்கு, அதுவும் காரில், போகும் வாய்ப்பும் கொடுத்த சந்தோஷத்தில் வலி அமுங்கிப் போயிருக்கக்கூடும். அப்போது கார் என்பது மிக அபூர்வம். எங்கள் வீட்டிலும் கார் கிடையாது. அப்பா அவசரமாகக் கச்சேரிக்கு (கோர்ட்டு) போய் வேலைகளை முடித்துக் கொண்டு சீக்கிரமே திரும்பினார். வழக்குகளுக்கு ‘வாய்தா’ வாங்கி இருக்க வேண்டும். டாக்ஸிக்குச் சொல்லியனுப்பினார்கள். தாரா புரத்தில் அந்த நாளில் டாக்ஸி என்றால் கள்ள டாக்ஸிதான். அதா வது பிரைவேட் கார் என்று பதிவு செய்துகொண்டு கறுப்பு போர்டில் வெள்ளை எண்கள் எழுதியிருப் பார்கள். ஆனாலும் வாடகைக்குத் தான் ஓடும். இந்தக் கார்களின் முக்கியமான உபயோகம் கல்யாண ஊர்வலங்களே. அதனாலோ என் னமோ அவை எல்லாமே கூரையை சுலபமாகத் திறக்கக்கூடிய ‘டூரர் டாப்’ வண்டிகளாகத்தான் இருந் தன. வெயிலிலும் மழையிலும் இருந்து பாதுகாப்பு கொடுப்பது கேன்வாஸ் துணிதான். (21 வருடங் கள் கழித்து என் கல்யாண ஊர் வலம் நடந்தபோது கூட இவை இருந்தன. பின்னால் காணாமற் போய்விட்டன.)
கிளம்புவதற்குள் ஒரு சிக்கல். கோவை வரை போய்த் திரும்பி வர வேண்டிய பெட்ரோல் இல்லை யாம். அப்போது உலக யுத்தத்தின் காலமாகையால் பெட்ரோலுக்குப் பயங்கரத் தட்டுப்பாடு நிலவியது. ரேஷன் என்று கொஞ்சம் கொடுப் பார்கள். கூடுதலாக வேண்டுமா னால் குதிரைக் கொம்புதான். எப்ப டியாவது ‘பிளாக் மார்க்கெட்டில்’ வாங்கிக்கொண்டு ஒரே மணியில் வந்துவிடுவதாகச் சொல்லி தாராள மாகவே பணம் வாங்கிக்கொண்டு போன டாக்ஸி டிரைவர் மூன்று மணி நேரம் ஆகியும் காணாமற் போக என் அம்மாவும் அப்பாவும் தவித்துப்போனார்கள். கடைசியில் கொஞ்சம் பெட்ரோலும் கொஞ்சம் சீமெண்ணையும் (சீமை எண்ணை -வெள்ளைக்காரன் கொண்டுவந்த எண்ணை; அதாவது கிரஸின் ஆயில்) கலந்து குடித்துவிட்டு ஒரு ஹைதர் காலத்து கார் வந்து நின்றது. இதை வைத்துக்கொண்டு கோய முத்தூர் போய்ச் சேர முடியுமா என்று அம்மாவுக்குக் கவலை. ஆனா லும் ஓட்டையோ உடைசலோ எப்படியோ ஒழுங்காகப் போய்ச் சேர்ந்துவிட்டோம்.
கோவையில் ராமராவ், லஷ்மண ராவ் என்று இரண்டு டாக்டர்கள். இருவரும் சகோதரர்கள். இதற் கென்று ஆஸ்பத்திரி கட்டி வைத்து ஜில்லாவில் யாருக்காவது எலும்பு முறியாதா என்று காத்துக்கொண்டி ருந்தார்கள். அன்று நான் கிடைத் தேன். ராமராவ் ரொம்ப நல்லவர். தம்பி கொஞ்சம் முசுடு. கோபக் காரர் என்று சொன்னார்கள். நல்ல வேளையாக ராமராவ்தான் என்னி டம் வந்தார். அன்பாகப் பேசினார். எண்ணத் தெரியுமா என்று கேட் டார். தெரியும் என்று பெருமை யாகச் சொன்னேன் எத்தனை வரை எண்ணுவாய் என்றார். தைரியமாக “நூறு” என்று சொன்ன பிறகு மனதுக்குள் கொஞ்சம் சந்தேகம் எழுந்து உறுத்தியது. ஆனால் என் கவலைக்கு அவசியம் இருக்க வில்லை. அவர் குளோரோபாரம் (அந்தக் காலத்தைய மயக்க மருந்து) கொடுப்பதற்காகத்தான் கேட்டிருக் கிறார். பெரியவர்களைக்கூட அப்படித்தான் எண்ணச் சொல்லி மயக்கம் கொடுப்பார்கள் என்று பின்னால் தெரிந்தது. பத்தொன்பது எண்ணிய பிறகு நடந்தது எதுவும் எனக்குத் தெரியாது. அதனால் லக்ஷ்மணராவின் முன்கோபம் (அவர்தான் எலும்பை இணைத்தா ராம்) என்னைப் பாதித்திருக்க முடியாது.
நான் விழித்தபோது என் இடது கையை மடக்கி பிளாஸ்டர் போட்டிருந்தது. இரண்டு நாள் கழித்து வீட்டுக்கு அனுப்பினார்கள். ஆனால் தாராபுரம் திரும்ப முடி யாது. அடிக்கடி டாக்டரிடம் கொண்டுவந்து காட்ட வேண்டும் என்பதால் இரண்டு வாரம் போல் நானும் என் அம்மாவும் கோவை யிலேயே எங்கள் மாமா வீட்டில் தங்கினோம். மாமா என்றாலும் என் அம்மாவின் கூடப்பிறந்த சகோ தரர் அல்ல. பெரியப்பாவின் பிள்ளை, ஒன்றுவிட்ட சகோதரர். இப்போது எல்லாம் சொந்த அண்ணன் வீட்டில் போய்த் தங்குவதற்கே யோசனை செய்கிறார் கள். அந்த நாளில் சொந்த பந்தங்கள் எல்லாம் இன்னும் நெருக்கமாக இருந்தன. ஒன்று விட்டாலும் சரி, இரண்டு விட்டாலும்கூட சரியே, தைரியமாக உரிமையோடு போய் ‘டேரா’ போடலாம்.
மாமா வீடு இருந்தது இப்போது ராம் நகர் என்றழைக்கப்படும் அன்றைய ‘பிராமின் எக்ஸ்டென் ஷன்.’ சுருக்கமாக எக்ஸ்டென்ஷன் என்று சொல்வார்கள். கோவையில் அந்தப் பகுதி அந்தக் காலத்தில் மிக அழகாகவும் அமைதியாகவும் இருந்தது. பிளான் போட்டு அமைத்த ஒழுங்கான, விசாலமான வீதிகள், மரங்கள் அடர்ந்த காம்ப வுண்டு கொண்ட தனித்தனி வீடு கள். மாமா வீட்டில் ஒரு மயில்கூட இருந்தது. ஆனால் அது தோகையை விரித்து ஆடாதது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. அதற்கு அம்மா சொன்ன காரணம்: அது பெண் மயிலாம், ஆண் மயில்கள் தான் டான்ஸ் ஆடுமாம்.
கை சீராக முன்னேற்றம் அடைந் ததால் கொஞ்ச காலத்துக்குப் பிறகு பிளாஸ்டரை உடைத்து ஒரு பெரிய துணிக்கட்டு போட்டார்கள். இன்னும் சில நாளில் ஊருக்குப் போக அனுமதித்தார்கள். இப்போது மறுபடி ஒரு கார் சவாரி. ஆனால் இம்முறை அது (என் பெற்றோருக்கு) ஒரு பதட்டமில்லாத, சமாதான மான யாத்திரையாக இருந்தது. சில வாரங்களுக்குப் பின் மீண்டும் ஒரு முறை வந்து காட்ட வேண்டும் என்று சொல்லி அனுப்பினார்கள்.
அடுத்த கோவை விஜயம்தான் கடைசி விசிட் கூட. கை முழு குணமாகிவிட்டது. என்று சொல்லிக் கட்டை எடுத்துவிட்டார்கள். பிறகு ஊருக்குப் போய், ஒட்டின கைக்கு மறுபடியும் பலம் வருவதற்காக தினசரி ஒரு சின்ன பயிற்சி. அதா வது ஒரு டிபன் பாக்ஸில் மணலை நிரப்பி என்னிடம் கொடுப்பார்கள். எங்கள் வீட்டுக் காம்பவுண்டிலேயே நான் முறிந்து ஒட்டின என் இடது கையால் அதைத் தூக்கிக்கொண்டு மேலும் கீழுமாகப் பத்து தடவை நடக்க வேண்டியது. கைக்கு இன்னும் முழு பலம் வராததால் சில சமயம் அது கொஞ்சம் கஷ்ட மாக இருந்தது. அதற்கு நானே ஒரு வழி கண்டுபிடித்தேன். கஷ்ட மாக இருக்கும்போதெல்லாம் டிபன் பாக்ஸை வலது கைக்கு மாற்றி நடந்துகொண்டிருந்தேன். பத்து தடவை என்னவோ கரெக்டாக நடந்துவிடுவேன். ஒரு நாள் அம்மா அதைக் கண்டுபிடித்துக் கொஞ்ச லாகக் கடிந்துகொண்டாள். அப் போதுதான் எனக்கு அந்தப் பயிற் சியே ஒடிந்த கைக்குத்தானே என்பது உறைத்தது!
சீக்கிரம் எலும்பு நன்றாகப் பிடித்துக்கொள்ளவும் பலப்படு வதற்கும் இன்னும் ஒரு உபாயமும் கையாளப்பட்டது. இது நாட்டு வைத்திய முறை. ‘கொசத்தி’ என் றழைக்கப்பட்ட குயவனின் மனை வியை அழைத்து என் கைக்கு மயி லெண்ணை தடவி நீவி விடச் சொல்லுவார்கள். அதற்கு ஏன் மயில் எண்ணை என்று பெயர், அது மயிலில் இருந்து எடுத்ததா என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால் அதன் மணம் என்னமோ சுகந்தமாக இருக்கவில்லையே என்பது மட்டும் நினைவிருக்கிறது.
எப்படியோ கை சீக்கிரத்திலேயே குணமாகிவிட்டது. ஐந்தே மாதங் களில் நான் பள்ளியில் சேர்ந்த போது என் இடது கைக்கு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை. எல்லாம் சுபம்!
நன்றி : உயிர்மை(Oct 2005 )
சோஷலிஸம் தோற்றுவிட்டதா?
எஸ்.வி. ராமகிருஷ்ணன்
சுதந்திரம் வருவதற்கு முன்பு இந்திய தேசிய காங்கிரஸ், காங்கிரஸ் மகாசபை என்று அழைக்கப்பட்டதுபோலவே செயலும்பட்டது. அதாவது வெறும் கட்சியாக இல்லாமல் இந்தியாவின் தேசிய முன்னணியாக இயங்கியது. வலதுசாரி, இடதுசாரி என்று பலதரப்பினரும் இணைந்து செயல்பட்டனர். அவர்களை இணைத்தது தேசியவாதம், சுதந்திரவேட்கை என்ற அடிப்படைக் கொள்கையும் மகாத்மா காந்தியின் தலைமையுமே. இவற்றில் இடதுசாரியினர் சோஷலிஸ சித்தாந்தத்தில் நம்பிக்கை வைத்தவர்கள். தமிழில் அபேதவாதம் என்று சொன்னார்கள். பின்னால் சமதர்மம் என்ற பதம் வழங்கலாயிற்று. காங்கிரஸிலேயே காங்கிரஸ் சோஷலிஸ்டு என்பது, சுபாஷ்போஸின் பார்வர்டு பிளாக்போல, ஒரு தனி உள்கட்சி (அன்று காங்கிரஸில் உட்கட்சிகள் அனுமதிக்கப்பட்டன). துடிப்புமிக்க இளைஞர்கள் நிறைந்த இக்கட்சியின் தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயண். தவிர ஆச்சார்யா நரேந்திரதேவ் (வயதில் கொஞ்சம் முதிர்ந்தவர்) பொருளாதார வல்லுநர் அசோக்மேத்தா, டாக்டர் ராம்மனோகர் லோஹியா, அச்சுத்பட்வர்த்தன், யூசுப் மேஹராலி என்று குறிப்பிடத்தக்கவர்கள் பலர். 1942 ஆகஸ்ட் போராட்டத்தின்போது பிரிட்டிஷ் அரசாங்கம் வரலாறு காணாத அடக்குமுறையை ஏவிவிட்டு காந்திஜியிலிருந்து காமராஜ் வரை காங்கிரஸ்காரர்களைக் கூண்டோடு கைலாசமாகச் சிறையிலிட்டபோது இவர்கள் தலைமறைவில் சென்று போராட்டத்தைத் தொடர்ந்தார்கள். பின்னால் பலர் பிடிக்கப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்டனர். மாறுவேடத்திலிருந்த ஜெயபிரகாஷ் லாகூரில் கைது செய்யப்பட்டு பனிக்கட்டிமீது மணிக்கணக்காக அமர்த்தப்பட்டார் (அதனால் அவரின் கால்கள் நிரந்தரமாக பலவீனமடைந்தன). அதேசமயம் தில்லியில் ஒரு பிரிட்டிஷ் உயர் அதிகாரியின் வீட்டிலேயே மாறுவேடத்தில் பணியில் அமர்ந்த அருணா அஸப்அலி கடைசிவரை (1945) போலீஸôர் கண்ணில் மண்ணைத் தூவிய சாகசச்செயலும் அந்நாளில் பிரபலம். 1947-ல் சுதந்திரம் வந்த கையோடு நாட்டைச் சமதர்மப் பாதையில் கொண்டு செல்ல வேண்டுமென்று இவர்கள் வற்புறுத்தினார்கள். காங்கிரஸின் மூத்த தலைவர்களோ, அதற்கு அவசரமில்லை, பாகிஸ்தான் பிரிவினையையொட்டி சமுத்திரம் பொங்கியதுபோல எழுந்த அகதிகள் புனர்வாழ்வு போன்ற உடனடிப் பிரச்னைகளை முதலில் கவனிக்கலாம் என்று கருதினர். சோஷலிஸ்டு இளைஞர்களோ சுதந்திரம் வந்த உற்சாகம் தணியுமுன் சூட்டோடு சூடாக சமத்துவச் சீர்திருத்தங்களை கொண்டுவராவிடில் ஆறினகஞ்சி பழங்கஞ்சி ஆகிவிடும் என்று அஞ்சினர். அவர்களிடம் லட்சியவாதம் உள்ள அளவுக்கு யதார்த்த உணர்வு இல்லை என்று அபிப்பிராயப்பட்ட சர்தார் படேல் அன்றைய நிலைமையில் நாட்டின் சொத்தை அனைவருக்கும் சமமாகப் பங்கிட்டால் ஆளுக்குக் காலணாதான் (இரண்டு நயாபைசா) தேறும் என்று சொன்னார். மகாத்மாவின் திடீர் மறைவைத் தொடர்ந்து விரிசல் அதிகரித்தது. தாங்கள் காங்கிரûஸவிட்டு வெளியேறிவிடுவோம் என்று அவர்கள் மிரட்டியபோது யார் போகவேண்டுமானாலும் காங்கிரஸின் கதவுகள் திறந்தே இருக்கின்றன என்று படேல் கூறினார். ஓரளவு இடதுசாரிக் கொள்கையுடையவரென அறியப்பட்ட நேரு மௌனம் காத்தார். மார்ச் 1948-ல் நாசிக் நகரத்தில் கூடிய காங்கிரஸ் சோஷலிஸ்டுகள் வெளியேறியே விடுவது என்று தீர்மானித்தார்கள். சோஷலிஸ்டு கட்சி என்ற தனி ஸ்தாபனம் உதயமாயிற்று. தேர்தல் சின்னம் ஆலமரம். இரண்டாண்டு கழித்து பழம்பெரும் தலைவர் ஆசார்யா கிருபளானி காங்கிரûஸத் துறந்து பிரஜா மஜ்தூர் கிசான் (விவசாயி – உழைப்பாளி) கட்சியைத் தோற்றுவித்ததைத் தொடர்ந்து இரு புதிய கட்சிகளும் (இருவருமே பழைய காங்கிரஸ்காரர்கள்) இணைந்து பிரஜா சோஷலிஸ்டு கட்சியாயின. 1950-ன் இறுதியில் நிகழ்ந்த படேலின் மரணத்துக்குப்பின் காங்கிரஸ் கட்சியும் மத்திய அரசும் நேருவின் முழு அதிகாரத்திற்குள் வந்தன. 1952 பொதுத்தேர்தல் வரும்போது நேரு ஒரு ஜனநாயக சர்வாதிகாரியாகவே விளங்கினார். பொதுத்தேர்தலில் பிரஜா சோஷலிஸ்டுகள் அகில இந்தியாவில் 10 சதவிகிதம் வாக்குகளைப் பெற்றார்கள். ஆனால் அவை பரவலாக இருந்ததால் அந்த விகிதத்துக்கு எம்.பி., எம்எல்.ஏ. இடங்கள் கிட்டவில்லை. அவர்களைவிட மொத்த வாக்குகள் குறைவாகப் பெற்ற கம்யூனிஸ்டுகளுக்கு அதைவிட அதிக இடங்கள் கிட்டின; காரணம் அவர்கள் பரவலாக இல்லாமல் ஆந்திரம், மலபார் போன்ற சில “பாக்கெட்டுகளில்’ மட்டுமே இருந்தாலும் அங்கு ஆழமாக இருந்ததே (நமது தேர்தல் பிரதிநிதித்துவ முறையின் இந்த முரண்பாடு இன்னும் தொடருகிறது. பட்ங் ரண்ய்ய்ங்ழ் ற்ஹந்ங்ள் ஹப்ப்!). 1952 தேர்தல் முடிவுகளில் பண்டித நேருவுக்கும் சில அதிர்ச்சிகள் காத்திருந்தன. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைத்தாலும் காங்கிரஸின் செல்வாக்கு சரிந்திருப்பது தெளிவாயிற்று. சென்னை மாகாணத்தில் அறுதிப் பெரும்பான்மை கூட இல்லை. உத்தரப்பிரதேசத்தில் நேருவுடன் போட்டியிட்ட தொகுதி “அபேட்சகர்’ (வேட்பாளர்) கூட கணிசமான ஓட்டுகள் பெற்றுத்தான் தோற்றார். “”காங்கிரஸின் பெயரில் ஒரு விளக்குக்கம்பம் நின்றாலும் ஜெயித்துவிடும்” என்று எல்லோரும் சொல்லிவந்த நிலைமை மாறிவிட்டது தெரிந்தது. அடுத்த தேர்தலுக்குள் மக்களின் கவனத்தையும் கற்பனையையும் கவர புதிதாக ஏதாவது செய்தாக வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, 1955 ஜனவரியில் நடைபெற்ற ஆவடி காங்கிரஸில் “சமதர்ம அடிப்படையிலான சமுதாயம்’ (நர்ஸ்ரீண்ஹப்ண்ள்ற்ண்ஸ்ரீ டஹற்ற்ங்ழ்ய் ர்ச் நர்ஸ்ரீண்ங்ற்ஹ்) என்பது காங்கிரஸின் லட்சியம் என்ற முக்கியமான கொள்கைத் தீர்மானம் “ஒருமனதாக’ நிறைவேறியது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் சித்தாந்தரீதியாக சோஷலிஸத்தை நம்பியவர்கள் அனைவரும் 1948-லேயே வெளியேறிவிட்டிருந்தார்கள். அதாவது சர்தார் படேலைப்போல கொள்கைரீதியான வலதுசாரிகளும், அல்லாவிடில் குறைந்தபட்சம், சமதர்மத்தில் அக்கறை கொள்ளாதவர்களுமே காங்கிரஸில் தங்கியிருந்தனர். பின்னால் இப்போது திடீரென்று, இன்றிலிருந்து கூண்டோடு கைலாசமாக கட்சி முழுவதுமே சோஷலிஸ்ட் ஆகிவிட்டது என்று ஆவடியில் தீர்மானம் போட்டபோது ஒருவர்கூட ஆட்சேபிக்காதது விந்தையிலும் விந்தைதான். ஆவடிக்குப்பிறகு, இந்தியாவில் உண்மையான சோஷலிஸ்டுகள் பெரும்பாலும் காங்கிரஸýக்கு வெளியேயும் சந்தர்ப்ப சோஷலிஸ்டுகள் உள்ளேயும் இருந்தார்கள் என்றால் அதிகத் தவறில்லைதான். ஏறக்குறைய இதேசமயத்தில், மாவோ சீனாவையே தான் கண்ட புரட்சிப்பாதைக்கு மாற்றியமைக்க முயன்று கொண்டிருந்தார். அவருடைய செயல்வீரர்கள் அவரது “கொள்கையில் ஊறிய’ (ண்ய்க்ர்ஸ்ரீற்ழ்ண்ய்ஹற்ங்க்) கம்யூனிஸ்ட் தொண்டர்கள். ஒரு சமுதாயப் புரட்சியை தாசில்தார் மூலம் நடத்த முடியாது. நேருஜியிடமோ சோஷலிச சித்தாந்தத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட சொந்தக் கட்சிக்காரர்கள் அதிகம் இருக்கவில்லை. ஆக இந்தியாவின் சோஷலிஸப் புரட்சி பெரும்பாலும் அரசு இயந்திரம் மூலமாகத்தான் நடந்தது. சட்டங்கள், அரசுடைமை தொழில்கள், இத்யாதி. அதை ராஜாஜி “லைசென்ஸ், கண்ட்ரோல், பெர்மிட் ராஜ்’ என்ற தன் பிரசித்தி பெற்ற சொற்றொடரால் சாடினார். இந்த விஷயத்தில் தன் கட்சியின் குறைபாட்டையும் அதன் விளைவாக தன் சோஷலிஸத்தின் பலவீனத்தையும் உணர்ந்த நேரு ஜாக்கிரதையாகச் செயல்பட்டார். உருக்கு போன்ற கனரகத் தொழில்களில் அரசு பிரவேசித்ததே ஒழிய ஏற்கெனவே தனியார் மூலம் அமைந்திருந்த தொழில்களைத் தேசியமயமாக்குவதில் அவர் நிதானம் காட்டினார். அவரின் இறுதியாண்டுகளில் (1960 – 64) சீனாவுடன் ஏற்பட்ட சச்சரவும் யுத்தமும் அவரது வேகத்தையும், கடைசியில் அவரது ஆயுளையுமே கூட குறைத்தன. அவருக்கு கொஞ்சகாலம் பின் ஆட்சிக்கு வந்த இந்திரா காந்தி முழுக்க முழுக்க ஒரு அரசியல்வாதியாகவே விளங்கினார். தன் தந்தையைப் போலன்றி அவருக்கு “இஸம்’ எதுவும் கிடையாது. உண்மையில் அவர் ஒரு பிரத்யட்சவாதியேதவிர, வலதுசாரியுமல்ல, இடதுசாரியுமல்ல. அரசியல் காரணங்களினால் இடதுசார்பைக் கைக்கொண்டார். காலத்தின் கட்டாயம் எனலாம். துரதிர்ஷ்டவசமாக அவர் அரசியலைப் புரிந்துகொண்டதுபோல பொருளாதாரத்தைப் புரிந்துகொண்டிருக்கவில்லை. அதனால் பிரதானமாக அரசியல் அனுகூலங்களைக் கருத்தில் கொண்டு அவருடைய பொருளாதாரக் கொள்கை அமைந்தது. தொழில்களைத் தேசியமயமாக்குவதிலும் கட்டுப்பட்ட பொருளாதாரத்தை நிறுவுவதிலும் தந்தை காட்டிய விவேகமும் நிதானமும் மகளின் ஆட்சியில் காணப்படவில்லை. விளைவு, பணவீக்கம், வரிச்சுமை ஏற்றம், லஞ்சம், ஊழல் பெருக்கம், தனிமனித சுதந்திரம் சுருங்கியது முதலியன. சோஷலிஸம் என்ற பெயரில் அப்போது ஏற்பட்டது உண்மையில் “அரசாங்க முதலாளித்துவம்’தான். அவரைத் தொடர்ந்து வந்த ராஜீவின் குறுகிய ஆட்சிக்காலத்தின்போது காலமும் அதன் கட்டாயங்களுமே பெரிதும் மாறத் தொடங்கி இருந்தன. அப்போதே தொடங்கிய போக்கு அவருக்குப் பின் தீவிரமடைந்து இன்று தாராளமயக்கொள்கை என்று அழைக்கப்படுகிறது. காங்கிரஸ், பாரதிய ஜனதா என்ற இரண்டு பெரிய கட்சிகளுமே இதைக் கொள்கையளவிலும் நடைமுறையிலும் ஏற்றுக்கொண்டுவிட்டன. இன்று சோஷலிஸம் என்பது பாஷன் அல்ல என்பது தெரிகிறது. அதேசமயம், இந்தியாவில் சோஷலிஸம் வென்றதா அல்லது தோற்றதா என்றால், இரண்டுமே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், சில ஐரோப்பிய நாடுகளின் நிஜமான சோஷலிஸம்போல இந்தியாவில் ஒருபோதும் வரவேயில்லை. புகுத்தப்பட்ட அரசு முதலாளித்துவம் என்பது வேறு ஒருமுறை. அது சோஷலிஸம் ஆகாது.
எரிசக்திக் கொள்கையில் நடந்த இமாலயத் தவறுகள்
எஸ்.வி. ராமகிருஷ்ணன்
இரண்டாவது உலக யுத்தத்துக்கு முன் இந்தியாவில் எரிபொருள் பிரச்னை என்று ஒன்று இருக்கவில்லை. அப்போதெல்லாம் ரயில்களும் மாட்டுவண்டிகளும்தான் சரக்குப் போக்குவரத்தில் பெரும்பகுதியை வகித்தன. பஸ்ஸýம் லாரியும் உண்டு. ஆனால் மிகக் குறைவு. பல கிராமப்புறச் சாலைகளில் அவை போகக்கூட முடியாது.பெரும்பாலான மக்கள் (நகரங்களில்கூட) அடுப்பெரிப்பதற்கு விறகையே உபயோகித்தனர். ஓரளவுக்கு மண்ணெண்ணெயும் உண்டு. தவிர இன்னொரு அடுப்பு எரிபொருள் மாட்டுச்சாணம். அதாவது இன்று அற்றுப்போன வரட்டி. நாட்டின் தேவைக்கு வேண்டிய பெட்ரோலியத்துக்கு மிக அதிகமாகவே பர்மாவில் உற்பத்தியாயிற்று. அந்த பர்மா அன்று (1937 வரை) இந்தியாவின் ஒரு மாகாணம். யுத்தத்தின் போது நிலைமை தலைகீழாயிற்று. 1942-ல் ஜப்பானியர் பர்மாவைக் கைப்பற்றினர். கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் கிடைத்த சிறிதளவு எண்ணெயிலும் ராணுவ முஸ்தீப்புக்குத்தான் முதலிடம். பெட்ரோலுக்கும் “சீமையெண்ணெய்க்கும்’ கடுமையான ரேஷன், பேருந்துகள் கரியில் ஓடுமாறு மாற்றப்பட்டன. அடுப்புக்கரிக்கும் கிராக்கி அதிகரிக்கவே, காடுகள் பெருவாரியாக அழிக்கப்பட்டன. யுத்தம் முடிந்து சுதந்திரமும் ஐந்தாண்டுத் திட்டங்களும் வந்தபின், ஐம்பதுகளில் இந்தியாவின் தொழிற்புரட்சி வலுவடைந்தது. இன்றைய தொழில் மற்றும் தொழில் நுட்பத்தின் அஸ்திவாரம் அன்று இடப்பட்டதெனலாம். அங்கலேஸ்வர் (குஜராத்) போன்ற புதிய எண்ணெய்வளக் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தது அடுத்த பத்தாண்டுகளில். அப்போது நடந்த முதற்பெரும் தவறு அத்துறையை ஓஎன்ஜிசி என்ற அரசு நிறுவனத்தின் ஏகபோக உரிமை ஆக்கியதே. அதேசமயம் 1965 வரை சொந்த எண்ணெய்வளம் அறியாத பிரிட்டன் வடக்குக் கடலில் எண்ணெய் வளத்தைக் கண்டுபிடித்து உடனேயே முழுமூச்சுடன் அதில் இறங்கிப் பெரிய பெட்ரோலியம் உற்பத்தியாளராகி 1990-களில் தினசரி நான்கு மில்லியன் டன் எண்ணெய் எடுத்தது. நாமும் அதே வேகத்தில் செயல்பட்டிருந்தால் அரபி, வங்கக் கடல்களிலிருந்து நமக்கு வேண்டிய முழு அளவு எண்ணெயையும் பெற்றிருக்கலாம். ஆனால் 1990-களில் நமது சுயதேவை பூர்த்தி வெறும் 25 சதவிகிதம்தான் வளர்ந்திருந்தது. அண்மையில் இத்துறையில் தனியாரையும் அனுமதித்தபின் ரிலையன்ஸ் கண்டுபிடித்திருக்கும் வளங்கள் அறுபதுகளிலும் அங்கேதான் இருந்தன; ஆனால் ஓஎன்ஜிசியின் கிட்டப்பார்வைக்கு அவை எட்டவில்லை. அரசு நிறுவனங்களுக்கே உரித்தான மெத்தனத்தினால் நாற்பது ஆண்டுகளுக்கு நமது பொருளாதார முன்னேற்றத்துக்கான பாதையைத் தவறவிட்டு விட்டோம். இப்போதாவது கண்டுபிடித்தோமே என்பதுதான் ஆறுதல். அடுத்தது, இதைவிடப் பெரிய “இமாலயத்’ தவறு. அரசியலைத் தவிர வேறொரு காரணமும் இல்லாமல், 1970-களில் இந்திரா காந்தி நிலக்கரிச் சுரங்கங்களை தேசியமயமாக்கினார். மூன்றே ஆண்டுகளில் உற்பத்தி சரிந்து நிலக்கரி விலை நம்ப முடியாத 300 சதவிகிதம் ஆயிற்று என்பதை அரசாங்கமே ஒப்புக்கொள்ள வேண்டிவந்தது. ஊழல்களும் மலிந்து, குறிப்பாக பிகாரில், மாபியாக்களின் ஆதிக்கம் வலுத்தது. அவை இன்னும் நிலக்கரித் தொழிலைத் தங்கள் பிடியில் வைத்திருக்கின்றன. தனியார் தவறு செய்தால் தட்டிக்கேட்கும் நிலையிலிருந்த அரசாங்கம், அரசுடமை நிறுவனங்களே தவறிழைக்கும்போது செயலிழந்து நின்றது. மொத்தத்தில் வெள்ளைக்காரன் காலத்திலிருந்து நமக்கிருந்த ஓர் அரிய செல்வத்தை இன்று இழந்து நிற்கிறோம். அதேசமயம் நமது ரயில்வே கொள்கையும் தப்பான பாதையில் போகலாயிற்று. குப்குப் என்று புகைவிடும் கரி எஞ்ஜின்களுக்குப் பதில் டீசல் எஞ்ஜின்களைப் போட்டு 48 மணி நேரம் ஓடிய தூரத்தை 36 மணியில் கடப்பதில் பெருமிதம் கொண்டோம். நம்மிடம் இல்லாத (வெளிநாட்டுப்) பெட்ரோலியத்தை நம்புவதைவிட உள்ளூர்ச் சரக்கான நிலக்கரியை உபயோகித்து கொஞ்சம் மெள்ளப் பிரயாணம் செய்வதே விவேகம் என்பதை மறந்தோம். சொல்லிவைத்தாற்போல் 1973 அரபு – இஸ்ரேலியப் போரைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென்று உயர்ந்தபோது இந்தியப் பொருளாதாரமே சற்று ஆடித்தான் போயிற்று. பணவீக்கத்திலிருந்து அன்னியச் செலாவணித் தட்டுப்பாடு வரை எல்லாச் சிக்கல்களையும் எதிர்கொள்ள வேண்டி வந்தது. அதைப்பற்றிய பிரக்ஞையே இல்லாது இதே கொள்கைத் தவறு இன்னும் சில துறைகளிலும் செய்யப்பட்டது. காலங்காலமாக நமக்குக் கைகொடுத்துவந்த கால்நடைச் செல்வத்தைத் தொலைத்துவிட்டு இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பான விவசாயத்துக்கு டிராக்டர்களையும் உள்ளூர்ப் போக்குவரத்துக்கு (சிற்றூர்களிலும்கூட) மாட்டுவண்டி, ஜட்காவுக்குப் பதில் ஆட்டோமொபைல் வாகனங்களையும் கைக்கொண்ட கொடுமை அறுபதுகளில் தொடங்கி தொண்ணூறுகளில் முழுமையடைந்தது. கால்நடைகளால் சுற்றுப்புறச் சூழலும் மாசுபடவில்லை. அன்னியச் செலாவணியும் மிச்சம் என்பதையெல்லாம் எண்ணிப்பார்க்கக்கூட தில்லி, சென்னை போன்ற மாநகரங்களில் இருந்து கோலோச்சிய மாட்சிமை தங்கிய அரசுகளுக்கு நேரம் இருக்கவில்லை. எண்ணெய் வளம், நிலக்கரி, கால்நடையை விடவும் கூட நவீன கால நாகரிகத்தில் தலையாய முக்கியத்துவம் பெற்றிருக்கும் மின்சக்தியின் நிலையை அடுத்துக் கவனிப்போம். ஐம்பது, அறுபதுகளில் ஏறக்குறைய நாட்டின் நதிகள் எல்லாவற்றிலும் அணைகட்டி விட்டோம். அதனால்தான் இந்தியாவின் லட்சக்கணக்கான கிராமங்களுக்கும் ஆண்டுக்கு ஆண்டு பல்கிப் பெருகிய தொழில்களுக்கும் மின்சாரம் கொடுக்க முடிந்தது. ஆனால் மலைச்சரிவுகளில் காடுகள் அழிந்து ஆறுகள் வறட்சி அடைந்துவரும் இன்றைய நிலையில் இன்னும் அதிகப்படியான மின்சக்தியை ஆறுகளில் இருந்து எதிர்பார்க்க முடியாது. நிலக்கரி வளத்தை முழுமையாக உபயோகித்துக் கொண்டிருந்தால் அனல் மின்சாரம் நமது தேவையைப் பூர்த்தி செய்திருக்கலாம். இன்று அது நடக்காத காரியம். அதனால், ஆபத்தானது என்றாலும் அணுமின்சாரத்தைக் கொண்டு ஓரளவு சமாளித்து வருகிறோம். நாம் முன்னேறுவதற்கு மாநில அரசுகளின் மின்வாரியங்களே பெரிய தடையாய் இருக்கின்றன. உற்பத்தி, விநியோகம் இரண்டு திசைகளிலும் பொய்த்துப்போய் நாட்டின் தொழில் அஸ்திவாரத்தையே பலவீனப்படுத்தி வருகின்றன. இதற்குப் பிரதான காரணம் அரசுகளாலும் ஆளுங்கட்சிகளாலும் அரசியல் லாபங்களுக்காக அவை பயன்படுத்தப்படுவதே. உதாரணமாக, இலவச மின்சாரம் கொடுப்பது, மின்திருட்டைக் கண்டுகொள்ளாமல் விடுதல் முதலியன. அரசியல்வாதிகளின் தலையீட்டால் இல்வாரியங்கள் அளவுக்கு அதிகமான ஊழியர்களைச் சுமந்து அவர்களுக்குச் சம்பளம் கொடுப்பதற்கே திணறுகின்றன. நஷ்டத்தினால் பணமுடை, அதன் விளைவாக விஸ்தரிப்பு, புதுப்பித்தல் இரண்டுமே இயலாத நிலை என்று மின்வாரியங்கள் கொஞ்சம் கொஞ்சமாக முழுகிக் கொண்டிருக்கின்றன. நூறாண்டுகளுக்குமுன் சீனாவில் மஞ்சுப் பேரரசு காலத்தில் உயர் குடும்பப் பெண்கள் இரும்புக் காலணிகளால் இறுக்கப்பட்டு வளர்ச்சி குன்றிய சிறிய பாதங்களால் தங்கள் சரீர பாரத்தைச் சுமக்க முடியாமல் திணறுவார்கள் என்று படித்திருக்கிறோம். மின்உற்பத்தியும் விநியோகமும் சீர்திருந்தி நம்பகமான சப்ளை கிடைத்தாலொழிய, இன்று மிகப்பெரிய அளவில் வளர்ந்து வரும் இந்தியாவின் தொழில்கள் வருங்காலத்தில் அந்த மஞ்சுப் பெண்மணிகளின் நிலைக்குத் தள்ளப்படலாம்.
வார்த்தை நவம்பர் 2009 இதழில்… (10/29/09)
ஆகாசவாணி – எஸ்.வி. ராமகிருஷ்ணன்
கட்டுரை
சென்ற ‘விய’ வருடத்தில் வாழ்க்கை
எஸ்.வி. ராமகிருஷ்ணன்
வழக்கம்போல் அறுபதாண்டு கழித்து விய வருடம் மறுபடியும் எட்டிப் பார்க்கிறது. அறுபது வருடமென்றால் இரண்டு தலைமுறைகள் கழிந்துவிட்ட காலம். இந்த இடைவெளி நமது வாழ்க்கைமுறை பெரிதும் மாறிவிட்ட காலம். 19ஆம் நூற்றாண்டின் சுவடுகள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து நவீன இந்தியா உருவான காலம்.
விய வருடத்தில் (1946-47) நம் வாழ்க்கை முறையை இன்றைய வாழ்க்கைமுறையுடன் ஒப்பிட்டால் வியப்பாகவும் திகைப்பூட்டும் அளவுக்கு வித்தியாசமாகவும் இருக்கும். உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். இடச் சிக்கனத்தை உத்தேசித்துச் சிலவற்றை மட்டும் இங்கே கொடுக்கிறேன். இன்று பட்டிதொட்டியெல்லாம் வியாபித்திருக்கும் செல்பேசி (cell phone) பற்றி நான் சொல்லவரவில்லை. அது நம் கண்ணுக்கு முன்னால் கடந்த பத்தாண்டுக் காலத்தில் பரவிய வசதி. சாதாரணத் தொலைபேசியே (landline) அன்று ஒரு பேரதிசயம். பம்பாய், சென்னை போன்ற பெரு நகரங்களில்கூட மிகக் குறைவாகவே காணப்பட்ட வஸ்து. Mofussil என்று அழைக்கப்பட்ட ஜில்லாக்களை எடுத்துக்கொண்டால், கலெக்டருக்குத் தொலைபேசி உண்டு, தாசில்தாருக்குக் கிடையாது. அந்த அளவுக்கு மட்டாக இருந்தது என்பதை விளக்குவதற்குச் சொல்கிறேன். “அம்மாவின் உடல்நிலை மோசம் உடனே கிளம்பவும்” என்று சென்னையில் வசிக்கும் தனயனுக்குத் தெரியப்படுத்த கோவையில் இருக்கும் தந்தை உபயோகித்த சாதனம் தந்திதான், ஃபோன் அல்ல. பாட்டி போய்விட்டார் என்று லெட்டர் போடுவார்கள். ஆனால் ஒன்று சொல்ல வேண்டும். அந்த நாளில் தபால் அடுத்த நாளே போய்ச் சேர்ந்துகொண்டிருந்தது. விய வருடத்தில் அஞ்சலட்டை (post card) முக்காலணாவிலிருந்து அரையணாவாகக் குறைந்தது. யுத்த காலச் செலவுகளை ஈடுகட்டுவதற்காக அது அரையணாவிலிருந்து உயர்த்தப்பட்டிருந்ததாகவும் இப்போது யுத்தம் முடிந்ததை ஒட்டி மீண்டும் குறைக்கப்பட்டதாகவும் என் தாயார் அப்போது சொன்னது ஞாபகம் இருக்கிறது. கவர் ஒன்றரை அணா. அப்போது இன்லண்ட் லெட்டர் இருக்கவில்லை (அது இன்னும் ஐந்து வருடங்கள் கழித்து சுதந்திர இந்தியாவில் ரஃபி அகமத் கித்வாயினால் கொண்டுவரப்பட்டது). தபால் ஆபீஸில் கார்டு, தபால் தலை தவிர கொய்னாவும் விற்றார்கள் என்பது பலருக்கும் அதிசயமாக இருக்கும். ஆம், மலேரியாவுக்கான அந்த மகா ஔஷதத்தைப் பட்டிக்காட்டு ஏழை எளியவர்களுக்கும் கிடைக்கச் செய்யப்பட்டது இந்த ஏற்பாடு. ஞாயிற்றுக்கிழமைகளில் தபால் ஆபீஸ் பூட்டியிருக்கும். ஆனால் தபால் பட்டுவாடா உண்டு. கடிதங்கள் வரும். தபாற்பெட்டியில்** போட்டால் ஞாயிறன்றேகூட எடுப்பார்கள்.
மகாத்மா காந்தியை மக்கள் வெறும் தலைவராகப் பார்க்கவில்லை. கடவுளாகவே மதித்தார்கள். தீண்டாமை ஒழிப்பின் அவசியத்தை அவர் எடுத்துச் சொன்னதில் பெருமளவை ஏற்றுக்கொண்டார்கள். ஹரிஜனங்களுக்குத் திறந்து விடப்படாத எந்தக் கோயிலுக்கும் தான் வரமாட்டேன் என்று காந்தி சொல்லிவிட்டதை ஒட்டிப் பெரிய கோயில்கள் பலவற்றின் கதவுகளும் திறக்கலாயின. விய வருடத்தில் இவ்வாறு திறந்து காந்திஜி விஜயம் செய்த கோயில் பழனி. அந்த ஆண்டில் நீண்ட காலத்துக்கு (ஒரு மாதத்துக்கும் மேற்பட்டு) மகாத்மா சென்னை ஹிந்தி பிரச்சார சபாவில் தங்கினார். தினமும் பிரார்த்தனைக் கூட்டங்கள் நடைபெறும். “All are welcome”. அவரைச் சென்று சந்திக்காத சென்னைவாசிகளே இல்லை எனலாம். காந்தியடிகளின் கையெழுத்துக்காகப் பலரும் அவரை முற்றுகையிடுவது வழக்கம். ஆனால் கையெழுத்து வேண்டுமானால் ஐந்து ரூபாய் கொடுத்துவிட வேண்டும். அந்தப் பணம் ஹரிஜன நிதிக்குப் போய்ச்சேரும்.
அதே காந்தி என்ன முட்டிக்கொண்டாலும் கைகுத்தலரிசி நசித்துக்கொண்டே வந்தது. நகரங்களில் அரிசி என்றாலே மில் அரிசிதான். கைகுத்தலரிசியைப் பார்க்கக்கூடக் கிடைக்காது. அதிலும் வெள்ளைவெளேர் என்று ‘பாலிஷ்’ பண்ணி (அப்போதுதான் பார்வையாயிருக்குமாம்) சத்தில்லாமல் சாப்பிடும் பொல்லாத வழக்கம் அதிகரித்துக் கொண்டிருந்தது. ஆனால் (நல்ல வேளையாக) காந்தியார் பரிந்துரைத்த வெல்லத்தின் நிலைமை இப்படி இருக்கவில்லை. குறிப்பாக உழைக்கும் வர்க்கத்தினர் அஸ்கா என்று அந்நாளில் அழைக்கப்பட்ட வெள்ளைச் சர்க்கரையை (refined sugar) உபயோகிக்கவில்லை. வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரையை மட்டுமே பாவித்தார்கள். மேல் தட்டுகளிலும்கூட வெல்லம், அஸ்கா சர்க்கரையின் உபயோகம் பாதிப் பாதியாக இருந்தது. எங்கள் வீட்டில் வேலைக்காரர்கள் ரேஷன் அட்டைக்குக் கிடைக்கும் அஸ்காவை எங்கள் அம்மாவிடம் கொடுத்துவிட்டு எங்கள் பங்கு ‘சீமை எண்ணெயை’ (மண்ணெண்ணெய்) சந்தோஷமாக வாங்கிச் செல்வார்கள்.
ஆமாம், யுத்த காலத்தில் ஆரம்பித்த, ‘கூப்பன்’ என்று பொதுமக்களால் அழைக்கப்பட்ட ரேஷன் கார்டு வெகுவாக அமலில் இருந்தது. அரிசி, மண்ணெண்ணெய், வெள்ளைச் சர்க்கரை என எல்லாவற்றுக்கும் ரேஷன். ‘கூப்பன்’ மாதிரி ஏழை மக்களை வறுத்தெடுத்த இன்னொரு கொடுமையை என் வாழ்நாளில் பார்க்கவில்லை. சிவப்பு நாடா, லஞ்ச ஊழல் எல்லாவற்றாலும் ஊறியிருந்த கூப்பன் முறை மக்களை, குறிப்பாக ஏழைகளை, நிஜமாகவே ‘வயிற்றில் அடித்தது’. பல தடவை அரிசி புழுத்துப் போய் இருக்கு
34 comments:
//தனிப்பட்ட காரணங்கள் எதுவுமில்லை. எழுத ஆரம்பித்த காலத்தில் பிரசவமான படைப்பு எப்படி இன்றும் உயிர்த்துடிப்புடன் இருக்கிறது என்பதை பார்க்கவும், சின்ன ஊற்று எப்படி வற்றாத ஆறாக விரிந்தது என்பதை ஆராயவும்.
//
//இப்படி யோசிக்க யோசிக்க விதை, விருட்சமாக வளர்ந்துக் கொண்டே செல்வதை காணலாம். //
எஸ்.ரா. Yes.Rocks.
எஸ்.ராவைப் பற்றி அறியாமலேயே ‘காட்டின் உருவம்’ என்கிற சிறுகதைத் தொகுதியை பல ஆண்டுகளுக்கு முன் வாங்கி வாசித்த நினைவு வருகிறது. நீங்கள் குறிப்பிட்ட மாதிரி எஸ்.ரா. சிறுகதையின் வடிவத்தில் பல்வேறு சோதனைகளை முயன்று பார்த்துக் கொண்டே வந்திருப்பதை தொடர்ந்து வாசித்தால் அவதானித்துக் கொள்ள முடியும்.
ஆனால் ஒரு குறிப்பிட்ட எழுத்தாளரின் பெரும்பான்மையான சிறுகதைகளை ஒரே நேரத்தில் படிப்பது ஒரு சலிப்பான வாசிப்பனுபவத்தைத்தான் தரும் என்பதை என் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். சுவாரசியமாக எழுதும் சுஜாதாவிற்கும் இதே நிலைதான். மற்றவருக்கு இது மாறுபடலாம்.
எழுதப்பட்டதை விட எழுதப்படாத விஷயங்களை உள்நுழைத்து வாசகனின் கற்பனைக்காக விட்டு வைப்பது ஒரு எழுத்தாளனின் முக்கிய அம்சம். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இரு சிறுகதைகளும் அந்த நோக்கில் வெற்றி பெற்றிருக்கின்றன என்பது உங்கள் விவரிப்பில் தெரிகிறது. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
இதை ஒவ்வொரு எழுத்தாளரையும் அடிப்படையாக வைத்து ஒரு தொடராகவே எழுதலாம் என்கிற வேண்டுகோளை முன்வைக்கிறேன். அடுத்த பதிவு ஆதவனாக இருக்கலாம் என்கிற நேயர் விருப்பத்தையும். 🙂
//நண்பர் சுரேஷ் கண்ணன் விரிவாக எழுதுவார்//
அதைப் பற்றியும் நீங்களே எழுதிவிடலாம். உங்கள் அளவிற்கு நேர்த்தியாக என்னால் எழுத முடியுமா என்று தெரியவில்லை.
2009 ‘தினகரன் தீபாவளி மலரில்’ வெளியான இவரது ‘புர்ரா…’ சிறுகதை விரிக்கும் உலகு, வேலைக்கு செல்லும் கணவன் – மனைவியின் உலகை, அவர்களது குழந்தையின் அவஸ்தையை வெகு நுட்பமாக ஆராய்வது.
இடுகையில் குறிப்பிட்டுள்ள ‘பணம்’ அல்லது ‘கடன்’ என்னும் கருத்தைக் கொண்டு புதுமைப்பித்தனில் ஆரம்பித்து பலரும் சிறுகதைகள் எழுதியிருக்கிறார்கள். அவைகள் இதுபோல் நாவலாக – புதினமாக விரிகிறதா என்பதை வாசித்தவர்களின் கவனத்துக்கே விட்டுவிடுகிறேன்.
எத்தனை சிறுகதைகள் அல்லது புனைவுகள் இதுபோல் தன்னுள் நாவலை மறைத்து வைத்திருக்கின்றன என்றுப் பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும்.
தோழமையுடன்
பைத்தியக்காரன்
உதிரிப்பூக்கள் திரைப்படத்தில் விஜயனும் சரத்பாபுவும் சண்டையிட்டுக் கொள்கிற காட்சி நினைவுக்கு வருகிறது. இந்த அளவிற்கு நுட்பமான காட்சிகள் தமிழ் சினிமாவில் சொற்பமே. உங்கள் பதிவின் சாரத்தைப் போன்று, பார்வையாளன்தான் அவர்களுக்குள் நிகழ்நத மோதலை யூகிக்க வேண்டும்.
படைப்பு பாதி என்றால் நீங்கள் தங்கள் பரந்த கற்பனையின் மூலம் மீதியை நிரப்பி கொள்கிரீர்கள். இது போன்ற வாசகன் கிடைக்க எழுத்தாளர்கள் குடுத்து வைத்திருக்க வேண்டும். ஆனால் ஒன்று என்னை போன்ற சாதாரண வாசகன் தங்கள் அளவு கற்பனை குதிரையை ஓட்ட முடியாது. :))
நிற்க. நானும் எஸ். ரா வை ரசிப்பவனே. பகிர்வுக்கு நன்றி
அன்பின் சுரேஷ், விரிவான பின்னூட்டத்துக்கு நன்றி. ஆதவன்? நல்ல யோசனை. செய்யலாம். எஸ்ராவுடன் உரையாடியதை குறித்து நீங்கள் எழுதுவதே சரி. வாசிக்க காத்திருக்கிறேன்.
அன்பின் இராஜ ப்ரியன், வருகைக்கும், பின்னூட்டத்துக்கும் நன்றி.
அன்பின் மோகன் குமார், தன்னடக்கம் காரணமாக உங்களை நீங்கள் சாதாரண வாசகர் என்று சொல்லிக் கொண்டாலும், அப்படியில்லை என்று நன்றாகவே தெரியும். வாசகரில் சாதாரணமானவர் / அசாதாரணமானவர் என யாராவது இருக்கிறார்களா என்ன?
தோழமையுடன்
பைத்தியக்காரன்
பிளீஸ் ஹெல் மீ…
கதை எங்கிருந்து ஆரம்பிக்குது எந்த ஊரு என்பதையும் வாசகரே கற்பனை செஞ்சுக்கனும் ரைட்டு,
அவர்களுக்குள் நட்பு எப்படி உருவாச்சு என்பதையும் வாசகரே கற்பனை செஞ்சுக்கனும் ரைட்டு…
முடிவையும் வாசகரே இப்படி அல்லது அப்படின்னு விதவிதமா கற்பனை செஞ்சுக்கனும்… ரைட்டு.
இப்படி வாசகரை கற்பனை செஞ்சுக்க விடுவதுதான் புனைவு என்பது வரை புரியுது…
நடுவில் தம்மாதுண்டு கதை சொல்வதுக்கு பதில் தலைப்பை மட்டும் கொடுத்துவிட்டால் வாசகரே கதையையும் கற்பனை செஞ்சுக்கவிட்டா அது பெரும் புனைவா?
பிளீஸ் ஆன்சர் மை கொஸ்டினு? (15 பைசா அக்னாலெஜ்மெண்ட் கார்ட்டும் வெச்சு கேள்வி கேட்டு இருக்கேன்)
//அந்தச் சாவியைக் கொண்டு கதவை திறக்க வேண்டியது மட்டுமே வாசகனின்/வாசகியின் வேலை. அப்படி அவன்/ள் திறக்கும்பட்சத்தில் விரிவது 7 கடல்கள், 7 மலைகள் தாண்டி மறைந்திருக்கும் வாழ்க்கையின் ரகசியம்.//
அன்பின் குசும்பன், நீங்கள் அனுப்பிய 15 பைசா அக்னாலெஜ்மெண்ட் கார்ட்டு இன்னும் வந்து சேரவில்லை. சேர்ந்ததும் பதில் அனுப்புகிறேன் 🙂
அன்பின் தாமோதர் சந்துரு, வருகைக்கும், நண்பர் அமரபாரதிக்கு பதில் சொன்னததற்கும் நன்றி.
அன்பின் மகேந்திரன்.பெ, பிரியத்துகுரிய குசும்பனுக்கு பதில் சொல்லிவிட்டேன்…
தோழமையுடன்
பைத்தியக்காரன்
அவரே தனது சிறந்த சிறுகதைகளில் ‘தாவரங்களின் உரையாடல்’ மற்றும் ‘புலிக்கட்டம்’ என்ற இரு சிறுகதைகளைக் குறிப்பிட்டு இருந்ததாக ஞாபகம். இரண்டுமே இன்னும் படிக்க வாய்க்கவில்லை.
அனுஜன்யா
முதல் வாசிப்பில், இது எஸ்ராவின் கதாவிலாசத்தின் தொடர்ச்சியோ, என்று தான் எனக்கு தோன்றியது
சிவராமன் நான் எஸ்ராவின் புத்தகங்கள் வாசிப்பேன் .
நல்ல விமர்சனம் எழுதியிருக்கீங்க
இதே போல எஸ் ராவின் ஒரு சிறுகதை உண்டு (தலைப்பு மறந்து விட்டேன், இருக்கன்குடி கோவிலில் மொட்டை அடிக்கும் ஒரு பெண் பற்றிய கதை,
////அந்தச் சாவியைக் கொண்டு கதவை திறக்க வேண்டியது மட்டுமே வாசகனின்/வாசகியின் வேலை. அப்படி அவன்/ள் திறக்கும்பட்சத்தில் விரிவது 7 கடல்கள், 7 மலைகள் தாண்டி மறைந்திருக்கும் வாழ்க்கையின் ரகசியம்.////
என்னமோ போங்க. எனக்கு ஒன்னும் புரியல. எதுக்கு இவ்வளவு சிரமப்படனும். எழுதியிருக்கறத படிச்சுட்டு நேரடியான அர்த்தம் புரிஞ்சா போதாதா?
அவரது எத்தனை எழுத்துக்களைப் படித்தாலும், ’உறவும், பிரிவும் இன்றி’ என் ஞாபக அடுக்குகளில் எப்போதும் மேலே மிதந்து கொண்டே இருக்கிறது. அடேயப்பா!
பகிர்ந்தமைக்கு நன்றி தோழர்!
வாசகபர்வம்
உபபாண்டவம் வாசிக்க கிடைத்தது
இம்முறை தொகுப்பு வாங்கி வர வேண்டும் இந்தியாவிலிருந்து வரும்போது….
வாசகனுக்கான வெளியை உருவாக்கும் சொற்கள் வாய்த்திருக்கிறது அவரின் கதைகளுக்கு
வாசக பார்வை.. உள்ளங்கையில் ஊற்றி ருசி பார்க்கும் கரம்
அன்பின் சங்கர், ஸ்டார்ஜன், அன்புடன் அருணா, குப்பன் யாஹு, வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி.
அன்பின் மாதவராஜ், முதலில் வாழ்த்துகள். பதிவர்களின் படைப்புகளை நூலாக நீங்களும் பவாவும் அருமையாக கொண்டு வந்திருக்கிறீர்கள். பக்கத்துக்கு பக்கம் உங்கள் உழைப்பு தெரிகிறது என்பதைவிட, பதிவர்கள் மீது நீங்கள் கொண்டுள்ள அன்பு நிரம்பி வழிகிறது என்று சொல்வது மிகப் பொருத்தமாக இருக்கும். தனி இடுகையாக, விரிவாக இதுகுறித்து எழுதப் போகிறேன். எஸ்ரா சிறுகதைகள் குறித்து நீங்கள் பகிர்ந்திருக்கும் விதம், அருமை.
அன்பின் நேசமித்ரன், வருகைக்கும், நெகிழ்ச்சியான பின்னூட்டத்துக்கும் நன்றி.
தோழமையுடன்
பைத்தியக்காரன்
http://www.kaveriganesh.blogspot.com
நல்ல பகிர்வுக்கு நன்றி
சிறுமி வாங்கிய கடன் விவரங்களை, குடும்பம் காலி செய்துவிட்டுப்போன அறை சுவற்றில் நாம் படித்திருக்கிறோம்.
எங்கோ வடகிழக்கு மூலை மாநிலத்தில் உள்ள ஏரியின் கண்கள், நம்மை உற்று நோக்குவதை நாம் உணர்ந்திருக்கிறோம்.
நிகழ் களத்தில் நம்மையும் அழுந்திக் காலூன்ற வைப்பதுதுதான் எஸ்ராவின் தனிச்சிறப்பு.
அன்பின் rama, நேர்மையான உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி. எஸ்ரா எழுத்துக்கள் ஒரு வாசகனாக எனக்கு சலிப்பை தரவில்லை என்பதை இங்கு பதிவு செய்வது என் கடமை.
தோழமையுடன்
பைத்தியக்காரன்
படிச்சி முடிச்சிட்டேன், முதன் வேலையா அவருக்கு சுட்டி குடுத்துட்டேன் – சரி அவரும் படிக்கட்டும் அவரை நான் ஏன் பிங்கனும்.
விமர்சிக்கும் அளவுக்கு தெளிவில்லை
உங்கள் பார்வை இரசிக்கும்படியாக …
எஸ்.ரா. எடுத்து எழுதுகிற சூழ்நிலைச் சிக்கல் அவருடைய ஓரொரு கதையையும் வாசிக்கையில் என்னை வியப்பில் ஆழ்த்தும். உலகின் சிறந்த எழுத்தாளர்கள் தம் படைப்புகளில் வருவதற்கு நிகரான வாழ்க்கைச் சிக்கல்களைக் கண்டு புனைகிறார்.
ஆனால் மொழிநடையில் அவருக்கு சற்று கவனக் குறைவு உண்டோ என்று நான் எண்ணுவதுண்டு. (‘எறும்பு ஊர்வது மாதிரி கையெழுத்து’ என்கிற சொல்லாடலை, எடுத்துக் காட்டாக, இரண்டு மூன்று கதைகளில் வாசித்துவிட்டேன்). அல்லது அவருக்கு வந்து முட்டும் கருத்துகளின் பெருக்கத்தை அணைகட்டித் தருகிற அளவுக்கு மொழிவல்லமையை வளர்த்துக் கொள்வதில் அக்கறையற்று இருக்கிறாரோ? ‘Effect’க்காக எழுதப்படுவது நல்ல எழுத்தன்று என்று நானும், ஹிட்ச்காக் படங்களைப் பார்ப்பது வரை, கொள்கை கொண்டிருந்தேன். எஸ்.ரா. தனது தளத்தில் ‘Story of sign’என்றொரு குறும்படத்தைப் பரிந்து இட்டிருக்கிறார். அதற்கு நன்றி, ஆனால் அவருக்கே அதைப் பரிந்துரைக்கக் கூச்சமாக இருக்காதா? அவர் craftsman-ஓ இல்லையோ ஐயமில்லாமல் ஒரு கலைஞன்.
அது யார் rama? சென்ற பதிவின் பின்னூட்டத்திலும் அவர் கவனம் கவனிக்கப்படும்படியாக இருந்தது.
– ராஜசுந்தரராஜன்
உறவும் பிரிவும் இன்றி ஏற்கனவே வாசித்திருக்கிறேன். உங்கள் பதிவு கண்ட பிறகு, மீண்டும் வாசித்து, பின் ̀தெரிந்தவர்களையும்’ வாசித்தேன். 80களின் பல கதை சொல்லல்கள் நம் மனதுக்கு மிகவும் நெருக்கமானவை. வண்ண நிலவன், வண்ணதாசனை படித்து நெகிழ்ந்திருக்கிறோம். அந்தவகையில் எனக்கு வண்ண நிலவனின் கதை வாசிப்பனுபவம் போல இந்த இரண்டு கதைகளும் இருந்தன. (வண்ணதாசனின் தளம் வேறு.) ஆனால் நீங்கள் முன்வைக்கும் தன்மைகள் கதைக்கு இருக்கின்றனவா என்று எனக்கு மிகவும் சந்தேகமாக உள்ளது.
இரண்டு கதைகளும் தட்டையான மொழியில், ஒற்றை பரிமாணத்தில்தான் உள்ளன. அதை குறையாக நான் சொல்லவில்லை. ஆனால் நீங்கள் சொல்வது போல இரு சிறுகதைகளும் ஒரு நாவலை உள்ளடக்கியதாக எனக்கு தோன்றவில்லை. சிறுகதைகளை முன்வைத்து நீங்கள் உங்கள் வாசிப்பை விரிப்பது உங்கள் அக உலகம் சம்பந்தப்பட்டது. அதை நீங்கள் எழுதுவது சுவாரசியமாக இருக்கலாம். ஆனால் அது உங்கள் வாசிப்பு மட்டுமே. இது பல கதைகளுக்கு (வண்ண நிலவனின் கதைகளுக்கும்) சாத்தியமாகலாம். ஆனல் எஸ்ரா அப்படி பல நுட்பங்களை உள்ளடக்கி, மௌனத்தை கிளை கதைகளாக மாற்றியதாக, இந்த கதைகளில் எனக்கு தோன்றவில்லை.
̀கடன்’ என்ற கருப்பொருளை புதுமைப்பித்தன் தொடங்கி பலர் கையாண்ட விதம் பற்றிய உங்கள் பார்வையை எழுதினால் சுவாரசியமாக இருக்கும்.
அன்பின் மகாகவி, தங்கள் வருகையும் அவதானிப்பும் அருமை. //உலகின் சிறந்த எழுத்தாளர்கள் தம் படைப்புகளில் வருவதற்கு நிகரான வாழ்க்கைச் சிக்கல்களைக் கண்டு புனைகிறார்.// என்பது உண்மை. மொழிநடை குறித்த உங்கள் விமர்சனத்தை, நிச்சயம் எஸ்ரா கவனத்தில் கொள்வார்.
அன்பின் ரோசா, சட்டென நூலை பிடித்துவிட்டீர்கள். ஆரம்பக்கால எஸ்ரா சிறுகதைகளில் வண்ணநிலவனின் பாதிப்பு உண்டு. பிறகு உலக இலக்கியங்களை வாசிக்க ஆரம்பித்து அந்த பாதிப்பிலிருந்து விலகினார்.
எஸ்ரா சிறுகதைகள் எழுதப்படாத நாவலை சொல்வதாக எனக்கு தோன்றியது. அந்த வாசக அனுபவத்தையே இடுகையாக்கினேன்.
//̀கடன்’ என்ற கருப்பொருளை புதுமைப்பித்தன் தொடங்கி பலர் கையாண்ட விதம் பற்றிய உங்கள் பார்வையை எழுதினால் சுவாரசியமாக இருக்கும்.// முயற்சிக்கிறேன் ரோசா.
தோழமையுடன்
பைத்தியக்காரன்